நாடுகாண் காதை & முகவை மாவட்டம்

இந்தியாவில் நீளமான கடற்கரையைக் கொண்டது தமிழ்நாடு. இம்மாநிலத்தில் கிழக்குக் கடலோர எல்லை வரைகோட்டினை, அழகிய பெண்ணொருத்தியின் முகத்தைப் போல உருவகித்து வரைந்திருந்தார் ஓவியர் ஒருவர். அந்த முகத்தில் புன்சிரிப்பைப் புலப்படுத்தும் வாயிதழ் போல அமைந்துள்ள மாவட்டத்திற்கு ‘முகவை மாவட்டம்’ எனப் பொருத்தமானதொரு பெயரும் உண்டு. இந்த இராமநாதபுர மாவட்டத்தைக் காணவருமாறு மதுரை வானொலியில் ‘நாடுகாண் காதை’ வழியாக அழைக்கிறேன். புகார்நகரை விடுத்து மதுரை நோக்கிப் புறப்பட்ட சிலப்பதிகார இணையர்க்குக் கவுந்தியடிகள் மதுரைவரை வழிகாட்டி நடந்தார். அவ்வாறு நடந்துவந்த வழியில்- இந்த இராமநாத புறப்பகுதியும் இருந்திருப்பின்- இந்த மண்ணின் புனித வரலாற்றையெல்லாம் புதியதொரு காதையாக விரித்திருப்பார்: அதனை இளங்கோவடிகளும் இனிமையுறத் தொகுத்திருப்பார்.

நினைப்பிற்கெல்லாம் எட்டாத நெடுங்காலமாக வரலாற்றுச் சிறப்பும் வழிவழித்தொன்மையும் உடைய வழிபாட்டிடங்களைக் கொண்டதாக இராமநாதபுர மாவட்டம் விளங்கி வந்துள்ளது. இமயம் முதல் குமரி வரை என்பது போல, ‘காசி முதல் இராமேசுவரம் வரை’ எனும் ஒரு நாட்டுச் சிந்தனையும் நிலைபெற்று வந்துள்ளது. இப்புண்ணிய பாரதத்தின் புகழ்பெற்ற திருத்தலங்களுள் ஒன்றான இராமேசுவரம் உயிருக்கு ஆதாரமான பக்தி நெறியையும், காலத்தை வென்று நிற்கும் கலாச்சாரக் கட்டுக்கோப்பையும் பேணி வளர்த்து வருகிறது.

பழந்தமிழகத்துப் பாண்டியப் பேரரசின் ஒரு பகுதியான இந்த மாவட்டம், பல வரலாற்றுச் சுவடுகளைப் பெற்றுள்ளது. ‘முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே’ எனப் பாரதியார் பரவசத்துடன் பாடிய பாண்டிநாட்டு முத்துக்கள் எகிப்திய எழிலரசி கிளியோபாத்ராவின் அலங்காரப் பொருள்களாயின. அரேபியக் குதிரைகளை இறக்குமதி செய்யும் தொண்டி முதலிய துறைமுகங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே புகழ்பெற்று விளங்கின. இதிகாச இராமாயணத்தை வரலாற்று நிகழ்ச்சியாக வரையறுத்துக் காட்டும் பல தடயங்கள் என்றென்றும் போற்றப்பட்டு வருகின்றன. ‘தென்பாண்டி நாடே சிவலோகம்’ என வாதவூரர் மொழிந்தது போல, இப்பாண்டிநாட்டுப் பகுதியில் சிவம் பெருக்கிய சீலர்களாகிய சமய குரவர் நால்வராலும் போற்றிப் பாடப்பெற்ற பல திருத்தலங்கள் – திருவாடானை, திருராமேசுவரம், திருக்கானப்பேர், திருப்புத்தூர் எனும் பாடல் பெற்ற தலங்கள் பல உள்ளன. வடக்கிலிருந்து படை எடுத்து வந்த மொகலாயர்கள் இராமேசுவரம் கோவில்வரை வந்து கொள்ளையிட்டுச் சென்றதை வரலாறு சொல்கிறது. மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய, நாயக்க மன்னர்களுக்குச் சிலசமயம் உட்பட்டும் பல சமயம் உட்படாமலும் இப்பகுதியைச் சேதுபதி மன்னர்கள் தன்னாட்சி புரிந்து தனிவரலாறு படைத்துள்ளனர். பாண்டிய மன்னரால் மானியமாக வழங்கப் பெற்ற இக்கடற்கரைப் பகுதியில் 60க்கும் மேற்பட்ட ஆலயங்களில் சேதுபதிகள் அறப்பணிகள் நடத்தி வந்தனர்.

இலங்கையை ஆண்ட மன்னன் ஸ்ரீராஜசேகரனின் அருந்துணையோடு இலங்கைத் திரிகோணமலையில் இருந்து கடல் வழியாகக் கற்களைக் கொணர்ந்து உடையன் சேதுபதி, 13-ஆம் நூற்றாண்டில் இராமேசுவரத்தின் கோயில் கருவறையைக் கட்டினான். பின்னர் கிருஷ்ண தேவராயர் காலத்தில் அதன் வடக்கு, தெற்குக் கோபுரங்கள் கட்டப்பட்டன.

‘திரைகள் முத்தால் வணங்கும் திருஇராமேசுவரம்’ என்று அப்பர் சுவாமிகள் பாடியருளினார். எத்தனையோ புண்ணியத் தலங்கள் இருப்பினும் இராமபிரானையே கவர்ந்திழுத்த இராமேசுவர ஜோதிர்லிங்கம் புண்ணியத் தலங்களின் இமயமாகவே விளங்கி வருகிறது.

அன்று இராமபிரானை ஈர்த்தது போல, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகெலாம் இந்து சமயப் பெருமை பற்றி, இந்திய மண்ணின் அருமை பற்றிப் பேருரை யாற்றச் சென்ற சுவாமி விவேகானந்தரையும் இந்தத் தலம் ஈர்த்தது. சேதுபதி மன்னர் நல்கிய பொருளாதார ஆக்கத்தையும் இராமநாத சுவாமிகளின் அருளாதார ஊக்கத்தையும் பெற்றுச்செல்ல ‘ஊட்டிவிடும் சென்மம் வரும் வழியைத் தாளிட்டுப் பூட்டிவிடும் சேது’ வழியாகவே விவேகானந்தரும் வந்தார்.

‘வையை என்னும் பொய்யாக் குலக் கொடியை’ கடலோடு சங்கமம் ஆகவிடாமலே தடுத்து தன்னிடம் உள்ள பெரிய பெரிய கண்மாய்க்கரையிலேயே தக்கவைத்துக் கொள்ளும் தனிப்பெருமையுடைய இராமநாதபுரம் சீமை வறண்ட பிரதேசம் என்பது நாடறிந்த உண்மை. இங்கே வானம் பொய்ப்பதால் மண்ணில் வறட்சி ஏற்படுவது இயல்பு என்றாலும் இப்பகுதி மக்கள் தம் உழைப்பில் மலையாத நம்பிக்கை உடையவர்கள் என்பதை மறுக்க முடியாது. கடலோரப் பகுதிகளில் எல்லாம் பழைய நெய்தல்  நிலப் போராட்ட வாழ்க்கை நீடிக்கிறது என்றாலும் திரைகடலோடித் திரவியம் தேடும் முனைப்பும் முயற்சியும் இவ்வட்டார மக்களுக்கே உரிய தனிச்சிறப்புக்கள். மாவட்டப் பிரிவினைக்கு முற்பட்ட பழைய இராமநாதபுர மாவட்டம் பரப்பளவில் மிகப்பெரியது;  எனினும் அதன் ஆட்சித்தலைநகராகப் பல வசதிகளைக் கருதி மதுரையே நீடித்ததால் இம்மாவட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் பல பாதிப்புக்கள் ஏற்பட்டன. அண்மையில் செய்யப்பட்ட மாவட்டச் சீரமைப்பால், முகவை மாவட்டம், அளவில் சுருங்கி விட்டது; என்றாலும் ஆக்க நலத்தில் போட்டியிட்டு முன்னேறத் துடித்து நிற்கிறது. தலைநகரான இராமநாதபுரத்தில்  பழைமைச் சுவடுகளைத் தாண்டி புதுமைப் பொலிவுகள் தலைதூக்கி வருகின்றன. வாய்ப்புள்ள இடங்களில் தொழில்களைத் தொடங்கும் எண்ணங்கள் மலர்ந்து வருகின்றன.

என்னதான் புதுமைநலன்கள் புகுந்தாலும் சில இடங்களில் பழமைப் பெருமைகள் ஒருபோதும் குன்றிப் போவதில்லை என்பார்கள். உரோமாபுரியைப் போல, எருசலத்தைப் போல, மக்கா நகரைப் போல, இராமேசுவரம் எனும் திருத்தலப் பெருமையால் முகவை மாவட்டம் என்றென்றும் பழமைப் பெருமைகளை, பண்புகளை, நம்பிக்கைகளைப் பேணிக்காக்கும் நினைவரங்கமாகவே திகழும் என்பதை அங்கு சுற்றுலாச் செல்லும் எவரும் ஏற்பர்.

‘காசி – ராமேசுவரம் சாலை’ எனும் வழிநடைப்பாதை காலம்காலமாக இருந்ததை வரலாறு சொல்கிறது. திருச்சி- மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக 1906-இல் இருப்புப்பாதை போடப்பட்டது. ‘இந்தோ-சிலோன் போட் மெயில்’ எனும் ரயில் அக்காலத்தில் மிகமிகப் பிரபலமாக விளங்கியது. இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களாகச் சென்றவர்கள் மருத்துவப் பரிசோதனைக்காகத் தங்க வைக்கப்பட்ட ‘மண்டபம் முகாமும்’ 1914-இல் கட்டப்பட்ட பாம்பன் பாலமும் முக்கியமானவை. 1973-இல் சாலை வழிப்பாலம் ஒன்று கட்டும் திட்டம் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது. இராமேசுவரம் தீவினை இராமநாதபுரம் மாவட்டத்து நிலப்பகுதியுடன் நிரந்தரமாக இணைக்கும் ‘பாம்பன் சாலைப் பாலம்’ 1988-இல் திறந்து வைக்கப்பட்ட பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை பலமடங்கு அதிகரித்து உள்ளது.

இந்த பாம்பன் சாலைப் பாலம் அரியதொரு பொறியியல் சாதனை. ஏற்கனவே உள்ள 12 அடி உயர ரயில் பாலத்தில் வலதுபுரத்தில் கட்டப்பட்டுள்ள இந்தச் சாலைப்பாலத்தின் நீளம் 2 1/2 கிலோமீட்டர்; வாகனங்கள் செல்ல 7.5மீட்டர் அகலப் பாதையும் நடைபாதையாக 1.5 மீட்டர் அகலமும் விடப்பட்டுள்ள, 80 அடி உயரமுள்ள பிரமிப்பூட்டும் அமைப்பு இது. பாலத்தின் கீழே 75 அடி உயரம் கொண்ட சரக்குக் கப்பல்கள் தாராளமாகச் செல்ல முடியும். இதுபோல பாக் ஜலசந்தியையும் மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ‘சேதுக் கால்வாய் திட்டமும்’ நிறைவேறிவிட்டால் முகவை மாவட்டம் முன்னணி மாவட்டம் ஆகிவிடும் கனவு நனவாகும்.

‘மங்கம்மாள் சாலை, மலையெல்லாம் சோலை’ என்பதைப் போல முகவை மாவட்டக் கடற்கரையிலிருந்து இலங்கை வரை எண்ணற்ற கடல் தீவுகளும் பவளத் திட்டுக்களும் உள்ளன. இவற்றுள் ஒன்றான குருசடித் தீவு உயிரியல் ஆராய்ச்சியாளர்க்குச் சிறந்ததொரு களஞ்சியமாகத் திகழ்கிறது. அரிய உயிரின வகைகள் இங்கே ஏராளமாக உள்ளன. இராமேசுவரத்திலிருந்து மண்டபம் வழியாக 20 கிலோமீட்டர் கடற் பயணத்தில் இத்தீவுக்குச் செல்ல முடியும். பயணவழியில் எல்லாம் பவளப்பாறைகளைக் கண்டு வியக்கலாம். கர்ண பரம்பரையாகக் கேட்டு வந்த ‘பவளக்கொடி’ முதலான நாட்டுப்புற இலக்கியங்களுக்குப் பின்னணி கூட்டிய வரலாற்று நிகழ்ச்சிகளை எண்ணி எண்ணி மகிழலாம்.

புண்ணிய பாரதத்தில் போற்றி வழிபடும் தலங்களில் பிரசித்தி பெற்ற இரண்டு – காசியும், இராமேசுவரமும். இவ்விரண்டனுள் முன்னதை முறையாக வழிபட்டவர் பின்னதையும் வழிபட வேண்டும் என்பது மரபும் நியதியும் ஆகும். வடநாட்டு மக்களைத் தெற்கே வரவழைத்து, தென்னாட்டவரை வடபுலம் ஏக வைக்கும் கட்டாயக் கடமையாக்கும் கலாச்சார உறவுக்கும் சைவ – வைணவ சமய ஒற்றுமைக்கு வழிகாட்டும் தார்மீக நெறிக்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் காலமெல்லாம் ஆக்கம் தருவதாக இராமேசுவரம் தீவு விளங்கி வருகிறது.

இராமேசுவரம் தீவு திருமாலின் திருக்கரத்தில் உள்ள சங்கின் வடிவம் போல அமைந்துள்ள அருமை வியக்கத்தக்கது. இதைச் சூழ்ந்துள்ள கடலில் தூய்மையான வெண்பவளமும் சங்கும் ஏராளமாகக் கிடைக்கின்றன. இத்தீவின் கிழக்கோரமாக இராமநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இலங்கைப் போருக்கு முன்னரோ பின்னரோ இராமபிரானால் எழுப்பப்பட்ட பெருமையுடையது என்பார்கள்.

“தேவியை வலிய தென்னிலங்கைத் தசமுகன்

 பூவியலும்முடி பொன்றுவித்த பழபோய் அற

 ஏவியலும் சிலை அண்ணல் செய்த இராமேசுவரம்”

எனத் திருஞான சம்பந்தர் தம் திருப்பதிகத்தில் இதைப் பாடியுள்ளார்.

“செங்கண்மால் செய்த கோயில் திருவிராமேச்சு வரம்”9

என்று திருநாவுக்கரசர் இதனை உறுதி செய்துள்ளார்.

இராமாயணப் போருக்குப் பின்னர் இராமபிரான், சிவலிங்கப் பிரதிட்டைக்காக ஒரு நேரம் குறிப்பிட்டு அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொணருமாறு அனுப்பினார். அனுமன் நியமித்த நேரத்திற்குள் வாராமை யால், சீதை, கடற்கரை மணலையே சிவலிங்கமாக்கிக் கொடுக்க இராமபிரான் அதனைப் பிரதிட்டை செய்து விட்டார். காலம் கடந்து வந்த அனுமன் இதுகண்டு சினந்து, பிரதிட்டை செய்த சிவலிங்கத்தைத் தனது வாலால் கட்டிப் பெயர்த்தெடுக்க முற்பட்டான். இராமபிரான், அனுமனைச் சமாதானப்படுத்தி, அவன் கொணர்ந்த சிவலிங்கத்தை, இராமலிங்கப் பிரதிட்டையின் முன்னால் வைத்து அதற்கே முதற்பூசை நடைபெற வேண்டும் எனக் கட்டளையிட்டார். தம் தொண்டனுக்கு, அவரது உழைப்புக்கு உரிய மரியாதையினைச் செய்தார். இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இராமநாதப் பெருமானுக்கு நாள்தோறும் கங்கையிலிருந்து கொண்டுவரப்படும் தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படுவது அரியதொரு விசேடம்.

இந்த இராமேசுவரத் தலம் மூர்த்தி விசேடம், தல விசேடம், தீர்த்த விசேடம் எனும் மூவகைச் சிறப்புக்களையும் ஒருசேரப் பெற்றிருப்பினும் தீர்த்த விசேடம் மிகச்சிறப்பாய் போற்றப்படுகிறது. இங்கே திருக்கோயிலின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. திருக்கோயிலின் கிழக்கே உள்ள கடல் அக்கினி தீர்த்தம் எனப்பெறும் இதில் நீராடிய பின்னரே திருக்கோயில் தீர்த்தங்களுக்குச் செல்லவேண்டும். பிற கடல் தீர்த்தங்களில் நீராடிட, திதி, வார, நட்சத்திர நியமங்கள் பல உண்டு. ஆனால் இராமேசுவரத் தீர்த்தத்தில் நீராட நியமம் ஏதும் இல்லை. இராமநாதசுவாமி கோவிலின் பிரகாரம் 4000 தூண்களைக் கொண்டது; மூன்றாவது பிரகாரம் உலகிலேயே மிக நீளமானது எனும் பெருமைக்கு உரியது.

இத்திருக்கோயிலில் இருந்து இரண்டு கி.மீ. தூத்தில் உள்ள கந்தமாதனகிரி எனும் மணல்மேட்டில் இராம பிரானுடைய பாதங்கள் இரண்டும் பிரதிட்டை செய்யப் பட்டுள்ளன. தெற்கே 16 கி.மீ. தொலைவில் தனுஷ்கோடி உள்ளது. 1964-இல் வீசிய கொடிய புயலால் முற்றிலும் அழிந்து போன இந்தத் தொன்மையிடம் ‘இன்னும் அழித்துவிடாதே’ எனக் கடலை இறைஞ்சி நிற்கும் இடம் போலக் காட்சி தருகிறது.

முகவை மாவட்டத்திற்குச் ‘சேது நாடு’ எனப் பெயர் உண்டு. சேது என்பது வேதாரண்யம் கோடியக்கரையில் தொடங்கி தனுஷ்கோடியில் முடிகிறது. இராமர் அயோத்தி சென்று முடி சூடிய பிறகு, இராமேசுவரத்திற்கு மூன்றாம் முறை வழிபட வந்தபோது இவற்றிற்கு இடையே உள்ள 64 தீர்த்தங்களில் நீராடி வந்தமையால் இவை சேதுமகிமை பேசின. இவற்றுள் இப்போது 13 தான் உள்ளன. ‘சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ எனப் பாரதி பாடியது இந்தத் தீர்த்த வீதியைத் தானோ! என்று நம்மை எண்ண வைக்கும் வகையில் வரிசையாக இவை அமைந்துள்ளன. அரசு கருதியுள்ள கீழைக்கடற்கரை நெடுஞ்சாலை இவ்வழியாகத்தான் போடப்படும் என்கிறார்கள்.

திருப்புல்லணை எனும் புகழ்பெற்ற வைணவத்தலம், தேவிப்பட்டணம் எனும் நவக்கிரகத் தீர்த்த வழிபாட்டிடம், பாம்பனில் வையிரவத்தீர்த்தம், இராமேசுவரத்தில் இராமலட்சுமணத் தீர்த்தம் தனுஷ்கோடியில் சோபன தீர்த்தம், உத்தரகோச மங்கையில் நடராசர் திருவடி வணங்கி முடிப்பது இராமேசுவர யாத்திரையின் நிறைவுநலம் என்பார்கள்.

முகவை மாவட்டத்தில் தொண்டி பழம் பெருமை பேசும் பாண்டி நாட்டுக் கடற்கரை என்றால் கீழக்கரை புதுமை நலம்பாடும் எழில்மிகு பேரூர். திரைகடலோடித் திரவியம் தேடுவோர் வாழ்க்கை வனப்புக்களையும் போராட்டங்களையும் இங்கே ஒரே வார்ப்பாகக் காணலாம்.

முகவை மாவட்டம் பல சமய நெறியினரும் சமரச உணர்வோடு வாழும் சகோதர மாவட்டம் எனலாம். மாமன், மச்சான் என உறவுப்பெயர் சொல்லிச் சமூக நலம் பேணும் ஒப்புரவு மாவட்டம் எனலாம். முகவை மாவட்டம் வறண்ட பிரதேசம் என இங்கிருந்தபடியே எண்ணிவிடாமல், ஒருதடவை பயணத் திட்டமிட்டுப் புறப்படுங்கள். அங்கே நமது பாரம்பரியப் பண்பாட்டுக் கோலங்களையும், புதிய வளர்ச்சிக்கான உயிரோட்ட நாளங்களையும் கண்ணாரக் கண்டு மகிழலாம், இராமேசுவரத்தில் தீர்த்தமாடி வருவதோடு இந்த மண்ணின் எதிர்கால வளத்தில் தீர்க்கமான நம்பிக்கையோடும் திரும்பலாம்.

 

தெருவெல்லாம் தமிழிசை

தெருவெல்லாம் தமிழிசை

செழிக்கச் செய்வோம்!’

 

ஆண்டுதோறும் தமிழிசை இயக்க மாநாடுகள் சென்னை, மதுரை முதலிய தமிழ்நாட்டு நகரங்களில் நடைபெறுகின்றன. தமிழிசை வல்லுநர்களும், அறிஞர்களும், வள்ளல்களும், கலைக்காவலர்களும் இவ்விழாக்களில் பங்கேற்க முறைப்படி கூடுகின்றனர். விழா நிகழ்வுறும் நாட்களில் எல்லாம் தமிழிசை முழக்கங்களும், தமிழ்ப்பண் ஆராய்ச்சி விளக்கங்களும் கேட்கின்றன. பத்துப் பதினைந்து நாட்கள் கோலாகல விழாவுடன் திரை தொங்க விடப்படுகிறது. அடுத்த ஆண்டு மறுபடியும் தமிழிசை அரங்கு கூடும் என அறிவிக்கப் படுகிறது. இம்மரபு போற்றுதற்கு உரியது, தமிழிசை இயக்கத்தை வளர்க்கவும், பரப்பவும் இசை மாநாடுகள் தேவை. எனினும் இடைவிடாத தொடர்ந்த நல்முயற்சிகளும் இசை வளர்ச்சிக்குத் தேவை.

தமிழிசை இயக்கம் தமிழ்நாட்டில் ஒரு மறுமலர்ச்சி இயக்கமாக வடிவெடுத்து ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் ஆகின்றன; என்றாலும் தமிழிசை இயக்கம் என்பது இந்த மண்ணுக்குப் புதியதில்லை. சங்கப் பாடல்களில் (பரிபாடல், கலித்தொகை) உள்ள இசை நலம், நீதிநூலாகிய திருக்குறளில் இழையோடி நிற்கும் இசை வளம், சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களில் புலப்படும் கலைச்செல்வம் இவையெல்லாம் ஒருபுறமிருக்க, பக்தி இயக்கத்தால் பரிணமித்துப் பரவிய இசை வெள்ளத்தை எவரே மறக்க முடியும்? ‘ஏழிசையாய் இசைப்பயனாய்’ வாழ்ந்த சுந்தரரையும், ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய’ ஞானசம்பந்தரையும் ‘தமிழோடு இசைபாடல் மறந்தறியாத’ திருநாவுக்கரசரையும், ஆழ்வார்களையும் தமிழகம் மறக்க இயலுமா? தமிழும், தமிழகமும் மறக்க முடியாது.

