குறள் நிலா முற்றம் – 4

ஒரு பேராசிரியர்

“நான் ஒரு கருத்தைக் கூறலாமா? வள்ளுவம் சொல்வது புறவாழ்வில் காணப்படும் போலியான தொரு பொதுமைப் பார்வை இல்லை; ஒவ்வொரு நபரின் தனி நெஞ்சத் தூய்மை! ஒரு சமூகத்தில் வாழும் மனிதரிடையே மொழி, மதம், குலம், கட்சி எனப் பல வகையால் முரண்பாடும், வேறுபாடும் தலைதூக்குவது உலகியற்கை. மனமாசு குறைவுபட்டால், எவ்வகை வேற்றுமை யிடையேயும் உறவு பூணவும், உதவி செய்யவும் சிந்தை மலரும்; செயலாக வளரும்.

எனவே, திருக்குறளுக்குச் சாதி, சமயம் என்றெல்லாம் சாயம் பூசும் ‘பொதுமை’ நிலைக்களம் இல்லை; மக்கள் மனமே நிலைக் களம். ஆளுக்கொரு மனம் உடைய அந்தப் பன்மை நிலைக்களம். நம் மனதில் கணந்தோறும் விரிந்து பரவும் நல்ல, தீய எண்ணங்கள் என்பன நிலைக்களம். பொதுமைக்குள்ளே பகைமையும் வேற்றுமைக்குள் நட்புறுதியும் கண்ட மனநல அறிஞர் வள்ளுவர். ஆதலால், தனித்தனி நபர்களின் வஞ்சனையை மாற்றி, நெஞ்சத் தூய்மை செய்வதே அவரது நூலின் தனிச்சிறப்பு.”

ஒருங்கிணைப்பாளர்

“தன் நெஞ்சறிவது பொய்யற்க”      (குறள் 293)

“நெஞ்சில் துறவார் துறந்தார் போல”  (குறள் 276)

“மனத்தது மாசாக மாண்டார் நீராடி”  (குறள் 278)

“வஞ்சக மனத்தான் படிற்றொழுக்கம்” (குறள் 271)

“நெஞ்சத்து அகநக நட்பது நட்பு”        (குறள் 786)

எனப் பல்வேறு குறள்களில் நெஞ்சத்தையே வள்ளுவர் சுட்டிப் பேசுகிறார் என்பதை நாம் ஏற்கலாம்.”

வள்ளுவர் மருத்துவரா? மனநலச் செம்மலா? – ஒரு குரல்

“வள்ளுவரை மருத்துவராகவும், திருக்குறளை மருந்துக் கடையாகவும் உவமித்துள்ளதைச் சொன்னார்கள். அதுபற்றி மேலும் சிந்திக்கலாமே..?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் மனநல அறிஞர் என்று நாம் பேசியதைப் போல அவர் உடற் கூறுகள் அறிந்த மருத்துவர் போலவும் விளங்குகிறார். மருத்துவர் என்ன செய்கிறார்? மக்கள் உடலையும், பல்வேறு உறுப்புக்களையும் நிலைக்களமாகக் கொண்டு, நோயாளியின் நல்ல, தீய நிலைகளை நாடி பிடித்து ஆய்ந்தறிகிறார் அவர், உடல் மாற்றத்து நோயின் அறிகுறிகளுக்கான காரணங்கள், உணவு முறைகள் எனப் பலவற்றையும் கேட்டறிகிறார். பசி, உறக்கம், செரிமானம் எனத் தனித்தனி நோயாளியின் அவ்வப்போதைய நிலைப்பாடுகளுக்கேற்ப சிகிச்சை தருகிறார். இவ்வாறு தன்னிடம் நலம் நாடி வரும் நோயினர் அனைவர்க்கும் சாதி சமய வேறுபாடு கருதாது சிகிச்சையளிக்கும் மருத்துவரைப் போல, வள்ளுவரும் நம் சமுதாய, தனிநபர் நடப்பியலுக்கேற்ற நலம்தரும் நடைமுறைகளைத் தொகுத்துரைக்கிறார். மருத்துவர் கைநாடி பார்க்கிறார்; வள்ளுவர் நம் மன நோயை நோக்குகிறார். இரண்டும் பணி முறையில் ஒன்றுதான்; முழு நலம் பெறுவதே முதன்மை நோக்கம்.

இன்று நம் நாட்டிலும் உலகிலும் காணும் இன, மொழி, சமய, மாறுபாடு வேறுபாடுகள் எல்லாம், பூசல்கள் எல்லாம் எரிமலை போன்றவை. மனதுக்குள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் போராட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகள். பிரஷர் குக்கரில் மூடிவைத்துள்ள பாத்திரத்தைச் சற்றே திறந்தவுடன், அது பெருமூச்சுவிட்டு ஆவியைக் கக்குவது போல, சந்தர்ப்பம் ஏற்படும்போது உள்ளக் கொதிப்பெல்லாம் கலவரமாக, போராக வெடிக்கிறது. அமைதி அமைதி என நாடு கூட்டிப் பேசிக் கொண்டே, அணுகுண்டுகளையும் பேரழிவு ஆயுதங்களையும் ஏவும் அச்சம், அபாயம் பரப்பப்படுகிறது. நல்லரசுகள் கூட, வல்லரசுகளாக அரக்க ஆட்சி நடத்தத் துடிக்கும் பேரபாயம் உலகை நடுங்கச் செய்து வருகிறது. மக்களது தனி நல்வாழ்வு எனும் கல்லறைகள் மீது பொறாமை எனும் போலி ஆதிக்கக் கோபுரமே எழுப்பப்படுகிறது. எனவே நீரினைத் தேக்கி வைக்கும் ஊருணியைத் தூய்மை செய்யாமல் அதனை ஊருக்குக் கொணரும் வாய்க்கால்கள், குழாய்களை மட்டும் சுத்தம் செய்தால் போதுமா? எனவே ‘நோய்நாடி நோய் முதல் நாடி’ என்பது போல பொதுமை நோக்கோடு, தனிமனித நெஞ்சங்களையும் நிமிர்த்தவே முற்படுகிறார்.

‘மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு’ என்பதைத் தானே வள்ளுவமும் பிற அறநூல்களும் கூறியுள்ளன..?” என்று திசை திருப்பினார் ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அன்பர் ஒருவர்.

பலரது உதவியும் தன்முயற்சியும் கூடி அமைந்ததே வாழ்க்கை என்பதைத்தான் குறளும் அதைத் தொடர்ந்த நம் அறநூல்களும் கூறியுள்ளன; நம் இலக்கியங்களும் பேசியுள்ளன.

ஒருங்கிணைப்பாளர் 

“உணர்வுக்கும் கற்பனைக்கும் தலைமையிடம் தந்து அமைவன இலக்கியங்கள்; சிந்தனைக்கும் அறிவுக்கும் முதலிடம் தந்து தொகுக்கப்படுவன நீதி நூல்கள், அறிவியல் நூல்கள் ஆகியன. சமுதாயத்தில் வாழும் மனிதனுக்குரிய எல்லாச் சமுதாய ஒழுகலாறுகளையும் தனிமனித வரையறை களையும் விரித்து விளக்கி, தொகுத்து வகுத்துக்கூற வேண்டியவை அறநூல்கள். இந்த நீதி நூல்கள் சான்றோர் சிந்தனையிலும் தோன்றலாம்; சமூக நலனுக்காக நாளடைவில் உருவான பழக்க வழக்கங்களாலும் அமையலாம். இவை வாய்மொழி களாகவே தொடர்ந்ததால் பழமொழிகள், மூதுரைகள் என அழைக்கப்படுகின்றன.

திருக்குறளுக்கெல்லாம் முற்பட்ட நம் சங்க இலக்கியங்களில், ஆங்காங்கு அறநெறி முறைமைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன.

“அறநெறி இதுவெனத் தெளிந்த” என ஐங்குறுநூறும்,

“அறங்கடைப்பட்ட வாழ்க்கை” என அகநானூறும்,

“அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்” எனப்

பொருநராற்றுப்படையும்

என ஒரு புலவர் ஆதாரச் சீட்டுடன் படிக்கத் தொடங்கி விடவே அவரை இடைமறித்த ஒரு கல்லூரிப் பேராசிரியர்,

“அதுதான் எல்லோரும் நன்கறிந்த புறநானூற்றுப் பாடலில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் போற்றத்தகும் வாழ்க்கை முறையாகச் சொல்லப்பட்டு விட்டதே? அதைத்தானே செங்கல் அடுக்குப் போலத் தாங்கள் படித்துக் காட்டிய ஆதாரங்களும் வலியுறுத்துகின்றன.”

ஓர் அன்பர்

“ஐயா செங்கல் அடுக்கு என்றதும் நம் தவத்திரு அடிகளார் ஆற்றிய அருளுரை ஒன்று நினைவில் மறிக்கிறது. அதைச் சொல்ல நிலா முற்ற அன்பர்கள் சற்றே அனுமதிக்க வேண்டும்.”

