கற்கவும், நிற்கவும்

நாம் அவர்களிடம் கற்கவும், நிற்கவும்

பொதுவாக மேலை நாட்டவர் அனைவரும் தன்மானத்தோடு உழைத்து வாழ வேண்டும் என்னும் உறுதியான கொள்கை கொண்டவர்கள். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயல்பாகவே கடும் உழைப்பை மேற்கொள்கிறார்கள். உழைப்பு அவர்களிடம் இயற்கையான குணமாக அமைந்திருக்கிறது. எதையும் இனாமாகப் பெறுவதைக் கேவலமாகக் கருதுகின்றார்கள்.

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக உலகியற்றியான்” எனும் குறளில் உலகினை இயற்றிய இறைவனையே அழிந்து போகும்படி வள்ளுவர் சாபமிடுவாரா? மாட்டார். மக்கள் இரந்து வாழ நேர்ந்த சூழலை மாற்றிட ஆவன செய்யாது, அரசு நடத்து வோரையே – உலகை ஆள்வோரையே – அவ்வாறு குறிப்பிட்டார் எனக் கொண்டால் பொருத்தமாய் இருக்கும். மேலை நாட்டு மக்கள் அரசுத்தலைவர்களைக் கூடச் சார்ந்திராமல், தாமே இரவச்சம்” அவர்களிடமே உள்ளது.

“இன்மை இடும்பை இரந்து தீர்வாமென்னும் வன்மையின் வன்பாட்டத்தில்” வழியில்லாக் காரணத்தால் பிச்சை எடுத்துத்தான் துன்பத்தை நீக்க வேண்டும் என்பதைப் போன்ற அவமானம் வேறு ஒன்றும் இல்லை என்று வள்ளுவர் கடிந்து பேசிய நிலைமையை அமெரிக்காவிலே செயலாக்குகின்றார்கள்.

நம் நாட்டில் சலுகைகள் பெறுவதும் இனாம் பெறுவதும் இயற்கையானவையாக அமைந்துவிட்டன. தன்மானச் சிந்தனைகள் குறைந்துவிட்டன. காலப்போக்கில் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லாம் சுயமுயற்சியை அறவே மறந்து அரசாங்கச் சலுகைகளையே முழுவதும் நம்பி வாழக்கூடிய அவலம் ஏற்பட்டு விடலாம். இதை மாற்றிட உழைப்பதற்கு மக்களுக்கு நல்ல வாய்ப்பினை நல்கியும் தொழில் துறைகள் பல ஏற்படுத்தியும் உற்பத்தியைப் பெருக்கிப் பொருளாதார வளம் பெறவேண்டும்.

உழைப்பால்தான் உயர முடியும் என்ற தன்னம்பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் உறுதியாக ஏற்பட்டாக வேண்டும். மேலை நாடுகளைப் போலப் பொருளாதார வளர்ச்சி பெற்றால்தான் நாம் வலிமை மிகுந்தவர்களாக, நல்ல வல்லரசாக உயர முடியும். பலரது உழைப்பே அந்த வலிமையைத் தர முடியும்.

சாலைகள்

அங்குள்ள சாலை வசதிகளைப் போல இங்கும் தொலைநோக்கோடு நீண்ட சாலை வசதிகள் அமைக்கப் பட வேண்டும். அவற்றை மக்கள் அனைவரும் தூய்மையாகப் பேணிப் பாதுகாக்கவும் வேண்டும். மேலை நாடுகளைப் போல விஞ்ஞான அடிப்படையில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டால் நன்றாகப் பராமரிக்கப் பட்ட சாலை வசதிகள் செய்யப்பட்டால் ஒரு நாட்டினுடைய பொருளாதார வளத்திற்கு அஃது ஒன்றே பயனுடையதாக அமையும்.

தொலைபேசி

மேலை நாடுகளில் தொலைபேசிகளைக் கொண்டே மிகக்குறுகிய காலத்தில் குறைந்த செலவில் உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் விரைந்து தொடர்பு கொள்ள முடியும். விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போதே உலக நாடுகளுடன் தொடர்பு கொள்ள முடியும்.