பக்தி இயக்கம் பாத்தி கட்டி வளர்த்த இத்தமிழிசை மரபினை அதற்குப் பின்னர் நுழைந்த வேற்றவர் படையெடுப்பும், மாற்றவர் ஆதிக்கமும் பல நூற்றாண்டுகள் மறைத்துப் புதைத்து வைக்க முற்பட்டன அவ்வளவுதான். அவற்றை முற்றிலும் ஒழித்துவிட அம்மாற்றுக் கலாச்சாரங் களால் இயலவில்லை. காலந்தோறும் பரிவு ஞாயிற்றொளி பட்டபோதெல்லாம் இருள் நீங்கி நம் தமிழிசை நாதங்கள், புதுக்குரலாய். புத்திசையாய் எதிரொலித்தே வந்தன. சென்ற நூற்றாண்டில் கூட முத்துத் தாண்டவர், கோபாலகிருஷ்ண பாரதி, அருணாசலக்கவி முதலியோரின் தமிழிசை வண்ணங்கள் போற்றப்பட்டே வந்தன.

ஆனால் அவை இசை அரங்குகளில் எல்லாம் ஆக்கம் பெற்றுப் பொலியவில்லை. காரணம் பல நூற்றாண்டு களாகத் தமிழகத்தில் படர்ந்த, பற்றிய தெலுங்கு, இந்துஸ்தானி, மராட்டியக்கலை வடிவங்கள் ஆட்சியாலும், பிறவகை மாட்சியாலும் பெற்றிருந்த ஆதிக்கங்கள் தமிழிசையை வளர விடாமல் தடுத்து வந்தன. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், வேத நாயகம் பிள்ளை முதலியோரின் முயற்சிகள் பாராட்டப்பட்ட அளவுக்கு, பின்பற்றி வளர்க்கப்படும் நிலை உருவாக்கப்படவில்லை. ஆங்கில ஆட்சிக் காலத்திலும் தமிழிசை உணர்வு சவலைப்பிள்ளை போலவே நலிந்திருக்கிறது.

1927-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் கர்நாடக இசையரங்கிற்குச் சிறப்புத் தரப்பட்டபோது தமிழிசையின் தரமும் திறமும் புலப்பட வழிபிறந்தது. தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் சுயமரியாதை இயக்க மாநாட்டை ஈரோட்டில் (1930) கூட்டியபோது சில சாதிக்காரர்களால் தமிழிசை படும் அல்லல்களைச் சுட்டிக்காட்டித் தமிழிசையை வளர்ப்பதில் உணர்வூட்ட முடிந்தது. ஆனால் தமிழிசையை ஓர் இயக்கமாக்கி வளர்க்க, தக்கதொரு தலைமகனை எதிர்நோக்கித் தமிழகம் காத்திருந்தது.

அத்தலைமகனாகச் செட்டிநாட்டரசர், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் வந்தார். தமிழிசைக் காவலராகப் பொறுப்பேற்றார். சிதம்பரத்தில் தாம் நிறுவிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிசைக் கல்லூரியையும் நிறுவினார். நல்ல தமிழிசைப் பாடல்களைப் புனைவோருக்குப் பரிசுகளை அறிவித்தார். தேவாரத் திருமுறைகளைப் பண்முறைப்படி பாடிட ஆராய்ச்சி அரங்குகளுக்கு ஆக்கம் தந்தார். சென்னை, தேவகோட்டை முதலிய இடங்களில் தமிழிசை மாநாடுகளைக் கூட்டித் தாமே தலைமையேற்று நடத்தி ஒளிவிளக்காகத் திகழ்ந்தார். அண்ணாமலையரசர் அவர்கள் புரவலராகப் பொறுப்பேற்றதும் தமிழிசை இயக்கம் களைகட்டி வளரத் தொடங்கியது. நாட்டில் பரவிய தேசிய இயக்கமும், மொழி இனஉணர்வும் இதற்கு வலிவூட்டின. பல்வேறு பெரியார்கள், கட்சி, சமய வேறுபாடுகளை விடுத்து தமிழிசைக்குத் தக்க தூண்களாக ஊன்றி நிற்க முன் வந்தனர். சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார், ராஜாஜி, கல்கி, டி.கே.சி., நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, பாரதிதாசன், தமிழவேள் பி.டி.ராஜன், தமிழ்த்தாத்தா உ.வே.சா. அறிஞர்அண்ணா ஆகியோர் தமிழிசை இயக்கத்தை உரமூட்டி வளர்த்த பெரியோரில் சிலராவர். அண்ணாமலையரசரின் அருந்தவப் புதல்வர் ராஜா சர் முத்தையாச் செட்டியார் அவர்களும், அவர்தம் புதல்வர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர். திரு.இராமசாமிச்செட்டியார் அவர்களும் இச்சீரிய பணியைத் தலைமேற் கொண்டு தமிழிசை இயக்கத்தைப் பேணி வளர்த்துள்ளார்கள்.

நம் நாடு விடுதலை பெற்று குடியாட்சி அமைந்த பின்னர் அரசியல் விருப்பு வெறுப்புக்களில் ஆட்சியைப் பிடிக்கும் கலை, நிலைகளில் ஈடுபாடு கொண்டுள்ள அளவுக்கு இதரக் கலைத் துறைகளை வளர்க்கும் நாட்டம், ஊட்டம் பெறவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். தமிழிசை வளர்ப்பதில் அரசியல் இலாபம் இருந்தால் ஆகா! ஓகோ!! என அணி வகுக்க முற்படுவார்கள். அவ்வாறு அரசியல் ஆதாயம் பெற முடியாமையால் தமிழிசை இயக்கம் பாட நூலோடு, பண்முறை ஆராய்ச்சியோடு, மாநாட்டோடு, மலர் வெளியீட்டோடு நின்று விடுகிறது. இது நாள் வரை இப்படி இருந்தது போதும், இனிமேல் தமிழிசை இயக்கத்தின் எல்லைகள் விரிய வேண்டும்.

மறுமலர்ச்சி இயக்கம் என்பது பல கூறுகளால் அமைந்தது. தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் – இன, மொழி கலாச்சாரக் கூறுகளைப் போல – இசையையும் உள்ளடக்கியது என்பது எவரும் ஒப்புவது. ‘இசைக்கு மொழி முக்கியமா?’ எனும் பழைய சர்ச்சைகளுக்கெல்லாம் இனிச் செவி கொடாது தமிழிசை இயக்கத்தை மக்கள் இயக்கமாக, பாமரர் செயல் இயக்கமாக நாம் மாற்றிட வேண்டும். நாட்டுப்புறக் கலை வடிவங்களான காவடி, பள்ளு, கும்மி முதலியவற்றைத் திரைப்படத்தினர் மாசுபடுத்திவிடாமல் அவற்றையெல்லாம் தமிழிசைச் செல்வங்களாக, மரபுடைய இசைச்செல்வங்களாக மாற்றிட வேண்டும்.

மேலை நாடுகளில் குழு இசை எல்லா நிறுவனங் களிலும் இடம்பெறுவது போல, நம் கல்வி நிறுவனங்களிலும் பல கலை அரங்குகளிலும் நம் செந்தமிழிசையே முதன்மை பெற வழி திறக்க வேண்டும். தொழிலாளர் அணி வகுப்பு, இளைஞர் இயக்கம், சுற்றுலாப் பயணம், போர்ப் பரணி முதலிய துறைதோறும் தமிழ் இசையே எழவேண்டும். தொடக்கப் பள்ளி தொட்டு, மேனிலைப்பள்ளி வரை இசைப் பாடத்தை, பாடத் திட்டத்தோடு இணைக்க வேண்டும்.

பயிற்சி பெற்ற ஆசிரியர்களை இங்கெல்லாம் நியமித்துக் கொள்ள வேண்டும்.

சென்னை அண்ணாமலை மன்றம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை ராஜா முத்தையா மன்றம் முதலிய மையங்களில் தமிழிசை ஆசிரியருக்குத் தகைசால் பயிற்சிகளைத் தொடர்ந்து நல்கும் திட்டங்களைத் தீட்ட வேண்டும். தமிழிசையில் நாட்டமுள்ள மாணவர்களுக்கு ஊக்கமும், வாய்ப்பும் நல்க வேண்டும். வெளிநாட்டார் நாடிப் போற்றும் வகையில் நம் தமிழிசை தேனார் தமிழிசையாய்ச் சிறக்க வேண்டும்.

தாய்மொழியாகத் தமிழ் மொழியில் உள்ளத்தில் மலர்ந்து தெளிவாக, சிறந்த கருத்துருவம் பெற்ற இன்பக்கடலாகத் தமிழிசை விளங்கட்டும். வானம் போல, கடல் போல விரிந்தது இசை உலகம். எனினும் நமக்கு இசைவான வகை துறைகளில் அதில் ஆதிக்கம் கொள்ளும் வகையில் நமக்கே உரிய எல்லைகளை, உரிமை எல்லைகளை விரியச் செய்வது காலத்தின் தேவை எனக் கருதுவோம். தெருவெல்லாம் தமிழிசை முழக்கம் செழிக்கச் செய்வோம்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

     திண்ணியர் ஆகப் பெறின்”           (666)

 

 

நாலடிப் பயணம்*

நாலடிப் பயணம்*

சுற்றம் தழால்

 

Image result for naladiyar

திருக்குறளுக்கு அடுத்தபடி புகழுடன். பெருமையுடன் இருப்பது நாலடியார். ‘பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’ என்று பாராட்டப்படுவது; பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் நாலடியார் முதலாவதாகும்.

இது சமண முனிவர்களால் தனித்தனியாகப் பாடப்பட்டுப் பின்னர் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டது. உவமைகள், கதைகள், பழமொழிகள் நிறைந்து நிற்கும். உலக நடைமுறை கூறி உறுதிப்பொருள் உணர்த்தும். அத்தகைய நயம் மிகுந்த நாலடியாரில் இன்று ஒரு பாடலின் நெறியினைக் காண்போம்.

வீட்டில் தொடங்கி நாட்டில் நிகழும் விழாக்களில் எல்லாம் நட்பும், சுற்றமும் துணைபுரியும் சிறப்பைக் காணலாம் நமது திருமண அழைப்பிதழ்களில் ‘தங்கள் நல்வரவினை நாடும் சுற்றமும் நட்பும்’ எனவும், பொதுவிழா அமைப்புக்களில் புரவலர்கள், பண்பு பாராட்டும் விழாக் குழுவினர் எனவும் நண்பர்கள், உறவினர் இடம்பெறுவதைக் காணலாம்.

சுற்றமும் நட்பும் சமுதாய வாழ்வுக்கு இரு கால்களைப் போல, இரு கரங்களைப்போல உதவ வல்லவை. சுற்றமும் நட்பும் உடையவர் சோதனைக் காலத்திலும் வேதனை நீக்கிச் சாதனையாளராகத் திகழ்வர்.

தந்தை, தாய், மனைவி இவர்களைச் சார்ந்த நெருங்கிய உறவினர் மட்டும் உறவினர் அல்லர். நம்மைச் சுற்றிச் சூழ்ந்து அன்போடு உறவாடுபவரும் உறவினர்தாம்; நம்மை நாடி வந்து அன்பு செய்பவரும், நாம் நாடிச் சென்று அன்பு கொள்பவரும் நண்பர்கள் ஆவார்கள்.

நமது நீதி இலக்கியமான நாலடியார் திருக்குறளைப் பின்பற்றிக் கனியும், நிழலும் நல்கும் பெரிய கனிமரத்தைப் போல சுற்றமும் நட்பும் சூழ வாழ வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

கோடை வெய்யிலின் கடுமையான வெப்பம். நடைப் பயணத்தில் சூடு தாங்காமல் வாடி வருந்தி நிழல் தேடி ஒதுங்கி நிற்க இடம் தேடி அலைகின்றன கால்கள். கண்ணில் தெரிகின்றது பெரிய கனிமரம். ‘கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே, தருநிழலே, நிழல் கனிந்த கனியே’ என மனம் மகிழ்ந்து விரைந்து தேடி அடைக்கலம் அடைகின்றன கால்கள். வெப்பம் மிகுந்த அக்கோடைக் காலத்திலே, தன்னை நாடி வந்தவருக்கு எல்லாம் வேறுபாடு இல்லாமல், குளுமையும், இனிமையுமாய் நிழல் தந்து, கனிதந்து காக்கின்றது அம்மரம். முதற்பயன் நிழல் கொடுப்பது. முழுப்பயன் கனிதருவது. பழுமரம் கனி தந்தும், நிழல் தந்தும் ஒருசேரப் பயன்தந்து வாழ்வது போல் வாழ்வது ‘சுற்றமும் நட்பும் சூழும் வாழ்க்கையாகும்’

பழுமரத்தில் உள்ள பழுத்த பழங்களை எல்லாம் மரமே உண்ணுவதில்லை. பிற உயிர்கள் உண்ணவே அக்கனிகள் பயன்படுகின்றன. நிழலும் கனியும் தந்து உள்ளூரில் பழுத்து மரம் செழித்து இருப்பது போல, செல்வச் செழிப்பு உடையவரும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நிழல் தந்து, அடைக்கலம் அளித்துக் காத்து நெடிய பயன் நல்கும் நல்ல மனமுடைய நல்லவர்களாக விளங்க வேண்டும்.

மரம், தான் உருவாக்கிய பழங்களைப் பல்லுயிர்க்கும் பயன்படச் செய்வதுபோல, துன்பம் கொண்டு, கடுமையாக உழைத்து வருந்தி முயன்று ஈட்டிய செல்வத்தைச் சுற்றமும் சூழ்ந்திருக்கும் நட்பும் நலமும் பயனும் பெறும்படி அன்போடு வழங்க வேண்டும். ‘செல்வருக்கு அழகு செழுங்கிளை தாங்குதல்’ எனும் ஒப்புரவுக் கொடையே வாழ்க்கையின் கடமை என நாலடியார் வலியுறுத்துகிறது.

செல்வத்தைப் பெற்றதன் நோக்கம், அச்செல்வத்தைச் சுற்றத்தார் எப்போதும் சூழ்ந்திருக்கப் பயன் தந்து வாழ்வதே.

“சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான்

     பெற்றத்தால் பெற்ற பயன்”          (524)

என்ற வள்ளுவத்தில் வாழ்வியல் நெறிக்குத் தக்க விளக்கமாய் விளங்குவது நாலடிப் பாடல்

“அழல்மண்டு போழ்தில் அடைந்தவர்கட்கு எல்லாம்

     நிழல்மரம்போல் நேர்ஒப்பத் தாங்கிப் & பழுமரம்போல்

     பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே

     நல்ஆண் மகற்குக் கடன்”.      (202)

என்பது நாலடியார்

பிறர் வருத்தமும், வறுமையும் நீங்கிட தான் வருந்தி வாழும் நிலைவரை சென்று வாழ்வு அளிப்பதே நல்லாண்மை எனச் செல்வமுடையாரின் கடமையைச் செப்பமுடன் சொல்லும் நாலடியார், நிழலும் கனியும் நல்கும் பழுத்த பழமரம் போல், நட்பும் சுற்றமும் போற்றி நலம் பெற்று வாழ்வோம்.

நட்பு

வள்ளுவத்தைப் பின்பற்றி அறநெறி உணர்த்தும் அறிவுக் களஞ்சியம் நாலடியார். கற்பனை நயத்தோடும், கலை அழகோடும் வாழ்வியல் உண்மைகளை உணர்த்துபவை நாலடிப் பாடல்கள். இன்று ‘நட்பு’ பற்றிக் கூறும் நாலடியார் பாடல் நயம் காண்போம்.

நாலடியார் நட்பின் பல்வேறு கூறுகளை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. நட்பாராய்தல், நட்பிற்பிழை பொறுத்தல், கூடாநட்பு என நட்பின் பல்வேறு நிலைகளை எடுத்துக் கூறுகின்றது. உண்மையான நட்புச் செய்வது என்பது அரிய காரியங்களில் எல்லாம் அரிய காரியமாகும். துன்பத்தின் போது துணையாக நிற்பதும், காப்பதும், காத்து அரணாக நிற்பதும் நலம் செய்யும் நட்பே ஆகும்.

நட்பு செய்வதில், நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமும் ஆராய்ச்சியும் வேண்டும். நிறைநீர நீரவர்கேண்மை என்ற நிறைமதி நட்பையும், பிறைமதிப் பின்னீர என்ற பேதையர் நட்பையும் குறள் விளக்குவது போல ‘பெரியோர் கேண்மை பிறை போல் நாளும் வளரும் வரிசை’ என ஒளி தரும், ஆனால் சிறியோர் தொடர்பு வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே என்பது நாலடிச் செய்தி.

கற்றறிந்த பெரியோர் நட்பு கரும்பை நுனிப்பகுதியில் இருந்து கடித்துத் தின்று சுவை காண்பது போல் போகப் போகச் சுவை தருவதாக இருக்கும். பேதையர் நட்பு கரும்பை அடிப்பகுதியில் இருந்து நுனிநோக்கிக் கடித்துத் தின்பது போன்றதாகும். இனிய குணமில்லாத பேதையர் நட்பு ஆரம்பத்தில் இனிதாகத் தோன்றி போகப் போகக் கசக்கும்.

மரத்தின் உச்சியில் பூத்த கோட்டுப்பூ ஒரு முறை மலர்ந்தால் பின் ஓயாது. என்றும் இனிமைதரும் மணம் நல்கிக் கொண்டிருக்கும். உயர்குடிப்பிறப்பும், நடுவு நிலைமையும் உள்ள சான்றோர் நட்பு நாளும் வளரும். ஆனால் குளத்தில் பூத்த சிறுமலர்கள், பூத்த சமயம் பார்த்தால் கண்ணுக்கு அழகாக இருக்கும். போகப்போக அழகிழந்து, பொலிவிழந்து காட்சியளிக்கும். இவ்வாறு உள்ள, சுயநலம் மட்டும் கருதும், இலாபம் கருதிப் பழகும் சிற்றினத்தோர் நட்பை ஏற்றுக் கொள்ளாது நீக்கிவிட வேண்டும்.

பல காலம்  நெருக்கமாக இருந்தாலும் உள்ளன்பு இல்லாதவர் நட்பு ஒட்டாத நட்பாகும். உள்ளன்போடு ஒத்த இயல்புடையவர் நட்பு பிரிந்து இருந்தாலும் என்றும் பெரும் பயன் நல்கும்.

ஆகவே குறைகளையும் நிறைகளையும் ஆராய்ந்து அறிந்த பின்பே ஒருவரிடம் நட்பு கொள்ள வேண்டும். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்’ (504) என்பார் வள்ளுவர். அவ்வாறு தேர்ந்தெடுத்த பின் குணத்தோடு சில குற்றங்கள் இருந்தாலும் அவற்றைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

நண்பர்கள் சில சமயங்களில் அளவு கடந்த உரிமையாலும், பழமையான நட்பாலும், அறியாமையாலும் தவறு செய்தால் அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் நல்லவர், நண்பர் என்று நம்பியவர்களிடம் சில தவறுகள் காணப்பட்டாலும் அன்புணர்வால் அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

உணவாகப் பயன்படும் நெல்லுக்கும் ஒரு குறை உண்டு. நெல்லுக்குத் தவிடு இருப்பது தவிர்க்க முடியாதது போல், நல்லவர்களுக்கும் குறை இருக்கும். தூய்மையான நீருக்கு நுரை என்ற களங்கம் உண்டு. மணம் வீசும் பூவிற்குப் புற இதழ்கள் உண்டு. ரோஜா மலருக்கு முள் உண்டு. குறையில்லாத நிறைவே உடைய இடம் குறைவு. இதுவே நடைமுறை உண்மை. இதனை உணர்ந்து நண்பர்களிடம் நன்மையைப் பெறுவது போல, அன்புணர்வுடன் அவர்கள் குறை தாங்குதல் நிறைவுடைமை ஆகும்.

“நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

     அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்

     நெல்லுக்கு உமிஉண்டு, நீர்க்கு நுரைஉண்டு

     புல்லிதழ் பூவிற்கும் உண்டு”          (221)

கரையை உடைத்துக்கொண்டு கரைபுரண்டு விரைந்து வேகமாகப் பாய்ந்து வருகிறது வெள்ளம்; அவ்வாறு பாய்ந்து வரும் வெள்ளத்தைக் கண்டு கலங்காது, கோபிக்காது நீரைத் தேக்கி, வயலில் பாய்ச்சிப் பயனடைவர் உழவர். அதுபோல விரும்பி நட்புக் கொண்டவர் வெறுக்கும் தகைமை செய்திடும்போதும், பெரியோர்கள் பிழை பொறுத்து அவர்கள் செய்த குறைகளையெல்லாம் நிறைகளாக்கிப் பயன்பெறுவர்.

“செறுத்தோறு உடைப்பினுஞ் செம்புனலோடு ஊடார்,

     மறுத்தும் சிறை செய்வர் நீர்நசைஇ வாழ்நர்

     வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே

     தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு” (222)

நல்ல நட்பு நயனும், பயனும், பாதுகாப்பும் நிறைந்தது. கொடுத்தும், கொண்டும் இயல்பாக வளர்வது நட்பு. உதவி செய்தலும், உதவி பெறுவதலும் நட்பில் இயல்பாக நிகழ்பவை. ஆனால் கணக்குப் பார்த்துச் செய்யும் வணிகம் அல்ல நட்பு. உறுவது சீர் தூக்கும் நட்பும், பெறுவது கொள்வாரும், கள்வரும் நேர் என்பது வள்ளுவம். ஆதலின் நட்பு இரட்டை வழிப்பாதை என்றாலும் இயல்பாக நிகழ்வது.

செய்வதற்கு இயலாத கடினமான செயல்களைச் செய்வேன் என வீராப்புப் பேசுவதும், செய்யக்கூடிய எளிய செயல்களை நண்பர்களுக்குச் செய்யாமல் காலம் தாழ்த்துவதும், நாட்களை வீணே பயனில்லாமல் கடத்திக் கொண்டிருப்பதும் வாழ்நாட்களை வீணான நாட்களாக ஆக்கும் செயல்கள் ஆகும். இத்தகு நட்பு துன்பம் தரும். ஆதலால் வாக்குக் கொடுக்கும்போது நன்றாக ஆராய்ந்து வாக்குக் கொடுக்க வேண்டும். செய்யக்கூடிய செயல்கள் என்றால் உரிய நேரத்தில் விரைந்து அந்த நன்மையைச் செய்து நண்பர்கள் துயர் போக்க வேண்டும். இயலாதாயின் வீராப்புப்  பேசாது, தந்திரமாக ஏமாற்றாமல் உண்மை நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும். தவறான வாக்குறுதி களைத் தவிர்த்துவிட வேண்டும்.

“செய்யாது செய்தும்நாம் என்றாலும், செய்வதனைச்

     செய்யாது தாழ்த்துக்கொண்டு ஓட்டலும் & மெய்யாக

     இன்புறூஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே

     துன்புறூஉம் பெற்றி தரும்.”          (235)

என்று நாலடி பேசும். ஆதலின் நாலடி இகழ்வது துன்பம் தரும் தீ நட்பு; கூடா நட்பு. நாலடி போற்றுவது இன்பந் தரும் சான்றோர் நட்பு; பெரியோர் நட்பு.

நிலைத்த செயல்கள் செய்க!

“ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி

     நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி”

என்பது திருக்குறளுக்கும் நாலடியாருக்கும் புகழ்கூறும் நாட்டு வழக்கு. திருக்குறளைப் பின்பற்றி நாலடியார் அறம் பொருள் இன்பம் ஆகிய முப்பாலையும் வாழ்க்கை நெறிகளாகத் தொகுத்தும் விரித்தும் கூறுகிறது.

நிலைத்தது எது? நிலையாதது எது? என்று கேட்டால், நிலையாமைதான் நிலைத்தது. இளமை நிலையாதது, அழகு நிலையாதது, செல்வம் நிலையாதது. பதவி, அதிகாரம் இவையனைத்தும் நிலையாதவை. இவையெல்லாம் நிலையில்லாதவை என்பதால், அழகு, இளமை, செல்வம், பதவி, உடல்நலம், புகழ் இவையனைத்தையும் துறந்து விடுவதா? நிலையில்லாத இச்செல்வங்களை நிலைத்த, நிலைபேறுடைய செயல்களாக நிலைநிறுத்துவதே தமிழ் நியதி.

இளமை ஆற்றல் இருக்கும்போதே தனக்குப் பயன்படுவது போல பிறர்க்கும் பயன்பட்டு உதவி வாழ்ந்து உயர்ந்திருக்க; அழகு நீடிக்கும் வரை இளமையோடு, இனிமையும், வளமையும், இன்பமும், காட்சியும், மாட்சியும் பெற்றுக் கொள்க; செல்வம் இருக்கும்போது பழுத்த பயன்தரும் கனிமரங்களாக, ஊருணியாக, நோய் தீர்க்கும் சஞ்சீவியாய், மருந்து மரமாய் வாழ்க; உடல் இருக்கும்போதே உன்னதமான தொண்டும், அறச்செயல்களும் ஆற்றுக. பதவி, அதிகாரம் இருக்கும் போதே, பதவி உதவுதற்கே என உணர்ந்து பிறர்க்கு உதவி, பிறர்துன்பம் தீர்த்துப் புகழும் போற்றுதலும் பெற்றிடுக என்பதே வாழ்வியல்,

சிறிது சிறிதாகச் சேர்ந்த பெருஞ்செல்வம் ஆனாலும் அப்பெருஞ்செல்வம் இருக்கும்போதே நட்போடும் சுற்றத்தோடும் பகிர்ந்துண்டு பாசத்தோடு வாழ்க. இல்லையேல் அச்செல்வம் ஒரு நாள் ஓடிவிடும். வண்டிச் சக்கரம்போல் சுழலும் நிலையாமையை எண்ணி செல்வம் இருக்கும் போதே அதனை அனுபவித்துப் பயன்பெற்று மகிழ்க.

“துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்

     பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க;

     அகடுஉற யார்மாட்டும் நில்லாது செல்வம்

     சகடக்கால் போல வரும்.”      (2)

என்பது நாலடியார்.

சூரியனால் தோன்றியும் மறைந்தும் உண்டாகும் பகலும் இரவும் ஆகிய ஒவ்வொரு நாளும் வாளாகக் கொண்டு எமன் வாழ்நாள் ஒவ்வொன்றையும் உண்டு தீர்த்து வருகின்றான். எனவே உயிருடன் இருக்கும்போதே அடுத்தவர்க்கு உதவி வாழும்  அன்புடையவர் ஆகுங்கள். இல்லையென்றால் மனிதனாகப் பிறந்தும் பயனில்லாது போய்விடும். மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கமே பிறர்க்கு உதவி வாழ்தலே ஆகும்.

“தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்

     கூற்றம் அளந்துநும் நாள்உண்ணும் & ஆற்ற

     அறஞ்செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும்

     பிறந்தும் பிறவாதார் இல்.”           (7)

ஆதலால் நில்லாதவற்றை நிலையென்று உணர்ந்து மயங்காமல் நிலைத்த செயல்களைத் தன்னம்பிக்கையோடு ஆற்றவேண்டும்; தனிமனித உழைப்பும், சமுதாயத்தின் கூட்டு முயற்சியும் ஒன்றிணையும்போது நாடு நலம் பெறும்.

ஒரு செயலை இன்று எளிமையாகத் தொடங்கினாலும், தொடங்கிய முயற்சியை இடைவிடாது பேணிவந்தால், தளர்ச்சியடையாமல் ஊக்கத்துடன், துணிவுடன் பணியாற்றினால் அச்செயல் நாளடைவில் சாதனைக்கு உரிய பெரிய அரிய செயலாகிவிடும்.

ஓர் இளஞ்செடி தடைகளைக் கடந்து வளர்ந்திருக்கின்றது. ஆடு கடிக்கும் அளவு உயரத்திற்கு வளர்ந்திருக்கிறது. அவ்விளஞ் செடியானது பாதுகாக்கப்பட்டு உரம் பெற்று வளர்ந்து விடுகிறது. படிப்படியாக வளர்ந்து வைரம் பாய்ந்த பெருமரமாகின்றது. ஆடு கடித்தாலே அழிந்திருக்கும் அச்செடி வளர்ந்தவுடன், வளர்ந்து உரமும் வலிமையும் பெற்று நிற்கும்போது வலிமை மிகுந்த யானையையே கட்டிவைக்கும் கட்டுத்தறியாகி விடுகின்றது. அதுபோல இன்று தொடங்கும் சிறிய செடி போன்ற சிறிய முயற்சி, ஈடுபாட்டுடன் இடைவிடாமல், பேணிப் பாதுகாத்து, இகழ்ச்சிக்கும் எள்ளலுக்கும் இடம்தராமல், மனத்தளர்ச்சி யின்றி ஊக்கத்துடன், உறுதியுடன், ஒருமையுடன், தன்னம்பிக்கை யுடன் செயல்பட்டால் செடி செழித்து வளர்ந்து உரமிகுந்த வைரம் பாய்ந்த மரம்போல, நமது செயலும் அரிய பெரிய செயலாக வளர்ந்து ஆக்கம் தரும்.

“ஆடுகோடு ஆகி அதர்இடை நின்றதூஉம்

     காழ்கொண்ட கண்ணே களிறுஅணைக்குங் கந்துஆகும்

     வாழ்தலும் அன்ன தகைத்தே; ஒருவன்தான்

     தாழ்வின்றி தன்னைச் செயின்.”       (192)

“இசையாது எனினும் இயற்றிஓர் ஆற்றால்

     அசையாது நிற்பதாம் ஆண்மை & இசையுங்கால்

     கண்டல் திரைஅலைக்கும் கானலந் தண்சேர்ப்ப

     பெண்டிரும் வாழாரோ மற்று”             (194)

எனச் செயலாண்மையைப் போற்றிப் பேசுகிறது நாலடியார்.

உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்பது பிறப்பால் அமைவதல்ல; ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.’ (குறள்: 972) உயர்வும் தாழ்வும் அவனவன் செயல்களைப் பொறுத்ததே.

கல்வி, அறிவு, செல்வம், பண்பு, செல்வாக்கு, புகழ் பெற முயன்று உழைப்பவனே உயர்ந்தவன்; அவ்வாறு முயலாது சோம்பி, உண்டு, உறங்கி, களித்துத் திரிபவன் நிந்தனைக்கு உரியவன்; சமுதாயத்தைப் பாழ்படுத்துபவன். முயற்சியும், உழைப்பும், ஊக்கமும், தொண்டும் உடையவன் தானும் உயர்ந்து சமுதாயத்தையும் உயர்த்துவான். தன்னை உயர்த்துவதும் தாழ்த்துவதும் அவனவன் கைகளிலே அமைந்திருக்கிறது.

“நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை

     நிலைகலக்கிக் கீழிடு வானும் & நிலையினும்

     மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும், தன்னைத்

     தலையாகச் செய்வானும் தான்.”      (248)

 

 

தமிழ் இலக்கியம் கற்பித்திடப் புதிய சிந்தனைகள்*

தமிழ் இலக்கியம் கற்பித்திடப்

புதிய சிந்தனைகள்*

 

‘கற்க கசடறக் கற்பவை’ என வாழ்க்கைக் கல்வி கூறும் வள்ளுவர், ‘நிற்க அதற்குத் தக’, ‘எனைத்தானும் நல்லவை கேட்க’ என வேண்டுவதும் ‘எழுமையும் ஏமாப்பு’, ‘தாமின்புறுவது உலகின்புற’, ‘செவிச்செல்வம்’ என விளக்குவதும் இலக்கியக் கல்விக்கே மிகவும் பொருந்தும். எல்லாக் கல்வி முறைக்கும் இன்றியமையாத எண்ணும் எழுத்தும் இலக்கியக் கல்விக்கே கண்களாக நின்றிலங்கும் என்பது குறள் நெறிப் பார்வை.

மனித இனம் பேசத் தொடங்கிய நாளிலிருந்தே எல்லையற்ற தொடர்புகளுக்கு வழிகோலும் அமைப்புகளான மொழிகள் பரவத் தொடங்கின. இம்மொழிகள் என்பன பக்கவரையற்ற பேரகராதியில் திரட்டப்பெறும் வெறும் வார்த்தைக் கூட்டங்களைப் போன்றன இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் சொந்தமான எண்ணத் தொகுப்புக்கள் ஆகும். இவ்வெண்ணத் தொகுப்புகள் கலைவடிவம் பெற்றபோது ‘இலக்கியங்கள்’ என்று அழைக்கப்பட்டன. மக்கள் எவ்வாறெல்லாம் தம் கருத்துக்களைப் புலப்படுத்தவும், தமக்குள் தொடர்பு பூணவும் முற்பட்டார்களோ, அவ்வாறெல்லாம் வகைவகையான இலக்கிய முறைகள் அந்தந்த மொழிகளில் வளர்ந்துள்ளன.

இலக்கியம் மனித உணர்வின் புலப்பாடு; அவன் படைத்த கலைகளில் எல்லாம் சிறந்து நிற்கும் சாதனை; தன்னை உருவாக்கிய நல்லுணர்வுகளை மேலும் விழுமிய நலங்களாக்கித் தரும் விந்தைமிகு கருவி; ஒரு மொழியில் தோன்றிய சிந்தனையை உலகச் சிந்தனையாக்கும் பொது உடைமை; மனித குலப் பண்பாட்டைப் பேணிக் காத்துவரும் களஞ்சியம்; கற்பனைச் சிறகுகளை விரிக்கப் புதுப்புது வானங்களைத் தேடும் முடிவற்ற பயணம்; ‘அறிதொறும் அறியாமை கண்டற்றால்’ எனும் வளர்ச்சிக்கு உரிய வள்ளுவம்.

உணர்வுகளின் புலப்பாடே இலக்கியம் ஆனமையால், இந்த உணர்வுகளின் வேறுபாடுகள் இலக்கிய வகைகளையும் வேறுபடுத்தித் தந்துள்ளன. ஒவ்வொரு புலப்பாட்டிற்கும் உரியதொரு தனி வடிவம் இருப்பது போல, இலக்கிய வெளிப்பாட்டிலும் தனித்தனிப் போக்குகள் ஏற்பட்டுள்ளன. படைப்பாளியின் அனுபவத்திற்கும் உணர்ச்சிக்கும் ஏற்ப, சமுதாய விழைவிற்கும் காலத்தேவைக்கும் தக, இவ்விலக்கியங்களும் பலப்பலவாய் அமைந்து வந்துள்ளன. அச்சுக் கலை பரவிய பின்னர், இலக்கிய ஆக்கங்கள், உலகச் சிந்தனை அரங்கில் மிகப்பெரிய தாக்கங்களை உருவாக்கித் தந்துள்ளன.

இத்தகைய ஆக்கக் கருவியான இலக்கியம் ஒரு கலை (கிக்ஷீt) எனக் கருதப்படினும் அதைப் படைப்பது அரியதொரு கைவினைப் பொருள் (சிக்ஷீணீயீt) செய்தலைப் போன்றது. படைப்பது மட்டுமன்றி, இலக்கியத்தைப் பயில்வதும், பயிற்று விப்பதும் கலை உணர்வோடு, கைவினைத் திறத்தோடு கைக்கொள்ளுதற்கு உரிய களங்கள் ஆகும்.

நமது மொழி எண்ணற்ற இலக்கியங்களை இயம்பி இசைகொண்ட செம்மொழி. இவ்விலக்கியங்கள், பருகுவனன்ன ஆர்வத்தோடு வந்தார்க்கு இருவென இருந்து, சொல்லெனச் சொல்லி, செவி வாயாக, நெஞ்சு களனாகக் கொண்டு, காலமெல்லாம் கற்பிக்கப்பட்டு வந்தன. இலக்கியங் களும், சமயத் தத்துவங்களும், வாழ்க்கை நியதிகளுமே கல்விப் பொருளாக இருந்த காலம் மாறிவிட்டது. வாழ்க்கைப் போராட்டங்களும் பொருளாதாரத் தேவைகளும் அறிவியல் கல்விக்கு முதலிடம் தந்து, இலக்கியம் முதலிய கலையியல் துறைகளைப் பின்னிடத்தில் வைத்துள்ளன. என்றாலும், இலக்கியக் கல்விக்கு உரிய இன்றியமையாமையும் அவ்வப்போது வற்புறுத்தப்பட்டே வருகிறது. “நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?” எனப் பாரதியார் கேட்டதைப் போல, நமக்குக் கிட்டிய வாழ்வினைக் கேட்டுக்கு உள்ளாக்கிவிடாமல், மனித நேயத்தோடு நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ்விப்பதற்கு இலக்கியம் முதலிய கலை நலத் தொடர்புகள் தேவை என்பது உணரப்பட்டு வருகிறது.

புதிய விழைவுகளுக்கு ஈடுதரும் இலக்கியப் படைப்பைப் புதுப்பித்தலைப் போல, அவ்விலக்கியங் களைப் பயிற்றுவிப்பதிலும் மறுமலர்ச்சிச் சிந்தனைகள், உலக மொழி அரங்குகளில் ஏற்பட்டு வருகின்றன. விஞ்ஞான அடிப்படையில் மொழி, இலக்கியப் பாடங்களையும் திருத்தியமைத்துப் பயன்கொள்ளும் தமிழ் இலக்கியங்களைக் கற்பிப்பதிலும் தொடக்கப் பள்ளி தொட்டு, பல்கலைப் படிப்புவரை படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனும் எண்ணங்கள் மேலோங்கி வருகின்றன.

சென்ற நூற்றாண்டுத் தொடக்கம் வரை, ஏட்டையும், எழுத்தாணியையும் ஊடகமாகக் கொண்டு, ஆசானிடம் மாணாக்கர் அமைவுறப் பயிலும் குருகுலப் பாங்கே தமிழ்க் (இலக்கியக்)கல்வி முறையாக இருந்து வந்தது. அச்சுக் கலையும் ஆங்கிலக் கல்வி முறையும் அறிமுகமான பின்னரும்கூட, புலமைமிகு ஆசானை அண்டி நின்று, இலக்கியங்களைப் பாடம் கேட்கும் பாங்கே நீடித்தது.

தம் ஆசான் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றி, டாக்டர் உ.வே.சா. ‘என் சரித்திர’த்தில் எழுதியமையும், டாக்டர். உ.வே.சாவின் மாணவர்களாக அமைந்தோர் மரபுவழி இலக்கியப் பயில்வுமுறையினைப் போற்றியதும் இதற்குச் சான்றாகும். ஒரு புலவரிடம் பாடம் கேட்பதுடன் மட்டும் நின்றுவிடாது. எந்த இலக்கியத்தில் எவர் மிகுபுலமை பெற்றிருந்தாரோ அவரைச் சார்ந்து அந்நூலைப் பாடம் கேட்கும் ஆழமான அணுக்கப் பயிற்சிமுறை பேணப்பட்டுள்ளது.

150 ஆண்டுகளுக்கு முன், பல்கலைக்கழகக் கல்வித் திட்டம் தொடங்கப் பெற்ற நாட்களில், தமிழ்க் கல்விக்குத் தக்க இடம் அளிக்கப்படவில்லை பிராந்திய மொழியாகத் தாய்மொழிக் கல்வி மாற்றாந் தாய்ப்பிள்ளையாகவே நடத்தப்பட்டு வந்தது. ‘ஆங்கிலம் ஒன்றையே கற்று அதற்கு ஆவியொடு ஆக்கையும் விற்ற’ அவல நிலைகளையும் பண்பாட்டுக் குலைவுகளையும் கண்ட வள்ளல் பாண்டித்துரைத் தேவர், மதுரையில், பெரும்புலவர்களைக் கூட்டி, நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவி, தமிழ்ப்புலமைப் பயிற்சியை வரன்முறையானதொரு பாடத் திட்டமாக்கிட வழிகோலினார். மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், சென்னைக் கல்விச் சங்கம், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை முதலியன புலவர் தேர்வுகளை நடத்தி, புதிய தலைமுறைத் ‘தமிழ் வித்துவான்களை’ உருவாக்கித் தரத் தொடங்கின.

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் தமிழ்த்துறைகள் மொழிநலம் பேணத் தொடங்கிய பின்னர், தமிழைக் கற்றலிலும் கற்பித்தலிலும் புதுமெருகுகள் ஏற்பட்டன. பிற பாடங்களைப் போல, மொழிப் பயிற்சியும் பட்டம் பெறும் பாடத்திட்டம் ஆயிற்று. நாளடைவில் புலவர் சான்றிதழ்த் தேர்வும் புதிய பட்டப் பாடத்திட்டமும் இணைந்ததொரு மொழிக்கல்விமுறை தமிழாசிரியர்களை உருவாக்கும் களமாயிற்று. பெரும்புலவர்களைச் சார்ந்து பயில்வதும், திருமடங்களில் சேர்ந்து படிப்பதும் குறையலாயிற்று.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், காலனி ஆதிக்கப் பிடிப்புக்கள் தளர்ந்து, நாட்டு விடுதலைப் போர்கள் கிளர்ந்து, இன, மொழி, பண்பாட்டு இயக்கங்கள் உலகெல்லாம் எழுந்தமை, புதிய பார்வைகளுக்கு வழிகோலியது. இந்திய விடுதலையோடு இணைந்தெழுந்த தமிழியக்கம், தமிழின் பண்டைப் பெருமைகளை எல்லாம் புதிய ஒளியில் புலப்படுத்த முற்பட்டது. ஆராய்ச்சிப் பேரறிஞர்கள் பழஞ்சுவடிகளை ஆய்ந்து, புதையுண்டு கிடந்த தமிழ்ச் செல்வங்களைப் புதுப் படைப்பாக்கித் தந்தனர். நமது மொழிப் பயிற்சி முறையும் இக்கால கட்டத்திலே பழம்பெருமை தேடிப் பரவசமுறும் பாதையிலே போய்க்கொண்டு இருந்தது.

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழாமல், சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்ய வேண்டும் என்று முழங்கிய பாரதிப் புலவன், “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என அறைகூவினான். இந்த அறைகூவலை நாளடைவில் நடைமுறையாக்கும் எண்ணங்கள் மேவின. ‘பன்மொழிக் கட்டமைப்புடைய நாடு’ எனும் ஆட்சி வரையறைக்குள் நின்று மொழிநலம் பேணி வளர்க்கும் வகையில் துறைகள் ஆக்கப்பட்டன. பல்கலைக்கழகங்கள் விரிந்தன. உலகத் தமிழ் மாநாடுகள் கூடின. தமிழ்ப்பல்கலைக்கழகம் முதலிய மொழியாக்க மூலப் பட்டறைகள் நிலை கொண்டன.

மேலைநாட்டவர் ஆட்சிக்காலத்தே தமிழ்மொழியின் காலப்பழமையினையும் தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையினையும் தேடித் தொகுக்கும் முயற்சிகள் அரும்பின. சிந்துவெளி நாகரிகம் தொட்டு, குமரிக்கண்ட அமிழ்வு வரை, மறைந்து, மறந்து போனவற்றை ஆய்ந்தறியும் வரலாற்றுச் சுவடுகள் வளர்ந்தன. புதையுண்ட கல்வெட்டுக் களையும், தூசுபடிந்த ஓலைச் சுவடிகளையும் கருத்தோடு கண்டறியும் பயணங்கள் நீண்டன. இந் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் பண்டைப் பெருமைகளை, வாழ்ந்த கதைகளை, வீர வரலாறுகளை எல்லாம் நினைவூட்டும் நறுஞ்சுனைகளாக, சோலைகளாக அம்முயற்சிகள் ஆங்காங்கே நிலைகொண்டன. உரிமை பெற்ற பின்னர் இந்நாட்டின் பல்வேறு தேசிய மரபுகள் தம்மை இனம்காட்டிக் கொள்ள முற்பட்டபோது தமிழ்நாடும் தனது பழமைச் செல்வங் களுக்குப் புது மெருகேற்றிக் கொள்ளத் தலைப்பட்டது.

மனோன்மணீயம் சுந்தரனாரின் ‘தமிழ்த்தாய்’ வாழ்த்தும், மகாகவி பாரதியின் ‘வாழிய செந்தமிழ்ப் பாட்டும்’ பாவேந்தரின் ‘தமிழியக்கமும்’, சுத்தானந்தரின் ‘தமிழ் உணர்ச்சியும்’ மறுமலர்ச்சி வித்துக்களைத் தூவின. சங்க இலக்கியங்கள் எல்லாம் புதுப்பதிப்புப் பெற்றன. முத்தமிழ்க் காப்பியங்கள் மாநாட்டு அரங்கேறின; பக்தி பனுவல்கள் பட்டிமன்றப் பொருளாயின; தமிழ்ப் பேரரசுகளின் வரலாறுகள் ‘பார்த்திபன் கனவாக’, ‘சிவகாமி சபதமாக’, ‘கல்கி’ முதலியோரால், புதினப் புத்தாடை அணிவிக்கப் பட்டன; அகத்திணை, புறத்துறைப் பாடல்கள், உரைநடை யிட்ட நாடகச் சித்திரங்களாக மு.வ., புலியூர்க்கேசிகன், கி.வா.ஜ. முதலிய புலமைச் செல்வர்களால் வளமுறுத்தப் பட்டன. இவ்வளங்கள் எல்லாம், தமிழ்ப்பாடத் திட்டப் பாத்திகளிலும் கரைந்தோடி வந்தன. அவற்றைக் கற்பதில் ஈடுபாடும், கற்பிப்பதில் பெருமையும் கைகோத்து நடம் பயிலத் தொடங்கின.

மொழியியல் இலக்கியக் கல்வியில் ஆர்வமும், நூலாக்கப் பணிகளில் ஈடுபாடும் இவ்வாறு பெருகத் தொடங்கின. என்றாலும், அண்மைக் காலமாகத் தாய்மொழிக் கல்வியில் தளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியில் தேக்கமும் ஏற்பட்டிருப்பது பலராலும் உணரப்படுகிறது. புலரும் நூற்றாண்டுத் தேவைகளுக்கு ஏற்றவாறு, தமிழ்மொழி இலக்கியங்களைப் பயிற்றுவிப்பதில் சில மாற்றங்களைக் கொணர வேண்டும் என்பதும் வலியுறுத்தப் படுகிறது.

