இன்பம் பயக்கும் வினை

செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை’

துணிவுள்ள மனம் துன்பம் வந்தபோதும் கலங்காது. துணிவுள்ள நெஞ்சம் அஞ்சாமை உடையது; ஊக்கமும். உறுதியும் உடையது. அறிவும், கல்வியும் இருந்தும் பலர் வெற்றிபெறாது தோற்பதன் காரணம் துணிவின்மையே. செயல்களைச் செம்மையாக எளிதில் முடிக்கத் துணையாக இருப்பது துணிவே.

செயல் செய்யும்போது, தொழில் ஆற்றும்போது, உண்மைகளை அஞ்சாது சொல்லிச் செயல்படுத்தும் போது, துன்பங்கள் நேர்வது இயற்கை. முடிவில் இன்பம் தரும் செயலானால் துன்பங்கண்டு மயங்கவோ, கலங்கவோ வேண்டியதில்லை. ஆகவேதான், அச்சமின்றி, எழுச்சியோடு ‘செய்க செயலை’ என்று வலியுறுத்துவார் வள்ளுவர்.

‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ என்றாலும், அஞ்சுவதற்கு அஞ்சவேண்டும். பழி, பாவங்கள், தீமைகள் கண்டு அஞ்சவேண்டும் என்றாலும், துன்பங்கருதி நற்செயல்கள் செய்ய அஞ்சவேண்டியதில்லை. தன்னலங்கருதி பாதகம் செய்பவர்களைக் கண்டு பயம் கொண்டு வாழ்ந்தால் தனிவாழ்வும், சமுதாயமும் படிப்படியாகக் கெட்டு சீர்குலைந்து விடும். கல்வியும், அறிவும் பெற்றவர்கள் அச்சத்தாலும், தன்னலத்தாலும், அக்கறையின்மையாலும் தீமைகளை எதிர்க்காமலும் தவறுகளும் இயற்கையானவை என்று நியாயப்படுத்தியும் வாழ்ந்தால் நாடு சீர்கேடுறும்.

நெஞ்சில் உறுதியின்றி, நேர்மைத்திறனுமின்றி ஆற்றல் இருந்தும் அச்சம் கொண்டு வாழ்ந்தால் இதுவே எல்லாத் தீமைகளுக்கும், பாவங்களுக்கும் அடிப்படையாக மாறிவிடும்.

கற்றவர்களிடம் உள்ள காரணமற்ற அச்சமும், பயமும் நீங்கினால் மக்களிடையே நிலவும் அறியாமையாகிய வறுமை நீங்கும். மக்களும் சரியான வழி நோக்கி வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். கற்றவர்கள் உண்மைகளைத் துணிவோடும், தெளிவோடும் விளக்கிக் கூறும்போது – அவசியமானால் இடித்து எடுத்துரைக்கும் போது – நாட்டு மக்கள் எழுச்சியுற்று விழிப்படைவார்கள்; அறநெறிகள் தழைக்கும்.

அறத்தோடு கூடிய செயல்களைச் செய்யும்போது முதலில் துன்பம் நேரிட்டாலும், முடிவில் அச்செயல் இன்பம் பயக்கும். துணிவே வெற்றியை அளிக்கும்.

“துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி

 இன்பம் பயக்கும் வினை”          (669)

பேராற்றல் படைத்த மனிதன் தன் ஆற்றலை உணர வேண்டும்.

“வலிமை படைத்தோர் வாழ்வுக்கு உரியவர்”

என்று கூறுகிறது கீதை.

“உள்ளம் உடைமை உடைமை”

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

 திண்ணிய ராகப் பெறின்”           (666)

என்று மனிதனின் வலிவையும் பேராற்றலையும் வியந்து பேசுவார் வள்ளுவர்.

ஆகவே அரிய காரியம் என்று அயர்ந்துவிடாமல், ஊக்கத்துடன் துன்பம் கண்டு அஞ்சாது அரும்பெரும் காரியங்களைச் சாதிக்க வேண்டும்.

மனித உயிர்களை அன்போடு நேசித்து, ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ என்று உணர்ந்து, என்பும் பிறருக்கு உரியதாக்கி, அன்புற்றமர்ந்து, தொண்டு செய்து, இன்புற்று இனிது வாழ்வோம்.

கைம்மாறு வேண்டாக் கடப்பாடு’

Image result for family drawing

நல்லறம் போற்றும் இல்லறத்தின் தலைவன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகளாகத் திருவள்ளுவர் சிலவற்றை வகுத்துத் தருகிறார். இல்லறத் தலைவன் அன்புடையவனாகவும், நல்வழியில் நடக்க கூடியவனாகவும் இருத்தல் வேண்டும். அவனது முதல் கடமை பொருள் ஈட்டுதல், அதனை நேர்மையான வழியில் ஈட்டவேண்டும். தான் ஈட்டிய பொருளை ஏனையோர்க்குப் பகுத்துக் கொடுத்து உதவுதல் வேண்டும்.

“ஒற்றைக் குடும்பந் தனிலே – பொருள்

 ஓங்க வளர்ப்பவன் தந்தை”

என்பார் பாரதியார். ‘பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளை’ அருளோடும் அன்போடும் ஈட்ட வேண்டும்.

“செய்க பொருளை; செறுநர் செருக்குஅறுக்கும்

 எஃகுஅதனின் கூரியது இல்”        (759)

என்று பொருளின் அவசியத்தை வலியுறுத்துவார் வள்ளுவர். தமது கடின முயற்சியால் தேடுகின்ற பொருள் தீயவழியில் வருவதாக இருக்கக் கூடாது வாழ்க்கைக்குப் பொருள் மிக முக்கியம். அதனை நல்ல வழியில் தேடுதல் வேண்டும்.

“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

     தீதுஇன்றி வந்த பொருள்”           (754)

ஒரு குடும்பத் தலைவனுக்கு அழகு நேர்மையான வழியில் பொருளீட்டுவதும் ஈட்டிய பொருளின் ஒரு பகுதியை வறியவர்க்கு ஈவதும். அற்றார் அழிபசி தீர்க்கும் வகையில் கைம்மாறு வேண்டாக் கடப்பாடுடன் உலக நடைமுறையறிந்து எல்லோர்க்கும் பயன்படும் வண்ணம் பகுத்துக் கொடுத்தலும் இல்லறத் தலைவனின் கடமைகள்.

இல்லற வாழ்வை இனிமையாக்க வந்துள்ள வாழ்க்கைத் துணையான மனைவியிடம் அன்பின் பாத்திரமாக இருந்து அவள் தேவையறிந்து பேணிப் பாதுகாப்பவனாகத் தலைவன் இருக்க வேண்டும்.

“சான்றோன் ஆக்குவது தந்தைக்குக் கடனே” எனும் பொன்முடியார் வாக்கிற்கு இணங்க அறிவுள்ள மக்களைப் பெறுவதும் அவ்வாறு பெற்ற மக்களை நல்ல கல்வி கேள்விகளில் சிறக்கச் செய்து கற்றோர்தம் அவையில் முதன்மைப் பெறச் செய்வதும் தந்தையின் கடமைகள் ஆகும்.

“தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து

     முந்தி யிருப்பச் செயல்”        (67)

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

     மன்னுயிர்க்கு எல்லாம் இனிது” (68)

என்பது போல தம்மை விட அறிவிலும், ஆற்றலிலும் உலகம் மதித்துப் போற்றும் வண்ணம் வளர்த்தலும் பெற்றோரின் கடமை ஆகும்.

இல்லது என் இல்லவள் மாண்பானால்?’

இல்லது என் இல்லவள் மாண்பானால்?’

பெண்மை உலகில் வாழும் உயிரினங்களுக்கு நன்மை வழங்குவது. பேரறிவும் பேராற்றலும் கொண்டது. அழகிய உருவகம், அன்பின் ஊற்று, பண்பின் இருப்பிடம். அனைத்து உயிர்களுக்கும் அன்னையாய் விளங்குவது போன்ற பெருமைகளையுடைய பெண், இல்வாழ்வுக்குத் தலைவியும் நல்ல துணையும் ஆகிறாள். வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணியும் அவளே!

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் & புவி

     பேணி வளர்த்திடும் ஈசன்”

என்றும்,

“மற்றைக் கருமங்கள் செய்தே & மனை

     வாழ்ந்திடச் செய்பவள் அன்னை”

என்றும் பாரதி பெண்மையைப் புகழ்ந்துரைப்பார். அத்தகைய பெண்மை இல்லத்துணையாக இருந்து நல்லறம் கூடிய இல்லறத்தை உருவாக்கிட அவளுக்கு உரிய கடமைகளைத் திருவள்ளுவர் வகுத்துத் தருகிறார்.

“மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்

     வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”          (51)

மனையறத்திற்குத் தகுந்த மாட்சிமைகள் உடையவளாய், தனது கணவரின் வருவாய்க்குத் தக்க வாழ்க்கை நடத்தக் கூடியவளாய் இருப்பது மனை மாண்பு. நல்ல மனைவியாக இருப்பவள் எப்படி இருக்க வேண்டும்? குடும்பத்தின் கவலைகளை இலகுவாக்கக் கூடியவளாக, சலனமற்ற திண்மையும், அசைவற்ற உறுதியும் கொண்டவளாக இருக்க வேண்டும். இறைவன் மீது செலுத்துகின்ற பக்தியையும் அன்பையும் காட்டிலும் அதிக அன்பையும் பக்தியும் கணவன் மீது கொண்டவளாக இருக்க வேண்டும்.

இல்லறக் கடமை என்பது விரிந்து பரந்த ஒன்று. அதை முழுவதும் கணவனோடு இணைந்து செவ்வனே செய்து புகழ் பெற வாழ்வது இல்லாளின் கடமைகளில் சிறந்தது. அதுபோல் அவள் தன்னையும் காத்து; தன் கணவனையும் காத்து; குடும்ப பாரம்பரியப் புகழுக்கு ஊறுவராமல் குடும்பத்தைக் காக்கும் திறன் கொண்டவளாக இருப்பது பெருமைக்குப் பெருமை சேர்ப்பது போலாகும்.

“தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

     சொற்காத்துச் சோர்விலாள் பெண்”          (56)

என்பார் வள்ளுவர். மேலும் தன்னை மனைவியாகப் பெற்ற கணவனை தனக்கு உரியவனாக அன்புகாட்டியும் அரவணைத்தும் பேணிக் காப்பவளாக இருப்பதும் தன் கணவனை உலகத்தார் போற்றிப் புகழ வேண்டும் என்ற எண்ணம் நிறைந்தவளாக இருப்பதும் தான் சீரிய இல்லறக் கடமையுடைய இல்லாளுக்குப் பெருமையுடையதும் மேலும் சிறப்பும் பெருமையும் கொடுப்பதும் ஆகும். ஒரு மனைவியின் மாட்சிமை மிகுந்த குணங்களே இல்லறத்திற்கு மங்கலமாகும். மங்கல வாழ்வின் நன்கலம் – அணிகலம் நல்ல மக்களைப் பெறுவது ஆகும்.

