அறமே ஆக்கம் தரும்

அறமே ஆக்கம் தரும்

 

உலகின் நலன்கள் அனைத்தும் – நேர்மை, தூய்மை, உண்மை, வாய்மை, மெய்ம்மை, சான்றாண்மை முதலான அனைத்துப் பண்புகளும் – அறம் எனப்படும். அறம் என்பதன் பொருள் ‘அற்றது’ என்பது ஆகும். உள்ளம் மாசு அற்றதாக இருத்தல், தன்னலம் அற்றதாக இருத்தல், பற்றற்றதாக இருத்தல் அனைத்தும் அறத்துள் அடங்கும். அறத்தில் அன்பும் அருளும் அடங்கும்.

‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்’ என்ற வள்ளுவர் இலக்கணம் மிகவும் நுட்பம் மிகுந்தது. அறத்திற்குச் செயல் திறம் வேண்டும் என்பதை வலியுறுத்தும் வரிகள் இவை. உள்ளொன்றும் புறமொன்றுமாகவும் இல்லாமல் அகமும் புறமும் தூய்மையுடன் ஒத்திருக்க வேண்டும். மனம் அழுக்கற்று, அவாவற்று, வெகுளியற்று, இன்னாச் சொல் அற்று இருக்க வேண்டும்.

தூய்மையான செயல் வேண்டும் என்றால் துணையாக நிற்பவை தூய்மையான மனமும், தூய்மையான சொல்லும் ஆகும். அறத்தின் செயல்நோக்கம் கருதி ‘அறவினை’ என்று குறிப்பிடுவார் வள்ளுவர். ஔவையும் ‘அறஞ்செயவிரும்பு’ என வள்ளுவர் வழிநின்று பேசுவார். இவைகளே, மெய்ம்மை, வாய்மை, உண்மை என வழங்கப்படுபவை. வாய்மை என்றால் கண்ணால் கண்டதைக் கண்டபடியே சொல்வதா? உள்ளத்தால் உணர்ந்ததை அப்படியே உரைப்பதா? அவ்வாறு கூறும் போது சில சமயம் பிறருக்குத் தீங்கு நேருமாயின் அது வாய்மையால் வந்த தீமை என்று கருதப்படும் அல்லவா? அப்படியாயின் வாய்மைக்கு இலக்கணம் என்ன?

வாய்மைக்கு அரியதோர் இலக்கணம் கூறுகிறார் வள்ளுவர். மற்ற மனிதர்களுக்கோ, உயிர்களுக்கோ தீங்கு செய்யாத சொற்களைச் சொல்வதெல்லாம் வாய்மை என்று சொல்லப்படும். நடந்ததைச் சொல்வது மட்டு மன்றிப் பிறருக்குத் தீங்கு நிகழாமல் நினைப்பதும் சொல்வதும் செய்வதும் வாய்மையாகும்.

“வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்

     தீமை இலாத சொலல்”        (291)

சில சமயங்களில் ஒரு பொய்யால் நன்மை விளைவதைப் பார்க்கிறோம். பொய் ஒன்று பேசி, அதனால் நன்மை விளைகிறதா? ஆராய்ந்து பார்க்கிறார் வள்ளுவர். முடிவாகச் சொல்கிறார், அப்பொய்யும் மெய்யைச் சார்ந்தது என்று. ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறார். அப்பொய் விளைவிக்கும் நன்மை களங்கமற்றதாய், கறையற்றதாய், குற்றமற்ற நன்மையைப் பிறருக்குத் தருமாயின் அப்பொய்யும் மெய்தான் எனப் பேசுகிறார், பொய்யாமொழிப் புலவரின் ‘பொய்ம்மையும்’ என்ற சொல் இங்கு நயமுடையது.

“பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

     நன்மை பயக்கும் எனின்”      (292)

நம் சான்றோர்கள் உண்மையை வணங்கி அதன் ஒளிச் சுடரினைப் பின்பற்றியவர்கள்; வாய்மையின் ஆற்றல் இறையாற்றல் என உணர்ந்தவர்கள். உலகங்கள் அனைத்திலும் அறிவாய், அனுபவங்களாய், உள்ளுணர்வுகளாய் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்கும் மெய்ம்மையே இறை எனக் கண்டவர்கள். உலக வாய்மையை உணர்ந்தவர்கள் உணர்வுடையவர்களாய் மகான்களாக, மகாத்மாக்களாக உயர்கின்றனர். அவர்கள் பெருமையை உணர்ந்து போற்றுகிறார் வள்ளுவர்.

பொய்ம்மை நீங்கிய உள்ளத்துச் சான்றோர்களை உலக மக்கள் தங்கள் உள்ளங்களை எல்லாம் காணிக்கை ஆக்கிப் போற்றிப் பாராட்டுவார்கள். என்றும் தம் உள்ளங்களில் நிலைநிறுத்திப் புகழ்வர் என்று பொய்யாமையின் சிறப்பைக் கூறுவார் வள்ளுவர்.

‘சத்யமேவ ஜயதே’ என்ற இந்தியக் குடியரசின் இலச்சினையும் ‘வாய்மையே வெல்லும்’ என்ற தமிழக அரசின் இலச்சினையும் வாய்மையின் சிறப்புக் கருதியே பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வுண்மைகள் நம் இதயத்தில் இடம் பெறவேண்டும்.

உடலின் புறத்தே படிந்த அழுக்குகள் தண்ணீரால் நீங்கிவிடும். சோப்புப் போன்ற வாசனைப் பொருள்களால் உடலை வாசமுறச் செய்யலாம். ஆனால் உள்ளத்தில் உள்ள அழுக்குகளை நீக்கிட உள்ளம் அறவொளியால் நிறைந்திட உதவும் ஆற்றலுடையது உண்மையே. உண்மை உள்ளழுக்கு களை நீக்கி, இருள் நீக்கும் ஒளி விளக்குப் போல் நெஞ்சின் இருள் போக்கி என்றும் உள்ளத்தை ஒளியுடையதாய் ஆக்கும்.

“புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை

     வாய்மையாற் காணப் படும்.”        (298)

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

     வாய்மையின் நல்ல பிற”       (300)

தாம் அறிந்த பேருண்மைகளில் தலையானது எனத் தம்மை முன்னிலைப்படுத்தி வாய்மையைப் போன்று பெருநன்மையும் நலமும் தரும் செயல் வேறொன்றும் இல்லை என அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறார் வள்ளுவர்.

மனத்தோடு வாய்மை மொழிந்து, சொல் வேறு, செயல் வேறு என்று மாறுபடாமல் உண்மையாளர்களாய், நல்ல அரிய செயல் செய்பவர்களால்தான் உலகம் வாழ்கிறது.

அறவாழ்வால் விளையும் நன்மைகள் என்ன? வாழ்வு துன்பம் இல்லாமல், சுமையாக இல்லாமல் மகிழ்வும் இனிமையும் மிக்கதாய் விளங்க வேண்டுமானால் வாழ்வு அறம் நிறைந்து இருக்க வேண்டும். செம்மையாகத் திருத்தப்பட்ட சிறந்த பாதையிலே பாதுகாப்புடன் செல்லும் துன்பமில்லாப் பயணம் போல் வாழ்வுப் பயணமும் பயமில்லாததாய்ப் பயன்மிகுந்ததாய்ப் பிறருக்கும் இவ்வறவாழ்வின் பயன் தந்து நலம் நல்கும். தீவினை வந்து தாக்கும் வாழ்வையும், பிறவியையும் தாண்டலாம். நீண்ட நிலைத்த புகழும், அமைதியும், அன்பும், இன்பமும் கொலுவீற்றிருக்கும்.

