குறள் நிலா முற்றம் – 2

குறள் நிலா முற்றம் – 2

 

 

ஒருங்கிணைப்பாளர் ( மணிமொழியன் )

 

“ஆம்… திருவள்ளுவர் என்றாலே அது வாழ்க்கை விளக்கம் என்பது அருமையான தலைப்பு! ஒரு தனி நபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்.. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட்பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ் நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு! ஒரு தனி நாட்டை விட, உலகு என்பது பெரியதல்லவா? அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதல்லவா?”

இடைமறித்த ஒருவர்

“அதனால்தான் ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ எனப் பாரதிப் புலவன் பாடிவிட்டானே….

நாட்டிலும் ‘உலகு’ என்பது பெரிது. அத்தகைய நூலை அளித்த ஒருவரை ஈன்றெடுத்த பெருமை தமிழ் நாட்டுக்கு உண்டு என்பதும் அருமையே!

திருக்குறளின் முதல் குறளான ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்பதிலிருந்து நூலின் இறுதி வரை, ‘உலகு’ என்ற சொல் மட்டுமின்றி, பொதுமைப் பொருளுணர்த்தும் சொற்களும், சொற்றொடர் களும் தக்க இடங்களில் எடுத்தாளப்படுகின்றன. இவையெல்லாம் தமிழில் எழுதப்பெற்றாலும், குறள் உலகுக்கெல்லாம் உரியதொரு பயன்பாட்டு நூல் என்றே இன்றளவும் உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.”

இடைமறித்து இன்னொரு குரல்

“நிலாமுற்றத்தில் கூடியுள்ள குறள் அன்பர்களுக்கு என் நினைவில் படரும் கருத்தொன்றை முன்வைக்க விரும்புகிறேன்…

திருக்குறள் எனும் நூலில் பொதிந்துள்ள வள்ளுவரின் உள்ளக் கிடக்கையைப் பல படக் கூறலாம். அவற்றுள் எல்லாம் உயிர்க்கூறாய், ஊடுசரமாய்த் துலங்குவது ஒன்று… அது ‘உலகம் ஒரு குலம்’ என்பது (அவையோர் கைதட்டுதல்)

எதிர்க்கேள்வி

“இக்கருத்தை உறுதியாகக் கொள்ள வள்ளுவர் உலகோடு எல்லாம் தொடர்பு கொள்ளும் அனைத்து வாய்ப்பினையும் அன்றே பெற்றிருந்தாரா?”

கலங்கரை விளக்கம்

பதில்: “அத்தகைய வாய்ப்புக்கள் பெரிதும் இருந்திருக்க முடியாது என்றாலும் உலகு தோன்றிய நாளிலிருந்தே, ஐந்திணைக் கூறுகளைப் பகுத்தறிந்து, பண்பாட்டு நலத்தில் படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்த தமிழகம், நினைப்பிற் கெல்லாம் எட்டாத நெடுங்காலந்தொட்டே அறிவுலக ஆய்வில் வேரூன்றி நின்ற தமிழகம், சங்க காலம் என வரலாற்றாசிரியர்களாலேயே வரையறுக்க முடியாத வேத காலத்தோடு ஒப்பிடத்தக்க பழமை நிலமான தமிழகம். உலகச் சிந்தனைகளை எல்லாம் கருக்கொள்ளும் பண்பட்ட நிலமாகவும் தலைநிமிர்ந்து விளங்கியது. முதன்மையும் தொன்மையும் கலந்து அமைந்த பழந்தமிழகத்தில் உலக வாழ்க்கைக் கூறுகளும் கலந்தமையலாயின. இயல்பாகக் கருக்கொண்ட சிந்தனைகளும், புதுப்புது வரவாக வந்து சேர்ந்த எண்ணங்களும் வள்ளுவர் போன்ற அறிஞர் களுக்குப் புலனாயின. ஆகவே, அத்தகைய அறிஞர்களான சங்கப் புலவர்கள், வள்ளுவப் பெருந்தகை ஆகியோரிடம் ‘மக்கள் எல்லாம் ஒரு குலம்; மாநிலமெல்லாம் ஒரே வீடு’ எனும் சிந்தனைகள் மேவலாயின. அவை மலர்ந்து வாழ்வுக்கு வழிகாட்டி ஒளியூட்டும் அறநெறி விளக்குகளாக ஒளி வழங்கலாயின. அவற்றுள் திருக்குறளே தலையாய கலங்கரை விளக்கம் ஆயிற்று. அதுவே நம் நாடு மட்டுமன்றி, பிற நாட்டுப் பேரறிஞர்களாலும் வியந்து ஏற்கப்பட்டு பல்வேறு சமுதாய, அரசியல், அறிவியல் சித்தாந்தங்களாகப் பூக்கலாயிற்று. இன்றைய சமுதாய விஞ்ஞானங்களாகக் கருதப்படும் மார்க்சியம், காந்தியம், உலோகாயதம், உலகமயம், நாட்டுமயம், தனியார்மயம் என்றெல்லாம் எண்ண மலர்கள் பலப்பலப் பாத்திகளில் பூத்திட்டாலும், விஞ்ஞான மார்க்சியமும் தெய்விகக் காந்தியமும் போல, மனித நேய வள்ளுவமே உலகுக் கெல்லாம் நிலையான வாழ்வு மணமூட்டும்’ என்பார் தமிழ் முனிவர் திரு.வி.க.”

இடைமறிக்கும் வினா ஒன்று

“உலகு ஒரு குலம் எனும் உயிர்ப்பான வித்து திருக்குறள் என நாம் ஒரு வாதத்திற்காகவோ பெருமைக்காகவோ ஏற்றுக்கொண்டாலும் அந்த நல்வித்து நிலத்திற்குள்ளேயே புதைந்து கிடக்குமா அல்லது முளைத்தெழுந்து விரிந்த மரமாகி, நீடு நிழல் பரப்புமா…?”

