உள்ளத்தால் பொய்யாது ஒழுகிய காந்தியடிகள்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகிய

உலக உத்தமர் காந்தியடிகள்

“உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

 உள்ளத்துள் எல்லாம் உளன்”        (294)

உள்ளம் அறிந்து பொய்யாமை நினையாதவர்கள் உலகத்து மக்கள் உள்ளத்தில் எல்லாம் புகழோடு நிலைத்திருப்பார்கள் என்பதைத் தமது உண்மையான தூய தொண்டின் மூலம் மெய்ப்பித்து வெற்றி கண்டவர் அண்ணல் காந்தியடிகள்.

முழுமையும் நல்லவராக, முழுமையும் உண்மையுடைய வராக, முழுமையும் அன்புடையவராக வாழ்ந்திட விரும்பினார் காந்தியடிகள். வாழ்வின் அனைத்துக் களங்களிலும் அவர் உண்மையின் ஒளியில் வாழ்ந்திட மேற்கொண்ட விருப்பம் சாதாரண ஆத்மாவாக இருந்த அண்ணல் காந்தி அவர்களை மகாத்மாகாந்தியாக உருவாக்கியது. தேசப்பிதா என்று நாடே கொண்டாடியது.

காந்தியடிகள் என்றவுடன் நமக்கு முன் தோன்றி நிற்பது அகிம்சையும், சத்தியமும் தான். எந்த வகையிலும் உயிர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்தல் கூடாது என்பது அகிம்சை. எந்த நிலையிலும் பொய்யை ஒரு போதும் சொல்லக்கூடாது, உண்மையே கூறுதல் வேண்டும் என்பது சத்தியம்.

“ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன்

 பின்சாரப் பொய்யாமை நன்று”      (323)

என்பது வள்ளுவம். இந்தியத் திருநாடு ஏறத்தாழ சுதந்திரம் பெற்று விட்ட நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களிடம் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கேட்டார்: “நிராயுதபாணியாய் நின்று போராடும் ஒற்றை மனிதரின் போராட்டத்தை வலிமை வாய்ந்த ஆயுதங்களை வைத்திருக்கும் பிரிட்டிஷ் அரசால் நசுக்க முடியவில்லையா?” சர்ச்சில் அவர்கள் அதற்குப் பதிலளிக்கையில் அந்த மனிதர் “காந்தியடிகள் கத்தியை எடுத்திருந்தால் நான் துப்பாக்கியை எடுத்திருப்பேன், துப்பாக்கியை எடுத்திருந் தால் நான் பீரங்கியைக் கொண்டு நசுக்கி இருப்பேன். ஆனால் அவர் சத்தியத்தை அல்லவா எடுத்துக் கொண்டு போராடுகிறார்? சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லையே?” என்றார். அதிவேக ஆயுதபலமும் வலிமை வாய்ந்த இராணுவமும் கொண்ட ஆங்கில ஏகாதிபத்தியத்தை சத்தியம் என்னும் ஆயுதம் கொண்டு சத்தியாகிரகம் எனும் அறப்போர் முறையில் கத்தியின்றி இரத்தமின்றி போராடிப் பணியவைத்தவர் காந்தியடிகள்.

“உங்கள் எதிரிகளை சிநேகியுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை நீங்கள் ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கும் நன்மையே செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைப் பழிப்பவர் களுக்காகவும் பிரார்த்தனை பண்ணுங்கள். அப்போது தான் மனித வாழ்வின் மேன்மை என்னவென்றே உணர்வீர்கள்” என்பது ஏசு பெருமானின் போதனைகள்.

“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

     நன்னயம் செய்து விடல்”      (314)

என்பது வள்ளுவம். துன்பம் செய்தவரைத் தண்டிக்காது. அவர் வெட்கப்படும்படியான தண்டனையாக நன்மையைச் செய்து அவர் செய்த துன்பத்தை மறந்திடுதல் மேன்மை யுடையோர் செயலாகக் கருதப்படுகிறது என்கிறார் திருவள்ளுவர். இக்கொள்கையில் நிலையாக நின்றவர் காந்தியடிகள்.

