குறள் நிலா முற்றம் 12

ஒருங்கிணைப்பாளர்

“குறளில் ‘நட்பு’ எனும் மானுடப் பொது உறவு பற்றி வரும் ஐந்து அதிகாரங்கள் ஒருபுறம் இருக்க, இருமுறை வரும் அதிகாரப் பெயர் ஒன்றும் உள்ளது. அது என்ன என்று சொல்கிறீர்களா?”

(அவையில் சற்று அமைதி)

“நானே சொல்லிவிடுகிறேன். அது தான் குறிப்பறிதல்!”

இளைஞர் ஒருவர்

“செம்மல் லேசாக ஜாடை காட்டியிருந்தால், இந்தத் தலைப்புப் பெயரை நானே சொல்லி இருப்பேன். நெஞ்சில் நின்றது, சொல்லில் வருவதற்குள்…”

ஒரு புலவர் ஐயா

“இந்தக் காலத்துத் தம்பிகளில் பெரும் பாலோர்க்குக் குறிப்பறிதல் உடனே புரிவதில்லை; அவர்களுக்குப் புரியும் குறிப்புக்களோ நமக்குப் புரிவதில்லை.”

(அவையில் பலத்த சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“‘குறிப்பறிதல்’ அதிகாரப் பெயர் – பொருட்பாலில் அங்கவியலில் உண்டு; காமத்துப் பாலில் களவியலிலும் அது உண்டு. அங்கே அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகத்தைச் சொல்லுகிறார்.”

பெரும்புலவர்

“இங்கேதான் சிறிசுகள் முகத்தை மூடிக்கிறதுகளே?” (அவையில் சிரிப்பு).

ஒருங்கிணைப்பாளர்

“காமத்துப் பாலில் அறத்துப்பால் உள்ளிட்ட பல உளவியற் செய்திகளை நுட்பமாகச் சொல்லுகிறார் வள்ளுவர் எனச் சற்று முன் சொன்னேனே… அதைத் தொடர்ந்து சில நினைவுச்சரங்கள்.”

பேராசிரியர்

“இன்பத்துப்பால் தான் இதர அறம், பொருள் பிரிவுகளுக்கு அடிப்படை எனத் ‘திருக்குறள் செம்மல்’ அவர்கள் தக்க சான்றுடன் எப்போதும் நிறுவுவார்…

ஒருங்கிணைப்பாளர்

இதற்கிடையே இந்த நூற்றாண்டின் தொடக்க நன்னாளில் உலகே வியக்க, நம் பாரதத் திருநாட்டின் பாதச்சுவடாக விளங்கும் நீலத்திரைக் கடலோரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரியின் முக்கடல் கூடும் இடத்திலே, உலகு வியக்க நிறுவப்பெற்ற திருவள்ளுவரின் சிலை அமைப்பும் இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே செதுக்கப்பட்டுள்ளது என்பதும் உலகம் உள்ள வரை நிலை பெற்றிடும்.”

பேராசிரியர் வளனரசு

“சிலை திறப்புப் பெருவிழாவில் பங்கேற்று மகிழ்ந்த நான் காணாத ஏதோ ஒரு செய்தியைப் பேராசிரியர் சொல்லுகிறார்.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“கலைஞர் பெருமானாரின் 20 ஆண்டு விடா முயற்சியாலும் அருங்கலைச் சிற்பி கணபதி ஸ்தபதியின் குழுவினரது ஈராண்டு உறங்கா உழைப்பாலும், கருங்கற் களைப் பாளம் பாளமாக வடிவமைத்து வண்ணமுற நிமிர்த்தப்பட்ட இந்தத் திருவள்ளுவர் சிலை, அமெரிக்க சுதந்திரதேவி சிலையை விடச் சிறப்புப் பெருமையுடையது; கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெறத்தக்கது. 1330 குறட்பாக்களை 133 அதிகாரங்களில் வகுத்துள்ளமைக்குச் சான்று பகருவது போல 133 அடி உயரப் பெருமையுடையது; பிரமிப்புத் தருவது.

இதில் நான் சிறப்பாக அவையோர் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவது இந்த 133 அடி உயரச் சிலையின் மூன்று நிலைப் பகுப்பு.

சிலைநிற்கும் ஆதார பீடத்தின் உயரம் 38 அடி. இது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களுக்கு நிகர். இந்தப் பீடத்தின் மீது நிமிர்ந்து நிற்கும் உருவச் சிலையின் உயரம் 95 அடி. அதாவது பொருட்பால் அதிகாரம் 70, இன்பத்துப்பால் அதிகாரம் 25 இரண்டும் சேர்ந்தால் 95, ஆதார பீடத்தையும் சேர்த்தால் ஆக மொத்தம் 133 அடி (அவையோர் கர ஒலி)

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் வள்ளுவர் சிலையின் வடிவமைப்பை விரித்துச்சொல்லி வள்ளுவர் முப்பாலில் காமத்துப்பால், பொருட்பால் எனும் இரண்டும் அறத்தின் மீதே ஊன்றி நிற்கின்றன எனும் அற்புதப் பொருத்தத்தை அழகுறச் சொன்னார். அறிதற்குரிய அரிய செய்தியை நினைவூட்டியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி (மீண்டும் கைதட்டல்) நான் விட்ட இடமான சிலை பற்றிய விவரங்களை மீண்டும் பேசுவோம். அறிதோறும் அறியாமை கண்ட இடத்திற்கு மீண்டும் போகலாமா?”

“ ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம், செறிதோறும் சேயிழை மாட்டு” (1110) எனும் ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதிகார இறுதிக் குறட்பா அறிவினைத் தேடத் தேட, அறியாமையே மிகுவதை இவ்வளவு நுட்பமாக உணர்த்துகிறது. மற்றொரு அருமையான குறள்.. அதே அதிகாரத்தில்தான்,

“தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

     அம்மா அரிவை முயக்கு”            (1107)

என நம்மை விருந்தோம்பலோடு இந்த மனையாளொடு இருந்தோம்பி மகிழும் ஆரா இன்பத்தையும் அழகுற ஒன்றாக்குகிறார் வள்ளுவர்..”

இடைமறிக்கும் புலவர்

“தமது வீட்டில் இருந்து கொண்டு, தாம் சம்பாதித்தலில் விருந்து அளித்து அதை விருந்தினர் வயிறார உண்பதைக் கண்டு மகிழும் மனம்…”

பெரும்புலவர்

“பின்னே என்ன? ஓட்டலுக்குப் போய் நாலு பேரோட வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு, பில்லைத் தட்டுலே வச்சவுடனே வேறே பக்கம் முகத்தைத் திருப்பிக்கிற இந்தக் கால நாகரிகத்தை – அடுத்தாத்து நெய்யே என் அகத்துக்காரி கையேங்கிற உபசாரத்தை – வள்ளுவர் செய்யவில்லை.”

ஓர் அரசு அதிகாரி

“நண்பருடன் ஓட்டலுக்குப் போய்ச் சிக்கிக் கொண்ட அனுபவத்தோடு புலவர் ஐயா பேசுகிறார்” (சிரிப்பலை)

புலவர்

“அட, நான் ஓட்டலுக்கே போறதில்லைய்யா. வீட்டிலேயே நமக்கு எப்போதும் விருந்துதான் போங்க…”

இன்னொருவர்

“அந்த ரகசியத்தையும் சொல்ல மாட்டேங் கிறீங்களே” (மீண்டும் சிரிப்பு)

மற்றோர் அரசு அதிகாரி

“இந்தப் பரம ரகசியங்களை எல்லாம், ஒவ்வொருவரும் பகிரங்கப்படுத்தத் தொடங்கி விட்டால் அதற்காக என்றே தனி இயல் ஒன்றை நாமே வகுத்து, அதையும் வள்ளுவர் தலையில் கட்டிவிடலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“வருமான வரித் துறை ஆணையர் திரு மோகன் காந்தி அவர்கள் ஏதோ புதிய செய்தி ஒன்றை எழுப்ப விழைகிறார். கேட்டறியலாமே?”

வருமான வரித் துறை ஆணையர் திரு.மோகன் காந்தி

“மூதறிஞர் ராஜாஜி அவர்களின் ‘பஜ கோவிந்தம்’ எனும் நூலைப் படித்தேன் இரு குறட்பாக்களில் வரும் ‘வேண்டாமை எனும் செருக்கு – பற்றுக பற்றற்றான் பற்றினை’ எனும் வரிகளுக்கு மன நிறைவான விளக்கம் பெற்றேனில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“பொருள் சேர்ப்பது வாழ்க்கைத் தேவை. அதனை உழைப்பால் நியாயமான முறையில் ஈட்ட வேண்டுமே தவிர, அறம் தவறிப் பொருள் சேர்க்கும் வேணவா, பேராசை அறவே கூடாது. அதிலும் தவறு எனக் கருதாமல், பிறர் பொருளைக் கவர முயன்றால் அதனால் முடிவில் துன்பமே மிகும். ‘இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும், வேண்டாமை என்னும் செருக்கு’ (180) என்பது குறள். பிறர் பொருளைக் கண்டு பொறாமை யுறுவதே குற்றம் எனப்படும். அப்படியிருக்கப் பிறர் பொருளை எப்படியேனும் அபகரிக்கச் சதித்திட்டம் செய்வது பெருங்குற்றம். அன்புடையவர் பிறர்க்குப் பொருளுதவி செய்து அவரைக் கை தூக்கி விடுவர்.”

அரசு அதிகாரி ஒருவர்

“பொறாமையும் பேராசையும் உடையவர் உதவி செய்வது போல நடித்துத் தக்க சமயத்தில் காலை வாரி விடுவார். கை தூக்கி விடுவதை விட, காலை வாரி விடுவதுதான் இப்போது மிகச் சுலபமாகத் தெரிகிறது.” (அவையின் முறுவல்)

ஒருங்கிணைப்பாளர்

“அன்பற்ற பொறாமைக் குணமுடையார், கொள்கையோ நடுநிலையோ இல்லாது, பிறர் தேடிய பொருளைத் தான் மட்டும் எப்படியும் அடையக் கருதினால், அவர்களுடைய குடி அழியும், குற்றங்களும் அப்போதே விளையும். எனவே, தவறான முறையில் பொருள் தேட மறுப்பதே ஒருவகையில் மானமுடைய செருக்கு என்கிறார் வள்ளுவர்.”

பெரும்புலவர்

“கலைத்திறமுடையோர்க்குக் கலைச்செருக்கு இருப்பது போல, தமது அரிய உழைப்பால் பெருஞ்செல்வம் சேர்த்தோர் சிலரிடம் மிடுக்கு அமைவது போல, வெற்றி மேல் வெற்றி பெறும் அரசியல் தலைவர்கள் சிலருக்குச் செருக்கு வந்து பற்றிக்கொள்ளுவது போலப் பிறர் பொருளைக் கவர நினையாமையே ஒரு வகையில் செருக்கு; அதாவது, வியந்து பாராட்டத்தக்க செருக்கு எனும் குறள் கருத்தைச் செம்மல் விளக்கியமைக்கு நன்றி. அடுத்து..”

ஒருங்கிணைப்பாளர்

‘நடுவுநிலை தவறிச் சேர்த்த பொருளால் தானம் செய்து புகழ், விளம்பரம் என்றெல்லாம் தேடினாலும், அது, ஒருவகையில் கருமித்தனம் தான்.”

புலவர் ஒருவர்

“அதற்குப் பின்னால் கர்ம வினைப் பலனும் உண்டு.”

ஒருங்கிணைப்பாளர்

“அறத்தொடு சாராத பொருளைப் பிறர்க்கு ஈகை செய்வதால், புகழோ பெருமையோ நிலைபெற்று விடாது, வெற்று விளம்பரமாகவே போய்விடும்.”

வருமான வரித் துறை அதிகாரி

“ராஜாஜி சொன்ன.. பற்றுக குறளைக் கொஞ்சம் பற்றுக..” (அவையில் சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

     பற்றுக பற்று விடற்கு..”        (350)

என்பது வள்ளுவம்”

பெரும்புலவர்

“வருமான வரித் துறை ஆணையர் கேட்ட கேள்வியில் எத்தனை பற்றுகள்? பற்றும் வரவும் இல்லாமல் பேரேடு போட முடியாது. வரிவிதிப்பும் கிடையாது” (சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“‘துறவு’ அதிகாரத்தின் இந்தக் கடைசிக் குறளில் ‘பற்று’ எனும் பிடிப்பு வாழ்வையும் விடுப்பு வாழ்வினையும் வள்ளுவர் வேறுபடுத்திக் காட்டுகிறார். துறவு முறைகள் பல வகை. இளங்கோவடிகள், விவேகானந்தர் போன்றவர்களின் மணவாத் துறவு, மணந்து வாழும் போதே ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின் மேற்கொள்ளும் சில கோட்பாட்டுத் துறவுகள், அருளுணர்வு பெருகி, தன்னலம் ஓய்ந்தபின், இல்லற வாழ்வையும் துறந்து, பிறர் நலம் பெறவும், தன் ஆன்மா உய்வு பெறவும் முழுமைத் துறவே பூணுதல்… ஆனால், இல்லறத்தில் இருக்கும் போதே, சில நிலைகளில் பற்றற்று வாழ்ந்து, கடமையைச் செய்வோரும் காந்தியடிகளைப் போலச் சிலர் உண்டு. புறத்துறவும் கொள்ளலாம். அகத்துறவும் அமையலாம். முழுமையான, பற்றறுத்த வாழ்க்கை, ஐம்புலனையும் செம்மையாக அடக்கிய வாழ்க்கை பூணுவது எளிதில்லை. ‘யான், எனது…’ என்பது இருந்தே தீரும்.”

பெரும்புலவர்

“ஏதாவது ஒன்றைப் பற்றி நிற்பதே உயிரின் இயல்பு. எனவே சில்லறைப் பற்றுக்களை விட வேண்டுமானால் செம்பொருளான சிறந்ததொரு பற்றினைப் பற்றுக என்பது தானே பொருள்?”

ஒருங்கிணைப்பாளர்

“பிறவி நோக்கம் இடையறா இன்பமே ஆகும். அதனால் நிம்மதியும் அமைதியும் பெறுவதே குறிக்கோள். இந்த இன்பத்திற்கு அடிப்படை ஆசை. அது அளவின்றிப் பெருகிப் பேராசையாகிவிட்டால், அதுவே துன்பத்திற்கு மூல காரணம் ஆகிவிடுகிறது.”

பேராசிரியர்

“அதாவது, ஒருவன் எதனிடம் மிகுபற்றுக் கொண்டு வாழ்கிறானோ அதனால் துன்பம் அடைவான், எதிலிருந்து பற்று விட்டு நிற்கிறானோ அதானல் அவனுக்குத் துன்பம் இல்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்’ (341) எனும் குறட்கருத்து அதுதான். இந்தப் பத்தாம் பற்றுக் குறளை வள்ளுவர் வினா – விடை போல அமைத்துள்ளது தான் சிறப்பு. கைவிட வேண்டியது எது? பற்று விடுதல். அதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும்? வேறொன்றைப் பற்றுக. இந்தப் ‘பற்றுக’ எனும் பதத்தை மிக நயமாகக் கையாண்டு ஒருவகை மயக்கமூட்டுகிறார் வள்ளுவர்.”

பெரும்புலவர்

“ஆமாம், எதைப் பற்றினாலும் மயக்கம் வந்துவிடாமல் கைப்பற்ற வேண்டும்.”

ஓரன்பர்

“புலவர் ஐயா எந்தப் பற்றையும் இன்னும் விடாத அனுபவத்தைச் சொல்கிறார்” (அவையில் சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“இப்போதெல்லாம் தனிநபர் வாழ்வை விடச் சமுதாய வாழ்வில் இருப்போரிடம் பொதுப்பற்றை விடத் தன்னலப் பற்று, தன் பெண்டு, தன் பிள்ளை என்னும் வாரிசுப் பற்றுகள் ஆட்டி வைக்கின்றன. இத்தகையோரிடம் மக்களிடம் அதிலும் சிறப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழே சீரழிந்தோரிடம் இரக்கச் சிந்தை எனும் பற்றுறுதி ஏற்பட்டால், பிற சுயநலப் பற்றுக்கள் எல்லாம் தாமாக விட்டுப்போக ஆரம்பித்துவிடும். புகழ்ந்தவை போற்றிச் செய்யும் பெருமனம் வளரத் தொடங்கும். வள்ளலார் வேண்டியது போல, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்யும் தொண்டுமனப் பற்று விடாது பற்றிக் கொள்ளும். அதனைப் பற்றுக என வள்ளுவர் சொன்னதாகக் கருதி ராஜாஜியின் பஜ கோவிந்தச் சரிதத்தை நாமும் ஏற்போம்.” (கை தட்டல்)

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“எல்லோரும் ‘பஜ கோவிந்தம்’ மட்டும் பாடிக் கொண்டே இருந்தால் நாட்டில் படரும் பசிப்பிணி போய்விடுமா, என்ன? இந்த உலகு இருக்கும் வரை ஏழையரும் இருப்பர். எனவே அயலாரை நேசித்து உதவும் பற்றினை வளர்ப்பதே மனித நேயம். அது இல்லாத வெறும் இறைபக்தி பொருளற்றது என விவிலியம் போதிக்கிறது.”

இடையில் ஒருவர்

“கிட்டத்தட்ட எல்லாச் சமயங்களின் உபதேச சாரமும் அதுதான்.”

ஒருங்கிணைப்பாளர்

“உபதேசம் வெறும் ஊறுகாய் போல மட்டும் இருந்து விடலாமா? பற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளரவேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.”

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 11

Image result for valluvar

பெரும்புலவர்

“இல்லாளுக்குப் பத்து இல்லாதவனுக்கு 20!”

ஓர் அன்பர்

“என்ன பெரும்புலவர் ஐயா ஏதோ புதிர் போடுகிறார்?”

பேராசிரியர்

“மனையற வாழ்வில் ‘இல்லாள்’ எனும் சொல் இல்லத்திற்கு உரியவளேயான மனைவியைக் குறித்திட, ‘இல்லான்’ எனும் எதிர்ச்சொல், கணவனைச் சுட்டாமல் ஏதும் இல்லாத வெறும் பயலைக் குறிப்பதாகப் புலவர் ஐயா, சொல்லாமல் சொல்லுகிறார். ஆனால் 10/20 என்ற கணக்குத்தான் புரியவில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“பெரும்புலமைப் பெருந்தகை ஒரு வகையில் கணக்குப் போட்டே சொல்லியிருப்பதாகக் கருதலாம். வாழ்க்கைத் துணை நல இல்லத்தரசி பற்றி 10 குறளோடு முடித்துவிட்டு, இல்லத் தலைவன் கடைப்பிடிக்க வேண்டியவற்றை ‘பிறனில் விழையாமை’, ‘பெண் வழிச்சேரல்’ எனும் இதர தலைப்பில் 20 குறளில் சொல்ல நேர்ந்ததை 20 அம்சத் திட்டம் போலச் சொல்லியதாகக் கருதுவோமே!”

வளனரசு

“பிறனில் விழையாமை’ அதிகாரத்திற்கு முன்னுரை எழுதிய பரிமேலழக உரையாசான், ‘காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விரும்பாமை எனும் இது ஒழுக்கமுடையாரிடமே நிகழ்வதாதலின், ஒழுக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது’ எனப் பொருத்தமான விளக்கம் தருவார்.

“பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

     அறம்பொருள் கண்டார்கண் இல்.”    (141)

“அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

     நின்றாரின் பேதையார் இல்”        (142)

என்றெல்லாம் வள்ளுவர் அறவழி நிறுத்துவர்.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் வளனரசு வரிசைப்படுத்தியமை போல அறநெறியில் இல்வாழ்பவன், பிறன் மனை நயவாதவனே ஆவான். ‘ஆண்மை’ என்றால் ஆளுமை. அது புற வீரத்தைவிட, அக ஒழுக்கமான மனஅடக்கத்தில்தான் தலைநிமிர்ந்து விளங்கும். அது கோழைத்தனம் அல்ல.”

அரசு அதிகாரி

“ ‘பிறன்மனை நோக்காத பேராண்மை’ என்கிறாரே?”

 

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“அன்பர் சுட்டிய ‘நோக்காத’ எனும் வள்ளுவச் சொல்லாட்சி மீண்டும் மீண்டும் நினைக்கத்தக்கது. ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட ஒரு பொருள் சுட்டும் பல சொற்கள் உள்ளமை போலத் தமிழிலும் காண், பார், நோக்கு எனும் சொற்கள், பல்வேறு பொருளமைதிச் சாயல்களுடன் கையாளப்படுகின்றன.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் சுட்டிக்காட்டியது போல வள்ளுவர் நோக்காமை’ எனும் சொல்லால் மிகுந்த நுண்மாண் நுழைபுலத்தோடும் உளவியல் பாங்கோடும் எடுத்தாண்டுள்ளார்.

ஓர் அன்பர்

“ஒருவகை உள்நோக்கத்துடன் பார்ப்பதைத் தான் ‘நோக்கு’ என்கிறார்.”

ஒருங்கிணைப்பாளர்

“அதுதான் உகந்த பொருள். அழகாக இருக்கும் பொருளைப் பார்த்து உளமார ரசிப்பதில் தவறில்லை. அழகிய மாதொருத்தியை நோக்கி, அவள் தன் மனைவியாக இருக்கக் கூடாதா என மறுகுவதுதான் தவறான உள் நோக்கு.”

அரசு அதிகாரி

“அப்ப ரசிக்கலாம். நோக்கக்கூடாது என்கிறீர்கள்.”

கருணைதாசன்

“ரசனைக்கும் ஒரு வரையறை உண்டே?”

பெரும்புலவர்

“வரம்பு மீறி ரசித்து, விழைந்தமையால் வந்த வினையைப் பல கதைகள் நமக்குப் பாடமாகச் சொல்லி உள்ளனவே… அடுத்தவன் மனைவியின் அழகில் மயங்கி, அறம் தவறி, மதிகெட்டு, மானம் மட்டும்  இன்றி, தன் வாழ்க்கையையே வீணடித்துக் கொண்ட வரலாற்று நிகழ்ச்சிகள் நம் நாட்டில் பல உண்டு.”

மற்றொரு புலவர்

“வானுலக வேந்தனான இந்திரன், அகலிகையின் அழகில் மயங்கி, அவளை நுகர மானுட வேடம் போட்டு நடத்திய நாடகத்தில் முனிவரிடம் பெற்ற சாபம் ஒரு பெரிய புராணம்!”

புலவர் செல்வ கணபதி

“அதைச் சேக்கிழாரின் புனிதமான பெரிய புராணத்தோடு ஒப்பிட்டு விடாதீர்கள்.” (சிரிப்பலை அவையில்)

அரசு அதிகாரி

“இந்தக் காலத்தில் எல்லாம் ஏதேனும் ஒரு சின்னவீடு இருந்தால்தான் ஒரு பெரிய மனிதருக்குப் பெருமை என்றாகிவிட்டது.” (மீண்டும் சிரிப்பலை)

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“இராமாயணக் காப்பியத்தின் மூலக்கருவே இராவண வதம் என்றால் அவனது அழிவுக்குக் காரணம்? ‘முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும், எவராலும் வெல்லப்படாய் எனப் பெற்ற வரமும், உலகெல்லாம் கடந்த புயவலியும்’ என்பன எல்லாம் கற்பெனும் கனலியான சீதையை, வஞ்சகமாய் அபகரித்த காரணத்தால் வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு வீடு திரும்பினான் என்ற அவலத்தை நினைத்து சின்ன வீட்டு ஆசைகளை அகற்றிவிட வேண்டுகிறேன்.” (சிரிப்பு)

வருமான வரித் துறை ஆணையர்

“இல்லறக் கடமைகளில் ஆணை விடக் கூடுதலாகப் பொறுப்பேற்கும் பங்காளி என்பதால் தான் ஆங்கில மரபில் ‘ஙிமீttமீக்ஷீ பிணீறீயீ’ என்பர். காந்தியடிகள் ‘கீஷீனீணீஸீ வீs லிவீயீமீ’s றிணீக்ஷீtஸீமீக்ஷீ’ எனச் சரிநிகர் சமானம் தந்தார்.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராண்மை என்ற சொல்லை மீண்டும் நினைத்தால் வள்ளுவர் மனத்திட்பத்திற்கே பெருமை சேர்த்துள்ளார் என்பது விளங்கும்”

அவையில் ஒருவர்

“செம்மல் சொல்வது போல எவ்வளவுதான் மனத்திட்பத்தோடு வீட்டை விட்டு வெளிக்கிளம் பினாலும் சினிமாக் கவர்ச்சிகளும் விளம்பரக் காட்சிகளும் ஆண்கள் மனத்தை மட்டும் அல்ல, பெண்கள் உடல் நளினத்தையும் அளவுக்கு மீறிக் கொச்சைப் படுத்தும் ஒரு புதிய அநாகரிகம் ஓங்கி வருவது எல்லோரையும் அன்றைய இந்திரன் போல அகலிகைகளைத் தேடச் செய்துவிடும் போல உள்ளது.”

அன்பர் ஒருவர்

“கண்களை மூடிக்கொண்டு நடக்கப் பழகுங்கள், சரியாகிவிடும்” (அவையில் சிரிப்பு)

செந்தமிழ்க் கல்லூரி மாணவி சித்ரா

“நீங்கள் என்னதான் சமாதானம் கூறினாலும் வள்ளுவர் பெண்களை ஆண்களுக்கு அடிமை களாகக் கருதியே பல குறட்பாக்களைச் செய்துள்ளதாக நான் குற்றம் சாட்டுகிறேன்.

சான்றாக,

‘தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுதுஎழுவாள்

     பெய்யெனப் பெய்யும் மழை’        (55)

எனும் குறளில் பெண் தன் கணவனையே தெய்வமாகத் தொழவேண்டும் எனும் நிபந்தனை யையும், அத்தகையவள் ‘பெய்’ எனச் சொன்னால் மழை பொழிய வேண்டும் என்ற கட்டாயமும் ஒருவகை ஆணாதிக்கத்தையே காட்டுகின்றன. இப்போதெல்லாம் பெண்கள் கணவனைத் தொழாமல், பெய் எனவும் சொல்லாமல் இடை விடாமல் பேய்மழை பொழிந்து ஊரெல்லாம் வெள்ளக்காடாகி விட்டதே? அப்படியானால் ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் தத்தம் கணவன்மார்களுக்கு ஒரே சமயத்தில் செய்த வழிபாட்டு ஆராதனையின் விளைவா இந்த வெள்ளப் பெருக்கு?”