ஒருங்கிணைப்பாளர் பதில்

“உலகம் ஒரு குலம் ஆதல் வேண்டும் என்றெல்லாம் பேசுவது எளிது; எழுதுவதும் எளிது. அதே சமயம், பேச்சும், எழுத்தும் செயலாதல் வேண்டும் அல்லவா?

அப்படியானால்…?

பேச்சைச் செயலாக்க வல்லதொரு கருவி வேண்டும்; அந்தக் கருவியும் நம் கைவசமே உள்ளது என்கிறது வள்ளுவம். அந்த அரிய, ஆனால் மிக, மிக எளிய கருவியின் பெயர்… நமக்கெல்லாம் தெரிந்ததுதான்…

அதுதான் ‘அன்பு.’ உலகை ஒரு குலம் ஆக்குவதற்கென்றே அன்பு இயற்கையில் அமைந்துள்ளது. அந்த அன்பே வித்து – அந்த அன்பே வித்தை.

‘அன்பின் வழியது உயிர்நிலை, அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு’ என்பதே வள்ளுவத்தின் வாய்மை; வழிமுறை.

இந்த அன்பு எங்கும் உள்ளது; எதிலும் உள்ளது; அதன் மறுபெயரே வளர்ச்சி; அதன் பரிணாமமே உலக நேயம். அதைத்தான் ணிஸ்ஷீறீutவீஷீஸீ எனும் அற்புதச் சொல்லால், விஞ்ஞான அடிப்படையாக விரித்துரைக்கிறார்கள்.

இந்த அன்பெனும் வித்து விரைந்து வளரும் பக்குவமான, பண்பட்ட விளைநிலம் மக்கள் மனம். அறிவார்ந்த நம் மானுடப் பிறவி, பிற உயிர்களை விட விழுமியதாவது எப்போது? தன்னிடம் பொதிந்துள்ள அன்பு எனும் உணர்வினை, வளர்ச்சிக்கு உரியதொரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, பிற உயிர்களையும் பேண வேண்டும்.

‘அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

     தந்நோய் போல் போற்றாக் கடை’    (315)

என்று அன்று வள்ளுவர் சொன்னார்; அவருக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகட்குப் பின்னர் வந்த அடியவர்கள் ‘அன்பே கடவுள்’ எனப் போற்றினர்; அருட்பெருஞ் சோதியாக வந்த வள்ளலார்.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’

எனத் தனிப்பெருங் கருணை பெருகிட வழி காட்டினார். கிறித்துவ சமயத்தைத் தோற்றுவித்த இயேசுநாதர் ‘ஏழையர் இந்த உலகில் என்றென்றும் இருப்பார்கள்’ என வரையறுத்துக் கூறி, என்னதான் ஆட்சிமுறை மாறினாலும், பொருளாதாரத் திட்டங்கள் தீட்டினாலும் மனிதனின் உள்ளத்தில் பிறரையும் தன்னைப் போல நேசிக்கும் அருளாதாரம் என்றென்றும் இவ்வுலகில் முன்னிடம் பெறவேண்டும் என்றார்.”

(  தொடரும் )

குறள் நிலா முற்றம் – 1

குறள் நிலா முற்றம்

 

பாகம் : 1

Image result for குறள் நிலா முற்றம்

ஒருங்கிணைப்பாளர்:  

 

‘திருக்குறள் செம்மல்’ ந.மணிமொழியன்

 

 

 

ஏற்பாடு : மதுரை வானொலி நிலையம்

‘வழிபாட்டு நூலா? வழிகாட்டும் நூலா?

திருக்குறள் நாம் வாழும் காலச் சூழ்நிலைக்கெல்லாம் பொருந்தும் வகையில் நம் முன்னர் எழும் சமூகச் சிக்கல்களுக்குத் தக்க தீர்வைத் தருமா? படித்துச் சுவைத்து நுகர்வதற்கு உரிய இலக்கியமாக மட்டுமே நீடிக்குமா? அல்லது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் சமுதாயத்திற்கும் தனி நபர்களுக்கும் பொருந்தும் வகையில் வழிகாட்டுமா? அது கைகூப்பித் தொழும் வழிபாட்டு நூலாகப் போற்றப்படுகிறதா? அல்லது நம்மைக் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் வழிகாட்டு நூலாக ஏற்கப்படுகிறதா? மனிதர்களிடையே இயல்பாக உள்ள முரண்களைப் போலத் திருக்குறள் கூறும் வாழ்வியல் சிந்தனைகளிலும் முரண்கள் இருப்பது போலத் தெரிகிறது. அவையெல்லாம் உண்மையிலேயே முரண்பாடுகளா? அல்லது தெளிவுறு மனத்தோடு சிந்தித்தால் அம்முரண்களினூடேயும் வலுவான அரண் போன்ற கோட்பாடுகள் அமைந்திருப்பதைத் தெளிந்து கொள்ள முடியுமா?… எனப் பல்வேறு சிந்தனைக் கீற்றுகளுடன் நிலா முற்றத்தில் அறிஞர் அவை கூடியிருந்தது.

நீலவான் ஆடைக்குள் முகம் மறைத்திருந்த நிலவு, மேகத்திரள் தாண்டி மேலெழுந்து தன் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சுவது போல, மெல்லென அதிர்ந்த மின்னல் போலத் தொடங்கிய நிலா முற்ற அரங்கு, நேரம் ஆக ஆகக் கூடியிருந்த அறிஞர் பெருமக்களின் கலந்துரையாடலாலும் கருத்து மோதல்களாலும் விளக்கம் பெறத் தொடங்கிவிட்டது. தனிப்பேச்சு, கருத்தரங்கம், பட்டிமன்றம் எனும் முப்பரிமாணம் கொண்ட முற்றமாக அது பயன் நல்கலாயிற்று.

