கென்னடி புகழ் பேசும் வாஷிங்டன் !

Image result for john f kennedyகென்னடி புகழ் பேசும்

வாஷிங்டன் டி.சி. நகருக்குச் சென்றோம். அங்கே உள்ள கென்னடி விமான நிலையத்தின் அழகும் வெள்ளை மாளிகை வனப்பும் என் நெஞ்சில் நிறைந்தன. ஜனாதிபதி அமரர் கென்னடி நினைவுச் சின்னம் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தோரை நினைவுகூரும் நடுகல்லாக விளங்குகிறது.

என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர்பலர் என்ஐ

     முன்நின்று கல்நின் றவர்”       (771)

எனும் திருக்குறள் வரிகளே அங்கு என் நினைவில் படர்ந்தன.

புகழ் வளர்ந்து நடுகல் ஆனோர்க்கும் அது பொருந்தும் சிறப்பினை உணர்ந்தேன். அங்கு உள்ள அணையாச் சுடர் காண்போர் உணர்விலும் தியாகப் பேரொளியைப் பரவச் செய்வதை அனுபவித்தேன். நினைவுச் சின்னங்களை நிறுவுவது போல அங்கே அவற்றை நேர்த்தியாகப் பராமரித்து மரியாதையும் செய்கின்றனர். இதையும் நம் நாட்டு நடப்போடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.

இங்கே வைக்கப்படும் நினைவுச் சின்னங்கள் நாளடைவில் மறக்கப்பட்டுப் பறவைகளாலும் விளம்பரங் களாலும் அசிங்கப்படுத்தப்படும் கொடுமை மாறும் நாள் எந்த நாளோ எனப் பொருமினேன்.

எதிர்காலத்தை உணர்த்தும் விஞ்ஞானக் கூடம்

“பொறிஇன்மை யார்க்கும் பழியன்று; அறிவுஅறிந்து

     ஆள்வினை இன்மை பழி”      (618)

எனும் வள்ளுவம் அமெரிக்க நாட்டினர்க்கு எப்படியோ தெரிந்திருக்க வேண்டும். அனைத்துத் துறையிலும் அவர்கள் ஆக்கிவரும் ஆள்வினையுடைமை அறிவியலில் கொடிகட்டிப் பறக்கிறது. நிலா உலகில் முதல் மனிதனை நிறுத்திடும் அளவுக்கு விண்முட்டும் புகழாகியுள்ளது.

வாஷிங்டனில் உள்ள அறிவியல் கலைக்கூடத்தை அற்புதம் என்றே சொல்ல வேண்டும். ராக்கெட்டுப் பயண வளர்ச்சி, விண்வெளி ஓடச் சாதனைகள், இது வரை சாதித்தவை, இனி அண்டவெளிக் கிரகங்களை ஊடுருவிப் போகும் முயற்சிகள் என இவற்றையெல்லாம் பார்த்தபோது விஞ்ஞான முன்னேற்றத்தையும் எதிர்காலப் போக்கையும் எப்படி வருணிப்பது என்றே எனக்குப் புரியவில்லை.

வாஷிங்டனை இரண்டே நாளில் முடித்துக் கொண்டு ஆர்லாண்டோ புறப்பட்டு வந்தோம். உலகப் புகழ்பெற்ற டிஸ்னி உலகம்  இங்கே தான் உள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்திழுக்கும் பிரம்மாண்டமான காட்சிகள் அங்கு வருடம் முழுவதும் திருவிழாக் கோலம் பூணச் செய்கின்றன. இதற்கு இணையானதோர் அமைப்பு உலகில் வேறெங்கிலும் இல்லை எனச் சொல்ல வைக்கின்றன.

அமெரிக்கா முழுவதையும் பார்த்து விட்டதொரு பிரமை ஏற்படும் வண்ணம் 360 டிகிரி கோணத் திரையரங்கில் அமெரிக்கா முழுவதையும் காட்ட நம்மைக் கூட்டிச் செல்கிறார்கள்.

சறுக்கு ரயில் விளையாட்டு

ரோலர்கோஸ்டர் எனும் பயங்கர ராட்சதச் சறுக்கு ரயில் விளையாட்டு அங்கே மிகவும் பிரபலம். ஒரு நொடியில் விர் என்று கோபுர உச்சிக்கு அந்த ரயில் விரைவதும் பின்னர் அது சரேலென மரணப் பள்ளத்தை நோக்கிக் கீழிறங்குவதும் மயிர்க்கூச்செரிக்கும் அனுபவங்கள்! அதில் ஒரு முறை ஏறிவிட்டுக் கீழே இறங்கி மிகத் துணிச்சலுடைய முரட்டு ஆசாமி என்ன சொன்னார் தெரியுமா? “இனி செத்தாலும் இதில் ஏற மாட்டேன்” என்றார். என்றாலும் துணிச்சலோடு அதில் ஏறினோம். ஓடத்தொடங்கியதும் உடம்பின் குருதி உறைந்து போவது போல, எலும்பு களெல்லாம் நொறுங்கிவிடுவது போலப் பய உணர்வு கவ்வியது. கீழே இறங்கியபின் தான் ‘அப்பாடா’ என்று அமைதி பெற்றோம்.

எதிர்காலக் கதை

அங்குள்ள எப்காட் சென்டர் விஞ்ஞான, தொழில் நுட்ப அற்புதங்களைக் காட்டுகிறது. 21-ஆம் நூற்றாண்டை நோக்கி உலகம் முன்னேறும் எதிர்காலக்கதை ஒரு வரலாறு போல அங்கே பல நிலைகளில் பல அரங்குகளில் கோடிகோடிச் செலவில் காட்டப்படுகிறது. இப்படி நம்நாட்டிலும் ஆங்காங்கு அறிவியல் நகரங்களை உருவாக்கக் கூடாதா எனும் ஏக்கமே மேலிட்டது.

அங்குள்ள கடல் உலகம்  உலகில் உள்ள அத்தனை மீன் வகைகளையும் காட்டுகிறது. இத்தனையும் பார்க்க ஒரு வாரமாவது வேண்டும்; நாங்கள் அவசரக் கோலத்தில் கிளம்பினோம்.

இந்த எப்காட் உணவுப் பிரிவில் காரைக்குடி நண்பர் ஒருவரைக் கண்டேன். என்னை நலம் விசாரித்துக் கொண்டே அவர் ஓடிஓடிப் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தொலைவில் செல்லச்செல்ல ஏற்படும் அன்பின் நெருக்கத்தை உணர்ந்திட முடிந்தது.

‘மியாமி’ நகரம்

ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு இப்போது எங்கள் பயணம் எல்லாம் விமானத்தில்தான், 3000 மைல் தாண்டி உலகிலேயே அழகிய கடற்கரை நகரான மியாமி போய்ச் சேர்ந்தோம்.

வாழ்க்கையை, பொழுதுபோக்கை, எப்படி ரசிப்பது என்பதை அங்கே காணமுடிந்தது. ‘சிலருக்கென ஒதுக்கப்பட்ட’ இடங்களுக்கெல்லாம் நாங்கள் போகவில்லை! நாலுபேர் கூசாமல் பார்க்கக்கூடிய கொள்ளை அழகுகளை ரசித்துவிட்டு ஓட்டலுக்குத் திரும்பினோம்.

அடுத்து நாங்கள் தரை இறங்கிய இடம், லெஸ்வேகாஸ் (லிணீsஸ்மீரீணீs). உலகிலேயே மிகப்பெரிய சூதாட்ட நகரம் இது என்பார்கள். எங்கு பார்த்தாலும் காசினோ என்னும் பொழுதுபோக்கும் உல்லாசப் பணவிரயக் கூடங்கள்! பணம் அங்கே தண்ணீராக ஓடுகிறது; தடம் புரண்டு பாய்கிறது!

‘ஒன்றெய்தி நூறிழக்கும்’ சூதர்களும் கெட்டிக் காரர்களும் அங்கே ஏராளம், ஏராளம்! விமானத்தளத்தில் இருந்து ஊரில் எங்கே திரும்பிப் பார்த்தாலும் பந்தயச் சூதாட்டம்… பல்வகைச் சூதாட்டம். தம் பணம் பறிபோவதைப் பற்றி அங்கு யாரும் கவலைப்படுவதில்லை. சம்பாதித்த காசைச் செலவழிக்க ஒரு வகையான மகிழ்ச்சியோடு ஷிறிலிகிஷிபி எனும் கண்கவர் காட்சிகளுக்குப் போய் விடுகிறார்கள். இவற்றைத் தொலைவில் இருந்து பார்த்த திருப்தியோடு நாங்கள் ஓட்டலுக்குத் திரும்பி விடுவோம்.

“வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதூஉம்

     தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று”        (931)

எனும் சூது அதிகாரக் குறளைத் தெரிந்திருந்தாலும் அவர்கள் அதைப் பின்பற்றமாட்டார்கள் என உணர முடிந்தது! அவ்வளவு மயக்க உலகம் அது.

அற்புத உலகம்

அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் ) நகரம் பறந்தோம். அங்கேதான் டிஸ்னியின் மற்றும் ஒரு அற்புத உலகம் உள்ளது. அதை மீண்டும் விவரிப்பதைவிட நேஷனல் தியேட்டர் உள்ள மற்றொரு ஹாலிவுட் ‘நகரத்தைப்’பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் விவரிக்கலாம். திருக்குறளைப் பற்றிப் பேசவே போதிய அவகாசம் கிட்டாத சூழலில் ஹாலிவுட் போக நேரம் எங்கே கிட்டும் என யோசித்தோம். எனினும் அன்பர்கள் விடவில்லை. ஏதோ போனோம்! வந்தோம்!

பின்னர் சான்பிரான்சிஸ்கோ நகருக்குப் பறந்தோம். அங்குள்ள சீன டவுனைக் (சிலீவீஸீணீ ஜிஷீஷ்ஸீ) கண்டு வியந்தோம். “எவ்வது உறைவது உலகம்” எனும் திருக்குறள் என் நினைவில் படர்ந்தது. சீனர்கள் உலகத் தலைமை பெற்று வரக் காரணம் எது என்பது புரிந்தது.

சாப்பாடும் சங்கடமும்

Image result for food america

 

“உங்களுக்கு வேண்டியது கில்லிங் பவரா?  அல்லது புல்லிங் பவரா?”  எனும் கேள்வியுடன் முடிந்த கட்டுரையை எப்பொழுதோ நான் படித்த நினைவு.

பலபேர் சைவ உணவில் சத்தே இல்லை என்பார்கள். கீரை, காய்கறிகளைவிட மீன், முட்டை, மாமிசம் முதலிய அசைவ வகைகளில்தான் ஆற்றல் நிறையக் கிடைக்கும் என நம்புவார்கள்.

ஆனால் யானை? எவ்வளவு பெரிது! உருவத்தால் மட்டும் இன்றி, வலிமையிலும் பிறவற்றைவிட மேம்பட்டது இல்லையா? குதிரைக்கு எவ்வளவு ஆற்றல்! கொள்ளும் புல்லும் தின்னும் அதன் ஆற்றல் அளவீட்டைக் கொண்டுதானே ‘குதிரை பவர்’ (பிஷீக்ஷீsமீ றிஷீஷ்மீக்ஷீ) இத்தனை என்று மின்அலகு கணக்கிடப் படுகிறது. ஆகவே சைவ உணவே சிறந்தது எனச் சைவ உணவினர் சாதிப்பர்.

இவையெல்லாம் என்னைப் போன்ற சைவ உணவுக் காரர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய செய்திகள் என்றாலும், மேலை நாடுகளுக்குப் பயணம்போகும் போதுதான் சைவச் சாப்பாட்டாளர்களுக்கு சங்கடங்கள் நேருகின்றன. அசைவர்களுக்குச் சிக்கல் இல்லை. எப்படியும் சமாளித்துக் கொள்வார்கள். சுத்த சைவர்கள் சிறுசிறு தியாகங்களுக்குத் தயாராக வேண்டும். எனினும் அமெரிக்காவில் அத்தகைய சங்கடங்கள் இராது என அன்பர்கள் எழுதியது நம்பிக்கை தந்தது.

அமெரிக்க நாட்டில் தண்ணீரையும் உணவையும் வீணாக்குகிறார்கள். அதைப் பார்த்தபோதெல்லாம் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அதே சமயம் தண்ணீர் மற்றும் உணவு வகைகளை மிகத் தூய்மையாகப் பாதுகாத்து வழங்குகின்றார்கள்; பயன்படுத்துகின்றார்கள்.

வெளியூர்ப் பயணத்தின்போது ஓட்டலில் தங்கிப் பலவகை உணவுகளை வயிறு புடைக்கச் சாப்பிடும் நம் ஊர்ப்பழக்கமெல்லாம் அங்கே காண முடியாது. பயணவழியில் சாலையோரங்களில் உள்ள சிற்றுண்டிக் கடைகளில் சூடாகத் தயாரிக்கப்பட்ட  உணவுகளை விற்கிறார்கள். அவற்றைக் காரில் இருந்தபடியே வாங்கிக் கொண்டு பயணத்தைத் தொடரு கிறார்கள் அல்லது அங்கேயே சாப்பிட்டுச் செல்லவும் வசதிகள் உள்ளன. காலப்போக்கில் நம் ஊர்களிலும் அப்படி வரக்கூடும்.

பாக்கெட்டுகளில் உணவு வகைகள்

பாக்கெட்டுகளில் அடைத்தும் சுத்தமான முறையில் பார்சல் செய்தும் தருகிறார்கள். நேரத்தை வீணாக்காமல்  சாப்பாட்டை முடித்துக் கொள்கிறார்கள். எல்லாவித மாமிச உணவுகளும் பாக்கெட்டில் வைத்து விற்கப்படுகின்றன. சைவச் சாப்பாட்டாளர்களுக்கான இத்தாலி நாட்டில் பிரபலமான பீசா (றிமிஞீஞீகி), மாக்டோனால்ட் ஆகிய சைவ உணவுகள் கிடைக்கும். ஆனால் என்ன வெஜிடேரியன் என முதலிலேயே சொல்லிவிட வேண்டும்.

 சைவ விருப்பத்தை விவரமாகச் சொன்னதும் பீசா  கோதுமை ரொட்டியில் வெண்ணெய் வெஜிடேபிள் வெங்காயம் போட்டுத் தந்தார்கள். ஆலை இல்லாத ஊரில் இந்த  இலுப்பைப்பூ கிடைத்தால் விடலாமா? பசி நேரத்தில் இதுவும் ருசியாகத்தான் இருந்தது. நாளடைவில் பழக்கம் காரணமாக இந்த உணவும் பிடித்துவிட்டது.

இந்த நேரத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் இத்தாலிக்குச் சென்றிருந்தபோது இந்தச் சைவ ரொட்டியும் கிடைக்காமல் அவதிப்பட்டுப் போனேன். சைவ ரொட்டி என ஆங்கிலத்தில் சொல்லிக் கேட்டேன். அவர்களுக்கு அது புரியாமல், ‘என்ன?’ என்று திருப்பிக் கேட்டார்கள். நான் ஆங்கிலத்தில் விவரமாக ஆனியன் கலந்த விஜிடபிள் பிரட் என்றேன். அவர்கள் தோளைத் தூக்கிக் கொண்டு தெரியவில்லை என்றார்கள். கடைசியில்தான் தெரிந்து கொண்டேன். ஆங்கிலம் இவர்களுக்கும் தெரியாது என்பதை! இவர்களிடம் ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான அவரவர் தாய்மொழியில் கேட்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆங்கிலம் பேசும் நாட்டை ஒட்டி வாழ்ந்தாலும் இவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் தமது தாய்மொழியறிவோடு மற்றொரு ஐரோப்பிய மொழியையும் கற்று விஞ்ஞான வளர்ச்சியில் தங்களை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். இதைப் போலவே நாமும் தாய்மொழியாம் தமிழைக் கற்று தமிழ்மொழியில் விஞ்ஞான வளர்ச்சிகளைக் காணவேண்டும் எனக் கருதினேன்.

ஒரு கை பார்த்தோம்!

அமெரிக்காவில் வெங்காயம் (கண்ணீர் விடாமலே) கிடைத்தது. பீசா ரொட்டி, பழச்சாறு முதலியன தாரளமாகக் கிடைக்கின்றன. சுவையான தண்ணீர் கலக்காத பால், யோகார்ட் எனும் கெட்டித் தயிர், சாக்லேட், ஐஸ்கிரீம்… போதாதா …? இந்த அருமையான சைவச் சாப்பாட்டை ஒரு கை பார்த்தபடி நாங்கள் பயணத்தைச் சமாளித்தோம் என்றாலும் நம் ஊர்ச் சாப்பாட்டு ஏக்கம் தீரவில்லை! மதுரை திரும்பியதும் எங்களைப் பார்த்த நண்பர்கள், மிகவும் மெலிந்து  போனோம் என அங்கலாய்த்தார்கள்.

நாம் உணவுக்கு நம் வருமானத்தில் எத்தனைப் பங்கு செலவிடுகிறோம் என்பதைக் கொண்டே நம் வாழ்க்கை முறையையும் தரத்தையும் அளவிட முடியும் என்பார்கள். அமெரிக்க நாட்டில் உணவுப் பொருள் விலையைக் கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டாலும் அந்த நாட்டுச் செலாவணிச் சமன்பாட்டில் உணவுவிலை அமெரிக்கர்களுக்கு மலிவுதான். அதனால்தான் விருந்து களிலும் கேளிக்கைகளிலும் உணவை அதிகமாகவே வீணாக்குகிறார்கள்.

அங்கே விருந்துகளில் அமர்ந்து சாப்பிடுவது மிக முக்கியமான நிகழ்வின் போதுதான். பெரும்பாலும் பபே (ஙிuயீயீமீt) எனப்படும் சுய பரிமாறு முறைதான். பொதுவில் வைக்கப்பட்ட உணவில் அவரவர்க்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு, ஓரிடத்திலேயே நிலையாய் இராமல் வந்திருக்கும் பலரோடும் அளவளாவிச் சாப்பிடுவது மிக வசதியான ஒன்று. நம் நாட்டிலும் இந்த விருந்துமுறை வேகமாக அறிமுகமாகி வருகிறது. அமெரிக்கர்கள் இந்த பபே முறையிலேயே வீணாக்கிக் கொட்டும் உணவு அதிகம்தான்.

மதிக்கப்படும் தனி நபர் உரிமை

எங்கும் தூய்மையாக உணவைப் பாதுகாத்துப் பயன்படுத்துகிறார்கள் என்றேன். கடையிலும், விருந்திலும் மிகக் கவனமாக உணவு வழங்கப்படுகிறது. சுகாதார முறைகளை நாம் அங்குதான் கற்கவேண்டும். ஒரு ஓட்டலின் சாப்பாடு சரியில்லை என்று யாராவது புகார் செய்தால் போதும், உடனே அது கவனிக்கப்படும், அல்லது அந்த ஓட்டல் மூடப்படும் அளவுக்குப் பொதுமக்கள் புறக்கணிப்பும், நடவடிக்கையும் தொடரும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் உணவுப் பொருள்களில் மிக விழிப்பாக இருக்கிறார்கள். தனி நபர் பாதுகாப்பும் உரிமையும் அந்த அளவுக்கு அங்கே மதிக்கப்படுகின்றன.

கலிபோர்னியா திராட்சைப் பழங்களுக்குப் புகழ்பெற்ற இடம் அவற்றில் பூசான நோய் ஏற்பட்டிருப்பதைக் கண்டவுடன், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அத்தனை திராட்சைக் கூடைகளையும் அப்புறப்படுத்திக் குப்பையில் கொட்டி விட்டார்கள். நம் ஊரைப் போல தடையை மீறி எவராவது தரக்குறைவான பண்டத்தை விற்பனை செய்தால் லைசன்சை ரத்து செய்து விடுவார்களாம். தண்டனையும் அதிகம்.

சிக்கனம்

அமெரிக்காவில் உணவை வீணாக்குவதைப் போல நான் ஐரோப்பிய நாடுகளில் பார்க்கவில்லை. இந்த வகையில் அவர்களிடம் அதிகச் சிக்கனம் கண்டேன்.

அமெரிக்காவில் இத்தனை மைல்கள் காரில் வந்தோமே எங்காவது குப்பைகூளம் கண்ணில் பட வேண்டுமே? ஊஹும்! கழிப்பறை, குளியலறை எல்லாம் மிகவும் தூய்மையாகவும் அழகாகவும் இருக்கும். அனைத்தும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டிருக்கும். அறிவியல் முன்னேற்றத்தால் ஏற்பட்ட நவீன வசதிகள் நிறைந்திருக்கும்.

சுற்றுப்புறத் தூய்மை, பொது வாழ்வில் தூய்மை, ஒழுங்குக் கட்டுப்பாடு பேணும் உணர்வு இவை அங்கு நன்கு புலப்பட்டன. நம் நாட்டில் வருடத்திற்கு ஒரு முறை இவற்றை விழாக் கொண்டாடிவிட்டுத் தொடர்ந்து பேணிப் பாதுகாக்காமல் அனைத்தையும் குப்பையில் போட்டுவிடுகிறோம். மதுரையில் சுற்றுப்புறத் தூய்மை காக்க நாமும் இயக்கம் நடத்தினோம். என்ன ஆயிற்று? போன ஆண்டு ஓரிடத்தில் கொட்டிய குப்பையெல்லாம் வேறு இடத்துக்கு வந்துவிட்டது. வெளிநாடுகளில் எப்போதும் செயல் இயக்கம்… நம் நாட்டில் எப்போதும் பேச்சு இயக்கம். என்று இந்த நிலை மாறுமோ என்ற ஏக்கம்!

சிக்காகோவில் – அன்பர்களின் வீடுகளில் – இருவகை விருந்துகள் உண்டு! வயிற்றுக்கும் செவிக்கும்! அங்கே உணவுப் பரிமாற்றத்தைவிடத் திருக்குறள் கருத்துப் பரிமாற்றமே மிகவும் ருசித்தது. நம் நாட்டில் – திருக்குறளைப் பற்றிப் பெரும்பாலும் தமிழறிந்த புலவர்களே மேடை கட்டிப் பேசக் கேட்கிறோம். ஆனால் இங்கு பிறதுறை அலுவல்களில் உள்ளவர்களில் பலர், திருக்குறளில் வாழ்க்கைத் தேவைக்கு ஏற்ற அளவு நல்ல தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு குறள் இன்ன அதிகாரத்தில் உள்ளது என எடுத்துச் சொல்லும் அளவுக்கு ஈடுபாட்டை வளர்த்து வாழ்கின்றனர். அவர்களோடு அமர்ந்து அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லும் திருக்குறளை ஆராய்ந்தோம்.

சிக்காகோவில் ஒரு சொற்பொழிவுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதென்றால் சனிக்கிழமை வரை தங்குவதை நீடிக்க வேண்டியிருக்கும். எனவே கலந்துரையாடல் கூட்டங்களை வைத்துக் கொண்டோம். பேசுவோர், கேட்போர் ஆகிய இரு தரப்பாரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் சுவையான கருத்தரங்குகளாக இவை நடந்தன.

திரு.இளங்கோவன் திருக்குறட்பா வடிவில் அதே நடையில் நெஞ்சு தொடும் வரவேற்புப் பாமாலையை யாத்தளித்தார். நம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேரறிஞர் தெ.பொ.மீ. அவர்களின் மருகர் பேராசிரியர் டாக்டர் ஆர்.சண்முகம் அவர்கள் வாங்கித் தந்திருந்த, நம் துணைவேந்தர் அறிமுகக் கடிதத்துடன், நம் அஞ்சல் வழிக்கல்வித் துறையினர் என்னிடம் கொடுத்தனுப்பியிருந்த ஆத்திசூடி – கொன்றைவேந்தன் முதலிய தமிழிலக்கிய ஒலி நாடாக்களைப் பல்கலைக்கழகத் தூதனாக அங்கு நல்கினேன்.