இங்கு நாம் பக்கத்தில் உள்ள ஊர்களுக்குத் தொலை பேசியில் தொடர்பு கொள்வதுகூட மிகவும் இடர்ப்பாடாக உள்ளது. அநியாயமாக நேரம் வீணாகிறது. வளர்ந்து வரும் விஞ்ஞான வேகத்திலே, விண்வெளி யுகத்திலே, இந்தக் குறையைக்கூட நாம் நீக்கவில்லையென்றால் அது மிகவும் வருந்துவதற்கு உரியதாகும்.

நாம் பல கருத்துக்களை விரிவாக ஆழமாக விவாதம் செய்கின்றோம். நல்ல கருத்துக்களை உணர்ச்சிவசமாகப் பேசி மகிழ்வதோடு அமைதி அடைந்து விடுகின்றோம். அப்பிரச்சினைகளுக்குச் செயல்வடிவம் கொடுத்துத் தீர்வு காண்பதில்லை. மேலை நாடுகளிலே ஒரு நல்ல கருத்து உருவாகும் எனில் அதை அறிவுபூர்வமாகச் சிந்தித்து, நுணுக்கமாக ஆராய்ந்து அறிவியல் ரீதியாகத் தீர்வுகாண முயலுகின்றார்கள்.

எதையுமே நன்றாகச் சிந்தித்துப் பார்த்து விஞ்ஞானபூர்வமாக முடிவெடுத்துச் செயல்பட்டு உயர்ந்து விடுகிறார்கள்; வளம் சேர்க்கின்றார்கள். எனவே நாமும் விஞ்ஞான பூர்வமாகச் செயல்பட்டு உயர வேண்டும். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசுகின்ற சமயத்திலே பொறுமையாகவும் முழுமையாகவும் மற்றவர் பேச்சைக் கவனிக்கின்றார்கள். ஒரு செய்தியைச் சொல்லும்போது இடையில் யாரும் குறுக்கிடுவது இல்லை. மென்மையாகப் பேசுகின்றார்கள். பேசி முடிந்தவுடன் தங்களுடைய உடன்பாட்டையோ மறுப்பையோ இதமாக நயம்படக் கூறுகிறார்கள். சில சமயம் உடன்படாக் கருத்துக்களுக்கு மௌனமாக ஒரு புன்னகை செய்து விட்டுவிடுகின்றனர். இவையெல்லாம் எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தன. இது போன்ற பல அரிய கருத்துக்களையும் காரியங்களையும் நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

நாம் கொள்வதும் கொடுப்பதும்

புதிய உலகம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளுக்குக் குடியேறும் வெளிநாட்டவர் தொகை, காலப்போக்கில் அதிகரிக்கத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக, அமெரிக்க நாடு தனது குடியேற்றச் சட்டத்தை 1965-இல் திருத்தியமைத்த பின்னர், வெள்ளையரல்லாத இனத்தவரும் குடியேற அனுமதிக்கப்பட்டனர். முன்னர் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய இத்தாலிய, அயர்லாந்து நாட்டவர்கள், ஏழைகளாக, போதிய கல்வி அறிவு அற்றவர்களாக, விவசாயத் தொழிற்சாலையில் உடல் உழைப்பினை மட்டும் அளிக்கக் கூடியவர்களாக இருந்தனர். எனவே தங்களுக்கு அவ்வப்போது நேரிட்ட சமூக, பொருளாதார இடையூறுகளை நீக்க வழிவகை காணுவதில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தனர்.

தாங்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் முடிந்த வரை அரசியல் முக்கியத்துவம் பெறுவதில் விழிப்பாய் இருந்து கொண்டனர். 1965-ஆம் ஆண்டு குடியேற்றத் திருத்தச் சட்டத்தின் பின்னர் இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் அதிகமாகக் குடியேறச் சென்றனர். இவர்கள் இந்தியாவின் பல்வேறு மொழி, இன, கலாச்சாரப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகவும், மிகமிகச் சிறுபான்மை யினராகவும் இருந்தனர்.