திருக்குறள் தமிழ்மொழியில் தோன்றியமை நம் தமிழ் பெற்றதொரு வரலாற்றுப்பெருமை. பாரதியாரைப் போற்றிப் பாடிய பாவேந்தர் பாரதிதாசன்,

“என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்!

     தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்,

     தமிழால் பாரதி தகுதி பெற்றதும்…!”

என வியந்து முடிவுரை கூறியதைப் போல…

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே  தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

எனப் பாரதிப் புலவரே வள்ளுவத்தால் தமிழ் மொழியும் நாடும் பெற்ற உலகப் பெருமைக்கு முத்தாய்ப்பிட்டுப் பாடிவிட்டார்.

‘தமிழகத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி, வழிவழியாக வாழ்வு பெற்று இன்றும் வழக்கில் உள்ளது எனப் போற்றிப் பாராட்டப் பெறும் பெருமைக்குரிய ஒரே நூல் திருக்குறள்’ எனப் பழங்கதை போலப் பேசி வருகிறோம்; நமக்குள்ளே மகிழ்கிறோம். இந்தச் சிறப்பு திருக்குறளுக்கு உண்மையிலேயே பொருந்துமா? அல்லது ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என நமக்கு நாமே கூடிப் பேசிக் கலைகிறோமா? எனச் சிலர் வினாத் தொடுத்திட, நிலா முற்றம் களைகட்டியது.

இடைமறித்த பேராசிரியர்

“திருக்குறளின் கருத்து கால எல்லை க்கு உட்பட்டதல்ல. காலம் கடந்த தத்துவங்களையும் சமுதாயச் சிந்தனைகளையும் நடைமுறைப்படுத்த வல்ல செயல் நூல் அது. பகவத் கீதை, விவிலியம், திருக்குர்ஆன் போன்ற சமய நூல்களைப் போல உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்புச் செய்யப் பெற்றுள்ள ஒரே வாழ்விலக்கிய நூல் அது ஒன்றுதான். திருக்குறள் சாதி, இன, மொழி, நாடு எனும் வரையறைகளைக் கடந்து உலக மெல்லாம் தழுவிக் கொள்ளத்தக்க தகுதியுடைய பொது நூல். அது மனித குலத்தின் நீதி நூல்; வாழும் நியதி நூல்.”

மற்றோர் அறிஞர்

“வள்ளுவத்தில் அதிசயங்களோ, அற்புதங்களோ, சூத்திரங்களோ, சூட்சுமங்களோ இல்லை; அன்று வள்ளுவர் வரைந்தளித்ததை இன்று நாம் அப்படியே கையாள முடியவில்லை என்றால், அது நூலின் பிழையில்லை; நம் இன்றைய சமூக வாழ்வின் பிழை. நாம் மனிதத் தன்மையிலிருந்தும் மனிதப் பண்பிலிருந்தும் நெடுந்தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே இந்தப் பிழைக்குக் காரணம்.

நமது பிள்ளைகளுக்கு அளிக்கப்பெறும் கல்விக்கும் அவர்களோடு நாம் வாழும் வாழ்க்கைக்கும் இன்று உள்ள உறவு ‘அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள உறவு’ போலத்தான் உள்ளது! (சிரிப்பு)….

நம் வாழ்க்கைப் போக்கில் வள்ளுவத்தின் நிழல் முழுமையாய்ப் படியவில்லை. மனிதர்களின் வாழ்க்கையை, அகத்தாலும் புறத்தாலும் வளப்படுத்துவதே கல்வி.

சாதாரண மனிதன் கூட, நடை பயிலக் கூடிய எளிய அற நெறியையே வள்ளுவர் கூறினார்; அதையும் தனித்தனி அதிகார வரம்பிற்குள் நின்று, எளிய முறையில் கூறினார்.

திருக்குறள் ஒரு வாழ்க்கை அனுபவ விளக்கம். வாழ்வின் பல்வேறு அனுபவங்களையும் கண்டறிந்த, உற்றறிந்த உணர்வோடு தொகுத்துச் சொல்லும் கையடக்க ஏடு. அதிகாலைப் பனிப்பொழிவால் தரையில் படர்ந்துள்ள புல்லின் இதழ் நுனியில் தூங்கும் அந்தப் பனித்திவலையைச் சற்று உற்றுப் பார்த்தால், அதில் வானத்து விளிம்பு முழுதுமே தெரியும். அதைப் போல ஒரு குறட்பாவைப் படித்தாலும் போதும்… அது தான் பேச வந்த ஒரு பொருள் பற்றிய விரிவெல்லை முழுவதையுமே நமக்குக் காட்டிவிடும்…”

கூட்டத்தில் ஒருவர்

“ஒவ்வொரு குறட்பாவும் பனித்துளி காட்டும் பளிங்கு மா மண்டபம் என்பது அழகான உவமை.”

