முருகனுக்குப் புதியதொரு படைவீடு

முருகனுக்குப் புதியதொரு படைவீடு

Image result for London

கனடா நாட்டில் நான்கு நாள் பயணத்தோடு இலண்டன் வந்த எங்களைப் பத்து நாட்களாவது தங்கவைத்து விருந்து உபசாரம் செய்ய விழைந்த அன்பர்கள் விமான நிலையத்திற்கே வந்துவிட்டனர்.

இலண்டனில் அந்தப் பத்து நாட்களும் மூன்று முக்கிய நிறுவனத் தொடர்பைத் தந்தன. உலகப் புகழ் பெற்ற ஒய்.எம்.சி.ஏ. விடுதி, பி.பி.சி தமிழோசை, லண்டன் முருகன் திருக்கோவில்…

உலகில் மிகப்பிரபலமான மிகப்பெரிய நகரங்களில் ஒன்று லண்டன்; மிகமிக அழகிய நகரமும் அதுதான் என்றாலும், தேம்ஸ் நதி தீரத்தில் வீற்றிருக்கும் அந்த நகரின் அழகை விட, ஆங்கில அரசியல் நாகரிகப் பண்புகள், இலக்கியச் சிறப்புகள் ஆகியனவே என் நினைவில் நின்றன. அங்கில மொழிக்குச் செழுமை சேர்த்த சேக்ஸ்பியர், மில்டன், வேர்ட்ஸ்வொர்த், பைரன், கீட்ஸ், ஷெல்லி, டென்னிசன், டிக்கன்ஸ், பெர்னாட் ஷா, வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோரை மறக்க முடியுமா? நம்நாட்டுப் பள்ளிக்கூடப் பாட நூல்களை எல்லாம் நெடிது காலம் ஆட்சி செய்தவர்கள் அல்லவா இவர்கள்! அவர்களை ஆட்சி செய்ய வைத்த ஆங்கில மொழியின் இயல்பும், ஆட்சியால் அம்மொழியை உலகறியச் செய்த ஆங்கிலேயரின் இடைக்கால வெற்றி வரலாறும் நினைக்கத்தக்கவை. நம்மவர்களும் உலகத் தலைமைக்கு அடி எடுத்து வைத்த அந்த ஆதி நாட்களில் அப்படி முயன்றிருந்தால் – திருக்குறளும் அப்போதே உலக இலக்கியமாகி இருக்கும் என்பதும் கருதத்தக்கது.

உலகளாவிய தொண்டு நிறுவனமான ஒய்.எம்.சி.ஏ.- இல் சகோதரர் முத்தையா அன்பான வரவேற்பளித்தார். மதுரை மத்திய ஒய்.எம்.சி.ஏ-இன் பொதுச் செயலராக அவரும் அதன் செயற்குழு இயக்குநர்களில் ஒருவனாக நானும் பங்கேற்றிருந்த ஆண்டுகள், லண்டனில் இந்த உறவுப் பிணிப்பை ஏற்படுத்தித் தந்தன…..

உறவுப் பிணிப்பிற்கே உரிய பெரியவர், லண்டன் மெய்யப்பச் செட்டியார்! நம் செட்டிநாட்டுக் கோட்டையூர்  ஜவகர் ஆலை நிறுவனரான இப்பெருந்தகை – கலைத் தந்தை கருமுத்து தியாகராசர் குடும்பத்துச் சம்பந்தி முறையினர். எனினும் ‘லண்டன் மெய்யப்பர்’ என்பதே அவரது பிரபல விலாசமாகிவிட்டது!

அவர் ஆற்றி வரும் அரும் பணிகளில் முதன்மையானது- முருகப் பெருமானுக்கு லண்டனில் ஆலயம் அமைத்து, முருகனின் புதியதொரு படைவீடு போல அதைப் பேணி வருவது!

லண்டனில் வேறு சில இந்து சமய வழிபாட்டு இடங்களும் உள்ளன. ஸ்ரீ மகாலெட்சுமி கோவில், சிவன் கோவில் எனும் இரண்டும் குறிப்பிடத்தக்கவை. இவ்விரண்டை விட முருகன் கோவிலே பிரசித்தி பெற்று விளங்குகிறது.

1974-இல் ஹாரிங்டன் ஸ்குயர் எனுமிடத்தில் திருமெய்யப்பர் தொடங்கிய ஆலயத்திருப்பணி திரு.அழகர் ராஜாவால் ஆக்கம் பெற்று அற்புத ஆலயமாக எழுந்துள்ளது. புறத்தே எளிமையாகத் தோன்றினாலும் உள்ளே கலையம்சங்களும் தூய்மையும் ஆட்சி செய்கின்றன.

வள்ளி – தெய்வானை சமேதராக கந்தன் கருணை புரிகிறார். நம் நாட்டு முருகன் திருத்தலங்களில் நடக்கும் அத்தனை விழாக்களும் அங்கே நடக்கின்றன. சித்திரா பவுர்ணமியில் சுவாமி புறப்பாடு, வைகாசி விசாகப் பாலாபிசேகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை பத்து நாள் விழா, லண்டன் மக்களைக் கவரும் தேரோட்டம், ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஆங்கில வருடப் பிறப்பன்று (பால்குடம் உட்பட) பங்குனிப் பெருவிழா – என ஆண்டு முழுவதும் அங்கே முருகன் திருக்கோல வைபவம்தான் எனக் கேட்டறிந்து மகிழ்ந்தேன்.

இந்த ஆலயத்தில் – சுப்பிரமணியனான நான்! – (என் இயற்பெயர் அதுதான்!) ‘முருக வழிபாட்டுத் தொன்மை’ பற்றிப் பேசவேண்டும் என ஏற்பாடு செய்துவிட்டார் லண்டன் மெய்யப்பர்….

‘தமிழ்க் கடவுள்’ முருகனைப் பற்றிப் பேச, வந்த இடத்தில் திடீரென அழைக்கப்பட்டிருந்தேன். எனினும் சங்க காலந்தொட்டு முருகன் புகழ் பேசும் இலக்கிய நினைவுகள் கைகொடுக்கும் என நம்பியிருந்தேன்.

அகத்திய மாமுனிக்குத் தமிழைத் தந்த முருகன், ஔவைப் பிராட்டிக்கு ஞானம் புகட்டிய குமரன், குமர குருபரர் காசியில் தமிழ்ச் செல்வம் பரப்பிட அருளிய செந்தூரான், கிருபானந்த வாரியாரை – ‘திருமுருக’ எனும் முன்னிலைப் பெயரேற்று ஆன்ம நலம் பரப்ப அனுப்பிய குன்றுதோறும் கோலம் கொண்ட கடவுள்… காலம்தோறும் அன்பர்க்கெல்லாம் அருள் பாலிக்கிறான் அன்றோ! அப்படியொரு பரவசநிலை அன்று என்னுள் பரவியது!

முருகனை வழிபட்டபின் முருக வழிபாடு பற்றியே உரையும் விரிந்தது. வாழ்வில் மனித நேயமும் தெய்வநலமும் கைகூடி நின்றிட, மனம் மொழி செயல்களை அர்ப்பணிப்பதே வழிபாடு செய்வதன் நோக்கம். ‘மனிதப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே’ என வேண்டியிருந்தாலும் மனிதப் பிறவியின் இலட்சியம் மாசுபோல் அடர்ந்திடும் துன்ப நீக்கமே ஆகும். துன்பத்தை நீக்கும் எளிய இனிய வழி, இறைவனைச் சார்தலே என ஆன்றோர் அறிவுறுத்தினர்.

“தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

     மனக்கவலை மாற்றல் அரிது”   (7)

என வள்ளுவர் மனக்கவலைக்கு மருந்து சொன்னார்.

‘மனத்துக்கண் மாசிலன் ஆதலே’ அவர் கூறும் அனைத்து அறம். மனத்தில் அழுக்காறு, காமம், வெகுளி முதலிய ஆகாப் பற்றுக்களை, புற்றுகளாக வளர்த்துக் கொண்டு விட்டால், அந்த ஆகாப் பற்றுக்கள் நாளடைவில் அழிவுப் பற்றுக்களாகப் படர்ந்து விடுகின்றன.

வள்ளுவர் ‘பற்று’ என்றார். ‘ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்’ எனப் பின்வந்தோர் உபதேசம் செய்திருக்க, வள்ளுவர் ‘பற்றுகளே இல்லாதிருப்பவனான ஒருவனிடத்தில் கொள்ளுகின்ற பற்றினை நெகிழவிடாது பற்றுக!’ என்றார்.

அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் துறக்க வேண்டியன உண்டு; ஏற்கவேண்டியன உண்டு. குப்பையை அகற்றிய பிறகே வீட்டை அழகுபடுத்த முற்படுதல் போல்… மனத்திலும் வாழ்க்கையிலும் சேர்ந்துள்ள குப்பை போலும் தீய பற்றுக்களை அகற்றிய பின்னரே நன்மையை நாடும் மனச்சால்பு வளரும். நமது அறுசமயத் தொன்மை நெறிகளுள் ஒன்றான கௌமாரம் – இப்பற்றுறுதி வகைகளையே நமக்கு அருளுகிறது. திருமுருகாற்றுப்படையில் “தாமரை புரையும் காமர்சேவடி” என்று நக்கீரர் பரவியதும், “முருகா முருகா தருவாய் நலமும் திருவும்” என்று பாரதி பாடியதும் குன்றுதோறும் ஆடும் குமரனுக்குக் காலந்தொறும் நிகழ்ந்த பூசனைகள்… லண்டன் மாநகரிலும் அப்பூசனைகள் நிகழ்வது குமரனின் இளமைப் பொதுமையைச் சுட்டுகிறது… நம்மையும் இளமைக் கோலம் பெறச் செய்கிறது.

உரைகேட்ட அன்பர்களின் ஒருமித்த பாராட்டைப் போல லண்டன் மெய்யப்பர் அளித்த விருந்தும் மெய்மறக்கச் செய்தது! அந்த விருந்தில் கலந்து கொண்ட பேரன்பர் சங்கரண்ணாவின் தமிழ்ப்பணி லண்டன் செல்லும் தமிழர்களோடு உலகத் தமிழர்களிடையிலும் புகழோசையாகப் பரவியது.

பிக்பென் கடிகாரக் கோபுரம், பக்கிங்காம் அரண்மனை, நம்பர் டென் டவுனிங் ஸ்ட்ரீட் (பிரதமர் இல்லம்), பாராளுமன்றக் கட்டிடம், பல்கலைக்கழகம், பெரிய பொது நூலகம் (இந்தியா ஹவுஸ் லைப்ரரி இதில் ஓர் அங்கம்), பொருட்காட்சி, வெஸ்ட்மினிஸ்டர் ஆலயம் இவை எல்லாம் லண்டனை நினைவூட்டும் புகழ்ச் சாசனங்கள் இவற்றோடு உலகெல்லாம் தொடர்பு கூட்டி நிற்பது பி.பி.சி.!

உலகச் செய்தித் தொடர்புக் கலையில் முன்னிடம் பெறும் பி.பி.சியின் தமிழோசைப் பிரிவில் சங்கரண்ணா பணியாற்றுகிறார்.

சங்கரண்ணா – பி.பி.சி. தமிழோசையில் – இலக்கியப் பேட்டிக்கு ஏற்பாடு செய்தார். பேட்டி – திருக்குறள் பணிகளைப் பற்றியே அமைந்தது. “திருக்குறளில் இத்துணை ஈடுபாடு உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?…. மேடைகளில்  உரையாற்றும் பேராசிரியர்கள் தம் கருத்துக்கு ஆக்கமாகத் திருக்குறளை அவ்வப்போது மேற்கோளாக எடுத்தாண்டு  பேசுவது இயல்பு. ஆனால் சாதாரண உரையாடலிலேயே பேசும் விஷயத்திற்குப் பொருத்தமான குறட்பாக்களைச் சடுதியில் நினைத்துச் சொல்லும் ஆற்றல் உங்களுக்கு எப்படி வந்தது?” எனும் கேள்விகளுடன் பேட்டி தொடங்கியது.

“எனது திருக்குறள் ஈடுபாட்டு வளர்ச்சிக்கு உதவியவை இரண்டு; ஒன்று, நான் பெற்ற பேறு; மற்றொன்று எனக்கு அமைந்த வாய்ப்பு. என் தந்தை வழிப்பாட்டனார் – பெரியணர் ஒரு ஆசுகவி. மதுரைத் தமிழ்ச்சங்கப் பெரும் புலவர்களின் சாற்றுக்கவிகளைப் பெற்றவர். என் தந்தையார் நடராசரும் புலமைத்திறம் மிக்கவர். இறைமையில் இசைந்த இந்த இருபெரியோர்களின் மரபுவழிச் செல்வமாக வந்த தமிழ் உணர்வு எனக்கு அமைந்த ஞானப்பேறு. தமிழ் விழாக்களில் (அரங்கேறும் உரைகளை மனம் ஒன்றிக்கேட்பது இளமை முதல் எனக்கு அமைந்ததொரு வழக்கம் அவ்வாறு பேசுவோர் – இலக்கியமாயினும் சரி, சமூகவியல் காட்டியே பேசியது, இந்நூல் பற்றிய ஆர்வத்தை என்னுள் தூண்டியது. “திருக்குறளில் அப்படி என்னதான் உள்ளது?” எனத் துருவித் தேடும் நாட்டத்தை இவ்வாய்ப்புக்கள் ஏராளமாக எனக்கு வழங்கின. ஈடுபாட்டிற்கு உரிய காரணங்கள் இவையேதான்.

“இன்றைய உலகச் சிக்கல்களுக்குத் திருக்குறளில் தீர்வு காண இயலுமா?” எனும் கேள்விக்கு திருக்குறளின் ஞாலப் பழமையையும் அதன் காலப் புதுமையையும் எடுத்துக்காட்டி விளக்கம் சொன்னேன். “திருக்குறளை நீங்கள் எப்படிப் பயன் கொள்ளுகிறீர்கள்? சொந்த அனுபவத்திலிருந்து சொல்லுங்கள்!” என்பது பேட்டியில் அடுத்த வினா.

“லண்டனுக்குப் பயணமாக வந்துள்ள நான் சுற்றுலா – இலக்கிய அறிமுகம் ஆகியவற்றோடு என் தொழில் முயற்சிகளுக்கும் உரிய நேரம் ஒதுக்கிக் கொண்டுள்ளேன். இதற்கு நானறிந்த திருக்குறளே ஒரு சான்று:

பழகிய யானையின் துணையோடுதான் காட்டில் திரியும் புதிய யானையைப் பிடித்து வசக்கிக் கொணர முடியும். அதுபோல நமக்கு நன்கு தெரிந்த தொழில் அல்லது அன்பரின் உதவியோடுதான் மற்றொன்றையும் செய்து முடிக்க முடியும்.

“வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

     யானையால் யானையாத் தற்று”       (678)

என வினை செயல்வகையைக் கூறும் குறட்பா – எனக்கு- இலக்கியம் – தொழில் இரண்டிலும் இருமுகத் தொடர்பைக் கூட்டித் தந்துள்ளது. இப்படிப் பலருக்குப் பல குறட்பாக்கள் அனுபவ ஆக்கம் தரக்கூடும்.

தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள திருக்குறள் ஆராய்ச்சி மையத்தின் நோக்கும் போக்கும் பற்றிப் பேட்டி வலம் வந்தது. தமிழ் மாமுனிவர் தவத்திரு அடிகளார் திருக்குறள் நெறிபரப்பச் செய்துவரும் சீரிய தொண்டுகளைப் பட்டியலிட்டுச் சொன்னேன். அனைத்து தரப்பினரையும் உறவு கூட்டிப் பிணிக்கும் ஊடகமாகத் திருக்குறளை ஆக்கியவர் அடிகளார் என நினைவு கூர்ந்தேன்.

திறமான புலமையெனில் – வெளிநாட்டார் அதனை வணக்கம் செய்வார்கள் என்பதற்கு உரிய அரங்காக – பி.பி.சி. விளங்குவதையும் சங்கரண்ணா போன்றோரின் தொண்டினால் அதில் தமிழோசை ஓங்கி ஒலிப்பதையும் மனதாரப் பாராட்டி விடை பெற்றேன்.

மறுநாள் – தமிழகத்திலிருந்து தொலைச் செய்தி வந்திருப்பதாகச் சொன்னதும் ஓடிவந்து போனைக் கையிலெடுத்தேன் “நான்தான் குன்றக் குடியிலிருந்து தெய்வசிகாமணி பேசுகின்றேன்” என்ற குரல் என்னைத் திடுக்கிடச் செய்தது. பி.பி.சி. தமிழோசையை விடாமல் கேட்கும் வழக்கமுடைய தவத்திரு அடிகளார், எனது பி.பி.சி. பேட்டியைக் கேட்டு, மறுநாளே என்னைப் பாராட்ட போனில் அழைத்திருந்தார். இது எத்தகைய பேறு! திருக்குறளால் நான் பெற்ற பேறு அல்லவா?

பி.பி.சி. தமிழோசைப் பேட்டியே பயணத்தின் மணிமுடியாக அமைந்துவிட்டதால் அந்த முழுநிறைவோடு லண்டன் நகரைச் சுற்றிப் பார்க்க மனம் இடம் தந்தது.

திட்டமிட்டப்படி ஐரோப்பிய நாடுகளில் காஸ்மாஸ் எனும் சுற்றுலாக் குழுவோடு பத்துநாட்கள் சுற்றினோம். அந்நாடுகளின் வளர்ச்சியைப் பார்த்துப் பார்த்து வியந்தோம்.

அந்த வியப்புச்சுவடு மறைவதற்குள் துபாய், அபுதாபி எனும் சுவர்க்க பூமியில் நான்கு நாட்கள் சுற்றிப் பார்த்தோம். சகோதரர் அல்ஹாஜ் முகமது பாருக். தேவிபட்டினச் செம்மல் – தொழிலொடு அங்கு தமிழும் வளர்க்கும் தூய நெஞ்சராக விளங்குகிறார். அன்பர்களைக் கூட்டி அவர் அளித்த விருந்துகளில் திருக்குறளையும் பரிமாறி விட்டுத் தாயகம் திரும்பினோம்! மேற்குத் திசையில் மறையாத வாழ்வுச் சுடராகத் திருக்குறள் விளங்கும் என நம்பிக்கையோடு தமிழ் மண்ணில் கால் வைத்தோம்.

கனடா நாட்டுப் பயணம்

கனடா நாட்டுப் பயணம்

Image result for canada

விழுமிய திருக்குறள் பிறந்த நம்நாடு, நழுவவிட்ட அந்த நல்லுணர்வை ஏக்கத்துடன் கனடா நாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை எண்ணத் தொடங்கினேன். அமெரிக்காவில் இத்தனை நாட்களும் எப்படியோ ஓடிவிட்டன!

தமிழில் ‘நல்வரவு’ கூறும் திருநாடு

உலக நாடுகளுள் சோவியத் யூனியனுக்கு அடுத்த படியாக உள்ள பெரிய நாடு நோக்கிப் பயணமாக வேண்டும். அதுதான் கண்ணாரக் காணவேண்டிய கனடா!

வட அமெரிக்கக் கண்டத்தின் வடபாதி முழுதும் வியாபித்துள்ள இயற்கைக் கொலுமண்டபம் இந்த நாடு. கிழக்கே அட்லாண்டிக் சமுத்திரம்; மேற்கே பசிபிக் சமுத்திரம்; தெற்கே அமெரிக்கா; வடக்கே ஆர்க்டிக்.

எவ்வளவு பெரிய நாடு! ஆனால் மக்கள்தொகை மிகக்குறைவு. சுமார் 3கோடி மக்கள்; மூன்று நூற்றாண்டுக் குடியேற்ற வம்சா வழியினர்.

வடதுருவத்தை ஒட்டியுள்ள கனடாவின் குளிர்காலப் பருவம் மிக நீண்டது; கோடைப் பருவம் மிகச்சுருங்கியது.

நம் நாட்டில் மூன்றே பருவங்கள்தான் உண்டு கோடைக் காலம், மிகுகோடைக் காலம், சுடும்கோடைக் காலம்!

ஆனால் கனடாவைப் போன்ற நாடுகளில் மட்டும் இயற்கை மிகுந்த கருணை காட்டுகிறது! இங்கு உள்ள காடுகளின் அடர்த்தியை, நீரோடைகளின் பாய்ச்சலை, பயிர்களின் பசுமையை, மக்களின் வளமையைப் பார்த்தாலே… இயற்கையின் பாரபட்சம் புரிகிறது.