கல்வியறிவும் மூளை உழைப்பும் கொண்ட இவர்களில் பெரும்பான்மையோர் டாக்டர்களாக, எஞ்சினியர்களாக, பலதுறைப்பட்டம் பெற்றவர்களாக, வங்கி – சிற்றுண்டிச் சாலை முதலிய சேவை நிறுவனங்களைத் திறம்பட நடத்துவவோராக இருந்தனர். அதிக வருமானத்தையும் தொழிலில் மனநிறைவையும் நாடியே பெரும்பாலும் சென்றனர். மிகக் குறுகிய காலத்திற்குள் செல்வாக்கு, செல்வச் செழிப்பு, சமூக அந்தஸ்து ஆகியவற்றைப் பெற்றனர். பாகிஸ்தானியர், தாய்வானியர், கொரியர் முதலிய பிற தேசத்தவரின் போட்டி இவர்களுக்கு ஒரு புறம் இருந்தாலும், இந்திய வம்சாவளியினர் தமது திறமை, தைரியம், உழைப்பு, ஆகிய பண்புகளால் அமெரிக்க சமூகத்தின் உற்பத்தி ஆற்றலை அதிகரித்தே வந்துள்ளனர் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றனவாம்!

இந்திய வம்சாவளியினர் பல மாநிலங்களில் சிதறுண்டு வாழ்கின்றனர். தத்தம் கலாசார, மொழி, சமய உணர்வுகளுக்கு ஏற்றபடி அவ்வப்போது ஒன்று கூடியும் மகிழ்கின்றனர்.

குஜராத்தியர், சீக்கியர், மலையாளிகள், தமிழர்கள் இவ்வகையில் பல சங்கங்களை நிறுவியுள்ளனர். சிக்காகோவை அடுத்த டெய்டனில் உள்ள இத்தகையதொரு தமிழ்ப் பேரவையின் அழைப்பின் பேரில்தான் நான் திருக்குறள் பயணத்தை மேற்கொண்டேன். அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் உள்ள தமிழர்களில் ஈழத் தமிழர்களே கணிசமாகக் கண்ணில் பட்டனர்.

அமெரிக்காவிலும் நாம் அரசியலில் செல்வாக்குப் பெறும் வகையில் கட்சி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டாக வேண்டும் என்று இவர்கள் தீவிரமாகச் சிந்திக்கின்றனர். தங்களது பொருளாதார சுபீட்சத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், குடியேறிய பிற ஐரோப்பிய (ஸ்பெயின்) நாட்டவரின் பொறாமைத் தாக்குதலில் இருந்து வேலி கோலவும் இந்த அரசியல் ஈடுபாடு பயன்தரும் என்று கருதுகின்றனர். சென்ற ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு டெமாக்கிரடிக் (குடியரசு) கட்சியின் சார்பாக கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்த டுகாசில் போட்டியிட்டது போல இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கட்சித் தேர்தல்களில் போட்டியிடும் காலம் கைகூடிவருவதாகக் கூறினர். நம்மவர்கள் நடத்தும் மாநாடுகள் இத்தகைய தொலைநோக்குச் சிந்தனையுடையன போலவே எனக்குத் தோன்றின.

அமெரிக்க நாட்டவரும் அங்குக் குடியேறியவரும் அங்கு உள்ள நம் நாட்டவரும் புற வாழ்க்கை நலன்களை அதிகமாக, இன்னும் சொல்லப் போனால், முழுமையாகப் பெற்று அனுபவிக்கின்றனர் என்றே சொல்லலாம். செயல்திறம் பற்றித் திருவள்ளுவர் அன்றே கூறிய அறிவுரைகளை இன்றும் அப்படியே போற்றி வாழ்கின்றனர். பிறநாடுகளில் உழைத்துப் பொருளீட்டச் சென்றாலும், அங்கு வெறுமனே கையேந்தி நிற்காமல் உழைத்தே, முயற்சியைக் கைவிடாமலே முன்னேறி வருகின்றனர். திருவள்ளுவர் ‘இரவச்சம்’ அதிகாரத்தில் கூறிய “இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின் வன்பாட்டது இல்” (1063) எனும் வாழ்வுண்மையை மறவாது வாழ்கின்றனர். “ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல்” (33) எனும் உறுதியோடு இல்லாமை எனும் துன்பத்தினை இடைவிடாத உழைப்பால் தீர்த்துக் கொள்வோம் எனும் மனவன்மையுடன் வாழ்கின்றனர். திருக்குறள் நமது சொந்த மண்ணில் வேரூன்றினாலும் அதன் கிளைகள் எல்லாம் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலேயே வாழ்க்கை நிழல் பரப்பும் நடைமுறையை நமக்கும் அறிவுறுத்தி வாழ்கின்றனர்.