சிக்காகோவில் நண்பர்கள் இவற்றைப் பொன்னே போல் போற்றி வாங்கிக்கொண்டனர். தம் பிள்ளைகளுக்குப் பயன்தரும் இத்தகைய நன்கொடைகளைத் தொடர்ந்து அனுப்புமாறும் கேட்டுக் கொண்டனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையமும் இத்துறையில் இனி மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை நினைத்து மலைத்தேன்.

நண்பர்கள் எனது மேற்பயணத்திற்கான விசாவினைப் பெறும் முயற்சிகளில் ஓடி அலைந்தனர். சிலர் ஆரம்ப ஏற்பாடுகளைச் சரியாக செய்து கொள்ளாததால் அங்கே போய் அவதிப்பட நேர்ந்தது. பிரெஞ்சுப் புரட்சியின் 200-ஆவது ஆண்டு விழாக் கொண்டாடப்பட்டமையால் அந்த நாட்டுக்கு உடனே விசா பெறுவது சிரமமாய் இருந்தது. விசா முன் ஏற்பாடு செய்யாததாலே அவ்விழாவில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பும் கைநழுவியது. எனவே, புறப்படும் சமயத்தில் சரியான டிராவல் ஏஜண்ட் மூலம் விசாப் பெற்று உரிய ஏற்பாட்டுடன் புறப்பட வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டேன். இப்போதெல்லாம் 140 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்றார்கள்!

சிக்காகோ தமிழன்பர்களான நாராயணன், வெங்கடராமானுஜம் ஆகியோரை விட்டுப் பிரிய மனம் இல்லாமலேயே அமெரிக்காவை அவசரக் கோலத்தில் சுற்றிப் பார்த்து விட்டுக் கிளம்ப வேண்டியதாயிற்று!

 

 

திருக்குறள் பயணம்

 

Image result for thirukural manimozhian

“ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும்

     பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் & போய் ஒருத்தர்

     வாய்க்கேட்க நூலுளவோ…?”

என்று திருக்குறளுக்குப் புகழஞ்சலியாக விளங்கும் திருவள்ளுவ மாலையைத் தொகுத்துள்ள நத்தத்தனார் பாடினார். இப்பாடலைப் படித்த போதெல்லாம் இளமைப் பருவத்திலேயே என் மனத்தில் கேள்வி ஒன்று எழுந்தது. “1330 அருங்குறளையும் மனப்பாடம் போலப் படித்துவிட முடியுமா?” எனும் அக்கேள்விக்கு, “ஏன் முடியாது? முயன்று தான் பார்ப்போமே!” எனும் உறுதி பிறந்தது. நான் வளர்ந்த காரைக்குடிக் கம்பன் கழகமும் திருக்குறள் மன்றமும் தமிழ் உணர்வூட்டிய கல்விச்சூழல் அந்த உறுதிக்கு மேலும் உரம் ஊட்டியது. வாரம் ஓர் அதிகாரம் என எனக்குள் எல்லை கட்டிக்கொண்டு குறள் கருத்துக்களை என் நினைவுத் தவிசில் ஏற்றுக்கொள்ள முயன்றேன். தங்கத்தின் தரத்தை உரை கல்லில் தேய்த்து மாற்றுப் பார்ப்பதைப் போல, வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் திருக்குறளை உரைகல்லாகக் கொள்ளமுடியும் எனத் தெளிவு பெற்று வந்தேன். யார், எந்தக் கருத்தைச் சொல்லக் கேட்டாலும் இதனை வள்ளுவர் எப்படிச் சொல்லியிருக்கிறார் எனத் தேடி துருவத் தலைப்பட்டேன். குறட்பாக்களின் அருமையும் பெருமையும் ஆழமும் விரிவும் என்னை மேலும் மேலும் கருத்தூன்றிப் படிக்கத் தூண்டின. ஒரு நூலிலாவது நல்ல பயன் தரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற என் ஆசைக்கு ஓர் அளவுகோலாகக் குறட்பாக்கள் அமைந்துவந்தன. வாழ்வின் புதிய அனுபவங் களுக்கு உட்பட்ட போதெல்லாம், வற்றாச் சுரங்கமாகவும் வழிகாட்டும் வான் விளக்காகவும் எனக்குக் குறள் நெறிகள் விளங்கத் தொடங்கின. இயன்ற வகையில் எல்லாம், தனிமுறையிலும் பொது வகையிலும் குறள்நெறிச் சீலங்களைப் பரப்பி வாழவேண்டும் எனும் உணர்வினை நாள்தோறும் என்னுள் புதுக்கி வந்தன.

தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் பல்லாண்டுகள் இயங்கி வரும் தமிழ்நாடு திருக்குறள் பேரவையின் (பொதுச் செயலர்) பொறுப்பேற்ற நாள்தொட்டு வாழும் வாழ்க்கைக்கும் காலத்திற்கும் பொருந்தும் வகையில் குறள் நெறிகளைப் பரப்ப வேண்டும் எனும் நோக்கத்தினைச் செயல்படுத்த முற்பட்டோம். ‘செய்க பொருளை’ எனும் சிந்தனைத் தலைப்பில், அறிஞர், அறிவியலாளர், தொழில் அதிபர், இளைஞர் முதலிய பல்வகைச் சமுதாயப் பிரிவினரையும் கருத்தரங்கேறச் செய்தோம். அக்கருத்தரங்கு புதிய புதிய செயல் திட்டங் களுக்கு வருக எனக் கைகாட்டி அழைக்கக் கண்டோம். முன்னோடித் திட்டமாக, ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, ஒருங்கிணைந்த வள்ளுவர் நெறி வளர்ச்சியை அங்கு நடைமுறையாக்க முற்பட்டோம்.

Image result for thirukural manimozhian

உலகத் தமிழ் மாநாட்டு நினைவாக, தமிழ்நாட்டின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆய்வுக்கான நிதிக்கட்டளை ஒன்று அரசு சார்பில் ஏற்கனவே நிறுவப்பட்டு, திருக்குறள் ஆராய்ச்சித் துறைகள் இயங்கி வந்தன. என்றாலும் உலகளாவிய வண்ணம், பிற நாடுகளில் வாழும் தமிழ் மக்களோடு தொடர்பு கொள்ளும் வகையில் ‘உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையம்’ ஒன்றினை, திருக்குறள் அரங்கேறிய சங்கத் தமிழ் மதுரையில் நிறுவ வேண்டும் எனும் தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கனவினை நனவாக்கும் காலம் கனிந்தது. மதுரையில் பன்னாட்டுத் திருக்குறள் ஆராய்ச்சி மைய அறக் கட்டளையினை நிறுவப் பதிவு செய்தோம். இதனைக் கேள்வியுற்ற அமெரிக்கத் தமிழ் அன்பர்கள், அங்கு சிக்காகோவில் ஆண்டுதோறும் நிகழும் மாநாட்டிற்கு வருமாறு சிக்காகோ திரு.பி.ஜி.எம். நாராயணன், திரு.வெங்கட்ட ராமானுஜம் ஆகியோர் எனக்கு அழைப்பு விடுத்தனர். மதுரையில் திரு.பன்னீர் செல்வம், திருமதி. லதா பன்னீர்செல்வம் (மகாத்மா மாண்டிசோரி) இருவரின் முயற்சியும் தூண்டுதலும் என்னை ஊக்குவித்தன.

தொழில் காரணமாகவும் சுற்றுலா விழைவு காரணமாகவும் ஏற்கனவே பல நாடுகளுக்குச் சென்று வரும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தேன். எனினும் இந்தத் திருக்குறள் பயண அழைப்பு முற்றிலும் புதுமையாகத் தோன்றியது. நாடு கடந்து வாழும் தமிழர்களின் தாய் நாட்டுப் பற்றையும் மொழி உணர்வையும் நேரில் அறியும் சந்தர்ப்பங்களையும் தருவதாக இது அமைந்தது.

பயணம் செல்வது இனியதொரு வாழ்க்கை அனுபவம். எத்தகைய உணர்வோடும் அறிவு நாட்டத்தோடும் பயணம் புறப்படுகிறோமோ, அவ்வுணர்வையும் நாட்டத்தையும் மேலும் அதிகமாகப் பெற்றுத் திரும்பச் செய்யும் பயன்மிகு முயற்சி; கையில் உள்ள பணத்தைச் செலவிட்டு, மூளைக்குள்ளே புதுப்புதுச் செய்திகளை அடக்கிக் கொண்டு வரும் வாழ்க்கை வாலிபம்; ஒவ்வொரு ரோஜாச் செடியிலும் முள் இருக்கிறது எனத் தெரிந்திருந்தும் அதனூடே மலர்ந்திருக்கும் பூவிலிருந்து தேனை மட்டும் மாந்தி வரும் தேனீயின் உழைப்புப் போன்றதொரு செயல்திறம்; சரக்கு மூட்டைகளை வண்டியில் ஏற்றிச் செல்வது போலப் போய்வராமல், உணர்வாக்கம் கொண்டதொரு பகுத்தறிவோடு ஊர் சுற்றிவரச் செய்யும் கலைத்திறன்; நமது வீடு, நாடு எனும் குறுகிய வரையறைக்குள் இருந்து பழகிப் போனவர்களின் பார்வையினை, ‘பெரிதே உலகம், பேணுநர் பலரே!’ எனும் எல்லைக்கு விரிவுறச் செய்யும் இரசவாதம்; எப்பொருள் எத்தன்மையதாயினும் அப் பொருளை மெய்ப்பொருளாக நேரடியாகக் காணச்செய்யும் அறிவுத் தேட்டம்…

வரலாற்றிலும் இலக்கியத்திலும் பல நாடுகாண் காதைகள் அரங்கேறியுள்ளன; சமய அனுசாரமும், வாணிப ஆதாயமும் பல ஊர்காண் காதைகளை உருவாக்கியுள்ளன. ஒவ்வொரு மனிதனின் தேவைக்கும் உரிய வகையில் பல்வேறு வகையான பயணங்கள் அன்றாட வாழ்வில் நிகழ்ந்தேறியே வருகின்றன.

என் வாழ்வெல்லாம், மனமெல்லாம் ஆட்கொண்ட ஒரே நூலாகத் திகழும் திருக்குறள் வழியாக இப்பயண வாய்ப்பினை வெளிநாட்டுத் தமிழன்பர்கள் எனக்கு அளித்தனர். எனவே ஒரு நாட்டுப் பயணமாக மட்டும் இந்த வாய்ப்பினைக் குறுக்கிக் கொள்ளாமல், பல நாட்டுப் பயணமாக விரித்து அந்த அழைப்பினைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளத் தீர்மானித்தேன். மேற்கு நாடுகள் சிலவற்றில் வாழும் என் இனிய நண்பர்களுக்கு என் வருகை பற்றி, திருக்குறள் பயணம் பற்றி எழுதினேன்.

Image result for thiruvalluvar painting

தமிழ் மக்கள் உலகின் பல நாடுகளில் உரிமைபெற்ற குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்திய மொழிகளில், உலகெல்லாம் பரவிய சிறப்புக்கு உரியதாகத் தமிழ்மொழி திகழ்கிறது. ஓரிரு நாடுகளில் ஆட்சி மொழியாகவும் பெருமை பெற்று விளங்குகிறது. பல்வேறு நாடுகளில் பன்னெடுங்காலமாகக் குடியேறி வாழும் நம் மக்களைத் தமது சொந்த நாட்டோடும் புராதனப் பண்பாட்டோடும் உறவுக் கயிறு அறுந்து போகாமல் இணைத்து வைக்கும் பாலமாகத் தமிழ் மொழியே விளங்குகிறது.

ஆனால் அண்மைக் காலங்களில் இந்த உறவுக் கயிறு வலுவிழந்தும் இணைப்புப் பாலம் செயல் இழந்தும் போகக்கூடிய அரசியல், மற்றும் சமூக வாழ்க்கை நெருக்கடிகள் ஆங்காங்கு ஏற்பட்டன. எனவேதான், உலகத் தமிழ் மாநாடு கூட்டி உரமேற்றும் முயற்சிகளும் தாய்நாட்டு அன்பர்களைத் தம்மிடத்திற்கு வரவழைத்து உறவேற்கும் மலர்ச்சிகளும் அணிவகுத்து வருகின்றன.

தேமதுரத் தமிழோசையினை உலகின் பல நாடு களிலும் செவிமடுத்துக் கேட்கும் விழாக்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. உலகப் பொதுமறையாகத் திருக்குறளை நிலைப்படுத்தும் ஆக்கங்களும் அரும்பு கட்டி வருகின்றன.

எப்பாலவரும் ஏற்கும் சிறப்புடையது முப்பாலாக அமைந்த திருக்குறள். அறம் பொருள் இன்பம் எனும் இம்முப்பால் பாகுபாடு, அனைத்து மக்களுக்கும் உரிய அடிப்படை வாழ்க்கைப் படி முறையாக சங்க இலக்கியம் தொட்டே வரன்முறைப்படுத்தப்பட்டு அமைந்தது.

“அந்நில மருங்கின் அறமுத லாகிய

     மும்முதற் பொருட்கும் உரிய என்ப”

எனத் தொல்காப்பியமும்,

“அறம் பொருள் இன்பம் என்று அம்மூன்றும்”

எனக் கலித்தொகையும்,

“அறமும் பொருளும் இன்பமும் மூன்றும்

     ஆற்றும் பெரும நின் செல்வம்”

எனப் புறநானூறும்,

“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

     தீதின்றி வந்த பொருள்”        (754)

எனத் திருக்குறளும், முப்பால் மரபினை முழுதுலகிற்கும் பொதுவாக அறிவித்துள்ளன.

அறம் பொருள் இன்பம் எனும் முத்துறைகள் பற்றியும் முழுமையான, முதன்மையான அறங்களைச் செவ்வனே வகுத்துச் சொல்லும் ஒரே நூலாக, ஒரே ஆசானால் எழுதப்பட்ட ஈடற்ற சிந்தனை நூலாக, செயல் நூலாகத் திருக்குறள் மட்டுமே போற்றப்படுகிறது. மறு உலக அச்சம் காட்டியோ, ஆசை காட்டியோ ஒழுக்கங்களை வற்புறுத்தாமல், இவ்வுலக வாழ்வின் உண்மை, நன்மை ஆகியவற்றை மட்டுமே கருதி, தனிநபர், சமுதாய நடைமுறைகளை வரன்முறைப்படுத்தும் வாழ்க்கை நூலாகத் திருக்குறள் மட்டுமே நிலைபெற்று விளங்குகிறது. எனவே சுவையான கரும்பு தின்னக் கூலியும் கிடைத்ததைப் போல் கருதி எனக்குக் கிட்டிய திருக்குறள் பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டேன்.

திருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்றி நாம் வாழும் காலத்திற்கும் பொருத்தமாகச் சமுதாயச் சிக்கலுக்கு அறவியல் தீர்வு காண்கின்றார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கும், துன்பம், கவலை நீங்கி இன்பம் இடையறாது பெறுவதற்கும் அமைதியும் முழுமையும் நிறைவும் பெறவும் வள்ளுவம் வழிகாட்டுகிறது.

“யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்

     சாந்துணையும் கல்லாத வாறு.”  (397)

எனும் குறட்பா உலகோர் அனைவருக்கும் பொது நிலையறம் புகட்டுகிறது.

 

 

குறள் நிலா முற்றம் 14


ஒருங்கிணைப்பாளர்

“என்னதான் பல்குழு, கொல் குறும்புகள் இருப்பினும் அரசாள்வோர் – தக்கார் இனத்தராய், தானொழுக வல்லாராய் இருந்தால் போதுமே! ‘ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து, யார் மாட்டும் தேர்ந்து செய்வதே முறை’ என அறிந்து செயல்பட்டால் நல்லதாயிற்றே! நாள்தோறும் நாடி முறை செய்யாவிட்டால் நாடும் சீரழியும் எனப் புரிந்து கொண்டால் போதுமே!”

திருக்குறள் பேரவை அன்பர் ஒருவர்

“நல்லாட்சி அமைவதெல்லாம் ஓட்டுப் போடும் வாக்காளர் கையிலும், தேர்ந்தெடுக்கப் படும் உறுப்பினர் தோளிலுமே உள்ளது. ஆனாலும் இந்த இரு சாராரும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணராத அவலத்தை நம் திருக்குறள் பேரவையில் சில ஆண்டுகளுக்கு முன் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அயர்வோடு, ஆறாத் துயரோடு ஆற்றிய உரை நம் பேரவை நண்பர்களுக்கெல்லாம் நினைவில் இருக்கும் எனக் கருதுகிறேன். பேராசிரியர் அவர்களே உங்கள் நினைவில் இருந்தால் கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லுங்கள்.”

மற்றொருவர்

“நெடுநேரம் அமர்ந்துவிட்டோம், அரசியலுக்குள் நுழைந்தவுடன் பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது.” (சிரிப்பலைகள்)

உணவுக்குப் பின் மீண்டும் நிலா முற்ற அவை கூடுகிறது.

பெரும்புலவர்

“தேர்தல், வாக்காளர் கடமை பற்றி எல்லாம், குன்றக்குடி மகாசந்நிதான அமரர் பிரான் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் நம்மிடையே ஆற்றிய அறிவுரை பற்றிப் பேராசிரியர் நினைவோட்டங் களைக் கொணருவார் எனச் சொல்லி உணவுக்காகக் கலைந்தோம்… ஆனால், தேர்தலில் உரிமையாய் வாக்களிக்கச் சாவடிக்கு வர, படித்தவர்களும் நல்லவர்களும் பொதுவாகத் தயக்கம் காட்டுவதால் பொல்லாதவர்கள் கள்ள ஓட்டுப் போட்டு விடுகிறார்கள்.”

இன்னோர் இளைஞர்

“அதுபோல, நிலா முற்ற அன்பர்கள் வாக்களிக்கச் செல்லத் தேர்தல் எதுவும் இப்போது நடக்கவில்லையே.. நம் திருக்குறள் பேரவையினர் தேர்தலைப் புறக்கணிக்க மாட்டார்கள். அது புனிதமான, குடியாட்சி உரிமை, கடமை என்றே கருதுவார்கள். எந்தத் தில்லுமுல்லுக்கும், பொய்ம்மை, கயமைக்கும் இணங்க மாட்டார்கள். அதை என் போன்ற இளைஞர் சமுதாயமும் கண்விழிப்போடு கட்டிக் காக்கும்.”

அரசு அதிகாரி ஒருவர்

“வாழ்க இளமைச் சமுதாயம்!” (கரஒலி)

ஒருங்கிணைப்பாளர்

“சமுதாயப் பிரச்சினைகளுக்கெல்லாம், திருக்குறள் வழியே தீர்வுகள் காண முற்படும் ஓர் இயக்கமே நம் திருக்குறள் பேரவை. சீரிய சிந்தனைகளும், உயரிய கோட்பாடுகளும் நிறைந்துள்ளது நம் நாடு; எனினும், அவை விடுதலைப் போர்க்கால இயக்கம் போல, இந்தக் குடியுரிமை ஆக்க நெறிக்குச் செயல்படாமல் போனதால், ஆளும் கட்சி, மாற்றுக் கட்சி என்றில்லாமல், ஆளுக்கொரு கட்சி என வேர்க் கொல்லிகள் புகுந்ததால் நம் ஜனநாயகம் சாக்காட்டை நோக்கிப் போகிறதே என நம் வணக்கத்திற்கு என்றும் உரிய அடிகளார் அவர்கள் பலமுறை நம் அரங்கங்களில் மட்டும் இன்றி – பேசும் மேடைகளில் எல்லாம் – உளம் வருந்தியது உண்டு, அவற்றுள் சில செய்திகளையாவது பேராசிரியர் சொல்லட்டும்.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“ஜனநாயக, சோசலிச, மதச்சார்பற்ற அரசாகப் புதிய குடியாட்சி அமையும் எனச் சுதந்திரம் பெற்ற நாள் முதல் கனவு கண்டோம். ‘எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கும் இவ்வையகம்’ எனும் புரட்சிக் கவிஞர் உறுதியும், ‘முப்பது கோடியும் வாழ்வோம், வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்’ எனும் மகாகவி சபதமும் நனவாகும் என நம்பினோம்.”

இடைமறித்த மூத்த அரசு அதிகாரி

“ஆனால், ஆண்டுக்கு ஆண்டு வறுமையும் வரிச் சுமையும்தான் அதிகரித்து வந்தன. எப்படியேனும் செல்வத்தைச் சேர்த்து அதைக் கொண்டு ஆட்சிச் செல்வாக்குப் பெற்று, அவரவர் அனுபவிக்கும் புதிய ஜமீன்தார் ராஜ்யங்களே உருவாயின.”

மற்றொருவர்

“செல்வச் செருக்காலும் அதிகார பலத்தாலும் தனிச் சலுகையோடு, நினைத்ததைச் சாதித்துக் கொள்ளலாம் எனும் எண்ணம் பலரிடம் நீடிக்கும் வரை, சமுதாயத்தில் சமத்துவம் நிலவாது. இந்நிலை மாறாத போது புள்ளி விவரப்படி உற்பத்தி பெருகினாலும், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாடுவோர் எண்ணிக்கை குறையாது; புரட்சி ஓயாது. அடிப்படைத் தேவைகளுக்கே அல்லல்படும் நிலை நீடிக்கும் வரை நியாயமான மக்களாட்சி மலராது.”

ஒருங்கிணைப்பாளர்

“சொல் வேறு, செயல் வேறு எனும் போக்கு உடையவர்கள் அரசியல் களத்தில் அதிகமாக நுழைந்தமை யால் ஏற்பட்டு வரும் அவக்கேடு இது. இதனைக் களைய வேண்டுமானால், வாக்காளர்கள், நல்லவர்களை ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அடிகளார் வற்புறுத்தி வந்தார்கள்.”

பேராசிரியர்

“வள்ளுவர் மன்னராட்சிக் காலத்தே வாழ்ந்து சமுதாயக் கோட்பாடுகளை வகுத்தவர் எனினும்- குடிதழுவிக் கோலோச்சும் மக்களாட்சி முறையை, அப்போதே, முதன்முதலில் சொல்லிவிட்டார் என்பது அடிகளாரின் உறுதிப்பாடு. அவர் கொடுங்கோன்மை புரிந்த அரசுகளையும் அறிந்திருந்ததாலோ என்னவோ, அதனை நீக்கி- நல்லாட்சி நடத்தும் அரசை அமைப்பதே குறளின் குறிக்கோள் எனப் பல அதிகாரங்களில் வரையறுத்தார். இந்தக் குடியாட்சி வரையறுப்பின் அடித்தளம் வாக்காளர்கள். இந்த வாக்காளர்களின் அரசியல் அறிவு, தகுதி ஆகியவற்றிற்கு ஏற்பவே ஆட்சியும் அமையும்.”

மற்றொரு பேராசிரியர்

“மக்கள் ஆட்டு மந்தைகளாக இருந்தால் ஓநாய்களே ஆட்சிக்கு வருவார்கள் என்பது ஒரு மேலை நாட்டு அரசியல் ஞானியின் அறிவுரை” (அரங்கில் கர ஒலி)

பேராசிரியர்

“அடிகளாரின் கருத்தைத் தொடருகிறேன்; நாம் நமது நாட்டைச் சொத்தாகக் கருத வேண்டும்.”