ஓர் இடைக்குரல்

“ஐயா ஏதோ செங்கல் கட்டுமானம் பற்றிப்  பேசுகிறார், கேளுங்கள்.”

முன்னவர் தொடர்கிறார்

“ஆயிரமாயிரம் செங்கற்கள் குவிந்து கிடந்தாலும் தாமாக அவை கட்டிடமாவது இல்லை! அவற்றை நூல் பிடித்து அளந்து முறையாக அடுக்கிச் சந்து பதிந்தால்தான், சுவரை எழுப்ப முடியும். உடைந்த செங்கற்களையும் முழுச் செங்கற்களையும் இணைத்து, இடைவெளி ஏற்படும் இடங்களில் சுவரது தேவைக்கேற்றபடி முழுச்செங்கலையும் கையில் உள்ள பூசு கரண்டியால் உடைத்துப் போட்டுச் சந்துகளை நிரப்புகிறார்கள் கொத்தனார்கள். அது போல மனிதனும் தனது சொந்த மதிப்பையும் சுகத்தையும் குறைத்துக் கொண்டாவது சமுதாயமெனும் சுவரைக் கட்டிஎழுப்ப ஒத்துழைக்க வேண்டும். தானும் முன்வர வேண்டும். உடைந்த செங்கலையும் முழுச்செங்கல்லையும் இணைத்துக் கட்டிடத்தை எழுப்புவார் கொத்தனார்; சமுதாயத்தில் உள்ள வலிமையுடையவர்களையும் வலிமை அற்றவர் களையும் இணைத்து, ஒருசேர வளர்ச்சி வலிமை நோக்கிக் கூட்டிச் செல்லுபவரே சமுதாயத் தலைவர்; சரியான வழிகாட்டி.”

“அதைத்தானே ஐயா அரசியலிலும் சமதர்மம்எனப்புதுப் பெயரிட்டுச் சொல்லுகிறார்கள். பொதுவுடைமை எனப் போதிக்கிறீர்கள்..!” என இடைச்செருகலானார், ஒரு கல்லூரிப் பொருளாதாரப் பேராசிரியர்; ஒருங்கிணைப்பாளர் கருத்துத் தொடர்ச்சியை இட்டு நிரப்பினார்.

ஒப்புரவு ஒப்பற்றது

‘சோசியலிசம்’ என்ற ஆங்கிலச் சொல் விருப்பு வெறுப்புக்களைக் கடந்து, உள்ளம் ஒன்றிப் பழகும் பண்பாட்டைக் குறிப்பதாகும். சமுதாயத்தையே நேசிக்கும் நெறியைப் போற்றுவது ஆகும். இதைத்தான் வள்ளுவர் ‘ஒப்புரவு’ எனக் குறிப்பிடுகிறார். நம்மோடு உள்ள மற்றவர்களோடு சேர்ந்து பழகும்போது அப்படிச் சேர்ந்து வாழ்வதனால் ஏதேனும் இடர்களோ, கேடுகளோ விளையுமானாலும் அவற்றைக் கூடுதல் பொறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே  வலியுறுத்துகிறார்.

‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’ என்கிறார் வள்ளுவர். ‘ஒத்தது அறிதல்’ என்பதற்குப் பொருள் மற்றவர்களுக்கும் ஏற்புடையதைப் புரிந்து கொண்டு பழகுதல் என்பதுதான். அப்படி மற்றவர்களுக்கும் ஒத்ததை அறிந்து இணங்கி விட்டுக்கொடுத்து வாழ முனைவதுதான் உண்மையிலேயே நாம் உயிர்வாழ்தல் எனப்படும்.”

உடன்பாட்டோடு தொடரும் திருக்குறள் பேரவையின் அன்பர் ஒருவர் கூறுவது:

“அதாவது பழகிய நண்பரிடத்துக் குற்றம் கண்டாலும் பொறுத்துக் கொள் என்கிறார் வள்ளுவர். மனிதனையும் மனிதனையும் இணைத்துச் சமுதாயம் எனும் கட்டிடத்தை உருவாக்க இப்பொறுமைப் பண்பு, பெருமிதச் சால்பு மிகவும் அவசியம் என்பதே அவர் கூறும் ஆக்கநெறி.”

ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்

“நாகரிகம் என்பதற்கே புதியதொரு விளக்கம் அறிவித்தவர் வள்ளுவர் என்பதை அறிவோம். நண்பர் ஒருவர் நஞ்சு கலந்த பானத்தைக் கொடுத்தாலும் அதை வாங்கிக் குடித்துவிடு; நஞ்சு கலந்தது என்று அஞ்சாமல் பருகிவிடு என்று கூறுகிறார்.”

 

 

 

ஓர் அன்பர்

“ஏனய்யா அப்படிச் சொன்னார்…?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவரின் இந்தக் கருத்து சங்க இலக்கியத்தில் உண்டு; பின்னர் வந்த பெரிய புராணத்தில் ‘தத்தா நமர்’ என்று தொழுத கையுள் படையொடுங்கிடக் கண்டும் பண்போடு சாகும் முன் அன்போடு மன்னித்த மன்னன் வரலாற்றில் உண்டு.”

 

இடையே ஒருவர்

“சாக்ரடீஸ் கதையும் அப்படித்தான். அதைத்தான் வள்ளுவர் முன்பே வலியுறுத்தினார்.”

“நஞ்சு கலந்தது என்று நன்கு தெரிந்தும் தெரியாதவர் போல, அந்த நினைப்பிற்குள் சிக்காமலே பருகி விடு என்கிறார். நஞ்சு கலந்தது என நாம் நினைத்தால் நமது முகத்தில் மரணக்குறி படரத் தொடங்கும். நஞ்சு கலந்தது என்பதைத் தெரிந்து கொண்டோமோ என அதைக் கலந்து வைத்த நண்பர் உணர்ந்தால் அவர் அஞ்சுவார் அல்லது வருந்தி உளைச்சலுக்கு ஆளாவார். அந்த வருத்தத்தைக் கூட அவருக்குத் தரக்கூடாது என உறுதியாயிருக்க வேண்டுமாம். அதனால் என்ன பயன்? நஞ்சு கலந்தது என்று நினைத்து அஞ்சாமல், வருவது வரட்டும் எனப் பருகி விட்டால், மரண பயத்தைக் கடந்தே துணிந்தால், அந்த நஞ்சு கூட ஒருவரைக் கொன்று விட முடியாது. தக்க சிகிச்சை பெறும்வரை நஞ்சையும் முறித்து உயிர் காக்க வல்லமை நெஞ்சத்தில் உறுதியாக நிலைகொள்ளும் என்கிறார். நஞ்சையும் அஞ்சாது பருகுவதால் அதைச் சற்றாவது முறிக்கும் வலிமை செங்குருதிக்கு உண்டாகி விடுமாம்.”

“ஆமாங்க, புலியடிச்சுச் சாகிறவனை விட கிலி பிடிச்சுச் செத்தவன்தாங்க அதிகம்” என ஒருவர் இடை மறிக்க, நிலா முற்ற அவையில் சிரிப்பு அலைகள் பரவின.

ஒரு சிவநெறிச் சீலர் நீறுபூசிய நெற்றி யுடையவராய்ப் பணிவோடு எழுந்தார், பகர்ந்தார்:

“அவையோரே… நம் அப்பர் சுவாமிகளுக்குக் கூட நஞ்சு கொடுக்கப்பட்டதைச் சேக்கிழார் பாடியுள்ளாரே?

அப்பர் அடிகள் நஞ்சுண்ட பின்னரும் சாகாமல் நமசிவாய மந்திரத்தையல்லவா உச்சரித்தார்?”

இன்னொருவர்

“அப்பரடிகள் போல நஞ்சுண்போர் எல்லாம் நமசிவாய மந்திரத்தால் மட்டும் பிழைத்துவிட்டால், அப்புறம் ஆஸ்பத்திரிக்கு ஆளைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய அவசியமில்லையே! நாமெல்லாம் அப்பரடிகள் போலவோ சாக்ரடீஸ் போலவோ இருந்துவிட முடியுமா..?”

மற்றொருவர்

“நாம் என்ன நஞ்சு சாப்பிடாமலா இருக்கிறோம்? இன்று நாம் உண்ணும் சாப்பாட்டில் கலப்படம்; நோய்க்குப் பருகும் மருந்தில் கலப்படம்; பல்துலக்கக் காலையில் உபயோகிக்கும் பற்பசை தொட்டு அனைத்திலும், நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை, ரசாயனக் கலவையை, தெரிந்தும் தெரியாமலே உட்கொண்டு எப்படியோ உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.”

