என்னைச் செதுக்கிய திருக்குறள் – பாகம் 3

Image result for காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்

ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் சமயத்தில் எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைச் சொல்கிறார் திருவள்ளுவர். இங்கே அவர் ஒரு பெரிய உண்மையைக் கூறுகிறார்.

உனக்குச் சொந்தக்காரர், மனைவிக்குச் சொந்தக்காரர், நண்பருக்குச் சொந்தக்காரர் என்று நினைக்காதே. அவருக்கு உதவி செய்வது வேறு விஷயம். இந்தத் தொழிலுக்கு இவர் தகுதியானவரா என்று மட்டும் பார். அப்படி இல்லையென்றால் அந்தத் தொழில் அழிந்துவிடும். வாழ்நாள் முழுவதும் துயரம் தரும்.

காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்

     பேதமை எல்லாம் தரும்”       (507)

ஒரு காரியத்தைத் திட்டமிடுவதற்கு, ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன் அதன் லட்சியம் என்ன? அந்த லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகள் யாவை? அந்த வழிமுறைகளுக்கு வரக்கூடிய இடையூறுகள் என்ன? அந்த இடையூறுகளை வெல்லுவதற்கு உரிய வழிமுறைகள் எவை? இவையெல்லாம் வெற்றி பெற்ற பின்பு உனக்குக் கிடைக்கக்கூடிய விளைவு (ரிசல்ட்) என்ன?

“முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

     படுபயனும் பார்த்துச் செயல்”              (676)

ஒரு தொழிலை ஆரம்பித்திருக்கிறோம் என்றால் என்ன நோக்கத்திற்காக ஆரம்பித்துள்ளோம், அதற்கு என்ன லாபம் கிடைக்கும், இதற்கு இடையில் வரக்கூடிய இடையூறுகள் எவை, அவற்றை வெல்லுவதற்கு உரிய வழிகள் என்ன, இவைகளை எல்லாம் வென்ற பின்பு கடைசியில் உனக்கு லாபம் கிடைக்குமா? நட்டம் வருமா? இலாபம் கிடைத்தால் செய், இல்லை என்றால் விட்டுவிடு. என்று நன்கு ஆராய்ச்சி செய்யச் சொல்கிறார். அந்தத் தொழிலுக்கு எனத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மிகச் சிறந்தவர் களாக இருக்க வேண்டும் என்கிறார்.

“தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

 அரும்பொருள் யாதொன்றும் இல்”        (462)

அவ்வாறு தேர்ந்தெடுத்தவரைச் சூழ்ந்து ஆலோசனை பெறவேண்டும்… நீதான் தொழிலதிபர் என்று நினைக்காதே அந்தத் துறையில் சிறந்தவரைக் கூப்பிட்டு ஆராய்ந்துபார் அதற்குப் பிறகு முடிவெடு, துணிவு கொள். அந்தத் துணிவை மிக விரைந்து செய். இல்லாவிட்டால் பயன் இல்லாமல் போய்விடும். என விளைவு பற்றிப் பேசுகிறார் வள்ளுவர்.

“சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல்; அத்துணிவு

 தாழ்ச்சியுள் தங்குதல் தீது”                (671)

இதைச் செய்து முடித்தபிறகு வெற்றிபெற்று விட்டோம் என்று ஆனந்தமாய் இருந்துவிடாதே. மேலும் மேலும் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும். வெற்றி பெற்று விட்டோம் என்று சும்மா இருந்து விடக்கூடாது.

“இறந்த வெகுளியின் தீதே சிறந்த

 உவகை மகிழ்ச்சியிற் சோர்வு”       (531)

“சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

 நிலத்தறைந்தான் கைபிழையா தற்று”  (307)

கோபம் கொண்டவன் அழிந்து போய்விடுவான். அதுபோல வெற்றி பெற்று விட்டோம் என்று சும்மா இருந்தால், மேலும் மேலும் செய்யாது சோர்ந்திருந்தால் நீ தோற்றுப்போய் விடுவாய். தொடர்ந்து சோர்வில்லாமல் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒன்றைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால் 60 மைல் ஓடிக்கொண்டே இருந்தால்தான் 40 மைலைக் காப்பாற்ற முடியும் என்று தன்னம்பிக்கையை ஊட்டுகிறார் இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. அது போல காரியம் செய்கின்றபோது,

“கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக்கொட்கின்

 எற்றா விழுமம் தரும்”             (663)

என்கிறார். செய்யப் போகின்றதைப் பற்றி, ஒரு காரியத்தை உடனே வெளிப்படுத்தி விடக்கூடாது. அப்படி வெளியிட்டு விட்டால் தோற்றுப்போய் விடுவார்கள். பகைவர்களும், போட்டியாளர்களும் உத்தியைத் தெரிந்து கொண்டு தோற்கடித்து விடுவார்கள். அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். ஒன்று செய்கின்ற சமயத்திலே மிக ரகசியமாகத் திட்டமிட்டு அக்காரியம் முடிந்த பிறகே வெளிப்படுத்த வேண்டும் அதுதான் ஆண்மை என்று சொல்கிறார் வள்ளுவர்.

ஒருவகைப் புல் உண்டு. அதனைப் போட்டுவிட்டால் மண்ணுக்கு அடியிலேயே மிகச்சிறப்பாக வளர்ந்து திடீரென வெளிப்படும். மிகச்சீரிய காரியங்களைச் செய்யும் போது கடைசிவரை அதனை வெளிப்படுத்தக் கூடாது என்று சொல்கிறார் வள்ளுவர். மிக வியப்பாக இருக்கிறது. இப்பொழுது உள்ள தொழில்நுட்பத் திறன் பற்றி எல்லாம் திருவள்ளுவர் அன்றே சிந்தித்து இருக்கிறார். லேண்ட், லேபர், கேப்பிட்டல், டைம் என்ற கான்ஸப்ட் பற்றி எல்லாம் சொல்லி இருக்கிறார்.

Image result for thirukkural

“பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்

     இருள்தீர எண்ணிச் செயல்”          (675)

ஒரு காரியத்தைச் செய்வதற்கு, செயலுக்குத் தேவைப்படுகின்ற ஒரு மனிதனின் அளவுகோல் எது? குலச்சிறப்பு வேண்டாம், படித்திருக்க வேண்டாம், பட்டம் பெற வேண்டாம். ஆனால் அவன் நல்ல எண்ணத்தோடு, நல்லதைக் கேட்டுச் செய்து விடுவானானால் அவனால் முடியாதது என எதுவும் இருக்காது.

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

 செல்லும்வா யெல்லாம் செயல்”     (33)

“ஒல்லும் வாய்எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால்

 செல்லும்வாய் நோக்கிச் செயல்”     (673)

“ஓல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்

 செல்வார்க்குச் செல்லாதது இல்”     (472)

இது ஒரு திறன். இயன்றவரையில் எல்லாம், வகையில் எல்லாம், தொடர்ந்து தயங்காமல் காரியத்தைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.

எந்தக் காரியம் செய்தாலும் காலம் அறிந்து, இடமறிந்து செய்தால் வெற்றி பெறலாம். எது உன்னால் முடியும் என்று ஆராய்ந்து செய். முடியாததை நினைக்காமல் விட்டுவிடு.

“உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி

 இடைக்கண் முரிந்தார் பலர்”        (473)

உன் வலிமை எது என்பதைப் புரிந்து கொண்டு, அதனை நன்றாக ஆராய்ந்து, அதனில் கருத்தைச் செலுத்தி, மன வலிமையைச் செலுத்தி அந்தக் காரியத்தைச் செய்தால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை என்கிறார் வள்ளுவர் இது தன்னம்பிக்கை ஊட்டக் கூடியது. மிக வியப்பாக இருக்கிறது. அதுபோல ஒரு காரியத்தில் வெற்றி பெற்று விட்டாயானால் மற்றதில் எளிதாக வெற்றி பெறலாம். சினிமாக்காரர்கள் வருவதற்கு இதுதான் காரணம். அந்தத் துறையில் வெற்றிபெற்றவர்கள் மீண்டும் வந்து விடுவார்கள். என்ன காரணம் ஒரு காரியத்தைச் செப்பமாகச் செய்ததனால் மற்ற காரியங்கள் இயல்பாகச் செயல்படத் தொடங்கிவிடும். இதுதான் வினையாகச் செயல்படுவது.

ஒரு மதம் பிடித்த யானையை நன்றாகப் பழக்கி விட்டோமானால் அந்த யானையை வைத்து காட்டில் பல யானைகளைப் பிடித்துவிடலாம்.

“வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

 யானையால் யானையாத் தற்று”      (678)

‘மேனேஜிங் கான்சப்ட்’ குறித்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் என்றால் மிகப் பெரிய வியப்பாக இருக்கிறது.

என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியவர் எனது மாமனார் திரு.வி.கே.கே. கல்யாணசுந்தரம் அவர்கள். அவர்களைப் பற்றி அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். அவர் அதிகமாகப் படித்ததில்லை. ஆனால் அவர் வெற்றி பெற்றதற்குக் காரணம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. அதன் பிறகு விடாமுயற்சி, தன்னம்பிக்கை. பெரியோர்களின் ஆசி, இறைவன் திருவருள் இவையெல்லாம் அவரிடம் இருந்ததனால்தான் மிகப்பெரிய அளவில் உயர்ந்தார். திருவள்ளுவர் சொல்கிறார் வெறும் உழைப்பு மட்டும் போதாது. புத்திசாலித்தனமான உழைப்பாக இருக்க வேண்டும் என்கிறார்.

“ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்

 நீள்வினையால் நீளும் குடி.”         (1022)

“முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை

 இன்மை புகுத்தி விடும்.”      (616)

“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

 மெய்வருத்தக் கூலி தரும்.”          (619)

“அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

 பெருமை முயற்சி தரும்”      (611)

என்னால் செய்ய முடியுமா என்று அஞ்சி நிற்காதே. புறநானூற்றுப் புலவர் இதனை அழகாகச் சொல்வார். இதைச் செய்ய முடியுமா என்று அஞ்சிநிற்கும் கோழைகளே! உங்களுக்குச் சொல்கிறேன். யானை வேட்டைக்குச் செல்லுங்கள். யானை வேட்டை என்றால் யானையைப் போன்ற பெரிய இலட்சியத்தைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். யானை வேட்டைக்குச் சென்றால் யானையைப் பெற்றுவிடலாம். குருவி வேட்டைக்குச் செல்லாதீர்கள். சிறு இலட்சியத்தைத் தேடாதீர்கள். குருவி கிடைக்காமல் போகலாம். ஆகவே வாழ்கின்ற காலத்தில் கடுமையான முயற்சியுடன் உழைத்தீர்களேயானால் இந்தச் சமுதாயத்தில் நீங்கள் பெரும் பெருமையைப் பெறலாம்.

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றுஅது

     வேண்டாமை வேண்ட வரும்”  (362)

“கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

     மற்றுஈண்டு வாரா நெறி”       (356)

பிறவி இல்லாத வாழ்க்கை உங்களுக்கு முக்தியினைத் தந்திருக்கும். அதில் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் சொர்க்க லோக இன்பம் தரும். அதிலும் நம்பிக்கை இல்லை யென்றால் நீ வாழ்கிற காலத்திலே பெருமையுடையதாக வாய்த்திராது.

வானளவு உயர்ந்திருக்கும் இமயமலை அளவு நீ வாழலாம். கவிப்பேரரசு வைரமுத்து சொல்வது போல சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறலாம். வாழ்கின்ற காலத்திலே வேண்டியதை எல்லாம் கடுமையான முயற்சியும் உழைப்பும் இருந்து தொடர்ந்து பணியாற்றினால் வெற்றி பெறுவீர்கள். நான் அடிக்கடி மாணவர்களிடையே சொல்லுவது வழக்கம். எல்லா மாணவர்களும் கடைப் பிடிக்க வேண்டியது இதுதான்.

வாழ்க்கையிலே மிகப்பெரிய லட்சியம் இருக்க வேண்டும் நான்கு குற்றங்களை நீக்க வேண்டும்.

“நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

     கெடுநீரார் காமக் கலன்.”      (605)

ஒருவன் கெட்டுப் போக வேண்டும் என்று நினைத்து விட்டால் ஒரு கப்பல் இருக்கிறது. அதில் ஏறிக்கொள்ளலாம் காலம் தாழ்த்திச் செய்தல், மறந்து போதல், செய்யக் கூடியதை மறந்து விடுதல், தூக்கம், சோம்பல், சுறுசுறுப்பு இன்மை, சோம்பலில் இரண்டு சோம்பல் உண்டு. உடல் சோம்பல், மூளைச் சோம்பல் இந்த இரண்டையும் நீ விட்டுவிடு. காலம் தாழ்த்திச் செய்தல். மறந்து போதல், தூக்கம், சோம்பல் இந்த நான்கையும் விட்டுவிடு என்று வள்ளுவர் சொல்கிறார்.

முயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் நல்ல நேர்மை யுடனும் காரியம் ஆற்றுபவனுக்கு இறைவன் திருவருள் வாய்க்குமேயானால் அவன் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவான். அந்த வகையில் தான் எனது மாமனார் உள்ளுணர்வு மிக்கவராக இருந்தார். பெண்களுக்கும் சிந்தனையாளர்க்கும் அந்த ஆற்றல் மிகுதியாக இருக்கும். நான் அவரைப் பற்றிச் சொல்லும் பொழுது விரைவு பற்றிச் சொல்வேன். நாளைதான் செய்ய முடியும் என்ற காரியத்தை, வேலையை இன்றே அல்ல, நேற்றே முடித்திருக்க வேண்டும் என்று சொல்லுவார். விரைவு, துணிவு அப்படி ஒரு மிகப் பெரிய ஆற்றல் அவருக்கு இருந்தது. அவரை அறியாமலே அத்தகு ஆற்றல் அவருக்குக் கிடைத்திருக்கிறது. தன் குடும்பத்தை உயர்த்துவதாக இருந்தாலும் சரி, குடியை உயர்த்த வேண்டுமானாலும் சரி, நாட்டை உயர்த்த வேண்டுமானாலும் சரி அந்தப் பேராற்றல் அவருக்குத் துணை நின்றது.

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

     மடிதற்றுத் தான்முந் துறும்”          (1023)

ஒருவன் தன் குடியை உயரச் செய்வேன், நாட்டை உயரச் செய்வேன் என்று தனது கையை உயர்த்தி நிற்கையிலே தெய்வம் வேட்டியை இறுகக் கட்டிக் கொண்டு அவனுக்கு ஏவல் செய்யக் காத்திருக்கும்; தூணாக நின்று தாங்கி நிற்கும். இவ்வளவு தன்னம்பிக்கை ஊட்டியவர் திருவள்ளுவர். இந்த நூற்றாண்டில் இதைவிட வழிகாட்டுதல் வேறு எது வேண்டும்? இதுபோன்ற நிறையச் செய்திகளைச் சொல்லி வைத்திருக்கிறார் வள்ளுவர்.

இந்த அடிப்படையைப் பெற்றுக் கொண்டால் நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேறலாம். வாழ்க்கையில் அவசியமானது எது? பொருள் முக்கியம். போதும் என்ற மனமே பொன் செய்யும் என்று வள்ளுவர் சொல்லவில்லை நீ சமுதாயத்தில் உயர வேண்டும் என்று சொன்னால் பொருளாதாரத்திலே சிறந்து இருக்க வேண்டும் என்கிறார்.

“பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்

     பொருள்அல்லது இல்லை பொருள்”         (751)

பொருள் போல வலிமையுள்ளது வேறு எதுவுமில்லை. ஒன்றுமே லாயக்கில்லாதவனையும், மிகச்சிறந்த மனிதனாக்க வேண்டும் என்று சொன்னால் பொருளை சம்பாதி என்கிறார் வள்ளுவர். மேலும் பிறரது செருக்கை அழிக்க வேண்டும் என்றால் செல்வத்தை ஈட்டு என்கிறார்.

“செய்க பொருளை; செறுநர் செருக்கறுக்கும்

     எஃகுஅதனின் கூரியது இல்”         (759)

‘உன்னை உயர்த்திக் கொள்ள, உன் பகைவனுடைய செருக்கை அடக்கிட, மிகப்பெரிய செல்வத்தைச் செய்’ என்று கட்டளை இடுகிறார் வள்ளுவர்.

“பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்

     எண்ணிய தேயத்துச் சென்று”         (753)

அதுபோல ஒரு நாடு தன்னிறைவு பெற்ற நாடாக இருக்க வேண்டும் என்று சொன்னால் நிறைய உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இருள் என்பது அறியாமை, வறுமை இந்த வறுமையைப் போக்க வேண்டும் என்றால் சென்ற நாடெல்லாம் முயன்று பொருள் ஈட்டவேண்டும்.

“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

     தீதுஇன்றி வந்த பொருள்”           (754)

அருளை வளர்க்க வேண்டுமென்று சொன்னால் கூடப் பொருள் வேண்டும்.

“அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்

     செல்வச் செவிலியால் உண்டு” (757)

ஆகவே பொருள் தான் மிக முக்கியம். நியாயமான முறையில் பொருளை சம்பாதித்தாயானால் அதுதான் அன்பை வளர்க்கக் கூடிய அருளை வளர்க்கும் நீ வலிமை யுடையவனாக இருக்கலாம். பொருள்தான் உன்னை மதிக்கத்தக்கவனாக மாற்றும். ஆகவே பொருளாதார மேன்மை வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

ஒரு நாட்டினுடைய பெருமை எங்கிருக்கிறது என்று சொன்னால் தன்னிறைவு பெற்றதாக இருக்கிறது என்பதில் இருக்கிறது. யாரையும் நாடி நிற்கக்கூடாது. அந்த அளவுக்கு அந்த நாடு ஆற்றல் பெற்ற நாடாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஒரு நாடு வல்லரசாக முடியும். 2020-இல் வல்லரசு ஆக வேண்டுமென்று சொன்னால் பல வகையிலும் முயன்று வளத்தைப் பெருக்கி இந்நாட்டை நாம் உருவாக்க வேண்டும் எனக் கட்டளை இடுகிறார்.

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

     ஆராய்வான் செய்க வினை”          (512)

என்கிறார் வள்ளுவர். இவைகளெல்லாம் நடைமுறைச் சிந்தனைகள்.

வாழ்க்கையில் மனித நேயம் வேண்டும். அதை மிகச்சிறப்பாக வலியுறுத்துகிறார் வள்ளுவர். வாழ்கின்ற வாழ்க்கையின் பயன் எது? வாழ்க்கையின் பயனே பிறருக்கு உதவுவது தான்.

“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

     தந்நோய்போல் போற்றாக் கடை?”    (315)

இதில் அதிகமான நுட்பம் இருக்கிறது. அறிவைப் பெற்றதனால் என்ன பயன்? பிறருக்கு உதவுதல் தான். உதவுவது என்றால் ‘பார்டிசிபேசன் அண்டு இன்வால்வ் மென்ட்’. பிறருடைய துன்பத்தைத் தன்னுடைய துன்பமாக ஏற்றுக்கொண்டு அத்துன்பத்தில் பங்கெடுத்துக்கொண்டு அத்துன்பத்தின் கொடுமையை உணர்ந்து அவர்களுக்கு நன்மை செய்வோமேயானால் அதுதான் மனித நேயம்.

Image result for thirukkural

“பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

     தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”     (322)

மனித உயிர்களன்றி இந்த உலகத்தில் உள்ள ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை எல்லாவற்றையும் காக்க வேண்டியது நமது கடமை. இது நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாய அறமாகச் சொல்வது.

இராமலிங்க அடிகளார் மிகவும் அழகாகச் சொல்கிறார்.

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’

என்று. மிகப்பெரிய நேயம் என்று சொன்னால் அது மனித நேயம் தான். எத்துணையும் பேதமுறாது எல்லாவுயிரையும் நேசிக்கிறார் வள்ளலார்.