ஆனால் ஒன்று: ஓடி ஓடி உழைத்துச் செல்வம் தேடும் இந்த ஓயாத வாழ்க்கைப் போட்டியில், புறவாழ்க்கை வசதிகளையே முதன்மையாக நாடும் போராட்டத்தில் ஒன்றை மட்டும் அவர்கள் மறந்துவிட்டனர். அதுதான் அகநலம் ஆக்கும் மன அமைதி! புறவாழ்வில் பிறர்கருத்தை மதிக்கும் மாண்பு, தன் கருத்தையே வலியுறுத்திச் சண்டை போடாத மதிநலம், ஓர் உடன்பாட்டுக்கு வந்த பின்னர் ஒன்றுபட்டுப் பணிபுரியும் உறவாக்கம், தனது தேசத்தையும் பிறரது நேரத்தையும் மதித்து நடக்கும் மரியாதை, இன்முகத்தோடு எப்போதும் உழைக்கும் முன்னணியில் நிற்கும் இவர்களுக்கு அகவாழ்வில் மட்டும் ஏனோ அமைதி இல்லை. அமைதி தேடியே அவ்வப்போது தாயகம் வருகின்றனர். தாயகத்தில் இருந்து தம்மை நாடி அங்கு வருவோரிடமும் இந்த அமைதி நல்கும் சிந்தனை மருந்துகளையே கேட்கின்றனர். திருக்குறள் எக்காலத்துக்கும் ஏற்ற மாமருந்தாக இருத்தல் கண்டு அதில் பேருவகை கொண்டதைக் கண்ணாரக் கண்டுவந்தேன்.

நம்மிடம் ஒரு சிறப்பு உண்டு. வாழ்வில் எவ்வளவு தான் வறுமை, துயரம் என்பன வந்தாலும் அதை ஏற்றுப்பொறுக்கும் வன்மையை, பற்களைக் கடித்துத் தாங்கிக் கொள்ளும் தன்மையை ஒருவகை நம்பிக்கையாகப் பெற்றுள்ளோம். ‘எல்லாம் விதிப்பயன்’ எனும் இந்தத் தலைஎழுத்தையே நொந்து சோம்பி நிற்கும் சோம்பல் வேதாந்த வாழ்க்கையை வள்ளுவர் வெறுத்தாலும், ஊழையும் உப்பக்கம் காணுமாறு அவர் சொல்லி யிருந்தாலும், இந்தக் ‘கர்மாக் கொள்கை’ எப்படியோ இன்று வேர் பிடித்துக் கொண்டு வாழ்க்கைப் போராட்டங் களில் ஒருவகை அதிர்ச்சித் தாங்கியைப் போல விளங்கி வருகிறது.

