புகழ் வாழ்வு

“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

     பொன்றாது நிற்பதுஒன்று இல்.”      (233)

மனிதர் அனைவரும் வாழ்வில் அவரவருக்கு உரிய தகுதிக்கேற்பப் புகழோடு வாழ விரும்புகின்றனர். தேடிச்சோறு நிதம் தின்று, உண்டு உடுத்தி உறங்கி வாழ்வது வாழ்க்கையல்ல. தகுதியோடும் மகிழ்வோடும் வெற்றியோடும் வாழும் வாழ்க்கையே புகழ் நிறைந்த வாழ்க்கை.

அறநெறியில் நின்று தளராது, அயராது, ஊக்கத்துடன், உண்மையாக முயன்று உழைப்பவர்கள்தான் தகுதியும் புகழும் பெறுகின்றார்கள்.

‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்று குறுந்தொகை கூறுவது போல் உண்மையான முயற்சியும் உழைப்புமே ஒருவனை உயர்த்தும்; பெருமையும் புகழும் சேர்க்கும். பயனுள்ளவனாக, பிறர்க்கு உதவுபவனாக, பிறர் துன்பங் களைத் தீர்ப்பவனாக இருந்தால்தான் புகழ் நிலைத்து நிற்கும். புகழ் அறத்தின் ஒளிவடிவம். நல்லவர்களால் போற்றப்படுவதே புகழ். மனச்சான்றைப் போற்றி, குற்ற மில்லாமல் குணங்கொண்டு செம்மையோடு வாழ்பவர் களுக்குப் புகழ் உயிர்மூச்சு போன்றது. புகழின்றி உயர்ந்தவருக்கு வாழ்வு இல்லை. நற்செயல்கள் செய்பவரின் பெருமையும் சிறப்பும் ஆரம்பத்தில் கவர்ச்சியாக இருப்பதில்லை. அவர்களது அருமை தொடக்கத்தில் தெரியாவிட்டாலும் நாளடைவில் மிகவும் சிறப்பாக நன்றாகவே உணரப்படும். அறம் இல்லாத இடத்தில் புகழ் நிலைத்து நிற்காது. அறத்தோடு, கடின உழைப்போடு, மனச்சாட்சியைப் போற்றி இடைவிடாது தனக்குத்தானே தன்னை குற்றங்களிலிருந்து நீங்கி காத்துக் கொள்பவர்களுக்கே புகழ் என்றும் நிலைத்து நிற்கும். இல்லாவிட்டால் புகழ்வேட்கை கொண்டவர் களுக்கு வாழ்க்கை கானல் நீர் ஆகிவிடும். உண்மையான புகழ் ஆழமாக வேரோடி நிற்கும் ஆலமரம் போன்றது. நல்ல அடித்தளத்தில் கட்டப்பட்ட கோபுரம் போன்றது; தனக்குரிய உண்மையான தகுதியுடனும், நேர்மையுடனும், மனச்சான்றைப் போற்றி வாழ்பவர் என்றும்  இன்பத்துடன், புகழுடன் வாழ்வர்.

போலித் தகுதியால், குறுக்கு வழியில் புகழ்பெற முயல்பவன் வேகமாக உயர்வான். ஒரு புயல்காற்றில் காகிதமும், சருகுகளும், குப்பைகளும் கோபுரத்திற்கு மேல் உயர்வது போல போலிப்புகழ், தற்புகழ்ச்சி போலி நாணயம் போன்றது. புழக்கத்தில் தண்டனையைத் தருவது. வீண் புகழ்ச்சியால் ஆணவம் அதிகம் தலைகாட்டும். வீண்புகழ்ச்சி அளிப்பவரையும் அழிக்கும். பெறுபவரையும் சீரழிக்கும். வெற்று உபச்சாரம், போலிப்புகழ்ச்சிகளைக் கண்டு மயங்காமல் வாழவேண்டும். சிலர் சிலகாலத்திற்கு நன்றாகப் புகழப்படுகின்றனர்; கொண்டாடப்படுகின்றனர். கால மாறுதலால் புகழின் உச்சியில் நின்றவர்கள், பாதாளத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்; போற்றப்பட்டவர்கள் பழித்துப் புறக்கணிக்கப்படுகின்றனர். மக்கள் புகழும்போது புகழ் பெற்றவர்கள் மிகவும் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்; வாழ்த்துக்களை வழங்கியவர்கள், வசவுகளையும் வழங்கிடுவர்.

நம் தகுதிக்கேற்ற புகழ்ச்சிகளே நிலைத்து நிற்கும். ஆகவே என்றும் உழைத்து, முயற்சி செய்து, செம்மையாக வாழ்ந்து, தனக்கு உரிய பொருளுடைமை, கல்வியுடைமை, அறிவுடைமை, உழைப்பு இவைகளைப் பிறர்க்கும் வழங்கிப் பிறர்க்கு பயன்பட வாழ்ந்தால்தான் ஊரும் நாடும் உலகமும் போற்றும். வசையும், பழிச்சொல்லும் இல்லாமல் புகழுடன் வாழ்பவர்களே வாழ்பவர்கள். புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் வாழ்ந்தாலும் உடல் சுமந்து உயிரோடு இருந்தாலும் வாழாதவர்களே. உலகம் மாறிவருவது. இங்கு நிலையாமை தான் நிலைத்தது இத்தகைய மாறிவரும் உலகில், நிலை யாமை உள்ள உலகில் நிலைத்து நிற்பது, எதுவென்றால், அது அழிவற்ற புகழ் அன்றி வேறு ஒன்று இல்லை.

“வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசைஒழிய

     வாழ்வாரே வாழா தவர்.”      (240)

 

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

     தம்புகழ் நிறுவி தாம்மாய்ந் தனரே” – (புறநானூறு)

அன்றறிவாம் என்னாது அறம் செய்க!’

நாவிற்கு சுவை உணர்வு இருப்பது போலச் செவிக்கும் சுவை உணர்வு உண்டு. நல்ல உணவு உடலை வாழ வைப்பது போல, நாம் பெறும் நல்லறிவும் நம் உள்ளத்தை வாழ வைக்கும். நல்லுணவு நாவிற்கு இனிமை தருவது போல், நற்கருத்துக்கள் செவிக்கு இனிமை தரும். அதனால் தான் பாரதி, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்றார். தேனை நாவால் சுவைக்கும் போது என்ன இன்பம் கிடைக்குமோ அத்தகு இன்பம் செந்தமிழ்நாடு என்று சொல்லும்போது காதில் தேனாகப் பாய்ந்து இனிக்கிறது என்கின்றார் புதுமைக்கவிஞர் பாரதி.

கேடில்லாத, அழியாத விழுச்செல்வம் கல்வியென்றால் நல்லவையாக அமைந்த கேள்விச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலைமையானது. ஒரு துறையில் கற்றவர்களுக்கும்- பல துறைகளில் அறிவு வழங்குவது கேள்விச் செல்வமாகும். கற்றவன் நுட்பமாக, இனிமையாக, கேட்பவரைப் பிணிக்கும் வகையில் நல்ல செய்திகளை ஆற்றலுடன் கூறும்போது, கல்வி கல்லாதவனும் கற்றதன் பயனைப் பெறுகின்றான். அறிஞர்கள் மிகச் சிறந்த கருத்துக்களை எடுத்துச் சொல்லும்போதும் அவற்றை விரித்துச் சொல்லும் போதும் தொகுத்துச் சொல்லும்போதும் கற்றறியா எளிய மக்களும் பயன் பெறுகின்றார்கள். பல காலம் செலவழித்துப் பல நூல்களைப் படித்தவர்கள் நல்ல கருத்துக்களை நயமுடன், எளிமையுடன் கூறும்போது அவற்றைக் கேட்பவர்கள் சில மணித் துளிகளிலே மிகப் பெரும் பயனைப் பெற்று விடுகிறார்கள்.

வேள்வியால் கிடைப்பது விண்ணில் வாழும் அமரர் விரும்பும் அமரத்தன்மை தரும் அவியுணவு. கேள்வியால் கிடைப்பது மண்ணிலே வாழ்வோர் விரும்பும் இறவாச் சிறப்புடைய அமுத வாழ்வு.

வாழ்வு சிக்கல்கள் நிறைந்தது; உணர்ச்சி நிறைந்தது. ஆதலால் கேட்பதெல்லாம் கேள்வியாகிவிடாது. மனம் உணர்ச்சிவயப்படும் சமயத்தில் எல்லாம், தடுமாறுகின்ற நேரத்தில் எல்லாம், நல்லோர் சொன்ன கருத்துக்கள் தாம் நற்பயனை, நன்மைகளை அளிக்கும்.

அறம் செய விரும்பி, வாழ்வின் ஒரு பகுதியை மட்டும் அறம் செய்ய வேண்டும் என்று ஒதுக்காமல் வாழ்வு முழுவதுமே அற வாழ்வாகத் திகழ முற்பட வேண்டும். தனி மனித வாழ்வும், குடும்ப வாழ்வும் அறவாழ்வினை மேற்கொண்டு நடக்கும்போது நாடும் உலகமும் நலம் பல பெற்றுத் திகழும். வாழ்க்கைக்கு இவ்வறம் சிறப்பைத் தரும்; செல்வத்தைத் தரும். நிலையாத வாழ்க்கையில் நிலைத்த புகழைத் தரும்; இவ்வாறு நிரந்தரமாக நிலைபெற்றுப் புகழ்பெற்று, வாழும் உயிர்கள் ஆக்கம் பெறும்.

உலகின் அற நியதிகளும் நியாயங்களும் மீறப்பட்டால் நிச்சயமாகத் தீய விளைவுகள் உருவாகிவிடும். நாம் விதைக்கும் விதைகளுக்கு ஏற்பவே பின்னர் விளைவுப் பயனைப் பெற முடியும். நாம் செய்யும் நல்ல அறச் செயல்களே நல்ல பயன் தரும். நல்ல விளைவுகளைத் தர முடியும்.

அறச் செயல்களைச் செய்யும் வகையால் எக்காரணம் கொண்டும் அவற்றை இடையே விட்டு விடாமல் இயன்ற வகையில் எல்லாம் தொடர்ந்து அந்த அறச் செயல்களைப் போற்றிச் செய்ய வேண்டும்.

நாளை நாளை என்று நாட்களைத் தள்ளிப் போட்டுத் தட்டிக் கழித்துவிடாமல், நிலையாத வாழ்க்கையில் நிலைத்த புகழோடு வாழத் தலைப்பட வேண்டும். இளமைக் காலத்தே மன நலம் மிகுந்தவராய் வளர வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று சோம்பல் கொள்ளாமல் நற்செயல்களில் தீவிரமாக நாட்டமுற வேண்டும்; அயராது அறப்பணிகள் செய்ய வேண்டும். அதுவே உடல் நலியும் காலத்தும் அழியாப் புகழ் தந்து துணை நிற்கும்; உடல் அழிந்த காலத்தும் அழியாப் புகழ் தரும்.

ஆகவேதான் வள்ளுவர் கட்டளையிடுகின்றார் – என்ன கட்டளை? கேட்போம்.

“அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க; மற்றுஅது

 பொன்றுங்கால் பொன்றாத் துணை.”  (36)

அறம் பிழைத்தால்…?

அறம் பிழைத்தால்…?

 

Image result for valluvarஉலகு உயிர்கட்குச் சிறப்பீனும் செல்வமுமீனும் அறத்தின் ஆக்கம் பெரிது. உலகு உயிர்களுக்கு உயிரன்ன அறம் தனித்தும் நிற்பது; பொருள் இன்பத்துடன் விரவிக் கலந்தும் நிற்பது. இயற்கையுடலின் உயிர் மாசற்ற இறையானால், மாசற்ற அறமே இறையாகும். இறையாகிய அறவாழி உவமையற்றது, எல்லையற்றது, மறத்தலியலாச் சிறப்புடையது, பேரருள் சான்றது.

“அருள் குடையாக அறம் கோலாக

     இருநிழல் படாமை மூவேழ் உலகமும்”   (பரிபாடல்)

அறம் விழையும் நெஞ்சம் ஆக்கத்தில் நிலைக்கும் என்றால், அறம் விழையா நெஞ்சின் நிலை என்ன? அறம் பேணா அந்நெஞ்சம் ஆக்கம் தேட முயலுமா? ஆக்கம் தேட முயலாவிட்டாலும் அமைதியாக அடங்கிக் கிடக்குமா? அன்றி, அறம் பிழைக்குமா? அறம் பிழைத்தால்…. அறமே பிழைக்குமா…?

அறம்:- எண்ணம், சொல், செயல் மூன்றனுள்ளும் எண்ணம் சொல்லுக்கும் செயலுக்கும் அடிப்படையாய் அமைந்தது, அதனால் மாசற்ற, தூய்மையான அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும் இழுக்கா இயல்புடைய எண்ணம் முதன்மையான சிறப்புடையது. எனவே,

“மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்;

     ஆகுல நீர பிற”              (34)

என நுண்மாண் நுழைபுலத்துடன் வள்ளுவம் காட்டும்.

“மனத்துள் மாறாது உறைந்து கிடக்கும்

     சட்டத்திற்கு அறம் என்று பெயர்”

என்று பைபிள் காட்டும். தனி மனிதனுக்கு மட்டுமன்றி உலக சமுதாயத்திற்கும். இவ்விளக்கம் பொருந்தும்.

அறம் பிழைப்பதேன்…?

Image result for manimozhian kuralஇயற்கையின் ஆற்றல்மிகு அமைப்பில் நல்லன எல்லாம் விரைந்து உடனே பயன் தரும் நிலை குறைவு, ஆனால் தீமை செய்வன எல்லாம் உடன் விரைந்து தீய பயன் தரும் நிலை மிகுதி. இது இயற்கையின் வியத்தகு அமைப்பு முறை. நஞ்சுண்டவன் விரைந்து மடிகின்றான். உடன் விளைவு காண இயலுகின்றது. நனிசுவை நலந்தரு உணவு உண்டவன் நலம் பெறுவான் ஆனால் உடன் பயன் காண முடிவதில்லை. இவ்வடிப்படை உண்மையே அறம் பிழைக்க அடிப்படையாய் அமைந்த சூழல்.

அரம்போலும் கூர்மையரேனும், மக்கட் பண்பில்லா மரம்போன்ற குறுகிய எண்ணமுடைய தனிமனிதனோ சமுதாயமோ அவ்வியற்கை அமைப்பை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றார்கள். உலகம் அறம் பிழைக்கும் சூழலில் சிக்கித் தவிக்கிறது.

“கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்

     கோடாமை சான்றோர்க்கு அணி”     (115)

“நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை

     அன்றே ஒழிய விடல்.”        (113)

என்ற நெறிகளை ஞாலம் வாழ்க்கை நடைமுறையமைப்பில் ஏற்றுக்கொள்வதில்லை. ‘புதரில் உள்ள இரு பறவைகளை விட கையில் உள்ள ஒரு பறவையே மேலானது’ என்ற எண்ணமே மக்களிடையே நிலைத்து நிற்கின்றது.