ஓர் அன்பர்

“ஐயா தம் வீட்டில் மனைவி சமைத்துத் தரும் சாப்பாடு பிடிக்காமல் அப்படிச் சொல்லுகிறார் என நினைக்கிறேன்.”

(அவையில் சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்

 

“இந்த விவாதத்தை வள்ளுவரின் குறளோடு அதாவது,

‘பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

 நாகரிகம் வேண்டு பவர்”      (580)

என்பதோடு தொடர்வோம். அன்பும் அருளும் இரண்டற இணைந்ததே அந்த நயத்தக்க நாகரிகம். அத்தகைய நல்வாழ்வு வேண்டும். அதை நாடும் மனமாவது வேண்டும் என்பதே குறள் முதலிய நம் நீதி நூல்களின் தொடர்ச்சியான உருவாக்கத் திற்கான காரணம் எனக் கருதலாம். வாழ்க்கையில் வழுக்கலும், இழுக்கலும் நேரிடும்போது ஊன்றுகோல் போல நின்று உதவுவனவே குறள் உள்ளிட்ட நமது நீதி நூல்கள். வீட்டிலும், நாட்டிலும் மனம் பண்பட்டதொரு நாகரிகம் மலர வேண்டும் என்பதே தமிழில் ஒரு தொடர் போலத் தொகுக்கப்பட்ட நீதி நூல் ஆக்கங்களுக்கான அடிப்படைக் காரணம். வேறு மொழி எதிலும் காணப்படாத புதுமை இது!”

(  தொடரும் )

குறள் நிலா முற்றம் – 3

Image result for திருவள்ளுவர்“பொருளாதாரத்திற்கெல்லாம் அடித்தளம் அருளாதாரம்- அப்படித்தானே? அந்த அருள் எனும் அன்பு பெற்ற குழந்தைதான் வள்ளுவர் கூறும் வாழ்க்கைக்கலை, காலங்கள் மாறினாலும் கறைபடியாத கருணைக் கலை. அதாவது, அன்பு வழியில் வாழ்க்கை வளர்தல் வேண்டும். அவ்வழியில் வளரும் வாழ்க்கையே பண்பும் பயனும் உடையதாகும். பண்பும் பயனும் இரண்டறக் கலந்த இந்த வாழ்க்கை முறையே ஏனைய கலைகளுக் கெல்லாம் தாயகம்.”

ஒரு பேராசிரியர் எழுந்து கூறியது

“வள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்தமையால் அறத்தின் தாயகம் என்று நாம் மட்டும் பெருமை பேசி உரிமை கொண்டாடிக் கொள்ளுவது சரியில்லை. வாழ்க்கைக் கலையை உலகுக்கு உணர்த்தியுள்ள அறிஞர்களின் பட்டியல் பெரிது என்பதை முறையாக ஏற்க வேண்டும். நம் இந்தியத் துணைக் கண்டத்திலேயே ஆதி மனுநீதி அடித்தளமாக இருந்ததை நாம் அடியோடு மறுத்துவிட லாகாது. அதுபோல, கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர்களான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் எனும் மும்மூர்த்திகளே மேலைநாட்டு அரசியல் சமுதாயச் சித்தாந்தங்களுக்கெல்லாம் வித்திட்டனர் என்பதையும் நாம் புறக்கணிக்க இயலாது.”

இடைமறித்த அரசு அதிகாரியும் பொருளாதார வல்லுநருமான அறிஞரின் கருத்து

“ஆதி மனுநீதி நம்நாட்டுப் பண்டைய வாழ்க்கை முறைகளுக்கு ஆணிவேராக விளங்கியதை நாமோ, வரலாறோ மறுக்கவில்லை; மறைக்கவும் இல்லை. ஆனால் அந்த மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி எனப்பேசி சமுதாயத்தை முறையற்ற போக்கில் பிளவுபடுத்த முற்பட்டதால் இடைக் காலத்தே வழிதவறிப் போயிற்று; அதன் பக்க வேர்கள் எல்லாம் தனித்தனி மரங்களாகத் தலை தூக்கி, சமுதாய சீர்கேட்டுப் புதர்களாக எங்கும் மண்டி விட்டனவே?”

ஒருங்கிணைப்பாளர்

“ஆம்.. அன்பர் சுட்டிக்காட்டுவது போல, பழைய செம்மை நெறிக்குக் கேடு சூழும் வகையில், பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டது; பெண்ணடிமை எனும் பேதைமை புகுந்தது; தீண்டாமை எனும் கொடுமை படர்ந்தது; கண்மூடி வழக்கங்கள் பண்பாட்டை, வாழ்க்கைக் கலையை மண்மூடச் செய்தன.”

பேராசிரியர்

“அதுபோலவே, அரிஸ்டாட்டிலின் மேலைய சமுதாய விஞ்ஞானப் போக்கில், அதிகார ஆணவம், நாட்டாசை, பொறாமை, சுரண்டல், போர்வெறி என்பன எல்லாம் அரசு முறை நியாயங்களாயின. ‘வலிமையுடையதே வாழும்’ (ஷிuக்ஷீஸ்வீஸ்ணீறீ ளியீ ஜிலீமீ திவீttமீst) எனும் பொய்மையான பேய்ச் சித்தாத்தங்கள் தலைவிரித்தாடத் தொடங்கின. உலகெங்கும் இரத்த ஆறுகள் ஓடலாயின.

ஆனாலும் வள்ளுவர் வகுத்த நெறி வாய்மை பிறழாத வாழ்வு முறையாக, வழிவழியாக எப்படியோ, எங்கோ ஒரு மூலையில் துளிர்விட்டுக் கொண்டே இருந்தது. பின்னர் வந்த தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள், பக்திப் பனுவல்கள், ஒழுக்கப் போதனைகள் என அனைத்திலும் வள்ளுவச் சாயல்கள் படியலாயின; வழிவழியாக வள்ளுவம் வாழ்ந்து வரலாயிற்று.”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவம் வாழக் காரணம் அது மனித மனத்தளத்தில் காலூன்றிக் கொண்டதே முக்கியமான காரணம். மனிதன் மனத்தால் வாழ்கிறான். எனவே, ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல். அதுவே அனைத்தறன்’ என அழுத்தமாக எழுதி வைத்தார் வள்ளுவர். மனிதனிடம் மனம் என்பது உயிர்ப்புடன் வாழும்வரை இந்த அடிப்படைச் சிந்தனையும் வாழ்ந்தே தீரும் என்பது வள்ளுவத் துணிபு.

‘அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இந் நான்கும்  இழுக்கா இயன்றது அறம்’ (35) என மனதில் மாசுபடியாது பளிங்கு மாடம் போல அவர் வலியுறுத்தி யிருப்பது இன்றும் நாம் எண்ணி எண்ணி மகிழத் தக்கதொரு மனோதத்துவக் கருத்து. மனத்தின் முழுத்தூய்மையே அறம் என்பது திருக்குறளின் தீர்மானம்.”

அன்பர் ஒருவர்

“நாம் சட்டமன்றங்களிலும், மாநாடுகளிலும் வாயளவுக்குத் தீர்மானங்களை வானளாவப் போட்டுக் கலைகிறோமே அப்படி நம் வள்ளுவர் வாய்ப்பந்தல் போட்டுத் தரவில்லை.

மனத்துக்கண் மாசில்லாத அற நிலையை மாந்த ரெல்லாம் அடைவதற்கு அவர் வகுத்துள்ள முறைகள் எல்லாம் எவரும் எளிதாக ஏற்கத்தக்கவை என்பதுதான் தனிச்சிறப்பு.”

ஒருங்கிணைப்பாளர்

“அதாவது இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, அன்புடைமை முதலாகச் சங்கிலித்தொடர் போல வரும் அதிகார வைப்பு முறைகளைத் தானே சொல்ல வருகிறீர்கள்?

ஆம் அன்பர்களே. அன்பும் அறமும் காலூன்றி நிற்கும் களம் நாம் வாழும் இல்லறம். இந்த இல்வாழ்க்கையாலும் அதன் சார்புகளாலும் அன்பு முளைக்கிறது. வளர்கிறது. இந்த வளர்நிலை அன்பு மனமாசைக் கழுவும் கருவியாகிறது.

மனமாசற்ற நிலையே அறம் எனப்படும். அறத்தை விளங்கவும் துலங்கவும் வைப்பது அன்பு.”

ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அலுவலர் கா.கருப்பையா

“அன்பு, அறம் எனும் இருதூண்களால் நிறுவப்பெற்ற வள்ளுவ மாடம் முப்பரிமாணம் கொண்டது. அதை வள்ளுவம் – அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என வகுத்துச் சொல்லுகிறது. அறிஞர் மு.வ. ஓரிடத்தில் குறிப்பிட்டது போல ‘உலகம் ஒரு குலம்’ எனக் கால்கோள் இடப்பெறும் நிலம் காமத்துப் பால் எனும் இன்பத்துப் பால், நிலத்தில் விளையும் உயிர்ப் பயிருக்கு உரமூட்டுவது பொருட்பால். இவ்விரண்டையும் ஒன்றாய் இணைத்து, இயக்கி வேலியிட்டுக் காப்பது அறத்துப்பால். இம்மூன்றும் சீருற அமைந்த முப்பரிமாணமே  குறள் வைப்பு முறை…

குறள் எழுதப்பெற்ற அல்லது தொகுக்கப் பெற்ற நாள்தொட்டு அதற்கு ஏராளமான விளக்க உரைகள் வந்த வண்ணம் உள்ளன. காலந்தொறும் மேலும் புதுச் சிந்தனைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், குறளின் மூலக்கருத்து சிதைவு படாமல், புதிய எண்ணங்களாகிய ஊற்றுக் கண்களையும் திறந்து கொண்டே இருக்கிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“ஐயா கூறிய கருத்தை நான் முழுமனதாக ஆமோதிக்கிறேன். என் கையோடு அண்மையில் வெளிவந்த புதியதொரு விளக்க உரையைக் கொண்டு வந்துள்ளேன். இப்போது நாட்டு மயம், உலக மயம், தனியார் மயம் என்றெல்லாம் பொருளாதாரக் கோஷங்கள், முழக்கங்கள் போடுகிறார்களே, அவற்றிற்கெல்லாம் பதில் தரும், மார்க்கம் சொல்லும் புதுயுகச் சிந்தனைகள் குறளில் விரவிக் கிடக்கக் கண்டு வியந்து போனேன்.

அதனால்தான் ‘திருக்குறள் ஓர் அறிவுச் சுரங்கம்’ என்று சென்ற நூற்றாண்டிலேயே நம் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. ஆணித்தரமாகச் சொன்னார்.”

அன்பர் ஒருவர்

“திருக்குறள் ஒரு சுரங்கம் எனும் திரு.வி.க. உவமையை இங்கு நினைவூட்டிய அன்பர்க்கு நானும் நன்றி கூறுகிறேன். அவ்வக் காலத்திற்குத் தேவையான அளவு, நம்வாழ்வுக்கு வேண்டிய செய்திகளைச் சுரங்கம் போல வள்ளுவம் வழங்கிக் கொண்டே இருக்கிறது. இதுவரை அறிஞர்கள் ஆராய்ச்சியால் அகழ்ந்தெடுத்ததை விட இன்னும் அரும்பெரும் நவரத்தினச் சிந்தனைச் செல்வங்கள் குறள் எனும் சுரங்கத்திற்குள் புதைந்து பொதிந்து உள்ளதாகவே தோன்றுகிறது.”

வாழ்க்கைச் சுரங்கம்

பேராசிரியர்

“திருக்குறளை ஒரு வாழ்க்கைச் சுரங்கம் என்றும், வற்றாத அறிவூற்று என்றும், ஒவ்வொருவர் மனத்திற்கும் ஏற்ற செயல் விளக்கம் என்றும் இதுவரை இங்கே கலந்துரையாடப்பட்டன. அழகப்பாகலைக் கல்லூரியில் நான் முதுகலைத் தமிழ் பயின்றபோது எனக்குக் குறள் கற்பித்த பேராசான், வள்ளுவரை ஒரு மனநல, உடல்நல மருத்துவர் எனவும், திருக்குறளை ஒரு மருந்துக் கடை எனவும் உவமித்ததை என்னால் இன்றளவும் மறக்க முடியவில்லை.”

ஒருங்கிணைப்பாளர் 

“வள்ளுவம் மருந்துக்கடை போன்றது என்பது மதிக்கத்தக்க கருத்து. திருக்குறள் பொதுநூல் என்று மேலோட்டமாகச் சொல்லிப் பழகிவிட்டோம். இது பொது மக்கள், பொதுத்துறை என இன்று சொல்வதைப் போல உள்ளது. நாடு உரிமை பெற்ற பின்னர் ஊர்ப்பொது இடம், ஊருணி, சத்திரம், சாவடி, மைதானம், கழிப்பறை என்றெல்லாம் பலருக்கும் பயன் தரவேண்டியவற்றை நம்மில் யாரும் பொறுப்புணர்வோடு பார்ப்பதில்லை; போற்றிக் காப்பதும் இல்லை. பொது என்றாலே யாருக்கும் பொறுப்பற்ற, நாதியற்ற இடம் என்றாகிவிட்டது.

ஒரு போராட்டம் என்றால் முதலில் தாக்கப்படுவது அரசுப் பேருந்து தான்; வெட்டி வீழ்த்தப்படுவது சாலையோர நெடுமரம்தான்; சேதப்படுத்தப்படுவது பொதுக் கட்டிடங்கள்தான்! பொது என்றால் ஒவ்வொரு தனி நபருக்கும் ஒத்த உரிமையோடு அனைவர்க்கும் நெடிது பயன் தரவேண்டியது எனும் காப்புணர்வு நம் மக்களிடம் காணப்படுவதில்லை; மாறாகக் கசப்பு உணர்வையும் காழ்ப்பு வெறியையும் காட்டித் தீர்க்கப் பயன்படும் சேதாரங்களாகவே, அடையாளங்களாகவே அவை கருதப்படுகின்றன. வேறெந்த நாட்டிலும் காணப்பெறாத, ஜனநாயக விரோதச் செயல்கள் நம் நாட்டில் போராட்டம், தர்ணா, மறியல் எனும் பெயர்களால் மக்களையே சீரழிப்பது மடமை; கொடுமை. இதற்கொரு மருந்தாக ஏவப்படும் அடக்குமுறையும் எதிர் விளைவுகளையே ஏற்படுத்துகிறது; சாதி, சமயப் பிளவுகளை வளர்க்கிறது.

ஆனால் வள்ளுவத்திற்குச் சாதி, சமயம் என்பன பொதுமை நிலைக்களன்கள் இல்லை. மக்கள் மனமே நிலைக்களம்! மக்கள் என்போர், ஆளுக்கொரு மனம் உடையவராதலால், அந்தப் பன்மைகளே குறட்பாக்களின் அடித்தளம். மனங்கள் தோறும் பரந்து, விரிந்து உலாவும் நல்ல, தூய எண்ணங்களை உணர்ந்து செம்மைப் படுத்த உதவுவதே வள்ளுவத் தருவின் வளரும் கிளை விரிப்புக்கள்.

இன்று நாம் வாழ்வது ஜனநாயக யுகம் என்கிறோம். ஆனால் கட்சிப் பூசல்களும், உட்கட்சிக் காழ்ப்புணர்வும் பகைமைத் தீயையே பாராளுமன்றம் வரை பற்றி எரியச் செய்து வருகின்றன. ஒன்று கூடி, அமைதியாகப் பேசி மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய பஞ்சாயத்து, பாராளுமன்றம் எனும் மக்கள் மன்றங்கள் எல்லாம் போர்க் களங்களாகி வருகின்றன; பேயாட்டங்கள் தலைவிரித்தாடும் அரக்கப் பண்ணைகளாகி வருகின்றன. ‘சான்றோரும் உண்டு கொல் சான்றோரும் உண்டு கொல்!’ என்று சிலப்பதிகாரக் கண்ணகி அன்று மதுரைத் தெருவில் கேட்ட அந்தக் கையறுநிலைக் கேள்வியை இன்று பஞ்சாயத்துக் கூட்டங்களிலாவது ஒருவர் எழுந்து துணிந்து கேட்க முன்வருவதில்லை. மக்கள் மனம் நியாயம் கேட்கும் துணிவின்றி நாளுக்கு நாள் நலிந்து நம்பிக்கையின்றிக் கிடக்கிறது. இதுவே இன்றைய அவலக் காட்சி; கிராமம் முதல் தலை நகரம் வரை அரங்கேறும் அன்றாட அநியாயம்.”

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 1

குறள் நிலா முற்றம்

 

பாகம் : 1

Image result for குறள் நிலா முற்றம்

ஒருங்கிணைப்பாளர்:  

 

‘திருக்குறள் செம்மல்’ ந.மணிமொழியன்

 

 

 

ஏற்பாடு : மதுரை வானொலி நிலையம்

‘வழிபாட்டு நூலா? வழிகாட்டும் நூலா?