இங்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்து முதன்முதலில் குடியேறியவர்கள் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும். அவர்களுக்குள் மூண்ட ஆதிக்கச் சண்டை ‘ஏழாண்டுப் போர்’ என வருணிக்கப்பட்டது. ஆங்கிலேயர் கை ஓங்கியதால் – மாட்சிமை தங்கிய மன்னர் ஆட்சியின் கீழ் . டொமினியன் ஆகி, ஆஸ்திரேலியாவைப் போல் காமன்வெல்த் அங்க நாடாகச் செல்வம் கொழிக்கிறது. ஆங்கிலமும் பிரெஞ்சும் அரசு மொழிகள். அங்கும் மொழி- இனச் சிக்கல் உண்டு. எனினும் பொதுவளர்ச்சிக்கு ஊறு செய்யாமல் ஒத்துப் போகிறார்கள். சமீப ஆண்டுகளில் ஈழத் தமிழர்களுக்கு சரணாலயமாகவும் இந்நாடு ஒருவகையில் தமிழ் மானம் காக்கிறது!

இயன்றவரை ஈழத் தமிழர் மானம் காக்கக் கைகொடுக்கும் கனடாவில் இனிய தமிழ் மணமும் கமழுவதை நுகர அரிய வாய்ப்பு இப்பயணத்தில் கிட்டியது.

சமச்சீரான வெப்பதட்பமுடைய வாழ்க்கைக்கு உகந்த நாடுகள் என உலகில் ஆஸ்திரேலியாவையும், கனடாவையும் சொல்லுவார்கள். அமெரிக்காவில் பொதுவான, ஆங்கிலக் கலாச்சாரப் பின்னணி புலப்படுவதுபோல் அதையடுத்துள்ள கனடாவில் பிரெஞ்சக் கலாச்சாரச் சூழல் வெளிப்படை யாகத் தெரியும் என்றும் சொல்லுவார்கள். அதுவும் உண்மை எனக் கண்டறிய அதிவேகமாக அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நியூயார்க்கிலிருந்து கனடாவுக்குப் போய்ச் சேர்ந்தோம். போகும் இடங்களில் எல்லாம், நம்மை வரவேற்று உபசரிக்க நண்பர்கள் இருந்துவிட்டால் எந்த நாட்டிற்கும் போய்வரலாம். நற்பயனாக எங்களுக்கு இந்தப்பேறு எங்கும் கிட்டியது. சென்னையில் உள்ள பிரபல டாக்டர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் புதல்வி திருமதி. ரீத்தா, திரு.பார்த்திபன் அவர்களின் துணைவியார். இவர் அவர் சகோதரி சத்யா, மதுரையைச் சேர்ந்த திரு.அசோகன், கானடியன் ஆப் செட் ஸ்கிரீனிங் எனும் நிறுவனத்தை நடத்தும் ரோட்டரி கழக உறுப்பினர் திரு.ஸ்டூவர்ட் ஜெரோம், திரு.விஜயநாதன் மற்றும் பலர் எங்களுக்கு இனிய வரவேற்பு அளித்தனர்.

நாங்கள் கனடா போய்ச் சேர்ந்ததும் அமெரிக்கா விலிருந்து திரு.நாராயணன் குடும்பத்தினரும் எங்களுக்குத் துணையிருக்க வழிகாட்ட வந்து (அங்கிருந்து சுமார் 400 மைல்தான்) சேர்ந்து கொண்டனர். கடலை, மலையை, யானையை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது என்பார்கள். அந்தப் பட்டியலில் இன்னும் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம். நீர் அருவி, ஆலயக் கோபுரம்! அதிலும் நாங்கள் பார்த்த நயாகரா அருவி (நீர்வீழ்ச்சி) உலகிலே மிகப்பெரிது, அதன் பிரமாண்ட தோற்றமும், இடையறாது கொட்டும் நீர்ப் பெருக்கும், வண்ண வண்ணக்கோலமும் நெஞ்சைப் பின்னிப் பிணைத்தன.

நம் பாண்டிய நாட்டுச் சங்கப்புலவன் கணியன் பூங்குன்றனார் பாடிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் பாட்டில் தொடரும் வரிகளான ‘கல்பொருது இரங்கும் மல்லல்பேர்யாற்று நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப்படூஉம்’ என்ற வரிகள் இப்பெரும் நீர்வீழ்ச்சியைக் கண்டவுடன் தோன்றின.

தேக்கிவைக்கப்பட்ட செல்வம், தேக்கிவைக்கப்பட்டு பயன்படுத்தாத நீர் போல அலையாமல், நயாகரா நீர்வீழ்ச்சியைப் போல, பரந்து விரிந்து பாலை நிலத்தை எல்லாம் செழிப்பாக்க வேண்டும் என்று நினைத்தேன். அமெரிக்காவிலும் கனடாவிலும் உற்பத்தியாகும் பொருட்களை நுகர்வோர் அதிகமாக இருப்பதனால், அங்கு பணப்புழக்கத்தின் வேகம் காரணமாகப் பொருளாதார நிலையும் மேம்பட்டு இருக்கிறது. நமது நாட்டிலும் பணப் புழக்கம் தேங்கி இருக்காமல் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால் நம் வளர்ச்சியும் மேம்படும்.

உலகிலேயே மிகப் பெரிய சியென் கோபுரத்தைப் பார்க்கச் சென்றோம். சிகாகோவில் நாங்கள் பார்த்த சியொ டவர் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு இதைப்பார்க்க வந்தபோது மலைப்புத் தோன்றவில்லை. ஆனால் மனதைத் தொடும் ஒரு காட்சி என்னை மெய்சிலிர்க்கவைத்தது. அந்த மாபெரும் டவரின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு வாசகத்தில் ‘நல்வரவு’ எனத் தமிழில் மின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு உலகில் உள்ள பலமொழிகளில் எழுதியிருப்பினும் இந்தியா விலிருந்து தேர்ந்தெழுதிய நான்கு மொழிகளில் நமது தமிழ் மொழியும் ஒன்று என்றவுடன் என் எண்ணமெல்லாம், இதயமெல்லாம் பூத்தன; வான் முட்ட உயர்ந்திருந்த கோபுரத்தின் படிக்கட்டுக்குச் செல்லக் கால்கள் தயங்கின. “வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும், வண்மொழி வாழியவே!” என மகாகவி பாரதி அன்று பாடினானே… அந்த வானத்துக்கே இந்தத் தமிழ் வாசகம் என்னைத் தூக்கிப் போவது போலப் பிரமையுற்றேன். அந்த வாசகத்தின் முன்னர் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

‘நல்வரவு’ எனத் தமிழ் வரவேற்பு அளித்த தமிழன்பர்கள் உள்ளமும், இல்லமும் எங்களுக்குச் சென்றவிடமெல்லாம் நல்வரவு கூறின.

கனடாவிலிருந்து, ஏற்கெனவே திட்டமிட்ட எங்கள் ஐரோப்பியப் பயணத்தில் விடுபட்டுப் போயிருந்த பிரெஞ்சு நாட்டுக்குப் போக விசா எடுக்க முடியும் என்றார்கள். அந்த முயற்சியில் நண்பர்கள் ஓடி ஓடி அலைந்தார்கள். ஆனால் 45 நாள் அவகாசம் வேண்டும் என அதிகாரிகள் உதட்டைப் பிதுக்கி விட்டார்கள். நான்கு நாட்கள் இதில் வீணாகிவிட்டன.

கனடாவிலும்  விரிவான பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் தரவும் முடியவில்லை. அதற்கேற்ப எங்கள் பயணத்தை நீட்டிக்கவும் இயலவில்லை. நண்பர்கள் வீடுகளில் பலரும் வந்து கூடி கலந்துரையாடி எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சிகளுக்காகவே ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திரு.பார்த்திபன் – ரீத்தா தம்பதியினரின் உபசாரத்தை மறக்கவே முடியாது. அவர்கள் இல்லத்தில் நிகழ்ந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்துத் தமிழன்பர்களும் குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டனர். ஈழத்தின் கண்ணீர்க் கதையும் அங்கு விரைவில் தமிழர் நல்வாழ்வுக்கு உரிய சுமுக நிலை ஏற்பட்டேயாக வேண்டும் என்பதில் கவலையும், எல்லாப் பிரிவினரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டிய அவசியம் பற்றியும் கருத்துக்கள் தங்குதடையின்றி வந்தன. யாழ்ப்பாணத் தமிழன்பர்கள் கூறியவற்றைக் கேட்ட போது எங்கள் கண்கள் கண்ணீர்க் குளமாயின.

பின்னர் ‘திருக்குறள் பெருமைகளும் நமது பண்பாட்டுச் சிறப்புகளும்’ பேசப்பட்டன. இவற்றைக் கேட்பதில் அங்கு உள்ளோருக்கு உள்ள ஆர்வத்தை, அக்கறையை நாம் இங்கெல்லாம் காணமுடிவதில்லை. தன்னிடம் பூத்த தாமரையின் அழகு குளத்துக்குத் தெரியவில்லை என்றால் எங்கே போய் முறையிடுவது?

உலகத் திருக்குறள் பேரவையின் நோக்கங்கள் பற்றி அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதன் கிளை ஒன்றைக் கனடாவிலும் நிறுவத் தாம் எல்லா வகையிலும் ஒத்துழைப்பதாக உற்சாகம் அளித்தனர்.

கனடாவில் சீக்கியர்களும் தமிழர்களும் கணிசமாக உள்ளனர். சீக்கியர்களின் பற்றுறுதிக்கும் உழைப்புக்கும் நிகராக நம் தமிழர்களும் விளங்கக்கண்டு பெருமிதமும் பேருவகையும் கொண்டேன்.

கலந்துரையாடல்களில் உற்சாகமாகக் கலந்து கொண்ட திரு.பார்த்திபன் ஒவ்வொரு வேளை விருந்தின்போதும் புதிது புதிதாக நண்பர்களைக் கூட்டி வருவார். நீண்ட உரையாடல்கள் தொடரும். சமயம், தத்துவம், கலை, இலக்கியம், தொழில், வாணிபம் என்றெல்லாம் கலந்துரையாடல் வலம் வரும். இவ்வுரையாடல்களில் எனக்கு ஏற்பட்ட பயனும் அனுபவமும் மிக அதிகம். அவற்றையெல்லாம் மனதில் அசைபோட்டுக்கொண்டு இலண்டன் பயணத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அருமை நண்பர் திரு.பார்த்திபன், “உங்கள் பேச்சால் வசீகரிக்கப் பட்டேன்” என்றார். ஆனால் உண்மையில் வசீகரிக்கப் பட்டது நாங்கள்தான். கனடாவில் வாழும் நம் சகோதரர்களின் அன்பும் உபசாரமும் திருக்குறள் வாழ்வும் வாக்குறுதியும் எங்களை என்றென்றும் வசீகரித்துக் கொண்டன….!

“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

     அனைத்தே அன்பர் தொழில்”        (394)

எனப் புதுக்குறள் புனையும் ஆசை வளர்ந்தது!

கென்னடி புகழ் பேசும் வாஷிங்டன் !

Image result for john f kennedyகென்னடி புகழ் பேசும்

வாஷிங்டன் டி.சி. நகருக்குச் சென்றோம். அங்கே உள்ள கென்னடி விமான நிலையத்தின் அழகும் வெள்ளை மாளிகை வனப்பும் என் நெஞ்சில் நிறைந்தன. ஜனாதிபதி அமரர் கென்னடி நினைவுச் சின்னம் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தோரை நினைவுகூரும் நடுகல்லாக விளங்குகிறது.

என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர்பலர் என்ஐ

     முன்நின்று கல்நின் றவர்”       (771)

எனும் திருக்குறள் வரிகளே அங்கு என் நினைவில் படர்ந்தன.

புகழ் வளர்ந்து நடுகல் ஆனோர்க்கும் அது பொருந்தும் சிறப்பினை உணர்ந்தேன். அங்கு உள்ள அணையாச் சுடர் காண்போர் உணர்விலும் தியாகப் பேரொளியைப் பரவச் செய்வதை அனுபவித்தேன். நினைவுச் சின்னங்களை நிறுவுவது போல அங்கே அவற்றை நேர்த்தியாகப் பராமரித்து மரியாதையும் செய்கின்றனர். இதையும் நம் நாட்டு நடப்போடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.

இங்கே வைக்கப்படும் நினைவுச் சின்னங்கள் நாளடைவில் மறக்கப்பட்டுப் பறவைகளாலும் விளம்பரங் களாலும் அசிங்கப்படுத்தப்படும் கொடுமை மாறும் நாள் எந்த நாளோ எனப் பொருமினேன்.

எதிர்காலத்தை உணர்த்தும் விஞ்ஞானக் கூடம்

“பொறிஇன்மை யார்க்கும் பழியன்று; அறிவுஅறிந்து

     ஆள்வினை இன்மை பழி”      (618)

எனும் வள்ளுவம் அமெரிக்க நாட்டினர்க்கு எப்படியோ தெரிந்திருக்க வேண்டும். அனைத்துத் துறையிலும் அவர்கள் ஆக்கிவரும் ஆள்வினையுடைமை அறிவியலில் கொடிகட்டிப் பறக்கிறது. நிலா உலகில் முதல் மனிதனை நிறுத்திடும் அளவுக்கு விண்முட்டும் புகழாகியுள்ளது.

வாஷிங்டனில் உள்ள அறிவியல் கலைக்கூடத்தை அற்புதம் என்றே சொல்ல வேண்டும். ராக்கெட்டுப் பயண வளர்ச்சி, விண்வெளி ஓடச் சாதனைகள், இது வரை சாதித்தவை, இனி அண்டவெளிக் கிரகங்களை ஊடுருவிப் போகும் முயற்சிகள் என இவற்றையெல்லாம் பார்த்தபோது விஞ்ஞான முன்னேற்றத்தையும் எதிர்காலப் போக்கையும் எப்படி வருணிப்பது என்றே எனக்குப் புரியவில்லை.

வாஷிங்டனை இரண்டே நாளில் முடித்துக் கொண்டு ஆர்லாண்டோ புறப்பட்டு வந்தோம். உலகப் புகழ்பெற்ற டிஸ்னி உலகம்  இங்கே தான் உள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்திழுக்கும் பிரம்மாண்டமான காட்சிகள் அங்கு வருடம் முழுவதும் திருவிழாக் கோலம் பூணச் செய்கின்றன. இதற்கு இணையானதோர் அமைப்பு உலகில் வேறெங்கிலும் இல்லை எனச் சொல்ல வைக்கின்றன.

அமெரிக்கா முழுவதையும் பார்த்து விட்டதொரு பிரமை ஏற்படும் வண்ணம் 360 டிகிரி கோணத் திரையரங்கில் அமெரிக்கா முழுவதையும் காட்ட நம்மைக் கூட்டிச் செல்கிறார்கள்.

சறுக்கு ரயில் விளையாட்டு

ரோலர்கோஸ்டர் எனும் பயங்கர ராட்சதச் சறுக்கு ரயில் விளையாட்டு அங்கே மிகவும் பிரபலம். ஒரு நொடியில் விர் என்று கோபுர உச்சிக்கு அந்த ரயில் விரைவதும் பின்னர் அது சரேலென மரணப் பள்ளத்தை நோக்கிக் கீழிறங்குவதும் மயிர்க்கூச்செரிக்கும் அனுபவங்கள்! அதில் ஒரு முறை ஏறிவிட்டுக் கீழே இறங்கி மிகத் துணிச்சலுடைய முரட்டு ஆசாமி என்ன சொன்னார் தெரியுமா? “இனி செத்தாலும் இதில் ஏற மாட்டேன்” என்றார். என்றாலும் துணிச்சலோடு அதில் ஏறினோம். ஓடத்தொடங்கியதும் உடம்பின் குருதி உறைந்து போவது போல, எலும்பு களெல்லாம் நொறுங்கிவிடுவது போலப் பய உணர்வு கவ்வியது. கீழே இறங்கியபின் தான் ‘அப்பாடா’ என்று அமைதி பெற்றோம்.

எதிர்காலக் கதை

அங்குள்ள எப்காட் சென்டர் விஞ்ஞான, தொழில் நுட்ப அற்புதங்களைக் காட்டுகிறது. 21-ஆம் நூற்றாண்டை நோக்கி உலகம் முன்னேறும் எதிர்காலக்கதை ஒரு வரலாறு போல அங்கே பல நிலைகளில் பல அரங்குகளில் கோடிகோடிச் செலவில் காட்டப்படுகிறது. இப்படி நம்நாட்டிலும் ஆங்காங்கு அறிவியல் நகரங்களை உருவாக்கக் கூடாதா எனும் ஏக்கமே மேலிட்டது.

அங்குள்ள கடல் உலகம்  உலகில் உள்ள அத்தனை மீன் வகைகளையும் காட்டுகிறது. இத்தனையும் பார்க்க ஒரு வாரமாவது வேண்டும்; நாங்கள் அவசரக் கோலத்தில் கிளம்பினோம்.

இந்த எப்காட் உணவுப் பிரிவில் காரைக்குடி நண்பர் ஒருவரைக் கண்டேன். என்னை நலம் விசாரித்துக் கொண்டே அவர் ஓடிஓடிப் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தொலைவில் செல்லச்செல்ல ஏற்படும் அன்பின் நெருக்கத்தை உணர்ந்திட முடிந்தது.

‘மியாமி’ நகரம்

ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு இப்போது எங்கள் பயணம் எல்லாம் விமானத்தில்தான், 3000 மைல் தாண்டி உலகிலேயே அழகிய கடற்கரை நகரான மியாமி போய்ச் சேர்ந்தோம்.

வாழ்க்கையை, பொழுதுபோக்கை, எப்படி ரசிப்பது என்பதை அங்கே காணமுடிந்தது. ‘சிலருக்கென ஒதுக்கப்பட்ட’ இடங்களுக்கெல்லாம் நாங்கள் போகவில்லை! நாலுபேர் கூசாமல் பார்க்கக்கூடிய கொள்ளை அழகுகளை ரசித்துவிட்டு ஓட்டலுக்குத் திரும்பினோம்.

அடுத்து நாங்கள் தரை இறங்கிய இடம், லெஸ்வேகாஸ் (லிணீsஸ்மீரீணீs). உலகிலேயே மிகப்பெரிய சூதாட்ட நகரம் இது என்பார்கள். எங்கு பார்த்தாலும் காசினோ என்னும் பொழுதுபோக்கும் உல்லாசப் பணவிரயக் கூடங்கள்! பணம் அங்கே தண்ணீராக ஓடுகிறது; தடம் புரண்டு பாய்கிறது!

‘ஒன்றெய்தி நூறிழக்கும்’ சூதர்களும் கெட்டிக் காரர்களும் அங்கே ஏராளம், ஏராளம்! விமானத்தளத்தில் இருந்து ஊரில் எங்கே திரும்பிப் பார்த்தாலும் பந்தயச் சூதாட்டம்… பல்வகைச் சூதாட்டம். தம் பணம் பறிபோவதைப் பற்றி அங்கு யாரும் கவலைப்படுவதில்லை. சம்பாதித்த காசைச் செலவழிக்க ஒரு வகையான மகிழ்ச்சியோடு ஷிறிலிகிஷிபி எனும் கண்கவர் காட்சிகளுக்குப் போய் விடுகிறார்கள். இவற்றைத் தொலைவில் இருந்து பார்த்த திருப்தியோடு நாங்கள் ஓட்டலுக்குத் திரும்பி விடுவோம்.

“வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதூஉம்

     தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று”        (931)

எனும் சூது அதிகாரக் குறளைத் தெரிந்திருந்தாலும் அவர்கள் அதைப் பின்பற்றமாட்டார்கள் என உணர முடிந்தது! அவ்வளவு மயக்க உலகம் அது.

அற்புத உலகம்

அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் ) நகரம் பறந்தோம். அங்கேதான் டிஸ்னியின் மற்றும் ஒரு அற்புத உலகம் உள்ளது. அதை மீண்டும் விவரிப்பதைவிட நேஷனல் தியேட்டர் உள்ள மற்றொரு ஹாலிவுட் ‘நகரத்தைப்’பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் விவரிக்கலாம். திருக்குறளைப் பற்றிப் பேசவே போதிய அவகாசம் கிட்டாத சூழலில் ஹாலிவுட் போக நேரம் எங்கே கிட்டும் என யோசித்தோம். எனினும் அன்பர்கள் விடவில்லை. ஏதோ போனோம்! வந்தோம்!

பின்னர் சான்பிரான்சிஸ்கோ நகருக்குப் பறந்தோம். அங்குள்ள சீன டவுனைக் (சிலீவீஸீணீ ஜிஷீஷ்ஸீ) கண்டு வியந்தோம். “எவ்வது உறைவது உலகம்” எனும் திருக்குறள் என் நினைவில் படர்ந்தது. சீனர்கள் உலகத் தலைமை பெற்று வரக் காரணம் எது என்பது புரிந்தது.