கணவனின் பெருமிதம், சிறப்பு இவற்றுக்கெல்லாம் பெரிதும் காரணம் அவனது மனைவியே. மனத்திண்மையும், ஒருமை மனமும், பொறுப்புணர்வும் மிக்கவள் மனைவியாக அமைந்துவிட்டால் கணவன் ஏறுபோல் பீடு நடைபோட்டு நடப்பான் என்பது நிச்சயம்.

 

‘அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை’

காலந்தோறும் அருளாளர்கள் சிலர் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். அப்பேரருளாளர்கள் உலகில் வாழும் மக்களுக்கு ஏற்ற வாழ்வியல் நெறிமுறைகளை எடுத்துரைத்துள்ளார்கள். அவர்களின் நல்லறவுரைகளைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள வேண்டியது மனிதர்களின் கடமை. அத்தகைய இறையருளார்களுள் உலக மானுட வாழ்வுக்குத் தகுந்த நெறிகளை வகுத்துத் தந்தவர் திருவள்ளுவர்.

“இல்லறமல்லது நல்லறமில்லை” என்பது சான்றோர் தம் வாக்கு அத்தகைய இல்லறம் சிறப்பதற்கான பல நெறிகளைத் திருக்குறள் வழங்கியுள்ளது. உலகளாவிய பொது நோக்குடையதாகவும் தமிழர்தம் பண்பாட்டின் சிறப்பைப் பறைசாற்றுவதாகவும் அமைந்த நூல் திருக்குறள். அதில் இல்லறம் என்பது பற்றியும் அதனை எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பது பற்றியும் நல்ல கருத்துக்கள் நிரம்பியுள்ளன. இல்லறம் நமக்கேயுரிய சிறந்த பண்பாட்டின் சின்னம்; பாரம்பரியமான மரபு வழிகளினால் பின்னப்பட்டு உறவுமுறைகளினாலும் சொந்தபந்தங்களினாலும் செதுக்கப் பட்ட ஒரு கட்டமைப்பு; நல்ல மனைவி நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்விகம் என்றும், குடும்பம் ஒரு கோயில் என்றும், குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்றும் போற்றிப் பெருமைப்படத்தக்க ஒன்று. இத்தகைய இல்லற வாழ்வு பெருமை பெறவேண்டும் என்றால் அறத்தோடு பொருந்தி வாழ வேண்டும். இல்லற வாழ்வுக்கு அறமே அடிப்படை.

அறவாழ்க்கை என்றால் என்ன? எப்படி எளிதாக, இன்பமாக,  பெருமையுடையதாக, புகழுடையதாக வாழ்வது? இதற்கு திருவள்ளுவர் வழிகாட்டுகிறார்.

‘அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’. இங்கு பட்டது என்றில்லை; பட்டதே என்று தேற்ற ஏகாரத்தில் கூறி அறத்தின் வலிமையை முழுமைப்படுத்துகிறார். அறம் வேறல்ல, இல்வாழ்க்கை வேறல்ல என்பதை வள்ளுவர் தெளிவுபடுத்துகிறார்.

வாழ்க்கைத் துணையோடு அறநெறிகளில் இருந்து பிழையாமல் இல்வாழ்க்கை நடத்துபவரே இல்வாழ்க்கையால் வரும் பயனை அடையக் கூடியவர்கள். இல்வாழ்க்கை வாழ்கின்றவன், தன்னலம் துறந்து பிறர்நலம் பேணி வாழ்கின்றவன்; தன்னுடைய மனைவி, பிள்ளைகள் பெற்றோர், சுற்றத்தார், வறியவர்கள், மூதாதையர், சமுதாயத்தில் ஆதரவற்ற வர்கள், துறவு மேற்கொண்டவர்கள் அனைவருக்கும் உதவி செய்து வாழ்பவன். இல்லற வாழ்க்கை வாழ்பவனுக்கு இத்தகைய மூவகையாரையும் காத்தல் கடமையாகிறது.

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

 நல்லாற்றின் நின்ற துணை”          (41)

“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

 இல்வாழ்வான் என்பான் துணை”     (42)

குடியில் தோன்றி மறைந்த முன்னோரை நினைவுகூர்வதும் இறைவனைப் போற்றுவதும் விருந்தினரைப் பாதுகாப்பதும் இல்லறத்தின் கடமை. விருந்தோம்பல் நமது தலையாய பண்பாகும். விருந்து என்பது புதுமை என்பதைக் குறிக்கும். விருந்தினர் (புதியவர்) வீடு தேடி வந்துவிட்டால் அவர்களை இன்முகம் காட்டி வரவேற்பதுடன் இனிமையாகப் பேசி உணவு கொடுத்து மகிழ்விப்பதே விருந்தோம்பல். அத்தகைய விருந்தோம்பலை இல்லறத்தார் கடமையாகக் கொண்டு செய்தல் வேண்டும். அதுபோல உதவி தேடிவரும் உறவினர்களுக்கு உதவுவது போன்ற கடமைகளிலிருந்து தவறாது வாழ்தல் அவசியம். இவற்றிற்கு அன்பு அடிப்படை யானதாகும். அன்பு இல்லறத்திற்கு உரிய பண்பாகும். இல்லற வாழ்க்கையில் முதன்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் பண்பாடாகும். மனிதனை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது பண்பாடு. கலித்தொகை ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ எனக் கூறும். உலக ஒழுக்கம் அறிந்து நடத்தல் என்று பொருள்.

“அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

 மக்கட்பண்பு இல்லா தவர்”         (997)

என்பார் திருவள்ளுவர். மக்களுக்கு உரிய நற்பண்புகள் இல்லாதவர் அரத்தின் கூர்மை போல அறிவுக் கூர்மை யுடையவரே ஆனாலும் உணர்வற்ற மரத்திற்கு ஒப்பாவார். தனக்கு உள்ளதைப் பிறரோடு பகிர்ந்து வாழ்வதும், இரவலர்க்கும் வறியவர்க்கும் ஈந்து வாழ்வதும் தமிழ்ப் பண்பாடாகும் அன்பு வாழ்வும், அறவாழ்வும் பிறர் இன்பத் திற்காக வாழும் வாழ்வாகும். அடக்கமான வாழ்வே சிறந்த வாழ்வு. அடக்கமான வாழ்வே அமைதியான வாழ்வு. அவ்வாழ்வில் இன்பமும் புகழும் தேடி வரும்.

பசித்தவர் ஒருவருக்காவது உணவிட்ட பின்னரே தான் உண்ணவேண்டும் என்பது நமது பண்பாடு. பசித்து வருவோரின் பசியாற்றுவது எல்லா அறங்களிலும் சிறந்த அறமாகும்.

உலகத்தோடு ஒட்ட வாழ்வதே ஒப்புரவான வாழ்க்கை யாகும். மானத்தை உயிரினும் பெரிதாகக் கொண்டு பிறர் இன்புற மாண்புடன் வாழும் வாழ்வே ஒப்புரவு வாழ்க்கை. உலகத்தோடு ஒத்து வாழ்வதும், உலகத்து ஆன்றோரும் சான்றோரும் காட்டிய நல்வழியில் வாழ்வதும் சிறந்த வாழ்க்கை. எளிமை காட்டி அன்புடன் இனிமையாகப் பேசிப் பழகுவது சிறந்தது. அன்புள்ளம் கொண்டவர்கள் பிறர் மனம் புண்படும்படி ஒரு நாளும் பேசமாட்டார்கள். இன்சொல் ஒருவனுக்கு நண்பர்களைத் தேடித் தருகிறது. கடுஞ்சொல் அவருக்குப் பகைவர்களை உருவாக்கி விடுகிறது. இனிய சொற்கள் இருக்க, கடுஞ்சொற்களைக் கூறுவதை வள்ளுவர் தன்னிடம் கனிகள் நிறைந்திருக்க ஒருவன் துவர்க்கும் காய்களைத் தின்னுவதற்குச் சமம் என்கிறார்.

“இனிய உளவாக இன்னாத கூறல்

     கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.”       (100)

இல்வாழ்வான் என்போன் சமுதாயம் அறத்தோடு வாழத் துணை நிற்பவன். அத்தகைய அறவாழ்க்கை வாழ்பவர் அன்பும் அறனும் உடையவராக, துறவு நிலையிலும் மேம்பட்டவராகக் கருதப்படுகிறார்.

இல்லறத்தைத் துறந்து வாழ்வோர் பின்பற்றுவது துறவறம். அத்தகைய துறவு நிலையில் வாழ்கின்றவர்கள் சிறப்புக்கு உரியவர்கள். அவர்களுடைய பெருமைகளை அளவிட முடியாது.

“துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

     இறந்தாரை எண்ணிக்கொண் டற்று”   (22)

“இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

     பெருமை பிறங்கிற்று உலகு”               (23)

உலகில் இருவேறு நிலைகள் உள்ளன. நன்மை, தீமை; இனிமை, கடுமை; அறம் – மறம்; இன்பம் – துன்பம் எனும் வாழ்வின் இருவேறு நிலைகளை ஆராய்ந்து துறந்தவர் தம் பெருமை நிலைத்து விளங்கக்கூடியது அத்தகைய துறவு நிலையில் நின்று தவ ஒழுக்கத்தை மேற்கொண்டோர்க்கும் இல்லறத்தாரே உணவளித்தும் துணையாக இருந்தும் பாதுகாக்கும் கடமையுடையவர்கள்.

“ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை

 நோற்பாரின் நோன்மை உடைத்து”         (48)

இல்வாழ்வை அவ்வாழ்விற்கு உரிய இயல்புகளோடு வாழ்வதுதான் சிறப்பானதாகும். அத்தகைய சிறப்புடன் வாழ்பவன், ஐம்புலன்களையும் அடக்கி துறவறம் மேற்கொண்ட துறவிகளை விடச் சிறந்தவன். தவம் செய்யும் துறவிகளைத் தவநெறிகளில் நிலைத்திருக்கச் செய்பவன் இல்வாழ்வானே ஆவான். அவ்வாறு துறவிகளுக்குத் துணையாய் இருப்பதோடு தானும் அறநெறிகளில் சிறிதும் பிறழாது வாழ்பவனது இல்வாழ்க்கை அத்துறவிகளின் தவவலிமையிலும் சிறந்ததும் வலிமையுடையதும் ஆகும் என்பதைத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

“அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்,

     துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

     விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”

என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கண்ணகி கூற்றாகக் குறிப்பிடுவார்.