நீதிமன்றத்தில் சிறைத் தண்டனை பெற்ற காந்தியடிகள் எரவாடா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறை அதிகாரியாக இருந்த ஸ்மட்ஸ், காந்தியின் மார்பில் மிதித்துச் சிறையில் தள்ளுகிறார். அதற்காக காந்தியடிகள் வருந்தவில்லை. சிறைத் தண்டனை முடித்து வெளிவந்த காந்தியடிகள் அந்த சிறை அதிகாரிக்கு சிறையில் கிடைத்த தோல்களைக் கொண்டு தாமே தைத்த மிதியடி ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தார். சிறை அதிகாரி அதிர்ந்து போனார். “மிதியடி கொடுத்தமைக்கு நன்றி. எனது காலின் சரியான அளவு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?” என்றார். காந்தியடிகள் புன்னகையுடன் “நீங்கள் உங்கள் பூட்ஸ் காலால் என்னை உதைத்தீர்களே அந்தத் தடயம் என் மார்பில் இருந்தது. அதிலிருந்து எடுத்துக் கொண்டேன்” என்றார். அந்த சிறை அதிகாரி வெட்கித் தலைகுனிந்து காந்தியடிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் என்ற செய்தியினை அறியும்போது மகாத்மா மகாத்மா தான் எனச் சொல்லத் தோன்றுகிறது.*

“இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

     என்ன பயத்ததோ சால்பு?”           (987)

நமக்குத் துன்பம் செய்தவருக்கும், நாம் நன்மை செய்யவில்லை என்றால் நம்முடைய பெருந்தன்மை வேறு எதைச் சாதிக்கப் போகிறது எனக் கேட்கும் வள்ளுவத்தின் சான்றாண்மை நெறியினைக் காந்தியடிகள் வாழ்வின் உயிரெனக் கொண்டு வாழ்ந்துள்ளார் என்பதை அறியும் பொழுது நம் நெஞ்சம் நம்மை அறியாமலே நிமிரத் தானே செய்கிறது?

ஓர் இலட்சியத்திற்காக மனமுவந்து ஏற்கும் தியாகமே தவம் என்பர். உண்ணாவிரதம் இருப்பதும் அடுத்தவர் துன்புறுத்தினாலும் அவர்க்கு எதிராகக் கையைக் கூட அசைக்கக் கூடாது என்பதும் காந்தியடிகள் சத்தியா கிரகத்திற்குக் கூறிய இலக்கணங்கள்.

Image result for திருவள்ளுவர்

“உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை

 அற்றே தவத்திற்கு உரு”       (261)

தனக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், பிற உயிர்களுக்குக் கேடு செய்யாதிருத்தலுமே தவம் என்பார் திருவள்ளுவர். காந்தியடிகள் மிகச்சிறந்த தவசீலராக விளங்கினார்.

மகாத்மாவாக வாழ்ந்த காந்தியடிகள் தம்மை ஒரு சாதாரண மனிதராகவே கருதிக்கொண்டார். சாதாரண மனிதர்கள் மீது அக்கறை கொண்டார். சாதாரண மனிதர்கள் மீது அவர் கொண்ட அன்பு தான் சாதாரண மனிதர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் செய்ய வைத்தது. காந்தியடிகள் தேசிய விடுதலையைச் சிந்தித்த அதே வேளையில் சமூக விடுதலையைப் பற்றியும் சிந்தித்தார். அதனால்தான் தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக இருந்தார்.

“நான் என்ன விரும்புகிறேனோ, எதற்காக வாழ்ந்து கொண்டு இருக்கின்றேனோ, எதற்காகச் சாவதற்கு மகிழ்ச்சி யடைகிறேனோ அது தீண்டாமை. வேரும் கிளையு மில்லாமல் அழித்து விடுவதாகும் என்னுடைய உண்ணாவிரதம் சாதி இந்துக்களை அவர்களுடைய உறக்கத்திலிருந்து எழுச்சி பெறச் செய்து விழிப்புறச் செய்யுமானால் அது அதன் நோக்கத்தை நிறைவேற்றியதாகும்.” எனச் சூளுரைத்து அதில் வெற்றியும் கண்டார். காந்தி யடிகளின் போராட்டத் திற்குப் பின் பல ஜாதி இந்துக்கள் தீண்டாமை பற்றிய வைதீக எண்ணத்தைக் கைவிட்டனர். கோயில்கள், சாலைகள், கிணறுகள் அனைத்தும் தீண்டத் தகாதவர்களுக்கும் திறந்து விடப்பட்டன என்பது வரலாறு. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதையும், ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்பதையும், அன்பு வழியே ஆயுதத்தால் சாதிக்க இயலாததைச் சாதிக்க வல்லது என்பதையும் தமது வாழ்க்கையில் மெய்ப்பித்துக் காட்டியவர் காந்தியடிகள். அன்பு வழி மாறி இன்றைய உலகம் செல்வதால் தான் எங்கும் பகைமையும், பூசலும், வன்முறையும் நிலவுகின்றன.