தமிழ் இலக்கியங்கள் தொன்மையில் வேரூன்றியவை; தொடர்ந்து நூல் வளத்தினைப் பரப்பியவை; மரபுகள் எனும் விழுதூன்றிக் கொண்டவை: புதுமையையும் கொண்டு கலைமணம் பரப்ப உணர்வூட்டி வருபவை; “தூய்மை, தொன்மை, புதுமை, அகலம், ஆழம் என்ற அனைத்துத் திறன்களும் இயல்பாக ஒருங்குபெற்று, இடையூறு, எதிர்ப்பெல்லாம் கடந்து வாழ்ந்தியங்குவது நம் தமிழ் மொழி” (பேராசிரியர் வ.சுப.மாணிக்கம்). இலக்கியங்களைப் பாட வகைப்படுத்தும்போது, இத்தனை சிறப்புக்களும் போற்றப்படும் வகையில் திட்டமிடுதல் வேண்டும். ‘தமிழை முறையாகக் கற்பிக்கவில்லை, தமிழிலக்கியச் செல்வத்தை அறிவிக்கவில்லை, தமிழைக் காலமொழியாக வளர்க்கவில்லை’ எனும் குறைகளுக்கு இடம் கொடாமல், தமிழ்ப் பாடத்திட்டத்தை வகுத்திட வேண்டும். தமிழ் நிலத்து ஐந்திணை வளமும் மரபு நலமும் பழந்தமிழ் இலக்கியத்திற்குக் களங்கள் ஆயினமையும், சமய எழுச்சியும் அரசு ஏற்ற இறக்கங்களும் இடைக்கால இலக்கியங்களுக்குப் பின்னணி தந்தமையும், உரிமை வேட்கையும் அறிவியல் பெருக்கமும் இக்கால உணர்வுகளுக்கு ஊக்கமளித்து வருவதும் நமது இலக்கியப் பாடத்திட்ட வரன்முறைகளில் பிரதிபலிக்க வேண்டும்.

தொடக்கப் பள்ளி முதல் தாய்மொழி இலக்கியக் கல்வி இருநிலைகளை அடிப்படையாகக் கொண்டு கற்பிக்கப்படுகிறது:

  1. பொதுநிலை

  2. சிறப்பு நிலை

பிழையின்றி எழுதப் படிக்கக் கற்றல், தம் கருத்தைப் புலப்படுத்த ஆற்றல் பெறுதல், மொழியின் இலக்கியப் பயன்பாட்டைப் புரிந்துகொள்வதோடு, தனியொரு கலைவடிவமாக இலக்கியத்தையும் போற்றுதல் – இது எல்லோர்க்கும் உரிய பொது நிலைப் பயிற்சி.

மொழி இலக்கியக் கலைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள முற்படுதல்:

திறனாய்வுத் திறமும் தேர்ந்த புலமையும் பெறுதல்.

– இது சிலர்க்கு மட்டுமே அமைய வேண்டிய சிறப்பு நிலைப் பயிற்சி.

இவ்விரு நிலைகளுக்கு ஏற்ப – தமிழ் இலக்கியப் பயிற்சியும் – பொதுத்தமிழ் – சிறப்புத்தமிழ் என இருகூறாக மேனிலைப் பள்ளிக் கல்வியிலிருந்து பகுக்கப்பட்டுள்ளது. பொதுத் தமிழாகவும், சிறப்புத் தமிழாகவும் கற்பிப்பதில் இப்போது கருதவேண்டிய சிந்தனைகள் இவை.

(அ). நர்சரிப் பள்ளி தொட்டு, தாய்மொழி வாயிலாகக் கல்வி தருவதே செவ்விய இயற்கை நெறி. அண்மைக் காலமாக, ஆங்கில வழிக் கல்வி மோகம் ஆங்கில ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட, நர்சரிப் பள்ளிகளிலேயே வேரூன்றிக் கொள்ளத் தொடங்கியுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிக் கல்வி அறிஞர்கள் கவலை தெரிவித்த பின்னர், இப்போக்கைத் தடுத்தாட் கொண்டு, தாய்மொழிக் கல்விக்கு அங்கு முன்னுரிமை தரும் முயற்சிகள் தலைதூக்கி வருகின்றன.

(ஆ). நர்சரிப் பள்ளி முதல் தொடக்கப் பள்ளியின் எட்டாம் வகுப்பு வரை தமிழைக் கற்பிக்கும்போது நல்ல பாடல்களைத் தேர்ந்து, மனப்பாடப் பகுதிகளாக வைத்து, மாணவரின் நினைவுத் திறனை ஊக்கி வளர்க்க வேண்டும். அப்பகுதிகளைத் தேர்வுத்தாளில் விடையாக எழுதுவதோடு அமையாது, அறிவியல் பாடச் செய்முறைபோல் ஒலிப்பிழையின்றி ஒப்புவிக்கவும் செய்திட வேண்டும். நர்சரி தொடக்க வகுப்புப் பருவப் பாடல்கள், குறுகுறு நடையுடையனவாக, ஓசை நயமுடையனவாக, எளிய கருத்தை இயம்பும் கதைப்பாங்கினவாகத் தெரிவு செய்யப்படுதல் வேண்டும்.

(இ). ஐந்தாம் வகுப்பு வரை நீதி நூல்களுக்குச் சிறப்பிடம் தரலாம். உணர்வுக்கும் கற்பனைக்கும் முதலிடம் தந்து அமைவன இலக்கியங்கள் எனில், அறிவுக்கும் சிந்தனைக்கும் தலைமையிடம் தருவன நீதி நூல்கள் ஆகும். வளரும் பிள்ளைகள் சமுதாய நியதிகளையும் தனிமனித ஒழுகலாறுகளையும் கற்றறிய உதவும் படிகளாக நீதிநூல் கல்வி அமையும். ஆத்திசூடி முதலிய நீதிநூல்களை ஒவ்வொரு வகுப்பிலும், மாணவரின் திறனுக்கு உகந்தவாறு அறிமுகப்படுத்த வேண்டும். ஐந்தாம் வகுப்பில் திருக்குறளைத் தொடங்குவதோடு இடைக்கால, இக்கால இலக்கியங்களையும், கட்டுரை, உரைநடை, நாடகம், கடிதம் முதலியவற்றையும் பாடமாகத் தொகுக்க வேண்டும். இப்போதுள்ள பாடநூல் களில் இம்முறை பொதுவாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்றாலும் ‘நல்ல தமிழ் எழுதத் தெரியாத’ மாணவர்களாகவே பெரும்பாலோர் இருப்பதால், பயிற்று முறையில் ஏதோ குறையுள்ளது எனத் தெரிகிறது. தொடக்கப் பள்ளி வகுப்புகளில், மாணவர் எண்ணிக்கை ஓராசானின் போதனை வரம்பிற்கும் அதிகமாக இருப்பது ஒரு காரணம் என்றாலும், உணர்வுத் திறத்தோடு மொழிக்கல்வி புகட்ட மாட்டாதவர்கள் ஆசான்களாக அமையும் குறையே முக்கியமான காரணமாகும்.

திருக்குறளைப் பயிற்றுவிப்பது பற்றிய ஒரு கருத்தை இங்கே வலியுறுத்துதல் பொருந்தும். தமிழ்மொழியில் முதன்மையானதும், முழுமையானதும், தொன்மையானதும், தொடர்ந்து புதுமை நலம் பேணுவதுமான திருக்குறளைக் கற்பிப்பதில் பிற நூல் போதனையை விடச் சற்று அதிகமான அக்கறை வேண்டும். வாழ்க்கைக் கூறுகளாம் அறம், பொருள், இன்பம் எனும் மூன்று முதற்பொருள் களையும் தனித்தனியாகவும், முழுமையாகவும் வள்ளுவர் உணர்த்தியுள்ளார். இப்பயனை இளமை முதலே மாணவர் தெரிந்து தெளியும் வகையில் குறட்பாக்களைப் பாடமாக வைக்க வேண்டும். முதல் வகுப்புகளில் படித்த திருக்குறள் அதிகாரங்களே மேல் வகுப்புகளிலும் பாடமாகத் திருப்பித் திருப்பி வராவண்ணம், இந்த வகுப்புக்கு இந்த அதிகாரப் பகுதி என வரையறுத்துக் கொள்ள வேண்டும். காப்பியங்கள், பக்திப் பனுவல்களுக்கும் இத்தெரிவு முறை முழுப் பயன் தரும்.

(ஈ). மொழி இலக்கியப் பயிற்சி இரு வகைப்படும்.

  1. மொழிப் பயிற்சி வழியாக இலக்கியங்களை அறிமுகப்படுத்துதல் ஒருமுறை.

  2. இலக்கியங்கள் மூலமாக மொழியின் கூறுகளை அறிதலும் ஆளுதலும் மற்றொரு முறை.

ஆறாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை மொழிப்பயிற்சி வழியாக இலக்கியங்களை அறிமுகப் படுத்தும் வகையில், இப்போதுள்ள பாட முறையில், செய்யுள் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்கள், பாட நூலுக்கு அப்பாலும் சென்று மொழித்திறம் பெறுவதற்கு உதவும் உரைநடை (சிறுகதை, புதினம், பயண நூல், அருஞ்சாகசக் கற்பனைகள் என்பன) நூல்களும் சேர்க்கப்பட வேண்டும்.

(உ). மேனிலைப் பள்ளியோடு படிப்பை முடித்துக் கொள்ளுவோருக்கும், பிற தொழிற் படிப்புக்களில் சேருவோருக்கும் அதுவரை தாம் கற்ற தாய்மொழியும் இலக்கியப் பயிற்சியும் தற்சார்புடையனவாக அமைந்திருத்தல் வேண்டும். தாமே முயன்று மொழித்திறத்தையும் கருத்துப் புலப்பாடுகளையும் வளர்த்துக் கொள்ள வழிகாட்டுவதாக இலக்கியக் கல்வி ஆக்கம் தந்திட வேண்டும். ஒருவரிடம் இயல்பாகக் குடிகொண்டுள்ள சிந்தனை வளத்தை வெளிக் கொணர உதவும் வாயில்களில் ஒன்றாகச் செய்தித்தாள்களும் இதழ்களும் வளர்ந்துள்ளன. படிப்போரை எல்லாம் படைப்பாளிகளாக்கிக் கொண்டு வரும் இதழியல் முதலிய தொடர்புச் சாதனங்களில் எல்லாம் இலக்கியம் படிப்போர் நாட்டம் கொள்ளத் தூண்டுவனவாகப் பயிற்சி முறைகள் அமைய வேண்டும்.

(ஊ). பள்ளிக் கல்வி – கல்லூரிக் கல்வி எனும் தெளிவான வரையறை – மரத்தின் முன்னிலை வளர்ச்சியோடும் அது நல்கும் பின்னிலைப் பயனோடும் ஒப்புநோக்கக் கூடியது. மரம் – பலன் தருவதற்கு முன்னர் தக்க வளர்ச்சி பெறும் தனி நிலையினையும், தக்க வளர்ச்சி பெற்ற பின்னர் பயன்தந்து நிற்கும் முழுநிலையினையும் பெற்றுள்ளமை போல, வாழும் சூழலிலிருந்து கிடைக்கும் இயற்கைச் சத்துக்களையும் ஆசான் நல்கும் ஊக்க உரத்தினையும் பெற்று மாணவர் தனிநிலை வளர்ச்சி காண வேண்டும். மேனிலைப் பள்ளிப் படிப்புவரை இத் தனிநிலை வளர்ச்சி நீடிக்கலாம். கல்லூரிக் கல்வியிலிருந்து விரிந்த நிழலும் விழுமிய நலனும் நல்கிடும் முழுநிலை இலக்கியப் பயிற்சி, முயற்சிகளுக்கு முற்பட வேண்டும்.

(எ). கல்லூரிகள் தமிழ் இலக்கியப் பாசறைகளாக விளங்க வேண்டியவை. அங்குள்ள உலைக் களங்களில், அறிவியல், கலைத்துறைகளோடு, மொழித்துறையும் சிந்தனைத் தீயில் புடமிடப்பட்டுச் செம்மை வடிவம் பெற வேண்டும். இந்த உலைக்களத்தில் காலத்திற்கு ஏற்ற புதிய கருவிகளை மொழித்துறை படைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கைக்கு ஏற்ற புதுப்புது இலக்கியப் படைக்கலங்களை உருவாக்கித் தர வேண்டும்.

(ஏ). வாழ்வு என்பதும் வாழ்க்கை என்பதும் வெவ்வேறு ஆகும். வாழ்வு என்பது தோற்றம், நிலை, மறைவு எனும் பிரபஞ்ச இயல்பு பற்றியது. வாழ்க்கை என்பது தனிப்பட்ட உயிர்களின் உயிர்ப்பாசத்தினால் ஏற்படும் உணர்வுகள் மற்றும் விளைவுகளைச் சார்ந்து அமைவது. வாழ்வு, வாழ்க்கை எனும் இவற்றிடையே உள்ள தொடர்பையோ, தொடர்பற்ற தன்மையையோ விளக்குவதே மனிதச் சிந்தனையின் சாரம். இச்சிந்தனைகள், கலைவடிவம் பெறும்போது இலக்கியங்கள் ஆகின்றன. மன உணர்வுகளைச் சித்திரங்களாகத் தீட்டும் இலக்கியக் கலையின் இயல்புகளை அறிவதும், இயன்றவாறு எல்லாம் புதியவர்களை ஆக்க வழிகாட்டுவதும் கல்லூரி இலக்கியக் கல்வியின் நோக்கம் எனலாம்.

“நூல் இருவகை: தன் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்வது ஒன்று; நம் காலத்திற்குத் தான் வந்து உதவுவது மற்றொன்று. நூலைக் கற்கும் முறையும் இருவகை: வாழும் காலத்தை மறந்து நூலெழுதிய காலத்திற்குக் கற்பனைச் சிறகுகொண்டு பறந்து சென்று நூற்பொருளைக் கற்பது ஒருவகை; நூலெழுதிய காலம் எதுவாயினும் அதைவிட்டு, வாழும் காலத்திற்கே வந்து வழிகாட்டும்படியாக நூலைப் போற்றிக் கற்பது மற்றொரு வகை;” என்பார் அறிஞர் மு.வ. புலவருலகில் நின்று இலக்கியமாக மட்டும் மதிக்கும் முதல்வகை நூல்களையும், மக்கள் உள்ளங்களையே கோயில்களாகக் கொண்டு வாழும் இரண்டாம் வகை இலக்கியங்களையும் முறையறிந்து கற்பிக்கும் அணுகுமுறை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் புதுப்புது உத்திகளோடு இணைந்து ஏற்பட வேண்டும்.

கல்லூரியில் முதற்பாகமாக மட்டும் தமிழைப் பயில்வோரின் தொகையே மிகுதி. பல்வேறு துறைகளைப் பாடமாகத் தேர்ந்து பயிலும் இவர்களது வளர்ச்சி நோக்கம் சிதையா வகையிலும், அதை மேலும் சிறப்புறுத்தும் முறையிலும் இலக்கியப் பயிற்சி தரப்படுதல் வேண்டும். இலக்கியப் பாடங்களை ஒரு சுமையாகக் கருதாமல், அருஞ்சுவையாக ஏற்றுப் படிக்கும் வகையில் பாடத்தொகுப்பு அமைய வேண்டும். தேர்வெழுதியதோடு இலக்கியப் படைப்பையும் மூடிவைத்து விடாமல், வாழ்க்கை முழுவதும் நல்லிலக்கியங்கள் மீது நாட்டம் கொள்ளும் வகையில் உணர்வூட்ட வேண்டும். பிறதுறைகளைச் சார்ந்த அறிஞர் பெருமக்களில் சிலர், சிறந்த இலக்கிய மேதைகளாகவும் விளங்குவதற்கு அவர்கள் பெற்றுக்கொண்ட இந்த இலக்கிய ஊட்டமே காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கல்லூரிநிலை முதல் பாகத் தமிழ்ப்பாடத் திட்டத்தில் சங்க கால, இடைக்கால இலக்கியங்கள் ஓராண்டும், இக்கால இலக்கிய வகைகள் மறு ஆண்டிலும் அமையலாம். இக்கால இலக்கிய வகைகளில் சிறுகதை, புதினம், இதழியல் முதலியவற்றிற்குக் கூடுதலான வாய்ப்பு அளிக்கலாம்.

ஐ. பட்ட வகுப்புச் சிறப்புப் பாடமாகவும், முதுகலை வகுப்புப் புலமைப் பாடமாகவும் அமையும் தமிழ் இலக்கியத் தொகுப்பில் காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை அவ்வப்போது செய்து கொள்ளப் பல்கலைக்கழகங்கள் துணிய வேண்டும். அறிவியல் பாடத்திட்டங்களைத் தயக்கமின்றி மேம்படுத்தி (ஹிஜீபீணீtவீஸீரீ) வருவதைப் போல, இலக்கியப் பாடத்திட்டங்களையும் புதுநெறிப்படுத்திடத் தமிழறிஞர்கள் இசைய வேண்டும்; புதுமரபுகளுக்கு இடம் தர வேண்டும். தமிழ் இலக்கியத்திற்கு அன்று தொட்டு அமைந்த பல்வகை மரபுத் தூண்களையே எப்போதும் பற்றி நிற்காமல், புது மரபுப் பந்தல்களையே தேட வேண்டும், போட வேண்டும்.

ஒ. திறனாய்வும் ஒப்பீட்டாய்வும் உலக இலக்கியச் சோலைகளில் இவ்வாறு புதுப்பந்தல்களைப் போட்டு வருவது நம் கண்களில் பட வேண்டும். தமிழில் திறனாய்வும் ஒப்பீடும் அண்மையில் ஓரளவு வளர்ந்துள்ள போதிலும், இவ்விரண்டையும் விரிவுரையாளராக மட்டும் சொல்லித் தராமல், விமரிசனத்தைப் படைப்பு நிலைக்கு உயர்த்திட வேண்டும். இலக்கிய வளர்ச்சிக்கு உரமூட்டும் வண்ணம் கற்பிக்க வேண்டும்.

முதுகலை மாணவர்க்கு இவற்றை இன்னும் ஆழமாகக் கற்பிக்கலாம். கற்பிக்கும் பேராசிரியர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் நுண்மாண் நுழைபுலத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்கள் சில பாடத் துறைகளால் தனிப்புகழ் அடைவது போல, பேராசிரியர்களும் தனி இலக்கியப் புலமையில் சிகரங்களாகத் திகழ வேண்டும். ‘நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்’ (திருமூலர் – திருமந்திரம்) எனும் குறை நம் இலக்கியப் பேராசிரியர் களுக்கு நேரிடக் கூடாது. ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்’ (குறள்: 595) போல, பேராசிரியர்கள் உயர்வுக்கு ஒப்பவே அவர்தம் மாணவரின் மலர்ச்சியும் அமையும் அன்றோ?

‘கம்பனொடு கவி போயிற்று’ என்ற முந்தைய நூற்றாண்டு ஏக்கமும், ‘பாரதி, பாரதிதாசனுக்குப்பின் யாவர்?’ எனும் இந்த நூற்றாண்டுக் கேள்வியும் தமிழ் உலகில் எதிரொலித்துக் கொண்டே உள்ளன. வெளிநாட்டார் வணக்கம் செய்யும் திறமான படைப்புக்கள் ‘ஞானபீடம்’ ஏந்திடும் தரத்திற்கு உயரும் நாள் எந்நாளோ? எனும் பெருமூச்சுக்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. மறைமலை யடிகள், திரு.வி.க. போல, புதுமைப்பித்தன், கல்கி போல, மு.வ., தெ.பொ.மீ. போல, தனிநாயக அடிகள், கைலாசபதி போல இந்தத் தலைமுறையிலும் இலக்கியச் செல்வர்களைத் தேடும் பார்வைகள் அலைகின்றன.

பத்திரிகைகளும் பல்கலைக்கழகங்களுமே இன்று, தமிழ் இலக்கியப் பயிர் புரக்கும் பண்ணைகளாக உள்ளன. இலக்கிய வேள்வியில் முனைந்த ஒரு சில ஏடுகள், சாண்ஏறி, முழம் வழுக்கிக் கொண்டிருக்கின்றன. விளம்பர வேட்டையாடும் பத்திரிகைகளில் பெரும்பாலானவை பாதியாடைச் சித்திரங்களோடு பச்சைப் பயிர் வளர்த்துக் கொழிக்கின்றன. களையாக வளரும் இந்த நச்சு எழுத்துக்களை எளிதில் இனம் பிரித்தறிய முடியாத அளவு அவை ஊடு பயிர்களாக வளர்க்கப்படுகின்றன. கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இவை இவை ‘நசிவு இலக்கியங்கள்’ என ஆய்ந்து சொல்வதோடு நின்றுவிடாமல், நல்ல இலக்கியங்களைப் படிக்கவும், படைக்கவும் வாய்ப்பளிக்கும் நிலங்கள் ஆகும் பொறுப்பையும் இன்று ஏற்க வேண்டியுள்ளது. எங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள், எங்களது வாழ்க்கை முயற்சிகளினூடே ‘திருக்குறள் பேரவை’ போலும் இலக்கிய மன்றங்களை நடத்தி, இயன்றவாறெல்லாம் தமிழ் மணம் பரப்பி வருகின்றோம். கல்லூரிகளில் அன்று எங்களுக்கு புகட்டப்பட்ட ‘தமிழ்ப்பால்’ போன்ற ஞான நீரோடைகள் இன்றும் வாழ்க்கை வயல்களில் பாய்ந்தோடி வரவேண்டும் என விழைகின்றோம். இலக்கிய விழாக்களை அரிதின் முயன்று ஏற்பாடு செய்யும்போது மொழியைத் தொழிலாகக் கொண்டு அதை வளர்க்கும் பொறுப்புடையோரே இவ்விழாக்களை ஒதுக்குவதும் அவற்றிலிருந்து ஒதுங்குவதும் கவலை தருகிறது.

தமிழ் அறிஞர் பெருமக்கள், இலக்கிய நீரோடை களைப் பெருக்கெடுத்து ஓடச் செய்யும் உயிரூற்றுகளாகத் தமிழ்த்துறைகளை ஆக்கித்தர வேண்டும். தமிழ் ஆசிரியப் பெருமக்கள் கூடி நடத்தும் இதுபோன்ற உலகளாவிய மாநாட்டு அரங்குகள், திருவிழாக்களாக மட்டும் போய் விடாது புதிய செயல்திட்டங்களை வடிவமைக்கும் வாய்க்கால்களாகவும் பயன்தரவேண்டும்.

 

சுதந்திரப் பொன் விழாவில் சுடர்விடும் எண்ணங்கள்*

சுதந்திரப் பொன் விழாவில்

சுடர்விடும் எண்ணங்கள்*

Image result for india freedom

சுதந்திர சூரியன் உதிப்பதைப் பற்றிப் பாடிய மகாகவி பாரதி ‘பொழுது புலர்ந்தது – யாம் செய்த தவத்தால், புன்மைஇருள் கணம் போயின யாவும்’ என முன்னரே பாடிப் பரவசம் கொண்டார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அந்தப் பொன்னான பொழுதும் விடிந்தது. புதிய விடியலுக்குப் பூபாளம் பாடும் தலைவர்கள் இருந்தனர். உதய ஒளிக்கீற்றுகளாக ஊரெங்கும் தேச பக்தித் தொண்டர்கள் அணி வகுத்திருந்தனர்.