ஒருங்கிணைப்பாளர்

“இப்போது வள்ளுவரைப் பற்றி எனக்கு வேறொரு உவமை சொல்லத் தோன்றுகிறது…! திருவள்ளுவர் சமுதாயத்தில் பல்வேறு துறைகளையும், நிலைகளையும் ஆய்ந்தறிந்து, நாட்டில் அதுவரை பரவியிருந்த அறிஞர் மற்றும் புலவர்தம் கருத்துக்களையும் கேட்டு, படித்து, அறிந்து, தெளிந்து, எல்லாவற்றையும் நினைவில் கொண்டு, வள்ளுவத்தைச் செய்திருக்கிறார். மிகச்சிறந்த பொற்கொல்லர் போல, வள்ளுவர் சொற்களுக்கு மெருகேற்றியிருக்கிறார். அவர் ஒரு கைத்திறமிக்க ‘சொல் தச்சராகவே’ – ‘கருத்துச் சிற்பியாகவே’ இன்றும் நமக்குத் தோன்றுகிறார்… மக்கள் அள்ளித்தெளித்த கோலம் போல இன்று வாழ்கிறார்கள்… வள்ளுவர் அன்றே எழுதிய குறட்பாக்களைப் புள்ளிகளாக்கிப் புதுக்கோலம் புனைந்துள்ளார்…. இல்லத்து முன்றிலில் விடிகாலை தோறும் கோலமிட்டு மனைவிளக்கம் தரும் மங்கையர் பணி போல, வாழ்வில் அன்றாடம் நாமும் நல்லாடை புனைதல் போல, புதுப்புதுக் கருத்துப் பொலிவால் புதுநலன்கள் பெறுவோம்; புத்துணர்ச்சி பெருகக் காண்போம். ஒவ்வொரு நாளையும் ஒரு திருநாள் போலக் கருதி, புதுமலர் போலச் சூடி அன்றாட வரலாற்றை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். இவ்வாறு தனிமனித வாழ்விலும், சமுதாய வாழ்விலும் – அகம் – புறம் எனும் இரு நிலைகளிலும் – வளர்ச்சிக்கு உரிய மாற்றங்களை வழங்குவதே குறளின் நிலைபேற்றிற்கும் நீடு புகழுக்கும் காரணம்.

உலக சமுதாயங்களில் புறத்துறை வாழ்வில் புரட்சி செய்பவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு என்பது வரலாறு. ஆனால் அகம் – புறம் எனும் இரு துறைகளிலும் சமச்சீரான மாற்றங்களைச் செய்து, பிறருடன் இணங்கி, ஏற்றமுற வாழ வழிகாட்டிய சான்றோர் மட்டுமே உலக நாகரிகத்தை உருவாக்கியவர்கள். அத்தகையோர் எண்ணிக் கையில் மிகச்சிலரே ஆயினும் அவர்களால் தான் இன்றளவும் உலகம் புதுப்புதுச் சிந்தனை மலர்களால் தன்னைச் சிங்காரித்துக் கொள்கிறது.”

இடைமறித்த ஒரு பேராசிரியர்

“உலக நாகரிகத்தை, சிந்தனைச் செல்வத்தை உருவாக்கிய சான்றோருள் திருவள்ளுவர் தலையாயவர் என இங்கே எதிரொலித்த செய்தி கேட்டு என் செவிகள் எல்லாம் இனித்தன… உங்கள் செவிகளும் இத்தேனினு மினிய கனிகளை நுகர்ந்திருக்கும்…”

புலவர்

ஐயா அவர்கள் ‘செவிநுகர் கனிகள்’ எனும் கம்பன் வாக்கைத் தான் நினைவூட்டுகிறார்.

கம்பன் நூற்றுக்கணக்கான பாடல்களில் குறளுக்கு விளக்கவுரை போலச் செய்துள்ளதைத் தான் நினைவூட்டினேன்; குறளின் சூத்திரங்களைக் கம்பன் தன் பாத்திரங்கள் வாயிலாகப் பேசினான்!

தமிழுக்குக் ‘கதி’ எனக் கம்பரையும் திருவள்ளு வரையும் சொல்வது அதனால்தான் வந்தது…”

இன்னொருவர்

“சரி… சரி… குறள் முற்றத்துக்கு வருவோம்… கம்பரும் வள்ளுவரும் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் என்றென்றும் நிலைபெறச் செய்தார்கள். தமிழர்களாகிய நாம் செய்த தவம் அது ஒன்று போதும்.

தமிழ் முனிவர் திரு.வி.க. அன்று சொன்னதை இந்த நிலா முற்ற அரங்கில் நினைவூட்ட விரும்புகிறேன்.”

பேராசிரியர்

“சொல்லுங்கள் சுருக்கமாக.”

“திருவள்ளுவரின் பிறப்பு வளர்ப்பு பற்றிய உண்மை வரலாறு நமக்குக் கிடைக்கவில்லை. அவரது வரலாறு சொல்லப்படுகிறது. அவற்றுள் பெரும்பாலானவை வெறும் புனைந்துரைகள், கற்பனைகள் என விட்டுவிடலாம். வள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பதும், இல்வாழ்க்கையில் நின்று ஒழுகியவர் என்பதும், மக்களை ஈன்று புறந்தந்தவர் என்பதும், அறவோர் என்பதும், தெய்வப் புலவராகப் போற்றப்பட்டவர் என்பதும் அவர் அருளிய நூலால் இனிது விளங்குகின்றன” என்கிறார் திரு.வி.க.

மற்றொரு பேராசிரியர்

“அதனால்தான் திரு.வி.க. அவர்களின் மாணவராகத் தம்மை வரித்துக் கொண்டு வாழ்ந்த அறிஞர் மு.வரதராசனார் தாம் எழுதிய நூலுக்குத் ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ எனப் பொருத்தமாகப் பெயரிட்டார்…

ஒருங்கிணைப்பாளர்

“ஆம்… திருவள்ளுவர் என்றாலே அது வாழ்க்கை விளக்கம் என்பது அருமையான தலைப்பு! ஒரு தனி நபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்.. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட்பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ் நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு! ஒரு தனி நாட்டை விட, உலகு என்பது பெரியதல்லவா? அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதல்லவா?”