திருக்குறள் நாம் வாழும் காலச் சூழ்நிலைக்கெல்லாம் பொருந்தும் வகையில் நம் முன்னர் எழும் சமூகச் சிக்கல்களுக்குத் தக்க தீர்வைத் தருமா? படித்துச் சுவைத்து நுகர்வதற்கு உரிய இலக்கியமாக மட்டுமே நீடிக்குமா? அல்லது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் சமுதாயத்திற்கும் தனி நபர்களுக்கும் பொருந்தும் வகையில் வழிகாட்டுமா? அது கைகூப்பித் தொழும் வழிபாட்டு நூலாகப் போற்றப்படுகிறதா? அல்லது நம்மைக் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் வழிகாட்டு நூலாக ஏற்கப்படுகிறதா? மனிதர்களிடையே இயல்பாக உள்ள முரண்களைப் போலத் திருக்குறள் கூறும் வாழ்வியல் சிந்தனைகளிலும் முரண்கள் இருப்பது போலத் தெரிகிறது. அவையெல்லாம் உண்மையிலேயே முரண்பாடுகளா? அல்லது தெளிவுறு மனத்தோடு சிந்தித்தால் அம்முரண்களினூடேயும் வலுவான அரண் போன்ற கோட்பாடுகள் அமைந்திருப்பதைத் தெளிந்து கொள்ள முடியுமா?… எனப் பல்வேறு சிந்தனைக் கீற்றுகளுடன் நிலா முற்றத்தில் அறிஞர் அவை கூடியிருந்தது.

நீலவான் ஆடைக்குள் முகம் மறைத்திருந்த நிலவு, மேகத்திரள் தாண்டி மேலெழுந்து தன் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சுவது போல, மெல்லென அதிர்ந்த மின்னல் போலத் தொடங்கிய நிலா முற்ற அரங்கு, நேரம் ஆக ஆகக் கூடியிருந்த அறிஞர் பெருமக்களின் கலந்துரையாடலாலும் கருத்து மோதல்களாலும் விளக்கம் பெறத் தொடங்கிவிட்டது. தனிப்பேச்சு, கருத்தரங்கம், பட்டிமன்றம் எனும் முப்பரிமாணம் கொண்ட முற்றமாக அது பயன் நல்கலாயிற்று.

திருக்குறள் தமிழ்மொழியில் தோன்றியமை நம் தமிழ் பெற்றதொரு வரலாற்றுப்பெருமை. பாரதியாரைப் போற்றிப் பாடிய பாவேந்தர் பாரதிதாசன்,

“என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்!

     தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்,

     தமிழால் பாரதி தகுதி பெற்றதும்…!”

என வியந்து முடிவுரை கூறியதைப் போல…

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே  தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

எனப் பாரதிப் புலவரே வள்ளுவத்தால் தமிழ் மொழியும் நாடும் பெற்ற உலகப் பெருமைக்கு முத்தாய்ப்பிட்டுப் பாடிவிட்டார்.

‘தமிழகத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி, வழிவழியாக வாழ்வு பெற்று இன்றும் வழக்கில் உள்ளது எனப் போற்றிப் பாராட்டப் பெறும் பெருமைக்குரிய ஒரே நூல் திருக்குறள்’ எனப் பழங்கதை போலப் பேசி வருகிறோம்; நமக்குள்ளே மகிழ்கிறோம். இந்தச் சிறப்பு திருக்குறளுக்கு உண்மையிலேயே பொருந்துமா? அல்லது ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என நமக்கு நாமே கூடிப் பேசிக் கலைகிறோமா? எனச் சிலர் வினாத் தொடுத்திட, நிலா முற்றம் களைகட்டியது.

இடைமறித்த பேராசிரியர்

“திருக்குறளின் கருத்து கால எல்லை க்கு உட்பட்டதல்ல. காலம் கடந்த தத்துவங்களையும் சமுதாயச் சிந்தனைகளையும் நடைமுறைப்படுத்த வல்ல செயல் நூல் அது. பகவத் கீதை, விவிலியம், திருக்குர்ஆன் போன்ற சமய நூல்களைப் போல உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்புச் செய்யப் பெற்றுள்ள ஒரே வாழ்விலக்கிய நூல் அது ஒன்றுதான். திருக்குறள் சாதி, இன, மொழி, நாடு எனும் வரையறைகளைக் கடந்து உலக மெல்லாம் தழுவிக் கொள்ளத்தக்க தகுதியுடைய பொது நூல். அது மனித குலத்தின் நீதி நூல்; வாழும் நியதி நூல்.”

மற்றோர் அறிஞர்

“வள்ளுவத்தில் அதிசயங்களோ, அற்புதங்களோ, சூத்திரங்களோ, சூட்சுமங்களோ இல்லை; அன்று வள்ளுவர் வரைந்தளித்ததை இன்று நாம் அப்படியே கையாள முடியவில்லை என்றால், அது நூலின் பிழையில்லை; நம் இன்றைய சமூக வாழ்வின் பிழை. நாம் மனிதத் தன்மையிலிருந்தும் மனிதப் பண்பிலிருந்தும் நெடுந்தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே இந்தப் பிழைக்குக் காரணம்.

நமது பிள்ளைகளுக்கு அளிக்கப்பெறும் கல்விக்கும் அவர்களோடு நாம் வாழும் வாழ்க்கைக்கும் இன்று உள்ள உறவு ‘அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள உறவு’ போலத்தான் உள்ளது! (சிரிப்பு)….

நம் வாழ்க்கைப் போக்கில் வள்ளுவத்தின் நிழல் முழுமையாய்ப் படியவில்லை. மனிதர்களின் வாழ்க்கையை, அகத்தாலும் புறத்தாலும் வளப்படுத்துவதே கல்வி.

சாதாரண மனிதன் கூட, நடை பயிலக் கூடிய எளிய அற நெறியையே வள்ளுவர் கூறினார்; அதையும் தனித்தனி அதிகார வரம்பிற்குள் நின்று, எளிய முறையில் கூறினார்.

திருக்குறள் ஒரு வாழ்க்கை அனுபவ விளக்கம். வாழ்வின் பல்வேறு அனுபவங்களையும் கண்டறிந்த, உற்றறிந்த உணர்வோடு தொகுத்துச் சொல்லும் கையடக்க ஏடு. அதிகாலைப் பனிப்பொழிவால் தரையில் படர்ந்துள்ள புல்லின் இதழ் நுனியில் தூங்கும் அந்தப் பனித்திவலையைச் சற்று உற்றுப் பார்த்தால், அதில் வானத்து விளிம்பு முழுதுமே தெரியும். அதைப் போல ஒரு குறட்பாவைப் படித்தாலும் போதும்… அது தான் பேச வந்த ஒரு பொருள் பற்றிய விரிவெல்லை முழுவதையுமே நமக்குக் காட்டிவிடும்…”

கூட்டத்தில் ஒருவர்

“ஒவ்வொரு குறட்பாவும் பனித்துளி காட்டும் பளிங்கு மா மண்டபம் என்பது அழகான உவமை.”

ஒருங்கிணைப்பாளர்

“இப்போது வள்ளுவரைப் பற்றி எனக்கு வேறொரு உவமை சொல்லத் தோன்றுகிறது…! திருவள்ளுவர் சமுதாயத்தில் பல்வேறு துறைகளையும், நிலைகளையும் ஆய்ந்தறிந்து, நாட்டில் அதுவரை பரவியிருந்த அறிஞர் மற்றும் புலவர்தம் கருத்துக்களையும் கேட்டு, படித்து, அறிந்து, தெளிந்து, எல்லாவற்றையும் நினைவில் கொண்டு, வள்ளுவத்தைச் செய்திருக்கிறார். மிகச்சிறந்த பொற்கொல்லர் போல, வள்ளுவர் சொற்களுக்கு மெருகேற்றியிருக்கிறார். அவர் ஒரு கைத்திறமிக்க ‘சொல் தச்சராகவே’ – ‘கருத்துச் சிற்பியாகவே’ இன்றும் நமக்குத் தோன்றுகிறார்… மக்கள் அள்ளித்தெளித்த கோலம் போல இன்று வாழ்கிறார்கள்… வள்ளுவர் அன்றே எழுதிய குறட்பாக்களைப் புள்ளிகளாக்கிப் புதுக்கோலம் புனைந்துள்ளார்…. இல்லத்து முன்றிலில் விடிகாலை தோறும் கோலமிட்டு மனைவிளக்கம் தரும் மங்கையர் பணி போல, வாழ்வில் அன்றாடம் நாமும் நல்லாடை புனைதல் போல, புதுப்புதுக் கருத்துப் பொலிவால் புதுநலன்கள் பெறுவோம்; புத்துணர்ச்சி பெருகக் காண்போம். ஒவ்வொரு நாளையும் ஒரு திருநாள் போலக் கருதி, புதுமலர் போலச் சூடி அன்றாட வரலாற்றை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். இவ்வாறு தனிமனித வாழ்விலும், சமுதாய வாழ்விலும் – அகம் – புறம் எனும் இரு நிலைகளிலும் – வளர்ச்சிக்கு உரிய மாற்றங்களை வழங்குவதே குறளின் நிலைபேற்றிற்கும் நீடு புகழுக்கும் காரணம்.