தனிமனிதன் குறைந்த முயற்சியில் தான் வாழ வேண்டும். தன் குடும்பம் வாழ வேண்டும் என்று குறுக்கு வழியில் வாழ்க்கை வழிதேட விழைகின்றான். இன்று இடுக்கண் உற்றாலும் நாளை நல்லற நெறியில் நற்பொருன் ஈட்டுவோம் என்ற அறநெறியை அவன் மனம் நாடுவதில்லை, இதனால் அவன் அழுக்காறு உடையவனாய், புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்பவனாய், பேரவா உடையவனாய் ஆகின்றான். இத்தகு தனித்தனி குறுகிய நோக்குடையவர் களால் மன்பதை பாழ்படுகின்றது. அதனால்தான் சமுதாய அமைப்பில் இன்னா செய்தார்க்கும் இனியவை செய்து அவ்வொன்னாரை நல்லவராக ஆக்கும் முயற்சியைக் காண இயலுவதில்லை. ‘அளவிறந்து ஆவது போலக் களவினால் ஆகிய ஆக்கம் கெடும்’ என்ற உண்மை உணர்ந்தவர்களைக் காண இயலுவதில்லை. ‘தன்னெஞ்சத்து அழுக்காறில்லாத இயல்பை ஒருவன் ஒழுக்காறாகக் கொள்க’ என்ற கொள்கை உணர்ந்தவர்களைக் காண இயலுவதில்லை ‘மற்றின்பம் வேண்டுபவர் சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யார்’ என்ற ஆன்ற பொருளுணர்ந்த வர்களைக் காண இயலுவதில்லை. ஆனால் குறுகிய நோக்கத்தால் பொறுமையற்றவர்களாய், கயவராய், பெரும் பொய்யராய், கொடிய கொலைஞராய் வாழ்வோரைக் காண முடிகின்றது. இத்தகையோர் குற்றமிழைத்தால் உலகம் எளிதில் இக்குற்றத்தைக் கண்டு இவர்களைப் பழிக்கிறது; ஒறுக்கவும் செய்கின்றது, ஆனால் தனிமனிதன் தனக்கென்று ஓர் அமைப்புப் பெற்றிருப்பானானால், ஆற்றல் நிறைந்தவனானால் இக்குற்றம் மறைக்கப்படுகின்றது. மற்றும் குறுகிய நோக்குக் கொண்ட திறன் மிக்க வல்லவர்களான இத்தகைய தனிமனிதர்கள் தலைவர்களாக அமைந்து விட்டாலோ உலகம் அவர்கள் குற்றத்தை மறைப்பது மட்டுமின்றி, ஏற்றிப்போற்றி இறைஞ்சி ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது. இதுவும் உலகின் வியப்புமிகு போக்கு.

யார் குற்றம்?

அறம் பற்றி விளக்க விழைந்த வள்ளுவர் மக்களின் வாழ்க்கையமைப்பைப் பற்றிப் பல்வேறு கோணங்களில் ஆய்ந்து மக்கள் அறம் பிழைக்கக் காரணமான உண்மையைக் கண்டு துயருற்றவராய்,

“நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்

     வான்இன்று அமையாது ஒழுக்கு”           (20)

என்று கூறுகிறார். ‘கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம்’ ஆகிய மழைநீர் இல்லாமல் உலக வாழ்க்கை அமையாது என்று வாழ்க்கைப் போராட்டத்தைச் சுட்டிக்காட்டி அத்தகைய போராட்டத்தில் சிக்கித் துயருழந்து ஒழுக்கத்தைக் கைவிட்டவர்களைப் பழிக்காமல் இரக்கம் காட்ட வேண்டும் என்ற உண்மையை இலைமறை காயாக எடுத்துக் காட்டுகின்றார்.

இன்றைய அமைப்பு முறையிலும் இதே நிலைதான். மழை இருந்த இடத்தைப் பொருளும் பதவியும் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. இதுதான் வேறுபாடு. ஆதலால் மக்கள் மேல் மட்டும் குற்றம் காண்பதில் பயனில்லை. மக்கள் வாழும் அமைப்பு முறையில் தவறு நிகழ்ந்திருக்கிறது. மக்கள் எண்ணித் துணியும் இயல்பு பெறாதவர்கள். ஆனால் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டு குறுகிய நோக்கமுடைய தன்னலம் மிக்கோர் வளர்ந்து விடுகிறார்கள். உலக அமைப்புப் பாழ்படுகின்றது.

அறம் பிழைத்தால்….? அறமே பிழைக்குமா…? அறம் விழையும் நெஞ்சமானது ஆக்கத்தில் நாட்டம்கொள்வது போல் அறம் விழையா நெஞ்சம் கேட்டை விளைவிக்கும்.

“வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்

     நடுவணது எய்த இருதலையும் எய்தும்” (114)

என்று நாலடியார் பொருள் செயல் வகையின் சிறப்புக்கூறும். அறவழியில் ஈட்டிய அருஞ்செல்வம் அல்லது தலைமைப் பேறு போராட்டத்தை எழுப்பாது, உலகில் போராட்டம் குறைய வேண்டுமானால் பொருள் பொதுவில் பயன்படும் முறை ஓங்கி வளர்தல் வேண்டும். குறுகிய எண்ணம் குறைந்து அருள் சான்ற நெஞ்சம் வளர்தல் வேண்டும். அறத்தில் ஈடுபடா உள்ளம் பெரும் போராட்டங்களை எழுப்பும். தனி மனிதனின் அகப்போராட்டமாய்த் தொடங்கி புறப்போராட்டமாயும் வளர்ந்து உலகப் போராட்டமாய் முடியும். போராட்டத்தின் இறுதி விளைவு கேடே, ஆதலால் வள்ளுவம்.

“அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை

     மறத்தலின் ஊங்குஇல்லை கேடு”      (32)

என்று கூறும். அறமுறை நிலவா நாடு ஆக்கம் பெறுவதில்லை. இதைக் கலித்தொகை,

“சிறுகுடியீரே, சிறுகுடியீரே!

     வள்ளிகீழ் விழா, வரைமிசைத் தேன்தொடா

     கொல்லைகுரல் வாங்குஈனா, மலைவாழ்நர்

     அல்ல புரிந்தொழுகலான்”

என்று கவினுடன் காட்டும்.

தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் உலகில் கேடு சூழ்வன செல்வமும் பதவியும். உலகச் சூழலானும் அமைப்பு முறையானும் நேர்ந்த குறையால் தன்னலம் மிகுந்தவரும் குறுகிய நோக்கமுடையவரும் தமது ஆற்றலால் ஞாலத்தை அடக்கித் தம் வழியில் ஆள இயலுகின்றது. இந்நிலை வளர்ந்தால் உலகம் நிலைக்குமா? அறம் பிழைக்குமா?

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்’ என்ற பேருண்மையை ‘தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணினீர்கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன்’ மெய்ப்பித்தான் அன்று. அவன் அறஞ்சான்ற நெஞ்சத்தான். ஆனால் இன்று நிலை என்ன? அறம் குறைந்து, அன்பு தேய்ந்து, அமைதி மங்கி தன்னலம் உயர்ந்திருக்கின்றது. குறுகிய நோக்கம், குறுகாது வளர்ந்திருக்கின்றது. மக்களில் ஒருவருக்கொருவர், குடும்பத்திற்குக் குடும்பம், இனத்திற்கு இனம், நாட்டுக்கு நாடு பகையும் பொறாமையும் பரந்து நிறைந்து வளர்ந்து வருகின்றது. இதுவே இயற்கை என்று கூறும் அச்சநிலைக்கு உயர்ந்துவிட்டது. இந்நிலையில், அறம் வாழுமா?

தனிமனித வாழ்க்கையையும், அவனைச் சார்ந்த குடும்பத்தினரையும், நலம் நாடும் நட்புடையாரையும் பிணக்குக் கொள்ளச் செய்து அவர்களை ஆட்டி ஆட்சி புரிவதும், பொருளாட்சி, பொருளல்லாதவரையும் பொருளாகச் செய்யும் பொருள் ஒரு கூட்டத்தின்பால் குவிந்து கிடக்க, நெருப்பினுள் துஞ்சலினும் கொடிய நிரப்பினுள் வாடுகின்றது ஒரு கூட்டம். இவ்வாறு இங்கும் இனத்தின் பெயரால் செல்வர் – வறியவர் எனப் பிரித்து இவர்களை ஆட்சி புரிவதும் பொருளாட்சி, மற்றும் நிறத்துக்கு நிறம், வகுப்புக்கு வகுப்பு, சமயத்துக்கு சமயம் போராட்டத்தை எழுப்பியதும் பணமே. உலகப்போரின் அடிப்படையே பொருளால் அமைந்ததாகும். நாடுகளுக்கு இடையே வலிமையுடைய நாடாய் இலங்க வேண்டும் என்ற பேரவாவால், பொருள் வலிமையால் படைவலிமையை வளர்த்து, சில வல்லரசுகள் உலகத்தை அச்சத்துக்கு உள்ளாக்குகின்றன. இவ்வாறு இங்கு கொடுங்கோல் ஓச்சுவதும் பொருளாட்சியே! அமைதியை நிலைநாட்டு வதற்கென அமைக்கப்பட்ட உலக அமைதிக் காப்பு அறநிலையமான ஐக்கிய நாட்டு அவையும் பொருள் வளமும் படைபலமும் மிகுந்த நாடுகளைச் சார்ந்திருக்கின்றது. இவ்வாறு தனிமனிதன் முதல் உலகம் வரை நிலவி நிறைந்து நிற்கும் குறை உலகுக்குப் புலப்படுமா? அறம் பிழைக்குமா?

ஆயினும், அறம் எவ்வாறேனும் வாழும், தீமை தோற்கும், அறம் வெல்லும் இது உண்மை. கருவி குறிக்கோளாக மாறியிருப்பதே இன்றைய அச்சத்திற்குக் காரணம். அமைதியான பண்புமிகு அறவாழ்வே குறிக்கோள் ஆகும். செல்வம் ஒரு கருவி. அமைப்பு முறை மாறி யிருக்கிறது. இதுவே குறை, இக்குறை நீக்கமுடியாத குறையன்று. இன்றைய சூழலில் தனிமனித வாழ்க்கையைச் சீர்திருத்துவதினும் உலகச் சமுதாய அமைப்பை மாற்றி நெறிப்படுத்தினால் இக்குறை நீங்கும்.

தன்னலங் கருதாது அறத்தின் வழிநின்று கடனாற்றும் சான்றோர் ஒருசிலராவது என்றும் வாழ்வர். அத்தகையோரால் உலகம் என்றும் உயிர்கொண்டு வாழும்.

“உண்டால் அம்ம இவ்வுலகம்…

     தமக்கென முயலா நோன்தாள்

     பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”  (புறநானூறு.182)

“பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அஃதுஇன்றேல்

     மண்புக்கு மாய்வது மன்.”           (996)

சான்றாண்மைக்கு ஆழி எனப்படும், ஊழி பெயரினும் தாம் பெயராச் சான்றோர் வாழும் வரை, மனிதப் பண்புகள், உணர்வுகள் மனிதனிடம் நிலைத்துநிற்கும் வரை, அறம் அழியாது. அறத்தை அழிக்க முடியாது. தீமை அளவிறந்து ஆவது போலக் கெடும். “இறைச் சட்டங்கள் மனித மனத்துள் அமைந்திருக்கின்றன. அதனுடைய சுவடுகள் அழியாதவை”

‘அனைத்துலக மனிதனைப் பாடிய பாவலர்’

Image result for thiruvalluvar

‘அனைத்துலக மனிதனைப் பாடிய பாவலர்’

“தமிழன் திருக்குலத்தில் தமிழ்த்தாய் திருவயிற்றில்

 தமிழ்த்திரு வள்ளுவனார் & கிளியே

 தமிழாய்ப் பிறந்தாரடி!”

எனத் திருவள்ளுவருக்குப் புகழாரம் சூட்டும் ‘திருவள்ளுவர் கிளிக்கண்ணி’. இதனை வழிமொழிவது போல் இருபதாம் நூற்றாண்டுப் பெரும்புலவர் பாரதியாரும்,

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

 வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

எனத் திருவள்ளுவரைப் போற்றிப் பாடுவார்.

  1. திருக்குறளின் தனித்தன்மைகளில் முதலாவதாகக் குறிக்கத்தக்கது அதன் உலகப் பொதுமைப் பண்பு ஆகும். பேராசிரியர் தனிநாயக அடிகள் குறிப்பிடுவது போல், ‘தமிழோ, தமிழ்நாடோ என்ற குறிப்பேதும் இல்லாமல், எல்லா உலகிற்கும், எல்லா மக்களுக்கும் பயன்படும் முறையில் உலகெலாம் தழுவுவதற்கு உரிய பான்மையில் வள்ளுவர் தம் நூலை யாத்திருப்பது’ ஒரு சிறப்பாகும். இச் சிறப்பு கருதியே, திருவள்ளுவர் ‘அனைத்துலக மனிதனைப் பாடிய பாவலர்’ (ஜிலீமீ ஙிணீக்ஷீபீ ஷீயீ tலீமீ ஹிஸீவீஸ்மீக்ஷீsணீறீ விணீஸீ) என அறிஞர் உலகால் போற்றப்படுகின்றார்; திருக்குறள் ‘உலகப் பொதுமறை’ எனச் சிறப்பிக்கப் பெறுகின்றது.
  2. முப்பாலில் நாற்பாலின் கருத்துக்களையும் உள்ளடக்கிப் பாடி இருப்பது திருவள்ளுவரின் பிறிதொரு தனிப்பண்பு ஆகும். அறம் – பொருள் – இன்பம் என்னும் முப்பால் பற்றியே வள்ளுவர் தம் நூலில் பேசியுள்ளார்; வீடு குறித்து அவர் தனி ஒரு பாலினை வகுக்கவில்லை. காரணம்,

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

     தெய்வத்துள் வைக்கப் படும்”         (50)

என்பது அவரது முடிந்த முடிபு ஆகும். சிந்தைக்கு எட்டாத மேலுலகம் பற்றிக் கவலைப்படாமல், மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதே உயரிய வாழ்க்கை நெறி என்பது திருவள்ளுவரின் திண்ணிய கருத்து ஆகும்.

  1. திருக்குறள் வழிபாட்டு நூல் அன்று; வழிகாட்டும் நூல் ஆகும். இன்றைய கணினி யுகத்திற்கும் வழிகாட்டும் விழுமிய நூல் ஆகும். ஆல்பர்ட் சுவைட்சர்  என்னும் ஜெர்மன் தத்துவ ஞானி – இசை, தத்துவம், மருத்துவம் என்னும் மூன்று துறைகளிலே முத்திரை பதித்த பேரறிஞர் – தம்முடைய ‘இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும்’ (மிஸீபீவீணீஸீ ஜிலீஷீuரீலீt ணீஸீபீ மிts ஞிமீஸ்மீறீஷீஜீனீமீஸீt) என்ற நூலில் திருக்குறளைப் பற்றிக் குறிப்பிடும் கருத்து இங்கே மனங்கொளத்தக்கது.

“உலக இலக்கியத்தில் திருக்குறளைப் போன்ற ஓர் உயர்ந்த ஞானப் பொன்மொழிகளைக் கொண்ட தொகை நூலைக் காண்பது அரிது!” 

மேலும், உலகையோ வாழ்வையோ எதிர்மறையாக நோக்கும் பார்வை திருவள்ளுவரிடம் காணப்படாததையும் சுவைட்சர் சுட்டிக்காட்டுவார்; உலகம், வாழ்வு, பெண், மனிதன் என எல்லாவற்றையும், எல்லோரையும் உடன் பாடாகக் காண்பதே வள்ளுவரின் சிறப்பியல்பு ஆகும்.

  1. ‘அருமையில் எளிய அழகே போற்றி!’ என மாணிக்க வாசகர் திருவாசகத்தில் இறைவனைப் போற்றிப் பரவுவார். திருவள்ளுவரின் சிந்தனை அருமை, எளிமை, அழகு என்னும் முப்பெரும் பண்புகளையும் தன்னகத்தே கொண்டது. பதச்சோறாக, அறம் – பொருள் – இன்பம் பற்றிய வள்ளுவரின் சிந்தனைகளை இங்கே எண்ணிப் பார்க்கலாம்.
  2. “மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்; அனைத்துஅறன்;

           ஆகுல நீர பிற”         (34)

– இதனினும் இரத்தினச் சுருக்கமாக உலக இலக்கியப் புலவர்கள் எவரும் அறத்தினை விளக்கியதில்லை. இது உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை.