ஒரு புலவர்

“அதனால்தான் அவரவர் பங்குகளைச் சுரண்ட ஆசைப்படுகிறார்கள்” (சிரிப்பலை)

பேராசிரியர்

“அடிகளார் பெருந்தகை நாடு நம் சொத்து என்பது போல, நாமும் நாட்டின் சொத்து எனப் பெருமையோடு கருதி, கடமைப் பொறுப்போடு செயல்படத் தூண்டி வந்தார். வளர்ச்சி எனும் திட்டப் பணிகளைக் காரணம் காட்டி இதுவரை நம்நாடு வாங்கியுள்ள வெளிநாட்டுக் கடன் சுமை எப்போது இறக்கி வைக்கப்படுமோ என ஏங்கினார். எனவே பொருளாதாரச் சீரழிவை இப்போதாவது தடுத்து வளம் செழிக்கும் பாதைக்கு நாட்டைக் கொணரவல்ல நல்ல ஆட்சியைத் திறம்படத் தேர்ந்தமைக்கப் பல உரைகளில் தொடர்ந்து மன்றாடினார்.”

ஒருங்கிணைப்பாளர்

“நம் நாட்டில் வசியும் வளனும் சுரப்பதை விட, நாள்தோறும் பசியும் பகையும் பெருகக் கண்டு, நம் அடிகளார் கண்ணீர் மல்கியதை நம்மில் பலர் பார்த்திருக்கிறோம். அதனால்தான் – நல்குரவோடு பல்குறைத் துன்பங்களும் சென்றுபடும் நிலை வந்தாக வேண்டும் என வலியுறுத்தினார்.”

பேராசிரியர்

“நமது நாடு பசி, பிணி, செறுபகை என்பனவற்றில் இருந்து விடுதலை பெறுவது ஒரு புறம் இருக்க, நாடு தழுவிய வளர்ச்சி நிலைபெற வேண்டுமானால், நமது நாட்டின் அளப்பரிய ஆற்றலான மனித வளத்தை மூலைக்கல்லாகக் கொண்டே இதர கட்டுமானங் களையும் முறையாக எழுப்ப வேண்டும் எனக் கட்டளையிட்டார், திட்டமும் தந்தார் மகா சந்நிதானம் அவர்கள்.”

பெரும்புலவர் செல்வ கணபதி

“அறிவியலையும் கிராமப்புறத் தொழில் களையும் ஓரணியில் கொணர்ந்து, புதுமையான வளர்ச்சித் திட்டங்களை…”

இடைமறித்த அன்பர்

“சுவாமிகளின் இந்த ஒருங்கமைப்புத் திட்டத்தைக் ‘குன்றக்குடித் திட்டம்’ (ரிuஸீக்ஷீணீளீuபீவீ றிறீணீஸீ) என மைய அரசே பாராட்டியது. ஆனால் வழக்கம் போல அத்திட்டத்தை ஊர்தோறும் வளர்க்காமல் தயங்கியும் நின்று கொண்டது.”

பேராசிரியர்

“அடிகளார் பெருந்தகை நம்மவர் உழைப்பெல்லாம்- சாதி – சமய – மொழிச் சிக்கல்கள் போன்ற வேண்டாத, உடனடிப் பயனற்ற, நாட்டுக்கு ஊனம் தரக்கூடிய பிரச்சினைகளிலேயே செலவிடப்பட்டு, விழலுக்கு இறைத்த நீராகிறதே எனவும் வேதனையுற்றார்.”

ஒருங்கிணைப்பாளர்

“நான் முன்பே குறிப்பிட்டது போல… ‘பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும்’ நம் நாட்டில்தான் அதிகம் என்பது அடிகளார் வருத்தம்.”

அரசு அதிகாரி

“நம் ஊர்களில் ஊர்வலமோ, போராட்டமோ, கோஷமோ, கொடி பிடிப்போ இல்லாத நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் மனப்போக்கும் அப்படி, ஆட்சியாளர் மனப்பக்குவம் இன்மையும் அப்படியே.”

திருக்குறள் செம்மல்

“‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த, வகுத்தலும் வல்லது அரசு’ (385) – எனும் குறளில் குன்றக்குடி அடிகளார் ‘வகுத்தல்’ எனும் சொல்லுக்கே, செயலுக்கே அதிக அழுத்தம் தருவார். நாட்டில் உருவாக்கப்பெறும் உற்பத்திப் பொருள்கள் எல்லாம் உரியவாறு மக்கள் நுகர்வுக்குப் பயன்படுவதில்லையே? செல்வம் மறுமுதலீடாக மீண்டும் சுழற்சிக்கு வருவதில்லையே? வேலை வாய்ப்பும் பெருகுவதில்லையே! என்பது அடிகளாரின் வள்ளுவச் சிந்தனை, ஏக்கம்.”

பேராசிரியர்

“நமது நாட்டில் ஆட்சியை அமைக்க உதவும் களம்- தேர்தல், அத்தேர்தலில் ஆட்சிப் பொறுப்பு ஏற்கக் கூடிய பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க உதவும் உரிமை – வாக்குச்சீட்டு. ஆற்றல் மிக்க, புனிதமான இந்த வாக்குச் சீட்டால் நல்லவரை, ஒழுக்கத்திலும் செயலிலும் வல்லவரைத் தெரிவு செய்ய வேண்டும். ஆனால் அந்த நல்லவர் – தனி நபராக ஒற்றைப் பனையாக நின்றால் ஏதும் செய்ய முடியாது. ஏனெனில் குடியாட்சியின் கட்டுமானம் – கட்சி அமைப்பு. நாணயமானவர்கள் இடம்பெற அதிக அளவில் முன்வந்தாக வேண்டும் என்பது அடிகளார் அவர்களின் விருப்பம். அப்போதுதான், ‘சான்றோர் பழிக்கும் வினை’ என்பன தொடரமாட்டா. வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே. அதை நிறைவேற்றாத வரை நாணயமானவர்கள் என எப்படி ஏற்க முடியும்?”

ஒருங்கிணைப்பாளர்

“இதற்கெல்லாம் அடிப்படை நல்ல குடிமக்களாக நாம் அமைவதுதான்.”

இடையில் ஒருவர்

“இப்பொழுது குடிமகன்கள் நிறையப் பேர் பாதையெங்கும் காணப்படுகிறார்கள். அத்தகையவர் களுக்குப் பஞ்சமே இல்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“நல்ல செங்கற்களால் நல்ல கட்டிடம் எழும்பும். அது போல நல்ல குடிமக்களால் – ‘வரப்புயர’ என ஔவை சொன்னது போல – வீடும் நாடும் உயரும். நாடு என்பதன் நுண்துளி வட்டம் அவரவர் குடி எனும் குடும்பம். எனவேதான் வள்ளுவர் ஒவ்வொருவரும் உழைப்பால் தம் நிலையை உயர்த்தி – தாம் பிறந்து வளரும் குடியையும் மேம்படுத்த முற்பட்டாலே – நாடு தானாகச் செழித்தோங்கும் எனக் குடிமைப் பண்பை வலியுறுத்தினார். அத்தகையோர் பருவம்- காலம் – பொழுது பாராமல், கடுமையாக உழைத்துக் குடிமானம் காப்பர். ‘பொதுப்பணியில் கடமையைச் செய்யச் சோர்வடைய மாட்டேன்’ என நினைத்தாலே – முற்பட்டாலே – அதைவிடப் பெருமையின் பீடுடையது இல் என்று ஊக்கு விக்கிறார் வள்ளுவர். இந்த நாட்டின் ஒவ்வொரு உரிமை மகனும், மகளும் தன்னலம் இல்லா உழைப்பால், நிர்வாகத் திறமையால், வளர்ச்சி மேலாண்மையால் தன் குடியை நிமிர்த்தி – நாட்டையும் உயர்த்த – பெருமையுடனும் உறுதிமாறா வீரப்பொறுப்புடனும் மார் தட்டிப் புறப்பட்டு அணிவகுத்தால் நம் இந்தியத் திருநாடு, பாரதி பாடியது போல் ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ ஆகும். நம் பெருமைக் கெல்லாம் உரிய தாயகம் ஆகும். என நம் தவத்திரு அடிகளார் கண்ட கனவை, அதற்கும் பல ஆண்டுகட்கு முன்னரே, ‘மண் பயனுற வேண்டும் – வானகம் இங்கு தென்பட வேண்டும்’ என மகாகவி பாரதி வேண்டிய வரத்தை – நம் காலத்திலேயே நாமே நடைமுறை ஆக்க உறுதி பூணுவோம். அதில் வெற்றியும் காண்போம். இந்த உறுதியுடன் நிலா முற்ற அரங்குகள் பலவற்றில் ஒன்று கூடிச் சிந்தித்து ஒரு புதிய இலட்சிய ஓவியத்தை வரைந்து தந்துள்ள உங்கள் அனைவர்க்கும், வானொலிக்கும், உலகத் திருக்குறள் பேரவை சார்பாக உளமார்ந்த நன்றி கூறுகிறேன். நமது நிலா முற்றம் மீண்டும் ஒரு முழுநிலா இரவில் கூடும். வள்ளுவரின் நிருவாகவியல் சிந்தனைகள் பற்றியும், திருக்குறளைத் தேசிய நூலாக்குதல் பற்றியும் ஆராயும், ஆவன செய்யும். ‘புகழ்ந்தவை போற்றிச் செய்தல் வேண்டும்’ எனும் வள்ளுவ வாழ்த்துடன் விடை பெறுவோம்.”

குறள் நிலா முற்றம் 13

ஒருங்கிணைப்பாளர்

“உபதேசம் வெறும் ஊறுகாய் போல மட்டும் இருந்து விடலாமா? பற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளரவேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.”

அரசு அதிகாரி

“பசிப்பிணியைப் போக்க அரசு பல திட்டங்களைப் போட்டு வருகின்றது. பசிப் பிரச்சினை மற்றும் வேலை இல்லாத் திண்டாட்டம் என்பன பெருகும் மக்கள் தொகையாலும் இதர நிர்வாக முறைகளாலும் தவிர்க்க முடியாத பிரச்சினைகளாக நீடிக்கின்றன. இதைச் சமாளிக்க அரசு வரிகளைக் கூட்டினால் எதிர்ப்பு வலுக்கிறது.”

பேராசிரியர்

“இப்போதெல்லாம் குடியாட்சி செலுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் அரசு பெரும்பாலும் வரிகளை மக்கள் ஒரு கடமையாகத் தாமாக முன்வந்து செலுத்த ஊக்கம் தருவதில்லை. கசக்கிப் பிழிய முற்படுவதால் மக்களில் பலர் வரி கட்டாது ஏமாற்றப் பார்க்கிறார்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் பொதுவுடைமைச் சமுதாயம் என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே நீடிக்கிறது. எனவே வரிகளைப் பெருக்கி, வசதிகளைப் பெருக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்படுகின்றது. அவ்வாறு வரி தண்டுவதிலும் ஒருவகை மனிதநேயப் பாங்கு இருக்க வேண்டும் என்பது வள்ளுவ நியதி.. அனைவருக்கும் தெரிந்த குறள்தான் அது.

‘வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

     கோலொடு நின்றான் இரவு.’         (552)

ஆட்சி அதிகாரத்தோடு, முறை கடந்து பொருளைக் கைக்கொள்ளுவது, பாதை நடுவே வேலோடு நின்ற கள்வன், பொருளைக் கொடு என அச்சுறுத்திப் பொருளைப் பறித்துச் செல்வதைப் போன்றது என அடித்துச் சொல்கிறார் வள்ளுவர். நல்லாட்சி பற்றிப் பேசும் போது, வெற்றிதருவது கோல் எனப் பேசிய வள்ளுவர், கொடுங்கோன்மையால் கசக்கிப் பிழிந்து வரிபெறுவது அருளற்ற ஆட்சி, அது நிலத்துக்குச் சுமை, கொள்ளையர் ஆட்சி என்றெல்லாம் சாடுகிறார்.”

பெரும்புலவர்

“நன்முறையில் வரி பெறுவதையும் தீய வழியில் வரி பறிப்பதையும் பற்றிய புறநானூற்றுப் பாடலில் வரும் யானை பற்றிய உவமையை இங்கே நினைவில் கொள்ளலாம். ஒருமா பரப்பளவுள்ள நிலமாயினும் அதில் விளையும் நெல்லை அளந்து யானைக்குத் தீனியாகப் போட்டால், அது பல நாட்களுக்கு வேளை தவறா உணவாக நீடிக்கும். அதை விடுத்து, யானையை அவிழ்த்துவிட்டு, நீயே போய் உண்டு கொள்ளலாம் என விட்டோமானால் அதன் வாயில் புகும் நெற்கதிரை விடக் காலால் மிதிபட்டு அழியும் பயிரே பல மடங்கு ஆகும். நூறு செறு நிலப்பரப்பில் விளைந்தவை எல்லாம் ஓரிரு நாளில் பாழாகிவிடும். எனவே அரசன் முறையறிந்து நெறி பிறழாது வரிகளைப் பெற வேண்டும் எனும் அந்தப் பாடலே வள்ளுவத்திலும் எதிரொலிக்கிறது.”

அரசு அதிகாரி

“அந்தப் பாட்டில் புலவர் நன்கு முற்றிக் காயும் நிலையில் உள்ள நெல்லைக் குறித்துள்ளார். ஆனால் இன்று நம் வயிறு காய்ந்தாலும் வரியைக் கட்டியாக வேண்டிய கடுமையான நிலையன்றோ நீடிக்கிறது? இதெல்லாம் நல்லாட்சிக்கு ஏற்றதா என்ன? இந்த ஆட்சி அமைப்பின் மீது மக்கள் எப்படி நம்பிக்கையோ, பற்றோ கொள்ள முடியும்?”

பேராசிரியர்

“பொதுவுடைமை அரசே ஆயினும் வரி இன்றி ஆட்சி செலுத்த முடியாது. பொதுவுடைமை என்பதும் உலகின் ஒரு சில நாடுகளில் மட்டும் பந்தலிட்டுப் படருவதால் பயன்இல்லை. உள்நாட்டுப் பொதுவுடைமை, உலகப் பொதுவுடைமையாதல் வேண்டும். ‘ஓருலகம்’ ) என வெண்டல் வில்கி எனும் அறிஞர் ஒருவர் கண்ட கனவும், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனும் தமிழ்ச் சான்றோர் கூறியனவும், தன்னலம் தீர்ந்த, சண்டையில்லாததாய் உள்ள சமுதாயமும் உருவாகக்கூடிய பாதையை விடுத்து உலக சமுதாயம் திசை மாறியே போய்க்கொண்டிருக்கிறது. இதில் பசிப்பிணியை அறவே நீக்க ஒவ்வொருவர் கையிலும் மணிமேகலையின் அட்சயப் பாத்திரம் இருந்தாக வேண்டும்.”

ஒருவர் இடைமறிக்க ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் உங்கள் கருத்தைச் சொல்லி முடியுங்கள்.”

பேராசிரியர்

“‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக’ என்று அன்று மணிமேகலை செய்தாள், இன்று நம் பாரதப் பிரதமரும் பசியை அறவே நீக்கப் பல அறிக்கைகளை வெளியிடுகிறார். பசியை நீக்கப் பொய்யான பொதுவுடைமைக் கோஷத்தால் முடியாது. உண்மையான நல்லாட்சித் திட்டங்கள் வேண்டும். அரசுத் திட்டங்கள் மட்டும் பசியைப் போக்கிவிடாது. இந்தப் பாரகம் உள்ள வரை தனிமனித நேயமும் உதவிக் கரம் நீட்டியாக வேண்டும். அதுதான் நல்ல நாடு.”

ஒருங்கிணைப்பாளர்

“‘உறுபசியும் ஓவாப் பிணியும், செறுபகையும் சேராதியல்வதே’ (734) நல்ல நாட்டின் இலக்கணம் என்பது வள்ளுவம். அத்துடன் புலவர் ஐயா சுட்டிக்காட்டிய, ஒப்புரவு உள்ளமும் மக்களிடம் நிலை கொண்டாக வேண்டும். அதற்கான முன் முயற்சியாகத்தான் ‘செய்க பொருளை’ எனக் கட்டளையிட்டார் வள்ளுவர். அவர் ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என எச்சரித்தார்; இல்லாதார்க்கு மனமுவந்து செல்வராக இருப்போர் ஈந்து உவக்கும் இன்பம் பெறவேண்டும் எனத் தூண்டினார்.”

புலவர் செல்வகணபதி

“அப்படியெல்லாம் செல்வரும் எளிதில் ஈயும் மனத்தோடு நடப்பதில்லை. விளம்பரக் கொடையே நடக்கிறது. கட்டாய வசூலே நாடகமாகிறது. ‘ஈர்ங்கை விதிரார் கயவர், கொடிறுடைக்கும் கூன் கையர் அல்லாதார்க்கு’ என்றது  போல, கயவர்களுக்குப் பயந்து தருகிறார்கள். அந்தச் செல்வர்கள் ‘செல்வத்துப் பயனே ஈதல்’ எனப் பெரும்பாலும் நினைப்பதில்லை.”

இடைமறித்த ஒருவர்

“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.”

புலவர்

“அப்படியே தீயவர் பெருகினால், சமூகத்தில் புரட்சிதான் வெடிக்கும். பொய்யும் புரட்டும் தான் வளரும்.”

தொழிலதிபர் லெ.நாராயணன் செட்டியார்

“புரட்சியால் விளையும் போட்டி ஆட்சியை விட, மனமாற்றத்தால் நிலவும் நல்லாட்சி முறையே நல்ல பயனை நீடித்துத் தரும். சுதந்திரம் பெற்ற நாள் முதல், நம்மோடு உரிமை பெற்ற பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் தேசத்தில் பரவலாக நல்லாட்சி முறையே நீடித்திருக்கிறது என ஏற்பதில் தவறில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“நாடு என்றால் அது எப்படி அமைந்திருக்க வேண்டும், அதனை ஆளும் நல்லாட்சியின் இலக்கணம் என்ன, அரசர்- அமைச்சர் ஆகியோரின் கடமைப் பொறுப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் வள்ளுவர் ஓர் அரசியல் பொருளாதார மேதையாகவே நின்று பேசியுள்ளார்.”

ஒருவர்

“அவற்றுள் பொருத்தமான சிலவற்றைப் பற்றிச் சிந்திக்கலாமே?”

மற்றொருவர்

“பேசிப் பேசிப் புளித்துப்போன அரசியலைப் பற்றி இங்கேயும் பேசி நேரத்தை வீணாக்க வேண்டுமா? அந்தச் சாக்கடைகளை நாமும் தோண்ட வேண்டுமா?”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசான் வ.சுப.மா. அவர்கள் அப்படி நினைக்கவில்லை. பலருக்கும் வாக்குரிமையும் கடமைப் பொறுப்பும் உள்ள குடியாட்சி முறையில் நலன், தீங்கு என்பவை தராசின் இரு தட்டுக்களைப் போன்றவை. ஆனால், வள்ளுவர் வகுத்த அரசு நெறி எவ்வரசுக்கும்- எக்காலத்திற்கும் – அன்பர் குறிப்பிட்டது போன்று இன்றைய அரசியல் சாக்கடையா, சாக்காடா… என்ற அந்த நிலைக்கும் பொருந்தவே செய்யும்.”

அரசு அதிகாரி

“இன்று அரசியல் தலையிடாத துறையே இல்லை. இன்று பேசிப் பேசிப் பொழுதை வீணடிப்பதுதான் அரசியல் கலாச்சாரம். தன் கட்சியை மலையளவு ஏற்றுதல், பிற கட்சியினை முடிந்த அளவு தூற்றுதல், வசவு நடை, வம்பிழுப்பு, ஆகாக் கத்தல், அடியாள் சேர்த்தல் – இத்தகைய போலிக் குடியாட்சியைப் பற்றி – அது வள்ளுவத்தோடு பொருந்துமா என்பது பற்றி – நாம் பேசிப் பயன் என்ன? வாக்களிக்கும் சக்தி படைத்த பெரும்பான்மையும் அரசியலே புரியாத மக்களிடையே அல்லவா போய்ப் பேச வேண்டும்!”

புலவர்

“போய்ப் பேச வேண்டுமா? பெரிய பொய் பேச வேண்டுமா? (சிரிப்பலை) குடியாட்சி முறைக்கே அடித்தளமான தேர்தல் முறையே விலைபேசப்படும்போது, அரசியல் வியாபாரம் பற்றி நாம் பேரம் பேசிப் பயன் என்ன? உலகமே வியாபார மயமாகி வருகிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“உலகம் ஒன்றெனக் கருதும் காலம் எப்போதோ தோன்றிவிட்டது; என்றாலும், அது நனவாக நடைமுறைப்பட எத்தனைக் காலம் ஆகுமோ தெரியாது. ஆனால் எவரும் உலகக் குடிமக்களாகப் பிறப்பதில்லை. ஒருநாட்டு, ஒரு வீட்டு உரிமைக் குடிமகனாகவே ஒருவன் பிறக்கிறான். எனவேதான் வள்ளுவர் நாடு – வேந்து – அரசு என்றெல்லாம் பொதுநிலை அரச அறங்கள் கூறியதாகக் கருதுவோம்.

நாடு என்றால் ஒரு நிலவரையறை இருப்பது போலவே வேந்தளவு அதாவது இறையாண்மை (ஷிஷீஸ்மீக்ஷீமீவீரீஸீtஹ்) எனும் அரசாளுமை இருக்க வேண்டும் என முதலில் விதிக்கிறது. இத்தகைய நாட்டுத் தலைவருக்கு என்ன வேண்டும்? ‘தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன் ஆள்பவர்க்கு’ என்றார் வள்ளுவர்.”

ஓரன்பர்

“இப்போதெல்லாம் தூங்குவதற்கே சட்டமன்றம் போகிறார்கள்.”

மற்றொருவர்

“குறட்டை விடாமல் தூங்கலாம் என்று ஒருமுறை சபாநாயகர்த் தீர்ப்பு வந்ததே…!”

வேறொருவர்

“நம் நிலா முற்ற அவையில் யாரும் குறட்டை விடவில்லையே!” (சிரிப்பலை),

ஒருங்கிணைப்பாளர்

“‘தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்விலாச் செல்வரும்’ என்றெல்லாம் ஒரு நாட்டிற்குத் தேவையான வள்ளுவ இலக்கணங்களை இங்கே நாம் எண்ணுவதை விட, இன்றைய குடியாட்சி முறையில் புகுந்துவிட்ட கேடுகளை வள்ளுவர் அப்போதே வரிசைப்படுத்தியுள்ள அருமையை நினைவுகூர்ந்து, திருந்தவோ, திருத்தவோ சிந்திக்கலாம்.”

வருமான வரித் துறை ஆணையர்

“தேர்தலில் மிகுபெரும்பான்மை பெற்றுவிட்ட தோரணையால் – எல்லை மீறிய வலிமையால் – நல்லாட்சி புரிவதை விடுத்து அடிக்கடி மனம் போலக் கடுமையான சட்டங்களை இயற்றுவதும், தண்டனைகளை விதிப்பதும் நடைமுறையில் உள்ளனவே?”

ஒருங்கிணைப்பாளர்

“‘கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன், அடுமுரண் தேய்க்கும் அரம்’ (567) எனும் குறளைத் தானே சொல்லுகிறீர்கள்?”

