உணவிற்காக உயிர்களைக் கொல்வது மிகக் கொடுமை யாகும். உலகத்தில் பலர் புலால் உணவு உண்பவர்கள். அவர்களுக்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுகின்றன. எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமை உண்டு. எல்லா உயிர்களும் அருமையானவை. தற்காத்துக் கொள்ள முடியாத உயிர்களைப் பதைபதைக்கக் கொல்வது பாவமாகும். நமது உடம்பில் ஏதேனும் ஓர் உறுப்பை இழக்கச் சம்மதிப்போமோ? நாம் பிற உயிரைக் கொல்லலாம் என்றால் நம்மையும் பிறர் கொல்லலாம் அல்லவா? பிற உயிர்களைப் பேணாது நம் உடம்பை வளர்ப்பதற்காக பிற உயிர்களைத் துடிதுடிக்கக் கொன்று தின்று வாழ்வது என்ன வாழ்க்கை?
நம்மோடு தொடர்பு இல்லாதவர்களிடமும் காட்டும் அன்புதான் கருணை. பிறர்படும் துன்பத்தைக் கண்டு வருந்தி உருகுவதுதான் கருணை. பிறர் துன்பத்தைத் தீர்க்க முயல்வதும் கருணை.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்க வேண்டும் என்பார் வள்ளலார்.
கருணை மிக்கவர்கள் எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் நேசிப்பார்கள்.
அருள் ஆட்சி உள்ளவர்களுக்கு உயிர்களிடம் இரக்கம் உண்டு. தன் உடம்பை வளர்ப்பதற்காகப் பிற உயிர்களின் உடம்பைக் கொன்று தின்பவனுக்கு அருளாட்சி உண்டா என்று வினவுவார் வள்ளுவர்.
“தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?” (251)
தோலை நீக்கிவிட்டால் உடம்பின் உட்பகுதி புண் வடிவத்தில் தோன்றுகின்றது. சிறிது வெளியே தெரிந்தாலும் அருவருப்பு ஏற்படுகிறது. நமது உடலின் புண் நமக்கு அருவருப்பாக இருக்கிறது; பிறருக்கும் அருவருப்பாகத் தோன்றுகிறது. ஆதலால் அப்புண்ணை வெளிக்காட்டாமல் மறைத்து விடுகிறோம். நாவின் சுவையை மட்டும் கொண்டு இந்த அருவருப்பை மறந்து விடுகிறோம். புண்ணுக்கு என்ன என்ன தன்மை உண்டோ அனைத்தும் புலாலுக்கும் உண்டு. சுவையை மறந்து விட்டால் அது மற்றோர் உடம்பின் புண் என்று உணர்வோம்; அருவருப்பு அடைவோம். இதை உணர்ந்தாவது புலால் மறுக்க வேண்டும் என்பார் வள்ளுவர்.
“உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின்.” (257)
பிற உயிர்களின் உடலைக் கொன்று தின்று சுவை கொண்டவன் சுவையிலே வெறி கொள்வானே தவிர நன்மையில் பெரிதும் நாட்டம் கொள்ள மாட்டான். படைவீரன் போர்க் கருவிகளை, கொலைக் கருவிகளைக் கொண்டு உயிர்களை அழிக்கும்போது ஏற்படும் வெறி போல் புலால் உண்பவனும் கருணையற்றவனாய் சுவை வெறி கொண்டு நன்மையை நாட மாட்டான்.
“படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்” (253)
வாழ்வில் அருளாட்சியை இலட்சியமாகக் கொண்டவர்க்கு எந்தச் சூழ்நிலையிலும் புலால் மறுத்தலே தவமாகும். உயிர்க் கொலையால் வரும் புலால் உணவு மனிதனுக்குத் தீங்கு விளைவிப்பது; உடல் வளர்ச்சிக்கோ, மன நலத்திற்கோ பயன் தராதது; துன்பத்தையும் பாவத்தையும் தருவது.
“அருள்அல்லது யாதுஎனில் கொல்லாமை கோறல்
பொருள்அல்லது அவ்வூன் தினல்” (254)
புலால் உண்ணாமை என்பது அருளை அடிப்படையாகக் கொண்டது. அறத்தின் அடிப்படையில் புலால் உண்ணாமை என்ற அருள்உணர்வு உடம்பினுள் வந்து தங்கியுள்ளது.