“சிறப்புஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊங்கு

     ஆக்கம் எவனோ உயிர்க்கு?”         (31)

“வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்

     வாழ்நாள் வழியடைக்கும் கல்”       (38)

அறத்திற்கு இணையானது அறமே. ஆகையால் அறத்தை மேற்கொள்வதே பாதுகாப்பானது. இயன்ற வழியெல்லாம் அறச்செயல் செய்து வரவேண்டும். ஆரவாரம் ஒழிந்து தூய்மை மிகுந்து உள்ளத்தில் ஒளி மிகுந்து வாழ்வில் இன்பமும், நிறைவும் மிகுதல் வேண்டும். உலகில் மக்கள் கள்ளால், மதுவால், காமத்தால், சூதால், ஆபாசத் திரைப்படங் களால் இன்பம் பெறுவதாக மயங்கித் திரிகின்றார்கள். இவையனைத்தும் நிலையில்லாத சிறுமை இன்பங்கள்; இறுதியில் துன்பத்தில் ஆழ்த்தி மனிதனை அழித்துவிடும் ஆகா இன்பங்கள்.

அறத்தால் வரும் இன்பம் தான் நிலையானது. செய்யத்தக்கது அறனே என்றும், நீக்கத்தக்கது பழியே என்றும் அறம் பாடினார் வள்ளுவர். அறத்தால் புகழும், அறமில்லாச் செயலால் பழியும் பாவமும் நிறையும். அறவொழுக்கம் உடையவர்களுக்கும் அற இயக்கங்களுக்கும் இன்று மதிப்புக் குறைந்து வருகிறது. அறனறிந்து மூத்த அறிவுடையோர் கேண்மை போற்றும் பண்பு தேய்ந்து வருகிறது. ஆரவாரம் மிக்கவர்கள் தீயவர்கள். காமம், வெகுளி, மயக்கங்கள் உடையவர்கள் பெருகி வருகிறார்கள். மக்களின் உணர்வுகளை மயக்கி ஆரவாரத்தால் போலிச் செல்வாக்கைப் பெருக்கி அவற்றை ஓர் ஆற்றலாக்கி, தகுதியற்றோர் எல்லாம் பெருமதிப்புப் பெற்றும், சான்றோர்கள் ஒதுக்கப்பட்டும் வரும் அவல நிலையும் மலிந்து வருகிறது.

“வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா

     யாக்கை பொறுத்த நிலம்”      (229)

என்கிறார் திருவள்ளுவர்.

ஆதலால் அறிஞர்களும் சான்றோர்களும் போற்றப்பட வேண்டும். தீது விரைந்து வளர்ந்தாலும் வளர்ந்த விரைவுக்கு ஏற்ப விரைந்து அழிந்து மறைந்துவிடும் என்பது உலக நியதி. ஆதலால் மக்கள் ஆரவாரங்களுக்கும் மயக்க உணர்வுகளுக்கும் ஆட்படாமல் துணிவோடும் நம்பிக்கையோடும் ஒற்றுமையோடும் அறநெறி போற்றி வாழ வேண்டும். வறுமையில் மிகப்பெரிய வறுமை சிந்தனை வறுமையும் நற்செயல் செய்யாத வறுமையும் ஆகும். அறவோர்கள் துணிவு மிக்கோராய், வலிமையான அமைப்புகளின் துணைகொண்டு அறநெறிகள் தழைத்தோங்கப் பாடுபட வேண்டும். அறமே ஆக்கம் தரும், நீண்ட நிலைத்த இன்பத்தையும் புகழையும் அமைதியையும் தரும் என்ற உண்மைகளை உணர்த்த வேண்டும்.

“திருந்திய நல்லறச் செம்பொற் கற்பகம்

     பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால்

     வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஓம்புமின்

     கரும்பெனத் திரண்ட தோள்கால வேல்கணீர்”

(சீவக சிந்தாமணி)

“திருவும் இன்பும் சிறப்பும் புகழுமற்று

     ஒருவர் ஆக்கலும் நீக்கலும் உள்ளவோ?

     மருவும் புண்ணிய மாந்தர்க்கு அவைஎலாம்

     தருமம் இன்றெனில் தாமே சிதையுமால்”

என்ற இவ்வுண்மைகள் அனைத்தும் உணர்த்தி, துன்பம் உறவரினும் இன்பம் பயக்கும் வினைகளைத் துணிவுடன் ஆற்ற வேண்டும், ஊக்கமுடன் நல்லறச் செயல்கள் செய்ய வேண்டும் என்னும் உறுதி மக்களிடையே பரவ வேண்டும். மதுரை மாநகரில் முத்தமிழ் வளர்க்கும் இத்தமிழ் இசைச் சங்கமும் இயன்ற வகையெல்லாம் முத்தமிழால் அறநெறிகள் செழித்தோங்கிட அறமே ஆக்கம் தரும் என்ற உண்மையை உலகெலாம் பரப்பிட உறுதுணை நல்க வேண்டும்.

“இன்றுகொல்? அன்றுகொல்? என்றுகொல்? என்னாது

     பின்றையே நின்றது கூற்றமென்று எண்ணி

     ஒருவுமின் தீயவை; ஒல்லும் வகையால்

     மருவுமின் மாண்டார் அறம்”        (நாலடியார்.136)

“அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க; மற்றுஅது

     பொன்றுங்கால் பொன்றாத் துணை”         (36)

“அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

     பெருமை முயற்சி தரும்”            (611)

என்னைச் செதுக்கிய திருக்குறள் – பாகம் 3

Image result for காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்

ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் சமயத்தில் எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைச் சொல்கிறார் திருவள்ளுவர். இங்கே அவர் ஒரு பெரிய உண்மையைக் கூறுகிறார்.

உனக்குச் சொந்தக்காரர், மனைவிக்குச் சொந்தக்காரர், நண்பருக்குச் சொந்தக்காரர் என்று நினைக்காதே. அவருக்கு உதவி செய்வது வேறு விஷயம். இந்தத் தொழிலுக்கு இவர் தகுதியானவரா என்று மட்டும் பார். அப்படி இல்லையென்றால் அந்தத் தொழில் அழிந்துவிடும். வாழ்நாள் முழுவதும் துயரம் தரும்.

காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்

     பேதமை எல்லாம் தரும்”       (507)

ஒரு காரியத்தைத் திட்டமிடுவதற்கு, ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன் அதன் லட்சியம் என்ன? அந்த லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகள் யாவை? அந்த வழிமுறைகளுக்கு வரக்கூடிய இடையூறுகள் என்ன? அந்த இடையூறுகளை வெல்லுவதற்கு உரிய வழிமுறைகள் எவை? இவையெல்லாம் வெற்றி பெற்ற பின்பு உனக்குக் கிடைக்கக்கூடிய விளைவு (ரிசல்ட்) என்ன?

“முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

     படுபயனும் பார்த்துச் செயல்”              (676)

ஒரு தொழிலை ஆரம்பித்திருக்கிறோம் என்றால் என்ன நோக்கத்திற்காக ஆரம்பித்துள்ளோம், அதற்கு என்ன லாபம் கிடைக்கும், இதற்கு இடையில் வரக்கூடிய இடையூறுகள் எவை, அவற்றை வெல்லுவதற்கு உரிய வழிகள் என்ன, இவைகளை எல்லாம் வென்ற பின்பு கடைசியில் உனக்கு லாபம் கிடைக்குமா? நட்டம் வருமா? இலாபம் கிடைத்தால் செய், இல்லை என்றால் விட்டுவிடு. என்று நன்கு ஆராய்ச்சி செய்யச் சொல்கிறார். அந்தத் தொழிலுக்கு எனத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மிகச் சிறந்தவர் களாக இருக்க வேண்டும் என்கிறார்.

“தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

 அரும்பொருள் யாதொன்றும் இல்”        (462)

அவ்வாறு தேர்ந்தெடுத்தவரைச் சூழ்ந்து ஆலோசனை பெறவேண்டும்… நீதான் தொழிலதிபர் என்று நினைக்காதே அந்தத் துறையில் சிறந்தவரைக் கூப்பிட்டு ஆராய்ந்துபார் அதற்குப் பிறகு முடிவெடு, துணிவு கொள். அந்தத் துணிவை மிக விரைந்து செய். இல்லாவிட்டால் பயன் இல்லாமல் போய்விடும். என விளைவு பற்றிப் பேசுகிறார் வள்ளுவர்.

“சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல்; அத்துணிவு

 தாழ்ச்சியுள் தங்குதல் தீது”                (671)

இதைச் செய்து முடித்தபிறகு வெற்றிபெற்று விட்டோம் என்று ஆனந்தமாய் இருந்துவிடாதே. மேலும் மேலும் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும். வெற்றி பெற்று விட்டோம் என்று சும்மா இருந்து விடக்கூடாது.

“இறந்த வெகுளியின் தீதே சிறந்த

 உவகை மகிழ்ச்சியிற் சோர்வு”       (531)

“சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

 நிலத்தறைந்தான் கைபிழையா தற்று”  (307)

கோபம் கொண்டவன் அழிந்து போய்விடுவான். அதுபோல வெற்றி பெற்று விட்டோம் என்று சும்மா இருந்தால், மேலும் மேலும் செய்யாது சோர்ந்திருந்தால் நீ தோற்றுப்போய் விடுவாய். தொடர்ந்து சோர்வில்லாமல் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒன்றைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால் 60 மைல் ஓடிக்கொண்டே இருந்தால்தான் 40 மைலைக் காப்பாற்ற முடியும் என்று தன்னம்பிக்கையை ஊட்டுகிறார் இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. அது போல காரியம் செய்கின்றபோது,

“கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக்கொட்கின்

 எற்றா விழுமம் தரும்”             (663)

என்கிறார். செய்யப் போகின்றதைப் பற்றி, ஒரு காரியத்தை உடனே வெளிப்படுத்தி விடக்கூடாது. அப்படி வெளியிட்டு விட்டால் தோற்றுப்போய் விடுவார்கள். பகைவர்களும், போட்டியாளர்களும் உத்தியைத் தெரிந்து கொண்டு தோற்கடித்து விடுவார்கள். அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். ஒன்று செய்கின்ற சமயத்திலே மிக ரகசியமாகத் திட்டமிட்டு அக்காரியம் முடிந்த பிறகே வெளிப்படுத்த வேண்டும் அதுதான் ஆண்மை என்று சொல்கிறார் வள்ளுவர்.

ஒருவகைப் புல் உண்டு. அதனைப் போட்டுவிட்டால் மண்ணுக்கு அடியிலேயே மிகச்சிறப்பாக வளர்ந்து திடீரென வெளிப்படும். மிகச்சீரிய காரியங்களைச் செய்யும் போது கடைசிவரை அதனை வெளிப்படுத்தக் கூடாது என்று சொல்கிறார் வள்ளுவர். மிக வியப்பாக இருக்கிறது. இப்பொழுது உள்ள தொழில்நுட்பத் திறன் பற்றி எல்லாம் திருவள்ளுவர் அன்றே சிந்தித்து இருக்கிறார். லேண்ட், லேபர், கேப்பிட்டல், டைம் என்ற கான்ஸப்ட் பற்றி எல்லாம் சொல்லி இருக்கிறார்.

Image result for thirukkural

“பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்

     இருள்தீர எண்ணிச் செயல்”          (675)

ஒரு காரியத்தைச் செய்வதற்கு, செயலுக்குத் தேவைப்படுகின்ற ஒரு மனிதனின் அளவுகோல் எது? குலச்சிறப்பு வேண்டாம், படித்திருக்க வேண்டாம், பட்டம் பெற வேண்டாம். ஆனால் அவன் நல்ல எண்ணத்தோடு, நல்லதைக் கேட்டுச் செய்து விடுவானானால் அவனால் முடியாதது என எதுவும் இருக்காது.

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

 செல்லும்வா யெல்லாம் செயல்”     (33)

“ஒல்லும் வாய்எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால்

 செல்லும்வாய் நோக்கிச் செயல்”     (673)

“ஓல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்

 செல்வார்க்குச் செல்லாதது இல்”     (472)

இது ஒரு திறன். இயன்றவரையில் எல்லாம், வகையில் எல்லாம், தொடர்ந்து தயங்காமல் காரியத்தைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.

எந்தக் காரியம் செய்தாலும் காலம் அறிந்து, இடமறிந்து செய்தால் வெற்றி பெறலாம். எது உன்னால் முடியும் என்று ஆராய்ந்து செய். முடியாததை நினைக்காமல் விட்டுவிடு.

“உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி

 இடைக்கண் முரிந்தார் பலர்”        (473)

உன் வலிமை எது என்பதைப் புரிந்து கொண்டு, அதனை நன்றாக ஆராய்ந்து, அதனில் கருத்தைச் செலுத்தி, மன வலிமையைச் செலுத்தி அந்தக் காரியத்தைச் செய்தால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை என்கிறார் வள்ளுவர் இது தன்னம்பிக்கை ஊட்டக் கூடியது. மிக வியப்பாக இருக்கிறது. அதுபோல ஒரு காரியத்தில் வெற்றி பெற்று விட்டாயானால் மற்றதில் எளிதாக வெற்றி பெறலாம். சினிமாக்காரர்கள் வருவதற்கு இதுதான் காரணம். அந்தத் துறையில் வெற்றிபெற்றவர்கள் மீண்டும் வந்து விடுவார்கள். என்ன காரணம் ஒரு காரியத்தைச் செப்பமாகச் செய்ததனால் மற்ற காரியங்கள் இயல்பாகச் செயல்படத் தொடங்கிவிடும். இதுதான் வினையாகச் செயல்படுவது.

ஒரு மதம் பிடித்த யானையை நன்றாகப் பழக்கி விட்டோமானால் அந்த யானையை வைத்து காட்டில் பல யானைகளைப் பிடித்துவிடலாம்.

“வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

 யானையால் யானையாத் தற்று”      (678)

‘மேனேஜிங் கான்சப்ட்’ குறித்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் என்றால் மிகப் பெரிய வியப்பாக இருக்கிறது.