நாட்டுப் பிரிவினையோடு நமக்கு கிட்டிய உரிமை நாளன்று, வன்முறைகளும் வலம் வரமுற்பட்டபோதிலும் நம்மைத் தடுத்தாண்டு வழிநடத்தத் தன்னலமற்ற தலைவர்கள் இருந்தார்கள். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம் எனும் நம்பிக்கையை நம் முன் வளர்த்தார்கள்…

மதவாத வன்முறைக்கு மகாத்மாவைப் பறிகொடுத்தோம். சுதேச சமஸ்தானங்களை ஒரு நாட்டமைப்பில் எப்படி இணைக்கப் போகிறோமா எனத் திகைத்தோம். எடுத்த எடுப்பில் ஏவப்பட்ட படை எடுப்புக்களை எப்படியோ சமாளித்தோம். பண்டித நேருவும், படேலும் உறுதி மலைகளாக நின்று நமக்கு உற்சாகம் தந்தார்கள்.

‘மதச்சார்பற்ற நாடு’ எனும் தெளிவான அரசியல் சட்ட வரையறையுடன், திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியைக் கருவாகக் கொண்டு, திசை எங்கும் புதிய பாரத தரிசனங்களுக்கு ஆலை, அணை எனும் கோவில் களைக் கட்ட முற்பட்டோம். மொழி, மாநிலத்தவர்களைச் சகோதர வாஞ்சை கோடாமல் சரிக்கட்டி வந்தோம். சர்வதேச உறவுகளில் அணிசேராதொரு பேரணியை உருவாக்கி வல்லரசு நாடுகளும் நம்மை வலம் வரச் செய்து வலுப்பெற்று வந்தோம்.

ஆண்டு இறுதியில் தொழில் நடத்துபவர் இலாப நட்டக்கணக்கு பார்க்கப் பேரேடு புரட்டி, ஐந்தொகையை மதிப்பிட்டது போல நாமும் இந்தப் பொன்விழா ஆண்டில் நமது நாட்டுப் பேரேட்டைப் புரட்டுகிறோம்.

வரவுப் பகுதியில் எத்தனையோ வரப்பிரசாதங்கள். சமூக பொருளாதாரத் தளங்களில் ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சிகள், விஞ்ஞானத் துறையில் விளைவித்துள்ள  அதிசய மாற்றங்கள் (சர்வதேச அணு ஆயுதக் கட்டுப்பாட்டு அரங்கில் உரத்துப் பேசும் அளவுக்கு சுய ஆக்கங்கள்), வேளாண்துறை தொட்டுப் பல வாழ்க்கைக் களங்களில் சுய தேவைப் புரட்சிகள், வியக்கத்தக்க நிறுவனங்கள் என வளரும் பட்டியல்கள் நமக்குத் தெம்பூட்டுகின்றன. நமக்கு முன்னரும் பின்னரும் சுதந்திரம் பெற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் ஓரளவு மகிழ்ச்சியும் தருகின்றன.

அந்த மகிழ்ச்சி ஓரளவாக மட்டுமே இருப்பதும் அது பேரளவினதாக வளராததும் நமக்கு வருத்தம் தருகிறது. அதற்கான காரணத்தைப் பேரேட்டின் பற்றுப் பகுதியில் பார்க்க வருமாறு நம்மைப்பற்றி இழுக்கின்றன.

பார்க்கிறோம் – பெருமூச்சு வரும் அளவுக்குப் பார்க்கிறோம்.

“வாழ்கின்றார் முப்பது முக்கோடி மக்கள் என்றால் சூழ்கின்ற பேதமும் அத் தொகையிருக்கும்” என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகள் பொய்யாக வில்லையே எனும் ஏக்கத்துடன் பார்க்கிறோம். இந்த ஐம்பது ஆண்டுகளில் நமது வளர்ச்சியைச் சிதைக்கச் செய்த சீர்கேடுகள்தான் எத்தனை எத்தனை? குடியாட்சியின் பெயரால் எத்தனை குளறுபடிகள்? உட்கட்சி ஜனநாயக உணர்வைத் தீர்க்கத் தான் எத்தனை சர்வாதிபத்தியங்கள்? மதத்தின் பேரால், மொழியின் பேரால், சாதியின் பேரால்தான் எத்தனை எத்தனை மாச்சரியங்கள்? தொண்டு செய்வதன் பேரால் சுயலாப வேட்டைகள், ஊழல்கள், ஊதாரித்தனங்கள்…

இத்தனையையும் பற்றுக் களத்தில் புரட்டிய பின்னரும் நமக்குள்ளே ஒரு புது நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் மின்னல்கள், இடிமுழக்கங்கள் அண்மையில் நம் அரசியல் வானில் ஏற்பட்டுள்ளன.

ஒரு கட்சியே நாட்டை ஆளுவது எனும் பிடிமானம் தளர்ந்து வருகிறது. மற்றக் கட்சிகளையும் அவற்றின் கூட்டணிகளையும் பரிசோதனைக் களமாக்கலாம் எனும் நம்பிக்கை வாக்காளர்களிடையே உருவாகியுள்ளது. ஊழல் செய்தவர்கள், வரம்பு மீறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதிமன்றத்திற்கு – மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வர வேண்டும் எனும் உறுதியும் தளிர்த்து வருகிறது. குடியாட்சி என்பதை வெறும் கோபுர தரிசனம் போல உச்சி மட்டத்திலேயே நடத்தாமல், கிராமப் பஞ்சாயத்து கூட்டுறவு அமைப்பு முதலான அடித்தளங்கள் வரைமுறையாகக் கட்டியெழுப்பும் உண்மை ஜனநாயகம் மீண்டும் புலர்ந்து வருகிறது.

புலரும் பொன்விழா, அரசியல், சமுதாயப் பணித் தளங்களில் தொண்டாற்ற வருவோருக்கும் சில அரிய படிப்பினைகளையும் தந்துள்ளது. இவை புதிய படிப்பினைகள் இல்லை. வள்ளுவர் காலந்தொட்டே மதிக்கப்பட்டு வரும் பொது ஒழுக்கங்கள்தான் என்றாலும்கூட புதிய சூழலுக்கு ஏற்ப நாம் பொருள் கொள்ளுவது நல்லது. ஆட்சி செய்வோருக்கு வேண்டிய அடிப்படையான பண்புகளுள் மிக முக்கியமான இரண்டு: 1. தெரிந்து வினையாடல் 2. பெரியாரைத் துணைக்கோடல்.

தெரிந்து வினையாடல்

ஆட்சி செய்வோர் தம் நெறியில் கோணாது செயலாற்ற வேண்டும். அப்போதுதான் உலகும் கோணுதல் அற்று விளங்கும். உலக மக்களும் நேர்மையை மதித்து ஒழுகுவார்கள்; மரியாதை செய்வார்கள். ஆகவே ஆட்சி புரிவோர் மன்ன ராயினும், தலைமை அமைச்சர்கள் ஆயினும், கொள்கை வகுக்கும் அதிகாரிகள் ஆயினும், கோணாத குணத்திறம் கொண்டவர்களையே தேர்ந்து செய்கையில் ஈடுபடுத்த வேண்டும். இதனை நாள்தோறும் நாடிச் செய்ய வேண்டும்.

“நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

     கோடாமை கோடாது உலகு”        (520)

பெரியாரைத் துணைக்கோடல்

ஆட்சிக்கு அரணாக இருப்பது படை, பாதுகாப்பு, கோட்டை, அரண் ஆகியன மட்டுமா? இவை புறக்கருவிகள் மட்டுமே ஆகும். இவற்றிற்கு எல்லாம் மேற்பட்ட உள் அரணாகத் துலங்குவன பத்திரிகைகள், மாற்றுக் கட்சிகள், பொதுமக்கள் மனப்போக்கு, சான்றோர் ஆக்க நலம் என்பன.

‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ (குறள்:996) என வரையறுத்த வள்ளுவம் அத்தகைய பண்புடைய பெரியோரைத் துணை ஆக்கிக்கொளல் ஆட்சிக்கு ஆற்றல் தரும் அரண் என்கிறது. பெரியோரின் துணையினைத் துச்சமாகக் கருதி உதறிவிட்டு, தன்னிச்சைப் படியே நடப்பதானது ஒரே சமயத்தில் பலபேரின் பகையைத் தேடிக் கொள்வதை விடப் பத்து மடங்கு தீமை பயப்பது என்கிறது ‘பெரியோரைத் துணைக்கோடல்’ எனும் குறள் அதிகாரப் பாடல்.

“பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

 நல்லார் தொடர்கை விடல்”         (450)

நமது அரசுகள் அண்மைக் காலங்களில் பல நிலைகளில் சான்றோரைத் துணைக் கொள்ளாமல் தன்னிச்சையாகச் செயல்பட்ட விபரீதங்களை நாம் அறிவோம். சட்ட மன்ற மேலவை எனும் மூத்தோர் அவையினை முடக்கியமையால் பலதுறைச் சான்றோர் வழி அமைப்பை ஆட்சி மன்றம் பெற முடியாமல் போன அவலத்தைக் கண்டோம்.

இப்போது புதிய வெளிச்சங்கள் தெரிகின்றன. மேலவை மீண்டும் வருவது மட்டுமில்லை. நமது தாயகத்துக்குப் பெருமைகள் எல்லாம் உதய ஞாயிற்று ஒளிக்கற்றைகளாக மீண்டும் பரவி வருவதும் நமக்கும் புலப்படுகின்றன. அத்தகைய பொன்விழாக் கீற்றுகள் உச்சிவானத்துப் பகலவனாக நிலவ, இச்சுதந்திர நன்னாளில் வாழ்த்துவோம். ஆட்சிக் கலை வித்தகங்களை ஆசான் வள்ளுவரிடம் கற்றறிவோம்.

 

‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்!’

‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்!’

Image result for shadow jump

உலகத்திற்குத் தமிழர்களை அடையாளம் காட்டி வான்புகழ் கொள்ள வைத்தவை, தமிழர்களின் நாகரிகமும், பண்பாடும், பழைமையான இலக்கியங்களும், குடும்பம் என்ற கட்டமைப்பும் ஆகும். தமிழ்ச் சமுதாயத்தின் பெருமைக்கும் ஆக்கத்துக்கும் நிலைபேற்றுக்கும் வழிகாட்டி வருவது தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளும் விழாக்களும். அவ்விழாக் காலங்களில் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்வதன் மூலம் சகோதரத்துவத்தையும், நட்பையும், அன்பையும் விரிவாக்கிக் கொள்கின்றனர்; காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களைப் புதுப்பித்துக் கொண்டு புதுமைச் சிந்தனை களை வழங்கி அன்பு நெறியாலும் அறிவு நெறியாலும் வாழ்வை நல்வழிப்படுத்தும் ஆற்றலைப் பெறுகின்றனர்.

ஒவ்வொரு புத்தாண்டுப் பிறப்பின் போதும் தமிழர்கள் தங்களை மட்டுமல்லாது தாங்கள் பயன்படுத்தும் பொருட் களையும் தூய்மைப்படுத்திக் கொள்கின்றனர்; தங்களின் உயிர் வாழ்விற்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு நல்கி, வளர்த்து வரும் இயற்கைக்கும் அன்புடன் வளர்த்து வரும் விலங்குகளுக்கும் நன்றி பாராட்டி மகிழ்கின்றனர்.

புத்தாண்டு தொடங்கும் முதல் நாளே தமிழர்கள் பழைமைகளைக் கழிக்கின்ற விழாவாக எடுத்து வாழ்வினைப் புதுமையாக்கிக் கொள்கின்றனர்.

புறத்தூய்மையும், அகத்தூய்மையும் கொண்டு இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற இன்பநிலையை அடைகின்றனர்.

பேரலைகள் சுழன்றடிக்கும் பெருங்கடலில் பயணம் செய்யும் படகோட்டிகள் கை சலித்து மனம் உழன்று வருந்திய போது இருளில் ஒளி காட்டும் கலங்கரை விளக்கு கண்டு கரையேறுவர். அதுபோன்று போராட்ட உலகில் மனம் சலித்துத் துன்புற்று வாழும் மனிதர்களைக் கரை சேர்க்கும் கலங்கரை விளக்கமாகத் திருக்குறள் விளங்குவது போல பண்டிகைகளும், விழாக்களும் மிளிர்கின்றன.

“புறம்தூய்மை நீரான் அமையும்; அகம்தூய்மை

 வாய்மையால் காணப் படும்”        (298)

எனும் வள்ளுவத்தின் வழியில் இந்தப் புத்தாண்டினைக் காமம், குரோதம், மன வேறுபாடு, மத வேறுபாடு போன்ற அறியாமையாகிய இருளிலிருந்து விடுபட்டு உண்மைப் பேரொளியைக் காணுகின்ற ஆண்டாகக் கொள்வோம்.

இப்புத்தாண்டு ஓர் அற்புத ஆண்டாகப் பிறக்கின்றது. 1.1.11 என்ற முறையில் எல்லாவற்றிலும் முதன்மை பெறப் போகிற ஆண்டாக மலர்கிறது.

பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இவ்வாறு நிகழும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இவ்வாண்டில் ஏழ்மை, பஞ்சம், பிணி இவைகளை நீக்கி வேளாண்மையிலும், தொழில்துறையிலும், அறிவியல் ஆற்றலிலும், ஆக்க சக்தி களிலும், பொருளாதாரத்திலும் முதன்மை பெற்று விளங்குவோம்.

நாம் வாழும் காலம் அறிவியல் உலகின் எழுச்சி, இணைய மலர்ச்சி, அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவுடையார் ஆவது அறிவார் என்பன மெய்ப்பிக்கப் பட்ட காலம். எது நிலைத்தது என்றால் நிலையாமை தான் நிலைத்தது, எது மாற்றம் இல்லாதது என்றால் மாற்றம் தான் மாற்றம் இல்லாதது. ஆதலால் நில்லாத உலகின் மாற்றத்திற்கு ஏற்ப, போராட்ட உலகத்திற்கு ஏற்ப நம்மை நாம் தகுந்தபடி மாற்றிக் கொண்டால் தான் நிலைத்து நின்று வெற்றி பெற முடியும்.

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

     அவ்வது உறைவது அறிவு”           (426)

என்பது வள்ளுவம்.

காலத்திற்கு ஏற்றபடி அறிவியல் உலகின் போக்கை ஆராய்ந்து சூழலுக்கு ஏற்ப கல்வியும், அறிவும் பெற்று உடல் உழைப்பாலும் முயற்சியாலும் விழுமிய நிலைபெற்று உயர வேண்டும். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் கனவு 2020 ஆண்டில் நாம் வல்லரசு ஆவோம் என்பது.

அக்கனவு முதன்மை பெற்று மலரும் இப்புத்தாண்டில் தமிழர் வாழ்வில் நனவாக வேண்டும்.

“ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா!

     உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!

     ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்

     உதய ஞாயிறு ஒப்பவே வா வா வா!”

என்ற பாரதியின் கவிதை வரிகளைப் படிக்கும்போது நமக்கு ஒரு புத்துணர்ச்சியும், புதுத்தெம்பும், பழமை இருளில் இருந்து புதிய வெளிச்சத்திற்கு வந்தது போல ஓர் உணர்வும் எழுகிறது.

மொட்டவிழ்க்கும் மலர்களிலும், கொட்டுகின்ற அருவி யிலும், தீண்டிச்செல்லும் தென்றலிலும் மனத்திற்குப் பொலிவையும் புதிய அழகையும் அமைதியையும் காண் கிறோம். அதே நேரத்தில் கடல்களின் சீற்றமும், எரிமலை வெடிப்பும், சூறாவளிக் காற்றும் மனத்திற்கு துன்பத்தைத் தந்து அமைதியைக் கெடுக்கின்றன. இது இயற்கையின் நியதி. அதுபோல வாழ்க்கை என்பதும் போராட்டம் நிறைந்தது. அதில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. அதில் வெற்றி களையும், தோல்விகளையும் மாறி மாறிச் சந்தித்துள்ளோம். இருவித அனுபவசாலிகள் நம்முள் வாழ்ந்து வருகிறார்கள். எப்படி இன்பத்தையும், வெற்றியையும் ஏற்றுக்கொள் கிறோமோ அதே போல் துன்பத்தையும் தோல்வியையும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வந்து விட்டால் மேலும் மேலும் வாழ்க்கையில் உற்சாகம் உண்டாகும்.

முதல்நாள் பட்டாபிஷேகம், மறுநாள் கானகம் செல்ல வேண்டிய நிலை. அப்பொழுது இராம பிரானின் மனநிலை எப்படி இருந்தது என்பதைச் சொல்ல வந்த கம்பர் “அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா” என்பார். அதுபோல் இன்பம் வரும் போதும், துன்பம் வரும் போதும் ஒரே நிலையில் முகமலர்ச்சியோடு இருக்கும் தன்மையினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நம் எண்ணங்கள் செயல் வடிவமாக மாற்றம் பெறுகின்றன. நாம் எண்ணாத எந்தச் செயலும் செயலாக உருப்பெறுவது இல்லை. எண்ணம் தான் நம்பிக்கையை வளர்க்கிறது. நம்பிக்கையே வாழ்வின் அடித்தளமாக விளங்குகிறது.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

 திண்ணியர் ஆகப் பெறின்”          (666)

என்பார் திருவள்ளுவர்.

‘நீ உன்னை எவ்வாறு எண்ணுகிறாயோ அவ்வாறே மாற்றம் பெறுகிறாய். நீ உன்னை வலிமை படைத்தவனாக எண்ணினால் வலிமை பெற்றவனாக மாறுகிறாய்.’

நம் மனதில் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையில் நேர்முகச் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டோம் என்றால் நமது பழைய எதிர்மறைச் சிந்தனைகள் மறைந்து  இன்று புதிதாய்ப் பிறந்தது போன்ற மாபெரும் புதிய சக்தி பிறக்கும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கனவு இருக்கும். அது நாளை நடக்க இருப்பதை இன்றே மனதில் காணும் காட்சி. அந்தக் கனவை நனவாக்க எடுத்துக் கொள்ளும் முயற்சியின் முடிவே வெற்றி. அதுவே இலக்கு. அதுவே குறிக்கோள். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத தோணி போல திசைமாறிப் போய்விடும். சென்றடைய வேண்டிய இலக்கினை அடைய முடியாது.

“பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதையர்தம்

     மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவோடு மூப்புவந்து

     கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்”

என வருந்துவார் அப்பர் சுவாமிகள்.

நமக்குள் நிறைவேறாத ஆசைகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது. ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகம் இருந்தால் ஏமாற்றங்களும் அதிகம் இருக்கும். எந்த ஒன்றையும் எளிதில் அடைந்து விட முடியாது. அப்படி எளிதில் அடைந்து விட்டால் அதில் மகிழ்ச்சி இருக்காது. கடின உழைப்பில் கிடைக்கும் வெற்றியில் தான் மகிழ்ச்சியும் இன்பமும் இருக்கும்.

ஒரு கல்லில் தேவையில்லாத பகுதிகளை நீக்கி விட்டால் புதிய சிற்பம் கிடைக்கும். அதுபோல் நம்மில் உள்ள தேவையில்லாத குணங்களை நீக்கி விட்டால் அழகிய புதிய மனிதம் தோன்றி விடும். மனிதனுக்கு அரக்க குணம், தெய்வ குணம் என இரண்டு வித குணங்கள் உண்டு. கோபம், பொறுமை, நல்லவை, தீயவை என குணங்கள் இருப்பது இயற்கை. அதில் நல்லவைகளை ஏற்றுக் கொண்டு தீயவைகளை நீக்கி விட்டால் மனிதன் மனிதனாகி விடுகிறான். ஒவ்வொரு மனிதனும் பொறுப்புணர்வுடன் தேவையில்லாத பழமைகளை மறந்து, புதுப்பொலிவுடன் தன்னைத் தானே சுய பரிசீலனை செய்து கொள்ள வேண்டும். நடந்தவைகளை எண்ணி வருத்தப்படாமல், நடக்கப் போவதை நினைத்துக் கவலைப்படாமல் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற புதுப்பொலிவுடன் வாழ்க்கையைத் தொடங்குவோம்: பொய்ம்மைகளைப் புறந்தள்ளி வாய்மையின் வழி நடப்போம்,

மனதில் உறுதி வேண்டும்,

வாக்கினிலே இனிமை வேண்டும்,

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்,

கனவு மெய்ப்பட வேண்டும்,

கைவசமாவது விரைவில் வேண்டும்,

தனமும் இன்பமும் வேண்டும்,

தரணியிலே பெருமை வேண்டும்,

காரியத்தில் உறுதி வேண்டும்,

மண் பயனுற வேண்டும்,

வானகமிங்கு தென்பட வேண்டும்,

உண்மை நின்றிட வேண்டும்.

 

பெற்றோர்களின் விழைவுகள்- & விருப்பங்கள்

பெற்றோர்களின் விழைவுகள்- & விருப்பங்கள்

 

Image result for family

மதுரையின் முன்னணிக் கல்வி நிலையங்களுள் ஒன்றாக வளர்ந்து வரும் மகாத்மா பாண்டிச்சேரி உயர்கல்வி நிலைய முதல்வரும், புகழார்ந்த குழந்தை நோய் மருத்துவ நிபுணரும், சமூகச் சிந்தையருமான டாக்டர் ரிகிரி அவர்களும் இக்கருத்தரங்கில் பங்கேற்க வந்திருக்கின்றார்.

‘பெற்றோர்களின் விழைவுகள் – விருப்பங்கள்’ எனும் தலைப்பில் நான் சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். மதுரை  க்ஷி.ரி.ரி. மெட்ரிகுலேசன் பள்ளி, பம்மல் மீனாட்சி பாலிடெக்னிக் முதலிய கல்வி நிலையங்களின் தாளாளர் எனும் நிலையில் நான் கண்டுணர்ந்த அனுபவங்களை இங்கே சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

மகாத்மா காந்தியடிகள் நமது நாட்டிற்கு உகந்த கல்வி முறையைத் தமது நிர்மாணத் திட்டங்களில் ஒன்றாக வகுத்துத் தந்தவர்; ‘கல்வி என்றால் வளர்ச்சி’ என ஒரு தொடரில் விளக்கியவர்.

ஆம்… கல்வி என்றால் வளர்ச்சி! எதன் வளர்ச்சி? மனம், உடல், ஆன்மா எனும் மூன்றின் ஒருங்கிணைந்த, ஒத்த, பரிபூரணமான வளர்ச்சியே கல்வி. கல்வி என்றால் செலவு என மட்டும் பொருள் இல்லை. கல்வி என்பது இன்று கைவிட்டுச் செலவிடுவது போலத் தோன்றும் நாளைய முதலீடு. தமது பிள்ளைகளின் கல்விக்குச் செலவிடுவதன் மூலம், அவர்களை நாளையது சமுதாயத்திற்குப் பயன்தரும் நிறுவனங்களாக, நிலைக்களன்களாக ஆக்கிடப் பெற்றோர் வழியமைக்கின்றனர்.

பிள்ளைகளுக்கு உரிய கல்வி வளர்ச்சியைத் தருவதில் பலருக்குக் கூட்டுப்பொறுப்பு உண்டு. பெற்றோர் – ஆசிரியர்- சமூகம் எனும் இந்த முக்கோணத்தின் அடித்தளமாக இருக்க வேண்டிய பொறுப்புடையோர் பிள்ளைகளைப் பெற்றவர்களே ஆவர்.