‘நான் தொண்டருடைய தாளைப் பணிய விரும்புகிறேன் தொண்டர் எப்படிப்பட்டவர்? அவர் சாதாரணமானவரில்லை. எல்லா உயிரையும் நேசிக்கிறவர். அவர் உள்ளத்திலே சிவபெருமான், தில்லை நடராசர் நடனம் ஆடுகிறார். அந்த அருளாளரைக் கண்டு அவர் தாளினைப் பணிய என் உள்ளம் விழைகிறது. யாரெல்லாம் சமுதாயத்தின் உயிர்களை நேகிக்கின்றாரோ அவரே என் இறைவன். அவரே என் தலைவன்’ என்று கூறுகிறார் வள்ளலார்.

மனிதராகப் பிறந்தவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். ஒரு பயன் இருக்க வேண்டும். பலரால் இந்த உலகம் வாழவில்லை ஒரு சிலரால்தான் இந்த உலகம் வாழ்கிறது. அந்த ஒருசிலரில் நாம் ஒருவராக இருக்க வேண்டும்.

இந்த உலகம் எதனால், யாரால் வாழ்கிறது என்றால் தனக்கென வாழாது பிறர்க்காக வாழும் ஒரு சிலரால் தான் வாழ்கிறது.

“உண்டால் அம்ம இவ்வுலகம்…

     தமக்கென முயலா நோன்தான்

     பிறர்க்கென முயலுநர் உண்மையானே”

“விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா

     மருந்துஎனினும் வேண்டற்பாற் றன்று” (82)

அமிழ்தமே கிடைத்தது என்றாலும் அதனைப் பகிர்ந்தளிப்பார்கள். இந்த உலகமே பரிசு என்று சொன்னாலும் பழிச்செயல்களைச் செய்ய மாட்டார்கள். புகழ் என்றால் தம் உயிரையும் கொடுப்பார்கள். உழைப்பார்கள்; கடுமையாக உழைப்பார்கள். பிறர்க்காக உழைப்பார்கள். அத்தகைய ஒரு சிலர் இருப்பதால்தான் இந்த உலகம் வாழ்கிறது. அதை அழகாக,

“பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அதுஇன்றேல்

     மண்புக்கு மாய்வது மன்”      (996)

என்கிறார் வள்ளுவர்.

நல்ல பண்புடையவர்களுடன் பொருந்தி இருப்பதனால் தான் இந்த உலகம் நிலைத்திருக்கிறது. இல்லையென்றால் இந்த உலகம் என்றோ அழிந்து போயிருக்கும் என்று சொல்கிறார் வள்ளுவர்.

எனது வாழ்க்கையில் நான் பல நூல்களைப் படித்திருந்தாலும்கூட திருக்குறள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. அதனால்தான் நாம் திருக்குறளை உலகப் பொதுமறையாகக் கொண்டிருக்கிறோம்.

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

     மறைமொழி காட்டி விடும்”         (28)

எனப் பேசுகிறோம். திருக்குறள் இந்தியாவின் தேசிய நூல் ஆக வேண்டும். இந்திய நாட்டின் தேசியப் பறவை மயிலாக இருக்கிறது, தேசிய விலங்கு புலியாக இருக்கிறது, தேசிய மலர் தாமரையாக இருக்கிறது, உலகமெல்லாம் போற்றக்கூடிய திருக்குறள் தேசிய நூலாக வேண்டாமா? அதற்கு நாமெல்லாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். சிந்தனையை ஒருங்கிணைத்துச் செயலாற்ற வேண்டும். ஒன்றை நினைத்து நினைத்துச் சிந்தித்துச் சிந்தித்து செய்து கொண்டிருந்தால் வெற்றியாகும். வெற்றி பெறுவதற்கு எது அடிப்படை என்று சொன்னால்,

“உள்ளிய எய்தல் எளிதுமன் மற்றும்தான்

     உள்ளியது உள்ளப் பெறின்”          (540)

என்றும்,

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

     திண்ணியர் ஆகப் பெறின்”           (666)

என்றும் அறுதியிட்டு உரைப்பார் வள்ளுவர்.

திருப்பித் திருப்பி அதை நினைப்போம் எல்லோரும் ஒன்றாக இணைந்து நினைப்போம்.

“அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

     நாடி இனிய சொலின்”        (96)

என்பது வள்ளுவர் வாக்கு.

என்னைப் பெருமைப்படுத்த எவ்வளவு பெரியவர்கள் வந்திருக்கிறீர்கள். இது எனக்குப் பெருமகிழ்ச்சி

இந்த உலகம் சிறப்பாக வாழ வேண்டும் என்று சொன்னால் ஒருமைப்பாடும், சகோதர நேயமும் இருக்க வேண்டும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்.’ இது ஒரு பெரிய தத்துவம்!

சான்றோர்கள் என்ன செய்வார்கள்? மிகப்பெரிய ஆற்றலுடையவர்களைக் கண்டு இது இயற்கைதானே என்று அவர்களைப் பற்றி வியக்கமாட்டார்கள் சரி கீழே இருப்பவர்களைக் கண்டு மோசமானவர்கள் என்று அவர்களை இகழ மாட்டார்கள்.

பெரியவர்கள் பெரியவர்களாக இருப்பது இயற்கை என்று கொண்டு, சிறியவர்கள் மீது இரக்கம் காட்டி நடந்து கொள்வார்கள். எனக்குச் சில சமயங்களில் இந்த சந்தேகம் வந்துகொண்டிருக்கும். எதற்காக அப்படிச் சொன்னார்கள் என்று மிகச்சிறப்பாகச் செய்யக் கூடியவர்களை உனக்கு இது இயற்கைதானே என்று வியக்க மாட்டார்கள். அதுபோல சிறியவர்களை இகழமாட்டார்கள். இவர்கள் இப்படித்தான் இருக்க முடியும் என்று நம்புவார்கள். இது சமநிலை. தன்னுடைய தவறுக்குத் தானே தான் காரணம். அதனைத் தீர்ப்பது உன்னைப் பொருத்தது. இந்த துன்பம் வந்ததற்குக் காரணம் வேறு ஒருவர் அல்ல. இந்தத் துன்பத்திற்குக் காரணம் நீதான். உன்னுடைய உழைப்புதான் அந்த துன்பத்தை நீக்க வேண்டும்.

“தீதும் நன்றும் பிறர்தர வாரா.”

வாழ்கின்ற காலத்திலே மிகச்சிறந்த நன்மைகளைச் செய்து வாழ வேண்டும்.

“அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க; மற்றுஅது

     பொன்றுங்கால் பொன்றாத் துணை”         (36)

என்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2

Image result for thirukkural“இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

     உணர விரித்துஉரையா தார்”               (650)

படித்ததை சிரமப்பட்டு விளக்கிச் சொல்லி அதைப் பரப்புவதும் சிரமமானது. கொத்தாக மலர் மலர்ந்திருக்கிறது. அந்த மலர்கள் மணம் வீசாத காகிதப் பூக்களாக இருந்தால் பயனில்லை இவைகளையெல்லாம் தெரிந்தும், பிறர்க்கு உணர்த்தியும், சிரமப்பட்டு தாம் படித்ததை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழாமல் போய்விட்டால் அவன் பேதையிலும் பேதை என்கிறார் வள்ளுவர். ஆகவே திருக்குறளைப் படிக்கின்ற நோக்கமே அதை வாழ்வியல் நூலாக, வருகின்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடியதாக இருப்பதுதான் என்பதைக் கண்டேன்.

சான்றாக சில உதாரணங்களைக் கூறுவேன். திருக்குறள் எப்படி எல்லாம் என் வாழ்க்கையில் பயன்பட்டது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு மனிதன் சிறப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அவன் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும். எனது திருமணம் என் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

ஒரு குடும்பம் வெற்றி பெற வேண்டும் எனச் சொன்னால், நல்ல மனைவி, நல்ல மக்கள், நல்ல நண்பர்கள், நல்ல சான்றோர்கள், நல்ல எண்ணம் இவையெல்லாம் அமைந்திருந்தால் தான் அந்த குடும்பமும் அவனும் சிறப்பாக இருக்க முடியும்.

“இல்லதென் இல்லவள் மாண்பானால்?”     (53)

என்ற வகையிலே எனது துணைவியார் அமைந்திருந்தார். எனது வாழ்க்கையின் அனுபவத்தைச் சொல்வதானால் அடக்கமாகச் சொல்கிறேன். குழந்தைகளெல்லாம் அன்பு மிகுந்தவர்களாக இருந்தார்கள். மாலையில் பேசிக் கொண்டிருக்கும்பொழுது ஆதித்தனார் ஒரு சிறந்த செய்தி சொன்னார்; ஆண்குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் அன்பாக இருப்பார்கள் என்றார். அந்த அன்பைப் படித்திருக்கிறோம். திருக்குறளில் படித்ததை வாழ்வில் அனுபவிக்கும் பொழுதுதான் அதன் பெருமையை உணர்ந்தேன். இரண்டு ஆண்டுகளுக்குமுன் நான் அப்பல்லோ மருத்துவமனையில் நலிவுற்று இருந்த பொழுது பிள்ளைகளும் துணையாக இருந்தார்கள். நான் ஒரு சிறு அசைவு அசைந்தாலும் உதவிக்கு வந்து விடுவார்கள். பத்து நாட்கள் அவர்கள் இருந்து உதவிகள் செய்தது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. கடைசியில் தான் தெரிந்தது. அவர்கள் தூங்கவே இல்லை என்பது, அந்த அன்பினது பெருக்கை அப்பொழுது தான் உணர்ந்தேன் என்னை அறியாமலே கண்களில் நீர் வடிந்தது.

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்

     புன்கண்நீர் பூசல் தரும்”        (71)

துன்பம் வந்த சமயத்திலேதான் என் குடும்பத்தினர் உறுதுணையாகவும், நெகிழ்ந்தும் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். துன்பம் வரும் பொழுது நெருக்கமான வர்கள் அன்பு காட்டும் சமயத்தில்தான் அன்பின் உண்மைப் பொருளை, அன்பின் உயிர்ப்பை நன்றாக உணரமுடிகிறது.

இதுபோன்று பிரச்சினைகள் வருவது இயற்கை எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரி மிகப்பெரிய அரசனாக இருந்தாலும் சரி, பெரிய செல்வந்தனாக இருந்தாலும் சரி. துன்பங்கள் வரும். இன்பம் போல துன்பமும் இயற்கையானது. அந்தத் துன்பத்தை வெல்லுவதற்கு வழி சொல்கிறார் வள்ளுவர்.

“இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்

     கையாறாக் கொள்ளாதாம் மேல்.”     (627)

எவ்வாறு இன்பம் இயற்கையானதோ அவ்வாறு துன்பமும் இயற்கையானது. இன்பமும், துன்பமும் இரவு பகல் போல வரும். வாழ்க்கையிலே துன்பத்தைக் கண்டு அஞ்சாதே என்ற தைரியத்தைக் கொடுக்கிறார், அந்தத் துன்பத்தை வெல்லுவதற்கு வழி சொல்கிறார் வள்ளுவர்.

“இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்

     ஒன்னார் விழையும் சிறப்பு”          (630)

இன்னாமையையே இனிமையாக்கிக் கொண்டால், அதையே சுவையாக்கிக் கொண்டால் துன்பம் உங்களை விட்டு ஓடிவிடும். உயர்வுக்கு அடிப்படையாவது நல்ல பேச்சும், நல்ல எண்ணமும், நல்ல சொல்லும்தான் அத்தகைய தூய உள்ளம் இருந்தால் மிகப்பெரிய ஆற்றல் கிடைக்கும் அந்த ஆற்றலைக் கொண்டு எல்லாத் துன்பங்களையும் வென்றுவிடலாம்.

“வெள்ளத்து அனைய இடும்பை அறிவுஉடையான்

 உள்ளத்தின் உள்ளக் கெடும்”   (622)

உள்ளத்தால் நினைத்தாலே துன்பங்கள் ஓடிவிடும் என்று சொல்கிறார் வள்ளுவர். அப்படியானால் இந்த வாழ்க்கையில் வெற்றியடைய வள்ளுவர் என்ன சொல்கிறார்?

நம்மைக் காட்டிலும் ஒரு பேராற்றல் இருக்கிறது அது நமக்கு வழிகாட்டுகிறது என்பதை உணர்ந்தேன் முதலில் நான் இறைமறுப்புக் கொள்கையைத்தான் பேசிக் கொண்டிருந்தேன்; அனுபவமின்மையால் அறிவுப் பூர்வமாக ஒரு தருக்கம் என்ற முறையில் நான் பேசிக் கொண்டிருந்தேன். காலப்போக்கில் துன்பங்களும் சோதனைகளும் வரும் சமயத்திலேதான் நன்றாகக் கண்டு கொண்டேன். நம்மைக் காட்டிலும் மிகப்பெரிய ஓர் அற்புதமான சக்தி நம்மை வழி நடத்துகிறது. என்பதை உணர்ந்தேன். துன்பத்திலிருந்தும், துயரத்திலிருந்தும் நீங்க வேண்டும் என்று சொன்னால், ஒரு பெரிய சக்தியை, பரம்பொருளை அது எந்தத் தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று கருதினேன். அதைத் தான் திருவள்ளுவர் சொல்கிறார்.

‘நீ உவமை உள்ளவன், சிற்றறிவு உள்ளவன். இறைவன் பேரறிவாளன், நீ பேரறிவாளனாகிய இறைவன்தாளைப் பற்றிக் கொண்டால்தான் அந்தத் துன்பத்திலிருந்து நீங்க முடியும்.’

“தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

 மனக்கவலை மாற்றல் அரிது”        (7)

இடும்பைக்கு இடும்பை படுத்த வேண்டும் என்று சொன்னால் இறைவன் தாளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

“வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

 யாண்டும் இடும்பை இல”          (4)

‘விருப்பு வெறுப்பு இல்லாத இறைவன் தாளைப் பிடித்தால் தான் உனது துன்பத்தை நீக்க முடியும்’ என்று வள்ளுவர் சொல்கிறார்.

ஆகவே இறைவன் எங்கு இருக்கிறான்? வேறு எங்கும் இல்லை. நம் உள்ளத்தில்தான் இருக்கிறான். அவனைக் கண்டுபிடித்து அவன் தாளினைச் சரணடைந்தால்தான் வெற்றிபெற முடியும் என்று சொல்கிறார் வள்ளுவர்.

திருவாசகத்தில் மனம் உருகும்படி மாணிக்கவாசகர் சொல்கிறார்:

யான்உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

     எங்குஎழுந்து அருளுவது இனியே?”

தெய்வத்தைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டோம் என்று சொன்னால் உள்ளொளியைப் பெருக்கலாம், உலப்பிலா ஆனந்தம் பெறலாம்.

இறைவன் பிரபஞ்சத்தில் உள்ள ‘மேக்ரோ’. அதை ‘மைக்ரோ’வாக உள்ளத்தில் பிடித்துக் கொண்டோமானால் அவன் நமக்கு அருள்புரிவான்.

குடும்பமும் தெய்வமும் ஒன்றுதான். தெய்வத்தைப் போற்றினோமானால் குடும்பம் வெற்றி பெறும். குடும்பம் வெற்றி பெற்றதானால் நாம் வெற்றி பெற்றவர் ஆவோம்.

அன்புநெறியைப் பார்க்கிற சமயத்திலே,

“அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து

     இன்புற்றார் எய்தும் சிறப்பு”         (75)

என்பதனை என் வாழ்வில் நேரிடையாகக் கண்டேன். என்னுடைய பிள்ளைகளையும் குடும்பத்திலே அன்பு கொண்டிருக்கிற தாய் தந்தையரையும் பார்க்கின்ற சமயத்திலே, அவர்கள் காட்டும் அன்பைப் பார்க்கின்ற சமயத்திலே திருவாசகம்தான் நினைவுக்கு வருகிறது.

நாம் தெய்வத்தை வணங்குகின்ற சமயத்திலும் குடும்பத்தைப் போற்றுகின்ற சமயத்திலும் ஒரு சதுரப்பாடு உடையவர்கள் ஆகிறோம் என்பதைத் திருவாசகமும் காட்டுகிறது; திருவள்ளுவரும் காட்டுகிறார்.

இலக்கியங்களைப் படிக்கும் போது அதனைச் சுவைக்கு மட்டும் படிக்கவில்லை என்பதை நேரிடையாகக் கண்டு உணர்ந்தேன்.

“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

     மழலைச்சொல் கேளா தவர்”         (66)

என்பதையும்,

“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

     சிறுகை அளாவிய கூழ்”        (64)

என்பதையும் திருமணமான பிறகு நன்கு உணர்ந்து கொண்டேன். நம்முடைய குழந்தைகள், பேரக் குழந்தைகள் வந்தபோது அவர்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்று சொன்னாலே அது அமிழ்தினும் பெரிதாக இருப்பதை உணர்ந்தேன் அதை எல்லாம் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் உணர்ந்திருப்பீர்கள். கல்கண்டு இனிப்பு அது இனிக்கும் என்பது தெரியும் எப்படி இனிக்கும் என்பது சாப்பிட்டு அனுபவித்தால் தான் தெரியும். திருக்குறளில் வள்ளுவர் நெகிழும்படி சொன்னவைகளையெல்லாம் உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறேன்.

நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம் கணினி யுகத்தில் வாழ்கிறோம். ‘இண்டர்நெட்’ உலகத்தில் வாழ்கிறோம். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இப்போது இருக்கும் ‘கம்யுனிகேசன்’, இப்போது பேசப்படுகின்ற ‘ஃபியூச்சாரலஜி’, ‘டெலிகாம் பவர்’ எல்லாம் இருந்ததா? நிறைய நேரம் மட்டும் கிடைத்தது.

திருவள்ளுவர் தொழில் செய்யக்கூடிய உத்திகளை யெல்லாம் சொல்லித் தருகிறார். ‘மேனேஜ்மென்ட் கான்சப்ட்’ என்று சொல்லக் கூடியவைகளை எல்லாம் சொல்கிறார். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் உலகநாடுகளெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் அருமையான உண்மையைச் சொன்னார். அவர் திருக்குறளின் மீது அதிகமான ஈடுபாடு கொண்டவர். “என் வாழ்க்கைக்குத் திருப்புமுனையாக அமைந்தது குர்ஆனும் திருக்குறளும் தான். என்னை உயர்த்தியதும் இவைகள் தான்” என்று கூறிவிட்டு, அதற்கான காரணங் களையும் சொல்லி இருக்கிறார்.

ஒரு நாடு சிறப்பாக இருப்பதற்கு அடிப்படையான உண்மைகள் ஐந்து வேண்டும் என்று கூறினார் வள்ளுவர்.

“பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்

     அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து”         (738)

இது உலக நாடுகளில் எல்லாம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது ஒரு மனிதனுக்கும் பொருந்தும், ஒரு நாட்டுக்கும் பொருந்தும். ஒரு மனிதனை வாழ்த்தும்போது, ஆகியன வாய்க்க வேண்டும் என்பார்கள். உடல் பிணியும் உள்ளப் பிணியும் இல்லாமல் இருக்க வேண்டும். சொத்து இருக்க வேண்டும். சொத்திருந்தால் மட்டும் போதாது அதற்கு லாபம் இருக்க வேண்டும். பிரொடக்டிவிட்டி இருக்க வேண்டும். பொது மகிழ்ச்சி (சோசியல் ஹேப்பினஸ்) இருக்க வேண்டும். அக மகிழ்ச்சி இருக்க வேண்டும். மக்களுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும் நாட்டுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும். இது நாட்டுக்கும் பொருந்தும். ஒரு தனி மனிதனுக்கும் பொருந்தும். இந்த அருமையான குறளை அப்துல் கலாம் மேற்கோள் காட்டிப் பேசினார். இன்று ‘டெலிகேசன் ஆஃப் பவர்’ என்று சொல்கிறோம். ‘செலக்சன் ஆஃப் பர்சன்’, ‘ஃபியூச்சரலாஜி’ என்று சொல்லுகிறோம். இவைகளையெல்லாம் திருவள்ளுவர் சொல்லுகிறார் என்பதைப் பார்க்கிற சமயத்திலே நான் அதிசயித்துப் போனேன்.