 

( தொடரும் )

குறள் நிலா முற்றம்

குறள் நிலா முற்றம்

 

Image result for குறள் நிலா முற்றம்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’

எனப் பாரதியார் பாடியது வெறும் புனைந்துரை இல்லை. வள்ளுவரது நெஞ்சமும் உலகோர் வாழ்வியல்பும் ஒரு தராசில் சம எடையாக நிறுத்தளந்தது போல், ஒரு சீராக நிற்பதைக் கண்டறிந்து கூறிய புகழுரை. வள்ளுவமே சமுதாயம் முழுவதற்கும் உரிய சரியான வாழ்க்கை விளக்கம் என அறுதியிட்ட தீர்ப்புரை.

திருவள்ளுவர் தமிழ்நாட்டிலே பிறந்தார். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மண்ணோடும் மரபோடும் ஒன்றிக் கலந்து உருவாகியிருந்த பண்பாட்டுச் சிந்தனைகளால் உரம் பெற்று வளர்ந்தார். அந்த வளர்ச்சியின் பயனாகக் குறட்பாக்களை வித்துக்களாக்கி ஈந்து உதவினார். அந்த வித்துக்கள் உலகின் எந்தச் சமுதாயப் புலத்தினும் ஊன்றிச் செழித்தோங்கும் இயல்புடையவை; அந்த முத்துக்கள் ஒவ்வொருவருக்கும் அணிகலனாக அழகு சேர்க்கக்கூடிய தனிச்சிறப்புடையவை.

வள்ளுவர் ஒரு நாட்டில் பிறந்தவர் எனினும் உலகச் சிந்தனையாளர். ‘மக்கள் எல்லோரும் ஒரு குலம்; மாநிலம் முழுவதும் ஒரு வீடு’ எனும் பரந்த நோக்குடையவர். கிரேக்கத்து அரிஸ்டாட்டிலைப் போல – பண்டைய இந்தியாவின் ஆதிமனுவைப் போல – அகிலப் பார்வை யுடையவர்; அறிவியல் – ஆன்மீகம் – மார்க்சியம் – காந்தியம் எனப் பல்துறைச் சார்புப் போக்கினர்க்கும் பொதுநலம் கூறும் சால்புடையவர்.

நூல்கள் இரு வகைப்படும் எனஅறிஞர் கூறுவர். எழுதப்பட்ட காலத்திற்கே நம்மைக் கூட்டிச் செல்வன முதல் வகை: நாம் வாழும் காலத்திற்குத் தாமும் உடன் நின்று வழி காட்டுபவை இரண்டாம் வகை.

திருக்குறளில் முதல் வகைப் பாங்கு ஓரளவிற்கும் இரண்டாம் நிலைப்பேறு பேரளவிலும் இணைந்திருப்ப தாக அறிஞர்கள் அரங்கு கூட்டிப் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்குத் திருக்குறள் வற்றாத ஊற்றாக, வளங்குன்றாத சுரங்கமாகப் பயன் தந்து கொண்டே இருக்கிறது.

என்றாலும் திருக்குறளை வாழ்க்கை விளக்கமாக ஏற்போரிடம் ஓர் ஐயம் அவ்வப்போது ஏற்பட்டு வருவதையும் மறுப்பதற்கு இல்லை.

“எல்லாப் பொருளும் இதன்பால் உள, இதன்பால்

     இல்லாத எப்பொருளும் இல்லையால்”

என அன்று பாடிய திருவள்ளுவ மாலை இன்றைக்கும் வாடாத மாலை ஆகுமா? எனக் கேட்டு, நமது வாழ்க்கைப் போக்கிற்கெல்லாம் திருக்குறள் துணையாக வந்து விடுமா?  அவரவர் வாழ்க்கைக்கெல்லாம் வள்ளுவம் உதவுமா? என்பதோடு ஒவ்வொருவர் வாழ்வுக்கும் வள்ளுவம் வழி காட்ட வேண்டும் எனும் ஆர்வமும் தலைதூக்கி நிற்கிறது.

வள்ளுவத்தை மட்டுமல்ல, சமயப் போதனைகள், மார்க்சியம், காந்தியம் ஆகிய உண்மைகள் அனைத்தையும் வாழும் காலம் எனும் உரைகல்லில் உரசிப் பார்த்து எடை போட்டு அறியவே விழைகின்றனர்.

காலம் மாறினும் உண்மைகள் மாறுவதில்லை. காலத்தின் மாறுதல்கள் உடைமாற்ற நாகரிகங்களைப் போன்றவை; அடிப்படை உண்மைப் பண்புகள் உயிரைப் போன்றவை என்பர் அறிஞர்.

‘காந்தியக் கதராடையே சோபிதம்’ எனப் பாடிய காலம் சடுதியில் மாறியுள்ள சூழலில், வள்ளுவப் பழைய உடை இன்றைய புதுயுகத் தேவைக்கெல்லாம் பொருந்துமா எனக் கேட்டுப் பார்ப்பதில், எடைபோட்டுப் பார்ப்பதில் தவறில்லை.

‘நாம் வாழும் இந்தக் காலத்திற்கு வள்ளுவம் வழி காட்டுமா?’ என்பது பயனுள்ள கேள்வியே ஆகும்.

இக்கேள்விக்குப் பலரை ஒருங்கு கூட்டி, விவாதப் பொருளாக இதை முன்வைத்துப் பயன்தர மதுரை வானொலி புதுமையான நிகழ்ச்சியை ஒரு சரமாகத் தொடுக்க முனைந்தது. நிகழ்ச்சிகளை வானொலி அரங்கில் இருந்தே ஒலிபரப்பும் பழைய முறையை மாற்றி ‘வாசலுக்கு வரும் நேசக் கரங்களை’ நீட்டி நிகழ்ச்சிகளை அமைக்கும் புதுமையை அரங்கேற்றியது. அதில் ஒன்று நிலா முற்றம்.

