குறள் நிலா முற்றம் – 2

குறள் நிலா முற்றம் – 2

 

 

ஒருங்கிணைப்பாளர் ( மணிமொழியன் )

 

“ஆம்… திருவள்ளுவர் என்றாலே அது வாழ்க்கை விளக்கம் என்பது அருமையான தலைப்பு! ஒரு தனி நபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்.. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட்பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ் நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு! ஒரு தனி நாட்டை விட, உலகு என்பது பெரியதல்லவா? அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதல்லவா?”

இடைமறித்த ஒருவர்

“அதனால்தான் ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ எனப் பாரதிப் புலவன் பாடிவிட்டானே….

நாட்டிலும் ‘உலகு’ என்பது பெரிது. அத்தகைய நூலை அளித்த ஒருவரை ஈன்றெடுத்த பெருமை தமிழ் நாட்டுக்கு உண்டு என்பதும் அருமையே!

திருக்குறளின் முதல் குறளான ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்பதிலிருந்து நூலின் இறுதி வரை, ‘உலகு’ என்ற சொல் மட்டுமின்றி, பொதுமைப் பொருளுணர்த்தும் சொற்களும், சொற்றொடர் களும் தக்க இடங்களில் எடுத்தாளப்படுகின்றன. இவையெல்லாம் தமிழில் எழுதப்பெற்றாலும், குறள் உலகுக்கெல்லாம் உரியதொரு பயன்பாட்டு நூல் என்றே இன்றளவும் உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.”

இடைமறித்து இன்னொரு குரல்

“நிலாமுற்றத்தில் கூடியுள்ள குறள் அன்பர்களுக்கு என் நினைவில் படரும் கருத்தொன்றை முன்வைக்க விரும்புகிறேன்…

திருக்குறள் எனும் நூலில் பொதிந்துள்ள வள்ளுவரின் உள்ளக் கிடக்கையைப் பல படக் கூறலாம். அவற்றுள் எல்லாம் உயிர்க்கூறாய், ஊடுசரமாய்த் துலங்குவது ஒன்று… அது ‘உலகம் ஒரு குலம்’ என்பது (அவையோர் கைதட்டுதல்)

எதிர்க்கேள்வி

“இக்கருத்தை உறுதியாகக் கொள்ள வள்ளுவர் உலகோடு எல்லாம் தொடர்பு கொள்ளும் அனைத்து வாய்ப்பினையும் அன்றே பெற்றிருந்தாரா?”

கலங்கரை விளக்கம்

பதில்: “அத்தகைய வாய்ப்புக்கள் பெரிதும் இருந்திருக்க முடியாது என்றாலும் உலகு தோன்றிய நாளிலிருந்தே, ஐந்திணைக் கூறுகளைப் பகுத்தறிந்து, பண்பாட்டு நலத்தில் படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்த தமிழகம், நினைப்பிற் கெல்லாம் எட்டாத நெடுங்காலந்தொட்டே அறிவுலக ஆய்வில் வேரூன்றி நின்ற தமிழகம், சங்க காலம் என வரலாற்றாசிரியர்களாலேயே வரையறுக்க முடியாத வேத காலத்தோடு ஒப்பிடத்தக்க பழமை நிலமான தமிழகம். உலகச் சிந்தனைகளை எல்லாம் கருக்கொள்ளும் பண்பட்ட நிலமாகவும் தலைநிமிர்ந்து விளங்கியது. முதன்மையும் தொன்மையும் கலந்து அமைந்த பழந்தமிழகத்தில் உலக வாழ்க்கைக் கூறுகளும் கலந்தமையலாயின. இயல்பாகக் கருக்கொண்ட சிந்தனைகளும், புதுப்புது வரவாக வந்து சேர்ந்த எண்ணங்களும் வள்ளுவர் போன்ற அறிஞர் களுக்குப் புலனாயின. ஆகவே, அத்தகைய அறிஞர்களான சங்கப் புலவர்கள், வள்ளுவப் பெருந்தகை ஆகியோரிடம் ‘மக்கள் எல்லாம் ஒரு குலம்; மாநிலமெல்லாம் ஒரே வீடு’ எனும் சிந்தனைகள் மேவலாயின. அவை மலர்ந்து வாழ்வுக்கு வழிகாட்டி ஒளியூட்டும் அறநெறி விளக்குகளாக ஒளி வழங்கலாயின. அவற்றுள் திருக்குறளே தலையாய கலங்கரை விளக்கம் ஆயிற்று. அதுவே நம் நாடு மட்டுமன்றி, பிற நாட்டுப் பேரறிஞர்களாலும் வியந்து ஏற்கப்பட்டு பல்வேறு சமுதாய, அரசியல், அறிவியல் சித்தாந்தங்களாகப் பூக்கலாயிற்று. இன்றைய சமுதாய விஞ்ஞானங்களாகக் கருதப்படும் மார்க்சியம், காந்தியம், உலோகாயதம், உலகமயம், நாட்டுமயம், தனியார்மயம் என்றெல்லாம் எண்ண மலர்கள் பலப்பலப் பாத்திகளில் பூத்திட்டாலும், விஞ்ஞான மார்க்சியமும் தெய்விகக் காந்தியமும் போல, மனித நேய வள்ளுவமே உலகுக் கெல்லாம் நிலையான வாழ்வு மணமூட்டும்’ என்பார் தமிழ் முனிவர் திரு.வி.க.”