என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியவர் எனது மாமனார் திரு.வி.கே.கே. கல்யாணசுந்தரம் அவர்கள். அவர்களைப் பற்றி அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். அவர் அதிகமாகப் படித்ததில்லை. ஆனால் அவர் வெற்றி பெற்றதற்குக் காரணம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. அதன் பிறகு விடாமுயற்சி, தன்னம்பிக்கை. பெரியோர்களின் ஆசி, இறைவன் திருவருள் இவையெல்லாம் அவரிடம் இருந்ததனால்தான் மிகப்பெரிய அளவில் உயர்ந்தார். திருவள்ளுவர் சொல்கிறார் வெறும் உழைப்பு மட்டும் போதாது. புத்திசாலித்தனமான உழைப்பாக இருக்க வேண்டும் என்கிறார்.

“ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்

 நீள்வினையால் நீளும் குடி.”         (1022)

“முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை

 இன்மை புகுத்தி விடும்.”      (616)

“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

 மெய்வருத்தக் கூலி தரும்.”          (619)

“அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

 பெருமை முயற்சி தரும்”      (611)

என்னால் செய்ய முடியுமா என்று அஞ்சி நிற்காதே. புறநானூற்றுப் புலவர் இதனை அழகாகச் சொல்வார். இதைச் செய்ய முடியுமா என்று அஞ்சிநிற்கும் கோழைகளே! உங்களுக்குச் சொல்கிறேன். யானை வேட்டைக்குச் செல்லுங்கள். யானை வேட்டை என்றால் யானையைப் போன்ற பெரிய இலட்சியத்தைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். யானை வேட்டைக்குச் சென்றால் யானையைப் பெற்றுவிடலாம். குருவி வேட்டைக்குச் செல்லாதீர்கள். சிறு இலட்சியத்தைத் தேடாதீர்கள். குருவி கிடைக்காமல் போகலாம். ஆகவே வாழ்கின்ற காலத்தில் கடுமையான முயற்சியுடன் உழைத்தீர்களேயானால் இந்தச் சமுதாயத்தில் நீங்கள் பெரும் பெருமையைப் பெறலாம்.

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றுஅது

     வேண்டாமை வேண்ட வரும்”  (362)

“கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

     மற்றுஈண்டு வாரா நெறி”       (356)

பிறவி இல்லாத வாழ்க்கை உங்களுக்கு முக்தியினைத் தந்திருக்கும். அதில் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் சொர்க்க லோக இன்பம் தரும். அதிலும் நம்பிக்கை இல்லை யென்றால் நீ வாழ்கிற காலத்திலே பெருமையுடையதாக வாய்த்திராது.

வானளவு உயர்ந்திருக்கும் இமயமலை அளவு நீ வாழலாம். கவிப்பேரரசு வைரமுத்து சொல்வது போல சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறலாம். வாழ்கின்ற காலத்திலே வேண்டியதை எல்லாம் கடுமையான முயற்சியும் உழைப்பும் இருந்து தொடர்ந்து பணியாற்றினால் வெற்றி பெறுவீர்கள். நான் அடிக்கடி மாணவர்களிடையே சொல்லுவது வழக்கம். எல்லா மாணவர்களும் கடைப் பிடிக்க வேண்டியது இதுதான்.

வாழ்க்கையிலே மிகப்பெரிய லட்சியம் இருக்க வேண்டும் நான்கு குற்றங்களை நீக்க வேண்டும்.

“நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

     கெடுநீரார் காமக் கலன்.”      (605)

ஒருவன் கெட்டுப் போக வேண்டும் என்று நினைத்து விட்டால் ஒரு கப்பல் இருக்கிறது. அதில் ஏறிக்கொள்ளலாம் காலம் தாழ்த்திச் செய்தல், மறந்து போதல், செய்யக் கூடியதை மறந்து விடுதல், தூக்கம், சோம்பல், சுறுசுறுப்பு இன்மை, சோம்பலில் இரண்டு சோம்பல் உண்டு. உடல் சோம்பல், மூளைச் சோம்பல் இந்த இரண்டையும் நீ விட்டுவிடு. காலம் தாழ்த்திச் செய்தல். மறந்து போதல், தூக்கம், சோம்பல் இந்த நான்கையும் விட்டுவிடு என்று வள்ளுவர் சொல்கிறார்.

முயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் நல்ல நேர்மை யுடனும் காரியம் ஆற்றுபவனுக்கு இறைவன் திருவருள் வாய்க்குமேயானால் அவன் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவான். அந்த வகையில் தான் எனது மாமனார் உள்ளுணர்வு மிக்கவராக இருந்தார். பெண்களுக்கும் சிந்தனையாளர்க்கும் அந்த ஆற்றல் மிகுதியாக இருக்கும். நான் அவரைப் பற்றிச் சொல்லும் பொழுது விரைவு பற்றிச் சொல்வேன். நாளைதான் செய்ய முடியும் என்ற காரியத்தை, வேலையை இன்றே அல்ல, நேற்றே முடித்திருக்க வேண்டும் என்று சொல்லுவார். விரைவு, துணிவு அப்படி ஒரு மிகப் பெரிய ஆற்றல் அவருக்கு இருந்தது. அவரை அறியாமலே அத்தகு ஆற்றல் அவருக்குக் கிடைத்திருக்கிறது. தன் குடும்பத்தை உயர்த்துவதாக இருந்தாலும் சரி, குடியை உயர்த்த வேண்டுமானாலும் சரி, நாட்டை உயர்த்த வேண்டுமானாலும் சரி அந்தப் பேராற்றல் அவருக்குத் துணை நின்றது.

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

     மடிதற்றுத் தான்முந் துறும்”          (1023)

ஒருவன் தன் குடியை உயரச் செய்வேன், நாட்டை உயரச் செய்வேன் என்று தனது கையை உயர்த்தி நிற்கையிலே தெய்வம் வேட்டியை இறுகக் கட்டிக் கொண்டு அவனுக்கு ஏவல் செய்யக் காத்திருக்கும்; தூணாக நின்று தாங்கி நிற்கும். இவ்வளவு தன்னம்பிக்கை ஊட்டியவர் திருவள்ளுவர். இந்த நூற்றாண்டில் இதைவிட வழிகாட்டுதல் வேறு எது வேண்டும்? இதுபோன்ற நிறையச் செய்திகளைச் சொல்லி வைத்திருக்கிறார் வள்ளுவர்.

இந்த அடிப்படையைப் பெற்றுக் கொண்டால் நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேறலாம். வாழ்க்கையில் அவசியமானது எது? பொருள் முக்கியம். போதும் என்ற மனமே பொன் செய்யும் என்று வள்ளுவர் சொல்லவில்லை நீ சமுதாயத்தில் உயர வேண்டும் என்று சொன்னால் பொருளாதாரத்திலே சிறந்து இருக்க வேண்டும் என்கிறார்.

“பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்

     பொருள்அல்லது இல்லை பொருள்”         (751)

பொருள் போல வலிமையுள்ளது வேறு எதுவுமில்லை. ஒன்றுமே லாயக்கில்லாதவனையும், மிகச்சிறந்த மனிதனாக்க வேண்டும் என்று சொன்னால் பொருளை சம்பாதி என்கிறார் வள்ளுவர். மேலும் பிறரது செருக்கை அழிக்க வேண்டும் என்றால் செல்வத்தை ஈட்டு என்கிறார்.

