உலகத் தமிழ்ச் செம்மொழி

Image result for thiruvalluvar

 

மாநாடும் திருக்குறளும்

“சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே -& அதைத்

     தொழுது படித்திடடி பாப்பா!”

என்பார் பாரதியார்.

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

     பரவும் வகை செய்தல் வேண்டும்”

என்பதும் மகாகவியின் விருப்பம்.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய நம் தாய்மொழியாம் தமிழ், பழமையும், இலக்கிய வளமும், இலக்கணச் செறிவும் கொண்டு சிறந்தோங்கி நிற்பது. நம் தமிழ், செம்மொழித் தகுதி பெற்றமையினை உலகமெல்லாம் பறைசாற்றும் வண்ணம் முத்தமிழ் அறிஞர் மாண்புமிகு கலைஞர் அவர்கள், தமிழுக்கும், தமிழர்க்கும் உலக அரங்கில் மேன்மேலும் உயர்வு கிடைத்திட வேண்டும் என்ற உயரிய எண்ணங்கொண்டு கோவை மாநகரில் கூடிடும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றி வாகை சூடிட அல்லும் பகலும் சிந்தித்துச் செயலாற்றி வருகிறார்.

“நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்

     பண்புபா ராட்டும் உலகு”      (994)

என்ற நெறியின் படி உலகத் திருக்குறள் பேரவை சார்பாக முத்தமிழ் அறிஞர் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக மக்களுக்குத் தமிழகத்தை அடையாளம் காட்டியது திருக்குறள்! தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் முகமாகவும், முகவரியாகவும் அமைந்து முழுமை தந்தது திருக்குறள்!

பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் தனி ஒரு மனிதனுக்கோ, ஒரு நாட்டிற்கோ சொந்தமானதல்ல. எல்லா நாட்டினர்க்கும், எல்லாச் சமுதாயத்திற்கும், எல்லா மொழியினர்க்கும் பொருந்தும் வகையில் காலத்தை வென்று நிற்கும் நூல் அது.

‘உலகச் சிந்தனையாளர்களில் தலைசிறந்தவர்’ திருவள்ளுவர் என திரு.ஆல்பர்ட் சுவைட்சர் எனும் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் பாராட்டுகிறார்.

‘உலகப் பெருங்கவிஞர் திருவள்ளுவர்’ என்று கிறித்தவத் தமிழறிஞர் திரு.ஜி.யு.போப் அவர்கள் திருவள்ளுவரைப் பெருமைப் படுத்தியுள்ளார். இத்தகைய பெருமை மிகு திருக்குறளுக்கு இதுவரை 250-க்கு மேல் உரை நூல்கள் வந்துள்ளன.

உலக மொழிகளில் கிறித்தவர்களின் புனித நூலான பைபிளுக்கு அடுத்து, திருக்குறள் 70 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது போன்று பல நிலைகளில் உயர்ந்து நிற்கும் திருக்குறளுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் கோவையில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அமையும்.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்ற புகழினை இம்மாநாடு பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எழுகிறது. அதற்குக் கட்டியம் கூறும் வகையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் அடையாளச் சின்னமாகத் திருவள்ளுவரின் உருவமும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறள் அமுத வரிகளும் ஒளிர்வதைக் காண முடிகிறது. இத்திருக்குறள் சொற்றொடரைத் தேர்ந்தெடுத்தமைக்கான விளக்கத்தை முதல்வர் கலைஞர் அவர்கள் 10.01.2010ஆம் நாளன்று நடைபெற்ற தமிழ்ச் சங்கமம் தொடக்க விழாவில் தம் உள்ளக்கிடக்கையை வெளியிட்டுள்ளார்.

“‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று தந்தை பெரியார் உருவாக்கிய யுகப்புரட்சியை எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்மொழி, தமிழர் என்ற உணர்வை எடுத்துக் காட்டும் வகையில் மாநாடு அமைய வேண்டும். நாம் பிரிந்து கிடக்கக் கூடாது. ஒற்றுமையாக வாழ வேண்டும். நம் தமிழ்மொழியால் ஒன்று சேர வேண்டும். நம் தமிழைக் காப்பாற்ற வேண்டும்” என்பது கலைஞர் அவர்களின் விளக்கம்.

“ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

     ஏங்கொலி ஞாலத்து இருள்அகற்றும் & ஆங்கவற்றுள்

     மின்னோ தனியாழி வெங்கதிர் ஒன்று ஏனையது

     தன்னே ரிலாத தமிழ்.”