இல்வாழ்வான் என்பான் எல்லோரிடத்தும் அன்பாக இருக்கும் தன்மையுடையவனாகவும் நல்வழியில் நடப்பவனாகவும் இருத்தல் வேண்டும். அவ்விதம் அன்பும் அறிவும் கொண்டு வாழ்வதே சிறந்த இல்லற வாழ்வாகும். இத்தகைய இல்லறவாழ்வை மேற்கொள்பவனுக்கு அவ்வாழ்வால் பெறவேண்டிய பலன்கள் யாவும் தானாகவே வந்து சேர்ந்துவிடும்.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

 பண்பும் பயனும் அது.”       (45)

“அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்

 போஒய்ப் பெறுவது எவன்”         (46)

அறநெறியில் நல்ஒழுக்கத்துடன் இல்வாழ்க்கை நடத்தக்கூடிய ஒருவனுக்கு அதற்குப் புறம்பான வழிகளில் முயன்று பெறும் பயன் எதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர். திருவள்ளுவர் வாழ்க்கை நலத்தில் ஒரு நுட்பத்தைக் காட்டுகிறார். துறவறத்தில் சிறந்து விளங்கும் தவத்திற்குத் தரும் சிறப்புக்களை எல்லாம் இல்லறத்திற்குத் தருகிறார்; இல்வாழ்வில் இல்லற நெறிப்படி ஒருவன் சிறப்புடன் வாழ்வானேயானால் அவன் மண்ணுலகில் வாழ்பவனே எனினும் வானில் உறையும் தெய்வங்களுக்கு நிகராக வைத்து அவனைப் போற்றுகிறார்; இல்வாழ்வானைத் ‘தெய்வம்’ என்ற நிலையில் உயர்த்திக் கூறியதின் மூலம் இல் வாழ்க்கையின் மேன்மையையும் பெருமையையும் அறிவுறுத்திக் காட்டுகிறார்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

     தெய்வத்துள் வைக்கப் படும்”         (50)

 

தீரா இடும்பை தரும் & எது?

மனித வாழ்வு அமைதியும் இன்பமுமாக அமைய வேண்டுமானால் வாழ்வு அற வாழ்வாக மலர வேண்டும். அறத்தால் வருவதுதான் இன்பம். மற்றவை யாவும் இன்பம் என ஒருவகை மயக்கம் தருவதன்றிப் புகழ் தருவதில்லை; இனிமை தருவதில்லை.

மனம் மாசற்று இருப்பதுதான் அறம். உள்ளம் தூய்மையுடையதாய் உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது தான் அறம். வெறும் புகழ் மயக்கத்தால், பயன்கருதிச் செய்யப் பெறும் செயல்கள் தொடக்கத்தில் தவிர்க்க இயலாதவை யாகவே இருக்கும். ஆனால் மனம் பக்குவப்படத் தொடங்கியதும் நல்ல பயிற்சியால் இச்சிறு மாசுகள் நீங்கும். பொதுவாக, பொறாமை, பேராசை, கோபம், இன்னாச்சொல் என்பன அறியாமையால், மயக்கத்தால் உருவாகும் குணங்கள்! இக்குற்றங்கள் நீங்கப் பெற்றால் மனம் மாசு நீங்கி ஒளிபெறும்; வாழ்வும் ஒளிபெறும்.

‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாகும்.’ செய்யும் செயலிலெல்லாம் இருளும் மயக்கமும் நீங்கி அறஒளி நிறையும்.

வாழ்க்கை நிலையாமை உடையது. நில்லாத இவ்வாழ்க்கையை என்றும் நிலையானது என மயங்கி யிருத்தல் புல்லறிவு ஆகும்.

 

‘நேற்றிருந்தார் இன்றில்லை. இன்றிருப்பவர் நாளை இல்லை’ என்ற வியப்பான உலகில், காலம் தாழ்த்தாது, வாழும் ஒவ்வொரு நாளும் அறம் செய்ய வேண்டும்.

‘நாள் என ஒன்றுபோல் காட்டி உயிரறுக்கும் வாள்’ என்பதை நன்கு உணர்ந்து நாளும் அறம் செய்ய வேண்டும். நம் வாழ்விற்கு எப்போது இறுதி நேரிடும் என்று தெரியாத நிலையில் உறுதியான, நன்மையான காரியங்களை அறுதியிட்டு நாடிச் செய்ய வேண்டும்.

குறுகிய வாழ்நாளை நீண்ட பயன் மிகுந்த வாழ்நாளாக்க வேண்டுமானால், நாள் என்பது ஒரு கூர்மையான வாளாக மாறி வாழ்நாளை அறுக்காமல் இருக்க வேண்டுமானால், தடையில்லாமல் வீழ்நாள் இல்லாமல் அமைய வேண்டுமானால், விரைந்து நாள்தோறும் நாடி நல்லறச் செயல்கள் செய்ய வேண்டும். அப்போது துன்பத்தை, துயரத்தை வரவிடாமல் வழியடைக்கும் கல்லாக அறம் விளங்கும்.

சிறப்பாக நாம் ஆளும் அரசைத் தேர்ந்தெடுக்கும் போது அவ்வரசு நாட்டின் நலம் கருதிச் செயல்படும்; அறவழியில் நிற்கும்; மக்களின் அச்சம் நீங்கிப் பாதுகாப்புத் தரும்; பொருளாதாரத்தை மேம்படுத்தும். எனவே இன்பம் நல்கும் ஏற்றமிகு அரசையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

அறத்தை அறிந்து, மனச்சான்றுள்ள, தியாகம் நிறைந்த, தூய வீரம் நிறைந்த, ஊக்கமும் துணிவும் மிகுந்த விரைந்து செயலாற்றும் நேர்மையாளர்களை ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவைகளை எல்லாம் எண்ணிப் பார்க்காமல், நன்கு ஆராயாமல் – குறுகிய நோக்கோடு, தன்னலத்தோடு முடிவு செய்தால் தீமை விளைந்துவிடும். ஆட்சியில் தீயவர் களையும் தீயவைகளையும் ஏற்றுக்கொள்ளும் துன்பம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து துயரமே தந்துவிடும்.

நன்றாக ஆராய்ந்து பார்த்து முடிவு செய்து பொறுப்பேற்குமாறு தேர்ந்தெடுத்தவுடன் அவர்கள் மீது முழு நம்பிக்கை கொள்ளவேண்டும். அடிக்கடி தலையிடுவது, குறுக்கிடுவது, அவதூறு செய்வது என்பன மிகப்பெரிய  துன்பத்தைத் தரும். ஆராய்ந்து தெளிந்து நம்ப வேண்டும். நம்பித் தெளிந்தவுடன் வீணான ஐயம் கூடாது. எத்துறையாயினும் ஒரு முடிவுக்குப் பின்னர் இடையில் வரும் குழப்பம். சந்தேகம் ஆகியவற்றை முற்றிலும் நீக்கிவிட வேண்டும். அவர்களுக்கு ஆதரவாய் இருந்து நன்கு செயல்பட உரிமை அளிக்க வேண்டும்.

தீரா இடும்பை தரும் எது என்று கேட்டு, அதற்கு வள்ளுவர் விடையும் அளிக்கின்றார்.

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் 

 தீரா இடும்பை தரும்”              (510)

ஒருவனைத் தெளிவில்லாமல், ஆராயாமல் தேர்ந்தெடுத்தாலும் துன்பம். ஆராய்ந்து தெளிந்த ஒருவரிடம் ஐயப்படுதலும் நீங்காத துன்பம். இத்துன்பம் நீக்கி இன்பம் பெற்று வாழ்வோமாக.

புகழ் வாழ்வு

“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

     பொன்றாது நிற்பதுஒன்று இல்.”      (233)

மனிதர் அனைவரும் வாழ்வில் அவரவருக்கு உரிய தகுதிக்கேற்பப் புகழோடு வாழ விரும்புகின்றனர். தேடிச்சோறு நிதம் தின்று, உண்டு உடுத்தி உறங்கி வாழ்வது வாழ்க்கையல்ல. தகுதியோடும் மகிழ்வோடும் வெற்றியோடும் வாழும் வாழ்க்கையே புகழ் நிறைந்த வாழ்க்கை.

அறநெறியில் நின்று தளராது, அயராது, ஊக்கத்துடன், உண்மையாக முயன்று உழைப்பவர்கள்தான் தகுதியும் புகழும் பெறுகின்றார்கள்.

‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்று குறுந்தொகை கூறுவது போல் உண்மையான முயற்சியும் உழைப்புமே ஒருவனை உயர்த்தும்; பெருமையும் புகழும் சேர்க்கும். பயனுள்ளவனாக, பிறர்க்கு உதவுபவனாக, பிறர் துன்பங் களைத் தீர்ப்பவனாக இருந்தால்தான் புகழ் நிலைத்து நிற்கும். புகழ் அறத்தின் ஒளிவடிவம். நல்லவர்களால் போற்றப்படுவதே புகழ். மனச்சான்றைப் போற்றி, குற்ற மில்லாமல் குணங்கொண்டு செம்மையோடு வாழ்பவர் களுக்குப் புகழ் உயிர்மூச்சு போன்றது. புகழின்றி உயர்ந்தவருக்கு வாழ்வு இல்லை. நற்செயல்கள் செய்பவரின் பெருமையும் சிறப்பும் ஆரம்பத்தில் கவர்ச்சியாக இருப்பதில்லை. அவர்களது அருமை தொடக்கத்தில் தெரியாவிட்டாலும் நாளடைவில் மிகவும் சிறப்பாக நன்றாகவே உணரப்படும். அறம் இல்லாத இடத்தில் புகழ் நிலைத்து நிற்காது. அறத்தோடு, கடின உழைப்போடு, மனச்சாட்சியைப் போற்றி இடைவிடாது தனக்குத்தானே தன்னை குற்றங்களிலிருந்து நீங்கி காத்துக் கொள்பவர்களுக்கே புகழ் என்றும் நிலைத்து நிற்கும். இல்லாவிட்டால் புகழ்வேட்கை கொண்டவர் களுக்கு வாழ்க்கை கானல் நீர் ஆகிவிடும். உண்மையான புகழ் ஆழமாக வேரோடி நிற்கும் ஆலமரம் போன்றது. நல்ல அடித்தளத்தில் கட்டப்பட்ட கோபுரம் போன்றது; தனக்குரிய உண்மையான தகுதியுடனும், நேர்மையுடனும், மனச்சான்றைப் போற்றி வாழ்பவர் என்றும்  இன்பத்துடன், புகழுடன் வாழ்வர்.