மற்றொரு தமிழாசிரியை

“செல்வி சித்ரா குறிப்பிட்டதை விட, சமுதாயத்தில் கண்டதும் காதல், பெண்மைச் சீண்டல் (ணிஸ்மீ ஜிமீணீsவீஸீரீ)..” ஆகியன தினசரி நடப்பு களாக உள்ளனவே…

இடைமறித்த ஒருவர்

“ஆண்களும் சீண்டப்படுகிறார்களே?” (சிரிப்பலை)

மற்றொருவர்

“சீண்டலாலும் தீண்டலாலும் ஆண்மகன் எப்படியோ தப்பித்து விடுகிறானே! பெண்கள் தானே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்? சீண்டல்- தீண்டலின் விளைவை காலம், பருவம் எல்லாம் காட்டிக் கொடுத்து விடுகின்றனவே…?”

புலவர்

“குறள் நம் கையில் உள்ள முகக் கண்ணாடி போன்றது. அவரவர் முகம் அதில் தெரிவது போல, ஒழுக்கத்தைப் பொறுத்தவரை அவரவரே வரம்பு கட்டி வாழ வேண்டும்.”

வளனரசு

“சற்றுமுன் குறிப்பிடப்பட்ட பெண் பெய் எனப் பெய்யும் மழை பற்றி ஒரு கருத்து…”

அன்பர் ஒருவர்

“வெளியே மழை ஓய்ந்தாலும் அரங்கினுள்ளே தூவானம் விடாது போலிருக்கிறதே!”

வளனரசு

“சிறுதெய்வ வழிபாட்டை விடத் தன் கணவனையே உளமார நேசித்து வணங்கி வாழ்பவள், உரிய நேரத்தே பெய்ய வேண்டும் எனப் பிறர் எல்லாம் வேண்டும் பருவ மழையைப் போன்றவள் என நேரடியாகவே பொருள் கொள்ளலாம். இதில் ஒரு கடவுள் தன்மையையும் பகுத்தறிவுக்குப் பொருந்தாமையையும் தம் உரைமேல் ஏற்றி, பரிமேலழகர், மணக்குடவர் போன்ற பெருமக்கள் அன்றைய காலப் போக்கிற் கேற்பச் செய்து வைத்த தவறு. அந்த உரைகளில் கூட வேறுபாடுகள் உண்டு என்பதே உண்மை.”

பேராசிரியர்

“இக்குறட்பா இளங்கோவடிகளையும் மணிமேகலை ஆசிரியரையும் மனம் கவர்ந்தது என்பார் பேரறிஞர் கா.அப்பாத்துரையார், இருவருமே தமது காப்பியங்களின் நாயகியரின் கற்புத்திறம் விளக்க இக்குறளை எடுத்தாண்டு உள்ளதாக நினைவு.”

ஒருங்கிணைப்பாளர்

“கற்பரசி, தெய்வத்தையோ கணவனையோ தொழுதெழுவாள்; மழை பெய்யும் என்பதை விட கற்புடைப் பெண்ணைத் தெய்வமும் தொழுதேத்தும் எனும் உணர்வோடு பொய்யில் புலவன் பொருளுரை தேர்ந்து இந்த விவாதப் பகுதியை இத்துடன் முடிப்போமே.”

கல்லூரி மாணவி

“முற்றத்து அவையோர் முன்னர் மகளிர் சார்பாக மற்றும் ஓர் ஐயத்தைக் கேட்டு, இனி அடுத்து வரும் நாட்டாட்சி பற்றிய பகுதிக்குச் செல்லத் தடைக்கல்லாக நிற்கிறேன். மன்னிக்கவும்.”

முதியவர் ஒருவர்

“ஏம்மா தயக்கம்? வீட்டுக்கு அப்புறம் தான் நாடு, அதிலும் மகளிர்க்கு ஐயப்பாடு வந்தால் வீடும் சரிப்படாது; நாடும் உருப்படாது. கேளுங்கள், கேளுங்கள்.”

மாணவி

“வள்ளுவரின் காமத்துப்பால் உலகு முழுவதும் உள்ள ஆண் – பெண் உறவு முறைக்குப் பொருந்துமா? இந்த உறவு முறைகளில் இப்போதெல்லாம் பல வகையான அனுசரித்துப் போதல். அதாவது…”

பேராசிரியர்

ஆங்கிலத்தில் சொல்லப் படும் எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் இசைவில்லாத, அவிழ்த்து விடப்பட்ட ஒரு சுதந்திரமான, மனம் போன போக்கு – ஒரு கலாச்சாரமாக அல்லது அனாச்சாரமாக வளர்ந்து வருவதைத்தானே சொல்கிறீர்கள்?”

வளனரசு

“ஆண் – பெண் உறவு முறை என்பது அடிப்படை நோக்கில் உலகு முழுவதும் ஒன்றுதான். அணுகும் முறைகளில்தான் அந்தந்தப் பண்பாட்டுக்கு உகந்த மாறு பாடுகள் உண்டு. அதனை அந்தந்தச் சமூகம் ஏற்றுக் கொண்டால் சரிதான். நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, சங்க இலக்கிய அகத்திணை தொட்டு வள்ளுவம் வரை கருதும்போது – ‘களவில் தொடங்கி கற்பில் முடிவதே’ இந்தப் புனித உறவு என்று சொல்லி விடலாம். எங்கள் பேராசான் வ.சுப.மா.அவர்கள் முனைவர் பட்ட ஆய்வேடாக நூலில் கிரேக்க ஆங்கில மேதைகளின் கருத்துக்களையும் குறிப்பாக ஹாவ்லக் எல்லிஸ்எ ன்பாரின் இரு தொகுதிப் பேரேட்டிலும் இக்கருத்தே நிலவுகிறது. காதலில் தொடங்கிக் கற்பில் நிலை கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது போலவே கொழுநனிடம் ‘நண்ணேன் பரத்த நின்மார்பு’ எனும் உறுதிப்பாடு நன்றாகத் தொனிக்கிறது; இன்பத்துப் பால் வாழ்கிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“இன்பத்துப்பாலில்தான் வள்ளுவர் மிக நுட்பமான செய்திகளைச் சொல்லுகிறார்.”

ஒருவர்

“அதை விரிவாகவே சொல்லுங்கள்!” (சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“அறத்துப்பாலில் சொல்லாது விடப் பட்ட பல அறிவியல் செய்திகள்… குறிப்பாக ‘அறிதொறும் அறியாமை கண்டற்றால்…’ என்ற அரிய தொடர்  அன்றே கருதிய ஒப்பரிய செய்தி வருகிறது.”

பேராசிரியர்

“மனம் பயன்படும் இடம் சமூக வாழ்வோடு இணைந்திருந்தாலும் அது பண்படும் இடம் குடும்ப வாழ்வின் இன்ப நிலையமே என்பார் பேரறிஞர் மு.வ. அது மட்டும் அல்ல. அறிவும் உணர்வும், வன்மையும் மென்மையும், அழகும் இளமையும், கவர்ச்சியும் முயற்சியும் என்றெல்லாம் இணந்துள்ள குடும்ப வாழ்வில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து, தொண்டும் தியாகமும் மேவிட வாழ்வதே சீரிய வாழ்வு எனவும் வலியுறுத்துவார்.”

பெரும்புலவர்

“அதுமட்டும் அல்ல ஐயா!… வள்ளுவர் காமத்துப் பாலில் ஒருதலைக் காமத்தையோ, ஒவ்வாக் காதலையோ கூறவில்லை. ‘அன்பின் ஐந்திணை’ எனப் பெரியோர் வகுத்த ஒத்த அன்புடைய, ஒன்றிய அன்றில் பறவை போன்ற உரிமை வாழ்வையே பேசுகிறார்; நன்கு குறிப்பிட்டுப் பேசுகிறார்.”

ஒருங்கிணைப்பாளர்

“குறளில் ‘நட்பு’ எனும் மானுடப் பொது உறவு பற்றி வரும் ஐந்து அதிகாரங்கள் ஒருபுறம் இருக்க, இருமுறை வரும் அதிகாரப் பெயர் ஒன்றும் உள்ளது. அது என்ன என்று சொல்கிறீர்களா?”

(அவையில் சற்று அமைதி)

குறள் நிலா முற்றம் – 10

Image result for thirukkural

 

பேராசிரியர்

“குணம் என்னும் குன்றார்க்கு வெகுளி ஏற்படுவது இயல்புதான் என்றே வள்ளுவர் ஏற்கிறார்.”

புலவர் ஒருவர்

ஆனால், அது ஒரு கணமே நீடிக்கும் – அதற்குள் காத்துக் கொள்க என மீட்சியும் சொல்கிறார். இந்த இளைஞர் அந்த ஒரு கணத்திற்குள் ஓடி வந்துவிட்டார் என நினைக்கிறேன்.”

இளைஞர்

“குணம் எனும் குன்றேறி நிற்பதாகக் கருதப்படும் பெரியவரிடம் கோபாக்கினி போலச் சுட்டெரிக்கும் சினம் வரலாம் என வள்ளுவர் சொல்லுகிறாரா?”

ஒருங்கிணைப்பாளர்

“சுயநலம் கருதாது, பொதுநலப் பணியில் முனைந்திருக்கும் போது இடையூறுவரின், அதுவும் ஒரு வகையில் குணநல வெளிப்பாடு எனவே கொள்ள வேண்டும். அத்தகைய சினம் – வெகுளி, கரவின்றிச் சடுதியில் வெளிப்பட்டுவிடும். மின்னல் போல ஒரு வெட்டுவெட்டிவிட்டு, விரைவில் மறைந்தும் விடும் என்பதே என் கருத்து.”

“ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

     வேந்தனும் வெந்து கெடும்.”         (899)

உயரிய கொள்கையால் உரம் பெற்ற சான்றோர்க்குக் கோபமே வரக்கூடாது என்பது நடைமுறைச் சாத்தியமா? எனும் கேள்வி இங்கு முரணாக முன் நிற்கிறது.”

வருமான வரித் துறை அதிகாரி

“இயேசுபிரான், நபிகள் நாயகம் உள்ளிட்ட சமய நிறுவனர்களுக்கும், காந்தியடிகள் போன்ற அகிம்சையே உயிராகக் கொண்டோர்க்கும், பண்டித நேரு போன்ற ஆட்சிப் பொறுப்பாளர் களுக்கும் அவ்வப்போது சினம் ஏற்பட்டதை வரலாற்றில் படித்திருக்கிறோம்.”

வாழ நூல் செய்த வள்ளுவர்

வளனரசு

“வள்ளுவப் பெருந்தகை எப்பொருளையும் அதன் பயன்பாடு கருதியே விளக்குவார். உலகுக்கு ஒட்டக்கூடிய ஒழுக்க வரைமுறையே பேசுவார். வாழ நூல் செய்தவர் ஆதலால் செயல்பாட்டுக்கு வரும் அற முறைகளையே அடுக்கிச் சொல்வார் என்பது எங்கள் பேராசான் வ.சுப.மா.வின் வள்ளுவம்.”

பேராசிரியர்

“இங்கு கூறிய கருத்துக்கு உடன்பட்டு ஒன்று சொல்வேன். ஈட்டும் பொருளனைத்தையும் ஈகையாகத் தந்துவிடுக என வள்ளுவர் சொல்லவில்லையே?

“ஆற்றின் அளவறிந்து ஈக; அது பொருள்

     போற்றி வழங்கும் நெறி”            (477)

என்றே போதிக்கிறார்.”

ஒருங்கிணைப்பாளர்

“அந்த நடைமுறைக்கு உகந்த முறையினையே அவர் கூறும் சான்றோர் சினம், அல்லது சாதாரண மக்கள் வெகுளாமை என்பனவற்றிற்கும் பொருத்திப் பார்க்கலாம்.

ஒருவர் உள்ளத்தில் உருவாகும் வெறுப்பும் பகையுமே வெகுளியாய், சடுதியில் வெளிப்படுகிறது. அது அருளுடைமைக்கு மாறானது. எனவே, அதற்கு இடம் தராமல் காத்து வர வேண்டும். ஆயினும் குறிப்பாக வலியார் – மெலியார் என எல்லோரிடமும் சகட்டு மேனிக்குச் சினம் காட்டி எரிந்துவிழுதல் மனிதப் பண்பு ஆகாது. செல்லிடத்தும் காப்பதே சினம். பிற இடத்தில் அதைக் காப்பதும், காத்துக் கொள்ளாததும் ஒன்றுதான். எனவே நிர்வாகச் செயலினூடே சிலரது இடையீட்டால் பொறுப்பில் உள்ளோருக்கு அடக்கமுடியாதபடி வெகுளி ஏற்படினும், சினம் கொள்ளமாட்டேன் எனும் உறுதியை நாள் தோறும் வளர்த்து வந்தால்தான், தப்பித்தவறியும் சினம் கொள்ளாமல் பிறரோடு, தன்னையும் காத்துக் கொள்ள முடியும்.”

ஓர் அன்பர்

“அலுவலகக் கோபத்தைப் பற்றிப் பேசுவதைவிட அன்றாடம் வீட்டில் மனைவி மக்களோடு எல்லாம் கோபப்படாமல் பொழுதை ஓட்ட முடிவதில்லை; கல்விக் கூடத்தில் மாணவரைக் கண்டிக்காமல் இருக்க முடிவதில்லை.”

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

 ‘கோலைப் பேணிக் குழந்தையைக் கெடு’ எனும் பழமொழியே நியாயமான கோபம் – உலோகத்தைச் சூடேற்றி உருவமைப்பதற்குச் சமமானது என்றே உளவியல் ரீதியாகச் சொல்லுகிறது. கோபமே கொள்ளாத சாதுவை ‘அப்பிராணி’ என்றும் ‘மண்ணாந்தை’ என்றும் பட்டம் சூட்டி நையாண்டி செய்கிறது.”

பெரும்புலவர்

“சப்-கலெக்டர் ஐயா… ஆங்கிலப் பழமொழியைச் சொன்னார்… நான் ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் பயின்ற நாளில் கேட்டும் சொல்லியும் மகிழ்ந்த பாடலைச் சொல்லட்டுமா?”

அன்பர் ஒருவர்

“பெரும் புலவர் ஐயா பாட முற்பட்டால் அதைத் தடுத்துவிட முடியுமா? நீங்கள், உங்கள் பழைய பாட்டைப் பாடுங்கள்; எங்கள் பாட்டிற்கு நாங்கள் இருக்கிறோம்.”

பெரும்புலவர்

“அந்தக் காலம் அச்சுப்புத்தகம் வராத – ஏடும் எழுத்தாணியும் மாணவப் படைக் கலங்களாக இருந்த காலம்.”

அன்பர்

“சரி ஐயா – பாட்டைச் சொல்லுங்கள்”

ஏடும் எழுத்தாணியும்

பெரும்புலவர்

“ஏடு கிழியாதா? எழுத்தாணி ஒடியாதா? வாத்தியாரு சாவாரா? வயிற்றெரிச்சல் தீராதா?” (எல்லோரும் சிரித்தல்)

அன்பர்

“புலவர் ஐயா.. எத்தனை ஏட்டைக் கிழித்தாரோ, எத்தனை எழுத்தாணியை ஒடித்தாரோ… ஆனால் (பட்ட) பாட்டை மட்டும் மறக்காமல் சொல்லிவிட்டார்.”

ஒருங்கிணைப்பாளர்

“நாட்டு நிலவரப் போக்கில் சீர்குலைவு ஏற்படக் காணும் போது சான்றோர் வாய் மூடி இருக்கலாகாது; இருக்கவும் மாட்டார்கள். அத்தகைய ஏந்திய, உயரிய கொள்கையர் சீற்றம் கொள்ள நேரிட்டால், ஆட்சித் தலைவனாகிய வேந்தனோ, அவர் யாராயினும் இடைமுறிந்து வீழ்ந்து விடுவர்; ஆட்சியும் கவிழ்ந்துவிடும்.”

பேராசிரியர்

“ஒருங்கிணைப்பாளர் கூறிய இந்த கருத்தைத் தொடர்ந்து நான் சொல்ல வருவது ஒன்று உண்டு. சினம், கோபம், வெகுளி என்பன எல்லாம் வாழ்க்கைப் போக்கில் நமக்கு ஏற்படும் இயல்பான தொரு மெய் உணர்வு. புராண கால விசுவாமித்திரர் சாபம் தொட்டு, இராமாயண இராம பிரானின் சினம், பாரதப் போருக்கு வித்திட்ட பாஞ்சாலி சபதம், மதுரையை எரித்த கண்ணகியின் ஆறாச் சினம், கண்ணகியையும் கோவலனையும் மதுரைக்குக் கூட்டி வந்த கவுந்தியடிகள் இடைவழியில் குறுக்கிட்ட தீயவர்களை முள்ளுடைக்காட்டில் முது நரிகளாகிடச் சபித்த கோபம் எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால் சமுதாயத்தை அணி கோலிக் காப்பது இந்த அன்றாட மன உணர்வுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் (லிணீஷ்s) என ஒரு தொகுப்பு இன்றேல் இன்று சமூக ஆட்சியோ, அரசமைப்போ இராது.”

அன்பர்

“இந்தச் சட்டத்தாலும் பல சமயம் தீங்கு நேரிட்டுள்ளதே?”

பேராசிரியர்

“உரிமைப் போர்க்காலத்தில் காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கம் நடத்தியதற்கும் இன்று பல வகைகளில் நாடெங்கும் சட்ட எதிர்ப்பு உண்ணாவிரதங்கள் நடப்பதற்கும் உரிய காரணம் – சட்டம் எப்போதும் சரிவரச் செயல்படாமையே அல்லது செயல்படவிடாமையே.”

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்

அரசு அதிகாரி

“அத்தகைய சங்கடமான சூழலில் என்ன செய்வது?”

ஒருங்கிணைப்பாளர்

“அங்கே தான் சான்றோர்கள் வந்து முன் நிற்கிறார்கள். நமது பெரிய ஆதீனம் அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளார், தெய்வத்திரு வாரியார் சுவாமிகள் முதலிய பண்பட்ட அருளாளர்களும் ஞானசீலர்களும் சமுதாயத்தை நெறிப்படுத்த முன் வருகிறார்கள்! அத்தகைய ‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ என முத்தாய்ப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை. உலகம் வாழ்வது சட்டத்தால் அல்ல; சம்பிரதாயக் கோட்பாடுகளால் அல்ல; உலகு உயிர்ப்பது பண்பட்ட பெரியோரின் தன்னலமற்ற வழிகாட்டுதலால் மட்டுமே! அத்தகைய சான்றோர் சினம் கொள்ள நேர்ந்தாலும், அது ஒரு கணமே நீடித்தாலும்… அத்தகைய சூழல் ஏற்படாமல் முற்காக்கும் தற்காப்பே மக்களுக்கும் நல்லது; ஆட்சிக்கும் பொருந்துவது. மற்றொன்று பிறர் நலமும் பேணும் நல்ல சமுதாய அமைப்பில் போராட்டத் தேவையே ஏற்படாமல் போய்விடும்; அதையும் மீறிப் போரிட்டே ஆக வேண்டிய கட்டாயத்தை ஓர் அரசமைப்போ, நிர்வாகமோ உருவாக்கு மானால், அதுவும் இடைமுரிந்து அழிந்து போய்விடும் எனும் கருத்தில் யாருக்கும் முரண் இருக்க முடியாது.”

‘தமிழ்ப் பாவை’ கருணைதாசன்

“வாழ்க்கையில் இன்று முரண்கள் அதிகமாகி முட்டுக்கட்டையிடும் களங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. அறிவியல் வளர்ச்சியில் புதிய அங்கங்கள் ஒவ்வொரு துறையிலும் நாளுக்கு நாள் உருவாகி வருவதையும் அவற்றைப் பயன் கொள்வதை¬யும் முரணாக ஏற்க வேண்டிய தில்லை. ஆனால் வாழ்வியல் அடிப்படைத் துறைகளான கல்வி, அரசு, நிர்வாகம், ஆன்மீகப் போக்கு, பொதுத்துறை நிறுவனச்செயல்பாடு, மக்கள் போராட்டம் என நாள்தோறும் புதுப்புது முரண்கள் முளைத்து வருவதை நாம் கண்டும் காணாமல் இருக்க இயலாதல்லவா..? அந்த முரண்களைப் பற்றியும்…”

அரசு அதிகாரி

“இன்று சந்தித்த எண்ணற்ற முரண்களோடு நிலா முற்ற அரங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.. சாப்பாடு காத்திருக்கிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘தமிழ்ப்பாவை’ ஆசிரியர் சுட்டியது போல, நமக்குத் தோன்றும் முரண்களை எல்லாம் அடுத்து வரும் அரங்கில் கலந்து ஆய்வோம். இந்த அரங்கு அன்ன மீனாட்சி உணவக வள்ளுவர் அரங்கில் விரைவில் நிகழ்வுறும். இப்போது தமிழ் வாழ்த்துடன் உணவுக்குச் சொல்வோம். அனைவரும் வருக.”

(நிலவை மேகம் மறைக்கிறது)

அமர்வு மிமிமி

அன்ன மீனாட்சி வள்ளுவர் மன்ற அரங்கு இறைவாழ்த்துடனும் குறள் வாழ்த்துடனும் தொடங்கியது.

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைய நிலா முற்றத் தொடர்ச்சி அரங்கிற்கு மகளிர் அதிகமாக வந்துள்ளமை பெருமை தருகிறது.”

ஒருவர்

“அன்ன மீனாட்சி அரங்கில் அறுசுவையோடு நடக்கும் போது மகளிர் அதிகமாக வருவது இயல்புதானே!”

ஒருங்கிணைப்பாளர்

“முதலில் எங்கள் வி.கே.கே.மேனிலைப் பள்ளித் தமிழாசிரியர் திருமிகு வள்ளியம்மை வந்துள்ளார். அவர் தொடங்கட்டும்.”

வள்ளியம்மை

“நான் குறளைப் போலவே கடவுள் வாழ்த்துடன் என் ஐயத்தைத் தொடங்குகிறேன். வள்ளுவப் பேராசான் தம் பொதுமை நூலில் ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ எனத் தொடங்கு கிறார். ஆதிபகவன் என்பது சமண, பௌத்த சமயத் தொடர்புடையவை.  அப்படியானால் வள்ளுவர் எந்தச் சமயத்தவர்?”

வளனரசு

“எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய (ஆங்கில நெடுங்கணக்கின் ‘ஏ’ உட்பட) எழுத்தை முதன்மையாகக் கொண்டிருப்பது போல, உலகம் ‘பகவனை’ அதாவது ஒரு மூலப் பொருளை முதலாகக் கொண்டுள்ளது என்பது நேர் பொருள்.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“இந்த ‘பகவன்’ எனும் சொல் வடமொழியில் இல்லை. வள்ளுவரால் உருவாக்கப்பட்ட தூய தமிழ்ச்சொல் என்றே அறிஞர் பலர் கருதினர். ஏனெனில், இச்சொல் சங்க இலக்கியங்களில் பயிலப்படவில்லை; சிலம்பு, மணிமேகலையில் முறையே அருகப் பெருமானையும் புத்தரையும் அதிலும் கூட இடுகுறிப் பெயராகவே சுட்டுகிறது.”

இடைமறித்த புலவர்

“இன்னா நாற்பதில் முதல் பாடலிலும் வருகிறது.”

பேராசிரியர்

“ஆனால் உரையாசிரியர்கள்தான் வடமொழிச் சொல்லோ எனக் கருதி ‘வழிபாட்டுக்கு உரியவன்’ எனப் பொருளமைதியைத் தந்துவிட்டனர் எனலாம். ‘ஆதிபகவன்’ எனும் சொல், தொல்காப்பியம், சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு, இரட்டைக் காப்பியங்கள், ஏன் பிற்காலத் தேவார திருவாசகம், திருமந்திரம், ஆழ்வார் பாசுரங்களிலும் இல்லை என அறுதியிட்டுச் சொல்லலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“ஆனால், குறளில், ‘முதல’ எனும் சொல் அடிப்படையானது, காரணமானது, முதன்மை யானது எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டது என ஏற்போமே.”

பெரும்புலவர்

“நோய் நாடி நோய் ‘முதல்’ நாடி, ‘முதல்’ இல்லார்க்கு ஊதியம் இல்லை… எனப் பின்னர் வரும் சொற் பயன்பாடுகளோடு இணைத்தும் இதைச் சிந்திக்கலாமே?”

வேறு ஒரு புலவர்

“திருவாய் மொழியிலும் ‘ஆதி எம் பகவன்’ என வருவதாக நினைவு.”

ஒருங்கிணைப்பாளர்

“‘கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே’ எனத் தொல்காப்பியச் சூத்திரம் கூறியிருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வள்ளுவர், கடவுள் வாழ்த்தோடு தொடங்கினார் என்பதை மறுப்போர் கடவுள் சார்பினை ஏற்காது படிமுறை  வளர்ச்சி, உலோகாயதச் சிந்தனை  எனும் எண்ணத்தோடும் ஏற்கலாம்.”

பேராசிரியர்

“ஆனால், வள்ளுவர் பிந்திய குறள் வரிசையில், நிலையாமை, துறவு, மெய்யுணர்வு பற்றி எல்லாம் குறிப்பிடுவதால் இறைமை வழிபாடே இல்லாதவர் என முடிவு கட்டுவது பொருந்துமா?”

புலவர் செல்வ கணபதி

“குறளில் ‘கடவுள்’ எனும் சொல் இல்லை. பரிமேலழகர் தம் உரையில் புகுத்திய இதனை மாற்றி ‘இறைவழிபாடு’ எனவும் ஏற்கலாம்.”

கருணைதாசன்

“நாவலர் தாம் எழுதிய உரையில் ‘அறிவன்’ என்றார்; கலைஞர் தம் உரையில் ‘வழிபாடு’ எனும் பொதுச் சொல்லால் குறிப்பிட்டுவிட்டார்.”

வளனரசு

“தமிழாசிரியை அவர்கள் கூறியபடி, ‘வள்ளுவர் – சமண, பௌத்த சமயச் சார்பினரோ?’ எனும் கேள்விக்கே திரும்பவும் வர விழைகிறேன்… வள்ளுவர் காலத்தே இவ்விரு சமயங்களும் இங்கு நிமிர்ந்திருந்த தடயங்கள் உள்ளன. கல்லாடனாரும் இறைமையைக் குறிக்கும் சொல்லாக ஏற்றது இதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், எந்த இறைமை? சமணமா? பௌத்தமா? வள்ளுவர் பௌத்தர் போல முடியை மழித்தலும் வேண்டா, சமணர் போலத் தாடி வளர்த்தலுமாகிய வெளி அடையாளம் வேண்டா, உலகு பழித்ததை ஒதுக்கி வாழ்ந்தாலே அது இறைமை வழிபாடுதான் என உறுதிபட, நடுவு நிலை பேணி விளக்கினார். எனவே வள்ளுவரைச் சமயச் சிமிழுக்குள் அடைக்க முயல வேண்டாம்.

