சிகாகோ: இந்திய ஆன்மீக முதல் முழக்கம்

சிகாகோ: இந்திய ஆன்மீக

முதல் முழக்கம்

Image result for vivekananda

இந்திய ஆன்மீகத்தின் முதல் முழக்கத்தை – புதிய விவே(காநந்தக்)கக் குரலை கேட்கும் – வாய்ப்புப் பெற்ற நகரம் சிகாகோ இந்திய நாட்டவரைப் பற்றிச் சென்ற நூற்றாண்டிலேயே கேள்விப்பட்டுப் பெருமை கொண்ட நகரம் அது.

சிகாகோ தமிழ் அன்பர்கள் (டெய்டனிலிருந்து 300 மைல் தூரம்) கூட்டிச் செல்ல வந்திருந்தனர். டெய்டன் விழா முடிந்த கையோடு சிக்காகோவுக்குக் காரில் போக திரு.பி.சி.எம்.ஜி. நாராயணனும் வேங்கட ராமானுஜமும் ஏற்பாடு செய்திருந்தனர். வேங்கடராமானுஜம் ஏற்றுமதித் துறையில் பொறுப்பான பதவி வகிப்பவர்; மதுரையில் புகழோச்சி வரும் மகாத்மா மாண்டிசேரிப் பள்ளித்தாளாளாரும் யாதவர் கல்லூரிச் செயலருமான திரு.பன்னீர்செல்வம் அவர்களின் சகலர். இவ்வன்பர்களின் குடும்பத்தாருடன் சிகாகோவுக்கு சாலை வழிப்பயணமாய்ப் புறப்பட்டோம்.

தாயக்கட்டமா? தார்ச்சாலைகளா?

சாலைகள் நாட்டின் நரம்பு மண்டலங்கள் பொருளாதார நலத்திற்கும் சமூக வாழ்வுக்கும் இன்றியமையாத இணைப்புக் கோடுகள். மிக விரிந்த நிலப்பரப்பைக் கொண்ட அமெரிக்க நாட்டின் திசைகளை எல்லாம் – அந்நாட்டின் நெடுஞ்சாலைகளே இணைக்கின்றன. ஊருக்கு ஊர் சொந்த / பொது விமானப்பயண வசதிகள் மிகுதியாக இருந்தாலும், ரயில் பயணத்தை விட, சாலைப் பயணத்தையே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதற்கேற்ப மோடல் (விளிஜிணிலி) எனப்படும் தங்குவிடுதிகளையும் செய்தித்தொடர்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

அங்கே நெடுஞ்சாலைகளின் அழகுக்கும் பராமரிப்புக்கும் இணை ஏதுமில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை – நேர்கோடு போல – நீண்டு விரியும் இச்சாலைகளில் எல்லாம் – வாகனங்கள் ஊர்ந்து போவதில்லை! விரைந்து பறக்கின்றன! 60 மைல் வேகம் குறையாமல் ஓட்ட வேண்டும் என்பது விதி; ஆனால் சர்வசாதாரணமாக 80, 100 மைல் வேகத்தில்தான் ஓட்டுகிறார்கள். வாகனங்களைக் கண்காணிக்கப் போலீசார் ராடார் சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள். என்றாலும் கார் ஓட்டுநர்கள் தம் வண்டியில் உள்ள மின்னணுச் சாதனங்கள் வழியே ராடார் இயக்கத்தைத் தெரிந்து கொண்டு அப்போதைக்கு மட்டும் வேகத்தைக் குறைத்துக்கொண்டு அப்புறம் சிறகுகட்டிப் பறக்கிறார்கள்.

வேகம் – வேகம் – வேகம். இதுதான் அமெரிக்க வாழ்க்கை! என்றாலும் கூட அந்த வேகத்திலும் – ஒருவகை ஒழுங்கும் கட்டுப்பாடும் மேவி நிற்பதைக் காணமுடியும். பொது இடங்களில் மக்கள் நடந்து கொள்வதை உரைகல்லாக வைத்தே ஒரு நாட்டின் ஒழுக்கத்தை அளந்தறிய வேண்டும் என்பார்கள். அங்கே ‘பொதுஇடம்’ எதுவாயினும் – அது புனிதமாகப் போற்றப்படுகிறது. ‘பொது என்றாலே, யாருக்கும் சம்பந்தமில்லாத அனாதை போன்றது; பொதுஇடத்தையோ, பொதுப்பொருளையோ, முறைகேடாக உபயோகிக்கலாம்’ என்ற நம்நாட்டின் பெரும்பாலானோரின் மனப்போக்கு இந்த அமெரிக்கப் பாடத்தால் மாற்றம் காணவேண்டும்.

நம் நாட்டில் பொதுப் பேருந்துகள் படும் பாடு நமக்குத் தெரியும். பயணிக்கும் ஓட்டுநர் / நடத்துநருக்கும் சிறு வாய்த்தகராறு மூண்டால் போதும். அது கைகலப்பாகி, ரத்தக் களரியாகி, சாலை மறியலாகி, சட்டஒழுங்குப் பிரச்சினையாகி, குழு மோதலாகி, துப்பாக்கிச்சூடு ஆகி, நீதி விசாரணை ஆகி, அப்புறம் புஸ்வாணம் ஆகிவிடும். அதே சமயத்தில் பேருந்து – சமூக விரோதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சாலையின் குறுக்கே படுத்துக் கிடக்கும். அமெரிக்கச் சாலைப் பயணத்தின்போது என்னால் இந்த ஒப்பீட்டை நினைக்காமல் இருக்க முடியவில்லை. “இது மாறும் நாள் எந்த நாளோ! யார் இதைப் பகர்வார் இங்கே?” எனும் பாரதிதாசன் வரிகளே நினைவுக்கு வருகின்றன.

அமெரிக்க நாடு எங்கும் தாயக்கட்டம் போல அமைந்திருக்கும் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கு விளக்கமான கைகாட்டிகளும் குறிப்புத் தூண்களும் உள்ளன. நெடுஞ்சாலை வரைபடத்தைக் கையில் வைத்துக்கொண்டால் போதும்; எங்கே திரும்ப வேண்டும். எங்கே பாதை மாறிச் செல்லவேண்டும் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

சாலையை இருபிரிவாக நடுவே பிரித்து – போகும் வழித்தடங்கள் ஒருபுறமும், எதிர்வரும் வண்டித்தடங்கள் மறுபுறமும் எனப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புறத்திலும் நான்கு (ஜிக்ஷீணீநீளீs) தடங்களுக்கு குறையாமல் ஓடுகின்றன. இத்தடங்கள்தான் ஓடுகின்றனவா அல்லது இவற்றின் மீது வாகனங்கள் ஓடுகின்றனவா எனக் கணிக்க இயலாத வகையில் அங்கே எல்லாம் அசுர வேகம்தான்! லைஃப் லைன் எனும் உயிர்க்கோடு தாண்டாத ஒழுங்கு வேகம்தான்!

“நீறில்லா நெற்றி பாழ்”

என்பது நம் நாட்டுப் பழமொழி

“காரில்லா வாழ்வு வீண்”

என்பது அவர்களின் நடைமொழி!

அங்கேதான் எத்தனை வகைக் கார்கள்! சிறிதும் பெரிதுமாக ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்களுக்குத் தனியே நான்கைந்து கார்கள் உள்ளன. டிரைவர் வைத்துக் கொள்வதெல்லாம் அங்கே கட்டுப்படியாகாது. டிரைவர் சம்பளமே 1500 டாலர் தேவைப்படும். எனவே பிள்ளைகள், பெரியவர்கள் எல்லோருமே கார் ஓட்டப் பழகிக் கொள்கிறார்கள். அங்கு பயணம் போகிறவருக்குக் காரோட்டத் தெரிந்திருந்தால் மிகவும் நல்லது. நம் ஊரில் வாடகைச் சைக்கிள் எடுப்பது போல, ஓரிடத்தில் வாடகைக் கார் எடுத்துக்கொண்டு ஊர் சுற்றப் போய் விடலாம். வரைபடம் கையில் இருந்தால் போதும் ஊரை வலம் வந்துவிடலாம்.

அன்றாட வாழ்வில் சாதாரணத் தேவைகளுக் கெல்லாம் பிறர் கையை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் மனோபாவம் மிக மிகக்குறைவு. நம் ஊரில், எங்கேனும் வெளியிடப் பயணம் புறப்படுகையில் நம் மூட்டை முடிச்சுகளை லக்கேஜுகளை தூக்கி வரச் சுமையாள் தேடுகிறோமே, அப்படியெல்லாம் அங்கே ஆள் கிடையாது; கிடைத்தாலும் கூலி கொடுக்க முடியாது.

ஆள் தேட வேண்டாம்!

கூடுமானவரை அவரவர் காரியத்தை அவர்களே செய்துகொள்ள வேண்டும். தன் கையே தனக்கு உதவி என்பதே அங்கு தாரக மந்திரம். ‘வலிமையுடையோர் பிழைத்துக் கொள்வர்’ (ஷிuக்ஷீஸ்வீஸ்ணீறீ ஷீயீ tலீமீ திவீttமீst) என்பதே அங்கு வாழ்க்கை நெறி.

ஓர் உதாரணம் சொல்ல விரும்புகிறேன். நெடுஞ் சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் காருக்குப் பெட்ரோல் போட்டுக்கொள்ள வேண்டுமானால், நாமே உரிய இடத்தில் காரை நிறுத்திவிட்டுப் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் எந்திரம் கணக்கிட்டுக் காட்டும். உரிய தொகையைச் செலுத்திவிட்டுப் புறப்படலாம். பெட்ரோல் நிரப்பிவிட ஆளைக் கூப்பிட்டுவிட்டால் அந்தப் பணிக்காக அதிக கட்டணம் கட்டியாக வேண்டும். கார்களை நன்கு பராமரித்து வைத்துக் கொள்ளுகிறார்கள். ரிப்பேருக்காக அதிகம் செலவிடுவதில்லை. சரியாக ஓடாத காரைக் குப்பையில் தள்ளிவிட்டுப் புதுக்காரை வாங்கிக் கொள்ளுகிறார்கள்.

ரிப்பேரா? ஓரம்போ!

காரைப் பராமரித்துக் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும். அந்த நாட்டில் சாலையை, இவ்வளவு நீண்ட, பெரிய நெடுஞ்சாலையைப் பராமரித்து வரும் அழகை எளிதில் வருணித்துவிட முடியாது. அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் அங்கே நெடுஞ்சாலைகளையும் சுற்றுப்புறத்தையும் பராமரிக்கின்றனர்; பாதுகாக்கின்றனர். சாலையில் கார் பழுதாகி நின்றுவிட்டால் பிற வாகனங்களுக்கு எவ்வித இடையூறும்  இல்லாமல் அதை நான்காவது (ஓரமாயுள்ள) வழித்தடத்தில் நிறுத்தி விடுகிறார்கள். அதில் சமிக்ஞையை மாட்டிவிடுகிறார்கள். அப்படி நிறுத்திய பத்து நிமிடங்களுக்குள் (எப்படித்தான் விவரம் அறிந்து வருவார்களோ) அங்கு போலீஸ் வந்து விடுகிறது. உரிய உதவிகளுடன் காரை அப்புறப்படுத்தி விடுகிறார்கள். போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றிக் கண்காணிக்கிறார்கள். ஒருவரால் 5 நிமிடம் தடை ஏற்பட்டாலும் அது பலருக்குப் பல வகையில் பல மடங்கு தாமதத்தையும் நட்டத்தையும் ஏற்படுத்திவிடும் என்று கவனமாக இருக்கிறார்கள்.

இங்கும் அங்கும்

தனிநபர் சுதந்திரமும், சௌகரியமும் எந்த வகையிலும் பொதுநலனுக்காக ஊறாக அமையக் கூடாது. தனிநபர் சுதந்திரத்தை வெகுவாகப் போற்றி மதிக்கும் அமெரிக்கர்கள்- மிகை உணர்வுகளுக்கு முதலிடம் தந்துவரும் அமெரிக்க மக்கள் – பொது நலக் காப்பிலும் எவ்வளவு அக்கறையுடன் விழிப்புடன் உள்ளார்கள் என்பதை அங்குள்ள நெடுஞ்சாலைப் பயணங்களில் கண்டேன்.

தனது சுதந்திரத்தால் தன்னலத்தால் அடுத்தவருக்கு எந்த வகையிலும் சிறுஇடையூறுகூடச் செய்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையோடு நடந்து கொள்கிறார்கள். நம் ஊர்த் தெருக்களில் கார்களின் ஆரன் சத்தம் செவிப்பறைகளைக் கிழித்தெடுக்குமே, அப்படியெல்லாம் அங்கில்லை. என் காதில் ஆரன் சப்தமே கேட்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரும் சாலை விதிகளை மதித்து நடப்பதால் எல்லார்க்கும் வாழ்க்கை சுகமாக அமைகிறது.

வியப்பில் ஆழ்த்தியது

நான் சிங்கப்பூர் செல்லுகையில் அங்கும் சாலை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதைக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். சிங்கப்பூரில் பொது நலத்திற்கு ஊறு செய்யும் வகையில் சாலையில் குப்பையைப்  போட்டாலோ வண்டிகளைத் தடம் மாறி ஓட்டினாலோ கடுமையாகத் தண்டிக்கிறார்கள். அச்சமே அங்கு ஆசாரம். அந்த அச்சத்தால் அங்கே ஒழுங்குமுறை நிலை பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்காவில் அச்சத்திற்கு ஆட்பட்டு அடங்குவதை விட, பொறுப்பை உணர்ந்து அவரவர் ஒழுங்கை மதித்து நடக்கும் ஆக்கம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அமெரிக்காவின் உயர்வுக்கு இந்த உயர்பண்பும் காரணம் எனக் கருதினேன்.

விவேகானந்தர் பாதச் சுவட்டில்

Image result

மதுரையிலிருந்து புறப்படுமுன் – வழியனுப்பு விழாவில் விவேகானந்தர் விஜயம் பற்றிக் கேட்ட உரைகளின் நினைவுகள் – சிகாகோ நெருங்கும்போது என்னை வலம் வந்தன… சிகாகோ போய்ச் சேர்ந்தோம். நண்பர்கள் வீட்டு நல்லுபச்சாரங்களில் திக்கு முக்காடிப் போனோம்… என் நெஞ்சமெல்லாம் சிக்காகோ நகருக்கு. நம் விவேகானந்த சுவாமிகள் வந்து இந்து சமயம் பற்றிப் பேருரையாற்றிய அந்த வரலாறே வலம் வந்தது. அவர் எழுந்தருளிய, சொற்பொழிவு செய்த, பெருமைமிகு அரங்கிற்குக் கூட்டிச் சென்றார்கள். அவருடைய நினைவை மிகச்சிறப்பாக அங்கே போற்றி வரக் கேள்விப்பட்டு உவகை அடைந்தேன். விவேகானந்தர் பாதம் பட்ட இடத்தை வணங்கித் தொழுதேன். நானும் ஒரு நிமிடம் கண் மூடித் தியானித்தேன். நெஞ்சம் நெகிழ்ந்தது.

சுவாமி விவேகானந்தர் இந்து சமயப் பெருமையைப் பரப்ப இங்கே 1893-இல் வந்தார். அவர் அடிபற்றி இப்போது, திருக்குறளின் பெருமையைப் பரப்ப நானும் ஓர் எளிய வாய்ப்புப் பெற்று சிகாகோ வந்திருப்பதை நினைத்தும் என் நெஞ்சம் மகிழ்ந்தது.

“விவேகானந்த சுவாமிகள் எங்கே? நாம் எங்கே?” என மலைப்பும் அச்சமும் தோன்றினாலும் பேரருளாளரான விவேகானந்தரின் வீர வாசகங்கள் இப்போதும் “ஆகுக, ஆக்குக!” எனவும் “எழுமின் – விழிமின் – செயலாற்றுமின்” எனவும் அன்று போல் இன்றும் அறைகூவி அழைப்பது போலவே உணர்ந்தேன்.

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

     செல்லும்வா யெல்லாம் செயல்”      (33)

என்ற வள்ளுவர் வாசகம் உணர்ந்தேன். சிகாகோ நகரைச் சுற்றிப் பார்ப்பதை விட விவேகானந்தர் வருகை பற்றிய விவரங்கள் இங்கே எப்படிப் பேசப்படுகின்றன என்று அறிவதிலேயே ஆர்வம் கொண்டேன். கிடைத்த செய்திகள் சுவையானவை:

சிகாகோ சமயப் பேரவை 1893-இல் கூடியது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் திட்டத்தில் உலகக் கண்காட்சி, கொலம்பியன் பொருட்காட்சி என்றெல்லாம் அமைக்கப்பட்டன. மனித குலத்தின் செல்வப் பெருக்கை மட்டும் அல்லாமல், ‘மனித சிந்தனை’ எனும் நெடுவளத் துறையில் கண்டுள்ள முன்னேற்றமும் அப்பொருட்காட்சியில் எடுத்துக்காட்டப்பட்டன. அதன் ஒரு பகுதிதான் சமயப் பேரவை.

சமயப் பேரவைத் தலைவரான ஜான் ஹென்றி பர்ரோஸ் பாதிரியார் கிறித்தவ மதம்தான் உலகிலேயே உயரிய மதம் என்பதை நிரூபிக்கும் தோரணையில் ஆடம்பரமாகப் பேரவையைக் கூட்டினாராம். உலகெங்கும் இருந்து நூற்றுக்கணக்கான சமய, தத்துவவாதிகள் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டனராம். எல்லோரும் வந்து மேலைப் பெருமையைப் பார்த்து வாயடைத்துப் போக வேண்டும் என்பதுதான் அமைப்பாளர்களின் நோக்கமாம்.

உலகில் பரவியுள்ள யூதம், புத்தம், இஸ்லாம், இந்து, தாவோ, கன்பூசியம், ஷின்டோ, ஜராதுஷ்டிரம், கத்தோலிக்கம், புராட்டஸ்டண்ட் ஆகிய பத்து மதங்களின் பிரதிநிதிகளும் பேரவைக்கு வந்தனர்; உரையாற்றினர். பேரவை அரங்கிலேயே சிறப்பிடம் தந்து கௌரவிக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் உரையாற்ற அழைக்கப்பட்டார். ‘சகோதரிகளே! சகோதரர்களே!’ எனும் அவரது தொடக்கத்தைக் கேட்ட பேரவை உற்சாகப் புயலால் தாக்கப்பட்டாற்போல ஒருவகைப் புத்துணர்ச்சிக்கு உள்ளாயிற்று. உலகிலேயே மிக இளைய அமெரிக்க நாட்டிற்கு, உலகின் மிகப்பழைய நாட்டுத் துறவி வந்து கூறும் கருத்தை விருப்போடு கேட்கத் தயாராயிற்று.

“வெவ்வேறு இடங்களில் தோன்றும் நதிகள் எல்லாம் ஒரே கடலில் சென்று சங்கமம் ஆகின்றன. அதைப் போலப் பல்வேறு குணப்பாங்குடைய மனிதர்கள் பின்பற்றும் சமய வழிபாடும் ஓர் இறைவனையே சென்று அடைகின்றன…”

விவேகானந்தர் ஆற்றிய உரை – திருக்குறள் போல மிகமிகச் சுருக்கமானது. ரொமெயின் ரோலோ என்னும் பேரறிஞர் “தீச்சுடரைப் போன்றது அந்த உரை. ஏட்டுச் சுரைக்காய் போலப் போய்க் கொண்டிருந்த சொற்பொழிவு- களூடே விவேகானந்தர் உரை மட்டும், கேட்பவர்களின் இதயக்கனலை மூட்டிவிட்டது!” எனப் பாராட்டி உள்ளார்.

“ஒரு மதம் வெற்றியடைந்து பிறமதங்கள் அழிந்து போய்விடுவதன் மூலம் உலகில் சமய ஒற்றுமை உண்டாகிவிடும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. ஒவ்வொருவரும் மற்றவர் உணர்வுகளை ஏற்றுச் சீரணிப்பதோடு, தத்தமது தனித்தன்மையைப் பேணி, வளர்ச்சிக்கான தன் சொந்த மரபுகளின்படி உயர வேண்டும்.” என முத்தாய்ப்பு வைத்த அவரது ஆக்க உரை சகிப்புத் தன்மைக்கு உலக அங்கீகாரம் பெற்றுத்தந்தது. பாரதப் பண்பாட்டின் ஆக்கபூர்வமான அம்சங்களை உலகிற்கு அறிமுகம் செய்தது. உலகக்குடிமை உணர்வு, ஓர் உலக அரசு ஆகிய சிந்தனைகள் மலர வழிகோலியது! விவேகானந்த உரைக்கும், திருக்குறள் நெறிக்கும் உள்ள நெருங்கிய உடன்பாட்டைச் சிந்திக்க அப்பிரசுரங்கள் மிகவும் உதவின.

அங்கெல்லாம் வாழும் வள்ளுவம்!

டெய்ட்டன் நகர் சென்றடைந்தோம். நண்பர்களால் ‘நாணா’ என்று அழைக்கப்படும் திரு.பி.சி.எம். நாராயணனும், திரு.வெங்கடராமானுஜனும் அன்புள்ளத் தோடும் இன்முகத்தோடும் வரவேற்கக் காத்திருந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் எங்களது நெடிய பயணக் களைப்பெல்லாம் பறந்தோடிவிட்டன. பிராங்க்பர்ட்டில் விமானம் மாறிப்போன எங்களது லக்கேஜ் பத்திரமாக வந்து சேரும் நம்பிக்கையுடன் நண்பர்கள் வீட்டிற்குப் புறப்பட்டோம்.

நம்பிக்கை பழுதுபடவில்லை. மூன்று நாள் கழித்து எங்கள் பெட்டிகள் எல்லாம் பத்திரமாக, நாங்கள் தங்கி யிருந்த முகவரிக்கே வந்து சேர்ந்தன. அவை சரியாக வந்துவிட்டனவா என விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து அறிந்து கொண்டனர். அவர்கள் இவ்வகையில் காட்டிய அக்கறையும் பரிவும் எங்கள் நெஞ்சைத் தொட்டன. அவர்களது திறன்மிகு சேவைக்கெல்லாம் காரணமாய் இருப்பன. ஒன்றுகூடிப் பணிபுரியும் குழுமச் செயல்முறை அதற்கேற்ற புதிய நிர்வாகநெறி ஏற்பு  விரைந்து செயலாற்ற உதவும் நுட்பக் கருவிப் பயிற்சி; நேரம் போற்றிப்  பிறரை  மதித்து ஆரவாரம் இன்றிப் பணியாற்றும் கலைத் தேர்ச்சி – ஆகியனதான் என்பதை நண்பர்கள் எடுத்துச் சொன்னார்கள். சில விவரங்களைக் கேட்கச் சென்னை விமான நிலையத்தில் இரைந்து கத்திப் பேசியது போல இங்கு தேவைப்படவில்லை. பரிவோடு அமைதியாகக் கேட்டு, ‘இயலாது’ என்பதைக் கூட இங்கிதமாகத் தெரிவித்தார்கள்.

“இன்சொல் இனிதுஎன்றல் காண்பான் எவன்கொலோ

     வன்சொல் வழங்கு வது?”      (99)

என வள்ளுவர் நம் மொழியில் எழுதினார். ஆனால் அதனை நம்மைவிட, கிழக்கே ஜப்பானியரும், மேற்கே அமெரிக்கருமே போற்றி வாழுகின்றார்கள். வள்ளுவம் அங்கெல்லாம் வாழுகிறது! நன்றாக வாழுகிறது!

மாணவர் விடுதியா? நட்சத்திர ஓட்டலா?