ஒரு தொழில் நடத்துவது எப்படி? எவ்வாறு திட்டமிடுவது? எவ்வாறு நபர்களைத் தேர்ந்தெடுப்பது? மிகச்சிறப்பாக வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ‘டெலிகேசன் ஆஃப் பவர்’ என்பது அமெரிக்காவில் உள்ள திட்டம். அதைப் பயன்படுத்திக் கொள்கிறோம். மிகப்பெரிய புரஃபொசனலிஸ்ட்-ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும் அந்த புரஃபொசனலிஸ்ட்டிடம் முழுமையாகப் பொறுப்பை ஒப்படைத்து விடவேண்டும். அப்போதுதான் அந்த தொழில் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். இதனைத் திருவள்ளுவர் அப்பொழுதே சொல்லியிருக்கிறார். பொதுவாக ஙி.ஙி.கி., வி.ஙி.கி., படிக்கிற பொழுது 5 றிs சொல்லுவார்கள்: பாலிஸி, பிளானிங், பெர்சனல் புரகிராம், ப்ரொசீஜர்ஸ், ஃபெர்பார்மன்ஸ்.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

     அதனை அவன்கண் விடல்”          (517)

என்னும் வள்ளுவம் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.

ஒரு காரியத்தை முடிப்பதற்கு ‘டெலிகேசன் ஆஃப் பவர்’ ஒருவனைத் தேர்ந்தெடுத்தபிறகு அதனை அவனிடம் விட்டுவிடு என்கிறார். சரியான நபரைத் தேர்ந்தெடுக்கும் முன்னரே அவரை நம்பிவிடாதே என்கிறார்.

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

     தீரா இடும்பை தரும்”               (510)

“தேறற்க யாரையும் தேராது; தேர்ந்தபின்

     தேறுக தேறும் பொருள்”       (509)

ஒருவரை ஆராய்ந்து எடுத்தபிறகு அவரைக் கண்காணிக்க வேண்டுமே தவிர தலையிடக்கூடாது. ஒருசெடி வளரும் போது அதனைத் தோண்டி வேர் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று பார்ப்பது போல் ஆகிவிடும்.

“வினைக்குஉரிமை நாடியபின்றை அவனை

     அதற்குஉரிய னாகச் செயல்”         (518)

இலக்கியம் பேசி மகிழவோ

ஆக்க உரை*

‘இலக்கியம் பேசி மகிழவோ!’ எனும்  தலைப்பில் உரையாற்ற வருமாறு மதுரை வானொலி நிலையத்தார் விடுத்த  அழைப்பு என் சிந்தனையைக் கிளறிவிட்டது. ‘இலக்கியம் பேசி மகிழவோ!’ என என்னை மட்டுமின்றிப் பலரையும் கூவி அழைக்கும் பொது அழைப்பாக என் உணர்வுகளுக்கு வழி காட்டியது.

இளமை முதலே இத்தகைய வழியமைப்புக்களைப் பற்றி நிற்கும் வாய்ப்புக்கள் எனக்குக் கிட்டின. அவற்றைப் பெறற்கரிய பேறுகளாகக் கருதித் தடம் மாறாமல் நடக்க முயன்றேன். அழகப்பர் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றபோது அங்கு நிலவிய தமிழியக்கம் என்னையும் ஈர்த்தது. ‘அறம் பிழைத்தால்’ எனும் தலைப்பில் எழுதிய போட்டிக் கட்டுரையில் கிட்டிய பரிசு எனக்கு ஊக்கம் ஊட்டியது. திருக்குறளை ஆழமாகப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை என் மனதில் வேள்வித் தீயாக வளர்த்தது. திருச்சி சமால் முகமது கல்லூரியில் பொருளாதார முதுகலை கற்றபோதும் என் நினைப்பெல்லாம் உணர்வு எல்லாம் திருக்குறளையும் தமிழ் இலக்கியத்தையுமே வலம் வந்தன.

வணிக வாழ்வுக்கு ஆட்பட்டுப் பல்வேறு பொறுப்பு களுக்கு உட்பட்ட போதிலும் என்னுள்ளே இலக்கிய உணர்வுகள் மட்டும் மங்காமலே கனன்று கொண்டிருந்தன. திருக்குறள் பேரவை முதலிய இலக்கிய விழாக்கள், அறிஞர் பெருமக்களின் அரிய தொடர்புகள் என்பன எல்லாம் அந்த உணர்வுக்கனலை ஓங்கி எரியச் செய்தன. இந்த இலக்கிய எரிமூட்டம் எனக்கு எப்போதும் இதமளித்தே வந்தது.

இலக்கியம் ஆழ்ந்தகன்ற, என்றும் நிலைபெற்று வருகிற மனிதப் பண்புடன் தொடர்பு உடையது; மனிதனுடைய வாழ்வெனும் தத்துவத்திலிருந்து வடிவெடுப்பது; ஒருவரது அனுபவங்களையும் எண்ணங்களையும் பிறரோடு பகிர்ந்து கொள்ள வழியமைப்பது. அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் போது நம்மையும் அறியாமலே நமக்குள்ளே ஒருவகைக் கலைத்திறமையை உருவாக்கிட வல்லது.

நாம் அகம், புறம் எனும் இருவகை மனத்தோடு வாழ்கிறோம். விழிப்பும் கூர்மையும் உடைய, பொறிகளின் சார்புடைய புற மனத்திற்கு அடிமைப்படுவதே நம் வாழ்வில் பெரும் பகுதியாகப் போகிறது. உணர்ச்சியும் கற்பனையும் கலந்த அகமனதோடு உறவு பூண்டு ஆட்படுவது என்பது மிக அரிதாகவே கிட்டுகிறது. அக, புற மனங்களில் சமநிலை கண்ட சான்றோர்கள் அருளிய இலக்கியங்களைப் பேசி மகிழும்போதுதான் நமக்கும் ஒருவகைச் சமநிலை அமையும் வாய்ப்பு ஏற்படுகிறது. தொட்டனைத் தூறும் மணற்கேணியாகக் கற்றனைத்து ஊறும் அறிவு கிட்டுகிறது.

இத்தகைய வாய்ப்பினை வளரும் தலைமுறைக்கு எல்லாம் வழங்கக் காத்திருக்கும் இலக்கியச் செல்வங்கள் நம்மிடம் ஏராளமாக உள்ளன. என்றும் வாழும் இலக்கியமான திருக்குறளில் இச் செல்வங்கள், சிந்தைக்கினிய, செவிக்கினிய, வாய்க்கினிய, வாழ்வுக்கினிய வளங்களை எல்லாம் ஆக்கித்தர வல்லவையாக விளங்குகின்றன.

பயிலும்போது இன்பம் ஊட்டி, வாழும் முறைக்கு நற்பண்புகளால் வலிமை சேர்க்கும் திருக்குறள் முதலிய இலக்கியங்களைப் பிறரோடு பேசி மகிழ்ந்த நாற்கள் பலப்பல. ‘காற்றில் வைத்த கற்பூரம் போல’ இவை போய் விடக்கூடாதே எனக் கருதிய எனது கெழுதகை அன்பர் பேராசிரியர் சு.குழந்தைநாதன், நானும் அறியாமலே அவற்றை முயன்று தொகுத்து வந்தார். சிதறி உதிர்ந்த மலர்களை எல்லாம் என்றும் மணக்கும் மாலையாகக் கட்டித்தந்த பேராசிரியர்க்கு உளமார நன்றி பாராட்டுகிறேன்.

‘பாளையம் இல்லம்’ அடையாத நெடு வாயில் களைக் கொண்ட செழுங்குடிச் செல்வமனை. தளர்ந்து வந்தோரையெல்லாம் தாங்கி உயர்த்திய தமிழவேள், பி.டி.ராசன் அவர்களின் அருந்தவப் புதல்வர் – அறிஞர் பழனிவேல் ராசனார் – கல்விச் செம்மல்; காழ்ப்பு வெறுப்பற்ற கருணைப் பாங்கினர். என்னோடு இலக்கியம் பேசி வழிகாட்டிய அப்பேரறச் செல்வர் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருப்பது எனக்கு அமைந்த பெரும்பேறு. பழனிவேல் ராசனார்க்கு பணிவார்ந்த நன்றியுடையேன்.

தமிழ் மாமுனிவர் – தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு ஆயிரமாயிரம் அன்பர் குழாம் உண்டு; அதற்கு அப்பாலும் அடி சார்ந்த அடியவனான என்னைத் திருக்குறளால் பிணித்து அருள்பாலித்து ஆட்கொண்டார். வாழும் சமுதாயத்தையும் வாழ்விக்கும் சமயத்தையும் இரு கண்களாகக் கொண்ட அப்பெருந்தகை இந்நூலுக்கு ஆசியுரை நல்கத்திருவுளம் கொண்டார். அழகியதொரு அணிந்துரையைத் திறனாய்வாக வழங்கியுள்ளார். தெய்வ நலம் காட்டும் மாமுனிவரின் திருப்பாதம் பணிந்து நன்றி கூறுகிறேன்.

இலக்கியம் பேசி மகிழ்வதில் இணையற்ற நலம் காண வருமாறு அன்போடு அழைக்கின்றேன்.

கனடா நாட்டுப் பயணம்

கனடா நாட்டுப் பயணம்

Image result for canada

விழுமிய திருக்குறள் பிறந்த நம்நாடு, நழுவவிட்ட அந்த நல்லுணர்வை ஏக்கத்துடன் கனடா நாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை எண்ணத் தொடங்கினேன். அமெரிக்காவில் இத்தனை நாட்களும் எப்படியோ ஓடிவிட்டன!

தமிழில் ‘நல்வரவு’ கூறும் திருநாடு

உலக நாடுகளுள் சோவியத் யூனியனுக்கு அடுத்த படியாக உள்ள பெரிய நாடு நோக்கிப் பயணமாக வேண்டும். அதுதான் கண்ணாரக் காணவேண்டிய கனடா!

வட அமெரிக்கக் கண்டத்தின் வடபாதி முழுதும் வியாபித்துள்ள இயற்கைக் கொலுமண்டபம் இந்த நாடு. கிழக்கே அட்லாண்டிக் சமுத்திரம்; மேற்கே பசிபிக் சமுத்திரம்; தெற்கே அமெரிக்கா; வடக்கே ஆர்க்டிக்.

எவ்வளவு பெரிய நாடு! ஆனால் மக்கள்தொகை மிகக்குறைவு. சுமார் 3கோடி மக்கள்; மூன்று நூற்றாண்டுக் குடியேற்ற வம்சா வழியினர்.

வடதுருவத்தை ஒட்டியுள்ள கனடாவின் குளிர்காலப் பருவம் மிக நீண்டது; கோடைப் பருவம் மிகச்சுருங்கியது.

நம் நாட்டில் மூன்றே பருவங்கள்தான் உண்டு கோடைக் காலம், மிகுகோடைக் காலம், சுடும்கோடைக் காலம்!

ஆனால் கனடாவைப் போன்ற நாடுகளில் மட்டும் இயற்கை மிகுந்த கருணை காட்டுகிறது! இங்கு உள்ள காடுகளின் அடர்த்தியை, நீரோடைகளின் பாய்ச்சலை, பயிர்களின் பசுமையை, மக்களின் வளமையைப் பார்த்தாலே… இயற்கையின் பாரபட்சம் புரிகிறது.

இங்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்து முதன்முதலில் குடியேறியவர்கள் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும். அவர்களுக்குள் மூண்ட ஆதிக்கச் சண்டை ‘ஏழாண்டுப் போர்’ என வருணிக்கப்பட்டது. ஆங்கிலேயர் கை ஓங்கியதால் – மாட்சிமை தங்கிய மன்னர் ஆட்சியின் கீழ் . டொமினியன் ஆகி, ஆஸ்திரேலியாவைப் போல் காமன்வெல்த் அங்க நாடாகச் செல்வம் கொழிக்கிறது. ஆங்கிலமும் பிரெஞ்சும் அரசு மொழிகள். அங்கும் மொழி- இனச் சிக்கல் உண்டு. எனினும் பொதுவளர்ச்சிக்கு ஊறு செய்யாமல் ஒத்துப் போகிறார்கள். சமீப ஆண்டுகளில் ஈழத் தமிழர்களுக்கு சரணாலயமாகவும் இந்நாடு ஒருவகையில் தமிழ் மானம் காக்கிறது!

இயன்றவரை ஈழத் தமிழர் மானம் காக்கக் கைகொடுக்கும் கனடாவில் இனிய தமிழ் மணமும் கமழுவதை நுகர அரிய வாய்ப்பு இப்பயணத்தில் கிட்டியது.

சமச்சீரான வெப்பதட்பமுடைய வாழ்க்கைக்கு உகந்த நாடுகள் என உலகில் ஆஸ்திரேலியாவையும், கனடாவையும் சொல்லுவார்கள். அமெரிக்காவில் பொதுவான, ஆங்கிலக் கலாச்சாரப் பின்னணி புலப்படுவதுபோல் அதையடுத்துள்ள கனடாவில் பிரெஞ்சக் கலாச்சாரச் சூழல் வெளிப்படை யாகத் தெரியும் என்றும் சொல்லுவார்கள். அதுவும் உண்மை எனக் கண்டறிய அதிவேகமாக அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நியூயார்க்கிலிருந்து கனடாவுக்குப் போய்ச் சேர்ந்தோம். போகும் இடங்களில் எல்லாம், நம்மை வரவேற்று உபசரிக்க நண்பர்கள் இருந்துவிட்டால் எந்த நாட்டிற்கும் போய்வரலாம். நற்பயனாக எங்களுக்கு இந்தப்பேறு எங்கும் கிட்டியது. சென்னையில் உள்ள பிரபல டாக்டர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் புதல்வி திருமதி. ரீத்தா, திரு.பார்த்திபன் அவர்களின் துணைவியார். இவர் அவர் சகோதரி சத்யா, மதுரையைச் சேர்ந்த திரு.அசோகன், கானடியன் ஆப் செட் ஸ்கிரீனிங் எனும் நிறுவனத்தை நடத்தும் ரோட்டரி கழக உறுப்பினர் திரு.ஸ்டூவர்ட் ஜெரோம், திரு.விஜயநாதன் மற்றும் பலர் எங்களுக்கு இனிய வரவேற்பு அளித்தனர்.

நாங்கள் கனடா போய்ச் சேர்ந்ததும் அமெரிக்கா விலிருந்து திரு.நாராயணன் குடும்பத்தினரும் எங்களுக்குத் துணையிருக்க வழிகாட்ட வந்து (அங்கிருந்து சுமார் 400 மைல்தான்) சேர்ந்து கொண்டனர். கடலை, மலையை, யானையை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது என்பார்கள். அந்தப் பட்டியலில் இன்னும் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம். நீர் அருவி, ஆலயக் கோபுரம்! அதிலும் நாங்கள் பார்த்த நயாகரா அருவி (நீர்வீழ்ச்சி) உலகிலே மிகப்பெரிது, அதன் பிரமாண்ட தோற்றமும், இடையறாது கொட்டும் நீர்ப் பெருக்கும், வண்ண வண்ணக்கோலமும் நெஞ்சைப் பின்னிப் பிணைத்தன.

நம் பாண்டிய நாட்டுச் சங்கப்புலவன் கணியன் பூங்குன்றனார் பாடிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் பாட்டில் தொடரும் வரிகளான ‘கல்பொருது இரங்கும் மல்லல்பேர்யாற்று நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப்படூஉம்’ என்ற வரிகள் இப்பெரும் நீர்வீழ்ச்சியைக் கண்டவுடன் தோன்றின.

தேக்கிவைக்கப்பட்ட செல்வம், தேக்கிவைக்கப்பட்டு பயன்படுத்தாத நீர் போல அலையாமல், நயாகரா நீர்வீழ்ச்சியைப் போல, பரந்து விரிந்து பாலை நிலத்தை எல்லாம் செழிப்பாக்க வேண்டும் என்று நினைத்தேன். அமெரிக்காவிலும் கனடாவிலும் உற்பத்தியாகும் பொருட்களை நுகர்வோர் அதிகமாக இருப்பதனால், அங்கு பணப்புழக்கத்தின் வேகம் காரணமாகப் பொருளாதார நிலையும் மேம்பட்டு இருக்கிறது. நமது நாட்டிலும் பணப் புழக்கம் தேங்கி இருக்காமல் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால் நம் வளர்ச்சியும் மேம்படும்.

உலகிலேயே மிகப் பெரிய சியென் கோபுரத்தைப் பார்க்கச் சென்றோம். சிகாகோவில் நாங்கள் பார்த்த சியொ டவர் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு இதைப்பார்க்க வந்தபோது மலைப்புத் தோன்றவில்லை. ஆனால் மனதைத் தொடும் ஒரு காட்சி என்னை மெய்சிலிர்க்கவைத்தது. அந்த மாபெரும் டவரின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு வாசகத்தில் ‘நல்வரவு’ எனத் தமிழில் மின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு உலகில் உள்ள பலமொழிகளில் எழுதியிருப்பினும் இந்தியா விலிருந்து தேர்ந்தெழுதிய நான்கு மொழிகளில் நமது தமிழ் மொழியும் ஒன்று என்றவுடன் என் எண்ணமெல்லாம், இதயமெல்லாம் பூத்தன; வான் முட்ட உயர்ந்திருந்த கோபுரத்தின் படிக்கட்டுக்குச் செல்லக் கால்கள் தயங்கின. “வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும், வண்மொழி வாழியவே!” என மகாகவி பாரதி அன்று பாடினானே… அந்த வானத்துக்கே இந்தத் தமிழ் வாசகம் என்னைத் தூக்கிப் போவது போலப் பிரமையுற்றேன். அந்த வாசகத்தின் முன்னர் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

‘நல்வரவு’ எனத் தமிழ் வரவேற்பு அளித்த தமிழன்பர்கள் உள்ளமும், இல்லமும் எங்களுக்குச் சென்றவிடமெல்லாம் நல்வரவு கூறின.

கனடாவிலிருந்து, ஏற்கெனவே திட்டமிட்ட எங்கள் ஐரோப்பியப் பயணத்தில் விடுபட்டுப் போயிருந்த பிரெஞ்சு நாட்டுக்குப் போக விசா எடுக்க முடியும் என்றார்கள். அந்த முயற்சியில் நண்பர்கள் ஓடி ஓடி அலைந்தார்கள். ஆனால் 45 நாள் அவகாசம் வேண்டும் என அதிகாரிகள் உதட்டைப் பிதுக்கி விட்டார்கள். நான்கு நாட்கள் இதில் வீணாகிவிட்டன.

கனடாவிலும்  விரிவான பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் தரவும் முடியவில்லை. அதற்கேற்ப எங்கள் பயணத்தை நீட்டிக்கவும் இயலவில்லை. நண்பர்கள் வீடுகளில் பலரும் வந்து கூடி கலந்துரையாடி எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சிகளுக்காகவே ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திரு.பார்த்திபன் – ரீத்தா தம்பதியினரின் உபசாரத்தை மறக்கவே முடியாது. அவர்கள் இல்லத்தில் நிகழ்ந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்துத் தமிழன்பர்களும் குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டனர். ஈழத்தின் கண்ணீர்க் கதையும் அங்கு விரைவில் தமிழர் நல்வாழ்வுக்கு உரிய சுமுக நிலை ஏற்பட்டேயாக வேண்டும் என்பதில் கவலையும், எல்லாப் பிரிவினரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டிய அவசியம் பற்றியும் கருத்துக்கள் தங்குதடையின்றி வந்தன. யாழ்ப்பாணத் தமிழன்பர்கள் கூறியவற்றைக் கேட்ட போது எங்கள் கண்கள் கண்ணீர்க் குளமாயின.