சிகாகோ: இந்திய ஆன்மீக முதல் முழக்கம்

சிகாகோ: இந்திய ஆன்மீக

முதல் முழக்கம்

Image result for vivekananda

இந்திய ஆன்மீகத்தின் முதல் முழக்கத்தை – புதிய விவே(காநந்தக்)கக் குரலை கேட்கும் – வாய்ப்புப் பெற்ற நகரம் சிகாகோ இந்திய நாட்டவரைப் பற்றிச் சென்ற நூற்றாண்டிலேயே கேள்விப்பட்டுப் பெருமை கொண்ட நகரம் அது.

சிகாகோ தமிழ் அன்பர்கள் (டெய்டனிலிருந்து 300 மைல் தூரம்) கூட்டிச் செல்ல வந்திருந்தனர். டெய்டன் விழா முடிந்த கையோடு சிக்காகோவுக்குக் காரில் போக திரு.பி.சி.எம்.ஜி. நாராயணனும் வேங்கட ராமானுஜமும் ஏற்பாடு செய்திருந்தனர். வேங்கடராமானுஜம் ஏற்றுமதித் துறையில் பொறுப்பான பதவி வகிப்பவர்; மதுரையில் புகழோச்சி வரும் மகாத்மா மாண்டிசேரிப் பள்ளித்தாளாளாரும் யாதவர் கல்லூரிச் செயலருமான திரு.பன்னீர்செல்வம் அவர்களின் சகலர். இவ்வன்பர்களின் குடும்பத்தாருடன் சிகாகோவுக்கு சாலை வழிப்பயணமாய்ப் புறப்பட்டோம்.

தாயக்கட்டமா? தார்ச்சாலைகளா?

சாலைகள் நாட்டின் நரம்பு மண்டலங்கள் பொருளாதார நலத்திற்கும் சமூக வாழ்வுக்கும் இன்றியமையாத இணைப்புக் கோடுகள். மிக விரிந்த நிலப்பரப்பைக் கொண்ட அமெரிக்க நாட்டின் திசைகளை எல்லாம் – அந்நாட்டின் நெடுஞ்சாலைகளே இணைக்கின்றன. ஊருக்கு ஊர் சொந்த / பொது விமானப்பயண வசதிகள் மிகுதியாக இருந்தாலும், ரயில் பயணத்தை விட, சாலைப் பயணத்தையே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதற்கேற்ப மோடல் (விளிஜிணிலி) எனப்படும் தங்குவிடுதிகளையும் செய்தித்தொடர்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

அங்கே நெடுஞ்சாலைகளின் அழகுக்கும் பராமரிப்புக்கும் இணை ஏதுமில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை – நேர்கோடு போல – நீண்டு விரியும் இச்சாலைகளில் எல்லாம் – வாகனங்கள் ஊர்ந்து போவதில்லை! விரைந்து பறக்கின்றன! 60 மைல் வேகம் குறையாமல் ஓட்ட வேண்டும் என்பது விதி; ஆனால் சர்வசாதாரணமாக 80, 100 மைல் வேகத்தில்தான் ஓட்டுகிறார்கள். வாகனங்களைக் கண்காணிக்கப் போலீசார் ராடார் சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள். என்றாலும் கார் ஓட்டுநர்கள் தம் வண்டியில் உள்ள மின்னணுச் சாதனங்கள் வழியே ராடார் இயக்கத்தைத் தெரிந்து கொண்டு அப்போதைக்கு மட்டும் வேகத்தைக் குறைத்துக்கொண்டு அப்புறம் சிறகுகட்டிப் பறக்கிறார்கள்.

வேகம் – வேகம் – வேகம். இதுதான் அமெரிக்க வாழ்க்கை! என்றாலும் கூட அந்த வேகத்திலும் – ஒருவகை ஒழுங்கும் கட்டுப்பாடும் மேவி நிற்பதைக் காணமுடியும். பொது இடங்களில் மக்கள் நடந்து கொள்வதை உரைகல்லாக வைத்தே ஒரு நாட்டின் ஒழுக்கத்தை அளந்தறிய வேண்டும் என்பார்கள். அங்கே ‘பொதுஇடம்’ எதுவாயினும் – அது புனிதமாகப் போற்றப்படுகிறது. ‘பொது என்றாலே, யாருக்கும் சம்பந்தமில்லாத அனாதை போன்றது; பொதுஇடத்தையோ, பொதுப்பொருளையோ, முறைகேடாக உபயோகிக்கலாம்’ என்ற நம்நாட்டின் பெரும்பாலானோரின் மனப்போக்கு இந்த அமெரிக்கப் பாடத்தால் மாற்றம் காணவேண்டும்.

நம் நாட்டில் பொதுப் பேருந்துகள் படும் பாடு நமக்குத் தெரியும். பயணிக்கும் ஓட்டுநர் / நடத்துநருக்கும் சிறு வாய்த்தகராறு மூண்டால் போதும். அது கைகலப்பாகி, ரத்தக் களரியாகி, சாலை மறியலாகி, சட்டஒழுங்குப் பிரச்சினையாகி, குழு மோதலாகி, துப்பாக்கிச்சூடு ஆகி, நீதி விசாரணை ஆகி, அப்புறம் புஸ்வாணம் ஆகிவிடும். அதே சமயத்தில் பேருந்து – சமூக விரோதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சாலையின் குறுக்கே படுத்துக் கிடக்கும். அமெரிக்கச் சாலைப் பயணத்தின்போது என்னால் இந்த ஒப்பீட்டை நினைக்காமல் இருக்க முடியவில்லை. “இது மாறும் நாள் எந்த நாளோ! யார் இதைப் பகர்வார் இங்கே?” எனும் பாரதிதாசன் வரிகளே நினைவுக்கு வருகின்றன.

அமெரிக்க நாடு எங்கும் தாயக்கட்டம் போல அமைந்திருக்கும் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கு விளக்கமான கைகாட்டிகளும் குறிப்புத் தூண்களும் உள்ளன. நெடுஞ்சாலை வரைபடத்தைக் கையில் வைத்துக்கொண்டால் போதும்; எங்கே திரும்ப வேண்டும். எங்கே பாதை மாறிச் செல்லவேண்டும் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

சாலையை இருபிரிவாக நடுவே பிரித்து – போகும் வழித்தடங்கள் ஒருபுறமும், எதிர்வரும் வண்டித்தடங்கள் மறுபுறமும் எனப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புறத்திலும் நான்கு (ஜிக்ஷீணீநீளீs) தடங்களுக்கு குறையாமல் ஓடுகின்றன. இத்தடங்கள்தான் ஓடுகின்றனவா அல்லது இவற்றின் மீது வாகனங்கள் ஓடுகின்றனவா எனக் கணிக்க இயலாத வகையில் அங்கே எல்லாம் அசுர வேகம்தான்! லைஃப் லைன் எனும் உயிர்க்கோடு தாண்டாத ஒழுங்கு வேகம்தான்!

“நீறில்லா நெற்றி பாழ்”

என்பது நம் நாட்டுப் பழமொழி

“காரில்லா வாழ்வு வீண்”

என்பது அவர்களின் நடைமொழி!

அங்கேதான் எத்தனை வகைக் கார்கள்! சிறிதும் பெரிதுமாக ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்களுக்குத் தனியே நான்கைந்து கார்கள் உள்ளன. டிரைவர் வைத்துக் கொள்வதெல்லாம் அங்கே கட்டுப்படியாகாது. டிரைவர் சம்பளமே 1500 டாலர் தேவைப்படும். எனவே பிள்ளைகள், பெரியவர்கள் எல்லோருமே கார் ஓட்டப் பழகிக் கொள்கிறார்கள். அங்கு பயணம் போகிறவருக்குக் காரோட்டத் தெரிந்திருந்தால் மிகவும் நல்லது. நம் ஊரில் வாடகைச் சைக்கிள் எடுப்பது போல, ஓரிடத்தில் வாடகைக் கார் எடுத்துக்கொண்டு ஊர் சுற்றப் போய் விடலாம். வரைபடம் கையில் இருந்தால் போதும் ஊரை வலம் வந்துவிடலாம்.

அன்றாட வாழ்வில் சாதாரணத் தேவைகளுக் கெல்லாம் பிறர் கையை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் மனோபாவம் மிக மிகக்குறைவு. நம் ஊரில், எங்கேனும் வெளியிடப் பயணம் புறப்படுகையில் நம் மூட்டை முடிச்சுகளை லக்கேஜுகளை தூக்கி வரச் சுமையாள் தேடுகிறோமே, அப்படியெல்லாம் அங்கே ஆள் கிடையாது; கிடைத்தாலும் கூலி கொடுக்க முடியாது.

ஆள் தேட வேண்டாம்!

கூடுமானவரை அவரவர் காரியத்தை அவர்களே செய்துகொள்ள வேண்டும். தன் கையே தனக்கு உதவி என்பதே அங்கு தாரக மந்திரம். ‘வலிமையுடையோர் பிழைத்துக் கொள்வர்’ (ஷிuக்ஷீஸ்வீஸ்ணீறீ ஷீயீ tலீமீ திவீttமீst) என்பதே அங்கு வாழ்க்கை நெறி.

ஓர் உதாரணம் சொல்ல விரும்புகிறேன். நெடுஞ் சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் காருக்குப் பெட்ரோல் போட்டுக்கொள்ள வேண்டுமானால், நாமே உரிய இடத்தில் காரை நிறுத்திவிட்டுப் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் எந்திரம் கணக்கிட்டுக் காட்டும். உரிய தொகையைச் செலுத்திவிட்டுப் புறப்படலாம். பெட்ரோல் நிரப்பிவிட ஆளைக் கூப்பிட்டுவிட்டால் அந்தப் பணிக்காக அதிக கட்டணம் கட்டியாக வேண்டும். கார்களை நன்கு பராமரித்து வைத்துக் கொள்ளுகிறார்கள். ரிப்பேருக்காக அதிகம் செலவிடுவதில்லை. சரியாக ஓடாத காரைக் குப்பையில் தள்ளிவிட்டுப் புதுக்காரை வாங்கிக் கொள்ளுகிறார்கள்.

ரிப்பேரா? ஓரம்போ!

காரைப் பராமரித்துக் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும். அந்த நாட்டில் சாலையை, இவ்வளவு நீண்ட, பெரிய நெடுஞ்சாலையைப் பராமரித்து வரும் அழகை எளிதில் வருணித்துவிட முடியாது. அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் அங்கே நெடுஞ்சாலைகளையும் சுற்றுப்புறத்தையும் பராமரிக்கின்றனர்; பாதுகாக்கின்றனர். சாலையில் கார் பழுதாகி நின்றுவிட்டால் பிற வாகனங்களுக்கு எவ்வித இடையூறும்  இல்லாமல் அதை நான்காவது (ஓரமாயுள்ள) வழித்தடத்தில் நிறுத்தி விடுகிறார்கள். அதில் சமிக்ஞையை மாட்டிவிடுகிறார்கள். அப்படி நிறுத்திய பத்து நிமிடங்களுக்குள் (எப்படித்தான் விவரம் அறிந்து வருவார்களோ) அங்கு போலீஸ் வந்து விடுகிறது. உரிய உதவிகளுடன் காரை அப்புறப்படுத்தி விடுகிறார்கள். போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றிக் கண்காணிக்கிறார்கள். ஒருவரால் 5 நிமிடம் தடை ஏற்பட்டாலும் அது பலருக்குப் பல வகையில் பல மடங்கு தாமதத்தையும் நட்டத்தையும் ஏற்படுத்திவிடும் என்று கவனமாக இருக்கிறார்கள்.

இங்கும் அங்கும்

தனிநபர் சுதந்திரமும், சௌகரியமும் எந்த வகையிலும் பொதுநலனுக்காக ஊறாக அமையக் கூடாது. தனிநபர் சுதந்திரத்தை வெகுவாகப் போற்றி மதிக்கும் அமெரிக்கர்கள்- மிகை உணர்வுகளுக்கு முதலிடம் தந்துவரும் அமெரிக்க மக்கள் – பொது நலக் காப்பிலும் எவ்வளவு அக்கறையுடன் விழிப்புடன் உள்ளார்கள் என்பதை அங்குள்ள நெடுஞ்சாலைப் பயணங்களில் கண்டேன்.

தனது சுதந்திரத்தால் தன்னலத்தால் அடுத்தவருக்கு எந்த வகையிலும் சிறுஇடையூறுகூடச் செய்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையோடு நடந்து கொள்கிறார்கள். நம் ஊர்த் தெருக்களில் கார்களின் ஆரன் சத்தம் செவிப்பறைகளைக் கிழித்தெடுக்குமே, அப்படியெல்லாம் அங்கில்லை. என் காதில் ஆரன் சப்தமே கேட்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரும் சாலை விதிகளை மதித்து நடப்பதால் எல்லார்க்கும் வாழ்க்கை சுகமாக அமைகிறது.

வியப்பில் ஆழ்த்தியது

நான் சிங்கப்பூர் செல்லுகையில் அங்கும் சாலை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதைக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். சிங்கப்பூரில் பொது நலத்திற்கு ஊறு செய்யும் வகையில் சாலையில் குப்பையைப்  போட்டாலோ வண்டிகளைத் தடம் மாறி ஓட்டினாலோ கடுமையாகத் தண்டிக்கிறார்கள். அச்சமே அங்கு ஆசாரம். அந்த அச்சத்தால் அங்கே ஒழுங்குமுறை நிலை பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்காவில் அச்சத்திற்கு ஆட்பட்டு அடங்குவதை விட, பொறுப்பை உணர்ந்து அவரவர் ஒழுங்கை மதித்து நடக்கும் ஆக்கம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அமெரிக்காவின் உயர்வுக்கு இந்த உயர்பண்பும் காரணம் எனக் கருதினேன்.

விவேகானந்தர் பாதச் சுவட்டில்

Image result

மதுரையிலிருந்து புறப்படுமுன் – வழியனுப்பு விழாவில் விவேகானந்தர் விஜயம் பற்றிக் கேட்ட உரைகளின் நினைவுகள் – சிகாகோ நெருங்கும்போது என்னை வலம் வந்தன… சிகாகோ போய்ச் சேர்ந்தோம். நண்பர்கள் வீட்டு நல்லுபச்சாரங்களில் திக்கு முக்காடிப் போனோம்… என் நெஞ்சமெல்லாம் சிக்காகோ நகருக்கு. நம் விவேகானந்த சுவாமிகள் வந்து இந்து சமயம் பற்றிப் பேருரையாற்றிய அந்த வரலாறே வலம் வந்தது. அவர் எழுந்தருளிய, சொற்பொழிவு செய்த, பெருமைமிகு அரங்கிற்குக் கூட்டிச் சென்றார்கள். அவருடைய நினைவை மிகச்சிறப்பாக அங்கே போற்றி வரக் கேள்விப்பட்டு உவகை அடைந்தேன். விவேகானந்தர் பாதம் பட்ட இடத்தை வணங்கித் தொழுதேன். நானும் ஒரு நிமிடம் கண் மூடித் தியானித்தேன். நெஞ்சம் நெகிழ்ந்தது.

சுவாமி விவேகானந்தர் இந்து சமயப் பெருமையைப் பரப்ப இங்கே 1893-இல் வந்தார். அவர் அடிபற்றி இப்போது, திருக்குறளின் பெருமையைப் பரப்ப நானும் ஓர் எளிய வாய்ப்புப் பெற்று சிகாகோ வந்திருப்பதை நினைத்தும் என் நெஞ்சம் மகிழ்ந்தது.

“விவேகானந்த சுவாமிகள் எங்கே? நாம் எங்கே?” என மலைப்பும் அச்சமும் தோன்றினாலும் பேரருளாளரான விவேகானந்தரின் வீர வாசகங்கள் இப்போதும் “ஆகுக, ஆக்குக!” எனவும் “எழுமின் – விழிமின் – செயலாற்றுமின்” எனவும் அன்று போல் இன்றும் அறைகூவி அழைப்பது போலவே உணர்ந்தேன்.

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

     செல்லும்வா யெல்லாம் செயல்”      (33)

என்ற வள்ளுவர் வாசகம் உணர்ந்தேன். சிகாகோ நகரைச் சுற்றிப் பார்ப்பதை விட விவேகானந்தர் வருகை பற்றிய விவரங்கள் இங்கே எப்படிப் பேசப்படுகின்றன என்று அறிவதிலேயே ஆர்வம் கொண்டேன். கிடைத்த செய்திகள் சுவையானவை:

சிகாகோ சமயப் பேரவை 1893-இல் கூடியது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் திட்டத்தில் உலகக் கண்காட்சி, கொலம்பியன் பொருட்காட்சி என்றெல்லாம் அமைக்கப்பட்டன. மனித குலத்தின் செல்வப் பெருக்கை மட்டும் அல்லாமல், ‘மனித சிந்தனை’ எனும் நெடுவளத் துறையில் கண்டுள்ள முன்னேற்றமும் அப்பொருட்காட்சியில் எடுத்துக்காட்டப்பட்டன. அதன் ஒரு பகுதிதான் சமயப் பேரவை.

சமயப் பேரவைத் தலைவரான ஜான் ஹென்றி பர்ரோஸ் பாதிரியார் கிறித்தவ மதம்தான் உலகிலேயே உயரிய மதம் என்பதை நிரூபிக்கும் தோரணையில் ஆடம்பரமாகப் பேரவையைக் கூட்டினாராம். உலகெங்கும் இருந்து நூற்றுக்கணக்கான சமய, தத்துவவாதிகள் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டனராம். எல்லோரும் வந்து மேலைப் பெருமையைப் பார்த்து வாயடைத்துப் போக வேண்டும் என்பதுதான் அமைப்பாளர்களின் நோக்கமாம்.

உலகில் பரவியுள்ள யூதம், புத்தம், இஸ்லாம், இந்து, தாவோ, கன்பூசியம், ஷின்டோ, ஜராதுஷ்டிரம், கத்தோலிக்கம், புராட்டஸ்டண்ட் ஆகிய பத்து மதங்களின் பிரதிநிதிகளும் பேரவைக்கு வந்தனர்; உரையாற்றினர். பேரவை அரங்கிலேயே சிறப்பிடம் தந்து கௌரவிக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் உரையாற்ற அழைக்கப்பட்டார். ‘சகோதரிகளே! சகோதரர்களே!’ எனும் அவரது தொடக்கத்தைக் கேட்ட பேரவை உற்சாகப் புயலால் தாக்கப்பட்டாற்போல ஒருவகைப் புத்துணர்ச்சிக்கு உள்ளாயிற்று. உலகிலேயே மிக இளைய அமெரிக்க நாட்டிற்கு, உலகின் மிகப்பழைய நாட்டுத் துறவி வந்து கூறும் கருத்தை விருப்போடு கேட்கத் தயாராயிற்று.

“வெவ்வேறு இடங்களில் தோன்றும் நதிகள் எல்லாம் ஒரே கடலில் சென்று சங்கமம் ஆகின்றன. அதைப் போலப் பல்வேறு குணப்பாங்குடைய மனிதர்கள் பின்பற்றும் சமய வழிபாடும் ஓர் இறைவனையே சென்று அடைகின்றன…”

விவேகானந்தர் ஆற்றிய உரை – திருக்குறள் போல மிகமிகச் சுருக்கமானது. ரொமெயின் ரோலோ என்னும் பேரறிஞர் “தீச்சுடரைப் போன்றது அந்த உரை. ஏட்டுச் சுரைக்காய் போலப் போய்க் கொண்டிருந்த சொற்பொழிவு- களூடே விவேகானந்தர் உரை மட்டும், கேட்பவர்களின் இதயக்கனலை மூட்டிவிட்டது!” எனப் பாராட்டி உள்ளார்.

“ஒரு மதம் வெற்றியடைந்து பிறமதங்கள் அழிந்து போய்விடுவதன் மூலம் உலகில் சமய ஒற்றுமை உண்டாகிவிடும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. ஒவ்வொருவரும் மற்றவர் உணர்வுகளை ஏற்றுச் சீரணிப்பதோடு, தத்தமது தனித்தன்மையைப் பேணி, வளர்ச்சிக்கான தன் சொந்த மரபுகளின்படி உயர வேண்டும்.” என முத்தாய்ப்பு வைத்த அவரது ஆக்க உரை சகிப்புத் தன்மைக்கு உலக அங்கீகாரம் பெற்றுத்தந்தது. பாரதப் பண்பாட்டின் ஆக்கபூர்வமான அம்சங்களை உலகிற்கு அறிமுகம் செய்தது. உலகக்குடிமை உணர்வு, ஓர் உலக அரசு ஆகிய சிந்தனைகள் மலர வழிகோலியது! விவேகானந்த உரைக்கும், திருக்குறள் நெறிக்கும் உள்ள நெருங்கிய உடன்பாட்டைச் சிந்திக்க அப்பிரசுரங்கள் மிகவும் உதவின.