 

காந்தியடிகளின் தமிழ்ப்பற்று

Image result for காந்தியடிகள்

காந்தியடிகள் தமிழ்மொழி மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த மரியாதையும், பாசமும் வைத்திருந்தார். ‘தமிழ்மொழி கற்க மிகுந்த நாட்களைச் செலவு செய்துள்ளேன்’ என அவரே கூறியுள்ளார். ‘இந்தியாவில் அனைவரும் ஓரினமாக வாழ வேண்டும் என்றால் சென்னை மாநிலத்திற்கு வெளியே வாழ்கிறவர்கள் தமிழ் மொழியை அவசியம் கற்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார் காந்தியடிகள்.

காந்தியடிகள் திருக்குறள் மீது அளவிட முடியாத அளவிற்கு விருப்பமும், மரியாதையும் வைத்திருந்தார். “திருக்குறளைப் படிக்காத ஒருவரை இந்திய இலக்கியப் படைப்பாளியாக நான் கருத மாட்டேன்” என்பது அகமதாபாத் நகரில் நடந்த இந்திய இலக்கியப் படைப்பாளிகள் மாநாட்டில் காந்தியடிகள் வெளியிட்ட பிரகடனம் என்றும், காந்தியடிகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தவர் தில்லை யாடியைச் சேர்ந்த கன்னியப்பச் செட்டியார் என்ற தகவலையும் செய்தித் துறையில் பணியாற்றிப் பெருமை பெற்ற திரு.அ.பிச்சையா தமது ‘சிந்தனைப் புள்ளிகள்’ நூலில் குறிப்பிடுகிறார்.

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கியும் மேதையில் மேதையாக வாழ்ந்திட்ட மகாத்மா அவர்கள் சத்தியத்தின் மீதும், அகிம்சையின் மீதும் முழுமையான நம்பிக்கை கொண்டு, அதனையே தமது போராட்டக் களத்தின் ஆயுதமாக முன் நிறுத்தி இந்திய தேசத்தின் விடுதலைக்கும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நிலைப்பாட்டினை உருவாக்கி சமூக விடுதலைக்கும் வித்திட்டு மானிட சுதந்திரப் பயிரினைச் செழிப்புற வளர்த்திட்ட பெருமகனார்.

“நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

     மலையினும் மாணப் பெரிது”        (124)

என நடையில் நின்றுயர் நாயகராகத் திகழ்ந்திட்ட மகாத்மா அவர்களுக்குச் சிலை வைத்துச் சிறப்புச் செய்வது பாராட்டிற்கு உரியது. பிரான்சு நாட்டில் உள்ள வொரெயால் நகரத்தில் புதுச்சேரி தமிழ் உள்ளங்கள் தமிழ்க் கலாச்சார மன்றம் வைத்து இந்திய நாட்டின் கலாச்சார சிறப்புக்களையும், தமிழக மக்களின் பண்பாட்டு மேன்மைகளையும் பரப்பி வருவது போற்றுதற்கு உரியது. இச்சீரிய பணியினை சிரமேற்கொண்டு செய்து வரும் தமிழ்க் கலாச்சார மன்றத் தலைவர் திரு.பாண்டுரங்கன், இலங்கைவேந்தன், செயலாளர் திரு.இராமச்சந்திரன் உள்ளிட்ட மன்ற நிர்வாகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். நீண்ட நெடுங்காலம் ஒற்றுமையுடன் பிரான்சு நாட்டில் வாழ்ந்து வரும் அனைத்துத் தமிழ் மக்களும், அவர்கள்தம் குடும்பத்தினரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து சிறந்திட எல்லாம் வல்ல அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் அருளினை வேண்டி வாழ்த்தி வணங்குகிறேன்.