பெரும்புலவர்

“அல்லற்பட்டு ஆற்றாது அழும் நிலை மக்களுக்கு ஏற்பட்டால், அதுவே ஆட்சிச் செருக்கை அழிக்கும் படை ஆகிவிடுமாம்.”

இளைஞர் ஒருவர்

“‘பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என எங்கள் பாரதிக் கவிஞன் ஏகாதிபத்தியத்தையே ஏளனம் செய்து பாடி விட்டான்” (குரல்கள் : சபாஷ் தம்பி – கைதட்டல்)

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் வகுத்த அரசு குடிமக்களுக்கு முதன்மை மதிப்பும் பாதுகாப்பும் தருவது; குடி தழுவிக் கோலோச்சுவது; முறை செய்து காப்பாற்ற வேண்டியது; காட்சிக்கு எளிமையாய் விளங்க வேண்டியது; உள்ளுவதெல்லாம் மக்கள் நலனே கருதி உயர்வாக உள்ளும் பொறுப்புடையது; பகை நட்பாகக் கொண்டு ஒழுக, உறுபசி, ஓவாப் பிணி என்பன சேராமல், நேராமல் பேண வேண்டியது; எதிர்காலக் குறிக்கோளுடனும் நிகழ்காலத் திட்டங்களுடனும் நன்கு செயலாற்ற வேண்டியது.”

அரசு அதிகாரி

“ஆனால் எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சிகள் போல உள்நாட்டிலேயே போர்க்களங்கள் அமைத்து அரசை இயங்கவிடாமல் செய்வது தான் அன்றாடக் காட்சிகள்.”

பேராசிரியர்

“எதிர்க்கட்சி வலுவாக இல்லாத குடி ஆட்சிமுறை, அங்குசம் இல்லாத யானைச் சவாரி போன்றது.”

ஒரு மாணவி

“‘இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்’ என்பது வள்ளுவர் ஏற்ற எதிர்நிலைத் தேவை.”

ஒருங்கிணைப்பாளர்

“‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் கொல் குறும்பும் இல்லது நாடு’ (735).

‘வேந்தலைக்கும்’ என வள்ளுவர் எச்சரித்தது குடியாட்சி முறையில் கொடி கொடியாய்ப் படர்ந்து வருவது நல்லதில்லை.”

பெரும்புலவர்

“ஒரு கட்சிக்குள்ளே பல குழுக்கள், உட்பகைகள், வெளிப்போர்கள், கொல் குறும்புகள்… இந்தப் ‘பல்குழு’, ‘கொல் குறும்பு’ எனும் தொடராட்சி வள்ளுவருக்கே கைவந்த கலை.”

 

ஓரன்பர்

“புலவர் ஐயா கொல் குறும்பில் நுழைந்து விட்டார். இது நீடித்தால் குழப்பம் தான்.”

ஒருங்கிணைப்பாளர்

“என்னதான் பல்குழு, கொல் குறும்புகள் இருப்பினும் அரசாள்வோர் – தக்கார் இனத்தராய், தானொழுக வல்லாராய் இருந்தால் போதுமே! ‘ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து, யார் மாட்டும் தேர்ந்து செய்வதே முறை’ என அறிந்து செயல்பட்டால் நல்லதாயிற்றே! நாள்தோறும் நாடி முறை செய்யாவிட்டால் நாடும் சீரழியும் எனப் புரிந்து கொண்டால் போதுமே!”

குறள் நிலா முற்றம் 12

ஒருங்கிணைப்பாளர்

“குறளில் ‘நட்பு’ எனும் மானுடப் பொது உறவு பற்றி வரும் ஐந்து அதிகாரங்கள் ஒருபுறம் இருக்க, இருமுறை வரும் அதிகாரப் பெயர் ஒன்றும் உள்ளது. அது என்ன என்று சொல்கிறீர்களா?”

(அவையில் சற்று அமைதி)

“நானே சொல்லிவிடுகிறேன். அது தான் குறிப்பறிதல்!”

இளைஞர் ஒருவர்

“செம்மல் லேசாக ஜாடை காட்டியிருந்தால், இந்தத் தலைப்புப் பெயரை நானே சொல்லி இருப்பேன். நெஞ்சில் நின்றது, சொல்லில் வருவதற்குள்…”

ஒரு புலவர் ஐயா

“இந்தக் காலத்துத் தம்பிகளில் பெரும் பாலோர்க்குக் குறிப்பறிதல் உடனே புரிவதில்லை; அவர்களுக்குப் புரியும் குறிப்புக்களோ நமக்குப் புரிவதில்லை.”

(அவையில் பலத்த சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“‘குறிப்பறிதல்’ அதிகாரப் பெயர் – பொருட்பாலில் அங்கவியலில் உண்டு; காமத்துப் பாலில் களவியலிலும் அது உண்டு. அங்கே அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகத்தைச் சொல்லுகிறார்.”

பெரும்புலவர்

“இங்கேதான் சிறிசுகள் முகத்தை மூடிக்கிறதுகளே?” (அவையில் சிரிப்பு).

ஒருங்கிணைப்பாளர்

“காமத்துப் பாலில் அறத்துப்பால் உள்ளிட்ட பல உளவியற் செய்திகளை நுட்பமாகச் சொல்லுகிறார் வள்ளுவர் எனச் சற்று முன் சொன்னேனே… அதைத் தொடர்ந்து சில நினைவுச்சரங்கள்.”

பேராசிரியர்

“இன்பத்துப்பால் தான் இதர அறம், பொருள் பிரிவுகளுக்கு அடிப்படை எனத் ‘திருக்குறள் செம்மல்’ அவர்கள் தக்க சான்றுடன் எப்போதும் நிறுவுவார்…

ஒருங்கிணைப்பாளர்

இதற்கிடையே இந்த நூற்றாண்டின் தொடக்க நன்னாளில் உலகே வியக்க, நம் பாரதத் திருநாட்டின் பாதச்சுவடாக விளங்கும் நீலத்திரைக் கடலோரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரியின் முக்கடல் கூடும் இடத்திலே, உலகு வியக்க நிறுவப்பெற்ற திருவள்ளுவரின் சிலை அமைப்பும் இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே செதுக்கப்பட்டுள்ளது என்பதும் உலகம் உள்ள வரை நிலை பெற்றிடும்.”

பேராசிரியர் வளனரசு

“சிலை திறப்புப் பெருவிழாவில் பங்கேற்று மகிழ்ந்த நான் காணாத ஏதோ ஒரு செய்தியைப் பேராசிரியர் சொல்லுகிறார்.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“கலைஞர் பெருமானாரின் 20 ஆண்டு விடா முயற்சியாலும் அருங்கலைச் சிற்பி கணபதி ஸ்தபதியின் குழுவினரது ஈராண்டு உறங்கா உழைப்பாலும், கருங்கற் களைப் பாளம் பாளமாக வடிவமைத்து வண்ணமுற நிமிர்த்தப்பட்ட இந்தத் திருவள்ளுவர் சிலை, அமெரிக்க சுதந்திரதேவி சிலையை விடச் சிறப்புப் பெருமையுடையது; கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெறத்தக்கது. 1330 குறட்பாக்களை 133 அதிகாரங்களில் வகுத்துள்ளமைக்குச் சான்று பகருவது போல 133 அடி உயரப் பெருமையுடையது; பிரமிப்புத் தருவது.

இதில் நான் சிறப்பாக அவையோர் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவது இந்த 133 அடி உயரச் சிலையின் மூன்று நிலைப் பகுப்பு.

சிலைநிற்கும் ஆதார பீடத்தின் உயரம் 38 அடி. இது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களுக்கு நிகர். இந்தப் பீடத்தின் மீது நிமிர்ந்து நிற்கும் உருவச் சிலையின் உயரம் 95 அடி. அதாவது பொருட்பால் அதிகாரம் 70, இன்பத்துப்பால் அதிகாரம் 25 இரண்டும் சேர்ந்தால் 95, ஆதார பீடத்தையும் சேர்த்தால் ஆக மொத்தம் 133 அடி (அவையோர் கர ஒலி)

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் வள்ளுவர் சிலையின் வடிவமைப்பை விரித்துச்சொல்லி வள்ளுவர் முப்பாலில் காமத்துப்பால், பொருட்பால் எனும் இரண்டும் அறத்தின் மீதே ஊன்றி நிற்கின்றன எனும் அற்புதப் பொருத்தத்தை அழகுறச் சொன்னார். அறிதற்குரிய அரிய செய்தியை நினைவூட்டியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி (மீண்டும் கைதட்டல்) நான் விட்ட இடமான சிலை பற்றிய விவரங்களை மீண்டும் பேசுவோம். அறிதோறும் அறியாமை கண்ட இடத்திற்கு மீண்டும் போகலாமா?”

“ ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம், செறிதோறும் சேயிழை மாட்டு” (1110) எனும் ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதிகார இறுதிக் குறட்பா அறிவினைத் தேடத் தேட, அறியாமையே மிகுவதை இவ்வளவு நுட்பமாக உணர்த்துகிறது. மற்றொரு அருமையான குறள்.. அதே அதிகாரத்தில்தான்,

“தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

     அம்மா அரிவை முயக்கு”            (1107)

என நம்மை விருந்தோம்பலோடு இந்த மனையாளொடு இருந்தோம்பி மகிழும் ஆரா இன்பத்தையும் அழகுற ஒன்றாக்குகிறார் வள்ளுவர்..”

இடைமறிக்கும் புலவர்

“தமது வீட்டில் இருந்து கொண்டு, தாம் சம்பாதித்தலில் விருந்து அளித்து அதை விருந்தினர் வயிறார உண்பதைக் கண்டு மகிழும் மனம்…”

பெரும்புலவர்

“பின்னே என்ன? ஓட்டலுக்குப் போய் நாலு பேரோட வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு, பில்லைத் தட்டுலே வச்சவுடனே வேறே பக்கம் முகத்தைத் திருப்பிக்கிற இந்தக் கால நாகரிகத்தை – அடுத்தாத்து நெய்யே என் அகத்துக்காரி கையேங்கிற உபசாரத்தை – வள்ளுவர் செய்யவில்லை.”

ஓர் அரசு அதிகாரி

“நண்பருடன் ஓட்டலுக்குப் போய்ச் சிக்கிக் கொண்ட அனுபவத்தோடு புலவர் ஐயா பேசுகிறார்” (சிரிப்பலை)

புலவர்

“அட, நான் ஓட்டலுக்கே போறதில்லைய்யா. வீட்டிலேயே நமக்கு எப்போதும் விருந்துதான் போங்க…”

இன்னொருவர்

“அந்த ரகசியத்தையும் சொல்ல மாட்டேங் கிறீங்களே” (மீண்டும் சிரிப்பு)

மற்றோர் அரசு அதிகாரி

“இந்தப் பரம ரகசியங்களை எல்லாம், ஒவ்வொருவரும் பகிரங்கப்படுத்தத் தொடங்கி விட்டால் அதற்காக என்றே தனி இயல் ஒன்றை நாமே வகுத்து, அதையும் வள்ளுவர் தலையில் கட்டிவிடலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“வருமான வரித் துறை ஆணையர் திரு மோகன் காந்தி அவர்கள் ஏதோ புதிய செய்தி ஒன்றை எழுப்ப விழைகிறார். கேட்டறியலாமே?”

வருமான வரித் துறை ஆணையர் திரு.மோகன் காந்தி

“மூதறிஞர் ராஜாஜி அவர்களின் ‘பஜ கோவிந்தம்’ எனும் நூலைப் படித்தேன் இரு குறட்பாக்களில் வரும் ‘வேண்டாமை எனும் செருக்கு – பற்றுக பற்றற்றான் பற்றினை’ எனும் வரிகளுக்கு மன நிறைவான விளக்கம் பெற்றேனில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“பொருள் சேர்ப்பது வாழ்க்கைத் தேவை. அதனை உழைப்பால் நியாயமான முறையில் ஈட்ட வேண்டுமே தவிர, அறம் தவறிப் பொருள் சேர்க்கும் வேணவா, பேராசை அறவே கூடாது. அதிலும் தவறு எனக் கருதாமல், பிறர் பொருளைக் கவர முயன்றால் அதனால் முடிவில் துன்பமே மிகும். ‘இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும், வேண்டாமை என்னும் செருக்கு’ (180) என்பது குறள். பிறர் பொருளைக் கண்டு பொறாமை யுறுவதே குற்றம் எனப்படும். அப்படியிருக்கப் பிறர் பொருளை எப்படியேனும் அபகரிக்கச் சதித்திட்டம் செய்வது பெருங்குற்றம். அன்புடையவர் பிறர்க்குப் பொருளுதவி செய்து அவரைக் கை தூக்கி விடுவர்.”

அரசு அதிகாரி ஒருவர்

“பொறாமையும் பேராசையும் உடையவர் உதவி செய்வது போல நடித்துத் தக்க சமயத்தில் காலை வாரி விடுவார். கை தூக்கி விடுவதை விட, காலை வாரி விடுவதுதான் இப்போது மிகச் சுலபமாகத் தெரிகிறது.” (அவையின் முறுவல்)

ஒருங்கிணைப்பாளர்

“அன்பற்ற பொறாமைக் குணமுடையார், கொள்கையோ நடுநிலையோ இல்லாது, பிறர் தேடிய பொருளைத் தான் மட்டும் எப்படியும் அடையக் கருதினால், அவர்களுடைய குடி அழியும், குற்றங்களும் அப்போதே விளையும். எனவே, தவறான முறையில் பொருள் தேட மறுப்பதே ஒருவகையில் மானமுடைய செருக்கு என்கிறார் வள்ளுவர்.”

பெரும்புலவர்

“கலைத்திறமுடையோர்க்குக் கலைச்செருக்கு இருப்பது போல, தமது அரிய உழைப்பால் பெருஞ்செல்வம் சேர்த்தோர் சிலரிடம் மிடுக்கு அமைவது போல, வெற்றி மேல் வெற்றி பெறும் அரசியல் தலைவர்கள் சிலருக்குச் செருக்கு வந்து பற்றிக்கொள்ளுவது போலப் பிறர் பொருளைக் கவர நினையாமையே ஒரு வகையில் செருக்கு; அதாவது, வியந்து பாராட்டத்தக்க செருக்கு எனும் குறள் கருத்தைச் செம்மல் விளக்கியமைக்கு நன்றி. அடுத்து..”

ஒருங்கிணைப்பாளர்

‘நடுவுநிலை தவறிச் சேர்த்த பொருளால் தானம் செய்து புகழ், விளம்பரம் என்றெல்லாம் தேடினாலும், அது, ஒருவகையில் கருமித்தனம் தான்.”

புலவர் ஒருவர்

“அதற்குப் பின்னால் கர்ம வினைப் பலனும் உண்டு.”

ஒருங்கிணைப்பாளர்

“அறத்தொடு சாராத பொருளைப் பிறர்க்கு ஈகை செய்வதால், புகழோ பெருமையோ நிலைபெற்று விடாது, வெற்று விளம்பரமாகவே போய்விடும்.”

வருமான வரித் துறை அதிகாரி

“ராஜாஜி சொன்ன.. பற்றுக குறளைக் கொஞ்சம் பற்றுக..” (அவையில் சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

     பற்றுக பற்று விடற்கு..”        (350)

என்பது வள்ளுவம்”

பெரும்புலவர்

“வருமான வரித் துறை ஆணையர் கேட்ட கேள்வியில் எத்தனை பற்றுகள்? பற்றும் வரவும் இல்லாமல் பேரேடு போட முடியாது. வரிவிதிப்பும் கிடையாது” (சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“‘துறவு’ அதிகாரத்தின் இந்தக் கடைசிக் குறளில் ‘பற்று’ எனும் பிடிப்பு வாழ்வையும் விடுப்பு வாழ்வினையும் வள்ளுவர் வேறுபடுத்திக் காட்டுகிறார். துறவு முறைகள் பல வகை. இளங்கோவடிகள், விவேகானந்தர் போன்றவர்களின் மணவாத் துறவு, மணந்து வாழும் போதே ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின் மேற்கொள்ளும் சில கோட்பாட்டுத் துறவுகள், அருளுணர்வு பெருகி, தன்னலம் ஓய்ந்தபின், இல்லற வாழ்வையும் துறந்து, பிறர் நலம் பெறவும், தன் ஆன்மா உய்வு பெறவும் முழுமைத் துறவே பூணுதல்… ஆனால், இல்லறத்தில் இருக்கும் போதே, சில நிலைகளில் பற்றற்று வாழ்ந்து, கடமையைச் செய்வோரும் காந்தியடிகளைப் போலச் சிலர் உண்டு. புறத்துறவும் கொள்ளலாம். அகத்துறவும் அமையலாம். முழுமையான, பற்றறுத்த வாழ்க்கை, ஐம்புலனையும் செம்மையாக அடக்கிய வாழ்க்கை பூணுவது எளிதில்லை. ‘யான், எனது…’ என்பது இருந்தே தீரும்.”

பெரும்புலவர்

“ஏதாவது ஒன்றைப் பற்றி நிற்பதே உயிரின் இயல்பு. எனவே சில்லறைப் பற்றுக்களை விட வேண்டுமானால் செம்பொருளான சிறந்ததொரு பற்றினைப் பற்றுக என்பது தானே பொருள்?”

ஒருங்கிணைப்பாளர்

“பிறவி நோக்கம் இடையறா இன்பமே ஆகும். அதனால் நிம்மதியும் அமைதியும் பெறுவதே குறிக்கோள். இந்த இன்பத்திற்கு அடிப்படை ஆசை. அது அளவின்றிப் பெருகிப் பேராசையாகிவிட்டால், அதுவே துன்பத்திற்கு மூல காரணம் ஆகிவிடுகிறது.”

பேராசிரியர்

“அதாவது, ஒருவன் எதனிடம் மிகுபற்றுக் கொண்டு வாழ்கிறானோ அதனால் துன்பம் அடைவான், எதிலிருந்து பற்று விட்டு நிற்கிறானோ அதானல் அவனுக்குத் துன்பம் இல்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்’ (341) எனும் குறட்கருத்து அதுதான். இந்தப் பத்தாம் பற்றுக் குறளை வள்ளுவர் வினா – விடை போல அமைத்துள்ளது தான் சிறப்பு. கைவிட வேண்டியது எது? பற்று விடுதல். அதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும்? வேறொன்றைப் பற்றுக. இந்தப் ‘பற்றுக’ எனும் பதத்தை மிக நயமாகக் கையாண்டு ஒருவகை மயக்கமூட்டுகிறார் வள்ளுவர்.”

பெரும்புலவர்

“ஆமாம், எதைப் பற்றினாலும் மயக்கம் வந்துவிடாமல் கைப்பற்ற வேண்டும்.”

ஓரன்பர்

“புலவர் ஐயா எந்தப் பற்றையும் இன்னும் விடாத அனுபவத்தைச் சொல்கிறார்” (அவையில் சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“இப்போதெல்லாம் தனிநபர் வாழ்வை விடச் சமுதாய வாழ்வில் இருப்போரிடம் பொதுப்பற்றை விடத் தன்னலப் பற்று, தன் பெண்டு, தன் பிள்ளை என்னும் வாரிசுப் பற்றுகள் ஆட்டி வைக்கின்றன. இத்தகையோரிடம் மக்களிடம் அதிலும் சிறப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழே சீரழிந்தோரிடம் இரக்கச் சிந்தை எனும் பற்றுறுதி ஏற்பட்டால், பிற சுயநலப் பற்றுக்கள் எல்லாம் தாமாக விட்டுப்போக ஆரம்பித்துவிடும். புகழ்ந்தவை போற்றிச் செய்யும் பெருமனம் வளரத் தொடங்கும். வள்ளலார் வேண்டியது போல, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்யும் தொண்டுமனப் பற்று விடாது பற்றிக் கொள்ளும். அதனைப் பற்றுக என வள்ளுவர் சொன்னதாகக் கருதி ராஜாஜியின் பஜ கோவிந்தச் சரிதத்தை நாமும் ஏற்போம்.” (கை தட்டல்)

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“எல்லோரும் ‘பஜ கோவிந்தம்’ மட்டும் பாடிக் கொண்டே இருந்தால் நாட்டில் படரும் பசிப்பிணி போய்விடுமா, என்ன? இந்த உலகு இருக்கும் வரை ஏழையரும் இருப்பர். எனவே அயலாரை நேசித்து உதவும் பற்றினை வளர்ப்பதே மனித நேயம். அது இல்லாத வெறும் இறைபக்தி பொருளற்றது என விவிலியம் போதிக்கிறது.”

இடையில் ஒருவர்

“கிட்டத்தட்ட எல்லாச் சமயங்களின் உபதேச சாரமும் அதுதான்.”

ஒருங்கிணைப்பாளர்

“உபதேசம் வெறும் ஊறுகாய் போல மட்டும் இருந்து விடலாமா? பற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளரவேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.”

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 11

Image result for valluvar

பெரும்புலவர்

“இல்லாளுக்குப் பத்து இல்லாதவனுக்கு 20!”

ஓர் அன்பர்

“என்ன பெரும்புலவர் ஐயா ஏதோ புதிர் போடுகிறார்?”

பேராசிரியர்

“மனையற வாழ்வில் ‘இல்லாள்’ எனும் சொல் இல்லத்திற்கு உரியவளேயான மனைவியைக் குறித்திட, ‘இல்லான்’ எனும் எதிர்ச்சொல், கணவனைச் சுட்டாமல் ஏதும் இல்லாத வெறும் பயலைக் குறிப்பதாகப் புலவர் ஐயா, சொல்லாமல் சொல்லுகிறார். ஆனால் 10/20 என்ற கணக்குத்தான் புரியவில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“பெரும்புலமைப் பெருந்தகை ஒரு வகையில் கணக்குப் போட்டே சொல்லியிருப்பதாகக் கருதலாம். வாழ்க்கைத் துணை நல இல்லத்தரசி பற்றி 10 குறளோடு முடித்துவிட்டு, இல்லத் தலைவன் கடைப்பிடிக்க வேண்டியவற்றை ‘பிறனில் விழையாமை’, ‘பெண் வழிச்சேரல்’ எனும் இதர தலைப்பில் 20 குறளில் சொல்ல நேர்ந்ததை 20 அம்சத் திட்டம் போலச் சொல்லியதாகக் கருதுவோமே!”

வளனரசு

“பிறனில் விழையாமை’ அதிகாரத்திற்கு முன்னுரை எழுதிய பரிமேலழக உரையாசான், ‘காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விரும்பாமை எனும் இது ஒழுக்கமுடையாரிடமே நிகழ்வதாதலின், ஒழுக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது’ எனப் பொருத்தமான விளக்கம் தருவார்.

“பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

     அறம்பொருள் கண்டார்கண் இல்.”    (141)

“அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

     நின்றாரின் பேதையார் இல்”        (142)

என்றெல்லாம் வள்ளுவர் அறவழி நிறுத்துவர்.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் வளனரசு வரிசைப்படுத்தியமை போல அறநெறியில் இல்வாழ்பவன், பிறன் மனை நயவாதவனே ஆவான். ‘ஆண்மை’ என்றால் ஆளுமை. அது புற வீரத்தைவிட, அக ஒழுக்கமான மனஅடக்கத்தில்தான் தலைநிமிர்ந்து விளங்கும். அது கோழைத்தனம் அல்ல.”

அரசு அதிகாரி

“ ‘பிறன்மனை நோக்காத பேராண்மை’ என்கிறாரே?”