அங்கெல்லாம் வாழும் வள்ளுவம்!

டெய்ட்டன் நகர் சென்றடைந்தோம். நண்பர்களால் ‘நாணா’ என்று அழைக்கப்படும் திரு.பி.சி.எம். நாராயணனும், திரு.வெங்கடராமானுஜனும் அன்புள்ளத் தோடும் இன்முகத்தோடும் வரவேற்கக் காத்திருந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் எங்களது நெடிய பயணக் களைப்பெல்லாம் பறந்தோடிவிட்டன. பிராங்க்பர்ட்டில் விமானம் மாறிப்போன எங்களது லக்கேஜ் பத்திரமாக வந்து சேரும் நம்பிக்கையுடன் நண்பர்கள் வீட்டிற்குப் புறப்பட்டோம்.

நம்பிக்கை பழுதுபடவில்லை. மூன்று நாள் கழித்து எங்கள் பெட்டிகள் எல்லாம் பத்திரமாக, நாங்கள் தங்கி யிருந்த முகவரிக்கே வந்து சேர்ந்தன. அவை சரியாக வந்துவிட்டனவா என விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து அறிந்து கொண்டனர். அவர்கள் இவ்வகையில் காட்டிய அக்கறையும் பரிவும் எங்கள் நெஞ்சைத் தொட்டன. அவர்களது திறன்மிகு சேவைக்கெல்லாம் காரணமாய் இருப்பன. ஒன்றுகூடிப் பணிபுரியும் குழுமச் செயல்முறை அதற்கேற்ற புதிய நிர்வாகநெறி ஏற்பு  விரைந்து செயலாற்ற உதவும் நுட்பக் கருவிப் பயிற்சி; நேரம் போற்றிப்  பிறரை  மதித்து ஆரவாரம் இன்றிப் பணியாற்றும் கலைத் தேர்ச்சி – ஆகியனதான் என்பதை நண்பர்கள் எடுத்துச் சொன்னார்கள். சில விவரங்களைக் கேட்கச் சென்னை விமான நிலையத்தில் இரைந்து கத்திப் பேசியது போல இங்கு தேவைப்படவில்லை. பரிவோடு அமைதியாகக் கேட்டு, ‘இயலாது’ என்பதைக் கூட இங்கிதமாகத் தெரிவித்தார்கள்.

“இன்சொல் இனிதுஎன்றல் காண்பான் எவன்கொலோ

     வன்சொல் வழங்கு வது?”      (99)

என வள்ளுவர் நம் மொழியில் எழுதினார். ஆனால் அதனை நம்மைவிட, கிழக்கே ஜப்பானியரும், மேற்கே அமெரிக்கருமே போற்றி வாழுகின்றார்கள். வள்ளுவம் அங்கெல்லாம் வாழுகிறது! நன்றாக வாழுகிறது!

மாணவர் விடுதியா? நட்சத்திர ஓட்டலா?

ஒஹையோ பல்கலைக்கழக மாணவர் விடுதியில் நாங்கள் மூன்று நாட்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அது மாணவர் விடுதியாகவா தெரிந்தது? ஐந்து நட்சத்திர ஓட்டல் போல, அத்தனை வசதிகளுடன், அவ்வளவு எழிலுடன் விளங்கியது. அறிவியல் முன்னேற்ற வசதிகளை எல்லாம் அங்கே காணமுடிந்தது. அறைகளைத் திறக்கும் பூட்டு-சாவிகள் எல்லாமே கம்ப்யூட்டர் இணைப்பு உடையவை. இவ்வாறு மனிதர்களையும் இயந்திரங்களையும் கம்ப்யூட்டர் – மின்னணுப் பெட்டிகளே ஆள்கின்றன; ஆட்டிவைக்கின்றன. அவற்றின் செயல் நுட்பம் கூறும் நூல்களும் ஏடுகளுமே நடைபாதைக் கடைகள் வரை ஆக்ரமித்துள்ளன. மதிநுட்பம் நூலோடு உடையதாக மாணவப் பருவ முதலே அவர்கள் உயரப் பல நிலை ஆக்கம் அளிக்கின்றன. அப்பல்கலைக்கழக மாணவர்களிடமும் தனிமுத்திரை பொலியச் செய்திருந்தன.

“உங்களுக்கு இங்கே ஒரு நாள் முழு ஓய்வு! நாளை முதல் மாநாட்டு விருந்தினராகி விடுவீர்கள்….” என்றபடி நண்பர்கள் விடைபெற்றனர். “ஒரு நாள் முழு ஓய்வு” எனும் முதல் பகுதி தேனாக இனித்தது: “மறுநாள் மாநாடு” என்ற பிற்பகுதி ஏதோ ஒரு பாரத்தைச் சுமத்துவது போன்ற நிலைக்கு உள்ளாக்கியது.

டெய்ட்டன் நகர ஒஹையோ பல்கலைக்கழக அரங்கில் ஆண்டுதோறும் நிகழும் தமிழ் விழாவை, ஒரு வேள்வி போலவும், விரதம் போலவும் அங்குள்ள தமிழன்பர்கள் நடத்தி வருகின்றனர். டெய்ட்டனுக்குப் பல நூறு மைல்களுக்கு அப்பால் பணிபுரிபவர்கள் எல்லாம், இவ் விழாவினை ஒரு கைங்கரியமாக நடத்திட ஆண்டு தோறும் ஒன்று கூடி விடுகின்றனர். நான் பங்கேற்க அழைக்கப் பட்டிருந்த இது பதினான்காம் ஆண்டுவிழா. அதன் மூன்று நாள் கருத்தரங்கிற்குத் தமிழகத்திலிருந்து மூவர் அழைக்கப்பட்டிருந்தோம்.

மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர், பட்டிமன்ற நாவலர், சிரிப்புச் செல்வர் சாலமன் பாப்பையா அவர்களும், தமிழ்க் கவியரசு, புகழார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும், தமிழ்நாடு, திருக்குறள் பேரவைப் பொதுச் செயலரான நானுமே அம்மூவர்!

மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் கவியரசு வைரமுத்து பங்கேற்றார். பட்டிமன்ற நாயகர், பேராசிரியர் சாலமன் பாப்பையா முதல்நாள் அரங்கில் உரையாற்றினார். பயணத்தில் எனக்கு நேர்ந்த ஒருநாள் தாமதத்தால் நான் முதல்நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேராசிரியர் உரையைக் கேட்க இயலவில்லை. முன்னரே ஏற்பாடாகி யிருந்த மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் உடனே போய்விட்டார் என்று அறிந்தேன். மறுநாள் நிகழ்வில் நானும் கவியரசும் உரையாற்றினோம்.

என் உரை அமெரிக்கத் தமிழன்பர்களைப் பாராட்டுவதாக அமைந்தது அது எனக்கு மட்டும் அன்றி, விருந்தினராகச் செல்லும் எவருக்கும் இது இயல்பே ஆகும்.

“யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்

     சாந்துணையும் கல்லாத வாறு”  (397)

எனும் குறள் வழிக் கோட்பாட்டிற்கு இலக்கியமாய், முயற்சியே வாழ்வின் மூச்சாகக் கொண்ட அமெரிக்கத் தமிழர்களை மனதாரப் பாராட்டத் தொடங்கினேன். “கற்பவருக்குத் தமது சொந்த ஊரும் நாடும் போல, அவர்கள் சென்றிருந்து வாழும் தேசமும் சொந்தம் என ஏற்கப்படுவதே சிறப்பு. நீங்கள் இங்கே வந்து, இதனையே சொந்த நாடாக ஏற்று, இதன் வளத்திற்கும் மேம்பாட்டிற்கும் உங்கள் உழைப்பினை நல்கி வருகிறீர்கள். உங்கள் திறமையையும் ஞானத்தையும் வழங்கி இங்கு தலைமை பெற்றுத் திகழுகிறீர்கள். ‘என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு’ எனும் கேள்விக்கு இடமின்றி, வளரும் தொழில் நுட்பத்திறங்களை எல்லாம் உங்கள் இடையறா உழைப்பால் சாதனையாக்கிக் கொண்டுள்ளீர்கள். இந்த அனுபவக் கல்வியால் இன்று அமெரிக்க நாடு பயன்பெற்று வருவதைப் போல, நாளை நமது மண்ணும் நலம் பெற உதவி வருகிறீர்கள்.

‘எவ்வது உறைவது உலகம்’ என அறிந்து அதனோடு உறையும் ஈடுபாடே அனுபவக் கல்வி; இணக்கம் தரும் இந்த ஆக்கநெறிக் கல்வியால் நீங்கள் அனைத்திலும் ஆக்கம் பெற்றுத் திகழுகிறீர்கள். ‘உலகம் தழுவியது ஒட்பம்’ என வள்ளுவப் பெருந்தகை சொன்னது போல, இன்றைய உலகத் தேவையையும் சூழலையும் தழுவி நின்று, நட்பாக்கிக் கொண்டு, மலர்தலும் கூம்பலும் இல்லாத அறிவுத் திறத்தால் முதன்மையாக இந்த நாட்டிற்கு உங்களையும் உங்கள் உழைப்பினையும் அளித்து வருகிறீர்கள். நாடா வளமுடைய விரிந்த, மிகப்பரந்த நாடு இது என்றாலும், அதன் இன்றைய தேவைக்கு ஏற்ற பணிகளை நீங்கள் செய்து வருவதால் அரசும் மக்களும் மதிக்கும் பெருமைக்கு உரியவர்களாக விளங்குகிறீர்கள். செல்வச் சிறப்புடைய நாட்டமைவில் புற வளங்களை எல்லாம் நீங்கள் பழுதறப் பெற்று வசதியோடு வாழ்கிறீர்கள் என்றாலும், மேலைநாட்டாரைப் பொதுவாகப் பற்றியுள்ள ஒருவகை ஏக்கம், ஏதோ ஒரு தாகம் உங்களிடம் இருப்பது போல நான் உணர்கிறேன்.

புறநாகரிகத்தில் பெற்றுள்ள வளர்ச்சி, வசதி போல, உங்களது அகநாகரிகத்தில், பண்பாட்டுப் பின்னணியில், ஆன்மிக நாட்டத்தில், கலை நலத் தேட்டத்தில் எல்லாம் ஒரு முழுமை வேண்டுமென நாடி நிற்பது புலனாகிறது. அப்புலப்பாடே இம்மூன்று நாள் தமிழியல் விழாவினை நடத்த உங்களைத் தூண்டி வருகிறது எனக் கருதுகிறேன்.

திருக்குறள் உலகப் பொதுமறை, திருமால் விசுவரூபம் எடுத்து இம்மண்ணுலகை ஓரடியாலும், விண்ணுலகை மற்றொரு அடியாலும் அளந்தார் என்பது போல, வள்ளுவர் குறுகத் தரித்த குறளடிகளால், மாந்தரின் அக உலகை, உணர்வை எல்லாம் அளந்தறிந்து வழங்கியுள்ளார்.

எல்லா மனிதர்க்கும், எக்காலத்திற்கும் பொருந்துவன வாகிய, வாழ்க்கைத் தத்துவங்களைக் கொண்ட திருக்குறளை, அது பிறந்த மண்ணுக்கு உரியவர்கள் அடிக்கடி மறந்து போனாலும், பிற நாடுகளில் வாழ்பவர்கள் உச்சி மேல் வைத்துப் போற்றுகின்றனர்; இயன்ற வரை குறள் நெறிகளைப் பின்பற்றிப் பிறர் மதிக்கவும், வியக்கவும் வாழ்கின்றனர்.

இந்த நாட்டில் உள்ளோர் மதிக்கவும், இங்கே வந்து போகும் எங்களைப் போன்றோர் வியக்கவும் நீங்கள் வாழ்வதைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் கடின உழைப்பையும் இடையறா முயற்சியையும் நெஞ்சுவக்கப் பாராட்டுகிறேன். இந்த நாட்டு மக்களுக்கு இயல்பாகவே செல்வ ஆதாரங்கள் பெருகிக் கிடப்பதால், அவர்கள் ஓரளவு உழைத்தே அதிகம் சம்பாதித்து விடுகின்றனர். இங்கு வந்து வாழும் நீங்கள் ஓய்வு நேரத்தையும் குறைத்துக்கொண்டு அவர்களுக்குப் போட்டியாக ஓடிஓடி உழைக்கிறீர்கள் எனக் கேள்வியுற்றுச் சிந்தை அயர்ந்தேன். ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ எனும் வினாவுக்கு நீங்களே உரிய விடையாக விளங்கு கிறீர்கள். இந்த உழைப்பின் தரமும், திறமும் தாய்த் தமிழ்நாட்டவர்களுக்கும் பாடமாக அமையவேண்டும் என ஆசைப்படுகிறேன்.

மேற்கொண்ட துறை எதுவாயினும், தொழில் எதுவாயினும் அதிலெல்லாம் தலைமையும் பெருமையும் பெற்றுத் துலங்குகிறீர்கள். எங்களால் திருக்குறள் அறியப் படுவதைவிட, உங்களைப் போன்றோரால் அது செயல் வடிவில் பரப்பப்படுவது, நிலையான பெருமையினைப் பெற்றுத்தரும். செயலுக்கு வராத நூலால் பயனில்லை; செயலாக்கம் கொண்ட மக்கள் போற்றாத இலக்கியம் வளர்வதில்லை. போலியான – ஆசாரப் புகழ் – ஒரு நூலுக்கு நூற்றாண்டு வாழ்வைத் தரமாட்டாது.

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ எனப் பாரதியார் பாடினார். முதன்முதலாகத் திருக்குறளை, மேலைய உலகிற்கு வழங்கி அறிமுகப்படுத்தும் பணியைக் கூட நாம் செய்யவில்லை. தமிழ் உணர்வறிந்த மேலை நாட்டறிஞர்கள் எடுத்துச் சொன்ன பின்னரே திருக்குறள் பல மொழிகளில் உலகறியத் தொடங்கியது.

அமெரிக்கப் பயணம்

ஒரு நினைவோட்டம்

Image result for USA

என் திருக்குறள் பயணம், உலகப் புகழ் பெற்ற மிகப்பெரிய நாட்டினை நோக்கித் தொடங்க இருந்தது. அமெரிக்க நாட்டைப் பற்றி நான் ஏற்கெனவே அறிந்தவை, படித்தவை எல்லாம் ஒருபுறம் இருக்க, பல புதிய செய்திகளை அறிந்துகொள்ள மனம் துருவியது. அமெரிக்காவில் தொடர்புடைய, அங்கு போய் வந்த அன்பர்களிடமெல்லாம் அவசரத் தொடர்பு கொண்டேன். பயணம் போகும் புது இடத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதுதானே பயணத்திற்கு உரிய முதல்நிலை ஏற்பாடு?

அமெரிக்கத் தொடர்போடு இங்கு வாழும் அன்பர்களில் பலர் அமெரிக்க மக்களின் வாழ்வுப் போக்கில் தாம் கண்ட சாதாரணக் குறைகளையே பட்டியலிட்டுச் சொன்னார்கள். எதையும் அனுமதித்து ஏற்கும் அச்சமுதாய இயல்புகள் , பழக்கவழக்கங்கள், இன உணர்வுகள், ஊழல்கள், அரசியல் தில்லுமுல்லுகள், மதுவிலக்கு, சூதாட்டம், லாட்டரி விளைவுகள், தன் நாட்டு வளர்ச்சிக்காகப் பிறநாட்டுச் சுரண்டலையே நோக்காகக் கொண்ட தொழில் வர்த்தக நிறுவனங்கள்… இவற்றையெல்லாம் விலா வாரியாகச் சொல்லி அச்சமும் அயர்வும் ஏற்படச் செய்தார்கள். என்றாலும் அந்த அதிசய நாட்டின் ஈடிணையற்ற ஜனநாயக உயிரோட்டத்தையும், ‘இப்படியெல்லாம் அமெரிக்காவில்தான் நடக்கும்’ என்ற அபிமான உணர்வோட்டத்தையும் சுட்டிக் காட்டவும் தவறவில்லை. “ ‘அமெரிக்காவைப் பார்’ என உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே.செட்டியார் அன்று எழுதிய புத்தகத்தையும் ‘சோமலெ’ எழுதிய பயணக் கட்டுரைகளையும் படித்துவிடுமாறு நண்பர் ஒருவர் சிபாரிசு செய்தார்.

தொழில், வாணிபப் பயணமாகப் போனால் லாபநட்டக் கணக்கோடு நான் ஆயத்தமாக வேண்டியது அவசியம். ஆனால் நான் மேற்கொள்ளப் போவதோ தமிழ்ப் பயணம். அதிலும் குறிப்பாக, திருக்குறள் பயணம். எனக்கு இவ்விரண்டின் நிலைபேறு பற்றிய முன்னறிவு கொஞ்சமாவது வேண்டும் எனக் கருதினேன்.

அமெரிக்காவில் வாழும் தமிழர்களைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தேன். ஆனால் அமெரிக்காவில் தமிழ் எப்படி வாழுகிறது என அறிவதல்லவா முக்கியம்?

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையோடு தொடர்பு கொண்டேன். டாக்டர் தமிழண்ணல், பேராசிரியர் சு.குழந்தைநாதன் தொகுத்து எழுதிய ‘உலகத் தமிழ்’ நூல் பற்றிய பல விவரங்களை நான் பெற முடிந்தது… தமிழ் அரிச்சுவடிப் பாடம் கற்பிப்பதைவிட பட்டப்படிப்பு வரை பயில அங்கு அளிக்கப்படும் வசதி வாய்ப்புக்களையும், தமிழ் மன்ற நடவடிக்கைகளையும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆசிய மொழி, இலக்கியத்துறை எனும் தனிப்பிரிவே அங்கு உள்ளது.

அமெரிக்காவில் இப்போது தமிழ், தெலுங்கு எனும் இரு திராவிட மொழிகளில் மட்டுமே பாடங்கள் தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வருகின்றன. கன்னடமும், மலையாளமும் அவ்வப்போது கற்பிக்கப்படுகின்றன. வாஷிங்டனிலும், சிக்காகோ பல்கலைக்கழகத்திலும் கன்னடம் கற்பிக்கப் படுகின்றது. பென்சில்வேனியாவில் மலையாளம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. வாஷிங்டன், பென்சில்வேனியா, விஸ்கோன்சின், மிக்ஸிகன், கலிபோர்னியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. டெக்சாஸ் கோர்வல் பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு நேரும்போது நடக்கின்றன. விஸ்கோன்சின், டெக்சாஸ் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் பென்சில்வேனியாவில் ஒழுங்காகவும் கற்பிக்கப்படும் மொழிப் பாடங்கள் முழுமையான பாடத் திட்டத்துடன் நடத்தப்படுகின்றன. அதாவது, தெரிந்தெடுத்துக் கொள்ளப்படும் மொழியின் இலக்கியம் அல்லது மொழியியலில்  எம்.ஏ.யும், பி.எச்.டி.யும் பெறும் அளவிற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுப் பயிற்சியும் தனித்துறை ஆய்வும் அளிக்கப்படுகின்றன.

பிற கல்வி நிறுவனங்கள் இலக்கிய ஆய்வுகளில் மிகுதியும் ஈடுபட்டு இருப்பதால் பென்சில்வேனியா, வாஷிங்டன் பல்கலைக்கழகங்கள் திராவிட மொழியியலில் சிறப்புப் பயிற்சிகளை அளிக்கின்றன. கோர்வல் டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மொழியியலில் மிகுந்த நாட்டம் உண்டு; ஆனால் விஸ்கோன்சின், கலிபோர்னியா கழகத்தவர்களுக்கு இலக்கிய ஆய்வுகளிலேயே ஆர்வம் மிகுதி. சிகாகோவில் இரண்டுக்குமே ஆக்கம் தரப்படுகின்றது.

இயல்பாகப் பாட வகுப்புகளை வழக்கமாக நடத்தி வரும் பல்கலைக்கழகங்களில் தொடக்கநிலை வகுப்புகளில் ஆறு மாணவர்கள் வரை சேருவர். மேல்வகுப்புகளில் இந்த எண்ணிக்கை குறைவது உண்டு. வாஷிங்டன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவின் தொடக்க நிலையில், மூன்று மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் மொழியியல், தொல்பொருள் ஆய்வு முதலிய இதர துறைகளில் மேல்நிலை ஆய்வு செய்யும் பட்ட வகுப்பு மாணவர்களும் உள்ளனர். மொழியியல், இலக்கியம் மட்டுமன்றி, தென்னிந்திய வரலாறு, சமயம், இசை, நுண்கலை, அரசியல், திணையியல் முதலிய இதர துறைகளில் ஆர்வம் உள்ளோரும் வாஷிங்டன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவில் சேர்ந்திருப்பர். இவர்கள், தமிழை ஓரளவு கற்ற பின்னர்த் தமக்குப் பிடித்தமான துறையில் பட்டம் பெறத் தகுதியுறுவர்”.