இடைமறிக்கும் வினா ஒன்று

“உலகு ஒரு குலம் எனும் உயிர்ப்பான வித்து திருக்குறள் என நாம் ஒரு வாதத்திற்காகவோ பெருமைக்காகவோ ஏற்றுக்கொண்டாலும் அந்த நல்வித்து நிலத்திற்குள்ளேயே புதைந்து கிடக்குமா அல்லது முளைத்தெழுந்து விரிந்த மரமாகி, நீடு நிழல் பரப்புமா…?”

ஒருங்கிணைப்பாளர் பதில்

“உலகம் ஒரு குலம் ஆதல் வேண்டும் என்றெல்லாம் பேசுவது எளிது; எழுதுவதும் எளிது. அதே சமயம், பேச்சும், எழுத்தும் செயலாதல் வேண்டும் அல்லவா?

அப்படியானால்…?

பேச்சைச் செயலாக்க வல்லதொரு கருவி வேண்டும்; அந்தக் கருவியும் நம் கைவசமே உள்ளது என்கிறது வள்ளுவம். அந்த அரிய, ஆனால் மிக, மிக எளிய கருவியின் பெயர்… நமக்கெல்லாம் தெரிந்ததுதான்…

அதுதான் ‘அன்பு.’ உலகை ஒரு குலம் ஆக்குவதற்கென்றே அன்பு இயற்கையில் அமைந்துள்ளது. அந்த அன்பே வித்து – அந்த அன்பே வித்தை.

‘அன்பின் வழியது உயிர்நிலை, அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு’ என்பதே வள்ளுவத்தின் வாய்மை; வழிமுறை.

இந்த அன்பு எங்கும் உள்ளது; எதிலும் உள்ளது; அதன் மறுபெயரே வளர்ச்சி; அதன் பரிணாமமே உலக நேயம். அதைத்தான் ணிஸ்ஷீறீutவீஷீஸீ எனும் அற்புதச் சொல்லால், விஞ்ஞான அடிப்படையாக விரித்துரைக்கிறார்கள்.

இந்த அன்பெனும் வித்து விரைந்து வளரும் பக்குவமான, பண்பட்ட விளைநிலம் மக்கள் மனம். அறிவார்ந்த நம் மானுடப் பிறவி, பிற உயிர்களை விட விழுமியதாவது எப்போது? தன்னிடம் பொதிந்துள்ள அன்பு எனும் உணர்வினை, வளர்ச்சிக்கு உரியதொரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, பிற உயிர்களையும் பேண வேண்டும்.

‘அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

     தந்நோய் போல் போற்றாக் கடை’    (315)

என்று அன்று வள்ளுவர் சொன்னார்; அவருக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகட்குப் பின்னர் வந்த அடியவர்கள் ‘அன்பே கடவுள்’ எனப் போற்றினர்; அருட்பெருஞ் சோதியாக வந்த வள்ளலார்.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’

எனத் தனிப்பெருங் கருணை பெருகிட வழி காட்டினார். கிறித்துவ சமயத்தைத் தோற்றுவித்த இயேசுநாதர் ‘ஏழையர் இந்த உலகில் என்றென்றும் இருப்பார்கள்’ என வரையறுத்துக் கூறி, என்னதான் ஆட்சிமுறை மாறினாலும், பொருளாதாரத் திட்டங்கள் தீட்டினாலும் மனிதனின் உள்ளத்தில் பிறரையும் தன்னைப் போல நேசிக்கும் அருளாதாரம் என்றென்றும் இவ்வுலகில் முன்னிடம் பெறவேண்டும் என்றார்.”

(  தொடரும் )

6483total visits,3visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>