தேர்தலும் திருவள்ளுவரும்

Image result for thiruvalluvar

உலகெங்கும் குடியாட்சி மரபுகள் வேரூன்றி வரும் சூழலில் நாம் இருக்கின்றோம். நம் நாட்டில் ‘எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு…!’ எனும் உரிமை பெற்று எழுபதாண்டுகள் ஆகின்றன; இப்போது ‘எங்கும் தேர்தல் என்பதே மூச்சு!’ எனும் பரபரப்பில் இருக்கிறோம். தேர்தல் பரபரப்பு வாழ்க்கைக்கு ஏற்ற பயன்மிகு சிந்தனைகளை வள்ளுவர் சொல்லியுள்ளாரா எனத் தேடுகிறோம்.

வள்ளுவர் அரசியலைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். அவர் முடியாட்சிக் காலத்தே வாழ்ந்தவர். தமிழ்நாட்டில் கோனாட்சியே நிலவியது. எனவே அரசன், வேந்தன், இறைவன் என ஆளும் தலைவனைக் குறிப்பிட்டார். இன்று நாம் வாழ்வது குடியாட்சிக் காலம். இக்காலத்திற்கு வள்ளுவச் சிந்தனைகள் பொருந்துமா?

நிச்சயம் பொருந்தும். எக்காலத்திற்கும், எந்தச் சூழலுக்கும் பொருந்தும் வகையில் வாழ்க்கை அறம் வகுத்திருப்பதே வள்ளுவத் தனிச்சிறப்பு. மன்னராட்சி முறைக்கு அவர் கூறியுள்ள நெறிகள் – மக்களாட்சி முறைக்கும் பாராளுமன்ற அமைச்சரவை ஆட்சி முறைக்கும் ஏற்புடையனவாக இருப்பதே வள்ளுவப் பெருமை. ஆட்சி முறை எதுவாய் இருப்பினும், அடிப்படையான தேவைகளும் முறைகளும் மாறுவதில்லை எனத் தெளிந்தவர் வள்ளுவர். மன்னராட்சி ஆயினும், மக்கள் ஆட்சி ஆயினும் ஒத்திருக்கக்கூடிய அடிப்படைகள் உள்ளன. குடிமக்களின் நலன் கருதி ஆளுதல், ஒற்றுமையை வளர்த்தல், பகையை ஒடுக்குதல், பசி, பிணியின்றி நாட்டைப் புரத்தல், நீர்வளம், நிலவளம், தொழில்வளம் என்பனவற்றைப் பெருக்குதல், எல்லோர்க்கும் ஒத்த உரிமை நல்கி, நடுநிலை வழுவாமல் முறை செய்தல் ஆகியன இருவகை ஆட்சிக்கும் ஏற்புடைய பொதுநல அறங்கள்.

இருவகை ஆட்சியிலும் தலைமைப் பொறுப்பேற்க, நிர்வாகப் பொறுப்பேற்க ஏற்றவர்கள் இருக்க வேண்டும். இப்பதவிகளைப் பெறுவோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பதவியும் அதனால் வரும் அதிகார ஆக்கங்களும் எப்போதும் நிலைபெற்று நிற்பவை எனக் கருதி மனம்போல நடக்கலாமா? பதவியே பெரிதென முறை மீறிச் செயல்படலாமா? பெற்ற பதவி மக்களுக்குப் பணி செய்வதற்கே என உணர்ந்து ஏற்ற பொறுப்பிற்கு உகந்தவாறு பணியாற்ற வேண்டாமா? பதவி இல்லாக் காலத்தும் தம் தூய தொண்டால் மக்கள் மதிக்கும் வகையில் என்றும் தமது மதிப்பினைப் பேணி நடக்க முற்பட வேண்டாமா?