 

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“அன்பர் சுட்டிய ‘நோக்காத’ எனும் வள்ளுவச் சொல்லாட்சி மீண்டும் மீண்டும் நினைக்கத்தக்கது. ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட ஒரு பொருள் சுட்டும் பல சொற்கள் உள்ளமை போலத் தமிழிலும் காண், பார், நோக்கு எனும் சொற்கள், பல்வேறு பொருளமைதிச் சாயல்களுடன் கையாளப்படுகின்றன.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் சுட்டிக்காட்டியது போல வள்ளுவர் நோக்காமை’ எனும் சொல்லால் மிகுந்த நுண்மாண் நுழைபுலத்தோடும் உளவியல் பாங்கோடும் எடுத்தாண்டுள்ளார்.

ஓர் அன்பர்

“ஒருவகை உள்நோக்கத்துடன் பார்ப்பதைத் தான் ‘நோக்கு’ என்கிறார்.”

ஒருங்கிணைப்பாளர்

“அதுதான் உகந்த பொருள். அழகாக இருக்கும் பொருளைப் பார்த்து உளமார ரசிப்பதில் தவறில்லை. அழகிய மாதொருத்தியை நோக்கி, அவள் தன் மனைவியாக இருக்கக் கூடாதா என மறுகுவதுதான் தவறான உள் நோக்கு.”

அரசு அதிகாரி

“அப்ப ரசிக்கலாம். நோக்கக்கூடாது என்கிறீர்கள்.”

கருணைதாசன்

“ரசனைக்கும் ஒரு வரையறை உண்டே?”

பெரும்புலவர்

“வரம்பு மீறி ரசித்து, விழைந்தமையால் வந்த வினையைப் பல கதைகள் நமக்குப் பாடமாகச் சொல்லி உள்ளனவே… அடுத்தவன் மனைவியின் அழகில் மயங்கி, அறம் தவறி, மதிகெட்டு, மானம் மட்டும்  இன்றி, தன் வாழ்க்கையையே வீணடித்துக் கொண்ட வரலாற்று நிகழ்ச்சிகள் நம் நாட்டில் பல உண்டு.”

மற்றொரு புலவர்

“வானுலக வேந்தனான இந்திரன், அகலிகையின் அழகில் மயங்கி, அவளை நுகர மானுட வேடம் போட்டு நடத்திய நாடகத்தில் முனிவரிடம் பெற்ற சாபம் ஒரு பெரிய புராணம்!”

புலவர் செல்வ கணபதி

“அதைச் சேக்கிழாரின் புனிதமான பெரிய புராணத்தோடு ஒப்பிட்டு விடாதீர்கள்.” (சிரிப்பலை அவையில்)

அரசு அதிகாரி

“இந்தக் காலத்தில் எல்லாம் ஏதேனும் ஒரு சின்னவீடு இருந்தால்தான் ஒரு பெரிய மனிதருக்குப் பெருமை என்றாகிவிட்டது.” (மீண்டும் சிரிப்பலை)

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“இராமாயணக் காப்பியத்தின் மூலக்கருவே இராவண வதம் என்றால் அவனது அழிவுக்குக் காரணம்? ‘முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும், எவராலும் வெல்லப்படாய் எனப் பெற்ற வரமும், உலகெல்லாம் கடந்த புயவலியும்’ என்பன எல்லாம் கற்பெனும் கனலியான சீதையை, வஞ்சகமாய் அபகரித்த காரணத்தால் வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு வீடு திரும்பினான் என்ற அவலத்தை நினைத்து சின்ன வீட்டு ஆசைகளை அகற்றிவிட வேண்டுகிறேன்.” (சிரிப்பு)

வருமான வரித் துறை ஆணையர்

“இல்லறக் கடமைகளில் ஆணை விடக் கூடுதலாகப் பொறுப்பேற்கும் பங்காளி என்பதால் தான் ஆங்கில மரபில் ‘ஙிமீttமீக்ஷீ பிணீறீயீ’ என்பர். காந்தியடிகள் ‘கீஷீனீணீஸீ வீs லிவீயீமீ’s றிணீக்ஷீtஸீமீக்ஷீ’ எனச் சரிநிகர் சமானம் தந்தார்.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராண்மை என்ற சொல்லை மீண்டும் நினைத்தால் வள்ளுவர் மனத்திட்பத்திற்கே பெருமை சேர்த்துள்ளார் என்பது விளங்கும்”

அவையில் ஒருவர்

“செம்மல் சொல்வது போல எவ்வளவுதான் மனத்திட்பத்தோடு வீட்டை விட்டு வெளிக்கிளம் பினாலும் சினிமாக் கவர்ச்சிகளும் விளம்பரக் காட்சிகளும் ஆண்கள் மனத்தை மட்டும் அல்ல, பெண்கள் உடல் நளினத்தையும் அளவுக்கு மீறிக் கொச்சைப் படுத்தும் ஒரு புதிய அநாகரிகம் ஓங்கி வருவது எல்லோரையும் அன்றைய இந்திரன் போல அகலிகைகளைத் தேடச் செய்துவிடும் போல உள்ளது.”

அன்பர் ஒருவர்

“கண்களை மூடிக்கொண்டு நடக்கப் பழகுங்கள், சரியாகிவிடும்” (அவையில் சிரிப்பு)

செந்தமிழ்க் கல்லூரி மாணவி சித்ரா

“நீங்கள் என்னதான் சமாதானம் கூறினாலும் வள்ளுவர் பெண்களை ஆண்களுக்கு அடிமை களாகக் கருதியே பல குறட்பாக்களைச் செய்துள்ளதாக நான் குற்றம் சாட்டுகிறேன்.

சான்றாக,

‘தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுதுஎழுவாள்

     பெய்யெனப் பெய்யும் மழை’        (55)

எனும் குறளில் பெண் தன் கணவனையே தெய்வமாகத் தொழவேண்டும் எனும் நிபந்தனை யையும், அத்தகையவள் ‘பெய்’ எனச் சொன்னால் மழை பொழிய வேண்டும் என்ற கட்டாயமும் ஒருவகை ஆணாதிக்கத்தையே காட்டுகின்றன. இப்போதெல்லாம் பெண்கள் கணவனைத் தொழாமல், பெய் எனவும் சொல்லாமல் இடை விடாமல் பேய்மழை பொழிந்து ஊரெல்லாம் வெள்ளக்காடாகி விட்டதே? அப்படியானால் ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் தத்தம் கணவன்மார்களுக்கு ஒரே சமயத்தில் செய்த வழிபாட்டு ஆராதனையின் விளைவா இந்த வெள்ளப் பெருக்கு?”

மற்றொரு தமிழாசிரியை

“செல்வி சித்ரா குறிப்பிட்டதை விட, சமுதாயத்தில் கண்டதும் காதல், பெண்மைச் சீண்டல் (ணிஸ்மீ ஜிமீணீsவீஸீரீ)..” ஆகியன தினசரி நடப்பு களாக உள்ளனவே…

இடைமறித்த ஒருவர்

“ஆண்களும் சீண்டப்படுகிறார்களே?” (சிரிப்பலை)

மற்றொருவர்

“சீண்டலாலும் தீண்டலாலும் ஆண்மகன் எப்படியோ தப்பித்து விடுகிறானே! பெண்கள் தானே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்? சீண்டல்- தீண்டலின் விளைவை காலம், பருவம் எல்லாம் காட்டிக் கொடுத்து விடுகின்றனவே…?”

புலவர்

“குறள் நம் கையில் உள்ள முகக் கண்ணாடி போன்றது. அவரவர் முகம் அதில் தெரிவது போல, ஒழுக்கத்தைப் பொறுத்தவரை அவரவரே வரம்பு கட்டி வாழ வேண்டும்.”

வளனரசு

“சற்றுமுன் குறிப்பிடப்பட்ட பெண் பெய் எனப் பெய்யும் மழை பற்றி ஒரு கருத்து…”

அன்பர் ஒருவர்

“வெளியே மழை ஓய்ந்தாலும் அரங்கினுள்ளே தூவானம் விடாது போலிருக்கிறதே!”

வளனரசு

“சிறுதெய்வ வழிபாட்டை விடத் தன் கணவனையே உளமார நேசித்து வணங்கி வாழ்பவள், உரிய நேரத்தே பெய்ய வேண்டும் எனப் பிறர் எல்லாம் வேண்டும் பருவ மழையைப் போன்றவள் என நேரடியாகவே பொருள் கொள்ளலாம். இதில் ஒரு கடவுள் தன்மையையும் பகுத்தறிவுக்குப் பொருந்தாமையையும் தம் உரைமேல் ஏற்றி, பரிமேலழகர், மணக்குடவர் போன்ற பெருமக்கள் அன்றைய காலப் போக்கிற் கேற்பச் செய்து வைத்த தவறு. அந்த உரைகளில் கூட வேறுபாடுகள் உண்டு என்பதே உண்மை.”

பேராசிரியர்

“இக்குறட்பா இளங்கோவடிகளையும் மணிமேகலை ஆசிரியரையும் மனம் கவர்ந்தது என்பார் பேரறிஞர் கா.அப்பாத்துரையார், இருவருமே தமது காப்பியங்களின் நாயகியரின் கற்புத்திறம் விளக்க இக்குறளை எடுத்தாண்டு உள்ளதாக நினைவு.”

ஒருங்கிணைப்பாளர்

“கற்பரசி, தெய்வத்தையோ கணவனையோ தொழுதெழுவாள்; மழை பெய்யும் என்பதை விட கற்புடைப் பெண்ணைத் தெய்வமும் தொழுதேத்தும் எனும் உணர்வோடு பொய்யில் புலவன் பொருளுரை தேர்ந்து இந்த விவாதப் பகுதியை இத்துடன் முடிப்போமே.”

கல்லூரி மாணவி

“முற்றத்து அவையோர் முன்னர் மகளிர் சார்பாக மற்றும் ஓர் ஐயத்தைக் கேட்டு, இனி அடுத்து வரும் நாட்டாட்சி பற்றிய பகுதிக்குச் செல்லத் தடைக்கல்லாக நிற்கிறேன். மன்னிக்கவும்.”

முதியவர் ஒருவர்

“ஏம்மா தயக்கம்? வீட்டுக்கு அப்புறம் தான் நாடு, அதிலும் மகளிர்க்கு ஐயப்பாடு வந்தால் வீடும் சரிப்படாது; நாடும் உருப்படாது. கேளுங்கள், கேளுங்கள்.”

மாணவி

“வள்ளுவரின் காமத்துப்பால் உலகு முழுவதும் உள்ள ஆண் – பெண் உறவு முறைக்குப் பொருந்துமா? இந்த உறவு முறைகளில் இப்போதெல்லாம் பல வகையான அனுசரித்துப் போதல். அதாவது…”

பேராசிரியர்

ஆங்கிலத்தில் சொல்லப் படும் எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் இசைவில்லாத, அவிழ்த்து விடப்பட்ட ஒரு சுதந்திரமான, மனம் போன போக்கு – ஒரு கலாச்சாரமாக அல்லது அனாச்சாரமாக வளர்ந்து வருவதைத்தானே சொல்கிறீர்கள்?”

வளனரசு

“ஆண் – பெண் உறவு முறை என்பது அடிப்படை நோக்கில் உலகு முழுவதும் ஒன்றுதான். அணுகும் முறைகளில்தான் அந்தந்தப் பண்பாட்டுக்கு உகந்த மாறு பாடுகள் உண்டு. அதனை அந்தந்தச் சமூகம் ஏற்றுக் கொண்டால் சரிதான். நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, சங்க இலக்கிய அகத்திணை தொட்டு வள்ளுவம் வரை கருதும்போது – ‘களவில் தொடங்கி கற்பில் முடிவதே’ இந்தப் புனித உறவு என்று சொல்லி விடலாம். எங்கள் பேராசான் வ.சுப.மா.அவர்கள் முனைவர் பட்ட ஆய்வேடாக நூலில் கிரேக்க ஆங்கில மேதைகளின் கருத்துக்களையும் குறிப்பாக ஹாவ்லக் எல்லிஸ்எ ன்பாரின் இரு தொகுதிப் பேரேட்டிலும் இக்கருத்தே நிலவுகிறது. காதலில் தொடங்கிக் கற்பில் நிலை கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது போலவே கொழுநனிடம் ‘நண்ணேன் பரத்த நின்மார்பு’ எனும் உறுதிப்பாடு நன்றாகத் தொனிக்கிறது; இன்பத்துப் பால் வாழ்கிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“இன்பத்துப்பாலில்தான் வள்ளுவர் மிக நுட்பமான செய்திகளைச் சொல்லுகிறார்.”

ஒருவர்

“அதை விரிவாகவே சொல்லுங்கள்!” (சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“அறத்துப்பாலில் சொல்லாது விடப் பட்ட பல அறிவியல் செய்திகள்… குறிப்பாக ‘அறிதொறும் அறியாமை கண்டற்றால்…’ என்ற அரிய தொடர்  அன்றே கருதிய ஒப்பரிய செய்தி வருகிறது.”

பேராசிரியர்

“மனம் பயன்படும் இடம் சமூக வாழ்வோடு இணைந்திருந்தாலும் அது பண்படும் இடம் குடும்ப வாழ்வின் இன்ப நிலையமே என்பார் பேரறிஞர் மு.வ. அது மட்டும் அல்ல. அறிவும் உணர்வும், வன்மையும் மென்மையும், அழகும் இளமையும், கவர்ச்சியும் முயற்சியும் என்றெல்லாம் இணந்துள்ள குடும்ப வாழ்வில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து, தொண்டும் தியாகமும் மேவிட வாழ்வதே சீரிய வாழ்வு எனவும் வலியுறுத்துவார்.”

பெரும்புலவர்

“அதுமட்டும் அல்ல ஐயா!… வள்ளுவர் காமத்துப் பாலில் ஒருதலைக் காமத்தையோ, ஒவ்வாக் காதலையோ கூறவில்லை. ‘அன்பின் ஐந்திணை’ எனப் பெரியோர் வகுத்த ஒத்த அன்புடைய, ஒன்றிய அன்றில் பறவை போன்ற உரிமை வாழ்வையே பேசுகிறார்; நன்கு குறிப்பிட்டுப் பேசுகிறார்.”

ஒருங்கிணைப்பாளர்

“குறளில் ‘நட்பு’ எனும் மானுடப் பொது உறவு பற்றி வரும் ஐந்து அதிகாரங்கள் ஒருபுறம் இருக்க, இருமுறை வரும் அதிகாரப் பெயர் ஒன்றும் உள்ளது. அது என்ன என்று சொல்கிறீர்களா?”

(அவையில் சற்று அமைதி)

குறள் நிலா முற்றம் – 10

Image result for thirukkural

 

பேராசிரியர்

“குணம் என்னும் குன்றார்க்கு வெகுளி ஏற்படுவது இயல்புதான் என்றே வள்ளுவர் ஏற்கிறார்.”

புலவர் ஒருவர்

ஆனால், அது ஒரு கணமே நீடிக்கும் – அதற்குள் காத்துக் கொள்க என மீட்சியும் சொல்கிறார். இந்த இளைஞர் அந்த ஒரு கணத்திற்குள் ஓடி வந்துவிட்டார் என நினைக்கிறேன்.”

இளைஞர்

“குணம் எனும் குன்றேறி நிற்பதாகக் கருதப்படும் பெரியவரிடம் கோபாக்கினி போலச் சுட்டெரிக்கும் சினம் வரலாம் என வள்ளுவர் சொல்லுகிறாரா?”

ஒருங்கிணைப்பாளர்

“சுயநலம் கருதாது, பொதுநலப் பணியில் முனைந்திருக்கும் போது இடையூறுவரின், அதுவும் ஒரு வகையில் குணநல வெளிப்பாடு எனவே கொள்ள வேண்டும். அத்தகைய சினம் – வெகுளி, கரவின்றிச் சடுதியில் வெளிப்பட்டுவிடும். மின்னல் போல ஒரு வெட்டுவெட்டிவிட்டு, விரைவில் மறைந்தும் விடும் என்பதே என் கருத்து.”

“ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

     வேந்தனும் வெந்து கெடும்.”         (899)

உயரிய கொள்கையால் உரம் பெற்ற சான்றோர்க்குக் கோபமே வரக்கூடாது என்பது நடைமுறைச் சாத்தியமா? எனும் கேள்வி இங்கு முரணாக முன் நிற்கிறது.”

வருமான வரித் துறை அதிகாரி

“இயேசுபிரான், நபிகள் நாயகம் உள்ளிட்ட சமய நிறுவனர்களுக்கும், காந்தியடிகள் போன்ற அகிம்சையே உயிராகக் கொண்டோர்க்கும், பண்டித நேரு போன்ற ஆட்சிப் பொறுப்பாளர் களுக்கும் அவ்வப்போது சினம் ஏற்பட்டதை வரலாற்றில் படித்திருக்கிறோம்.”

வாழ நூல் செய்த வள்ளுவர்

வளனரசு

“வள்ளுவப் பெருந்தகை எப்பொருளையும் அதன் பயன்பாடு கருதியே விளக்குவார். உலகுக்கு ஒட்டக்கூடிய ஒழுக்க வரைமுறையே பேசுவார். வாழ நூல் செய்தவர் ஆதலால் செயல்பாட்டுக்கு வரும் அற முறைகளையே அடுக்கிச் சொல்வார் என்பது எங்கள் பேராசான் வ.சுப.மா.வின் வள்ளுவம்.”

பேராசிரியர்

“இங்கு கூறிய கருத்துக்கு உடன்பட்டு ஒன்று சொல்வேன். ஈட்டும் பொருளனைத்தையும் ஈகையாகத் தந்துவிடுக என வள்ளுவர் சொல்லவில்லையே?

“ஆற்றின் அளவறிந்து ஈக; அது பொருள்

     போற்றி வழங்கும் நெறி”            (477)

என்றே போதிக்கிறார்.”

ஒருங்கிணைப்பாளர்

“அந்த நடைமுறைக்கு உகந்த முறையினையே அவர் கூறும் சான்றோர் சினம், அல்லது சாதாரண மக்கள் வெகுளாமை என்பனவற்றிற்கும் பொருத்திப் பார்க்கலாம்.

ஒருவர் உள்ளத்தில் உருவாகும் வெறுப்பும் பகையுமே வெகுளியாய், சடுதியில் வெளிப்படுகிறது. அது அருளுடைமைக்கு மாறானது. எனவே, அதற்கு இடம் தராமல் காத்து வர வேண்டும். ஆயினும் குறிப்பாக வலியார் – மெலியார் என எல்லோரிடமும் சகட்டு மேனிக்குச் சினம் காட்டி எரிந்துவிழுதல் மனிதப் பண்பு ஆகாது. செல்லிடத்தும் காப்பதே சினம். பிற இடத்தில் அதைக் காப்பதும், காத்துக் கொள்ளாததும் ஒன்றுதான். எனவே நிர்வாகச் செயலினூடே சிலரது இடையீட்டால் பொறுப்பில் உள்ளோருக்கு அடக்கமுடியாதபடி வெகுளி ஏற்படினும், சினம் கொள்ளமாட்டேன் எனும் உறுதியை நாள் தோறும் வளர்த்து வந்தால்தான், தப்பித்தவறியும் சினம் கொள்ளாமல் பிறரோடு, தன்னையும் காத்துக் கொள்ள முடியும்.”

ஓர் அன்பர்

“அலுவலகக் கோபத்தைப் பற்றிப் பேசுவதைவிட அன்றாடம் வீட்டில் மனைவி மக்களோடு எல்லாம் கோபப்படாமல் பொழுதை ஓட்ட முடிவதில்லை; கல்விக் கூடத்தில் மாணவரைக் கண்டிக்காமல் இருக்க முடிவதில்லை.”

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

 ‘கோலைப் பேணிக் குழந்தையைக் கெடு’ எனும் பழமொழியே நியாயமான கோபம் – உலோகத்தைச் சூடேற்றி உருவமைப்பதற்குச் சமமானது என்றே உளவியல் ரீதியாகச் சொல்லுகிறது. கோபமே கொள்ளாத சாதுவை ‘அப்பிராணி’ என்றும் ‘மண்ணாந்தை’ என்றும் பட்டம் சூட்டி நையாண்டி செய்கிறது.”

பெரும்புலவர்

“சப்-கலெக்டர் ஐயா… ஆங்கிலப் பழமொழியைச் சொன்னார்… நான் ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் பயின்ற நாளில் கேட்டும் சொல்லியும் மகிழ்ந்த பாடலைச் சொல்லட்டுமா?”

அன்பர் ஒருவர்

“பெரும் புலவர் ஐயா பாட முற்பட்டால் அதைத் தடுத்துவிட முடியுமா? நீங்கள், உங்கள் பழைய பாட்டைப் பாடுங்கள்; எங்கள் பாட்டிற்கு நாங்கள் இருக்கிறோம்.”

பெரும்புலவர்

“அந்தக் காலம் அச்சுப்புத்தகம் வராத – ஏடும் எழுத்தாணியும் மாணவப் படைக் கலங்களாக இருந்த காலம்.”

அன்பர்

“சரி ஐயா – பாட்டைச் சொல்லுங்கள்”

ஏடும் எழுத்தாணியும்

பெரும்புலவர்

“ஏடு கிழியாதா? எழுத்தாணி ஒடியாதா? வாத்தியாரு சாவாரா? வயிற்றெரிச்சல் தீராதா?” (எல்லோரும் சிரித்தல்)

அன்பர்

“புலவர் ஐயா.. எத்தனை ஏட்டைக் கிழித்தாரோ, எத்தனை எழுத்தாணியை ஒடித்தாரோ… ஆனால் (பட்ட) பாட்டை மட்டும் மறக்காமல் சொல்லிவிட்டார்.”

ஒருங்கிணைப்பாளர்

“நாட்டு நிலவரப் போக்கில் சீர்குலைவு ஏற்படக் காணும் போது சான்றோர் வாய் மூடி இருக்கலாகாது; இருக்கவும் மாட்டார்கள். அத்தகைய ஏந்திய, உயரிய கொள்கையர் சீற்றம் கொள்ள நேரிட்டால், ஆட்சித் தலைவனாகிய வேந்தனோ, அவர் யாராயினும் இடைமுறிந்து வீழ்ந்து விடுவர்; ஆட்சியும் கவிழ்ந்துவிடும்.”

பேராசிரியர்

“ஒருங்கிணைப்பாளர் கூறிய இந்த கருத்தைத் தொடர்ந்து நான் சொல்ல வருவது ஒன்று உண்டு. சினம், கோபம், வெகுளி என்பன எல்லாம் வாழ்க்கைப் போக்கில் நமக்கு ஏற்படும் இயல்பான தொரு மெய் உணர்வு. புராண கால விசுவாமித்திரர் சாபம் தொட்டு, இராமாயண இராம பிரானின் சினம், பாரதப் போருக்கு வித்திட்ட பாஞ்சாலி சபதம், மதுரையை எரித்த கண்ணகியின் ஆறாச் சினம், கண்ணகியையும் கோவலனையும் மதுரைக்குக் கூட்டி வந்த கவுந்தியடிகள் இடைவழியில் குறுக்கிட்ட தீயவர்களை முள்ளுடைக்காட்டில் முது நரிகளாகிடச் சபித்த கோபம் எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால் சமுதாயத்தை அணி கோலிக் காப்பது இந்த அன்றாட மன உணர்வுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் (லிணீஷ்s) என ஒரு தொகுப்பு இன்றேல் இன்று சமூக ஆட்சியோ, அரசமைப்போ இராது.”

அன்பர்

“இந்தச் சட்டத்தாலும் பல சமயம் தீங்கு நேரிட்டுள்ளதே?”