“நன்றாங்கால் நல்லவாகக் காண்பவராக” நாம் இருப்பதால், “அன்றாங்கால் அல்லல்படாமலே” வாழப் பழகிக் கொண்டு விட்டோம். இந்தக் கலையை வெளிநாடுகளில் குடியேறிவாழும் நம்மவர்கள் சற்று மறந்துவிட்டார்கள் போலும்! அவ்வாறு மறந்து விட்டதை நினைத்துப் பார்க்கச் சந்தர்ப்பங்களைத் தேடுகின்றனர். அதாவது செழிப்பினூடேயும் மனநலமும் அமைதியும் பெறும் பண்பாட்டு நெறிகளைப் பற்றிக் கொள்ளத் துடிக்கின்றனர். நமது கலாச்சாரப் பாரம்பரியத்தை அறியாது வாழும் புதிய தலைமுறையினர்க்கு நம்பிக்கையூட்டுவதற்கு நமது சிறப்பு வாய்ந்த இலக்கியச் சிந்தனைகளும் மரபுகளுமே கை கொடுக்கும் என உறுதியாக நம்புகின்றனர். “பிணீஜீஜீவீஸீமீss வீs tலீமீ நீஷீஸீtமீஸீtனீமீஸீt ஷீயீ னீவீஸீபீ” என உணர்ந்து வறுமையிலும் செம்மையாக வாழ்தல் போல, கூட்டுக் குடும்ப வாழ்விலும் அமைதி காணுதல் போல செழிப்பு மிக்க தமது வாழ்விலும் செம்மையோடு அமைதி காண அவாவுறுகின்றனர். இதனை, இந்த மன நிறைவை, மாண்பார்ந்த அமைதியை நாம் அவர்களுக்கு என்றென்றும் அளிக்க முடியும்! முயற்சிக் கொல்லியாக வாழாது, தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்கும் அறஉணர்வுகளின் வழியாக நாம் எஞ்ஞான்றும் வழிகாட்ட முடியும். திருக்குறள் செய்திகளை ஏந்திச் சென்ற எனது சிறிய, எளிய பயணத்தில் இந்த அளவுக்குத் திருக்குறளின் மீது பற்றும் நமது பாரம்பரிய நம்பிக்கைகளின் மீது பரிவும் ஏற்படுத்த முடிந்ததே எனும் மனநிறைவே எனக்குத் தேனாக இனித்தது!

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

     செல்லும்வா யெல்லாம் செயல்” (33)

எனும் உறுதியோடு கனடா நாட்டு அன்பர்களிடம் விடைபெற்று இலண்டனுக்குப் புறப்பட்டோம்.

தனிநபர் ஒழுக்க நெறிகள் திருக்குறளில் போதுமான அளவுக்குச் சொல்லப்பட்டுள்ளன. காலங்கள் மாறினாலும் கூட, என்றைக்கும் ஏற்புடையனவாக அக்கருத்துகள் உள்ளன. மக்கள் தத்தம் நிலைக்கேற்ப அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் எழுதப் பட்டமையால் அவை எப்போதும் பொருந்துவனவாக இருக்கின்றன. தனிநபர் வாழ்வுக் குறள்களைப் போல, அரசியல் குறட்பாக்களும் காலந்தோறும், நாடுதோறும் பொருந்தும் எனச் சொல்ல முடியுமா எனும் சர்ச்சை கனடா அன்பர்களோடு உரையாடியபோது எழுந்தது. அது நெடிய சிந்தனைக்கும் இனிய கருத்துக் கோவைக்கும் ஆக்கமாய் அமைந்தது.

நாம் வாழ்வது குடியாட்சிக் காலம்; வள்ளுவர் வாழ்ந்தது முடியாட்சிக் காலம். தாம் வாழ்ந்த காலத்தே அவர் உணர்ந்து எழுதியவை இன்றைய நம் தேவைகளுக்கு உதவுமா?

குடியாட்சி என்றதும் அதன் பெயரால் பல நாடுகளில் அரங்கேறும் அலங்கோலங்களே நம் கண்ணில் வலம் வருகின்றன. ஆட்சி அதிகாரத்திற்காகச் செய்யப்படும் முறைகேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. கொள்கை அடிப்படையில் கட்சிகளை நிறுவி, மக்கள் வாக்குகளைப் பெறும் பெரும்பான்மையர் ஆட்சி அமைப்பதுதான் குடியாட்சி நெறிமுறை. ஆனால், இந்தப் பெரும்பான்மையைப் பெறுவதற்காகவும், அப்படியே அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பல தவறுகள் செய்யப்படுகின்றன. மக்கள் உணர்ச்சியைத் தூண்டும் பொய்ப் பிரச்சாரங்கள், பிற கட்சித் தூற்றல்கள், ஆட்களைச் சேர்க்கும் வன்முறைகள், பணம் பதவிகளைக் கொண்டு நடத்தும் ஏவுதல்கள் ஆகிய போலிக்குணங்கள் அரசியல் ஒழுக்கமாகி உள்ளன!

உலகம் ஒன்று, உலக மக்கள் ஒருகுலத்தவர், ஓருலக அரசு, பொது நலப் பொருளாதாரக் கட்டமைவும் குறிக்கோள்கள். நாட்டுச் சிக்கல்களைக் கூட்டுப்பேச்சால் தீர்த்தல் வேண்டும் என்பதும், நிலையான தீர்வுக்கு உரிய வழி போரில்லை என்பதும், கூட்டு நாட்டுக் கொள்கைகள் – இவை எல்லாம் இந்த நூற்றாண்டில் வலியுறுத்தப்பட்டு வரும் வருங்கால இலட்சியங்கள்.