‘சமயக் கண்ணர் தம் மதிவழிச் செல்லாது உலகியல் கூறிப் பொது இது’ என்ற திருவள்ளுவ மாலைச் செய்தியை, வள்ளுவப் பொதுமைக்கும் மாலையாக அணிவித்து இவ்விவாதத்தை இத்துடன் நிறைவு செய்யலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“அறிவு பெறப் பெற, அறிவின் தூய்மையை எட்டி அடைய முற்பட வேண்டும். தூய அறிவு வடிவானதொரு பரம்பொருள் கடவுள் எனக் கொள்ளலாம். வாலறிவனான அவன் திருவடிகளைத் தொழாவிட்டால், கற்ற கல்வியால் பயன் இல்லை. அத்தகைய ‘வாலறிவன்’ யார் எனத் தேர்ந்து தெளிவதும், ஓர்ந்து தொழுவதும் அவரவர் மனத்தைப் பொறுத்தது; சார்ந்துள்ள நம்பிக்கையைப் பொறுத்தது. இதைச் சர்ச்சைக்கு உரியதாக்கிச் சமர்கள் புரிந்த சரித்திர ஏடுகளின் ரத்தக் கறைகள் மீண்டும் கசிய வேண்டாம். எனவேதான் நமது இந்தியத் திருநாடு, சமயங்கள் பலவற்றின் விளைநிலமாயிருந்து வந்துள்ள போதிலும் – சமயச்சார்பற்ற நாடாக (ஷிமீநீuறீணீக்ஷீ ஷிtணீtமீ) தன்னை அரசியல் சட்டபூர்வமாக அறிவித்து உலகிற்கே வழிகாட்டியும் வருகிறது.” (கைதட்டல்)

பேராசிரியர்

“சமயம் என்பது வேறு; ஆன்மீகம் (ஷிஜீவீக்ஷீவீtuணீறீவீsனீ) ஆகிய அருள் என்பது அதன் வழியே அடையக் கூடிய நற்பேறு. இவற்றில் ஏற்பட்டு வரும் மயக்கமே நாட்டில் குழப்பமாக, கலவரமாகக்கூட நீடிக்கிறது. உண்மைச் சமயங்கள் வேறு; சமய நெறியாளர் போல நடிக்கும் கபட வேடதாரிகள் வேறு.”

புலவர் செல்வ கணபதி

“ ‘அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு’ (247) எனும்  இறுதியுரை போல, நமக்கு அருளும் வேண்டும்; பொருளும் வேண்டும்.”

கருணைதாசன்

“ஆனால் இந்த இரண்டையும் கபட வேடத்தால் கவரும் நிலை பரவுகிறதே என்பதுதான் நல்லவர்களிடையே ஏற்பட்டுவரும் கலக்கம்… மரம் பழுக்க உழைத்த தோட்டக்காரன் கனிகொய்யக் கருதியிருக்கும் போது எல்லாம் வெம்பி விழுந்த பரிதாப நிலை பரவக்கூடாதே… மக்களில் நல்லவர் யார்? தீயவர் யார்? எனப் பிரித்தறிய முடியாது. எல்லோரும் ஆன்மிக அடையாளங்களுக்குள் ஒரே மாதிரியாகத் தோன்றும் புதியதொரு ‘சமய விழிப்பு’ ஏற்படுகிறதே. இது நலம் பயக்குமா?”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“‘தமிழ்ப் பாவை’ ஆசிரியர் மக்களையும் கயவரையும் ஒன்று போலக் காண்கிறார் எனக் கருதத் தோன்றுகிறது.”

கருணைதாசன்

“நினைவூட்டலுக்கு நன்றி. ஒரே உடை, ஒரே மாதிரி தோற்றப் பொலிவு. நல்லவர் – தீயவர் யாரெனப் பகுத்தறிய முடியாத் தவிப்பு. ‘மக்களே போல்வர் கயவர்’ எனும்படி வள்ளுவரே மயங்கியது ஏன்?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் கயமையைக் கண்டு கடியும் குறட்பா வரிசையில் மக்களில் கயவர் உருவுடையவர் பலர் உண்டு எனும் உலகியலைக் கண்முன் கொணரும் கருத்து இது; மயக்கம் ஏதும் இல்லை; சற்றுத் தயக்கம் வருவதை விளக்கவே வள்ளுவர் முயன்றுள்ளார்.

மக்கள் கயவரைப் போலத் தோன்றுபவர்கள் என்பதை விட, கயவர்கள் மக்கள் போல நடிப்பார்கள் எனப் பொருள் கொள்ளுவதே நலம்.

மக்கள், விலங்குகள் எனும் உயிரினங்களைப் பொறுத்தவரை புலி, மான் முதலியன தோற்றத்திலும் செயலிலும் தத்தமது இயல்பினின்று – குணத்திலிருந்து- வேறுபடுவதில்லை. ஆனால் மனிதர்களில் விலங்குக் குணம் உடையோரும் உண்டு. விலங்கை அடையாளம் கண்டு கொள்ளுவதைப் போல, உடல் அமைப்பால் ஒன்று போலத் தோன்றினாலும், குணநிலையில் குள்ள நரி மனமுடையோரை – வஞ்சகரை – எளிதில் இனம் கண்டுபிடித்துவிட முடியாது என்கிறார் வள்ளுவர். அத்தகையோரை ‘மக்களே போல்வர் கயவர்’ எனும் அருமையான உவமையால் மனதில் பதியும்படியாகக் குறிப்பிடுகிறார். இதிலே ஒரு கேலி, நையாண்டி, ஷிணீக்ஷீநீணீsனீ எல்லாம் புலப்படச் செய்கிறார்!”

செந்தமிழ்க் கல்லூரி மாணவி சித்ரா

“ ‘தேவர் அனையர் கயவர்’ எனும் குறளில் கயவரை மனிதரைவிட உயர்த்தி, தேவர் நிலையோடு ஒப்பிடுவது ஏன்?”

ஒருங்கிணைப்பாளர்

“‘தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

 மேவன செய்தொழுக லான்.’        (1073)

மக்களும் கயவரும் வடிவால் முழுவதும் ஒத்திருப்பர். ஆனால் குணத்தால், பண்பால், செயலால் மாறுபட்டவர் என நேரடி விளக்கம் தந்த வள்ளுவர் இந்தக் ‘கயமை’ அதிகாரக் குறளில் மேவன செய்து ஒழுகுதல், அதாவது செய்யக் கூடியவை, தவிர்க்க வேண்டியவை எனும் அறநெறிக் கோட்பாடுகளை மதியாது, மனம் விரும்பியபடி எல்லாம் நடப்பர் என இருசாராரையுமே சாடுகிறார்! கட்டுப்பாடற்ற போது தேவர் – கயவர் – மக்கள் எல்லாம் ஒரு நிலையரே ஆவர் என்கிறார்.”

பெரும்புலவர்

“எற்றிற்குரியராக, விரைவில் அரசியலில் சமுதாய ஒழுக்கக்கேட்டில் விலை போகும் விற்றற்குரியராக விளங்கும் கயவரை விடுத்து, அச்சமே கீழ்களது ஆசாரமாகக் கொள்ளாத மிச்சம் உள்ள நன்மக்களைப் பற்றி நிலா முற்ற அரங்கு தடம் மாறலாமே!”

தலைமை ஆசான் கணேசன்

“புலவர் ஐயா சொன்னபடி தடம் மாற விடாமல் தடுக்கும் வினா ஒன்று. ‘வாழ்க்கைத் துணை நலம்’ வகுத்த வள்ளுவர் அதில் பெண் களுக்கு மட்டுமே அறிவுரை கூறி, ஆண்களை விட்டுவிட்டாரே அது ஏன்?”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“தலைமையாசிரியர் குறிப்பிட்ட இந்த ‘வாழ்க்கைத் துணைநலம்’ எனும் அருமையான சொல்லமைப்பு சங்க இலக்கியந்தொட்டு வேறு எந்த இலக்கியத்திலும் கையாளப் பெறாத, வள்ளுவப் பெருந்தகையே முதன்முதலில் உருவாக்கித் தந்த சிறப்பான சொல்லடைவு. ‘கற்புநிலை என்று சொல்ல வந்தால், இருகட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்’ எனப் பின்னாளில் பாரதியை உரிமைப் பொதுமை பேச வைத்த தலைப்பு என இதைக் கருதி மேல் விளக்கம் தரச் செம்மல் அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.”

ஒருங்கிணைப்பாளர்

“நல்லறமாக இல்லறம் விளங்கிடக் காதலன் ஒருவனைக் கைப்பிடித்தோ, ஏற்பாட்டுத் திருமணமோ செய்து கொண்டு மனையறம் ஏற்ற மங்கை நல்லாளிடம் வேண்டும் குணநலச் சிறப்புக்களை ‘வாழ்க்கைத் துணை நலம்’ எனும் அதிகாரத்தில் வகுத்த வள்ளுவர், அவருக்குத் துணையான கணவன் கடைப்பிடித்தாக வேண்டிய ஒழுக்கங்களையும் கூறாமல் விடவில்லை.”

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 9

Image result for thirukkural

இளைஞர் ஒருவர் 

“இப்போதைய கல்லூரி மாணவியர் இக்குறட்பாவைச் சற்றே திருத்தி ‘அத்தான் வருவதே இன்பம்!’ எனப் புதுக்குறள் புனைந் திருக்கிறார்கள்.”

(அவையில் சிரிப்பு அலைமோதுகிறது)

ஒருங்கிணைப்பாளர்

“என் மனதில் நிற்கும் குறட்பா முரண்களைச் சொல்ல விடாமல், இப்படி முரண்டு பிடிக்கலாமா? (மீண்டும் சிரிப்பு)

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

 கேடும் நினைக்கப் படும்”           (169)

எனும் ‘அழுக்காறாமை’ அதிகாரக் குறள் நாம் இதுவரை கருதிய இவ்வகைக் குறளோடு ஒரு வகையில் கருத்தொற்றுமை உடையதுதான்.

ஓரன்பர்

“ஊழை உப்பக்கம் காணாமல், அத்தானைத் தேடி வந்துவிட்டோமே? ஊழை ஒரு கை பார்த்து விட்டு ஒருங்கிணைப்பாளர் செம்மல் அவர்களின் சிந்தையில் பட்டதைக் கேட்போமே!”

ஊழ் – வாழ்கிறதா? பாழ்படுத்துகிறதா?

பேராசிரியர்

“‘ஊழ்’ என்பது எப்போதுமே சமய நம்பிக்கையோடும் வாழ்வுப் போக்கோடும் இணைந்ததொரு நெடிய சர்ச்சைதான். பண்டைய குறளின் உரையாசிரியர்களான பரிமேலழகர், மணக்குடவர் போன்றோரின் கருத்துக்களிலேயே மறுகி நில்லாது, நம் காலத்தில் வாழ்ந்த திரு.வி.க., இலக்குவனார், தெ.பொ.மீ., மு.வ., வ.சுப.மா. போன்ற பேரறிஞர்கள் என்ன சொல்லிச் சென்றார்கள் என நினைவூட்டுவது சாலப் பொருத்தம்; காலப் பொருத்தம்.”

வளனரசு

“நாங்கள் வ.சுப.மா. ஐயாவிடம் பாடம் கேட்டவரை, ஊழ் அதிகாரம் ஒரு கருத்துச் சிக்கலான பகுதி என்று தான் சொல்வார். ஊழின் மறுபெயராக நாட்டில் காலம் காலமாக வழங்கி வருவது ‘வினை’. அதனையே நேர் பொருளாகக் கொண்டு ஊழ் என்றால் தொழில் செயல் என்று கருதாமல் ‘பாவம்’ எனும் அர்த்தம் பரம்பரையாகப் பயமூட்டி வந்துவிட்டது.”

ஒரு புலவர்

“மறுமை, எழுபிறப்பு என்றெல்லாம் வள்ளுவர் கூறிய கருத்துக்கள் ஊழுக்கு மாறானவையா? நான் இதை ஏற்க மறுக்கிறேன்.”

ஒருங்கிணைப்பாளர்

“மறுப்பது அவரவர் கருத்துச் சுதந்திரம்; ஆனால், பேராசிரியர் சுட்டிக்காட்டும் பேரறிஞர் மாணிக்கனார் கருத்தை நாமும் மீண்டும் சிந்திக்கலாம். மறுமை, எழு பிறப்பு என்பன குறளில் பிற இடங்களில் வந்தாலும், அதனை ‘ஊழ்’ அதிகாரப் பொருளோடு வலிந்து பொருத்திப் பாராமல் தனியாகப் பொருளமைதி காண முற்படலாம்.”

பேராசிரியர்

“வள்ளுவரின் ஊழ் பற்றிய கொள்கை முற்பிறப்புக் குறிப்போ, பழமை வினைக் கருத்தோ, அவ்வுலக அறிவிப்போ சிறிதளவும் இல்லாதது. ‘ஊழ்’ அதிகாரம் முழுவதிலும் இத்தகைய செய்திகள் இல்லை. பரிமேலழகர் உரையிலும் முன்வினைக் குறிப்புப் பற்றி ஏதும் இல்லை என்பதே பேரறிஞர் ஆய்வு. மாணிக்கனார் ‘ஊழ்’ எனும் சொல்லுக்கு ‘முறை’ என்றே, அதாவது உலக முறை, உலகச் சூழ்நிலை, உலகத்து இயற்கை என்றே பொருள் கண்டார்.”

அரசு அதிகாரி

“உலக மயம் எனும் நிறீஷீதீணீறீவீsணீtவீஷீஸீ பற்றி வள்ளுவர் அப்போதே சொல்லிவிட்டார் என நிறுவலாமே?”

ஒருங்கிணைப்பாளர்

“மாணிக்கனார் கருத்துப்படி ஊழ் என்பது ஓர் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு உருப்பெறுவது; ஆனாலும், அதன் போக்கைக் கணிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஏனெனில், ஊழின் தோற்றத்திற்குப் பல காரணங்கள் அமையக்கூடும். இடம், காலம், அரசு, சமூகம், சுற்றுச்சூழல் முதலிய புறநிலைப் பாங்கெல்லாம் முடிவில், உலகியற்கையாய் ஊழாய் மாறி நிற்கும். அது ஒரு மனிதனின் வாழ்வுப் போக்கின் புற நிலையைப் பெரிதும் பாதிக்கும் என்பதால், அந்த அதிகாரத்தில் செல்வம் பற்றிய செய்தியை அடுக்கிச் சொல்லுகிறார். ஒரு சூழ்நிலையில் வருந்தி உழைத்தாலும் வாராத செல்வம், மற்றொரு சமூகச் சூழலில் கோடி கோடியாய்ச் சேர்ந்து விடுகிறது. ஆயினும், சூழ்நிலையால் ஊழுக்கு நம்மை அடிமைப் படுத்திக் கொள்ளாமல் இடைவிடா முயற்சியால் ஊழையும் புறம் காண முற்பட வேண்டும்.”

பேராசிரியர்

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

     அவ்வது உறைவது அறிவு”           (426)

“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

     இயற்கை அறிந்து செயல்”           (637)

எனும் குறள்களை ஊழோடு பொருத்திப் பார்த்தால் மேலும் தெளிவு பெறுவோம்.

ஒருங்கிணைப்பாளர்

“‘உலைவின்றித் தாழாது உஞற்றுபவர் ஊழையும்’ அதாவது வலிமையுடைய ஊழையும் என ‘உம்’ அடைமொழி சேர்த்திருப்பதைக் கவனிப்போம். வள்ளுவர் எவ்வளவு தன்னம்பிக்கை ஊட்டுகிறார் எனச் சிந்திப்போம். ‘அறிவுடையார் எல்லாம் உடையார், எண்ணிய எண்ணியாங்கு எய்துப, துன்பம் உறவரினும் செய்க, பெருமை முயற்சி தரும்’ என்பன எல்லாம் ஊழைப் புறம் காண நமக்கு வள்ளுவம் தந்துள்ள ஊக்கக் கருவிகள்: ஆக்கக் கருத்துக்கள்.”

பேராசிரியர்

“மாணிக்கனார் கருத்துக்கு மகுடம் வைத்தாற் போல, திருக்குறள் செம்மல் அடுக்கிச் சொன்ன விளக்கக் குறட்பாக்கள் நமக்கு எழுச்சியூட்டு கின்றன. சற்று முன்னர் பேரறிஞர் மு.வ.வின் ஊழ்க் கருத்து என்ன என்றும் கேட்கப்பட்டது.”

மு.வ. தந்த முதன்மை விளக்கம்

அரசு அதிகாரி

“நான் அவரது வாழ்க்கை விளக்கப் பேரேட்டில் படித்தது நீங்காது நினைவில் நிற்கிறது. படைப்பில் விண்ணிலும் மண்ணிலும் ஒரு முறையான ஆட்சி இயக்கம் உள்ளது. அவை ஒரு ஒழுங்குக்கு உட்பட்டே இயங்கியும் இயக்கியும் வருகின்றன. அதுபோல, மக்கள் வாழ்வில் ஆக்கமும் அழிவும் ஒரு நியதிப்படியே நிகழ்கின்றன. இந்த ஒழுங்கமைவு நிலையை ஆய்ந்தறிவது மிக அரிது; ஆனால் உண்டு என உணர்வது எளிது. இந்த ஆட்சி முறையை ‘ஊழ்’ எனச் சான்றோர் கூறிவந்தனர். வள்ளுவரும் அவ்வழி பற்றியே பேசினார். செல்வம் சேர்த்தல், நுகர்தல் முதலிய புறவாழ்வுப் போக்கில் ஊழ் தலையிடுவது போல, அறிவு, அடக்கம், ஒழுக்கம் முதலிய வாழ்வுப் பாங்கில் ஊழின் ஆட்சியை மட்டுப்படுத்தி வெற்றி கொள்ள முடியும். வேண்டிய வேண்டியாங்கு எய்திட முடியும். அதாவது, சமூக வாழ்வின் புற நிலையில் ஊழின் போக்கிற்கு ஏற்பவே செயல்கள் நடக்கின்றன; ஆனால், மனிதர்களின் அகவாழ்வுத் துறை எதுவாயினும் அதில் தனி நபரின் தன்னம்பிக்கையும் இடைவிடா முயற்சியுமே ஊழையும் புறங்கண்டு விடத் தூண்டுதல் தரும்.”

ஒருங்கிணைப்பாளர்

“அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை

     மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.”     (32)

“பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

     பிற்பகல் தாமே வரும்”              (319)

எனும் குறளாசான் அறிவுரையோடு ஊழை இங்கே புறங்கண்டுவிட்டு, நான் முன்னர் கூறக் கருதிய, எனக்குத் தோன்றிய சில குறள் முரண்களைச் சிந்திக்க முற்ற அவையோர் இசைய வேண்டும்.”

அவையிலிருந்து ஓரன்பர்

“செம்மல் உங்கள் முரண்களைச் சொல்லுங்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

     கேடும் நினைக்கப் படும்”                 (169)

எனும் குறளில் நல்லவனுக்குக் கேடும் தீயவனுக்கு ஆக்கமும் வருவது ஏன் என ஆராய்க என்கிறார் வள்ளுவர்.”

பெரும்புலவர்

“இக்குறட்பாவில் ‘அவ்விய’ (அதாவது நடுவுநிலை கருதா நெஞ்சுடைய), ‘செவ்வியான்’, ‘ஆக்கம்’, ‘கேடு’ எனும் நான்கு சொற்களும் பல பொருட்களைத் தரும் வகையில் தொகுக்கப் பட்டுள்ளன. ‘நினைக்கப்படும்’ என்பது இந்தக் குறளைத் தவிர வேறெங்கும் கையாளப் படவில்லை என்பதையும் நாம் இங்கே நினைக்க வேண்டும்!”

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைய சமுதாய நிலையில் அவ்வியர்களான தீயவர்கள் பலர் ஆக்கம் பெற்று விடுகின்றனர் என்பதையும், செவ்வியர்களான நல்லவர்கள் அத்தகைய ஆக்கமின்றி நலிவுறுகின்றனர் என்பதையும் வள்ளுவர் மறுக்கவில்லை; அத்தகைய ஆக்கமும் கேடும் முறையானவை எனவும் ஏற்கவில்லை. இந்த மாற்றுநிலை ஏன் என்பதை ஆராய வேண்டும் என்கிறார்.”

பெரும்புலவர்

“வள்ளுவரும் இதை ஆராயாமல் விடவில்லை. அவற்றை மாற்றும் வழிகளை வரையறுக்காமல் நழுவி விடவில்லை. காலந் தொறும் மாறும் சமூக, அரசியல் சூழலினூடே தக்க நெறிமுறைகளை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள் என அறைகூவல் விடுப்பது போல இக்குறளை அமைத்துள்ளார்.”

அரசியல் அன்பர்

“அறைகூவல் என்று புலவர் ஐயா மழுப்ப வேண்டாம். இன்றைய மாசு படிந்த சமுதாய அமைப்பை மாற்றிப் புதியதொரு உலகம் படைக்கும் புரட்சியே சரியான நெறி எனக் கோடு காட்டிக் கொடி அசைத்திருக்கிறார் என்பதே எங்கள் கருத்து” (கைதட்டல்).

ஒருங்கிணைப்பாளர்

“அவ்விய நெஞ்சத்தான் அடைவது நிலையான ஆக்கமாக நீடிக்க முடியாது. செவ்வியான் உறுவதும் கேடாகவே இருந்துவிட இயலாது. எனினும் நடைமுறை வாழ்வில் அவ்வியர் ஆக்கம் பெறுவதும், செவ்வியான் கேடுறுவதும் நீடிக்கிறதே என அப்பெருந்தகை வருந்தும் உணர்வே இக்குறளில் எதிரொலிக்கிறது. ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் பழவினை காரணம் என்பதை அவர் ஏற்கவே இல்லை. ‘நினைக்கப்படும்’ எனும் சொல்லால் பல வகையிலும் ஆய்ந்து உரிய செம்மை நெறிகளைச் சமுதாயம் பின்பற்ற முற்பட வேண்டும் எனவே எச்சரிக்கிறார். சமுதாயத்தில் உள்ள சுயநலமிகளுக்கும், முறையற்ற, நெறியற்ற அரசியல் பொருளாதாரக் கூட்டமைப்புக்களை ஆட்டிப் படைப்போருக்குமே இந்த எச்சரிக்கை முதலில் பொருந்தும்.”

‘திருக்குறள் செம்ம’லின் சீர்மிகு பட்டியல்

பேராசிரியர்

‘திருக்குறள் செம்மல்’ அவர்கள் அழகாக ஒருங்கிணைத்துச் சுட்டியமை போல வள்ளுவப் பேராசான் மாற்று நெறிகளாகப் பட்டிய லிட்டுள்ளவை:

– அறன் இழுக்கி, அல்லவை நீக்காத அரசமைப்பு

– இயற்றல், ஈட்டல், காத்தல் முதலிய ஆட்சிப் பொறுப்புக்களில் புகுந்துள்ள ஜனநாயகச் சீர்கேடுகள்

– நேர்மை, திறமை என்பவற்றைப் போற்றாத நிறுவனங்கள்

– ஒப்புரவோ நடுவுநிலையோ போற்றிக் காக்க முடியாத சான்றோர் சிலரின் தவிப்புக்கள்.

– கயமையைக் கருவியாகக் கொண்டோரின் அன்றாட ஊர்வலக் கொடிபிடிப்புக்கள்

– உள்ளூர்ப் பழ மரமாகவோ, ஊருணியாகவோ உதவாமல், நடுவூர் நச்சுமரமாக நிற்கும் நாசகார சக்திகள்

– இரந்தும் உயிர் வாழும் இழிநிலையினைச் சமுதாயத்தில் இன்னும் நீடிக்க வைத்துவிட்டு, ஆன்மீகப் போதனை செய்யும் போலி நிறுவனக் கூட்டங்கள், கூடாரங்கள்.

– குற்றம் கடியாமல், குடிதழுவிக் கோலோச்சாமல், கட்சி நலனையே ஆட்சித் திறனாகக் கொண்டு, சட்டமன்றங்கள் – நீதிமன்றங்களைச் சந்தைக் கடையாக்கும் ஆகாப் போக்குகள் – என்று நீளும் இவற்றையெல்லாம் நினைக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதை முரண் என ஏன் கருதவேண்டும்?”

(கைதட்டல்)

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் வள்ளுவப் பேராசான் பல இடங்களில் சுட்டிக் காட்டியவற்றைப் பட்டியலிட்டு ‘நினைக்கப்படும்’ என்பதற்கு விளக்கம் தந்தமை பாராட்டுக்கு உரியது. அவ்வித்து அழுக்காறுடையான் ஆக்கமெல்லாம் அப்போதைக்குப் பெற்றாலும் அது மற்றொரு நாளில் நிச்சயம் தவ்வையை – மூதேவியைக் கூட்டி வந்து விடும் என்கிறார். ‘அழுக்காறு என ஒரு பாவி’ (168) என அச்சுறுத்துகிறார். இன்றைக்கு ஆலமர நிழல் அமர் அரச வாழ்வு கை கூடினாலும், நாளைக்கே அது ஒற்றைப்பனை நிழல் போலப் பயனற்று ஒதுங்கிப் போய்விடும் என்கிறார். நல்லவர்கள் கெடுவதில்லை என்றே நம்பிக்கையூட்டுகிறார்.”

வருமான வரித் துறை அதிகாரி

“ ‘நல்லவர்கள் கெடுவதில்லை இது நான்கு மறைத்தீர்ப்பு’ .. என மகாகவி பாரதியார் வள்ளுவத்திற்கு விளக்கமாகத் தந்துள்ள முத்தாய்ப்புச் செய்தியை ஏற்று, இதை முரணாக எண்ணாது இதர சமுதாய நன்னெறி அரண்களைத் தேடலாமா?”

ஒருங்கிணைப்பாளர்

“சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

     வறங்கூர்ந் தனையது உடைத்து”       (1010)

சமுதாயச் சீர்மையை நாடுகின்றவரே சீருடைச் செல்வர்! அதாவது, காந்தியடிகள் கூறும் ‘ஜிக்ஷீustமீமீsலீவீஜீ’. சமூகநலக் காவல் பண்புடைமையுடை யோர்கள், ஒரு சமயம் வறுமைப்பட்டாலும், அது ‘சிறுதுனி’, சிறுதுயரம்’ என்றும், மாரி சில சமயம் மழை பொழியாமல் கருத்தும் மேகம் கலைந்துவிடுவதைப் போன்றதே என்றும் அருமையான உவமையால் தெளிவூட்டுவதாகவே இதனைக் கருதவேண்டும். தனி உடைமைச் செருக்கில்லாமல், ஒப்புரவே நாட்டமாகக் கொண்ட அத்தகைய சீருடைச் செல்வரின் மீதுள்ள மதிப்பு ஒருநாளும் சமுதாயப் பார்வையினின்றும் நீங்கிவிடாது. மேகம் சிறிது நேரம் வானினை மறைத்துவிட்டு விலகுவதைப் போல, அந்தத் தற்காலிக வறுமையும் நீங்கிவிடும். சுருக்கமாகச் சொல்வதென்றால், நல்லார்க்கு வரும் கேடு நிரந்தரம் இல்லை. அதுபோல அவ்விய நெஞ்சம் உடையார்க்குச் சேரும் ஆக்கமும் நிலையான தில்லை எனும் வள்ளுவ அமைதியை ஏற்கலாம்.”