உலக சமுதாயங்களில் புறத்துறை வாழ்வில் புரட்சி செய்பவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு என்பது வரலாறு. ஆனால் அகம் – புறம் எனும் இரு துறைகளிலும் சமச்சீரான மாற்றங்களைச் செய்து, பிறருடன் இணங்கி, ஏற்றமுற வாழ வழிகாட்டிய சான்றோர் மட்டுமே உலக நாகரிகத்தை உருவாக்கியவர்கள். அத்தகையோர் எண்ணிக் கையில் மிகச்சிலரே ஆயினும் அவர்களால் தான் இன்றளவும் உலகம் புதுப்புதுச் சிந்தனை மலர்களால் தன்னைச் சிங்காரித்துக் கொள்கிறது.”

இடைமறித்த ஒரு பேராசிரியர்

“உலக நாகரிகத்தை, சிந்தனைச் செல்வத்தை உருவாக்கிய சான்றோருள் திருவள்ளுவர் தலையாயவர் என இங்கே எதிரொலித்த செய்தி கேட்டு என் செவிகள் எல்லாம் இனித்தன… உங்கள் செவிகளும் இத்தேனினு மினிய கனிகளை நுகர்ந்திருக்கும்…”

புலவர்

ஐயா அவர்கள் ‘செவிநுகர் கனிகள்’ எனும் கம்பன் வாக்கைத் தான் நினைவூட்டுகிறார்.

கம்பன் நூற்றுக்கணக்கான பாடல்களில் குறளுக்கு விளக்கவுரை போலச் செய்துள்ளதைத் தான் நினைவூட்டினேன்; குறளின் சூத்திரங்களைக் கம்பன் தன் பாத்திரங்கள் வாயிலாகப் பேசினான்!

தமிழுக்குக் ‘கதி’ எனக் கம்பரையும் திருவள்ளு வரையும் சொல்வது அதனால்தான் வந்தது…”

இன்னொருவர்

“சரி… சரி… குறள் முற்றத்துக்கு வருவோம்… கம்பரும் வள்ளுவரும் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் என்றென்றும் நிலைபெறச் செய்தார்கள். தமிழர்களாகிய நாம் செய்த தவம் அது ஒன்று போதும்.

தமிழ் முனிவர் திரு.வி.க. அன்று சொன்னதை இந்த நிலா முற்ற அரங்கில் நினைவூட்ட விரும்புகிறேன்.”

பேராசிரியர்

“சொல்லுங்கள் சுருக்கமாக.”

“திருவள்ளுவரின் பிறப்பு வளர்ப்பு பற்றிய உண்மை வரலாறு நமக்குக் கிடைக்கவில்லை. அவரது வரலாறு சொல்லப்படுகிறது. அவற்றுள் பெரும்பாலானவை வெறும் புனைந்துரைகள், கற்பனைகள் என விட்டுவிடலாம். வள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பதும், இல்வாழ்க்கையில் நின்று ஒழுகியவர் என்பதும், மக்களை ஈன்று புறந்தந்தவர் என்பதும், அறவோர் என்பதும், தெய்வப் புலவராகப் போற்றப்பட்டவர் என்பதும் அவர் அருளிய நூலால் இனிது விளங்குகின்றன” என்கிறார் திரு.வி.க.

மற்றொரு பேராசிரியர்

“அதனால்தான் திரு.வி.க. அவர்களின் மாணவராகத் தம்மை வரித்துக் கொண்டு வாழ்ந்த அறிஞர் மு.வரதராசனார் தாம் எழுதிய நூலுக்குத் ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ எனப் பொருத்தமாகப் பெயரிட்டார்…

ஒருங்கிணைப்பாளர்

“ஆம்… திருவள்ளுவர் என்றாலே அது வாழ்க்கை விளக்கம் என்பது அருமையான தலைப்பு! ஒரு தனி நபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்.. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட்பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ் நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு! ஒரு தனி நாட்டை விட, உலகு என்பது பெரியதல்லவா? அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதல்லவா?”

 

( தொடரும் )

குறள் நிலா முற்றம்

குறள் நிலா முற்றம்

 

Image result for குறள் நிலா முற்றம்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’

எனப் பாரதியார் பாடியது வெறும் புனைந்துரை இல்லை. வள்ளுவரது நெஞ்சமும் உலகோர் வாழ்வியல்பும் ஒரு தராசில் சம எடையாக நிறுத்தளந்தது போல், ஒரு சீராக நிற்பதைக் கண்டறிந்து கூறிய புகழுரை. வள்ளுவமே சமுதாயம் முழுவதற்கும் உரிய சரியான வாழ்க்கை விளக்கம் என அறுதியிட்ட தீர்ப்புரை.

திருவள்ளுவர் தமிழ்நாட்டிலே பிறந்தார். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மண்ணோடும் மரபோடும் ஒன்றிக் கலந்து உருவாகியிருந்த பண்பாட்டுச் சிந்தனைகளால் உரம் பெற்று வளர்ந்தார். அந்த வளர்ச்சியின் பயனாகக் குறட்பாக்களை வித்துக்களாக்கி ஈந்து உதவினார். அந்த வித்துக்கள் உலகின் எந்தச் சமுதாயப் புலத்தினும் ஊன்றிச் செழித்தோங்கும் இயல்புடையவை; அந்த முத்துக்கள் ஒவ்வொருவருக்கும் அணிகலனாக அழகு சேர்க்கக்கூடிய தனிச்சிறப்புடையவை.

வள்ளுவர் ஒரு நாட்டில் பிறந்தவர் எனினும் உலகச் சிந்தனையாளர். ‘மக்கள் எல்லோரும் ஒரு குலம்; மாநிலம் முழுவதும் ஒரு வீடு’ எனும் பரந்த நோக்குடையவர். கிரேக்கத்து அரிஸ்டாட்டிலைப் போல – பண்டைய இந்தியாவின் ஆதிமனுவைப் போல – அகிலப் பார்வை யுடையவர்; அறிவியல் – ஆன்மீகம் – மார்க்சியம் – காந்தியம் எனப் பல்துறைச் சார்புப் போக்கினர்க்கும் பொதுநலம் கூறும் சால்புடையவர்.

நூல்கள் இரு வகைப்படும் எனஅறிஞர் கூறுவர். எழுதப்பட்ட காலத்திற்கே நம்மைக் கூட்டிச் செல்வன முதல் வகை: நாம் வாழும் காலத்திற்குத் தாமும் உடன் நின்று வழி காட்டுபவை இரண்டாம் வகை.

திருக்குறளில் முதல் வகைப் பாங்கு ஓரளவிற்கும் இரண்டாம் நிலைப்பேறு பேரளவிலும் இணைந்திருப்ப தாக அறிஞர்கள் அரங்கு கூட்டிப் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்குத் திருக்குறள் வற்றாத ஊற்றாக, வளங்குன்றாத சுரங்கமாகப் பயன் தந்து கொண்டே இருக்கிறது.

என்றாலும் திருக்குறளை வாழ்க்கை விளக்கமாக ஏற்போரிடம் ஓர் ஐயம் அவ்வப்போது ஏற்பட்டு வருவதையும் மறுப்பதற்கு இல்லை.

“எல்லாப் பொருளும் இதன்பால் உள, இதன்பால்

     இல்லாத எப்பொருளும் இல்லையால்”

என அன்று பாடிய திருவள்ளுவ மாலை இன்றைக்கும் வாடாத மாலை ஆகுமா? எனக் கேட்டு, நமது வாழ்க்கைப் போக்கிற்கெல்லாம் திருக்குறள் துணையாக வந்து விடுமா?  அவரவர் வாழ்க்கைக்கெல்லாம் வள்ளுவம் உதவுமா? என்பதோடு ஒவ்வொருவர் வாழ்வுக்கும் வள்ளுவம் வழி காட்ட வேண்டும் எனும் ஆர்வமும் தலைதூக்கி நிற்கிறது.

வள்ளுவத்தை மட்டுமல்ல, சமயப் போதனைகள், மார்க்சியம், காந்தியம் ஆகிய உண்மைகள் அனைத்தையும் வாழும் காலம் எனும் உரைகல்லில் உரசிப் பார்த்து எடை போட்டு அறியவே விழைகின்றனர்.

காலம் மாறினும் உண்மைகள் மாறுவதில்லை. காலத்தின் மாறுதல்கள் உடைமாற்ற நாகரிகங்களைப் போன்றவை; அடிப்படை உண்மைப் பண்புகள் உயிரைப் போன்றவை என்பர் அறிஞர்.

‘காந்தியக் கதராடையே சோபிதம்’ எனப் பாடிய காலம் சடுதியில் மாறியுள்ள சூழலில், வள்ளுவப் பழைய உடை இன்றைய புதுயுகத் தேவைக்கெல்லாம் பொருந்துமா எனக் கேட்டுப் பார்ப்பதில், எடைபோட்டுப் பார்ப்பதில் தவறில்லை.