‘நீலவான் ஆடைக்குள் ஒளி மறைத்து

     நிலாவென்று முகம் காட்டும்’

வளர்பிறை, மாதந்தோறும் முழுமதியாக வானக் காட்சி தருவது. வீட்டுவெளியில் வந்து அண்ணாந்து பார்த்து மகிழவோ வியக்கவோ நமக்கு இப்போதெல்லாம் நேரம் இருப்பதில்லை – விருப்பம் இருப்பதில்லை.

வீட்டு அறைக்குள் அமர்ந்து உண்ணும் சாப்பாட்டை நம் வீட்டு முற்றத்திலேயே பிள்ளைகளுடன் குடும்பத் தாருடன் ஒன்றாய் அமர்ந்து குலவிப் பேசி அதை நிலாச் சோறாக உண்பதிலும் நாட்டம் கொள்வதில்லை! இயற்கையை ரசிக்க எங்கெல்லாமோ பயணம் போகிறோம். வீட்டிற்குள்ளேயே – வீட்டருகே வலம் வரும் விந்தைகள் கூட நம் கண்ணிலோ மனத்திலோ படுவதில்லை; படிவதில்லை.

திருக்குறள் சிந்தனையைப் பலரது கருத்திலும் படரச் செய்யக் கருதிய வானொலி நிலையம் அதை நிலா முற்ற விருந்தாக, அரங்காகக் கூட்டியது.

அந்த அரங்க அமைப்பினை என் வீட்டு முற்றத்தில் நிலா விருந்தாக்கிட நான் விழைந்தேன். மதுரைத் தமிழ் அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் அழைத்து வர வானொலியார் இசைந்தார்.

என் இல்லத்து விரிந்த முற்றத்தில் திருக்குறள் நிலா முற்றம் கூடியது.

‘குறள் நெறிகள் நம் காலத்திற்குப் பொருந்துமா?’ எனும் தலைப்பில் விவாத மேடைச் சிந்தனைகளைத் தொகுத்து ஒரு சரமாக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப் பட்டது.

இளமைப் பருவம் முதல் குறட்பாக்களில் சிந்தை மயங்கி வளர்ந்து குறள் கருத்துக்களைச் சமுதாயப் பொது உடைமை ஆக்கிப் பரப்பும் ‘உலகத்திருக்குறள் பேரவை’ யின் பொதுச்செயலாளர் பொறுப்பேற்றிருந்த எனக்குக் குறள் பற்றிய அறிஞர் பெருமக்களின் சிந்தனைகளோடு இணையும் இனிய வாய்ப்பு இது எனக் கருதினேன்.

குறள் நிலா முற்ற அரங்கு கூடியிருந்தது.

திருக்குறள் பேரவையின் தமிழ்நாட்டமைப்பின் துணைத்தலைவர், செயலாளர், பல கிளைப் பொறுப்பாளர்கள், பேராசிரியர்கள், புலவர்கள், அரசு உயர்நிலை அலுவலர்கள், சமூக இயக்கச் சிந்தனையாளர்கள், நாட்டுநலத் தொண்டர்கள் என ஒரு பிரதிநிதித்துவப் பேரணி போலக் கூடி இருந்தது அவை.

வானத்திலே முழுமை நிலா, அழகு நிலா மேலெழுந்து கொண்டிருந்தது. நிலா முற்ற அரங்கில் குறள் நெறிச் சிந்தனைகள் அறிஞர்களிடையே உலா வரத் தொடங்கின. இந்த நிலா முற்ற விருந்தில் குறள் அமுதம் அருந்திட உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

இந்நூல் சிறப்புற வெளிவரப் பெரிதும் துணையாக, இருந்த பேராசிரியர் சு.குழந்தைநாதன், பேராசிரியர் இரா.மோகன் ஆகியோருக்கும், அணிந்துரை நல்கிய வணக்கத்திற்கு உரிய மகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார், மூதறிஞர்.தமிழண்ணல், இசைவாணர் எஸ்.மோகன்காந்தி ஆகிய சான்றோர்களுக்கும் எனது இதய நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்.

ந.மணிமொழியன்

பொதுச்செயலாளர்

உலகத் திருக்குறள் பேரவை

உள்ளத்தால் பொய்யாது ஒழுகிய காந்தியடிகள்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகிய

உலக உத்தமர் காந்தியடிகள்

“உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

 உள்ளத்துள் எல்லாம் உளன்”        (294)

உள்ளம் அறிந்து பொய்யாமை நினையாதவர்கள் உலகத்து மக்கள் உள்ளத்தில் எல்லாம் புகழோடு நிலைத்திருப்பார்கள் என்பதைத் தமது உண்மையான தூய தொண்டின் மூலம் மெய்ப்பித்து வெற்றி கண்டவர் அண்ணல் காந்தியடிகள்.

முழுமையும் நல்லவராக, முழுமையும் உண்மையுடைய வராக, முழுமையும் அன்புடையவராக வாழ்ந்திட விரும்பினார் காந்தியடிகள். வாழ்வின் அனைத்துக் களங்களிலும் அவர் உண்மையின் ஒளியில் வாழ்ந்திட மேற்கொண்ட விருப்பம் சாதாரண ஆத்மாவாக இருந்த அண்ணல் காந்தி அவர்களை மகாத்மாகாந்தியாக உருவாக்கியது. தேசப்பிதா என்று நாடே கொண்டாடியது.