ஒரு புலவர்

“ஒருங்கிணைப்பாளர் தந்த விளக்கத்தை நாமும் ஏற்கலாம்.”

அதிகாரி

“ஒருங்கிணைப்பாளர் முற்றத்து அவையில் நாம் அமரும் முன்னர், தவத்தின் பயன் பற்றிய ஒரு முரண்பாட்டுச் செய்தியைச் சொன்னார்; அதை நினைவூட்ட விரும்புகிறேன்.”

ஒருங்கிணைப்பாளர்

ஐயா அவர்கட்கு நன்றி.

தவம் படுத்தும் பாடு

“ ‘தவமும் தவம் உடையார்க்கு ஆகும்’ – அதாவது இங்கே தவம் என்றால் காடு சென்று கண்மூடித் தனித்து இருப்பதில்லை; சமுதாயத்தில் வாழ்ந்திருந்தே, மக்களுக்குப் பயன்தரும் சீரிய பணிகளை மேற்கொள்ளுவது என்றே கருத வேண்டும். அத்தகைய சமுதாயப் பொறுப்பற்றவர்கள் தவம் செய்வதாகச் சொல்வது சமூகக் கேடாகவே முடியும்.”

இடைமறித்த ஒருவர்

“நம் நாட்டில் பல ஆசிரமச் சந்நியாசிகள் நடத்திய அலங்கோலங்கள் எல்லாம் நமக்குத் தெரியுமே!”

ஒருபுலவர்

“அந்த ஆனந்த உல்லாசங்கள் எப்படித் தவம் ஆகும்? அவையெல்லாம் ‘பாவம்’ என்றே சொல்ல வேண்டும்.”

ஒருங்கிணைப்பாளர்

‘தவம் செய்தார்தம் கருமம் செய்வார்’ என்றும், ‘உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை’ என்றும் கூறும் வள்ளுவர்…”

பேராசிரியர்

(இடைமறித்து) “ஆனால் அதே குறள் வரிசையில்,

“ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

     எண்ணின் தவத்தான் வரும்” (264)

எனச் சொல்லும் போது தவம் என்பது பிறரைத் தண்டிக்க, ஒறுக்க ஒரு கருவியாகக் கொள்ளப்படுவது ஒரு வகையில் முரண்தானே?”

மற்றொருவர்

“தவக்கோலம் வேறு; தவ ஒழுக்கம் வேறு என்பார் அறிஞர் மு.வ. தவ ஒழுக்கம் இல்லாதவர்கள் அதை மேற்கொள்வதாக நடிப்பது வீண்.”

இன்னொருவர்

“இந்தத் தவக்கோலமும் தவ ஒழுக்கமும் துறவிகளுக்கு மட்டும்தானா? ‘இந்த வம்பு நமக்கு ஏன்?’ என இல்லறத்தார் ஒதுங்கி விடுகிறார்களே?”

ஒருங்கிணைப்பாளர்

“அப்படிச் செய்ய அவசியம் இல்லை. தவம் – இரு சாராருக்கும் பொது; பொருந்தக்கூடியது. சிலர் இல்லறத்தை முற்றிலும் விடுத்துத் தவ வாழ்வில் முற்றாக ஈடுபடுவர். எனினும் இல்லற வாழ்வில் ஓரெல்லை தாண்டிய பின், மேற்கொள்ளலாம்.

வள்ளுவர் இதை வேடிக்கையாக,

“துறந்தார்க்குத் துப்புரவு வேண்டின் மறந்தார்கொல்

     மற்றை யவர்கள் தவம்”        (263)

என வினா எழுப்புகிறார். இல்வாழ்க்கையில் பகைவர்களை மடக்கித் திருத்துவதற்கும் நண்பர்களை மதித்து உயர்த்துவதற்கும் ஒரு வகை ஆற்றல் வேண்டும். அந்த ஆற்றல் தவ ஒழுக்கத்தினைக் கைக்கொள்ளுவதால் எவருக்கும் வந்து சேரும் என்பதே வள்ளுவம். வாழும் வாழ்க்கையையே ஒரு நோன்பாக மாற்றிக் கொள்ளும் சான்றோர் பலர் நம் தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து வழிகாட்டி யுள்ளனர் – வள்ளலார், மறைமலை அடிகளார், திரு.வி.க. போல்…”

இளைய தலைமுறையின் வழிகாட்டிகளாக…

ஓர் இளைஞர்

“இன்றைய தலைமுறைக்கு எழுச்சியூட்டு வதையே ஒரு தவமாகக் கொண்ட நம் தமிழகத்து டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, நம் அறிவியல் மேதை டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் எனப் பெரிய பட்டியலே போடலாமே?”

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

“இந்த இளைஞர் தன் வாழ்க்கை வழிகாட்டிகளாகப் பிறரைப் போலச் சினிமாக் கலைஞர்க்குப் போஸ்டர் ஒட்டாமல், சமுதாய நலனுக்கே தம்மை அர்ப்பணித்து வாழும் சான்றோரைக் குறிப்பிட்டது என்னை மெய்சிலிர்க்கச் செய்து விட்டது. (சபையை நோக்கி) உங்களுக்கு அந்த உணர்வோட்டம் தெரியவில்லையே.”

கூட்டத்தில் பலர்

“நன்றாகத் தெரிகிறது; தெளிவாகவும் புரிகிறது… எல்லோரும் இளைஞரைப் பாராட்டிக் கைதட்டி விடுவோம்” (சிரிப்பலையும் கர ஒலியும்)

ஒருங்கிணைப்பாளர்

“இளைஞர் குறிப்பிட்டதைப் போலத் தவப்பாங்குடைய சான்றோர் உலகில் சிலராகவும், தவ நன்முயற்சி செய்யாதவர் பலராகவும் உள்ளனரே என வள்ளுவர் வருத்தப்பட்டார். அந்த வருத்தம் நீங்கும் வகையில் வளரும் சமுதாயத்து இளைஞர் பலர், அறிவாக்கமுடைய சான்றோருடன் அணிசேர்ந்து உழைப்பு, விடாமுயற்சி, பொதுநலம் எனும் புதிய தவநெறிகளால் இச்சமுதாயத்தில் எண்ணிக்கையில் பலராகப் பெருகிடப் போகும் ஒளிக்கதிர்கள் வீசத் தொடங்கிவிட்டன.”

(மீண்டும் கைதட்டல்)

இளைஞர்

“நான் மீண்டும் ஒரு சந்தேகத்தை அவை முன்னர் வைக்க அனுமதிக்க வேண்டுகிறேன். குணமெனும் குன்றேறி நிற்கும் சாதனைச் சான்றோர்களை நாட்டு இளைஞர்கள் தமது வாழ்க்கை வழிகாட்டிகளாக (ஸிஷீறீமீ விஷீபீமீறீs) கொள்ள வேண்டும் என அடிக்கடி எங்களுக்குச் சொல்லப் படுகிறது. அத்தகைய சான்றோரில் பலர் கோபத்தால், வெகுளியால் அவர்களை அணுக முயலும் இளைஞர்களை விரட்டி விடுகிறார்களே?”

அரசு அதிகாரி

“தம்பி… அப்படி விரட்டப்பட்டோரில் நீங்களும் ஒருவரா?”

இளைஞர்

“அந்தப் பெரியவர் விரட்டும் முன்னரே நான் தப்பி ஓடிவந்துவிட்டேன்.” (அவையில் சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“ஒருவேளை.. அந்தப் பெரியவர்,

“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

     அவியினும் வாழினும் என்”          (420)

என இந்த இளைஞரைக் கருதியிருக்கச் சற்றும் வாய்ப்பில்லை.”

 

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 8

ஒருங்கிணைப்பாளர்

“போராட்ட காலத் தலைமை வேறு, சுதந்திரம் பெற்றபின் அமையும் உரிமைக் காலத் தலைமை வேறு. அங்கே தியாகம் அடிப்படை, இங்கே ஒழுக்கம் அடிப்படை.”

பேராசிரியர்

“இதைக் கிரேக்கச் சிந்தனையாளரான சாக்ரடீசும், ‘அரசியல்’ எனும் உன்னதமான சித்தாந்த நூலை அளித்த பிளேட்டோவும் அன்றே சொல்லியிருந்தார்கள்.”

 

ஒருவர்

“நினைவில் இருந்தால் அதை நிலா முற்றத்திலும் உலவ விடுங்களேன்.”

ஆட்சி பீடத்திற்கு வர அருகதை என்ன?

பேராசிரியர்

“மிகச் சாதாரணமான தொழிலுக்குக் கூட அதற்கான ஒரு பயிற்சி இல்லாமல் எவரும் மேற்கொள்ளுவது இல்லை. ஆனால், மிகக் கடினமான ஆட்சித் தொழிலுக்கு மட்டும் எவர் வேண்டுமானாலும் தகுதியுடையவர்கள் என்று முன் வந்து விடுகிறார்கள்..”

ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கா.கருப்பையா

“சாக்ரடீஸ் அரசியலைத் ‘தொண்டு’ என்று சொல்லாமல் ‘ஆட்சித் தொழில்’ என்று அன்று சொன்னது இன்றைக்கும் எவ்வளவு பொருத்தம் என்பதை நினைவுகூர்ந்து சொன்ன பேராசிரியர்க்கு உளமார்ந்த நன்றி. அதற்காகவாவது கைதட்டு வோமே!” (கர ஒலி)

புலவர்

“இன்று அரசியல் என்பது முழுக்க முழுக்க ஒரு மோசடியான தொழில் போலத் தானே ஆகி வருகிறது? ‘தேர்தல்களில் தில்லுமுல்லு; தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவுடன் வாக்குறுதிகள் காற்றில் பறப்பு…” என்று மிக மட்டமான நிலைக்கு அரசியல் சரியாமல் தடுப்பது அனைவரின் பொறுப்பு அல்லவா..?”

ஒருங்கிணைப்பாளர்

“மொழிப் போர்க்காலத்தில் பேரறிஞர் அண்ணா எழுதியதை அவையோர்க்கு நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும்.”

சில குரல்கள்

“சொல்லுங்கள், அண்ணாவை மறந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. நீங்களாவது நினைவில் வைத்திருக்கிறீர்களே!”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘சுதந்திரம், விடுதலை என்றால் சட்ட சம்பந்தமான சொற்களின் மாற்றம் என்றல்ல; வாலிபன் எண்ணுவது புதிய நிலை, புது அழகு, புது உருவம், புதிய மகிழ்ச்சி! நாடு புதுக்கோலம் கொள்வது என்றே கருதுகிறான். உண்மையும்  அதுதான்!’ என்றார் அண்ணா.”

இடைமறிக்கும் ஒரு குரல்

“ஆனால், அநியாயமாக உண்மை நிலை அப்படி மாறவில்லையே..! (எல்லோரும் சிவப்புத் துண்டு அணிந்திருந்த அவர் பக்கம் திரும்பிப் பார்த்தல்)

ஒருங்கிணைப்பாளர்

“பொதுவுடைமைப் பேராளர் தோழர் ஐயா சொல்வதையும் கேட்போமே..”

தோழர்

“‘நாம் மக்களுக்காக வாழ்பவர்கள்; மக்களைக் காட்டிலும் அதிகாரச் சலுகைகளையும் வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு அரசியலுக்கு வந்தவர்கள் மட்டும் வாழ முற்படக்கூடாது என்று ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்’ என்ற தோழர் லெனின் வழிக்கோட்டில் வழுவாது நின்று பணியாற்றுகின்றன நாங்கள் பொறுப் பேற்றுள்ள மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா முதலிய மாநிலங்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“நம் திருக்குறள் பேரவையும் அது வானொலியுடன் இணைந்து நடத்தும் நிலாமுற்ற அரங்கும் அரசியல் பிரச்சாரங்களுக்கு அப்பாற் பட்டவை.”

தோழர்

“நான் நடைமுறையைத்தான் யதார்த்த எடுத்துக் காட்டாகச் சொன்னேன். அரசியல் பேசவில்லை.”

பேராசிரியர்

“நல்ல அரசியல்வாதிகள் எல்லாக் கட்சி களிலும் இருக்கிறார்கள். எல்லோருமே மோசமாகி விட்டார்கள் என்றோ, இந்தக் கட்சிதான் ஒழுக்கக்கோட்டில் நிற்கிறது என்றோ வெளிப்படையான விமர்சனம் வேண்டாம். நாம் பொதுவான நடைமுறைகளையே தொடர்ந்து சிந்திப்போம். தனி நிலா முற்றம் கூட்டி ஆராய்வோம்.”

(அவையில் சற்று அமைதி)

புலவர்

“அப்படியானால் மாதந்தோறும் பௌர்ணமி வரும்; நிலாமுற்றமும் சுவையான விருந்தும் தொடரும் என நம்பலாமா?”

மாதந்தோறும் பௌர்ணமி! முரணா – அரணா?

மற்றொருவர்

“எங்கள் புலவர் ஐயா.. எதை மறந்தாலும் சுவையான சாப்பாட்டை மட்டும் மறக்கவே மாட்டார்.”

புலவர்

“அட… நான் சொன்னது செவிக்கு உணவை ஐயா! நீர்தான் வயிற்றுப் பெருச்சாளி” (சிரிப்பு)

மற்றோர் அன்பர்

“‘செவிக்குச் சுவையா? வயிற்றுக்குச் சுவையா?’ எனும் முரண்பாட்டுச் சர்ச்சை போதும். நிலா முற்றம் கூடத் தொடங்கியவுடன் ‘திருக்குறளில் முரண்கள்’ பற்றியும் கருதுவோம் எனச் சொன்னது என்ன ஆயிற்று? தூக்கம் வரும் முன்னர் முரண்களைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்கலாமா?”

பேராசிரியர்

“‘வள்ளுவ முரண்கள்’ என்றதும் என் நினைவு, நான் பயின்று, பணியாற்றிய அழகப்பர் கல்லூரிக்கு ஓடுகிறது. அங்கே தமிழ்த்துறைத் தலைவராகவும் முதல்வராகவும் துலங்கிய பேராசான் வ.சுப.மாணிக்கனார் முதுகலை, தமிழ் மாணவர் வகுப்பை மாற்றி அமைத்திருந்தார். இங்கு வந்துள்ள பேராசிரியர் வளனரசு அப்போது அங்கே பயின்ற முதல்நிலை எம்.ஏ.மாணவர். அவருக்கும் அந்த வகுப்பறை அமைப்பு நினைவில் இருக்கக்கூடும்.”

பேராசிரியர் வளனரசு

“ஆம். அந்த வகுப்பில் இருபாலருமாக இருபது பேர் எம்.ஏ. தமிழ் பயின்றோம். வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருப்போம் – பின்புறத்தில் ஒரு வரிசை நாற்காலிகள் போடப் பட்டிருக்கும். தனிக் கதவும் இருக்கும். பாடம் நடக்கும் போது வேறு வகுப்புக்களில் பாட வேளை இல்லாது, ஓய்வில் இருக்கும் பேராசிரி யர்கள், தாம் விரும்பினால் அந்த வரிசையில், ஓசையின்றி வந்தமர்ந்து, வேறு ஆசிரியர் நடத்திக் கொண்டிருக்கும் பாடத்தைத் தாமும் கேட்கும் பயன் பெறவே இந்த ஏற்பாடு.”

பேராசிரியர்

“அது மட்டுமல்ல. எம்.ஏ. முதுகலை வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியர்க்கு அது ஒரு அக்கினிப் பிரவேசம் போலவே அறிஞர் வ.சுப.மா. வைத்தார். அதாவது, பாடம் நடத்தும் பேராசிரியர், மாணவர்க்கு ஏற்றாற்போலப் புரியும் படி. இன்னும் சொல்லப் போனால், தம் புலமையை மட்டும் அருவியாகக் கொட்டாமல் பாடம் நடத்த வேண்டும். அதே சமயம், பின்னால் அமர்ந்திருக்கும் பேராசிரியர்கள் ஏற்கும் வகையிலும் செய்தாக வேண்டும்.”

புலவர்

“இப்படியெல்லாம் வகுப்புக்களில் யாரும் நடத்தவும் மாட்டார்கள்; அமர்ந்து கேட்க இசையவும் மாட்டார்கள். அது வ.சுப.மா.வின் வசந்த காலம்.”

வருமான வரித் துறை ஆணையர்

“அந்த வசந்த காலங்கள் மீண்டும் வலம்வர வாழ்த்துவோம்.. வ.சுப.மா. கூறிய வள்ளுவ முரண் களைத் தாண்டி விட்டாரே பேராசிரியர் குழந்தைநாதன்?”

குறளிலும் முரண்களா?

பேராசிரியர்

“தாண்டிவிடவில்லை; நினைவைக் கொஞ்சம் தோண்டுகிறேன். சொல்கிறேன். ஒரு நாள் எம்.ஏ.வகுப்புப் பாடம். பேராசிரியர் இரா.சாரங்க பாணியின் ‘திருக்குறள் உரை வேற்றுமை முதல் தொகுதி’ வெளிவந்த சமயம் என நினைக்கிறேன். அது திருக்குறள் திறனாய்வு வகுப்பு.. ஒரு மாணவர் அவர் பெயரும் மாணிக்கம் என்றே நினைவு. ‘ஐயா குறளில் முரண்கள் பல உள்ளனவே. அவற்றிற்கு எப்படி அமைதி கூறுவது?’ எனக் கேட்டார். அதற்கு அறிஞர் வ.சுப.மா.. இடை மறித்துக் கேட்ட வினா விடை என்ன தெரியுமா?”

கூட்டத்தில் ஒருவர்

“சுவையாய் இருந்தால் சொல்லுங்கள்..”

பேராசிரியர்

“நீதிமன்றத்தில் திருடியதற்காகக் குற்றம் சுமத்தப்பட்டுக் கூண்டில் நிற்கும் விசாரணைக் கைதியிடம் குறுக்கு விசாரணை செய்யும் வழக்கறிஞர், முதல் கேள்வியாக, ‘நீ களவாடிய பொருளை யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறாய்’ என்று மடக்கி வினவுவார். அதாவது, அவன்தான் திருடினான் என்பதை உறுதி செய்து கொண்டவர் போல, அவனே ஒப்புக் கொள்ளத் தூண்டும் வகையில் கேள்வி தொடுப்பார் அல்லவா? அதைப் போல, மாணவர் மாணிக்கமும், ‘திருக்குறளில் உள்ள முரண்களுக்கு அமைதி என்ன?’ எனக் கேட்கும் போதே, திருக்குறளில் முரண்கள் நிறைய உள்ளன என்று என்னை ஒப்புக் கொள்ளச் செய்யும் கட்டாயம் அதில் தொனிக்கிறது. குறளின் முரண்களுக்கு அமைதி தேடும் முன்னர், குறட்பாக்களில் குழப்பம் உண்டா என்பதை முதலில் சற்றே சிந்திக்கச் செய்தது இன்றும் மறக்க முடியாத காட்சி. பேராசிரியர் வளனரசால் சில குறட்பாக்களை நினைவுகூர முடியும் என நினைக்கிறேன்.”

பேராசிரியர் வளனரசு

“நன்றி பேராசிரியர் ஐயா அவர்களே! ஒரு சில குறள்கள் நினைவில் படருகின்றன.”

ஒருங்கிணைப்பாளர்

“நீங்கள் அன்றைய நினைவேட்டைப் புரட்டுங்கள்; நானும் இன்றைய குழப்பங்களைச் சொல்ல முற்படுகின்றேன்.”

பேராசிரியர் வளனரசு

“சான்றாக, ஓரிரு குறட்பாக்கள் நினைவிற்கு வருகின்றன.”

“நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

     கொல்லாமை சூழும் நெறி” (324)

எனும் அறத்துப்பால் குறளும்,

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்

                           பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்” (550)

எனும் பொருட்பால் குறளும் தம்முள் முரண்படுவதாகத் தோன்றுகின்றன.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“இதற்குப் பேரறிஞர் வ.சுப.மா. அவர்களே தம் ‘வள்ளுவம்’ எனும் புகழேட்டில் பொருத்தமான விளக்கங்களை அப்போதே தந்துள்ளார். இக்குறட் பாக்களைப் போலவே, ஒறாமை, ஒறுப்பு; நெஞ்சத் துறவு, வஞ்சத் துறவு பற்றி மேலோட்டமாகத் தோன்றும் முரண்பாடுகளுக்கும் சரியான வள்ளுவப் பார்வையோடு அரண்கோலியுள்ளதை இந்த நிலாமுற்ற அவைக்கு நினைவூட்டுவது அவசியம்.

பேரறிஞர் வ.சுப.மா. அகநிலையறங்கள், புறநிலையறங்கள் என இரண்டாகப் பகுத்து, ஒரு மனிதன் அகநிலையிலும் புறநிலைப் பொறுப்பிலும் ஆற்ற வேண்டிய கடமைகளை முரண் எனக் கருத வேண்டாம் என விளக்க ஓர் உவமை சொன்னார், தந்தை ஒருவன், தன் மகன் சொந்த வீட்டிலேயே திருடிவிட்டால், அதைக் குடிமானம் கருதி வெளியில் சொல்லாமல், தன் மகனைத் திருத்தவோ, கண்டிக்கவோ முனைகிறான். அவனே நீதிபதி பொறுப்பேற்றிருக்கும் போது, அதே மகன் பிற இடத்தில் திருடியமைக்காகக் குற்றவாளிக் கூண்டில் எதிர்நிற்கும் போது, தன் மகன் எனவும் பாராது, உரிய நியாயமோ, தண்டனையோ அளிக்க வேண்டிய இக்கட்டான பொறுப்பிற்கு உள்ளாகிறான். இவ்விரு நிலைகளையும் ‘முரண்’ என்பதா? அல்லது ‘அரண்’ என்பதா?”

பேராசிரியர் வளனரசு

“பேராசிரியர் எடுத்துக்காட்டிய உவமைக்குப் பொருத்தமான குறட்பாக்களாக..

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் என்பதோடு, களை கட்ட தனொடு நேர்”

“குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

     வடுவன்று வேந்தன் தொழில்”   (549)

என்னும் குறளை மாணிக்கனார் எடுத்துக் காட்டுவார். நாட்டுத் தலைவன், தனி மனிதன், வேந்தன் அல்லது அமைச்சன் எனும் இரண்டு நிலைப்பாடுகள் உடையவன். குடிமக்களுக்குப் பெரிதும் இடையூறு செய்பவரைத் தண்டித்துக் கொல்லுதல் பொதுநலம் காக்கும் அவனது (வேந்தன்) தொழில்; அதே சமயம், குடிநலம் பேணாது, தன் பதவியைக் காத்துக் கொள்ளு வதற்காகச் சட்டத்தை வளைத்துப் பிறரைத் தண்டிக்க முற்பட்டால் அதனை ‘நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும்நெறி’ (324) எனும் ‘கொல்லாமை’ அதிகாரப் பாடலோடு முரணுவதாகக் கருதக்கூடாது. ‘அதிகார துஷ்பிரயோகம்’ எனும் மகாப்பழியாகவே அது பிந்திய வரலாற்றில் இடம்பெறும்.”

புலவர் ஒருவர் இடைமறித்து

“‘பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

      நன்மை பயக்கும் எனின்’           (292)

என எல்லோர்க்கும் நன்மை பயக்குமானால் ஒருவன், தன்னலம் நோக்காது, பொய் கூற நேர்ந்தாலும், அது வாய்மையின் இடத்தில் வைத்து மதிக்கப்படும் என வள்ளுவர் மனவியல் புரட்சியை அன்றே செய்துவிட்டார்.”

மற்றொரு பெரும்புலவர்

“வள்ளுவர் அப்படிப் பொதுநலம் நோக்கிச் சொல்லும் பொய்யினை, வாய்மை என்று முழுமையாக ஏற்கவே இல்லை. அதனை வாய்மை எனும் இடத்தில் கொள்ளலாம்; அப்போதைக்கு ஏற்றுக் கொள்ளலாம் என்று தான் கருதியிருக்க வேண்டும் என நான் அடித்துச் சொல்லுகிறேன்.”

கூட்டத்திலிருந்து ஒரு குரல்

“புலவரய்யா யாரையும் அடித்துவிட வேண்டாம். நாங்களே தங்கள் கருத்தை வள்ளுவர் கருத்தாக ஏற்றுக் கைதட்டி விடுகிறோம்” (கரவொலிகள் – சிரிப்பலைகள்)

பேராசிரியர்

“பொய்யோ வாய்மை எனும் இடமோ இவை இரண்டுமே ஒருவரின் மனத்தைக் களமாகக் கொண்டவை என்பது உளவியலாரின் தீர்ப்பு. மனிதன் என்பவன் மனதால் வாழ்கிறான். மன எழுச்சியும் வளர்ச்சியுமே ஒரு தனி மனிதனின் மலர்ச்சியும் தளர்ச்சியும் என்பது அறிவியல் துணிபு.”

மற்றொருவர்

“ஐயா… ஓர் இடைமறிப்புக்கு மன்னிக்கவும்.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் சொல்லுங்கள். நீங்கள் முடித்ததும் வள்ளுவ முரண்களாக என் மனதில் எழுந்த ஐயங்களை இந்த அவை முன்னர் வைக்க விரும்புகிறேன்.”

பேராசிரியர்

“நான் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். மக்களிடம் வள்ளுவர் காலத்தில் இருந்த மனம் தானே இன்றும் இருக்கிறது? அதே அகவுணர்வு தானே இப்போதும் இருத்தல் வேண்டும்? மனச்சான்று, காலத்திற்குக் காலம் மாறுபடுமா?”

ஒருங்கிணைப்பாளர்

“இது சிந்திக்க வேண்டிய கேள்விதான். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக வள்ளுவத்தின் மூலமே நமக்குப் புலனாகிறது. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலே கூட சமுதாய மக்களில் பலருக்கு நல்ல மனம் இல்லை என்பதை அவரே இயற்றியுள்ள ‘கயமை’ எனும் தனி அதிகாரம் அழுத்தமாகச் சொல்கிறது.”

இடையில் ஒருவர்

“கயவராய் இருப்பதற்கு மன அழுத்தம் அவசியம் தான்” (அவையில் சிறு புன்முறுவல் பிரதிபலிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“அது மட்டும் அல்ல; மனம் மாறுபடும் இயல்புடையது என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் ‘மகளிர் மனம் போல மாறுபடும்’ எனவும் வள்ளுவம் கூறுவதாக நினைவு! ‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்” எனக் கவியரசு கண்ணதாசனும் பாடியுள்ளார்.”

பெரும்புலவர் இடைமறித்து

“மகளிர் மனப் போக்குப் பற்றிய ஆய்வில் இறங்கினால் எளிதில் மீள முடியாது; முரண்கள் முட்டி மோத ஆரம்பித்துவிடும். எனவே ஒருங்கிணைப்பாளர் ‘திருக்குறள் செம்மல்’ அவர்கள் சற்று முன்னர் கூற நினைத்த வள்ளுவ முரண்களைக் கோடிட்டுக் காட்டட்டும். நாமும் உடன் சிந்திப்போம்.”