  1. ‘செல்வம் நிலையில்லாதது’ எனப் பாடுவதே பெரும்பான்மை வழக்கு வள்ளுவரோ ‘பொருள் செயல் வகை’ என ஓர் அதிகாரத்தினைப் படைத்து, ‘செய்க பொருளை’ என வழிகாட்டுகின்றார்.

“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

     தீதுஇன்றி வந்த பொருள்”                 (754)

என அறிவுறுத்துகின்றார். இது அரிய – வாழ்வில் அனைவரும் பின்பற்றுவதற்கு உரிய – சிந்தனை ஆகும்.

  1. வள்ளுவரின் கருத்தியலில் இன்பம் என்பது வெறும் உடல் இன்பம் மட்டும் அன்று; புலன் சார்ந்தது மட்டும் அன்று. அதற்கும் மேலாக, உள்ளம் சார்ந்தது; நுண்ணியது.

“நெஞ்சத்தார் காத லவராக வெய்துஉண்டல்

     அஞ்சுதும் வேபாக்கு அறிந்து”        (1128)

என்னும் குறட்பா நுண்ணிய காதல் உணர்வின் அழகிய வெளிப்பாடு ஆகும்.

  1. திருக்குறள் முன்னைப் பழமையும் பின்னைப் புதுமையும் ஒருங்கே தன்னகத்தே கொண்ட உயரிய நூல் ஆகும். மேலாண்மை இயல் (விணீஸீணீரீமீனீமீஸீt), உளவியல் (றிsஹ்நீலீஷீறீஷீரீஹ்), எதிர்காலவியல் (திutuக்ஷீஷீறீஷீரீஹ்) முதலான இன்றைய அறிவுத் துறைகளுக்கான அடிப்படைகளைத் திருக்குறளில் கண்டறிய முடியும். ஓர் உதாரணம்.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

     அதனை அவன்கண் விடல்”               (517)

மேலாண்மை இயலின் அடிப்படைத் தத்துவத்தை இதனினும் மேலாக எவரும் கூற முடியாது.

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

 அதிர வருவதோர் நோய்”                (429)

– வள்ளுவரின் புதுமைச் சிந்தனைக்குக் கட்டியம் கூறி நிற்கும் குறட்பா இது

  1. வள்ளுவர் அற நெறிக்கு முதன்மை தருபவர்; எதற்காகவும் தூய அறநெறியை விட்டுத் தராதவர். சமரசம் செய்து கொள்ளும் போக்கு திருவள்ளுவரிடம் மருந்துக்குக் கூட இல்லை; இல்லவே இல்லை. பெற்ற தாய் பசியோடு வாடினால் அவள் பசியைத் தீர்ப்பதற்காக எதையும் செய்யலாம் எனக் கூறும் வடமொழி தரும சாத்திரம்; இதற்கு ‘ஆபத்துத் தருமம்’ எனவும் பெயர் சூட்டும். ஆயின் வள்ளுவரோ,

“ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

     சான்றோர் பழிக்கும் வினை”               (656)

என அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். திருவள்ளுவரிடம் தூக்கலாக காணப்படும் அரும்பெரும் தனிப்பண்பு இது!

  1. சங்க காலத்தில் புலால் உண்ணும் வழக்கம் பரவலாக இருந்தது; ஆணும் பெண்ணும் கள்ளுண்ணும் வழக்கம் இருந்தது; ‘வரைவின் மகளிர்’ என்ற பிரிவினர் இருந்தனர். இவற்றிற்கு எதிராகத் திருவள்ளுவர் தம் நூலில் போர்க் கொடி பிடித்துள்ளார் அவர்,

“உண்ணற்க கள்ளை; உணில்உண்க சான்றோரால்

     எண்ணப் படவேண்டா தார்”              (922)

என அறிவுறுத்தியுள்ளார்.

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

     எல்லா உயிரும் தொழும்”           (260)

என முழங்கியுள்ளார்.

காமத்துப் பாலில் பாடிய 250 குறட்பாக்களில் ஓர் இடத்தில் கூட வள்ளுவர் பரத்தையைப் படைத்துக் காட்டவில்லை; மாறாக, ‘பரத்த(ன்)’ என்ற சொல்லால் தலைவனின் பரத்தைமை இழுக்கத்தைச் சாடி இருப்பது அவரது புரட்சி மனப்பான்மையைப் பறைசாற்றுகின்றது.

‘புலால் மறுத்தல்’ (26), ‘கள் உண்ணாமை’ (93), ‘வரைவில் மகளிர்’ (92) என்னும் அதிகாரங்கள் திருவள்ளுவரின் புரட்சி மனப்பான்மையைச் காட்டுவன வாகும்.

அப்துல் கலாம் முதல் ஆல்பர்ட் சுவைட்சர் வரை- பரிமேலழகர் முதல் பாவாணர் வரை – மு. வரதராசனார் முதல் சுஜாதா வரை – அனைவரும் ஒருமித்த குரலில் திருவள்ளுவரைப் போற்றிப் புகழ்வதற்கான அடிப்படைக் காரணங்கள் – தூய்மை – பொதுமை – புதுமை ஆகிய தனிப்பெரும் பண்புகளே ஆகும்.

இலக்கியம் பேசி மகிழவோ

ஆக்க உரை*

‘இலக்கியம் பேசி மகிழவோ!’ எனும்  தலைப்பில் உரையாற்ற வருமாறு மதுரை வானொலி நிலையத்தார் விடுத்த  அழைப்பு என் சிந்தனையைக் கிளறிவிட்டது. ‘இலக்கியம் பேசி மகிழவோ!’ என என்னை மட்டுமின்றிப் பலரையும் கூவி அழைக்கும் பொது அழைப்பாக என் உணர்வுகளுக்கு வழி காட்டியது.

இளமை முதலே இத்தகைய வழியமைப்புக்களைப் பற்றி நிற்கும் வாய்ப்புக்கள் எனக்குக் கிட்டின. அவற்றைப் பெறற்கரிய பேறுகளாகக் கருதித் தடம் மாறாமல் நடக்க முயன்றேன். அழகப்பர் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றபோது அங்கு நிலவிய தமிழியக்கம் என்னையும் ஈர்த்தது. ‘அறம் பிழைத்தால்’ எனும் தலைப்பில் எழுதிய போட்டிக் கட்டுரையில் கிட்டிய பரிசு எனக்கு ஊக்கம் ஊட்டியது. திருக்குறளை ஆழமாகப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை என் மனதில் வேள்வித் தீயாக வளர்த்தது. திருச்சி சமால் முகமது கல்லூரியில் பொருளாதார முதுகலை கற்றபோதும் என் நினைப்பெல்லாம் உணர்வு எல்லாம் திருக்குறளையும் தமிழ் இலக்கியத்தையுமே வலம் வந்தன.

வணிக வாழ்வுக்கு ஆட்பட்டுப் பல்வேறு பொறுப்பு களுக்கு உட்பட்ட போதிலும் என்னுள்ளே இலக்கிய உணர்வுகள் மட்டும் மங்காமலே கனன்று கொண்டிருந்தன. திருக்குறள் பேரவை முதலிய இலக்கிய விழாக்கள், அறிஞர் பெருமக்களின் அரிய தொடர்புகள் என்பன எல்லாம் அந்த உணர்வுக்கனலை ஓங்கி எரியச் செய்தன. இந்த இலக்கிய எரிமூட்டம் எனக்கு எப்போதும் இதமளித்தே வந்தது.

இலக்கியம் ஆழ்ந்தகன்ற, என்றும் நிலைபெற்று வருகிற மனிதப் பண்புடன் தொடர்பு உடையது; மனிதனுடைய வாழ்வெனும் தத்துவத்திலிருந்து வடிவெடுப்பது; ஒருவரது அனுபவங்களையும் எண்ணங்களையும் பிறரோடு பகிர்ந்து கொள்ள வழியமைப்பது. அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் போது நம்மையும் அறியாமலே நமக்குள்ளே ஒருவகைக் கலைத்திறமையை உருவாக்கிட வல்லது.

நாம் அகம், புறம் எனும் இருவகை மனத்தோடு வாழ்கிறோம். விழிப்பும் கூர்மையும் உடைய, பொறிகளின் சார்புடைய புற மனத்திற்கு அடிமைப்படுவதே நம் வாழ்வில் பெரும் பகுதியாகப் போகிறது. உணர்ச்சியும் கற்பனையும் கலந்த அகமனதோடு உறவு பூண்டு ஆட்படுவது என்பது மிக அரிதாகவே கிட்டுகிறது. அக, புற மனங்களில் சமநிலை கண்ட சான்றோர்கள் அருளிய இலக்கியங்களைப் பேசி மகிழும்போதுதான் நமக்கும் ஒருவகைச் சமநிலை அமையும் வாய்ப்பு ஏற்படுகிறது. தொட்டனைத் தூறும் மணற்கேணியாகக் கற்றனைத்து ஊறும் அறிவு கிட்டுகிறது.

இத்தகைய வாய்ப்பினை வளரும் தலைமுறைக்கு எல்லாம் வழங்கக் காத்திருக்கும் இலக்கியச் செல்வங்கள் நம்மிடம் ஏராளமாக உள்ளன. என்றும் வாழும் இலக்கியமான திருக்குறளில் இச் செல்வங்கள், சிந்தைக்கினிய, செவிக்கினிய, வாய்க்கினிய, வாழ்வுக்கினிய வளங்களை எல்லாம் ஆக்கித்தர வல்லவையாக விளங்குகின்றன.

பயிலும்போது இன்பம் ஊட்டி, வாழும் முறைக்கு நற்பண்புகளால் வலிமை சேர்க்கும் திருக்குறள் முதலிய இலக்கியங்களைப் பிறரோடு பேசி மகிழ்ந்த நாற்கள் பலப்பல. ‘காற்றில் வைத்த கற்பூரம் போல’ இவை போய் விடக்கூடாதே எனக் கருதிய எனது கெழுதகை அன்பர் பேராசிரியர் சு.குழந்தைநாதன், நானும் அறியாமலே அவற்றை முயன்று தொகுத்து வந்தார். சிதறி உதிர்ந்த மலர்களை எல்லாம் என்றும் மணக்கும் மாலையாகக் கட்டித்தந்த பேராசிரியர்க்கு உளமார நன்றி பாராட்டுகிறேன்.

‘பாளையம் இல்லம்’ அடையாத நெடு வாயில் களைக் கொண்ட செழுங்குடிச் செல்வமனை. தளர்ந்து வந்தோரையெல்லாம் தாங்கி உயர்த்திய தமிழவேள், பி.டி.ராசன் அவர்களின் அருந்தவப் புதல்வர் – அறிஞர் பழனிவேல் ராசனார் – கல்விச் செம்மல்; காழ்ப்பு வெறுப்பற்ற கருணைப் பாங்கினர். என்னோடு இலக்கியம் பேசி வழிகாட்டிய அப்பேரறச் செல்வர் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருப்பது எனக்கு அமைந்த பெரும்பேறு. பழனிவேல் ராசனார்க்கு பணிவார்ந்த நன்றியுடையேன்.

தமிழ் மாமுனிவர் – தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு ஆயிரமாயிரம் அன்பர் குழாம் உண்டு; அதற்கு அப்பாலும் அடி சார்ந்த அடியவனான என்னைத் திருக்குறளால் பிணித்து அருள்பாலித்து ஆட்கொண்டார். வாழும் சமுதாயத்தையும் வாழ்விக்கும் சமயத்தையும் இரு கண்களாகக் கொண்ட அப்பெருந்தகை இந்நூலுக்கு ஆசியுரை நல்கத்திருவுளம் கொண்டார். அழகியதொரு அணிந்துரையைத் திறனாய்வாக வழங்கியுள்ளார். தெய்வ நலம் காட்டும் மாமுனிவரின் திருப்பாதம் பணிந்து நன்றி கூறுகிறேன்.

இலக்கியம் பேசி மகிழ்வதில் இணையற்ற நலம் காண வருமாறு அன்போடு அழைக்கின்றேன்.

சிகாகோ: இந்திய ஆன்மீக முதல் முழக்கம்

சிகாகோ: இந்திய ஆன்மீக

முதல் முழக்கம்

Image result for vivekananda

இந்திய ஆன்மீகத்தின் முதல் முழக்கத்தை – புதிய விவே(காநந்தக்)கக் குரலை கேட்கும் – வாய்ப்புப் பெற்ற நகரம் சிகாகோ இந்திய நாட்டவரைப் பற்றிச் சென்ற நூற்றாண்டிலேயே கேள்விப்பட்டுப் பெருமை கொண்ட நகரம் அது.

சிகாகோ தமிழ் அன்பர்கள் (டெய்டனிலிருந்து 300 மைல் தூரம்) கூட்டிச் செல்ல வந்திருந்தனர். டெய்டன் விழா முடிந்த கையோடு சிக்காகோவுக்குக் காரில் போக திரு.பி.சி.எம்.ஜி. நாராயணனும் வேங்கட ராமானுஜமும் ஏற்பாடு செய்திருந்தனர். வேங்கடராமானுஜம் ஏற்றுமதித் துறையில் பொறுப்பான பதவி வகிப்பவர்; மதுரையில் புகழோச்சி வரும் மகாத்மா மாண்டிசேரிப் பள்ளித்தாளாளாரும் யாதவர் கல்லூரிச் செயலருமான திரு.பன்னீர்செல்வம் அவர்களின் சகலர். இவ்வன்பர்களின் குடும்பத்தாருடன் சிகாகோவுக்கு சாலை வழிப்பயணமாய்ப் புறப்பட்டோம்.

தாயக்கட்டமா? தார்ச்சாலைகளா?

சாலைகள் நாட்டின் நரம்பு மண்டலங்கள் பொருளாதார நலத்திற்கும் சமூக வாழ்வுக்கும் இன்றியமையாத இணைப்புக் கோடுகள். மிக விரிந்த நிலப்பரப்பைக் கொண்ட அமெரிக்க நாட்டின் திசைகளை எல்லாம் – அந்நாட்டின் நெடுஞ்சாலைகளே இணைக்கின்றன. ஊருக்கு ஊர் சொந்த / பொது விமானப்பயண வசதிகள் மிகுதியாக இருந்தாலும், ரயில் பயணத்தை விட, சாலைப் பயணத்தையே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதற்கேற்ப மோடல் (விளிஜிணிலி) எனப்படும் தங்குவிடுதிகளையும் செய்தித்தொடர்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

அங்கே நெடுஞ்சாலைகளின் அழகுக்கும் பராமரிப்புக்கும் இணை ஏதுமில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை – நேர்கோடு போல – நீண்டு விரியும் இச்சாலைகளில் எல்லாம் – வாகனங்கள் ஊர்ந்து போவதில்லை! விரைந்து பறக்கின்றன! 60 மைல் வேகம் குறையாமல் ஓட்ட வேண்டும் என்பது விதி; ஆனால் சர்வசாதாரணமாக 80, 100 மைல் வேகத்தில்தான் ஓட்டுகிறார்கள். வாகனங்களைக் கண்காணிக்கப் போலீசார் ராடார் சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள். என்றாலும் கார் ஓட்டுநர்கள் தம் வண்டியில் உள்ள மின்னணுச் சாதனங்கள் வழியே ராடார் இயக்கத்தைத் தெரிந்து கொண்டு அப்போதைக்கு மட்டும் வேகத்தைக் குறைத்துக்கொண்டு அப்புறம் சிறகுகட்டிப் பறக்கிறார்கள்.

வேகம் – வேகம் – வேகம். இதுதான் அமெரிக்க வாழ்க்கை! என்றாலும் கூட அந்த வேகத்திலும் – ஒருவகை ஒழுங்கும் கட்டுப்பாடும் மேவி நிற்பதைக் காணமுடியும். பொது இடங்களில் மக்கள் நடந்து கொள்வதை உரைகல்லாக வைத்தே ஒரு நாட்டின் ஒழுக்கத்தை அளந்தறிய வேண்டும் என்பார்கள். அங்கே ‘பொதுஇடம்’ எதுவாயினும் – அது புனிதமாகப் போற்றப்படுகிறது. ‘பொது என்றாலே, யாருக்கும் சம்பந்தமில்லாத அனாதை போன்றது; பொதுஇடத்தையோ, பொதுப்பொருளையோ, முறைகேடாக உபயோகிக்கலாம்’ என்ற நம்நாட்டின் பெரும்பாலானோரின் மனப்போக்கு இந்த அமெரிக்கப் பாடத்தால் மாற்றம் காணவேண்டும்.