“செய்க பொருளை; செறுநர் செருக்கறுக்கும்

     எஃகுஅதனின் கூரியது இல்”         (759)

‘உன்னை உயர்த்திக் கொள்ள, உன் பகைவனுடைய செருக்கை அடக்கிட, மிகப்பெரிய செல்வத்தைச் செய்’ என்று கட்டளை இடுகிறார் வள்ளுவர்.

“பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்

     எண்ணிய தேயத்துச் சென்று”         (753)

அதுபோல ஒரு நாடு தன்னிறைவு பெற்ற நாடாக இருக்க வேண்டும் என்று சொன்னால் நிறைய உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இருள் என்பது அறியாமை, வறுமை இந்த வறுமையைப் போக்க வேண்டும் என்றால் சென்ற நாடெல்லாம் முயன்று பொருள் ஈட்டவேண்டும்.

“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

     தீதுஇன்றி வந்த பொருள்”           (754)

அருளை வளர்க்க வேண்டுமென்று சொன்னால் கூடப் பொருள் வேண்டும்.

“அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்

     செல்வச் செவிலியால் உண்டு” (757)

ஆகவே பொருள் தான் மிக முக்கியம். நியாயமான முறையில் பொருளை சம்பாதித்தாயானால் அதுதான் அன்பை வளர்க்கக் கூடிய அருளை வளர்க்கும் நீ வலிமை யுடையவனாக இருக்கலாம். பொருள்தான் உன்னை மதிக்கத்தக்கவனாக மாற்றும். ஆகவே பொருளாதார மேன்மை வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

ஒரு நாட்டினுடைய பெருமை எங்கிருக்கிறது என்று சொன்னால் தன்னிறைவு பெற்றதாக இருக்கிறது என்பதில் இருக்கிறது. யாரையும் நாடி நிற்கக்கூடாது. அந்த அளவுக்கு அந்த நாடு ஆற்றல் பெற்ற நாடாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஒரு நாடு வல்லரசாக முடியும். 2020-இல் வல்லரசு ஆக வேண்டுமென்று சொன்னால் பல வகையிலும் முயன்று வளத்தைப் பெருக்கி இந்நாட்டை நாம் உருவாக்க வேண்டும் எனக் கட்டளை இடுகிறார்.

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

     ஆராய்வான் செய்க வினை”          (512)

என்கிறார் வள்ளுவர். இவைகளெல்லாம் நடைமுறைச் சிந்தனைகள்.

வாழ்க்கையில் மனித நேயம் வேண்டும். அதை மிகச்சிறப்பாக வலியுறுத்துகிறார் வள்ளுவர். வாழ்கின்ற வாழ்க்கையின் பயன் எது? வாழ்க்கையின் பயனே பிறருக்கு உதவுவது தான்.

“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

     தந்நோய்போல் போற்றாக் கடை?”    (315)

இதில் அதிகமான நுட்பம் இருக்கிறது. அறிவைப் பெற்றதனால் என்ன பயன்? பிறருக்கு உதவுதல் தான். உதவுவது என்றால் ‘பார்டிசிபேசன் அண்டு இன்வால்வ் மென்ட்’. பிறருடைய துன்பத்தைத் தன்னுடைய துன்பமாக ஏற்றுக்கொண்டு அத்துன்பத்தில் பங்கெடுத்துக்கொண்டு அத்துன்பத்தின் கொடுமையை உணர்ந்து அவர்களுக்கு நன்மை செய்வோமேயானால் அதுதான் மனித நேயம்.

Image result for thirukkural

“பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

     தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”     (322)

மனித உயிர்களன்றி இந்த உலகத்தில் உள்ள ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை எல்லாவற்றையும் காக்க வேண்டியது நமது கடமை. இது நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாய அறமாகச் சொல்வது.

இராமலிங்க அடிகளார் மிகவும் அழகாகச் சொல்கிறார்.

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’

என்று. மிகப்பெரிய நேயம் என்று சொன்னால் அது மனித நேயம் தான். எத்துணையும் பேதமுறாது எல்லாவுயிரையும் நேசிக்கிறார் வள்ளலார்.

‘நான் தொண்டருடைய தாளைப் பணிய விரும்புகிறேன் தொண்டர் எப்படிப்பட்டவர்? அவர் சாதாரணமானவரில்லை. எல்லா உயிரையும் நேசிக்கிறவர். அவர் உள்ளத்திலே சிவபெருமான், தில்லை நடராசர் நடனம் ஆடுகிறார். அந்த அருளாளரைக் கண்டு அவர் தாளினைப் பணிய என் உள்ளம் விழைகிறது. யாரெல்லாம் சமுதாயத்தின் உயிர்களை நேகிக்கின்றாரோ அவரே என் இறைவன். அவரே என் தலைவன்’ என்று கூறுகிறார் வள்ளலார்.

மனிதராகப் பிறந்தவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். ஒரு பயன் இருக்க வேண்டும். பலரால் இந்த உலகம் வாழவில்லை ஒரு சிலரால்தான் இந்த உலகம் வாழ்கிறது. அந்த ஒருசிலரில் நாம் ஒருவராக இருக்க வேண்டும்.

இந்த உலகம் எதனால், யாரால் வாழ்கிறது என்றால் தனக்கென வாழாது பிறர்க்காக வாழும் ஒரு சிலரால் தான் வாழ்கிறது.

“உண்டால் அம்ம இவ்வுலகம்…

     தமக்கென முயலா நோன்தான்

     பிறர்க்கென முயலுநர் உண்மையானே”

“விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா

     மருந்துஎனினும் வேண்டற்பாற் றன்று” (82)

அமிழ்தமே கிடைத்தது என்றாலும் அதனைப் பகிர்ந்தளிப்பார்கள். இந்த உலகமே பரிசு என்று சொன்னாலும் பழிச்செயல்களைச் செய்ய மாட்டார்கள். புகழ் என்றால் தம் உயிரையும் கொடுப்பார்கள். உழைப்பார்கள்; கடுமையாக உழைப்பார்கள். பிறர்க்காக உழைப்பார்கள். அத்தகைய ஒரு சிலர் இருப்பதால்தான் இந்த உலகம் வாழ்கிறது. அதை அழகாக,

“பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அதுஇன்றேல்

     மண்புக்கு மாய்வது மன்”      (996)

என்கிறார் வள்ளுவர்.

நல்ல பண்புடையவர்களுடன் பொருந்தி இருப்பதனால் தான் இந்த உலகம் நிலைத்திருக்கிறது. இல்லையென்றால் இந்த உலகம் என்றோ அழிந்து போயிருக்கும் என்று சொல்கிறார் வள்ளுவர்.

எனது வாழ்க்கையில் நான் பல நூல்களைப் படித்திருந்தாலும்கூட திருக்குறள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. அதனால்தான் நாம் திருக்குறளை உலகப் பொதுமறையாகக் கொண்டிருக்கிறோம்.