‘நாம் வாழும் இந்தக் காலத்திற்கு வள்ளுவம் வழி காட்டுமா?’ என்பது பயனுள்ள கேள்வியே ஆகும்.

இக்கேள்விக்குப் பலரை ஒருங்கு கூட்டி, விவாதப் பொருளாக இதை முன்வைத்துப் பயன்தர மதுரை வானொலி புதுமையான நிகழ்ச்சியை ஒரு சரமாகத் தொடுக்க முனைந்தது. நிகழ்ச்சிகளை வானொலி அரங்கில் இருந்தே ஒலிபரப்பும் பழைய முறையை மாற்றி ‘வாசலுக்கு வரும் நேசக் கரங்களை’ நீட்டி நிகழ்ச்சிகளை அமைக்கும் புதுமையை அரங்கேற்றியது. அதில் ஒன்று நிலா முற்றம்.

‘நீலவான் ஆடைக்குள் ஒளி மறைத்து

     நிலாவென்று முகம் காட்டும்’

வளர்பிறை, மாதந்தோறும் முழுமதியாக வானக் காட்சி தருவது. வீட்டுவெளியில் வந்து அண்ணாந்து பார்த்து மகிழவோ வியக்கவோ நமக்கு இப்போதெல்லாம் நேரம் இருப்பதில்லை – விருப்பம் இருப்பதில்லை.

வீட்டு அறைக்குள் அமர்ந்து உண்ணும் சாப்பாட்டை நம் வீட்டு முற்றத்திலேயே பிள்ளைகளுடன் குடும்பத் தாருடன் ஒன்றாய் அமர்ந்து குலவிப் பேசி அதை நிலாச் சோறாக உண்பதிலும் நாட்டம் கொள்வதில்லை! இயற்கையை ரசிக்க எங்கெல்லாமோ பயணம் போகிறோம். வீட்டிற்குள்ளேயே – வீட்டருகே வலம் வரும் விந்தைகள் கூட நம் கண்ணிலோ மனத்திலோ படுவதில்லை; படிவதில்லை.

திருக்குறள் சிந்தனையைப் பலரது கருத்திலும் படரச் செய்யக் கருதிய வானொலி நிலையம் அதை நிலா முற்ற விருந்தாக, அரங்காகக் கூட்டியது.

அந்த அரங்க அமைப்பினை என் வீட்டு முற்றத்தில் நிலா விருந்தாக்கிட நான் விழைந்தேன். மதுரைத் தமிழ் அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் அழைத்து வர வானொலியார் இசைந்தார்.

என் இல்லத்து விரிந்த முற்றத்தில் திருக்குறள் நிலா முற்றம் கூடியது.

‘குறள் நெறிகள் நம் காலத்திற்குப் பொருந்துமா?’ எனும் தலைப்பில் விவாத மேடைச் சிந்தனைகளைத் தொகுத்து ஒரு சரமாக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப் பட்டது.

இளமைப் பருவம் முதல் குறட்பாக்களில் சிந்தை மயங்கி வளர்ந்து குறள் கருத்துக்களைச் சமுதாயப் பொது உடைமை ஆக்கிப் பரப்பும் ‘உலகத்திருக்குறள் பேரவை’ யின் பொதுச்செயலாளர் பொறுப்பேற்றிருந்த எனக்குக் குறள் பற்றிய அறிஞர் பெருமக்களின் சிந்தனைகளோடு இணையும் இனிய வாய்ப்பு இது எனக் கருதினேன்.

குறள் நிலா முற்ற அரங்கு கூடியிருந்தது.

திருக்குறள் பேரவையின் தமிழ்நாட்டமைப்பின் துணைத்தலைவர், செயலாளர், பல கிளைப் பொறுப்பாளர்கள், பேராசிரியர்கள், புலவர்கள், அரசு உயர்நிலை அலுவலர்கள், சமூக இயக்கச் சிந்தனையாளர்கள், நாட்டுநலத் தொண்டர்கள் என ஒரு பிரதிநிதித்துவப் பேரணி போலக் கூடி இருந்தது அவை.

வானத்திலே முழுமை நிலா, அழகு நிலா மேலெழுந்து கொண்டிருந்தது. நிலா முற்ற அரங்கில் குறள் நெறிச் சிந்தனைகள் அறிஞர்களிடையே உலா வரத் தொடங்கின. இந்த நிலா முற்ற விருந்தில் குறள் அமுதம் அருந்திட உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

இந்நூல் சிறப்புற வெளிவரப் பெரிதும் துணையாக, இருந்த பேராசிரியர் சு.குழந்தைநாதன், பேராசிரியர் இரா.மோகன் ஆகியோருக்கும், அணிந்துரை நல்கிய வணக்கத்திற்கு உரிய மகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார், மூதறிஞர்.தமிழண்ணல், இசைவாணர் எஸ்.மோகன்காந்தி ஆகிய சான்றோர்களுக்கும் எனது இதய நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்.

ந.மணிமொழியன்

பொதுச்செயலாளர்

உலகத் திருக்குறள் பேரவை

உள்ளத்தால் பொய்யாது ஒழுகிய காந்தியடிகள்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகிய

உலக உத்தமர் காந்தியடிகள்

“உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

 உள்ளத்துள் எல்லாம் உளன்”        (294)

உள்ளம் அறிந்து பொய்யாமை நினையாதவர்கள் உலகத்து மக்கள் உள்ளத்தில் எல்லாம் புகழோடு நிலைத்திருப்பார்கள் என்பதைத் தமது உண்மையான தூய தொண்டின் மூலம் மெய்ப்பித்து வெற்றி கண்டவர் அண்ணல் காந்தியடிகள்.

முழுமையும் நல்லவராக, முழுமையும் உண்மையுடைய வராக, முழுமையும் அன்புடையவராக வாழ்ந்திட விரும்பினார் காந்தியடிகள். வாழ்வின் அனைத்துக் களங்களிலும் அவர் உண்மையின் ஒளியில் வாழ்ந்திட மேற்கொண்ட விருப்பம் சாதாரண ஆத்மாவாக இருந்த அண்ணல் காந்தி அவர்களை மகாத்மாகாந்தியாக உருவாக்கியது. தேசப்பிதா என்று நாடே கொண்டாடியது.

காந்தியடிகள் என்றவுடன் நமக்கு முன் தோன்றி நிற்பது அகிம்சையும், சத்தியமும் தான். எந்த வகையிலும் உயிர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்தல் கூடாது என்பது அகிம்சை. எந்த நிலையிலும் பொய்யை ஒரு போதும் சொல்லக்கூடாது, உண்மையே கூறுதல் வேண்டும் என்பது சத்தியம்.

“ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன்

 பின்சாரப் பொய்யாமை நன்று”      (323)

என்பது வள்ளுவம். இந்தியத் திருநாடு ஏறத்தாழ சுதந்திரம் பெற்று விட்ட நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களிடம் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கேட்டார்: “நிராயுதபாணியாய் நின்று போராடும் ஒற்றை மனிதரின் போராட்டத்தை வலிமை வாய்ந்த ஆயுதங்களை வைத்திருக்கும் பிரிட்டிஷ் அரசால் நசுக்க முடியவில்லையா?” சர்ச்சில் அவர்கள் அதற்குப் பதிலளிக்கையில் அந்த மனிதர் “காந்தியடிகள் கத்தியை எடுத்திருந்தால் நான் துப்பாக்கியை எடுத்திருப்பேன், துப்பாக்கியை எடுத்திருந் தால் நான் பீரங்கியைக் கொண்டு நசுக்கி இருப்பேன். ஆனால் அவர் சத்தியத்தை அல்லவா எடுத்துக் கொண்டு போராடுகிறார்? சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லையே?” என்றார். அதிவேக ஆயுதபலமும் வலிமை வாய்ந்த இராணுவமும் கொண்ட ஆங்கில ஏகாதிபத்தியத்தை சத்தியம் என்னும் ஆயுதம் கொண்டு சத்தியாகிரகம் எனும் அறப்போர் முறையில் கத்தியின்றி இரத்தமின்றி போராடிப் பணியவைத்தவர் காந்தியடிகள்.

“உங்கள் எதிரிகளை சிநேகியுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை நீங்கள் ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கும் நன்மையே செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைப் பழிப்பவர் களுக்காகவும் பிரார்த்தனை பண்ணுங்கள். அப்போது தான் மனித வாழ்வின் மேன்மை என்னவென்றே உணர்வீர்கள்” என்பது ஏசு பெருமானின் போதனைகள்.

“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

     நன்னயம் செய்து விடல்”      (314)

என்பது வள்ளுவம். துன்பம் செய்தவரைத் தண்டிக்காது. அவர் வெட்கப்படும்படியான தண்டனையாக நன்மையைச் செய்து அவர் செய்த துன்பத்தை மறந்திடுதல் மேன்மை யுடையோர் செயலாகக் கருதப்படுகிறது என்கிறார் திருவள்ளுவர். இக்கொள்கையில் நிலையாக நின்றவர் காந்தியடிகள்.