நம் நாட்டில் பொதுப் பேருந்துகள் படும் பாடு நமக்குத் தெரியும். பயணிக்கும் ஓட்டுநர் / நடத்துநருக்கும் சிறு வாய்த்தகராறு மூண்டால் போதும். அது கைகலப்பாகி, ரத்தக் களரியாகி, சாலை மறியலாகி, சட்டஒழுங்குப் பிரச்சினையாகி, குழு மோதலாகி, துப்பாக்கிச்சூடு ஆகி, நீதி விசாரணை ஆகி, அப்புறம் புஸ்வாணம் ஆகிவிடும். அதே சமயத்தில் பேருந்து – சமூக விரோதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சாலையின் குறுக்கே படுத்துக் கிடக்கும். அமெரிக்கச் சாலைப் பயணத்தின்போது என்னால் இந்த ஒப்பீட்டை நினைக்காமல் இருக்க முடியவில்லை. “இது மாறும் நாள் எந்த நாளோ! யார் இதைப் பகர்வார் இங்கே?” எனும் பாரதிதாசன் வரிகளே நினைவுக்கு வருகின்றன.

அமெரிக்க நாடு எங்கும் தாயக்கட்டம் போல அமைந்திருக்கும் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கு விளக்கமான கைகாட்டிகளும் குறிப்புத் தூண்களும் உள்ளன. நெடுஞ்சாலை வரைபடத்தைக் கையில் வைத்துக்கொண்டால் போதும்; எங்கே திரும்ப வேண்டும். எங்கே பாதை மாறிச் செல்லவேண்டும் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

சாலையை இருபிரிவாக நடுவே பிரித்து – போகும் வழித்தடங்கள் ஒருபுறமும், எதிர்வரும் வண்டித்தடங்கள் மறுபுறமும் எனப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புறத்திலும் நான்கு (ஜிக்ஷீணீநீளீs) தடங்களுக்கு குறையாமல் ஓடுகின்றன. இத்தடங்கள்தான் ஓடுகின்றனவா அல்லது இவற்றின் மீது வாகனங்கள் ஓடுகின்றனவா எனக் கணிக்க இயலாத வகையில் அங்கே எல்லாம் அசுர வேகம்தான்! லைஃப் லைன் எனும் உயிர்க்கோடு தாண்டாத ஒழுங்கு வேகம்தான்!

“நீறில்லா நெற்றி பாழ்”

என்பது நம் நாட்டுப் பழமொழி

“காரில்லா வாழ்வு வீண்”

என்பது அவர்களின் நடைமொழி!

அங்கேதான் எத்தனை வகைக் கார்கள்! சிறிதும் பெரிதுமாக ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்களுக்குத் தனியே நான்கைந்து கார்கள் உள்ளன. டிரைவர் வைத்துக் கொள்வதெல்லாம் அங்கே கட்டுப்படியாகாது. டிரைவர் சம்பளமே 1500 டாலர் தேவைப்படும். எனவே பிள்ளைகள், பெரியவர்கள் எல்லோருமே கார் ஓட்டப் பழகிக் கொள்கிறார்கள். அங்கு பயணம் போகிறவருக்குக் காரோட்டத் தெரிந்திருந்தால் மிகவும் நல்லது. நம் ஊரில் வாடகைச் சைக்கிள் எடுப்பது போல, ஓரிடத்தில் வாடகைக் கார் எடுத்துக்கொண்டு ஊர் சுற்றப் போய் விடலாம். வரைபடம் கையில் இருந்தால் போதும் ஊரை வலம் வந்துவிடலாம்.

அன்றாட வாழ்வில் சாதாரணத் தேவைகளுக் கெல்லாம் பிறர் கையை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் மனோபாவம் மிக மிகக்குறைவு. நம் ஊரில், எங்கேனும் வெளியிடப் பயணம் புறப்படுகையில் நம் மூட்டை முடிச்சுகளை லக்கேஜுகளை தூக்கி வரச் சுமையாள் தேடுகிறோமே, அப்படியெல்லாம் அங்கே ஆள் கிடையாது; கிடைத்தாலும் கூலி கொடுக்க முடியாது.

ஆள் தேட வேண்டாம்!

கூடுமானவரை அவரவர் காரியத்தை அவர்களே செய்துகொள்ள வேண்டும். தன் கையே தனக்கு உதவி என்பதே அங்கு தாரக மந்திரம். ‘வலிமையுடையோர் பிழைத்துக் கொள்வர்’ (ஷிuக்ஷீஸ்வீஸ்ணீறீ ஷீயீ tலீமீ திவீttமீst) என்பதே அங்கு வாழ்க்கை நெறி.

ஓர் உதாரணம் சொல்ல விரும்புகிறேன். நெடுஞ் சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் காருக்குப் பெட்ரோல் போட்டுக்கொள்ள வேண்டுமானால், நாமே உரிய இடத்தில் காரை நிறுத்திவிட்டுப் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் எந்திரம் கணக்கிட்டுக் காட்டும். உரிய தொகையைச் செலுத்திவிட்டுப் புறப்படலாம். பெட்ரோல் நிரப்பிவிட ஆளைக் கூப்பிட்டுவிட்டால் அந்தப் பணிக்காக அதிக கட்டணம் கட்டியாக வேண்டும். கார்களை நன்கு பராமரித்து வைத்துக் கொள்ளுகிறார்கள். ரிப்பேருக்காக அதிகம் செலவிடுவதில்லை. சரியாக ஓடாத காரைக் குப்பையில் தள்ளிவிட்டுப் புதுக்காரை வாங்கிக் கொள்ளுகிறார்கள்.

ரிப்பேரா? ஓரம்போ!

காரைப் பராமரித்துக் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும். அந்த நாட்டில் சாலையை, இவ்வளவு நீண்ட, பெரிய நெடுஞ்சாலையைப் பராமரித்து வரும் அழகை எளிதில் வருணித்துவிட முடியாது. அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் அங்கே நெடுஞ்சாலைகளையும் சுற்றுப்புறத்தையும் பராமரிக்கின்றனர்; பாதுகாக்கின்றனர். சாலையில் கார் பழுதாகி நின்றுவிட்டால் பிற வாகனங்களுக்கு எவ்வித இடையூறும்  இல்லாமல் அதை நான்காவது (ஓரமாயுள்ள) வழித்தடத்தில் நிறுத்தி விடுகிறார்கள். அதில் சமிக்ஞையை மாட்டிவிடுகிறார்கள். அப்படி நிறுத்திய பத்து நிமிடங்களுக்குள் (எப்படித்தான் விவரம் அறிந்து வருவார்களோ) அங்கு போலீஸ் வந்து விடுகிறது. உரிய உதவிகளுடன் காரை அப்புறப்படுத்தி விடுகிறார்கள். போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றிக் கண்காணிக்கிறார்கள். ஒருவரால் 5 நிமிடம் தடை ஏற்பட்டாலும் அது பலருக்குப் பல வகையில் பல மடங்கு தாமதத்தையும் நட்டத்தையும் ஏற்படுத்திவிடும் என்று கவனமாக இருக்கிறார்கள்.

இங்கும் அங்கும்

தனிநபர் சுதந்திரமும், சௌகரியமும் எந்த வகையிலும் பொதுநலனுக்காக ஊறாக அமையக் கூடாது. தனிநபர் சுதந்திரத்தை வெகுவாகப் போற்றி மதிக்கும் அமெரிக்கர்கள்- மிகை உணர்வுகளுக்கு முதலிடம் தந்துவரும் அமெரிக்க மக்கள் – பொது நலக் காப்பிலும் எவ்வளவு அக்கறையுடன் விழிப்புடன் உள்ளார்கள் என்பதை அங்குள்ள நெடுஞ்சாலைப் பயணங்களில் கண்டேன்.

தனது சுதந்திரத்தால் தன்னலத்தால் அடுத்தவருக்கு எந்த வகையிலும் சிறுஇடையூறுகூடச் செய்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையோடு நடந்து கொள்கிறார்கள். நம் ஊர்த் தெருக்களில் கார்களின் ஆரன் சத்தம் செவிப்பறைகளைக் கிழித்தெடுக்குமே, அப்படியெல்லாம் அங்கில்லை. என் காதில் ஆரன் சப்தமே கேட்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரும் சாலை விதிகளை மதித்து நடப்பதால் எல்லார்க்கும் வாழ்க்கை சுகமாக அமைகிறது.

வியப்பில் ஆழ்த்தியது

நான் சிங்கப்பூர் செல்லுகையில் அங்கும் சாலை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதைக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். சிங்கப்பூரில் பொது நலத்திற்கு ஊறு செய்யும் வகையில் சாலையில் குப்பையைப்  போட்டாலோ வண்டிகளைத் தடம் மாறி ஓட்டினாலோ கடுமையாகத் தண்டிக்கிறார்கள். அச்சமே அங்கு ஆசாரம். அந்த அச்சத்தால் அங்கே ஒழுங்குமுறை நிலை பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்காவில் அச்சத்திற்கு ஆட்பட்டு அடங்குவதை விட, பொறுப்பை உணர்ந்து அவரவர் ஒழுங்கை மதித்து நடக்கும் ஆக்கம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அமெரிக்காவின் உயர்வுக்கு இந்த உயர்பண்பும் காரணம் எனக் கருதினேன்.

விவேகானந்தர் பாதச் சுவட்டில்

Image result

மதுரையிலிருந்து புறப்படுமுன் – வழியனுப்பு விழாவில் விவேகானந்தர் விஜயம் பற்றிக் கேட்ட உரைகளின் நினைவுகள் – சிகாகோ நெருங்கும்போது என்னை வலம் வந்தன… சிகாகோ போய்ச் சேர்ந்தோம். நண்பர்கள் வீட்டு நல்லுபச்சாரங்களில் திக்கு முக்காடிப் போனோம்… என் நெஞ்சமெல்லாம் சிக்காகோ நகருக்கு. நம் விவேகானந்த சுவாமிகள் வந்து இந்து சமயம் பற்றிப் பேருரையாற்றிய அந்த வரலாறே வலம் வந்தது. அவர் எழுந்தருளிய, சொற்பொழிவு செய்த, பெருமைமிகு அரங்கிற்குக் கூட்டிச் சென்றார்கள். அவருடைய நினைவை மிகச்சிறப்பாக அங்கே போற்றி வரக் கேள்விப்பட்டு உவகை அடைந்தேன். விவேகானந்தர் பாதம் பட்ட இடத்தை வணங்கித் தொழுதேன். நானும் ஒரு நிமிடம் கண் மூடித் தியானித்தேன். நெஞ்சம் நெகிழ்ந்தது.

சுவாமி விவேகானந்தர் இந்து சமயப் பெருமையைப் பரப்ப இங்கே 1893-இல் வந்தார். அவர் அடிபற்றி இப்போது, திருக்குறளின் பெருமையைப் பரப்ப நானும் ஓர் எளிய வாய்ப்புப் பெற்று சிகாகோ வந்திருப்பதை நினைத்தும் என் நெஞ்சம் மகிழ்ந்தது.

“விவேகானந்த சுவாமிகள் எங்கே? நாம் எங்கே?” என மலைப்பும் அச்சமும் தோன்றினாலும் பேரருளாளரான விவேகானந்தரின் வீர வாசகங்கள் இப்போதும் “ஆகுக, ஆக்குக!” எனவும் “எழுமின் – விழிமின் – செயலாற்றுமின்” எனவும் அன்று போல் இன்றும் அறைகூவி அழைப்பது போலவே உணர்ந்தேன்.

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

     செல்லும்வா யெல்லாம் செயல்”      (33)

என்ற வள்ளுவர் வாசகம் உணர்ந்தேன். சிகாகோ நகரைச் சுற்றிப் பார்ப்பதை விட விவேகானந்தர் வருகை பற்றிய விவரங்கள் இங்கே எப்படிப் பேசப்படுகின்றன என்று அறிவதிலேயே ஆர்வம் கொண்டேன். கிடைத்த செய்திகள் சுவையானவை:

சிகாகோ சமயப் பேரவை 1893-இல் கூடியது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் திட்டத்தில் உலகக் கண்காட்சி, கொலம்பியன் பொருட்காட்சி என்றெல்லாம் அமைக்கப்பட்டன. மனித குலத்தின் செல்வப் பெருக்கை மட்டும் அல்லாமல், ‘மனித சிந்தனை’ எனும் நெடுவளத் துறையில் கண்டுள்ள முன்னேற்றமும் அப்பொருட்காட்சியில் எடுத்துக்காட்டப்பட்டன. அதன் ஒரு பகுதிதான் சமயப் பேரவை.

சமயப் பேரவைத் தலைவரான ஜான் ஹென்றி பர்ரோஸ் பாதிரியார் கிறித்தவ மதம்தான் உலகிலேயே உயரிய மதம் என்பதை நிரூபிக்கும் தோரணையில் ஆடம்பரமாகப் பேரவையைக் கூட்டினாராம். உலகெங்கும் இருந்து நூற்றுக்கணக்கான சமய, தத்துவவாதிகள் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டனராம். எல்லோரும் வந்து மேலைப் பெருமையைப் பார்த்து வாயடைத்துப் போக வேண்டும் என்பதுதான் அமைப்பாளர்களின் நோக்கமாம்.

உலகில் பரவியுள்ள யூதம், புத்தம், இஸ்லாம், இந்து, தாவோ, கன்பூசியம், ஷின்டோ, ஜராதுஷ்டிரம், கத்தோலிக்கம், புராட்டஸ்டண்ட் ஆகிய பத்து மதங்களின் பிரதிநிதிகளும் பேரவைக்கு வந்தனர்; உரையாற்றினர். பேரவை அரங்கிலேயே சிறப்பிடம் தந்து கௌரவிக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் உரையாற்ற அழைக்கப்பட்டார். ‘சகோதரிகளே! சகோதரர்களே!’ எனும் அவரது தொடக்கத்தைக் கேட்ட பேரவை உற்சாகப் புயலால் தாக்கப்பட்டாற்போல ஒருவகைப் புத்துணர்ச்சிக்கு உள்ளாயிற்று. உலகிலேயே மிக இளைய அமெரிக்க நாட்டிற்கு, உலகின் மிகப்பழைய நாட்டுத் துறவி வந்து கூறும் கருத்தை விருப்போடு கேட்கத் தயாராயிற்று.

“வெவ்வேறு இடங்களில் தோன்றும் நதிகள் எல்லாம் ஒரே கடலில் சென்று சங்கமம் ஆகின்றன. அதைப் போலப் பல்வேறு குணப்பாங்குடைய மனிதர்கள் பின்பற்றும் சமய வழிபாடும் ஓர் இறைவனையே சென்று அடைகின்றன…”

விவேகானந்தர் ஆற்றிய உரை – திருக்குறள் போல மிகமிகச் சுருக்கமானது. ரொமெயின் ரோலோ என்னும் பேரறிஞர் “தீச்சுடரைப் போன்றது அந்த உரை. ஏட்டுச் சுரைக்காய் போலப் போய்க் கொண்டிருந்த சொற்பொழிவு- களூடே விவேகானந்தர் உரை மட்டும், கேட்பவர்களின் இதயக்கனலை மூட்டிவிட்டது!” எனப் பாராட்டி உள்ளார்.