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

     மறைமொழி காட்டி விடும்”         (28)

எனப் பேசுகிறோம். திருக்குறள் இந்தியாவின் தேசிய நூல் ஆக வேண்டும். இந்திய நாட்டின் தேசியப் பறவை மயிலாக இருக்கிறது, தேசிய விலங்கு புலியாக இருக்கிறது, தேசிய மலர் தாமரையாக இருக்கிறது, உலகமெல்லாம் போற்றக்கூடிய திருக்குறள் தேசிய நூலாக வேண்டாமா? அதற்கு நாமெல்லாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். சிந்தனையை ஒருங்கிணைத்துச் செயலாற்ற வேண்டும். ஒன்றை நினைத்து நினைத்துச் சிந்தித்துச் சிந்தித்து செய்து கொண்டிருந்தால் வெற்றியாகும். வெற்றி பெறுவதற்கு எது அடிப்படை என்று சொன்னால்,

“உள்ளிய எய்தல் எளிதுமன் மற்றும்தான்

     உள்ளியது உள்ளப் பெறின்”          (540)

என்றும்,

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

     திண்ணியர் ஆகப் பெறின்”           (666)

என்றும் அறுதியிட்டு உரைப்பார் வள்ளுவர்.

திருப்பித் திருப்பி அதை நினைப்போம் எல்லோரும் ஒன்றாக இணைந்து நினைப்போம்.

“அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

     நாடி இனிய சொலின்”        (96)

என்பது வள்ளுவர் வாக்கு.

என்னைப் பெருமைப்படுத்த எவ்வளவு பெரியவர்கள் வந்திருக்கிறீர்கள். இது எனக்குப் பெருமகிழ்ச்சி

இந்த உலகம் சிறப்பாக வாழ வேண்டும் என்று சொன்னால் ஒருமைப்பாடும், சகோதர நேயமும் இருக்க வேண்டும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்.’ இது ஒரு பெரிய தத்துவம்!

சான்றோர்கள் என்ன செய்வார்கள்? மிகப்பெரிய ஆற்றலுடையவர்களைக் கண்டு இது இயற்கைதானே என்று அவர்களைப் பற்றி வியக்கமாட்டார்கள் சரி கீழே இருப்பவர்களைக் கண்டு மோசமானவர்கள் என்று அவர்களை இகழ மாட்டார்கள்.

பெரியவர்கள் பெரியவர்களாக இருப்பது இயற்கை என்று கொண்டு, சிறியவர்கள் மீது இரக்கம் காட்டி நடந்து கொள்வார்கள். எனக்குச் சில சமயங்களில் இந்த சந்தேகம் வந்துகொண்டிருக்கும். எதற்காக அப்படிச் சொன்னார்கள் என்று மிகச்சிறப்பாகச் செய்யக் கூடியவர்களை உனக்கு இது இயற்கைதானே என்று வியக்க மாட்டார்கள். அதுபோல சிறியவர்களை இகழமாட்டார்கள். இவர்கள் இப்படித்தான் இருக்க முடியும் என்று நம்புவார்கள். இது சமநிலை. தன்னுடைய தவறுக்குத் தானே தான் காரணம். அதனைத் தீர்ப்பது உன்னைப் பொருத்தது. இந்த துன்பம் வந்ததற்குக் காரணம் வேறு ஒருவர் அல்ல. இந்தத் துன்பத்திற்குக் காரணம் நீதான். உன்னுடைய உழைப்புதான் அந்த துன்பத்தை நீக்க வேண்டும்.

“தீதும் நன்றும் பிறர்தர வாரா.”

வாழ்கின்ற காலத்திலே மிகச்சிறந்த நன்மைகளைச் செய்து வாழ வேண்டும்.

“அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க; மற்றுஅது

     பொன்றுங்கால் பொன்றாத் துணை”         (36)

பிரமிக்க வைத்த பிராங்க்பர்ட்!

Image result for frankfurt

 

சென்னையிலிருந்து பம்பாய் சென்று விமானத்தில் ஏறுவதாக இருந்த எங்கள் பயணத் திட்டம் மாறுதலுக்கு உள்ளாயிற்று. தொலைத் தொடர்பு வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் எல்லாம் விஞ்ஞான பூர்வமாக வளர்ந்து வருகின்றன; என்றாலும், விமானப் பயணம் மட்டும், கடைசி வினாடி வரை ஒற்றையா இரட்டையா போட்டுப் பார்க்கும் பந்தயமாகவே நீடிக்கிறது. சென்னையிலிருந்து நாங்கள் பம்பாய் செல்லவேண்டிய விமானம், எங்கோ பறந்து போய்விட்டது! எங்கள் வருகைக்காக பம்பாய் விமான நிலையத்தில் காத்திருந்த அன்பர்களை ஏமாற்றி விட்டு, நாங்கள் இங்கிருந்தே வேறு திசையில் பறக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னையில் இருந்து கொழும்பு போய்ச் சேர்ந்த நாங்கள் சிறிது நேரம் கூடத் தரை இறங்க அனுமதிக்கப்படவில்லை. எங்கள் விமானம் நேரடியாக நியூயார்க்கிற்குப் போகாதாம். மேற்கு ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் சென்று, அங்கு வேறு விமானத்தில் மாறிச் செல்ல வேண்டுமாம்….!

தன் நாட்டிலுள்ள பன்னாட்டு விமானத் தளத்தை நவீன வசதியுடையதாக்கும் முயற்சியில் ஒவ்வொரு நாடும் போட்டியிட்டு வருகிறது. கிழக்கே சிறந்த விமானநிலையம் எனும் பெயர் நிலைத்திட சிங்கப்பூர் அரசு நாள்தோறும் செய்து வரும் புதுமைகளைக் கண்டு அதிசயித்திருந்த எனக்கு, பிராங்க்பர்ட்டைப் பார்க்கும் வாய்ப்பு, இதோ வரப்போகிறது.

அமெரிக்காவின் கென்னடி விமான நிலையம், லண்டனில் ஹீத்ரு ஏர்போர்ட் – இந்த வரிசையில் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் முதன்மை பெற்று விளங்குகிறது. (புது தில்லி இந்திராகாந்தி விமான நிலையம் இந்த நிலையை எட்டிப் பிடிக்க எத்தனையோ ஆண்டுகள் ஆகக்கூடும்!)

பிராங்க்பர்ட் போய்ச் சேர்ந்தோம். அது கனவுலகம் போலக் காட்சியளித்தது. அந்த விமானத் தளம் தான் எத்தனை அழகு? எத்தனை பெரிது! ஒரே சுறுசுறுப்பும் பரபரப்பும். நம் ஊர்க்காரர்களைப் போல – எதையும் மெதுவாக- சாவதானமாகச் செய்ய அந்த நாட்டுக்காரர்களுக்குத் தெரியவில்லை.

ஆட்கள் மட்டும்தானா? விமானங்களும்தான் அவசரப்படுகின்றன. ஒரே சமயத்தில் பல விமானங்கள் தரை இறங்குகின்றன; பல விமானங்கள் இறக்கை விரிக்கின்றன. வெளி இரைச்சல் உள்ளே கேட்காதபடி பயணியர் தங்குமிடங்களைக் குளிர்பதன வசதியோடு சொகுசு மாளிகையாகச் சமைத்துள்ளார்கள். விமானத்தில் இருப்பதை விட விமான நிலையத்தில் இருப்பது அதிக மகிழ்ச்சி தருகிறது. ஜெர்மானியரின் திறமைக்கெல்லாம் எடுத்துக்காட்டு – பிராங்க்பர்ட் விமானத்தளம். ‘இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்’ எனத் திருவள்ளுவ மாலை, குறளுக்குச் சூட்டிய புகழாரத்தை அப்படியே இந்த நிலையத்திற்கும் சூட்டிவிடலாம்!