காந்தியடிகள் என்றவுடன் நமக்கு முன் தோன்றி நிற்பது அகிம்சையும், சத்தியமும் தான். எந்த வகையிலும் உயிர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்தல் கூடாது என்பது அகிம்சை. எந்த நிலையிலும் பொய்யை ஒரு போதும் சொல்லக்கூடாது, உண்மையே கூறுதல் வேண்டும் என்பது சத்தியம்.

“ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன்

 பின்சாரப் பொய்யாமை நன்று”      (323)

என்பது வள்ளுவம். இந்தியத் திருநாடு ஏறத்தாழ சுதந்திரம் பெற்று விட்ட நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களிடம் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கேட்டார்: “நிராயுதபாணியாய் நின்று போராடும் ஒற்றை மனிதரின் போராட்டத்தை வலிமை வாய்ந்த ஆயுதங்களை வைத்திருக்கும் பிரிட்டிஷ் அரசால் நசுக்க முடியவில்லையா?” சர்ச்சில் அவர்கள் அதற்குப் பதிலளிக்கையில் அந்த மனிதர் “காந்தியடிகள் கத்தியை எடுத்திருந்தால் நான் துப்பாக்கியை எடுத்திருப்பேன், துப்பாக்கியை எடுத்திருந் தால் நான் பீரங்கியைக் கொண்டு நசுக்கி இருப்பேன். ஆனால் அவர் சத்தியத்தை அல்லவா எடுத்துக் கொண்டு போராடுகிறார்? சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லையே?” என்றார். அதிவேக ஆயுதபலமும் வலிமை வாய்ந்த இராணுவமும் கொண்ட ஆங்கில ஏகாதிபத்தியத்தை சத்தியம் என்னும் ஆயுதம் கொண்டு சத்தியாகிரகம் எனும் அறப்போர் முறையில் கத்தியின்றி இரத்தமின்றி போராடிப் பணியவைத்தவர் காந்தியடிகள்.

“உங்கள் எதிரிகளை சிநேகியுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை நீங்கள் ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கும் நன்மையே செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைப் பழிப்பவர் களுக்காகவும் பிரார்த்தனை பண்ணுங்கள். அப்போது தான் மனித வாழ்வின் மேன்மை என்னவென்றே உணர்வீர்கள்” என்பது ஏசு பெருமானின் போதனைகள்.

“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

     நன்னயம் செய்து விடல்”      (314)

என்பது வள்ளுவம். துன்பம் செய்தவரைத் தண்டிக்காது. அவர் வெட்கப்படும்படியான தண்டனையாக நன்மையைச் செய்து அவர் செய்த துன்பத்தை மறந்திடுதல் மேன்மை யுடையோர் செயலாகக் கருதப்படுகிறது என்கிறார் திருவள்ளுவர். இக்கொள்கையில் நிலையாக நின்றவர் காந்தியடிகள்.

நீதிமன்றத்தில் சிறைத் தண்டனை பெற்ற காந்தியடிகள் எரவாடா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறை அதிகாரியாக இருந்த ஸ்மட்ஸ், காந்தியின் மார்பில் மிதித்துச் சிறையில் தள்ளுகிறார். அதற்காக காந்தியடிகள் வருந்தவில்லை. சிறைத் தண்டனை முடித்து வெளிவந்த காந்தியடிகள் அந்த சிறை அதிகாரிக்கு சிறையில் கிடைத்த தோல்களைக் கொண்டு தாமே தைத்த மிதியடி ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தார். சிறை அதிகாரி அதிர்ந்து போனார். “மிதியடி கொடுத்தமைக்கு நன்றி. எனது காலின் சரியான அளவு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?” என்றார். காந்தியடிகள் புன்னகையுடன் “நீங்கள் உங்கள் பூட்ஸ் காலால் என்னை உதைத்தீர்களே அந்தத் தடயம் என் மார்பில் இருந்தது. அதிலிருந்து எடுத்துக் கொண்டேன்” என்றார். அந்த சிறை அதிகாரி வெட்கித் தலைகுனிந்து காந்தியடிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் என்ற செய்தியினை அறியும்போது மகாத்மா மகாத்மா தான் எனச் சொல்லத் தோன்றுகிறது.*

“இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

     என்ன பயத்ததோ சால்பு?”           (987)

நமக்குத் துன்பம் செய்தவருக்கும், நாம் நன்மை செய்யவில்லை என்றால் நம்முடைய பெருந்தன்மை வேறு எதைச் சாதிக்கப் போகிறது எனக் கேட்கும் வள்ளுவத்தின் சான்றாண்மை நெறியினைக் காந்தியடிகள் வாழ்வின் உயிரெனக் கொண்டு வாழ்ந்துள்ளார் என்பதை அறியும் பொழுது நம் நெஞ்சம் நம்மை அறியாமலே நிமிரத் தானே செய்கிறது?

ஓர் இலட்சியத்திற்காக மனமுவந்து ஏற்கும் தியாகமே தவம் என்பர். உண்ணாவிரதம் இருப்பதும் அடுத்தவர் துன்புறுத்தினாலும் அவர்க்கு எதிராகக் கையைக் கூட அசைக்கக் கூடாது என்பதும் காந்தியடிகள் சத்தியா கிரகத்திற்குக் கூறிய இலக்கணங்கள்.

Image result for திருவள்ளுவர்

“உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை

 அற்றே தவத்திற்கு உரு”       (261)

தனக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், பிற உயிர்களுக்குக் கேடு செய்யாதிருத்தலுமே தவம் என்பார் திருவள்ளுவர். காந்தியடிகள் மிகச்சிறந்த தவசீலராக விளங்கினார்.