“ஒரு மதம் வெற்றியடைந்து பிறமதங்கள் அழிந்து போய்விடுவதன் மூலம் உலகில் சமய ஒற்றுமை உண்டாகிவிடும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. ஒவ்வொருவரும் மற்றவர் உணர்வுகளை ஏற்றுச் சீரணிப்பதோடு, தத்தமது தனித்தன்மையைப் பேணி, வளர்ச்சிக்கான தன் சொந்த மரபுகளின்படி உயர வேண்டும்.” என முத்தாய்ப்பு வைத்த அவரது ஆக்க உரை சகிப்புத் தன்மைக்கு உலக அங்கீகாரம் பெற்றுத்தந்தது. பாரதப் பண்பாட்டின் ஆக்கபூர்வமான அம்சங்களை உலகிற்கு அறிமுகம் செய்தது. உலகக்குடிமை உணர்வு, ஓர் உலக அரசு ஆகிய சிந்தனைகள் மலர வழிகோலியது! விவேகானந்த உரைக்கும், திருக்குறள் நெறிக்கும் உள்ள நெருங்கிய உடன்பாட்டைச் சிந்திக்க அப்பிரசுரங்கள் மிகவும் உதவின.

குறள் நிலா முற்றம் 14


ஒருங்கிணைப்பாளர்

“என்னதான் பல்குழு, கொல் குறும்புகள் இருப்பினும் அரசாள்வோர் – தக்கார் இனத்தராய், தானொழுக வல்லாராய் இருந்தால் போதுமே! ‘ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து, யார் மாட்டும் தேர்ந்து செய்வதே முறை’ என அறிந்து செயல்பட்டால் நல்லதாயிற்றே! நாள்தோறும் நாடி முறை செய்யாவிட்டால் நாடும் சீரழியும் எனப் புரிந்து கொண்டால் போதுமே!”

திருக்குறள் பேரவை அன்பர் ஒருவர்

“நல்லாட்சி அமைவதெல்லாம் ஓட்டுப் போடும் வாக்காளர் கையிலும், தேர்ந்தெடுக்கப் படும் உறுப்பினர் தோளிலுமே உள்ளது. ஆனாலும் இந்த இரு சாராரும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணராத அவலத்தை நம் திருக்குறள் பேரவையில் சில ஆண்டுகளுக்கு முன் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அயர்வோடு, ஆறாத் துயரோடு ஆற்றிய உரை நம் பேரவை நண்பர்களுக்கெல்லாம் நினைவில் இருக்கும் எனக் கருதுகிறேன். பேராசிரியர் அவர்களே உங்கள் நினைவில் இருந்தால் கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லுங்கள்.”

மற்றொருவர்

“நெடுநேரம் அமர்ந்துவிட்டோம், அரசியலுக்குள் நுழைந்தவுடன் பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது.” (சிரிப்பலைகள்)

உணவுக்குப் பின் மீண்டும் நிலா முற்ற அவை கூடுகிறது.

பெரும்புலவர்

“தேர்தல், வாக்காளர் கடமை பற்றி எல்லாம், குன்றக்குடி மகாசந்நிதான அமரர் பிரான் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் நம்மிடையே ஆற்றிய அறிவுரை பற்றிப் பேராசிரியர் நினைவோட்டங் களைக் கொணருவார் எனச் சொல்லி உணவுக்காகக் கலைந்தோம்… ஆனால், தேர்தலில் உரிமையாய் வாக்களிக்கச் சாவடிக்கு வர, படித்தவர்களும் நல்லவர்களும் பொதுவாகத் தயக்கம் காட்டுவதால் பொல்லாதவர்கள் கள்ள ஓட்டுப் போட்டு விடுகிறார்கள்.”

இன்னோர் இளைஞர்

“அதுபோல, நிலா முற்ற அன்பர்கள் வாக்களிக்கச் செல்லத் தேர்தல் எதுவும் இப்போது நடக்கவில்லையே.. நம் திருக்குறள் பேரவையினர் தேர்தலைப் புறக்கணிக்க மாட்டார்கள். அது புனிதமான, குடியாட்சி உரிமை, கடமை என்றே கருதுவார்கள். எந்தத் தில்லுமுல்லுக்கும், பொய்ம்மை, கயமைக்கும் இணங்க மாட்டார்கள். அதை என் போன்ற இளைஞர் சமுதாயமும் கண்விழிப்போடு கட்டிக் காக்கும்.”

அரசு அதிகாரி ஒருவர்

“வாழ்க இளமைச் சமுதாயம்!” (கரஒலி)

ஒருங்கிணைப்பாளர்

“சமுதாயப் பிரச்சினைகளுக்கெல்லாம், திருக்குறள் வழியே தீர்வுகள் காண முற்படும் ஓர் இயக்கமே நம் திருக்குறள் பேரவை. சீரிய சிந்தனைகளும், உயரிய கோட்பாடுகளும் நிறைந்துள்ளது நம் நாடு; எனினும், அவை விடுதலைப் போர்க்கால இயக்கம் போல, இந்தக் குடியுரிமை ஆக்க நெறிக்குச் செயல்படாமல் போனதால், ஆளும் கட்சி, மாற்றுக் கட்சி என்றில்லாமல், ஆளுக்கொரு கட்சி என வேர்க் கொல்லிகள் புகுந்ததால் நம் ஜனநாயகம் சாக்காட்டை நோக்கிப் போகிறதே என நம் வணக்கத்திற்கு என்றும் உரிய அடிகளார் அவர்கள் பலமுறை நம் அரங்கங்களில் மட்டும் இன்றி – பேசும் மேடைகளில் எல்லாம் – உளம் வருந்தியது உண்டு, அவற்றுள் சில செய்திகளையாவது பேராசிரியர் சொல்லட்டும்.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“ஜனநாயக, சோசலிச, மதச்சார்பற்ற அரசாகப் புதிய குடியாட்சி அமையும் எனச் சுதந்திரம் பெற்ற நாள் முதல் கனவு கண்டோம். ‘எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கும் இவ்வையகம்’ எனும் புரட்சிக் கவிஞர் உறுதியும், ‘முப்பது கோடியும் வாழ்வோம், வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்’ எனும் மகாகவி சபதமும் நனவாகும் என நம்பினோம்.”

இடைமறித்த மூத்த அரசு அதிகாரி

“ஆனால், ஆண்டுக்கு ஆண்டு வறுமையும் வரிச் சுமையும்தான் அதிகரித்து வந்தன. எப்படியேனும் செல்வத்தைச் சேர்த்து அதைக் கொண்டு ஆட்சிச் செல்வாக்குப் பெற்று, அவரவர் அனுபவிக்கும் புதிய ஜமீன்தார் ராஜ்யங்களே உருவாயின.”

மற்றொருவர்

“செல்வச் செருக்காலும் அதிகார பலத்தாலும் தனிச் சலுகையோடு, நினைத்ததைச் சாதித்துக் கொள்ளலாம் எனும் எண்ணம் பலரிடம் நீடிக்கும் வரை, சமுதாயத்தில் சமத்துவம் நிலவாது. இந்நிலை மாறாத போது புள்ளி விவரப்படி உற்பத்தி பெருகினாலும், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாடுவோர் எண்ணிக்கை குறையாது; புரட்சி ஓயாது. அடிப்படைத் தேவைகளுக்கே அல்லல்படும் நிலை நீடிக்கும் வரை நியாயமான மக்களாட்சி மலராது.”

ஒருங்கிணைப்பாளர்

“சொல் வேறு, செயல் வேறு எனும் போக்கு உடையவர்கள் அரசியல் களத்தில் அதிகமாக நுழைந்தமை யால் ஏற்பட்டு வரும் அவக்கேடு இது. இதனைக் களைய வேண்டுமானால், வாக்காளர்கள், நல்லவர்களை ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அடிகளார் வற்புறுத்தி வந்தார்கள்.”

பேராசிரியர்

“வள்ளுவர் மன்னராட்சிக் காலத்தே வாழ்ந்து சமுதாயக் கோட்பாடுகளை வகுத்தவர் எனினும்- குடிதழுவிக் கோலோச்சும் மக்களாட்சி முறையை, அப்போதே, முதன்முதலில் சொல்லிவிட்டார் என்பது அடிகளாரின் உறுதிப்பாடு. அவர் கொடுங்கோன்மை புரிந்த அரசுகளையும் அறிந்திருந்ததாலோ என்னவோ, அதனை நீக்கி- நல்லாட்சி நடத்தும் அரசை அமைப்பதே குறளின் குறிக்கோள் எனப் பல அதிகாரங்களில் வரையறுத்தார். இந்தக் குடியாட்சி வரையறுப்பின் அடித்தளம் வாக்காளர்கள். இந்த வாக்காளர்களின் அரசியல் அறிவு, தகுதி ஆகியவற்றிற்கு ஏற்பவே ஆட்சியும் அமையும்.”

மற்றொரு பேராசிரியர்

“மக்கள் ஆட்டு மந்தைகளாக இருந்தால் ஓநாய்களே ஆட்சிக்கு வருவார்கள் என்பது ஒரு மேலை நாட்டு அரசியல் ஞானியின் அறிவுரை” (அரங்கில் கர ஒலி)

பேராசிரியர்

“அடிகளாரின் கருத்தைத் தொடருகிறேன்; நாம் நமது நாட்டைச் சொத்தாகக் கருத வேண்டும்.”

ஒரு புலவர்

“அதனால்தான் அவரவர் பங்குகளைச் சுரண்ட ஆசைப்படுகிறார்கள்” (சிரிப்பலை)

பேராசிரியர்

“அடிகளார் பெருந்தகை நாடு நம் சொத்து என்பது போல, நாமும் நாட்டின் சொத்து எனப் பெருமையோடு கருதி, கடமைப் பொறுப்போடு செயல்படத் தூண்டி வந்தார். வளர்ச்சி எனும் திட்டப் பணிகளைக் காரணம் காட்டி இதுவரை நம்நாடு வாங்கியுள்ள வெளிநாட்டுக் கடன் சுமை எப்போது இறக்கி வைக்கப்படுமோ என ஏங்கினார். எனவே பொருளாதாரச் சீரழிவை இப்போதாவது தடுத்து வளம் செழிக்கும் பாதைக்கு நாட்டைக் கொணரவல்ல நல்ல ஆட்சியைத் திறம்படத் தேர்ந்தமைக்கப் பல உரைகளில் தொடர்ந்து மன்றாடினார்.”

ஒருங்கிணைப்பாளர்

“நம் நாட்டில் வசியும் வளனும் சுரப்பதை விட, நாள்தோறும் பசியும் பகையும் பெருகக் கண்டு, நம் அடிகளார் கண்ணீர் மல்கியதை நம்மில் பலர் பார்த்திருக்கிறோம். அதனால்தான் – நல்குரவோடு பல்குறைத் துன்பங்களும் சென்றுபடும் நிலை வந்தாக வேண்டும் என வலியுறுத்தினார்.”

பேராசிரியர்

“நமது நாடு பசி, பிணி, செறுபகை என்பனவற்றில் இருந்து விடுதலை பெறுவது ஒரு புறம் இருக்க, நாடு தழுவிய வளர்ச்சி நிலைபெற வேண்டுமானால், நமது நாட்டின் அளப்பரிய ஆற்றலான மனித வளத்தை மூலைக்கல்லாகக் கொண்டே இதர கட்டுமானங் களையும் முறையாக எழுப்ப வேண்டும் எனக் கட்டளையிட்டார், திட்டமும் தந்தார் மகா சந்நிதானம் அவர்கள்.”

பெரும்புலவர் செல்வ கணபதி

“அறிவியலையும் கிராமப்புறத் தொழில் களையும் ஓரணியில் கொணர்ந்து, புதுமையான வளர்ச்சித் திட்டங்களை…”

இடைமறித்த அன்பர்

“சுவாமிகளின் இந்த ஒருங்கமைப்புத் திட்டத்தைக் ‘குன்றக்குடித் திட்டம்’ (ரிuஸீக்ஷீணீளீuபீவீ றிறீணீஸீ) என மைய அரசே பாராட்டியது. ஆனால் வழக்கம் போல அத்திட்டத்தை ஊர்தோறும் வளர்க்காமல் தயங்கியும் நின்று கொண்டது.”

பேராசிரியர்

“அடிகளார் பெருந்தகை நம்மவர் உழைப்பெல்லாம்- சாதி – சமய – மொழிச் சிக்கல்கள் போன்ற வேண்டாத, உடனடிப் பயனற்ற, நாட்டுக்கு ஊனம் தரக்கூடிய பிரச்சினைகளிலேயே செலவிடப்பட்டு, விழலுக்கு இறைத்த நீராகிறதே எனவும் வேதனையுற்றார்.”

ஒருங்கிணைப்பாளர்

“நான் முன்பே குறிப்பிட்டது போல… ‘பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும்’ நம் நாட்டில்தான் அதிகம் என்பது அடிகளார் வருத்தம்.”

அரசு அதிகாரி

“நம் ஊர்களில் ஊர்வலமோ, போராட்டமோ, கோஷமோ, கொடி பிடிப்போ இல்லாத நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் மனப்போக்கும் அப்படி, ஆட்சியாளர் மனப்பக்குவம் இன்மையும் அப்படியே.”

திருக்குறள் செம்மல்

“‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த, வகுத்தலும் வல்லது அரசு’ (385) – எனும் குறளில் குன்றக்குடி அடிகளார் ‘வகுத்தல்’ எனும் சொல்லுக்கே, செயலுக்கே அதிக அழுத்தம் தருவார். நாட்டில் உருவாக்கப்பெறும் உற்பத்திப் பொருள்கள் எல்லாம் உரியவாறு மக்கள் நுகர்வுக்குப் பயன்படுவதில்லையே? செல்வம் மறுமுதலீடாக மீண்டும் சுழற்சிக்கு வருவதில்லையே? வேலை வாய்ப்பும் பெருகுவதில்லையே! என்பது அடிகளாரின் வள்ளுவச் சிந்தனை, ஏக்கம்.”

பேராசிரியர்

“நமது நாட்டில் ஆட்சியை அமைக்க உதவும் களம்- தேர்தல், அத்தேர்தலில் ஆட்சிப் பொறுப்பு ஏற்கக் கூடிய பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க உதவும் உரிமை – வாக்குச்சீட்டு. ஆற்றல் மிக்க, புனிதமான இந்த வாக்குச் சீட்டால் நல்லவரை, ஒழுக்கத்திலும் செயலிலும் வல்லவரைத் தெரிவு செய்ய வேண்டும். ஆனால் அந்த நல்லவர் – தனி நபராக ஒற்றைப் பனையாக நின்றால் ஏதும் செய்ய முடியாது. ஏனெனில் குடியாட்சியின் கட்டுமானம் – கட்சி அமைப்பு. நாணயமானவர்கள் இடம்பெற அதிக அளவில் முன்வந்தாக வேண்டும் என்பது அடிகளார் அவர்களின் விருப்பம். அப்போதுதான், ‘சான்றோர் பழிக்கும் வினை’ என்பன தொடரமாட்டா. வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே. அதை நிறைவேற்றாத வரை நாணயமானவர்கள் என எப்படி ஏற்க முடியும்?”

ஒருங்கிணைப்பாளர்

“இதற்கெல்லாம் அடிப்படை நல்ல குடிமக்களாக நாம் அமைவதுதான்.”