உயர்ந்த மலைகளிலே தோன்றுகின்ற எழுஞாயிறு புற இருளை நீக்குவது போல மனங்களின் அறியாமை இருளை அகற்றுவது உயர்தனிச்செம்மொழியாம் தமிழ் மொழி சிறந்தொளிரப் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அய்யன் திருவள்ளுவரின் அமுத மொழியினைக் கொள்கை முழக்கமாகக் கொண்டு நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பொற்குடத்திற்குப் பொட்டு வைப்பது போல் இதுவரை நடந்த உலகத் தமிழ் மாநாடுகளின் தொடர்ச்சியாகத் திருக்குறளுக்குச் செய்ய வேண்டிய இன்னும் சில சிறப்புக்களைக் குறித்து உலகத் திருக்குறள் பேரவையின் பொதுச் செயலாளர் என்ற முறையில் (வானொலி நேயர்களுடன்) என் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நிகழவிருக்கும் இத்தருணத்தில் அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் முதல்வர் டாக்டர் கலைஞர் ஆகியோரது தலைமையில் அமைந்த தமிழக அரசு திருக்குறளுக்குச் செய்துள்ள சிறப்புக்களை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்னின்று நடத்திய உலகத் தமிழ் மாநாடு சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் திருக்குறளின் பெயரால் இருக்கைகள் (சிலீணீவீக்ஷீs) ஏற்படுவதற்கு வழிவகுத்துத் தந்தது; பேருந்துகளில் திருக்குறள்களை எழுதி வைத்துத் திருவள்ளுவம் பரவ வழி வகை செய்தது. முத்தமிழ் அறிஞர் முதல்வர் அவர்கள் ‘குறளோவியம்’ தீட்டி திருக்குறளுக்குப் பகுத்தறிவின் வழி நின்று புத்துரை வழங்கியுள்ளார். மேலும் சிறப்பு மிக்க ‘வள்ளுவர் கோட்டம்’ நிறுவியும், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடியில் வானளாவிய சிலை எழுப்பியும் திருக்குறளுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இது திருவள்ளுவருக்கு உலகப் புகழ் ஏற்படுத்தியது.

முத்தமிழ் அறிஞர், முதல்வர், டாக்டர் கலைஞர் பெங்களூரில் பல்லாண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து ஒற்றுமைக்கு வழிகாட்டினார்.

மாணவர்களுக்குத் திருக்குறளினை முற்றோதல் செய்யும் பயிற்சிக்குப் பொற்கிழி வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். இதுபோன்ற எண்ணற்ற செயல்பாடுகள் நிகழ்ந்திருந்தாலும், வள்ளுவம் வாழ்வியல் நெறியாக அனைவரும் கடைப்பிடித்திட, வள்ளுவம் வான்புகழ் கொண்டு சிறந்திட, சில கருத்துக்களைச் சொல்லிட விரும்புகிறேன்.

திருக்குறளினைத் தேசிய நூலாக்க வேண்டும் என்று மறைந்த மகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். அவர் வழியில் உலகத் திருக்குறள் பேரவையும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. நிகழ விருக்கும் பிரம்மாண்டமான, பயன்மிக்க உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூலம் திருக்குறள் ‘பாரத மணித்  திருநாட்டின் தேசிய நூல்’ ஆக்குவதற்கு உரிய முயற்சி வெற்றி பெறுமானால் உலகெங்கிலும் உள்ள கோடானு கோடித் தமிழர்களின் நெஞ்சங்களிலே இன்பத் தேன் பாய்ச்சுவதாக அமையும்.

நடுவண் அரசின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் இந்த அறிவிப்பு அறிவிக்கப்படுமானால் பெருமகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.

“எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

     செய்தற்கு அரிய செயல்”            (489)

இந்தியத் திருநாட்டின்கண் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள முதன்மையான பல்கலைக்கழகங் களிலே திருவள்ளுவரின் பெயரால் இருக்கைகள் (சிலீணீவீக்ஷீs) நிறுவுவதற்குத் தமிழக அரசு மைய அரசிடம் வேண்டுகோள் விடுக்கும் செயற்பாட்டுக் களமாக இம்மாநாடு அமைவது சிறப்பைத் தரும்.