பின்னர் ‘திருக்குறள் பெருமைகளும் நமது பண்பாட்டுச் சிறப்புகளும்’ பேசப்பட்டன. இவற்றைக் கேட்பதில் அங்கு உள்ளோருக்கு உள்ள ஆர்வத்தை, அக்கறையை நாம் இங்கெல்லாம் காணமுடிவதில்லை. தன்னிடம் பூத்த தாமரையின் அழகு குளத்துக்குத் தெரியவில்லை என்றால் எங்கே போய் முறையிடுவது?

உலகத் திருக்குறள் பேரவையின் நோக்கங்கள் பற்றி அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதன் கிளை ஒன்றைக் கனடாவிலும் நிறுவத் தாம் எல்லா வகையிலும் ஒத்துழைப்பதாக உற்சாகம் அளித்தனர்.

கனடாவில் சீக்கியர்களும் தமிழர்களும் கணிசமாக உள்ளனர். சீக்கியர்களின் பற்றுறுதிக்கும் உழைப்புக்கும் நிகராக நம் தமிழர்களும் விளங்கக்கண்டு பெருமிதமும் பேருவகையும் கொண்டேன்.

கலந்துரையாடல்களில் உற்சாகமாகக் கலந்து கொண்ட திரு.பார்த்திபன் ஒவ்வொரு வேளை விருந்தின்போதும் புதிது புதிதாக நண்பர்களைக் கூட்டி வருவார். நீண்ட உரையாடல்கள் தொடரும். சமயம், தத்துவம், கலை, இலக்கியம், தொழில், வாணிபம் என்றெல்லாம் கலந்துரையாடல் வலம் வரும். இவ்வுரையாடல்களில் எனக்கு ஏற்பட்ட பயனும் அனுபவமும் மிக அதிகம். அவற்றையெல்லாம் மனதில் அசைபோட்டுக்கொண்டு இலண்டன் பயணத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அருமை நண்பர் திரு.பார்த்திபன், “உங்கள் பேச்சால் வசீகரிக்கப் பட்டேன்” என்றார். ஆனால் உண்மையில் வசீகரிக்கப் பட்டது நாங்கள்தான். கனடாவில் வாழும் நம் சகோதரர்களின் அன்பும் உபசாரமும் திருக்குறள் வாழ்வும் வாக்குறுதியும் எங்களை என்றென்றும் வசீகரித்துக் கொண்டன….!

“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

     அனைத்தே அன்பர் தொழில்”        (394)

எனப் புதுக்குறள் புனையும் ஆசை வளர்ந்தது!

கென்னடி புகழ் பேசும் வாஷிங்டன் !

Image result for john f kennedyகென்னடி புகழ் பேசும்

வாஷிங்டன் டி.சி. நகருக்குச் சென்றோம். அங்கே உள்ள கென்னடி விமான நிலையத்தின் அழகும் வெள்ளை மாளிகை வனப்பும் என் நெஞ்சில் நிறைந்தன. ஜனாதிபதி அமரர் கென்னடி நினைவுச் சின்னம் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தோரை நினைவுகூரும் நடுகல்லாக விளங்குகிறது.

என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர்பலர் என்ஐ

     முன்நின்று கல்நின் றவர்”       (771)

எனும் திருக்குறள் வரிகளே அங்கு என் நினைவில் படர்ந்தன.

புகழ் வளர்ந்து நடுகல் ஆனோர்க்கும் அது பொருந்தும் சிறப்பினை உணர்ந்தேன். அங்கு உள்ள அணையாச் சுடர் காண்போர் உணர்விலும் தியாகப் பேரொளியைப் பரவச் செய்வதை அனுபவித்தேன். நினைவுச் சின்னங்களை நிறுவுவது போல அங்கே அவற்றை நேர்த்தியாகப் பராமரித்து மரியாதையும் செய்கின்றனர். இதையும் நம் நாட்டு நடப்போடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.

இங்கே வைக்கப்படும் நினைவுச் சின்னங்கள் நாளடைவில் மறக்கப்பட்டுப் பறவைகளாலும் விளம்பரங் களாலும் அசிங்கப்படுத்தப்படும் கொடுமை மாறும் நாள் எந்த நாளோ எனப் பொருமினேன்.

எதிர்காலத்தை உணர்த்தும் விஞ்ஞானக் கூடம்

“பொறிஇன்மை யார்க்கும் பழியன்று; அறிவுஅறிந்து

     ஆள்வினை இன்மை பழி”      (618)

எனும் வள்ளுவம் அமெரிக்க நாட்டினர்க்கு எப்படியோ தெரிந்திருக்க வேண்டும். அனைத்துத் துறையிலும் அவர்கள் ஆக்கிவரும் ஆள்வினையுடைமை அறிவியலில் கொடிகட்டிப் பறக்கிறது. நிலா உலகில் முதல் மனிதனை நிறுத்திடும் அளவுக்கு விண்முட்டும் புகழாகியுள்ளது.

வாஷிங்டனில் உள்ள அறிவியல் கலைக்கூடத்தை அற்புதம் என்றே சொல்ல வேண்டும். ராக்கெட்டுப் பயண வளர்ச்சி, விண்வெளி ஓடச் சாதனைகள், இது வரை சாதித்தவை, இனி அண்டவெளிக் கிரகங்களை ஊடுருவிப் போகும் முயற்சிகள் என இவற்றையெல்லாம் பார்த்தபோது விஞ்ஞான முன்னேற்றத்தையும் எதிர்காலப் போக்கையும் எப்படி வருணிப்பது என்றே எனக்குப் புரியவில்லை.

வாஷிங்டனை இரண்டே நாளில் முடித்துக் கொண்டு ஆர்லாண்டோ புறப்பட்டு வந்தோம். உலகப் புகழ்பெற்ற டிஸ்னி உலகம்  இங்கே தான் உள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்திழுக்கும் பிரம்மாண்டமான காட்சிகள் அங்கு வருடம் முழுவதும் திருவிழாக் கோலம் பூணச் செய்கின்றன. இதற்கு இணையானதோர் அமைப்பு உலகில் வேறெங்கிலும் இல்லை எனச் சொல்ல வைக்கின்றன.

அமெரிக்கா முழுவதையும் பார்த்து விட்டதொரு பிரமை ஏற்படும் வண்ணம் 360 டிகிரி கோணத் திரையரங்கில் அமெரிக்கா முழுவதையும் காட்ட நம்மைக் கூட்டிச் செல்கிறார்கள்.

சறுக்கு ரயில் விளையாட்டு

ரோலர்கோஸ்டர் எனும் பயங்கர ராட்சதச் சறுக்கு ரயில் விளையாட்டு அங்கே மிகவும் பிரபலம். ஒரு நொடியில் விர் என்று கோபுர உச்சிக்கு அந்த ரயில் விரைவதும் பின்னர் அது சரேலென மரணப் பள்ளத்தை நோக்கிக் கீழிறங்குவதும் மயிர்க்கூச்செரிக்கும் அனுபவங்கள்! அதில் ஒரு முறை ஏறிவிட்டுக் கீழே இறங்கி மிகத் துணிச்சலுடைய முரட்டு ஆசாமி என்ன சொன்னார் தெரியுமா? “இனி செத்தாலும் இதில் ஏற மாட்டேன்” என்றார். என்றாலும் துணிச்சலோடு அதில் ஏறினோம். ஓடத்தொடங்கியதும் உடம்பின் குருதி உறைந்து போவது போல, எலும்பு களெல்லாம் நொறுங்கிவிடுவது போலப் பய உணர்வு கவ்வியது. கீழே இறங்கியபின் தான் ‘அப்பாடா’ என்று அமைதி பெற்றோம்.

எதிர்காலக் கதை

அங்குள்ள எப்காட் சென்டர் விஞ்ஞான, தொழில் நுட்ப அற்புதங்களைக் காட்டுகிறது. 21-ஆம் நூற்றாண்டை நோக்கி உலகம் முன்னேறும் எதிர்காலக்கதை ஒரு வரலாறு போல அங்கே பல நிலைகளில் பல அரங்குகளில் கோடிகோடிச் செலவில் காட்டப்படுகிறது. இப்படி நம்நாட்டிலும் ஆங்காங்கு அறிவியல் நகரங்களை உருவாக்கக் கூடாதா எனும் ஏக்கமே மேலிட்டது.

அங்குள்ள கடல் உலகம்  உலகில் உள்ள அத்தனை மீன் வகைகளையும் காட்டுகிறது. இத்தனையும் பார்க்க ஒரு வாரமாவது வேண்டும்; நாங்கள் அவசரக் கோலத்தில் கிளம்பினோம்.

இந்த எப்காட் உணவுப் பிரிவில் காரைக்குடி நண்பர் ஒருவரைக் கண்டேன். என்னை நலம் விசாரித்துக் கொண்டே அவர் ஓடிஓடிப் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தொலைவில் செல்லச்செல்ல ஏற்படும் அன்பின் நெருக்கத்தை உணர்ந்திட முடிந்தது.

‘மியாமி’ நகரம்

ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு இப்போது எங்கள் பயணம் எல்லாம் விமானத்தில்தான், 3000 மைல் தாண்டி உலகிலேயே அழகிய கடற்கரை நகரான மியாமி போய்ச் சேர்ந்தோம்.

வாழ்க்கையை, பொழுதுபோக்கை, எப்படி ரசிப்பது என்பதை அங்கே காணமுடிந்தது. ‘சிலருக்கென ஒதுக்கப்பட்ட’ இடங்களுக்கெல்லாம் நாங்கள் போகவில்லை! நாலுபேர் கூசாமல் பார்க்கக்கூடிய கொள்ளை அழகுகளை ரசித்துவிட்டு ஓட்டலுக்குத் திரும்பினோம்.

அடுத்து நாங்கள் தரை இறங்கிய இடம், லெஸ்வேகாஸ் (லிணீsஸ்மீரீணீs). உலகிலேயே மிகப்பெரிய சூதாட்ட நகரம் இது என்பார்கள். எங்கு பார்த்தாலும் காசினோ என்னும் பொழுதுபோக்கும் உல்லாசப் பணவிரயக் கூடங்கள்! பணம் அங்கே தண்ணீராக ஓடுகிறது; தடம் புரண்டு பாய்கிறது!

‘ஒன்றெய்தி நூறிழக்கும்’ சூதர்களும் கெட்டிக் காரர்களும் அங்கே ஏராளம், ஏராளம்! விமானத்தளத்தில் இருந்து ஊரில் எங்கே திரும்பிப் பார்த்தாலும் பந்தயச் சூதாட்டம்… பல்வகைச் சூதாட்டம். தம் பணம் பறிபோவதைப் பற்றி அங்கு யாரும் கவலைப்படுவதில்லை. சம்பாதித்த காசைச் செலவழிக்க ஒரு வகையான மகிழ்ச்சியோடு ஷிறிலிகிஷிபி எனும் கண்கவர் காட்சிகளுக்குப் போய் விடுகிறார்கள். இவற்றைத் தொலைவில் இருந்து பார்த்த திருப்தியோடு நாங்கள் ஓட்டலுக்குத் திரும்பி விடுவோம்.

“வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதூஉம்

     தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று”        (931)

எனும் சூது அதிகாரக் குறளைத் தெரிந்திருந்தாலும் அவர்கள் அதைப் பின்பற்றமாட்டார்கள் என உணர முடிந்தது! அவ்வளவு மயக்க உலகம் அது.

அற்புத உலகம்

அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் ) நகரம் பறந்தோம். அங்கேதான் டிஸ்னியின் மற்றும் ஒரு அற்புத உலகம் உள்ளது. அதை மீண்டும் விவரிப்பதைவிட நேஷனல் தியேட்டர் உள்ள மற்றொரு ஹாலிவுட் ‘நகரத்தைப்’பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் விவரிக்கலாம். திருக்குறளைப் பற்றிப் பேசவே போதிய அவகாசம் கிட்டாத சூழலில் ஹாலிவுட் போக நேரம் எங்கே கிட்டும் என யோசித்தோம். எனினும் அன்பர்கள் விடவில்லை. ஏதோ போனோம்! வந்தோம்!

பின்னர் சான்பிரான்சிஸ்கோ நகருக்குப் பறந்தோம். அங்குள்ள சீன டவுனைக் (சிலீவீஸீணீ ஜிஷீஷ்ஸீ) கண்டு வியந்தோம். “எவ்வது உறைவது உலகம்” எனும் திருக்குறள் என் நினைவில் படர்ந்தது. சீனர்கள் உலகத் தலைமை பெற்று வரக் காரணம் எது என்பது புரிந்தது.

சாப்பாடும் சங்கடமும்

Image result for food america

 

“உங்களுக்கு வேண்டியது கில்லிங் பவரா?  அல்லது புல்லிங் பவரா?”  எனும் கேள்வியுடன் முடிந்த கட்டுரையை எப்பொழுதோ நான் படித்த நினைவு.

பலபேர் சைவ உணவில் சத்தே இல்லை என்பார்கள். கீரை, காய்கறிகளைவிட மீன், முட்டை, மாமிசம் முதலிய அசைவ வகைகளில்தான் ஆற்றல் நிறையக் கிடைக்கும் என நம்புவார்கள்.

ஆனால் யானை? எவ்வளவு பெரிது! உருவத்தால் மட்டும் இன்றி, வலிமையிலும் பிறவற்றைவிட மேம்பட்டது இல்லையா? குதிரைக்கு எவ்வளவு ஆற்றல்! கொள்ளும் புல்லும் தின்னும் அதன் ஆற்றல் அளவீட்டைக் கொண்டுதானே ‘குதிரை பவர்’ (பிஷீக்ஷீsமீ றிஷீஷ்மீக்ஷீ) இத்தனை என்று மின்அலகு கணக்கிடப் படுகிறது. ஆகவே சைவ உணவே சிறந்தது எனச் சைவ உணவினர் சாதிப்பர்.

இவையெல்லாம் என்னைப் போன்ற சைவ உணவுக் காரர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய செய்திகள் என்றாலும், மேலை நாடுகளுக்குப் பயணம்போகும் போதுதான் சைவச் சாப்பாட்டாளர்களுக்கு சங்கடங்கள் நேருகின்றன. அசைவர்களுக்குச் சிக்கல் இல்லை. எப்படியும் சமாளித்துக் கொள்வார்கள். சுத்த சைவர்கள் சிறுசிறு தியாகங்களுக்குத் தயாராக வேண்டும். எனினும் அமெரிக்காவில் அத்தகைய சங்கடங்கள் இராது என அன்பர்கள் எழுதியது நம்பிக்கை தந்தது.

அமெரிக்க நாட்டில் தண்ணீரையும் உணவையும் வீணாக்குகிறார்கள். அதைப் பார்த்தபோதெல்லாம் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அதே சமயம் தண்ணீர் மற்றும் உணவு வகைகளை மிகத் தூய்மையாகப் பாதுகாத்து வழங்குகின்றார்கள்; பயன்படுத்துகின்றார்கள்.

வெளியூர்ப் பயணத்தின்போது ஓட்டலில் தங்கிப் பலவகை உணவுகளை வயிறு புடைக்கச் சாப்பிடும் நம் ஊர்ப்பழக்கமெல்லாம் அங்கே காண முடியாது. பயணவழியில் சாலையோரங்களில் உள்ள சிற்றுண்டிக் கடைகளில் சூடாகத் தயாரிக்கப்பட்ட  உணவுகளை விற்கிறார்கள். அவற்றைக் காரில் இருந்தபடியே வாங்கிக் கொண்டு பயணத்தைத் தொடரு கிறார்கள் அல்லது அங்கேயே சாப்பிட்டுச் செல்லவும் வசதிகள் உள்ளன. காலப்போக்கில் நம் ஊர்களிலும் அப்படி வரக்கூடும்.

பாக்கெட்டுகளில் உணவு வகைகள்

பாக்கெட்டுகளில் அடைத்தும் சுத்தமான முறையில் பார்சல் செய்தும் தருகிறார்கள். நேரத்தை வீணாக்காமல்  சாப்பாட்டை முடித்துக் கொள்கிறார்கள். எல்லாவித மாமிச உணவுகளும் பாக்கெட்டில் வைத்து விற்கப்படுகின்றன. சைவச் சாப்பாட்டாளர்களுக்கான இத்தாலி நாட்டில் பிரபலமான பீசா (றிமிஞீஞீகி), மாக்டோனால்ட் ஆகிய சைவ உணவுகள் கிடைக்கும். ஆனால் என்ன வெஜிடேரியன் என முதலிலேயே சொல்லிவிட வேண்டும்.

 சைவ விருப்பத்தை விவரமாகச் சொன்னதும் பீசா  கோதுமை ரொட்டியில் வெண்ணெய் வெஜிடேபிள் வெங்காயம் போட்டுத் தந்தார்கள். ஆலை இல்லாத ஊரில் இந்த  இலுப்பைப்பூ கிடைத்தால் விடலாமா? பசி நேரத்தில் இதுவும் ருசியாகத்தான் இருந்தது. நாளடைவில் பழக்கம் காரணமாக இந்த உணவும் பிடித்துவிட்டது.

இந்த நேரத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் இத்தாலிக்குச் சென்றிருந்தபோது இந்தச் சைவ ரொட்டியும் கிடைக்காமல் அவதிப்பட்டுப் போனேன். சைவ ரொட்டி என ஆங்கிலத்தில் சொல்லிக் கேட்டேன். அவர்களுக்கு அது புரியாமல், ‘என்ன?’ என்று திருப்பிக் கேட்டார்கள். நான் ஆங்கிலத்தில் விவரமாக ஆனியன் கலந்த விஜிடபிள் பிரட் என்றேன். அவர்கள் தோளைத் தூக்கிக் கொண்டு தெரியவில்லை என்றார்கள். கடைசியில்தான் தெரிந்து கொண்டேன். ஆங்கிலம் இவர்களுக்கும் தெரியாது என்பதை! இவர்களிடம் ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான அவரவர் தாய்மொழியில் கேட்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆங்கிலம் பேசும் நாட்டை ஒட்டி வாழ்ந்தாலும் இவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் தமது தாய்மொழியறிவோடு மற்றொரு ஐரோப்பிய மொழியையும் கற்று விஞ்ஞான வளர்ச்சியில் தங்களை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். இதைப் போலவே நாமும் தாய்மொழியாம் தமிழைக் கற்று தமிழ்மொழியில் விஞ்ஞான வளர்ச்சிகளைக் காணவேண்டும் எனக் கருதினேன்.

ஒரு கை பார்த்தோம்!

அமெரிக்காவில் வெங்காயம் (கண்ணீர் விடாமலே) கிடைத்தது. பீசா ரொட்டி, பழச்சாறு முதலியன தாரளமாகக் கிடைக்கின்றன. சுவையான தண்ணீர் கலக்காத பால், யோகார்ட் எனும் கெட்டித் தயிர், சாக்லேட், ஐஸ்கிரீம்… போதாதா …? இந்த அருமையான சைவச் சாப்பாட்டை ஒரு கை பார்த்தபடி நாங்கள் பயணத்தைச் சமாளித்தோம் என்றாலும் நம் ஊர்ச் சாப்பாட்டு ஏக்கம் தீரவில்லை! மதுரை திரும்பியதும் எங்களைப் பார்த்த நண்பர்கள், மிகவும் மெலிந்து  போனோம் என அங்கலாய்த்தார்கள்.

நாம் உணவுக்கு நம் வருமானத்தில் எத்தனைப் பங்கு செலவிடுகிறோம் என்பதைக் கொண்டே நம் வாழ்க்கை முறையையும் தரத்தையும் அளவிட முடியும் என்பார்கள். அமெரிக்க நாட்டில் உணவுப் பொருள் விலையைக் கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டாலும் அந்த நாட்டுச் செலாவணிச் சமன்பாட்டில் உணவுவிலை அமெரிக்கர்களுக்கு மலிவுதான். அதனால்தான் விருந்து களிலும் கேளிக்கைகளிலும் உணவை அதிகமாகவே வீணாக்குகிறார்கள்.