ஒருங்கிணைப்பாளர்

“நான் வள்ளுவத்தில் முரண்பாடுகளை விட உடன்பாடுகளையே பெரிதும் காண்கிறேன். சிறு முரண்கள் அவ்வப்போது தோன்றினாலும் அவற்றைக் காலச் சூழலோடும் பாட வேறுபாட்டோடும் பொருத்தி அமைதி காண முற்படுவேன். மனம் பற்றி நிறையச் சொன்னார்கள். இந்த இடத்தில் டாக்டர் மு.வ. அவர்கள் கூறிய கருத்தை முதலில் முன்வைக்க விரும்புகிறேன். அவர் சொன்னார்:

‘பிற உயிர்களை விட மக்கள் வாழ்வு சிறந்திருக்கக் காரணம் அவர்கள் பெற்றுள்ள மனம் எனும் கருவிதான். அதைப் பயன்படுத்தவும் பண்படுத்தவும் வல்லவர்களாக அவர்கள் துலங்க வேண்டும். மக்கள் வாழ்வு என்பது ஐம்புல நிலைக்கும் அப்பாற்பட்ட உற்றுணர்ந்து ஒப்புரவோடு வாழ வேண்டிய மனத்தால் வாழும் வாழ்க்கை ஆகும். இந்த மனம் பண்படும் இடம், காதல் வாழ்க்கை; மனம் பயன்படும் இடம், பொது வாழ்க்கை; மனம் வாழும் இடம், தனி வாழ்க்கை.’”

அரசு அதிகாரி

“அறிஞர் மு.வ.வைச் சரியான இடத்தில் பொருத்தமாக நினைவூட்டி, எங்கள் மனங்களையும் நிறைத்து விட்டீர்களே?” (கைதட்டல்)

ஒருங்கிணைப்பாளர்

“‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்’ என வள்ளுவரே முத்தாய்ப்பு இட்ட பின்னர், நாம் மனத்தைப் போட்டு இதற்கு மேலும் குழப்பிக் கொள்ள வேண்டுமா?

குறள் பட்டிமன்றங்களில் எல்லாம் வினாவாக எழுப்பப்படும் குறளை இந்த நிலா முற்ற அவையில் என் மனதைத் தாக்கிய முதல் முரணாக வைக்கிறேன்.

அந்தக் குறட்பா:

“அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

     பொறுத்தானோடு ஊர்ந்தா னிடை’    (37)

அறத்தாறு என்றால் அறத்தின் பயன். ஆனால் இங்கு ஊழ்வினையையும் சுட்டுவது போலப் படுகிறது. அதாவது பல்லக்கைத் தாங்குவோர் தீவினை செய்தோர், அதில் ஏறி அமர்ந்து செல்வோர் நல்வினை செய்தோர் எனப் பன்னெடுங் காலமாகக் கருதப்பட்டு வந்துள்ளது.”

அறத்தாறு – இதுதானா?

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

“இன்றைய குடியாட்சிக்கு வந்து பொன்விழாக் கொண்டாடி விட்ட நம் நாட்டு நிலை என்ன? வாக்களித்தோர் தீவினை செய்தோராகவும், எப்படியோ வெற்றி பெற்றோர் நல்வினையாளராகவும் நாடகங்கள் அரங்கேறு கின்றனவே? வேட்பாளராக விழைவோர் தம் பூர்வ கதையை எல்லாம் தெரிவித்தாக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும் அளவுக்கு ஆட்சிக் கட்டி லேறுவோர் மீது அவநம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதே? அவர்கள் எல்லாம் நல்வினைப் பயனால் ஆட்சிக்கு வருகிறார்கள்; ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுகிறது’ என்பது தானே நடைமுறை?”

ஒருங்கிணைப்பாளர்

“அரசுப் பொறுப்பில் இருக்கும் அன்பர் அடுக்கிய ஐயங்கள் இன்றைய நம் குடியாட்சி முறையைச் சீர்குலைத்து வரும் கயமைகள் என்பதில் யாருக்கும் மறுப்பில்லை; ஆனால், குறட்பாவின் உண்மைப் பொருள் எதுவாயிருக்கும் என நாம் மனம் விட்டுச் சிந்திக்கலாமே?”

 

பேராசிரியர் வளனரசு

“இந்தக் குறளுக்கு ஊழைக் கருத்தில் கொண்டு பொருள் காண முற்பட்டால் ஏற்றத்தாழ்வு எண்ணமே நம்முன் நந்தி போல் நிற்கும்.”

ஒருவர்

“அப்படியானால் வள்ளுவர் ‘ஊழ்’ பற்றித் தனி அதிகாரமே செய்துள்ளமைக்கு என்ன பதில் சொல்ல முடியும்?”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“ஊழுக்கு அவர் தனி அதிகாரம் செய்திருப்பினும் அங்கு அவர் கருதிய பொருளமைதி இந்தக் குறளுக்குப் பொருந்தாது என்பது பல அறிஞர் முடிபு. அப்படிக் கருதினால் சமுதாயத்தில் உயர்வு தாழ்வுப் போராட்டத்திற்கு, சமூக நியதிக்கு, சட்டத்திற்கு எல்லாம் அப்பால் போய், ஏதோ ஒரு சமாதானம் தேடிக் கொள்ளுவதாகவே அமையும். வள்ளுவர் ஊழில் உறுதி இல்லாதவர் அல்லர். அது இக்குறளுக்குப் பொருந்துமா என மட்டுமே நாம் கருத வேண்டும்.”

ஒருங்கிணைப்பாளர்

அறநெறி என்பது இரு சாராருக்கும் பொதுமையானது தான். பல்லக்கைத் தாங்குவோரும் மனிதரே. அதில் அமர்ந்து செல்வோரும் மனிதரே. பல்லக்கைச் சுமப்போராயினும் அவர்கள் அற நெறியில் நின்றால் அறவோர் ஆகலாம். அதில் அமர்ந்து செல்வோராயினும் அவர்கள் அறநெறி பற்றி நின்றாலே அறவோர் ஆகலாம். அறவோர் ஆகும் வாய்ப்பு இருசாரார்க்குமே உண்டு. அது அவரவர் செயல் விளைவே அன்றி – அறத்தின் பயன் எனக்கொண்டு, ஏதோ முற்பிறவிப் பயன் என ஊழை மாசுபடுத்தக் கூடாது, காரணம் காட்டக் கூடாது.

‘அறத்தான் வருவதே இன்பம்’ என்பதுதான் வள்ளுவத்தின் உண்மைப் பொருள்.”

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 7

 

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைக்குப் புகழ், பாராட்டு என்பதெல்லாம் பணபலமோ, ஆட்பலமோ உள்ளவர்களின் கைக்கருவியாகி விட்டது உண்மை. செய்தித் தாள்கள் போன்ற ஊடகங்கள் அவர்களுக்கு விலைபோகி விடுவதும் மறுக்க முடியாத நடைமுறை. அவையோர்க்கு இங்கே ஒன்றை நினைவூட்டுவது என் கடமை. மேலும், இது குறள் நிலா முற்றமாக இருப்பதால், புகழ் – போலி என்பதைப் பற்றிய வள்ளுவர் கருத்தைச் சுற்றி வருவதைவிட, வள்ளுவப் பெருந்தகை புகழுக்கு ஊறு செய்பவை என எவ்வெவற்றைப் பட்டியலிட்டாரோ அவற்றையும் இன்றைய வாழ்வோட்டத் தோடு கருதிப் பார்க்கலாம்.”

புலவர் இடைமறித்து

“‘திருக்குறள் செம்ம’லின் கருத்தை நான் வழிமொழிகிறேன். வள்ளுவப் பேராசான் ‘பிறன்மனை விழைபவன், என்றும் நீங்காப் பழியை எய்துவான்’ என எச்சரித்தார். ஆனாலும் இன்று பிற நங்கையரை அவமானப்படுத்துவது ‘ஈவ் டீசிங்’ (பெண் சீண்டல்) எனும் புதுப்பெயரில் விளம்பர மாகப் பிரபலமாகி வருகிறது. தவறு செய்பவர்கள், சிறிய தண்டனைக்குப் பின் மீண்டும் வேறு வழியில் புகழேணி தேடிக் கொள்ளுகிறார்களே..!”

ஒருவர் இடை மறித்து

“புகழ் ஏணி அல்ல… ‘புளுகு ஏணி’ என்று சொல்க” (சிரிப்பலை)

புலவர்

“ஐயா சுட்டிக்காட்டியது போல… ‘ஒறுத்தார்க்கு ஒரு நாள் இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்’ (156) என்றார் வள்ளுவர்.

ஆனால், இன்று அரசியல்வாதிகள், சாதி, வர்க்கம், மதம், ஆசாரம் எனும் பல பெயர்களால், பின்னணியால் பிறரைத் துன்புறுத்திச் சுகம் தேடி விட்டுப் பின்னர் பணத்தாலும், அதிகாரச் செல்வாக்காலும் தமக்குத் தனியாகத் தணியாத தொரு புகழைத் தேடிக் கொண்டு விடுகிறார்கள்; உண்மைப் புகழைக் கொன்று புதைத்தும் விடுகிறார்கள். இதுதான் கண்கூடு.”

மற்றொருவர்

“‘வறியார்க்கு ஒன்று ஈவதே புகழ், ஈகையால் வருவதே புகழ்’ என்பவையெல்லாம் பழைய புராணங்கள்… இன்று புகழின் மறுபெயர்.. அப்பட்டமான, அறுவெறுப்பான விளம்பரம் என்று சாதனைப் பண்டங்களைப் பெரிதாக விளம்பரப்படுத்திப் பொருள் குவிப்பதைப் போல, அற்பமான செயல்களைப் பெரிய சுவரொட்டி களால் விளம்பரப்படுத்தி இப்போது சுய விளம்பரமும் ஆதாயமும் தேடுகிறார்கள். சினிமா விளம்பரமாகிவிட்ட இந்த மாய வலையில் நம் தமிழகத்து இளைய சமுதாயமும் மயங்கி விழுந்து வருவதுதான் என் போன்ற வயதானவர்களுக்கு வருத்தத்தை, துயரத்தைத் தருகிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“புலவர் ஐயாவின் மனத்துயரை நாமும் பங்கிட்டுக் கொள்ளுவதே நியாயம். இதனை வள்ளுவர் அன்றே தெளிந்திருந்தார் என்றே கருத வேண்டியுள்ளது.”

புலவர்

“‘திருக்குறள் செம்மல்’ புதிர் போடுகிறாரா?”

ஒழுக்கமில்லாமலே விழுப்பமா?

ஒருங்கிணைப்பாளர்

“புதிர் அல்ல புலவர் ஐயா, வள்ளுவர் அதிகார முறைவைப்பை நினைத்து இக் கருத்தைச் சொன்னேன்.”

ஒரு குரல்

“சொல்லுங்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘புகழ்’ என்பது ஒருவருடைய அற ஒழுக்கத்தால் விளையும் நல்ல பயிர். எனவேதான் வள்ளுவர் பொது வாழ்க்கைப் பகுதியாகிய பொருட்பாலில் அதைச் சேர்க்காமல் அற வாழ்க்கை அடிப்படைகளான இல்வாழ்க்கை, ஒப்புரவு, ஈகை என்பவற்றோடு புகழையும் ஓரதிகாரமாக இணைத்துப் புகழை உயர்த்தி வைத்தார், ‘ஈதல் இசைபட வாழ்தலே புகழ்’ என்றார் (கைதட்டல்). இக்கருத்தைச் சொன்ன அறிஞர் மு.வ.வை நினைவு கூர்வோம்.”

வருமான வரித் துறை அதிகாரி

“தாங்கள் சரியான இடத்தில் அறிஞர் மு.வ.வின் கருத்தை, வள்ளுவர் புகழை அறத்துப்பாலொடு அன்று சேர்த்தமை போல, இன்று செய்து விட்டீர்கள். இப்போது மு.வ. எழுதிய மற்றொரு கருத்தை என் நினைவில் உள்ள வரை சொல்ல ஆசைப்படுகிறேன். ‘ஒழுக்கம் உடையவர்கள் மூலையில் கிடக்க, ஒழுக்கமற்ற சிலரைச் செய்தித் தாள்களும், வார இதழ்களும் வானளாவப் புகழ்ந்து பாராட்டுகின்றன. அவற்றின் விளம்பரங்களைப் படித்து, அந்தப் புகழுரைகளை உண்மை என நம்பிவிடுகிறார்கள் பொதுமக்கள்.’ இப்படிப்பட்ட சிலரைப் பார்த்துக் கேட்கும் இளைஞர்களின் மனதில் ஒரு திகைப்பு ஏற்படுகிறது. ஒழுக்கம் இல்லாமலே விழுப்பம் பெறமுடிகிறதே என்று எண்ணிப் பார்க்கிறார்கள். உடனே அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கை தளிர்க்கிறது. புதிய ஆராதனையாகப் போலிகளுக்கு போஸ்டர் ஒட்டப் போய்விடுகிறார்கள்.”

வாக்குச் சீட்டின் வலிமை தெரியாமை

ஒருங்கிணைப்பாளர்

“வருமான வரித் துறை ஆணையர் கூறிய கருத்தை யாரும் மறுக்க முடியாது. இச்சமயத்தில் என் இனிய நண்பரும் இளைய சமுதாயத்தைப் பார்த்து ‘உன்னால் முடியும் தம்பி’ என நம்பிக்கை எழுச்சி ஊட்டிட ஓயாது முற்பட்டிருப்பவருமான திரு.எம்.எஸ்.உதயமூர்த்தி கூறிய கருத்தைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். அவர் சொன்னார்:

‘அரசியல் விழிப்பில்லாத நாட்டில், தங்கள் வாக்குச் சீட்டின் வலிமையை உணராத மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில், தலைவன் என்பவன் தான்தோன்றியாகப் போகவும், தாறுமாறாகப் புகழ் தேடவும் வாய்ப்புக்கள் நிறைய உண்டு..’ அந்தப் புகழோசைகள் தான் இன்று எங்கும் எதிரொலிக்கின்றன; நம்மைச் செவிடுகள் ஆக்குகின்றன.”

(ஓய்வு பெற்ற பேராசிரியர் முற்றத்தில் சேருதல்)

ஒருங்கிணைப்பாளர்

“நம் பேராசிரியர் இப்போது தான் வந்து அரங்கில் நம்மோடு அமர்ந்துள்ளார். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் அவர் தம் கருத்தையும் சொல்லட்டுமே.”

பேராசிரியர்

“நிலா முற்றத்தின் தொடக்கத்திலேயே வர முயன்றேன். ‘ஙிமீttமீக்ஷீ றீணீtமீ tலீணீஸீ ஸீமீஸ்மீக்ஷீ’ எனும் ஆங்கிலத் தொடர் போல சற்றே தாமதமானாலும் நிலா நீலவானின் உச்சிக்கு வரும் முன்னர் ஓடி வந்துவிட்டேன்; சற்று உங்கள் விவாதப் போக்கை உன்னிப்பாகக் கேட்டேன். ‘திருக்குறள் செம்மல்’ என் கருத்தையும் கேட்கிறார். நாம் நாடு விடுதலை பெற்றுப் பொன்விழாக் கண்டு, மணிவிழா ஆண்டினை இப்போது நெருங்கிக் கொண்டிருக் கிறோம்.”

இடைமறித்த நடுவர்

“தம்பதியர்க்கு மணிவிழாப் போல, தாய்நாட்டுக்கும் மணிவிழாக் காண்போம்.”

ஒருவர்

“பேராசிரியர் கூறியபடி இப்படி விழாக்கள் காணும் ஆரவாரத்திலேயே வீண் பொழுது போக்கி விட்டு கடமையைச் செய்து விட்டதொரு போலியான மதர்ப்பிலேயே நாட்களை ஓட்டி வருகிறோம். வளரும் தலைமுறைக்குத் தவறான வழிகாட்டி வருகிறோம்.”

புலவர்

“பேராசிரியர் ஐயா அவர்கள் அரசியல் கற்றவர். புதிராகச் சொல்லாமல் புரியும்படி சொல்லுமாறு வேண்டுகிறேன்.”

எத்தனை எத்தனை பேதங்கள்?

பேராசிரியர்

“உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொள்ளுகிறோம். ஆனால், எதிலும் கட்டுப்பாடற்ற, நேர்மையற்ற நடவடிக்கைகளால், நம்மையும் நாட்டையும் நாமே சீர்குலைத்து வருகிறோம். நம்மிலும் அதிக மக்கள் தொகை கொண்ட சீன நாடு மிகப்பெரியதொரு வல்லரசாக, கட்டுக்கோப்புடன் உயர்ந்து வருவதைக் கண்டும் காணாதவர்களாய் ஊமையராய், செவிடராய் வாழ்கிறோம், வளர்கிறோம்.”

புலவர்

“நம் மக்கள் ‘ஆட்டுமந்தைகளைப் போல’ இருக்கிறார்கள் என்று சொல்லுங்களேன்.”

பேராசிரியர்

“இன்றைய நடப்பு அப்படித்தான் சொல்லத் தூண்டுகிறது. மந்தை மனப்பான்மையே புரையோடி வருகிறது.”

புலவர்

“ஏதோ.. சந்தை மனப்பான்மைப் பொருளாதாரம் என்கிறார்களே..?”

இன்னொருவர்

“புலவரய்யா… பேராசிரியர் தம் கருத்தைச் சொல்ல விடுங்கள்! நீங்கள் குறிப்பிட்டது சந்தை மனப்பான்மை அதாவது ‘விணீக்ஷீளீமீtவீஸீரீ ணிநீஷீஸீஷீனீஹ்’ என உலகையே பெரியதொரு சந்தையாக மாற்றிவரும் பொருளாதார ஆதிக்கம். பேராசிரியர் சொல்ல வந்தது…”

பேராசிரியர்

“நம் மக்களின் இன்றைய மனப்போக்கு சந்தை மனப்பாங்கு. அதாவது தேர்தலில் வாக்காளர்களும் தேர்தலுக்குப் பின் தேர்வு பெற்றவர்களும் விலை போவது என்பதெல்லாம் விபரீதப் போக்குத் தான். அந்தச் சந்தை அல்லது மொந்தை மனப்போக்கைத்தான் ‘மந்தை மனப்பான்மை” என்கிறேன்.

வருமான வரி ஆணையர்

“இப்படி ‘ஆட்டு மந்தைகளாக இருக்கும் சமூகத்தவர்க்கு ஓநாய்களே தலைவர்களாக வருவார்கள்’ என்றான் மேலை நாட்டு அரசியல் அறிஞன் ஒருவன்.”

புலவர்

“ஐயா, மிக அருமையான மேற்கோளைத் தூக்கிப் போட்டுவிட்டார். நம் மக்கள் ஆட்டு மந்தைகள் போல கட்சிக் கட்டுப்பாடு, ஆட்சிப் பொறுப்பு எனும் வகைகளில் ஆட்டுவிக்கப்படும் தலையாட்டி பொம்மைகளாகவே இருக்கிறார்கள். ‘வாக்கு’ எனும் புனிதமான உரிமைச் சீட்டைப் பொறுப்புணர்வோடு பயன்படுத்தத் தெரியாமையால் அல்லது அறியாமையால், இன்னும் சொல்லப் போனால்  வாக்காளர்கள் தேர்தல் காலங்களில் முட்டாள்கள் ஆக இருப்பதால், அயோக்கியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுகிறார்கள்.”

“புலவர் ஐயா என் கருத்தையே எதிரொலித்தார். ஆட்டுமந்தைச் சமுதாயம் ஓநாய்களின் தலைமையில் ஊர்வலமாகப் போகும் பரிதாபக் காட்சியே அண்மையில் பல மாநிலங்களில் அரங்கேறி வருகிறது. நம் ஜனநாயகம் பண நாயகத்தாலும் அடியாட்களின் பலமான ஆதிக்கத்தாலும் மூலையில் அடங்கிக் கிடக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலான மக்கள் இன்னும் வளர்ச்சிப் பாதையின் ஓரங்களிலேயே ஒதுக்கப்பட்டுள்ளார்கள்; ஒடுக்கப்பட்டும் வருகிறார்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“இதனை அமரத்துவம் பெற்ற மகா சந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ‘வாக்காளர்களுக்கு வள்ளுவரின் அறிவுரைகள்’ எனும் கையேட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துக்காட்டியுள்ளார். அந்தச் சிறு நூலைக் கையோடு கொண்டு வந்துள்ளேன்.”

நூலை எடுத்து, பக்கத்தைப் பிரித்து முன்னால் அமர்ந்துள்ள திருக்குறள் பேரவை இளைய அன்பரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்ல, அவர் படிக்கிறார்.

அது எழுத்தில் மட்டுமே இருக்கும்!

“அரசியல், பொருளாதார, சமுதாயப் பிரச்சினை களுக்குத் திருக்குறள் வழியாகத் தீர்வுகள் காண- வழிகாட்ட – முயன்று வரும் இயக்கம் ‘திருக்குறள் பேரவை’. உயர்ந்த சிந்தனைகளும் சீரிய கோட்பாடுகளும் நிறைந்து கிடக்கும் இந்த நாட்டில் அவை செயல்படாமல் போனதால் வறுமையும் அறியாமையும் தொடர்ந்து நிலவி வருகின்றன. உழைக்கும் மக்களில் மிகப்பெரும் பான்மையினர் தொடர்ந்து ஏழைகளாகவே உள்ளனர். சிந்தனை யாளர்களில் பலர் இத்தகைய அவலங்களைக் கண்டும் கையறு நிலையில் புலம்புவதும் தொடர்கிறது.

எந்த வகையிலேனும் பொருட் செல்வத்தைக் குவித்து வைத்துக் கொண்டால், அதன் மூலம் ஆட்சியின் செல்வாக்கைப் பெற்று அனுபவிக்க முடியும் என்ற நிலை, தனி உடைமைச் சமுதாய அமைப்பில் உலகியலாக உள்ளது. பொருட் செல்வத்தின் செல்வாக்காலும் அல்லது அதிகாரத்தின் செல்வாக்காலும் தனிச்சலுகைகள் பெறும் நிலை உள்ள வரையில், உற்பத்தி பெருகினாலும் அது எல்லோருக்கும் உரியவாறு கிடைக்காது: வறுமை போகாது. ஒழுக்கமும் நற்பண்புகளும் நிலைக்கமாட்டா. செல்வத்தைக் குவித்து வைத்துக் கொண்டு அதன் மூலம் எதையும் செய்யக்கூடிய நிலையில் சிலரும், அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கே பிறரை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் நிலையில் பலரும் உள்ள எந்த நாட்டிலும் மக்களாட்சி உண்மையில் மலராது. அந்நிலை நீடிக்கும் வரையில், நாட்டில் எல்லோரும் சமம் என்பது எழுத்தில் மட்டுமே இருக்கும்; நடைமுறையில் நிலவாது. அத்தகைய நிலை நீங்கி இங்கும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்’ சமத்துவ சமுதாயம் அமைய வேண்டுமானால் ‘சொல் வேறு செயல் வேறு’ என வேலியிடும் கொடியவர்களைப் பொது வாழ்விலிருந்து மக்கள் அகற்ற வேண்டும்.”

பேராசிரியர் (உற்சாகமாக)

“மகாசந்நிதானம், தவத்திரு அடிகளாரின் இந்த அறிவுரை ஓர் எச்சரிக்கை; அவர் சொல்வது போல் சமுதாயப் போலிகளை, அரசியல் கூத்தாடி களை, வேடதாரிகளை அவ்வளவு எளிதில் மக்களால் – அதுவும் நம் மக்களால்- நீக்க முடியும் என நான் கருதவில்லை. நிலா முற்ற அவை என்ன நினைக்கிறதோ…?” (அவையில் கர ஒலி- அமைதி)

ஒருங்கிணைப்பாளர்

“அடிகளாரின் கருத்தை அன்பர் உணர்ச்சியோடு படிக்கக் கேட்டோம்; மக்கள், மக்கள் என்று யாரையோ ஒரு சாராரை தனிமைப் படுத்தக் கூடாது; நாமும்  அந்தப் பொதுமக்களில் ஒரு பகுதியினர்தானே? நம்மில் படித்தவர்கள் என மார்தட்டிக் கொள்ளும் நபரில் எத்தனை பேர், தீவிர அரசியலில் பங்கேற்க முன் நிற்க முற்படுகிறோம்? அரசியல் என்றால் ‘தீண்டத்தகாத ஒன்று’ எனக் கருதி சமுதாய விளிம்பில் ஓரமாகச் சென்று விடுகிறோமே! இதைத்தான் சமுதாயச் சிந்தனையாளர் டாக்டர் உதயமூர்த்தியும் அடிக்கடி நினைவுகூர்ந்து ஊரெங்கும் சொல்லி மனம் உளைகிறார்.”

படித்தவன் பொய்மை வாழ்வு!

பேராசிரியர்

“டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் பேச்சை நானும் கேட்ட நினைவு இருக்கிறது. மதுரையில் இளைஞர் மேடையில் அவர் பேசியபோது சொன்னார்: ‘அரசியல் மூன்றாம் தர மனிதர்களால் நிறைந்திருக்கிறது என வைத்துக் கொண்டால், அதற்குப் படித்தவர்கள் காட்டும் போலித்தனமும் அவர்கள் ஈடுபடாததும்தான் காரணம். படித்தவர்கள், நாட்டின் பொதுநலப் பணிகளில் இறங்காத போது, அந்தக் காரியங்களை யாராவது செய்ய முன் வருவார்கள். அவர்களை விடத் திறமையில் குறைந்தவர்கள் எல்லாருக்குமாக முடிவெடுப்பார்கள். எனவே அதன் பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டியது தான்…”

அவையிலிருந்து ஓர் அரசு அதிகாரி (ஓய்வு பெற்றவர்)

“எங்களைப் போன்ற அரசு ஊழியர்கள் பணிக்காலத்தே அரசியலில் ஈடுபட அனுமதி இல்லை; ஓய்வு பெற்ற பின்னர் மாறிவரும் சமூகச் சூழலோடு ஈடு கொடுத்துப் பொறுப்பேற்க எல்லோராலும் முடிவதில்லை.”

மற்றவர் – இடைமறித்து

“ஐயா! அப்படிச் சொல்லாதீர்கள்! இது அப்பட்டமான நழுவல், கை கழுவல்! எத்தனையோ அரசு ஊழியர்கள் ஓய்வுக்குப் பின்னரும் அரசியல் சமுதாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதைச் சான்றுகளுடன் சொல்ல முடியும்” (பலரும் ஆமோதித்தல்)

முன்னவர்

“நான் பணிக்காலத்தே தீவிர அரசியல் நாட்டம் கொள்ளுவதற்கு உள்ள தடைகளையே குறிப்பிட்டேன்.”