இடையில் ஒருவர்

“இப்பொழுது குடிமகன்கள் நிறையப் பேர் பாதையெங்கும் காணப்படுகிறார்கள். அத்தகையவர் களுக்குப் பஞ்சமே இல்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“நல்ல செங்கற்களால் நல்ல கட்டிடம் எழும்பும். அது போல நல்ல குடிமக்களால் – ‘வரப்புயர’ என ஔவை சொன்னது போல – வீடும் நாடும் உயரும். நாடு என்பதன் நுண்துளி வட்டம் அவரவர் குடி எனும் குடும்பம். எனவேதான் வள்ளுவர் ஒவ்வொருவரும் உழைப்பால் தம் நிலையை உயர்த்தி – தாம் பிறந்து வளரும் குடியையும் மேம்படுத்த முற்பட்டாலே – நாடு தானாகச் செழித்தோங்கும் எனக் குடிமைப் பண்பை வலியுறுத்தினார். அத்தகையோர் பருவம்- காலம் – பொழுது பாராமல், கடுமையாக உழைத்துக் குடிமானம் காப்பர். ‘பொதுப்பணியில் கடமையைச் செய்யச் சோர்வடைய மாட்டேன்’ என நினைத்தாலே – முற்பட்டாலே – அதைவிடப் பெருமையின் பீடுடையது இல் என்று ஊக்கு விக்கிறார் வள்ளுவர். இந்த நாட்டின் ஒவ்வொரு உரிமை மகனும், மகளும் தன்னலம் இல்லா உழைப்பால், நிர்வாகத் திறமையால், வளர்ச்சி மேலாண்மையால் தன் குடியை நிமிர்த்தி – நாட்டையும் உயர்த்த – பெருமையுடனும் உறுதிமாறா வீரப்பொறுப்புடனும் மார் தட்டிப் புறப்பட்டு அணிவகுத்தால் நம் இந்தியத் திருநாடு, பாரதி பாடியது போல் ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ ஆகும். நம் பெருமைக் கெல்லாம் உரிய தாயகம் ஆகும். என நம் தவத்திரு அடிகளார் கண்ட கனவை, அதற்கும் பல ஆண்டுகட்கு முன்னரே, ‘மண் பயனுற வேண்டும் – வானகம் இங்கு தென்பட வேண்டும்’ என மகாகவி பாரதி வேண்டிய வரத்தை – நம் காலத்திலேயே நாமே நடைமுறை ஆக்க உறுதி பூணுவோம். அதில் வெற்றியும் காண்போம். இந்த உறுதியுடன் நிலா முற்ற அரங்குகள் பலவற்றில் ஒன்று கூடிச் சிந்தித்து ஒரு புதிய இலட்சிய ஓவியத்தை வரைந்து தந்துள்ள உங்கள் அனைவர்க்கும், வானொலிக்கும், உலகத் திருக்குறள் பேரவை சார்பாக உளமார்ந்த நன்றி கூறுகிறேன். நமது நிலா முற்றம் மீண்டும் ஒரு முழுநிலா இரவில் கூடும். வள்ளுவரின் நிருவாகவியல் சிந்தனைகள் பற்றியும், திருக்குறளைத் தேசிய நூலாக்குதல் பற்றியும் ஆராயும், ஆவன செய்யும். ‘புகழ்ந்தவை போற்றிச் செய்தல் வேண்டும்’ எனும் வள்ளுவ வாழ்த்துடன் விடை பெறுவோம்.”

குறள் நிலா முற்றம் – 11

Image result for valluvar

பெரும்புலவர்

“இல்லாளுக்குப் பத்து இல்லாதவனுக்கு 20!”

ஓர் அன்பர்

“என்ன பெரும்புலவர் ஐயா ஏதோ புதிர் போடுகிறார்?”

பேராசிரியர்

“மனையற வாழ்வில் ‘இல்லாள்’ எனும் சொல் இல்லத்திற்கு உரியவளேயான மனைவியைக் குறித்திட, ‘இல்லான்’ எனும் எதிர்ச்சொல், கணவனைச் சுட்டாமல் ஏதும் இல்லாத வெறும் பயலைக் குறிப்பதாகப் புலவர் ஐயா, சொல்லாமல் சொல்லுகிறார். ஆனால் 10/20 என்ற கணக்குத்தான் புரியவில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“பெரும்புலமைப் பெருந்தகை ஒரு வகையில் கணக்குப் போட்டே சொல்லியிருப்பதாகக் கருதலாம். வாழ்க்கைத் துணை நல இல்லத்தரசி பற்றி 10 குறளோடு முடித்துவிட்டு, இல்லத் தலைவன் கடைப்பிடிக்க வேண்டியவற்றை ‘பிறனில் விழையாமை’, ‘பெண் வழிச்சேரல்’ எனும் இதர தலைப்பில் 20 குறளில் சொல்ல நேர்ந்ததை 20 அம்சத் திட்டம் போலச் சொல்லியதாகக் கருதுவோமே!”

வளனரசு

“பிறனில் விழையாமை’ அதிகாரத்திற்கு முன்னுரை எழுதிய பரிமேலழக உரையாசான், ‘காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விரும்பாமை எனும் இது ஒழுக்கமுடையாரிடமே நிகழ்வதாதலின், ஒழுக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது’ எனப் பொருத்தமான விளக்கம் தருவார்.

“பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

     அறம்பொருள் கண்டார்கண் இல்.”    (141)

“அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

     நின்றாரின் பேதையார் இல்”        (142)

என்றெல்லாம் வள்ளுவர் அறவழி நிறுத்துவர்.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் வளனரசு வரிசைப்படுத்தியமை போல அறநெறியில் இல்வாழ்பவன், பிறன் மனை நயவாதவனே ஆவான். ‘ஆண்மை’ என்றால் ஆளுமை. அது புற வீரத்தைவிட, அக ஒழுக்கமான மனஅடக்கத்தில்தான் தலைநிமிர்ந்து விளங்கும். அது கோழைத்தனம் அல்ல.”

அரசு அதிகாரி

“ ‘பிறன்மனை நோக்காத பேராண்மை’ என்கிறாரே?”

 

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“அன்பர் சுட்டிய ‘நோக்காத’ எனும் வள்ளுவச் சொல்லாட்சி மீண்டும் மீண்டும் நினைக்கத்தக்கது. ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட ஒரு பொருள் சுட்டும் பல சொற்கள் உள்ளமை போலத் தமிழிலும் காண், பார், நோக்கு எனும் சொற்கள், பல்வேறு பொருளமைதிச் சாயல்களுடன் கையாளப்படுகின்றன.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் சுட்டிக்காட்டியது போல வள்ளுவர் நோக்காமை’ எனும் சொல்லால் மிகுந்த நுண்மாண் நுழைபுலத்தோடும் உளவியல் பாங்கோடும் எடுத்தாண்டுள்ளார்.

ஓர் அன்பர்

“ஒருவகை உள்நோக்கத்துடன் பார்ப்பதைத் தான் ‘நோக்கு’ என்கிறார்.”

ஒருங்கிணைப்பாளர்

“அதுதான் உகந்த பொருள். அழகாக இருக்கும் பொருளைப் பார்த்து உளமார ரசிப்பதில் தவறில்லை. அழகிய மாதொருத்தியை நோக்கி, அவள் தன் மனைவியாக இருக்கக் கூடாதா என மறுகுவதுதான் தவறான உள் நோக்கு.”

அரசு அதிகாரி

“அப்ப ரசிக்கலாம். நோக்கக்கூடாது என்கிறீர்கள்.”

கருணைதாசன்

“ரசனைக்கும் ஒரு வரையறை உண்டே?”

பெரும்புலவர்

“வரம்பு மீறி ரசித்து, விழைந்தமையால் வந்த வினையைப் பல கதைகள் நமக்குப் பாடமாகச் சொல்லி உள்ளனவே… அடுத்தவன் மனைவியின் அழகில் மயங்கி, அறம் தவறி, மதிகெட்டு, மானம் மட்டும்  இன்றி, தன் வாழ்க்கையையே வீணடித்துக் கொண்ட வரலாற்று நிகழ்ச்சிகள் நம் நாட்டில் பல உண்டு.”

மற்றொரு புலவர்

“வானுலக வேந்தனான இந்திரன், அகலிகையின் அழகில் மயங்கி, அவளை நுகர மானுட வேடம் போட்டு நடத்திய நாடகத்தில் முனிவரிடம் பெற்ற சாபம் ஒரு பெரிய புராணம்!”

புலவர் செல்வ கணபதி

“அதைச் சேக்கிழாரின் புனிதமான பெரிய புராணத்தோடு ஒப்பிட்டு விடாதீர்கள்.” (சிரிப்பலை அவையில்)

அரசு அதிகாரி

“இந்தக் காலத்தில் எல்லாம் ஏதேனும் ஒரு சின்னவீடு இருந்தால்தான் ஒரு பெரிய மனிதருக்குப் பெருமை என்றாகிவிட்டது.” (மீண்டும் சிரிப்பலை)

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“இராமாயணக் காப்பியத்தின் மூலக்கருவே இராவண வதம் என்றால் அவனது அழிவுக்குக் காரணம்? ‘முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும், எவராலும் வெல்லப்படாய் எனப் பெற்ற வரமும், உலகெல்லாம் கடந்த புயவலியும்’ என்பன எல்லாம் கற்பெனும் கனலியான சீதையை, வஞ்சகமாய் அபகரித்த காரணத்தால் வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு வீடு திரும்பினான் என்ற அவலத்தை நினைத்து சின்ன வீட்டு ஆசைகளை அகற்றிவிட வேண்டுகிறேன்.” (சிரிப்பு)

வருமான வரித் துறை ஆணையர்

“இல்லறக் கடமைகளில் ஆணை விடக் கூடுதலாகப் பொறுப்பேற்கும் பங்காளி என்பதால் தான் ஆங்கில மரபில் ‘ஙிமீttமீக்ஷீ பிணீறீயீ’ என்பர். காந்தியடிகள் ‘கீஷீனீணீஸீ வீs லிவீயீமீ’s றிணீக்ஷீtஸீமீக்ஷீ’ எனச் சரிநிகர் சமானம் தந்தார்.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராண்மை என்ற சொல்லை மீண்டும் நினைத்தால் வள்ளுவர் மனத்திட்பத்திற்கே பெருமை சேர்த்துள்ளார் என்பது விளங்கும்”

அவையில் ஒருவர்

“செம்மல் சொல்வது போல எவ்வளவுதான் மனத்திட்பத்தோடு வீட்டை விட்டு வெளிக்கிளம் பினாலும் சினிமாக் கவர்ச்சிகளும் விளம்பரக் காட்சிகளும் ஆண்கள் மனத்தை மட்டும் அல்ல, பெண்கள் உடல் நளினத்தையும் அளவுக்கு மீறிக் கொச்சைப் படுத்தும் ஒரு புதிய அநாகரிகம் ஓங்கி வருவது எல்லோரையும் அன்றைய இந்திரன் போல அகலிகைகளைத் தேடச் செய்துவிடும் போல உள்ளது.”

அன்பர் ஒருவர்

“கண்களை மூடிக்கொண்டு நடக்கப் பழகுங்கள், சரியாகிவிடும்” (அவையில் சிரிப்பு)

செந்தமிழ்க் கல்லூரி மாணவி சித்ரா

“நீங்கள் என்னதான் சமாதானம் கூறினாலும் வள்ளுவர் பெண்களை ஆண்களுக்கு அடிமை களாகக் கருதியே பல குறட்பாக்களைச் செய்துள்ளதாக நான் குற்றம் சாட்டுகிறேன்.

சான்றாக,

‘தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுதுஎழுவாள்

     பெய்யெனப் பெய்யும் மழை’        (55)

எனும் குறளில் பெண் தன் கணவனையே தெய்வமாகத் தொழவேண்டும் எனும் நிபந்தனை யையும், அத்தகையவள் ‘பெய்’ எனச் சொன்னால் மழை பொழிய வேண்டும் என்ற கட்டாயமும் ஒருவகை ஆணாதிக்கத்தையே காட்டுகின்றன. இப்போதெல்லாம் பெண்கள் கணவனைத் தொழாமல், பெய் எனவும் சொல்லாமல் இடை விடாமல் பேய்மழை பொழிந்து ஊரெல்லாம் வெள்ளக்காடாகி விட்டதே? அப்படியானால் ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் தத்தம் கணவன்மார்களுக்கு ஒரே சமயத்தில் செய்த வழிபாட்டு ஆராதனையின் விளைவா இந்த வெள்ளப் பெருக்கு?”

மற்றொரு தமிழாசிரியை

“செல்வி சித்ரா குறிப்பிட்டதை விட, சமுதாயத்தில் கண்டதும் காதல், பெண்மைச் சீண்டல் (ணிஸ்மீ ஜிமீணீsவீஸீரீ)..” ஆகியன தினசரி நடப்பு களாக உள்ளனவே…

இடைமறித்த ஒருவர்

“ஆண்களும் சீண்டப்படுகிறார்களே?” (சிரிப்பலை)

மற்றொருவர்

“சீண்டலாலும் தீண்டலாலும் ஆண்மகன் எப்படியோ தப்பித்து விடுகிறானே! பெண்கள் தானே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்? சீண்டல்- தீண்டலின் விளைவை காலம், பருவம் எல்லாம் காட்டிக் கொடுத்து விடுகின்றனவே…?”

புலவர்

“குறள் நம் கையில் உள்ள முகக் கண்ணாடி போன்றது. அவரவர் முகம் அதில் தெரிவது போல, ஒழுக்கத்தைப் பொறுத்தவரை அவரவரே வரம்பு கட்டி வாழ வேண்டும்.”

வளனரசு

“சற்றுமுன் குறிப்பிடப்பட்ட பெண் பெய் எனப் பெய்யும் மழை பற்றி ஒரு கருத்து…”

அன்பர் ஒருவர்

“வெளியே மழை ஓய்ந்தாலும் அரங்கினுள்ளே தூவானம் விடாது போலிருக்கிறதே!”

வளனரசு

“சிறுதெய்வ வழிபாட்டை விடத் தன் கணவனையே உளமார நேசித்து வணங்கி வாழ்பவள், உரிய நேரத்தே பெய்ய வேண்டும் எனப் பிறர் எல்லாம் வேண்டும் பருவ மழையைப் போன்றவள் என நேரடியாகவே பொருள் கொள்ளலாம். இதில் ஒரு கடவுள் தன்மையையும் பகுத்தறிவுக்குப் பொருந்தாமையையும் தம் உரைமேல் ஏற்றி, பரிமேலழகர், மணக்குடவர் போன்ற பெருமக்கள் அன்றைய காலப் போக்கிற் கேற்பச் செய்து வைத்த தவறு. அந்த உரைகளில் கூட வேறுபாடுகள் உண்டு என்பதே உண்மை.”

பேராசிரியர்

“இக்குறட்பா இளங்கோவடிகளையும் மணிமேகலை ஆசிரியரையும் மனம் கவர்ந்தது என்பார் பேரறிஞர் கா.அப்பாத்துரையார், இருவருமே தமது காப்பியங்களின் நாயகியரின் கற்புத்திறம் விளக்க இக்குறளை எடுத்தாண்டு உள்ளதாக நினைவு.”

ஒருங்கிணைப்பாளர்

“கற்பரசி, தெய்வத்தையோ கணவனையோ தொழுதெழுவாள்; மழை பெய்யும் என்பதை விட கற்புடைப் பெண்ணைத் தெய்வமும் தொழுதேத்தும் எனும் உணர்வோடு பொய்யில் புலவன் பொருளுரை தேர்ந்து இந்த விவாதப் பகுதியை இத்துடன் முடிப்போமே.”

கல்லூரி மாணவி

“முற்றத்து அவையோர் முன்னர் மகளிர் சார்பாக மற்றும் ஓர் ஐயத்தைக் கேட்டு, இனி அடுத்து வரும் நாட்டாட்சி பற்றிய பகுதிக்குச் செல்லத் தடைக்கல்லாக நிற்கிறேன். மன்னிக்கவும்.”

முதியவர் ஒருவர்

“ஏம்மா தயக்கம்? வீட்டுக்கு அப்புறம் தான் நாடு, அதிலும் மகளிர்க்கு ஐயப்பாடு வந்தால் வீடும் சரிப்படாது; நாடும் உருப்படாது. கேளுங்கள், கேளுங்கள்.”