அங்கே விருந்துகளில் அமர்ந்து சாப்பிடுவது மிக முக்கியமான நிகழ்வின் போதுதான். பெரும்பாலும் பபே (ஙிuயீயீமீt) எனப்படும் சுய பரிமாறு முறைதான். பொதுவில் வைக்கப்பட்ட உணவில் அவரவர்க்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு, ஓரிடத்திலேயே நிலையாய் இராமல் வந்திருக்கும் பலரோடும் அளவளாவிச் சாப்பிடுவது மிக வசதியான ஒன்று. நம் நாட்டிலும் இந்த விருந்துமுறை வேகமாக அறிமுகமாகி வருகிறது. அமெரிக்கர்கள் இந்த பபே முறையிலேயே வீணாக்கிக் கொட்டும் உணவு அதிகம்தான்.

மதிக்கப்படும் தனி நபர் உரிமை

எங்கும் தூய்மையாக உணவைப் பாதுகாத்துப் பயன்படுத்துகிறார்கள் என்றேன். கடையிலும், விருந்திலும் மிகக் கவனமாக உணவு வழங்கப்படுகிறது. சுகாதார முறைகளை நாம் அங்குதான் கற்கவேண்டும். ஒரு ஓட்டலின் சாப்பாடு சரியில்லை என்று யாராவது புகார் செய்தால் போதும், உடனே அது கவனிக்கப்படும், அல்லது அந்த ஓட்டல் மூடப்படும் அளவுக்குப் பொதுமக்கள் புறக்கணிப்பும், நடவடிக்கையும் தொடரும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் உணவுப் பொருள்களில் மிக விழிப்பாக இருக்கிறார்கள். தனி நபர் பாதுகாப்பும் உரிமையும் அந்த அளவுக்கு அங்கே மதிக்கப்படுகின்றன.

கலிபோர்னியா திராட்சைப் பழங்களுக்குப் புகழ்பெற்ற இடம் அவற்றில் பூசான நோய் ஏற்பட்டிருப்பதைக் கண்டவுடன், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அத்தனை திராட்சைக் கூடைகளையும் அப்புறப்படுத்திக் குப்பையில் கொட்டி விட்டார்கள். நம் ஊரைப் போல தடையை மீறி எவராவது தரக்குறைவான பண்டத்தை விற்பனை செய்தால் லைசன்சை ரத்து செய்து விடுவார்களாம். தண்டனையும் அதிகம்.

சிக்கனம்

அமெரிக்காவில் உணவை வீணாக்குவதைப் போல நான் ஐரோப்பிய நாடுகளில் பார்க்கவில்லை. இந்த வகையில் அவர்களிடம் அதிகச் சிக்கனம் கண்டேன்.

அமெரிக்காவில் இத்தனை மைல்கள் காரில் வந்தோமே எங்காவது குப்பைகூளம் கண்ணில் பட வேண்டுமே? ஊஹும்! கழிப்பறை, குளியலறை எல்லாம் மிகவும் தூய்மையாகவும் அழகாகவும் இருக்கும். அனைத்தும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டிருக்கும். அறிவியல் முன்னேற்றத்தால் ஏற்பட்ட நவீன வசதிகள் நிறைந்திருக்கும்.

சுற்றுப்புறத் தூய்மை, பொது வாழ்வில் தூய்மை, ஒழுங்குக் கட்டுப்பாடு பேணும் உணர்வு இவை அங்கு நன்கு புலப்பட்டன. நம் நாட்டில் வருடத்திற்கு ஒரு முறை இவற்றை விழாக் கொண்டாடிவிட்டுத் தொடர்ந்து பேணிப் பாதுகாக்காமல் அனைத்தையும் குப்பையில் போட்டுவிடுகிறோம். மதுரையில் சுற்றுப்புறத் தூய்மை காக்க நாமும் இயக்கம் நடத்தினோம். என்ன ஆயிற்று? போன ஆண்டு ஓரிடத்தில் கொட்டிய குப்பையெல்லாம் வேறு இடத்துக்கு வந்துவிட்டது. வெளிநாடுகளில் எப்போதும் செயல் இயக்கம்… நம் நாட்டில் எப்போதும் பேச்சு இயக்கம். என்று இந்த நிலை மாறுமோ என்ற ஏக்கம்!

சிக்காகோவில் – அன்பர்களின் வீடுகளில் – இருவகை விருந்துகள் உண்டு! வயிற்றுக்கும் செவிக்கும்! அங்கே உணவுப் பரிமாற்றத்தைவிடத் திருக்குறள் கருத்துப் பரிமாற்றமே மிகவும் ருசித்தது. நம் நாட்டில் – திருக்குறளைப் பற்றிப் பெரும்பாலும் தமிழறிந்த புலவர்களே மேடை கட்டிப் பேசக் கேட்கிறோம். ஆனால் இங்கு பிறதுறை அலுவல்களில் உள்ளவர்களில் பலர், திருக்குறளில் வாழ்க்கைத் தேவைக்கு ஏற்ற அளவு நல்ல தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு குறள் இன்ன அதிகாரத்தில் உள்ளது என எடுத்துச் சொல்லும் அளவுக்கு ஈடுபாட்டை வளர்த்து வாழ்கின்றனர். அவர்களோடு அமர்ந்து அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லும் திருக்குறளை ஆராய்ந்தோம்.

சிக்காகோவில் ஒரு சொற்பொழிவுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதென்றால் சனிக்கிழமை வரை தங்குவதை நீடிக்க வேண்டியிருக்கும். எனவே கலந்துரையாடல் கூட்டங்களை வைத்துக் கொண்டோம். பேசுவோர், கேட்போர் ஆகிய இரு தரப்பாரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் சுவையான கருத்தரங்குகளாக இவை நடந்தன.

திரு.இளங்கோவன் திருக்குறட்பா வடிவில் அதே நடையில் நெஞ்சு தொடும் வரவேற்புப் பாமாலையை யாத்தளித்தார். நம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேரறிஞர் தெ.பொ.மீ. அவர்களின் மருகர் பேராசிரியர் டாக்டர் ஆர்.சண்முகம் அவர்கள் வாங்கித் தந்திருந்த, நம் துணைவேந்தர் அறிமுகக் கடிதத்துடன், நம் அஞ்சல் வழிக்கல்வித் துறையினர் என்னிடம் கொடுத்தனுப்பியிருந்த ஆத்திசூடி – கொன்றைவேந்தன் முதலிய தமிழிலக்கிய ஒலி நாடாக்களைப் பல்கலைக்கழகத் தூதனாக அங்கு நல்கினேன்.

சிக்காகோவில் நண்பர்கள் இவற்றைப் பொன்னே போல் போற்றி வாங்கிக்கொண்டனர். தம் பிள்ளைகளுக்குப் பயன்தரும் இத்தகைய நன்கொடைகளைத் தொடர்ந்து அனுப்புமாறும் கேட்டுக் கொண்டனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையமும் இத்துறையில் இனி மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை நினைத்து மலைத்தேன்.

நண்பர்கள் எனது மேற்பயணத்திற்கான விசாவினைப் பெறும் முயற்சிகளில் ஓடி அலைந்தனர். சிலர் ஆரம்ப ஏற்பாடுகளைச் சரியாக செய்து கொள்ளாததால் அங்கே போய் அவதிப்பட நேர்ந்தது. பிரெஞ்சுப் புரட்சியின் 200-ஆவது ஆண்டு விழாக் கொண்டாடப்பட்டமையால் அந்த நாட்டுக்கு உடனே விசா பெறுவது சிரமமாய் இருந்தது. விசா முன் ஏற்பாடு செய்யாததாலே அவ்விழாவில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பும் கைநழுவியது. எனவே, புறப்படும் சமயத்தில் சரியான டிராவல் ஏஜண்ட் மூலம் விசாப் பெற்று உரிய ஏற்பாட்டுடன் புறப்பட வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டேன். இப்போதெல்லாம் 140 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்றார்கள்!

சிக்காகோ தமிழன்பர்களான நாராயணன், வெங்கடராமானுஜம் ஆகியோரை விட்டுப் பிரிய மனம் இல்லாமலேயே அமெரிக்காவை அவசரக் கோலத்தில் சுற்றிப் பார்த்து விட்டுக் கிளம்ப வேண்டியதாயிற்று!

 

 

பயணத்தின் பாதையில்…

‘பாண்டிய’னில் வழி அனுப்புகை

 

Image result for thirukural manimozhian

தமிழ்நாடு அறக்கட்டளையினர் தாய்த்தமிழகத்துடன் உறவுபூணும் வகையில் ஆண்டுதோறும் அங்கு விழா எடுக்கின்றனர். இங்குள்ள நண்பர்களை வரவழைத்து தாம் மகிழ்ந்து, மகிழ்விக்கின்றனர். அறக்கட்டளையின் 14-ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, ‘வான்புகழ் வள்ளுவம்’ பற்றி உரையாற்றுமாறு நான் அழைக்கப் பட்டிருந்தேன்.

தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு திருக்குறள் பேரவையின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், புதுப்பொறுப்பேற்ற சமயத்தில் இந்த அழைப்பும் வந்தது. எனவே எப்படி இதை மறுக்க முடியும்? மேலும் ‘உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையம்’ எனும் ஓர் அமைப்பினை மதுரையில் நிறுவி அதனைப் பதிவு செய்யும் விரிவாக்கப் பணிகளுக்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்த தருணத்தில் இந்த அழைப்பு வந்துள்ளது. எப்படி இதனைத் தவிர்க்க இயலும்?

மறுக்கவோ, தவிர்க்கவோ முடியாத வண்ணம் அமெரிக்க நண்பர்களின் கடிதங்கள் அணிவகுத்து வந்தன. சிகாகோவிலிருந்து போற்றுதற்கு உரிய நண்பர்கள் திரு.பி.சி.எம்.ஜி. நாராயணன், திரு.வெங்கடராமானுஜம், தொழிலதிபர் பழனிபெரியசாமி, தலைவர் பி.மோகனன், செயலாளர் தி.ராஜேந்திரன் ஆகியோர் எழுதிய மடல்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்தின. அமெரிக்கப் பயணத்தோடு, கனடா, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் ஆகியவற்றுக்கும் பயணம் செய்வதற்காக விரிவாகத் திட்டமிடும் பொறுப்பினை என் மனைவி கமலா ஏற்றுக்கொண்டாள்.

என் துணைவி கமலாவிற்கு நிறையப் பயண அனுபவங்கள் உண்டு. ரோட்டரி மாதர் கழகத் தலைமை ஏற்பு, மேனிலைப்பள்ளி நிர்வாகப் பொறுப்பு, சேவை அமைப்புகளின் தொடர்பு ஆகியவற்றில் பெற்ற பயிற்சிகள் எல்லாம், கமலா கை தொடும் எதனையும் கலையாக்கித் தந்துவிடும்.

விசா வந்துவிட்டது, டிக்கட்டுகள் ஏற்படாகிவிட்டன. 25.5.89-ஆம் நாள் மதுரையிலிருந்து பாண்டியன் ரயிலில் புறப்பட வேண்டும். அன்று அதிகாலையில் குன்றக்குடி பிரசாதம் வீட்டு வாயிலுக்கு மங்கலம் சேர்க்க வந்து பொலிந்தது. திருக்குறள் பேரவைத் தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் பயணத்தை ஆசீர்வதித்து அருட்பிரசாதத்தை அன்பர் மூலம் அனுப்பியிருந்தார்.

வடலூர் வள்ளலாருக்குப் பின்னர் தமிழகம் கண்ட பேரருள் பெருந்தகை ஆகிய குன்றக்குடி அடிகளார் மனித நேயச் சிந்தனையால் ஏற்படுத்திய அமைப்புகள் இரண்டுள. ஒன்று திருவருள் பேரவை; மற்றொன்று திருக்குறள் பேரவை.

அரசியல், பொருளாதாரச் சமுதாயப் பிரச்சினைகளுக்கு திருக்குறள் நெறியில் தீர்வுகாண முயன்றுவரும் இயக்கம் திருக்குறள் பேரவை. உயர்ந்த சிந்தனைகளும் சீரிய கோட்பாடுகளும் செறிந்து கிடக்கும் இந்த நாட்டில் அவை முறையே செயலுக்கு வராமல் போனதால், வறுமையும் அறியாமையும் இங்கு குடியேறிக் கொண்டன. இந்த அவலத்தை அகற்றிப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் சமத்துவ சமுதாய வழி பேணிட அமைந்ததே திருக்குறள் பேரவை.

உலகெல்லாம் உவந்தேற்றும் தமிழ் மாமுனிவரின் வாழ்த்து எங்கள் தமிழ்ப் பயணத்தின் ஆதார சுருதியாக அந்த வினாடியே இசை மீட்டியது. மதுரை ஆலயங்களில் இருந்து பிரசாதங்களை அன்புச் சகோதரர்கள் கொணர்ந்தனர்; மதுரை திருவள்ளுவர் கழகப் பெரியவர்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.

அன்று மாலை – டவுன்ஹால் ரோடு வள்ளுவர் அரங்கில் – வழியனுப்பு விழா ஒன்றினை அன்புப் பெரியவர்கள் பாரதி ஆ.ரத்தினம், அய்யணன் அம்பலம், பேராசிரியர் குழந்தைநாதன், பெரும்புலவர் செல்வக் கணபதி, திரு.நாகராஜன் ஆகியோர் விரைந்து ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது உரையாற்றிய பெருமக்கள் விவேகானந்த சுவாமியின் ஆன்மிகப் பயணம் வழிகாட்டிட எனது திருக்குறள் பயணம் பயனுற அமைய வேண்டும் என வாழ்த்தினர்.

அன்று மாலை மதுரை ரயில் நிலையத்தில் வழி அனுப்ப வந்த அன்பர்கள் எங்களைத் திக்குமுக்காடச் செய்துவிட்டனர். மலைபோல் மாலைகள் குவிந்தன. பிளாட்பாரத்தை விழா மேடையாக்கிக் கவிமாலைகள் சாற்றத் தொடங்கிவிட்டனர். இவை எல்லாம் திருக்குறளுக்குச் செய்யும் பெருமை எனவே கருதிப் பணிவுணர்வுடன் ஏற்றுக்கொண்டேன். வண்டி புறப்படுகையில் பெட்டியின் வாயிலில் நின்றபடி கண்ணீர் மல்கக் கையசைத்து விடைபெற்ற என் காதில் விழுந்த அன்பர், நண்பர் திரு.ஆ.ரத்தினம் அவர்கள் வாழ்த்துரை… “பாண்டியனில் வழியனுப்புகிறோம். அன்று பாண்டிய நாட்டு சேதுபதி மன்னரால் வழி அனுப்பப்பட்ட விவேகானந்தரைப் போல- திருக்குறள் தூதுவராகச் சென்று வருக! வென்று வருக!” என அவர் எழுப்பிய வீர முழக்கம் பிளாட்பார எல்லை முடியும் வரை எதிரொலித்தது. வண்டியில் அமர்ந்ததும் வழியனுப்பு விழாவில் ஆற்றிய உரைகள் என் நினைவில் படர்ந்தன.

Image result for vivekananda

“1893-இல் அமெரிக்கா நாட்டு சிக்காகோவில் கூடிய உலக சமயப் பேரவைக்கு இந்தியத் தூதுவராக இளம் துறவி சுவாமி விவேகானந்தர் சென்றிடக் கணிசமாக நிதியுதவி செய்தவர் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி… பாண்டி நாட்டுச் சேதுபதி மன்னர் அவரை அன்று அனுப்பினார்; இன்று இந்தப் பாண்டியன் வண்டியில் உங்களைப் பயணமாக்கி வழியனுப்பி உள்ளார்கள்; நீங்களும் சிகாகோ போகிறீர்கள். அதுதான் இதில் உள்ள பாண்டியப் பொருத்தம்” என்றார் அருகில் இருந்த நண்பர். இந்த 1893- நம் வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. காந்தியடிகள் தென்னாப்பிரிக்கப் பணிக்குப் புறப்பட்ட ஆண்டு, விவேகானந்தர் சுவாமிகள் ஆன்மிகப் பயணமாக வழியனுப்பப்பட்ட ஆண்டு, சிறந்த ஆன்மிகச் செல்வர் அரவிந்தர் தாயகம் வந்து சேர்ந்த ஆண்டு எல்லாம் இந்த 1893 தான்.

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் தொண்டு புரிந்த ஆண்டுகளில் அமெரிக்க நாட்டுச் சமகாலச் சிந்தனை யாளரான ஹென்றி டேவிட் தோரோவின் கருத்துக்களால் மிகவும் கவரப்பட்டார். காந்தி அடிகள் ஒருமுறையாவது அமெரிக்காவிற்கு வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அடியெடுத்து வைக்கும் பாக்கியம் அமெரிக்க மண்ணுக்குக் கடைசிவரை கிடைக்காமலே போய்விட்டது. என்றாலும் அதற்கு முன்னரே விவேகானந்தர் அங்கு நிகழ்த்திய வீர முழக்கம் இன்றும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

இதனை நினைவூட்டி சிக்காகோ நண்பர்கள் எழுதிய கடிதங்கள் பசுமை நினைவுகளாக என்னை ஆட்கொண்டிருந்தன.

அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட பாரதத்தில் கனன்று வந்த புரட்சித் தீக்கங்குகள் வங்காளத்தில்தான் அடிக்கடி சுவாலையாக எரிந்து உயர்ந்தன. அரசியல், ஆன்மிகம், கலை ஆகிய முத்துறையிலும் அங்கே மறுமலர்ச்சி ஓடைகள் சங்கமித்து வந்தன. அந்தச் சங்கமச் சூழலில் அவதரித்தார் நரேந்திரன் (1863). காலனி ஆதிக்கத்தோடு கைகோத்து வந்த மேலை கலாச்சாரக் காட்டாறு வங்கத்தில் ஓடிச் சுரந்த தொன்மைப் பண்புகளை அடியோடு அடித்துச் செல்ல முற்படுவதைக் கண்டு இளமையிலேயே அவர் பொங்கி எழுந்தார். கல்கத்தா கல்லூரியில் சட்டம் பயிலச் சேர்ந்து கலைக் களஞ்சிய ஞானம் பெற்றுவந்த இளைஞரை – புனிதர் பரமஹம்சரின் புன்னகை எப்படியோ ஆட்கொண்டு விட்டது. 1881-இல் பரமஹம்சரின் பாதம் பணிந்து பரம சீடராக ஆகிவிட்ட நரேந்திரன் தவயோகியாகவும், வேதவிற்பன்னராகவும் மாறியது பாரதம் கண்ட ஆன்மிக இரசவாதம். விவேகானந்தர் என இளமையிலேயே ஏற்கப்பட்ட இந்த ஞானசீலர், பரமஹம்சரின் சமாதிக்குப் பின் இராம கிருஷ்ண இயக்கத்தை நிலைநிறுத்தி பாரதம் முழுவதும் பாத யாத்திரை செய்தார். உலக நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்து மானிட ஒற்றுமையையும் சகிப்புத்தன்மை யையும், இந்தத் திருநாட்டின் செய்தியாகத் தூதுரைக்க முற்பட்டார். இச்சமயத்தில்தான் – அமெரிக்க நாட்டு சிக்காகோ நகரில் கூட இருந்த உலக சமயப் பேரவையில் () உரையாற்றிட அழைக்கப்பட்டார்.

1893-முப்பதே வயதான சுவாமி விவேகானந்தர் பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு வந்திருந்தார். மைலாப்பூர் கடற்கரை அருகே தங்கி, அற்புதமான ஆங்கிலப் பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். முற்போக்கு இளைஞர்கள் அவரை மொய்த்துச் சூழ்ந்தனர். முதன்முதலாக தமக்கென ஒரு சீடர்குழுவை உருவாக்கும் பெருமையைச் சென்னைக்குப் பெற்றுத்தந்தார்.