நீதிமன்றத்தில் சிறைத் தண்டனை பெற்ற காந்தியடிகள் எரவாடா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறை அதிகாரியாக இருந்த ஸ்மட்ஸ், காந்தியின் மார்பில் மிதித்துச் சிறையில் தள்ளுகிறார். அதற்காக காந்தியடிகள் வருந்தவில்லை. சிறைத் தண்டனை முடித்து வெளிவந்த காந்தியடிகள் அந்த சிறை அதிகாரிக்கு சிறையில் கிடைத்த தோல்களைக் கொண்டு தாமே தைத்த மிதியடி ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தார். சிறை அதிகாரி அதிர்ந்து போனார். “மிதியடி கொடுத்தமைக்கு நன்றி. எனது காலின் சரியான அளவு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?” என்றார். காந்தியடிகள் புன்னகையுடன் “நீங்கள் உங்கள் பூட்ஸ் காலால் என்னை உதைத்தீர்களே அந்தத் தடயம் என் மார்பில் இருந்தது. அதிலிருந்து எடுத்துக் கொண்டேன்” என்றார். அந்த சிறை அதிகாரி வெட்கித் தலைகுனிந்து காந்தியடிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் என்ற செய்தியினை அறியும்போது மகாத்மா மகாத்மா தான் எனச் சொல்லத் தோன்றுகிறது.*

“இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

     என்ன பயத்ததோ சால்பு?”           (987)

நமக்குத் துன்பம் செய்தவருக்கும், நாம் நன்மை செய்யவில்லை என்றால் நம்முடைய பெருந்தன்மை வேறு எதைச் சாதிக்கப் போகிறது எனக் கேட்கும் வள்ளுவத்தின் சான்றாண்மை நெறியினைக் காந்தியடிகள் வாழ்வின் உயிரெனக் கொண்டு வாழ்ந்துள்ளார் என்பதை அறியும் பொழுது நம் நெஞ்சம் நம்மை அறியாமலே நிமிரத் தானே செய்கிறது?

ஓர் இலட்சியத்திற்காக மனமுவந்து ஏற்கும் தியாகமே தவம் என்பர். உண்ணாவிரதம் இருப்பதும் அடுத்தவர் துன்புறுத்தினாலும் அவர்க்கு எதிராகக் கையைக் கூட அசைக்கக் கூடாது என்பதும் காந்தியடிகள் சத்தியா கிரகத்திற்குக் கூறிய இலக்கணங்கள்.

Image result for திருவள்ளுவர்

“உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை

 அற்றே தவத்திற்கு உரு”       (261)

தனக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், பிற உயிர்களுக்குக் கேடு செய்யாதிருத்தலுமே தவம் என்பார் திருவள்ளுவர். காந்தியடிகள் மிகச்சிறந்த தவசீலராக விளங்கினார்.

மகாத்மாவாக வாழ்ந்த காந்தியடிகள் தம்மை ஒரு சாதாரண மனிதராகவே கருதிக்கொண்டார். சாதாரண மனிதர்கள் மீது அக்கறை கொண்டார். சாதாரண மனிதர்கள் மீது அவர் கொண்ட அன்பு தான் சாதாரண மனிதர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் செய்ய வைத்தது. காந்தியடிகள் தேசிய விடுதலையைச் சிந்தித்த அதே வேளையில் சமூக விடுதலையைப் பற்றியும் சிந்தித்தார். அதனால்தான் தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக இருந்தார்.

“நான் என்ன விரும்புகிறேனோ, எதற்காக வாழ்ந்து கொண்டு இருக்கின்றேனோ, எதற்காகச் சாவதற்கு மகிழ்ச்சி யடைகிறேனோ அது தீண்டாமை. வேரும் கிளையு மில்லாமல் அழித்து விடுவதாகும் என்னுடைய உண்ணாவிரதம் சாதி இந்துக்களை அவர்களுடைய உறக்கத்திலிருந்து எழுச்சி பெறச் செய்து விழிப்புறச் செய்யுமானால் அது அதன் நோக்கத்தை நிறைவேற்றியதாகும்.” எனச் சூளுரைத்து அதில் வெற்றியும் கண்டார். காந்தி யடிகளின் போராட்டத் திற்குப் பின் பல ஜாதி இந்துக்கள் தீண்டாமை பற்றிய வைதீக எண்ணத்தைக் கைவிட்டனர். கோயில்கள், சாலைகள், கிணறுகள் அனைத்தும் தீண்டத் தகாதவர்களுக்கும் திறந்து விடப்பட்டன என்பது வரலாறு. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதையும், ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்பதையும், அன்பு வழியே ஆயுதத்தால் சாதிக்க இயலாததைச் சாதிக்க வல்லது என்பதையும் தமது வாழ்க்கையில் மெய்ப்பித்துக் காட்டியவர் காந்தியடிகள். அன்பு வழி மாறி இன்றைய உலகம் செல்வதால் தான் எங்கும் பகைமையும், பூசலும், வன்முறையும் நிலவுகின்றன.

 

காந்தியடிகளின் தமிழ்ப்பற்று

Image result for காந்தியடிகள்

காந்தியடிகள் தமிழ்மொழி மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த மரியாதையும், பாசமும் வைத்திருந்தார். ‘தமிழ்மொழி கற்க மிகுந்த நாட்களைச் செலவு செய்துள்ளேன்’ என அவரே கூறியுள்ளார். ‘இந்தியாவில் அனைவரும் ஓரினமாக வாழ வேண்டும் என்றால் சென்னை மாநிலத்திற்கு வெளியே வாழ்கிறவர்கள் தமிழ் மொழியை அவசியம் கற்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார் காந்தியடிகள்.

காந்தியடிகள் திருக்குறள் மீது அளவிட முடியாத அளவிற்கு விருப்பமும், மரியாதையும் வைத்திருந்தார். “திருக்குறளைப் படிக்காத ஒருவரை இந்திய இலக்கியப் படைப்பாளியாக நான் கருத மாட்டேன்” என்பது அகமதாபாத் நகரில் நடந்த இந்திய இலக்கியப் படைப்பாளிகள் மாநாட்டில் காந்தியடிகள் வெளியிட்ட பிரகடனம் என்றும், காந்தியடிகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தவர் தில்லை யாடியைச் சேர்ந்த கன்னியப்பச் செட்டியார் என்ற தகவலையும் செய்தித் துறையில் பணியாற்றிப் பெருமை பெற்ற திரு.அ.பிச்சையா தமது ‘சிந்தனைப் புள்ளிகள்’ நூலில் குறிப்பிடுகிறார்.

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கியும் மேதையில் மேதையாக வாழ்ந்திட்ட மகாத்மா அவர்கள் சத்தியத்தின் மீதும், அகிம்சையின் மீதும் முழுமையான நம்பிக்கை கொண்டு, அதனையே தமது போராட்டக் களத்தின் ஆயுதமாக முன் நிறுத்தி இந்திய தேசத்தின் விடுதலைக்கும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நிலைப்பாட்டினை உருவாக்கி சமூக விடுதலைக்கும் வித்திட்டு மானிட சுதந்திரப் பயிரினைச் செழிப்புற வளர்த்திட்ட பெருமகனார்.

“நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

     மலையினும் மாணப் பெரிது”        (124)

என நடையில் நின்றுயர் நாயகராகத் திகழ்ந்திட்ட மகாத்மா அவர்களுக்குச் சிலை வைத்துச் சிறப்புச் செய்வது பாராட்டிற்கு உரியது. பிரான்சு நாட்டில் உள்ள வொரெயால் நகரத்தில் புதுச்சேரி தமிழ் உள்ளங்கள் தமிழ்க் கலாச்சார மன்றம் வைத்து இந்திய நாட்டின் கலாச்சார சிறப்புக்களையும், தமிழக மக்களின் பண்பாட்டு மேன்மைகளையும் பரப்பி வருவது போற்றுதற்கு உரியது. இச்சீரிய பணியினை சிரமேற்கொண்டு செய்து வரும் தமிழ்க் கலாச்சார மன்றத் தலைவர் திரு.பாண்டுரங்கன், இலங்கைவேந்தன், செயலாளர் திரு.இராமச்சந்திரன் உள்ளிட்ட மன்ற நிர்வாகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். நீண்ட நெடுங்காலம் ஒற்றுமையுடன் பிரான்சு நாட்டில் வாழ்ந்து வரும் அனைத்துத் தமிழ் மக்களும், அவர்கள்தம் குடும்பத்தினரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து சிறந்திட எல்லாம் வல்ல அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் அருளினை வேண்டி வாழ்த்தி வணங்குகிறேன்.