கள்ளுண்ணாமை

சமுதாயம் சிக்கல்கள், துன்பங்கள் நீங்கி இனிதே செழித்து ஓங்கி வளர வேண்டும்.

சமுதாயத்திற்குத் துன்பங்கள் ஏற்படுத்துவன எல்லாம் மக்களின் தவறான நடத்தைகளும் குற்றங்களும் ஆகும். குற்றம் என்பது தனக்கே இழைத்துக் கொள்ளும் தீங்கும், பிற மனிதர்களுக்கும் சமுதாயத்திற்கும் இழைக்கும் தீங்கும் ஆகும்.

இக்குற்றங்கள் பழங்காலத்திலிருந்தே தொடர்ந்து வந்துள்ளன. இக்குற்றங்கள் இன்று மிகுதியும் பெருகியுள்ளன.

இக்குற்றங்களும் தீமைகளும் நீக்கப்பட்டால்தான் சமுதாயம் இன்பம் நிறைந்ததாய், வளம் நிறைந்ததாய் வாழ்வு பெறும்.

சமுதாயக் குற்றங்களில் இன்று தலையாய குற்றமாய்ப் பெருகி வருவது குடி கெடுக்கும் குடி ஆகும். சிறுமை பல செய்து சீரழித்து வறுமையையும் துன்பத்தையும் பரிசாகத் தருவது குடியாகும்.

விரைவில் வளரும் புறநாகரிகமும் மாற்றங்களும், அக நாகரிகத்தை வளர்க்கவில்லை. தன்னலம் மிகுந்து, சூழலைப் பாழ்படுத்தி மற்றவர்களைப் பற்றி அக்கறையின்றி, பொறுப்புணர்வு இல்லாமல் வாழும்போது கேடு சூழ்கின்றது. வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம், ஏமாற்றங்கள், மனக்குறைகள், குடும்பப் போராட்டம் இவைகளால் எழும் கசப்புணர்வுகள், குற்றங்கள் பெருக வித்தாகின்றன.

குடி மனிதனின் சிந்தனை ஆற்றலையும், ஆக்க அறிவினையும் மழுங்கச் செய்துவிடுகிறது. குடிப்பழக்கம் ஒடுக்கப்படாவிட்டால் சமுதாய நிலை பாழ்பட்டுப் போகும். குடி, மனிதன் மனத்தை மயங்க வைத்து, தீய நினைவுகளை உருவாக்கும். தீய நினைவுகளின் பயன்களாகவும் பலன்களாகவும் விளைபவை கீழ்மையும், துயரும், துன்பமும் ஆகும்.

கள்ளும், மதுவும் மனிதரை மயக்கி அழிக்கும் ஆற்றல் உள்ளவை. கள்ளுண்டவர் நஞ்சுண்டவர் ஆவர். கள் வெறியால் என்றும் போதையிலே மயங்கி, பேதையாய், பிணம் போல் கிடப்பர். இறந்தவர்களுக்கும் கள்ளுண்டு மதுவுண்டு மயங்கிக் கிடப்பவருக்கும் வேறுபாடு இல்லை, வேற்றுமையில்லை என்று குடியைக் கடிந்து பேசுவார் வள்ளுவர்.

“துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர்; எஞ்ஞான்றும்

     நஞ்சுஉண்பார் கள்உண் பவர்”        (926)

குடி வெறியர் பகைவருக்கு மிகவும் எளியவர் ஆவர். குடி வெறியரைக் கண்டு பகைவர் அஞ்சமாட்டார்; ஏளனம் செய்வார்.

பெற்ற தாய் குற்றங்களைப் பொறுக்கக் கூடியவள். தாய்ப்பாசத்திற்கு இணையான வேறு பாசம் உண்டோ? குற்றங்களை எல்லாம், வெறுக்கும் தகைமைகளை எல்லாம் பொறுக்கும் பெற்ற தாயும் குடியர் முகத்தில் விழிக்காது வெறுத்து ஒதுக்குவாள் என்றால் சான்றோர் வெறுப்பைக் கூறவும் இயலுமோ?

“ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச்

     சான்றோர் முகத்துக் களி?”           (923)

பணத்தையும் கொடுத்து உடலைக் கெடுத்துப் பிணம் போல் படுக்கச் செய்யும் போதையில் விருப்பங்கொண்ட பேதைகள், அறிவிலிகள் போல் வேறு யாரும் உண்டா?

“கைஅறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

     மெய்அறி யாமை கொளல்”               (925)

என்று இரக்கப்படுவர் வள்ளுவர்.

கள்ளின் மேல் விருப்பங்கொண்டு, கள்ளின்மேல் காதல் கொண்டு திரிபவர் எப்போதும் யாராலும் அஞ்சப்பட மாட்டார்; நன்மதிப்பையும் புகழையும் இழப்பர்.

“உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்

     கட்காதல் கொண்டுஒழுகு வார்”      (921)

பாதை மாறிச் சென்று என்றும்  போதை கொண்ட, பேதையருக்கு, கள்ளுண்டு மயங்கிக் களித்தவனுக்குக் காரணம் காட்டித் தெளிவித்தல் வீணாக முடியும். அம்முயற்சி நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுதலுக்கு இணையாகும்.

“களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

     குளித்தாணைத் தீத்துரீஇ யற்று”       (929)

மதியை அழித்து மானம் கெடுக்கும் குடிப்பெருமை அழிக்கும் குடியை நீக்கிச் சமுதாயம் வாழ வேண்டும்.

மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா போன்ற பெரியவர்கள் மதுவிலக்கில் தீரத்தோடு காட்டிய தீவிரம் இன்று பின்பற்றப் பட வேண்டும்.

குடியால் விளையும் தீமைகளை நன்கு உணர்ந்து, குடியால் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படும் சீரழிவு, வேலை இழப்பு, உழைப்புத் திறன் குறைதல், குழந்தைகளின் எதிர்காலம் பாழ்படுதல் இவைகளையெல்லாம் சிந்தித்து ஹரியானா மாநிலத்தைப் போல் நம் நாட்டிலும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்பட வேண்டும்.

‘உண்ணற்க கள்ளை’ எனக் கள்ளுண்ணாமையைத் தனி நபர் ஒழுக்கமாகவும் சமுதாய ஒழுக்கமாகவும் போற்ற வேண்டும்.

சமுதாய வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் முடிவில் இன்பம் தரும் செயலாயின் முதலில் செயல்படுத்தும் போது துன்பம் வரினும் தொடர்ந்து சோர்வின்றி உறுதியோடு செய்து முடித்தல் வேண்டும்.

“துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி

     இன்பம் பயக்கும் வினை”      (669)

10041total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>