பல்கலைக்கழகங்கள், பள்ளிகளை விட, அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் தன்னார்வத் தமிழ்ச் சங்கங்களும் அமைப்புகளும் ஒன்றுகூடி, தமிழ் இலக்கிய வேள்வி நடத்தி வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் சிக்காகோவில் உள்ள தமிழ்நாடு அறக்கட்டளை  17 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் இதழ் நடத்தி, தமிழர் உள்ளங்களையும், இல்லங்களையும் ஒரு சரமாக இணைத்து ஒப்பற்ற ஆக்கப்பணி புரிந்து வருகின்றது. சென்னையில் ஒரு கிளையினை நிறுவும் வகையில் உயர்ந்து நிற்கும் தமிழ்த்தொண்டர் அமைப்பு இது. திரு.மோகனன், இளங்கோவன், டாக்டர் ரெஜி ஜான், டாக்டர் சவரிமுத்து, கண்ணப்பன், டாக்டர் பி.ஜி.பெரியசாமி, திருமதி. வெங்கடேஸ்வரி சுப்ரமணியம் முதலிய தமிழ் நெஞ்சங்கள், அமெரிக்க நாட்டில் வாழும் தமிழ்க் குடும்பங்களுக்கும் தாயகத்திற்கும் உறவுப் பாலங்களைக் கட்டி வருகின்றன. அமெரிக்கத் தமிழர்கள் பொங்கல் உள்ளிட்ட தமிழ் விழாக்களையும், தீபாவளி, நவராத்திரி முதலிய பண்டிகைகளையும் கூடிக் கொண்டாடி நமது பண்பாட்டுக் கோலங்களைத் தூவி வருகின்றனர். இக்கோல வடிவங்களையெல்லாம் கண்டு மகிழும் பயணமாக என் திருக்குறள் உலா தொடங்கியது. தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அருள் ஆசியுடன் அன்பர்கள் அணி திரண்டு நல்கிடும் வழியனுப்புதலுடன் மதுரையிலிருந்து புறப்பட ஆயத்தமானேன்.

பயணப் பரபரப்பு

பயணம் போவதென்றால் யாருக்கும் ஒருவகை பரபரப்பு உணர்வு ஏற்பட்டே தீரும். பள்ளிப் பருவத்துக் கல்விப் பயணமானாலும் சரி, பிள்ளைப் பருவத்து இன்பச் சுற்றுலா ஆயினும் சரி, பின்னைப் பருவத்துக் குடும்ப சமூக நிகழ்ச்சிப் பயணம் ஆயினும் சரி – வெளியூர் போவதென்றாலே மனமும் பொழுதும் வேகமாக ஓடத் தொடங்கிவிடும். சொந்த வாகன வசதி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, போக வேண்டிய பயணம் பற்றிய சிந்தனை மனதை அரிக்கத் தொடங்கிவிடும். அதிலும் தொலை தூரப் பயணம் என்றால் கேட்கவே வேண்டாம். பலமுறை போய்வந்த நாடாக இருந்தாலும் கூட, பரபரப்பையும் மீறியதொரு பதைபதைப்பையும் உண்டாக்கியே தீரும்.

எனக்கும் அப்படித்தான்! பல வெளிநாடுகளுக்கு முன்னர் போய்வந்த அனுபவம் இருந்தும் இந்தத் திருக்குறள் பயணம் நெடிய எதிர்பார்ப்புகளை என்னுள் உருவாக்குவது போன்ற பிரமை ஏற்பட்டுவிட்டது. “அவை, பயணங்கள் அல்ல; பல்கலைக்கழகங்கள்” என எங்கேயோ படித்த வாசகம் – எனக்குள்ளே வலம் வந்து – இந்தப் பயணத்தைப் பல்கலைக்கழகமாக்கத் திட்டமிடும் தீர்மானத்தை முன்மொழிந்து கொண்டிருந்தது. அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளைப் பற்றிய விவரங்களைப் போதுமான அளவுக்கு திரட்டிக் கொள்ளத் தூண்டிவிட்டது. நண்பர்கள், அன்பர்களின் பெயர்ப் பட்டியலை, முகவரியை எல்லாம் தேடி எடுத்துக்கொள்ள நேரம் போதவில்லை எனும் நெருக்கடி ஏற்பட்டது.

Image result for bharathiyar

 

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என மகாகவி அன்றே பாடினான். தமிழ்நாடு வான்புகழ் பெற்றிட வையகத்துக்கு எல்லாம் வள்ளுவச் செல்வத்தை வழங்கினாலே போதும் என்பது அவனது கணிப்பு. உலகினுக்கு வள்ளுவத்தை நல்கும் பணியில் தமிழ்நாட்டு மக்கள் ஊன்றி நின்றிருக்க வேண்டும். விழா எடுக்கும் போது மட்டும் ஊர்கூட்டி முழக்கமிட்டுவிட்டு, அப்புறம் அயர்ந்து போய்விடுவதுதான் நம் வழக்கம். ஆனால், அயல்நாடுகளில் வாழும் தமிழ் அன்பர்கள் தாமும் அயர்வதில்லை. நம்மையும் அயரவிடுவதில்லை! அதிலும், அமெரிக்கத் தமிழர்களின் ஆர்வம் – அங்குள்ள ‘எம்பயர் கட்டிடம்’ போல் உயர்ந்தது; இங்குள்ள இமயம் போல் ஓங்கி நிற்பது.

வட அமெரிக்காவில் உள்ள டெய்டன் – ஆகாய விமானம் கட்டும் தொழில் சிறந்த பெரும் நகரம். விமான வடிவமைப்பு, கட்டுமானம், கணிப்பொறி நுட்பம் ஆகிய துறைகளில் நம் நாட்டவர்கள் பலர் அங்கு பொறுப்பேற்றுள்ளமை நமக்குப் பெருமை தரும் விஷயம். அவர்களில் கணிசமான அளவு தமிழ்நாட்டவர்களும் உள்ளனர்.

மேல்நாட்டுத் தமிழர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடிட உறவுப்பாலம் அமைப்பன தமிழ்… தமிழ்ப் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ்க் கலைகள்… – இந்நான்கையும் சால்புடைய தூண்களாக்கிக் கொண்டு, அமெரிக்கத் தமிழன்பர்கள் அறக்கட்டளையே அங்கு நிறுவிவிட்டனர்.

தமிழ்நாடு(ம்) அறக்கட்டளை

 

‘தமிழ்நாடு அறக்கட்டளை’ எனும் கூட்டமைப்பு அமெரிக்கத் தமிழ் அன்பர்களின் சேவைத் திறத்திற்கு எடுத்துக்காட்டானதொரு மணிமகுடம். அமெரிக்கப் பெருநாட்டின் கிழக்கு மேற்குக் கரையோர நகரங்களிலும் உள்நாட்டுப் பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கில் பாரதத் திருநாட்டினர் பரவி வாழ்கின்றனர். இவர்களுள் தமிழ்நாட்டவர் அங்கும் இங்குமாகச் சிதறி இருக்கின்றனர். இவர்களையெல்லாம் ஒரு சரமாக இணைத்துக் காணும்- இசைவித்துப் பேணும் முயற்சிகள் ஆண்டாண்டுகளாக அரும்பு கட்டி வந்துள்ளன.

1974-இல் தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு அறக்கட்டளை’ நல்ல அடித்தளத்தோடும், நயந்தரு ஆக்கத்திட்டத்தோடும் பணியாற்றி வருகிறது. சிக்காகோ முதலிய நகர்களில் தமிழ்ச் சங்கங்கள் உண்டு என்றாலும் அனைத்தையும் ஒருங்கே இணைத்துப் பார்க்க ஏற்றதொரு பொது அமைப்பு தேவைப்பட்டது. அந்த நெடிய தேவையை நிறைவு செய்ய ஊன்றப்பட்ட தமிழ்நாடு அறக்கட்டளைக்கு முக்கியமான நகரங்களில் எல்லாம் கிளைகள் உண்டு. சர்வதேசச் சுழற்கழகம், அரிமா சங்கம் என்பன போல, அன்புத் தோழமையும், மனித நேயத் தொண்டையும் இரு கால்கள் எனக் கொண்டு தமிழ்நாடு அறக்கட்டளையும் நடைபோட்டு வந்தது.

தமிழ்நாடு அறக்கட்டளையின் முதன்மை நோக்கம் அமெரிக்காவில் வாழும் தமிழர்களிடையே நெருக்கமான உறவினை ஏற்படுத்துவது; இந்த உறவினை வலுப்படுத்தும் புத்தாண்டு, பொங்கல், நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் விழாக்களை நடத்தி விருந்தயர்வது; அனைத்துச் சமயத்தவர்க்கும் பொது வீடாக – நல்லிணக்க மன்றமாக- அறக்கட்டளையை நிர்வகிப்பது; பல குடும்பங்களை ஒன்றாகக் கூட்டிக்கொண்டு சிறு சுற்றுலாப் போவது; நிலா விருந்து பரிமாறிக்கொள்வது; போட்டிப் பந்தயங்கள் நடத்துவது; நமது கலாச்சாரத்தைப் பிறர் புரிந்து பாராட்ட வாழ்ந்து காட்டுவது.

“அயல்நாடு எதுவாயினும் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் தமக்குள்ளே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு வகைச் சுயநலம் சார்ந்த தற்காப்பு சங்க(ம)ம்தான் இது! இதில் என்ன புதுமை இருக்கிறது?” என்று கேட்க அமெரிக்க நாட்டுத் தமிழ் அறக்கட்டளையினர் வாய்ப்பு அளிக்கவில்லை.

அறக்கட்டளையின் விழுமிய நோக்கம் தாயகத்துத் தமிழ் மக்களுக்குத் தன்னால் ஆன உயர் கொடைகளை நல்க முற்படுவது. அமெரிக்கத் தமிழர்களிடையே நிதி திரட்டி, அதனைக் கொண்டு தமிழ்நாட்டில் விழுமிய சேவைத் திட்டத்தைச் செயலாக்குவதே அதன் புறவடிவம். அங்கு நிதி தொகுக்கவும் இங்கு அது குடை கவிக்கவும் போதிய ஆக்கம் தரக்கூடிய சான்றோர்கள், அறங்காவலர் களாகப் பொறுப்பேற்றனர். டாக்டர் ஜி.பழனிபெரிய சாமி, டாக்டர் இளங்கோவன், சி.கே.மோகனன், டாக்டர் சவரிமுத்து, டாக்டர் ஜானகிராமன், டாக்டர் கோவிந்தன், டாக்டர் நல்லதம்பி, திரு.துக்காராம், டாக்டர் பி.அமரன், திருமதி வெங்டேசுவரி, திரு.ரவிசங்கர், திரு.ஏ.எம்.ராஜேந்திரன், திரு டி.சிவசைலம், டாக்டர் சி.எஸ்.சுந்தரம், டாக்டர் ஆனந்தகிருஷ்ணன், டாக்டர் பொன்னப்பன் என நாள்தோறும் திரண்டுவரும் தொண்டர் அணியினர் அமெரிக்காவில் அறம் வளர்க்கும் நாயகர்களாக விளங்கு கின்றார்கள்.

தமிழ்நாட்டில் ஆயிரம்ஆயிரம் பேர் பயன்பெற விழுதூன்றப் போகும் ஆலமரக் கன்றுகளைப் பேணும் பொறுப்பேற்க உவந்து இசைந்த சான்றோர் வரிசையும் பெரிது; அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம்  நீதியரசர் வேணுகோபால், அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எம்.அனந்தகிருஷ்ணன், திரு.சந்திரன்… அமெரிக்கத் தமிழன்பர்களது அறக்கட்டளைகள் பல வகை; சிறிதும் பெரிதுமாக எண்ணற்றவை; தனி நபர் உதவியாகவும் பலர் சேர்ந்து வழங்கும் கொடையாகவும் நூற்றுக் கணக்கானவை. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல்லார் பெயரால் பரிசுக் கட்டளைகள், தமிழ்நாட்டில் பள்ளிக் கட்டிட நிதிகள், ஆன்மீக, ஆசிரம தர்மங்கள், மருத்துவ மனைக் கொடைகள், ஈழத் தமிழர் வாழ்வு நலன்கள் என்றெல்லாம் வாரி வழங்கி வருபவை.

Image result for thirukural manimozhian

ஆனால் தமிழ்நாடு அறக்கட்டளை இந்த எல்லைகளையும் தாண்டியது. என்றும் பயன்தரும் வேலைத் திட்டங்களை தமிழ்நாட்டில் செயலாக்கும் கருத்துடையது. அவற்றுள் முக்கியமானது; சென்னையில் பல லட்சம் டாலர் செலவீட்டில் உருவாகிவரும் தொழில் நுட்பக் கேந்திரம் எனும் தொழில் நுட்பப் பரிமாற்றப் பயிற்சி மையத்தைச் சென்னையில் நிறுவுவது. இது தமிழ்நாட்டு இளைஞர்கள் அமெரிக்காவில் நாள்தோறும் வளர்ந்துவரும் புதுப்புதுத் தொழில் நுட்பங்களை எல்லாம் அறிந்து கொள்ள வாயில்களைத் திறந்து வைக்கும். நிகரான அறிவியல் சிந்தனைகள் இங்கும் சமகாலச் சாதனையாகப் பாத்தி கட்டும். இது எளிய காரியம் இல்லை. பலரது மகத்தான கூட்டு முயற்சியால் மட்டுமே இதனைச் சாதிக்க முடியும்.

சாதனைப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ள பேரமைப்பினர் விடுத்துள்ள அழைப்பினை ஏற்பது எத்தகைய பெருமை? அந்தப் பெருமையை எனக்குத் திருக்குறள் அல்லவா பெற்றுத் தந்துவிட்டது!

குறள் நிலா முற்றம் 13

ஒருங்கிணைப்பாளர்

“உபதேசம் வெறும் ஊறுகாய் போல மட்டும் இருந்து விடலாமா? பற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளரவேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.”

அரசு அதிகாரி

“பசிப்பிணியைப் போக்க அரசு பல திட்டங்களைப் போட்டு வருகின்றது. பசிப் பிரச்சினை மற்றும் வேலை இல்லாத் திண்டாட்டம் என்பன பெருகும் மக்கள் தொகையாலும் இதர நிர்வாக முறைகளாலும் தவிர்க்க முடியாத பிரச்சினைகளாக நீடிக்கின்றன. இதைச் சமாளிக்க அரசு வரிகளைக் கூட்டினால் எதிர்ப்பு வலுக்கிறது.”

பேராசிரியர்

“இப்போதெல்லாம் குடியாட்சி செலுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் அரசு பெரும்பாலும் வரிகளை மக்கள் ஒரு கடமையாகத் தாமாக முன்வந்து செலுத்த ஊக்கம் தருவதில்லை. கசக்கிப் பிழிய முற்படுவதால் மக்களில் பலர் வரி கட்டாது ஏமாற்றப் பார்க்கிறார்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் பொதுவுடைமைச் சமுதாயம் என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே நீடிக்கிறது. எனவே வரிகளைப் பெருக்கி, வசதிகளைப் பெருக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்படுகின்றது. அவ்வாறு வரி தண்டுவதிலும் ஒருவகை மனிதநேயப் பாங்கு இருக்க வேண்டும் என்பது வள்ளுவ நியதி.. அனைவருக்கும் தெரிந்த குறள்தான் அது.

‘வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

     கோலொடு நின்றான் இரவு.’         (552)

ஆட்சி அதிகாரத்தோடு, முறை கடந்து பொருளைக் கைக்கொள்ளுவது, பாதை நடுவே வேலோடு நின்ற கள்வன், பொருளைக் கொடு என அச்சுறுத்திப் பொருளைப் பறித்துச் செல்வதைப் போன்றது என அடித்துச் சொல்கிறார் வள்ளுவர். நல்லாட்சி பற்றிப் பேசும் போது, வெற்றிதருவது கோல் எனப் பேசிய வள்ளுவர், கொடுங்கோன்மையால் கசக்கிப் பிழிந்து வரிபெறுவது அருளற்ற ஆட்சி, அது நிலத்துக்குச் சுமை, கொள்ளையர் ஆட்சி என்றெல்லாம் சாடுகிறார்.”

பெரும்புலவர்

“நன்முறையில் வரி பெறுவதையும் தீய வழியில் வரி பறிப்பதையும் பற்றிய புறநானூற்றுப் பாடலில் வரும் யானை பற்றிய உவமையை இங்கே நினைவில் கொள்ளலாம். ஒருமா பரப்பளவுள்ள நிலமாயினும் அதில் விளையும் நெல்லை அளந்து யானைக்குத் தீனியாகப் போட்டால், அது பல நாட்களுக்கு வேளை தவறா உணவாக நீடிக்கும். அதை விடுத்து, யானையை அவிழ்த்துவிட்டு, நீயே போய் உண்டு கொள்ளலாம் என விட்டோமானால் அதன் வாயில் புகும் நெற்கதிரை விடக் காலால் மிதிபட்டு அழியும் பயிரே பல மடங்கு ஆகும். நூறு செறு நிலப்பரப்பில் விளைந்தவை எல்லாம் ஓரிரு நாளில் பாழாகிவிடும். எனவே அரசன் முறையறிந்து நெறி பிறழாது வரிகளைப் பெற வேண்டும் எனும் அந்தப் பாடலே வள்ளுவத்திலும் எதிரொலிக்கிறது.”

அரசு அதிகாரி

“அந்தப் பாட்டில் புலவர் நன்கு முற்றிக் காயும் நிலையில் உள்ள நெல்லைக் குறித்துள்ளார். ஆனால் இன்று நம் வயிறு காய்ந்தாலும் வரியைக் கட்டியாக வேண்டிய கடுமையான நிலையன்றோ நீடிக்கிறது? இதெல்லாம் நல்லாட்சிக்கு ஏற்றதா என்ன? இந்த ஆட்சி அமைப்பின் மீது மக்கள் எப்படி நம்பிக்கையோ, பற்றோ கொள்ள முடியும்?”

பேராசிரியர்

“பொதுவுடைமை அரசே ஆயினும் வரி இன்றி ஆட்சி செலுத்த முடியாது. பொதுவுடைமை என்பதும் உலகின் ஒரு சில நாடுகளில் மட்டும் பந்தலிட்டுப் படருவதால் பயன்இல்லை. உள்நாட்டுப் பொதுவுடைமை, உலகப் பொதுவுடைமையாதல் வேண்டும். ‘ஓருலகம்’ ) என வெண்டல் வில்கி எனும் அறிஞர் ஒருவர் கண்ட கனவும், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனும் தமிழ்ச் சான்றோர் கூறியனவும், தன்னலம் தீர்ந்த, சண்டையில்லாததாய் உள்ள சமுதாயமும் உருவாகக்கூடிய பாதையை விடுத்து உலக சமுதாயம் திசை மாறியே போய்க்கொண்டிருக்கிறது. இதில் பசிப்பிணியை அறவே நீக்க ஒவ்வொருவர் கையிலும் மணிமேகலையின் அட்சயப் பாத்திரம் இருந்தாக வேண்டும்.”

ஒருவர் இடைமறிக்க ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் உங்கள் கருத்தைச் சொல்லி முடியுங்கள்.”

பேராசிரியர்

“‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக’ என்று அன்று மணிமேகலை செய்தாள், இன்று நம் பாரதப் பிரதமரும் பசியை அறவே நீக்கப் பல அறிக்கைகளை வெளியிடுகிறார். பசியை நீக்கப் பொய்யான பொதுவுடைமைக் கோஷத்தால் முடியாது. உண்மையான நல்லாட்சித் திட்டங்கள் வேண்டும். அரசுத் திட்டங்கள் மட்டும் பசியைப் போக்கிவிடாது. இந்தப் பாரகம் உள்ள வரை தனிமனித நேயமும் உதவிக் கரம் நீட்டியாக வேண்டும். அதுதான் நல்ல நாடு.”