ஒஹையோ பல்கலைக்கழக மாணவர் விடுதியில் நாங்கள் மூன்று நாட்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அது மாணவர் விடுதியாகவா தெரிந்தது? ஐந்து நட்சத்திர ஓட்டல் போல, அத்தனை வசதிகளுடன், அவ்வளவு எழிலுடன் விளங்கியது. அறிவியல் முன்னேற்ற வசதிகளை எல்லாம் அங்கே காணமுடிந்தது. அறைகளைத் திறக்கும் பூட்டு-சாவிகள் எல்லாமே கம்ப்யூட்டர் இணைப்பு உடையவை. இவ்வாறு மனிதர்களையும் இயந்திரங்களையும் கம்ப்யூட்டர் – மின்னணுப் பெட்டிகளே ஆள்கின்றன; ஆட்டிவைக்கின்றன. அவற்றின் செயல் நுட்பம் கூறும் நூல்களும் ஏடுகளுமே நடைபாதைக் கடைகள் வரை ஆக்ரமித்துள்ளன. மதிநுட்பம் நூலோடு உடையதாக மாணவப் பருவ முதலே அவர்கள் உயரப் பல நிலை ஆக்கம் அளிக்கின்றன. அப்பல்கலைக்கழக மாணவர்களிடமும் தனிமுத்திரை பொலியச் செய்திருந்தன.

“உங்களுக்கு இங்கே ஒரு நாள் முழு ஓய்வு! நாளை முதல் மாநாட்டு விருந்தினராகி விடுவீர்கள்….” என்றபடி நண்பர்கள் விடைபெற்றனர். “ஒரு நாள் முழு ஓய்வு” எனும் முதல் பகுதி தேனாக இனித்தது: “மறுநாள் மாநாடு” என்ற பிற்பகுதி ஏதோ ஒரு பாரத்தைச் சுமத்துவது போன்ற நிலைக்கு உள்ளாக்கியது.

டெய்ட்டன் நகர ஒஹையோ பல்கலைக்கழக அரங்கில் ஆண்டுதோறும் நிகழும் தமிழ் விழாவை, ஒரு வேள்வி போலவும், விரதம் போலவும் அங்குள்ள தமிழன்பர்கள் நடத்தி வருகின்றனர். டெய்ட்டனுக்குப் பல நூறு மைல்களுக்கு அப்பால் பணிபுரிபவர்கள் எல்லாம், இவ் விழாவினை ஒரு கைங்கரியமாக நடத்திட ஆண்டு தோறும் ஒன்று கூடி விடுகின்றனர். நான் பங்கேற்க அழைக்கப் பட்டிருந்த இது பதினான்காம் ஆண்டுவிழா. அதன் மூன்று நாள் கருத்தரங்கிற்குத் தமிழகத்திலிருந்து மூவர் அழைக்கப்பட்டிருந்தோம்.

மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர், பட்டிமன்ற நாவலர், சிரிப்புச் செல்வர் சாலமன் பாப்பையா அவர்களும், தமிழ்க் கவியரசு, புகழார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும், தமிழ்நாடு, திருக்குறள் பேரவைப் பொதுச் செயலரான நானுமே அம்மூவர்!

மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் கவியரசு வைரமுத்து பங்கேற்றார். பட்டிமன்ற நாயகர், பேராசிரியர் சாலமன் பாப்பையா முதல்நாள் அரங்கில் உரையாற்றினார். பயணத்தில் எனக்கு நேர்ந்த ஒருநாள் தாமதத்தால் நான் முதல்நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேராசிரியர் உரையைக் கேட்க இயலவில்லை. முன்னரே ஏற்பாடாகி யிருந்த மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் உடனே போய்விட்டார் என்று அறிந்தேன். மறுநாள் நிகழ்வில் நானும் கவியரசும் உரையாற்றினோம்.

என் உரை அமெரிக்கத் தமிழன்பர்களைப் பாராட்டுவதாக அமைந்தது அது எனக்கு மட்டும் அன்றி, விருந்தினராகச் செல்லும் எவருக்கும் இது இயல்பே ஆகும்.

“யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்

     சாந்துணையும் கல்லாத வாறு”  (397)

எனும் குறள் வழிக் கோட்பாட்டிற்கு இலக்கியமாய், முயற்சியே வாழ்வின் மூச்சாகக் கொண்ட அமெரிக்கத் தமிழர்களை மனதாரப் பாராட்டத் தொடங்கினேன். “கற்பவருக்குத் தமது சொந்த ஊரும் நாடும் போல, அவர்கள் சென்றிருந்து வாழும் தேசமும் சொந்தம் என ஏற்கப்படுவதே சிறப்பு. நீங்கள் இங்கே வந்து, இதனையே சொந்த நாடாக ஏற்று, இதன் வளத்திற்கும் மேம்பாட்டிற்கும் உங்கள் உழைப்பினை நல்கி வருகிறீர்கள். உங்கள் திறமையையும் ஞானத்தையும் வழங்கி இங்கு தலைமை பெற்றுத் திகழுகிறீர்கள். ‘என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு’ எனும் கேள்விக்கு இடமின்றி, வளரும் தொழில் நுட்பத்திறங்களை எல்லாம் உங்கள் இடையறா உழைப்பால் சாதனையாக்கிக் கொண்டுள்ளீர்கள். இந்த அனுபவக் கல்வியால் இன்று அமெரிக்க நாடு பயன்பெற்று வருவதைப் போல, நாளை நமது மண்ணும் நலம் பெற உதவி வருகிறீர்கள்.

‘எவ்வது உறைவது உலகம்’ என அறிந்து அதனோடு உறையும் ஈடுபாடே அனுபவக் கல்வி; இணக்கம் தரும் இந்த ஆக்கநெறிக் கல்வியால் நீங்கள் அனைத்திலும் ஆக்கம் பெற்றுத் திகழுகிறீர்கள். ‘உலகம் தழுவியது ஒட்பம்’ என வள்ளுவப் பெருந்தகை சொன்னது போல, இன்றைய உலகத் தேவையையும் சூழலையும் தழுவி நின்று, நட்பாக்கிக் கொண்டு, மலர்தலும் கூம்பலும் இல்லாத அறிவுத் திறத்தால் முதன்மையாக இந்த நாட்டிற்கு உங்களையும் உங்கள் உழைப்பினையும் அளித்து வருகிறீர்கள். நாடா வளமுடைய விரிந்த, மிகப்பரந்த நாடு இது என்றாலும், அதன் இன்றைய தேவைக்கு ஏற்ற பணிகளை நீங்கள் செய்து வருவதால் அரசும் மக்களும் மதிக்கும் பெருமைக்கு உரியவர்களாக விளங்குகிறீர்கள். செல்வச் சிறப்புடைய நாட்டமைவில் புற வளங்களை எல்லாம் நீங்கள் பழுதறப் பெற்று வசதியோடு வாழ்கிறீர்கள் என்றாலும், மேலைநாட்டாரைப் பொதுவாகப் பற்றியுள்ள ஒருவகை ஏக்கம், ஏதோ ஒரு தாகம் உங்களிடம் இருப்பது போல நான் உணர்கிறேன்.

புறநாகரிகத்தில் பெற்றுள்ள வளர்ச்சி, வசதி போல, உங்களது அகநாகரிகத்தில், பண்பாட்டுப் பின்னணியில், ஆன்மிக நாட்டத்தில், கலை நலத் தேட்டத்தில் எல்லாம் ஒரு முழுமை வேண்டுமென நாடி நிற்பது புலனாகிறது. அப்புலப்பாடே இம்மூன்று நாள் தமிழியல் விழாவினை நடத்த உங்களைத் தூண்டி வருகிறது எனக் கருதுகிறேன்.

திருக்குறள் உலகப் பொதுமறை, திருமால் விசுவரூபம் எடுத்து இம்மண்ணுலகை ஓரடியாலும், விண்ணுலகை மற்றொரு அடியாலும் அளந்தார் என்பது போல, வள்ளுவர் குறுகத் தரித்த குறளடிகளால், மாந்தரின் அக உலகை, உணர்வை எல்லாம் அளந்தறிந்து வழங்கியுள்ளார்.

எல்லா மனிதர்க்கும், எக்காலத்திற்கும் பொருந்துவன வாகிய, வாழ்க்கைத் தத்துவங்களைக் கொண்ட திருக்குறளை, அது பிறந்த மண்ணுக்கு உரியவர்கள் அடிக்கடி மறந்து போனாலும், பிற நாடுகளில் வாழ்பவர்கள் உச்சி மேல் வைத்துப் போற்றுகின்றனர்; இயன்ற வரை குறள் நெறிகளைப் பின்பற்றிப் பிறர் மதிக்கவும், வியக்கவும் வாழ்கின்றனர்.

இந்த நாட்டில் உள்ளோர் மதிக்கவும், இங்கே வந்து போகும் எங்களைப் போன்றோர் வியக்கவும் நீங்கள் வாழ்வதைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் கடின உழைப்பையும் இடையறா முயற்சியையும் நெஞ்சுவக்கப் பாராட்டுகிறேன். இந்த நாட்டு மக்களுக்கு இயல்பாகவே செல்வ ஆதாரங்கள் பெருகிக் கிடப்பதால், அவர்கள் ஓரளவு உழைத்தே அதிகம் சம்பாதித்து விடுகின்றனர். இங்கு வந்து வாழும் நீங்கள் ஓய்வு நேரத்தையும் குறைத்துக்கொண்டு அவர்களுக்குப் போட்டியாக ஓடிஓடி உழைக்கிறீர்கள் எனக் கேள்வியுற்றுச் சிந்தை அயர்ந்தேன். ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ எனும் வினாவுக்கு நீங்களே உரிய விடையாக விளங்கு கிறீர்கள். இந்த உழைப்பின் தரமும், திறமும் தாய்த் தமிழ்நாட்டவர்களுக்கும் பாடமாக அமையவேண்டும் என ஆசைப்படுகிறேன்.

மேற்கொண்ட துறை எதுவாயினும், தொழில் எதுவாயினும் அதிலெல்லாம் தலைமையும் பெருமையும் பெற்றுத் துலங்குகிறீர்கள். எங்களால் திருக்குறள் அறியப் படுவதைவிட, உங்களைப் போன்றோரால் அது செயல் வடிவில் பரப்பப்படுவது, நிலையான பெருமையினைப் பெற்றுத்தரும். செயலுக்கு வராத நூலால் பயனில்லை; செயலாக்கம் கொண்ட மக்கள் போற்றாத இலக்கியம் வளர்வதில்லை. போலியான – ஆசாரப் புகழ் – ஒரு நூலுக்கு நூற்றாண்டு வாழ்வைத் தரமாட்டாது.

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ எனப் பாரதியார் பாடினார். முதன்முதலாகத் திருக்குறளை, மேலைய உலகிற்கு வழங்கி அறிமுகப்படுத்தும் பணியைக் கூட நாம் செய்யவில்லை. தமிழ் உணர்வறிந்த மேலை நாட்டறிஞர்கள் எடுத்துச் சொன்ன பின்னரே திருக்குறள் பல மொழிகளில் உலகறியத் தொடங்கியது.

பயணத்தின் பாதையில்…

‘பாண்டிய’னில் வழி அனுப்புகை

 

Image result for thirukural manimozhian

தமிழ்நாடு அறக்கட்டளையினர் தாய்த்தமிழகத்துடன் உறவுபூணும் வகையில் ஆண்டுதோறும் அங்கு விழா எடுக்கின்றனர். இங்குள்ள நண்பர்களை வரவழைத்து தாம் மகிழ்ந்து, மகிழ்விக்கின்றனர். அறக்கட்டளையின் 14-ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, ‘வான்புகழ் வள்ளுவம்’ பற்றி உரையாற்றுமாறு நான் அழைக்கப் பட்டிருந்தேன்.

தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு திருக்குறள் பேரவையின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், புதுப்பொறுப்பேற்ற சமயத்தில் இந்த அழைப்பும் வந்தது. எனவே எப்படி இதை மறுக்க முடியும்? மேலும் ‘உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையம்’ எனும் ஓர் அமைப்பினை மதுரையில் நிறுவி அதனைப் பதிவு செய்யும் விரிவாக்கப் பணிகளுக்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்த தருணத்தில் இந்த அழைப்பு வந்துள்ளது. எப்படி இதனைத் தவிர்க்க இயலும்?

மறுக்கவோ, தவிர்க்கவோ முடியாத வண்ணம் அமெரிக்க நண்பர்களின் கடிதங்கள் அணிவகுத்து வந்தன. சிகாகோவிலிருந்து போற்றுதற்கு உரிய நண்பர்கள் திரு.பி.சி.எம்.ஜி. நாராயணன், திரு.வெங்கடராமானுஜம், தொழிலதிபர் பழனிபெரியசாமி, தலைவர் பி.மோகனன், செயலாளர் தி.ராஜேந்திரன் ஆகியோர் எழுதிய மடல்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்தின. அமெரிக்கப் பயணத்தோடு, கனடா, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் ஆகியவற்றுக்கும் பயணம் செய்வதற்காக விரிவாகத் திட்டமிடும் பொறுப்பினை என் மனைவி கமலா ஏற்றுக்கொண்டாள்.

என் துணைவி கமலாவிற்கு நிறையப் பயண அனுபவங்கள் உண்டு. ரோட்டரி மாதர் கழகத் தலைமை ஏற்பு, மேனிலைப்பள்ளி நிர்வாகப் பொறுப்பு, சேவை அமைப்புகளின் தொடர்பு ஆகியவற்றில் பெற்ற பயிற்சிகள் எல்லாம், கமலா கை தொடும் எதனையும் கலையாக்கித் தந்துவிடும்.

விசா வந்துவிட்டது, டிக்கட்டுகள் ஏற்படாகிவிட்டன. 25.5.89-ஆம் நாள் மதுரையிலிருந்து பாண்டியன் ரயிலில் புறப்பட வேண்டும். அன்று அதிகாலையில் குன்றக்குடி பிரசாதம் வீட்டு வாயிலுக்கு மங்கலம் சேர்க்க வந்து பொலிந்தது. திருக்குறள் பேரவைத் தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் பயணத்தை ஆசீர்வதித்து அருட்பிரசாதத்தை அன்பர் மூலம் அனுப்பியிருந்தார்.

வடலூர் வள்ளலாருக்குப் பின்னர் தமிழகம் கண்ட பேரருள் பெருந்தகை ஆகிய குன்றக்குடி அடிகளார் மனித நேயச் சிந்தனையால் ஏற்படுத்திய அமைப்புகள் இரண்டுள. ஒன்று திருவருள் பேரவை; மற்றொன்று திருக்குறள் பேரவை.

அரசியல், பொருளாதாரச் சமுதாயப் பிரச்சினைகளுக்கு திருக்குறள் நெறியில் தீர்வுகாண முயன்றுவரும் இயக்கம் திருக்குறள் பேரவை. உயர்ந்த சிந்தனைகளும் சீரிய கோட்பாடுகளும் செறிந்து கிடக்கும் இந்த நாட்டில் அவை முறையே செயலுக்கு வராமல் போனதால், வறுமையும் அறியாமையும் இங்கு குடியேறிக் கொண்டன. இந்த அவலத்தை அகற்றிப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் சமத்துவ சமுதாய வழி பேணிட அமைந்ததே திருக்குறள் பேரவை.

உலகெல்லாம் உவந்தேற்றும் தமிழ் மாமுனிவரின் வாழ்த்து எங்கள் தமிழ்ப் பயணத்தின் ஆதார சுருதியாக அந்த வினாடியே இசை மீட்டியது. மதுரை ஆலயங்களில் இருந்து பிரசாதங்களை அன்புச் சகோதரர்கள் கொணர்ந்தனர்; மதுரை திருவள்ளுவர் கழகப் பெரியவர்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.

அன்று மாலை – டவுன்ஹால் ரோடு வள்ளுவர் அரங்கில் – வழியனுப்பு விழா ஒன்றினை அன்புப் பெரியவர்கள் பாரதி ஆ.ரத்தினம், அய்யணன் அம்பலம், பேராசிரியர் குழந்தைநாதன், பெரும்புலவர் செல்வக் கணபதி, திரு.நாகராஜன் ஆகியோர் விரைந்து ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது உரையாற்றிய பெருமக்கள் விவேகானந்த சுவாமியின் ஆன்மிகப் பயணம் வழிகாட்டிட எனது திருக்குறள் பயணம் பயனுற அமைய வேண்டும் என வாழ்த்தினர்.

அன்று மாலை மதுரை ரயில் நிலையத்தில் வழி அனுப்ப வந்த அன்பர்கள் எங்களைத் திக்குமுக்காடச் செய்துவிட்டனர். மலைபோல் மாலைகள் குவிந்தன. பிளாட்பாரத்தை விழா மேடையாக்கிக் கவிமாலைகள் சாற்றத் தொடங்கிவிட்டனர். இவை எல்லாம் திருக்குறளுக்குச் செய்யும் பெருமை எனவே கருதிப் பணிவுணர்வுடன் ஏற்றுக்கொண்டேன். வண்டி புறப்படுகையில் பெட்டியின் வாயிலில் நின்றபடி கண்ணீர் மல்கக் கையசைத்து விடைபெற்ற என் காதில் விழுந்த அன்பர், நண்பர் திரு.ஆ.ரத்தினம் அவர்கள் வாழ்த்துரை… “பாண்டியனில் வழியனுப்புகிறோம். அன்று பாண்டிய நாட்டு சேதுபதி மன்னரால் வழி அனுப்பப்பட்ட விவேகானந்தரைப் போல- திருக்குறள் தூதுவராகச் சென்று வருக! வென்று வருக!” என அவர் எழுப்பிய வீர முழக்கம் பிளாட்பார எல்லை முடியும் வரை எதிரொலித்தது. வண்டியில் அமர்ந்ததும் வழியனுப்பு விழாவில் ஆற்றிய உரைகள் என் நினைவில் படர்ந்தன.

Image result for vivekananda

“1893-இல் அமெரிக்கா நாட்டு சிக்காகோவில் கூடிய உலக சமயப் பேரவைக்கு இந்தியத் தூதுவராக இளம் துறவி சுவாமி விவேகானந்தர் சென்றிடக் கணிசமாக நிதியுதவி செய்தவர் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி… பாண்டி நாட்டுச் சேதுபதி மன்னர் அவரை அன்று அனுப்பினார்; இன்று இந்தப் பாண்டியன் வண்டியில் உங்களைப் பயணமாக்கி வழியனுப்பி உள்ளார்கள்; நீங்களும் சிகாகோ போகிறீர்கள். அதுதான் இதில் உள்ள பாண்டியப் பொருத்தம்” என்றார் அருகில் இருந்த நண்பர். இந்த 1893- நம் வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. காந்தியடிகள் தென்னாப்பிரிக்கப் பணிக்குப் புறப்பட்ட ஆண்டு, விவேகானந்தர் சுவாமிகள் ஆன்மிகப் பயணமாக வழியனுப்பப்பட்ட ஆண்டு, சிறந்த ஆன்மிகச் செல்வர் அரவிந்தர் தாயகம் வந்து சேர்ந்த ஆண்டு எல்லாம் இந்த 1893 தான்.

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் தொண்டு புரிந்த ஆண்டுகளில் அமெரிக்க நாட்டுச் சமகாலச் சிந்தனை யாளரான ஹென்றி டேவிட் தோரோவின் கருத்துக்களால் மிகவும் கவரப்பட்டார். காந்தி அடிகள் ஒருமுறையாவது அமெரிக்காவிற்கு வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அடியெடுத்து வைக்கும் பாக்கியம் அமெரிக்க மண்ணுக்குக் கடைசிவரை கிடைக்காமலே போய்விட்டது. என்றாலும் அதற்கு முன்னரே விவேகானந்தர் அங்கு நிகழ்த்திய வீர முழக்கம் இன்றும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

இதனை நினைவூட்டி சிக்காகோ நண்பர்கள் எழுதிய கடிதங்கள் பசுமை நினைவுகளாக என்னை ஆட்கொண்டிருந்தன.

அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட பாரதத்தில் கனன்று வந்த புரட்சித் தீக்கங்குகள் வங்காளத்தில்தான் அடிக்கடி சுவாலையாக எரிந்து உயர்ந்தன. அரசியல், ஆன்மிகம், கலை ஆகிய முத்துறையிலும் அங்கே மறுமலர்ச்சி ஓடைகள் சங்கமித்து வந்தன. அந்தச் சங்கமச் சூழலில் அவதரித்தார் நரேந்திரன் (1863). காலனி ஆதிக்கத்தோடு கைகோத்து வந்த மேலை கலாச்சாரக் காட்டாறு வங்கத்தில் ஓடிச் சுரந்த தொன்மைப் பண்புகளை அடியோடு அடித்துச் செல்ல முற்படுவதைக் கண்டு இளமையிலேயே அவர் பொங்கி எழுந்தார். கல்கத்தா கல்லூரியில் சட்டம் பயிலச் சேர்ந்து கலைக் களஞ்சிய ஞானம் பெற்றுவந்த இளைஞரை – புனிதர் பரமஹம்சரின் புன்னகை எப்படியோ ஆட்கொண்டு விட்டது. 1881-இல் பரமஹம்சரின் பாதம் பணிந்து பரம சீடராக ஆகிவிட்ட நரேந்திரன் தவயோகியாகவும், வேதவிற்பன்னராகவும் மாறியது பாரதம் கண்ட ஆன்மிக இரசவாதம். விவேகானந்தர் என இளமையிலேயே ஏற்கப்பட்ட இந்த ஞானசீலர், பரமஹம்சரின் சமாதிக்குப் பின் இராம கிருஷ்ண இயக்கத்தை நிலைநிறுத்தி பாரதம் முழுவதும் பாத யாத்திரை செய்தார். உலக நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்து மானிட ஒற்றுமையையும் சகிப்புத்தன்மை யையும், இந்தத் திருநாட்டின் செய்தியாகத் தூதுரைக்க முற்பட்டார். இச்சமயத்தில்தான் – அமெரிக்க நாட்டு சிக்காகோ நகரில் கூட இருந்த உலக சமயப் பேரவையில் () உரையாற்றிட அழைக்கப்பட்டார்.

1893-முப்பதே வயதான சுவாமி விவேகானந்தர் பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு வந்திருந்தார். மைலாப்பூர் கடற்கரை அருகே தங்கி, அற்புதமான ஆங்கிலப் பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். முற்போக்கு இளைஞர்கள் அவரை மொய்த்துச் சூழ்ந்தனர். முதன்முதலாக தமக்கென ஒரு சீடர்குழுவை உருவாக்கும் பெருமையைச் சென்னைக்குப் பெற்றுத்தந்தார்.

சிக்காகோ சமயப் பேரவைக்குத் தம்மை அழைத்துள்ளார்கள் என சுவாமி விவேகானந்தர் இச்சீடர் குழுவிடம் தெரிவித்துள்ளார். அடுத்த வினாடியே அதற்கான நிதியைத் திரட்டிவிட இளைஞர்கள் புறப்பட்டுவிட்டனர். ஏழை-எளியவர்கள் நல்கிய காணிக்கைகள் எல்லாம் சேர்ந்து மொத்தம் ரூபாய் மூவாயிரம் வரை திரண்டன. இராமநாத புரம் சேதுபதி மன்னர் ரூ.500 நல்கினார். பாண்டிய நாட்டுப் பயண முடிவில் குமரிக் கடலில் தீர்த்தமாடிவிட்டு விவேகானந்தர் சிக்காகோ பயணத்தை மேற்கொண்டார்.

Image result for gandiji

தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் தொடங்கிய அறப்போரின் முதல் தொண்டர்களாக விளங்கிய பெருமை தில்லையாடி வள்ளியம்மை போன்ற தமிழர்களுக்கே கிட்டியது. விவேகானந்தர் ஞான விளக்கேந்திப் புறப்பட்ட பயணத்திற்கு முத்தாய்ப்பு வைக்கும் பெருமையும் தமிழகத்துக்கே கிட்டியது.