ஊனைத் தின்பவர்க்குத் துன்பம் தரும் நரகம்தான் கிடைக்கும். ஊன் தின்பவரைக் கொடுமை மிகுந்த நரகம் விழுங்கும். அங்கிருந்து அவ்வுயிர் மீள முடியாது. இவ்வுயிர் மீண்டும் வந்து பிற உயிர்களைக் கொலை செய்து வயிறு வளர்க்கும் கொடுமையைப் பொறுக்காது நரகம் கூட வாயை மூடிக்கொள்ளும். உயிர் வெளியேற முடியாமல் வாயைத் திறக்காது மூடிக்கொள்ளும். இதை வள்ளுவர் அழகாகக் கூறுகிறார்.
“உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.” (255)
மாமிசம் உண்பவர்களை, புலால் உண்பவர்களைப் பார்த்து, ‘உயிர்க்கொலை செய்யாதீர்கள், மாமிசம் உண்ணாதீர்கள்’ என்று கூறினால், அவர்கள் ‘நாங்களா கொல்கின்றோம்? கடையில் விற்பனையாகும் புலாலைத்தான் மாமிசத்தைத்தான் வாங்குகின்றோம். நாங்கள் கொன்று பாவம் செய்வதில்லை’ என்று கூறுவார்கள். வள்ளுவர் இங்குதான் அழகான பொருளாதாரத் தத்துவத்தைக் கூறுகிறார். தேவை இருந்தால்தான் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்வார்கள் தேவை இல்லை என்றால் அங்கு உற்பத்தி இல்லை. ‘ஞிமீனீணீஸீபீ ணீஸீபீ ஷிuஜீஜீறீஹ் ஜிலீமீஷீக்ஷீஹ்’ என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். தேவைதான் உற்பத்திக்கும், வியாபாரத்திற்கும் காரணம்.
மாமிசத்தை உண்பவர்கள் இருப்பதால்தான் அத் தேவையைப் பூர்த்தி செய்ய மாமிச விற்பனை நடைபெறுகிறது. அந்த விற்பனைக்காகவே உயிர்கள் கொல்லப்படுகின்றன. புலால் உண்பவர்கள்தான் உயிர்க்கொலைக்கு மூல காரணமாக இருப்பவர்கள் அவ்வகையில் மாமிசம் உண்பவருக்கே அதிகப் பாவம் விளைகின்றது.
“தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்” (256)
தற்போது மேலைநாடுகளில் கூட புலால் மறுப்பு இயக்கம் அமைதியாகவும் வேகமாகவும் நடந்து வருகிறது. மாமிசம் உண்பவர்களை விட சைவம் உண்பவர்களுக்கே நோய் விரைவில் குணமடைகின்றது. புலால் உணவு வலிமை தரும் என்பது தவறானது. விரைந்து ஓடும் குதிரையும் வலிமை மிகுந்த யானையும் புலால் உணவா உண்கின்றன? வாழ்வின் பயன் ஒழுக்கமும், கல்வியும், அறிவும் பெற்று உடல்நலமும், உள்ள நலமும், மனஅமைதியும், இன்பமும் பெற்றுக் கருணை மிகுந்தவராய் இறைநிலை அடைதலே ஆகும். இதற்கு அடிப்படை புலால் மறுத்தல் ஆகும்.
பிற உயிர்களை உணவிற்காகவும், மற்ற காரணங்களுக்கும் கொல்லாமல் இருக்க வேண்டும். பிற உயிர்களைப் பாதுகாத்து, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் வேண்டும். இவ்வாறு ஓர் உயிரையும் கொல்லாது, பிற உயிர்களைப் பாதுகாத்து, விற்பனைக்கு இருக்கிறது என விற்கும் புலாலையும் மறுத்தும் தவிர்த்தும் இருக்கும் ஒருவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் சென்று தொழுது ஏத்தி வாழ்த்தி நிற்கும் என்று வாழ்த்துகிறார் வள்ளுவர்.
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.” (260)
3749total visits,1visits today