இந்த இலட்சியங்களுக்கு உதவும் வகையில் குறளின் அரசுச் சிந்தனைகள் இருப்பதுதான் வள்ளுவப் பெருமை.

“உலகம் எல்லாம் ஒன்று” எனும் மேலோட்டமான ஆரவாரம் இன்றி ‘ஒவ்வோர் இடமும், நாடும், உலகின் ஓர் அங்கம்’ என்னும் நடைமுறை உணர்வோடு குறட்பா நடக்கிறது. உலகம் நாடு நாடாகப் பிரித்து ஆளப்படுகிறது, எந்த மனிதனும் உலக மகனாகப் பிறப்பதில்லை; ஒரு நாட்டின் குடிமகனாகவே எற்கப்படுகிறான். எனவே வள்ளுவம்… ‘நாடு’ என்பதனை இடவரம்பாகக் கொண்டு, பொதுவான அரசியல் செய்திகளையும் நடைமுறை களையுமே தருகிறது.

மக்கள் இனம் ஒத்துவாழ ‘அரசமைப்பு’ என்பது இன்றியமையாதது என்கிறது…

“ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே

     வேந்துஅமைவு இல்லாத நாடு”  (740)

எனும் குறட்பா நாடு என்றால் அதற்கு அரசு வேண்டும் அரசு என்றால் அதற்கென ஓர் ஆட்சித் தலைவன் வேண்டும்; அத்தலைவன், அரசனாயினும் அமைச்சன் ஆயினும்… மூன்று முக்கிய இயல்புகள் உடையோனாய் இருந்தாக வேண்டும்.

“தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும்

     நீங்கா நிலன்ஆள் பவர்க்கு”          (383)

எனும் குறள் அந்த மூன்றையும் சொல்லுகிறது. சட்டமன்றங்களில் தூங்காமையைத்தான் அன்றே இக்குறள் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றார் அன்பர் ஒருவர் இடைமறித்து!

‘குடிதழுவிக் கோலோச்சுதல்’, ‘முறை செய்து காப்பாற்றுதல்’ என்பன அரசின் முதன்மைக் கடமைகள். ஆட்சித் தலைவனோடு அரசுப் பொறுப்பேற்கும் அமைச்சர் முதலானோர் பின்பற்ற வேண்டிய கடமைகளும் குறளில் அரசியல் நிர்ணயச் சட்டம் போலத் தொகுக்கப் பட்டுள்ளன.

‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பதே அவர்க்கு உரிய ஒரே நோக்காய் இருத்தல் வேண்டும்; ‘உயர்வு’ என்றால் தனது சொந்த நிலை உயர்வு இல்லை; சமுதாயப் பொது உயர்வு.

“உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்

     சேராது…”             (734)

நாட்டுக்கு உழைக்கும் மனநல மாண்பு

“வேல்அன்று வென்றி தருவது; மன்னவன்

     கோல்அதூஉம் கோடாது எனின்”     (546)

எனும் கொள்கைப் பிடிப்பு!

இவ்வாறெல்லாம் அனைத்து நாடுகளும் ஒப்பக்கூடிய அரசியல் வகைமைகளை வகுத்துள்ள வள்ளுவம், தனிநபர் ஒழுகலாறு போல, அரசியல் தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. நாம் தான் காரியக் குருடர்களாகவே இருக்க விரும்புகிறோம்! இவையெல்லாம் அப்பயணத்தில் பரிமாறப்பட்ட அரசியல் விருந்துகள்.

“நாடுஎன்ப நாடா வளத்தன; நாடுஅல்ல

     நாட வளம்தரும் நாடு”   (739)

எனும் குறளுக்கு எடுத்துக்காட்டாக இலங்கும் அமெரிக்க, கனடா நாடுகளில் நான் கண்ணாரக் கண்டுணர்ந்த ஆக்க நலன்கள்!

1706total visits,2visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>