இந்தப் பெருமை தமிழ் மண்ணோடு கலந்துவரும் பாரம்பரியம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப் பூங்குன்றச் சங்கநாதம், உலகுக்கென ஒரு நூலை – திருக்குறளை – அளித்த அழியாத மரபுவழிக் கொடைத் திறம், பாரதி ஆ.ரத்தினம், பேராசிரியர் குழந்தைநாதன் ஆகியோர் கூறிய இக்கருத்துக்கள் மீண்டும் மீண்டும் என்னை வலம் வந்தன.

விவேகானந்தர் இந்தியத் திருநாட்டின் வேதாந்த வித்தகத்தை மேலைச் சீமைக்கு ஏந்திச் சென்றார். ‘சகோதர, சகோதரிகளே’ எனும் முதல் தொடக்கத்தினாலேயே அவையோரைக் கவர்ந்தார். மிக மிக எளியவனான எனக்கு இப்போது விவேகானந்தரைத் தடம் பற்றிச் செல்லும் வாய்ப்பும் கிட்டியுள்ளது. “உலகம் ஒரு குலம்” என ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அதுவும் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டாமலேயே இத்தரணியின் உறவு எல்லையை வரையறுத்துக் கண்ட வள்ளுவச் செல்வத்தை அக்கரைச் சீமையில் மறுபடி நினைவூட்டிச் சொல்ல நான் புறப்பட்டிருக்கிறேன்.

விவேகானந்தர் எங்கே! நான் எங்கே!

எனினும் எனக்குள்ளே இனம்புரியாத அச்சம் கலந்த ஓர் உற்சாகம்! அந்த உற்சாகத்தைத் தந்தது யார்?

வள்ளுவர் தான்.

‘அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

 பெருமை முயற்சி தரும்”      (611)

எனும் ‘ஆள்வினை உடைமை’ முதல் குறள் என்னைப் பாண்டியனில் ஏற்றிவிட்டது. பயணம் தொடர்ந்தது.

அமெரிக்கப் பயணம்

ஒரு நினைவோட்டம்

Image result for USA

என் திருக்குறள் பயணம், உலகப் புகழ் பெற்ற மிகப்பெரிய நாட்டினை நோக்கித் தொடங்க இருந்தது. அமெரிக்க நாட்டைப் பற்றி நான் ஏற்கெனவே அறிந்தவை, படித்தவை எல்லாம் ஒருபுறம் இருக்க, பல புதிய செய்திகளை அறிந்துகொள்ள மனம் துருவியது. அமெரிக்காவில் தொடர்புடைய, அங்கு போய் வந்த அன்பர்களிடமெல்லாம் அவசரத் தொடர்பு கொண்டேன். பயணம் போகும் புது இடத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதுதானே பயணத்திற்கு உரிய முதல்நிலை ஏற்பாடு?

அமெரிக்கத் தொடர்போடு இங்கு வாழும் அன்பர்களில் பலர் அமெரிக்க மக்களின் வாழ்வுப் போக்கில் தாம் கண்ட சாதாரணக் குறைகளையே பட்டியலிட்டுச் சொன்னார்கள். எதையும் அனுமதித்து ஏற்கும் அச்சமுதாய இயல்புகள் , பழக்கவழக்கங்கள், இன உணர்வுகள், ஊழல்கள், அரசியல் தில்லுமுல்லுகள், மதுவிலக்கு, சூதாட்டம், லாட்டரி விளைவுகள், தன் நாட்டு வளர்ச்சிக்காகப் பிறநாட்டுச் சுரண்டலையே நோக்காகக் கொண்ட தொழில் வர்த்தக நிறுவனங்கள்… இவற்றையெல்லாம் விலா வாரியாகச் சொல்லி அச்சமும் அயர்வும் ஏற்படச் செய்தார்கள். என்றாலும் அந்த அதிசய நாட்டின் ஈடிணையற்ற ஜனநாயக உயிரோட்டத்தையும், ‘இப்படியெல்லாம் அமெரிக்காவில்தான் நடக்கும்’ என்ற அபிமான உணர்வோட்டத்தையும் சுட்டிக் காட்டவும் தவறவில்லை. “ ‘அமெரிக்காவைப் பார்’ என உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே.செட்டியார் அன்று எழுதிய புத்தகத்தையும் ‘சோமலெ’ எழுதிய பயணக் கட்டுரைகளையும் படித்துவிடுமாறு நண்பர் ஒருவர் சிபாரிசு செய்தார்.

தொழில், வாணிபப் பயணமாகப் போனால் லாபநட்டக் கணக்கோடு நான் ஆயத்தமாக வேண்டியது அவசியம். ஆனால் நான் மேற்கொள்ளப் போவதோ தமிழ்ப் பயணம். அதிலும் குறிப்பாக, திருக்குறள் பயணம். எனக்கு இவ்விரண்டின் நிலைபேறு பற்றிய முன்னறிவு கொஞ்சமாவது வேண்டும் எனக் கருதினேன்.

அமெரிக்காவில் வாழும் தமிழர்களைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தேன். ஆனால் அமெரிக்காவில் தமிழ் எப்படி வாழுகிறது என அறிவதல்லவா முக்கியம்?

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையோடு தொடர்பு கொண்டேன். டாக்டர் தமிழண்ணல், பேராசிரியர் சு.குழந்தைநாதன் தொகுத்து எழுதிய ‘உலகத் தமிழ்’ நூல் பற்றிய பல விவரங்களை நான் பெற முடிந்தது… தமிழ் அரிச்சுவடிப் பாடம் கற்பிப்பதைவிட பட்டப்படிப்பு வரை பயில அங்கு அளிக்கப்படும் வசதி வாய்ப்புக்களையும், தமிழ் மன்ற நடவடிக்கைகளையும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆசிய மொழி, இலக்கியத்துறை எனும் தனிப்பிரிவே அங்கு உள்ளது.

அமெரிக்காவில் இப்போது தமிழ், தெலுங்கு எனும் இரு திராவிட மொழிகளில் மட்டுமே பாடங்கள் தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வருகின்றன. கன்னடமும், மலையாளமும் அவ்வப்போது கற்பிக்கப்படுகின்றன. வாஷிங்டனிலும், சிக்காகோ பல்கலைக்கழகத்திலும் கன்னடம் கற்பிக்கப் படுகின்றது. பென்சில்வேனியாவில் மலையாளம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. வாஷிங்டன், பென்சில்வேனியா, விஸ்கோன்சின், மிக்ஸிகன், கலிபோர்னியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. டெக்சாஸ் கோர்வல் பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு நேரும்போது நடக்கின்றன. விஸ்கோன்சின், டெக்சாஸ் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் பென்சில்வேனியாவில் ஒழுங்காகவும் கற்பிக்கப்படும் மொழிப் பாடங்கள் முழுமையான பாடத் திட்டத்துடன் நடத்தப்படுகின்றன. அதாவது, தெரிந்தெடுத்துக் கொள்ளப்படும் மொழியின் இலக்கியம் அல்லது மொழியியலில்  எம்.ஏ.யும், பி.எச்.டி.யும் பெறும் அளவிற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுப் பயிற்சியும் தனித்துறை ஆய்வும் அளிக்கப்படுகின்றன.

பிற கல்வி நிறுவனங்கள் இலக்கிய ஆய்வுகளில் மிகுதியும் ஈடுபட்டு இருப்பதால் பென்சில்வேனியா, வாஷிங்டன் பல்கலைக்கழகங்கள் திராவிட மொழியியலில் சிறப்புப் பயிற்சிகளை அளிக்கின்றன. கோர்வல் டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மொழியியலில் மிகுந்த நாட்டம் உண்டு; ஆனால் விஸ்கோன்சின், கலிபோர்னியா கழகத்தவர்களுக்கு இலக்கிய ஆய்வுகளிலேயே ஆர்வம் மிகுதி. சிகாகோவில் இரண்டுக்குமே ஆக்கம் தரப்படுகின்றது.

இயல்பாகப் பாட வகுப்புகளை வழக்கமாக நடத்தி வரும் பல்கலைக்கழகங்களில் தொடக்கநிலை வகுப்புகளில் ஆறு மாணவர்கள் வரை சேருவர். மேல்வகுப்புகளில் இந்த எண்ணிக்கை குறைவது உண்டு. வாஷிங்டன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவின் தொடக்க நிலையில், மூன்று மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் மொழியியல், தொல்பொருள் ஆய்வு முதலிய இதர துறைகளில் மேல்நிலை ஆய்வு செய்யும் பட்ட வகுப்பு மாணவர்களும் உள்ளனர். மொழியியல், இலக்கியம் மட்டுமன்றி, தென்னிந்திய வரலாறு, சமயம், இசை, நுண்கலை, அரசியல், திணையியல் முதலிய இதர துறைகளில் ஆர்வம் உள்ளோரும் வாஷிங்டன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவில் சேர்ந்திருப்பர். இவர்கள், தமிழை ஓரளவு கற்ற பின்னர்த் தமக்குப் பிடித்தமான துறையில் பட்டம் பெறத் தகுதியுறுவர்”.

பல்கலைக்கழகங்கள், பள்ளிகளை விட, அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் தன்னார்வத் தமிழ்ச் சங்கங்களும் அமைப்புகளும் ஒன்றுகூடி, தமிழ் இலக்கிய வேள்வி நடத்தி வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் சிக்காகோவில் உள்ள தமிழ்நாடு அறக்கட்டளை  17 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் இதழ் நடத்தி, தமிழர் உள்ளங்களையும், இல்லங்களையும் ஒரு சரமாக இணைத்து ஒப்பற்ற ஆக்கப்பணி புரிந்து வருகின்றது. சென்னையில் ஒரு கிளையினை நிறுவும் வகையில் உயர்ந்து நிற்கும் தமிழ்த்தொண்டர் அமைப்பு இது. திரு.மோகனன், இளங்கோவன், டாக்டர் ரெஜி ஜான், டாக்டர் சவரிமுத்து, கண்ணப்பன், டாக்டர் பி.ஜி.பெரியசாமி, திருமதி. வெங்கடேஸ்வரி சுப்ரமணியம் முதலிய தமிழ் நெஞ்சங்கள், அமெரிக்க நாட்டில் வாழும் தமிழ்க் குடும்பங்களுக்கும் தாயகத்திற்கும் உறவுப் பாலங்களைக் கட்டி வருகின்றன. அமெரிக்கத் தமிழர்கள் பொங்கல் உள்ளிட்ட தமிழ் விழாக்களையும், தீபாவளி, நவராத்திரி முதலிய பண்டிகைகளையும் கூடிக் கொண்டாடி நமது பண்பாட்டுக் கோலங்களைத் தூவி வருகின்றனர். இக்கோல வடிவங்களையெல்லாம் கண்டு மகிழும் பயணமாக என் திருக்குறள் உலா தொடங்கியது. தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அருள் ஆசியுடன் அன்பர்கள் அணி திரண்டு நல்கிடும் வழியனுப்புதலுடன் மதுரையிலிருந்து புறப்பட ஆயத்தமானேன்.

பயணப் பரபரப்பு

பயணம் போவதென்றால் யாருக்கும் ஒருவகை பரபரப்பு உணர்வு ஏற்பட்டே தீரும். பள்ளிப் பருவத்துக் கல்விப் பயணமானாலும் சரி, பிள்ளைப் பருவத்து இன்பச் சுற்றுலா ஆயினும் சரி, பின்னைப் பருவத்துக் குடும்ப சமூக நிகழ்ச்சிப் பயணம் ஆயினும் சரி – வெளியூர் போவதென்றாலே மனமும் பொழுதும் வேகமாக ஓடத் தொடங்கிவிடும். சொந்த வாகன வசதி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, போக வேண்டிய பயணம் பற்றிய சிந்தனை மனதை அரிக்கத் தொடங்கிவிடும். அதிலும் தொலை தூரப் பயணம் என்றால் கேட்கவே வேண்டாம். பலமுறை போய்வந்த நாடாக இருந்தாலும் கூட, பரபரப்பையும் மீறியதொரு பதைபதைப்பையும் உண்டாக்கியே தீரும்.

எனக்கும் அப்படித்தான்! பல வெளிநாடுகளுக்கு முன்னர் போய்வந்த அனுபவம் இருந்தும் இந்தத் திருக்குறள் பயணம் நெடிய எதிர்பார்ப்புகளை என்னுள் உருவாக்குவது போன்ற பிரமை ஏற்பட்டுவிட்டது. “அவை, பயணங்கள் அல்ல; பல்கலைக்கழகங்கள்” என எங்கேயோ படித்த வாசகம் – எனக்குள்ளே வலம் வந்து – இந்தப் பயணத்தைப் பல்கலைக்கழகமாக்கத் திட்டமிடும் தீர்மானத்தை முன்மொழிந்து கொண்டிருந்தது. அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளைப் பற்றிய விவரங்களைப் போதுமான அளவுக்கு திரட்டிக் கொள்ளத் தூண்டிவிட்டது. நண்பர்கள், அன்பர்களின் பெயர்ப் பட்டியலை, முகவரியை எல்லாம் தேடி எடுத்துக்கொள்ள நேரம் போதவில்லை எனும் நெருக்கடி ஏற்பட்டது.

Image result for bharathiyar

 

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என மகாகவி அன்றே பாடினான். தமிழ்நாடு வான்புகழ் பெற்றிட வையகத்துக்கு எல்லாம் வள்ளுவச் செல்வத்தை வழங்கினாலே போதும் என்பது அவனது கணிப்பு. உலகினுக்கு வள்ளுவத்தை நல்கும் பணியில் தமிழ்நாட்டு மக்கள் ஊன்றி நின்றிருக்க வேண்டும். விழா எடுக்கும் போது மட்டும் ஊர்கூட்டி முழக்கமிட்டுவிட்டு, அப்புறம் அயர்ந்து போய்விடுவதுதான் நம் வழக்கம். ஆனால், அயல்நாடுகளில் வாழும் தமிழ் அன்பர்கள் தாமும் அயர்வதில்லை. நம்மையும் அயரவிடுவதில்லை! அதிலும், அமெரிக்கத் தமிழர்களின் ஆர்வம் – அங்குள்ள ‘எம்பயர் கட்டிடம்’ போல் உயர்ந்தது; இங்குள்ள இமயம் போல் ஓங்கி நிற்பது.

வட அமெரிக்காவில் உள்ள டெய்டன் – ஆகாய விமானம் கட்டும் தொழில் சிறந்த பெரும் நகரம். விமான வடிவமைப்பு, கட்டுமானம், கணிப்பொறி நுட்பம் ஆகிய துறைகளில் நம் நாட்டவர்கள் பலர் அங்கு பொறுப்பேற்றுள்ளமை நமக்குப் பெருமை தரும் விஷயம். அவர்களில் கணிசமான அளவு தமிழ்நாட்டவர்களும் உள்ளனர்.

மேல்நாட்டுத் தமிழர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடிட உறவுப்பாலம் அமைப்பன தமிழ்… தமிழ்ப் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ்க் கலைகள்… – இந்நான்கையும் சால்புடைய தூண்களாக்கிக் கொண்டு, அமெரிக்கத் தமிழன்பர்கள் அறக்கட்டளையே அங்கு நிறுவிவிட்டனர்.

தமிழ்நாடு(ம்) அறக்கட்டளை

 

‘தமிழ்நாடு அறக்கட்டளை’ எனும் கூட்டமைப்பு அமெரிக்கத் தமிழ் அன்பர்களின் சேவைத் திறத்திற்கு எடுத்துக்காட்டானதொரு மணிமகுடம். அமெரிக்கப் பெருநாட்டின் கிழக்கு மேற்குக் கரையோர நகரங்களிலும் உள்நாட்டுப் பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கில் பாரதத் திருநாட்டினர் பரவி வாழ்கின்றனர். இவர்களுள் தமிழ்நாட்டவர் அங்கும் இங்குமாகச் சிதறி இருக்கின்றனர். இவர்களையெல்லாம் ஒரு சரமாக இணைத்துக் காணும்- இசைவித்துப் பேணும் முயற்சிகள் ஆண்டாண்டுகளாக அரும்பு கட்டி வந்துள்ளன.

1974-இல் தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு அறக்கட்டளை’ நல்ல அடித்தளத்தோடும், நயந்தரு ஆக்கத்திட்டத்தோடும் பணியாற்றி வருகிறது. சிக்காகோ முதலிய நகர்களில் தமிழ்ச் சங்கங்கள் உண்டு என்றாலும் அனைத்தையும் ஒருங்கே இணைத்துப் பார்க்க ஏற்றதொரு பொது அமைப்பு தேவைப்பட்டது. அந்த நெடிய தேவையை நிறைவு செய்ய ஊன்றப்பட்ட தமிழ்நாடு அறக்கட்டளைக்கு முக்கியமான நகரங்களில் எல்லாம் கிளைகள் உண்டு. சர்வதேசச் சுழற்கழகம், அரிமா சங்கம் என்பன போல, அன்புத் தோழமையும், மனித நேயத் தொண்டையும் இரு கால்கள் எனக் கொண்டு தமிழ்நாடு அறக்கட்டளையும் நடைபோட்டு வந்தது.

தமிழ்நாடு அறக்கட்டளையின் முதன்மை நோக்கம் அமெரிக்காவில் வாழும் தமிழர்களிடையே நெருக்கமான உறவினை ஏற்படுத்துவது; இந்த உறவினை வலுப்படுத்தும் புத்தாண்டு, பொங்கல், நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் விழாக்களை நடத்தி விருந்தயர்வது; அனைத்துச் சமயத்தவர்க்கும் பொது வீடாக – நல்லிணக்க மன்றமாக- அறக்கட்டளையை நிர்வகிப்பது; பல குடும்பங்களை ஒன்றாகக் கூட்டிக்கொண்டு சிறு சுற்றுலாப் போவது; நிலா விருந்து பரிமாறிக்கொள்வது; போட்டிப் பந்தயங்கள் நடத்துவது; நமது கலாச்சாரத்தைப் பிறர் புரிந்து பாராட்ட வாழ்ந்து காட்டுவது.

“அயல்நாடு எதுவாயினும் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் தமக்குள்ளே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு வகைச் சுயநலம் சார்ந்த தற்காப்பு சங்க(ம)ம்தான் இது! இதில் என்ன புதுமை இருக்கிறது?” என்று கேட்க அமெரிக்க நாட்டுத் தமிழ் அறக்கட்டளையினர் வாய்ப்பு அளிக்கவில்லை.

அறக்கட்டளையின் விழுமிய நோக்கம் தாயகத்துத் தமிழ் மக்களுக்குத் தன்னால் ஆன உயர் கொடைகளை நல்க முற்படுவது. அமெரிக்கத் தமிழர்களிடையே நிதி திரட்டி, அதனைக் கொண்டு தமிழ்நாட்டில் விழுமிய சேவைத் திட்டத்தைச் செயலாக்குவதே அதன் புறவடிவம். அங்கு நிதி தொகுக்கவும் இங்கு அது குடை கவிக்கவும் போதிய ஆக்கம் தரக்கூடிய சான்றோர்கள், அறங்காவலர் களாகப் பொறுப்பேற்றனர். டாக்டர் ஜி.பழனிபெரிய சாமி, டாக்டர் இளங்கோவன், சி.கே.மோகனன், டாக்டர் சவரிமுத்து, டாக்டர் ஜானகிராமன், டாக்டர் கோவிந்தன், டாக்டர் நல்லதம்பி, திரு.துக்காராம், டாக்டர் பி.அமரன், திருமதி வெங்டேசுவரி, திரு.ரவிசங்கர், திரு.ஏ.எம்.ராஜேந்திரன், திரு டி.சிவசைலம், டாக்டர் சி.எஸ்.சுந்தரம், டாக்டர் ஆனந்தகிருஷ்ணன், டாக்டர் பொன்னப்பன் என நாள்தோறும் திரண்டுவரும் தொண்டர் அணியினர் அமெரிக்காவில் அறம் வளர்க்கும் நாயகர்களாக விளங்கு கின்றார்கள்.

தமிழ்நாட்டில் ஆயிரம்ஆயிரம் பேர் பயன்பெற விழுதூன்றப் போகும் ஆலமரக் கன்றுகளைப் பேணும் பொறுப்பேற்க உவந்து இசைந்த சான்றோர் வரிசையும் பெரிது; அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம்  நீதியரசர் வேணுகோபால், அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எம்.அனந்தகிருஷ்ணன், திரு.சந்திரன்… அமெரிக்கத் தமிழன்பர்களது அறக்கட்டளைகள் பல வகை; சிறிதும் பெரிதுமாக எண்ணற்றவை; தனி நபர் உதவியாகவும் பலர் சேர்ந்து வழங்கும் கொடையாகவும் நூற்றுக் கணக்கானவை. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல்லார் பெயரால் பரிசுக் கட்டளைகள், தமிழ்நாட்டில் பள்ளிக் கட்டிட நிதிகள், ஆன்மீக, ஆசிரம தர்மங்கள், மருத்துவ மனைக் கொடைகள், ஈழத் தமிழர் வாழ்வு நலன்கள் என்றெல்லாம் வாரி வழங்கி வருபவை.

Image result for thirukural manimozhian

ஆனால் தமிழ்நாடு அறக்கட்டளை இந்த எல்லைகளையும் தாண்டியது. என்றும் பயன்தரும் வேலைத் திட்டங்களை தமிழ்நாட்டில் செயலாக்கும் கருத்துடையது. அவற்றுள் முக்கியமானது; சென்னையில் பல லட்சம் டாலர் செலவீட்டில் உருவாகிவரும் தொழில் நுட்பக் கேந்திரம் எனும் தொழில் நுட்பப் பரிமாற்றப் பயிற்சி மையத்தைச் சென்னையில் நிறுவுவது. இது தமிழ்நாட்டு இளைஞர்கள் அமெரிக்காவில் நாள்தோறும் வளர்ந்துவரும் புதுப்புதுத் தொழில் நுட்பங்களை எல்லாம் அறிந்து கொள்ள வாயில்களைத் திறந்து வைக்கும். நிகரான அறிவியல் சிந்தனைகள் இங்கும் சமகாலச் சாதனையாகப் பாத்தி கட்டும். இது எளிய காரியம் இல்லை. பலரது மகத்தான கூட்டு முயற்சியால் மட்டுமே இதனைச் சாதிக்க முடியும்.

சாதனைப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ள பேரமைப்பினர் விடுத்துள்ள அழைப்பினை ஏற்பது எத்தகைய பெருமை? அந்தப் பெருமையை எனக்குத் திருக்குறள் அல்லவா பெற்றுத் தந்துவிட்டது!

திருக்குறள் பயணம்

 

Image result for thirukural manimozhian

“ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும்

     பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் & போய் ஒருத்தர்

     வாய்க்கேட்க நூலுளவோ…?”