சிக்காகோ சமயப் பேரவைக்குத் தம்மை அழைத்துள்ளார்கள் என சுவாமி விவேகானந்தர் இச்சீடர் குழுவிடம் தெரிவித்துள்ளார். அடுத்த வினாடியே அதற்கான நிதியைத் திரட்டிவிட இளைஞர்கள் புறப்பட்டுவிட்டனர். ஏழை-எளியவர்கள் நல்கிய காணிக்கைகள் எல்லாம் சேர்ந்து மொத்தம் ரூபாய் மூவாயிரம் வரை திரண்டன. இராமநாத புரம் சேதுபதி மன்னர் ரூ.500 நல்கினார். பாண்டிய நாட்டுப் பயண முடிவில் குமரிக் கடலில் தீர்த்தமாடிவிட்டு விவேகானந்தர் சிக்காகோ பயணத்தை மேற்கொண்டார்.

Image result for gandiji

தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் தொடங்கிய அறப்போரின் முதல் தொண்டர்களாக விளங்கிய பெருமை தில்லையாடி வள்ளியம்மை போன்ற தமிழர்களுக்கே கிட்டியது. விவேகானந்தர் ஞான விளக்கேந்திப் புறப்பட்ட பயணத்திற்கு முத்தாய்ப்பு வைக்கும் பெருமையும் தமிழகத்துக்கே கிட்டியது.

இந்தப் பெருமை தமிழ் மண்ணோடு கலந்துவரும் பாரம்பரியம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப் பூங்குன்றச் சங்கநாதம், உலகுக்கென ஒரு நூலை – திருக்குறளை – அளித்த அழியாத மரபுவழிக் கொடைத் திறம், பாரதி ஆ.ரத்தினம், பேராசிரியர் குழந்தைநாதன் ஆகியோர் கூறிய இக்கருத்துக்கள் மீண்டும் மீண்டும் என்னை வலம் வந்தன.

விவேகானந்தர் இந்தியத் திருநாட்டின் வேதாந்த வித்தகத்தை மேலைச் சீமைக்கு ஏந்திச் சென்றார். ‘சகோதர, சகோதரிகளே’ எனும் முதல் தொடக்கத்தினாலேயே அவையோரைக் கவர்ந்தார். மிக மிக எளியவனான எனக்கு இப்போது விவேகானந்தரைத் தடம் பற்றிச் செல்லும் வாய்ப்பும் கிட்டியுள்ளது. “உலகம் ஒரு குலம்” என ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அதுவும் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டாமலேயே இத்தரணியின் உறவு எல்லையை வரையறுத்துக் கண்ட வள்ளுவச் செல்வத்தை அக்கரைச் சீமையில் மறுபடி நினைவூட்டிச் சொல்ல நான் புறப்பட்டிருக்கிறேன்.

விவேகானந்தர் எங்கே! நான் எங்கே!

எனினும் எனக்குள்ளே இனம்புரியாத அச்சம் கலந்த ஓர் உற்சாகம்! அந்த உற்சாகத்தைத் தந்தது யார்?

வள்ளுவர் தான்.

‘அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

 பெருமை முயற்சி தரும்”      (611)

எனும் ‘ஆள்வினை உடைமை’ முதல் குறள் என்னைப் பாண்டியனில் ஏற்றிவிட்டது. பயணம் தொடர்ந்தது.

அமெரிக்கப் பயணம்

ஒரு நினைவோட்டம்

Image result for USA

என் திருக்குறள் பயணம், உலகப் புகழ் பெற்ற மிகப்பெரிய நாட்டினை நோக்கித் தொடங்க இருந்தது. அமெரிக்க நாட்டைப் பற்றி நான் ஏற்கெனவே அறிந்தவை, படித்தவை எல்லாம் ஒருபுறம் இருக்க, பல புதிய செய்திகளை அறிந்துகொள்ள மனம் துருவியது. அமெரிக்காவில் தொடர்புடைய, அங்கு போய் வந்த அன்பர்களிடமெல்லாம் அவசரத் தொடர்பு கொண்டேன். பயணம் போகும் புது இடத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதுதானே பயணத்திற்கு உரிய முதல்நிலை ஏற்பாடு?

அமெரிக்கத் தொடர்போடு இங்கு வாழும் அன்பர்களில் பலர் அமெரிக்க மக்களின் வாழ்வுப் போக்கில் தாம் கண்ட சாதாரணக் குறைகளையே பட்டியலிட்டுச் சொன்னார்கள். எதையும் அனுமதித்து ஏற்கும் அச்சமுதாய இயல்புகள் , பழக்கவழக்கங்கள், இன உணர்வுகள், ஊழல்கள், அரசியல் தில்லுமுல்லுகள், மதுவிலக்கு, சூதாட்டம், லாட்டரி விளைவுகள், தன் நாட்டு வளர்ச்சிக்காகப் பிறநாட்டுச் சுரண்டலையே நோக்காகக் கொண்ட தொழில் வர்த்தக நிறுவனங்கள்… இவற்றையெல்லாம் விலா வாரியாகச் சொல்லி அச்சமும் அயர்வும் ஏற்படச் செய்தார்கள். என்றாலும் அந்த அதிசய நாட்டின் ஈடிணையற்ற ஜனநாயக உயிரோட்டத்தையும், ‘இப்படியெல்லாம் அமெரிக்காவில்தான் நடக்கும்’ என்ற அபிமான உணர்வோட்டத்தையும் சுட்டிக் காட்டவும் தவறவில்லை. “ ‘அமெரிக்காவைப் பார்’ என உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே.செட்டியார் அன்று எழுதிய புத்தகத்தையும் ‘சோமலெ’ எழுதிய பயணக் கட்டுரைகளையும் படித்துவிடுமாறு நண்பர் ஒருவர் சிபாரிசு செய்தார்.

தொழில், வாணிபப் பயணமாகப் போனால் லாபநட்டக் கணக்கோடு நான் ஆயத்தமாக வேண்டியது அவசியம். ஆனால் நான் மேற்கொள்ளப் போவதோ தமிழ்ப் பயணம். அதிலும் குறிப்பாக, திருக்குறள் பயணம். எனக்கு இவ்விரண்டின் நிலைபேறு பற்றிய முன்னறிவு கொஞ்சமாவது வேண்டும் எனக் கருதினேன்.

அமெரிக்காவில் வாழும் தமிழர்களைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தேன். ஆனால் அமெரிக்காவில் தமிழ் எப்படி வாழுகிறது என அறிவதல்லவா முக்கியம்?

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையோடு தொடர்பு கொண்டேன். டாக்டர் தமிழண்ணல், பேராசிரியர் சு.குழந்தைநாதன் தொகுத்து எழுதிய ‘உலகத் தமிழ்’ நூல் பற்றிய பல விவரங்களை நான் பெற முடிந்தது… தமிழ் அரிச்சுவடிப் பாடம் கற்பிப்பதைவிட பட்டப்படிப்பு வரை பயில அங்கு அளிக்கப்படும் வசதி வாய்ப்புக்களையும், தமிழ் மன்ற நடவடிக்கைகளையும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆசிய மொழி, இலக்கியத்துறை எனும் தனிப்பிரிவே அங்கு உள்ளது.

அமெரிக்காவில் இப்போது தமிழ், தெலுங்கு எனும் இரு திராவிட மொழிகளில் மட்டுமே பாடங்கள் தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வருகின்றன. கன்னடமும், மலையாளமும் அவ்வப்போது கற்பிக்கப்படுகின்றன. வாஷிங்டனிலும், சிக்காகோ பல்கலைக்கழகத்திலும் கன்னடம் கற்பிக்கப் படுகின்றது. பென்சில்வேனியாவில் மலையாளம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. வாஷிங்டன், பென்சில்வேனியா, விஸ்கோன்சின், மிக்ஸிகன், கலிபோர்னியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. டெக்சாஸ் கோர்வல் பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு நேரும்போது நடக்கின்றன. விஸ்கோன்சின், டெக்சாஸ் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் பென்சில்வேனியாவில் ஒழுங்காகவும் கற்பிக்கப்படும் மொழிப் பாடங்கள் முழுமையான பாடத் திட்டத்துடன் நடத்தப்படுகின்றன. அதாவது, தெரிந்தெடுத்துக் கொள்ளப்படும் மொழியின் இலக்கியம் அல்லது மொழியியலில்  எம்.ஏ.யும், பி.எச்.டி.யும் பெறும் அளவிற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுப் பயிற்சியும் தனித்துறை ஆய்வும் அளிக்கப்படுகின்றன.

பிற கல்வி நிறுவனங்கள் இலக்கிய ஆய்வுகளில் மிகுதியும் ஈடுபட்டு இருப்பதால் பென்சில்வேனியா, வாஷிங்டன் பல்கலைக்கழகங்கள் திராவிட மொழியியலில் சிறப்புப் பயிற்சிகளை அளிக்கின்றன. கோர்வல் டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மொழியியலில் மிகுந்த நாட்டம் உண்டு; ஆனால் விஸ்கோன்சின், கலிபோர்னியா கழகத்தவர்களுக்கு இலக்கிய ஆய்வுகளிலேயே ஆர்வம் மிகுதி. சிகாகோவில் இரண்டுக்குமே ஆக்கம் தரப்படுகின்றது.

இயல்பாகப் பாட வகுப்புகளை வழக்கமாக நடத்தி வரும் பல்கலைக்கழகங்களில் தொடக்கநிலை வகுப்புகளில் ஆறு மாணவர்கள் வரை சேருவர். மேல்வகுப்புகளில் இந்த எண்ணிக்கை குறைவது உண்டு. வாஷிங்டன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவின் தொடக்க நிலையில், மூன்று மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் மொழியியல், தொல்பொருள் ஆய்வு முதலிய இதர துறைகளில் மேல்நிலை ஆய்வு செய்யும் பட்ட வகுப்பு மாணவர்களும் உள்ளனர். மொழியியல், இலக்கியம் மட்டுமன்றி, தென்னிந்திய வரலாறு, சமயம், இசை, நுண்கலை, அரசியல், திணையியல் முதலிய இதர துறைகளில் ஆர்வம் உள்ளோரும் வாஷிங்டன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவில் சேர்ந்திருப்பர். இவர்கள், தமிழை ஓரளவு கற்ற பின்னர்த் தமக்குப் பிடித்தமான துறையில் பட்டம் பெறத் தகுதியுறுவர்”.

பல்கலைக்கழகங்கள், பள்ளிகளை விட, அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் தன்னார்வத் தமிழ்ச் சங்கங்களும் அமைப்புகளும் ஒன்றுகூடி, தமிழ் இலக்கிய வேள்வி நடத்தி வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் சிக்காகோவில் உள்ள தமிழ்நாடு அறக்கட்டளை  17 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் இதழ் நடத்தி, தமிழர் உள்ளங்களையும், இல்லங்களையும் ஒரு சரமாக இணைத்து ஒப்பற்ற ஆக்கப்பணி புரிந்து வருகின்றது. சென்னையில் ஒரு கிளையினை நிறுவும் வகையில் உயர்ந்து நிற்கும் தமிழ்த்தொண்டர் அமைப்பு இது. திரு.மோகனன், இளங்கோவன், டாக்டர் ரெஜி ஜான், டாக்டர் சவரிமுத்து, கண்ணப்பன், டாக்டர் பி.ஜி.பெரியசாமி, திருமதி. வெங்கடேஸ்வரி சுப்ரமணியம் முதலிய தமிழ் நெஞ்சங்கள், அமெரிக்க நாட்டில் வாழும் தமிழ்க் குடும்பங்களுக்கும் தாயகத்திற்கும் உறவுப் பாலங்களைக் கட்டி வருகின்றன. அமெரிக்கத் தமிழர்கள் பொங்கல் உள்ளிட்ட தமிழ் விழாக்களையும், தீபாவளி, நவராத்திரி முதலிய பண்டிகைகளையும் கூடிக் கொண்டாடி நமது பண்பாட்டுக் கோலங்களைத் தூவி வருகின்றனர். இக்கோல வடிவங்களையெல்லாம் கண்டு மகிழும் பயணமாக என் திருக்குறள் உலா தொடங்கியது. தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அருள் ஆசியுடன் அன்பர்கள் அணி திரண்டு நல்கிடும் வழியனுப்புதலுடன் மதுரையிலிருந்து புறப்பட ஆயத்தமானேன்.

பயணப் பரபரப்பு

பயணம் போவதென்றால் யாருக்கும் ஒருவகை பரபரப்பு உணர்வு ஏற்பட்டே தீரும். பள்ளிப் பருவத்துக் கல்விப் பயணமானாலும் சரி, பிள்ளைப் பருவத்து இன்பச் சுற்றுலா ஆயினும் சரி, பின்னைப் பருவத்துக் குடும்ப சமூக நிகழ்ச்சிப் பயணம் ஆயினும் சரி – வெளியூர் போவதென்றாலே மனமும் பொழுதும் வேகமாக ஓடத் தொடங்கிவிடும். சொந்த வாகன வசதி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, போக வேண்டிய பயணம் பற்றிய சிந்தனை மனதை அரிக்கத் தொடங்கிவிடும். அதிலும் தொலை தூரப் பயணம் என்றால் கேட்கவே வேண்டாம். பலமுறை போய்வந்த நாடாக இருந்தாலும் கூட, பரபரப்பையும் மீறியதொரு பதைபதைப்பையும் உண்டாக்கியே தீரும்.

எனக்கும் அப்படித்தான்! பல வெளிநாடுகளுக்கு முன்னர் போய்வந்த அனுபவம் இருந்தும் இந்தத் திருக்குறள் பயணம் நெடிய எதிர்பார்ப்புகளை என்னுள் உருவாக்குவது போன்ற பிரமை ஏற்பட்டுவிட்டது. “அவை, பயணங்கள் அல்ல; பல்கலைக்கழகங்கள்” என எங்கேயோ படித்த வாசகம் – எனக்குள்ளே வலம் வந்து – இந்தப் பயணத்தைப் பல்கலைக்கழகமாக்கத் திட்டமிடும் தீர்மானத்தை முன்மொழிந்து கொண்டிருந்தது. அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளைப் பற்றிய விவரங்களைப் போதுமான அளவுக்கு திரட்டிக் கொள்ளத் தூண்டிவிட்டது. நண்பர்கள், அன்பர்களின் பெயர்ப் பட்டியலை, முகவரியை எல்லாம் தேடி எடுத்துக்கொள்ள நேரம் போதவில்லை எனும் நெருக்கடி ஏற்பட்டது.

Image result for bharathiyar

 

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என மகாகவி அன்றே பாடினான். தமிழ்நாடு வான்புகழ் பெற்றிட வையகத்துக்கு எல்லாம் வள்ளுவச் செல்வத்தை வழங்கினாலே போதும் என்பது அவனது கணிப்பு. உலகினுக்கு வள்ளுவத்தை நல்கும் பணியில் தமிழ்நாட்டு மக்கள் ஊன்றி நின்றிருக்க வேண்டும். விழா எடுக்கும் போது மட்டும் ஊர்கூட்டி முழக்கமிட்டுவிட்டு, அப்புறம் அயர்ந்து போய்விடுவதுதான் நம் வழக்கம். ஆனால், அயல்நாடுகளில் வாழும் தமிழ் அன்பர்கள் தாமும் அயர்வதில்லை. நம்மையும் அயரவிடுவதில்லை! அதிலும், அமெரிக்கத் தமிழர்களின் ஆர்வம் – அங்குள்ள ‘எம்பயர் கட்டிடம்’ போல் உயர்ந்தது; இங்குள்ள இமயம் போல் ஓங்கி நிற்பது.

வட அமெரிக்காவில் உள்ள டெய்டன் – ஆகாய விமானம் கட்டும் தொழில் சிறந்த பெரும் நகரம். விமான வடிவமைப்பு, கட்டுமானம், கணிப்பொறி நுட்பம் ஆகிய துறைகளில் நம் நாட்டவர்கள் பலர் அங்கு பொறுப்பேற்றுள்ளமை நமக்குப் பெருமை தரும் விஷயம். அவர்களில் கணிசமான அளவு தமிழ்நாட்டவர்களும் உள்ளனர்.

மேல்நாட்டுத் தமிழர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடிட உறவுப்பாலம் அமைப்பன தமிழ்… தமிழ்ப் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ்க் கலைகள்… – இந்நான்கையும் சால்புடைய தூண்களாக்கிக் கொண்டு, அமெரிக்கத் தமிழன்பர்கள் அறக்கட்டளையே அங்கு நிறுவிவிட்டனர்.

தமிழ்நாடு(ம்) அறக்கட்டளை

 

‘தமிழ்நாடு அறக்கட்டளை’ எனும் கூட்டமைப்பு அமெரிக்கத் தமிழ் அன்பர்களின் சேவைத் திறத்திற்கு எடுத்துக்காட்டானதொரு மணிமகுடம். அமெரிக்கப் பெருநாட்டின் கிழக்கு மேற்குக் கரையோர நகரங்களிலும் உள்நாட்டுப் பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கில் பாரதத் திருநாட்டினர் பரவி வாழ்கின்றனர். இவர்களுள் தமிழ்நாட்டவர் அங்கும் இங்குமாகச் சிதறி இருக்கின்றனர். இவர்களையெல்லாம் ஒரு சரமாக இணைத்துக் காணும்- இசைவித்துப் பேணும் முயற்சிகள் ஆண்டாண்டுகளாக அரும்பு கட்டி வந்துள்ளன.

1974-இல் தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு அறக்கட்டளை’ நல்ல அடித்தளத்தோடும், நயந்தரு ஆக்கத்திட்டத்தோடும் பணியாற்றி வருகிறது. சிக்காகோ முதலிய நகர்களில் தமிழ்ச் சங்கங்கள் உண்டு என்றாலும் அனைத்தையும் ஒருங்கே இணைத்துப் பார்க்க ஏற்றதொரு பொது அமைப்பு தேவைப்பட்டது. அந்த நெடிய தேவையை நிறைவு செய்ய ஊன்றப்பட்ட தமிழ்நாடு அறக்கட்டளைக்கு முக்கியமான நகரங்களில் எல்லாம் கிளைகள் உண்டு. சர்வதேசச் சுழற்கழகம், அரிமா சங்கம் என்பன போல, அன்புத் தோழமையும், மனித நேயத் தொண்டையும் இரு கால்கள் எனக் கொண்டு தமிழ்நாடு அறக்கட்டளையும் நடைபோட்டு வந்தது.

தமிழ்நாடு அறக்கட்டளையின் முதன்மை நோக்கம் அமெரிக்காவில் வாழும் தமிழர்களிடையே நெருக்கமான உறவினை ஏற்படுத்துவது; இந்த உறவினை வலுப்படுத்தும் புத்தாண்டு, பொங்கல், நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் விழாக்களை நடத்தி விருந்தயர்வது; அனைத்துச் சமயத்தவர்க்கும் பொது வீடாக – நல்லிணக்க மன்றமாக- அறக்கட்டளையை நிர்வகிப்பது; பல குடும்பங்களை ஒன்றாகக் கூட்டிக்கொண்டு சிறு சுற்றுலாப் போவது; நிலா விருந்து பரிமாறிக்கொள்வது; போட்டிப் பந்தயங்கள் நடத்துவது; நமது கலாச்சாரத்தைப் பிறர் புரிந்து பாராட்ட வாழ்ந்து காட்டுவது.

“அயல்நாடு எதுவாயினும் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் தமக்குள்ளே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு வகைச் சுயநலம் சார்ந்த தற்காப்பு சங்க(ம)ம்தான் இது! இதில் என்ன புதுமை இருக்கிறது?” என்று கேட்க அமெரிக்க நாட்டுத் தமிழ் அறக்கட்டளையினர் வாய்ப்பு அளிக்கவில்லை.