இன்னொருவர்

“அரசியல் சாராத எத்தனையோ தொண்டு அமைப்புக்கள் உள்ளன. நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பு, ஊனமுற்றோர் மறு வாழ்வு, அனாதையர் பராமரிப்பு, மகளிர் உரிமைக் காப்பு, சுற்றுச்சூழல் மாசுக்காப்பு என எண்ணிலடங்காத் தொண்டர் குழாம்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் சிறிது நேரத்தை ஒதுக்கிப் பிறர் பணி செய்யும் தொண்டு மனம் தான் வேண்டும்; அது நம்மில் படித்த பலரிடம் பரவலாக இருப்பதில்லை. எனவே இடைவெளியில், புல்லுருவிகள் புகுந்து விடுகின்றன, நாடு காடாகிறது.”

இன்னொருவர்

“படித்தவர்கள் பணியிடையே சமுதாயத் தொண்டும் செய்வதும் துணை புரிவதும் தனியாக இருக்கட்டும்; தேர்தல்களில் வாக்களிக்கக் கூடச் சாவடிகளுக்கு வராத இந்தப் படித்த குடிமக்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.”

மற்றொருவர்

“நான் எல்லாத் தேர்தல்களிலும் ஓட்டுப் போட்டவன் ஐயா… வெளியூர் போனாலும் வாக்களிப்பதற்காகவே ஊர் திரும்ப மறவாதவன் நான்.”

இன்னொருவர்

“நீங்கள் உரிய நேரத்தில் வாக்களிக்கச் சாவடிக்குப் போகாவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்கள் வாக்கையே இன்னொரு ‘குடிமகன்’ போட்டுவிடுவார்.” (சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“ஜனநாயகத்தில் மக்கள் அரசியலில் நேர்முகக் கவனம் செலுத்துவதும், வாக்களிப்புப் போன்ற கடமை களைத் தவறாமல் செய்வதும், தேர்ந்தெடுக்கப்பட்டவர் களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்துக் கணிப்பதும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உரமாக அமையும். ஆனால், நம் நாட்டில் அடியாட்களும் தீய சக்திகளும் தலையெடுக்க நேர்ந்தது ஒரு துரதிர்ஷ்டம் மட்டும் அல்ல; தேசிய அவமானமும் கூட என்றே சொல்லலாம்.

நான் திருச்சிக் கல்லூரியில் பொருளாதார முதுகலை வகுப்பில் பயின்று கொண்டிருந்தபோது கேட்ட அறிஞர் அண்ணாவின் கருத்தொன்றை நிலாமுற்ற அன்பர்கள் கவனத்திற்குக் கொணர விரும்புகிறேன்.”

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி

“மக்களாட்சியில் ஆட்சிப் பொறுப்பு யார் கையில் இருக்கிறதோ, அவர்களுடைய குணத்தையே மக்களாட்சி பெறுகிறது. நல்லவர்கள், நாணயமானவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், மக்களாட்சி நல்லதாகும்; இல்லையேல் விபரீதங்கள் விளையும்” என்றார் அறிஞர் அண்ணா!

அவையிலிருந்து ஒரு பெரியவர்

“‘யதா ராஜா ததா பிரஜா’ என வடமொழி யிலும், ‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’ எனத் தமிழிலும் பன்னெடுங் காலமாகச் சொல்லி வந்த பழமொழியும் அதுதான்.”

பேராசிரியர்

“மக்கள் எத்தகையவர்களோ, அத்தகைய தன்மை உடையவர்களையே தமது தலைவர் களாகப் பெறுவார்கள்’ என மேலைநாட்டு அரசியல் அறிஞர் சொன்னாரே…”

இடைமறித்த ஒருவர்

“அப்படியானால்.. உரிமைப் போர்க் காலத்தே நம் நாட்டில் முப்பது கோடி மக்களும் இருந்த இழிநிலையை, மகாகவி பாரதி பாடினானே…

‘நெஞ்சில் உரமும் இன்றி

     நேர்மைத் திறமும் இன்றி

     வஞ்சனை செய்வாரடி & கிளியே

     வாய்ச் சொல்லில் வீரரடி…’

எனக் ‘கிளிக்கண்ணி’யில் பாடினானே…”

மற்றொருவர்

“அவன் பாடியது சரி. அதை வைத்து ஐயா என்ன சொல்ல வருகிறீர்கள்?”

முதலில் பேசியவர்

“மக்கள் அவ்வாறு ஊமைகளாய், கோழைகளாய் சிப்பாய் வரக் கண்டு வீட்டுக்குள் ஓடிப் பதுங்குவோராய் வாழ நேர்ந்த சூழலிலும் நம் மக்களை அணி திரட்ட அண்ணல் காந்தியடிகள் தொட்டு, வீர வாஞ்சிநாதன் வரை ஆயிரமாயிரம் பேர் சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் உருவாகவில்லையா? ‘மக்களைப் போலத்தான் தலைவர்கள் அமைவார்கள்’ என்பது பொது விதி இல்லை. மக்கள், ஆட்டு மந்தையாகச் சிதறினாலும் அவர்களைச் சேர்த்து இணைக்க, காலம் தக்க தலைவர்களைக் கருணையோடு நல்கியே தீரும். அந்த வகையில் பாரத நாட்டினரான நாம் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள் (ஆவேசமாகப் பேசி நிறுத்தி விட்டு) இவ்வளவு வேகமாகப் பேசுகிறேன். இதற்குக் கூட கை தட்ட மாட்டேன். என்கிறீர்களே!”  (சிரிப்பும் கர ஒலியும்)

ஒருங்கிணைப்பாளர்

“போராட்ட காலத் தலைமை வேறு, சுதந்திரம் பெற்றபின் அமையும் உரிமைக் காலத் தலைமை வேறு. அங்கே தியாகம் அடிப்படை, இங்கே ஒழுக்கம் அடிப்படை.”

 

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 6

Related image

ஒருவர்

“மன்னிக்கவும்… மொழிபெயர்ப்பு முறைகள் – முரண்பாடுகள் பற்றிக் கூற எனக்குப் போதிய ஞானம் இல்லை; ஆனால் குறள் கூறும் கருத்துக்களில் ஆங்காங்கே பல என்று சொல்லாவிட்டாலும் சில முரண்கள் தோன்றுவதாக என் சிற்றறிவு சுட்டுவது உண்டு.”

மற்றோர் அன்பர்

“‘குறளில் முரண்பாடு’ என்று இவர் புதிய சர்ச்சையைக் கிளப்புகிறாரே..?”

ஒருங்கிணைப்பாளர்

“சர்ச்சைகள், சந்தேகங்கள் வந்தால் தானே தெளிவு பிறக்கும்? .. குறள் கூறும் செய்திகளில் முரண்கள் இருப்பது போலத் தோன்றுவதும் உண்மை என அறிஞர்கள் சிலர் கருதியது உண்டு. அவற்றையும் நிலா முற்றத்தில் சிந்தித்துச் சிறந்ததைப் பாராட்டுவோம், சிறப்பில்லாததைச் சீராக்குவோம்.”

ஓர் அன்பர்

“ஐயா… இந்த முரண்பாட்டிற்குள் நுழைந்தால் நம் வயிறுகள் முரண்பாடு செய்யும் போலத் தோன்றுகிறது. செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பார்கள். செவி நிறையக் கேட்டு விட்டோம். வயிற்றுக்கு ஏதேனும் வருமா எனப் பாருங்கள். வயிறு கிள்ளுகிறது” (சிரிப்பலை)

மற்றோர் அன்பர்

“அதோ.. உணவுப் பண்டங்களின் வரிசை வைப்பு உங்கள் கண்ணில் படவில்லையா? இரண்டு வரிசை இருக்கிறது! அதென்ன இரண்டு வரிசை? ஒன்று சைவம்; மற்றொன்று அசைவம்.”

ஒருங்கிணைப்பாளர்

“உணவுக்கு முன் ஒரு நிமிடம்… கவிஞர் கருப்பையா அவர்களே, திருக்குறளின் சிறப்பான பெருமைகளை எடுத்துக் கூறுங்கள்?

கவிஞர் கா.கருப்பையா

திருக்குறளுக்குச் சூட்டப்பெற்ற புகழாரங்கள் சில:

    “திருக்குறள் நீரோட்டம் பாயாத தமிழ்வயல்களே இல்லை”

– மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார்

மானிட வேதம்

“சினமெனும் வேதம் மற்றும் இடமெனும் பேதம் மாறும்

 தினமெனும் வேதம் யாவும் தீர்த்தொரு பொதுமை கண்டு

 வாழ்வியல் படைத்த மேதை வள்ளுவன் தந்தமுப்பால்

 சூழ்நிலை அனைத்தும் தன்னுள் சூழ்ந்தொரு பாதை

காட்டும்,

 மானிட வேதம் சிந்த வையத்தார் அனைவர்கட்கும்

 தேனினும் இனிய எங்கள் செந்தமிழ் தந்த செல்வம்”

& அறிஞர் வா.செ.கு. (குலோத்துங்கன்)

ஒப்பற்ற நூல்

“வானுக்குச் செங்கதிரவன் போன்றும்

     புனல் வன்மைக்குக் காவிரியாறு போன்றும்

     நல்ல மானத்தைக் காத்து வாழ எண்ணும்

     வையக மாந்தர்க்கு ஒப்பற்ற நூல் திருக்குறள்…”

& பாவேந்தர் பாரதிதாசன்

வளரும் எண்ணம்

“வள்ளுவரின் குறள் மீது விழியை நாட்டி

     வடித்த இரண்டடி எடுத்து மனத்துள் போட்டுத்

     தெள்ளிதின் நற்பொருள் கண்டே உளம்பூரித்துச்

     சிந்தித்துப் பார்க்குங்கால் வளரும் எண்ணம்”

& கவியரசு கண்ணதாசன்

“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்…” என்றுதானே வள்ளுவர் சொன்னார்; நாம் செவிக்கு இதுவரை உணர்வு பெற்றோம்; இனி வாயுணர்வுக்கு வகை வகையாக வைக்கப் பட்டுள்ளவற்றையும் ஒரு கை பார்த்துவிட்டு வருவோமே! பந்திக்கு முந்துங்கள் ஐயா!”

 

ஒருவர்

“நிலா முற்றத்தில் செவிக்குக் கிட்டிய உணவால் நிறைவு கிட்டியதா..?”

மற்றவர்

“அல்லது வயிற்றுக்குக் கிட்டிய அறுசுவை உணவால் நிறைவு ஏற்பட்டதா? எனச் சொல்ல முடியாத அளவு நிலாச்சோறும் சுவையாய் இருந்தது; வள்ளுவச் செய்திகளும் சுவையாய் இருந்தன.”

முன்னவர்

“அது சரி… நாம் சைவப் பந்திக்குச் சென்று வந்தோம். அசைவத்தை நாடிச் சென்றவர்கள் எங்கே? இன்னும் காணோமே…”

இரண்டாமவர்

“அதோ பாரும் ஐயா… அசைந்து அசைந்து, ஆடியபடி வருகிறார்கள். நடக்கக்கூட முடியாமல்.. அவர்தான் அசைவ வேட்டைக்குப் போனவர்… அவர் அசைந்தாடி வந்தபின் சாப்பாட்டை ருசித்துப் பாராட்டுவார். வந்த பின் கேட்டால் நமக்கும் நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். கட்சி மாறி விடுவோம்.” 

முன்னவர்

“செவிக்கு இனிய உணவோடு நாவிற்குச் சுவையான அமுதும் அளித்தமையை உளமாரப் பாராட்ட வேண்டும்.”

மற்றவர்

“நீரே பாராட்டிவிட்டீர் மிக அரிதாக, ஆச்சரியமாக!”

முன்னவர்

“ஏன் அப்படிச் சொல்கிறீர்? நல்லதைப் பாராட்ட வேண்டியது மனிதப் பண்பு அல்லவா?”

மற்றவர்

“அந்த நல்ல இயல்பு தமிழர்களாகிய நம்மிடம் அதிகம் இல்லையே? இது நம் தவக்குறை; நம் ஒருமித்த வளர்ச்சிக்கும் தடை.”

ஓர் அரசு அதிகாரி

“ஆங்கிலத்தில் வரும் புகழ்பெற்ற மாத இதழான ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் அண்மையில் படித்தேன்: “மனிதன் சற்று அதிகமாகவே உணர்ச்சி வசப்படுபவன், அவன் முதுகைச் சற்று ‘சபாஷ்’ எனத் தட்டிக் கொடுத்துவிட்டால், உடனே தலை கனத்துப்போய் விடுமாம், கர்வம் வந்துவிடுமாம்.”

இன்னொருவர்

“ஆனால், பலருக்குத் தட்டிக்கொடுக்காமலே கர்வம் தலைக்கேறி விடுகிறதே?”

ஒருங்கிணைப்பாளர்

“அந்த கர்வம் பார்க்கும் சர்ச்சையை விடுத்து,  நாம் உணவுக்கு முன் பேசிய, வள்ளுவ முரண், அரண்களைப் பற்றிப் பேசுவோமா..?”

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

“அதற்கும் முன்பாக நிலா முற்ற விருந்துச் சாப்பாட்டைப் பற்றி ஓரிரு சொற்களில் பாராட்டட்டுமே.. ‘பண்பு பாராட்டும் உலகு’ என வள்ளுவரே சொல்லி உள்ளாரே..?”

 

ஒருங்கிணைப்பாளர்

“‘பண்பு’, ‘பாராட்டு’, ‘நாகரிகம்’ எனும் சொற்களுக்கு அறிவுபூர்வமாகச் சரியான விளக்கம் ஒரு போதும் சொல்ல இயலாது; உணர்வை வேண்டுமானால் ஓரளவு புலப்படுத்தலாம்.

இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் அரசியல், சமுதாயக் காழ்ப்புணர்வுகள், சுயநல வேட்டைகள் முதலியவை காரணமாகப் பண்புகள் அருகி வருகின்றன என்பது ஓரளவு ஏற்கத்தக்கதுதான் என்றாலும் பாராட்டும் பண்பினைச் சிறு வயது முதலே ஊக்கியும் போற்றியும் வளர்க்க வேண்டியது அனைவரின் அன்றாட வாழ்வுப் பொறுப்பே ஆகும். நலம் கண்ட இடத்துப் பாராட்டுவது பண்புடையாரிடம் மட்டும் காணப்பெற்றால் போதாது. பலரிடம் பரவ வேண்டும்.”

பண்பு பாராட்டும் பக்குவம்

புலவர் ஒருவர்

“‘நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு’ (994) எனும் தமிழ்மறை, அறிவுடையோர் பண்பு பாராட்டுவதே சிறப்பு என அறிவுறுத்துகிறது. எல்லோரும் பாராட்ட முற்பட்டால் அறிவுடையோராகவும், ஆட்சித் திறத்தை ஊக்குவிப்போராகவும் வளரலாம்; தாமும் உயர்ந்து, நாட்டோரையும் உயர்த்தலாம். பாராட்டு வோரிடத்திலும் அதனை ஏற்போரிடத்திலும் பாராட்டுதல் எனும் பண்பு மேன்மேலும் சிறந்தோங்கிடவே துணை புரியும்.”

தமிழ்ச் சங்கக் கல்லூரிப் பேராசான்

“பாராட்டு எனும் போது என் நினைவில் படரும் இரு சங்கப் பாடல்களின் செய்திகளைச் சுருக்கமாகச் சொல்ல எனக்கு இந்த நிலா முற்ற அவை இசைவு தர வேண்டும்.”

ஒருவர்

“நிலா மறைந்து பொழுது விடிவதற்குள் சொன்னால் தூங்கி விடாமல் கேட்போம்… புலவரய்யா… புறநானூற்றிலேயே எங்களை மூழ்கடித்துவிடக்கூடாது” (சிரிப்பு)

பேராசான்

“நான் அகத்துறை நற்றிணைப் பாடலில் ஒக்கூர் மாசாத்தியார் பாடிய பாடல் ஒன்றின் கருத்தைச் சொல்ல விழைந்தேன். போருக்குச் சென்ற வீரன், ஆற்றலோடு போர் முடித்து வெற்றி வீரனாகத் தன் மனையாளைக் காணக் குதிரை பூட்டிய தேரில் விரைந்திடும் காட்சியை, ஒக்கூரார் ஓவியமாக்கி உள்ளார். ‘வாயு வேகம் மனோ வேகம்’ என விரைந்து வந்திட அவனுக்கு உதவிய தேரோட்டியையும் குதிரைகளையும் செய்வினை முடித்த செம்மல் உள்ளத்தோடும், புரிந்த காதலொடும் வந்த அவன் ‘போர் முடித்துத் தேரில் ஏறியதைத் தான் அறிவேன்; ஆனால் இவ்வளவு விரைவில் வந்தது எப்படி என அறியேன். என்னப்பா..! வானில் சுழலும் காற்றைக் குதிரைகளாகப் பூட்டிவந்தாயா! அல்லது மனத்தைப் பூட்டி வந்தாயா?’ என வியந்து கேட்கும் அளவுக்கு விரைந்து வந்து இறங்கிக் காலமெல்லாம் காத்திருந்த தன் மனையாளை மார்புடன் கட்டி அணைத்துக் கொள்ளுகிறான்… இது மாசாத்தியார் வெற்றி வீரன் ஒருவன் தன்னிலும் நிலை தாழ்ந்த குதிரைச் சாரதியை மனதாரப் பாராட்டுவதாக அமைத்த அரிய காட்சி. அதுபோல, ‘யான் கண்டனையர் என் இளையரும்’ எனப் பிசிராந்தையார் எனும் புறநானூற்றுப் பெரும்புலவர் தம்மினும் இளைஞரைப் பெருமையுறப் பாராட்டினார். முதுமையிலும் கவலையால் நரை முடி படராது எனச் சான்று காட்டினார். எனவே ‘யார் யார் வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்றாற் போல, யார் சிறந்த பணி செய்தாலும் சிந்தை குளிரப் பாராட்டும் சிறந்த மனம் வேண்டும். ‘சின்னப் பசங்க தானே..?’ என அலட்சியப்படுத்துவதால், அவர்கள் பெரியவர்களைத் தாமும் அலட்சியப்படுத்துவதில் கைதேர்ந்தவர் களாகி வருவது சமுதாயக் காட்சியாகி விட்டது.”

ஒருவர்

“சிறிய வயதினர் சினிமாக்காரர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்துச் சீர்பெறுவதும், சீரழிவதும் ஒருபுறம் இருக்கட்டும். பெரியவர் களாகிய நம்மில் பலர் நடத்தும் பாராட்டு விழாக்களின் பரிதாபக் காட்சியைப் பலமுறை கண்டு வியந்து பயந்தே போன அந்த அதிர்ச்சியில் சொல்கிறேன்.”

இன்னொருவர்

“எங்களுக்கும் அதிர்ச்சியூட்டாமல் சொல்லுங்கள்.”

புகழோசையா? விளம்பர இரைச்சலா?

பெரும்புலவர் தொடருகிறார்

“இன்று சிறந்த சாதனை புரிந்தமைக்காக ஒருவரை உரிய முறையில் பாராட்டுவதை அனைவரும் வரவேற்பது முறைமை. ஆனால் என்ன நடக்கிறது? சாதாரணமான அற்பக் காரியத்தைக்கூட, விளம்பரத்தால் மிகைப்படுத்தி சம்பந்தப்பட்டவரிடமும் பிறரிடமும் நன்கொடை வசூலித்துப் ‘பாராட்டு விழா’ எனும் பெயரில் ஒரு பகட்டு விழாவை நடத்தி, தானும் ‘சாதனை யாள’ரோடு முதல் வரிசையில் நின்று, புகைப்படம் எடுத்து, மறுநாள் பத்திரிகையில் அதைப் பிரசுரிக்கக் கண்டு மனச்சாந்தி பெறும் ஒரு மாயையே இன்று பாராட்டாக, புகழாக உலா வருகிறது என்பது என் கருத்து.”

ஒருங்கிணைப்பாளர்

“இந்தக் கருத்தை நம் மூதறிஞர் மு.வ. ஒப்புக் கொண்டுள்ளார் என்பதை நிலா முற்ற அவையின் கவனத்திற்குக் கொணர்கிறேன்.

பொருளும் புகழும் வாழ்வுக்குத் தேவை. ‘புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்’ என்ற வள்ளுவர், ஒருவர் மறைவுக்குப்பின்னர் தாம் பெற்ற மக்களைப் போல அவருக்கு எஞ்சி நிற்கப்போவது அவர் ஈட்டும் புகழே என வலியுறுத்திச் சொல்லியுள்ளார்.”

ஒருவர்

“வள்ளுவர் ‘புகழெனும் எச்சம்’ என்றே குறிக்கிறார்: ‘இசையெனும் எச்சம்’ (238): அன்பரின் நினைவூட்டலுக்கு நன்றி. ஆனால் வள்ளுவர் காலச் சமுதாய வாழ்வு ஊரளவில் – கிராம அளவில் – சுருங்கியதொரு குடிமை வாழ்வாக இருந்தது. எனவே ஒருவர் புகழுக்கு உரியவர் தானா என ஒரு சாதனையாளரை உண்மையிலேயே நேரிடையாகக் கண்டறிந்து போற்றிப் பாராட்டு வதையும் அதைச் சமுதாயத்தவர் ஒருமனமாக ஏற்பதையும் உணர முடியும். ஆனால், போலிப் புகழ் ஊர்வலங்கள் இன்று, உலகின் நாலா திசையிலும் ஒரு வகையில் விரிந்துள்ளன; இன்னொரு வகையில் உலகம் கைக்குள் அடங்கு மாறு சுருங்கியும் உள்ளது. இன்றுள்ள அறிவியல் சாதனத் தொடர்புப் பெருக்கத்தின் காரணமாக ஒரு வினாடிக்குள் ஒருவர் உலகப் புகழுக்கோ அல்லது உலகின் கவனத்துக்கோ கொணரப் பட்டு விடுகிறார்.”

இடைமறிக்கும் ஒருவர்

“அதை கின்னஸ் சாதனை எனப் பதிவு செய்கிறார்கள். அப்புறம் இன்னொருவர் அந்த நுனியைத் தொட்டவுடன் முந்தையவர் பெயர் காணாமல் போய்விடுகிறதே, அது புகழா? போலியா?”

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைக்குப் புகழ், பாராட்டு என்பதெல்லாம் பணபலமோ, ஆட்பலமோ உள்ளவர்களின் கைக்கருவியாகி விட்டது உண்மை. செய்தித் தாள்கள் போன்ற ஊடகங்கள் அவர்களுக்கு விலைபோகி விடுவதும் மறுக்க முடியாத நடைமுறை. அவையோர்க்கு இங்கே ஒன்றை நினைவூட்டுவது என் கடமை. மேலும், இது குறள் நிலா முற்றமாக இருப்பதால், புகழ் – போலி என்பதைப் பற்றிய வள்ளுவர் கருத்தைச் சுற்றி வருவதைவிட, வள்ளுவப் பெருந்தகை புகழுக்கு ஊறு செய்பவை என எவ்வெவற்றைப் பட்டியலிட்டாரோ அவற்றையும் இன்றைய வாழ்வோட்டத் தோடு கருதிப் பார்க்கலாம்.”

இடைமறித்த ஒருவர்

“மன்னிக்கவும்… மொழிபெயர்ப்பு முறைகள் – முரண்பாடுகள் பற்றிக் கூற எனக்குப் போதிய ஞானம் இல்லை; ஆனால் குறள் கூறும் கருத்துக்களில் ஆங்காங்கே பல என்று சொல்லாவிட்டாலும் சில முரண்கள் தோன்றுவதாக என் சிற்றறிவு சுட்டுவது உண்டு.”

மற்றோர் அன்பர்

“‘குறளில் முரண்பாடு’ என்று இவர் புதிய சர்ச்சையைக் கிளப்புகிறாரே..?”

ஒருங்கிணைப்பாளர்

“சர்ச்சைகள், சந்தேகங்கள் வந்தால் தானே தெளிவு பிறக்கும்? .. குறள் கூறும் செய்திகளில் முரண்கள் இருப்பது போலத் தோன்றுவதும் உண்மை என அறிஞர்கள் சிலர் கருதியது உண்டு. அவற்றையும் நிலா முற்றத்தில் சிந்தித்துச் சிறந்ததைப் பாராட்டுவோம், சிறப்பில்லாததைச் சீராக்குவோம்.”

ஓர் அன்பர்

“ஐயா… இந்த முரண்பாட்டிற்குள் நுழைந்தால் நம் வயிறுகள் முரண்பாடு செய்யும் போலத் தோன்றுகிறது. செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பார்கள். செவி நிறையக் கேட்டு விட்டோம். வயிற்றுக்கு ஏதேனும் வருமா எனப் பாருங்கள். வயிறு கிள்ளுகிறது” (சிரிப்பலை)

மற்றோர் அன்பர்

“அதோ.. உணவுப் பண்டங்களின் வரிசை வைப்பு உங்கள் கண்ணில் படவில்லையா? இரண்டு வரிசை இருக்கிறது! அதென்ன இரண்டு வரிசை? ஒன்று சைவம்; மற்றொன்று அசைவம்.”

ஒருங்கிணைப்பாளர்

 

“செவிக்கு இனிய உணவோடு நாவிற்குச் சுவையான அமுதும் அளித்தமையை உளமாரப் பாராட்ட வேண்டும்.”

 

“சிறிய வயதினர் சினிமாக்காரர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்துச் சீர்பெறுவதும், சீரழிவதும் ஒருபுறம் இருக்கட்டும். பெரியவர் களாகிய நம்மில் பலர் நடத்தும் பாராட்டு விழாக்களின் பரிதாபக் காட்சியைப் பலமுறை கண்டு வியந்து பயந்தே போன அந்த அதிர்ச்சியில் சொல்கிறேன்.”

இன்னொருவர்

“எங்களுக்கும் அதிர்ச்சியூட்டாமல் சொல்லுங்கள்.”

புகழோசையா? விளம்பர இரைச்சலா?

பெரும்புலவர் தொடருகிறார்

“இன்று சிறந்த சாதனை புரிந்தமைக்காக ஒருவரை உரிய முறையில் பாராட்டுவதை அனைவரும் வரவேற்பது முறைமை. ஆனால் என்ன நடக்கிறது? சாதாரணமான அற்பக் காரியத்தைக்கூட, விளம்பரத்தால் மிகைப்படுத்தி சம்பந்தப்பட்டவரிடமும் பிறரிடமும் நன்கொடை வசூலித்துப் ‘பாராட்டு விழா’ எனும் பெயரில் ஒரு பகட்டு விழாவை நடத்தி, தானும் ‘சாதனை யாள’ரோடு முதல் வரிசையில் நின்று, புகைப்படம் எடுத்து, மறுநாள் பத்திரிகையில் அதைப் பிரசுரிக்கக் கண்டு மனச்சாந்தி பெறும் ஒரு மாயையே இன்று பாராட்டாக, புகழாக உலா வருகிறது என்பது என் கருத்து.”