என்று திருக்குறளுக்குப் புகழஞ்சலியாக விளங்கும் திருவள்ளுவ மாலையைத் தொகுத்துள்ள நத்தத்தனார் பாடினார். இப்பாடலைப் படித்த போதெல்லாம் இளமைப் பருவத்திலேயே என் மனத்தில் கேள்வி ஒன்று எழுந்தது. “1330 அருங்குறளையும் மனப்பாடம் போலப் படித்துவிட முடியுமா?” எனும் அக்கேள்விக்கு, “ஏன் முடியாது? முயன்று தான் பார்ப்போமே!” எனும் உறுதி பிறந்தது. நான் வளர்ந்த காரைக்குடிக் கம்பன் கழகமும் திருக்குறள் மன்றமும் தமிழ் உணர்வூட்டிய கல்விச்சூழல் அந்த உறுதிக்கு மேலும் உரம் ஊட்டியது. வாரம் ஓர் அதிகாரம் என எனக்குள் எல்லை கட்டிக்கொண்டு குறள் கருத்துக்களை என் நினைவுத் தவிசில் ஏற்றுக்கொள்ள முயன்றேன். தங்கத்தின் தரத்தை உரை கல்லில் தேய்த்து மாற்றுப் பார்ப்பதைப் போல, வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் திருக்குறளை உரைகல்லாகக் கொள்ளமுடியும் எனத் தெளிவு பெற்று வந்தேன். யார், எந்தக் கருத்தைச் சொல்லக் கேட்டாலும் இதனை வள்ளுவர் எப்படிச் சொல்லியிருக்கிறார் எனத் தேடி துருவத் தலைப்பட்டேன். குறட்பாக்களின் அருமையும் பெருமையும் ஆழமும் விரிவும் என்னை மேலும் மேலும் கருத்தூன்றிப் படிக்கத் தூண்டின. ஒரு நூலிலாவது நல்ல பயன் தரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற என் ஆசைக்கு ஓர் அளவுகோலாகக் குறட்பாக்கள் அமைந்துவந்தன. வாழ்வின் புதிய அனுபவங் களுக்கு உட்பட்ட போதெல்லாம், வற்றாச் சுரங்கமாகவும் வழிகாட்டும் வான் விளக்காகவும் எனக்குக் குறள் நெறிகள் விளங்கத் தொடங்கின. இயன்ற வகையில் எல்லாம், தனிமுறையிலும் பொது வகையிலும் குறள்நெறிச் சீலங்களைப் பரப்பி வாழவேண்டும் எனும் உணர்வினை நாள்தோறும் என்னுள் புதுக்கி வந்தன.

தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் பல்லாண்டுகள் இயங்கி வரும் தமிழ்நாடு திருக்குறள் பேரவையின் (பொதுச் செயலர்) பொறுப்பேற்ற நாள்தொட்டு வாழும் வாழ்க்கைக்கும் காலத்திற்கும் பொருந்தும் வகையில் குறள் நெறிகளைப் பரப்ப வேண்டும் எனும் நோக்கத்தினைச் செயல்படுத்த முற்பட்டோம். ‘செய்க பொருளை’ எனும் சிந்தனைத் தலைப்பில், அறிஞர், அறிவியலாளர், தொழில் அதிபர், இளைஞர் முதலிய பல்வகைச் சமுதாயப் பிரிவினரையும் கருத்தரங்கேறச் செய்தோம். அக்கருத்தரங்கு புதிய புதிய செயல் திட்டங் களுக்கு வருக எனக் கைகாட்டி அழைக்கக் கண்டோம். முன்னோடித் திட்டமாக, ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, ஒருங்கிணைந்த வள்ளுவர் நெறி வளர்ச்சியை அங்கு நடைமுறையாக்க முற்பட்டோம்.

Image result for thirukural manimozhian

உலகத் தமிழ் மாநாட்டு நினைவாக, தமிழ்நாட்டின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆய்வுக்கான நிதிக்கட்டளை ஒன்று அரசு சார்பில் ஏற்கனவே நிறுவப்பட்டு, திருக்குறள் ஆராய்ச்சித் துறைகள் இயங்கி வந்தன. என்றாலும் உலகளாவிய வண்ணம், பிற நாடுகளில் வாழும் தமிழ் மக்களோடு தொடர்பு கொள்ளும் வகையில் ‘உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையம்’ ஒன்றினை, திருக்குறள் அரங்கேறிய சங்கத் தமிழ் மதுரையில் நிறுவ வேண்டும் எனும் தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கனவினை நனவாக்கும் காலம் கனிந்தது. மதுரையில் பன்னாட்டுத் திருக்குறள் ஆராய்ச்சி மைய அறக் கட்டளையினை நிறுவப் பதிவு செய்தோம். இதனைக் கேள்வியுற்ற அமெரிக்கத் தமிழ் அன்பர்கள், அங்கு சிக்காகோவில் ஆண்டுதோறும் நிகழும் மாநாட்டிற்கு வருமாறு சிக்காகோ திரு.பி.ஜி.எம். நாராயணன், திரு.வெங்கட்ட ராமானுஜம் ஆகியோர் எனக்கு அழைப்பு விடுத்தனர். மதுரையில் திரு.பன்னீர் செல்வம், திருமதி. லதா பன்னீர்செல்வம் (மகாத்மா மாண்டிசோரி) இருவரின் முயற்சியும் தூண்டுதலும் என்னை ஊக்குவித்தன.

தொழில் காரணமாகவும் சுற்றுலா விழைவு காரணமாகவும் ஏற்கனவே பல நாடுகளுக்குச் சென்று வரும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தேன். எனினும் இந்தத் திருக்குறள் பயண அழைப்பு முற்றிலும் புதுமையாகத் தோன்றியது. நாடு கடந்து வாழும் தமிழர்களின் தாய் நாட்டுப் பற்றையும் மொழி உணர்வையும் நேரில் அறியும் சந்தர்ப்பங்களையும் தருவதாக இது அமைந்தது.

பயணம் செல்வது இனியதொரு வாழ்க்கை அனுபவம். எத்தகைய உணர்வோடும் அறிவு நாட்டத்தோடும் பயணம் புறப்படுகிறோமோ, அவ்வுணர்வையும் நாட்டத்தையும் மேலும் அதிகமாகப் பெற்றுத் திரும்பச் செய்யும் பயன்மிகு முயற்சி; கையில் உள்ள பணத்தைச் செலவிட்டு, மூளைக்குள்ளே புதுப்புதுச் செய்திகளை அடக்கிக் கொண்டு வரும் வாழ்க்கை வாலிபம்; ஒவ்வொரு ரோஜாச் செடியிலும் முள் இருக்கிறது எனத் தெரிந்திருந்தும் அதனூடே மலர்ந்திருக்கும் பூவிலிருந்து தேனை மட்டும் மாந்தி வரும் தேனீயின் உழைப்புப் போன்றதொரு செயல்திறம்; சரக்கு மூட்டைகளை வண்டியில் ஏற்றிச் செல்வது போலப் போய்வராமல், உணர்வாக்கம் கொண்டதொரு பகுத்தறிவோடு ஊர் சுற்றிவரச் செய்யும் கலைத்திறன்; நமது வீடு, நாடு எனும் குறுகிய வரையறைக்குள் இருந்து பழகிப் போனவர்களின் பார்வையினை, ‘பெரிதே உலகம், பேணுநர் பலரே!’ எனும் எல்லைக்கு விரிவுறச் செய்யும் இரசவாதம்; எப்பொருள் எத்தன்மையதாயினும் அப் பொருளை மெய்ப்பொருளாக நேரடியாகக் காணச்செய்யும் அறிவுத் தேட்டம்…

வரலாற்றிலும் இலக்கியத்திலும் பல நாடுகாண் காதைகள் அரங்கேறியுள்ளன; சமய அனுசாரமும், வாணிப ஆதாயமும் பல ஊர்காண் காதைகளை உருவாக்கியுள்ளன. ஒவ்வொரு மனிதனின் தேவைக்கும் உரிய வகையில் பல்வேறு வகையான பயணங்கள் அன்றாட வாழ்வில் நிகழ்ந்தேறியே வருகின்றன.

என் வாழ்வெல்லாம், மனமெல்லாம் ஆட்கொண்ட ஒரே நூலாகத் திகழும் திருக்குறள் வழியாக இப்பயண வாய்ப்பினை வெளிநாட்டுத் தமிழன்பர்கள் எனக்கு அளித்தனர். எனவே ஒரு நாட்டுப் பயணமாக மட்டும் இந்த வாய்ப்பினைக் குறுக்கிக் கொள்ளாமல், பல நாட்டுப் பயணமாக விரித்து அந்த அழைப்பினைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளத் தீர்மானித்தேன். மேற்கு நாடுகள் சிலவற்றில் வாழும் என் இனிய நண்பர்களுக்கு என் வருகை பற்றி, திருக்குறள் பயணம் பற்றி எழுதினேன்.

Image result for thiruvalluvar painting

தமிழ் மக்கள் உலகின் பல நாடுகளில் உரிமைபெற்ற குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்திய மொழிகளில், உலகெல்லாம் பரவிய சிறப்புக்கு உரியதாகத் தமிழ்மொழி திகழ்கிறது. ஓரிரு நாடுகளில் ஆட்சி மொழியாகவும் பெருமை பெற்று விளங்குகிறது. பல்வேறு நாடுகளில் பன்னெடுங்காலமாகக் குடியேறி வாழும் நம் மக்களைத் தமது சொந்த நாட்டோடும் புராதனப் பண்பாட்டோடும் உறவுக் கயிறு அறுந்து போகாமல் இணைத்து வைக்கும் பாலமாகத் தமிழ் மொழியே விளங்குகிறது.

ஆனால் அண்மைக் காலங்களில் இந்த உறவுக் கயிறு வலுவிழந்தும் இணைப்புப் பாலம் செயல் இழந்தும் போகக்கூடிய அரசியல், மற்றும் சமூக வாழ்க்கை நெருக்கடிகள் ஆங்காங்கு ஏற்பட்டன. எனவேதான், உலகத் தமிழ் மாநாடு கூட்டி உரமேற்றும் முயற்சிகளும் தாய்நாட்டு அன்பர்களைத் தம்மிடத்திற்கு வரவழைத்து உறவேற்கும் மலர்ச்சிகளும் அணிவகுத்து வருகின்றன.

தேமதுரத் தமிழோசையினை உலகின் பல நாடு களிலும் செவிமடுத்துக் கேட்கும் விழாக்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. உலகப் பொதுமறையாகத் திருக்குறளை நிலைப்படுத்தும் ஆக்கங்களும் அரும்பு கட்டி வருகின்றன.

எப்பாலவரும் ஏற்கும் சிறப்புடையது முப்பாலாக அமைந்த திருக்குறள். அறம் பொருள் இன்பம் எனும் இம்முப்பால் பாகுபாடு, அனைத்து மக்களுக்கும் உரிய அடிப்படை வாழ்க்கைப் படி முறையாக சங்க இலக்கியம் தொட்டே வரன்முறைப்படுத்தப்பட்டு அமைந்தது.

“அந்நில மருங்கின் அறமுத லாகிய

     மும்முதற் பொருட்கும் உரிய என்ப”

எனத் தொல்காப்பியமும்,

“அறம் பொருள் இன்பம் என்று அம்மூன்றும்”

எனக் கலித்தொகையும்,

“அறமும் பொருளும் இன்பமும் மூன்றும்

     ஆற்றும் பெரும நின் செல்வம்”

எனப் புறநானூறும்,

“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

     தீதின்றி வந்த பொருள்”        (754)

எனத் திருக்குறளும், முப்பால் மரபினை முழுதுலகிற்கும் பொதுவாக அறிவித்துள்ளன.

அறம் பொருள் இன்பம் எனும் முத்துறைகள் பற்றியும் முழுமையான, முதன்மையான அறங்களைச் செவ்வனே வகுத்துச் சொல்லும் ஒரே நூலாக, ஒரே ஆசானால் எழுதப்பட்ட ஈடற்ற சிந்தனை நூலாக, செயல் நூலாகத் திருக்குறள் மட்டுமே போற்றப்படுகிறது. மறு உலக அச்சம் காட்டியோ, ஆசை காட்டியோ ஒழுக்கங்களை வற்புறுத்தாமல், இவ்வுலக வாழ்வின் உண்மை, நன்மை ஆகியவற்றை மட்டுமே கருதி, தனிநபர், சமுதாய நடைமுறைகளை வரன்முறைப்படுத்தும் வாழ்க்கை நூலாகத் திருக்குறள் மட்டுமே நிலைபெற்று விளங்குகிறது. எனவே சுவையான கரும்பு தின்னக் கூலியும் கிடைத்ததைப் போல் கருதி எனக்குக் கிட்டிய திருக்குறள் பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டேன்.

திருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்றி நாம் வாழும் காலத்திற்கும் பொருத்தமாகச் சமுதாயச் சிக்கலுக்கு அறவியல் தீர்வு காண்கின்றார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கும், துன்பம், கவலை நீங்கி இன்பம் இடையறாது பெறுவதற்கும் அமைதியும் முழுமையும் நிறைவும் பெறவும் வள்ளுவம் வழிகாட்டுகிறது.

“யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்

     சாந்துணையும் கல்லாத வாறு.”  (397)

எனும் குறட்பா உலகோர் அனைவருக்கும் பொது நிலையறம் புகட்டுகிறது.

 

 

குறள் நிலா முற்றம் – 15

 

நிறைவுப் பகுதி

குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி

எளிய அன்பர்

ஆடி அசைந்தபடி – பின்னால் இருப்போரை மறைத்திருப்பவரிடம் – “ஐயா… உங்களைத் தானே? கொஞ்சம் அசையாமல் ஒரே நிலையில் உட்கார முடியாதா? உங்க முதுகுதான் தெரியுது…”

(அவர் சற்று சினத்தோடு திரும்பியபடி)

அவர்

“இப்ப என்னய்யா கெட்டுப்போச்சு? திரைப்படமா ஓடுது? நான் ஆடி அசைந்தால் உனக்கு என்னய்யா? நீயும் அதுக்கேற்றபடி நகர்ந்து கொண்டு, கேட்க வேண்டியது தானே?”

இன்னொருவர்

“புலவர் ஐயாதான் இப்படிப் பேசுறீங்களா? பெரியவங்களுக்குக் கோபம் இப்படி வரலாமா? அவர் ஏதும் தவறாகப் பேசிவிடவில்லையே? தனக்கு மறைக்கிறது என்று தானே சொன்னார்?”

புலவர்

“புலவர்னா – கோபமே படக்கூடாதா? நாங்க என்ன உணர்ச்சியில்லாத மரக்கட்டைகளா? நான் ஆடி அசைகிறேங்கிறாரு… என்னை யானைங்கிறாரா?”

முதலாமவர்

“நான் யானைன்னு சொல்லவில்லை ஐயா! நந்தி போல் மறைக்கிறீர்கள் எனச் சொல்ல நினைத்தேன். அதற்குமுன் இவ்வளவு கோபப்பட்டு விட்டீர்களே! இவ்வளவு சினமும் சீற்றமும்… சாதாரணக் காரியத்திற்கு வரலாமா?”

புலவர்

“நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடக்கும் போது – உன்னைப் போல ஆள் இடையே புகுந்து, விதண்டாவாதம் செய்தால் வெகுளி வராதா – ஐயா நீங்களே சொல்லுங்க.”

ஒருங்கிணைப்பாளர்

“அங்கே என்ன… வெகுளாமையைப் பற்றிய விவாதமா?”

முதலாமவர்

“ஆமாம் செம்மல் ஐயா! கொஞ்சம் அசையாமல் அமர்ந்து இருங்கள் என்றேன் – புலவருக்குக் கோபம் பொத்துக் கொண்டது. இதையே அந்த சப் கலெக்டர் ஐயா சொல்லி யிருந்தால், புலவர் பேசாமல் இருந்திருப்பார்; நான் எளிமையானவன் என்று ஏறி மேயப் பார்க்கிறார்…”

செம்மல்

“செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்; அல்இடத்துக் காக்கின் என், காவாக்கால் என்?” என சினத்தைத்தான் வள்ளுவர் கேட்டார். உயர் காவல்துறை அதிகாரியிடமோ பெரிய பதவி வகிப்போரிடமோ கோபத்தைக் காட்ட முடியுமா? நம் வீட்டில் மனைவி, மக்கள், ஏவலரிடம் காட்ட முடியும். அதைத்தான் ‘சினம் செல்லும் இடம்’ என்கிறார் வள்ளுவர். அத்தகையோரிடம் சினம் கொள்ளாமல் இருப்பதுதான் உண்மையிலேயே வெகுளாமை என்கிறார்.”

அரசு அதிகாரி

“செல்ல இயலாத இடத்தைவிட, செல்லும் இடத்தில் சினம் கொள்ளுவது தீது என்றார் வள்ளுவர்.”

 

புலவர்

“‘சுருக்குக; செல்லா இடத்தும் சினம்’ – என நான்மணிக்கடிகையும் சொல்லியிருக்கிறதே?”

செம்மல்

“‘வெகுளியை யார்மாட்டும் மறத்தல் வேண்டும்’ என்கிறார் வள்ளுவர். ஏனெனில் – தீய பிறத்தல் அதனால் வருமாம்!”

அரசு அதிகாரி

“அதாவது – நாமெல்லாம் ஜிமீனீஜீமீக்ஷீ-ஐ அதாவது வெகுளியை விட்டுவிட வேண்டும். அது சாத்தியமா? ஜிமீனீஜீமீக்ஷீ உடைய முறுக்குக் கம்பிக்குத்தான் கட்டிடத்தைத் தாங்கும் வலிமை அதிகம். அதுபோல, நமக்கும் அவ்வப் போது ஜிமீனீஜீமீக்ஷீ  என்கிற கோபம் வர வேண்டும்.”

இன்னொருவர்

“அது  வந்தவுடன் போயும் விட வேண்டும்… (சிரிப்பு) புலவர் ஐயாவின் ஜிமீனீஜீமீக்ஷீ கொஞ்சம் குறைந்து விட்டது!”

கல்லூரி மாணவி

“ஐயா… புலவர் போலக் குணம் ஏறி நின்றார்க்குக் கோபம் வரலாமா? விசுவாமித்திரர் போலப் புராணகால முனிவர்கள் எல்லாம் கோபத்தால் சாபம் இட்டுப் பட்ட துயர்களை எல்லாம் படித்திருக்கிறோம்.”

செம்மல்

“குணம் எனும் குன்றேறி நின்றார் வெகுளி கொள்வது எல்லாக் காலத்தும் தீமை தருவது எனக் கருதக் கூடாது. அவர்களுக்கும் தகாதன நடக்கக் கண்டால் சினம் வரும். ஆனால் அந்த வெகுளி எனும் வெஞ்சினம் ஒரு கணமே நீடிக்கும்; அந்த நேர அளவே நீடிக்கவும் வேண்டும். இல்லாவிடில் அதுவே சேர்ந்தாரையெல்லாம் கொன்று விடும்.”

அரசு அதிகாரி

“திருக்குறள் செம்மலின் விளக்கம் குழப்பமாய்  இருக்கிறதே?”

செம்மல்

“குணம் எனும் குன்றேறியோர் இயல்பான சூழலில் நியாயமாகச் சினம் கொள்ளக்கூடாது. ஆயினும், தவிர்க்க முடியாத சூழலில் அவர்களுக்கும் வெகுளி ஏற்படுவது மனித இயல்பு. அத்தகைய சான்றோர் தன்னலம் காரணமாகச் சினம் கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் சினம் கொள்வதும் பொதுநலன் கருதியதாகவே, சமுதாயச் சீர்கேட்டிற்கு எதிரானதாகவே இருக்கும். இராமபிரான் சினந்தார்; இயேசு பிரான் சினந்தார்.”

வருவாய்த் துறை உயர் அதிகாரி

“அண்ணல் காந்தி, பிரதமர் நேரு, வின்ஸ்டன் சர்ச்சில், ராஜாஜி, தந்தை பெரியார், மகாகவி பாரதி போன்றோர் வெளிப்படுத்திய வெகுளிக்கெல்லாம் சமுதாய நலனே காரணம்.”

வளனரசு

“அருமையான பட்டியலைத் தந்தார்கள்… ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது…’ என்ற நாட்டு வழக்கும் நம் நினைவுக்கு வருகிறதே…”

ஓரன்பர்

“சாதுக்கள் மிரளுவதெல்லாம் இப்போது சர்வ சாதாரணம்.”

செம்மல்

“வள்ளுவர் சாதுக்கள் எனச் சொல்ல வில்லை. அவர் குணம் எனும் குன்றேறி நிற்கவல்ல சான்றோரையே குறிப்பிடுகிறார். அத்தகைய ஏந்திய கொள்கையார் சீற்றம் கொண்டால், ‘இடைமுறிந்து வேந்தனும் வெந்து கெடும்’ என்றல்லவா எச்சரிக்கிறார். எனவே, வீட்டில் பெரியவர்கள், சமுதாயத்தில் சான்றோர் ஆகியோர் சினம் கொண்டால், அது ஒரு சறுக்கலையோ, வழுக்கலையோ சீராக்கிடவே எனக் கருத வேண்டும்.

நம் பாஞ்சாலி சபதத்திலேயே ஒரு காட்சி. பாஞ்சாலியைத் தாயமுருட்டிச் சூதில் தோற்றுப் பாண்டவர்கள் பரிதாபமாக நின்ற கோலத்தை ‘நெட்டை மரங்கள் போல’ நின்றார்கள் எனப் பாரதியார் ஆத்திரப்படுவதை நினைவூட்டுகிறார். அப்போது பாஞ்சாலி கொண்ட சினத்தால்தான் – அவர் போட்ட சபதத்தால்தான் பாரதப் போரே மூண்டது.”

அரசு அதிகாரி

“எங்கள் வீட்டில் எனக்கும் மனைவிக்கும் இடையே தினமும் பாரதப் போர்தான் போங்கள்!” (சிரிப்பு)

இன்னொருவர்

“அது நாங்கள் பார்க்க முடியாத போராக அல்லவா இருக்கும். அதை விடுங்கள்…”

மாணவி

“வள்ளுவர் ஓரிடத்தில் சினமே கொள்ளாதே எனச் சொல்லிவிட்டு – ஏந்திய கொள்கை யராயிருந்தால் அவர்கள் கோபப் படலாம் என்பது ஒரு முரணாகத் தோன்றவில்லையா?”

செம்மல்

“இதில் முரண் ஏதும் இல்லை.

‘சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு

 நிலத்துஅறைந்தான் கைபிழை யாதற்று..’    (307)

வீணாகச் சினமே கொண்டால் – தரையிலே தானே அடித்துக் கொண்டு, கை வலிக்கிறதே என்ற கதை போன்றது, அது வீண் சினம்; வெற்றுப் புலம்பல்.

வள்ளுவர் கூறுவது – அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரையும் பொறுக்க வல்ல- சான்றோரும் கூடச்சில சமயங்களில் கோபம் கொண்டே ஆக வேண்டும். அப்போது தான், சமுதாயத்திலும், குடும்பத்திலும் மக்கள் திருந்துவார்கள். அத்தகைய சினம் – ஆக்கச் சினம்.”

ஒருவர்

“எங்கள் வீட்டில் என் துணைவியார்தான் அடிக்கடி கோபப்படுகிறார்.”

இன்னொருவர்

“மனைவியை இங்கு வந்தும் விடமாட்டார் போலிருக்கிறதே! (சிரிப்பு)

அதற்குக் காரணம் – நீராகவும் இருக்கக்கூடும். நீவிர் சரிதான் என்றால் – வீட்டு அம்மாவை – ஒரு மனோதத்துவ டாக்டரிடம் கூட்டிச் செல்லும். உங்கள் உறவில் புதிய தத்துவம் பிறக்கும்.” (சிரிப்பு)

வருவாய்த் துறை அதிகாரி

“தம்பதியரிடையே உருவாகும் சினம். ஒரே நாளில் சமரசம் ஆகிவிட வேண்டும். இல்லை என்றால்… விரசம்தான்…”

செம்மல்

“நாம் அந்த விரசத்திற்கெல்லாம் போக வேண்டாம்… நம் மதுரையிலே அன்று நடந்ததை நினைப்போம். சிலப்பதிகாரக் காட்சி இது. மறுவாழ்வு தேடி மதுரைக்கு வந்த கண்ணகி, கணவன் கொலையுண்டு இறந்திடக் கையறு நிலையள் ஆனாள்… அப்போது…

புலவர்

“‘சான்றோரும் உண்டு கொல், சான்றோரும் உண்டு கொல்’ எனக் கேட்டாள்.”