மக்களாட்சித் தேர்தலில் வெற்றி தோல்விகளை, வாக்களிக்கும் மக்கள் நிர்ணயிக்கின்றனர். மக்கள் நலனையே மதித்துத் தொண்டு புரிந்தவர்களை மறுபடி மறுபடி ஆட்சி அரியணையில் ஏற்றுகிறார்கள்; சொந்த சுய லாபத்தையே கருதிப் பதவிப் பொறுப்பை வேட்டைக் காடாக்கியவர்களை இருந்த சுவடு தெரியாமல் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

“நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

     நயம் புரிவாள் எங்கள் தாய் & அவர்

     அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்

     ஆனந்தக் கூத்திடுவாள்….”

எனப் பாரதி பாடியது, இன்றும் நமது குடியாட்சியில் நன்கு புலனாகிறது.

இது ஒருவகையில் கொள்கைக் காலம். அரசியல், மதவியல், அறிவியல், பொருளியல் எனும் துறைதோறும் தத்தம் கொள்கைகளைப் பரப்பக் கட்சிகள் வரிந்து கட்டி வருகின்றன. மக்களிடையே கொள்கை மீது பற்றை ஏற்படுத்துகின்றன என்பதை விட, ஒருவகைக் கொள்கை வெறியையே மூட்டி விடுகின்றன. பற்று எனும் நெறியைக் காட்டுவோரும், அதனை வெறியாக்கி மூட்டுவோரும் அவ்வச் சூழலுக்கேற்றபடி தலைமை பெற்றுக் கொள்ளுவார்கள். ஆனால் அத்தலைமைப் பேறு எவ்வளவு காலம் நீடிக்கும்?

இது மறுவகையில் பதவிக் காலம். உயர்ந்த பதவி கிட்டின், தானும் உயர்ந்த வகைச் செருக்குக் கொள்ளுகிறான். பதவி தாழின், தானும் தாழ்ந்தவனாக எண்ணிச் சோர்கிறான். உலகமும் பதவியின் ஏற்ற இறக்கத்திற்குத் தக்கவாறே ஒருவரின் தராதரத்தையும் மதிப்பிட முற்படுகிறது. நூறு ரூபாய் சம்பாதிப்பவனை விட, ஆயிரம் சம்பாதிப்பவன் தரத்தில், குணத்தில் உயர்ந்தவன் எனக் கருதி மரியாதை செய்கிறது. பதவிக்கும் பண்புக்கும் நேரடியான காரண காரியத் தொடர்பு இல்லை என்பதைப் புரிந்து கொண்ட தாகத் தெரியவில்லை. அதிகாரத்தை ஒருவர் இழக்க நேர்ந்தால் – அவர் எல்லாவற்றிற்குமே தகுதியற்றவர் என ஒதுக்கிவிடும் மனப்பாங்கும் சரியாகாது. எனவே – அவரவர் குணநலம் – ஒழுக்கம் – நன்னடை – எனும் உரைகற்களைக் கொண்டே ஒருவரை மதிப்பிட வேண்டும். பதவியாலோ, செல்வாக்காலோ ஒருவர் இன்று மேல் இருப்பார்; நாளை அவர் கீழே வந்துவிடுவார். குணம் எனும் குன்றேறியவர் எனினும், எளிமையாக, அடக்கமாக அவர் என்றும் ஒரே நிலையில் வாழ்வார். அவ்வாறு அடக்கமாக இருப்பதால்- அவர் கீழவர் ஆகமாட்டார்.

“மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்; கீழ்இருந்தும்

     கீழ்அல்லார் கீழ்அல் லவர்”          (973)

மேலான நிலையில் இருந்தாலும் மேன்மையற்ற நெஞ்சினர் ஒருபோதும் மேலானவராகக் கருதப்பட மாட்டார்; கீழான ஏழ்மை நிலையிலிருந்தாலும் கீழ்த்தரமான ஒழுக்கமில்லாதவர் ஒருபோதும் கீழானவராகி விட மாட்டார் எனப் ‘பெருமை’ எனும் அதிகாரத்தில் வரும் குறட்பாக் கருத்து, குடியாட்சித் தேர்தல் காலத்திற்கு மிகமிக ஏற்ற சிந்தனையை வழங்குகிறது.

 

 

1865total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>