பேராசிரியர்

“உரிமைப் போர்க்காலத்தில் காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கம் நடத்தியதற்கும் இன்று பல வகைகளில் நாடெங்கும் சட்ட எதிர்ப்பு உண்ணாவிரதங்கள் நடப்பதற்கும் உரிய காரணம் – சட்டம் எப்போதும் சரிவரச் செயல்படாமையே அல்லது செயல்படவிடாமையே.”

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்

அரசு அதிகாரி

“அத்தகைய சங்கடமான சூழலில் என்ன செய்வது?”

ஒருங்கிணைப்பாளர்

“அங்கே தான் சான்றோர்கள் வந்து முன் நிற்கிறார்கள். நமது பெரிய ஆதீனம் அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளார், தெய்வத்திரு வாரியார் சுவாமிகள் முதலிய பண்பட்ட அருளாளர்களும் ஞானசீலர்களும் சமுதாயத்தை நெறிப்படுத்த முன் வருகிறார்கள்! அத்தகைய ‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ என முத்தாய்ப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை. உலகம் வாழ்வது சட்டத்தால் அல்ல; சம்பிரதாயக் கோட்பாடுகளால் அல்ல; உலகு உயிர்ப்பது பண்பட்ட பெரியோரின் தன்னலமற்ற வழிகாட்டுதலால் மட்டுமே! அத்தகைய சான்றோர் சினம் கொள்ள நேர்ந்தாலும், அது ஒரு கணமே நீடித்தாலும்… அத்தகைய சூழல் ஏற்படாமல் முற்காக்கும் தற்காப்பே மக்களுக்கும் நல்லது; ஆட்சிக்கும் பொருந்துவது. மற்றொன்று பிறர் நலமும் பேணும் நல்ல சமுதாய அமைப்பில் போராட்டத் தேவையே ஏற்படாமல் போய்விடும்; அதையும் மீறிப் போரிட்டே ஆக வேண்டிய கட்டாயத்தை ஓர் அரசமைப்போ, நிர்வாகமோ உருவாக்கு மானால், அதுவும் இடைமுரிந்து அழிந்து போய்விடும் எனும் கருத்தில் யாருக்கும் முரண் இருக்க முடியாது.”

‘தமிழ்ப் பாவை’ கருணைதாசன்

“வாழ்க்கையில் இன்று முரண்கள் அதிகமாகி முட்டுக்கட்டையிடும் களங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. அறிவியல் வளர்ச்சியில் புதிய அங்கங்கள் ஒவ்வொரு துறையிலும் நாளுக்கு நாள் உருவாகி வருவதையும் அவற்றைப் பயன் கொள்வதை¬யும் முரணாக ஏற்க வேண்டிய தில்லை. ஆனால் வாழ்வியல் அடிப்படைத் துறைகளான கல்வி, அரசு, நிர்வாகம், ஆன்மீகப் போக்கு, பொதுத்துறை நிறுவனச்செயல்பாடு, மக்கள் போராட்டம் என நாள்தோறும் புதுப்புது முரண்கள் முளைத்து வருவதை நாம் கண்டும் காணாமல் இருக்க இயலாதல்லவா..? அந்த முரண்களைப் பற்றியும்…”

அரசு அதிகாரி

“இன்று சந்தித்த எண்ணற்ற முரண்களோடு நிலா முற்ற அரங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.. சாப்பாடு காத்திருக்கிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘தமிழ்ப்பாவை’ ஆசிரியர் சுட்டியது போல, நமக்குத் தோன்றும் முரண்களை எல்லாம் அடுத்து வரும் அரங்கில் கலந்து ஆய்வோம். இந்த அரங்கு அன்ன மீனாட்சி உணவக வள்ளுவர் அரங்கில் விரைவில் நிகழ்வுறும். இப்போது தமிழ் வாழ்த்துடன் உணவுக்குச் சொல்வோம். அனைவரும் வருக.”

(நிலவை மேகம் மறைக்கிறது)

அமர்வு மிமிமி

அன்ன மீனாட்சி வள்ளுவர் மன்ற அரங்கு இறைவாழ்த்துடனும் குறள் வாழ்த்துடனும் தொடங்கியது.

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைய நிலா முற்றத் தொடர்ச்சி அரங்கிற்கு மகளிர் அதிகமாக வந்துள்ளமை பெருமை தருகிறது.”

ஒருவர்

“அன்ன மீனாட்சி அரங்கில் அறுசுவையோடு நடக்கும் போது மகளிர் அதிகமாக வருவது இயல்புதானே!”

ஒருங்கிணைப்பாளர்

“முதலில் எங்கள் வி.கே.கே.மேனிலைப் பள்ளித் தமிழாசிரியர் திருமிகு வள்ளியம்மை வந்துள்ளார். அவர் தொடங்கட்டும்.”

வள்ளியம்மை

“நான் குறளைப் போலவே கடவுள் வாழ்த்துடன் என் ஐயத்தைத் தொடங்குகிறேன். வள்ளுவப் பேராசான் தம் பொதுமை நூலில் ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ எனத் தொடங்கு கிறார். ஆதிபகவன் என்பது சமண, பௌத்த சமயத் தொடர்புடையவை.  அப்படியானால் வள்ளுவர் எந்தச் சமயத்தவர்?”

வளனரசு

“எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய (ஆங்கில நெடுங்கணக்கின் ‘ஏ’ உட்பட) எழுத்தை முதன்மையாகக் கொண்டிருப்பது போல, உலகம் ‘பகவனை’ அதாவது ஒரு மூலப் பொருளை முதலாகக் கொண்டுள்ளது என்பது நேர் பொருள்.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“இந்த ‘பகவன்’ எனும் சொல் வடமொழியில் இல்லை. வள்ளுவரால் உருவாக்கப்பட்ட தூய தமிழ்ச்சொல் என்றே அறிஞர் பலர் கருதினர். ஏனெனில், இச்சொல் சங்க இலக்கியங்களில் பயிலப்படவில்லை; சிலம்பு, மணிமேகலையில் முறையே அருகப் பெருமானையும் புத்தரையும் அதிலும் கூட இடுகுறிப் பெயராகவே சுட்டுகிறது.”

இடைமறித்த புலவர்

“இன்னா நாற்பதில் முதல் பாடலிலும் வருகிறது.”

பேராசிரியர்

“ஆனால் உரையாசிரியர்கள்தான் வடமொழிச் சொல்லோ எனக் கருதி ‘வழிபாட்டுக்கு உரியவன்’ எனப் பொருளமைதியைத் தந்துவிட்டனர் எனலாம். ‘ஆதிபகவன்’ எனும் சொல், தொல்காப்பியம், சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு, இரட்டைக் காப்பியங்கள், ஏன் பிற்காலத் தேவார திருவாசகம், திருமந்திரம், ஆழ்வார் பாசுரங்களிலும் இல்லை என அறுதியிட்டுச் சொல்லலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“ஆனால், குறளில், ‘முதல’ எனும் சொல் அடிப்படையானது, காரணமானது, முதன்மை யானது எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டது என ஏற்போமே.”

பெரும்புலவர்

“நோய் நாடி நோய் ‘முதல்’ நாடி, ‘முதல்’ இல்லார்க்கு ஊதியம் இல்லை… எனப் பின்னர் வரும் சொற் பயன்பாடுகளோடு இணைத்தும் இதைச் சிந்திக்கலாமே?”

வேறு ஒரு புலவர்

“திருவாய் மொழியிலும் ‘ஆதி எம் பகவன்’ என வருவதாக நினைவு.”

ஒருங்கிணைப்பாளர்

“‘கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே’ எனத் தொல்காப்பியச் சூத்திரம் கூறியிருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வள்ளுவர், கடவுள் வாழ்த்தோடு தொடங்கினார் என்பதை மறுப்போர் கடவுள் சார்பினை ஏற்காது படிமுறை  வளர்ச்சி, உலோகாயதச் சிந்தனை  எனும் எண்ணத்தோடும் ஏற்கலாம்.”

பேராசிரியர்

“ஆனால், வள்ளுவர் பிந்திய குறள் வரிசையில், நிலையாமை, துறவு, மெய்யுணர்வு பற்றி எல்லாம் குறிப்பிடுவதால் இறைமை வழிபாடே இல்லாதவர் என முடிவு கட்டுவது பொருந்துமா?”

புலவர் செல்வ கணபதி

“குறளில் ‘கடவுள்’ எனும் சொல் இல்லை. பரிமேலழகர் தம் உரையில் புகுத்திய இதனை மாற்றி ‘இறைவழிபாடு’ எனவும் ஏற்கலாம்.”

கருணைதாசன்

“நாவலர் தாம் எழுதிய உரையில் ‘அறிவன்’ என்றார்; கலைஞர் தம் உரையில் ‘வழிபாடு’ எனும் பொதுச் சொல்லால் குறிப்பிட்டுவிட்டார்.”

வளனரசு

“தமிழாசிரியை அவர்கள் கூறியபடி, ‘வள்ளுவர் – சமண, பௌத்த சமயச் சார்பினரோ?’ எனும் கேள்விக்கே திரும்பவும் வர விழைகிறேன்… வள்ளுவர் காலத்தே இவ்விரு சமயங்களும் இங்கு நிமிர்ந்திருந்த தடயங்கள் உள்ளன. கல்லாடனாரும் இறைமையைக் குறிக்கும் சொல்லாக ஏற்றது இதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், எந்த இறைமை? சமணமா? பௌத்தமா? வள்ளுவர் பௌத்தர் போல முடியை மழித்தலும் வேண்டா, சமணர் போலத் தாடி வளர்த்தலுமாகிய வெளி அடையாளம் வேண்டா, உலகு பழித்ததை ஒதுக்கி வாழ்ந்தாலே அது இறைமை வழிபாடுதான் என உறுதிபட, நடுவு நிலை பேணி விளக்கினார். எனவே வள்ளுவரைச் சமயச் சிமிழுக்குள் அடைக்க முயல வேண்டாம்.

‘சமயக் கண்ணர் தம் மதிவழிச் செல்லாது உலகியல் கூறிப் பொது இது’ என்ற திருவள்ளுவ மாலைச் செய்தியை, வள்ளுவப் பொதுமைக்கும் மாலையாக அணிவித்து இவ்விவாதத்தை இத்துடன் நிறைவு செய்யலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“அறிவு பெறப் பெற, அறிவின் தூய்மையை எட்டி அடைய முற்பட வேண்டும். தூய அறிவு வடிவானதொரு பரம்பொருள் கடவுள் எனக் கொள்ளலாம். வாலறிவனான அவன் திருவடிகளைத் தொழாவிட்டால், கற்ற கல்வியால் பயன் இல்லை. அத்தகைய ‘வாலறிவன்’ யார் எனத் தேர்ந்து தெளிவதும், ஓர்ந்து தொழுவதும் அவரவர் மனத்தைப் பொறுத்தது; சார்ந்துள்ள நம்பிக்கையைப் பொறுத்தது. இதைச் சர்ச்சைக்கு உரியதாக்கிச் சமர்கள் புரிந்த சரித்திர ஏடுகளின் ரத்தக் கறைகள் மீண்டும் கசிய வேண்டாம். எனவேதான் நமது இந்தியத் திருநாடு, சமயங்கள் பலவற்றின் விளைநிலமாயிருந்து வந்துள்ள போதிலும் – சமயச்சார்பற்ற நாடாக (ஷிமீநீuறீணீக்ஷீ ஷிtணீtமீ) தன்னை அரசியல் சட்டபூர்வமாக அறிவித்து உலகிற்கே வழிகாட்டியும் வருகிறது.” (கைதட்டல்)

பேராசிரியர்

“சமயம் என்பது வேறு; ஆன்மீகம் (ஷிஜீவீக்ஷீவீtuணீறீவீsனீ) ஆகிய அருள் என்பது அதன் வழியே அடையக் கூடிய நற்பேறு. இவற்றில் ஏற்பட்டு வரும் மயக்கமே நாட்டில் குழப்பமாக, கலவரமாகக்கூட நீடிக்கிறது. உண்மைச் சமயங்கள் வேறு; சமய நெறியாளர் போல நடிக்கும் கபட வேடதாரிகள் வேறு.”

புலவர் செல்வ கணபதி

“ ‘அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு’ (247) எனும்  இறுதியுரை போல, நமக்கு அருளும் வேண்டும்; பொருளும் வேண்டும்.”

கருணைதாசன்

“ஆனால் இந்த இரண்டையும் கபட வேடத்தால் கவரும் நிலை பரவுகிறதே என்பதுதான் நல்லவர்களிடையே ஏற்பட்டுவரும் கலக்கம்… மரம் பழுக்க உழைத்த தோட்டக்காரன் கனிகொய்யக் கருதியிருக்கும் போது எல்லாம் வெம்பி விழுந்த பரிதாப நிலை பரவக்கூடாதே… மக்களில் நல்லவர் யார்? தீயவர் யார்? எனப் பிரித்தறிய முடியாது. எல்லோரும் ஆன்மிக அடையாளங்களுக்குள் ஒரே மாதிரியாகத் தோன்றும் புதியதொரு ‘சமய விழிப்பு’ ஏற்படுகிறதே. இது நலம் பயக்குமா?”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“‘தமிழ்ப் பாவை’ ஆசிரியர் மக்களையும் கயவரையும் ஒன்று போலக் காண்கிறார் எனக் கருதத் தோன்றுகிறது.”

கருணைதாசன்

“நினைவூட்டலுக்கு நன்றி. ஒரே உடை, ஒரே மாதிரி தோற்றப் பொலிவு. நல்லவர் – தீயவர் யாரெனப் பகுத்தறிய முடியாத் தவிப்பு. ‘மக்களே போல்வர் கயவர்’ எனும்படி வள்ளுவரே மயங்கியது ஏன்?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் கயமையைக் கண்டு கடியும் குறட்பா வரிசையில் மக்களில் கயவர் உருவுடையவர் பலர் உண்டு எனும் உலகியலைக் கண்முன் கொணரும் கருத்து இது; மயக்கம் ஏதும் இல்லை; சற்றுத் தயக்கம் வருவதை விளக்கவே வள்ளுவர் முயன்றுள்ளார்.

மக்கள் கயவரைப் போலத் தோன்றுபவர்கள் என்பதை விட, கயவர்கள் மக்கள் போல நடிப்பார்கள் எனப் பொருள் கொள்ளுவதே நலம்.

மக்கள், விலங்குகள் எனும் உயிரினங்களைப் பொறுத்தவரை புலி, மான் முதலியன தோற்றத்திலும் செயலிலும் தத்தமது இயல்பினின்று – குணத்திலிருந்து- வேறுபடுவதில்லை. ஆனால் மனிதர்களில் விலங்குக் குணம் உடையோரும் உண்டு. விலங்கை அடையாளம் கண்டு கொள்ளுவதைப் போல, உடல் அமைப்பால் ஒன்று போலத் தோன்றினாலும், குணநிலையில் குள்ள நரி மனமுடையோரை – வஞ்சகரை – எளிதில் இனம் கண்டுபிடித்துவிட முடியாது என்கிறார் வள்ளுவர். அத்தகையோரை ‘மக்களே போல்வர் கயவர்’ எனும் அருமையான உவமையால் மனதில் பதியும்படியாகக் குறிப்பிடுகிறார். இதிலே ஒரு கேலி, நையாண்டி, ஷிணீக்ஷீநீணீsனீ எல்லாம் புலப்படச் செய்கிறார்!”

செந்தமிழ்க் கல்லூரி மாணவி சித்ரா

“ ‘தேவர் அனையர் கயவர்’ எனும் குறளில் கயவரை மனிதரைவிட உயர்த்தி, தேவர் நிலையோடு ஒப்பிடுவது ஏன்?”

ஒருங்கிணைப்பாளர்

“‘தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

 மேவன செய்தொழுக லான்.’        (1073)

மக்களும் கயவரும் வடிவால் முழுவதும் ஒத்திருப்பர். ஆனால் குணத்தால், பண்பால், செயலால் மாறுபட்டவர் என நேரடி விளக்கம் தந்த வள்ளுவர் இந்தக் ‘கயமை’ அதிகாரக் குறளில் மேவன செய்து ஒழுகுதல், அதாவது செய்யக் கூடியவை, தவிர்க்க வேண்டியவை எனும் அறநெறிக் கோட்பாடுகளை மதியாது, மனம் விரும்பியபடி எல்லாம் நடப்பர் என இருசாராரையுமே சாடுகிறார்! கட்டுப்பாடற்ற போது தேவர் – கயவர் – மக்கள் எல்லாம் ஒரு நிலையரே ஆவர் என்கிறார்.”

பெரும்புலவர்

“எற்றிற்குரியராக, விரைவில் அரசியலில் சமுதாய ஒழுக்கக்கேட்டில் விலை போகும் விற்றற்குரியராக விளங்கும் கயவரை விடுத்து, அச்சமே கீழ்களது ஆசாரமாகக் கொள்ளாத மிச்சம் உள்ள நன்மக்களைப் பற்றி நிலா முற்ற அரங்கு தடம் மாறலாமே!”

தலைமை ஆசான் கணேசன்

“புலவர் ஐயா சொன்னபடி தடம் மாற விடாமல் தடுக்கும் வினா ஒன்று. ‘வாழ்க்கைத் துணை நலம்’ வகுத்த வள்ளுவர் அதில் பெண் களுக்கு மட்டுமே அறிவுரை கூறி, ஆண்களை விட்டுவிட்டாரே அது ஏன்?”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“தலைமையாசிரியர் குறிப்பிட்ட இந்த ‘வாழ்க்கைத் துணைநலம்’ எனும் அருமையான சொல்லமைப்பு சங்க இலக்கியந்தொட்டு வேறு எந்த இலக்கியத்திலும் கையாளப் பெறாத, வள்ளுவப் பெருந்தகையே முதன்முதலில் உருவாக்கித் தந்த சிறப்பான சொல்லடைவு. ‘கற்புநிலை என்று சொல்ல வந்தால், இருகட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்’ எனப் பின்னாளில் பாரதியை உரிமைப் பொதுமை பேச வைத்த தலைப்பு என இதைக் கருதி மேல் விளக்கம் தரச் செம்மல் அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.”

ஒருங்கிணைப்பாளர்

“நல்லறமாக இல்லறம் விளங்கிடக் காதலன் ஒருவனைக் கைப்பிடித்தோ, ஏற்பாட்டுத் திருமணமோ செய்து கொண்டு மனையறம் ஏற்ற மங்கை நல்லாளிடம் வேண்டும் குணநலச் சிறப்புக்களை ‘வாழ்க்கைத் துணை நலம்’ எனும் அதிகாரத்தில் வகுத்த வள்ளுவர், அவருக்குத் துணையான கணவன் கடைப்பிடித்தாக வேண்டிய ஒழுக்கங்களையும் கூறாமல் விடவில்லை.”

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 9

Image result for thirukkural

இளைஞர் ஒருவர் 

“இப்போதைய கல்லூரி மாணவியர் இக்குறட்பாவைச் சற்றே திருத்தி ‘அத்தான் வருவதே இன்பம்!’ எனப் புதுக்குறள் புனைந் திருக்கிறார்கள்.”

(அவையில் சிரிப்பு அலைமோதுகிறது)

ஒருங்கிணைப்பாளர்

“என் மனதில் நிற்கும் குறட்பா முரண்களைச் சொல்ல விடாமல், இப்படி முரண்டு பிடிக்கலாமா? (மீண்டும் சிரிப்பு)

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

 கேடும் நினைக்கப் படும்”           (169)

எனும் ‘அழுக்காறாமை’ அதிகாரக் குறள் நாம் இதுவரை கருதிய இவ்வகைக் குறளோடு ஒரு வகையில் கருத்தொற்றுமை உடையதுதான்.

ஓரன்பர்

“ஊழை உப்பக்கம் காணாமல், அத்தானைத் தேடி வந்துவிட்டோமே? ஊழை ஒரு கை பார்த்து விட்டு ஒருங்கிணைப்பாளர் செம்மல் அவர்களின் சிந்தையில் பட்டதைக் கேட்போமே!”

ஊழ் – வாழ்கிறதா? பாழ்படுத்துகிறதா?

பேராசிரியர்

“‘ஊழ்’ என்பது எப்போதுமே சமய நம்பிக்கையோடும் வாழ்வுப் போக்கோடும் இணைந்ததொரு நெடிய சர்ச்சைதான். பண்டைய குறளின் உரையாசிரியர்களான பரிமேலழகர், மணக்குடவர் போன்றோரின் கருத்துக்களிலேயே மறுகி நில்லாது, நம் காலத்தில் வாழ்ந்த திரு.வி.க., இலக்குவனார், தெ.பொ.மீ., மு.வ., வ.சுப.மா. போன்ற பேரறிஞர்கள் என்ன சொல்லிச் சென்றார்கள் என நினைவூட்டுவது சாலப் பொருத்தம்; காலப் பொருத்தம்.”

வளனரசு

“நாங்கள் வ.சுப.மா. ஐயாவிடம் பாடம் கேட்டவரை, ஊழ் அதிகாரம் ஒரு கருத்துச் சிக்கலான பகுதி என்று தான் சொல்வார். ஊழின் மறுபெயராக நாட்டில் காலம் காலமாக வழங்கி வருவது ‘வினை’. அதனையே நேர் பொருளாகக் கொண்டு ஊழ் என்றால் தொழில் செயல் என்று கருதாமல் ‘பாவம்’ எனும் அர்த்தம் பரம்பரையாகப் பயமூட்டி வந்துவிட்டது.”

ஒரு புலவர்

“மறுமை, எழுபிறப்பு என்றெல்லாம் வள்ளுவர் கூறிய கருத்துக்கள் ஊழுக்கு மாறானவையா? நான் இதை ஏற்க மறுக்கிறேன்.”

ஒருங்கிணைப்பாளர்

“மறுப்பது அவரவர் கருத்துச் சுதந்திரம்; ஆனால், பேராசிரியர் சுட்டிக்காட்டும் பேரறிஞர் மாணிக்கனார் கருத்தை நாமும் மீண்டும் சிந்திக்கலாம். மறுமை, எழு பிறப்பு என்பன குறளில் பிற இடங்களில் வந்தாலும், அதனை ‘ஊழ்’ அதிகாரப் பொருளோடு வலிந்து பொருத்திப் பாராமல் தனியாகப் பொருளமைதி காண முற்படலாம்.”

பேராசிரியர்

“வள்ளுவரின் ஊழ் பற்றிய கொள்கை முற்பிறப்புக் குறிப்போ, பழமை வினைக் கருத்தோ, அவ்வுலக அறிவிப்போ சிறிதளவும் இல்லாதது. ‘ஊழ்’ அதிகாரம் முழுவதிலும் இத்தகைய செய்திகள் இல்லை. பரிமேலழகர் உரையிலும் முன்வினைக் குறிப்புப் பற்றி ஏதும் இல்லை என்பதே பேரறிஞர் ஆய்வு. மாணிக்கனார் ‘ஊழ்’ எனும் சொல்லுக்கு ‘முறை’ என்றே, அதாவது உலக முறை, உலகச் சூழ்நிலை, உலகத்து இயற்கை என்றே பொருள் கண்டார்.”

அரசு அதிகாரி

“உலக மயம் எனும் நிறீஷீதீணீறீவீsணீtவீஷீஸீ பற்றி வள்ளுவர் அப்போதே சொல்லிவிட்டார் என நிறுவலாமே?”