செம்மல்

“அதைத்தான் நானும் குறள் செய்தியாகக் குறிப்பிட விரும்புகிறேன். தக்க சான்றோர்கள் தலையிட்டிருந்தால் தனக்கு இந்த அவலம் நேரிட்டிருக்க மாட்டாதே எனக் கதறுகிறாள். கண்ணகி அன்று கேட்டதைப் போல, இன்றும் கேட்கக்கூடிய நிலையில், வாழ்க்கைப் பாதையில் ஓரம் கட்டப்பட்டவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அவர்களது துயர் தீர்க்க – சினம் கொள்ளக்கூடிய அளவு- செல்லக் கூடிய – பொதுநல நாட்டமுடைய – சான்றோர்கள் நம்மிடையே வேண்டும்.”

பேராசிரியர்

“சமுதாயத் தொண்டர்களுக்கு – போர்க்குணம் வேண்டும். பிரெஞ்சுப் புரட்சியை அன்று தூண்டிடச் சினங்கொண்ட வால்டேர், ரூசோ போன்றவர்கள் – இக்காலத்தில் வேண்டும் என்கிறார் செம்மல்… ஆனால் அவர் மட்டும் சினம் கொண்டதை நாம் யாரும் கண்டதில்லை…” (சிரிப்பு)

செம்மல்

“சினம் என்பதிலும் இருகூறு உண்டு. சான்றோராயினும் ஆட்சித் தலைவராயினும் – சமூக எதிரிகளைச் சினத்தோடுதான் அணுக வேண்டும்; அகற்றவும் வேண்டும்.

‘ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தால் வரும்’ என்பார் வள்ளுவர். சமுதாயத்திற்குக் கேடு செய்வோரை அழித்தலும், சமுதாய நலனால் மகிழ்வோரை உருவாக்குதலும் எண்ணினால், தவத்தால் வரும் என்கிறார்.”

ஒருவர்

“ஐயா! புராண காலத்திலே – தவம் செய்த முனிவர்கள் கோபம் கொண்டதிலே ஒரு நியாயம் -நிவாரணம் இருந்தது. ஆனால், இப்போதெல்லாம், தவசிகளே தடுமாறு கிறார்களே… போலித் தவசிகள் புகுந்து விட்டார்களே…”

செம்மல்

“அதனால் தான் வள்ளுவர்,

‘தவமும் தவம்உடையார்க்கு ஆகும்; அவம்அதனை

     அஃதுஇலார் மேற்கொள் வது’  (262)

எனச் சட்டம் போட்டுத் தடுத்துவிட்டார். சமுதாய ஒழுக்க நெறியைப் பழிப்பது போல, தம் வாழ்வில் சீர்கேடாக நடந்து கொள்வது தவம் இல்லை; அது ‘அவம்’ – சமுதாயக் கேடான பாவம் என்கிறார்.”

புலவர்

“தவம் செய்வார் தம் கருமம் செய்வார்..”

பேராசிரியர்

“உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை..”

செம்மல்

“தவத்தின் ஆற்றலாலும், ஒழுக்கத்தாலும் ஓங்கி நிற்கும் சான்றோர் தரும் வரமே… வாழ்வு… அத்தகையோரை வாழ்த்தி வணங்குவதே வாழ்க்கைப் பேறு.”

ஒருவர்

“இதுதாங்க.. இன்றைக்கு அவசியமான அறிவுரை; அறிவுடைமை!”

செம்மல்

“‘அறிவுடைமை’ என்ற அருமையான சொல்லை அன்பர் இப்போது குறிப்பிட்டுள்ளார். நம் நான்காம் அமர்வு நிலா முற்றம் நிறைவு பெற்று, உதய வேளை காணும் சமயத்தே இந்த அறிவொளிக் கேள்வி எழுந்துள்ளது.”

அரசியல் அன்பர்

“எங்கள் பொதுவுடைமை போன்ற சித்தாந்தங் களுக்கெல்லாம் அடித்தளமானது அறிவுடைமைத் தத்துவங்கள். வள்ளுவர் அறிவைத் தனிமனித சாதனையாகவும் சொல்கிறார்; சமுதாய வளர்ச்சியில் பாதையாகவும் விளக்குகிறார். எனவே இந்த அறிவுடைமைச் சிந்தனை யோடு குறள் நிலா முற்றம் விடியலைக் காணட்டுமே என்பது இங்குள்ள அன்பர்கள் கருத்து.”

பேராசிரியர்

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”- என்பதற்கே ஒரு தனி ஆய்வரங்கம் நடத்தலாமே!

உதவி ஆணையர்

“அந்த மெய்ப்பொருளையும் நம் திருக்குறள் செம்மல் வழியாக, இப்போதைக்குக் கேட்போமே…!”

செம்மல்

“கல்வி, கேள்வி, அறிவுடைமை பற்றியெல்லாம் வள்ளுவர் அன்றே வரையறுத்த செய்திகள், இன்றுள்ள உலகப் பல்கலைக்கழகக் கல்வித் துறையாளர்களாலும் வியந்து பாராட்டத் தக்கவை.”

இடைமறிக்கும் அன்பர்

“‘கற்க கசடறக் கற்பவை…’ எனத் தொடங்கும் குறள் ஒன்று போதுமே…”

செம்மல்

“பல குறள்கள் உள்ளன. நான் கோடிட்டுக் காட்ட விரும்பும் நிலைகள் இரண்டே இரண்டு:

ஒன்று: குழந்தைப் பருவம் தொட்டுக் கற்க மேற்கொள்ளும் முயற்சி. இம்முயற்சி பலவகைப் படும்; வெவ்வேறு நிலைப்படும். பிள்ளைகள் கற்கக்கற்க – புதிய வற்றை அறிய, அறிய, அறிதொறும் அறியாமை புலப்படும்.”

புலவர்

“‘கல்வி கரையில, கற்பவர் நாள்சில, மெல்ல நினைக்கின் பிணிபல’ – என்ற பாடமே உள்ளது.”

ஒருவர்

“செம்மல் ஐயாவைப் பேசவிடுங்கள்.”

செம்மல்

“குழந்தைப் பருவந்தொட்டு – புதிய, புதிய படிநிலை களில் பயிலும் பிள்ளைகள் – அத்தகைய புதியனவற்றை அறியும் போதெல்லாம் உவகை அடைகிறார்கள்; மேலும் அறிய ஆர்வம் கொள்ளுகிறார்கள். அந்தக் கல்வியின்- ஒரு சொல் விளக்கம் – வளர்ச்சி, அறிவு ஒழுக்கம், சிந்தனை ஆகியவை ஒருங்கிணைந்ததொரு வளர்ச்சி. ஆனால், ஓரளவு படித்து, உலகியல் அறிந்தவர்களில் பலர்- கற்றவற்றின் எல்லையை அறியாமல், வீண் அகந்தையுடன் செருக்கித் திரிவார்கள். தாமின்புறுவது உலகும் இன்புறக்கண்டு காமுற மாட்டார்கள்; காழ்ப்புணர்வே கொள்வார்கள்.”

 

செம்மல்

“குழந்தைப் பருவந்தொட்டு – புதிய, புதிய படிநிலை களில் பயிலும் பிள்ளைகள் – அத்தகைய புதியனவற்றை அறியும் போதெல்லாம் உவகை அடைகிறார்கள்; மேலும் அறிய ஆர்வம் கொள்ளுகிறார்கள். அந்தக் கல்வியின்- ஒரு சொல் விளக்கம் – வளர்ச்சி, அறிவு ஒழுக்கம், சிந்தனை ஆகியவை ஒருங்கிணைந்ததொரு வளர்ச்சி. ஆனால், ஓரளவு படித்து, உலகியல் அறிந்தவர்களில் பலர்- கற்றவற்றின் எல்லையை அறியாமல், வீண் அகந்தையுடன் செருக்கித் திரிவார்கள். தாமின்புறுவது உலகும் இன்புறக்கண்டு காமுற மாட்டார்கள்; காழ்ப்புணர்வே கொள்வார்கள்.”

புலவர்

“அது புலமைக் காய்ச்சல், பொறாமைத் தீ…”

அரசு அதிகாரி

“அது புலவர்களுக்கு மட்டும் தானா?”

இன்னொருவர்

“அடக்கமில்லாத, அகந்தையுடைய எல்லோருக்கும் அந்தக் காய்ச்சல் வந்துவிடும்.”

மற்றொருவர்

“ஐயா! கற்றிலன் ஆயினும் மணிமொழியன் சொல்வதைக் கேட்டிடுக…”

செம்மல்

“‘சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு’ என முத்தாய்ப்பு இட்டுவிட்டார். தனக்கும் சமுதாயத்திற்கும் நன்மை தராத அறிவு – விழலுக்கு இறைத்த நீர். அது எல்லோரும் அஞ்சவேண்டிய பேதைமை. கல்லாதவர் அறிவுக்கும் கற்றவருடைய அறிவுக்கும் நுட்பமான வேறுபாடு உண்டு.

சிற்றறிவு வெண்மை எனப்படும் முதிராத புல்லறிவு. அது தன்னைத்தான் மதிக்கும் போலிப் பெருமிதம். கல்லாததைக் கற்றது போலக் காட்டிக் கொள்ளுவதும் ஒருவகைச் சிற்றறிவுதான். அத்தகைய ஏவலும் செய்ய இயலாது, தாமும் செய்யாத புல்லறிவாளர்கள் சமுதாயத்திற்கே நோய் போன்றவர்கள்.”

புலவர்

“வள்ளுவரின் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களில் புகுந்துவிட்டால் பொழுது புலர்ந்துவிடும்.”

செம்மல்

“அதனால்தான் பொழுது புலரும் முன்னரே – இன்பத்துப்பாலில் (அவையில் சிரிப்பு) இருந்து ஓரிடத்தைச் சொல்லி நிறைவு செய்ய முற்படுகிறேன்.”

ஒருவர்

“இன்பத்துப்பால் என்றால்… எளிதில் நிறைவு கண்டுவிட முடியுமா?” (மீண்டும் சிரிப்பலை)

செம்மல்

“நான், அன்பர் நினைக்கும் அந்த உணர்ச்சி இன்பத்தை, கிளர்ச்சி இன்பத்தைச் சொல்ல வரவில்லை. எதற்கு இணையாக வள்ளுவர் அறிவெனும் இன்பச் சோலையை உவமிக்கிறார் என்பதையே நினைவூட்டுகிறேன்.

‘அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம்

 செறிதோறும் சேயிழை மாட்டு’      (1110)

அறிவு வளர, வளர – பழைய அறியாமை காணப்படு வதைப் போல, என் காதலி அல்லது மனைவியுடன் மகிழ, மகிழக் காதல் இன்பம் காணப்படுகிறது என்று என்றும் இனிக்கும் அந்தக் காதல் உறவோடு, அறிவின் தாக்கத்தையும் வள்ளுவர் அழகாக உவமிக்கிறார். (கைதட்டல்)

குறள் அன்பர்களே… ‘அறிதொறும் அறியாமை…’ என்பதற்குத் தெளிவான விளக்கம் கண்டோம்…”

ஒருவர்

“இப்போதெல்லாம் மூளைச்சலவை (ஙிக்ஷீணீவீஸீ ஷ்ணீsலீ) எனும் அறிவுச்சலவை தான் நடக்கிறது. ‘அறிவுச்செம்மை’ பற்றி யாரும் பேசுவதில்லை, கேட்பதில்லை.”

செம்மல்

“அதற்காகத்தான் இந்தக் குறள் முற்றத்தில் கூடியுள்ளோம். இங்கே, நாம் பெற்றது கலந்துரைப் பயனால் கிட்டிய ‘கேள்விச் செல்வம்’, ‘அல்லவை தேய, அறம் பெருகும், நல்லவை நாடி இனிய சொலின்’ என்றதைப்போல நாமெல்லாம் நல்லன வற்றையே, நமக்குள் பகிர்ந்து கொண்டோம். இந்த நயம் தரும் ஆக்க உணர்வே நாட்டில் செயலாக வேண்டும். வேலிக்கருவை போலத் தீய சக்திகள் தாமாகப் படரும் இடமெல்லாம், வேப்ப மரம் போன்ற நல்ல உணர்வுகளைப் பராமரித்துப் பாதுகாப்போம். இத்தகைய உணர்வுப் பரிமாற்றமே மனிதநேயம். இன்றைய சமுதாயப் போக்கில் இது போன்ற நல்லிணக்கமே தழைக்க வேண்டும்.”

புலவர்

“செவிக்கு உணவோடு, வயிற்றுக்கும் நல்லுணவு தந்த நம் பேரவை வாழ்க; நிலா முற்றம் – வளர்பிறையாக வளர்ந்து – மாதம் தோறும் முழு நிலாப் பேரொளி ஆகுக.”

(கைதட்டல்)

செம்மல்

“திருக்குறள் சுற்றத்தார்களே… நம் அழிவிலாச் செல்வமாகிய திருக்குறளை – நிலா முற்ற அரங்காக – நான்கு முறை கூடி – மனம் கலந்து உரையாடினோம்; மிகுந்த பயனுற்றோம். இத்தகைய பயனும் நலமும் தரும்- குறள் நிலா முற்றம் எனும் புதிய இலக்கிய விளக்க உத்தியை வகுத்திட்ட மதுரை வானொலிக்கு – உங்கள் சார்பாகவும் உலகத் திருக்குறள் பேரவை சார்பாகவும் உளமார்ந்த நன்றியைப் புலப்படுத்துகிறேன்.

இக்குறள் நிலா முற்றத்தை நடத்தும் பொறுப்பை எனக்குத் தந்தார்கள். என்னிலும் குறளை ஆழ்ந்து கற்ற அறிஞர்களிடையே நான் இந்தப் பொறுப்பை ஒரு அக்கினிப் பிரவேசம் போல ஏற்றுக் கொண்டேன்.

புலவர்

“‘அக்கினிப் பிரவேசம் இல்லை – அர்ச்சனைப் பிரசாதம் போல குறளை அள்ளி அள்ளித் தெளித்தீர்கள்.

குறிதவறாமல் செலுத்தவல்ல கருவிகளைக் கண்டுவிட்டோம். நெறிபிறழாமல் நடக்கவல்ல மனிதநேயம் சமூகத்தை உருவாக்கத் திருக்குறளையே சாதனமாக்கிக் கொள்ளுவோம்.

‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ (430) எனும் குறள் நெறியை ஏற்க – மீண்டும் மீண்டும் குறளுக்குப் புதுவிளக்கம் காணவும், அதன் வழியிலே புதியதோர் உலகு சமைக்கவும் புறப்படுவோம். எல்லோர்க்கும் குறள் நெறி வணக்கம்.”

Image result for வள்ளுவர்


 

 

குறள் நிலா முற்றம் 14


ஒருங்கிணைப்பாளர்

“என்னதான் பல்குழு, கொல் குறும்புகள் இருப்பினும் அரசாள்வோர் – தக்கார் இனத்தராய், தானொழுக வல்லாராய் இருந்தால் போதுமே! ‘ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து, யார் மாட்டும் தேர்ந்து செய்வதே முறை’ என அறிந்து செயல்பட்டால் நல்லதாயிற்றே! நாள்தோறும் நாடி முறை செய்யாவிட்டால் நாடும் சீரழியும் எனப் புரிந்து கொண்டால் போதுமே!”

திருக்குறள் பேரவை அன்பர் ஒருவர்

“நல்லாட்சி அமைவதெல்லாம் ஓட்டுப் போடும் வாக்காளர் கையிலும், தேர்ந்தெடுக்கப் படும் உறுப்பினர் தோளிலுமே உள்ளது. ஆனாலும் இந்த இரு சாராரும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணராத அவலத்தை நம் திருக்குறள் பேரவையில் சில ஆண்டுகளுக்கு முன் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அயர்வோடு, ஆறாத் துயரோடு ஆற்றிய உரை நம் பேரவை நண்பர்களுக்கெல்லாம் நினைவில் இருக்கும் எனக் கருதுகிறேன். பேராசிரியர் அவர்களே உங்கள் நினைவில் இருந்தால் கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லுங்கள்.”

மற்றொருவர்

“நெடுநேரம் அமர்ந்துவிட்டோம், அரசியலுக்குள் நுழைந்தவுடன் பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது.” (சிரிப்பலைகள்)

உணவுக்குப் பின் மீண்டும் நிலா முற்ற அவை கூடுகிறது.

பெரும்புலவர்

“தேர்தல், வாக்காளர் கடமை பற்றி எல்லாம், குன்றக்குடி மகாசந்நிதான அமரர் பிரான் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் நம்மிடையே ஆற்றிய அறிவுரை பற்றிப் பேராசிரியர் நினைவோட்டங் களைக் கொணருவார் எனச் சொல்லி உணவுக்காகக் கலைந்தோம்… ஆனால், தேர்தலில் உரிமையாய் வாக்களிக்கச் சாவடிக்கு வர, படித்தவர்களும் நல்லவர்களும் பொதுவாகத் தயக்கம் காட்டுவதால் பொல்லாதவர்கள் கள்ள ஓட்டுப் போட்டு விடுகிறார்கள்.”

இன்னோர் இளைஞர்

“அதுபோல, நிலா முற்ற அன்பர்கள் வாக்களிக்கச் செல்லத் தேர்தல் எதுவும் இப்போது நடக்கவில்லையே.. நம் திருக்குறள் பேரவையினர் தேர்தலைப் புறக்கணிக்க மாட்டார்கள். அது புனிதமான, குடியாட்சி உரிமை, கடமை என்றே கருதுவார்கள். எந்தத் தில்லுமுல்லுக்கும், பொய்ம்மை, கயமைக்கும் இணங்க மாட்டார்கள். அதை என் போன்ற இளைஞர் சமுதாயமும் கண்விழிப்போடு கட்டிக் காக்கும்.”

அரசு அதிகாரி ஒருவர்

“வாழ்க இளமைச் சமுதாயம்!” (கரஒலி)

ஒருங்கிணைப்பாளர்

“சமுதாயப் பிரச்சினைகளுக்கெல்லாம், திருக்குறள் வழியே தீர்வுகள் காண முற்படும் ஓர் இயக்கமே நம் திருக்குறள் பேரவை. சீரிய சிந்தனைகளும், உயரிய கோட்பாடுகளும் நிறைந்துள்ளது நம் நாடு; எனினும், அவை விடுதலைப் போர்க்கால இயக்கம் போல, இந்தக் குடியுரிமை ஆக்க நெறிக்குச் செயல்படாமல் போனதால், ஆளும் கட்சி, மாற்றுக் கட்சி என்றில்லாமல், ஆளுக்கொரு கட்சி என வேர்க் கொல்லிகள் புகுந்ததால் நம் ஜனநாயகம் சாக்காட்டை நோக்கிப் போகிறதே என நம் வணக்கத்திற்கு என்றும் உரிய அடிகளார் அவர்கள் பலமுறை நம் அரங்கங்களில் மட்டும் இன்றி – பேசும் மேடைகளில் எல்லாம் – உளம் வருந்தியது உண்டு, அவற்றுள் சில செய்திகளையாவது பேராசிரியர் சொல்லட்டும்.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“ஜனநாயக, சோசலிச, மதச்சார்பற்ற அரசாகப் புதிய குடியாட்சி அமையும் எனச் சுதந்திரம் பெற்ற நாள் முதல் கனவு கண்டோம். ‘எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கும் இவ்வையகம்’ எனும் புரட்சிக் கவிஞர் உறுதியும், ‘முப்பது கோடியும் வாழ்வோம், வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்’ எனும் மகாகவி சபதமும் நனவாகும் என நம்பினோம்.”

இடைமறித்த மூத்த அரசு அதிகாரி

“ஆனால், ஆண்டுக்கு ஆண்டு வறுமையும் வரிச் சுமையும்தான் அதிகரித்து வந்தன. எப்படியேனும் செல்வத்தைச் சேர்த்து அதைக் கொண்டு ஆட்சிச் செல்வாக்குப் பெற்று, அவரவர் அனுபவிக்கும் புதிய ஜமீன்தார் ராஜ்யங்களே உருவாயின.”

மற்றொருவர்

“செல்வச் செருக்காலும் அதிகார பலத்தாலும் தனிச் சலுகையோடு, நினைத்ததைச் சாதித்துக் கொள்ளலாம் எனும் எண்ணம் பலரிடம் நீடிக்கும் வரை, சமுதாயத்தில் சமத்துவம் நிலவாது. இந்நிலை மாறாத போது புள்ளி விவரப்படி உற்பத்தி பெருகினாலும், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாடுவோர் எண்ணிக்கை குறையாது; புரட்சி ஓயாது. அடிப்படைத் தேவைகளுக்கே அல்லல்படும் நிலை நீடிக்கும் வரை நியாயமான மக்களாட்சி மலராது.”

ஒருங்கிணைப்பாளர்

“சொல் வேறு, செயல் வேறு எனும் போக்கு உடையவர்கள் அரசியல் களத்தில் அதிகமாக நுழைந்தமை யால் ஏற்பட்டு வரும் அவக்கேடு இது. இதனைக் களைய வேண்டுமானால், வாக்காளர்கள், நல்லவர்களை ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அடிகளார் வற்புறுத்தி வந்தார்கள்.”

பேராசிரியர்

“வள்ளுவர் மன்னராட்சிக் காலத்தே வாழ்ந்து சமுதாயக் கோட்பாடுகளை வகுத்தவர் எனினும்- குடிதழுவிக் கோலோச்சும் மக்களாட்சி முறையை, அப்போதே, முதன்முதலில் சொல்லிவிட்டார் என்பது அடிகளாரின் உறுதிப்பாடு. அவர் கொடுங்கோன்மை புரிந்த அரசுகளையும் அறிந்திருந்ததாலோ என்னவோ, அதனை நீக்கி- நல்லாட்சி நடத்தும் அரசை அமைப்பதே குறளின் குறிக்கோள் எனப் பல அதிகாரங்களில் வரையறுத்தார். இந்தக் குடியாட்சி வரையறுப்பின் அடித்தளம் வாக்காளர்கள். இந்த வாக்காளர்களின் அரசியல் அறிவு, தகுதி ஆகியவற்றிற்கு ஏற்பவே ஆட்சியும் அமையும்.”

மற்றொரு பேராசிரியர்

“மக்கள் ஆட்டு மந்தைகளாக இருந்தால் ஓநாய்களே ஆட்சிக்கு வருவார்கள் என்பது ஒரு மேலை நாட்டு அரசியல் ஞானியின் அறிவுரை” (அரங்கில் கர ஒலி)

பேராசிரியர்

“அடிகளாரின் கருத்தைத் தொடருகிறேன்; நாம் நமது நாட்டைச் சொத்தாகக் கருத வேண்டும்.”

ஒரு புலவர்

“அதனால்தான் அவரவர் பங்குகளைச் சுரண்ட ஆசைப்படுகிறார்கள்” (சிரிப்பலை)

பேராசிரியர்

“அடிகளார் பெருந்தகை நாடு நம் சொத்து என்பது போல, நாமும் நாட்டின் சொத்து எனப் பெருமையோடு கருதி, கடமைப் பொறுப்போடு செயல்படத் தூண்டி வந்தார். வளர்ச்சி எனும் திட்டப் பணிகளைக் காரணம் காட்டி இதுவரை நம்நாடு வாங்கியுள்ள வெளிநாட்டுக் கடன் சுமை எப்போது இறக்கி வைக்கப்படுமோ என ஏங்கினார். எனவே பொருளாதாரச் சீரழிவை இப்போதாவது தடுத்து வளம் செழிக்கும் பாதைக்கு நாட்டைக் கொணரவல்ல நல்ல ஆட்சியைத் திறம்படத் தேர்ந்தமைக்கப் பல உரைகளில் தொடர்ந்து மன்றாடினார்.”