அறக்கட்டளையின் விழுமிய நோக்கம் தாயகத்துத் தமிழ் மக்களுக்குத் தன்னால் ஆன உயர் கொடைகளை நல்க முற்படுவது. அமெரிக்கத் தமிழர்களிடையே நிதி திரட்டி, அதனைக் கொண்டு தமிழ்நாட்டில் விழுமிய சேவைத் திட்டத்தைச் செயலாக்குவதே அதன் புறவடிவம். அங்கு நிதி தொகுக்கவும் இங்கு அது குடை கவிக்கவும் போதிய ஆக்கம் தரக்கூடிய சான்றோர்கள், அறங்காவலர் களாகப் பொறுப்பேற்றனர். டாக்டர் ஜி.பழனிபெரிய சாமி, டாக்டர் இளங்கோவன், சி.கே.மோகனன், டாக்டர் சவரிமுத்து, டாக்டர் ஜானகிராமன், டாக்டர் கோவிந்தன், டாக்டர் நல்லதம்பி, திரு.துக்காராம், டாக்டர் பி.அமரன், திருமதி வெங்டேசுவரி, திரு.ரவிசங்கர், திரு.ஏ.எம்.ராஜேந்திரன், திரு டி.சிவசைலம், டாக்டர் சி.எஸ்.சுந்தரம், டாக்டர் ஆனந்தகிருஷ்ணன், டாக்டர் பொன்னப்பன் என நாள்தோறும் திரண்டுவரும் தொண்டர் அணியினர் அமெரிக்காவில் அறம் வளர்க்கும் நாயகர்களாக விளங்கு கின்றார்கள்.

தமிழ்நாட்டில் ஆயிரம்ஆயிரம் பேர் பயன்பெற விழுதூன்றப் போகும் ஆலமரக் கன்றுகளைப் பேணும் பொறுப்பேற்க உவந்து இசைந்த சான்றோர் வரிசையும் பெரிது; அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம்  நீதியரசர் வேணுகோபால், அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எம்.அனந்தகிருஷ்ணன், திரு.சந்திரன்… அமெரிக்கத் தமிழன்பர்களது அறக்கட்டளைகள் பல வகை; சிறிதும் பெரிதுமாக எண்ணற்றவை; தனி நபர் உதவியாகவும் பலர் சேர்ந்து வழங்கும் கொடையாகவும் நூற்றுக் கணக்கானவை. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல்லார் பெயரால் பரிசுக் கட்டளைகள், தமிழ்நாட்டில் பள்ளிக் கட்டிட நிதிகள், ஆன்மீக, ஆசிரம தர்மங்கள், மருத்துவ மனைக் கொடைகள், ஈழத் தமிழர் வாழ்வு நலன்கள் என்றெல்லாம் வாரி வழங்கி வருபவை.

Image result for thirukural manimozhian

ஆனால் தமிழ்நாடு அறக்கட்டளை இந்த எல்லைகளையும் தாண்டியது. என்றும் பயன்தரும் வேலைத் திட்டங்களை தமிழ்நாட்டில் செயலாக்கும் கருத்துடையது. அவற்றுள் முக்கியமானது; சென்னையில் பல லட்சம் டாலர் செலவீட்டில் உருவாகிவரும் தொழில் நுட்பக் கேந்திரம் எனும் தொழில் நுட்பப் பரிமாற்றப் பயிற்சி மையத்தைச் சென்னையில் நிறுவுவது. இது தமிழ்நாட்டு இளைஞர்கள் அமெரிக்காவில் நாள்தோறும் வளர்ந்துவரும் புதுப்புதுத் தொழில் நுட்பங்களை எல்லாம் அறிந்து கொள்ள வாயில்களைத் திறந்து வைக்கும். நிகரான அறிவியல் சிந்தனைகள் இங்கும் சமகாலச் சாதனையாகப் பாத்தி கட்டும். இது எளிய காரியம் இல்லை. பலரது மகத்தான கூட்டு முயற்சியால் மட்டுமே இதனைச் சாதிக்க முடியும்.

சாதனைப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ள பேரமைப்பினர் விடுத்துள்ள அழைப்பினை ஏற்பது எத்தகைய பெருமை? அந்தப் பெருமையை எனக்குத் திருக்குறள் அல்லவா பெற்றுத் தந்துவிட்டது!

குறள் நிலா முற்றம் 13

ஒருங்கிணைப்பாளர்

“உபதேசம் வெறும் ஊறுகாய் போல மட்டும் இருந்து விடலாமா? பற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளரவேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.”

அரசு அதிகாரி

“பசிப்பிணியைப் போக்க அரசு பல திட்டங்களைப் போட்டு வருகின்றது. பசிப் பிரச்சினை மற்றும் வேலை இல்லாத் திண்டாட்டம் என்பன பெருகும் மக்கள் தொகையாலும் இதர நிர்வாக முறைகளாலும் தவிர்க்க முடியாத பிரச்சினைகளாக நீடிக்கின்றன. இதைச் சமாளிக்க அரசு வரிகளைக் கூட்டினால் எதிர்ப்பு வலுக்கிறது.”

பேராசிரியர்

“இப்போதெல்லாம் குடியாட்சி செலுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் அரசு பெரும்பாலும் வரிகளை மக்கள் ஒரு கடமையாகத் தாமாக முன்வந்து செலுத்த ஊக்கம் தருவதில்லை. கசக்கிப் பிழிய முற்படுவதால் மக்களில் பலர் வரி கட்டாது ஏமாற்றப் பார்க்கிறார்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் பொதுவுடைமைச் சமுதாயம் என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே நீடிக்கிறது. எனவே வரிகளைப் பெருக்கி, வசதிகளைப் பெருக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்படுகின்றது. அவ்வாறு வரி தண்டுவதிலும் ஒருவகை மனிதநேயப் பாங்கு இருக்க வேண்டும் என்பது வள்ளுவ நியதி.. அனைவருக்கும் தெரிந்த குறள்தான் அது.

‘வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

     கோலொடு நின்றான் இரவு.’         (552)

ஆட்சி அதிகாரத்தோடு, முறை கடந்து பொருளைக் கைக்கொள்ளுவது, பாதை நடுவே வேலோடு நின்ற கள்வன், பொருளைக் கொடு என அச்சுறுத்திப் பொருளைப் பறித்துச் செல்வதைப் போன்றது என அடித்துச் சொல்கிறார் வள்ளுவர். நல்லாட்சி பற்றிப் பேசும் போது, வெற்றிதருவது கோல் எனப் பேசிய வள்ளுவர், கொடுங்கோன்மையால் கசக்கிப் பிழிந்து வரிபெறுவது அருளற்ற ஆட்சி, அது நிலத்துக்குச் சுமை, கொள்ளையர் ஆட்சி என்றெல்லாம் சாடுகிறார்.”

பெரும்புலவர்

“நன்முறையில் வரி பெறுவதையும் தீய வழியில் வரி பறிப்பதையும் பற்றிய புறநானூற்றுப் பாடலில் வரும் யானை பற்றிய உவமையை இங்கே நினைவில் கொள்ளலாம். ஒருமா பரப்பளவுள்ள நிலமாயினும் அதில் விளையும் நெல்லை அளந்து யானைக்குத் தீனியாகப் போட்டால், அது பல நாட்களுக்கு வேளை தவறா உணவாக நீடிக்கும். அதை விடுத்து, யானையை அவிழ்த்துவிட்டு, நீயே போய் உண்டு கொள்ளலாம் என விட்டோமானால் அதன் வாயில் புகும் நெற்கதிரை விடக் காலால் மிதிபட்டு அழியும் பயிரே பல மடங்கு ஆகும். நூறு செறு நிலப்பரப்பில் விளைந்தவை எல்லாம் ஓரிரு நாளில் பாழாகிவிடும். எனவே அரசன் முறையறிந்து நெறி பிறழாது வரிகளைப் பெற வேண்டும் எனும் அந்தப் பாடலே வள்ளுவத்திலும் எதிரொலிக்கிறது.”

அரசு அதிகாரி

“அந்தப் பாட்டில் புலவர் நன்கு முற்றிக் காயும் நிலையில் உள்ள நெல்லைக் குறித்துள்ளார். ஆனால் இன்று நம் வயிறு காய்ந்தாலும் வரியைக் கட்டியாக வேண்டிய கடுமையான நிலையன்றோ நீடிக்கிறது? இதெல்லாம் நல்லாட்சிக்கு ஏற்றதா என்ன? இந்த ஆட்சி அமைப்பின் மீது மக்கள் எப்படி நம்பிக்கையோ, பற்றோ கொள்ள முடியும்?”

பேராசிரியர்

“பொதுவுடைமை அரசே ஆயினும் வரி இன்றி ஆட்சி செலுத்த முடியாது. பொதுவுடைமை என்பதும் உலகின் ஒரு சில நாடுகளில் மட்டும் பந்தலிட்டுப் படருவதால் பயன்இல்லை. உள்நாட்டுப் பொதுவுடைமை, உலகப் பொதுவுடைமையாதல் வேண்டும். ‘ஓருலகம்’ ) என வெண்டல் வில்கி எனும் அறிஞர் ஒருவர் கண்ட கனவும், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனும் தமிழ்ச் சான்றோர் கூறியனவும், தன்னலம் தீர்ந்த, சண்டையில்லாததாய் உள்ள சமுதாயமும் உருவாகக்கூடிய பாதையை விடுத்து உலக சமுதாயம் திசை மாறியே போய்க்கொண்டிருக்கிறது. இதில் பசிப்பிணியை அறவே நீக்க ஒவ்வொருவர் கையிலும் மணிமேகலையின் அட்சயப் பாத்திரம் இருந்தாக வேண்டும்.”

ஒருவர் இடைமறிக்க ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் உங்கள் கருத்தைச் சொல்லி முடியுங்கள்.”

பேராசிரியர்

“‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக’ என்று அன்று மணிமேகலை செய்தாள், இன்று நம் பாரதப் பிரதமரும் பசியை அறவே நீக்கப் பல அறிக்கைகளை வெளியிடுகிறார். பசியை நீக்கப் பொய்யான பொதுவுடைமைக் கோஷத்தால் முடியாது. உண்மையான நல்லாட்சித் திட்டங்கள் வேண்டும். அரசுத் திட்டங்கள் மட்டும் பசியைப் போக்கிவிடாது. இந்தப் பாரகம் உள்ள வரை தனிமனித நேயமும் உதவிக் கரம் நீட்டியாக வேண்டும். அதுதான் நல்ல நாடு.”

ஒருங்கிணைப்பாளர்

“‘உறுபசியும் ஓவாப் பிணியும், செறுபகையும் சேராதியல்வதே’ (734) நல்ல நாட்டின் இலக்கணம் என்பது வள்ளுவம். அத்துடன் புலவர் ஐயா சுட்டிக்காட்டிய, ஒப்புரவு உள்ளமும் மக்களிடம் நிலை கொண்டாக வேண்டும். அதற்கான முன் முயற்சியாகத்தான் ‘செய்க பொருளை’ எனக் கட்டளையிட்டார் வள்ளுவர். அவர் ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என எச்சரித்தார்; இல்லாதார்க்கு மனமுவந்து செல்வராக இருப்போர் ஈந்து உவக்கும் இன்பம் பெறவேண்டும் எனத் தூண்டினார்.”

புலவர் செல்வகணபதி

“அப்படியெல்லாம் செல்வரும் எளிதில் ஈயும் மனத்தோடு நடப்பதில்லை. விளம்பரக் கொடையே நடக்கிறது. கட்டாய வசூலே நாடகமாகிறது. ‘ஈர்ங்கை விதிரார் கயவர், கொடிறுடைக்கும் கூன் கையர் அல்லாதார்க்கு’ என்றது  போல, கயவர்களுக்குப் பயந்து தருகிறார்கள். அந்தச் செல்வர்கள் ‘செல்வத்துப் பயனே ஈதல்’ எனப் பெரும்பாலும் நினைப்பதில்லை.”

இடைமறித்த ஒருவர்

“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.”

புலவர்

“அப்படியே தீயவர் பெருகினால், சமூகத்தில் புரட்சிதான் வெடிக்கும். பொய்யும் புரட்டும் தான் வளரும்.”

தொழிலதிபர் லெ.நாராயணன் செட்டியார்

“புரட்சியால் விளையும் போட்டி ஆட்சியை விட, மனமாற்றத்தால் நிலவும் நல்லாட்சி முறையே நல்ல பயனை நீடித்துத் தரும். சுதந்திரம் பெற்ற நாள் முதல், நம்மோடு உரிமை பெற்ற பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் தேசத்தில் பரவலாக நல்லாட்சி முறையே நீடித்திருக்கிறது என ஏற்பதில் தவறில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“நாடு என்றால் அது எப்படி அமைந்திருக்க வேண்டும், அதனை ஆளும் நல்லாட்சியின் இலக்கணம் என்ன, அரசர்- அமைச்சர் ஆகியோரின் கடமைப் பொறுப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் வள்ளுவர் ஓர் அரசியல் பொருளாதார மேதையாகவே நின்று பேசியுள்ளார்.”

ஒருவர்

“அவற்றுள் பொருத்தமான சிலவற்றைப் பற்றிச் சிந்திக்கலாமே?”

மற்றொருவர்

“பேசிப் பேசிப் புளித்துப்போன அரசியலைப் பற்றி இங்கேயும் பேசி நேரத்தை வீணாக்க வேண்டுமா? அந்தச் சாக்கடைகளை நாமும் தோண்ட வேண்டுமா?”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசான் வ.சுப.மா. அவர்கள் அப்படி நினைக்கவில்லை. பலருக்கும் வாக்குரிமையும் கடமைப் பொறுப்பும் உள்ள குடியாட்சி முறையில் நலன், தீங்கு என்பவை தராசின் இரு தட்டுக்களைப் போன்றவை. ஆனால், வள்ளுவர் வகுத்த அரசு நெறி எவ்வரசுக்கும்- எக்காலத்திற்கும் – அன்பர் குறிப்பிட்டது போன்று இன்றைய அரசியல் சாக்கடையா, சாக்காடா… என்ற அந்த நிலைக்கும் பொருந்தவே செய்யும்.”

அரசு அதிகாரி

“இன்று அரசியல் தலையிடாத துறையே இல்லை. இன்று பேசிப் பேசிப் பொழுதை வீணடிப்பதுதான் அரசியல் கலாச்சாரம். தன் கட்சியை மலையளவு ஏற்றுதல், பிற கட்சியினை முடிந்த அளவு தூற்றுதல், வசவு நடை, வம்பிழுப்பு, ஆகாக் கத்தல், அடியாள் சேர்த்தல் – இத்தகைய போலிக் குடியாட்சியைப் பற்றி – அது வள்ளுவத்தோடு பொருந்துமா என்பது பற்றி – நாம் பேசிப் பயன் என்ன? வாக்களிக்கும் சக்தி படைத்த பெரும்பான்மையும் அரசியலே புரியாத மக்களிடையே அல்லவா போய்ப் பேச வேண்டும்!”

புலவர்

“போய்ப் பேச வேண்டுமா? பெரிய பொய் பேச வேண்டுமா? (சிரிப்பலை) குடியாட்சி முறைக்கே அடித்தளமான தேர்தல் முறையே விலைபேசப்படும்போது, அரசியல் வியாபாரம் பற்றி நாம் பேரம் பேசிப் பயன் என்ன? உலகமே வியாபார மயமாகி வருகிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“உலகம் ஒன்றெனக் கருதும் காலம் எப்போதோ தோன்றிவிட்டது; என்றாலும், அது நனவாக நடைமுறைப்பட எத்தனைக் காலம் ஆகுமோ தெரியாது. ஆனால் எவரும் உலகக் குடிமக்களாகப் பிறப்பதில்லை. ஒருநாட்டு, ஒரு வீட்டு உரிமைக் குடிமகனாகவே ஒருவன் பிறக்கிறான். எனவேதான் வள்ளுவர் நாடு – வேந்து – அரசு என்றெல்லாம் பொதுநிலை அரச அறங்கள் கூறியதாகக் கருதுவோம்.

நாடு என்றால் ஒரு நிலவரையறை இருப்பது போலவே வேந்தளவு அதாவது இறையாண்மை (ஷிஷீஸ்மீக்ஷீமீவீரீஸீtஹ்) எனும் அரசாளுமை இருக்க வேண்டும் என முதலில் விதிக்கிறது. இத்தகைய நாட்டுத் தலைவருக்கு என்ன வேண்டும்? ‘தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன் ஆள்பவர்க்கு’ என்றார் வள்ளுவர்.”

ஓரன்பர்

“இப்போதெல்லாம் தூங்குவதற்கே சட்டமன்றம் போகிறார்கள்.”

மற்றொருவர்

“குறட்டை விடாமல் தூங்கலாம் என்று ஒருமுறை சபாநாயகர்த் தீர்ப்பு வந்ததே…!”

வேறொருவர்

“நம் நிலா முற்ற அவையில் யாரும் குறட்டை விடவில்லையே!” (சிரிப்பலை),

ஒருங்கிணைப்பாளர்

“‘தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்விலாச் செல்வரும்’ என்றெல்லாம் ஒரு நாட்டிற்குத் தேவையான வள்ளுவ இலக்கணங்களை இங்கே நாம் எண்ணுவதை விட, இன்றைய குடியாட்சி முறையில் புகுந்துவிட்ட கேடுகளை வள்ளுவர் அப்போதே வரிசைப்படுத்தியுள்ள அருமையை நினைவுகூர்ந்து, திருந்தவோ, திருத்தவோ சிந்திக்கலாம்.”

வருமான வரித் துறை ஆணையர்

“தேர்தலில் மிகுபெரும்பான்மை பெற்றுவிட்ட தோரணையால் – எல்லை மீறிய வலிமையால் – நல்லாட்சி புரிவதை விடுத்து அடிக்கடி மனம் போலக் கடுமையான சட்டங்களை இயற்றுவதும், தண்டனைகளை விதிப்பதும் நடைமுறையில் உள்ளனவே?”

ஒருங்கிணைப்பாளர்

“‘கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன், அடுமுரண் தேய்க்கும் அரம்’ (567) எனும் குறளைத் தானே சொல்லுகிறீர்கள்?”

பெரும்புலவர்

“அல்லற்பட்டு ஆற்றாது அழும் நிலை மக்களுக்கு ஏற்பட்டால், அதுவே ஆட்சிச் செருக்கை அழிக்கும் படை ஆகிவிடுமாம்.”

இளைஞர் ஒருவர்

“‘பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என எங்கள் பாரதிக் கவிஞன் ஏகாதிபத்தியத்தையே ஏளனம் செய்து பாடி விட்டான்” (குரல்கள் : சபாஷ் தம்பி – கைதட்டல்)

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் வகுத்த அரசு குடிமக்களுக்கு முதன்மை மதிப்பும் பாதுகாப்பும் தருவது; குடி தழுவிக் கோலோச்சுவது; முறை செய்து காப்பாற்ற வேண்டியது; காட்சிக்கு எளிமையாய் விளங்க வேண்டியது; உள்ளுவதெல்லாம் மக்கள் நலனே கருதி உயர்வாக உள்ளும் பொறுப்புடையது; பகை நட்பாகக் கொண்டு ஒழுக, உறுபசி, ஓவாப் பிணி என்பன சேராமல், நேராமல் பேண வேண்டியது; எதிர்காலக் குறிக்கோளுடனும் நிகழ்காலத் திட்டங்களுடனும் நன்கு செயலாற்ற வேண்டியது.”

அரசு அதிகாரி

“ஆனால் எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சிகள் போல உள்நாட்டிலேயே போர்க்களங்கள் அமைத்து அரசை இயங்கவிடாமல் செய்வது தான் அன்றாடக் காட்சிகள்.”

பேராசிரியர்

“எதிர்க்கட்சி வலுவாக இல்லாத குடி ஆட்சிமுறை, அங்குசம் இல்லாத யானைச் சவாரி போன்றது.”

ஒரு மாணவி

“‘இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்’ என்பது வள்ளுவர் ஏற்ற எதிர்நிலைத் தேவை.”

ஒருங்கிணைப்பாளர்

“‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் கொல் குறும்பும் இல்லது நாடு’ (735).

‘வேந்தலைக்கும்’ என வள்ளுவர் எச்சரித்தது குடியாட்சி முறையில் கொடி கொடியாய்ப் படர்ந்து வருவது நல்லதில்லை.”