ஒருங்கிணைப்பாளர்

“‘உறுபசியும் ஓவாப் பிணியும், செறுபகையும் சேராதியல்வதே’ (734) நல்ல நாட்டின் இலக்கணம் என்பது வள்ளுவம். அத்துடன் புலவர் ஐயா சுட்டிக்காட்டிய, ஒப்புரவு உள்ளமும் மக்களிடம் நிலை கொண்டாக வேண்டும். அதற்கான முன் முயற்சியாகத்தான் ‘செய்க பொருளை’ எனக் கட்டளையிட்டார் வள்ளுவர். அவர் ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என எச்சரித்தார்; இல்லாதார்க்கு மனமுவந்து செல்வராக இருப்போர் ஈந்து உவக்கும் இன்பம் பெறவேண்டும் எனத் தூண்டினார்.”

புலவர் செல்வகணபதி

“அப்படியெல்லாம் செல்வரும் எளிதில் ஈயும் மனத்தோடு நடப்பதில்லை. விளம்பரக் கொடையே நடக்கிறது. கட்டாய வசூலே நாடகமாகிறது. ‘ஈர்ங்கை விதிரார் கயவர், கொடிறுடைக்கும் கூன் கையர் அல்லாதார்க்கு’ என்றது  போல, கயவர்களுக்குப் பயந்து தருகிறார்கள். அந்தச் செல்வர்கள் ‘செல்வத்துப் பயனே ஈதல்’ எனப் பெரும்பாலும் நினைப்பதில்லை.”

இடைமறித்த ஒருவர்

“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.”

புலவர்

“அப்படியே தீயவர் பெருகினால், சமூகத்தில் புரட்சிதான் வெடிக்கும். பொய்யும் புரட்டும் தான் வளரும்.”

தொழிலதிபர் லெ.நாராயணன் செட்டியார்

“புரட்சியால் விளையும் போட்டி ஆட்சியை விட, மனமாற்றத்தால் நிலவும் நல்லாட்சி முறையே நல்ல பயனை நீடித்துத் தரும். சுதந்திரம் பெற்ற நாள் முதல், நம்மோடு உரிமை பெற்ற பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் தேசத்தில் பரவலாக நல்லாட்சி முறையே நீடித்திருக்கிறது என ஏற்பதில் தவறில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“நாடு என்றால் அது எப்படி அமைந்திருக்க வேண்டும், அதனை ஆளும் நல்லாட்சியின் இலக்கணம் என்ன, அரசர்- அமைச்சர் ஆகியோரின் கடமைப் பொறுப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் வள்ளுவர் ஓர் அரசியல் பொருளாதார மேதையாகவே நின்று பேசியுள்ளார்.”

ஒருவர்

“அவற்றுள் பொருத்தமான சிலவற்றைப் பற்றிச் சிந்திக்கலாமே?”

மற்றொருவர்

“பேசிப் பேசிப் புளித்துப்போன அரசியலைப் பற்றி இங்கேயும் பேசி நேரத்தை வீணாக்க வேண்டுமா? அந்தச் சாக்கடைகளை நாமும் தோண்ட வேண்டுமா?”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசான் வ.சுப.மா. அவர்கள் அப்படி நினைக்கவில்லை. பலருக்கும் வாக்குரிமையும் கடமைப் பொறுப்பும் உள்ள குடியாட்சி முறையில் நலன், தீங்கு என்பவை தராசின் இரு தட்டுக்களைப் போன்றவை. ஆனால், வள்ளுவர் வகுத்த அரசு நெறி எவ்வரசுக்கும்- எக்காலத்திற்கும் – அன்பர் குறிப்பிட்டது போன்று இன்றைய அரசியல் சாக்கடையா, சாக்காடா… என்ற அந்த நிலைக்கும் பொருந்தவே செய்யும்.”

அரசு அதிகாரி

“இன்று அரசியல் தலையிடாத துறையே இல்லை. இன்று பேசிப் பேசிப் பொழுதை வீணடிப்பதுதான் அரசியல் கலாச்சாரம். தன் கட்சியை மலையளவு ஏற்றுதல், பிற கட்சியினை முடிந்த அளவு தூற்றுதல், வசவு நடை, வம்பிழுப்பு, ஆகாக் கத்தல், அடியாள் சேர்த்தல் – இத்தகைய போலிக் குடியாட்சியைப் பற்றி – அது வள்ளுவத்தோடு பொருந்துமா என்பது பற்றி – நாம் பேசிப் பயன் என்ன? வாக்களிக்கும் சக்தி படைத்த பெரும்பான்மையும் அரசியலே புரியாத மக்களிடையே அல்லவா போய்ப் பேச வேண்டும்!”

புலவர்

“போய்ப் பேச வேண்டுமா? பெரிய பொய் பேச வேண்டுமா? (சிரிப்பலை) குடியாட்சி முறைக்கே அடித்தளமான தேர்தல் முறையே விலைபேசப்படும்போது, அரசியல் வியாபாரம் பற்றி நாம் பேரம் பேசிப் பயன் என்ன? உலகமே வியாபார மயமாகி வருகிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“உலகம் ஒன்றெனக் கருதும் காலம் எப்போதோ தோன்றிவிட்டது; என்றாலும், அது நனவாக நடைமுறைப்பட எத்தனைக் காலம் ஆகுமோ தெரியாது. ஆனால் எவரும் உலகக் குடிமக்களாகப் பிறப்பதில்லை. ஒருநாட்டு, ஒரு வீட்டு உரிமைக் குடிமகனாகவே ஒருவன் பிறக்கிறான். எனவேதான் வள்ளுவர் நாடு – வேந்து – அரசு என்றெல்லாம் பொதுநிலை அரச அறங்கள் கூறியதாகக் கருதுவோம்.

நாடு என்றால் ஒரு நிலவரையறை இருப்பது போலவே வேந்தளவு அதாவது இறையாண்மை (ஷிஷீஸ்மீக்ஷீமீவீரீஸீtஹ்) எனும் அரசாளுமை இருக்க வேண்டும் என முதலில் விதிக்கிறது. இத்தகைய நாட்டுத் தலைவருக்கு என்ன வேண்டும்? ‘தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன் ஆள்பவர்க்கு’ என்றார் வள்ளுவர்.”

ஓரன்பர்

“இப்போதெல்லாம் தூங்குவதற்கே சட்டமன்றம் போகிறார்கள்.”

மற்றொருவர்

“குறட்டை விடாமல் தூங்கலாம் என்று ஒருமுறை சபாநாயகர்த் தீர்ப்பு வந்ததே…!”

வேறொருவர்

“நம் நிலா முற்ற அவையில் யாரும் குறட்டை விடவில்லையே!” (சிரிப்பலை),

ஒருங்கிணைப்பாளர்

“‘தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்விலாச் செல்வரும்’ என்றெல்லாம் ஒரு நாட்டிற்குத் தேவையான வள்ளுவ இலக்கணங்களை இங்கே நாம் எண்ணுவதை விட, இன்றைய குடியாட்சி முறையில் புகுந்துவிட்ட கேடுகளை வள்ளுவர் அப்போதே வரிசைப்படுத்தியுள்ள அருமையை நினைவுகூர்ந்து, திருந்தவோ, திருத்தவோ சிந்திக்கலாம்.”

வருமான வரித் துறை ஆணையர்

“தேர்தலில் மிகுபெரும்பான்மை பெற்றுவிட்ட தோரணையால் – எல்லை மீறிய வலிமையால் – நல்லாட்சி புரிவதை விடுத்து அடிக்கடி மனம் போலக் கடுமையான சட்டங்களை இயற்றுவதும், தண்டனைகளை விதிப்பதும் நடைமுறையில் உள்ளனவே?”

ஒருங்கிணைப்பாளர்

“‘கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன், அடுமுரண் தேய்க்கும் அரம்’ (567) எனும் குறளைத் தானே சொல்லுகிறீர்கள்?”

பெரும்புலவர்

“அல்லற்பட்டு ஆற்றாது அழும் நிலை மக்களுக்கு ஏற்பட்டால், அதுவே ஆட்சிச் செருக்கை அழிக்கும் படை ஆகிவிடுமாம்.”

இளைஞர் ஒருவர்

“‘பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என எங்கள் பாரதிக் கவிஞன் ஏகாதிபத்தியத்தையே ஏளனம் செய்து பாடி விட்டான்” (குரல்கள் : சபாஷ் தம்பி – கைதட்டல்)

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் வகுத்த அரசு குடிமக்களுக்கு முதன்மை மதிப்பும் பாதுகாப்பும் தருவது; குடி தழுவிக் கோலோச்சுவது; முறை செய்து காப்பாற்ற வேண்டியது; காட்சிக்கு எளிமையாய் விளங்க வேண்டியது; உள்ளுவதெல்லாம் மக்கள் நலனே கருதி உயர்வாக உள்ளும் பொறுப்புடையது; பகை நட்பாகக் கொண்டு ஒழுக, உறுபசி, ஓவாப் பிணி என்பன சேராமல், நேராமல் பேண வேண்டியது; எதிர்காலக் குறிக்கோளுடனும் நிகழ்காலத் திட்டங்களுடனும் நன்கு செயலாற்ற வேண்டியது.”

அரசு அதிகாரி

“ஆனால் எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சிகள் போல உள்நாட்டிலேயே போர்க்களங்கள் அமைத்து அரசை இயங்கவிடாமல் செய்வது தான் அன்றாடக் காட்சிகள்.”

பேராசிரியர்

“எதிர்க்கட்சி வலுவாக இல்லாத குடி ஆட்சிமுறை, அங்குசம் இல்லாத யானைச் சவாரி போன்றது.”

ஒரு மாணவி

“‘இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்’ என்பது வள்ளுவர் ஏற்ற எதிர்நிலைத் தேவை.”

ஒருங்கிணைப்பாளர்

“‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் கொல் குறும்பும் இல்லது நாடு’ (735).

‘வேந்தலைக்கும்’ என வள்ளுவர் எச்சரித்தது குடியாட்சி முறையில் கொடி கொடியாய்ப் படர்ந்து வருவது நல்லதில்லை.”

பெரும்புலவர்

“ஒரு கட்சிக்குள்ளே பல குழுக்கள், உட்பகைகள், வெளிப்போர்கள், கொல் குறும்புகள்… இந்தப் ‘பல்குழு’, ‘கொல் குறும்பு’ எனும் தொடராட்சி வள்ளுவருக்கே கைவந்த கலை.”

 

ஓரன்பர்

“புலவர் ஐயா கொல் குறும்பில் நுழைந்து விட்டார். இது நீடித்தால் குழப்பம் தான்.”

ஒருங்கிணைப்பாளர்

“என்னதான் பல்குழு, கொல் குறும்புகள் இருப்பினும் அரசாள்வோர் – தக்கார் இனத்தராய், தானொழுக வல்லாராய் இருந்தால் போதுமே! ‘ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து, யார் மாட்டும் தேர்ந்து செய்வதே முறை’ என அறிந்து செயல்பட்டால் நல்லதாயிற்றே! நாள்தோறும் நாடி முறை செய்யாவிட்டால் நாடும் சீரழியும் எனப் புரிந்து கொண்டால் போதுமே!”

குறள் நிலா முற்றம் 12

ஒருங்கிணைப்பாளர்

“குறளில் ‘நட்பு’ எனும் மானுடப் பொது உறவு பற்றி வரும் ஐந்து அதிகாரங்கள் ஒருபுறம் இருக்க, இருமுறை வரும் அதிகாரப் பெயர் ஒன்றும் உள்ளது. அது என்ன என்று சொல்கிறீர்களா?”

(அவையில் சற்று அமைதி)

“நானே சொல்லிவிடுகிறேன். அது தான் குறிப்பறிதல்!”

இளைஞர் ஒருவர்

“செம்மல் லேசாக ஜாடை காட்டியிருந்தால், இந்தத் தலைப்புப் பெயரை நானே சொல்லி இருப்பேன். நெஞ்சில் நின்றது, சொல்லில் வருவதற்குள்…”

ஒரு புலவர் ஐயா

“இந்தக் காலத்துத் தம்பிகளில் பெரும் பாலோர்க்குக் குறிப்பறிதல் உடனே புரிவதில்லை; அவர்களுக்குப் புரியும் குறிப்புக்களோ நமக்குப் புரிவதில்லை.”

(அவையில் பலத்த சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“‘குறிப்பறிதல்’ அதிகாரப் பெயர் – பொருட்பாலில் அங்கவியலில் உண்டு; காமத்துப் பாலில் களவியலிலும் அது உண்டு. அங்கே அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகத்தைச் சொல்லுகிறார்.”

பெரும்புலவர்

“இங்கேதான் சிறிசுகள் முகத்தை மூடிக்கிறதுகளே?” (அவையில் சிரிப்பு).

ஒருங்கிணைப்பாளர்

“காமத்துப் பாலில் அறத்துப்பால் உள்ளிட்ட பல உளவியற் செய்திகளை நுட்பமாகச் சொல்லுகிறார் வள்ளுவர் எனச் சற்று முன் சொன்னேனே… அதைத் தொடர்ந்து சில நினைவுச்சரங்கள்.”

பேராசிரியர்

“இன்பத்துப்பால் தான் இதர அறம், பொருள் பிரிவுகளுக்கு அடிப்படை எனத் ‘திருக்குறள் செம்மல்’ அவர்கள் தக்க சான்றுடன் எப்போதும் நிறுவுவார்…

ஒருங்கிணைப்பாளர்

இதற்கிடையே இந்த நூற்றாண்டின் தொடக்க நன்னாளில் உலகே வியக்க, நம் பாரதத் திருநாட்டின் பாதச்சுவடாக விளங்கும் நீலத்திரைக் கடலோரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரியின் முக்கடல் கூடும் இடத்திலே, உலகு வியக்க நிறுவப்பெற்ற திருவள்ளுவரின் சிலை அமைப்பும் இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே செதுக்கப்பட்டுள்ளது என்பதும் உலகம் உள்ள வரை நிலை பெற்றிடும்.”

பேராசிரியர் வளனரசு

“சிலை திறப்புப் பெருவிழாவில் பங்கேற்று மகிழ்ந்த நான் காணாத ஏதோ ஒரு செய்தியைப் பேராசிரியர் சொல்லுகிறார்.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“கலைஞர் பெருமானாரின் 20 ஆண்டு விடா முயற்சியாலும் அருங்கலைச் சிற்பி கணபதி ஸ்தபதியின் குழுவினரது ஈராண்டு உறங்கா உழைப்பாலும், கருங்கற் களைப் பாளம் பாளமாக வடிவமைத்து வண்ணமுற நிமிர்த்தப்பட்ட இந்தத் திருவள்ளுவர் சிலை, அமெரிக்க சுதந்திரதேவி சிலையை விடச் சிறப்புப் பெருமையுடையது; கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெறத்தக்கது. 1330 குறட்பாக்களை 133 அதிகாரங்களில் வகுத்துள்ளமைக்குச் சான்று பகருவது போல 133 அடி உயரப் பெருமையுடையது; பிரமிப்புத் தருவது.

இதில் நான் சிறப்பாக அவையோர் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவது இந்த 133 அடி உயரச் சிலையின் மூன்று நிலைப் பகுப்பு.

சிலைநிற்கும் ஆதார பீடத்தின் உயரம் 38 அடி. இது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களுக்கு நிகர். இந்தப் பீடத்தின் மீது நிமிர்ந்து நிற்கும் உருவச் சிலையின் உயரம் 95 அடி. அதாவது பொருட்பால் அதிகாரம் 70, இன்பத்துப்பால் அதிகாரம் 25 இரண்டும் சேர்ந்தால் 95, ஆதார பீடத்தையும் சேர்த்தால் ஆக மொத்தம் 133 அடி (அவையோர் கர ஒலி)

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் வள்ளுவர் சிலையின் வடிவமைப்பை விரித்துச்சொல்லி வள்ளுவர் முப்பாலில் காமத்துப்பால், பொருட்பால் எனும் இரண்டும் அறத்தின் மீதே ஊன்றி நிற்கின்றன எனும் அற்புதப் பொருத்தத்தை அழகுறச் சொன்னார். அறிதற்குரிய அரிய செய்தியை நினைவூட்டியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி (மீண்டும் கைதட்டல்) நான் விட்ட இடமான சிலை பற்றிய விவரங்களை மீண்டும் பேசுவோம். அறிதோறும் அறியாமை கண்ட இடத்திற்கு மீண்டும் போகலாமா?”

“ ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம், செறிதோறும் சேயிழை மாட்டு” (1110) எனும் ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதிகார இறுதிக் குறட்பா அறிவினைத் தேடத் தேட, அறியாமையே மிகுவதை இவ்வளவு நுட்பமாக உணர்த்துகிறது. மற்றொரு அருமையான குறள்.. அதே அதிகாரத்தில்தான்,

“தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

     அம்மா அரிவை முயக்கு”            (1107)

என நம்மை விருந்தோம்பலோடு இந்த மனையாளொடு இருந்தோம்பி மகிழும் ஆரா இன்பத்தையும் அழகுற ஒன்றாக்குகிறார் வள்ளுவர்..”

இடைமறிக்கும் புலவர்

“தமது வீட்டில் இருந்து கொண்டு, தாம் சம்பாதித்தலில் விருந்து அளித்து அதை விருந்தினர் வயிறார உண்பதைக் கண்டு மகிழும் மனம்…”

பெரும்புலவர்

“பின்னே என்ன? ஓட்டலுக்குப் போய் நாலு பேரோட வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு, பில்லைத் தட்டுலே வச்சவுடனே வேறே பக்கம் முகத்தைத் திருப்பிக்கிற இந்தக் கால நாகரிகத்தை – அடுத்தாத்து நெய்யே என் அகத்துக்காரி கையேங்கிற உபசாரத்தை – வள்ளுவர் செய்யவில்லை.”

ஓர் அரசு அதிகாரி

“நண்பருடன் ஓட்டலுக்குப் போய்ச் சிக்கிக் கொண்ட அனுபவத்தோடு புலவர் ஐயா பேசுகிறார்” (சிரிப்பலை)

புலவர்

“அட, நான் ஓட்டலுக்கே போறதில்லைய்யா. வீட்டிலேயே நமக்கு எப்போதும் விருந்துதான் போங்க…”

இன்னொருவர்

“அந்த ரகசியத்தையும் சொல்ல மாட்டேங் கிறீங்களே” (மீண்டும் சிரிப்பு)

மற்றோர் அரசு அதிகாரி

“இந்தப் பரம ரகசியங்களை எல்லாம், ஒவ்வொருவரும் பகிரங்கப்படுத்தத் தொடங்கி விட்டால் அதற்காக என்றே தனி இயல் ஒன்றை நாமே வகுத்து, அதையும் வள்ளுவர் தலையில் கட்டிவிடலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“வருமான வரித் துறை ஆணையர் திரு மோகன் காந்தி அவர்கள் ஏதோ புதிய செய்தி ஒன்றை எழுப்ப விழைகிறார். கேட்டறியலாமே?”

வருமான வரித் துறை ஆணையர் திரு.மோகன் காந்தி

“மூதறிஞர் ராஜாஜி அவர்களின் ‘பஜ கோவிந்தம்’ எனும் நூலைப் படித்தேன் இரு குறட்பாக்களில் வரும் ‘வேண்டாமை எனும் செருக்கு – பற்றுக பற்றற்றான் பற்றினை’ எனும் வரிகளுக்கு மன நிறைவான விளக்கம் பெற்றேனில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“பொருள் சேர்ப்பது வாழ்க்கைத் தேவை. அதனை உழைப்பால் நியாயமான முறையில் ஈட்ட வேண்டுமே தவிர, அறம் தவறிப் பொருள் சேர்க்கும் வேணவா, பேராசை அறவே கூடாது. அதிலும் தவறு எனக் கருதாமல், பிறர் பொருளைக் கவர முயன்றால் அதனால் முடிவில் துன்பமே மிகும். ‘இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும், வேண்டாமை என்னும் செருக்கு’ (180) என்பது குறள். பிறர் பொருளைக் கண்டு பொறாமை யுறுவதே குற்றம் எனப்படும். அப்படியிருக்கப் பிறர் பொருளை எப்படியேனும் அபகரிக்கச் சதித்திட்டம் செய்வது பெருங்குற்றம். அன்புடையவர் பிறர்க்குப் பொருளுதவி செய்து அவரைக் கை தூக்கி விடுவர்.”

அரசு அதிகாரி ஒருவர்

“பொறாமையும் பேராசையும் உடையவர் உதவி செய்வது போல நடித்துத் தக்க சமயத்தில் காலை வாரி விடுவார். கை தூக்கி விடுவதை விட, காலை வாரி விடுவதுதான் இப்போது மிகச் சுலபமாகத் தெரிகிறது.” (அவையின் முறுவல்)

ஒருங்கிணைப்பாளர்

“அன்பற்ற பொறாமைக் குணமுடையார், கொள்கையோ நடுநிலையோ இல்லாது, பிறர் தேடிய பொருளைத் தான் மட்டும் எப்படியும் அடையக் கருதினால், அவர்களுடைய குடி அழியும், குற்றங்களும் அப்போதே விளையும். எனவே, தவறான முறையில் பொருள் தேட மறுப்பதே ஒருவகையில் மானமுடைய செருக்கு என்கிறார் வள்ளுவர்.”