ஒருங்கிணைப்பாளர்

“நம் நாட்டில் வசியும் வளனும் சுரப்பதை விட, நாள்தோறும் பசியும் பகையும் பெருகக் கண்டு, நம் அடிகளார் கண்ணீர் மல்கியதை நம்மில் பலர் பார்த்திருக்கிறோம். அதனால்தான் – நல்குரவோடு பல்குறைத் துன்பங்களும் சென்றுபடும் நிலை வந்தாக வேண்டும் என வலியுறுத்தினார்.”

பேராசிரியர்

“நமது நாடு பசி, பிணி, செறுபகை என்பனவற்றில் இருந்து விடுதலை பெறுவது ஒரு புறம் இருக்க, நாடு தழுவிய வளர்ச்சி நிலைபெற வேண்டுமானால், நமது நாட்டின் அளப்பரிய ஆற்றலான மனித வளத்தை மூலைக்கல்லாகக் கொண்டே இதர கட்டுமானங் களையும் முறையாக எழுப்ப வேண்டும் எனக் கட்டளையிட்டார், திட்டமும் தந்தார் மகா சந்நிதானம் அவர்கள்.”

பெரும்புலவர் செல்வ கணபதி

“அறிவியலையும் கிராமப்புறத் தொழில் களையும் ஓரணியில் கொணர்ந்து, புதுமையான வளர்ச்சித் திட்டங்களை…”

இடைமறித்த அன்பர்

“சுவாமிகளின் இந்த ஒருங்கமைப்புத் திட்டத்தைக் ‘குன்றக்குடித் திட்டம்’ (ரிuஸீக்ஷீணீளீuபீவீ றிறீணீஸீ) என மைய அரசே பாராட்டியது. ஆனால் வழக்கம் போல அத்திட்டத்தை ஊர்தோறும் வளர்க்காமல் தயங்கியும் நின்று கொண்டது.”

பேராசிரியர்

“அடிகளார் பெருந்தகை நம்மவர் உழைப்பெல்லாம்- சாதி – சமய – மொழிச் சிக்கல்கள் போன்ற வேண்டாத, உடனடிப் பயனற்ற, நாட்டுக்கு ஊனம் தரக்கூடிய பிரச்சினைகளிலேயே செலவிடப்பட்டு, விழலுக்கு இறைத்த நீராகிறதே எனவும் வேதனையுற்றார்.”

ஒருங்கிணைப்பாளர்

“நான் முன்பே குறிப்பிட்டது போல… ‘பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும்’ நம் நாட்டில்தான் அதிகம் என்பது அடிகளார் வருத்தம்.”

அரசு அதிகாரி

“நம் ஊர்களில் ஊர்வலமோ, போராட்டமோ, கோஷமோ, கொடி பிடிப்போ இல்லாத நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் மனப்போக்கும் அப்படி, ஆட்சியாளர் மனப்பக்குவம் இன்மையும் அப்படியே.”

திருக்குறள் செம்மல்

“‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த, வகுத்தலும் வல்லது அரசு’ (385) – எனும் குறளில் குன்றக்குடி அடிகளார் ‘வகுத்தல்’ எனும் சொல்லுக்கே, செயலுக்கே அதிக அழுத்தம் தருவார். நாட்டில் உருவாக்கப்பெறும் உற்பத்திப் பொருள்கள் எல்லாம் உரியவாறு மக்கள் நுகர்வுக்குப் பயன்படுவதில்லையே? செல்வம் மறுமுதலீடாக மீண்டும் சுழற்சிக்கு வருவதில்லையே? வேலை வாய்ப்பும் பெருகுவதில்லையே! என்பது அடிகளாரின் வள்ளுவச் சிந்தனை, ஏக்கம்.”

பேராசிரியர்

“நமது நாட்டில் ஆட்சியை அமைக்க உதவும் களம்- தேர்தல், அத்தேர்தலில் ஆட்சிப் பொறுப்பு ஏற்கக் கூடிய பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க உதவும் உரிமை – வாக்குச்சீட்டு. ஆற்றல் மிக்க, புனிதமான இந்த வாக்குச் சீட்டால் நல்லவரை, ஒழுக்கத்திலும் செயலிலும் வல்லவரைத் தெரிவு செய்ய வேண்டும். ஆனால் அந்த நல்லவர் – தனி நபராக ஒற்றைப் பனையாக நின்றால் ஏதும் செய்ய முடியாது. ஏனெனில் குடியாட்சியின் கட்டுமானம் – கட்சி அமைப்பு. நாணயமானவர்கள் இடம்பெற அதிக அளவில் முன்வந்தாக வேண்டும் என்பது அடிகளார் அவர்களின் விருப்பம். அப்போதுதான், ‘சான்றோர் பழிக்கும் வினை’ என்பன தொடரமாட்டா. வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே. அதை நிறைவேற்றாத வரை நாணயமானவர்கள் என எப்படி ஏற்க முடியும்?”

ஒருங்கிணைப்பாளர்

“இதற்கெல்லாம் அடிப்படை நல்ல குடிமக்களாக நாம் அமைவதுதான்.”

இடையில் ஒருவர்

“இப்பொழுது குடிமகன்கள் நிறையப் பேர் பாதையெங்கும் காணப்படுகிறார்கள். அத்தகையவர் களுக்குப் பஞ்சமே இல்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“நல்ல செங்கற்களால் நல்ல கட்டிடம் எழும்பும். அது போல நல்ல குடிமக்களால் – ‘வரப்புயர’ என ஔவை சொன்னது போல – வீடும் நாடும் உயரும். நாடு என்பதன் நுண்துளி வட்டம் அவரவர் குடி எனும் குடும்பம். எனவேதான் வள்ளுவர் ஒவ்வொருவரும் உழைப்பால் தம் நிலையை உயர்த்தி – தாம் பிறந்து வளரும் குடியையும் மேம்படுத்த முற்பட்டாலே – நாடு தானாகச் செழித்தோங்கும் எனக் குடிமைப் பண்பை வலியுறுத்தினார். அத்தகையோர் பருவம்- காலம் – பொழுது பாராமல், கடுமையாக உழைத்துக் குடிமானம் காப்பர். ‘பொதுப்பணியில் கடமையைச் செய்யச் சோர்வடைய மாட்டேன்’ என நினைத்தாலே – முற்பட்டாலே – அதைவிடப் பெருமையின் பீடுடையது இல் என்று ஊக்கு விக்கிறார் வள்ளுவர். இந்த நாட்டின் ஒவ்வொரு உரிமை மகனும், மகளும் தன்னலம் இல்லா உழைப்பால், நிர்வாகத் திறமையால், வளர்ச்சி மேலாண்மையால் தன் குடியை நிமிர்த்தி – நாட்டையும் உயர்த்த – பெருமையுடனும் உறுதிமாறா வீரப்பொறுப்புடனும் மார் தட்டிப் புறப்பட்டு அணிவகுத்தால் நம் இந்தியத் திருநாடு, பாரதி பாடியது போல் ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ ஆகும். நம் பெருமைக் கெல்லாம் உரிய தாயகம் ஆகும். என நம் தவத்திரு அடிகளார் கண்ட கனவை, அதற்கும் பல ஆண்டுகட்கு முன்னரே, ‘மண் பயனுற வேண்டும் – வானகம் இங்கு தென்பட வேண்டும்’ என மகாகவி பாரதி வேண்டிய வரத்தை – நம் காலத்திலேயே நாமே நடைமுறை ஆக்க உறுதி பூணுவோம். அதில் வெற்றியும் காண்போம். இந்த உறுதியுடன் நிலா முற்ற அரங்குகள் பலவற்றில் ஒன்று கூடிச் சிந்தித்து ஒரு புதிய இலட்சிய ஓவியத்தை வரைந்து தந்துள்ள உங்கள் அனைவர்க்கும், வானொலிக்கும், உலகத் திருக்குறள் பேரவை சார்பாக உளமார்ந்த நன்றி கூறுகிறேன். நமது நிலா முற்றம் மீண்டும் ஒரு முழுநிலா இரவில் கூடும். வள்ளுவரின் நிருவாகவியல் சிந்தனைகள் பற்றியும், திருக்குறளைத் தேசிய நூலாக்குதல் பற்றியும் ஆராயும், ஆவன செய்யும். ‘புகழ்ந்தவை போற்றிச் செய்தல் வேண்டும்’ எனும் வள்ளுவ வாழ்த்துடன் விடை பெறுவோம்.”

குறள் நிலா முற்றம் 13

ஒருங்கிணைப்பாளர்

“உபதேசம் வெறும் ஊறுகாய் போல மட்டும் இருந்து விடலாமா? பற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளரவேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.”

அரசு அதிகாரி

“பசிப்பிணியைப் போக்க அரசு பல திட்டங்களைப் போட்டு வருகின்றது. பசிப் பிரச்சினை மற்றும் வேலை இல்லாத் திண்டாட்டம் என்பன பெருகும் மக்கள் தொகையாலும் இதர நிர்வாக முறைகளாலும் தவிர்க்க முடியாத பிரச்சினைகளாக நீடிக்கின்றன. இதைச் சமாளிக்க அரசு வரிகளைக் கூட்டினால் எதிர்ப்பு வலுக்கிறது.”

பேராசிரியர்

“இப்போதெல்லாம் குடியாட்சி செலுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் அரசு பெரும்பாலும் வரிகளை மக்கள் ஒரு கடமையாகத் தாமாக முன்வந்து செலுத்த ஊக்கம் தருவதில்லை. கசக்கிப் பிழிய முற்படுவதால் மக்களில் பலர் வரி கட்டாது ஏமாற்றப் பார்க்கிறார்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் பொதுவுடைமைச் சமுதாயம் என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே நீடிக்கிறது. எனவே வரிகளைப் பெருக்கி, வசதிகளைப் பெருக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்படுகின்றது. அவ்வாறு வரி தண்டுவதிலும் ஒருவகை மனிதநேயப் பாங்கு இருக்க வேண்டும் என்பது வள்ளுவ நியதி.. அனைவருக்கும் தெரிந்த குறள்தான் அது.

‘வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

     கோலொடு நின்றான் இரவு.’         (552)

ஆட்சி அதிகாரத்தோடு, முறை கடந்து பொருளைக் கைக்கொள்ளுவது, பாதை நடுவே வேலோடு நின்ற கள்வன், பொருளைக் கொடு என அச்சுறுத்திப் பொருளைப் பறித்துச் செல்வதைப் போன்றது என அடித்துச் சொல்கிறார் வள்ளுவர். நல்லாட்சி பற்றிப் பேசும் போது, வெற்றிதருவது கோல் எனப் பேசிய வள்ளுவர், கொடுங்கோன்மையால் கசக்கிப் பிழிந்து வரிபெறுவது அருளற்ற ஆட்சி, அது நிலத்துக்குச் சுமை, கொள்ளையர் ஆட்சி என்றெல்லாம் சாடுகிறார்.”

பெரும்புலவர்

“நன்முறையில் வரி பெறுவதையும் தீய வழியில் வரி பறிப்பதையும் பற்றிய புறநானூற்றுப் பாடலில் வரும் யானை பற்றிய உவமையை இங்கே நினைவில் கொள்ளலாம். ஒருமா பரப்பளவுள்ள நிலமாயினும் அதில் விளையும் நெல்லை அளந்து யானைக்குத் தீனியாகப் போட்டால், அது பல நாட்களுக்கு வேளை தவறா உணவாக நீடிக்கும். அதை விடுத்து, யானையை அவிழ்த்துவிட்டு, நீயே போய் உண்டு கொள்ளலாம் என விட்டோமானால் அதன் வாயில் புகும் நெற்கதிரை விடக் காலால் மிதிபட்டு அழியும் பயிரே பல மடங்கு ஆகும். நூறு செறு நிலப்பரப்பில் விளைந்தவை எல்லாம் ஓரிரு நாளில் பாழாகிவிடும். எனவே அரசன் முறையறிந்து நெறி பிறழாது வரிகளைப் பெற வேண்டும் எனும் அந்தப் பாடலே வள்ளுவத்திலும் எதிரொலிக்கிறது.”

அரசு அதிகாரி

“அந்தப் பாட்டில் புலவர் நன்கு முற்றிக் காயும் நிலையில் உள்ள நெல்லைக் குறித்துள்ளார். ஆனால் இன்று நம் வயிறு காய்ந்தாலும் வரியைக் கட்டியாக வேண்டிய கடுமையான நிலையன்றோ நீடிக்கிறது? இதெல்லாம் நல்லாட்சிக்கு ஏற்றதா என்ன? இந்த ஆட்சி அமைப்பின் மீது மக்கள் எப்படி நம்பிக்கையோ, பற்றோ கொள்ள முடியும்?”

பேராசிரியர்

“பொதுவுடைமை அரசே ஆயினும் வரி இன்றி ஆட்சி செலுத்த முடியாது. பொதுவுடைமை என்பதும் உலகின் ஒரு சில நாடுகளில் மட்டும் பந்தலிட்டுப் படருவதால் பயன்இல்லை. உள்நாட்டுப் பொதுவுடைமை, உலகப் பொதுவுடைமையாதல் வேண்டும். ‘ஓருலகம்’ ) என வெண்டல் வில்கி எனும் அறிஞர் ஒருவர் கண்ட கனவும், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனும் தமிழ்ச் சான்றோர் கூறியனவும், தன்னலம் தீர்ந்த, சண்டையில்லாததாய் உள்ள சமுதாயமும் உருவாகக்கூடிய பாதையை விடுத்து உலக சமுதாயம் திசை மாறியே போய்க்கொண்டிருக்கிறது. இதில் பசிப்பிணியை அறவே நீக்க ஒவ்வொருவர் கையிலும் மணிமேகலையின் அட்சயப் பாத்திரம் இருந்தாக வேண்டும்.”

ஒருவர் இடைமறிக்க ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் உங்கள் கருத்தைச் சொல்லி முடியுங்கள்.”

பேராசிரியர்

“‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக’ என்று அன்று மணிமேகலை செய்தாள், இன்று நம் பாரதப் பிரதமரும் பசியை அறவே நீக்கப் பல அறிக்கைகளை வெளியிடுகிறார். பசியை நீக்கப் பொய்யான பொதுவுடைமைக் கோஷத்தால் முடியாது. உண்மையான நல்லாட்சித் திட்டங்கள் வேண்டும். அரசுத் திட்டங்கள் மட்டும் பசியைப் போக்கிவிடாது. இந்தப் பாரகம் உள்ள வரை தனிமனித நேயமும் உதவிக் கரம் நீட்டியாக வேண்டும். அதுதான் நல்ல நாடு.”

ஒருங்கிணைப்பாளர்

“‘உறுபசியும் ஓவாப் பிணியும், செறுபகையும் சேராதியல்வதே’ (734) நல்ல நாட்டின் இலக்கணம் என்பது வள்ளுவம். அத்துடன் புலவர் ஐயா சுட்டிக்காட்டிய, ஒப்புரவு உள்ளமும் மக்களிடம் நிலை கொண்டாக வேண்டும். அதற்கான முன் முயற்சியாகத்தான் ‘செய்க பொருளை’ எனக் கட்டளையிட்டார் வள்ளுவர். அவர் ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என எச்சரித்தார்; இல்லாதார்க்கு மனமுவந்து செல்வராக இருப்போர் ஈந்து உவக்கும் இன்பம் பெறவேண்டும் எனத் தூண்டினார்.”

புலவர் செல்வகணபதி

“அப்படியெல்லாம் செல்வரும் எளிதில் ஈயும் மனத்தோடு நடப்பதில்லை. விளம்பரக் கொடையே நடக்கிறது. கட்டாய வசூலே நாடகமாகிறது. ‘ஈர்ங்கை விதிரார் கயவர், கொடிறுடைக்கும் கூன் கையர் அல்லாதார்க்கு’ என்றது  போல, கயவர்களுக்குப் பயந்து தருகிறார்கள். அந்தச் செல்வர்கள் ‘செல்வத்துப் பயனே ஈதல்’ எனப் பெரும்பாலும் நினைப்பதில்லை.”

இடைமறித்த ஒருவர்

“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.”

புலவர்

“அப்படியே தீயவர் பெருகினால், சமூகத்தில் புரட்சிதான் வெடிக்கும். பொய்யும் புரட்டும் தான் வளரும்.”

தொழிலதிபர் லெ.நாராயணன் செட்டியார்

“புரட்சியால் விளையும் போட்டி ஆட்சியை விட, மனமாற்றத்தால் நிலவும் நல்லாட்சி முறையே நல்ல பயனை நீடித்துத் தரும். சுதந்திரம் பெற்ற நாள் முதல், நம்மோடு உரிமை பெற்ற பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் தேசத்தில் பரவலாக நல்லாட்சி முறையே நீடித்திருக்கிறது என ஏற்பதில் தவறில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“நாடு என்றால் அது எப்படி அமைந்திருக்க வேண்டும், அதனை ஆளும் நல்லாட்சியின் இலக்கணம் என்ன, அரசர்- அமைச்சர் ஆகியோரின் கடமைப் பொறுப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் வள்ளுவர் ஓர் அரசியல் பொருளாதார மேதையாகவே நின்று பேசியுள்ளார்.”

ஒருவர்

“அவற்றுள் பொருத்தமான சிலவற்றைப் பற்றிச் சிந்திக்கலாமே?”

மற்றொருவர்

“பேசிப் பேசிப் புளித்துப்போன அரசியலைப் பற்றி இங்கேயும் பேசி நேரத்தை வீணாக்க வேண்டுமா? அந்தச் சாக்கடைகளை நாமும் தோண்ட வேண்டுமா?”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசான் வ.சுப.மா. அவர்கள் அப்படி நினைக்கவில்லை. பலருக்கும் வாக்குரிமையும் கடமைப் பொறுப்பும் உள்ள குடியாட்சி முறையில் நலன், தீங்கு என்பவை தராசின் இரு தட்டுக்களைப் போன்றவை. ஆனால், வள்ளுவர் வகுத்த அரசு நெறி எவ்வரசுக்கும்- எக்காலத்திற்கும் – அன்பர் குறிப்பிட்டது போன்று இன்றைய அரசியல் சாக்கடையா, சாக்காடா… என்ற அந்த நிலைக்கும் பொருந்தவே செய்யும்.”

அரசு அதிகாரி

“இன்று அரசியல் தலையிடாத துறையே இல்லை. இன்று பேசிப் பேசிப் பொழுதை வீணடிப்பதுதான் அரசியல் கலாச்சாரம். தன் கட்சியை மலையளவு ஏற்றுதல், பிற கட்சியினை முடிந்த அளவு தூற்றுதல், வசவு நடை, வம்பிழுப்பு, ஆகாக் கத்தல், அடியாள் சேர்த்தல் – இத்தகைய போலிக் குடியாட்சியைப் பற்றி – அது வள்ளுவத்தோடு பொருந்துமா என்பது பற்றி – நாம் பேசிப் பயன் என்ன? வாக்களிக்கும் சக்தி படைத்த பெரும்பான்மையும் அரசியலே புரியாத மக்களிடையே அல்லவா போய்ப் பேச வேண்டும்!”

புலவர்

“போய்ப் பேச வேண்டுமா? பெரிய பொய் பேச வேண்டுமா? (சிரிப்பலை) குடியாட்சி முறைக்கே அடித்தளமான தேர்தல் முறையே விலைபேசப்படும்போது, அரசியல் வியாபாரம் பற்றி நாம் பேரம் பேசிப் பயன் என்ன? உலகமே வியாபார மயமாகி வருகிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“உலகம் ஒன்றெனக் கருதும் காலம் எப்போதோ தோன்றிவிட்டது; என்றாலும், அது நனவாக நடைமுறைப்பட எத்தனைக் காலம் ஆகுமோ தெரியாது. ஆனால் எவரும் உலகக் குடிமக்களாகப் பிறப்பதில்லை. ஒருநாட்டு, ஒரு வீட்டு உரிமைக் குடிமகனாகவே ஒருவன் பிறக்கிறான். எனவேதான் வள்ளுவர் நாடு – வேந்து – அரசு என்றெல்லாம் பொதுநிலை அரச அறங்கள் கூறியதாகக் கருதுவோம்.

நாடு என்றால் ஒரு நிலவரையறை இருப்பது போலவே வேந்தளவு அதாவது இறையாண்மை (ஷிஷீஸ்மீக்ஷீமீவீரீஸீtஹ்) எனும் அரசாளுமை இருக்க வேண்டும் என முதலில் விதிக்கிறது. இத்தகைய நாட்டுத் தலைவருக்கு என்ன வேண்டும்? ‘தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன் ஆள்பவர்க்கு’ என்றார் வள்ளுவர்.”

ஓரன்பர்

“இப்போதெல்லாம் தூங்குவதற்கே சட்டமன்றம் போகிறார்கள்.”

மற்றொருவர்

“குறட்டை விடாமல் தூங்கலாம் என்று ஒருமுறை சபாநாயகர்த் தீர்ப்பு வந்ததே…!”

வேறொருவர்

“நம் நிலா முற்ற அவையில் யாரும் குறட்டை விடவில்லையே!” (சிரிப்பலை),

ஒருங்கிணைப்பாளர்

“‘தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்விலாச் செல்வரும்’ என்றெல்லாம் ஒரு நாட்டிற்குத் தேவையான வள்ளுவ இலக்கணங்களை இங்கே நாம் எண்ணுவதை விட, இன்றைய குடியாட்சி முறையில் புகுந்துவிட்ட கேடுகளை வள்ளுவர் அப்போதே வரிசைப்படுத்தியுள்ள அருமையை நினைவுகூர்ந்து, திருந்தவோ, திருத்தவோ சிந்திக்கலாம்.”

வருமான வரித் துறை ஆணையர்

“தேர்தலில் மிகுபெரும்பான்மை பெற்றுவிட்ட தோரணையால் – எல்லை மீறிய வலிமையால் – நல்லாட்சி புரிவதை விடுத்து அடிக்கடி மனம் போலக் கடுமையான சட்டங்களை இயற்றுவதும், தண்டனைகளை விதிப்பதும் நடைமுறையில் உள்ளனவே?”

ஒருங்கிணைப்பாளர்

“‘கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன், அடுமுரண் தேய்க்கும் அரம்’ (567) எனும் குறளைத் தானே சொல்லுகிறீர்கள்?”

பெரும்புலவர்

“அல்லற்பட்டு ஆற்றாது அழும் நிலை மக்களுக்கு ஏற்பட்டால், அதுவே ஆட்சிச் செருக்கை அழிக்கும் படை ஆகிவிடுமாம்.”

இளைஞர் ஒருவர்

“‘பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என எங்கள் பாரதிக் கவிஞன் ஏகாதிபத்தியத்தையே ஏளனம் செய்து பாடி விட்டான்” (குரல்கள் : சபாஷ் தம்பி – கைதட்டல்)

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் வகுத்த அரசு குடிமக்களுக்கு முதன்மை மதிப்பும் பாதுகாப்பும் தருவது; குடி தழுவிக் கோலோச்சுவது; முறை செய்து காப்பாற்ற வேண்டியது; காட்சிக்கு எளிமையாய் விளங்க வேண்டியது; உள்ளுவதெல்லாம் மக்கள் நலனே கருதி உயர்வாக உள்ளும் பொறுப்புடையது; பகை நட்பாகக் கொண்டு ஒழுக, உறுபசி, ஓவாப் பிணி என்பன சேராமல், நேராமல் பேண வேண்டியது; எதிர்காலக் குறிக்கோளுடனும் நிகழ்காலத் திட்டங்களுடனும் நன்கு செயலாற்ற வேண்டியது.”