‘பிள்ளைகளின் முதல் ஆசான்கள் பெற்றோர்களே’ எனக் காந்தியடிகள் ஆணித்தரமாகக் கூறினார். நம் நாட்டில் பெற்றோர் அண்மைக் காலங்களில் இந்தப் பொறுப்பை அதிகம் உணர்ந்தே வருகின்றனர். சாதாரணத் தொழிலாளி, விவசாயி கூடத் தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி தரவேண்டும் என்று வரிந்து கட்டி வருவது பரவலாகத் தெரிகிறது. நம் நாட்டின் வளர்ச்சி நிலையிலும், சமூக நல மாற்றங் களிலும் உருவாகி வரும் போட்டிகளிலும் நிலை கொள்ள வேண்டுமானால் எதிர்காலச் சந்ததியாக இன்று வளரும் தமது மக்களுக்குத் தரமான கல்வி தர வேண்டும் என்று தலைப்பட்டு நிற்பது அதிகரித்து வருகிறது.

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

     மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.”      (68)

என்றபடி தம்மைவிடத் தம் மக்கள் அறிவில் மேம்படுவதைப் பெற்றோர் பெருமையாக நினைப்பர். தம்மை விட உழைப்பிலோ, வருமானத்திலோ, அறிவாக்கத்திலோ, சமூகத்தளத்திலோ உயர்ந்து நிற்பதைக் காணும் எந்த ஒரு மனிதனுக்கும் மனத்தில் பொறாமை ஏற்படுவது இயல்பு; தவிர்க்க முடியாததும் கூட. ஆனால் அவர்களே தம் பிள்ளைகள் உயர்வதையும் மேம்படுவதையும் காணும் போது பூரித்து மகிழ்வார்கள்.

எனவே தம்மை விட தம் பிள்ளைகள் மேம்பட்டு நிற்கவேண்டும் எனப் பெற்றோர் ஆசைப்படுகின்றனர். வளர்முக நிலையில் உள்ள நம் நாட்டில் வாய்ப்புக்களைப் பெறுவதில் போட்டிகள் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் பெற்றோர் தம் பிள்ளைகளைச் சின்ன வயதிலிருந்தே பந்தயக் குதிரைகளைப் போலத் தகுதிப்படுத்தி வளர்க்கத் துடிக்கின்றனர்.

இன்று +2 படிக்கும் பிள்ளைகளையும் அவர்கள் பெற்றோர்களையும் பாருங்கள். அந்த ஆண்டு முழுவதும், தொழிற்கல்வித் தேர்வு முடிவுகள் வரும் வரை – இருவர் மனத்திலும் இடையறாத கவலையும் போராட்டமுமே நிலவக் காணுகிறோம் இல்லையா? ஏனென்றால் +2 வகுப்பில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் எல்லாம் தமது பிள்ளைகள் டாக்டராக, எஞ்ஜினீயராக, ஐ.ஏ.எஸ்.ஸாக, விஞ்ஞானியாக எப்படியாவது வந்தாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்; அவதிப்படுகிறார்கள்; அலைகிறார்கள்; தம் பிள்ளைகளையும் அலைக்கழிக்கிறார்கள். சிறிய வகுப்பிலேயே வீட்டுப் பாடச் சுமைகள், ‘கிssவீரீஸீனீமீஸீt’ எனும் பெயரில் பிள்ளைகள் மீது சுமத்தப்படுகின்றன. துள்ளித் திரிகின்ற பிராயத்திலே அவர்கள் பொதிமாடு போல ஆகிறார்கள். பெற்றோர் 15 வருடங்களாகப் படித்தறிய முடியாதவற்றை எல்லாம், பிள்ளைகள் 5 ஆண்டிற்குள் கற்றாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இளமையிலேயே சோர்வுக்கு உள்ளாகும் பிள்ளைகள் வாழ்க்கையில் தோல்விக்கே தம்மைத் தயாரித்துக் கொள்கிறார்கள்.

ஆசைப்படுவதில் தவறில்லை. உள்ளுவதெல்லாம் உயர்வாக உள்ளுவதில் எல்லோர்க்கும் உரிமை உண்டு. ஆனால் என்ன நடக்கிறது என்றால்… எல்லாப் பிள்ளைகளாலும் பெற்றோர்களின் இந்த ஆசையை நிறைவேற்றி வைத்துவிட இயலுவதில்லை. ஏனென்றால், எல்லோரும் விரும்பியபடி பாடமும் படிப்பும் பெற நம் நாட்டில் வாய்ப்பில்லை. இதனால் பெற்றோர்க்கு ஏமாற்றமும் பிள்ளைகளுக்குத் தோல்வி வேதனையும் ஏற்பட்டு, இயல்பான வளர்ச்சியை ஊடறுத்து விடுகிறது.

எனவே தம் பிள்ளைகள் டாக்டராக, எஞ்ஜினீயராக வேண்டும் என ஆசைப்படும் பெற்றோர் தம் ஆசைக் கனவுகள், விழைவு விருப்பங்கள் ஆகியவற்றை எல்லாம் தமது பிள்ளைகள் மீது குருவி தலையில் பனங்காய் வைப்பது போலச் சுமத்தாமல் – கூந்தலுக்குப் பூ முடிப்பது போல இதமாக, பதமாக, இயல்பாக, பொருத்தமாக, உருவாக, உருவாக்க முற்பட வேண்டும். இயல்பான திறமை, முறையாக வளர்வதற்கும் வளம் பெறுவதற்குமே வாய்ப்பு அளிக்கப் பட வேண்டும். பிள்ளைகளை எல்லாம் டாக்டர்களாக்கி, மதுரை எங்கும் ளிக்ஷீவீமீஸீtணீறீ  மருத்துவமனைகளைக் கட்டி விட்டால், மதுரை மக்களின் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைத்துவிடுமா…?

அதுபோலத்தான் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் உண்டு. வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு ஏற்கவும், எதிர்நீச்சலிட்டுக் கரையேறவும் வழியமைப்பதே சரியான கல்விமுறை; சீரான கல்வி நெறி; சிறப்பான கல்வித் திட்டம். காந்தியடிகள் இதனை ‘வாழ்க்கைக் கல்வி’ என்றார். அதாவது வாழ்க்கையிலிருந்து கல்வி, வாழ்க்கை மூலம் கல்வி, வாழ்க்கைக்காகக் கல்வி என்றார். பிள்ளைகளுக்கு வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும் நாட்டம் கொள்ளும் நடைமுறைக் கல்வியே தேவை என்றார்.

கல்வியின் தலையாய நோக்கம் அறிவைத் தருவது மட்டுமில்லை. நல்ல மக்களாக வளர்ந்திட உதவும் பண்பாக்கமே கல்வியின் இலட்சியம். ஒரு நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாக, சமுதாயப் பொறுப்பு உடையவனாக, தானும், தன் துறையும் வளர்ந்து, தான் வாழும் சமுதாயத்தையும் உயர்த்த, உழைக்க, உதவக்கூடியவனாக உருவாக்க முற்படுவதே கல்வியின் செயல் முறை.

இன்று நம் குழந்தைகளைப் புத்தகப் புழுக்களாகவே ஆக்கும் முயற்சியில் தலைப்பட்டு, அவர்களைச் சமுதாய, குடும்ப நடைமுறைகள் தெரியாத தனித்தீவுகளாக வளர்த்து வருகிறோம். நம் குழந்தைகளிடம்  இயல்பாக வளரும் மன உணர்வுகளையும், சிந்தனைக் கூறுகளையும் அதனதன் போக்கில் வளர விட மாட்டோம் என்கிறோம். கலைத் துறையில், விளையாட்டில், சமுதாயத் தொண்டில், நல்ல நட்புறவில் எல்லாம் நம் பிள்ளைகள் நாட்டம் கொள்ளும் போதெல்லாம் தடுத்து அணைபோடுகிறோம். நடைமுறை உலகும், யதார்த்தமான பழக்க வழக்கங்களும் அவர்களுக்கு அன்னியமாகப் போகும் அளவுக்குக் கூண்டுக்குள், ஆசைக் கோட்டைக்குள் வைத்தே வளர்க்கிறோம். படித்து முடித்த பின்னர் நம் பிள்ளைகள், வாழ்க்கை நீச்சல் தெரியாதவர்களாக, தரையில் போடப்பட்ட மீன்களாக, சிறகிழந்த பறவை களாக, தொட்டியில் ஆசைக்கு வளர்க்கப்படும் குரோட்டன் செடிகளாக, அலமாரியில் உள்ள அலங்காரப் பொம்மைகளாக இருப்பதைக் காணும் போது, நாம் செய்த நடைமுறைப் பிழைகளை மறந்துவிட்டு ஆத்திரப்படுகிறோம், அவசரப் படுகிறோம்; சபிக்கிறோம், சபித்துக் கொள்கிறோம்.

ஓர் உதாரணம்: நம் வீட்டிற்கு வரும் பெரியவரை நாம் வீட்டில் இல்லாதபோது வரவேற்று உபசரிக்க, இங்கிதமாக அவரிடம் நடந்து கொள்ள நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறோமா? வெளியில், வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் பெரிய மனிதர்களிடம் தக்கவாறு அறிமுகம் செய்து வைத்து, இந்த அறிமுகக் கலையைத் தங்களின் அனுபவக் கலையாக்கிக் கொள்ள வித்திட்டிருக் கிறோமா?

‘பெற்றோர்கள்தான் பிள்ளைகளின் முதல் ஆசிரியர்’ எனக் காந்தியடிகள் உபதேசமாகவா சொல்லியுள்ளார்? முதன்மை ஆசிரியர்களாக எப்போதும் வழிகாட்ட வேண்டியவர்கள், வாழ்ந்து காட்ட வேண்டியவர்கள் என்றுதானே வலியுறுத்தியுள்ளார்? பிள்ளைகளைச் சினிமா பார்க்கப் போகக்கூடாது என்று கண்டித்து வீட்டில் கண்விழித்துப் பாடம் படிக்கக் கட்டாயப் படுத்திவிட்டு இரவு இரண்டாம் காட்சி திரைப்படம் பார்க்கப் போகும் பெற்றோர்; பையனைக் கடைக்கு அனுப்பி மதுபானம் வாங்கிவரச்சொல்லி வீட்டில் பிள்ளைகளின் முன் அமர்ந்து போதை ஏற்றிக்கொண்டு, பையனை மட்டும் சரியான பாதையில் நடக்குமாறு புத்திசொல்லும் அப்பன்மார்; தீமைகளையும் ஒழுக்கக்கேட்டையும் தமது சொந்தமாக்கிக் கொண்டு, பையனை மட்டும் ஒழுங்காய் இருக்குமாறு உபதேசிக்கும் குருமார்…. இப்படி எத்தனை விதமான முரண்பாடுகளின் இடையே நம் பிள்ளைகளை நாம் வளர்க்கிறோம். ‘ஆற்றுப்படுத்துதல்’ என்பது தமிழில் உள்ள பழமையான இலக்கிய உத்தி மட்டுமல்ல; இனிய வாழ்க்கை முறையும்கூட. ஆற்றைக் கரைகோலி, அணைமேவி நடத்துதலைப் போல, தம் பிள்ளைகளையும் அறிவுகோலி, அன்பு மேவி நடத்துவதே, தானே முன்னோடியாக வாழ்ந்து காட்டுவதே ஆற்றுப்படுத்துதல்.

அறிவு என்பது நினைத்தவுடன் வாங்கிச் சேர்க்கும் பொருள் இல்லை. அவரவர் இயல்பிலே தோன்றி, முறையாக, வளர்ந்திட, வளர்க்கப்பட வேண்டிய ஒரு தரு. சிறு வித்து வளர்ந்த மரம் ஆவது போல, பிள்ளைகளிடம் உள்ள இயல்பே அறிவாக, ஆக்கமாக பரிணமிக்கிறது. இந்த இயல்பை இனம் கண்டு ஊக்குவதே பெற்றோர் பொறுப்பு. அறிவோடு வாழ்க்கை அனுபவமும், கல்வியோடு ஒழுக்கமும் ஊடும் பாவும் போல அமைந்திட அறிவும் அனுபவ ஆக்கமும் சமநிலையில் ஒருவரிடம் உருவாகிப் பெற்றோர் ஆற்ற வேண்டிய பங்கு, ஆசிரியனுடைய பொறுப்பை விட அதிகம், மிக அதிகம்.

பிள்ளைகளைப் பள்ளியில் பணம் கட்டிச் சேர்ப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டது, பையன் தானாக வளர்ந்து விடுவான் என நினைக்கக் கூடாது. வேம்புச்செடியை நட்டுவிட்டுத் தண்ணீர் ஊற்றினால் மட்டும் போதுமா? செடி வளர்கையில் ஆடுமாடு கடிக்காமல் சுற்றி அதற்கு வேலி போடுவதும், அது நன்கு உயரும்வரை காப்பதும் கடமையல்லவா? பெற்றோர்கள் வேலி போடவும் வேண்டும், விருப்பம்போல வளர்ந்து உயர்ந்திட உதவவும் வேண்டும்.

தம் பிள்ளைகள் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி, வாழ்க்கை எனும் போராட்டச் சரிவுகளுக்கு உதவி தேடுவதற் காகவும் நல்ல புத்தகங்களை வாங்கித் தருவது பெற்றோர் பொறுப்பே ஆகும். அறிவு, பண்பாடு, சமுதாய ஒழுக்கம், தார்மிகப் பண்பு முதலியன. காலப்போக்கில் கனிந்திட நூலறிவும் நுண்மாண் நுழைபுலமும் உதவும்.

மேலைநாடுகளில் கல்வி இன்றும் முன்னிடம் பெற்றுள்ளது. கடந்த மூன்று நூற்றாண்டு மேலை ஆதிக்கத்திற்குக் கல்விமுறை தளம் அமைத்தது. மனிதனை நிலாவுலகில் கொண்டு சேர்த்த அதே கல்வி முறை – அங்கு இன்றும் புதிய யுகத்திற்குப் பாதை அமைத்து வருகிறது. பிள்ளைகளின் விருப்பங்களையும் வளர்ச்சி முறைகளையும் சீர்தூக்கும் கல்வி முறையைப் பெற்றோர்அளிப்பதால் முதிர்ச்சியிலும் தன்னம்பிக்கையிலும் பிறந்தவர்களாக இளந்தலை முறையினர் அங்கே வருகிறார்கள், வளர்கிறார்கள். பெற்றோரையே, குடும்பத்தையே, அரசாங்கத்தையே முற்றிலும் நம் பிள்ளை களைப் போலச் சார்ந்திராமல், தமது சுய உழைப்பிலும் தொழில் முனைப்பிலும் ஆர்வம் உள்ளவர்களாக உயர்கிறார்கள்; வரலாறு படைக்கிறார்கள்.

நம் நாட்டில், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, ‘உன்னால் முடியும் தம்பி!’ என நம் இளைஞர்களுக்கு நம்பிக்கை யூட்டும் இயக்கத்தினை, விடாமல் நம்பிக்கையுடன் நடத்திவருகிறார். நம் பிள்ளைகள் அத்தகைய நம்பிக்கை யூட்டும் நல்ல தலைவர்களைப் பின்பற்றுமாறு பெற்றோர் வழியமைக்க வேண்டும். தக்கவழியமைப்பு இன்மையால், நம் பிள்ளைகள் யார் யாரை எல்லாமோ தலைவர்களாக ஏற்றுக்கொண்டு, திசைமாறிப் போகிறார்கள். தம்மைப் பெற்ற, பெற்றோரின் கால்களில் விழுந்து வணங்கத் தயங்கும் இவர்கள், யார் யார் இருக்கும் திசை எல்லாமோ திரும்பி, அங்கப் பிரதட்சணம் செய்யவும் தயாராக உள்ளார்கள். நம் பிள்ளைகளிடையே தவறான மதிப்பீடுகள்  (கீக்ஷீஷீஸீரீ க்ஷிணீறீuமீs) ஏற்பட யார் காரணம்? பெற்றோராகிய நாமும் ஒருவகையில், பலவகையில் காரணம் அல்லவா?

பிள்ளைகளுக்கு உரிய முதல் தலைவர் பெற்றோர். அடுத்த நிலைத்தலைவர் ஆசிரியர், மூன்றாம் நிலை சமூகப் பெரியோர். இந்தப் படிமுறையை உருவாக்குவது பெற்றோர் பொறுப்பே ஆகும்.

‘அவையத்து முந்தியிருப்பச் செயல்’ (குறள்:67) மட்டுமின்றி ‘இவன் தந்தை என்நோற்றான் கொல்!’ (குறள்:70) எனப் பெற்றோர் புகழ் பெற வேண்டுமானால், அந்தப் புகழுக்குத் தம்மை இலக்காக்கிக் கொள்வது பெற்றோரையே சார்ந்தது. அதை விடுத்து தம் எல்லையற்ற ஆசைகளை ஏற்றும் சுமைதாங்கிகளாக மட்டும் பிள்ளைகளை ஆக்குவது நியாயமா? அது எக்காலத்தும் நிலை பெறுமா?

இந்தக் கல்வி யுகத்தில் நம் நாட்டில் கல்விப் பொறுப்பைப் பெற்றோரே ஏற்க வேண்டியுள்ளது. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என வாய்ப்புக்களை வாரி வழங்க முடியாத நம் நாட்டில்- இட ஒதுக்கீடும்  இடையறாத போராட்டமும் மண்டி வரும் நம் நாட்டில், நம் விழைவுகளை மட்டும் பிள்ளைகள் மீது சுமத்தாமல், அவர்களது விருப்பங்களையும் புரிந்து செயல்படப் பெற்றோர் முனைய வேண்டும். வசதி உள்ளவர்கள் செல்வச் செழிப்பால் தம் பிள்ளைகள் போக்கில் போகவிட்டு விட்டு அவர்கள் சீரழிவது கண்டு, சிந்தை நோகின்றனர். பெற்றோர் தரும் பண வசதியால், அரிய பொருள்களை எல்லாம் எளிதில் அடையப்பெறும் பிள்ளைகள், சுலபமாக அடைய முடியும் எனக் கனவு காணும் பிள்ளைகள் சொகுசு வாழ்க்கைக்கே, முயற்சியற்ற போலி வாழ்க்கைக்கே தம்மைத் தயார்ப் படுத்திக் கொள்கிறார்கள். இதனைப் போல, படியாத, பாமர, நடுத்தர நிலைப் பெற்றோரால் செய்ய முடியுமா? தாம் தேடி வைத்த செல்வம், தம் பிள்ளைகளைக் காப்பாற்றி விடும், படிப்பு இல்லாவிட்டால் பரவாயில்லை என நினைத்து விடுகிறார்கள். தொழிலாயினும் வணிகமாயினும் இக்காலத்தில் கல்வி, நுட்ப உணர்வு ஆகியன உடையார்க்கே வளர்ச்சிநிலைகளைத் தருகின்றன. நம் பணக்காரப் பெற்றோர் இதனை நினைவிற்கொண்டு, தம் வசதியை நன்கு பயன் படுத்தித் தரமான கல்வி தர முற்படவேண்டும். வளர்ந்துள்ள பல பெரிய தொழில் நிறுவனங்கள், தமது அடுத்த தலை முறையினர் மீது காட்டும் பரிவும், பயனுள்ள முயற்சியும் நமக்கு முன்னுதாரணமாக இருக்கட்டும்.

“பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா?

     பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா?”

என்பது பழையதொரு திரைப்பாடல். ‘பேணி வளர்க்க வேண்டும்’ எனும் தொடரிலேயே பெற்றோர்கள், தம் பிள்ளைகளைப் பொறுத்தவரை பேண வேண்டிய விருப்பங் களும் விழைவுகளும் பொதிந்துள்ளன. அத்தகைய பொறுப் பறிந்த உள்ளமுடைய பெற்றோர் வாழ்க! வள்ளுவர் கூறிய நோன்புப் பயனை அடைந்திடுக.

 

முன்னேற்றப் பாதையில் நாம்…

முன்னேற்றப் பாதையில் நாம்…

பாதை தெரியுது

‘ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி’ என்று பழந்தமிழ் இலக்கியத்தால் போற்றப்பெற்ற வணிக மரபினரான ஆயிர வைசிய சமூகத்தின் ஐந்தாம் மாநில மாநாட்டு மலருக்கு ஒரு கட்டுரை எழுதிட வேண்டும் எனக் கருதியபோது என் எண்ணமெல்லாம், உணர்வெல்லாம் பல திசைகளில், பல நிலைகளில் ஓடிப் பரவின. வரலாற்றுப் பெருமையும் வழிவழித் தொன்மையும் கொண்ட இச் சமூகத்தின் பழம்பெருமை; சமூகப் பிரிவுகளாலும் காலச் சூழலாலும் இடைக்காலத்தே ஏற்பட்ட நலிவு; கடின உழைப்பும் கட்டுக்கோப்பும் கொண்டு அமைந்த ஒற்றுமை யுணர்வால் எதிர்காலத்தில் அமையப் போகும் உயர்வு எனும் இவற்றைச் சிந்திக்க என் உணர்வலைகள் வாய்க்கால் தேடின.

பதினெட்டாம் பெருக்கு

மாநாட்டில் அன்பர்கள் எல்லாம் உற்சாகம் கொப்பளிக்க வந்து கூடுவது பதினெட்டாம் பெருக்கின் போது ஆற்று வெள்ளம் பிரவாகமாகப் பெருகி வரும் பிரமை போலத் தென்படும். அது நெடிது காலம் நீட்டிக்காது. ஆற்று வெள்ளத்தை அணை கட்டித் தேக்கி வைப்பது போல, ஓடிப்பெருகும் உணர்ச்சிப் பிரவாகங்களைக் கருத்துக் கோவையாக, சிந்தனைக் கருவூலமாகத் தேக்கி வைக்கும் ஒரு நிரந்தர முயற்சியே மாநாட்டு மலர் வெளியீடு. எனவே இந்த மாநாட்டு மலரினை என் சிந்தனைகளை ஏந்திவரும் வாய்க்காலாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

கண்டிப்பா? கவனிப்பா?

நம் இந்திய நாடு விடுதலை பெற்று 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுதந்திரப் போர் நடந்த காலத்தில், நமக்குள்ளே வேரூன்றிக் கிடந்த சாதி, சமயப் பூசல்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு,

“வேதியராயினும் ஒன்றே & அன்றி

     வேறு குலத்த வராயினும் ஒன்றே”

என வீறு கொண்டு போரிட்டோம். ஆனால் கண்ணினு மினிய சுதந்திரம் பெற்ற பின்னர் பழைய சாதிப்பிரிவுகள் புதுவலிமை பெற்று வளரக் காணுகிறோம். அரசியல் பொருளாதாரச் சூழல்கள் இப்பிரிவுகளுக்குப் புத்துரம் தந்து வருவதையும் காணுகிறோம். இது கண்டிக்கத்தக்க ஒன்றில்லை; ஆனால் கவனிக்க வேண்டிய ஒன்று. அடிமைப்பட்டுக் கிடந்தபோது அன்னிய ஏகாதிபத்தியச் சுரண்டலை எதிர்த்தோம். அதற்கு நாடு தழுவிய ஒற்றுமை தேவைப்பட்டது. சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சி நலத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் ஒருவரை ஒருவர் முந்த வேண்டும் எனும் போட்டி ஏற்பட்டது. இப்போட்டி பல சமூக, சமுதாய அமைப்புகளைப் புத்தெழுச்சி பெறச் செய்துள்ளது. இந்த எழுச்சிப் பாதையில் நடைபோட நம் ஆயிர வைசிய சமூகமும் வந்தாக வேண்டிய கட்டாயத்தின் விளைவே நமது மாநில மாநாடு.