பிராங்க்பர்ட்டிலிருந்து நியூயார்க்கிற்குத் தொடர் பயணமாகப் புறப்பட வேண்டிய இணைப்பு விமானம் அங்கு வந்து சேரவில்லை. மறுநாள் தான் புறப்பட முடியும் எனச் சொல்லிவிட்டார்கள். பயணிகளை பிராங்க்பர்ட் நகரின் அழகிய பெரிய விடுதியில் தங்கவைத்தார்கள். டாக்சியில் நகரைச் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்திருந்தார்கள். தவிர்க்கவியலாத சில தாமதங்களால் வாழ்வில் நேரிடும் எதிர்பாராத நன்மைகளும் உண்டு என்பார்கள். ஜெர்மனியைச் சுற்றி ஒரு நாள் கண்ணோட்டம் விட எங்களுக்கும் அப்படி ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது.

சென்ற உலகப்போரின் தொடக்கத்தில் கையோங்கி நின்று முடிவில் தளர்ந்து தோற்ற நாடுகள் ஜெர்மனியும் ஜப்பானும். இவ்விரண்டும் மீண்டும் தலைதூக்கி வல்லரசு நாடுகள் ஆகிவிடா வகையில், போரில் வெற்றிபெற்ற நேச நாடுகள் பலவகையிலும் இவற்றை அமுக்கி வைத்தன. ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளும், அதனைத் தொடர்ந்த அழிவுகளும் ஜப்பானை நிர்மூலமாக்கி விட்டன. மேற்கு-கிழக்கு ஜெர்மனி என நாட்டைக் கூறு போட்டதோடு விடாமல், தலைநகர் பெர்லினுக்கு நடுவிலும் குறுக்குச் சுவர் எழுப்பி, இடைவிடாக் கண்காணிப்பின் மூலம் ஜெர்மனி மீண்டும் எழுந்து விடாமல் அடக்குமுறைகள் ஏவப்பட்டன. இவ்வாறு முற்றிலும் முடமாக்கப்பட்ட போதிலும் இந்த இரு நாடுகளும் விரைவில் புத்துயிர் பெற்று மீண்டும் விசுவரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டன. ஜெர்மனியை மறுபடியும் ஒரே நாடாக இணைத்துக் காணவும் பிளவுபடுத்திய பெர்லின் சுவரைத் தகர்த்துத் தள்ளவும் மக்கள் ஒருமனப்பட்டுப் போராடத் தொடங்கினர். சீனத்து நெடுஞ்சுவர் அந்த நாட்டின் புராதனப் பெருமை பேசுவது போல, எருசலேம் அமைதிச் சுவர் இஸ்ரேலிய மக்களின் செயலுறுதிக்கு ஊக்கம் தருவது போல, இடிபட வேண்டிய பெர்லின் சுவர் ஜெர்மானிய மக்களின் தங்கு தடையற்ற எதிர்கால வளத்திற்குக் கட்டியம் கூறிவந்தது.

அது பிராங்க்பர்ட் நகரின் வளர்ச்சியை, வளமான கட்டமைப்பைப் பார்க்கும்போதே நொடியில் புலனாயிற்று. மேற்கு ஜெர்மனிக்குப் பெருமைத் திலகமாக விளங்கும் பிராங்க்பர்ட், ஐரோப்பாவிலேயே பெரிய விமான நிலையம் எனப் பிரசித்தமாகி இருந்தது.

டாக்சியில் ஊரைச் சுற்றிவந்த ஒரு நாள் பொழுதிற்குள் நாங்கள் அறிந்த வியத்தகு விவரங்கள் இவை:-

எந்தப் பொருளின் விலைவாசியும் உயராத இடம் அது. நம்நாட்டில் அடிக்கடி உயரும் பெட்ரோல் கூட அங்கு அப்படி விலை உயர்வதில்லையாம்! பிராங்க்பர்ட்- கனரகத் தொழில் கேந்திரம் மட்டுமின்றி வங்கித் தொழில் மையமாகவும் விளங்குகிறது.

சர்வ தேச வங்கிகள் வரிசையாக அழைக்கும் ஒரு பெரிய வீதி. அதில் மூன்று நான்கு பர்லாங்கு தூரத்தை நடைபாதைக்காகவே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் கார் முதலிய வாகனங்கள் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை. மேலும் டிரைவர்கள் என ஒரு தனிவகைத் தொழிலாளர் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவரவர் கார்களை அவரவரே ஓட்டிக் கொள்கிறார்கள். வெளியூர்ப் பயணிகளுக்காகக் காரை ஓட்ட அமர்த்தப்பட்டுள்ள டிரைவர்கள் பழகும் விதம் நம் நெஞ்சைத் தொடுகிறது. உழைப்பும் கண்ணியமும் ஒன்று சேர்ந்துவிட்டால் ஒரு நாடு உயர்ந்தே தீரும் என்பதற்கு ஜெர்மனியில் நாங்கள் கண்ட ஒரு நாள் தரிசனமே போதுமானது!

Image result for frankfurt tamil

 

பிராங்க்பர்ட்டிற்குப் பிரியா விடை

பிராங்க்பர்ட்டைவிட்டுப் பிரிய மனமில்லாமலேயே மறுநாள் விமானத்தில் புறப்பட்டோம். அந்த விமானத்தில் லண்டன் சேர்ந்து அங்கிருந்த வேறொரு விமானத்தில் நியூயார்க்கிற்குப் போக வேண்டும்.

அது புகழ்பெற்ற பானம் (றிகிழிகிவி) விமானம். ராஜாளிப் பறவையைப் போன்ற எடுப்பான தோற்றத்தோடு இறக்கை விரித்து நிற்கும் அந்த விமானத்தைப் பார்ப்பதே ஆச்சரியமான ஓர் அழகு. அந்தச் சொகுசு விமானத்தில் ஏறியமர்ந்தவுடன் அமெரிக்க நாட்டைப் பற்றிய சிறு கையேட்டை ஒவ்வொரு பயணியின் இருக்கைப் பையிலும் வைத்திருந்தது கண்ணில் பட்டது; கருத்தை ஈர்த்தது.

உலகச் சுற்றுப் பயணம் என்பதை உல்லாசச் சுற்றுலாவாகக் கருதும் மனோபாவத்திலிருந்து விடுபட்டு, அதை அனுபவ ரீதியான அறிவு வளர்ச்சி தரும் கல்வியாக்கிட இத்தகைய துண்டுப் பிரசுரம் மிகவும் உதவுகிறது. பெரிய தொழில் நிறுவனங்களின் விளம்பர உதவியோடு வெளியிடப்பெறும் இப் பிரசுரங்கள், சென்று  சேரும் நாட்டைப் பற்றியதொரு சிறு செய்திக் களஞ்சியமாகவே விளங்குகின்றன.