மாணவி

“வள்ளுவரின் காமத்துப்பால் உலகு முழுவதும் உள்ள ஆண் – பெண் உறவு முறைக்குப் பொருந்துமா? இந்த உறவு முறைகளில் இப்போதெல்லாம் பல வகையான அனுசரித்துப் போதல். அதாவது…”

பேராசிரியர்

ஆங்கிலத்தில் சொல்லப் படும் எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் இசைவில்லாத, அவிழ்த்து விடப்பட்ட ஒரு சுதந்திரமான, மனம் போன போக்கு – ஒரு கலாச்சாரமாக அல்லது அனாச்சாரமாக வளர்ந்து வருவதைத்தானே சொல்கிறீர்கள்?”

வளனரசு

“ஆண் – பெண் உறவு முறை என்பது அடிப்படை நோக்கில் உலகு முழுவதும் ஒன்றுதான். அணுகும் முறைகளில்தான் அந்தந்தப் பண்பாட்டுக்கு உகந்த மாறு பாடுகள் உண்டு. அதனை அந்தந்தச் சமூகம் ஏற்றுக் கொண்டால் சரிதான். நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, சங்க இலக்கிய அகத்திணை தொட்டு வள்ளுவம் வரை கருதும்போது – ‘களவில் தொடங்கி கற்பில் முடிவதே’ இந்தப் புனித உறவு என்று சொல்லி விடலாம். எங்கள் பேராசான் வ.சுப.மா.அவர்கள் முனைவர் பட்ட ஆய்வேடாக நூலில் கிரேக்க ஆங்கில மேதைகளின் கருத்துக்களையும் குறிப்பாக ஹாவ்லக் எல்லிஸ்எ ன்பாரின் இரு தொகுதிப் பேரேட்டிலும் இக்கருத்தே நிலவுகிறது. காதலில் தொடங்கிக் கற்பில் நிலை கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது போலவே கொழுநனிடம் ‘நண்ணேன் பரத்த நின்மார்பு’ எனும் உறுதிப்பாடு நன்றாகத் தொனிக்கிறது; இன்பத்துப் பால் வாழ்கிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“இன்பத்துப்பாலில்தான் வள்ளுவர் மிக நுட்பமான செய்திகளைச் சொல்லுகிறார்.”

ஒருவர்

“அதை விரிவாகவே சொல்லுங்கள்!” (சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“அறத்துப்பாலில் சொல்லாது விடப் பட்ட பல அறிவியல் செய்திகள்… குறிப்பாக ‘அறிதொறும் அறியாமை கண்டற்றால்…’ என்ற அரிய தொடர்  அன்றே கருதிய ஒப்பரிய செய்தி வருகிறது.”

பேராசிரியர்

“மனம் பயன்படும் இடம் சமூக வாழ்வோடு இணைந்திருந்தாலும் அது பண்படும் இடம் குடும்ப வாழ்வின் இன்ப நிலையமே என்பார் பேரறிஞர் மு.வ. அது மட்டும் அல்ல. அறிவும் உணர்வும், வன்மையும் மென்மையும், அழகும் இளமையும், கவர்ச்சியும் முயற்சியும் என்றெல்லாம் இணந்துள்ள குடும்ப வாழ்வில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து, தொண்டும் தியாகமும் மேவிட வாழ்வதே சீரிய வாழ்வு எனவும் வலியுறுத்துவார்.”

பெரும்புலவர்

“அதுமட்டும் அல்ல ஐயா!… வள்ளுவர் காமத்துப் பாலில் ஒருதலைக் காமத்தையோ, ஒவ்வாக் காதலையோ கூறவில்லை. ‘அன்பின் ஐந்திணை’ எனப் பெரியோர் வகுத்த ஒத்த அன்புடைய, ஒன்றிய அன்றில் பறவை போன்ற உரிமை வாழ்வையே பேசுகிறார்; நன்கு குறிப்பிட்டுப் பேசுகிறார்.”

ஒருங்கிணைப்பாளர்

“குறளில் ‘நட்பு’ எனும் மானுடப் பொது உறவு பற்றி வரும் ஐந்து அதிகாரங்கள் ஒருபுறம் இருக்க, இருமுறை வரும் அதிகாரப் பெயர் ஒன்றும் உள்ளது. அது என்ன என்று சொல்கிறீர்களா?”

(அவையில் சற்று அமைதி)

குறள் நிலா முற்றம் – 4

ஒரு பேராசிரியர்

“நான் ஒரு கருத்தைக் கூறலாமா? வள்ளுவம் சொல்வது புறவாழ்வில் காணப்படும் போலியான தொரு பொதுமைப் பார்வை இல்லை; ஒவ்வொரு நபரின் தனி நெஞ்சத் தூய்மை! ஒரு சமூகத்தில் வாழும் மனிதரிடையே மொழி, மதம், குலம், கட்சி எனப் பல வகையால் முரண்பாடும், வேறுபாடும் தலைதூக்குவது உலகியற்கை. மனமாசு குறைவுபட்டால், எவ்வகை வேற்றுமை யிடையேயும் உறவு பூணவும், உதவி செய்யவும் சிந்தை மலரும்; செயலாக வளரும்.

எனவே, திருக்குறளுக்குச் சாதி, சமயம் என்றெல்லாம் சாயம் பூசும் ‘பொதுமை’ நிலைக்களம் இல்லை; மக்கள் மனமே நிலைக் களம். ஆளுக்கொரு மனம் உடைய அந்தப் பன்மை நிலைக்களம். நம் மனதில் கணந்தோறும் விரிந்து பரவும் நல்ல, தீய எண்ணங்கள் என்பன நிலைக்களம். பொதுமைக்குள்ளே பகைமையும் வேற்றுமைக்குள் நட்புறுதியும் கண்ட மனநல அறிஞர் வள்ளுவர். ஆதலால், தனித்தனி நபர்களின் வஞ்சனையை மாற்றி, நெஞ்சத் தூய்மை செய்வதே அவரது நூலின் தனிச்சிறப்பு.”

ஒருங்கிணைப்பாளர்

“தன் நெஞ்சறிவது பொய்யற்க”      (குறள் 293)

“நெஞ்சில் துறவார் துறந்தார் போல”  (குறள் 276)

“மனத்தது மாசாக மாண்டார் நீராடி”  (குறள் 278)

“வஞ்சக மனத்தான் படிற்றொழுக்கம்” (குறள் 271)

“நெஞ்சத்து அகநக நட்பது நட்பு”        (குறள் 786)

எனப் பல்வேறு குறள்களில் நெஞ்சத்தையே வள்ளுவர் சுட்டிப் பேசுகிறார் என்பதை நாம் ஏற்கலாம்.”

வள்ளுவர் மருத்துவரா? மனநலச் செம்மலா? – ஒரு குரல்

“வள்ளுவரை மருத்துவராகவும், திருக்குறளை மருந்துக் கடையாகவும் உவமித்துள்ளதைச் சொன்னார்கள். அதுபற்றி மேலும் சிந்திக்கலாமே..?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் மனநல அறிஞர் என்று நாம் பேசியதைப் போல அவர் உடற் கூறுகள் அறிந்த மருத்துவர் போலவும் விளங்குகிறார். மருத்துவர் என்ன செய்கிறார்? மக்கள் உடலையும், பல்வேறு உறுப்புக்களையும் நிலைக்களமாகக் கொண்டு, நோயாளியின் நல்ல, தீய நிலைகளை நாடி பிடித்து ஆய்ந்தறிகிறார் அவர், உடல் மாற்றத்து நோயின் அறிகுறிகளுக்கான காரணங்கள், உணவு முறைகள் எனப் பலவற்றையும் கேட்டறிகிறார். பசி, உறக்கம், செரிமானம் எனத் தனித்தனி நோயாளியின் அவ்வப்போதைய நிலைப்பாடுகளுக்கேற்ப சிகிச்சை தருகிறார். இவ்வாறு தன்னிடம் நலம் நாடி வரும் நோயினர் அனைவர்க்கும் சாதி சமய வேறுபாடு கருதாது சிகிச்சையளிக்கும் மருத்துவரைப் போல, வள்ளுவரும் நம் சமுதாய, தனிநபர் நடப்பியலுக்கேற்ற நலம்தரும் நடைமுறைகளைத் தொகுத்துரைக்கிறார். மருத்துவர் கைநாடி பார்க்கிறார்; வள்ளுவர் நம் மன நோயை நோக்குகிறார். இரண்டும் பணி முறையில் ஒன்றுதான்; முழு நலம் பெறுவதே முதன்மை நோக்கம்.

இன்று நம் நாட்டிலும் உலகிலும் காணும் இன, மொழி, சமய, மாறுபாடு வேறுபாடுகள் எல்லாம், பூசல்கள் எல்லாம் எரிமலை போன்றவை. மனதுக்குள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் போராட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகள். பிரஷர் குக்கரில் மூடிவைத்துள்ள பாத்திரத்தைச் சற்றே திறந்தவுடன், அது பெருமூச்சுவிட்டு ஆவியைக் கக்குவது போல, சந்தர்ப்பம் ஏற்படும்போது உள்ளக் கொதிப்பெல்லாம் கலவரமாக, போராக வெடிக்கிறது. அமைதி அமைதி என நாடு கூட்டிப் பேசிக் கொண்டே, அணுகுண்டுகளையும் பேரழிவு ஆயுதங்களையும் ஏவும் அச்சம், அபாயம் பரப்பப்படுகிறது. நல்லரசுகள் கூட, வல்லரசுகளாக அரக்க ஆட்சி நடத்தத் துடிக்கும் பேரபாயம் உலகை நடுங்கச் செய்து வருகிறது. மக்களது தனி நல்வாழ்வு எனும் கல்லறைகள் மீது பொறாமை எனும் போலி ஆதிக்கக் கோபுரமே எழுப்பப்படுகிறது. எனவே நீரினைத் தேக்கி வைக்கும் ஊருணியைத் தூய்மை செய்யாமல் அதனை ஊருக்குக் கொணரும் வாய்க்கால்கள், குழாய்களை மட்டும் சுத்தம் செய்தால் போதுமா? எனவே ‘நோய்நாடி நோய் முதல் நாடி’ என்பது போல பொதுமை நோக்கோடு, தனிமனித நெஞ்சங்களையும் நிமிர்த்தவே முற்படுகிறார்.

‘மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு’ என்பதைத் தானே வள்ளுவமும் பிற அறநூல்களும் கூறியுள்ளன..?” என்று திசை திருப்பினார் ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அன்பர் ஒருவர்.

பலரது உதவியும் தன்முயற்சியும் கூடி அமைந்ததே வாழ்க்கை என்பதைத்தான் குறளும் அதைத் தொடர்ந்த நம் அறநூல்களும் கூறியுள்ளன; நம் இலக்கியங்களும் பேசியுள்ளன.

ஒருங்கிணைப்பாளர் 

“உணர்வுக்கும் கற்பனைக்கும் தலைமையிடம் தந்து அமைவன இலக்கியங்கள்; சிந்தனைக்கும் அறிவுக்கும் முதலிடம் தந்து தொகுக்கப்படுவன நீதி நூல்கள், அறிவியல் நூல்கள் ஆகியன. சமுதாயத்தில் வாழும் மனிதனுக்குரிய எல்லாச் சமுதாய ஒழுகலாறுகளையும் தனிமனித வரையறை களையும் விரித்து விளக்கி, தொகுத்து வகுத்துக்கூற வேண்டியவை அறநூல்கள். இந்த நீதி நூல்கள் சான்றோர் சிந்தனையிலும் தோன்றலாம்; சமூக நலனுக்காக நாளடைவில் உருவான பழக்க வழக்கங்களாலும் அமையலாம். இவை வாய்மொழி களாகவே தொடர்ந்ததால் பழமொழிகள், மூதுரைகள் என அழைக்கப்படுகின்றன.

திருக்குறளுக்கெல்லாம் முற்பட்ட நம் சங்க இலக்கியங்களில், ஆங்காங்கு அறநெறி முறைமைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன.

“அறநெறி இதுவெனத் தெளிந்த” என ஐங்குறுநூறும்,

“அறங்கடைப்பட்ட வாழ்க்கை” என அகநானூறும்,

“அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்” எனப்

பொருநராற்றுப்படையும்

என ஒரு புலவர் ஆதாரச் சீட்டுடன் படிக்கத் தொடங்கி விடவே அவரை இடைமறித்த ஒரு கல்லூரிப் பேராசிரியர்,

“அதுதான் எல்லோரும் நன்கறிந்த புறநானூற்றுப் பாடலில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் போற்றத்தகும் வாழ்க்கை முறையாகச் சொல்லப்பட்டு விட்டதே? அதைத்தானே செங்கல் அடுக்குப் போலத் தாங்கள் படித்துக் காட்டிய ஆதாரங்களும் வலியுறுத்துகின்றன.”

ஓர் அன்பர்

“ஐயா செங்கல் அடுக்கு என்றதும் நம் தவத்திரு அடிகளார் ஆற்றிய அருளுரை ஒன்று நினைவில் மறிக்கிறது. அதைச் சொல்ல நிலா முற்ற அன்பர்கள் சற்றே அனுமதிக்க வேண்டும்.”

ஓர் இடைக்குரல்

“ஐயா ஏதோ செங்கல் கட்டுமானம் பற்றிப்  பேசுகிறார், கேளுங்கள்.”

முன்னவர் தொடர்கிறார்

“ஆயிரமாயிரம் செங்கற்கள் குவிந்து கிடந்தாலும் தாமாக அவை கட்டிடமாவது இல்லை! அவற்றை நூல் பிடித்து அளந்து முறையாக அடுக்கிச் சந்து பதிந்தால்தான், சுவரை எழுப்ப முடியும். உடைந்த செங்கற்களையும் முழுச் செங்கற்களையும் இணைத்து, இடைவெளி ஏற்படும் இடங்களில் சுவரது தேவைக்கேற்றபடி முழுச்செங்கலையும் கையில் உள்ள பூசு கரண்டியால் உடைத்துப் போட்டுச் சந்துகளை நிரப்புகிறார்கள் கொத்தனார்கள். அது போல மனிதனும் தனது சொந்த மதிப்பையும் சுகத்தையும் குறைத்துக் கொண்டாவது சமுதாயமெனும் சுவரைக் கட்டிஎழுப்ப ஒத்துழைக்க வேண்டும். தானும் முன்வர வேண்டும். உடைந்த செங்கலையும் முழுச்செங்கல்லையும் இணைத்துக் கட்டிடத்தை எழுப்புவார் கொத்தனார்; சமுதாயத்தில் உள்ள வலிமையுடையவர்களையும் வலிமை அற்றவர் களையும் இணைத்து, ஒருசேர வளர்ச்சி வலிமை நோக்கிக் கூட்டிச் செல்லுபவரே சமுதாயத் தலைவர்; சரியான வழிகாட்டி.”

“அதைத்தானே ஐயா அரசியலிலும் சமதர்மம்எனப்புதுப் பெயரிட்டுச் சொல்லுகிறார்கள். பொதுவுடைமை எனப் போதிக்கிறீர்கள்..!” என இடைச்செருகலானார், ஒரு கல்லூரிப் பொருளாதாரப் பேராசிரியர்; ஒருங்கிணைப்பாளர் கருத்துத் தொடர்ச்சியை இட்டு நிரப்பினார்.

ஒப்புரவு ஒப்பற்றது

‘சோசியலிசம்’ என்ற ஆங்கிலச் சொல் விருப்பு வெறுப்புக்களைக் கடந்து, உள்ளம் ஒன்றிப் பழகும் பண்பாட்டைக் குறிப்பதாகும். சமுதாயத்தையே நேசிக்கும் நெறியைப் போற்றுவது ஆகும். இதைத்தான் வள்ளுவர் ‘ஒப்புரவு’ எனக் குறிப்பிடுகிறார். நம்மோடு உள்ள மற்றவர்களோடு சேர்ந்து பழகும்போது அப்படிச் சேர்ந்து வாழ்வதனால் ஏதேனும் இடர்களோ, கேடுகளோ விளையுமானாலும் அவற்றைக் கூடுதல் பொறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே  வலியுறுத்துகிறார்.

‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’ என்கிறார் வள்ளுவர். ‘ஒத்தது அறிதல்’ என்பதற்குப் பொருள் மற்றவர்களுக்கும் ஏற்புடையதைப் புரிந்து கொண்டு பழகுதல் என்பதுதான். அப்படி மற்றவர்களுக்கும் ஒத்ததை அறிந்து இணங்கி விட்டுக்கொடுத்து வாழ முனைவதுதான் உண்மையிலேயே நாம் உயிர்வாழ்தல் எனப்படும்.”

உடன்பாட்டோடு தொடரும் திருக்குறள் பேரவையின் அன்பர் ஒருவர் கூறுவது:

“அதாவது பழகிய நண்பரிடத்துக் குற்றம் கண்டாலும் பொறுத்துக் கொள் என்கிறார் வள்ளுவர். மனிதனையும் மனிதனையும் இணைத்துச் சமுதாயம் எனும் கட்டிடத்தை உருவாக்க இப்பொறுமைப் பண்பு, பெருமிதச் சால்பு மிகவும் அவசியம் என்பதே அவர் கூறும் ஆக்கநெறி.”

ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்

“நாகரிகம் என்பதற்கே புதியதொரு விளக்கம் அறிவித்தவர் வள்ளுவர் என்பதை அறிவோம். நண்பர் ஒருவர் நஞ்சு கலந்த பானத்தைக் கொடுத்தாலும் அதை வாங்கிக் குடித்துவிடு; நஞ்சு கலந்தது என்று அஞ்சாமல் பருகிவிடு என்று கூறுகிறார்.”

 

 

 

ஓர் அன்பர்

“ஏனய்யா அப்படிச் சொன்னார்…?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவரின் இந்தக் கருத்து சங்க இலக்கியத்தில் உண்டு; பின்னர் வந்த பெரிய புராணத்தில் ‘தத்தா நமர்’ என்று தொழுத கையுள் படையொடுங்கிடக் கண்டும் பண்போடு சாகும் முன் அன்போடு மன்னித்த மன்னன் வரலாற்றில் உண்டு.”

 

இடையே ஒருவர்

“சாக்ரடீஸ் கதையும் அப்படித்தான். அதைத்தான் வள்ளுவர் முன்பே வலியுறுத்தினார்.”

“நஞ்சு கலந்தது என்று நன்கு தெரிந்தும் தெரியாதவர் போல, அந்த நினைப்பிற்குள் சிக்காமலே பருகி விடு என்கிறார். நஞ்சு கலந்தது என நாம் நினைத்தால் நமது முகத்தில் மரணக்குறி படரத் தொடங்கும். நஞ்சு கலந்தது என்பதைத் தெரிந்து கொண்டோமோ என அதைக் கலந்து வைத்த நண்பர் உணர்ந்தால் அவர் அஞ்சுவார் அல்லது வருந்தி உளைச்சலுக்கு ஆளாவார். அந்த வருத்தத்தைக் கூட அவருக்குத் தரக்கூடாது என உறுதியாயிருக்க வேண்டுமாம். அதனால் என்ன பயன்? நஞ்சு கலந்தது என்று நினைத்து அஞ்சாமல், வருவது வரட்டும் எனப் பருகி விட்டால், மரண பயத்தைக் கடந்தே துணிந்தால், அந்த நஞ்சு கூட ஒருவரைக் கொன்று விட முடியாது. தக்க சிகிச்சை பெறும்வரை நஞ்சையும் முறித்து உயிர் காக்க வல்லமை நெஞ்சத்தில் உறுதியாக நிலைகொள்ளும் என்கிறார். நஞ்சையும் அஞ்சாது பருகுவதால் அதைச் சற்றாவது முறிக்கும் வலிமை செங்குருதிக்கு உண்டாகி விடுமாம்.”

“ஆமாங்க, புலியடிச்சுச் சாகிறவனை விட கிலி பிடிச்சுச் செத்தவன்தாங்க அதிகம்” என ஒருவர் இடை மறிக்க, நிலா முற்ற அவையில் சிரிப்பு அலைகள் பரவின.

ஒரு சிவநெறிச் சீலர் நீறுபூசிய நெற்றி யுடையவராய்ப் பணிவோடு எழுந்தார், பகர்ந்தார்:

“அவையோரே… நம் அப்பர் சுவாமிகளுக்குக் கூட நஞ்சு கொடுக்கப்பட்டதைச் சேக்கிழார் பாடியுள்ளாரே?

அப்பர் அடிகள் நஞ்சுண்ட பின்னரும் சாகாமல் நமசிவாய மந்திரத்தையல்லவா உச்சரித்தார்?”

இன்னொருவர்

“அப்பரடிகள் போல நஞ்சுண்போர் எல்லாம் நமசிவாய மந்திரத்தால் மட்டும் பிழைத்துவிட்டால், அப்புறம் ஆஸ்பத்திரிக்கு ஆளைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய அவசியமில்லையே! நாமெல்லாம் அப்பரடிகள் போலவோ சாக்ரடீஸ் போலவோ இருந்துவிட முடியுமா..?”

மற்றொருவர்

“நாம் என்ன நஞ்சு சாப்பிடாமலா இருக்கிறோம்? இன்று நாம் உண்ணும் சாப்பாட்டில் கலப்படம்; நோய்க்குப் பருகும் மருந்தில் கலப்படம்; பல்துலக்கக் காலையில் உபயோகிக்கும் பற்பசை தொட்டு அனைத்திலும், நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை, ரசாயனக் கலவையை, தெரிந்தும் தெரியாமலே உட்கொண்டு எப்படியோ உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.”

ஓர் அன்பர்

“ஐயா தம் வீட்டில் மனைவி சமைத்துத் தரும் சாப்பாடு பிடிக்காமல் அப்படிச் சொல்லுகிறார் என நினைக்கிறேன்.”

(அவையில் சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர் தொடர்கிறார்

 

“இந்த விவாதத்தை வள்ளுவரின் குறளோடு அதாவது,

‘பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

 நாகரிகம் வேண்டு பவர்”      (580)

என்பதோடு தொடர்வோம். அன்பும் அருளும் இரண்டற இணைந்ததே அந்த நயத்தக்க நாகரிகம். அத்தகைய நல்வாழ்வு வேண்டும். அதை நாடும் மனமாவது வேண்டும் என்பதே குறள் முதலிய நம் நீதி நூல்களின் தொடர்ச்சியான உருவாக்கத் திற்கான காரணம் எனக் கருதலாம். வாழ்க்கையில் வழுக்கலும், இழுக்கலும் நேரிடும்போது ஊன்றுகோல் போல நின்று உதவுவனவே குறள் உள்ளிட்ட நமது நீதி நூல்கள். வீட்டிலும், நாட்டிலும் மனம் பண்பட்டதொரு நாகரிகம் மலர வேண்டும் என்பதே தமிழில் ஒரு தொடர் போலத் தொகுக்கப்பட்ட நீதி நூல் ஆக்கங்களுக்கான அடிப்படைக் காரணம். வேறு மொழி எதிலும் காணப்படாத புதுமை இது!”

(  தொடரும் )

குறள் நிலா முற்றம் – 2

குறள் நிலா முற்றம் – 2

 

 

ஒருங்கிணைப்பாளர் ( மணிமொழியன் )

 

“ஆம்… திருவள்ளுவர் என்றாலே அது வாழ்க்கை விளக்கம் என்பது அருமையான தலைப்பு! ஒரு தனி நபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்.. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட்பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ் நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு! ஒரு தனி நாட்டை விட, உலகு என்பது பெரியதல்லவா? அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதல்லவா?”

இடைமறித்த ஒருவர்

“அதனால்தான் ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ எனப் பாரதிப் புலவன் பாடிவிட்டானே….

நாட்டிலும் ‘உலகு’ என்பது பெரிது. அத்தகைய நூலை அளித்த ஒருவரை ஈன்றெடுத்த பெருமை தமிழ் நாட்டுக்கு உண்டு என்பதும் அருமையே!

திருக்குறளின் முதல் குறளான ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்பதிலிருந்து நூலின் இறுதி வரை, ‘உலகு’ என்ற சொல் மட்டுமின்றி, பொதுமைப் பொருளுணர்த்தும் சொற்களும், சொற்றொடர் களும் தக்க இடங்களில் எடுத்தாளப்படுகின்றன. இவையெல்லாம் தமிழில் எழுதப்பெற்றாலும், குறள் உலகுக்கெல்லாம் உரியதொரு பயன்பாட்டு நூல் என்றே இன்றளவும் உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.”

இடைமறித்து இன்னொரு குரல்

“நிலாமுற்றத்தில் கூடியுள்ள குறள் அன்பர்களுக்கு என் நினைவில் படரும் கருத்தொன்றை முன்வைக்க விரும்புகிறேன்…

திருக்குறள் எனும் நூலில் பொதிந்துள்ள வள்ளுவரின் உள்ளக் கிடக்கையைப் பல படக் கூறலாம். அவற்றுள் எல்லாம் உயிர்க்கூறாய், ஊடுசரமாய்த் துலங்குவது ஒன்று… அது ‘உலகம் ஒரு குலம்’ என்பது (அவையோர் கைதட்டுதல்)

எதிர்க்கேள்வி

“இக்கருத்தை உறுதியாகக் கொள்ள வள்ளுவர் உலகோடு எல்லாம் தொடர்பு கொள்ளும் அனைத்து வாய்ப்பினையும் அன்றே பெற்றிருந்தாரா?”

கலங்கரை விளக்கம்

பதில்: “அத்தகைய வாய்ப்புக்கள் பெரிதும் இருந்திருக்க முடியாது என்றாலும் உலகு தோன்றிய நாளிலிருந்தே, ஐந்திணைக் கூறுகளைப் பகுத்தறிந்து, பண்பாட்டு நலத்தில் படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்த தமிழகம், நினைப்பிற் கெல்லாம் எட்டாத நெடுங்காலந்தொட்டே அறிவுலக ஆய்வில் வேரூன்றி நின்ற தமிழகம், சங்க காலம் என வரலாற்றாசிரியர்களாலேயே வரையறுக்க முடியாத வேத காலத்தோடு ஒப்பிடத்தக்க பழமை நிலமான தமிழகம். உலகச் சிந்தனைகளை எல்லாம் கருக்கொள்ளும் பண்பட்ட நிலமாகவும் தலைநிமிர்ந்து விளங்கியது. முதன்மையும் தொன்மையும் கலந்து அமைந்த பழந்தமிழகத்தில் உலக வாழ்க்கைக் கூறுகளும் கலந்தமையலாயின. இயல்பாகக் கருக்கொண்ட சிந்தனைகளும், புதுப்புது வரவாக வந்து சேர்ந்த எண்ணங்களும் வள்ளுவர் போன்ற அறிஞர் களுக்குப் புலனாயின. ஆகவே, அத்தகைய அறிஞர்களான சங்கப் புலவர்கள், வள்ளுவப் பெருந்தகை ஆகியோரிடம் ‘மக்கள் எல்லாம் ஒரு குலம்; மாநிலமெல்லாம் ஒரே வீடு’ எனும் சிந்தனைகள் மேவலாயின. அவை மலர்ந்து வாழ்வுக்கு வழிகாட்டி ஒளியூட்டும் அறநெறி விளக்குகளாக ஒளி வழங்கலாயின. அவற்றுள் திருக்குறளே தலையாய கலங்கரை விளக்கம் ஆயிற்று. அதுவே நம் நாடு மட்டுமன்றி, பிற நாட்டுப் பேரறிஞர்களாலும் வியந்து ஏற்கப்பட்டு பல்வேறு சமுதாய, அரசியல், அறிவியல் சித்தாந்தங்களாகப் பூக்கலாயிற்று. இன்றைய சமுதாய விஞ்ஞானங்களாகக் கருதப்படும் மார்க்சியம், காந்தியம், உலோகாயதம், உலகமயம், நாட்டுமயம், தனியார்மயம் என்றெல்லாம் எண்ண மலர்கள் பலப்பலப் பாத்திகளில் பூத்திட்டாலும், விஞ்ஞான மார்க்சியமும் தெய்விகக் காந்தியமும் போல, மனித நேய வள்ளுவமே உலகுக் கெல்லாம் நிலையான வாழ்வு மணமூட்டும்’ என்பார் தமிழ் முனிவர் திரு.வி.க.”

இடைமறிக்கும் வினா ஒன்று

“உலகு ஒரு குலம் எனும் உயிர்ப்பான வித்து திருக்குறள் என நாம் ஒரு வாதத்திற்காகவோ பெருமைக்காகவோ ஏற்றுக்கொண்டாலும் அந்த நல்வித்து நிலத்திற்குள்ளேயே புதைந்து கிடக்குமா அல்லது முளைத்தெழுந்து விரிந்த மரமாகி, நீடு நிழல் பரப்புமா…?”

ஒருங்கிணைப்பாளர் பதில்

“உலகம் ஒரு குலம் ஆதல் வேண்டும் என்றெல்லாம் பேசுவது எளிது; எழுதுவதும் எளிது. அதே சமயம், பேச்சும், எழுத்தும் செயலாதல் வேண்டும் அல்லவா?

அப்படியானால்…?

பேச்சைச் செயலாக்க வல்லதொரு கருவி வேண்டும்; அந்தக் கருவியும் நம் கைவசமே உள்ளது என்கிறது வள்ளுவம். அந்த அரிய, ஆனால் மிக, மிக எளிய கருவியின் பெயர்… நமக்கெல்லாம் தெரிந்ததுதான்…

அதுதான் ‘அன்பு.’ உலகை ஒரு குலம் ஆக்குவதற்கென்றே அன்பு இயற்கையில் அமைந்துள்ளது. அந்த அன்பே வித்து – அந்த அன்பே வித்தை.

‘அன்பின் வழியது உயிர்நிலை, அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு’ என்பதே வள்ளுவத்தின் வாய்மை; வழிமுறை.

இந்த அன்பு எங்கும் உள்ளது; எதிலும் உள்ளது; அதன் மறுபெயரே வளர்ச்சி; அதன் பரிணாமமே உலக நேயம். அதைத்தான் ணிஸ்ஷீறீutவீஷீஸீ எனும் அற்புதச் சொல்லால், விஞ்ஞான அடிப்படையாக விரித்துரைக்கிறார்கள்.

இந்த அன்பெனும் வித்து விரைந்து வளரும் பக்குவமான, பண்பட்ட விளைநிலம் மக்கள் மனம். அறிவார்ந்த நம் மானுடப் பிறவி, பிற உயிர்களை விட விழுமியதாவது எப்போது? தன்னிடம் பொதிந்துள்ள அன்பு எனும் உணர்வினை, வளர்ச்சிக்கு உரியதொரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, பிற உயிர்களையும் பேண வேண்டும்.

‘அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

     தந்நோய் போல் போற்றாக் கடை’    (315)

என்று அன்று வள்ளுவர் சொன்னார்; அவருக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகட்குப் பின்னர் வந்த அடியவர்கள் ‘அன்பே கடவுள்’ எனப் போற்றினர்; அருட்பெருஞ் சோதியாக வந்த வள்ளலார்.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’

எனத் தனிப்பெருங் கருணை பெருகிட வழி காட்டினார். கிறித்துவ சமயத்தைத் தோற்றுவித்த இயேசுநாதர் ‘ஏழையர் இந்த உலகில் என்றென்றும் இருப்பார்கள்’ என வரையறுத்துக் கூறி, என்னதான் ஆட்சிமுறை மாறினாலும், பொருளாதாரத் திட்டங்கள் தீட்டினாலும் மனிதனின் உள்ளத்தில் பிறரையும் தன்னைப் போல நேசிக்கும் அருளாதாரம் என்றென்றும் இவ்வுலகில் முன்னிடம் பெறவேண்டும் என்றார்.”

(  தொடரும் )