ஒருங்கிணைப்பாளர்

“மாணிக்கனார் கருத்துப்படி ஊழ் என்பது ஓர் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு உருப்பெறுவது; ஆனாலும், அதன் போக்கைக் கணிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஏனெனில், ஊழின் தோற்றத்திற்குப் பல காரணங்கள் அமையக்கூடும். இடம், காலம், அரசு, சமூகம், சுற்றுச்சூழல் முதலிய புறநிலைப் பாங்கெல்லாம் முடிவில், உலகியற்கையாய் ஊழாய் மாறி நிற்கும். அது ஒரு மனிதனின் வாழ்வுப் போக்கின் புற நிலையைப் பெரிதும் பாதிக்கும் என்பதால், அந்த அதிகாரத்தில் செல்வம் பற்றிய செய்தியை அடுக்கிச் சொல்லுகிறார். ஒரு சூழ்நிலையில் வருந்தி உழைத்தாலும் வாராத செல்வம், மற்றொரு சமூகச் சூழலில் கோடி கோடியாய்ச் சேர்ந்து விடுகிறது. ஆயினும், சூழ்நிலையால் ஊழுக்கு நம்மை அடிமைப் படுத்திக் கொள்ளாமல் இடைவிடா முயற்சியால் ஊழையும் புறம் காண முற்பட வேண்டும்.”

பேராசிரியர்

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

     அவ்வது உறைவது அறிவு”           (426)

“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

     இயற்கை அறிந்து செயல்”           (637)

எனும் குறள்களை ஊழோடு பொருத்திப் பார்த்தால் மேலும் தெளிவு பெறுவோம்.

ஒருங்கிணைப்பாளர்

“‘உலைவின்றித் தாழாது உஞற்றுபவர் ஊழையும்’ அதாவது வலிமையுடைய ஊழையும் என ‘உம்’ அடைமொழி சேர்த்திருப்பதைக் கவனிப்போம். வள்ளுவர் எவ்வளவு தன்னம்பிக்கை ஊட்டுகிறார் எனச் சிந்திப்போம். ‘அறிவுடையார் எல்லாம் உடையார், எண்ணிய எண்ணியாங்கு எய்துப, துன்பம் உறவரினும் செய்க, பெருமை முயற்சி தரும்’ என்பன எல்லாம் ஊழைப் புறம் காண நமக்கு வள்ளுவம் தந்துள்ள ஊக்கக் கருவிகள்: ஆக்கக் கருத்துக்கள்.”

பேராசிரியர்

“மாணிக்கனார் கருத்துக்கு மகுடம் வைத்தாற் போல, திருக்குறள் செம்மல் அடுக்கிச் சொன்ன விளக்கக் குறட்பாக்கள் நமக்கு எழுச்சியூட்டு கின்றன. சற்று முன்னர் பேரறிஞர் மு.வ.வின் ஊழ்க் கருத்து என்ன என்றும் கேட்கப்பட்டது.”

மு.வ. தந்த முதன்மை விளக்கம்

அரசு அதிகாரி

“நான் அவரது வாழ்க்கை விளக்கப் பேரேட்டில் படித்தது நீங்காது நினைவில் நிற்கிறது. படைப்பில் விண்ணிலும் மண்ணிலும் ஒரு முறையான ஆட்சி இயக்கம் உள்ளது. அவை ஒரு ஒழுங்குக்கு உட்பட்டே இயங்கியும் இயக்கியும் வருகின்றன. அதுபோல, மக்கள் வாழ்வில் ஆக்கமும் அழிவும் ஒரு நியதிப்படியே நிகழ்கின்றன. இந்த ஒழுங்கமைவு நிலையை ஆய்ந்தறிவது மிக அரிது; ஆனால் உண்டு என உணர்வது எளிது. இந்த ஆட்சி முறையை ‘ஊழ்’ எனச் சான்றோர் கூறிவந்தனர். வள்ளுவரும் அவ்வழி பற்றியே பேசினார். செல்வம் சேர்த்தல், நுகர்தல் முதலிய புறவாழ்வுப் போக்கில் ஊழ் தலையிடுவது போல, அறிவு, அடக்கம், ஒழுக்கம் முதலிய வாழ்வுப் பாங்கில் ஊழின் ஆட்சியை மட்டுப்படுத்தி வெற்றி கொள்ள முடியும். வேண்டிய வேண்டியாங்கு எய்திட முடியும். அதாவது, சமூக வாழ்வின் புற நிலையில் ஊழின் போக்கிற்கு ஏற்பவே செயல்கள் நடக்கின்றன; ஆனால், மனிதர்களின் அகவாழ்வுத் துறை எதுவாயினும் அதில் தனி நபரின் தன்னம்பிக்கையும் இடைவிடா முயற்சியுமே ஊழையும் புறங்கண்டு விடத் தூண்டுதல் தரும்.”

ஒருங்கிணைப்பாளர்

“அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை

     மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.”     (32)

“பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

     பிற்பகல் தாமே வரும்”              (319)

எனும் குறளாசான் அறிவுரையோடு ஊழை இங்கே புறங்கண்டுவிட்டு, நான் முன்னர் கூறக் கருதிய, எனக்குத் தோன்றிய சில குறள் முரண்களைச் சிந்திக்க முற்ற அவையோர் இசைய வேண்டும்.”

அவையிலிருந்து ஓரன்பர்

“செம்மல் உங்கள் முரண்களைச் சொல்லுங்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

     கேடும் நினைக்கப் படும்”                 (169)

எனும் குறளில் நல்லவனுக்குக் கேடும் தீயவனுக்கு ஆக்கமும் வருவது ஏன் என ஆராய்க என்கிறார் வள்ளுவர்.”

பெரும்புலவர்

“இக்குறட்பாவில் ‘அவ்விய’ (அதாவது நடுவுநிலை கருதா நெஞ்சுடைய), ‘செவ்வியான்’, ‘ஆக்கம்’, ‘கேடு’ எனும் நான்கு சொற்களும் பல பொருட்களைத் தரும் வகையில் தொகுக்கப் பட்டுள்ளன. ‘நினைக்கப்படும்’ என்பது இந்தக் குறளைத் தவிர வேறெங்கும் கையாளப் படவில்லை என்பதையும் நாம் இங்கே நினைக்க வேண்டும்!”

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைய சமுதாய நிலையில் அவ்வியர்களான தீயவர்கள் பலர் ஆக்கம் பெற்று விடுகின்றனர் என்பதையும், செவ்வியர்களான நல்லவர்கள் அத்தகைய ஆக்கமின்றி நலிவுறுகின்றனர் என்பதையும் வள்ளுவர் மறுக்கவில்லை; அத்தகைய ஆக்கமும் கேடும் முறையானவை எனவும் ஏற்கவில்லை. இந்த மாற்றுநிலை ஏன் என்பதை ஆராய வேண்டும் என்கிறார்.”

பெரும்புலவர்

“வள்ளுவரும் இதை ஆராயாமல் விடவில்லை. அவற்றை மாற்றும் வழிகளை வரையறுக்காமல் நழுவி விடவில்லை. காலந் தொறும் மாறும் சமூக, அரசியல் சூழலினூடே தக்க நெறிமுறைகளை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள் என அறைகூவல் விடுப்பது போல இக்குறளை அமைத்துள்ளார்.”

அரசியல் அன்பர்

“அறைகூவல் என்று புலவர் ஐயா மழுப்ப வேண்டாம். இன்றைய மாசு படிந்த சமுதாய அமைப்பை மாற்றிப் புதியதொரு உலகம் படைக்கும் புரட்சியே சரியான நெறி எனக் கோடு காட்டிக் கொடி அசைத்திருக்கிறார் என்பதே எங்கள் கருத்து” (கைதட்டல்).

ஒருங்கிணைப்பாளர்

“அவ்விய நெஞ்சத்தான் அடைவது நிலையான ஆக்கமாக நீடிக்க முடியாது. செவ்வியான் உறுவதும் கேடாகவே இருந்துவிட இயலாது. எனினும் நடைமுறை வாழ்வில் அவ்வியர் ஆக்கம் பெறுவதும், செவ்வியான் கேடுறுவதும் நீடிக்கிறதே என அப்பெருந்தகை வருந்தும் உணர்வே இக்குறளில் எதிரொலிக்கிறது. ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் பழவினை காரணம் என்பதை அவர் ஏற்கவே இல்லை. ‘நினைக்கப்படும்’ எனும் சொல்லால் பல வகையிலும் ஆய்ந்து உரிய செம்மை நெறிகளைச் சமுதாயம் பின்பற்ற முற்பட வேண்டும் எனவே எச்சரிக்கிறார். சமுதாயத்தில் உள்ள சுயநலமிகளுக்கும், முறையற்ற, நெறியற்ற அரசியல் பொருளாதாரக் கூட்டமைப்புக்களை ஆட்டிப் படைப்போருக்குமே இந்த எச்சரிக்கை முதலில் பொருந்தும்.”

‘திருக்குறள் செம்ம’லின் சீர்மிகு பட்டியல்

பேராசிரியர்

‘திருக்குறள் செம்மல்’ அவர்கள் அழகாக ஒருங்கிணைத்துச் சுட்டியமை போல வள்ளுவப் பேராசான் மாற்று நெறிகளாகப் பட்டிய லிட்டுள்ளவை:

– அறன் இழுக்கி, அல்லவை நீக்காத அரசமைப்பு

– இயற்றல், ஈட்டல், காத்தல் முதலிய ஆட்சிப் பொறுப்புக்களில் புகுந்துள்ள ஜனநாயகச் சீர்கேடுகள்

– நேர்மை, திறமை என்பவற்றைப் போற்றாத நிறுவனங்கள்

– ஒப்புரவோ நடுவுநிலையோ போற்றிக் காக்க முடியாத சான்றோர் சிலரின் தவிப்புக்கள்.

– கயமையைக் கருவியாகக் கொண்டோரின் அன்றாட ஊர்வலக் கொடிபிடிப்புக்கள்

– உள்ளூர்ப் பழ மரமாகவோ, ஊருணியாகவோ உதவாமல், நடுவூர் நச்சுமரமாக நிற்கும் நாசகார சக்திகள்

– இரந்தும் உயிர் வாழும் இழிநிலையினைச் சமுதாயத்தில் இன்னும் நீடிக்க வைத்துவிட்டு, ஆன்மீகப் போதனை செய்யும் போலி நிறுவனக் கூட்டங்கள், கூடாரங்கள்.

– குற்றம் கடியாமல், குடிதழுவிக் கோலோச்சாமல், கட்சி நலனையே ஆட்சித் திறனாகக் கொண்டு, சட்டமன்றங்கள் – நீதிமன்றங்களைச் சந்தைக் கடையாக்கும் ஆகாப் போக்குகள் – என்று நீளும் இவற்றையெல்லாம் நினைக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதை முரண் என ஏன் கருதவேண்டும்?”

(கைதட்டல்)

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் வள்ளுவப் பேராசான் பல இடங்களில் சுட்டிக் காட்டியவற்றைப் பட்டியலிட்டு ‘நினைக்கப்படும்’ என்பதற்கு விளக்கம் தந்தமை பாராட்டுக்கு உரியது. அவ்வித்து அழுக்காறுடையான் ஆக்கமெல்லாம் அப்போதைக்குப் பெற்றாலும் அது மற்றொரு நாளில் நிச்சயம் தவ்வையை – மூதேவியைக் கூட்டி வந்து விடும் என்கிறார். ‘அழுக்காறு என ஒரு பாவி’ (168) என அச்சுறுத்துகிறார். இன்றைக்கு ஆலமர நிழல் அமர் அரச வாழ்வு கை கூடினாலும், நாளைக்கே அது ஒற்றைப்பனை நிழல் போலப் பயனற்று ஒதுங்கிப் போய்விடும் என்கிறார். நல்லவர்கள் கெடுவதில்லை என்றே நம்பிக்கையூட்டுகிறார்.”

வருமான வரித் துறை அதிகாரி

“ ‘நல்லவர்கள் கெடுவதில்லை இது நான்கு மறைத்தீர்ப்பு’ .. என மகாகவி பாரதியார் வள்ளுவத்திற்கு விளக்கமாகத் தந்துள்ள முத்தாய்ப்புச் செய்தியை ஏற்று, இதை முரணாக எண்ணாது இதர சமுதாய நன்னெறி அரண்களைத் தேடலாமா?”

ஒருங்கிணைப்பாளர்

“சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

     வறங்கூர்ந் தனையது உடைத்து”       (1010)

சமுதாயச் சீர்மையை நாடுகின்றவரே சீருடைச் செல்வர்! அதாவது, காந்தியடிகள் கூறும் ‘ஜிக்ஷீustமீமீsலீவீஜீ’. சமூகநலக் காவல் பண்புடைமையுடை யோர்கள், ஒரு சமயம் வறுமைப்பட்டாலும், அது ‘சிறுதுனி’, சிறுதுயரம்’ என்றும், மாரி சில சமயம் மழை பொழியாமல் கருத்தும் மேகம் கலைந்துவிடுவதைப் போன்றதே என்றும் அருமையான உவமையால் தெளிவூட்டுவதாகவே இதனைக் கருதவேண்டும். தனி உடைமைச் செருக்கில்லாமல், ஒப்புரவே நாட்டமாகக் கொண்ட அத்தகைய சீருடைச் செல்வரின் மீதுள்ள மதிப்பு ஒருநாளும் சமுதாயப் பார்வையினின்றும் நீங்கிவிடாது. மேகம் சிறிது நேரம் வானினை மறைத்துவிட்டு விலகுவதைப் போல, அந்தத் தற்காலிக வறுமையும் நீங்கிவிடும். சுருக்கமாகச் சொல்வதென்றால், நல்லார்க்கு வரும் கேடு நிரந்தரம் இல்லை. அதுபோல அவ்விய நெஞ்சம் உடையார்க்குச் சேரும் ஆக்கமும் நிலையான தில்லை எனும் வள்ளுவ அமைதியை ஏற்கலாம்.”

ஒரு புலவர்

“ஒருங்கிணைப்பாளர் தந்த விளக்கத்தை நாமும் ஏற்கலாம்.”

அதிகாரி

“ஒருங்கிணைப்பாளர் முற்றத்து அவையில் நாம் அமரும் முன்னர், தவத்தின் பயன் பற்றிய ஒரு முரண்பாட்டுச் செய்தியைச் சொன்னார்; அதை நினைவூட்ட விரும்புகிறேன்.”

ஒருங்கிணைப்பாளர்

ஐயா அவர்கட்கு நன்றி.

தவம் படுத்தும் பாடு

“ ‘தவமும் தவம் உடையார்க்கு ஆகும்’ – அதாவது இங்கே தவம் என்றால் காடு சென்று கண்மூடித் தனித்து இருப்பதில்லை; சமுதாயத்தில் வாழ்ந்திருந்தே, மக்களுக்குப் பயன்தரும் சீரிய பணிகளை மேற்கொள்ளுவது என்றே கருத வேண்டும். அத்தகைய சமுதாயப் பொறுப்பற்றவர்கள் தவம் செய்வதாகச் சொல்வது சமூகக் கேடாகவே முடியும்.”

இடைமறித்த ஒருவர்

“நம் நாட்டில் பல ஆசிரமச் சந்நியாசிகள் நடத்திய அலங்கோலங்கள் எல்லாம் நமக்குத் தெரியுமே!”

ஒருபுலவர்

“அந்த ஆனந்த உல்லாசங்கள் எப்படித் தவம் ஆகும்? அவையெல்லாம் ‘பாவம்’ என்றே சொல்ல வேண்டும்.”

ஒருங்கிணைப்பாளர்

‘தவம் செய்தார்தம் கருமம் செய்வார்’ என்றும், ‘உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை’ என்றும் கூறும் வள்ளுவர்…”

பேராசிரியர்

(இடைமறித்து) “ஆனால் அதே குறள் வரிசையில்,

“ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

     எண்ணின் தவத்தான் வரும்” (264)

எனச் சொல்லும் போது தவம் என்பது பிறரைத் தண்டிக்க, ஒறுக்க ஒரு கருவியாகக் கொள்ளப்படுவது ஒரு வகையில் முரண்தானே?”

மற்றொருவர்

“தவக்கோலம் வேறு; தவ ஒழுக்கம் வேறு என்பார் அறிஞர் மு.வ. தவ ஒழுக்கம் இல்லாதவர்கள் அதை மேற்கொள்வதாக நடிப்பது வீண்.”

இன்னொருவர்

“இந்தத் தவக்கோலமும் தவ ஒழுக்கமும் துறவிகளுக்கு மட்டும்தானா? ‘இந்த வம்பு நமக்கு ஏன்?’ என இல்லறத்தார் ஒதுங்கி விடுகிறார்களே?”

ஒருங்கிணைப்பாளர்

“அப்படிச் செய்ய அவசியம் இல்லை. தவம் – இரு சாராருக்கும் பொது; பொருந்தக்கூடியது. சிலர் இல்லறத்தை முற்றிலும் விடுத்துத் தவ வாழ்வில் முற்றாக ஈடுபடுவர். எனினும் இல்லற வாழ்வில் ஓரெல்லை தாண்டிய பின், மேற்கொள்ளலாம்.

வள்ளுவர் இதை வேடிக்கையாக,

“துறந்தார்க்குத் துப்புரவு வேண்டின் மறந்தார்கொல்

     மற்றை யவர்கள் தவம்”        (263)

என வினா எழுப்புகிறார். இல்வாழ்க்கையில் பகைவர்களை மடக்கித் திருத்துவதற்கும் நண்பர்களை மதித்து உயர்த்துவதற்கும் ஒரு வகை ஆற்றல் வேண்டும். அந்த ஆற்றல் தவ ஒழுக்கத்தினைக் கைக்கொள்ளுவதால் எவருக்கும் வந்து சேரும் என்பதே வள்ளுவம். வாழும் வாழ்க்கையையே ஒரு நோன்பாக மாற்றிக் கொள்ளும் சான்றோர் பலர் நம் தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து வழிகாட்டி யுள்ளனர் – வள்ளலார், மறைமலை அடிகளார், திரு.வி.க. போல்…”

இளைய தலைமுறையின் வழிகாட்டிகளாக…

ஓர் இளைஞர்

“இன்றைய தலைமுறைக்கு எழுச்சியூட்டு வதையே ஒரு தவமாகக் கொண்ட நம் தமிழகத்து டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, நம் அறிவியல் மேதை டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் எனப் பெரிய பட்டியலே போடலாமே?”

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

“இந்த இளைஞர் தன் வாழ்க்கை வழிகாட்டிகளாகப் பிறரைப் போலச் சினிமாக் கலைஞர்க்குப் போஸ்டர் ஒட்டாமல், சமுதாய நலனுக்கே தம்மை அர்ப்பணித்து வாழும் சான்றோரைக் குறிப்பிட்டது என்னை மெய்சிலிர்க்கச் செய்து விட்டது. (சபையை நோக்கி) உங்களுக்கு அந்த உணர்வோட்டம் தெரியவில்லையே.”

கூட்டத்தில் பலர்

“நன்றாகத் தெரிகிறது; தெளிவாகவும் புரிகிறது… எல்லோரும் இளைஞரைப் பாராட்டிக் கைதட்டி விடுவோம்” (சிரிப்பலையும் கர ஒலியும்)

ஒருங்கிணைப்பாளர்

“இளைஞர் குறிப்பிட்டதைப் போலத் தவப்பாங்குடைய சான்றோர் உலகில் சிலராகவும், தவ நன்முயற்சி செய்யாதவர் பலராகவும் உள்ளனரே என வள்ளுவர் வருத்தப்பட்டார். அந்த வருத்தம் நீங்கும் வகையில் வளரும் சமுதாயத்து இளைஞர் பலர், அறிவாக்கமுடைய சான்றோருடன் அணிசேர்ந்து உழைப்பு, விடாமுயற்சி, பொதுநலம் எனும் புதிய தவநெறிகளால் இச்சமுதாயத்தில் எண்ணிக்கையில் பலராகப் பெருகிடப் போகும் ஒளிக்கதிர்கள் வீசத் தொடங்கிவிட்டன.”

(மீண்டும் கைதட்டல்)

இளைஞர்

“நான் மீண்டும் ஒரு சந்தேகத்தை அவை முன்னர் வைக்க அனுமதிக்க வேண்டுகிறேன். குணமெனும் குன்றேறி நிற்கும் சாதனைச் சான்றோர்களை நாட்டு இளைஞர்கள் தமது வாழ்க்கை வழிகாட்டிகளாக (ஸிஷீறீமீ விஷீபீமீறீs) கொள்ள வேண்டும் என அடிக்கடி எங்களுக்குச் சொல்லப் படுகிறது. அத்தகைய சான்றோரில் பலர் கோபத்தால், வெகுளியால் அவர்களை அணுக முயலும் இளைஞர்களை விரட்டி விடுகிறார்களே?”

அரசு அதிகாரி

“தம்பி… அப்படி விரட்டப்பட்டோரில் நீங்களும் ஒருவரா?”

இளைஞர்

“அந்தப் பெரியவர் விரட்டும் முன்னரே நான் தப்பி ஓடிவந்துவிட்டேன்.” (அவையில் சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“ஒருவேளை.. அந்தப் பெரியவர்,

“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

     அவியினும் வாழினும் என்”          (420)

என இந்த இளைஞரைக் கருதியிருக்கச் சற்றும் வாய்ப்பில்லை.”

 

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 8

ஒருங்கிணைப்பாளர்

“போராட்ட காலத் தலைமை வேறு, சுதந்திரம் பெற்றபின் அமையும் உரிமைக் காலத் தலைமை வேறு. அங்கே தியாகம் அடிப்படை, இங்கே ஒழுக்கம் அடிப்படை.”

பேராசிரியர்

“இதைக் கிரேக்கச் சிந்தனையாளரான சாக்ரடீசும், ‘அரசியல்’ எனும் உன்னதமான சித்தாந்த நூலை அளித்த பிளேட்டோவும் அன்றே சொல்லியிருந்தார்கள்.”

 

ஒருவர்

“நினைவில் இருந்தால் அதை நிலா முற்றத்திலும் உலவ விடுங்களேன்.”

ஆட்சி பீடத்திற்கு வர அருகதை என்ன?

பேராசிரியர்

“மிகச் சாதாரணமான தொழிலுக்குக் கூட அதற்கான ஒரு பயிற்சி இல்லாமல் எவரும் மேற்கொள்ளுவது இல்லை. ஆனால், மிகக் கடினமான ஆட்சித் தொழிலுக்கு மட்டும் எவர் வேண்டுமானாலும் தகுதியுடையவர்கள் என்று முன் வந்து விடுகிறார்கள்..”

ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கா.கருப்பையா

“சாக்ரடீஸ் அரசியலைத் ‘தொண்டு’ என்று சொல்லாமல் ‘ஆட்சித் தொழில்’ என்று அன்று சொன்னது இன்றைக்கும் எவ்வளவு பொருத்தம் என்பதை நினைவுகூர்ந்து சொன்ன பேராசிரியர்க்கு உளமார்ந்த நன்றி. அதற்காகவாவது கைதட்டு வோமே!” (கர ஒலி)

புலவர்

“இன்று அரசியல் என்பது முழுக்க முழுக்க ஒரு மோசடியான தொழில் போலத் தானே ஆகி வருகிறது? ‘தேர்தல்களில் தில்லுமுல்லு; தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவுடன் வாக்குறுதிகள் காற்றில் பறப்பு…” என்று மிக மட்டமான நிலைக்கு அரசியல் சரியாமல் தடுப்பது அனைவரின் பொறுப்பு அல்லவா..?”

ஒருங்கிணைப்பாளர்

“மொழிப் போர்க்காலத்தில் பேரறிஞர் அண்ணா எழுதியதை அவையோர்க்கு நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும்.”