அரசு அதிகாரி

“ஆனால் எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சிகள் போல உள்நாட்டிலேயே போர்க்களங்கள் அமைத்து அரசை இயங்கவிடாமல் செய்வது தான் அன்றாடக் காட்சிகள்.”

பேராசிரியர்

“எதிர்க்கட்சி வலுவாக இல்லாத குடி ஆட்சிமுறை, அங்குசம் இல்லாத யானைச் சவாரி போன்றது.”

ஒரு மாணவி

“‘இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்’ என்பது வள்ளுவர் ஏற்ற எதிர்நிலைத் தேவை.”

ஒருங்கிணைப்பாளர்

“‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் கொல் குறும்பும் இல்லது நாடு’ (735).

‘வேந்தலைக்கும்’ என வள்ளுவர் எச்சரித்தது குடியாட்சி முறையில் கொடி கொடியாய்ப் படர்ந்து வருவது நல்லதில்லை.”

பெரும்புலவர்

“ஒரு கட்சிக்குள்ளே பல குழுக்கள், உட்பகைகள், வெளிப்போர்கள், கொல் குறும்புகள்… இந்தப் ‘பல்குழு’, ‘கொல் குறும்பு’ எனும் தொடராட்சி வள்ளுவருக்கே கைவந்த கலை.”

 

ஓரன்பர்

“புலவர் ஐயா கொல் குறும்பில் நுழைந்து விட்டார். இது நீடித்தால் குழப்பம் தான்.”

ஒருங்கிணைப்பாளர்

“என்னதான் பல்குழு, கொல் குறும்புகள் இருப்பினும் அரசாள்வோர் – தக்கார் இனத்தராய், தானொழுக வல்லாராய் இருந்தால் போதுமே! ‘ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து, யார் மாட்டும் தேர்ந்து செய்வதே முறை’ என அறிந்து செயல்பட்டால் நல்லதாயிற்றே! நாள்தோறும் நாடி முறை செய்யாவிட்டால் நாடும் சீரழியும் எனப் புரிந்து கொண்டால் போதுமே!”

குறள் நிலா முற்றம் 12

ஒருங்கிணைப்பாளர்

“குறளில் ‘நட்பு’ எனும் மானுடப் பொது உறவு பற்றி வரும் ஐந்து அதிகாரங்கள் ஒருபுறம் இருக்க, இருமுறை வரும் அதிகாரப் பெயர் ஒன்றும் உள்ளது. அது என்ன என்று சொல்கிறீர்களா?”

(அவையில் சற்று அமைதி)

“நானே சொல்லிவிடுகிறேன். அது தான் குறிப்பறிதல்!”

இளைஞர் ஒருவர்

“செம்மல் லேசாக ஜாடை காட்டியிருந்தால், இந்தத் தலைப்புப் பெயரை நானே சொல்லி இருப்பேன். நெஞ்சில் நின்றது, சொல்லில் வருவதற்குள்…”

ஒரு புலவர் ஐயா

“இந்தக் காலத்துத் தம்பிகளில் பெரும் பாலோர்க்குக் குறிப்பறிதல் உடனே புரிவதில்லை; அவர்களுக்குப் புரியும் குறிப்புக்களோ நமக்குப் புரிவதில்லை.”

(அவையில் பலத்த சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“‘குறிப்பறிதல்’ அதிகாரப் பெயர் – பொருட்பாலில் அங்கவியலில் உண்டு; காமத்துப் பாலில் களவியலிலும் அது உண்டு. அங்கே அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகத்தைச் சொல்லுகிறார்.”

பெரும்புலவர்

“இங்கேதான் சிறிசுகள் முகத்தை மூடிக்கிறதுகளே?” (அவையில் சிரிப்பு).

ஒருங்கிணைப்பாளர்

“காமத்துப் பாலில் அறத்துப்பால் உள்ளிட்ட பல உளவியற் செய்திகளை நுட்பமாகச் சொல்லுகிறார் வள்ளுவர் எனச் சற்று முன் சொன்னேனே… அதைத் தொடர்ந்து சில நினைவுச்சரங்கள்.”

பேராசிரியர்

“இன்பத்துப்பால் தான் இதர அறம், பொருள் பிரிவுகளுக்கு அடிப்படை எனத் ‘திருக்குறள் செம்மல்’ அவர்கள் தக்க சான்றுடன் எப்போதும் நிறுவுவார்…

ஒருங்கிணைப்பாளர்

இதற்கிடையே இந்த நூற்றாண்டின் தொடக்க நன்னாளில் உலகே வியக்க, நம் பாரதத் திருநாட்டின் பாதச்சுவடாக விளங்கும் நீலத்திரைக் கடலோரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரியின் முக்கடல் கூடும் இடத்திலே, உலகு வியக்க நிறுவப்பெற்ற திருவள்ளுவரின் சிலை அமைப்பும் இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே செதுக்கப்பட்டுள்ளது என்பதும் உலகம் உள்ள வரை நிலை பெற்றிடும்.”

பேராசிரியர் வளனரசு

“சிலை திறப்புப் பெருவிழாவில் பங்கேற்று மகிழ்ந்த நான் காணாத ஏதோ ஒரு செய்தியைப் பேராசிரியர் சொல்லுகிறார்.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“கலைஞர் பெருமானாரின் 20 ஆண்டு விடா முயற்சியாலும் அருங்கலைச் சிற்பி கணபதி ஸ்தபதியின் குழுவினரது ஈராண்டு உறங்கா உழைப்பாலும், கருங்கற் களைப் பாளம் பாளமாக வடிவமைத்து வண்ணமுற நிமிர்த்தப்பட்ட இந்தத் திருவள்ளுவர் சிலை, அமெரிக்க சுதந்திரதேவி சிலையை விடச் சிறப்புப் பெருமையுடையது; கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெறத்தக்கது. 1330 குறட்பாக்களை 133 அதிகாரங்களில் வகுத்துள்ளமைக்குச் சான்று பகருவது போல 133 அடி உயரப் பெருமையுடையது; பிரமிப்புத் தருவது.

இதில் நான் சிறப்பாக அவையோர் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவது இந்த 133 அடி உயரச் சிலையின் மூன்று நிலைப் பகுப்பு.

சிலைநிற்கும் ஆதார பீடத்தின் உயரம் 38 அடி. இது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களுக்கு நிகர். இந்தப் பீடத்தின் மீது நிமிர்ந்து நிற்கும் உருவச் சிலையின் உயரம் 95 அடி. அதாவது பொருட்பால் அதிகாரம் 70, இன்பத்துப்பால் அதிகாரம் 25 இரண்டும் சேர்ந்தால் 95, ஆதார பீடத்தையும் சேர்த்தால் ஆக மொத்தம் 133 அடி (அவையோர் கர ஒலி)

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் வள்ளுவர் சிலையின் வடிவமைப்பை விரித்துச்சொல்லி வள்ளுவர் முப்பாலில் காமத்துப்பால், பொருட்பால் எனும் இரண்டும் அறத்தின் மீதே ஊன்றி நிற்கின்றன எனும் அற்புதப் பொருத்தத்தை அழகுறச் சொன்னார். அறிதற்குரிய அரிய செய்தியை நினைவூட்டியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி (மீண்டும் கைதட்டல்) நான் விட்ட இடமான சிலை பற்றிய விவரங்களை மீண்டும் பேசுவோம். அறிதோறும் அறியாமை கண்ட இடத்திற்கு மீண்டும் போகலாமா?”

“ ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம், செறிதோறும் சேயிழை மாட்டு” (1110) எனும் ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதிகார இறுதிக் குறட்பா அறிவினைத் தேடத் தேட, அறியாமையே மிகுவதை இவ்வளவு நுட்பமாக உணர்த்துகிறது. மற்றொரு அருமையான குறள்.. அதே அதிகாரத்தில்தான்,

“தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

     அம்மா அரிவை முயக்கு”            (1107)

என நம்மை விருந்தோம்பலோடு இந்த மனையாளொடு இருந்தோம்பி மகிழும் ஆரா இன்பத்தையும் அழகுற ஒன்றாக்குகிறார் வள்ளுவர்..”

இடைமறிக்கும் புலவர்

“தமது வீட்டில் இருந்து கொண்டு, தாம் சம்பாதித்தலில் விருந்து அளித்து அதை விருந்தினர் வயிறார உண்பதைக் கண்டு மகிழும் மனம்…”

பெரும்புலவர்

“பின்னே என்ன? ஓட்டலுக்குப் போய் நாலு பேரோட வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு, பில்லைத் தட்டுலே வச்சவுடனே வேறே பக்கம் முகத்தைத் திருப்பிக்கிற இந்தக் கால நாகரிகத்தை – அடுத்தாத்து நெய்யே என் அகத்துக்காரி கையேங்கிற உபசாரத்தை – வள்ளுவர் செய்யவில்லை.”

ஓர் அரசு அதிகாரி

“நண்பருடன் ஓட்டலுக்குப் போய்ச் சிக்கிக் கொண்ட அனுபவத்தோடு புலவர் ஐயா பேசுகிறார்” (சிரிப்பலை)

புலவர்

“அட, நான் ஓட்டலுக்கே போறதில்லைய்யா. வீட்டிலேயே நமக்கு எப்போதும் விருந்துதான் போங்க…”

இன்னொருவர்

“அந்த ரகசியத்தையும் சொல்ல மாட்டேங் கிறீங்களே” (மீண்டும் சிரிப்பு)

மற்றோர் அரசு அதிகாரி

“இந்தப் பரம ரகசியங்களை எல்லாம், ஒவ்வொருவரும் பகிரங்கப்படுத்தத் தொடங்கி விட்டால் அதற்காக என்றே தனி இயல் ஒன்றை நாமே வகுத்து, அதையும் வள்ளுவர் தலையில் கட்டிவிடலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“வருமான வரித் துறை ஆணையர் திரு மோகன் காந்தி அவர்கள் ஏதோ புதிய செய்தி ஒன்றை எழுப்ப விழைகிறார். கேட்டறியலாமே?”

வருமான வரித் துறை ஆணையர் திரு.மோகன் காந்தி

“மூதறிஞர் ராஜாஜி அவர்களின் ‘பஜ கோவிந்தம்’ எனும் நூலைப் படித்தேன் இரு குறட்பாக்களில் வரும் ‘வேண்டாமை எனும் செருக்கு – பற்றுக பற்றற்றான் பற்றினை’ எனும் வரிகளுக்கு மன நிறைவான விளக்கம் பெற்றேனில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“பொருள் சேர்ப்பது வாழ்க்கைத் தேவை. அதனை உழைப்பால் நியாயமான முறையில் ஈட்ட வேண்டுமே தவிர, அறம் தவறிப் பொருள் சேர்க்கும் வேணவா, பேராசை அறவே கூடாது. அதிலும் தவறு எனக் கருதாமல், பிறர் பொருளைக் கவர முயன்றால் அதனால் முடிவில் துன்பமே மிகும். ‘இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும், வேண்டாமை என்னும் செருக்கு’ (180) என்பது குறள். பிறர் பொருளைக் கண்டு பொறாமை யுறுவதே குற்றம் எனப்படும். அப்படியிருக்கப் பிறர் பொருளை எப்படியேனும் அபகரிக்கச் சதித்திட்டம் செய்வது பெருங்குற்றம். அன்புடையவர் பிறர்க்குப் பொருளுதவி செய்து அவரைக் கை தூக்கி விடுவர்.”

அரசு அதிகாரி ஒருவர்

“பொறாமையும் பேராசையும் உடையவர் உதவி செய்வது போல நடித்துத் தக்க சமயத்தில் காலை வாரி விடுவார். கை தூக்கி விடுவதை விட, காலை வாரி விடுவதுதான் இப்போது மிகச் சுலபமாகத் தெரிகிறது.” (அவையின் முறுவல்)

ஒருங்கிணைப்பாளர்

“அன்பற்ற பொறாமைக் குணமுடையார், கொள்கையோ நடுநிலையோ இல்லாது, பிறர் தேடிய பொருளைத் தான் மட்டும் எப்படியும் அடையக் கருதினால், அவர்களுடைய குடி அழியும், குற்றங்களும் அப்போதே விளையும். எனவே, தவறான முறையில் பொருள் தேட மறுப்பதே ஒருவகையில் மானமுடைய செருக்கு என்கிறார் வள்ளுவர்.”

பெரும்புலவர்

“கலைத்திறமுடையோர்க்குக் கலைச்செருக்கு இருப்பது போல, தமது அரிய உழைப்பால் பெருஞ்செல்வம் சேர்த்தோர் சிலரிடம் மிடுக்கு அமைவது போல, வெற்றி மேல் வெற்றி பெறும் அரசியல் தலைவர்கள் சிலருக்குச் செருக்கு வந்து பற்றிக்கொள்ளுவது போலப் பிறர் பொருளைக் கவர நினையாமையே ஒரு வகையில் செருக்கு; அதாவது, வியந்து பாராட்டத்தக்க செருக்கு எனும் குறள் கருத்தைச் செம்மல் விளக்கியமைக்கு நன்றி. அடுத்து..”

ஒருங்கிணைப்பாளர்

‘நடுவுநிலை தவறிச் சேர்த்த பொருளால் தானம் செய்து புகழ், விளம்பரம் என்றெல்லாம் தேடினாலும், அது, ஒருவகையில் கருமித்தனம் தான்.”

புலவர் ஒருவர்

“அதற்குப் பின்னால் கர்ம வினைப் பலனும் உண்டு.”

ஒருங்கிணைப்பாளர்

“அறத்தொடு சாராத பொருளைப் பிறர்க்கு ஈகை செய்வதால், புகழோ பெருமையோ நிலைபெற்று விடாது, வெற்று விளம்பரமாகவே போய்விடும்.”

வருமான வரித் துறை அதிகாரி

“ராஜாஜி சொன்ன.. பற்றுக குறளைக் கொஞ்சம் பற்றுக..” (அவையில் சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

     பற்றுக பற்று விடற்கு..”        (350)

என்பது வள்ளுவம்”

பெரும்புலவர்

“வருமான வரித் துறை ஆணையர் கேட்ட கேள்வியில் எத்தனை பற்றுகள்? பற்றும் வரவும் இல்லாமல் பேரேடு போட முடியாது. வரிவிதிப்பும் கிடையாது” (சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“‘துறவு’ அதிகாரத்தின் இந்தக் கடைசிக் குறளில் ‘பற்று’ எனும் பிடிப்பு வாழ்வையும் விடுப்பு வாழ்வினையும் வள்ளுவர் வேறுபடுத்திக் காட்டுகிறார். துறவு முறைகள் பல வகை. இளங்கோவடிகள், விவேகானந்தர் போன்றவர்களின் மணவாத் துறவு, மணந்து வாழும் போதே ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின் மேற்கொள்ளும் சில கோட்பாட்டுத் துறவுகள், அருளுணர்வு பெருகி, தன்னலம் ஓய்ந்தபின், இல்லற வாழ்வையும் துறந்து, பிறர் நலம் பெறவும், தன் ஆன்மா உய்வு பெறவும் முழுமைத் துறவே பூணுதல்… ஆனால், இல்லறத்தில் இருக்கும் போதே, சில நிலைகளில் பற்றற்று வாழ்ந்து, கடமையைச் செய்வோரும் காந்தியடிகளைப் போலச் சிலர் உண்டு. புறத்துறவும் கொள்ளலாம். அகத்துறவும் அமையலாம். முழுமையான, பற்றறுத்த வாழ்க்கை, ஐம்புலனையும் செம்மையாக அடக்கிய வாழ்க்கை பூணுவது எளிதில்லை. ‘யான், எனது…’ என்பது இருந்தே தீரும்.”

பெரும்புலவர்

“ஏதாவது ஒன்றைப் பற்றி நிற்பதே உயிரின் இயல்பு. எனவே சில்லறைப் பற்றுக்களை விட வேண்டுமானால் செம்பொருளான சிறந்ததொரு பற்றினைப் பற்றுக என்பது தானே பொருள்?”

ஒருங்கிணைப்பாளர்

“பிறவி நோக்கம் இடையறா இன்பமே ஆகும். அதனால் நிம்மதியும் அமைதியும் பெறுவதே குறிக்கோள். இந்த இன்பத்திற்கு அடிப்படை ஆசை. அது அளவின்றிப் பெருகிப் பேராசையாகிவிட்டால், அதுவே துன்பத்திற்கு மூல காரணம் ஆகிவிடுகிறது.”

பேராசிரியர்

“அதாவது, ஒருவன் எதனிடம் மிகுபற்றுக் கொண்டு வாழ்கிறானோ அதனால் துன்பம் அடைவான், எதிலிருந்து பற்று விட்டு நிற்கிறானோ அதானல் அவனுக்குத் துன்பம் இல்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்’ (341) எனும் குறட்கருத்து அதுதான். இந்தப் பத்தாம் பற்றுக் குறளை வள்ளுவர் வினா – விடை போல அமைத்துள்ளது தான் சிறப்பு. கைவிட வேண்டியது எது? பற்று விடுதல். அதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும்? வேறொன்றைப் பற்றுக. இந்தப் ‘பற்றுக’ எனும் பதத்தை மிக நயமாகக் கையாண்டு ஒருவகை மயக்கமூட்டுகிறார் வள்ளுவர்.”

பெரும்புலவர்

“ஆமாம், எதைப் பற்றினாலும் மயக்கம் வந்துவிடாமல் கைப்பற்ற வேண்டும்.”

ஓரன்பர்

“புலவர் ஐயா எந்தப் பற்றையும் இன்னும் விடாத அனுபவத்தைச் சொல்கிறார்” (அவையில் சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“இப்போதெல்லாம் தனிநபர் வாழ்வை விடச் சமுதாய வாழ்வில் இருப்போரிடம் பொதுப்பற்றை விடத் தன்னலப் பற்று, தன் பெண்டு, தன் பிள்ளை என்னும் வாரிசுப் பற்றுகள் ஆட்டி வைக்கின்றன. இத்தகையோரிடம் மக்களிடம் அதிலும் சிறப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழே சீரழிந்தோரிடம் இரக்கச் சிந்தை எனும் பற்றுறுதி ஏற்பட்டால், பிற சுயநலப் பற்றுக்கள் எல்லாம் தாமாக விட்டுப்போக ஆரம்பித்துவிடும். புகழ்ந்தவை போற்றிச் செய்யும் பெருமனம் வளரத் தொடங்கும். வள்ளலார் வேண்டியது போல, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்யும் தொண்டுமனப் பற்று விடாது பற்றிக் கொள்ளும். அதனைப் பற்றுக என வள்ளுவர் சொன்னதாகக் கருதி ராஜாஜியின் பஜ கோவிந்தச் சரிதத்தை நாமும் ஏற்போம்.” (கை தட்டல்)

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“எல்லோரும் ‘பஜ கோவிந்தம்’ மட்டும் பாடிக் கொண்டே இருந்தால் நாட்டில் படரும் பசிப்பிணி போய்விடுமா, என்ன? இந்த உலகு இருக்கும் வரை ஏழையரும் இருப்பர். எனவே அயலாரை நேசித்து உதவும் பற்றினை வளர்ப்பதே மனித நேயம். அது இல்லாத வெறும் இறைபக்தி பொருளற்றது என விவிலியம் போதிக்கிறது.”

இடையில் ஒருவர்

“கிட்டத்தட்ட எல்லாச் சமயங்களின் உபதேச சாரமும் அதுதான்.”

ஒருங்கிணைப்பாளர்

“உபதேசம் வெறும் ஊறுகாய் போல மட்டும் இருந்து விடலாமா? பற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளரவேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.”

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 10

Image result for thirukkural

 

பேராசிரியர்

“குணம் என்னும் குன்றார்க்கு வெகுளி ஏற்படுவது இயல்புதான் என்றே வள்ளுவர் ஏற்கிறார்.”

புலவர் ஒருவர்

ஆனால், அது ஒரு கணமே நீடிக்கும் – அதற்குள் காத்துக் கொள்க என மீட்சியும் சொல்கிறார். இந்த இளைஞர் அந்த ஒரு கணத்திற்குள் ஓடி வந்துவிட்டார் என நினைக்கிறேன்.”

இளைஞர்

“குணம் எனும் குன்றேறி நிற்பதாகக் கருதப்படும் பெரியவரிடம் கோபாக்கினி போலச் சுட்டெரிக்கும் சினம் வரலாம் என வள்ளுவர் சொல்லுகிறாரா?”

ஒருங்கிணைப்பாளர்

“சுயநலம் கருதாது, பொதுநலப் பணியில் முனைந்திருக்கும் போது இடையூறுவரின், அதுவும் ஒரு வகையில் குணநல வெளிப்பாடு எனவே கொள்ள வேண்டும். அத்தகைய சினம் – வெகுளி, கரவின்றிச் சடுதியில் வெளிப்பட்டுவிடும். மின்னல் போல ஒரு வெட்டுவெட்டிவிட்டு, விரைவில் மறைந்தும் விடும் என்பதே என் கருத்து.”

“ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

     வேந்தனும் வெந்து கெடும்.”         (899)

உயரிய கொள்கையால் உரம் பெற்ற சான்றோர்க்குக் கோபமே வரக்கூடாது என்பது நடைமுறைச் சாத்தியமா? எனும் கேள்வி இங்கு முரணாக முன் நிற்கிறது.”

வருமான வரித் துறை அதிகாரி

“இயேசுபிரான், நபிகள் நாயகம் உள்ளிட்ட சமய நிறுவனர்களுக்கும், காந்தியடிகள் போன்ற அகிம்சையே உயிராகக் கொண்டோர்க்கும், பண்டித நேரு போன்ற ஆட்சிப் பொறுப்பாளர் களுக்கும் அவ்வப்போது சினம் ஏற்பட்டதை வரலாற்றில் படித்திருக்கிறோம்.”

வாழ நூல் செய்த வள்ளுவர்

வளனரசு

“வள்ளுவப் பெருந்தகை எப்பொருளையும் அதன் பயன்பாடு கருதியே விளக்குவார். உலகுக்கு ஒட்டக்கூடிய ஒழுக்க வரைமுறையே பேசுவார். வாழ நூல் செய்தவர் ஆதலால் செயல்பாட்டுக்கு வரும் அற முறைகளையே அடுக்கிச் சொல்வார் என்பது எங்கள் பேராசான் வ.சுப.மா.வின் வள்ளுவம்.”

பேராசிரியர்

“இங்கு கூறிய கருத்துக்கு உடன்பட்டு ஒன்று சொல்வேன். ஈட்டும் பொருளனைத்தையும் ஈகையாகத் தந்துவிடுக என வள்ளுவர் சொல்லவில்லையே?

“ஆற்றின் அளவறிந்து ஈக; அது பொருள்

     போற்றி வழங்கும் நெறி”            (477)

என்றே போதிக்கிறார்.”

ஒருங்கிணைப்பாளர்

“அந்த நடைமுறைக்கு உகந்த முறையினையே அவர் கூறும் சான்றோர் சினம், அல்லது சாதாரண மக்கள் வெகுளாமை என்பனவற்றிற்கும் பொருத்திப் பார்க்கலாம்.

ஒருவர் உள்ளத்தில் உருவாகும் வெறுப்பும் பகையுமே வெகுளியாய், சடுதியில் வெளிப்படுகிறது. அது அருளுடைமைக்கு மாறானது. எனவே, அதற்கு இடம் தராமல் காத்து வர வேண்டும். ஆயினும் குறிப்பாக வலியார் – மெலியார் என எல்லோரிடமும் சகட்டு மேனிக்குச் சினம் காட்டி எரிந்துவிழுதல் மனிதப் பண்பு ஆகாது. செல்லிடத்தும் காப்பதே சினம். பிற இடத்தில் அதைக் காப்பதும், காத்துக் கொள்ளாததும் ஒன்றுதான். எனவே நிர்வாகச் செயலினூடே சிலரது இடையீட்டால் பொறுப்பில் உள்ளோருக்கு அடக்கமுடியாதபடி வெகுளி ஏற்படினும், சினம் கொள்ளமாட்டேன் எனும் உறுதியை நாள் தோறும் வளர்த்து வந்தால்தான், தப்பித்தவறியும் சினம் கொள்ளாமல் பிறரோடு, தன்னையும் காத்துக் கொள்ள முடியும்.”