போலித் தகுதியால், குறுக்கு வழியில் புகழ்பெற முயல்பவன் வேகமாக உயர்வான். ஒரு புயல்காற்றில் காகிதமும், சருகுகளும், குப்பைகளும் கோபுரத்திற்கு மேல் உயர்வது போல போலிப்புகழ், தற்புகழ்ச்சி போலி நாணயம் போன்றது. புழக்கத்தில் தண்டனையைத் தருவது. வீண் புகழ்ச்சியால் ஆணவம் அதிகம் தலைகாட்டும். வீண்புகழ்ச்சி அளிப்பவரையும் அழிக்கும். பெறுபவரையும் சீரழிக்கும். வெற்று உபச்சாரம், போலிப்புகழ்ச்சிகளைக் கண்டு மயங்காமல் வாழவேண்டும். சிலர் சிலகாலத்திற்கு நன்றாகப் புகழப்படுகின்றனர்; கொண்டாடப்படுகின்றனர். கால மாறுதலால் புகழின் உச்சியில் நின்றவர்கள், பாதாளத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்; போற்றப்பட்டவர்கள் பழித்துப் புறக்கணிக்கப்படுகின்றனர். மக்கள் புகழும்போது புகழ் பெற்றவர்கள் மிகவும் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்; வாழ்த்துக்களை வழங்கியவர்கள், வசவுகளையும் வழங்கிடுவர்.

நம் தகுதிக்கேற்ற புகழ்ச்சிகளே நிலைத்து நிற்கும். ஆகவே என்றும் உழைத்து, முயற்சி செய்து, செம்மையாக வாழ்ந்து, தனக்கு உரிய பொருளுடைமை, கல்வியுடைமை, அறிவுடைமை, உழைப்பு இவைகளைப் பிறர்க்கும் வழங்கிப் பிறர்க்கு பயன்பட வாழ்ந்தால்தான் ஊரும் நாடும் உலகமும் போற்றும். வசையும், பழிச்சொல்லும் இல்லாமல் புகழுடன் வாழ்பவர்களே வாழ்பவர்கள். புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் வாழ்ந்தாலும் உடல் சுமந்து உயிரோடு இருந்தாலும் வாழாதவர்களே. உலகம் மாறிவருவது. இங்கு நிலையாமை தான் நிலைத்தது இத்தகைய மாறிவரும் உலகில், நிலை யாமை உள்ள உலகில் நிலைத்து நிற்பது, எதுவென்றால், அது அழிவற்ற புகழ் அன்றி வேறு ஒன்று இல்லை.

“வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசைஒழிய

     வாழ்வாரே வாழா தவர்.”      (240)

 

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

     தம்புகழ் நிறுவி தாம்மாய்ந் தனரே” – (புறநானூறு)

அன்றறிவாம் என்னாது அறம் செய்க!’

நாவிற்கு சுவை உணர்வு இருப்பது போலச் செவிக்கும் சுவை உணர்வு உண்டு. நல்ல உணவு உடலை வாழ வைப்பது போல, நாம் பெறும் நல்லறிவும் நம் உள்ளத்தை வாழ வைக்கும். நல்லுணவு நாவிற்கு இனிமை தருவது போல், நற்கருத்துக்கள் செவிக்கு இனிமை தரும். அதனால் தான் பாரதி, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்றார். தேனை நாவால் சுவைக்கும் போது என்ன இன்பம் கிடைக்குமோ அத்தகு இன்பம் செந்தமிழ்நாடு என்று சொல்லும்போது காதில் தேனாகப் பாய்ந்து இனிக்கிறது என்கின்றார் புதுமைக்கவிஞர் பாரதி.

கேடில்லாத, அழியாத விழுச்செல்வம் கல்வியென்றால் நல்லவையாக அமைந்த கேள்விச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலைமையானது. ஒரு துறையில் கற்றவர்களுக்கும்- பல துறைகளில் அறிவு வழங்குவது கேள்விச் செல்வமாகும். கற்றவன் நுட்பமாக, இனிமையாக, கேட்பவரைப் பிணிக்கும் வகையில் நல்ல செய்திகளை ஆற்றலுடன் கூறும்போது, கல்வி கல்லாதவனும் கற்றதன் பயனைப் பெறுகின்றான். அறிஞர்கள் மிகச் சிறந்த கருத்துக்களை எடுத்துச் சொல்லும்போதும் அவற்றை விரித்துச் சொல்லும் போதும் தொகுத்துச் சொல்லும்போதும் கற்றறியா எளிய மக்களும் பயன் பெறுகின்றார்கள். பல காலம் செலவழித்துப் பல நூல்களைப் படித்தவர்கள் நல்ல கருத்துக்களை நயமுடன், எளிமையுடன் கூறும்போது அவற்றைக் கேட்பவர்கள் சில மணித் துளிகளிலே மிகப் பெரும் பயனைப் பெற்று விடுகிறார்கள்.

வேள்வியால் கிடைப்பது விண்ணில் வாழும் அமரர் விரும்பும் அமரத்தன்மை தரும் அவியுணவு. கேள்வியால் கிடைப்பது மண்ணிலே வாழ்வோர் விரும்பும் இறவாச் சிறப்புடைய அமுத வாழ்வு.

வாழ்வு சிக்கல்கள் நிறைந்தது; உணர்ச்சி நிறைந்தது. ஆதலால் கேட்பதெல்லாம் கேள்வியாகிவிடாது. மனம் உணர்ச்சிவயப்படும் சமயத்தில் எல்லாம், தடுமாறுகின்ற நேரத்தில் எல்லாம், நல்லோர் சொன்ன கருத்துக்கள் தாம் நற்பயனை, நன்மைகளை அளிக்கும்.

அறம் செய விரும்பி, வாழ்வின் ஒரு பகுதியை மட்டும் அறம் செய்ய வேண்டும் என்று ஒதுக்காமல் வாழ்வு முழுவதுமே அற வாழ்வாகத் திகழ முற்பட வேண்டும். தனி மனித வாழ்வும், குடும்ப வாழ்வும் அறவாழ்வினை மேற்கொண்டு நடக்கும்போது நாடும் உலகமும் நலம் பல பெற்றுத் திகழும். வாழ்க்கைக்கு இவ்வறம் சிறப்பைத் தரும்; செல்வத்தைத் தரும். நிலையாத வாழ்க்கையில் நிலைத்த புகழைத் தரும்; இவ்வாறு நிரந்தரமாக நிலைபெற்றுப் புகழ்பெற்று, வாழும் உயிர்கள் ஆக்கம் பெறும்.

உலகின் அற நியதிகளும் நியாயங்களும் மீறப்பட்டால் நிச்சயமாகத் தீய விளைவுகள் உருவாகிவிடும். நாம் விதைக்கும் விதைகளுக்கு ஏற்பவே பின்னர் விளைவுப் பயனைப் பெற முடியும். நாம் செய்யும் நல்ல அறச் செயல்களே நல்ல பயன் தரும். நல்ல விளைவுகளைத் தர முடியும்.

அறச் செயல்களைச் செய்யும் வகையால் எக்காரணம் கொண்டும் அவற்றை இடையே விட்டு விடாமல் இயன்ற வகையில் எல்லாம் தொடர்ந்து அந்த அறச் செயல்களைப் போற்றிச் செய்ய வேண்டும்.

நாளை நாளை என்று நாட்களைத் தள்ளிப் போட்டுத் தட்டிக் கழித்துவிடாமல், நிலையாத வாழ்க்கையில் நிலைத்த புகழோடு வாழத் தலைப்பட வேண்டும். இளமைக் காலத்தே மன நலம் மிகுந்தவராய் வளர வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று சோம்பல் கொள்ளாமல் நற்செயல்களில் தீவிரமாக நாட்டமுற வேண்டும்; அயராது அறப்பணிகள் செய்ய வேண்டும். அதுவே உடல் நலியும் காலத்தும் அழியாப் புகழ் தந்து துணை நிற்கும்; உடல் அழிந்த காலத்தும் அழியாப் புகழ் தரும்.

ஆகவேதான் வள்ளுவர் கட்டளையிடுகின்றார் – என்ன கட்டளை? கேட்போம்.

“அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க; மற்றுஅது

 பொன்றுங்கால் பொன்றாத் துணை.”  (36)

அறம் பிழைத்தால்…?

அறம் பிழைத்தால்…?

 

Image result for valluvarஉலகு உயிர்கட்குச் சிறப்பீனும் செல்வமுமீனும் அறத்தின் ஆக்கம் பெரிது. உலகு உயிர்களுக்கு உயிரன்ன அறம் தனித்தும் நிற்பது; பொருள் இன்பத்துடன் விரவிக் கலந்தும் நிற்பது. இயற்கையுடலின் உயிர் மாசற்ற இறையானால், மாசற்ற அறமே இறையாகும். இறையாகிய அறவாழி உவமையற்றது, எல்லையற்றது, மறத்தலியலாச் சிறப்புடையது, பேரருள் சான்றது.

“அருள் குடையாக அறம் கோலாக

     இருநிழல் படாமை மூவேழ் உலகமும்”   (பரிபாடல்)

அறம் விழையும் நெஞ்சம் ஆக்கத்தில் நிலைக்கும் என்றால், அறம் விழையா நெஞ்சின் நிலை என்ன? அறம் பேணா அந்நெஞ்சம் ஆக்கம் தேட முயலுமா? ஆக்கம் தேட முயலாவிட்டாலும் அமைதியாக அடங்கிக் கிடக்குமா? அன்றி, அறம் பிழைக்குமா? அறம் பிழைத்தால்…. அறமே பிழைக்குமா…?

அறம்:- எண்ணம், சொல், செயல் மூன்றனுள்ளும் எண்ணம் சொல்லுக்கும் செயலுக்கும் அடிப்படையாய் அமைந்தது, அதனால் மாசற்ற, தூய்மையான அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும் இழுக்கா இயல்புடைய எண்ணம் முதன்மையான சிறப்புடையது. எனவே,

“மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்;

     ஆகுல நீர பிற”              (34)

என நுண்மாண் நுழைபுலத்துடன் வள்ளுவம் காட்டும்.

“மனத்துள் மாறாது உறைந்து கிடக்கும்

     சட்டத்திற்கு அறம் என்று பெயர்”

என்று பைபிள் காட்டும். தனி மனிதனுக்கு மட்டுமன்றி உலக சமுதாயத்திற்கும். இவ்விளக்கம் பொருந்தும்.

அறம் பிழைப்பதேன்…?