பெரும்புலவர்

“ஒரு கட்சிக்குள்ளே பல குழுக்கள், உட்பகைகள், வெளிப்போர்கள், கொல் குறும்புகள்… இந்தப் ‘பல்குழு’, ‘கொல் குறும்பு’ எனும் தொடராட்சி வள்ளுவருக்கே கைவந்த கலை.”

 

ஓரன்பர்

“புலவர் ஐயா கொல் குறும்பில் நுழைந்து விட்டார். இது நீடித்தால் குழப்பம் தான்.”

ஒருங்கிணைப்பாளர்

“என்னதான் பல்குழு, கொல் குறும்புகள் இருப்பினும் அரசாள்வோர் – தக்கார் இனத்தராய், தானொழுக வல்லாராய் இருந்தால் போதுமே! ‘ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து, யார் மாட்டும் தேர்ந்து செய்வதே முறை’ என அறிந்து செயல்பட்டால் நல்லதாயிற்றே! நாள்தோறும் நாடி முறை செய்யாவிட்டால் நாடும் சீரழியும் எனப் புரிந்து கொண்டால் போதுமே!”

குறள் நிலா முற்றம் – 4

ஒரு பேராசிரியர்

“நான் ஒரு கருத்தைக் கூறலாமா? வள்ளுவம் சொல்வது புறவாழ்வில் காணப்படும் போலியான தொரு பொதுமைப் பார்வை இல்லை; ஒவ்வொரு நபரின் தனி நெஞ்சத் தூய்மை! ஒரு சமூகத்தில் வாழும் மனிதரிடையே மொழி, மதம், குலம், கட்சி எனப் பல வகையால் முரண்பாடும், வேறுபாடும் தலைதூக்குவது உலகியற்கை. மனமாசு குறைவுபட்டால், எவ்வகை வேற்றுமை யிடையேயும் உறவு பூணவும், உதவி செய்யவும் சிந்தை மலரும்; செயலாக வளரும்.

எனவே, திருக்குறளுக்குச் சாதி, சமயம் என்றெல்லாம் சாயம் பூசும் ‘பொதுமை’ நிலைக்களம் இல்லை; மக்கள் மனமே நிலைக் களம். ஆளுக்கொரு மனம் உடைய அந்தப் பன்மை நிலைக்களம். நம் மனதில் கணந்தோறும் விரிந்து பரவும் நல்ல, தீய எண்ணங்கள் என்பன நிலைக்களம். பொதுமைக்குள்ளே பகைமையும் வேற்றுமைக்குள் நட்புறுதியும் கண்ட மனநல அறிஞர் வள்ளுவர். ஆதலால், தனித்தனி நபர்களின் வஞ்சனையை மாற்றி, நெஞ்சத் தூய்மை செய்வதே அவரது நூலின் தனிச்சிறப்பு.”

ஒருங்கிணைப்பாளர்

“தன் நெஞ்சறிவது பொய்யற்க”      (குறள் 293)

“நெஞ்சில் துறவார் துறந்தார் போல”  (குறள் 276)

“மனத்தது மாசாக மாண்டார் நீராடி”  (குறள் 278)

“வஞ்சக மனத்தான் படிற்றொழுக்கம்” (குறள் 271)

“நெஞ்சத்து அகநக நட்பது நட்பு”        (குறள் 786)

எனப் பல்வேறு குறள்களில் நெஞ்சத்தையே வள்ளுவர் சுட்டிப் பேசுகிறார் என்பதை நாம் ஏற்கலாம்.”

வள்ளுவர் மருத்துவரா? மனநலச் செம்மலா? – ஒரு குரல்

“வள்ளுவரை மருத்துவராகவும், திருக்குறளை மருந்துக் கடையாகவும் உவமித்துள்ளதைச் சொன்னார்கள். அதுபற்றி மேலும் சிந்திக்கலாமே..?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் மனநல அறிஞர் என்று நாம் பேசியதைப் போல அவர் உடற் கூறுகள் அறிந்த மருத்துவர் போலவும் விளங்குகிறார். மருத்துவர் என்ன செய்கிறார்? மக்கள் உடலையும், பல்வேறு உறுப்புக்களையும் நிலைக்களமாகக் கொண்டு, நோயாளியின் நல்ல, தீய நிலைகளை நாடி பிடித்து ஆய்ந்தறிகிறார் அவர், உடல் மாற்றத்து நோயின் அறிகுறிகளுக்கான காரணங்கள், உணவு முறைகள் எனப் பலவற்றையும் கேட்டறிகிறார். பசி, உறக்கம், செரிமானம் எனத் தனித்தனி நோயாளியின் அவ்வப்போதைய நிலைப்பாடுகளுக்கேற்ப சிகிச்சை தருகிறார். இவ்வாறு தன்னிடம் நலம் நாடி வரும் நோயினர் அனைவர்க்கும் சாதி சமய வேறுபாடு கருதாது சிகிச்சையளிக்கும் மருத்துவரைப் போல, வள்ளுவரும் நம் சமுதாய, தனிநபர் நடப்பியலுக்கேற்ற நலம்தரும் நடைமுறைகளைத் தொகுத்துரைக்கிறார். மருத்துவர் கைநாடி பார்க்கிறார்; வள்ளுவர் நம் மன நோயை நோக்குகிறார். இரண்டும் பணி முறையில் ஒன்றுதான்; முழு நலம் பெறுவதே முதன்மை நோக்கம்.

இன்று நம் நாட்டிலும் உலகிலும் காணும் இன, மொழி, சமய, மாறுபாடு வேறுபாடுகள் எல்லாம், பூசல்கள் எல்லாம் எரிமலை போன்றவை. மனதுக்குள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் போராட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகள். பிரஷர் குக்கரில் மூடிவைத்துள்ள பாத்திரத்தைச் சற்றே திறந்தவுடன், அது பெருமூச்சுவிட்டு ஆவியைக் கக்குவது போல, சந்தர்ப்பம் ஏற்படும்போது உள்ளக் கொதிப்பெல்லாம் கலவரமாக, போராக வெடிக்கிறது. அமைதி அமைதி என நாடு கூட்டிப் பேசிக் கொண்டே, அணுகுண்டுகளையும் பேரழிவு ஆயுதங்களையும் ஏவும் அச்சம், அபாயம் பரப்பப்படுகிறது. நல்லரசுகள் கூட, வல்லரசுகளாக அரக்க ஆட்சி நடத்தத் துடிக்கும் பேரபாயம் உலகை நடுங்கச் செய்து வருகிறது. மக்களது தனி நல்வாழ்வு எனும் கல்லறைகள் மீது பொறாமை எனும் போலி ஆதிக்கக் கோபுரமே எழுப்பப்படுகிறது. எனவே நீரினைத் தேக்கி வைக்கும் ஊருணியைத் தூய்மை செய்யாமல் அதனை ஊருக்குக் கொணரும் வாய்க்கால்கள், குழாய்களை மட்டும் சுத்தம் செய்தால் போதுமா? எனவே ‘நோய்நாடி நோய் முதல் நாடி’ என்பது போல பொதுமை நோக்கோடு, தனிமனித நெஞ்சங்களையும் நிமிர்த்தவே முற்படுகிறார்.

‘மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு’ என்பதைத் தானே வள்ளுவமும் பிற அறநூல்களும் கூறியுள்ளன..?” என்று திசை திருப்பினார் ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அன்பர் ஒருவர்.

பலரது உதவியும் தன்முயற்சியும் கூடி அமைந்ததே வாழ்க்கை என்பதைத்தான் குறளும் அதைத் தொடர்ந்த நம் அறநூல்களும் கூறியுள்ளன; நம் இலக்கியங்களும் பேசியுள்ளன.

ஒருங்கிணைப்பாளர் 

“உணர்வுக்கும் கற்பனைக்கும் தலைமையிடம் தந்து அமைவன இலக்கியங்கள்; சிந்தனைக்கும் அறிவுக்கும் முதலிடம் தந்து தொகுக்கப்படுவன நீதி நூல்கள், அறிவியல் நூல்கள் ஆகியன. சமுதாயத்தில் வாழும் மனிதனுக்குரிய எல்லாச் சமுதாய ஒழுகலாறுகளையும் தனிமனித வரையறை களையும் விரித்து விளக்கி, தொகுத்து வகுத்துக்கூற வேண்டியவை அறநூல்கள். இந்த நீதி நூல்கள் சான்றோர் சிந்தனையிலும் தோன்றலாம்; சமூக நலனுக்காக நாளடைவில் உருவான பழக்க வழக்கங்களாலும் அமையலாம். இவை வாய்மொழி களாகவே தொடர்ந்ததால் பழமொழிகள், மூதுரைகள் என அழைக்கப்படுகின்றன.

திருக்குறளுக்கெல்லாம் முற்பட்ட நம் சங்க இலக்கியங்களில், ஆங்காங்கு அறநெறி முறைமைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன.

“அறநெறி இதுவெனத் தெளிந்த” என ஐங்குறுநூறும்,

“அறங்கடைப்பட்ட வாழ்க்கை” என அகநானூறும்,

“அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்” எனப்

பொருநராற்றுப்படையும்

என ஒரு புலவர் ஆதாரச் சீட்டுடன் படிக்கத் தொடங்கி விடவே அவரை இடைமறித்த ஒரு கல்லூரிப் பேராசிரியர்,

“அதுதான் எல்லோரும் நன்கறிந்த புறநானூற்றுப் பாடலில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் போற்றத்தகும் வாழ்க்கை முறையாகச் சொல்லப்பட்டு விட்டதே? அதைத்தானே செங்கல் அடுக்குப் போலத் தாங்கள் படித்துக் காட்டிய ஆதாரங்களும் வலியுறுத்துகின்றன.”

ஓர் அன்பர்

“ஐயா செங்கல் அடுக்கு என்றதும் நம் தவத்திரு அடிகளார் ஆற்றிய அருளுரை ஒன்று நினைவில் மறிக்கிறது. அதைச் சொல்ல நிலா முற்ற அன்பர்கள் சற்றே அனுமதிக்க வேண்டும்.”

ஓர் இடைக்குரல்

“ஐயா ஏதோ செங்கல் கட்டுமானம் பற்றிப்  பேசுகிறார், கேளுங்கள்.”

முன்னவர் தொடர்கிறார்

“ஆயிரமாயிரம் செங்கற்கள் குவிந்து கிடந்தாலும் தாமாக அவை கட்டிடமாவது இல்லை! அவற்றை நூல் பிடித்து அளந்து முறையாக அடுக்கிச் சந்து பதிந்தால்தான், சுவரை எழுப்ப முடியும். உடைந்த செங்கற்களையும் முழுச் செங்கற்களையும் இணைத்து, இடைவெளி ஏற்படும் இடங்களில் சுவரது தேவைக்கேற்றபடி முழுச்செங்கலையும் கையில் உள்ள பூசு கரண்டியால் உடைத்துப் போட்டுச் சந்துகளை நிரப்புகிறார்கள் கொத்தனார்கள். அது போல மனிதனும் தனது சொந்த மதிப்பையும் சுகத்தையும் குறைத்துக் கொண்டாவது சமுதாயமெனும் சுவரைக் கட்டிஎழுப்ப ஒத்துழைக்க வேண்டும். தானும் முன்வர வேண்டும். உடைந்த செங்கலையும் முழுச்செங்கல்லையும் இணைத்துக் கட்டிடத்தை எழுப்புவார் கொத்தனார்; சமுதாயத்தில் உள்ள வலிமையுடையவர்களையும் வலிமை அற்றவர் களையும் இணைத்து, ஒருசேர வளர்ச்சி வலிமை நோக்கிக் கூட்டிச் செல்லுபவரே சமுதாயத் தலைவர்; சரியான வழிகாட்டி.”

“அதைத்தானே ஐயா அரசியலிலும் சமதர்மம்எனப்புதுப் பெயரிட்டுச் சொல்லுகிறார்கள். பொதுவுடைமை எனப் போதிக்கிறீர்கள்..!” என இடைச்செருகலானார், ஒரு கல்லூரிப் பொருளாதாரப் பேராசிரியர்; ஒருங்கிணைப்பாளர் கருத்துத் தொடர்ச்சியை இட்டு நிரப்பினார்.

ஒப்புரவு ஒப்பற்றது

‘சோசியலிசம்’ என்ற ஆங்கிலச் சொல் விருப்பு வெறுப்புக்களைக் கடந்து, உள்ளம் ஒன்றிப் பழகும் பண்பாட்டைக் குறிப்பதாகும். சமுதாயத்தையே நேசிக்கும் நெறியைப் போற்றுவது ஆகும். இதைத்தான் வள்ளுவர் ‘ஒப்புரவு’ எனக் குறிப்பிடுகிறார். நம்மோடு உள்ள மற்றவர்களோடு சேர்ந்து பழகும்போது அப்படிச் சேர்ந்து வாழ்வதனால் ஏதேனும் இடர்களோ, கேடுகளோ விளையுமானாலும் அவற்றைக் கூடுதல் பொறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே  வலியுறுத்துகிறார்.

‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’ என்கிறார் வள்ளுவர். ‘ஒத்தது அறிதல்’ என்பதற்குப் பொருள் மற்றவர்களுக்கும் ஏற்புடையதைப் புரிந்து கொண்டு பழகுதல் என்பதுதான். அப்படி மற்றவர்களுக்கும் ஒத்ததை அறிந்து இணங்கி விட்டுக்கொடுத்து வாழ முனைவதுதான் உண்மையிலேயே நாம் உயிர்வாழ்தல் எனப்படும்.”

உடன்பாட்டோடு தொடரும் திருக்குறள் பேரவையின் அன்பர் ஒருவர் கூறுவது:

“அதாவது பழகிய நண்பரிடத்துக் குற்றம் கண்டாலும் பொறுத்துக் கொள் என்கிறார் வள்ளுவர். மனிதனையும் மனிதனையும் இணைத்துச் சமுதாயம் எனும் கட்டிடத்தை உருவாக்க இப்பொறுமைப் பண்பு, பெருமிதச் சால்பு மிகவும் அவசியம் என்பதே அவர் கூறும் ஆக்கநெறி.”

ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்

“நாகரிகம் என்பதற்கே புதியதொரு விளக்கம் அறிவித்தவர் வள்ளுவர் என்பதை அறிவோம். நண்பர் ஒருவர் நஞ்சு கலந்த பானத்தைக் கொடுத்தாலும் அதை வாங்கிக் குடித்துவிடு; நஞ்சு கலந்தது என்று அஞ்சாமல் பருகிவிடு என்று கூறுகிறார்.”

 

 

 

ஓர் அன்பர்

“ஏனய்யா அப்படிச் சொன்னார்…?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவரின் இந்தக் கருத்து சங்க இலக்கியத்தில் உண்டு; பின்னர் வந்த பெரிய புராணத்தில் ‘தத்தா நமர்’ என்று தொழுத கையுள் படையொடுங்கிடக் கண்டும் பண்போடு சாகும் முன் அன்போடு மன்னித்த மன்னன் வரலாற்றில் உண்டு.”

 

இடையே ஒருவர்

“சாக்ரடீஸ் கதையும் அப்படித்தான். அதைத்தான் வள்ளுவர் முன்பே வலியுறுத்தினார்.”

“நஞ்சு கலந்தது என்று நன்கு தெரிந்தும் தெரியாதவர் போல, அந்த நினைப்பிற்குள் சிக்காமலே பருகி விடு என்கிறார். நஞ்சு கலந்தது என நாம் நினைத்தால் நமது முகத்தில் மரணக்குறி படரத் தொடங்கும். நஞ்சு கலந்தது என்பதைத் தெரிந்து கொண்டோமோ என அதைக் கலந்து வைத்த நண்பர் உணர்ந்தால் அவர் அஞ்சுவார் அல்லது வருந்தி உளைச்சலுக்கு ஆளாவார். அந்த வருத்தத்தைக் கூட அவருக்குத் தரக்கூடாது என உறுதியாயிருக்க வேண்டுமாம். அதனால் என்ன பயன்? நஞ்சு கலந்தது என்று நினைத்து அஞ்சாமல், வருவது வரட்டும் எனப் பருகி விட்டால், மரண பயத்தைக் கடந்தே துணிந்தால், அந்த நஞ்சு கூட ஒருவரைக் கொன்று விட முடியாது. தக்க சிகிச்சை பெறும்வரை நஞ்சையும் முறித்து உயிர் காக்க வல்லமை நெஞ்சத்தில் உறுதியாக நிலைகொள்ளும் என்கிறார். நஞ்சையும் அஞ்சாது பருகுவதால் அதைச் சற்றாவது முறிக்கும் வலிமை செங்குருதிக்கு உண்டாகி விடுமாம்.”

“ஆமாங்க, புலியடிச்சுச் சாகிறவனை விட கிலி பிடிச்சுச் செத்தவன்தாங்க அதிகம்” என ஒருவர் இடை மறிக்க, நிலா முற்ற அவையில் சிரிப்பு அலைகள் பரவின.

ஒரு சிவநெறிச் சீலர் நீறுபூசிய நெற்றி யுடையவராய்ப் பணிவோடு எழுந்தார், பகர்ந்தார்:

“அவையோரே… நம் அப்பர் சுவாமிகளுக்குக் கூட நஞ்சு கொடுக்கப்பட்டதைச் சேக்கிழார் பாடியுள்ளாரே?

அப்பர் அடிகள் நஞ்சுண்ட பின்னரும் சாகாமல் நமசிவாய மந்திரத்தையல்லவா உச்சரித்தார்?”

இன்னொருவர்

“அப்பரடிகள் போல நஞ்சுண்போர் எல்லாம் நமசிவாய மந்திரத்தால் மட்டும் பிழைத்துவிட்டால், அப்புறம் ஆஸ்பத்திரிக்கு ஆளைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய அவசியமில்லையே! நாமெல்லாம் அப்பரடிகள் போலவோ சாக்ரடீஸ் போலவோ இருந்துவிட முடியுமா..?”

மற்றொருவர்

“நாம் என்ன நஞ்சு சாப்பிடாமலா இருக்கிறோம்? இன்று நாம் உண்ணும் சாப்பாட்டில் கலப்படம்; நோய்க்குப் பருகும் மருந்தில் கலப்படம்; பல்துலக்கக் காலையில் உபயோகிக்கும் பற்பசை தொட்டு அனைத்திலும், நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை, ரசாயனக் கலவையை, தெரிந்தும் தெரியாமலே உட்கொண்டு எப்படியோ உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.”

ஓர் அன்பர்

“ஐயா தம் வீட்டில் மனைவி சமைத்துத் தரும் சாப்பாடு பிடிக்காமல் அப்படிச் சொல்லுகிறார் என நினைக்கிறேன்.”

(அவையில் சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்

 

“இந்த விவாதத்தை வள்ளுவரின் குறளோடு அதாவது,

‘பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

 நாகரிகம் வேண்டு பவர்”      (580)

என்பதோடு தொடர்வோம். அன்பும் அருளும் இரண்டற இணைந்ததே அந்த நயத்தக்க நாகரிகம். அத்தகைய நல்வாழ்வு வேண்டும். அதை நாடும் மனமாவது வேண்டும் என்பதே குறள் முதலிய நம் நீதி நூல்களின் தொடர்ச்சியான உருவாக்கத் திற்கான காரணம் எனக் கருதலாம். வாழ்க்கையில் வழுக்கலும், இழுக்கலும் நேரிடும்போது ஊன்றுகோல் போல நின்று உதவுவனவே குறள் உள்ளிட்ட நமது நீதி நூல்கள். வீட்டிலும், நாட்டிலும் மனம் பண்பட்டதொரு நாகரிகம் மலர வேண்டும் என்பதே தமிழில் ஒரு தொடர் போலத் தொகுக்கப்பட்ட நீதி நூல் ஆக்கங்களுக்கான அடிப்படைக் காரணம். வேறு மொழி எதிலும் காணப்படாத புதுமை இது!”

(  தொடரும் )