ஓர் அன்பர்

“அலுவலகக் கோபத்தைப் பற்றிப் பேசுவதைவிட அன்றாடம் வீட்டில் மனைவி மக்களோடு எல்லாம் கோபப்படாமல் பொழுதை ஓட்ட முடிவதில்லை; கல்விக் கூடத்தில் மாணவரைக் கண்டிக்காமல் இருக்க முடிவதில்லை.”

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

 ‘கோலைப் பேணிக் குழந்தையைக் கெடு’ எனும் பழமொழியே நியாயமான கோபம் – உலோகத்தைச் சூடேற்றி உருவமைப்பதற்குச் சமமானது என்றே உளவியல் ரீதியாகச் சொல்லுகிறது. கோபமே கொள்ளாத சாதுவை ‘அப்பிராணி’ என்றும் ‘மண்ணாந்தை’ என்றும் பட்டம் சூட்டி நையாண்டி செய்கிறது.”

பெரும்புலவர்

“சப்-கலெக்டர் ஐயா… ஆங்கிலப் பழமொழியைச் சொன்னார்… நான் ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் பயின்ற நாளில் கேட்டும் சொல்லியும் மகிழ்ந்த பாடலைச் சொல்லட்டுமா?”

அன்பர் ஒருவர்

“பெரும் புலவர் ஐயா பாட முற்பட்டால் அதைத் தடுத்துவிட முடியுமா? நீங்கள், உங்கள் பழைய பாட்டைப் பாடுங்கள்; எங்கள் பாட்டிற்கு நாங்கள் இருக்கிறோம்.”

பெரும்புலவர்

“அந்தக் காலம் அச்சுப்புத்தகம் வராத – ஏடும் எழுத்தாணியும் மாணவப் படைக் கலங்களாக இருந்த காலம்.”

அன்பர்

“சரி ஐயா – பாட்டைச் சொல்லுங்கள்”

ஏடும் எழுத்தாணியும்

பெரும்புலவர்

“ஏடு கிழியாதா? எழுத்தாணி ஒடியாதா? வாத்தியாரு சாவாரா? வயிற்றெரிச்சல் தீராதா?” (எல்லோரும் சிரித்தல்)

அன்பர்

“புலவர் ஐயா.. எத்தனை ஏட்டைக் கிழித்தாரோ, எத்தனை எழுத்தாணியை ஒடித்தாரோ… ஆனால் (பட்ட) பாட்டை மட்டும் மறக்காமல் சொல்லிவிட்டார்.”

ஒருங்கிணைப்பாளர்

“நாட்டு நிலவரப் போக்கில் சீர்குலைவு ஏற்படக் காணும் போது சான்றோர் வாய் மூடி இருக்கலாகாது; இருக்கவும் மாட்டார்கள். அத்தகைய ஏந்திய, உயரிய கொள்கையர் சீற்றம் கொள்ள நேரிட்டால், ஆட்சித் தலைவனாகிய வேந்தனோ, அவர் யாராயினும் இடைமுறிந்து வீழ்ந்து விடுவர்; ஆட்சியும் கவிழ்ந்துவிடும்.”

பேராசிரியர்

“ஒருங்கிணைப்பாளர் கூறிய இந்த கருத்தைத் தொடர்ந்து நான் சொல்ல வருவது ஒன்று உண்டு. சினம், கோபம், வெகுளி என்பன எல்லாம் வாழ்க்கைப் போக்கில் நமக்கு ஏற்படும் இயல்பான தொரு மெய் உணர்வு. புராண கால விசுவாமித்திரர் சாபம் தொட்டு, இராமாயண இராம பிரானின் சினம், பாரதப் போருக்கு வித்திட்ட பாஞ்சாலி சபதம், மதுரையை எரித்த கண்ணகியின் ஆறாச் சினம், கண்ணகியையும் கோவலனையும் மதுரைக்குக் கூட்டி வந்த கவுந்தியடிகள் இடைவழியில் குறுக்கிட்ட தீயவர்களை முள்ளுடைக்காட்டில் முது நரிகளாகிடச் சபித்த கோபம் எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால் சமுதாயத்தை அணி கோலிக் காப்பது இந்த அன்றாட மன உணர்வுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் (லிணீஷ்s) என ஒரு தொகுப்பு இன்றேல் இன்று சமூக ஆட்சியோ, அரசமைப்போ இராது.”

அன்பர்

“இந்தச் சட்டத்தாலும் பல சமயம் தீங்கு நேரிட்டுள்ளதே?”

பேராசிரியர்

“உரிமைப் போர்க்காலத்தில் காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கம் நடத்தியதற்கும் இன்று பல வகைகளில் நாடெங்கும் சட்ட எதிர்ப்பு உண்ணாவிரதங்கள் நடப்பதற்கும் உரிய காரணம் – சட்டம் எப்போதும் சரிவரச் செயல்படாமையே அல்லது செயல்படவிடாமையே.”

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்

அரசு அதிகாரி

“அத்தகைய சங்கடமான சூழலில் என்ன செய்வது?”

ஒருங்கிணைப்பாளர்

“அங்கே தான் சான்றோர்கள் வந்து முன் நிற்கிறார்கள். நமது பெரிய ஆதீனம் அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளார், தெய்வத்திரு வாரியார் சுவாமிகள் முதலிய பண்பட்ட அருளாளர்களும் ஞானசீலர்களும் சமுதாயத்தை நெறிப்படுத்த முன் வருகிறார்கள்! அத்தகைய ‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ என முத்தாய்ப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை. உலகம் வாழ்வது சட்டத்தால் அல்ல; சம்பிரதாயக் கோட்பாடுகளால் அல்ல; உலகு உயிர்ப்பது பண்பட்ட பெரியோரின் தன்னலமற்ற வழிகாட்டுதலால் மட்டுமே! அத்தகைய சான்றோர் சினம் கொள்ள நேர்ந்தாலும், அது ஒரு கணமே நீடித்தாலும்… அத்தகைய சூழல் ஏற்படாமல் முற்காக்கும் தற்காப்பே மக்களுக்கும் நல்லது; ஆட்சிக்கும் பொருந்துவது. மற்றொன்று பிறர் நலமும் பேணும் நல்ல சமுதாய அமைப்பில் போராட்டத் தேவையே ஏற்படாமல் போய்விடும்; அதையும் மீறிப் போரிட்டே ஆக வேண்டிய கட்டாயத்தை ஓர் அரசமைப்போ, நிர்வாகமோ உருவாக்கு மானால், அதுவும் இடைமுரிந்து அழிந்து போய்விடும் எனும் கருத்தில் யாருக்கும் முரண் இருக்க முடியாது.”

‘தமிழ்ப் பாவை’ கருணைதாசன்

“வாழ்க்கையில் இன்று முரண்கள் அதிகமாகி முட்டுக்கட்டையிடும் களங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. அறிவியல் வளர்ச்சியில் புதிய அங்கங்கள் ஒவ்வொரு துறையிலும் நாளுக்கு நாள் உருவாகி வருவதையும் அவற்றைப் பயன் கொள்வதை¬யும் முரணாக ஏற்க வேண்டிய தில்லை. ஆனால் வாழ்வியல் அடிப்படைத் துறைகளான கல்வி, அரசு, நிர்வாகம், ஆன்மீகப் போக்கு, பொதுத்துறை நிறுவனச்செயல்பாடு, மக்கள் போராட்டம் என நாள்தோறும் புதுப்புது முரண்கள் முளைத்து வருவதை நாம் கண்டும் காணாமல் இருக்க இயலாதல்லவா..? அந்த முரண்களைப் பற்றியும்…”

அரசு அதிகாரி

“இன்று சந்தித்த எண்ணற்ற முரண்களோடு நிலா முற்ற அரங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.. சாப்பாடு காத்திருக்கிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘தமிழ்ப்பாவை’ ஆசிரியர் சுட்டியது போல, நமக்குத் தோன்றும் முரண்களை எல்லாம் அடுத்து வரும் அரங்கில் கலந்து ஆய்வோம். இந்த அரங்கு அன்ன மீனாட்சி உணவக வள்ளுவர் அரங்கில் விரைவில் நிகழ்வுறும். இப்போது தமிழ் வாழ்த்துடன் உணவுக்குச் சொல்வோம். அனைவரும் வருக.”

(நிலவை மேகம் மறைக்கிறது)

அமர்வு மிமிமி

அன்ன மீனாட்சி வள்ளுவர் மன்ற அரங்கு இறைவாழ்த்துடனும் குறள் வாழ்த்துடனும் தொடங்கியது.

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைய நிலா முற்றத் தொடர்ச்சி அரங்கிற்கு மகளிர் அதிகமாக வந்துள்ளமை பெருமை தருகிறது.”

ஒருவர்

“அன்ன மீனாட்சி அரங்கில் அறுசுவையோடு நடக்கும் போது மகளிர் அதிகமாக வருவது இயல்புதானே!”

ஒருங்கிணைப்பாளர்

“முதலில் எங்கள் வி.கே.கே.மேனிலைப் பள்ளித் தமிழாசிரியர் திருமிகு வள்ளியம்மை வந்துள்ளார். அவர் தொடங்கட்டும்.”

வள்ளியம்மை

“நான் குறளைப் போலவே கடவுள் வாழ்த்துடன் என் ஐயத்தைத் தொடங்குகிறேன். வள்ளுவப் பேராசான் தம் பொதுமை நூலில் ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ எனத் தொடங்கு கிறார். ஆதிபகவன் என்பது சமண, பௌத்த சமயத் தொடர்புடையவை.  அப்படியானால் வள்ளுவர் எந்தச் சமயத்தவர்?”

வளனரசு

“எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய (ஆங்கில நெடுங்கணக்கின் ‘ஏ’ உட்பட) எழுத்தை முதன்மையாகக் கொண்டிருப்பது போல, உலகம் ‘பகவனை’ அதாவது ஒரு மூலப் பொருளை முதலாகக் கொண்டுள்ளது என்பது நேர் பொருள்.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“இந்த ‘பகவன்’ எனும் சொல் வடமொழியில் இல்லை. வள்ளுவரால் உருவாக்கப்பட்ட தூய தமிழ்ச்சொல் என்றே அறிஞர் பலர் கருதினர். ஏனெனில், இச்சொல் சங்க இலக்கியங்களில் பயிலப்படவில்லை; சிலம்பு, மணிமேகலையில் முறையே அருகப் பெருமானையும் புத்தரையும் அதிலும் கூட இடுகுறிப் பெயராகவே சுட்டுகிறது.”

இடைமறித்த புலவர்

“இன்னா நாற்பதில் முதல் பாடலிலும் வருகிறது.”

பேராசிரியர்

“ஆனால் உரையாசிரியர்கள்தான் வடமொழிச் சொல்லோ எனக் கருதி ‘வழிபாட்டுக்கு உரியவன்’ எனப் பொருளமைதியைத் தந்துவிட்டனர் எனலாம். ‘ஆதிபகவன்’ எனும் சொல், தொல்காப்பியம், சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு, இரட்டைக் காப்பியங்கள், ஏன் பிற்காலத் தேவார திருவாசகம், திருமந்திரம், ஆழ்வார் பாசுரங்களிலும் இல்லை என அறுதியிட்டுச் சொல்லலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“ஆனால், குறளில், ‘முதல’ எனும் சொல் அடிப்படையானது, காரணமானது, முதன்மை யானது எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டது என ஏற்போமே.”

பெரும்புலவர்

“நோய் நாடி நோய் ‘முதல்’ நாடி, ‘முதல்’ இல்லார்க்கு ஊதியம் இல்லை… எனப் பின்னர் வரும் சொற் பயன்பாடுகளோடு இணைத்தும் இதைச் சிந்திக்கலாமே?”

வேறு ஒரு புலவர்

“திருவாய் மொழியிலும் ‘ஆதி எம் பகவன்’ என வருவதாக நினைவு.”

ஒருங்கிணைப்பாளர்

“‘கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே’ எனத் தொல்காப்பியச் சூத்திரம் கூறியிருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வள்ளுவர், கடவுள் வாழ்த்தோடு தொடங்கினார் என்பதை மறுப்போர் கடவுள் சார்பினை ஏற்காது படிமுறை  வளர்ச்சி, உலோகாயதச் சிந்தனை  எனும் எண்ணத்தோடும் ஏற்கலாம்.”

பேராசிரியர்

“ஆனால், வள்ளுவர் பிந்திய குறள் வரிசையில், நிலையாமை, துறவு, மெய்யுணர்வு பற்றி எல்லாம் குறிப்பிடுவதால் இறைமை வழிபாடே இல்லாதவர் என முடிவு கட்டுவது பொருந்துமா?”

புலவர் செல்வ கணபதி

“குறளில் ‘கடவுள்’ எனும் சொல் இல்லை. பரிமேலழகர் தம் உரையில் புகுத்திய இதனை மாற்றி ‘இறைவழிபாடு’ எனவும் ஏற்கலாம்.”

கருணைதாசன்

“நாவலர் தாம் எழுதிய உரையில் ‘அறிவன்’ என்றார்; கலைஞர் தம் உரையில் ‘வழிபாடு’ எனும் பொதுச் சொல்லால் குறிப்பிட்டுவிட்டார்.”

வளனரசு

“தமிழாசிரியை அவர்கள் கூறியபடி, ‘வள்ளுவர் – சமண, பௌத்த சமயச் சார்பினரோ?’ எனும் கேள்விக்கே திரும்பவும் வர விழைகிறேன்… வள்ளுவர் காலத்தே இவ்விரு சமயங்களும் இங்கு நிமிர்ந்திருந்த தடயங்கள் உள்ளன. கல்லாடனாரும் இறைமையைக் குறிக்கும் சொல்லாக ஏற்றது இதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், எந்த இறைமை? சமணமா? பௌத்தமா? வள்ளுவர் பௌத்தர் போல முடியை மழித்தலும் வேண்டா, சமணர் போலத் தாடி வளர்த்தலுமாகிய வெளி அடையாளம் வேண்டா, உலகு பழித்ததை ஒதுக்கி வாழ்ந்தாலே அது இறைமை வழிபாடுதான் என உறுதிபட, நடுவு நிலை பேணி விளக்கினார். எனவே வள்ளுவரைச் சமயச் சிமிழுக்குள் அடைக்க முயல வேண்டாம்.

‘சமயக் கண்ணர் தம் மதிவழிச் செல்லாது உலகியல் கூறிப் பொது இது’ என்ற திருவள்ளுவ மாலைச் செய்தியை, வள்ளுவப் பொதுமைக்கும் மாலையாக அணிவித்து இவ்விவாதத்தை இத்துடன் நிறைவு செய்யலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“அறிவு பெறப் பெற, அறிவின் தூய்மையை எட்டி அடைய முற்பட வேண்டும். தூய அறிவு வடிவானதொரு பரம்பொருள் கடவுள் எனக் கொள்ளலாம். வாலறிவனான அவன் திருவடிகளைத் தொழாவிட்டால், கற்ற கல்வியால் பயன் இல்லை. அத்தகைய ‘வாலறிவன்’ யார் எனத் தேர்ந்து தெளிவதும், ஓர்ந்து தொழுவதும் அவரவர் மனத்தைப் பொறுத்தது; சார்ந்துள்ள நம்பிக்கையைப் பொறுத்தது. இதைச் சர்ச்சைக்கு உரியதாக்கிச் சமர்கள் புரிந்த சரித்திர ஏடுகளின் ரத்தக் கறைகள் மீண்டும் கசிய வேண்டாம். எனவேதான் நமது இந்தியத் திருநாடு, சமயங்கள் பலவற்றின் விளைநிலமாயிருந்து வந்துள்ள போதிலும் – சமயச்சார்பற்ற நாடாக (ஷிமீநீuறீணீக்ஷீ ஷிtணீtமீ) தன்னை அரசியல் சட்டபூர்வமாக அறிவித்து உலகிற்கே வழிகாட்டியும் வருகிறது.” (கைதட்டல்)

பேராசிரியர்

“சமயம் என்பது வேறு; ஆன்மீகம் (ஷிஜீவீக்ஷீவீtuணீறீவீsனீ) ஆகிய அருள் என்பது அதன் வழியே அடையக் கூடிய நற்பேறு. இவற்றில் ஏற்பட்டு வரும் மயக்கமே நாட்டில் குழப்பமாக, கலவரமாகக்கூட நீடிக்கிறது. உண்மைச் சமயங்கள் வேறு; சமய நெறியாளர் போல நடிக்கும் கபட வேடதாரிகள் வேறு.”

புலவர் செல்வ கணபதி

“ ‘அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு’ (247) எனும்  இறுதியுரை போல, நமக்கு அருளும் வேண்டும்; பொருளும் வேண்டும்.”

கருணைதாசன்

“ஆனால் இந்த இரண்டையும் கபட வேடத்தால் கவரும் நிலை பரவுகிறதே என்பதுதான் நல்லவர்களிடையே ஏற்பட்டுவரும் கலக்கம்… மரம் பழுக்க உழைத்த தோட்டக்காரன் கனிகொய்யக் கருதியிருக்கும் போது எல்லாம் வெம்பி விழுந்த பரிதாப நிலை பரவக்கூடாதே… மக்களில் நல்லவர் யார்? தீயவர் யார்? எனப் பிரித்தறிய முடியாது. எல்லோரும் ஆன்மிக அடையாளங்களுக்குள் ஒரே மாதிரியாகத் தோன்றும் புதியதொரு ‘சமய விழிப்பு’ ஏற்படுகிறதே. இது நலம் பயக்குமா?”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“‘தமிழ்ப் பாவை’ ஆசிரியர் மக்களையும் கயவரையும் ஒன்று போலக் காண்கிறார் எனக் கருதத் தோன்றுகிறது.”

கருணைதாசன்

“நினைவூட்டலுக்கு நன்றி. ஒரே உடை, ஒரே மாதிரி தோற்றப் பொலிவு. நல்லவர் – தீயவர் யாரெனப் பகுத்தறிய முடியாத் தவிப்பு. ‘மக்களே போல்வர் கயவர்’ எனும்படி வள்ளுவரே மயங்கியது ஏன்?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் கயமையைக் கண்டு கடியும் குறட்பா வரிசையில் மக்களில் கயவர் உருவுடையவர் பலர் உண்டு எனும் உலகியலைக் கண்முன் கொணரும் கருத்து இது; மயக்கம் ஏதும் இல்லை; சற்றுத் தயக்கம் வருவதை விளக்கவே வள்ளுவர் முயன்றுள்ளார்.

மக்கள் கயவரைப் போலத் தோன்றுபவர்கள் என்பதை விட, கயவர்கள் மக்கள் போல நடிப்பார்கள் எனப் பொருள் கொள்ளுவதே நலம்.

மக்கள், விலங்குகள் எனும் உயிரினங்களைப் பொறுத்தவரை புலி, மான் முதலியன தோற்றத்திலும் செயலிலும் தத்தமது இயல்பினின்று – குணத்திலிருந்து- வேறுபடுவதில்லை. ஆனால் மனிதர்களில் விலங்குக் குணம் உடையோரும் உண்டு. விலங்கை அடையாளம் கண்டு கொள்ளுவதைப் போல, உடல் அமைப்பால் ஒன்று போலத் தோன்றினாலும், குணநிலையில் குள்ள நரி மனமுடையோரை – வஞ்சகரை – எளிதில் இனம் கண்டுபிடித்துவிட முடியாது என்கிறார் வள்ளுவர். அத்தகையோரை ‘மக்களே போல்வர் கயவர்’ எனும் அருமையான உவமையால் மனதில் பதியும்படியாகக் குறிப்பிடுகிறார். இதிலே ஒரு கேலி, நையாண்டி, ஷிணீக்ஷீநீணீsனீ எல்லாம் புலப்படச் செய்கிறார்!”

செந்தமிழ்க் கல்லூரி மாணவி சித்ரா

“ ‘தேவர் அனையர் கயவர்’ எனும் குறளில் கயவரை மனிதரைவிட உயர்த்தி, தேவர் நிலையோடு ஒப்பிடுவது ஏன்?”

ஒருங்கிணைப்பாளர்

“‘தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

 மேவன செய்தொழுக லான்.’        (1073)

மக்களும் கயவரும் வடிவால் முழுவதும் ஒத்திருப்பர். ஆனால் குணத்தால், பண்பால், செயலால் மாறுபட்டவர் என நேரடி விளக்கம் தந்த வள்ளுவர் இந்தக் ‘கயமை’ அதிகாரக் குறளில் மேவன செய்து ஒழுகுதல், அதாவது செய்யக் கூடியவை, தவிர்க்க வேண்டியவை எனும் அறநெறிக் கோட்பாடுகளை மதியாது, மனம் விரும்பியபடி எல்லாம் நடப்பர் என இருசாராரையுமே சாடுகிறார்! கட்டுப்பாடற்ற போது தேவர் – கயவர் – மக்கள் எல்லாம் ஒரு நிலையரே ஆவர் என்கிறார்.”

பெரும்புலவர்

“எற்றிற்குரியராக, விரைவில் அரசியலில் சமுதாய ஒழுக்கக்கேட்டில் விலை போகும் விற்றற்குரியராக விளங்கும் கயவரை விடுத்து, அச்சமே கீழ்களது ஆசாரமாகக் கொள்ளாத மிச்சம் உள்ள நன்மக்களைப் பற்றி நிலா முற்ற அரங்கு தடம் மாறலாமே!”

தலைமை ஆசான் கணேசன்

“புலவர் ஐயா சொன்னபடி தடம் மாற விடாமல் தடுக்கும் வினா ஒன்று. ‘வாழ்க்கைத் துணை நலம்’ வகுத்த வள்ளுவர் அதில் பெண் களுக்கு மட்டுமே அறிவுரை கூறி, ஆண்களை விட்டுவிட்டாரே அது ஏன்?”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“தலைமையாசிரியர் குறிப்பிட்ட இந்த ‘வாழ்க்கைத் துணைநலம்’ எனும் அருமையான சொல்லமைப்பு சங்க இலக்கியந்தொட்டு வேறு எந்த இலக்கியத்திலும் கையாளப் பெறாத, வள்ளுவப் பெருந்தகையே முதன்முதலில் உருவாக்கித் தந்த சிறப்பான சொல்லடைவு. ‘கற்புநிலை என்று சொல்ல வந்தால், இருகட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்’ எனப் பின்னாளில் பாரதியை உரிமைப் பொதுமை பேச வைத்த தலைப்பு என இதைக் கருதி மேல் விளக்கம் தரச் செம்மல் அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.”

ஒருங்கிணைப்பாளர்

“நல்லறமாக இல்லறம் விளங்கிடக் காதலன் ஒருவனைக் கைப்பிடித்தோ, ஏற்பாட்டுத் திருமணமோ செய்து கொண்டு மனையறம் ஏற்ற மங்கை நல்லாளிடம் வேண்டும் குணநலச் சிறப்புக்களை ‘வாழ்க்கைத் துணை நலம்’ எனும் அதிகாரத்தில் வகுத்த வள்ளுவர், அவருக்குத் துணையான கணவன் கடைப்பிடித்தாக வேண்டிய ஒழுக்கங்களையும் கூறாமல் விடவில்லை.”

( தொடரும் )