மகாத்மாவாக வாழ்ந்த காந்தியடிகள் தம்மை ஒரு சாதாரண மனிதராகவே கருதிக்கொண்டார். சாதாரண மனிதர்கள் மீது அக்கறை கொண்டார். சாதாரண மனிதர்கள் மீது அவர் கொண்ட அன்பு தான் சாதாரண மனிதர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் செய்ய வைத்தது. காந்தியடிகள் தேசிய விடுதலையைச் சிந்தித்த அதே வேளையில் சமூக விடுதலையைப் பற்றியும் சிந்தித்தார். அதனால்தான் தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக இருந்தார்.

“நான் என்ன விரும்புகிறேனோ, எதற்காக வாழ்ந்து கொண்டு இருக்கின்றேனோ, எதற்காகச் சாவதற்கு மகிழ்ச்சி யடைகிறேனோ அது தீண்டாமை. வேரும் கிளையு மில்லாமல் அழித்து விடுவதாகும் என்னுடைய உண்ணாவிரதம் சாதி இந்துக்களை அவர்களுடைய உறக்கத்திலிருந்து எழுச்சி பெறச் செய்து விழிப்புறச் செய்யுமானால் அது அதன் நோக்கத்தை நிறைவேற்றியதாகும்.” எனச் சூளுரைத்து அதில் வெற்றியும் கண்டார். காந்தி யடிகளின் போராட்டத் திற்குப் பின் பல ஜாதி இந்துக்கள் தீண்டாமை பற்றிய வைதீக எண்ணத்தைக் கைவிட்டனர். கோயில்கள், சாலைகள், கிணறுகள் அனைத்தும் தீண்டத் தகாதவர்களுக்கும் திறந்து விடப்பட்டன என்பது வரலாறு. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதையும், ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்பதையும், அன்பு வழியே ஆயுதத்தால் சாதிக்க இயலாததைச் சாதிக்க வல்லது என்பதையும் தமது வாழ்க்கையில் மெய்ப்பித்துக் காட்டியவர் காந்தியடிகள். அன்பு வழி மாறி இன்றைய உலகம் செல்வதால் தான் எங்கும் பகைமையும், பூசலும், வன்முறையும் நிலவுகின்றன.

 

காந்தியடிகளின் தமிழ்ப்பற்று

Image result for காந்தியடிகள்

காந்தியடிகள் தமிழ்மொழி மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த மரியாதையும், பாசமும் வைத்திருந்தார். ‘தமிழ்மொழி கற்க மிகுந்த நாட்களைச் செலவு செய்துள்ளேன்’ என அவரே கூறியுள்ளார். ‘இந்தியாவில் அனைவரும் ஓரினமாக வாழ வேண்டும் என்றால் சென்னை மாநிலத்திற்கு வெளியே வாழ்கிறவர்கள் தமிழ் மொழியை அவசியம் கற்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார் காந்தியடிகள்.

காந்தியடிகள் திருக்குறள் மீது அளவிட முடியாத அளவிற்கு விருப்பமும், மரியாதையும் வைத்திருந்தார். “திருக்குறளைப் படிக்காத ஒருவரை இந்திய இலக்கியப் படைப்பாளியாக நான் கருத மாட்டேன்” என்பது அகமதாபாத் நகரில் நடந்த இந்திய இலக்கியப் படைப்பாளிகள் மாநாட்டில் காந்தியடிகள் வெளியிட்ட பிரகடனம் என்றும், காந்தியடிகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தவர் தில்லை யாடியைச் சேர்ந்த கன்னியப்பச் செட்டியார் என்ற தகவலையும் செய்தித் துறையில் பணியாற்றிப் பெருமை பெற்ற திரு.அ.பிச்சையா தமது ‘சிந்தனைப் புள்ளிகள்’ நூலில் குறிப்பிடுகிறார்.

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கியும் மேதையில் மேதையாக வாழ்ந்திட்ட மகாத்மா அவர்கள் சத்தியத்தின் மீதும், அகிம்சையின் மீதும் முழுமையான நம்பிக்கை கொண்டு, அதனையே தமது போராட்டக் களத்தின் ஆயுதமாக முன் நிறுத்தி இந்திய தேசத்தின் விடுதலைக்கும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நிலைப்பாட்டினை உருவாக்கி சமூக விடுதலைக்கும் வித்திட்டு மானிட சுதந்திரப் பயிரினைச் செழிப்புற வளர்த்திட்ட பெருமகனார்.

“நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

     மலையினும் மாணப் பெரிது”        (124)

என நடையில் நின்றுயர் நாயகராகத் திகழ்ந்திட்ட மகாத்மா அவர்களுக்குச் சிலை வைத்துச் சிறப்புச் செய்வது பாராட்டிற்கு உரியது. பிரான்சு நாட்டில் உள்ள வொரெயால் நகரத்தில் புதுச்சேரி தமிழ் உள்ளங்கள் தமிழ்க் கலாச்சார மன்றம் வைத்து இந்திய நாட்டின் கலாச்சார சிறப்புக்களையும், தமிழக மக்களின் பண்பாட்டு மேன்மைகளையும் பரப்பி வருவது போற்றுதற்கு உரியது. இச்சீரிய பணியினை சிரமேற்கொண்டு செய்து வரும் தமிழ்க் கலாச்சார மன்றத் தலைவர் திரு.பாண்டுரங்கன், இலங்கைவேந்தன், செயலாளர் திரு.இராமச்சந்திரன் உள்ளிட்ட மன்ற நிர்வாகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். நீண்ட நெடுங்காலம் ஒற்றுமையுடன் பிரான்சு நாட்டில் வாழ்ந்து வரும் அனைத்துத் தமிழ் மக்களும், அவர்கள்தம் குடும்பத்தினரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து சிறந்திட எல்லாம் வல்ல அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் அருளினை வேண்டி வாழ்த்தி வணங்குகிறேன்.