Image result for manimozhian kuralஇயற்கையின் ஆற்றல்மிகு அமைப்பில் நல்லன எல்லாம் விரைந்து உடனே பயன் தரும் நிலை குறைவு, ஆனால் தீமை செய்வன எல்லாம் உடன் விரைந்து தீய பயன் தரும் நிலை மிகுதி. இது இயற்கையின் வியத்தகு அமைப்பு முறை. நஞ்சுண்டவன் விரைந்து மடிகின்றான். உடன் விளைவு காண இயலுகின்றது. நனிசுவை நலந்தரு உணவு உண்டவன் நலம் பெறுவான் ஆனால் உடன் பயன் காண முடிவதில்லை. இவ்வடிப்படை உண்மையே அறம் பிழைக்க அடிப்படையாய் அமைந்த சூழல்.

அரம்போலும் கூர்மையரேனும், மக்கட் பண்பில்லா மரம்போன்ற குறுகிய எண்ணமுடைய தனிமனிதனோ சமுதாயமோ அவ்வியற்கை அமைப்பை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றார்கள். உலகம் அறம் பிழைக்கும் சூழலில் சிக்கித் தவிக்கிறது.

“கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்

     கோடாமை சான்றோர்க்கு அணி”     (115)

“நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை

     அன்றே ஒழிய விடல்.”        (113)

என்ற நெறிகளை ஞாலம் வாழ்க்கை நடைமுறையமைப்பில் ஏற்றுக்கொள்வதில்லை. ‘புதரில் உள்ள இரு பறவைகளை விட கையில் உள்ள ஒரு பறவையே மேலானது’ என்ற எண்ணமே மக்களிடையே நிலைத்து நிற்கின்றது.

தனிமனிதன் குறைந்த முயற்சியில் தான் வாழ வேண்டும். தன் குடும்பம் வாழ வேண்டும் என்று குறுக்கு வழியில் வாழ்க்கை வழிதேட விழைகின்றான். இன்று இடுக்கண் உற்றாலும் நாளை நல்லற நெறியில் நற்பொருன் ஈட்டுவோம் என்ற அறநெறியை அவன் மனம் நாடுவதில்லை, இதனால் அவன் அழுக்காறு உடையவனாய், புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்பவனாய், பேரவா உடையவனாய் ஆகின்றான். இத்தகு தனித்தனி குறுகிய நோக்குடையவர் களால் மன்பதை பாழ்படுகின்றது. அதனால்தான் சமுதாய அமைப்பில் இன்னா செய்தார்க்கும் இனியவை செய்து அவ்வொன்னாரை நல்லவராக ஆக்கும் முயற்சியைக் காண இயலுவதில்லை. ‘அளவிறந்து ஆவது போலக் களவினால் ஆகிய ஆக்கம் கெடும்’ என்ற உண்மை உணர்ந்தவர்களைக் காண இயலுவதில்லை. ‘தன்னெஞ்சத்து அழுக்காறில்லாத இயல்பை ஒருவன் ஒழுக்காறாகக் கொள்க’ என்ற கொள்கை உணர்ந்தவர்களைக் காண இயலுவதில்லை ‘மற்றின்பம் வேண்டுபவர் சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யார்’ என்ற ஆன்ற பொருளுணர்ந்த வர்களைக் காண இயலுவதில்லை. ஆனால் குறுகிய நோக்கத்தால் பொறுமையற்றவர்களாய், கயவராய், பெரும் பொய்யராய், கொடிய கொலைஞராய் வாழ்வோரைக் காண முடிகின்றது. இத்தகையோர் குற்றமிழைத்தால் உலகம் எளிதில் இக்குற்றத்தைக் கண்டு இவர்களைப் பழிக்கிறது; ஒறுக்கவும் செய்கின்றது, ஆனால் தனிமனிதன் தனக்கென்று ஓர் அமைப்புப் பெற்றிருப்பானானால், ஆற்றல் நிறைந்தவனானால் இக்குற்றம் மறைக்கப்படுகின்றது. மற்றும் குறுகிய நோக்குக் கொண்ட திறன் மிக்க வல்லவர்களான இத்தகைய தனிமனிதர்கள் தலைவர்களாக அமைந்து விட்டாலோ உலகம் அவர்கள் குற்றத்தை மறைப்பது மட்டுமின்றி, ஏற்றிப்போற்றி இறைஞ்சி ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது. இதுவும் உலகின் வியப்புமிகு போக்கு.

யார் குற்றம்?

அறம் பற்றி விளக்க விழைந்த வள்ளுவர் மக்களின் வாழ்க்கையமைப்பைப் பற்றிப் பல்வேறு கோணங்களில் ஆய்ந்து மக்கள் அறம் பிழைக்கக் காரணமான உண்மையைக் கண்டு துயருற்றவராய்,

“நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்

     வான்இன்று அமையாது ஒழுக்கு”           (20)

என்று கூறுகிறார். ‘கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம்’ ஆகிய மழைநீர் இல்லாமல் உலக வாழ்க்கை அமையாது என்று வாழ்க்கைப் போராட்டத்தைச் சுட்டிக்காட்டி அத்தகைய போராட்டத்தில் சிக்கித் துயருழந்து ஒழுக்கத்தைக் கைவிட்டவர்களைப் பழிக்காமல் இரக்கம் காட்ட வேண்டும் என்ற உண்மையை இலைமறை காயாக எடுத்துக் காட்டுகின்றார்.

இன்றைய அமைப்பு முறையிலும் இதே நிலைதான். மழை இருந்த இடத்தைப் பொருளும் பதவியும் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. இதுதான் வேறுபாடு. ஆதலால் மக்கள் மேல் மட்டும் குற்றம் காண்பதில் பயனில்லை. மக்கள் வாழும் அமைப்பு முறையில் தவறு நிகழ்ந்திருக்கிறது. மக்கள் எண்ணித் துணியும் இயல்பு பெறாதவர்கள். ஆனால் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டு குறுகிய நோக்கமுடைய தன்னலம் மிக்கோர் வளர்ந்து விடுகிறார்கள். உலக அமைப்புப் பாழ்படுகின்றது.

அறம் பிழைத்தால்….? அறமே பிழைக்குமா…? அறம் விழையும் நெஞ்சமானது ஆக்கத்தில் நாட்டம்கொள்வது போல் அறம் விழையா நெஞ்சம் கேட்டை விளைவிக்கும்.

“வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்

     நடுவணது எய்த இருதலையும் எய்தும்” (114)

என்று நாலடியார் பொருள் செயல் வகையின் சிறப்புக்கூறும். அறவழியில் ஈட்டிய அருஞ்செல்வம் அல்லது தலைமைப் பேறு போராட்டத்தை எழுப்பாது, உலகில் போராட்டம் குறைய வேண்டுமானால் பொருள் பொதுவில் பயன்படும் முறை ஓங்கி வளர்தல் வேண்டும். குறுகிய எண்ணம் குறைந்து அருள் சான்ற நெஞ்சம் வளர்தல் வேண்டும். அறத்தில் ஈடுபடா உள்ளம் பெரும் போராட்டங்களை எழுப்பும். தனி மனிதனின் அகப்போராட்டமாய்த் தொடங்கி புறப்போராட்டமாயும் வளர்ந்து உலகப் போராட்டமாய் முடியும். போராட்டத்தின் இறுதி விளைவு கேடே, ஆதலால் வள்ளுவம்.

“அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை

     மறத்தலின் ஊங்குஇல்லை கேடு”      (32)

என்று கூறும். அறமுறை நிலவா நாடு ஆக்கம் பெறுவதில்லை. இதைக் கலித்தொகை,

“சிறுகுடியீரே, சிறுகுடியீரே!

     வள்ளிகீழ் விழா, வரைமிசைத் தேன்தொடா

     கொல்லைகுரல் வாங்குஈனா, மலைவாழ்நர்

     அல்ல புரிந்தொழுகலான்”

என்று கவினுடன் காட்டும்.

தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் உலகில் கேடு சூழ்வன செல்வமும் பதவியும். உலகச் சூழலானும் அமைப்பு முறையானும் நேர்ந்த குறையால் தன்னலம் மிகுந்தவரும் குறுகிய நோக்கமுடையவரும் தமது ஆற்றலால் ஞாலத்தை அடக்கித் தம் வழியில் ஆள இயலுகின்றது. இந்நிலை வளர்ந்தால் உலகம் நிலைக்குமா? அறம் பிழைக்குமா?

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்’ என்ற பேருண்மையை ‘தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணினீர்கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன்’ மெய்ப்பித்தான் அன்று. அவன் அறஞ்சான்ற நெஞ்சத்தான். ஆனால் இன்று நிலை என்ன? அறம் குறைந்து, அன்பு தேய்ந்து, அமைதி மங்கி தன்னலம் உயர்ந்திருக்கின்றது. குறுகிய நோக்கம், குறுகாது வளர்ந்திருக்கின்றது. மக்களில் ஒருவருக்கொருவர், குடும்பத்திற்குக் குடும்பம், இனத்திற்கு இனம், நாட்டுக்கு நாடு பகையும் பொறாமையும் பரந்து நிறைந்து வளர்ந்து வருகின்றது. இதுவே இயற்கை என்று கூறும் அச்சநிலைக்கு உயர்ந்துவிட்டது. இந்நிலையில், அறம் வாழுமா?

தனிமனித வாழ்க்கையையும், அவனைச் சார்ந்த குடும்பத்தினரையும், நலம் நாடும் நட்புடையாரையும் பிணக்குக் கொள்ளச் செய்து அவர்களை ஆட்டி ஆட்சி புரிவதும், பொருளாட்சி, பொருளல்லாதவரையும் பொருளாகச் செய்யும் பொருள் ஒரு கூட்டத்தின்பால் குவிந்து கிடக்க, நெருப்பினுள் துஞ்சலினும் கொடிய நிரப்பினுள் வாடுகின்றது ஒரு கூட்டம். இவ்வாறு இங்கும் இனத்தின் பெயரால் செல்வர் – வறியவர் எனப் பிரித்து இவர்களை ஆட்சி புரிவதும் பொருளாட்சி, மற்றும் நிறத்துக்கு நிறம், வகுப்புக்கு வகுப்பு, சமயத்துக்கு சமயம் போராட்டத்தை எழுப்பியதும் பணமே. உலகப்போரின் அடிப்படையே பொருளால் அமைந்ததாகும். நாடுகளுக்கு இடையே வலிமையுடைய நாடாய் இலங்க வேண்டும் என்ற பேரவாவால், பொருள் வலிமையால் படைவலிமையை வளர்த்து, சில வல்லரசுகள் உலகத்தை அச்சத்துக்கு உள்ளாக்குகின்றன. இவ்வாறு இங்கு கொடுங்கோல் ஓச்சுவதும் பொருளாட்சியே! அமைதியை நிலைநாட்டு வதற்கென அமைக்கப்பட்ட உலக அமைதிக் காப்பு அறநிலையமான ஐக்கிய நாட்டு அவையும் பொருள் வளமும் படைபலமும் மிகுந்த நாடுகளைச் சார்ந்திருக்கின்றது. இவ்வாறு தனிமனிதன் முதல் உலகம் வரை நிலவி நிறைந்து நிற்கும் குறை உலகுக்குப் புலப்படுமா? அறம் பிழைக்குமா?