சமூகம் – சமுதாயம்

சமூகம், சமுதாயம் – என்பன எளிதில் வரையறுக்க முடியாத விரிவாக்கச் சொற்கள் என்பர். தனி நபர்களால் குடும்பமும், குடும்பங்களால் சமூகமும், சமூகங்களால் சமுதாயமும் அமைகின்றன. எனவே சமூகம் என்பதைச் சிறியதொரு வட்டமாகவும், சமுதாயம் என்பதைப் பெரியதொரு வட்டமாகவும் கொள்ளலாம். சமூகம் என்றால் சிஷீனீனீuஸீவீtஹ் எனும் கருவையும், சமுதாயம் என்றால் ஷிஷீநீவீமீtஹ் எனும் கருத்தையும் ஏற்கலாம்.

நம் ஆயிர வைசிய மரபினை இந்த இருவகையிலும் அடக்கலாம் என்பது என் கருத்து. இதன் 18 பிரிவுகள் 18 சமூகங்களைப் போல; இந்த 18 பிரிவுகளும் ஒரே ஆயிர வைசியக் குலத்தின் கீழ் வருகையில் – அது ஒரு சமுதாயத்தைப் போல. பிற சமுதாயங்களோடும், நாட்டோடும் ஒப்பிடுகையில் – நாம் ஒரு சிறு பிரிவாகிறோம். எனவே நம் வளர்ச்சிக்குத் திட்டமிடுகையில் சமூகக் கண்ணோட்டமும் வேண்டும்; சமுதாயக் கண்ணோட்டமும் வேண்டும்.

தனி மரமா? தோப்பா?

‘ஆயிரங் கோத்திரங்கள்’ அல்லது ‘குடிகள்’ எனும் பழம்பெயர்கள் நமது ஆதார வித்துக்கள். இக்குடிகளைச் சார்ந்த ஒவ்வொரு தனி நபரும் முக்கியமானவர். தனிமரம் தோப்பு ஆவதில்லை; என்றாலும் தனி மரங்கள் இல்லாமலும் தோப்பு ஏற்படுவதில்லை. அத் தனித்தனி மரங்களே சேர்த்தமைந்து தோப்பாக அமைகின்றன. எனவே சமூக வளர்ச்சி பற்றிக் கருதும் போது தனிநபர் வளர்ச்சிக்குத் தலைமையிடம் தர வேண்டும். தனித்தனி வளையங்கள் சேர்ந்து சங்கிலி அமைகிறது; இதில் ஒரு வளையம் பலமற்றுப் போனால், அந்தச் சங்கிலி முழுவதுமே பயனற்றுப் போகும். நம் சமூகத்தில் தனி நபர் எனும் ‘வளையம்’ – சமூகச் சங்கிலிக்கே வலிமை தரும் வண்ணம் வனப்புற்று அமைந்துள்ளதா எனச் சிந்திப்போம்.

‘இன நலம் எல்லாப் புகழும் தரும்…’

‘வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை’ எனும் தமிழ் நெறிக்கு ஏற்ப, ‘வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி’ நம் சமூகம் அக்காலத்தில் செயல்பட்டது. சிறுசிறு ஊர்களில் சிதறி வாழ்ந்ததற்கு ஏற்ப சிறுசிறு வணிகத்திலே பெரும்பாலோர் ஈடுபட்டனர். சிலருக்கு வெளிநாட்டு வாணிபமும், பலருக்கு வேளாண்மையும் துணைநின்றன. கூட்டுக்குடும்ப அமைப்பே போற்றப்பட்டதால் வளரும் போதே நமக்கு ஒரு பாதுகாப்பு வேலி இருக்கிறது என்ற மனப்பான்மை ஏற்பட்டுவிட்டது. தீவிரமாகவும், துணிச்சலோடும் வளர முற்பட்ட சிலருக்கு இந்தப் பாதுகாப்பு வேலியே தடைப்படுத்தும் சுவராக அமைந்த போது அந்த வேலியைச் சிதைக்காமலே வளரும் உத்தி மிகச் சிலருக்கே தெரிந்தது; பிறர் அடங்கி இருந்துவிட்டனர். பல பொருள் சில்லறை வணிகம், ஆபரணத் தொழில் எனும் குலத் தொழில்கள், நம் இளைஞர்களுக்குக் கல்லாமலே பாகம்படும் கலை களாகக் கைவந்தமையால், மாறிவரும் சூழலுக்கு ஏற்ற படி தொழில் நுட்பக் கல்வியும் உயர்கல்வியும் பெறுவதைத் தேவையற்றதாகக் கருதிவிட்டோம். வசதி உடையவர்கள் கூடத் தம் பிள்ளைகளுக்கு மிக உயர்ந்த கல்வி தரத் தவறிவிட்டனர்.

குடி என்னும் குன்றா விளக்கம்

இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில், இரு தடவை சென்னை ஷெரிப்பாக உயர்பதவி வகித்த நம் குலத்தவரான திரு.பி.இராமசாமிச் செட்டியார் எனும் பெருந்தகை தம் மக்கள் நால்வரையும் மேலைநாட்டுக்கு அனுப்பி உயர் கல்வி பெறச் செய்தார். அவருடைய முதல் மகன் பி.இரத்தினவேலுச் செட்டியார் இந்தியருள் முதல் மிசிஷி அதிகாரியாகப் பட்டம் பெற்று வந்தார் எனும் வரலாற்றுப் பெருமையை நாம் அறியவும் இல்லை; அப் பெருமையைப் பின்பற்றி நடக்கவும் இல்லை. பிற சமூகத்தவர் உயர்கல்வி பெறுவதில் போட்டியிட்டு முன்னேறப் போராட்டங்கள் நடத்திய போது – அதற்கான கல்வி, வேலைவாய்ப்புச் சலுகைகளைப் பெற வரிந்து கட்டி நின்ற போது – நாம் முன்னேறிய சமூகமா அல்லது பிற்பட்ட சமூகமா எனும் ஆராய்ச்சியிலேயே தேங்கிவிட்டோம். அரசாங்க உத்தியோகம் பெறுவதற்காக நம்மைப் பிற்பட்ட குலத்தவர் ஆக்கிக்கொள்ள வேண்டுமா எனச் சர்ச்சை செய்து வந்தோம். ‘நம் பிள்ளை படித்துவிட்டு உத்தி யோகத்திற்கா போகப்போகிறான்? நமக்கு உள்ள சொந்தத் தொழிலைப் பார்த்தால் போதாதா?’ எனும் அசாத்திய நம்பிக்கையும் வறட்டு ஜம்பமும் காலத்தால் நேரிட்டு வரும் மாற்றங்களையும், தேவைகளையும் கணிக்கவிடாமல் செய்துவிட்டன. இன்று அரசு அலுவலில் பொதுவாகவும், உயர்பதவிகளில் சிறப்பாகவும் இடம்பெற்றுள்ள நம் மரபினர் யார் என்று தேடிப் பார்க்க வேண்டியுள்ளது.

காலம் கருதிச் செயல்

“ஒவ்வொரு சமூகமும், கலாச்சாரமும், நாடும் அவ்வப்பொழுது காலம் அளிக்கின்ற சில சவால்களைச் சந்திக்க நேரிடுவதே வரலாறு” என்பர் அறிஞர் பெருமக்கள். இந்தச் சவாலை எதிர்கொண்டு ஏற்கத் தயாராக இருக்கும் சமூகமும், பண்பாடும், நாடும் வளர்ச்சியுறும்; சவாலைச் சமாளிக்க முடியாதவை பின்தங்கிப் போகும்.

‘குடி செய்து வாழ்வார்…’

நாடு தந்த இந்தச் சவாலை நாம் தனி நபராகவும், சமூகமாகவும் ஏற்றோமோ என்பதைக் கருதிப் பார்க்க வேண்டும். தனி நபருக்கும் சமூகத்திற்கும் இடையில் இணைப்புப் பாலமாக உள்ள ஒவ்வொரு குடியும், குடும்பமும்  இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டதா என்பதையும் சிந்திக்க வேண்டும். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல கூட்டுக் குடும்பப் பாதுகாப்பும், நமது பொது அணுகுமுறையும் சவாலை ஏற்கும் சாதுரியத்தினை அளிக்கவில்லை. இருப்பது போதும் என்ற மனம், இழப்பீடு ஏற்படினும் துணிச்சலுடன் (ஸிவீsளீ) புதுத்துறைகளை நாட முன் வராமை, சமூகத்தில் ஓரளவு உயர்நிலையில் இருந்தவர்கள் பிற நலிவுற்ற குடும்பங்களைக் கைதூக்கிவிட முற்படாமை, அனைத்துக் குடும்பங்களையும் ஒருங்கிணைத்துக் கூட்டுறவாகத் தீர்வுகாண இயக்கம் இன்மை – இவையெல்லாம் காரணங்கள் ஆகும். ‘குடி செயல் வகை’ (103) எனும் அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ள குறள் நெறிகள் எல்லாம், வளர்ச்சியையும் நிலைபேற்றையும் நாடி நிற்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், சமூகப் பிரிவிற்கும் பொருந்தும் என்பது துணிபு.

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

     மடிதற்றுத் தான் முந்துறும்.”         (1023)

தளம் தோறும் தக்க தலைவர்கள்

ஒருவர் அல்லது ஒரு சிலர் முன் வந்து உழைக்க முற்பட்டாலே குடும்பமும் சமூகமும் உயர்வுறும் என்பதே வள்ளுவர் வகுத்த பாதை. இவ்வாறு உழைப்பதற்கு உரிய விசாலமான இருதயமும், உறுதியான உள்ளமும், உண்மையான நாட்டமும் கொண்ட நல்ல தலைவர்களை எல்லாத் தளத்திலும் நாம் உருவாக்க வேண்டும். இத்தகைய சமுதாயத் தலைவர்கள் சவாலை ஏற்கத் தாமும் சித்தமாக இருப்பார்கள்: தம்மைப் பின்பற்றும் சமூகத்தவரையும் தயார்ப்படுத்தி வைப்பார்கள்.

‘பேணுநற் குடிப் பெண்டிர்…’

இந்தத் தலைவர்களை உருவாக்குவதும், உருவாகி வந்தோரை உபயோகப்படுத்திக் கொள்வதும் அவசியம். நம் பிள்ளைகள் கல்வி பயிலும் காலத்திலேயே நம் சமூகப் பிரச்சினைகளில் அவர்களுக்கும் ஓரளவு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். பந்தயக் குதிரையைப் பழக்குவது போல அறிவுத் துறையிலும் உலகியலிலும் அவர்களுக்கு ஆன்ற பழக்கங்களை அளிக்க வேண்டும். அவர்கள் பெறும் கல்வி வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டும் இருக்கக் கூடாது. “பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்” என்ற பாரதி வாக்குப் போல, அனுபவக் கல்வியாகவும் தொழில்நுட்பக் கல்வியாகவும் இருத்தல் வேண்டும். எப்பாடு பட்டேனும் தரமான, தகுதியான கல்வியை நம் பிள்ளைகளுக்கு அளித்தல் வேண்டும். பெண் கல்வியை இதுகாறும் நாம் மிகவும் புறக்கணித்து விட்டோம்.

“ஒரு ஆண் மகனுக்குக் கற்பித்தால்

     அவனுக்கு மட்டுமே சொல்லிக் கொடுக்கிறோம்.

     ஒரு பெண் மகளுக்குக் கற்பித்தால்

     ஒரு சமுதாயத்திற்கே சொல்லிக் கொடுக்கிறோம்”

என்றார் காந்தியடிகள். நமது பெண்களுக்கு எல்லா நிலையிலும் கல்வியளிக்க முற்பட்டால் – நம் மாதர்களில் பலர் டாக்டர்களாக, எஞ்சினீயர்களாக, வல்லுநர்களாக உயர்ந்திருப்பர்; நம் சமூகத்தையும் உயர்த்தியிருப்பர்.

இன்று கல்வியளிப்பது என்பது சமூகக் கடமையாகவும் அரசின் பொறுப்பாகவும் மாறியுள்ளது. எனவே தனிக் குடும்பத்தவர் தம்மால் இயலவில்லை என்று சோர்ந்து விடாது சமூகமும், அரசும் நல்கும் உதவிக் கரங்களை இயன்றவரை பற்றிக் கொள்ள முற்பட வேண்டும்.

‘நிதி மிகுந்தவர் தாரீர்…’

சமூகத்தவர் கூட்டுறவாலும் தனி நபர் கொடைநலத்தாலும் ஆங்காங்கு சில கல்வித் தொண்டுகள் நடைபெற்று வந்தாலும் அவை பிறருக்கெல்லாம் வழிகாட்டும் எடுத்துக்காட்டான நிறுவனங்களாக அமையவில்லை. தமிழ்நாட்டில் நம் சமூகப் பெயரால் முதல் தரமான கலை மற்றும் விஞ்ஞானக் கல்லூரியும், பொறியியற் கல்லூரியும் நிறுவ வேண்டும் என நாம் மேற்கொண்ட முயற்சிகள் அப்படியே நின்றுவிட்டன. எனவேதான் இந்த மாநாட்டில் நிலைநிதி ஒன்றை உருவாக்கி கல்விப் பணிக்குக் கணிசமாக உதவி செய்வது எனத் திட்டமிட்டுள்ளோம். எளிமையினால் படிக்க முடியவில்லை என எவரும் ஏங்கிவிடாமல், தகுதியான பிள்ளைகளுக்கு உதவித் தொகை நல்க வேண்டுவது சமூகப் பொறுப்பு என உணர்ந்துள்ளோம். பொறியியல், மருத்துவம், சட்டம், வணிக ஆய்வு, நிர்வாகம், விரிவாக்கம் ஆகிய துறைகளில் எல்லாம் வாய்ப்புத் தேடி வரும் ஆற்றலுள்ள இளைஞர்களுக்கு உதவிட வழிவகை கண்டு வருகிறோம்.

களம் தோறும் காளையர்

“நூறு நல்ல இளைஞர்களை எனக்குத் தாருங்கள்; நான் இந்த நாட்டினை உயர்த்திக் காட்டுகிறேன்” என்றார் சுவாமி விவேகானந்தர். நம்மிடையே நல்ல இளைஞர்கள் ஏராளமாக உள்ளனர். இந்த இளைஞர்களை ஓர் இயக்கம் ஆக்கி, வல்லவர்களாக்கிட நாம் வழியமைக்க வேண்டும். சென்னை, சேலம், பரமக்குடி, மதுரை ஆகிய நகரங்களிலும் சிற்றூர்களிலும் நம் இளைஞர்கள் அவ்வப்போது ஆற்றி வரும் செயல்கள் பாராட்டத்தக்கன என்றாலும் இத்தொண்டுகள் தொடர்ந்து வர வேண்டும். இளைஞர்களுக்குப் போதிய உற்சாகம் தர வேண்டும். பெரியவர்கள் புறக்கணிக்கிறார்கள், பொறாமைப் படுகிறார்கள் எனும் புகைச்சல் ஏற்பட இடம் தரக்கூடாது.

‘உடன்பட்டும், ஊடுருவியும்…’

சர்வ தேச இளைஞர் நலம் போற்றப்படுவதன் பின்னணியைப் புரிந்து கொண்டு நம் இளைஞர்களை 21-ஆம் நூற்றாண்டின் தலைவர்களாக இப்போதே நாம் உருவாக்கி வர வேண்டும். நம் சமூக அமைப்பின் எல்லாத் தளங்களிலும் அவர்களுக்கும் பொறுப்பளிக்க வேண்டும்; பிற சமூகங்களோடு ஒத்துழைத்தும் உடன்பட்டும், தேவையானால் ஊடுருவியும் போட்டியிட்டும் நம் இளைஞர் உயர நல்லாக்கம் தர வேண்டும். மதுரை மாநாட்டில் இளைஞர், மகளிர் பங்கேற்கும் தனித்தனிக் கருத்தரங்குகளும், கல்வி, தொழில் எனும் செயலரங்குகளும் ஏற்படுத்தி இருப்பதன் நோக்கமே இவற்றைப் பாத்திகட்டி வளர்க்கத் தான் எனக் குறிப்பிட விழைகின்றேன்.

‘பதவியும் உதவியும்…’

நம் இளைஞர்களும் அன்பர்களும் சமூக அளவில் உழைப்பதோடு நின்றுவிடாது பிற சமூகத்தொண்டிலும் ஈடுபட்டு பெருமையும், புகழும் பெறுதற்கு முற்பட வேண்டும். பிறருக்கென வாழ்பவர் சிலராவது தோன்றினால் தான் பொதுச் சமுதாய வாழ்வில் மலர்ச்சியும், உயர்ச்சியும் தோன்றும். ‘அரசியல்’, ‘கட்சி அமைப்பு’ என்பன சனநாயகத்தின் இன்றியமையாத தூண்கள். நம்மில் பலர் அரசியல் கட்சிகளிலும் அமைப்புக்களிலும் தூண்களாகத் தலைமையிடம் பெற்றிட வேண்டும். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் நம்மவர் பல அரசியல் பதவிகளில் உள்ளனர் என்றாலும் அவர்களை இனம் கண்டு. சமூக அளவில் நாம் பாராட்டிக் கை கொடுக்க வேண்டும். பதவி வகிக்கும் பிரமுகர்களையும் நம் அமைப்புக்களுக்கு அழைத்து அறிமுகம் செய்து கொள்வது பயன் தரும். சுழற்கழகம், அரிமா சங்கம், ஜேசீஸ் முதலிய சமூகத் தொண்டு நிறுவனங்கள், வணிகக் கழகங்கள், தொழில் கூட்டுறவுகள் முதலியவற்றிலும் நாம் தீவிரப் பங்கேற்க வேண்டும். இந்த ஈடுபாடும் உறவும் (மீஜ்ஜீஷீsவீtவீஷீஸீ) நம் இளைஞர்களுக்குப் பேருதவி புரியும்.

75 சதமும், 25 சதமும்

சிறுசிறு வெற்றிகளில் திருப்தியடையாமல் பெரும் வெற்றி நோக்கில் பீடு நடை போட வேண்டும். சங்க இலக்கியம் சுட்டும் குறும்பூழ் வேட்டுவன் போலாது, யானை வேட்டுவன் போல முயலும் செம்மாப்பு வேண்டும். ‘உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்’ (குறள்:596) என்ற படி நாம் சமூக உயர்வுக்குத் திட்டமிடுகையில் பெரிதாகத் திட்டமிட்டுச் செயல்புரிய முற்படவேண்டும். இதுகாறும் குறுகிய அளவில் செயல்பட்டோம்; இனிப்பரந்து விரிந்த தளத்திற்கு வந்தாக வேண்டியுள்ளது. சிறுதொழிலாக, நடுத்தரத் தொழிலாக நடத்துவதால் பெரிய சாதனை ஏதும் ஏற்பட்டுவிடாது. அரசும், வங்கிகளும் அளிக்கும் சலுகைகளுடனும் தனிநபர், கூட்டு முயற்சிகளுடனும் பெரிய தொழில்களை நிறுவும் சாத்தியக் கூறுகளைச் சிந்திக்க வேண்டும். றி.ஷி.நி., ஜி.க்ஷி.ஷி. போன்ற நிறுவனங்களை நம்மாலும் உருவாக்க முடியுமா என ஆலோசிக்க வேண்டும். தொழில் துறையில் முன்னேற 75 சதவீதம் பாதுகாப்பும் 25 சதவீதம் துணிச்சலும் வேண்டும். அந்த 25 சதவீத அருஞ்செயல் முனைப்பே அனைத்து ஆக்கங்களையும் தரும் என்பதை நம்மவர் உணர வேண்டும். அத்தகைய அருஞ்செயலால் பெரியதொரு நிறுவனமோ தொழிற் சாலையோ ஏற்பட்டுவிட்டால், அதன் ஒளியை நாடித் தொழில்நுட்பக் கல்வியினரும் ஆர்வலரும் வர முற்படுவர். பல குடை நிழலையும் தன் குடைக் கீழ்க் கொணரும் ஆலமர அமைப்பு ஒன்று அவசியம் நம்மவரால் உருவாக்கப்பட வேண்டும். அதன் விழுதுகள் ஆயிரங்கால் மண்டபம் போல கால வெளியில் நிற்கவேண்டும் என்பதே நம் செயல்திட்டம். நீண்ட காலப் பயன் தரும் இத்தகைய தொழிலாக்கங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உருவாக்கித் தர மதுரை மாநாடு வழிகாட்டும் எனத் துணிகிறேன். கீரைப் பாத்தி போட நிலத்தைக் கிளறாமல், தென்னந்தோப்பு வைக்கப் பெருங்குழி போடும் பெரு நினைப்பும், எதிரதாக் காக்கும் அரணும் இம்மாநாட்டில் வலுப் பெற்றிடும் என எதிர்பார்க்கின்றேன்.

‘பரவியும் சிதறியும்…’

‘வெள்ளத்து அனைய மலர் நீட்டம்’ (குறள்:595): நம் உள்ளமெல்லாம் ஓங்கி வளரும் வெள்ளமாக விளங்குவது நம் சமூகம். நாம் தமிழகம் எங்கணும் பரவியும் சிதறியும் ஆங்காங்கு வாழ்கிறோம். எனவே நம் நிலையை உணரவும் வலிமையை உயர்த்தவும் முற்பட வேண்டும். அவ்வாறு செய்வதற்குச் சமூகச் சங்கங்கள் பெரும் துணை புரிய வேண்டும். இப்போது சிறுசிறு அளவில் நடக்கும் முயற்சிகள் பேரளவில் வடிவெடுக்க வேண்டும் என்பதற்காகவே மாநாடுகளைக் கூட்டுகிறோம். இத்தகைய மாநாடுகள் நமக்குப் போலியான, பொய்யான பிரமைகளையும் நம்பிக்கைகளையும் தோற்றுவித்து விட்டு நம் குறைகளை மூடி மறைத்துவிடக் கூடாது. ஏதோ ஒரு கடமைக்குச் செய்வதற்கோ கூடிக் கலைவதற்கோ ஏற்பட்டதல்ல இம்மாநாடு. ஒரு வலுவான சமுதாயமாக உருவாகி வருகையில் நம்மைப் பின்னுக்கு இழுக்கும் பழமைப் போக்கையும் பத்தாம் பசலித்தனத்தையும் கைவிடத் துணிய வேண்டும்.

நோய் நாடி…

வரதட்சணை எனும் சமூக நோய் பிற சமூகங்களைப் போல நம் சமூகத்தையும் விடாப் பிடியாகப் பற்றிக் கொண்டே இருக்கிறது. இதன் விளைவுகள் பற்றி நாம் விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை. இது நோய் என்பதை அறிவோம்; இதன் தீமைகளையும் அறிவோம். ஆனால் அதைக் கைவிட மட்டும் துணியோம். இப்பேதைமையில் இருந்து நாம் விடுபட வேண்டும். நாம் விடுபடுவதோடு நம் பெண்களையும் இவ்விலங்கிலிருந்து விடுதலை செய்யவேண்டும். படிப்பு, தொழில் பங்கேற்றல், சமூகத் தொண்டு, அரசியல் பணி ஆகியவற்றில் பெண்களுக்கும் சம உரிமையும் சமூக அந்தஸ்தும் அளிக்க வேண்டும்.