 

( தொடரும் )

 

குறள் நிலா முற்றம் – 5

 

மேனிலைப் பள்ளித் தமிழ்ப் பெரும்புலவர் ஐயா ஒருவர் எழுந்தார்

“அவையோரே வணக்கம்… புதுமை, புதுமை என்றீர்கள், நம் தமிழ் இலக்கியங்களில் – அதாவது வேறு எந்த உலக இலக்கியத்திலும் இல்லாத புதுமை மேல் கணக்கு – கீழ்க்கணக்கு நூல்கள் எனும் இருவகைப் பாகுபாடு.

நம் பண்டைய தமிழ் நூல்கள் பதினெண் மேல் கணக்கு – பதினெண் கீழ்க்கணக்கு என இருதொகை களாகத் தொகுக்கப்பட்டன என்பதை அடியேன் நினைவூட்டுகிறேன்.

அகம் – புறம் பற்றியன எல்லாம் மேற்கணக்கு நூல்களாயின; நீதிநூல்கள் எல்லாம் கீழ்க்கணக்கு வகைகள் ஆயின.

நான் கற்றவரை…

ஒன்று – பல அடிகள் இல்லாத செய்யுள்களின் தொகுதி.

மற்றொன்று – அறம் பொருள் இன்பம் எனும் பொருள் பற்றி வருவது எனும் இரண்டு இலக்கணங்களைக் கொண்டது பதினெண் கீழ்க்கணக்கு.”

இடைமறித்த இன்னொரு புலவர்

“ஐயா… அடிக்கணக்குப் போட்டு, நாலடி நானூறு, பழமொழி நானூறு என ஆரம்பித்தால் நாம் குறள் நிலா முற்றமே நடத்த முடியாது. நிலா மறைந்து பொழுது விடிந்துவிடும்.  திருக்குறளுக்குத் திரும்பினால் போதுமே…”

ஒருவர்

“காலந்தொறும் திருக்குறளுக்குத் தான் திரும்பி உள்ளோம்; இனியும் திரும்புவோம்.. திரும்பத் திரும்ப நாம் தேடி வருவதால்தான் திருக்குறள் (திரும்பத் திரும்ப வரும் குறள்) எனப் பெயர் பெற்றது பொருத்தமோ எனத் தோன்றுகிறது.”

 

இன்னொருவர்

“ஐயா கூறிய நகைச்சுவை, சிரிப்பை மூட்ட வில்லையே? அப்படியானால் திருவாசகம், திருவருட்பா என வருவதற்கு என்ன காரணம் சொல்வது…? திரு என்பது என்றும் மாறாச் சிறப்பு நோக்கிய ஓர் அடைமொழி.”

ஒருங்கிணைப்பாளர்

“ஐயா கூறியபடி நாம் மீண்டும் திருக்குறள் எனும் நீதி நூல் பார்வைக்கே திரும்புவோமே…”

பண்பட்ட பழமை, புண்படுத்தும் புதுமை

“வீரம், காதல், கொடை உள்ளிட்ட உன்னதமான மனித நேய உணர்வுகளிலும் இயற்கை இன்பத்திலும் ஈடுபட்டிருந்த நம் பழந்தமிழ்ப் புலவர்களின் உள்ளம், சிந்தனை என்பன பிந்திய காலங்களில் நீதிகளைப் பாடும் நிலைக்கு மாறியது.

இதற்கு முக்கிய காரணம், நாட்டை நன்கு ஆண்ட சேர, சோழ, பாண்டிய மரபுகளின் மாண்புகள் குறைந்து, களப்பிரர் எனும் வேற்றவர் ஆட்சி ஊடுருவி தமிழ்ச் சமுதாயத்தை உருக்குலைக்க முற்பட்டதே என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதி உள்ளார்கள்.

பண்பட்ட பழைய ஆட்சி முறைமைகள் தடம் மாறிப் புதிய முரண்பட்ட ஆட்சிப் போக்கு படர்கள்ளியாக முளைத்தது என்பது உண்மைதான். எனவே புண்பட்ட இச்சமுதாயப் போக்கை மீண்டும் பழைய தடத்தில் நிலை நிறுத்திட அறநெறிகளைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கக் கூடும். ‘வாழ்வின் அவசியத் தேவையே புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குகிறது’ என்பது அறிவியல் பொன்மொழி. அத்தகைய தேவையின் அக்கால விளைவே, எக்காலமும் போற்றும் திருக்குறள் போன்ற நீதி நூல்களின் வரவும் வாழ்வும் என நாமும் ஏற்போமே?

நீதி நூல்களின் காலம் – ‘சங்கம் மருவிய காலம்’ என இலக்கிய முறையில் குறிக்கப் பட்டாலும், சரித்திரக் கணிப்புப்படி – கி.பி. 100 முதல் கி.பி. 500 வரை – என்று பூர்ணலிங்கம் பிள்ளை, வையாபுரியார், இராச மாணிக்கனார், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பலர் ஒருவாறாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

நீதி நூல்களில் எல்லாம் தலையாயது திருக்குறள் என்பதில் இன்றுவரை எவருக்கும் ஐயம் இல்லை.

குறளை யாத்த பெருந்தகை தம் குலப் பெயரை, வாழ்ந்த நாட்டை, இடப்பெயரை, ஆட்சிக் காலப்பெயரை… என ஒரு சிறு குறிப்புக் கூடக் கோடிட்டுக் காட்டியிருந்தால் இந்தச் சிக்கல் ஏற்பட்டிராது. அது தானே வள்ளுவரின் பெருமை! சரித்திரம் எனும் சிமிழுக்குள் – தமிழ்ப்பற்று எனும் வட்டாரத்திற்குள் – தம்மை ஒடுக்கிக் கொள்ள விரும்பாதவராய், சமுதாயப் பொதுமனிதராய், உலகக் குடிமகனாய், தாம் யாத்த நூல் வழியாக மட்டுமே தம்மை இனம் காட்டி இன்றும் வாழ்கிறார்.

வள்ளுவரைத் தொடர்ந்து வந்த காலகட்டங் களிலேயே குறளை – ‘வாயுறை வாழ்த்து’, ‘பொய்யா மொழி’ எனும் புனை பெயரிட்டு வழங்கினரே தவிர- இயேசுவை அவரது சீடர்கள் வரலாறு எழுதி விளக்கங்கள் செய்தது போல, நபிகள் நாயகத்தையும், புத்தர் பிரானையும் அவரது அன்பர்கள் சரித்திர நாயகராக்கிக் காத்தது போல வள்ளுவம் எழுதியவரையும் நமக்கு நன்கு முகம் காட்ட அன்றைய புலவர்கள் முன் வராததே நமது தவக்குறை.”

பேராசிரியர்

“ஐயா… அப்படி அடியோடு மறுத்துச் சொல்லி விடாதீர்கள். திருக்குறளுக்கு முன்னுரைப் பாயிரம் போல விளங்கும் பல புலவர்கள் புகழ்ந்து போற்றிய ‘திருவள்ளுவ மாலை’யும் பின்னர் வந்த காப்பியங்களும் சிற்றிலக்கியங்களும் இன்று வரை வள்ளுவரை ஒரு வரலாற்று நாயகராகவே நிலைநிறுத்தியுள்ளன. இது உலகிற்கே ஒரு புதுமை இல்லையா? பொருளாதாரத்தில் ஆடம்-ஸ்மித்தையும், வரலாற்றில் மாக்கியவெல்லியையும் சமுதாயப் புரட்சியில் மார்க்ஸையும், நம் நாட்டு அரசியல் விடுதலைச் சட்டம் எனும் ஆக்கங்களில் அண்ணல் காந்தியடிகள், டாக்டர் அம்பேத்கார், பண்டித நேரு போன்றோரையும் சிலை வைத்துப் போற்றும் சமுதாயப் பிரிவுகள், அரசியல் கட்சிகள் எல்லாம் திருவள்ளுவருக்கும் சிலை நாட்டி, கோட்டம் அமைத்துக் கொண்டாடி வருவது இனிவரும் தலைமுறையாலும் நிச்சயம் தொடர்ந்து போற்றப்படும். எனவே வள்ளுவரைப் பற்றிய செவிவழிக் கதைகளில் சிந்தை செலுத்தாது, அவர் கூறிச்சென்ற செம்மை நெறிகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருப்போம். அதுவே திருவள்ளுவரைத் தினந்தோறும் போற்றும் திருவழிபாடு.

திருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்திலேயே பல நூல்களைக் கற்றவர், தமக்கு அமைந்த இல்லறத்தைச் செம்மையாக நடத்தி மகிழ்ந்தவர், அரசியல் உள்ளிட்ட கோட்பாடுகளில் போதிய அறிவு பெற்றவர், நீண்ட காலம் அமைதியாக வாழ்ந்தவர், பல சமயத்தாரோடு பழகிப் பழகிப் பொதுமை நாட்டமே வாழுங்கலையென வகுத்தவர், அறத்தின் மீது அசையாத அன்பும் நம்பிக்கையும் கொண்டவர்.

இதுதான் வள்ளுவர் எனும் பெருந்தகையின் வரலாறு எனச் சரித்திரத்தில் பொறித்து வைப்போமே!”

மற்றோர் அறிஞர்

“இத்தனை வள்ளுவத் தனிச் சிறப்புக்களோடு இந்த ஒன்றையும் நிலா முற்றம் ஏற்க வேண்டும்.”

ஓர் அன்பர்

“என்ன? … சுருக்கமாகச் சொல்லுங்கள்.”

முன்னவர்

“வள்ளுவர் செய்த திருக்குறளின் அதிகாரப் பாகுபாடும் அதன் அருமைப்பாடும் வேறெந்த உலக நூலினும் காண முடியாததொரு விந்தை. ‘அறம் பொருள் இன்பம் வீடு எனும் புருஷார்த்தங்கள் நான்கு’ எனப் போதிக்கப்பட்ட அந்தக் காலத்தில், முதல் மூன்றைப் பற்றி மட்டும் 1330 குறள்களைப் பாடி முடித்துக் கொண்டார். வீடு பேறு பற்றித் தனியாக ஒரு பகுதியைச் செய்ய வில்லை. இது ஏன்?”

ஒருங்கிணைப்பாளர்

“அறம் பொருள் இன்பம் எனும் மூன்று நிலைகளில் நெறியோடு இவ்வுலகில் வாழ்ந்து காட்ட முற்பட்டாலே, வீடு எனும் முக்திநிலை தானாகவே வந்தமையும் என்பதே வள்ளுவத் தகைமை. சிந்தைக்கு எட்டாத அந்த முக்தியைப் பற்றி எல்லாம் சொற்களால் விளக்குவதும் விவாதங்களை எழுப்புவதும் வீண் என வள்ளுவர் கருதியிருக்கக்கூடும்.”

ஓர் அறிஞர்

“ஆயினும் ‘மெய்யுணர்தல்’ எனும் தனி அதிகாரம் வீடு பேறடையும் வழியைச் சொல்லுகிறதே…”

பேராசிரியர்

“ஏனய்யா! ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ (50) எனும் ஒரு குறள் போதுமே… அதை நம் பாரதிப் புலவர் மறவாமல் நினைவூட்டிய ‘மண் பயனுற வேண்டும் – வானகம் இங்கு தென்பட வேண்டும்’ எனும் தொடரை நாம்தான் மறந்து விட்டோம்…”

ஓர் அன்பர்

“அந்த வானகத்து வீட்டை விடுங்கள் ஐயா… இந்த வையகத்தில் குடியிருக்க ஒரு குடிசையாவது கிட்டாதா? எனும் கவலையைப் பற்றிக் கொஞ்சம் சிந்தியுங்கள்..”

அன்பர் ஒருவர்

“கோட்டை, குடிசைப் பாகுபாடுகளை விடுத்து வள்ளுவர் வகுத்த குறளதிகாரப் பகுப்புகளின் அருமைப்பாட்டைப் பற்றிச் சிறிது பேசுவோமே? என் கருத்தைச் சொல்லட்டுமா?” என ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்.

“மூன்று பால், 133 அதிகாரங்கள், அதிகாரத்திற்குப் பத்துப் பத்துக் குறள் என வரையறுத்துக் கொண்டது வள்ளுவரின் சிந்தனை ஒருமைப் பாட்டிற்கும் அறிவாண்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டு. ஒவ்வொரு பத்திலும் ஒவ்வொரு பண்பு அல்லது கொள்கையை விளக்குகிறார். அரசியல், பொருளாதாரம் முதலிய அன்றாட வாழ்வுத் துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்த போதும் வள்ளுவர் அறத்துப் பாலை 38 அதிகாரங்களாகவும், இரண்டாம் பகுதியான பொருட்பாலில் அரசியல் அமைப்பின் அரசியல், அமைச்சியல், குடிமக்கள் பண்புகள் என்பதைப் பற்றி 70 அதிகாரங்களும், மூன்றாம் பகுதியில் உயர்ந்த காதலர் உணர்வுகள் பற்றி 25 அதிகாரங்களும் வைத்துள்ளார்.”

இடைமறித்த பேராசிரியர்

“தாங்கள் குறித்த முதல் பகுதியான அறத்துப்பாலில் வள்ளுவர் ஒரு சான்றோராகத் திகழ்கிறார்; இரண்டாம் பகுதியான பொருட்பாலில் தேர்ந்த அரசியல் அறிஞராகக் காட்சி யளிக்கிறார்; மூன்றாம் பகுதியான இன்பத்துப் பாலில் இன்றைய சினிமாப் பாடலாசிரியர்களை எல்லாம் விஞ்சிய காதல் கவிஞர் போலக் கற்பனை மழை பொழிகிறார்.

இந்த மூன்று பகுதி 133 அதிகாரப் பத்துக்களிலும் உள்ள தலைப்புக்களில் கடந்த 2000 ஆண்டுகளாக எவ்வளவோ சிந்தனைப் புரட்சிகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் பத்துக் குறள் மட்டும் போதாது; அத்தோடு இன்னும் சில புதிய செய்திகளையும் சேர்த்தால்தான் அந்த அதிகாரம் இன்றைய தேவையை நிறைவு செய்யும் என எவரும் சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொரு அதிகாரப் பத்தும் முழுமை பெற்றதொரு சிந்தனை மாடமாக அறிவுக் கதிர் வீசுவதுதான் வள்ளுவரின் மாண்பு; மகத்தானசிறப்பு.

வள்ளுவத்திற்கு, தொடக்க காலத்தில் விளக்க உரை எழுத முற்பட்ட 10 பெரும் புலவர்களைத் தொடர்ந்து காலந்தொறும் இன்றுவரை எத்தனையோ வல்லுநர்கள் உரைகள் எழுதிய வண்ணம் உள்ளனர்.”

எத்தனை எத்தனை உரைகள்? துறைகள்?

புலவர் குழந்தையின் புரட்சி உரை; நாமக்கல்லாரின் நல்லுரை; திரு.வி.க.வின் தெளிவுரை; குறள் விருதாளர் கு.ச.ஆனந்தனாரின் விளக்கவுரை; அண்மையில் கலைஞர் எழுதிய புதிய உரை என நூற்றுக்கணக்கான உரைச் செல்வங்களும் – பேரறிஞர்கள் வ.சுப.மா., டாக்டர் மு.வ. போன்றோரின் விளக்க உரைகளும் போற்றத்தக்கவை என்றாலும்கூட, எந்த ஒரு புத்துரை வரவாலும் வள்ளுவக் குறட்பாக்களின் மூலநூல் நுட்பத்தை ஓரணுவும் மாற்ற முடியவில்லை என்பதுதான் இமாலயச் சிறப்பு. தமிழில் இதுவரை வந்துள்ள எண்ணற்ற உரைகள் ஒரு புறம் இருக்க, உலக மொழிகளில், அதாவது 100க்கும் மேற்பட்ட மொழிகளில் குறள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. சமய நூல்களான விவிலியம், குர்ஆன் என்பனவற்றிற்கு ஈடாக உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்ட சமயச் சார்பற்ற வாழ்வியல் நூல் எனும் பெருமை வள்ளுவத்திற்கே உண்டு.

வள்ளுவத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வடமொழியில் அர்த்த சாத்திரத்திற்கு இணையாக மொழியாக்கம் செய்ததாக ஒரு செய்தி. அந்த மூலப்பிரதி கிட்டவில்லை.

ஆனால் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் போந்து – தேம்பாவணிக் காப்பியத்தைச் சமயத் தொண்டுடன் தமிழ்க் காப்பியமாகத் தந்த – வீரமாமுனிவர் எனும் பெஸ்கி முனிவர் – இலத்தீனில் சில அதிகாரங்களை மொழிபெயர்த்து – மேலை நாட்டுக்கு அறிமுகம் செய்தார். அதன் பின்னர் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் அடுத்தடுத்து மொழிபெயர்க்கப் பட்டன.

Image result for ஜி யூ போப்

ஆங்கிலத்தில் இத்திருப்பணியைத் தொடங்கியவரும் ஒரு கிறித்தவப் பெரியரான டாக்டர் ஜி.யூ.போப் என்பது வரலாறு. தம் கல்லறையில் தம்மை ‘ஒரு தமிழ் மாணவர்’ எனச் சாசனக் கல்லில் பொறித்து வைக்கச் சொல்லும் அளவுக்குத் திருக்குறளும் திருவாசகமும் அவர் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தி விட்டன.

பிரெஞ்சுப் பேரறிஞர் ஏரியல்  என்பார் “இயேசு பிரானுடைய புகழ்பெற்ற மலைப் பொழிவின் எதிரொலியாகத் திருக்குறள் செய்திகளை உபதேசங்களாக ஏற்கிறேன்…” எனப் புகழாரம் சூட்டினார். காந்தியடிகள் முதலான இந்த நூற்றாண்டுச் சான்றோரும், ஆல்பர்ட் ஸ்வைட்சர் போலும் ஜெர்மன் தத்துவ ஞானியரும், பல்துறைப் பேரறிஞர்களும் “வாழ்வுக்கு உரிய அன்பு நெறிகளைக் கூறும் உன்னதமான நூல்” என்றும், “உயரிய ஞானத்தைப் புகட்டும் செம்மைத் தொகுப்புச் செல்வம் இது போல உலகில் வேறு எந்த இலக்கியமும் இல்லை” என்றும் போற்றி உள்ளனர்.

டாக்டர் ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு ஒருபுறம் இருக்க, நம் நாட்டு இரு மொழிப் பேரறிஞர்கள் பலர் குறளை ஆங்கிலம் – இந்தி உள்ளிட்ட மொழிகளுக்குக் கொண்டு சேர்த்துள்ளனர். அந்தப் பட்டியலில் சென்ற தலைமுறையினரான – வ.வே.சு.ஐயர், ராஜாஜி, கே.எம்.பாலசுப்பிர மணியம், வி.ஆர்.ஆர்.தீட்சிதர், எம்.எஸ்.பூரண லிங்கம் பிள்ளை ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இவர்களுக்கெல்லாம் காலத்தால் முந்திய பேரறிவாளர்களான வணக்கத்திற்கு உரிய – எல்லிஸ், ரெவரண்ட் டிரூ  ஜான் லாசரஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

காவல்துறையின் உயர்நிலை அதிகாரியாக இருந்த டாக்டர் எஸ்.எம்.டயஸ் ஐ.பி.எஸ். அவர்கள் அண்மையில் டாக்டர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பொறுப்பாசிரியர் அவர்களின் மேற்பார்வையில் வெளியிட்ட அருமையான, ஆயிரம் பக்க இரு தொகுதிகள், டெல்லியில் துணை ஜனாதிபதி இந்தியில் வெளியிட்ட பேராசிரியர் வெங்கட கிருஷ்ணனின் இனிய மொழியாக்கம் என இன்னும் வளர்ந்து கொண்டே செல்லுகிறது இந்தப் பட்டியல். இதனை நன்கு ஆய்வு செய்து நீண்ட வரிசையாக நிரல்படுத்தப் பல்கலைக்கழகங்கள் முற்பட வேண்டும். இந்த நிலா முற்றம் மட்டும் போதாது; பற்பல நிலா முற்றங்கள் கூட வேண்டும். இவ்வாறாக எத்தனையோ மொழி பெயர்ப்புக்கள் எண்ணற்ற மொழிகளில் வந்தாலும் குறட்பாக்கள் கூறும் செய்திகளில் முரண்பாடுகள் இல்லை என்பதை நாம் ஏற்கலாம்.”

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 4

ஒரு பேராசிரியர்

“நான் ஒரு கருத்தைக் கூறலாமா? வள்ளுவம் சொல்வது புறவாழ்வில் காணப்படும் போலியான தொரு பொதுமைப் பார்வை இல்லை; ஒவ்வொரு நபரின் தனி நெஞ்சத் தூய்மை! ஒரு சமூகத்தில் வாழும் மனிதரிடையே மொழி, மதம், குலம், கட்சி எனப் பல வகையால் முரண்பாடும், வேறுபாடும் தலைதூக்குவது உலகியற்கை. மனமாசு குறைவுபட்டால், எவ்வகை வேற்றுமை யிடையேயும் உறவு பூணவும், உதவி செய்யவும் சிந்தை மலரும்; செயலாக வளரும்.

எனவே, திருக்குறளுக்குச் சாதி, சமயம் என்றெல்லாம் சாயம் பூசும் ‘பொதுமை’ நிலைக்களம் இல்லை; மக்கள் மனமே நிலைக் களம். ஆளுக்கொரு மனம் உடைய அந்தப் பன்மை நிலைக்களம். நம் மனதில் கணந்தோறும் விரிந்து பரவும் நல்ல, தீய எண்ணங்கள் என்பன நிலைக்களம். பொதுமைக்குள்ளே பகைமையும் வேற்றுமைக்குள் நட்புறுதியும் கண்ட மனநல அறிஞர் வள்ளுவர். ஆதலால், தனித்தனி நபர்களின் வஞ்சனையை மாற்றி, நெஞ்சத் தூய்மை செய்வதே அவரது நூலின் தனிச்சிறப்பு.”

ஒருங்கிணைப்பாளர்

“தன் நெஞ்சறிவது பொய்யற்க”      (குறள் 293)

“நெஞ்சில் துறவார் துறந்தார் போல”  (குறள் 276)

“மனத்தது மாசாக மாண்டார் நீராடி”  (குறள் 278)

“வஞ்சக மனத்தான் படிற்றொழுக்கம்” (குறள் 271)

“நெஞ்சத்து அகநக நட்பது நட்பு”        (குறள் 786)

எனப் பல்வேறு குறள்களில் நெஞ்சத்தையே வள்ளுவர் சுட்டிப் பேசுகிறார் என்பதை நாம் ஏற்கலாம்.”

வள்ளுவர் மருத்துவரா? மனநலச் செம்மலா? – ஒரு குரல்

“வள்ளுவரை மருத்துவராகவும், திருக்குறளை மருந்துக் கடையாகவும் உவமித்துள்ளதைச் சொன்னார்கள். அதுபற்றி மேலும் சிந்திக்கலாமே..?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் மனநல அறிஞர் என்று நாம் பேசியதைப் போல அவர் உடற் கூறுகள் அறிந்த மருத்துவர் போலவும் விளங்குகிறார். மருத்துவர் என்ன செய்கிறார்? மக்கள் உடலையும், பல்வேறு உறுப்புக்களையும் நிலைக்களமாகக் கொண்டு, நோயாளியின் நல்ல, தீய நிலைகளை நாடி பிடித்து ஆய்ந்தறிகிறார் அவர், உடல் மாற்றத்து நோயின் அறிகுறிகளுக்கான காரணங்கள், உணவு முறைகள் எனப் பலவற்றையும் கேட்டறிகிறார். பசி, உறக்கம், செரிமானம் எனத் தனித்தனி நோயாளியின் அவ்வப்போதைய நிலைப்பாடுகளுக்கேற்ப சிகிச்சை தருகிறார். இவ்வாறு தன்னிடம் நலம் நாடி வரும் நோயினர் அனைவர்க்கும் சாதி சமய வேறுபாடு கருதாது சிகிச்சையளிக்கும் மருத்துவரைப் போல, வள்ளுவரும் நம் சமுதாய, தனிநபர் நடப்பியலுக்கேற்ற நலம்தரும் நடைமுறைகளைத் தொகுத்துரைக்கிறார். மருத்துவர் கைநாடி பார்க்கிறார்; வள்ளுவர் நம் மன நோயை நோக்குகிறார். இரண்டும் பணி முறையில் ஒன்றுதான்; முழு நலம் பெறுவதே முதன்மை நோக்கம்.

இன்று நம் நாட்டிலும் உலகிலும் காணும் இன, மொழி, சமய, மாறுபாடு வேறுபாடுகள் எல்லாம், பூசல்கள் எல்லாம் எரிமலை போன்றவை. மனதுக்குள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் போராட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகள். பிரஷர் குக்கரில் மூடிவைத்துள்ள பாத்திரத்தைச் சற்றே திறந்தவுடன், அது பெருமூச்சுவிட்டு ஆவியைக் கக்குவது போல, சந்தர்ப்பம் ஏற்படும்போது உள்ளக் கொதிப்பெல்லாம் கலவரமாக, போராக வெடிக்கிறது. அமைதி அமைதி என நாடு கூட்டிப் பேசிக் கொண்டே, அணுகுண்டுகளையும் பேரழிவு ஆயுதங்களையும் ஏவும் அச்சம், அபாயம் பரப்பப்படுகிறது. நல்லரசுகள் கூட, வல்லரசுகளாக அரக்க ஆட்சி நடத்தத் துடிக்கும் பேரபாயம் உலகை நடுங்கச் செய்து வருகிறது. மக்களது தனி நல்வாழ்வு எனும் கல்லறைகள் மீது பொறாமை எனும் போலி ஆதிக்கக் கோபுரமே எழுப்பப்படுகிறது. எனவே நீரினைத் தேக்கி வைக்கும் ஊருணியைத் தூய்மை செய்யாமல் அதனை ஊருக்குக் கொணரும் வாய்க்கால்கள், குழாய்களை மட்டும் சுத்தம் செய்தால் போதுமா? எனவே ‘நோய்நாடி நோய் முதல் நாடி’ என்பது போல பொதுமை நோக்கோடு, தனிமனித நெஞ்சங்களையும் நிமிர்த்தவே முற்படுகிறார்.

‘மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு’ என்பதைத் தானே வள்ளுவமும் பிற அறநூல்களும் கூறியுள்ளன..?” என்று திசை திருப்பினார் ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அன்பர் ஒருவர்.

பலரது உதவியும் தன்முயற்சியும் கூடி அமைந்ததே வாழ்க்கை என்பதைத்தான் குறளும் அதைத் தொடர்ந்த நம் அறநூல்களும் கூறியுள்ளன; நம் இலக்கியங்களும் பேசியுள்ளன.