ஆயினும், அறம் எவ்வாறேனும் வாழும், தீமை தோற்கும், அறம் வெல்லும் இது உண்மை. கருவி குறிக்கோளாக மாறியிருப்பதே இன்றைய அச்சத்திற்குக் காரணம். அமைதியான பண்புமிகு அறவாழ்வே குறிக்கோள் ஆகும். செல்வம் ஒரு கருவி. அமைப்பு முறை மாறி யிருக்கிறது. இதுவே குறை, இக்குறை நீக்கமுடியாத குறையன்று. இன்றைய சூழலில் தனிமனித வாழ்க்கையைச் சீர்திருத்துவதினும் உலகச் சமுதாய அமைப்பை மாற்றி நெறிப்படுத்தினால் இக்குறை நீங்கும்.

தன்னலங் கருதாது அறத்தின் வழிநின்று கடனாற்றும் சான்றோர் ஒருசிலராவது என்றும் வாழ்வர். அத்தகையோரால் உலகம் என்றும் உயிர்கொண்டு வாழும்.

“உண்டால் அம்ம இவ்வுலகம்…

     தமக்கென முயலா நோன்தாள்

     பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”  (புறநானூறு.182)

“பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அஃதுஇன்றேல்

     மண்புக்கு மாய்வது மன்.”           (996)

சான்றாண்மைக்கு ஆழி எனப்படும், ஊழி பெயரினும் தாம் பெயராச் சான்றோர் வாழும் வரை, மனிதப் பண்புகள், உணர்வுகள் மனிதனிடம் நிலைத்துநிற்கும் வரை, அறம் அழியாது. அறத்தை அழிக்க முடியாது. தீமை அளவிறந்து ஆவது போலக் கெடும். “இறைச் சட்டங்கள் மனித மனத்துள் அமைந்திருக்கின்றன. அதனுடைய சுவடுகள் அழியாதவை”

அறமே ஆக்கம் தரும்

அறமே ஆக்கம் தரும்

 

உலகின் நலன்கள் அனைத்தும் – நேர்மை, தூய்மை, உண்மை, வாய்மை, மெய்ம்மை, சான்றாண்மை முதலான அனைத்துப் பண்புகளும் – அறம் எனப்படும். அறம் என்பதன் பொருள் ‘அற்றது’ என்பது ஆகும். உள்ளம் மாசு அற்றதாக இருத்தல், தன்னலம் அற்றதாக இருத்தல், பற்றற்றதாக இருத்தல் அனைத்தும் அறத்துள் அடங்கும். அறத்தில் அன்பும் அருளும் அடங்கும்.

‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்’ என்ற வள்ளுவர் இலக்கணம் மிகவும் நுட்பம் மிகுந்தது. அறத்திற்குச் செயல் திறம் வேண்டும் என்பதை வலியுறுத்தும் வரிகள் இவை. உள்ளொன்றும் புறமொன்றுமாகவும் இல்லாமல் அகமும் புறமும் தூய்மையுடன் ஒத்திருக்க வேண்டும். மனம் அழுக்கற்று, அவாவற்று, வெகுளியற்று, இன்னாச் சொல் அற்று இருக்க வேண்டும்.

தூய்மையான செயல் வேண்டும் என்றால் துணையாக நிற்பவை தூய்மையான மனமும், தூய்மையான சொல்லும் ஆகும். அறத்தின் செயல்நோக்கம் கருதி ‘அறவினை’ என்று குறிப்பிடுவார் வள்ளுவர். ஔவையும் ‘அறஞ்செயவிரும்பு’ என வள்ளுவர் வழிநின்று பேசுவார். இவைகளே, மெய்ம்மை, வாய்மை, உண்மை என வழங்கப்படுபவை. வாய்மை என்றால் கண்ணால் கண்டதைக் கண்டபடியே சொல்வதா? உள்ளத்தால் உணர்ந்ததை அப்படியே உரைப்பதா? அவ்வாறு கூறும் போது சில சமயம் பிறருக்குத் தீங்கு நேருமாயின் அது வாய்மையால் வந்த தீமை என்று கருதப்படும் அல்லவா? அப்படியாயின் வாய்மைக்கு இலக்கணம் என்ன?

வாய்மைக்கு அரியதோர் இலக்கணம் கூறுகிறார் வள்ளுவர். மற்ற மனிதர்களுக்கோ, உயிர்களுக்கோ தீங்கு செய்யாத சொற்களைச் சொல்வதெல்லாம் வாய்மை என்று சொல்லப்படும். நடந்ததைச் சொல்வது மட்டு மன்றிப் பிறருக்குத் தீங்கு நிகழாமல் நினைப்பதும் சொல்வதும் செய்வதும் வாய்மையாகும்.

“வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்

     தீமை இலாத சொலல்”        (291)

சில சமயங்களில் ஒரு பொய்யால் நன்மை விளைவதைப் பார்க்கிறோம். பொய் ஒன்று பேசி, அதனால் நன்மை விளைகிறதா? ஆராய்ந்து பார்க்கிறார் வள்ளுவர். முடிவாகச் சொல்கிறார், அப்பொய்யும் மெய்யைச் சார்ந்தது என்று. ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறார். அப்பொய் விளைவிக்கும் நன்மை களங்கமற்றதாய், கறையற்றதாய், குற்றமற்ற நன்மையைப் பிறருக்குத் தருமாயின் அப்பொய்யும் மெய்தான் எனப் பேசுகிறார், பொய்யாமொழிப் புலவரின் ‘பொய்ம்மையும்’ என்ற சொல் இங்கு நயமுடையது.

“பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

     நன்மை பயக்கும் எனின்”      (292)

நம் சான்றோர்கள் உண்மையை வணங்கி அதன் ஒளிச் சுடரினைப் பின்பற்றியவர்கள்; வாய்மையின் ஆற்றல் இறையாற்றல் என உணர்ந்தவர்கள். உலகங்கள் அனைத்திலும் அறிவாய், அனுபவங்களாய், உள்ளுணர்வுகளாய் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்கும் மெய்ம்மையே இறை எனக் கண்டவர்கள். உலக வாய்மையை உணர்ந்தவர்கள் உணர்வுடையவர்களாய் மகான்களாக, மகாத்மாக்களாக உயர்கின்றனர். அவர்கள் பெருமையை உணர்ந்து போற்றுகிறார் வள்ளுவர்.

பொய்ம்மை நீங்கிய உள்ளத்துச் சான்றோர்களை உலக மக்கள் தங்கள் உள்ளங்களை எல்லாம் காணிக்கை ஆக்கிப் போற்றிப் பாராட்டுவார்கள். என்றும் தம் உள்ளங்களில் நிலைநிறுத்திப் புகழ்வர் என்று பொய்யாமையின் சிறப்பைக் கூறுவார் வள்ளுவர்.

‘சத்யமேவ ஜயதே’ என்ற இந்தியக் குடியரசின் இலச்சினையும் ‘வாய்மையே வெல்லும்’ என்ற தமிழக அரசின் இலச்சினையும் வாய்மையின் சிறப்புக் கருதியே பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வுண்மைகள் நம் இதயத்தில் இடம் பெறவேண்டும்.

உடலின் புறத்தே படிந்த அழுக்குகள் தண்ணீரால் நீங்கிவிடும். சோப்புப் போன்ற வாசனைப் பொருள்களால் உடலை வாசமுறச் செய்யலாம். ஆனால் உள்ளத்தில் உள்ள அழுக்குகளை நீக்கிட உள்ளம் அறவொளியால் நிறைந்திட உதவும் ஆற்றலுடையது உண்மையே. உண்மை உள்ளழுக்கு களை நீக்கி, இருள் நீக்கும் ஒளி விளக்குப் போல் நெஞ்சின் இருள் போக்கி என்றும் உள்ளத்தை ஒளியுடையதாய் ஆக்கும்.

“புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை

     வாய்மையாற் காணப் படும்.”        (298)

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

     வாய்மையின் நல்ல பிற”       (300)

தாம் அறிந்த பேருண்மைகளில் தலையானது எனத் தம்மை முன்னிலைப்படுத்தி வாய்மையைப் போன்று பெருநன்மையும் நலமும் தரும் செயல் வேறொன்றும் இல்லை என அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறார் வள்ளுவர்.

மனத்தோடு வாய்மை மொழிந்து, சொல் வேறு, செயல் வேறு என்று மாறுபடாமல் உண்மையாளர்களாய், நல்ல அரிய செயல் செய்பவர்களால்தான் உலகம் வாழ்கிறது.

அறவாழ்வால் விளையும் நன்மைகள் என்ன? வாழ்வு துன்பம் இல்லாமல், சுமையாக இல்லாமல் மகிழ்வும் இனிமையும் மிக்கதாய் விளங்க வேண்டுமானால் வாழ்வு அறம் நிறைந்து இருக்க வேண்டும். செம்மையாகத் திருத்தப்பட்ட சிறந்த பாதையிலே பாதுகாப்புடன் செல்லும் துன்பமில்லாப் பயணம் போல் வாழ்வுப் பயணமும் பயமில்லாததாய்ப் பயன்மிகுந்ததாய்ப் பிறருக்கும் இவ்வறவாழ்வின் பயன் தந்து நலம் நல்கும். தீவினை வந்து தாக்கும் வாழ்வையும், பிறவியையும் தாண்டலாம். நீண்ட நிலைத்த புகழும், அமைதியும், அன்பும், இன்பமும் கொலுவீற்றிருக்கும்.

“சிறப்புஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊங்கு

     ஆக்கம் எவனோ உயிர்க்கு?”         (31)

“வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்

     வாழ்நாள் வழியடைக்கும் கல்”       (38)

அறத்திற்கு இணையானது அறமே. ஆகையால் அறத்தை மேற்கொள்வதே பாதுகாப்பானது. இயன்ற வழியெல்லாம் அறச்செயல் செய்து வரவேண்டும். ஆரவாரம் ஒழிந்து தூய்மை மிகுந்து உள்ளத்தில் ஒளி மிகுந்து வாழ்வில் இன்பமும், நிறைவும் மிகுதல் வேண்டும். உலகில் மக்கள் கள்ளால், மதுவால், காமத்தால், சூதால், ஆபாசத் திரைப்படங் களால் இன்பம் பெறுவதாக மயங்கித் திரிகின்றார்கள். இவையனைத்தும் நிலையில்லாத சிறுமை இன்பங்கள்; இறுதியில் துன்பத்தில் ஆழ்த்தி மனிதனை அழித்துவிடும் ஆகா இன்பங்கள்.