பெரும்புலவர்

“கலைத்திறமுடையோர்க்குக் கலைச்செருக்கு இருப்பது போல, தமது அரிய உழைப்பால் பெருஞ்செல்வம் சேர்த்தோர் சிலரிடம் மிடுக்கு அமைவது போல, வெற்றி மேல் வெற்றி பெறும் அரசியல் தலைவர்கள் சிலருக்குச் செருக்கு வந்து பற்றிக்கொள்ளுவது போலப் பிறர் பொருளைக் கவர நினையாமையே ஒரு வகையில் செருக்கு; அதாவது, வியந்து பாராட்டத்தக்க செருக்கு எனும் குறள் கருத்தைச் செம்மல் விளக்கியமைக்கு நன்றி. அடுத்து..”

ஒருங்கிணைப்பாளர்

‘நடுவுநிலை தவறிச் சேர்த்த பொருளால் தானம் செய்து புகழ், விளம்பரம் என்றெல்லாம் தேடினாலும், அது, ஒருவகையில் கருமித்தனம் தான்.”

புலவர் ஒருவர்

“அதற்குப் பின்னால் கர்ம வினைப் பலனும் உண்டு.”

ஒருங்கிணைப்பாளர்

“அறத்தொடு சாராத பொருளைப் பிறர்க்கு ஈகை செய்வதால், புகழோ பெருமையோ நிலைபெற்று விடாது, வெற்று விளம்பரமாகவே போய்விடும்.”

வருமான வரித் துறை அதிகாரி

“ராஜாஜி சொன்ன.. பற்றுக குறளைக் கொஞ்சம் பற்றுக..” (அவையில் சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

     பற்றுக பற்று விடற்கு..”        (350)

என்பது வள்ளுவம்”

பெரும்புலவர்

“வருமான வரித் துறை ஆணையர் கேட்ட கேள்வியில் எத்தனை பற்றுகள்? பற்றும் வரவும் இல்லாமல் பேரேடு போட முடியாது. வரிவிதிப்பும் கிடையாது” (சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“‘துறவு’ அதிகாரத்தின் இந்தக் கடைசிக் குறளில் ‘பற்று’ எனும் பிடிப்பு வாழ்வையும் விடுப்பு வாழ்வினையும் வள்ளுவர் வேறுபடுத்திக் காட்டுகிறார். துறவு முறைகள் பல வகை. இளங்கோவடிகள், விவேகானந்தர் போன்றவர்களின் மணவாத் துறவு, மணந்து வாழும் போதே ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின் மேற்கொள்ளும் சில கோட்பாட்டுத் துறவுகள், அருளுணர்வு பெருகி, தன்னலம் ஓய்ந்தபின், இல்லற வாழ்வையும் துறந்து, பிறர் நலம் பெறவும், தன் ஆன்மா உய்வு பெறவும் முழுமைத் துறவே பூணுதல்… ஆனால், இல்லறத்தில் இருக்கும் போதே, சில நிலைகளில் பற்றற்று வாழ்ந்து, கடமையைச் செய்வோரும் காந்தியடிகளைப் போலச் சிலர் உண்டு. புறத்துறவும் கொள்ளலாம். அகத்துறவும் அமையலாம். முழுமையான, பற்றறுத்த வாழ்க்கை, ஐம்புலனையும் செம்மையாக அடக்கிய வாழ்க்கை பூணுவது எளிதில்லை. ‘யான், எனது…’ என்பது இருந்தே தீரும்.”

பெரும்புலவர்

“ஏதாவது ஒன்றைப் பற்றி நிற்பதே உயிரின் இயல்பு. எனவே சில்லறைப் பற்றுக்களை விட வேண்டுமானால் செம்பொருளான சிறந்ததொரு பற்றினைப் பற்றுக என்பது தானே பொருள்?”

ஒருங்கிணைப்பாளர்

“பிறவி நோக்கம் இடையறா இன்பமே ஆகும். அதனால் நிம்மதியும் அமைதியும் பெறுவதே குறிக்கோள். இந்த இன்பத்திற்கு அடிப்படை ஆசை. அது அளவின்றிப் பெருகிப் பேராசையாகிவிட்டால், அதுவே துன்பத்திற்கு மூல காரணம் ஆகிவிடுகிறது.”

பேராசிரியர்

“அதாவது, ஒருவன் எதனிடம் மிகுபற்றுக் கொண்டு வாழ்கிறானோ அதனால் துன்பம் அடைவான், எதிலிருந்து பற்று விட்டு நிற்கிறானோ அதானல் அவனுக்குத் துன்பம் இல்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்’ (341) எனும் குறட்கருத்து அதுதான். இந்தப் பத்தாம் பற்றுக் குறளை வள்ளுவர் வினா – விடை போல அமைத்துள்ளது தான் சிறப்பு. கைவிட வேண்டியது எது? பற்று விடுதல். அதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும்? வேறொன்றைப் பற்றுக. இந்தப் ‘பற்றுக’ எனும் பதத்தை மிக நயமாகக் கையாண்டு ஒருவகை மயக்கமூட்டுகிறார் வள்ளுவர்.”

பெரும்புலவர்

“ஆமாம், எதைப் பற்றினாலும் மயக்கம் வந்துவிடாமல் கைப்பற்ற வேண்டும்.”

ஓரன்பர்

“புலவர் ஐயா எந்தப் பற்றையும் இன்னும் விடாத அனுபவத்தைச் சொல்கிறார்” (அவையில் சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“இப்போதெல்லாம் தனிநபர் வாழ்வை விடச் சமுதாய வாழ்வில் இருப்போரிடம் பொதுப்பற்றை விடத் தன்னலப் பற்று, தன் பெண்டு, தன் பிள்ளை என்னும் வாரிசுப் பற்றுகள் ஆட்டி வைக்கின்றன. இத்தகையோரிடம் மக்களிடம் அதிலும் சிறப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழே சீரழிந்தோரிடம் இரக்கச் சிந்தை எனும் பற்றுறுதி ஏற்பட்டால், பிற சுயநலப் பற்றுக்கள் எல்லாம் தாமாக விட்டுப்போக ஆரம்பித்துவிடும். புகழ்ந்தவை போற்றிச் செய்யும் பெருமனம் வளரத் தொடங்கும். வள்ளலார் வேண்டியது போல, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்யும் தொண்டுமனப் பற்று விடாது பற்றிக் கொள்ளும். அதனைப் பற்றுக என வள்ளுவர் சொன்னதாகக் கருதி ராஜாஜியின் பஜ கோவிந்தச் சரிதத்தை நாமும் ஏற்போம்.” (கை தட்டல்)

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“எல்லோரும் ‘பஜ கோவிந்தம்’ மட்டும் பாடிக் கொண்டே இருந்தால் நாட்டில் படரும் பசிப்பிணி போய்விடுமா, என்ன? இந்த உலகு இருக்கும் வரை ஏழையரும் இருப்பர். எனவே அயலாரை நேசித்து உதவும் பற்றினை வளர்ப்பதே மனித நேயம். அது இல்லாத வெறும் இறைபக்தி பொருளற்றது என விவிலியம் போதிக்கிறது.”

இடையில் ஒருவர்

“கிட்டத்தட்ட எல்லாச் சமயங்களின் உபதேச சாரமும் அதுதான்.”

ஒருங்கிணைப்பாளர்

“உபதேசம் வெறும் ஊறுகாய் போல மட்டும் இருந்து விடலாமா? பற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளரவேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.”

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 4

ஒரு பேராசிரியர்

“நான் ஒரு கருத்தைக் கூறலாமா? வள்ளுவம் சொல்வது புறவாழ்வில் காணப்படும் போலியான தொரு பொதுமைப் பார்வை இல்லை; ஒவ்வொரு நபரின் தனி நெஞ்சத் தூய்மை! ஒரு சமூகத்தில் வாழும் மனிதரிடையே மொழி, மதம், குலம், கட்சி எனப் பல வகையால் முரண்பாடும், வேறுபாடும் தலைதூக்குவது உலகியற்கை. மனமாசு குறைவுபட்டால், எவ்வகை வேற்றுமை யிடையேயும் உறவு பூணவும், உதவி செய்யவும் சிந்தை மலரும்; செயலாக வளரும்.

எனவே, திருக்குறளுக்குச் சாதி, சமயம் என்றெல்லாம் சாயம் பூசும் ‘பொதுமை’ நிலைக்களம் இல்லை; மக்கள் மனமே நிலைக் களம். ஆளுக்கொரு மனம் உடைய அந்தப் பன்மை நிலைக்களம். நம் மனதில் கணந்தோறும் விரிந்து பரவும் நல்ல, தீய எண்ணங்கள் என்பன நிலைக்களம். பொதுமைக்குள்ளே பகைமையும் வேற்றுமைக்குள் நட்புறுதியும் கண்ட மனநல அறிஞர் வள்ளுவர். ஆதலால், தனித்தனி நபர்களின் வஞ்சனையை மாற்றி, நெஞ்சத் தூய்மை செய்வதே அவரது நூலின் தனிச்சிறப்பு.”

ஒருங்கிணைப்பாளர்

“தன் நெஞ்சறிவது பொய்யற்க”      (குறள் 293)

“நெஞ்சில் துறவார் துறந்தார் போல”  (குறள் 276)

“மனத்தது மாசாக மாண்டார் நீராடி”  (குறள் 278)

“வஞ்சக மனத்தான் படிற்றொழுக்கம்” (குறள் 271)

“நெஞ்சத்து அகநக நட்பது நட்பு”        (குறள் 786)

எனப் பல்வேறு குறள்களில் நெஞ்சத்தையே வள்ளுவர் சுட்டிப் பேசுகிறார் என்பதை நாம் ஏற்கலாம்.”

வள்ளுவர் மருத்துவரா? மனநலச் செம்மலா? – ஒரு குரல்

“வள்ளுவரை மருத்துவராகவும், திருக்குறளை மருந்துக் கடையாகவும் உவமித்துள்ளதைச் சொன்னார்கள். அதுபற்றி மேலும் சிந்திக்கலாமே..?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் மனநல அறிஞர் என்று நாம் பேசியதைப் போல அவர் உடற் கூறுகள் அறிந்த மருத்துவர் போலவும் விளங்குகிறார். மருத்துவர் என்ன செய்கிறார்? மக்கள் உடலையும், பல்வேறு உறுப்புக்களையும் நிலைக்களமாகக் கொண்டு, நோயாளியின் நல்ல, தீய நிலைகளை நாடி பிடித்து ஆய்ந்தறிகிறார் அவர், உடல் மாற்றத்து நோயின் அறிகுறிகளுக்கான காரணங்கள், உணவு முறைகள் எனப் பலவற்றையும் கேட்டறிகிறார். பசி, உறக்கம், செரிமானம் எனத் தனித்தனி நோயாளியின் அவ்வப்போதைய நிலைப்பாடுகளுக்கேற்ப சிகிச்சை தருகிறார். இவ்வாறு தன்னிடம் நலம் நாடி வரும் நோயினர் அனைவர்க்கும் சாதி சமய வேறுபாடு கருதாது சிகிச்சையளிக்கும் மருத்துவரைப் போல, வள்ளுவரும் நம் சமுதாய, தனிநபர் நடப்பியலுக்கேற்ற நலம்தரும் நடைமுறைகளைத் தொகுத்துரைக்கிறார். மருத்துவர் கைநாடி பார்க்கிறார்; வள்ளுவர் நம் மன நோயை நோக்குகிறார். இரண்டும் பணி முறையில் ஒன்றுதான்; முழு நலம் பெறுவதே முதன்மை நோக்கம்.

இன்று நம் நாட்டிலும் உலகிலும் காணும் இன, மொழி, சமய, மாறுபாடு வேறுபாடுகள் எல்லாம், பூசல்கள் எல்லாம் எரிமலை போன்றவை. மனதுக்குள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் போராட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகள். பிரஷர் குக்கரில் மூடிவைத்துள்ள பாத்திரத்தைச் சற்றே திறந்தவுடன், அது பெருமூச்சுவிட்டு ஆவியைக் கக்குவது போல, சந்தர்ப்பம் ஏற்படும்போது உள்ளக் கொதிப்பெல்லாம் கலவரமாக, போராக வெடிக்கிறது. அமைதி அமைதி என நாடு கூட்டிப் பேசிக் கொண்டே, அணுகுண்டுகளையும் பேரழிவு ஆயுதங்களையும் ஏவும் அச்சம், அபாயம் பரப்பப்படுகிறது. நல்லரசுகள் கூட, வல்லரசுகளாக அரக்க ஆட்சி நடத்தத் துடிக்கும் பேரபாயம் உலகை நடுங்கச் செய்து வருகிறது. மக்களது தனி நல்வாழ்வு எனும் கல்லறைகள் மீது பொறாமை எனும் போலி ஆதிக்கக் கோபுரமே எழுப்பப்படுகிறது. எனவே நீரினைத் தேக்கி வைக்கும் ஊருணியைத் தூய்மை செய்யாமல் அதனை ஊருக்குக் கொணரும் வாய்க்கால்கள், குழாய்களை மட்டும் சுத்தம் செய்தால் போதுமா? எனவே ‘நோய்நாடி நோய் முதல் நாடி’ என்பது போல பொதுமை நோக்கோடு, தனிமனித நெஞ்சங்களையும் நிமிர்த்தவே முற்படுகிறார்.

‘மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு’ என்பதைத் தானே வள்ளுவமும் பிற அறநூல்களும் கூறியுள்ளன..?” என்று திசை திருப்பினார் ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அன்பர் ஒருவர்.

பலரது உதவியும் தன்முயற்சியும் கூடி அமைந்ததே வாழ்க்கை என்பதைத்தான் குறளும் அதைத் தொடர்ந்த நம் அறநூல்களும் கூறியுள்ளன; நம் இலக்கியங்களும் பேசியுள்ளன.

ஒருங்கிணைப்பாளர் 

“உணர்வுக்கும் கற்பனைக்கும் தலைமையிடம் தந்து அமைவன இலக்கியங்கள்; சிந்தனைக்கும் அறிவுக்கும் முதலிடம் தந்து தொகுக்கப்படுவன நீதி நூல்கள், அறிவியல் நூல்கள் ஆகியன. சமுதாயத்தில் வாழும் மனிதனுக்குரிய எல்லாச் சமுதாய ஒழுகலாறுகளையும் தனிமனித வரையறை களையும் விரித்து விளக்கி, தொகுத்து வகுத்துக்கூற வேண்டியவை அறநூல்கள். இந்த நீதி நூல்கள் சான்றோர் சிந்தனையிலும் தோன்றலாம்; சமூக நலனுக்காக நாளடைவில் உருவான பழக்க வழக்கங்களாலும் அமையலாம். இவை வாய்மொழி களாகவே தொடர்ந்ததால் பழமொழிகள், மூதுரைகள் என அழைக்கப்படுகின்றன.

திருக்குறளுக்கெல்லாம் முற்பட்ட நம் சங்க இலக்கியங்களில், ஆங்காங்கு அறநெறி முறைமைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன.

“அறநெறி இதுவெனத் தெளிந்த” என ஐங்குறுநூறும்,

“அறங்கடைப்பட்ட வாழ்க்கை” என அகநானூறும்,

“அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்” எனப்

பொருநராற்றுப்படையும்

என ஒரு புலவர் ஆதாரச் சீட்டுடன் படிக்கத் தொடங்கி விடவே அவரை இடைமறித்த ஒரு கல்லூரிப் பேராசிரியர்,

“அதுதான் எல்லோரும் நன்கறிந்த புறநானூற்றுப் பாடலில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் போற்றத்தகும் வாழ்க்கை முறையாகச் சொல்லப்பட்டு விட்டதே? அதைத்தானே செங்கல் அடுக்குப் போலத் தாங்கள் படித்துக் காட்டிய ஆதாரங்களும் வலியுறுத்துகின்றன.”

ஓர் அன்பர்

“ஐயா செங்கல் அடுக்கு என்றதும் நம் தவத்திரு அடிகளார் ஆற்றிய அருளுரை ஒன்று நினைவில் மறிக்கிறது. அதைச் சொல்ல நிலா முற்ற அன்பர்கள் சற்றே அனுமதிக்க வேண்டும்.”

ஓர் இடைக்குரல்

“ஐயா ஏதோ செங்கல் கட்டுமானம் பற்றிப்  பேசுகிறார், கேளுங்கள்.”

முன்னவர் தொடர்கிறார்

“ஆயிரமாயிரம் செங்கற்கள் குவிந்து கிடந்தாலும் தாமாக அவை கட்டிடமாவது இல்லை! அவற்றை நூல் பிடித்து அளந்து முறையாக அடுக்கிச் சந்து பதிந்தால்தான், சுவரை எழுப்ப முடியும். உடைந்த செங்கற்களையும் முழுச் செங்கற்களையும் இணைத்து, இடைவெளி ஏற்படும் இடங்களில் சுவரது தேவைக்கேற்றபடி முழுச்செங்கலையும் கையில் உள்ள பூசு கரண்டியால் உடைத்துப் போட்டுச் சந்துகளை நிரப்புகிறார்கள் கொத்தனார்கள். அது போல மனிதனும் தனது சொந்த மதிப்பையும் சுகத்தையும் குறைத்துக் கொண்டாவது சமுதாயமெனும் சுவரைக் கட்டிஎழுப்ப ஒத்துழைக்க வேண்டும். தானும் முன்வர வேண்டும். உடைந்த செங்கலையும் முழுச்செங்கல்லையும் இணைத்துக் கட்டிடத்தை எழுப்புவார் கொத்தனார்; சமுதாயத்தில் உள்ள வலிமையுடையவர்களையும் வலிமை அற்றவர் களையும் இணைத்து, ஒருசேர வளர்ச்சி வலிமை நோக்கிக் கூட்டிச் செல்லுபவரே சமுதாயத் தலைவர்; சரியான வழிகாட்டி.”

“அதைத்தானே ஐயா அரசியலிலும் சமதர்மம்எனப்புதுப் பெயரிட்டுச் சொல்லுகிறார்கள். பொதுவுடைமை எனப் போதிக்கிறீர்கள்..!” என இடைச்செருகலானார், ஒரு கல்லூரிப் பொருளாதாரப் பேராசிரியர்; ஒருங்கிணைப்பாளர் கருத்துத் தொடர்ச்சியை இட்டு நிரப்பினார்.

ஒப்புரவு ஒப்பற்றது

‘சோசியலிசம்’ என்ற ஆங்கிலச் சொல் விருப்பு வெறுப்புக்களைக் கடந்து, உள்ளம் ஒன்றிப் பழகும் பண்பாட்டைக் குறிப்பதாகும். சமுதாயத்தையே நேசிக்கும் நெறியைப் போற்றுவது ஆகும். இதைத்தான் வள்ளுவர் ‘ஒப்புரவு’ எனக் குறிப்பிடுகிறார். நம்மோடு உள்ள மற்றவர்களோடு சேர்ந்து பழகும்போது அப்படிச் சேர்ந்து வாழ்வதனால் ஏதேனும் இடர்களோ, கேடுகளோ விளையுமானாலும் அவற்றைக் கூடுதல் பொறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே  வலியுறுத்துகிறார்.

‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’ என்கிறார் வள்ளுவர். ‘ஒத்தது அறிதல்’ என்பதற்குப் பொருள் மற்றவர்களுக்கும் ஏற்புடையதைப் புரிந்து கொண்டு பழகுதல் என்பதுதான். அப்படி மற்றவர்களுக்கும் ஒத்ததை அறிந்து இணங்கி விட்டுக்கொடுத்து வாழ முனைவதுதான் உண்மையிலேயே நாம் உயிர்வாழ்தல் எனப்படும்.”

உடன்பாட்டோடு தொடரும் திருக்குறள் பேரவையின் அன்பர் ஒருவர் கூறுவது:

“அதாவது பழகிய நண்பரிடத்துக் குற்றம் கண்டாலும் பொறுத்துக் கொள் என்கிறார் வள்ளுவர். மனிதனையும் மனிதனையும் இணைத்துச் சமுதாயம் எனும் கட்டிடத்தை உருவாக்க இப்பொறுமைப் பண்பு, பெருமிதச் சால்பு மிகவும் அவசியம் என்பதே அவர் கூறும் ஆக்கநெறி.”

ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்

“நாகரிகம் என்பதற்கே புதியதொரு விளக்கம் அறிவித்தவர் வள்ளுவர் என்பதை அறிவோம். நண்பர் ஒருவர் நஞ்சு கலந்த பானத்தைக் கொடுத்தாலும் அதை வாங்கிக் குடித்துவிடு; நஞ்சு கலந்தது என்று அஞ்சாமல் பருகிவிடு என்று கூறுகிறார்.”

 

 

 

ஓர் அன்பர்

“ஏனய்யா அப்படிச் சொன்னார்…?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவரின் இந்தக் கருத்து சங்க இலக்கியத்தில் உண்டு; பின்னர் வந்த பெரிய புராணத்தில் ‘தத்தா நமர்’ என்று தொழுத கையுள் படையொடுங்கிடக் கண்டும் பண்போடு சாகும் முன் அன்போடு மன்னித்த மன்னன் வரலாற்றில் உண்டு.”

 

இடையே ஒருவர்

“சாக்ரடீஸ் கதையும் அப்படித்தான். அதைத்தான் வள்ளுவர் முன்பே வலியுறுத்தினார்.”

“நஞ்சு கலந்தது என்று நன்கு தெரிந்தும் தெரியாதவர் போல, அந்த நினைப்பிற்குள் சிக்காமலே பருகி விடு என்கிறார். நஞ்சு கலந்தது என நாம் நினைத்தால் நமது முகத்தில் மரணக்குறி படரத் தொடங்கும். நஞ்சு கலந்தது என்பதைத் தெரிந்து கொண்டோமோ என அதைக் கலந்து வைத்த நண்பர் உணர்ந்தால் அவர் அஞ்சுவார் அல்லது வருந்தி உளைச்சலுக்கு ஆளாவார். அந்த வருத்தத்தைக் கூட அவருக்குத் தரக்கூடாது என உறுதியாயிருக்க வேண்டுமாம். அதனால் என்ன பயன்? நஞ்சு கலந்தது என்று நினைத்து அஞ்சாமல், வருவது வரட்டும் எனப் பருகி விட்டால், மரண பயத்தைக் கடந்தே துணிந்தால், அந்த நஞ்சு கூட ஒருவரைக் கொன்று விட முடியாது. தக்க சிகிச்சை பெறும்வரை நஞ்சையும் முறித்து உயிர் காக்க வல்லமை நெஞ்சத்தில் உறுதியாக நிலைகொள்ளும் என்கிறார். நஞ்சையும் அஞ்சாது பருகுவதால் அதைச் சற்றாவது முறிக்கும் வலிமை செங்குருதிக்கு உண்டாகி விடுமாம்.”

“ஆமாங்க, புலியடிச்சுச் சாகிறவனை விட கிலி பிடிச்சுச் செத்தவன்தாங்க அதிகம்” என ஒருவர் இடை மறிக்க, நிலா முற்ற அவையில் சிரிப்பு அலைகள் பரவின.

ஒரு சிவநெறிச் சீலர் நீறுபூசிய நெற்றி யுடையவராய்ப் பணிவோடு எழுந்தார், பகர்ந்தார்:

“அவையோரே… நம் அப்பர் சுவாமிகளுக்குக் கூட நஞ்சு கொடுக்கப்பட்டதைச் சேக்கிழார் பாடியுள்ளாரே?

அப்பர் அடிகள் நஞ்சுண்ட பின்னரும் சாகாமல் நமசிவாய மந்திரத்தையல்லவா உச்சரித்தார்?”

இன்னொருவர்

“அப்பரடிகள் போல நஞ்சுண்போர் எல்லாம் நமசிவாய மந்திரத்தால் மட்டும் பிழைத்துவிட்டால், அப்புறம் ஆஸ்பத்திரிக்கு ஆளைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய அவசியமில்லையே! நாமெல்லாம் அப்பரடிகள் போலவோ சாக்ரடீஸ் போலவோ இருந்துவிட முடியுமா..?”

மற்றொருவர்

“நாம் என்ன நஞ்சு சாப்பிடாமலா இருக்கிறோம்? இன்று நாம் உண்ணும் சாப்பாட்டில் கலப்படம்; நோய்க்குப் பருகும் மருந்தில் கலப்படம்; பல்துலக்கக் காலையில் உபயோகிக்கும் பற்பசை தொட்டு அனைத்திலும், நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை, ரசாயனக் கலவையை, தெரிந்தும் தெரியாமலே உட்கொண்டு எப்படியோ உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.”

ஓர் அன்பர்

“ஐயா தம் வீட்டில் மனைவி சமைத்துத் தரும் சாப்பாடு பிடிக்காமல் அப்படிச் சொல்லுகிறார் என நினைக்கிறேன்.”

(அவையில் சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்

 

“இந்த விவாதத்தை வள்ளுவரின் குறளோடு அதாவது,

‘பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

 நாகரிகம் வேண்டு பவர்”      (580)

என்பதோடு தொடர்வோம். அன்பும் அருளும் இரண்டற இணைந்ததே அந்த நயத்தக்க நாகரிகம். அத்தகைய நல்வாழ்வு வேண்டும். அதை நாடும் மனமாவது வேண்டும் என்பதே குறள் முதலிய நம் நீதி நூல்களின் தொடர்ச்சியான உருவாக்கத் திற்கான காரணம் எனக் கருதலாம். வாழ்க்கையில் வழுக்கலும், இழுக்கலும் நேரிடும்போது ஊன்றுகோல் போல நின்று உதவுவனவே குறள் உள்ளிட்ட நமது நீதி நூல்கள். வீட்டிலும், நாட்டிலும் மனம் பண்பட்டதொரு நாகரிகம் மலர வேண்டும் என்பதே தமிழில் ஒரு தொடர் போலத் தொகுக்கப்பட்ட நீதி நூல் ஆக்கங்களுக்கான அடிப்படைக் காரணம். வேறு மொழி எதிலும் காணப்படாத புதுமை இது!”

(  தொடரும் )

குறள் நிலா முற்றம் – 3

Image result for திருவள்ளுவர்“பொருளாதாரத்திற்கெல்லாம் அடித்தளம் அருளாதாரம்- அப்படித்தானே? அந்த அருள் எனும் அன்பு பெற்ற குழந்தைதான் வள்ளுவர் கூறும் வாழ்க்கைக்கலை, காலங்கள் மாறினாலும் கறைபடியாத கருணைக் கலை. அதாவது, அன்பு வழியில் வாழ்க்கை வளர்தல் வேண்டும். அவ்வழியில் வளரும் வாழ்க்கையே பண்பும் பயனும் உடையதாகும். பண்பும் பயனும் இரண்டறக் கலந்த இந்த வாழ்க்கை முறையே ஏனைய கலைகளுக் கெல்லாம் தாயகம்.”

ஒரு பேராசிரியர் எழுந்து கூறியது

“வள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்தமையால் அறத்தின் தாயகம் என்று நாம் மட்டும் பெருமை பேசி உரிமை கொண்டாடிக் கொள்ளுவது சரியில்லை. வாழ்க்கைக் கலையை உலகுக்கு உணர்த்தியுள்ள அறிஞர்களின் பட்டியல் பெரிது என்பதை முறையாக ஏற்க வேண்டும். நம் இந்தியத் துணைக் கண்டத்திலேயே ஆதி மனுநீதி அடித்தளமாக இருந்ததை நாம் அடியோடு மறுத்துவிட லாகாது. அதுபோல, கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர்களான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் எனும் மும்மூர்த்திகளே மேலைநாட்டு அரசியல் சமுதாயச் சித்தாந்தங்களுக்கெல்லாம் வித்திட்டனர் என்பதையும் நாம் புறக்கணிக்க இயலாது.”

இடைமறித்த அரசு அதிகாரியும் பொருளாதார வல்லுநருமான அறிஞரின் கருத்து

“ஆதி மனுநீதி நம்நாட்டுப் பண்டைய வாழ்க்கை முறைகளுக்கு ஆணிவேராக விளங்கியதை நாமோ, வரலாறோ மறுக்கவில்லை; மறைக்கவும் இல்லை. ஆனால் அந்த மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி எனப்பேசி சமுதாயத்தை முறையற்ற போக்கில் பிளவுபடுத்த முற்பட்டதால் இடைக் காலத்தே வழிதவறிப் போயிற்று; அதன் பக்க வேர்கள் எல்லாம் தனித்தனி மரங்களாகத் தலை தூக்கி, சமுதாய சீர்கேட்டுப் புதர்களாக எங்கும் மண்டி விட்டனவே?”

ஒருங்கிணைப்பாளர்

“ஆம்.. அன்பர் சுட்டிக்காட்டுவது போல, பழைய செம்மை நெறிக்குக் கேடு சூழும் வகையில், பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டது; பெண்ணடிமை எனும் பேதைமை புகுந்தது; தீண்டாமை எனும் கொடுமை படர்ந்தது; கண்மூடி வழக்கங்கள் பண்பாட்டை, வாழ்க்கைக் கலையை மண்மூடச் செய்தன.”

பேராசிரியர்

“அதுபோலவே, அரிஸ்டாட்டிலின் மேலைய சமுதாய விஞ்ஞானப் போக்கில், அதிகார ஆணவம், நாட்டாசை, பொறாமை, சுரண்டல், போர்வெறி என்பன எல்லாம் அரசு முறை நியாயங்களாயின. ‘வலிமையுடையதே வாழும்’ (ஷிuக்ஷீஸ்வீஸ்ணீறீ ளியீ ஜிலீமீ திவீttமீst) எனும் பொய்மையான பேய்ச் சித்தாத்தங்கள் தலைவிரித்தாடத் தொடங்கின. உலகெங்கும் இரத்த ஆறுகள் ஓடலாயின.

ஆனாலும் வள்ளுவர் வகுத்த நெறி வாய்மை பிறழாத வாழ்வு முறையாக, வழிவழியாக எப்படியோ, எங்கோ ஒரு மூலையில் துளிர்விட்டுக் கொண்டே இருந்தது. பின்னர் வந்த தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள், பக்திப் பனுவல்கள், ஒழுக்கப் போதனைகள் என அனைத்திலும் வள்ளுவச் சாயல்கள் படியலாயின; வழிவழியாக வள்ளுவம் வாழ்ந்து வரலாயிற்று.”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவம் வாழக் காரணம் அது மனித மனத்தளத்தில் காலூன்றிக் கொண்டதே முக்கியமான காரணம். மனிதன் மனத்தால் வாழ்கிறான். எனவே, ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல். அதுவே அனைத்தறன்’ என அழுத்தமாக எழுதி வைத்தார் வள்ளுவர். மனிதனிடம் மனம் என்பது உயிர்ப்புடன் வாழும்வரை இந்த அடிப்படைச் சிந்தனையும் வாழ்ந்தே தீரும் என்பது வள்ளுவத் துணிபு.

‘அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இந் நான்கும்  இழுக்கா இயன்றது அறம்’ (35) என மனதில் மாசுபடியாது பளிங்கு மாடம் போல அவர் வலியுறுத்தி யிருப்பது இன்றும் நாம் எண்ணி எண்ணி மகிழத் தக்கதொரு மனோதத்துவக் கருத்து. மனத்தின் முழுத்தூய்மையே அறம் என்பது திருக்குறளின் தீர்மானம்.”

அன்பர் ஒருவர்

“நாம் சட்டமன்றங்களிலும், மாநாடுகளிலும் வாயளவுக்குத் தீர்மானங்களை வானளாவப் போட்டுக் கலைகிறோமே அப்படி நம் வள்ளுவர் வாய்ப்பந்தல் போட்டுத் தரவில்லை.

மனத்துக்கண் மாசில்லாத அற நிலையை மாந்த ரெல்லாம் அடைவதற்கு அவர் வகுத்துள்ள முறைகள் எல்லாம் எவரும் எளிதாக ஏற்கத்தக்கவை என்பதுதான் தனிச்சிறப்பு.”

ஒருங்கிணைப்பாளர்

“அதாவது இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, அன்புடைமை முதலாகச் சங்கிலித்தொடர் போல வரும் அதிகார வைப்பு முறைகளைத் தானே சொல்ல வருகிறீர்கள்?

ஆம் அன்பர்களே. அன்பும் அறமும் காலூன்றி நிற்கும் களம் நாம் வாழும் இல்லறம். இந்த இல்வாழ்க்கையாலும் அதன் சார்புகளாலும் அன்பு முளைக்கிறது. வளர்கிறது. இந்த வளர்நிலை அன்பு மனமாசைக் கழுவும் கருவியாகிறது.

மனமாசற்ற நிலையே அறம் எனப்படும். அறத்தை விளங்கவும் துலங்கவும் வைப்பது அன்பு.”

ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அலுவலர் கா.கருப்பையா

“அன்பு, அறம் எனும் இருதூண்களால் நிறுவப்பெற்ற வள்ளுவ மாடம் முப்பரிமாணம் கொண்டது. அதை வள்ளுவம் – அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என வகுத்துச் சொல்லுகிறது. அறிஞர் மு.வ. ஓரிடத்தில் குறிப்பிட்டது போல ‘உலகம் ஒரு குலம்’ எனக் கால்கோள் இடப்பெறும் நிலம் காமத்துப் பால் எனும் இன்பத்துப் பால், நிலத்தில் விளையும் உயிர்ப் பயிருக்கு உரமூட்டுவது பொருட்பால். இவ்விரண்டையும் ஒன்றாய் இணைத்து, இயக்கி வேலியிட்டுக் காப்பது அறத்துப்பால். இம்மூன்றும் சீருற அமைந்த முப்பரிமாணமே  குறள் வைப்பு முறை…

குறள் எழுதப்பெற்ற அல்லது தொகுக்கப் பெற்ற நாள்தொட்டு அதற்கு ஏராளமான விளக்க உரைகள் வந்த வண்ணம் உள்ளன. காலந்தொறும் மேலும் புதுச் சிந்தனைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், குறளின் மூலக்கருத்து சிதைவு படாமல், புதிய எண்ணங்களாகிய ஊற்றுக் கண்களையும் திறந்து கொண்டே இருக்கிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“ஐயா கூறிய கருத்தை நான் முழுமனதாக ஆமோதிக்கிறேன். என் கையோடு அண்மையில் வெளிவந்த புதியதொரு விளக்க உரையைக் கொண்டு வந்துள்ளேன். இப்போது நாட்டு மயம், உலக மயம், தனியார் மயம் என்றெல்லாம் பொருளாதாரக் கோஷங்கள், முழக்கங்கள் போடுகிறார்களே, அவற்றிற்கெல்லாம் பதில் தரும், மார்க்கம் சொல்லும் புதுயுகச் சிந்தனைகள் குறளில் விரவிக் கிடக்கக் கண்டு வியந்து போனேன்.

அதனால்தான் ‘திருக்குறள் ஓர் அறிவுச் சுரங்கம்’ என்று சென்ற நூற்றாண்டிலேயே நம் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. ஆணித்தரமாகச் சொன்னார்.”

அன்பர் ஒருவர்

“திருக்குறள் ஒரு சுரங்கம் எனும் திரு.வி.க. உவமையை இங்கு நினைவூட்டிய அன்பர்க்கு நானும் நன்றி கூறுகிறேன். அவ்வக் காலத்திற்குத் தேவையான அளவு, நம்வாழ்வுக்கு வேண்டிய செய்திகளைச் சுரங்கம் போல வள்ளுவம் வழங்கிக் கொண்டே இருக்கிறது. இதுவரை அறிஞர்கள் ஆராய்ச்சியால் அகழ்ந்தெடுத்ததை விட இன்னும் அரும்பெரும் நவரத்தினச் சிந்தனைச் செல்வங்கள் குறள் எனும் சுரங்கத்திற்குள் புதைந்து பொதிந்து உள்ளதாகவே தோன்றுகிறது.”

வாழ்க்கைச் சுரங்கம்

பேராசிரியர்

“திருக்குறளை ஒரு வாழ்க்கைச் சுரங்கம் என்றும், வற்றாத அறிவூற்று என்றும், ஒவ்வொருவர் மனத்திற்கும் ஏற்ற செயல் விளக்கம் என்றும் இதுவரை இங்கே கலந்துரையாடப்பட்டன. அழகப்பாகலைக் கல்லூரியில் நான் முதுகலைத் தமிழ் பயின்றபோது எனக்குக் குறள் கற்பித்த பேராசான், வள்ளுவரை ஒரு மனநல, உடல்நல மருத்துவர் எனவும், திருக்குறளை ஒரு மருந்துக் கடை எனவும் உவமித்ததை என்னால் இன்றளவும் மறக்க முடியவில்லை.”

ஒருங்கிணைப்பாளர் 

“வள்ளுவம் மருந்துக்கடை போன்றது என்பது மதிக்கத்தக்க கருத்து. திருக்குறள் பொதுநூல் என்று மேலோட்டமாகச் சொல்லிப் பழகிவிட்டோம். இது பொது மக்கள், பொதுத்துறை என இன்று சொல்வதைப் போல உள்ளது. நாடு உரிமை பெற்ற பின்னர் ஊர்ப்பொது இடம், ஊருணி, சத்திரம், சாவடி, மைதானம், கழிப்பறை என்றெல்லாம் பலருக்கும் பயன் தரவேண்டியவற்றை நம்மில் யாரும் பொறுப்புணர்வோடு பார்ப்பதில்லை; போற்றிக் காப்பதும் இல்லை. பொது என்றாலே யாருக்கும் பொறுப்பற்ற, நாதியற்ற இடம் என்றாகிவிட்டது.

ஒரு போராட்டம் என்றால் முதலில் தாக்கப்படுவது அரசுப் பேருந்து தான்; வெட்டி வீழ்த்தப்படுவது சாலையோர நெடுமரம்தான்; சேதப்படுத்தப்படுவது பொதுக் கட்டிடங்கள்தான்! பொது என்றால் ஒவ்வொரு தனி நபருக்கும் ஒத்த உரிமையோடு அனைவர்க்கும் நெடிது பயன் தரவேண்டியது எனும் காப்புணர்வு நம் மக்களிடம் காணப்படுவதில்லை; மாறாகக் கசப்பு உணர்வையும் காழ்ப்பு வெறியையும் காட்டித் தீர்க்கப் பயன்படும் சேதாரங்களாகவே, அடையாளங்களாகவே அவை கருதப்படுகின்றன. வேறெந்த நாட்டிலும் காணப்பெறாத, ஜனநாயக விரோதச் செயல்கள் நம் நாட்டில் போராட்டம், தர்ணா, மறியல் எனும் பெயர்களால் மக்களையே சீரழிப்பது மடமை; கொடுமை. இதற்கொரு மருந்தாக ஏவப்படும் அடக்குமுறையும் எதிர் விளைவுகளையே ஏற்படுத்துகிறது; சாதி, சமயப் பிளவுகளை வளர்க்கிறது.

ஆனால் வள்ளுவத்திற்குச் சாதி, சமயம் என்பன பொதுமை நிலைக்களன்கள் இல்லை. மக்கள் மனமே நிலைக்களம்! மக்கள் என்போர், ஆளுக்கொரு மனம் உடையவராதலால், அந்தப் பன்மைகளே குறட்பாக்களின் அடித்தளம். மனங்கள் தோறும் பரந்து, விரிந்து உலாவும் நல்ல, தூய எண்ணங்களை உணர்ந்து செம்மைப் படுத்த உதவுவதே வள்ளுவத் தருவின் வளரும் கிளை விரிப்புக்கள்.

இன்று நாம் வாழ்வது ஜனநாயக யுகம் என்கிறோம். ஆனால் கட்சிப் பூசல்களும், உட்கட்சிக் காழ்ப்புணர்வும் பகைமைத் தீயையே பாராளுமன்றம் வரை பற்றி எரியச் செய்து வருகின்றன. ஒன்று கூடி, அமைதியாகப் பேசி மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய பஞ்சாயத்து, பாராளுமன்றம் எனும் மக்கள் மன்றங்கள் எல்லாம் போர்க் களங்களாகி வருகின்றன; பேயாட்டங்கள் தலைவிரித்தாடும் அரக்கப் பண்ணைகளாகி வருகின்றன. ‘சான்றோரும் உண்டு கொல் சான்றோரும் உண்டு கொல்!’ என்று சிலப்பதிகாரக் கண்ணகி அன்று மதுரைத் தெருவில் கேட்ட அந்தக் கையறுநிலைக் கேள்வியை இன்று பஞ்சாயத்துக் கூட்டங்களிலாவது ஒருவர் எழுந்து துணிந்து கேட்க முன்வருவதில்லை. மக்கள் மனம் நியாயம் கேட்கும் துணிவின்றி நாளுக்கு நாள் நலிந்து நம்பிக்கையின்றிக் கிடக்கிறது. இதுவே இன்றைய அவலக் காட்சி; கிராமம் முதல் தலை நகரம் வரை அரங்கேறும் அன்றாட அநியாயம்.”

( தொடரும் )