ஒருங்கிணைப்பாளர் 

“உணர்வுக்கும் கற்பனைக்கும் தலைமையிடம் தந்து அமைவன இலக்கியங்கள்; சிந்தனைக்கும் அறிவுக்கும் முதலிடம் தந்து தொகுக்கப்படுவன நீதி நூல்கள், அறிவியல் நூல்கள் ஆகியன. சமுதாயத்தில் வாழும் மனிதனுக்குரிய எல்லாச் சமுதாய ஒழுகலாறுகளையும் தனிமனித வரையறை களையும் விரித்து விளக்கி, தொகுத்து வகுத்துக்கூற வேண்டியவை அறநூல்கள். இந்த நீதி நூல்கள் சான்றோர் சிந்தனையிலும் தோன்றலாம்; சமூக நலனுக்காக நாளடைவில் உருவான பழக்க வழக்கங்களாலும் அமையலாம். இவை வாய்மொழி களாகவே தொடர்ந்ததால் பழமொழிகள், மூதுரைகள் என அழைக்கப்படுகின்றன.

திருக்குறளுக்கெல்லாம் முற்பட்ட நம் சங்க இலக்கியங்களில், ஆங்காங்கு அறநெறி முறைமைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன.

“அறநெறி இதுவெனத் தெளிந்த” என ஐங்குறுநூறும்,

“அறங்கடைப்பட்ட வாழ்க்கை” என அகநானூறும்,

“அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்” எனப்

பொருநராற்றுப்படையும்

என ஒரு புலவர் ஆதாரச் சீட்டுடன் படிக்கத் தொடங்கி விடவே அவரை இடைமறித்த ஒரு கல்லூரிப் பேராசிரியர்,

“அதுதான் எல்லோரும் நன்கறிந்த புறநானூற்றுப் பாடலில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் போற்றத்தகும் வாழ்க்கை முறையாகச் சொல்லப்பட்டு விட்டதே? அதைத்தானே செங்கல் அடுக்குப் போலத் தாங்கள் படித்துக் காட்டிய ஆதாரங்களும் வலியுறுத்துகின்றன.”

ஓர் அன்பர்

“ஐயா செங்கல் அடுக்கு என்றதும் நம் தவத்திரு அடிகளார் ஆற்றிய அருளுரை ஒன்று நினைவில் மறிக்கிறது. அதைச் சொல்ல நிலா முற்ற அன்பர்கள் சற்றே அனுமதிக்க வேண்டும்.”

ஓர் இடைக்குரல்

“ஐயா ஏதோ செங்கல் கட்டுமானம் பற்றிப்  பேசுகிறார், கேளுங்கள்.”

முன்னவர் தொடர்கிறார்

“ஆயிரமாயிரம் செங்கற்கள் குவிந்து கிடந்தாலும் தாமாக அவை கட்டிடமாவது இல்லை! அவற்றை நூல் பிடித்து அளந்து முறையாக அடுக்கிச் சந்து பதிந்தால்தான், சுவரை எழுப்ப முடியும். உடைந்த செங்கற்களையும் முழுச் செங்கற்களையும் இணைத்து, இடைவெளி ஏற்படும் இடங்களில் சுவரது தேவைக்கேற்றபடி முழுச்செங்கலையும் கையில் உள்ள பூசு கரண்டியால் உடைத்துப் போட்டுச் சந்துகளை நிரப்புகிறார்கள் கொத்தனார்கள். அது போல மனிதனும் தனது சொந்த மதிப்பையும் சுகத்தையும் குறைத்துக் கொண்டாவது சமுதாயமெனும் சுவரைக் கட்டிஎழுப்ப ஒத்துழைக்க வேண்டும். தானும் முன்வர வேண்டும். உடைந்த செங்கலையும் முழுச்செங்கல்லையும் இணைத்துக் கட்டிடத்தை எழுப்புவார் கொத்தனார்; சமுதாயத்தில் உள்ள வலிமையுடையவர்களையும் வலிமை அற்றவர் களையும் இணைத்து, ஒருசேர வளர்ச்சி வலிமை நோக்கிக் கூட்டிச் செல்லுபவரே சமுதாயத் தலைவர்; சரியான வழிகாட்டி.”

“அதைத்தானே ஐயா அரசியலிலும் சமதர்மம்எனப்புதுப் பெயரிட்டுச் சொல்லுகிறார்கள். பொதுவுடைமை எனப் போதிக்கிறீர்கள்..!” என இடைச்செருகலானார், ஒரு கல்லூரிப் பொருளாதாரப் பேராசிரியர்; ஒருங்கிணைப்பாளர் கருத்துத் தொடர்ச்சியை இட்டு நிரப்பினார்.

ஒப்புரவு ஒப்பற்றது

‘சோசியலிசம்’ என்ற ஆங்கிலச் சொல் விருப்பு வெறுப்புக்களைக் கடந்து, உள்ளம் ஒன்றிப் பழகும் பண்பாட்டைக் குறிப்பதாகும். சமுதாயத்தையே நேசிக்கும் நெறியைப் போற்றுவது ஆகும். இதைத்தான் வள்ளுவர் ‘ஒப்புரவு’ எனக் குறிப்பிடுகிறார். நம்மோடு உள்ள மற்றவர்களோடு சேர்ந்து பழகும்போது அப்படிச் சேர்ந்து வாழ்வதனால் ஏதேனும் இடர்களோ, கேடுகளோ விளையுமானாலும் அவற்றைக் கூடுதல் பொறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே  வலியுறுத்துகிறார்.

‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’ என்கிறார் வள்ளுவர். ‘ஒத்தது அறிதல்’ என்பதற்குப் பொருள் மற்றவர்களுக்கும் ஏற்புடையதைப் புரிந்து கொண்டு பழகுதல் என்பதுதான். அப்படி மற்றவர்களுக்கும் ஒத்ததை அறிந்து இணங்கி விட்டுக்கொடுத்து வாழ முனைவதுதான் உண்மையிலேயே நாம் உயிர்வாழ்தல் எனப்படும்.”

உடன்பாட்டோடு தொடரும் திருக்குறள் பேரவையின் அன்பர் ஒருவர் கூறுவது:

“அதாவது பழகிய நண்பரிடத்துக் குற்றம் கண்டாலும் பொறுத்துக் கொள் என்கிறார் வள்ளுவர். மனிதனையும் மனிதனையும் இணைத்துச் சமுதாயம் எனும் கட்டிடத்தை உருவாக்க இப்பொறுமைப் பண்பு, பெருமிதச் சால்பு மிகவும் அவசியம் என்பதே அவர் கூறும் ஆக்கநெறி.”

ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்

“நாகரிகம் என்பதற்கே புதியதொரு விளக்கம் அறிவித்தவர் வள்ளுவர் என்பதை அறிவோம். நண்பர் ஒருவர் நஞ்சு கலந்த பானத்தைக் கொடுத்தாலும் அதை வாங்கிக் குடித்துவிடு; நஞ்சு கலந்தது என்று அஞ்சாமல் பருகிவிடு என்று கூறுகிறார்.”

 

 

 

ஓர் அன்பர்

“ஏனய்யா அப்படிச் சொன்னார்…?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவரின் இந்தக் கருத்து சங்க இலக்கியத்தில் உண்டு; பின்னர் வந்த பெரிய புராணத்தில் ‘தத்தா நமர்’ என்று தொழுத கையுள் படையொடுங்கிடக் கண்டும் பண்போடு சாகும் முன் அன்போடு மன்னித்த மன்னன் வரலாற்றில் உண்டு.”

 

இடையே ஒருவர்

“சாக்ரடீஸ் கதையும் அப்படித்தான். அதைத்தான் வள்ளுவர் முன்பே வலியுறுத்தினார்.”

“நஞ்சு கலந்தது என்று நன்கு தெரிந்தும் தெரியாதவர் போல, அந்த நினைப்பிற்குள் சிக்காமலே பருகி விடு என்கிறார். நஞ்சு கலந்தது என நாம் நினைத்தால் நமது முகத்தில் மரணக்குறி படரத் தொடங்கும். நஞ்சு கலந்தது என்பதைத் தெரிந்து கொண்டோமோ என அதைக் கலந்து வைத்த நண்பர் உணர்ந்தால் அவர் அஞ்சுவார் அல்லது வருந்தி உளைச்சலுக்கு ஆளாவார். அந்த வருத்தத்தைக் கூட அவருக்குத் தரக்கூடாது என உறுதியாயிருக்க வேண்டுமாம். அதனால் என்ன பயன்? நஞ்சு கலந்தது என்று நினைத்து அஞ்சாமல், வருவது வரட்டும் எனப் பருகி விட்டால், மரண பயத்தைக் கடந்தே துணிந்தால், அந்த நஞ்சு கூட ஒருவரைக் கொன்று விட முடியாது. தக்க சிகிச்சை பெறும்வரை நஞ்சையும் முறித்து உயிர் காக்க வல்லமை நெஞ்சத்தில் உறுதியாக நிலைகொள்ளும் என்கிறார். நஞ்சையும் அஞ்சாது பருகுவதால் அதைச் சற்றாவது முறிக்கும் வலிமை செங்குருதிக்கு உண்டாகி விடுமாம்.”

“ஆமாங்க, புலியடிச்சுச் சாகிறவனை விட கிலி பிடிச்சுச் செத்தவன்தாங்க அதிகம்” என ஒருவர் இடை மறிக்க, நிலா முற்ற அவையில் சிரிப்பு அலைகள் பரவின.

ஒரு சிவநெறிச் சீலர் நீறுபூசிய நெற்றி யுடையவராய்ப் பணிவோடு எழுந்தார், பகர்ந்தார்:

“அவையோரே… நம் அப்பர் சுவாமிகளுக்குக் கூட நஞ்சு கொடுக்கப்பட்டதைச் சேக்கிழார் பாடியுள்ளாரே?

அப்பர் அடிகள் நஞ்சுண்ட பின்னரும் சாகாமல் நமசிவாய மந்திரத்தையல்லவா உச்சரித்தார்?”

இன்னொருவர்

“அப்பரடிகள் போல நஞ்சுண்போர் எல்லாம் நமசிவாய மந்திரத்தால் மட்டும் பிழைத்துவிட்டால், அப்புறம் ஆஸ்பத்திரிக்கு ஆளைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய அவசியமில்லையே! நாமெல்லாம் அப்பரடிகள் போலவோ சாக்ரடீஸ் போலவோ இருந்துவிட முடியுமா..?”

மற்றொருவர்

“நாம் என்ன நஞ்சு சாப்பிடாமலா இருக்கிறோம்? இன்று நாம் உண்ணும் சாப்பாட்டில் கலப்படம்; நோய்க்குப் பருகும் மருந்தில் கலப்படம்; பல்துலக்கக் காலையில் உபயோகிக்கும் பற்பசை தொட்டு அனைத்திலும், நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை, ரசாயனக் கலவையை, தெரிந்தும் தெரியாமலே உட்கொண்டு எப்படியோ உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.”

ஓர் அன்பர்

“ஐயா தம் வீட்டில் மனைவி சமைத்துத் தரும் சாப்பாடு பிடிக்காமல் அப்படிச் சொல்லுகிறார் என நினைக்கிறேன்.”

(அவையில் சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்

 

“இந்த விவாதத்தை வள்ளுவரின் குறளோடு அதாவது,

‘பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

 நாகரிகம் வேண்டு பவர்”      (580)

என்பதோடு தொடர்வோம். அன்பும் அருளும் இரண்டற இணைந்ததே அந்த நயத்தக்க நாகரிகம். அத்தகைய நல்வாழ்வு வேண்டும். அதை நாடும் மனமாவது வேண்டும் என்பதே குறள் முதலிய நம் நீதி நூல்களின் தொடர்ச்சியான உருவாக்கத் திற்கான காரணம் எனக் கருதலாம். வாழ்க்கையில் வழுக்கலும், இழுக்கலும் நேரிடும்போது ஊன்றுகோல் போல நின்று உதவுவனவே குறள் உள்ளிட்ட நமது நீதி நூல்கள். வீட்டிலும், நாட்டிலும் மனம் பண்பட்டதொரு நாகரிகம் மலர வேண்டும் என்பதே தமிழில் ஒரு தொடர் போலத் தொகுக்கப்பட்ட நீதி நூல் ஆக்கங்களுக்கான அடிப்படைக் காரணம். வேறு மொழி எதிலும் காணப்படாத புதுமை இது!”

(  தொடரும் )

குறள் நிலா முற்றம் – 3

Image result for திருவள்ளுவர்“பொருளாதாரத்திற்கெல்லாம் அடித்தளம் அருளாதாரம்- அப்படித்தானே? அந்த அருள் எனும் அன்பு பெற்ற குழந்தைதான் வள்ளுவர் கூறும் வாழ்க்கைக்கலை, காலங்கள் மாறினாலும் கறைபடியாத கருணைக் கலை. அதாவது, அன்பு வழியில் வாழ்க்கை வளர்தல் வேண்டும். அவ்வழியில் வளரும் வாழ்க்கையே பண்பும் பயனும் உடையதாகும். பண்பும் பயனும் இரண்டறக் கலந்த இந்த வாழ்க்கை முறையே ஏனைய கலைகளுக் கெல்லாம் தாயகம்.”

ஒரு பேராசிரியர் எழுந்து கூறியது

“வள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்தமையால் அறத்தின் தாயகம் என்று நாம் மட்டும் பெருமை பேசி உரிமை கொண்டாடிக் கொள்ளுவது சரியில்லை. வாழ்க்கைக் கலையை உலகுக்கு உணர்த்தியுள்ள அறிஞர்களின் பட்டியல் பெரிது என்பதை முறையாக ஏற்க வேண்டும். நம் இந்தியத் துணைக் கண்டத்திலேயே ஆதி மனுநீதி அடித்தளமாக இருந்ததை நாம் அடியோடு மறுத்துவிட லாகாது. அதுபோல, கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர்களான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் எனும் மும்மூர்த்திகளே மேலைநாட்டு அரசியல் சமுதாயச் சித்தாந்தங்களுக்கெல்லாம் வித்திட்டனர் என்பதையும் நாம் புறக்கணிக்க இயலாது.”

இடைமறித்த அரசு அதிகாரியும் பொருளாதார வல்லுநருமான அறிஞரின் கருத்து

“ஆதி மனுநீதி நம்நாட்டுப் பண்டைய வாழ்க்கை முறைகளுக்கு ஆணிவேராக விளங்கியதை நாமோ, வரலாறோ மறுக்கவில்லை; மறைக்கவும் இல்லை. ஆனால் அந்த மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி எனப்பேசி சமுதாயத்தை முறையற்ற போக்கில் பிளவுபடுத்த முற்பட்டதால் இடைக் காலத்தே வழிதவறிப் போயிற்று; அதன் பக்க வேர்கள் எல்லாம் தனித்தனி மரங்களாகத் தலை தூக்கி, சமுதாய சீர்கேட்டுப் புதர்களாக எங்கும் மண்டி விட்டனவே?”

ஒருங்கிணைப்பாளர்

“ஆம்.. அன்பர் சுட்டிக்காட்டுவது போல, பழைய செம்மை நெறிக்குக் கேடு சூழும் வகையில், பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டது; பெண்ணடிமை எனும் பேதைமை புகுந்தது; தீண்டாமை எனும் கொடுமை படர்ந்தது; கண்மூடி வழக்கங்கள் பண்பாட்டை, வாழ்க்கைக் கலையை மண்மூடச் செய்தன.”

பேராசிரியர்

“அதுபோலவே, அரிஸ்டாட்டிலின் மேலைய சமுதாய விஞ்ஞானப் போக்கில், அதிகார ஆணவம், நாட்டாசை, பொறாமை, சுரண்டல், போர்வெறி என்பன எல்லாம் அரசு முறை நியாயங்களாயின. ‘வலிமையுடையதே வாழும்’ (ஷிuக்ஷீஸ்வீஸ்ணீறீ ளியீ ஜிலீமீ திவீttமீst) எனும் பொய்மையான பேய்ச் சித்தாத்தங்கள் தலைவிரித்தாடத் தொடங்கின. உலகெங்கும் இரத்த ஆறுகள் ஓடலாயின.

ஆனாலும் வள்ளுவர் வகுத்த நெறி வாய்மை பிறழாத வாழ்வு முறையாக, வழிவழியாக எப்படியோ, எங்கோ ஒரு மூலையில் துளிர்விட்டுக் கொண்டே இருந்தது. பின்னர் வந்த தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள், பக்திப் பனுவல்கள், ஒழுக்கப் போதனைகள் என அனைத்திலும் வள்ளுவச் சாயல்கள் படியலாயின; வழிவழியாக வள்ளுவம் வாழ்ந்து வரலாயிற்று.”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவம் வாழக் காரணம் அது மனித மனத்தளத்தில் காலூன்றிக் கொண்டதே முக்கியமான காரணம். மனிதன் மனத்தால் வாழ்கிறான். எனவே, ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல். அதுவே அனைத்தறன்’ என அழுத்தமாக எழுதி வைத்தார் வள்ளுவர். மனிதனிடம் மனம் என்பது உயிர்ப்புடன் வாழும்வரை இந்த அடிப்படைச் சிந்தனையும் வாழ்ந்தே தீரும் என்பது வள்ளுவத் துணிபு.

‘அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இந் நான்கும்  இழுக்கா இயன்றது அறம்’ (35) என மனதில் மாசுபடியாது பளிங்கு மாடம் போல அவர் வலியுறுத்தி யிருப்பது இன்றும் நாம் எண்ணி எண்ணி மகிழத் தக்கதொரு மனோதத்துவக் கருத்து. மனத்தின் முழுத்தூய்மையே அறம் என்பது திருக்குறளின் தீர்மானம்.”

அன்பர் ஒருவர்

“நாம் சட்டமன்றங்களிலும், மாநாடுகளிலும் வாயளவுக்குத் தீர்மானங்களை வானளாவப் போட்டுக் கலைகிறோமே அப்படி நம் வள்ளுவர் வாய்ப்பந்தல் போட்டுத் தரவில்லை.

மனத்துக்கண் மாசில்லாத அற நிலையை மாந்த ரெல்லாம் அடைவதற்கு அவர் வகுத்துள்ள முறைகள் எல்லாம் எவரும் எளிதாக ஏற்கத்தக்கவை என்பதுதான் தனிச்சிறப்பு.”

ஒருங்கிணைப்பாளர்

“அதாவது இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, அன்புடைமை முதலாகச் சங்கிலித்தொடர் போல வரும் அதிகார வைப்பு முறைகளைத் தானே சொல்ல வருகிறீர்கள்?

ஆம் அன்பர்களே. அன்பும் அறமும் காலூன்றி நிற்கும் களம் நாம் வாழும் இல்லறம். இந்த இல்வாழ்க்கையாலும் அதன் சார்புகளாலும் அன்பு முளைக்கிறது. வளர்கிறது. இந்த வளர்நிலை அன்பு மனமாசைக் கழுவும் கருவியாகிறது.

மனமாசற்ற நிலையே அறம் எனப்படும். அறத்தை விளங்கவும் துலங்கவும் வைப்பது அன்பு.”

ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அலுவலர் கா.கருப்பையா

“அன்பு, அறம் எனும் இருதூண்களால் நிறுவப்பெற்ற வள்ளுவ மாடம் முப்பரிமாணம் கொண்டது. அதை வள்ளுவம் – அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என வகுத்துச் சொல்லுகிறது. அறிஞர் மு.வ. ஓரிடத்தில் குறிப்பிட்டது போல ‘உலகம் ஒரு குலம்’ எனக் கால்கோள் இடப்பெறும் நிலம் காமத்துப் பால் எனும் இன்பத்துப் பால், நிலத்தில் விளையும் உயிர்ப் பயிருக்கு உரமூட்டுவது பொருட்பால். இவ்விரண்டையும் ஒன்றாய் இணைத்து, இயக்கி வேலியிட்டுக் காப்பது அறத்துப்பால். இம்மூன்றும் சீருற அமைந்த முப்பரிமாணமே  குறள் வைப்பு முறை…

குறள் எழுதப்பெற்ற அல்லது தொகுக்கப் பெற்ற நாள்தொட்டு அதற்கு ஏராளமான விளக்க உரைகள் வந்த வண்ணம் உள்ளன. காலந்தொறும் மேலும் புதுச் சிந்தனைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், குறளின் மூலக்கருத்து சிதைவு படாமல், புதிய எண்ணங்களாகிய ஊற்றுக் கண்களையும் திறந்து கொண்டே இருக்கிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“ஐயா கூறிய கருத்தை நான் முழுமனதாக ஆமோதிக்கிறேன். என் கையோடு அண்மையில் வெளிவந்த புதியதொரு விளக்க உரையைக் கொண்டு வந்துள்ளேன். இப்போது நாட்டு மயம், உலக மயம், தனியார் மயம் என்றெல்லாம் பொருளாதாரக் கோஷங்கள், முழக்கங்கள் போடுகிறார்களே, அவற்றிற்கெல்லாம் பதில் தரும், மார்க்கம் சொல்லும் புதுயுகச் சிந்தனைகள் குறளில் விரவிக் கிடக்கக் கண்டு வியந்து போனேன்.

அதனால்தான் ‘திருக்குறள் ஓர் அறிவுச் சுரங்கம்’ என்று சென்ற நூற்றாண்டிலேயே நம் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. ஆணித்தரமாகச் சொன்னார்.”

அன்பர் ஒருவர்

“திருக்குறள் ஒரு சுரங்கம் எனும் திரு.வி.க. உவமையை இங்கு நினைவூட்டிய அன்பர்க்கு நானும் நன்றி கூறுகிறேன். அவ்வக் காலத்திற்குத் தேவையான அளவு, நம்வாழ்வுக்கு வேண்டிய செய்திகளைச் சுரங்கம் போல வள்ளுவம் வழங்கிக் கொண்டே இருக்கிறது. இதுவரை அறிஞர்கள் ஆராய்ச்சியால் அகழ்ந்தெடுத்ததை விட இன்னும் அரும்பெரும் நவரத்தினச் சிந்தனைச் செல்வங்கள் குறள் எனும் சுரங்கத்திற்குள் புதைந்து பொதிந்து உள்ளதாகவே தோன்றுகிறது.”

வாழ்க்கைச் சுரங்கம்

பேராசிரியர்

“திருக்குறளை ஒரு வாழ்க்கைச் சுரங்கம் என்றும், வற்றாத அறிவூற்று என்றும், ஒவ்வொருவர் மனத்திற்கும் ஏற்ற செயல் விளக்கம் என்றும் இதுவரை இங்கே கலந்துரையாடப்பட்டன. அழகப்பாகலைக் கல்லூரியில் நான் முதுகலைத் தமிழ் பயின்றபோது எனக்குக் குறள் கற்பித்த பேராசான், வள்ளுவரை ஒரு மனநல, உடல்நல மருத்துவர் எனவும், திருக்குறளை ஒரு மருந்துக் கடை எனவும் உவமித்ததை என்னால் இன்றளவும் மறக்க முடியவில்லை.”

ஒருங்கிணைப்பாளர் 

“வள்ளுவம் மருந்துக்கடை போன்றது என்பது மதிக்கத்தக்க கருத்து. திருக்குறள் பொதுநூல் என்று மேலோட்டமாகச் சொல்லிப் பழகிவிட்டோம். இது பொது மக்கள், பொதுத்துறை என இன்று சொல்வதைப் போல உள்ளது. நாடு உரிமை பெற்ற பின்னர் ஊர்ப்பொது இடம், ஊருணி, சத்திரம், சாவடி, மைதானம், கழிப்பறை என்றெல்லாம் பலருக்கும் பயன் தரவேண்டியவற்றை நம்மில் யாரும் பொறுப்புணர்வோடு பார்ப்பதில்லை; போற்றிக் காப்பதும் இல்லை. பொது என்றாலே யாருக்கும் பொறுப்பற்ற, நாதியற்ற இடம் என்றாகிவிட்டது.

ஒரு போராட்டம் என்றால் முதலில் தாக்கப்படுவது அரசுப் பேருந்து தான்; வெட்டி வீழ்த்தப்படுவது சாலையோர நெடுமரம்தான்; சேதப்படுத்தப்படுவது பொதுக் கட்டிடங்கள்தான்! பொது என்றால் ஒவ்வொரு தனி நபருக்கும் ஒத்த உரிமையோடு அனைவர்க்கும் நெடிது பயன் தரவேண்டியது எனும் காப்புணர்வு நம் மக்களிடம் காணப்படுவதில்லை; மாறாகக் கசப்பு உணர்வையும் காழ்ப்பு வெறியையும் காட்டித் தீர்க்கப் பயன்படும் சேதாரங்களாகவே, அடையாளங்களாகவே அவை கருதப்படுகின்றன. வேறெந்த நாட்டிலும் காணப்பெறாத, ஜனநாயக விரோதச் செயல்கள் நம் நாட்டில் போராட்டம், தர்ணா, மறியல் எனும் பெயர்களால் மக்களையே சீரழிப்பது மடமை; கொடுமை. இதற்கொரு மருந்தாக ஏவப்படும் அடக்குமுறையும் எதிர் விளைவுகளையே ஏற்படுத்துகிறது; சாதி, சமயப் பிளவுகளை வளர்க்கிறது.

ஆனால் வள்ளுவத்திற்குச் சாதி, சமயம் என்பன பொதுமை நிலைக்களன்கள் இல்லை. மக்கள் மனமே நிலைக்களம்! மக்கள் என்போர், ஆளுக்கொரு மனம் உடையவராதலால், அந்தப் பன்மைகளே குறட்பாக்களின் அடித்தளம். மனங்கள் தோறும் பரந்து, விரிந்து உலாவும் நல்ல, தூய எண்ணங்களை உணர்ந்து செம்மைப் படுத்த உதவுவதே வள்ளுவத் தருவின் வளரும் கிளை விரிப்புக்கள்.

இன்று நாம் வாழ்வது ஜனநாயக யுகம் என்கிறோம். ஆனால் கட்சிப் பூசல்களும், உட்கட்சிக் காழ்ப்புணர்வும் பகைமைத் தீயையே பாராளுமன்றம் வரை பற்றி எரியச் செய்து வருகின்றன. ஒன்று கூடி, அமைதியாகப் பேசி மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய பஞ்சாயத்து, பாராளுமன்றம் எனும் மக்கள் மன்றங்கள் எல்லாம் போர்க் களங்களாகி வருகின்றன; பேயாட்டங்கள் தலைவிரித்தாடும் அரக்கப் பண்ணைகளாகி வருகின்றன. ‘சான்றோரும் உண்டு கொல் சான்றோரும் உண்டு கொல்!’ என்று சிலப்பதிகாரக் கண்ணகி அன்று மதுரைத் தெருவில் கேட்ட அந்தக் கையறுநிலைக் கேள்வியை இன்று பஞ்சாயத்துக் கூட்டங்களிலாவது ஒருவர் எழுந்து துணிந்து கேட்க முன்வருவதில்லை. மக்கள் மனம் நியாயம் கேட்கும் துணிவின்றி நாளுக்கு நாள் நலிந்து நம்பிக்கையின்றிக் கிடக்கிறது. இதுவே இன்றைய அவலக் காட்சி; கிராமம் முதல் தலை நகரம் வரை அரங்கேறும் அன்றாட அநியாயம்.”

( தொடரும் )