அறத்தால் வரும் இன்பம் தான் நிலையானது. செய்யத்தக்கது அறனே என்றும், நீக்கத்தக்கது பழியே என்றும் அறம் பாடினார் வள்ளுவர். அறத்தால் புகழும், அறமில்லாச் செயலால் பழியும் பாவமும் நிறையும். அறவொழுக்கம் உடையவர்களுக்கும் அற இயக்கங்களுக்கும் இன்று மதிப்புக் குறைந்து வருகிறது. அறனறிந்து மூத்த அறிவுடையோர் கேண்மை போற்றும் பண்பு தேய்ந்து வருகிறது. ஆரவாரம் மிக்கவர்கள் தீயவர்கள். காமம், வெகுளி, மயக்கங்கள் உடையவர்கள் பெருகி வருகிறார்கள். மக்களின் உணர்வுகளை மயக்கி ஆரவாரத்தால் போலிச் செல்வாக்கைப் பெருக்கி அவற்றை ஓர் ஆற்றலாக்கி, தகுதியற்றோர் எல்லாம் பெருமதிப்புப் பெற்றும், சான்றோர்கள் ஒதுக்கப்பட்டும் வரும் அவல நிலையும் மலிந்து வருகிறது.

“வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா

     யாக்கை பொறுத்த நிலம்”      (229)

என்கிறார் திருவள்ளுவர்.

ஆதலால் அறிஞர்களும் சான்றோர்களும் போற்றப்பட வேண்டும். தீது விரைந்து வளர்ந்தாலும் வளர்ந்த விரைவுக்கு ஏற்ப விரைந்து அழிந்து மறைந்துவிடும் என்பது உலக நியதி. ஆதலால் மக்கள் ஆரவாரங்களுக்கும் மயக்க உணர்வுகளுக்கும் ஆட்படாமல் துணிவோடும் நம்பிக்கையோடும் ஒற்றுமையோடும் அறநெறி போற்றி வாழ வேண்டும். வறுமையில் மிகப்பெரிய வறுமை சிந்தனை வறுமையும் நற்செயல் செய்யாத வறுமையும் ஆகும். அறவோர்கள் துணிவு மிக்கோராய், வலிமையான அமைப்புகளின் துணைகொண்டு அறநெறிகள் தழைத்தோங்கப் பாடுபட வேண்டும். அறமே ஆக்கம் தரும், நீண்ட நிலைத்த இன்பத்தையும் புகழையும் அமைதியையும் தரும் என்ற உண்மைகளை உணர்த்த வேண்டும்.

“திருந்திய நல்லறச் செம்பொற் கற்பகம்

     பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால்

     வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஓம்புமின்

     கரும்பெனத் திரண்ட தோள்கால வேல்கணீர்”

(சீவக சிந்தாமணி)

“திருவும் இன்பும் சிறப்பும் புகழுமற்று

     ஒருவர் ஆக்கலும் நீக்கலும் உள்ளவோ?

     மருவும் புண்ணிய மாந்தர்க்கு அவைஎலாம்

     தருமம் இன்றெனில் தாமே சிதையுமால்”

என்ற இவ்வுண்மைகள் அனைத்தும் உணர்த்தி, துன்பம் உறவரினும் இன்பம் பயக்கும் வினைகளைத் துணிவுடன் ஆற்ற வேண்டும், ஊக்கமுடன் நல்லறச் செயல்கள் செய்ய வேண்டும் என்னும் உறுதி மக்களிடையே பரவ வேண்டும். மதுரை மாநகரில் முத்தமிழ் வளர்க்கும் இத்தமிழ் இசைச் சங்கமும் இயன்ற வகையெல்லாம் முத்தமிழால் அறநெறிகள் செழித்தோங்கிட அறமே ஆக்கம் தரும் என்ற உண்மையை உலகெலாம் பரப்பிட உறுதுணை நல்க வேண்டும்.

“இன்றுகொல்? அன்றுகொல்? என்றுகொல்? என்னாது

     பின்றையே நின்றது கூற்றமென்று எண்ணி

     ஒருவுமின் தீயவை; ஒல்லும் வகையால்

     மருவுமின் மாண்டார் அறம்”        (நாலடியார்.136)

“அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க; மற்றுஅது

     பொன்றுங்கால் பொன்றாத் துணை”         (36)

“அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

     பெருமை முயற்சி தரும்”            (611)

இசைபட வாழ்தல்

 

வளர்ச்சியுடையதாய், விரிவுடையதாய் அன்பும் அருளும் கொண்டு பிறர்நலம் போற்றும் போதுதான் வாழ்வு சிறக்கின்றது, பெருமையுறுகின்றது. குறுகிய தன்னலம் இழிவுடையது, பழித்தற்குரியது. தன்னை, பிறரை அன்பால் விரும்பாதவர்கள் வாழ்வு வெறுக்கத்தக்கது. அன்பு பாராட்டி ஈகை உணர்வு கொண்டு வாழாதவர் யாரும் வாழ்ந்தும் வாழ்ந்ததாகக் கருதப்பட மாட்டார்கள். வள்ளுவர் இதனை,

“ஈதல்; இசைபட வாழ்தல்; அதுஅல்லது

     ஊதியம் இல்லை உயிர்க்கு”          (231)

எனக் கூறுவார். ஈதலால் புகழுடன் வாழ்வதே வாழ்வாகும். அப்புகழ் இல்லாது வாழும் வாழ்க்கை பயன் ஒன்றுமே இல்லாத உயிர் வாழ்க்கை எனத் தெளிவுடன் கூறுவார் அவர்.

மேலும், தனக்கு இணையாகத் தனிப் பெருமையுடைய தாய் விளங்கி நிற்பது யாதென்றால் ஓங்கிய பெருமையுடைய புகழோடு கூடிய வாழ்க்கையன்றி சிறப்புடையது வேறொன்றும் இல்லை. உலகத்து இறப்புடைய நிலையில்லா வாழ்வில் இறவாது நிற்கும் புகழ் போல் சிறப்புடையதும் வேறொன்றும் இல்லை.

“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

     பொன்றாது நிற்பதுஒன்று இல்”  (233)

என வள்ளுவர் புகழின் பெருமையை நயம்பட எடுத்துக்காட்டுவார்.

Image result for thiruvalluvarபுகழ் இல்லாத வாழ்வு வாழ்கின்றவன் வாழ்வு எத்தகையது? செந்நாப்போதார் கூறுகின்றார்: வளமுடைய நிலம், பழிப்பில்லாத வளமுடைய நிலம் புகழுடன் வாழாத ஒருவனைச் சுமக்கும்போது, தன் வளத்தை இழந்து, விளையும் பயனும் குன்றும் என்று பழித்துரைக்கின்றார்.

“வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா

     யாக்கை பொறுத்த நிலம்”      (239)

எனவே தம்மிடத்துப் பழியின்றி வாழ்பவரே உயிர் வாழ்வார். புகழின்றி வாழ்பவர் வாழ்ந்தும் இறந்தவர் ஆவார். இதனை வள்ளுவர்,

“வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசைஒழிய

     வாழ்வாரே வாழா தவர்”       (240)

என்பார். ஆதலின், புகழ் வாழ்வு பொது நோக்கை, பிறர் நலத்தை அடிப்படையாகக் கொண்டது. இவ்வுணர்வு, எண்ணம் சொல்லளவுடன் நில்லாது செயலாக முழுமை யடையும் போதுதான் சமுதாயம் பயன்பெறுகிறது.

செல்வம் பல சிறப்புகளைத் தரும் பெருமையுடையது என்று எடுத்துக்கூறி, அச்செல்வம் தனக்கென மட்டும் பயன்படாது பிறர்க்கும் பயன்படும் பெருமையுடையதாக இருக்க வேண்டும் என்பதனை,

“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

     பேரறி வாளன் திரு.”               (215)

“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

     நயன்உடை யான்கண் படின்”        (216)

“மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

     பெருந்தகை யான்கண் படின்”   (217)

என்ற குறள்களால் சிறந்த உவமைகளைக் கொண்டு விளக்கிக் காட்டுவார் வள்ளுவர்.

தகுதி மிக உடையவர் முயற்சியால் பெருஞ்செல்வம் ஈட்டினால் அப்பொருளைத் தமக்கு மட்டுமன்றிப் பிறர்க்கும் நலம் பயக்கும்படி பயன்படுத்துவர். ஓர் ஊரில் அமைந்திருக்கும் தண்ணீர் உண்ணும் குளம் நீரால் நிறைந்திருந்தால் அது எவ்வாறு ஊர் மக்களுக்கும் பறவையினங்களுக்கும் விலங்கினங்களுக்கும் நெடிது நின்று பாழாகாமல் தப்பாது பயன்மிகத் தருமோ அதுபோல், பேரறிவாளன் திரட்டிய பெருஞ்செல்வம் உலக நடைக் கேற்பப் பேரளவில் பெருஞ்சிறப்புடையதாகப் பயன் தரும்.

ஓர் ஊரில் பயன் மிகத் தரும் பழ மரம் பழுத்து நிறைந்திருந்தால் அது அனைவருக்கும் எவ்வாறு எளிதில் பயன்பட்டு நலம் பயக்குமோ அதுபோல, நயனுடையான் கண் செல்வம் தங்கிப் பெருகியிருக்குமாயின், பழமரம் தரும் பழங்களே போல் அனைவருக்கும் நலம் தந்து எளிதில் பயன்படும்.

செல்வம் ஒப்புரவு செய்யும் பெருமையுடைய தகைமை யாளனிடம், பெருந்தகையாளனிடம் நிறைந்திருக்குமாயின் ஊறு செய்யும் பிணிக்கு மருந்தாக நிற்கும் மருந்துமரம் போல் பயன்பட்டுச் சமுதாயத்தின் வறுமை நோய் நீங்கிட உறுதுணை செய்யும். ஆனால் நச்சப்படாதவன் செல்வம் நடுவூரில் நச்சுமரம் பழுத்த கனிகள் நிரம்பப் பெற்றிருந்தாலும், அது ஊருக்கு எவ்வித பயனையும் தராது உண்பார்க்குத் தீது பயக்குமோ அது போலச் சமுதாயத்திற்கு மிகுந்த தீமை விளைவித்து விடும் என்பர்.

“நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்

     நச்சு மரம்பழுத் தற்று”         (1008)

மாட மாளிகையின் அகமெல்லாம் நிறைப்பதற்கு ஏதுவான பெரும் பொருளைத் திரட்டியும், அதனை ஈயாத குணத்தால் கருமியாக இருப்பவன் வாழ்க்கை நலத்திற்குப் பயன்படுத்தாதவன் வாழ்கின்றவன் ஆயினும் செத்தவன் ஆவான், இதனை,

 

“வைத்தான்வாய் சான்ற பெரும் பொருள் அஃதுண்ணான்

     செத்தான் செயக்கிடந்தது இல்”       (1001)

என்ற குறளில் வள்ளுவப் பெருந்தகை கடுமையாய் அக்கருமியின் சிறுமையைச் சாடுவார்.

