கற்புடைமை

கற்புடைமை*

மனத்தைச் செம்மைப்படுத்தி, பண்படுத்தி, அலைய விடாமல் ஒருமைப்படுத்தி தன்னைக் காத்துக் கொள்ளும் மன உறுதியே கற்பாகும். கற்பு பெண்ணுக்கும் ஆணுக்கும் மாந்தர் அனைவருக்கும் பொதுவானது.

நாம் வாழும் சமுதாயம் பெரும் மாற்றம் பெற்று வளர்ந்து வருகிறது. பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்காமல், ஆண்களைப் போல வெளியில் கடமை உணர்வோடு வேலை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தை. மனைவியைக் கணவன் மட்டும் காப்பாற்றுதல் என்ற கொள்கை மாறிவருகிறது. திருக்குறளில் வள்ளுவர் மனையறத்திற்குக் கணவனைத் ‘துணை’ என்று கூறவில்லை. மனைவியைத்தான் ‘வாழ்க்கைத் துணை’ என்று கூறுகிறார்.

மனைவி தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும் ஆற்றல் உடையவளாக இருக்க வேண்டும். தன்னைத் துணையாக நம்பி மணம் செய்துகொண்ட கணவனைத் தன் கடமைகளாலும், தொண்டுகளாலும் காப்பாற்றும் திறன் படைத்தவளாக இருக்க வேண்டும்.

தன்னை நேசிக்கும், நம்பியிருக்கும் கணவனை அன்பினால் இணைத்துக்கொண்டு, அவனே எல்லாம் என்று அவனிடம் கொண்ட உறவு ஒன்றிலே ஒன்றி நிற்கும் மன உறுதியே, மனத்திண்மையே கற்பாகும்.

இம் மனஉறுதியே, மனத்திண்மையே அவளுக்கு காவல். எந்தச் சூழலிலும் பிற ஆண்களிடமும் தன் மனத்தில் எதிர்பாராது தோன்றும் ஆசைகளிலிருந்தும் சலனங்களிலிருந்தும் தன்னைக் காத்துக் கொள்வதுதான் மனத்திண்மையாகிய ஒழுக்கம் மிகுந்த கற்புடைமை ஆகும். கணவன், குடும்ப நல்வாழ்வு, பிறந்த குடி, புகுந்த குடி இவைகளின் மேன்மைக்காகப் பெண்ணானவள் தன்னையே அர்ப்பணித்துக் கொள்கிறாள்.

தன்னையும், தன்னை மணந்தவனையும், தன் குடிப்பெயரையும் காப்பாற்றியும், எக்காலத்திலும் அப்பெருமையில் சிறிதுகூட வழுவிவிடாத ‘சோர்விலாத’ பெண்ணே பெருஞ்சிறப்புப் பெற்றவள். வாழ்க்கைக்கு இவளைத் தவிர துணை வேறு யாதும் இல்லை. இத்தகைய பெண்ணை ஒருவன் மனைவியாக அடையும் பேற்றினை விட மிக உயர்ந்த பேறு வேறு ஒன்றும் இல்லை என்பதை வள்ளுவர்,

“பெண்ணின் பெருந்தக்க யாவுள? கற்பென்னும்

     திண்மை உண்டாகப் பெறின்?”       (54)

என்று கூறுவார்.

எப்போதும் கணவனின் நல்வாழ்வு ஒன்றையே கருதி வாழ்பவள், அந்நினைவிலே ஒன்றிவிடுவதால் தவம் செய்பவர்களின் ஆற்றலைப் பெற்றுவிடுகிறாள். சாதாரணப் பெண் இவ்வொன்றிய உணர்வால் மாற்றம் பெற்று அளப்பரிய ஆற்றல் பெற்றுவிடுகிறாள்; சக்தி வடிவாகிவிடு கின்றாள். அவள் எண்ணியதை எண்ணியபடி பெறும் தவ ஆற்றல் பெறுகின்றாள்.

“வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

     வீழ்வார் அளிக்கும் அளி”                 (1192)

என்பார் வள்ளுவர். கணவன் மனைவிக்குக் காலமறிந்து காட்டும் பேரன்பு போல், காலமறிந்து உயிர்களை வாழவைக்கும் பருவமழை போன்றவள் கற்புடைய பெண், இப்பெண் பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யும் மழை போன்றவள். இச்சிறப்பை வள்ளுவர்,

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்

     பெய்எனப் பெய்யும் மழை”               (55)

என்று பாராட்டுவார்.

பெண்களுக்குக் கற்பு எவ்வளவு அவசியமோ அதே போல ஆண்களுக்கும் கற்பு அவசியம் என்று வலியுறுத்துவார் வள்ளுவர்! பெண்களின் கற்பு நிலைக்க வேண்டுமானால் ஆண்களும் தங்கள் கற்பைக் காப்பாற்ற வேண்டும். அதனால்தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்பைப் பொது நெறியாக வைக்க வேண்டும் என்று பாரதியும் வலியுறுத்துவார். ‘பிறன்மனை நோக்காத பேராண்மை’ என்று பிறன்மனை நோக்காத ஆண்மையே பேராண்மை என்றும், மற்றவையெல்லாம் ஆண்மையன்று என்றும் வள்ளுவர் கூறுவார்.

மனத்தை அலையவிட்டு, ஒழுக்கமில்லாமல் தீயஆசை என்ற புதைமணலில் சிக்கி, மயக்கம் காரணமாகத் தீய செயலில் இறங்குபவன் இனிய இல்லற வாழ்வைச் சிதைத்து விடுகிறான்; சமுதாயத்தின் புனித அமைப்பைச் சீர்குலைத்து விடுகிறான்; சமுதாயப் புற்றுநோய் ஆகிவிடுகிறான்; தானும் அழிந்தும், பிறரும் அழிவதற்குக் காரணமாகி விடுகின்றான்.

“அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

     நின்றாரின் பேதையார் இல்.”              (142)

“பகை,பாவம், அச்சம், பழிஎன நான்கும்

     இகவாவாம் இல்இறப்பான் கண்”           (146)

என்று கடிந்து பேசுவார் வள்ளுவர்.

பெண்ணின் கற்பு என்பது பெண்ணின் மனத்திண்மை, சுயகட்டுப்பாடு, மனவுறுதி ஆகும். புறக்கட்டுப்பாடு, சிறை காக்கும் காப்பு, காப்பு அன்று, பாதுகாப்பு அன்று; குடும்பப் பொறுப்பும், மான உணர்வும், சுயகௌரவமுமே பாதுகாக்கும் அரண்கள். இவ்வுண்மைகள் ஆண்களுக்கும் பொருந்தும்.

“சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர்

     நிறைகாக்கும் காப்பே தலை.”        (57)

 

 

11077total visits,3visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>