சில குரல்கள்

“சொல்லுங்கள், அண்ணாவை மறந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. நீங்களாவது நினைவில் வைத்திருக்கிறீர்களே!”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘சுதந்திரம், விடுதலை என்றால் சட்ட சம்பந்தமான சொற்களின் மாற்றம் என்றல்ல; வாலிபன் எண்ணுவது புதிய நிலை, புது அழகு, புது உருவம், புதிய மகிழ்ச்சி! நாடு புதுக்கோலம் கொள்வது என்றே கருதுகிறான். உண்மையும்  அதுதான்!’ என்றார் அண்ணா.”

இடைமறிக்கும் ஒரு குரல்

“ஆனால், அநியாயமாக உண்மை நிலை அப்படி மாறவில்லையே..! (எல்லோரும் சிவப்புத் துண்டு அணிந்திருந்த அவர் பக்கம் திரும்பிப் பார்த்தல்)

ஒருங்கிணைப்பாளர்

“பொதுவுடைமைப் பேராளர் தோழர் ஐயா சொல்வதையும் கேட்போமே..”

தோழர்

“‘நாம் மக்களுக்காக வாழ்பவர்கள்; மக்களைக் காட்டிலும் அதிகாரச் சலுகைகளையும் வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு அரசியலுக்கு வந்தவர்கள் மட்டும் வாழ முற்படக்கூடாது என்று ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்’ என்ற தோழர் லெனின் வழிக்கோட்டில் வழுவாது நின்று பணியாற்றுகின்றன நாங்கள் பொறுப் பேற்றுள்ள மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா முதலிய மாநிலங்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“நம் திருக்குறள் பேரவையும் அது வானொலியுடன் இணைந்து நடத்தும் நிலாமுற்ற அரங்கும் அரசியல் பிரச்சாரங்களுக்கு அப்பாற் பட்டவை.”

தோழர்

“நான் நடைமுறையைத்தான் யதார்த்த எடுத்துக் காட்டாகச் சொன்னேன். அரசியல் பேசவில்லை.”

பேராசிரியர்

“நல்ல அரசியல்வாதிகள் எல்லாக் கட்சி களிலும் இருக்கிறார்கள். எல்லோருமே மோசமாகி விட்டார்கள் என்றோ, இந்தக் கட்சிதான் ஒழுக்கக்கோட்டில் நிற்கிறது என்றோ வெளிப்படையான விமர்சனம் வேண்டாம். நாம் பொதுவான நடைமுறைகளையே தொடர்ந்து சிந்திப்போம். தனி நிலா முற்றம் கூட்டி ஆராய்வோம்.”

(அவையில் சற்று அமைதி)

புலவர்

“அப்படியானால் மாதந்தோறும் பௌர்ணமி வரும்; நிலாமுற்றமும் சுவையான விருந்தும் தொடரும் என நம்பலாமா?”

மாதந்தோறும் பௌர்ணமி! முரணா – அரணா?

மற்றொருவர்

“எங்கள் புலவர் ஐயா.. எதை மறந்தாலும் சுவையான சாப்பாட்டை மட்டும் மறக்கவே மாட்டார்.”

புலவர்

“அட… நான் சொன்னது செவிக்கு உணவை ஐயா! நீர்தான் வயிற்றுப் பெருச்சாளி” (சிரிப்பு)

மற்றோர் அன்பர்

“‘செவிக்குச் சுவையா? வயிற்றுக்குச் சுவையா?’ எனும் முரண்பாட்டுச் சர்ச்சை போதும். நிலா முற்றம் கூடத் தொடங்கியவுடன் ‘திருக்குறளில் முரண்கள்’ பற்றியும் கருதுவோம் எனச் சொன்னது என்ன ஆயிற்று? தூக்கம் வரும் முன்னர் முரண்களைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்கலாமா?”

பேராசிரியர்

“‘வள்ளுவ முரண்கள்’ என்றதும் என் நினைவு, நான் பயின்று, பணியாற்றிய அழகப்பர் கல்லூரிக்கு ஓடுகிறது. அங்கே தமிழ்த்துறைத் தலைவராகவும் முதல்வராகவும் துலங்கிய பேராசான் வ.சுப.மாணிக்கனார் முதுகலை, தமிழ் மாணவர் வகுப்பை மாற்றி அமைத்திருந்தார். இங்கு வந்துள்ள பேராசிரியர் வளனரசு அப்போது அங்கே பயின்ற முதல்நிலை எம்.ஏ.மாணவர். அவருக்கும் அந்த வகுப்பறை அமைப்பு நினைவில் இருக்கக்கூடும்.”

பேராசிரியர் வளனரசு

“ஆம். அந்த வகுப்பில் இருபாலருமாக இருபது பேர் எம்.ஏ. தமிழ் பயின்றோம். வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருப்போம் – பின்புறத்தில் ஒரு வரிசை நாற்காலிகள் போடப் பட்டிருக்கும். தனிக் கதவும் இருக்கும். பாடம் நடக்கும் போது வேறு வகுப்புக்களில் பாட வேளை இல்லாது, ஓய்வில் இருக்கும் பேராசிரி யர்கள், தாம் விரும்பினால் அந்த வரிசையில், ஓசையின்றி வந்தமர்ந்து, வேறு ஆசிரியர் நடத்திக் கொண்டிருக்கும் பாடத்தைத் தாமும் கேட்கும் பயன் பெறவே இந்த ஏற்பாடு.”

பேராசிரியர்

“அது மட்டுமல்ல. எம்.ஏ. முதுகலை வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியர்க்கு அது ஒரு அக்கினிப் பிரவேசம் போலவே அறிஞர் வ.சுப.மா. வைத்தார். அதாவது, பாடம் நடத்தும் பேராசிரியர், மாணவர்க்கு ஏற்றாற்போலப் புரியும் படி. இன்னும் சொல்லப் போனால், தம் புலமையை மட்டும் அருவியாகக் கொட்டாமல் பாடம் நடத்த வேண்டும். அதே சமயம், பின்னால் அமர்ந்திருக்கும் பேராசிரியர்கள் ஏற்கும் வகையிலும் செய்தாக வேண்டும்.”

புலவர்

“இப்படியெல்லாம் வகுப்புக்களில் யாரும் நடத்தவும் மாட்டார்கள்; அமர்ந்து கேட்க இசையவும் மாட்டார்கள். அது வ.சுப.மா.வின் வசந்த காலம்.”

வருமான வரித் துறை ஆணையர்

“அந்த வசந்த காலங்கள் மீண்டும் வலம்வர வாழ்த்துவோம்.. வ.சுப.மா. கூறிய வள்ளுவ முரண் களைத் தாண்டி விட்டாரே பேராசிரியர் குழந்தைநாதன்?”

குறளிலும் முரண்களா?

பேராசிரியர்

“தாண்டிவிடவில்லை; நினைவைக் கொஞ்சம் தோண்டுகிறேன். சொல்கிறேன். ஒரு நாள் எம்.ஏ.வகுப்புப் பாடம். பேராசிரியர் இரா.சாரங்க பாணியின் ‘திருக்குறள் உரை வேற்றுமை முதல் தொகுதி’ வெளிவந்த சமயம் என நினைக்கிறேன். அது திருக்குறள் திறனாய்வு வகுப்பு.. ஒரு மாணவர் அவர் பெயரும் மாணிக்கம் என்றே நினைவு. ‘ஐயா குறளில் முரண்கள் பல உள்ளனவே. அவற்றிற்கு எப்படி அமைதி கூறுவது?’ எனக் கேட்டார். அதற்கு அறிஞர் வ.சுப.மா.. இடை மறித்துக் கேட்ட வினா விடை என்ன தெரியுமா?”

கூட்டத்தில் ஒருவர்

“சுவையாய் இருந்தால் சொல்லுங்கள்..”

பேராசிரியர்

“நீதிமன்றத்தில் திருடியதற்காகக் குற்றம் சுமத்தப்பட்டுக் கூண்டில் நிற்கும் விசாரணைக் கைதியிடம் குறுக்கு விசாரணை செய்யும் வழக்கறிஞர், முதல் கேள்வியாக, ‘நீ களவாடிய பொருளை யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறாய்’ என்று மடக்கி வினவுவார். அதாவது, அவன்தான் திருடினான் என்பதை உறுதி செய்து கொண்டவர் போல, அவனே ஒப்புக் கொள்ளத் தூண்டும் வகையில் கேள்வி தொடுப்பார் அல்லவா? அதைப் போல, மாணவர் மாணிக்கமும், ‘திருக்குறளில் உள்ள முரண்களுக்கு அமைதி என்ன?’ எனக் கேட்கும் போதே, திருக்குறளில் முரண்கள் நிறைய உள்ளன என்று என்னை ஒப்புக் கொள்ளச் செய்யும் கட்டாயம் அதில் தொனிக்கிறது. குறளின் முரண்களுக்கு அமைதி தேடும் முன்னர், குறட்பாக்களில் குழப்பம் உண்டா என்பதை முதலில் சற்றே சிந்திக்கச் செய்தது இன்றும் மறக்க முடியாத காட்சி. பேராசிரியர் வளனரசால் சில குறட்பாக்களை நினைவுகூர முடியும் என நினைக்கிறேன்.”

பேராசிரியர் வளனரசு

“நன்றி பேராசிரியர் ஐயா அவர்களே! ஒரு சில குறள்கள் நினைவில் படருகின்றன.”

ஒருங்கிணைப்பாளர்

“நீங்கள் அன்றைய நினைவேட்டைப் புரட்டுங்கள்; நானும் இன்றைய குழப்பங்களைச் சொல்ல முற்படுகின்றேன்.”

பேராசிரியர் வளனரசு

“சான்றாக, ஓரிரு குறட்பாக்கள் நினைவிற்கு வருகின்றன.”

“நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

     கொல்லாமை சூழும் நெறி” (324)

எனும் அறத்துப்பால் குறளும்,

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்

                           பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்” (550)

எனும் பொருட்பால் குறளும் தம்முள் முரண்படுவதாகத் தோன்றுகின்றன.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“இதற்குப் பேரறிஞர் வ.சுப.மா. அவர்களே தம் ‘வள்ளுவம்’ எனும் புகழேட்டில் பொருத்தமான விளக்கங்களை அப்போதே தந்துள்ளார். இக்குறட் பாக்களைப் போலவே, ஒறாமை, ஒறுப்பு; நெஞ்சத் துறவு, வஞ்சத் துறவு பற்றி மேலோட்டமாகத் தோன்றும் முரண்பாடுகளுக்கும் சரியான வள்ளுவப் பார்வையோடு அரண்கோலியுள்ளதை இந்த நிலாமுற்ற அவைக்கு நினைவூட்டுவது அவசியம்.

பேரறிஞர் வ.சுப.மா. அகநிலையறங்கள், புறநிலையறங்கள் என இரண்டாகப் பகுத்து, ஒரு மனிதன் அகநிலையிலும் புறநிலைப் பொறுப்பிலும் ஆற்ற வேண்டிய கடமைகளை முரண் எனக் கருத வேண்டாம் என விளக்க ஓர் உவமை சொன்னார், தந்தை ஒருவன், தன் மகன் சொந்த வீட்டிலேயே திருடிவிட்டால், அதைக் குடிமானம் கருதி வெளியில் சொல்லாமல், தன் மகனைத் திருத்தவோ, கண்டிக்கவோ முனைகிறான். அவனே நீதிபதி பொறுப்பேற்றிருக்கும் போது, அதே மகன் பிற இடத்தில் திருடியமைக்காகக் குற்றவாளிக் கூண்டில் எதிர்நிற்கும் போது, தன் மகன் எனவும் பாராது, உரிய நியாயமோ, தண்டனையோ அளிக்க வேண்டிய இக்கட்டான பொறுப்பிற்கு உள்ளாகிறான். இவ்விரு நிலைகளையும் ‘முரண்’ என்பதா? அல்லது ‘அரண்’ என்பதா?”

பேராசிரியர் வளனரசு

“பேராசிரியர் எடுத்துக்காட்டிய உவமைக்குப் பொருத்தமான குறட்பாக்களாக..

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் என்பதோடு, களை கட்ட தனொடு நேர்”

“குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

     வடுவன்று வேந்தன் தொழில்”   (549)

என்னும் குறளை மாணிக்கனார் எடுத்துக் காட்டுவார். நாட்டுத் தலைவன், தனி மனிதன், வேந்தன் அல்லது அமைச்சன் எனும் இரண்டு நிலைப்பாடுகள் உடையவன். குடிமக்களுக்குப் பெரிதும் இடையூறு செய்பவரைத் தண்டித்துக் கொல்லுதல் பொதுநலம் காக்கும் அவனது (வேந்தன்) தொழில்; அதே சமயம், குடிநலம் பேணாது, தன் பதவியைக் காத்துக் கொள்ளு வதற்காகச் சட்டத்தை வளைத்துப் பிறரைத் தண்டிக்க முற்பட்டால் அதனை ‘நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும்நெறி’ (324) எனும் ‘கொல்லாமை’ அதிகாரப் பாடலோடு முரணுவதாகக் கருதக்கூடாது. ‘அதிகார துஷ்பிரயோகம்’ எனும் மகாப்பழியாகவே அது பிந்திய வரலாற்றில் இடம்பெறும்.”

புலவர் ஒருவர் இடைமறித்து

“‘பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

      நன்மை பயக்கும் எனின்’           (292)

என எல்லோர்க்கும் நன்மை பயக்குமானால் ஒருவன், தன்னலம் நோக்காது, பொய் கூற நேர்ந்தாலும், அது வாய்மையின் இடத்தில் வைத்து மதிக்கப்படும் என வள்ளுவர் மனவியல் புரட்சியை அன்றே செய்துவிட்டார்.”

மற்றொரு பெரும்புலவர்

“வள்ளுவர் அப்படிப் பொதுநலம் நோக்கிச் சொல்லும் பொய்யினை, வாய்மை என்று முழுமையாக ஏற்கவே இல்லை. அதனை வாய்மை எனும் இடத்தில் கொள்ளலாம்; அப்போதைக்கு ஏற்றுக் கொள்ளலாம் என்று தான் கருதியிருக்க வேண்டும் என நான் அடித்துச் சொல்லுகிறேன்.”

கூட்டத்திலிருந்து ஒரு குரல்

“புலவரய்யா யாரையும் அடித்துவிட வேண்டாம். நாங்களே தங்கள் கருத்தை வள்ளுவர் கருத்தாக ஏற்றுக் கைதட்டி விடுகிறோம்” (கரவொலிகள் – சிரிப்பலைகள்)

பேராசிரியர்

“பொய்யோ வாய்மை எனும் இடமோ இவை இரண்டுமே ஒருவரின் மனத்தைக் களமாகக் கொண்டவை என்பது உளவியலாரின் தீர்ப்பு. மனிதன் என்பவன் மனதால் வாழ்கிறான். மன எழுச்சியும் வளர்ச்சியுமே ஒரு தனி மனிதனின் மலர்ச்சியும் தளர்ச்சியும் என்பது அறிவியல் துணிபு.”

மற்றொருவர்

“ஐயா… ஓர் இடைமறிப்புக்கு மன்னிக்கவும்.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் சொல்லுங்கள். நீங்கள் முடித்ததும் வள்ளுவ முரண்களாக என் மனதில் எழுந்த ஐயங்களை இந்த அவை முன்னர் வைக்க விரும்புகிறேன்.”

பேராசிரியர்

“நான் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். மக்களிடம் வள்ளுவர் காலத்தில் இருந்த மனம் தானே இன்றும் இருக்கிறது? அதே அகவுணர்வு தானே இப்போதும் இருத்தல் வேண்டும்? மனச்சான்று, காலத்திற்குக் காலம் மாறுபடுமா?”

ஒருங்கிணைப்பாளர்

“இது சிந்திக்க வேண்டிய கேள்விதான். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக வள்ளுவத்தின் மூலமே நமக்குப் புலனாகிறது. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலே கூட சமுதாய மக்களில் பலருக்கு நல்ல மனம் இல்லை என்பதை அவரே இயற்றியுள்ள ‘கயமை’ எனும் தனி அதிகாரம் அழுத்தமாகச் சொல்கிறது.”

இடையில் ஒருவர்

“கயவராய் இருப்பதற்கு மன அழுத்தம் அவசியம் தான்” (அவையில் சிறு புன்முறுவல் பிரதிபலிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“அது மட்டும் அல்ல; மனம் மாறுபடும் இயல்புடையது என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் ‘மகளிர் மனம் போல மாறுபடும்’ எனவும் வள்ளுவம் கூறுவதாக நினைவு! ‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்” எனக் கவியரசு கண்ணதாசனும் பாடியுள்ளார்.”

பெரும்புலவர் இடைமறித்து

“மகளிர் மனப் போக்குப் பற்றிய ஆய்வில் இறங்கினால் எளிதில் மீள முடியாது; முரண்கள் முட்டி மோத ஆரம்பித்துவிடும். எனவே ஒருங்கிணைப்பாளர் ‘திருக்குறள் செம்மல்’ அவர்கள் சற்று முன்னர் கூற நினைத்த வள்ளுவ முரண்களைக் கோடிட்டுக் காட்டட்டும். நாமும் உடன் சிந்திப்போம்.”

ஒருங்கிணைப்பாளர்

“நான் வள்ளுவத்தில் முரண்பாடுகளை விட உடன்பாடுகளையே பெரிதும் காண்கிறேன். சிறு முரண்கள் அவ்வப்போது தோன்றினாலும் அவற்றைக் காலச் சூழலோடும் பாட வேறுபாட்டோடும் பொருத்தி அமைதி காண முற்படுவேன். மனம் பற்றி நிறையச் சொன்னார்கள். இந்த இடத்தில் டாக்டர் மு.வ. அவர்கள் கூறிய கருத்தை முதலில் முன்வைக்க விரும்புகிறேன். அவர் சொன்னார்:

‘பிற உயிர்களை விட மக்கள் வாழ்வு சிறந்திருக்கக் காரணம் அவர்கள் பெற்றுள்ள மனம் எனும் கருவிதான். அதைப் பயன்படுத்தவும் பண்படுத்தவும் வல்லவர்களாக அவர்கள் துலங்க வேண்டும். மக்கள் வாழ்வு என்பது ஐம்புல நிலைக்கும் அப்பாற்பட்ட உற்றுணர்ந்து ஒப்புரவோடு வாழ வேண்டிய மனத்தால் வாழும் வாழ்க்கை ஆகும். இந்த மனம் பண்படும் இடம், காதல் வாழ்க்கை; மனம் பயன்படும் இடம், பொது வாழ்க்கை; மனம் வாழும் இடம், தனி வாழ்க்கை.’”

அரசு அதிகாரி

“அறிஞர் மு.வ.வைச் சரியான இடத்தில் பொருத்தமாக நினைவூட்டி, எங்கள் மனங்களையும் நிறைத்து விட்டீர்களே?” (கைதட்டல்)

ஒருங்கிணைப்பாளர்

“‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்’ என வள்ளுவரே முத்தாய்ப்பு இட்ட பின்னர், நாம் மனத்தைப் போட்டு இதற்கு மேலும் குழப்பிக் கொள்ள வேண்டுமா?

குறள் பட்டிமன்றங்களில் எல்லாம் வினாவாக எழுப்பப்படும் குறளை இந்த நிலா முற்ற அவையில் என் மனதைத் தாக்கிய முதல் முரணாக வைக்கிறேன்.

அந்தக் குறட்பா:

“அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

     பொறுத்தானோடு ஊர்ந்தா னிடை’    (37)

அறத்தாறு என்றால் அறத்தின் பயன். ஆனால் இங்கு ஊழ்வினையையும் சுட்டுவது போலப் படுகிறது. அதாவது பல்லக்கைத் தாங்குவோர் தீவினை செய்தோர், அதில் ஏறி அமர்ந்து செல்வோர் நல்வினை செய்தோர் எனப் பன்னெடுங் காலமாகக் கருதப்பட்டு வந்துள்ளது.”

அறத்தாறு – இதுதானா?

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

“இன்றைய குடியாட்சிக்கு வந்து பொன்விழாக் கொண்டாடி விட்ட நம் நாட்டு நிலை என்ன? வாக்களித்தோர் தீவினை செய்தோராகவும், எப்படியோ வெற்றி பெற்றோர் நல்வினையாளராகவும் நாடகங்கள் அரங்கேறு கின்றனவே? வேட்பாளராக விழைவோர் தம் பூர்வ கதையை எல்லாம் தெரிவித்தாக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும் அளவுக்கு ஆட்சிக் கட்டி லேறுவோர் மீது அவநம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதே? அவர்கள் எல்லாம் நல்வினைப் பயனால் ஆட்சிக்கு வருகிறார்கள்; ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுகிறது’ என்பது தானே நடைமுறை?”

ஒருங்கிணைப்பாளர்

“அரசுப் பொறுப்பில் இருக்கும் அன்பர் அடுக்கிய ஐயங்கள் இன்றைய நம் குடியாட்சி முறையைச் சீர்குலைத்து வரும் கயமைகள் என்பதில் யாருக்கும் மறுப்பில்லை; ஆனால், குறட்பாவின் உண்மைப் பொருள் எதுவாயிருக்கும் என நாம் மனம் விட்டுச் சிந்திக்கலாமே?”

 

பேராசிரியர் வளனரசு

“இந்தக் குறளுக்கு ஊழைக் கருத்தில் கொண்டு பொருள் காண முற்பட்டால் ஏற்றத்தாழ்வு எண்ணமே நம்முன் நந்தி போல் நிற்கும்.”

ஒருவர்

“அப்படியானால் வள்ளுவர் ‘ஊழ்’ பற்றித் தனி அதிகாரமே செய்துள்ளமைக்கு என்ன பதில் சொல்ல முடியும்?”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“ஊழுக்கு அவர் தனி அதிகாரம் செய்திருப்பினும் அங்கு அவர் கருதிய பொருளமைதி இந்தக் குறளுக்குப் பொருந்தாது என்பது பல அறிஞர் முடிபு. அப்படிக் கருதினால் சமுதாயத்தில் உயர்வு தாழ்வுப் போராட்டத்திற்கு, சமூக நியதிக்கு, சட்டத்திற்கு எல்லாம் அப்பால் போய், ஏதோ ஒரு சமாதானம் தேடிக் கொள்ளுவதாகவே அமையும். வள்ளுவர் ஊழில் உறுதி இல்லாதவர் அல்லர். அது இக்குறளுக்குப் பொருந்துமா என மட்டுமே நாம் கருத வேண்டும்.”

ஒருங்கிணைப்பாளர்

அறநெறி என்பது இரு சாராருக்கும் பொதுமையானது தான். பல்லக்கைத் தாங்குவோரும் மனிதரே. அதில் அமர்ந்து செல்வோரும் மனிதரே. பல்லக்கைச் சுமப்போராயினும் அவர்கள் அற நெறியில் நின்றால் அறவோர் ஆகலாம். அதில் அமர்ந்து செல்வோராயினும் அவர்கள் அறநெறி பற்றி நின்றாலே அறவோர் ஆகலாம். அறவோர் ஆகும் வாய்ப்பு இருசாரார்க்குமே உண்டு. அது அவரவர் செயல் விளைவே அன்றி – அறத்தின் பயன் எனக்கொண்டு, ஏதோ முற்பிறவிப் பயன் என ஊழை மாசுபடுத்தக் கூடாது, காரணம் காட்டக் கூடாது.

‘அறத்தான் வருவதே இன்பம்’ என்பதுதான் வள்ளுவத்தின் உண்மைப் பொருள்.”

( தொடரும் )