பொருள், வாழ்வை மகிழ்ச்சியாய் அமைப்பதற்கு உரிய ஒரு கருவி அல்லது துணை என்று அறியாமல், பணம் தான் எல்லாமே என்று அறிவு கெட்டு மயங்கி, ஈட்டிய பெருஞ்செல்வத்தைத் தானும் பயன்படுத்தாமல் பிறர்க்கு, தகுதியுடையார்க்கு மகிழ்ச்சியைத் தரும்படி கொடுக்காமல், தானும் துய்த்து அனுபவிக்காமல் பணம் சேர்ப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பேய் போல் அவாக்கொண்டு பொருளைப் பயன்படுத்தாது வாழ்பவனுக்கு நிறைவில்லாத பேய்ப்பிறப்பு ஒன்றே கிடைக்கும். இக்கருத்தினை,

“பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்

     மருளான்ஆம் மாணாப் பிறப்பு” (1002)

என்ற குறளில் வள்ளுவர் எடுத்துரைப்பார். இத்தகையோன் எதற்காகப் பொருள் சேர்க்கப் பாடுபட்டுத் துன்பமுறுகின்றான் என வியந்து காரணத்தையும் கண்டு எள்ளி நகையாடுகிறார் அவர். தான் பிறரைக் காட்டிலும் பொருள் ஈட்டுவதில் வல்லவன்; தனக்கு இணை வேறொருவர் இல்லை என்று பிறரால் பாராட்டப்பட வேண்டும் என்ற உணர்வால் உந்தி, பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு, உண்பதிலும் உடுப்பதிலும் கூடக் கருமியாக இருந்து, பிறர்க்கு முகமலர்ந்து கொடுத்து உபசரித்து அதனால் பெறும் மகிழ்ச்சியையும் புகழையும் அறியமாட்டான். இவன் எவ்வளவுதான் பெரிய செல்வன் ஆனாலும் செல்வத்தைத் தனக்கும் பிறர்க்கும் பயன்படுத்தாத் தன்மையினால் அவன் பிறப்பு, நிலைத்து நிற்கும் புகழை விரும்பா அந்தப் பிறப்பு நிலத்திற்குப் பாரமாகும்.

“ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்

     தோற்றம் நிலக்குப் பொறை”         (1003)

 

எனச் சாடுகிறார் வள்ளுவர். தான் நுகர்வதும் பிறர்க்கு ஈவதும் ஆகிய இரண்டு தன்மைகளும் செய்கைகளும் இல்லாத ஒருவனுக்குப் பலவாகிய, அடுக்கிய கோடிப் பொருள் உண்டாயினும் ஒன்றும் பயனில்லை. அடுக்கிய கோடிப் பொருள் உண்டாயினும் பிறர்க்குக் கொடுத்தலும் துய்த்தலும் இல்லாதவன் செல்வம் இருந்தும் பொருளில்லா வறியவனே.

“கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

     கோடிஉண் டாயினும் இல்”         (1005)

தானும் அனுபவிக்காது, துய்க்காது, தகுதி உடையார்க்கும் வழங்காது, ஈகை நெஞ்சம் இல்லாதவனின் பெருஞ்செல்வம் சமுதாயத்தின் கொடிய நோய் போன்றது. இதனை,

“ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று

     ஈதல் இயல்பில்லா தான்”      (1006)

என்ற குறளால் விளக்குவார் வள்ளுவர்.

மேலும் தன்னைச் சார்ந்தவர்களைக் கண்டால் மனத்தில் வெறுத்து, நெருக்கம் கொண்டால் பொருள் உதவியோ வேறு உதவியோ செய்திட வேண்டுமே என அன்பு காட்டாமை மட்டுமின்றி, அவர்களிடம் கடுமையாக நடந்து, பெரும் பொருள் இருந்தும் தானும் துய்க்கார். அதுமட்டுமின்றித் தன்னையும் துன்புறுத்திக் கொண்டு, வருத்திக்கொண்டு தகுதியுள்ளோர்க்கும், வறியோர்க்கும் ஈதலும் விருந்தோம்பும் தன்மையும் இல்லாது வாழ்பவரது செல்வத்தை, பாடுபட்டு ஈட்டிய செல்வத்தைப் பிறர் பறித்து, அபகரித்து, பறித்தவர் பயன்பெற்று வாழ்வர். பொருள் ஈட்டிய இக்கருமிக்குப் பெருந்துன்பமே கண்ட பயன் என்று இரங்குவார் என்கிறார் வள்ளுவர்.

“அன்புஒரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டிய

     ஒண்பொருள் கொள்வார் பிறர்”       (1009)

ஆதலின் செல்வத்தின் பயன் ஈதல் என்று உணர்ந்து ஈதலால் வசையின்றி இசைபட வாழ்ந்திட வேண்டும் என வள்ளுவர் மிகவும் வலியுறுத்துவார். ஒரு சிறந்த பொதுநல அமைப்பிற்கு ஒவ்வொரு தனி மனிதனின் உயர்ந்த உள்ளமும், பரந்த மனமும், தன்னலமற்ற அருள் உணர்வும், பொதுநலம் பயக்கும் பணி செய்திடும் விருப்பும் இன்றியமையாதன ஆகும்.

உயர்ந்த தன்மைகள், பண்புகள் அமையப் பெறுவது அருமையாகத்தான் இருக்கும். எப்போதுமே பெருமை யுள்ளவை அருமையுள்ளவைகளாக, சோதனைகளுக்கு உட்படுபவைகளாகத்தான் இருக்கும். இருப்பினும், அரியது என்று தளராது மக்கள் நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால், அதிலும் சிறப்பாகச் செல்வர்கள் உயர் பண்புகளை வளர்த்துத் தம்மைச் சான்றோர்களாக்கிக் கொண்டால் சமுதாயம் சீரும் சிறப்பும் நலனும் வளனும் பெற்றுத் திகழும்.

மக்கள் மலர்களைப் போல் மணம் வீசி மாண்பு பெற வேண்டும். தழைகளைப் போல் பயனின்றி வாழ்தல் இழிவுடையது என்பதை முதுகண்ணன் சாத்தனார் புறநானூற்றில் நயம்பட எடுத்துரைக்கின்றார்.

“சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ்

     நூற்றிதழ் அலரி நிரைகண் டன்ன

     வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து

     வீற்றிருந் தோரை எண்ணுங் காலை

     உரையும் பாட்டும் உடையோர் சிலரே;

     மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே;

     புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

     வலவன் ஏவா வான வூர்தி

     எய்துப என்பதம் செய்வினை முடித்தெனக்

     கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி”

-& புறநானூறு 27

“தாமரை மலர்களைப் போல் எழிலுடைய மக்கள் பலர் உலகில் பிறக்கின்றனர். நூறிதழ்கள் நிறைந்த பெரிய மலர்களைப் போலவும் மக்கள் தோன்றுகின்றனர். ஒவ்வொன்றிற்கும் உயர்வும் தாழ்வும் இல்லாத ஒத்த பெருமலர்களின் வரிசை போல, நிரை போல சிறந்த அரச குலத்தினரும் தோன்றுகின்றனர்; தமது சிறப்பு விளங்கிடவும் வீற்றிருக்கின்றனர். எனினும் மலரன்ன அம்மக்களுள் பாட்டுடைச் சிறப்பும் புகழும் உடையவர் மிகச்சிலரே. உலகத்தில் மணக்கும் மலர்களைப் போல் சிறந்து விளங்காமல் மக்களில் தழைகளைப் போல் பயனின்றி மாய்ந்தோரே பலராவர். மணம்மிகு மலரைப்போல் விளங்குபவரிலும் புலவரால் பாடப்படும் புகழுடையோர் மிகமிகச் சிலர். அவர்தாம் நல்வினையை முடித்துக் கொண்டு புகழ்மிக்கு விளங்கும் விண்ணுலகு செல்லும் வானவூர்தியில் அமர்ந்து செல்வர்” எனப் பிறர்க்கு பயன்படும் வாழ்க்கையின் பெருமையை முதுகண்ணன் சாத்தனார் எடுத்துக் கூறியதுபோல் மலர்களைப் போல் பல செல்வர்கள் இருந்தாலும் மணக்கும் அரிய சில மலர்களைப் போல் புலவராலும் சான்றாண்மை மிக்கவராலும் போற்றப்படும் செட்டிநாட்டரசர் போல் ஒரு சிலராவது மணம் வீசும் மலராக விளங்கிச் சமுதாயம் மாண்புபெறப் பணி செய்திட வேண்டும்.

“உற்றவர் நாட்டவர் ஊரார் & இவருக்கு

     உண்மைகள் கூறி இனியன செய்தல்

     நற்றவம் ஆவது கண்டோம் & இதில்

     நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை!

     பக்கத்திருப்பவர் துன்பம் & தன்னைப்

     பார்க்கப் பெறாதவன் புண்ணியமூர்த்தி

     ஒக்கத்திருத்தி உலகோர் & நலம்

     உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி”

எனப் பாரதியார் ஊருக்கு உழைத்திடலே யோகம் என்று பிறர்நலம் போற்றும் பெருமையை உணர்வு பொங்க எடுத்துக் கூறுவார்.

பாரதிதாசன் இவர் வழியில்,

“தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்

     தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்னும்

     தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் & ஆங்கே

     சண்டை யில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே”

என உரைப்பார். ஆதலின் உயர்ந்த புகழ் பிறர்க்கு உதவுதலிலே உள்ளது. தன்னலம் இழந்து உதவுவது தலையாய புகழாகும்.

“ஒப்புரவி னால் வரும் கேடுஎனின் அஃதுஒருவன்

     விற்றுக்கோள் தக்கது உடைத்து”      (220)

என்ற வள்ளுவர் இலக்கணத்திற்கு இலக்கியமாக நிற்கும் உயர் புகழ்வாழ்வு அது. அவ்வுயர் வாழ்விற்கு ஈடில்லை, இணையில்லை. இத்தகைய சிறப்பு வாழ்க்கை வாழ்ந்திடு என வள்ளுவர், ‘ஈதல் செய், இசைபட வாழ்; அதுவே வாழ்வின் பயன்’ என்று ஆணையிட்டுக் கூறுகின்றார்.

“ஈதல்; இசைபட வாழ்தல்; அதுஅல்லது

     ஊதியம் இல்லை உயிர்க்கு” –        (231)