இணக்கமாக…

நம் பிரிவுகளிடையே இன்னும் பொலிவு தரும் இணக்கம் காணாதிருப்பது மற்றும் ஒரு குறை, ஆயிர வைசியரில் உள்ள 18 பிரிவினரும் ஒரே வழியினர், வகையினர் எனும் உணர்வோடு திருமண உறவுகள் பூண வேண்டும். இவ்வகையில் வழிகாட்டி வரும் குடும்பங்களுக்குப் போதிய ஆக்கம் அளிக்க வேண்டும். இதனால் நாடு தழுவிய பெரும் மரபினர் எனும் பெருமை வந்து சேரும்.

பெருமை நல்கும் பேரமைப்புக்களான நிதி நிறுவனங்கள், வங்கிகள் முதலியவற்றை அப்போதே நிறுவாமல் இருந்து விட்டோம் எனும் குறைகளைப் போலவே ஏற்படுத்தியுள்ள தொடர்பு அமைப்புக்களைச் சரிவரப் பயன்படுத்தாமையும் குறையே ஆகும்.

தொடர்பு காண்போம்

அவற்றுள் ஒன்று – நம் சமூக இதழான ‘ஆயிர வைசியன்’ – மற்றொன்று ‘ஆயிர வைசிய சங்கம்.’ ‘ஆயிர வைசியன்’ இதழை – நம் இல்லந்தோறும் வாங்க வேண்டும். நம் எண்ணங்களை அதில் எழுத வேண்டும். ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள உதவும் உறவுப் பாலமான அந்த இதழை எல்லா வகையாலும் பலப்படுத்தவேண்டும்.

இது ஆலமரம்!

இணக்கமும் ஏற்றமும் நம்மிடையே ஏற்பட்டால் மட்டும் போதுமா? அது நம் நாட்டில் உள்ள பிற சமுகத்தவரோடு நாம் காணும் தொடர்பிலும் மணக்க வேண்டும். கலை, பொருளாதார, சமூக வளர்ச்சி கருதி நாட்டில் தீட்டப்பெறும் திட்டங்களில் எல்லாம் நாம் ஈடுபடவேண்டும். நமக்கும் அதில் பொறுப்பும், பங்கும் உண்டு என்பதை மெய்ப்பிக்க வேண்டும். இதனால் பிற சமூகத்தவரின் போற்றுதலுக்கும் அரவணைப்புக்கும் இடம் தரும் இங்கிதம் இயல்பாக ஏற்படும்.

நாம் உயர நாடு உயரும்!

வாணிகப் பெருமக்கள் ஒரு நாட்டின் நாடி நரம்புகள், வளர்ச்சி பெறும் பெரியதொரு வல்லரசான நம் நாட்டின் நலத்திற்கெல்லாம் ஆக்கம் தர அயராது செயல்படும் குருதியோட்டங்கள். வரப்புயர எனப் பாடிய ஔவைப் பெருமாட்டி போல, ‘நாமுயர நாடுயரும் – நாடு உயர நாமும் உயர்வோம்’ எனும் பெருநினைப்புடன், பெரு மகிழ்வுடன் ஆயிர வைசிய சமூக அமைப்புக்களுக்குப் பல்லாண்டு இசைக்கின்றேன். இச் சமூகத்தவரின் வருங்கால வளர்ச்சியை, வளமான பொற்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

நிறைவுப் பகுதி

அன்பர்களே! நாம் அனைவரும் இம்மாநாட்டுப் பயனாக நம் சமுதாயத்தின் பெருவளர்ச்சிக்குப் பாடுபடுவோம். அறப்பயிர் வளர்ப்போம். நாள்தோறும் நல்லவைகளை ஆராய்ந்து செயல்படுவோம். நல்லோர் துணையோடும் வல்லார் பரிவோடும் நன்மைகளை நாடிச் செய்வோம். அதனால் நம் சமுதாயம் நலம்பெறும்; முன்னேற்றப் பாதையில் ஒளிமிக்க சமுதாயமாகவும் திகழும்!

 

மெய்யுணர்தல்

உலக மக்கள் பலர் ஒருவகை மயக்கத்தோடு, என்றும் நிலைபெற்று நில்லாதவற்றை, ‘நிலை’ என்று உணர்ந்து வாழ்கின்றார்கள். செல்வம் வேண்டும், உடல் நலம் வேண்டும், இன்பம் வேண்டும். ஆனால் இவைகள் எல்லாம் மாறும் இயல்புடையவை. ஆதலின் நிலைக்காத செல்வத்தை நிலைக்கச் செய்ய செல்வத்தின் பயனை நிலைக்கச் செய்யும் வகையில் அறச்செயல்கள் செய்தல் வேண்டும். உடம்பு நிலைக்காவிட்டாலும், உடம்பால் செய்த நற்செயல் பலன் நல்கும். ஆதலின், வாழ்கின்ற காலத்திலே, இயன்ற வகை யெல்லாம் மனத்தால், சொல்லால், செயலால் அறப்பணிகள் ஆற்ற வேண்டும்.

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

     செல்லும் வாயெல்லாம் செயல்”      (33) 

எது இன்பம்? எது மகிழ்ச்சி? எது துன்பம்? பொறிபுலன் நுகர்ச்சிகள் இன்பத்தைத் தருகின்றன. இவ்வின்பங்கள் எளிதாகக் கிடைத்துவிட்டால் அவைகள் சாதாரணமானவை களாகத் தெரிகின்றன. மீண்டும் கிடைக்காத பொருள்களில் ஏக்கம், கிடைக்காவிடின் அவைகளால் துக்கம், பொய்யான கனவுகள், நிறைவேறாத ஆசைகள், கோபம், பொறாமை, கடுஞ்சொல் இவையெல்லாம் துன்பத்தைத் தருகின்றன.

இத்துன்பங்களை வெல்லும் வழி என்ன? வாழ்வு, இரவும் பகலும் போல இன்ப துன்பங்கள் நிறைந்தது. வாழ்நாள் நிலையாமை என்னும் விதிக்கு உட்பட்டது. வாழ்வில் துன்பங்கள் இயற்கை ஆனவை என்ற மன உறுதியை மேற்கொண்டால், துன்பமே ஒரு சுவையாக, இன்பமாக மாறிவிடும்.

“இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்

     ஒன்னார் விழையும் சிறப்பு”          (630)

என்பார் வள்ளுவர். துன்பத்தையும் எதிர்நோக்கி, அதனை இன்பமாகக் கொள்பவனை, பகைவர்களும் விரும்பிப் போற்றுவார்கள் என்பார் அவர்.

இந்தப் பக்குவம் எப்போது ஏற்படும்? நிலையாமை பற்றிய அறிவு, எது மெய், எது பொய் என்று ஆராயும் அறிவு எப்போது ஏற்படும்? விதிவிலக்காக ஒரு சிலருக்கு இளமையிலே, இத்தகைய மெய்யறிவு வாய்க்கும் என்றாலும், பலருக்கு வயது முதிர முதிர மெய்யறிவு முகிழ்க்கும்; அகம் விரிவடையும்; பற்றற்ற பெருநிலையே அவர்களது ஆனந்த வாழ்வாக, அல்லல் நீக்கிய வாழ்வாக விளங்கத் தொடங்கும்.

குடும்பக் கடமை முடிந்தவுடன் அறச் செயல் செய்ய நாட்டம் பிறக்கும். பெருந்துன்பத்திற்குக் காரணமாகிய இப்பிறவியை வேரறுக்க மனம் நாடும். இறைவனை மறவாத நெஞ்சமாய் “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தான் வாழ்க!” என்ற பக்திப் பெருக்கு ஏற்படும். நெஞ்சம் கனியும், அன்பு பெருகும், அருள் சுரக்கும். இன்ப துன்பங்களைச் சமமாக மதிக்கும் ஆற்றல் பிறந்து விடும். வையத்துள் வாழ்கின்ற போதே, வாழ்வாங்கு வாழும் பேறு கிடைக்கும்.

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

     செம்பொருள் காண்பது அறிவு” (358)

என்ற தெளிவும், நிலைத்த, அழியாத, தூய இன்பப் பொருளை, செம்பொருளை அறிவால் காணும் ஆற்றலும் கிடைக்கும்.

அன்பு நலம் சான்ற பெரியவர் திரு.மகாலிங்கம் அவர்கள் மணிவிழாக் காணும் பெருமை பெற்றுள்ளார்கள். அரசுப் பணியில் படிப்படியாக உயர்ந்து உதவி ஆட்சியராகப் பணியாற்றியவர். எல்லோருக்கும் இனியராய், நல்லனவே எண்ணும் பண்பாளராய், புன்னகை பூத்தவராய், இயன்ற வரையில் அன்போடு பிறருக்கு உதவும் உயர்ந்த பண்பினராய், தமிழ்நாடு ஆயிர வைசிய சங்கத்தின் மாநாட்டு மதிப்புறு வரவேற்புத் தலைவராய் சீரிய பணியாற்றும் அன்பராய் சிறப்புப் பெற்றவர்.

“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

     பண்புடை யாளர் தொடர்பு”         (783)

என்ற வள்ளுவரது இலக்கணத்திற்கு ஏற்ப வாழ்ந்து வரும் அவர், அன்னை அருள்மிகு மீனாட்சி – சுந்தரேசுவரர் அருளால் பல்லாண்டு வாழ்க! மேலும் பல நற்பணிகள் ஆற்றுக.

தமிழிசையும் தமிழர் இசையும்

Image result for tamilar isai

மின்னல் மறைவதைப் போல, நேற்றிருந்த மாமலை திடீரென இன்று மறைந்து போனால் எப்படி இருக்கும்? கரையுடைத்துப் பெருகியோடும் காவேரி நதி ஒரு நாள் வற்றிப்போனால் எப்படி இருக்கும்? அப்படியொரு அதிர்ச்சி நிலை நமக்குச் சென்ற மார்ச் மாதம் ஏற்பட்டது. இமயமாய் இசை உலகில் நின்றவரும் காவேரி போல் கான மழை பொழிந்தவருமான இசைமணி, டாக்டர் சீர்காழி கோவிந்தராசனாரின் அகால மரணம் தமிழிசை உலகில் ஈடுசெய்ய முடியாததொரு வெற்றிடத்தினை, வேதனையினை ஏற்படுத்திவிட்டது!

கணீர் என்ற கம்பீரமான குரல்; சாகித்தியங்களைப் பொருள் விளங்கப் பாடும் மிடுக்கு; இராக ஆலாபனைகளில் தமக்கே உரியதொரு எடுப்பு; சுர விஸ்தாரம் முதலிய நுண்ணிய துறைகளில் தனி முத்திரை – என இவற்றோடு கேட்டோரை மயங்கிக் கிறங்கவைக்கும் குழைவு… இவையெல்லாம் சீர்காழி எனும் இசை இமயத்தின் பல்வேறு சிகரங்கள்! அவர் கர்னாடக சங்கீதம் கை வந்த கலைஞர் எனினும், தமிழிசைக்கே. தலைமையிடம் தந்து அரங்கெல்லாம் முழங்கினார். பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப்பாடும் இசை வல்லுநர்களில் அவர் தலைசிறந்து விளங்கினார். தமிழிசைக்குப் பேரூக்கம் நல்கிய ‘கலைப்புரவல’ராக விளங்கினார்.

“இயற்கையிலே கருத்தாங்கி, இனிமையிலே வடிவெடுத்துச்

     செயற்கை கடந்து இயலிசையில் செய்நடமாக”

வாழ்வு பெற்ற முத்தமிழில் இசைக்குச் சிறப்பிடம் தொன்றுதொட்டே உள்ளது. ‘தமிழோடு இசை பாடல் மறந்தறியாத’ இந்தச்சிறப்பு நிலை தமிழ்மொழிக்கு இருப்பது போல, தமிழர்களாகிய நம்மிடம் இசையுணர்வு நீங்கா நிலையில் இருப்பதில்லையே எனச் சீர்காழியார் அடிக்கடி குறைப்படுவார். அவர் மனக்குறையில் நியாயம் உண்டு. தமிழிசையை மதிப்பதில்லை; போற்றுவதில்லை. மேனாட்டு, வடநாட்டு இசை வடிவங்களுக்கெல்லாம் – நிகரான – மேலான – தூய இசை வடிவம் பெற்றிருந்தும், பிற இசை வடிவங்களைப் போற்றுவதே பெருமை என நினைக்கும் கலைஞர்கள் நம்மிடையே ‘புகழோடு’ உலாவுகின்றனர். அவர்கள் தாம் பங்கேற்கும் கச்சேரிகளில் தமிழ்ப் பாட்டுக்களை துக்கடாவாகக் கடைசியில் பாடி முடிப்பர். தம் இசை ஞானத்தைப் புலப்படுத்தும் களமாகத் தமிழிசையைக் கருதாமல், தமிழிசையில் என்ன இருக்கிறது எனும் அலட்சிய பாவனையில் இரண்டு பாட்டுப் பாடுவர், ரசிகர்களும் அப்படியே இருந்தனர்.

இக்கொடுமையை, மடமையை எதிர்த்து தமிழிசை இயக்கம் தோன்றியது. தமிழ் இன, மொழி உணர்வுகளுக்கு எல்லாம் முன்னோடியாகத் தமிழிசை இயக்கமே முதலில் களம் காணப் புறப்பட்டது. மதிப்பிற்குரிய பெருந்தகை, செட்டிநாட்டரசர், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களும் அறிஞர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் முதலியோரும் தமிழிசைக்கு உரிமையிடம் வேண்டிப் போராட்டம் தொடங்கினார்கள். தமிழிசை இயக்கம் ஆக்கம் பெற்றது. ஆலயங்களில் எல்லாம், ஆண்டவன் சன்னிதானங்களில் எல்லாம் அருந்தமிழோசை பரவும் மறுமலர்ச்சி ஏற்பட்டது.

இந்த மறுமலர்ச்சியின் விடியலில், பூபாளம் இசைக்கப் போந்த அருங்கலைஞர் சீர்காழி கோவிந்தராசனார். அவர் இசை பயிலத் தொடங்கிய காலந்தொட்டே எதிர்நீச்சலிட்டு, உழைப்பால், உயரிய இலட்சியத்தால் படிப்படியாகப் பாடிப் பாடி முன்னேறினார். இசை ஞானம் என்பது பிறவிப்பயன், அதில் பேரும் புகழும் அடைவது என்பது சிலருக்கே கிட்டும் வரப்பிரசாதம். பிறவிப்பயனால் இசையுணர்வு பெற்ற கோவிந்தராசன், முறைப்படி சிட்சை பெற்றார். குருகுல முறையில் தவமிருந்து இசை ஞானத்துக்கு மெருகூட்டிக் கொண்டார். தம் சிறிய தந்தையார், சினிமா உலகம் பி.எஸ்.செட்டியாரின் நிழலைத் தொடர்ந்து அறிமுகமும் ஆக்கமும் பெற்றார்.

தமிழ்நாட்டில் இசை உலகம் போட்டி மிகுந்ததொரு போராட்டக் களம். பெரிய பெரிய வித்வான்களைக் கூட அமுக்கிவிடும் அமைப்புக்கள் பல உண்டு. சர்வ சாதாரணங்களை ‘ஆகா, ஓகோ’ என விமரிசனம் செய்து தலையில் தூக்கிக் கூத்தாடும் விமர்சகர்களும், பத்திரிக்கைகளும் உண்டு. இவற்றையெல்லாம் மீறி, பிரபலமானார் சீர்காழியார் என்றால் அது எவ்வளவு மகத்தானதொரு அசுர சாதனை என்பதை வரலாறே விவரிக்க முடியாது. கால் நூற்றாண்டுக்கு மேலாக, அவர் மேற்கொண்டதொரு வேள்வியே அவருக்குப் புகழை ஈட்டித் தந்தது. நாட்டின் பல்வேறு அமைப்புக்கள், தாமாக முன்வந்து அவரைப்  பாராட்டி, தாம் பெருமை பெற்றன. இமய மலையின் உன்னத சிகரம் போல அவர் உயர்ந்து கொண்டே வந்த தருணத்தில் காலனின் பார்வை பட்டுவிட்டது.

சாவு என்பது உலகியற்கை. ஆனால் யாருக்குச் சாவு? எப்போது சாவு?… என்னும் சஞ்சலங்களால் சூழப்படும் சாவு… நம் நெஞ்சத்தில் தீராத துயரை, ஆறா அவலத்தை உருவாக்கிவிடுகிறது “நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் அரிது” (குறள்:235). வித்தகர் என வள்ளுவப் பெருந்தகை கூறியது போல, சீர்காழி கோவிந்தராசனார் சாவையும் வென்ற வித்தகராக விளங்குகிறார். அவரது வித்தையின் நுட்பம் எஞ்ஞான்றும் விளங்கும். அவரது வழி நின்று, அவரது புதல்வர், திரு.சீர்காழி சிவசிதம்பரம் முன்னணிக்கு வந்துள்ளார். தகப்பனாரின் புகழொளியோடு மகனும் ஒளிசேர்ப்பது அரிதாக அமையும் இறையருள். இந்த இறையருள் பெற்றுள்ள திரு.சிவசிதம்பரம் தம் தந்தையார் தமிழிசைக்கு ஆற்றிவந்த தொண்டுகளைப் போல் தாமும் செய்து,

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

     மன்னுயிர்க்கு எல்லாம் இனிது”       (68)

எனும் குறள் நெறிக்கு இலக்கணமாக அமைவார் என நம்புவோம்.

டாக்டர் சீர்காழி கோவிந்தராசனாரைப் பற்றி நினைக்கும்  இத்தருணத்தில், தமிழர்க்கு இசையில்லையே என மனக்குறைபட்ட அவரது வருத்தத்தைக் கருதும் இவ்வேளையில், தமிழிசை இயக்கம் பற்றிய சில சிந்தனைகளையும் நினைப்பது தகும்.

தமிழிசையில் பயிற்சி முறையினையும் பரப்பும் நெறியினையும் நவீனப்படுத்த வேண்டும். தமிழிசைக்கெனச் சில நிறுவனங்களும் கல்லூரிகளும் உள்ளன. என்றாலும் இவை சடங்கு, சம்பிரதாயம் போலவே காலமெல்லாம் பணியாற்றி வருகின்றன. தமிழிசையினை மக்கள் இயக்க மாக்கும் மாபெரும் சாதனை இன்னும் கை கூடவில்லை.

மேனாடுகளில் இசைப்பயிற்சியினை, பாடத்திட்ட மாக்கித் தொடக்கப்பள்ளி முதல் பயனுறும் வகையில் கற்பிக்கின்றனர். அத்தகைய நன்முயற்சிகள் நம் நாட்டில், தமிழிசைக்கு இதுவரை ஏற்படாமை மிகவும் வருந்தத்தக்கது. அடிப்படை இசை அறிவு இளமையிலேயே ஏற்பட வகை துறை ஏற்பட்டால், அது காலப்போக்கில் வளர்ந்து, மக்கள் இயக்கமாகும் வழி தானே அமையும். அதுவரை நம் சாஸ்திரீய சங்கீதம் என்பது அறைக்குள்ளே நாலுபேர் கூடித் தலையசைக்கும் பொம்மலாட்டமாகவே கால மெல்லாம் நீடிக்கும். பொதுமக்களுக்கும், தமிழிசைக்கும் தொடர்பில்லாமலே போய்க் கொண்டிருக்கும். இத்துறையில் தாராளச் சிந்தையும், கொடையுணர்வும் கொண்ட தனிநபர்களும் நிறுவனங்களும் நற்பணியாற்ற நிறைய இடம் உள்ளது. தமிழிசையைப் பரப்புவதற்கென்றே அறக்கட்டளைகளை அமைத்து வான்புகழ் பெற வாய்ப்பு உள்ளது.

தமிழிசைத் துறையில் இதுவரை எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. புதுமைகள் செய்து பார்க்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் காதிலே பட்டுக் காற்றோடு போய்க்கொண்டே இருக்கின்றன. மேலைநாடு களிலும் சிறிது காலத்துக்கு முன்னர் வரை அப்படித்தான் நடந்தது. புதிய விஞ்ஞானக் கருவிகள் வந்த பின்னர், அங்கே பழைய, பாரம்பரிய இசை வடிவங்களையும் கோலங்களையும் பேணிவைப்பதில், வகை, தரம், துறை பிரித்துக் காட்டுவதில், காப்பதில் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளனர். பதிவு நாடா (டேப் ரிக்கார்டர்), கணிப்பொறி (கம்ப்யூட்டர்), வீடியோ முதலிய கருவிகள் வந்த பின்னர், கிடைத்துள்ள ஆவணங்கள் அங்கே சிறப்புடன் பராமரிக்கப் படுகின்றன. ‘கல்யாணி’ எனும் ராகத்தை எடுத்துக் கொண்டால் அந்த ராகம் காலப்போக்கில், இந்த இந்தக் கலைஞரின் கற்பனையால், இந்த இந்த மாற்றங்களைப் பெற்றுப் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது எனப் புதிய தலைமுறையினர்க்குச் சொல்லக்கூடிய சேமிப்புமுறை (டாக்குமெண்டேசன்) நம்மிடம் உண்டா? மேனாட்டாரிடம் ஏராளமாக உண்டு. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் புதுப்புது ஆராய்ச்சிகளைச் செய்யும் உற்சாகமும் உண்டு; தாராளமாக உண்டு. நம் நாட்டில், நம் தமிழிசைக்கு அத்தகைய வழிவாய்ப்புக்களை ஏற்படுத்தித் தர முற்பட வேண்டும்.

தமிழசைக்கென தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள மதுரைத் தமிழிசைச் சங்கத்தின் புகழார்ந்த ராஜா முத்தையா மன்றத்தில் தமிழிசைக்கென ஒரு பதிவு நாடாப் பெட்டகம் அமைய வேண்டும். வானொலி, தொலைக்காட்சி, இசை மன்றங்கள், கல்லூரிகள் ஆகியன இணைந்து புதிய பரிசோதனைகளைத் தொடங்க வேண்டும். தமிழிசையை மக்கள் இயக்கமாக்க வேண்டும் என வாழ்நாள் எல்லாம் பாடுபட்ட சீர்காழி கோவிந்தராசனார் போன்ற இசைப் பேரறிஞர்கள் கண்ட கனவு அப்போது நனவாகும். பிற இசை போல, தமிழர்க்கும் இசை உண்டு எனும் நம்பிக்கை நம்மிடையே உருவாகும்.

தேமதுரத் தமிழ் இசை தமிழர் இல்லங்களில் எல்லாம் ஒலிக்க வேண்டும். திருக்குறள், சங்கப் பாடல்கள், மற்றும் தலைசிறந்த பாடல்கள் எல்லாம் எளிய சந்தங்களில் பாமரர்க்கும் பொருள்புரியும் வகையில் எளிய இனிய இசைப்பாடல்களாகப் பெருக வேண்டும். தமிழ் இசை, தமிழர் மனங்களையெல்லாம் இசையச் செய்து, இசைபட வாழச்செய்து, தமிழரை உலகெல்லாம் போற்றும் ஆற்றல் பெற வேண்டும்.

தமிழ் இசை தமிழர் இசையாக வாழ்க!