திருவள்ளுவர் உருவம் பொறித்த நாணயமும், அஞ்சல் தலையும் வெளியிடுவதற்கான முறைப்படியான கோரிக்கையை மாநாட்டின் மூலம் முன் வைக்கலாம்.

திருக்குறளுக்குப் பழங்காலத்தில் பரிமேலழகர், மணக்குடவர் உள்ளிட்ட பதின்மர் உரை எழுதியுள்ளார்கள். இம்முயற்சி இந்நூற்றாண்டு வரை தொடர்ந்து வருகிறது.

தெளிவுரை, மரபுரை, புத்துரை, நயவுரை, மெய்யுரை என்று நூற்றுக்கணக்கான உரை நூல்கள் திருக்குறளுக்கு அண்மைக் காலம் வரை வந்த வண்ணம் உள்ளன. திருக்குறள் குறித்து இதுநாள் வரை வந்துள்ள அனைத்து உரைகளும் ஓரிடத்தில் தொகுத்து வைக்கப்பட்டால் அது பலருக்கும் பயனாய் அமையும்.

இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் தொலைக்காட்சிகளில், திரைப்படங்களில் வந்த போது பெரும் எதிர்ப்பார்ப்பைத் தந்து, பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. அது போல் திருக்குறள் இன்றைய கணினி யுகத்திற்கு ஏற்ற வகையில் ஓவியங்களாக, குறும்படங்களாக, குறுந்தட்டுகளாக, திரைப்படங்களாக, இயலாக, இசை வடிவமாக, நாடகமாக வெளிவருவதற்குத் தமிழக அரசின் செய்தி ஒளிபரப்புத் துறையின் மூலம் ஆவன செய்யலாம்.

மகாத்மா காந்தி அவர்களுக்கு அமைந்துள்ள அருங் காட்சியகம் போல திருவள்ளுவருக்கு ஓர் அருங்காட்சி யகத்தினை நிறுவி திருக்குறள் தொடர்பான அனைத்துச் செய்திகளும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு செய்வதிலும், வல்லுநர் குழு ஒன்றினைத் தமிழக அரசு நியமனம் செய்யலாம்.

உலகத் திருக்குறள் பேரவை போன்று திருக்குறள் பெயரால் தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், உலகளாவிய நிலையிலும் செயல்பட்டு வரும் தமிழ் இலக்கிய அமைப்புகளை ஒன்றுபடுத்தி அவ்வமைப்புகள் இதுவரை செய்துள்ள பணிகளை ஆவணப்படுத்துதல் மூலம் குறள்நெறி உலகளாவிய வளர்ச்சி பெற வழி வகை செய்யலாம்.

ஆண்டுதோறும் தமிழக அரசு சான்றோர் ஒருவர்க்கு நல்கி வரும் திருவள்ளுவர் விருதினை சற்றே விரிவுபடுத்தி திருக்குறள் பணியில் சிறந்து விளங்கும் சான்றோர், மகளிர், இளைஞர் மற்றும் இலக்கிய அமைப்பினர் என அனைவரும் பயன்பெறும் வண்ணம் பல விருதுகளை வழங்குமாறு மாநாட்டின் மூலம் பரிந்துரை செய்யலாம்.

ஆண்டுதோறும் தமிழக அரசே 365 திருக்குறள் சிந்தனைகளைத் தன்னகத்தே கொண்ட திருவள்ளுவர் நாட்காட்டியினை வெளியிடுமாறு மாநாட்டின் மூலம் அரசுக்குப் பரிந்துரை செய்யலாம்.

‘அறம் பொருள் இன்பம்’ உரைக்கும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகமெங்கும் பரப்பக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பாக இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அமைந்துள்ளது.

“பெருமை உடையார் ஆற்றுவார் ஆற்றின்

     அருமை உடைய செயல்”      (975)

என்ற குறள் நெறிக்கு ஏற்ப இம்மாநாடு திருக்குறள் நெறி உலகெங்கும் பரவிட வழிவகுக்கும் என்பதை உறுதியோடு நம்புகிறோம்.

தமிழின் செழுமையும், வளமையும், இளமையும், இனிமையும், புதுமையும், உண்மையும் மிக்க திருக்குறள் நெறியினை வாழ்வியல் சிந்தனைகளாக நடைமுறைப் படுத்திட இம்மாநாடு தொடர்ந்து அரிய பல திட்டங்களை வகுத்துச் செயல்படும் என நம்புகிறோம்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

     திண்ணியர் ஆகப் பெறின்.”          (666)

1932total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>