அமெரிக்கா! இன்று எந்நாட்டவராயினும் அமெரிக்காவைப் பற்றிச் சிறிதளவேனும் கேள்விப்படாமல் இருக்கவே முடியாது. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் புதிய உலகமாகக் கண்டறியப்பட்ட இது. இன்று உலகையே ஆட்கொள்ளும் (ஆட்டி வைக்கும்!) அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வளர்ச்சிக்குப் பெரிதும் காரணம் எல்லையற்ற அதன் நிலப்பரப்பே ஆகும்; பொருளாதாரச் செழிப்பே ஆகும்.

“கிடக்கும் பெரிய கடல் கண்டாய் & இதன்

     கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா…”

என்று நம் பாரதிக் கவிஞன் நம் நாட்டு எல்லையைப் பாடியது ஒருவகையில் அப்படியே அமெரிக்காவுக்கும் பொருந்தும். நமது கிழக்கிலும் மேற்கிலும் பெரிய கடல்கள், அமெரிக்காவின் கிழக்கேயும் மேற்கேயும் மாபெரும் (பசிபிக் அட்லாண்டிக்) சமுத்திரங்கள்.

அமெரிக்கா எனும் மிகப்பெரிய கண்டத்தில் ஒரு பகுதிதான் அமெரிக்க ஐக்கிய நாடுகள். இதன் 50 மாநிலங்களில் தூரத்தே உள்ள ஹவாய்த் தீவுகளும், தொலைவில் உள்ள அலாஸ்க்கா பனிப்பிரதேசமும் அடங்கும். வடக்கே கனடா, தெற்கே மத்திய அமெரிக்க நாடுகள். 25 கோடி மக்கள் வாழும் இந்நாட்டவர் – பல்வேறு இன, மொழிக் கலப்பினர்கள். குடியேற்ற நாடாகத் தொடங்கிய அதைப் புகழ்க் கொடி வீசும் வல்லரசாக ஆக்கிய ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன், உட்ரோ வில்சன், ரூஸ்வெல்ட், ஐசன் ஹோவர். கென்னடி முதலிய அரசியல் மேதைகள், ஆட்சிப் பொறுப்பேற்று அகிலச் செல்வாக்குப் பெற்றதைக் கண்டு பெருமை கொண்டவர்கள்.

நமக்கும் அவர்களுக்கும் வரலாற்று ரீதியான இன்னொரு ஒற்றுமையும் உண்டு., கொலம்பசால் கண்டுபிடிக்கப்பட்ட இப்பெரிய நிலப்பரப்பில் இங்கிலாந்து நாட்டவரும் இதர ஐரோப்பிய நாட்டவரும் நாளடைவில் குடியேறினர். அப்படிக் குடியேறியவர்கள் ‘ஐக்கிய நாடுகள்’ எனும் பெயரில் 13 இராச்சியங்களை இங்கிலாந்து ஆட்சிக்கு உட்பட்டதாக அமைத்துக் கொண்டார்கள். வாஸ்கோட காமா ‘கண்டுபிடித்தபின்’ இங்கு வந்து வாணிப ஆட்சி புரிந்து, நயவஞ்சகத்தால் நம்மை அடிமைகொண்ட ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாம் சுதந்திரப் போரை நடத்துவதற்கு இருநூற்றாண்டுகளுக்கு முன்னரே இங்கிலாந்து ஆட்சிக்கு எதிராகச் சுதந்திரப் போர் நடத்தி வாகை சூடினர். ஐக்கிய நாடுகள், சுதந்திர அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆயின; ஜார்ஜ் வாஷிங்டன் முதல் ஜனாதிபதி ஆனார். அங்கு மீண்டும் ஓர் உள்நாட்டுச் சுதந்திரப் போர் உருவாயிற்று. நாட்டின் விவசாய, தொழில் வளர்ச்சிக்கெல்லாம் முதுகெலும்பாய் இருந்த நீக்ரோக்களை அடிமைகளாக நடத்திய மடமையை எதிர்த்துப் போர் மூண்டது. கடும் எதிர்ப்புகளை வென்று, ஆபிரகாம் லிங்கன், கருப்பர்களுக்கு விடுதலை வழங்கினார். அது போல, நம் நாட்டில் ஆண்டாண்டு களாய் ஒடுக்கி, ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்கள் சமூகச் சம நீதி கோரி இரண்டாம் உரிமைப் போர் நடத்துகின்றனர்.

“பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

     செய்தொழில் வேற்றுமை யான்”      (972)

என்ற ஆயிரமாண்டுக்கு முற்பட்ட சிந்தனையை நாம் இப்போதுதான் சட்ட முறைப்படி நடைமுறைப்படுத்த முற்பட்டுள்ளோம்.

ஆயிரக்கணக்கான மைல்தூரம் கடல் சூழ்ந்து தனித்திருந்த இப்பெரிய நிலப்பரப்பை ஐநூறு ஆண்டு களுக்கு முன் கண்டுபிடித்த கொலம்பஸ்தான் இந்தியாவையே கண்டுபிடித்து விட்டதாகக் கருதினார். அமெரிக்கோ வெஸ்ப்பூசியஸ் எனும் இத்தாலிய நாட்டாய்வாளர், இதைப் ‘புது உலகம்’ எனப் பின்னர் கண்டு அறிவித்தார். அவரது பெயரே அமெரிக்கா எனச் சூட்டப்பட்டது. அது முதல் அமெரிக்கா புது உலகம் மட்டுமாக அல்லாது – உலகிற்கு ஒரு புதிர் உலகமாகவும் விளங்குகிறது.

வேளாண்மைச் செழிப்பும் தொழில் மேம்பாடும் இந்நாட்டை என்றென்றும் புதுமை உலகாகப் பேணிவருவது ஒரு புறம் இருக்க, அந்நாட்டவரின் தொழில் நுட்பஅறிவும், தொய்வில்லாத கடின உழைப்பும் பிறநாடுகளுக்குச் சவால்விடும் புதிர் நாடாக மறுபுறத்தே நிலைநிறுத்தி வருகின்றன.

“பிறப்பால் அனைவரும் சமம். எத்தொழில் செய்தாலும் செருப்புத் தொழிலானாலும், சிகரெட் தொழிலானாலும் – தொழிலில் சிறுமை பெருமையில்லை. செப்பமாகவும் நுட்பமாகவும் லாபம் தரும் வகையிலும் பெரிதாகவும் விரிவாகவும் செய்யும் திறமையால் வேறுபாடு உண்டு. தொழிலில் பெரிய முயற்சியைத் திறமையுடன் செய்பவர் பெரியவர் ஆகிறார். சிறிய முயற்சிகூடச் செய்யாது திறமையற்றிருப்பவர் சிறியவர் ஆகிறார். உழைப்பும் திறமையும் வலிமையும் வாழ்வில் வளமை சேர்க்கும் என்பதே அமெரிக்க வாழ்க்கை.

இது அமெரிக்காவுக்கு மட்டுமே கிட்டியுள்ள அற்புத வரமா? அப்படியும் சொல்லிவிட முடியாது. வையத் தலைமை பெற்றே தீர வேண்டும் என்ற அந்நாட்டவரின் மனோபாவமும் அதற்கேற்ற அறிவியல் பூர்வமான அணுகுமுறையும்தான் என நண்பர்கள் ஏற்கெனவே எழுதியிருந்தார்கள். அதை நேரில் பார்க்க நியூயார்க் நகரை இதோ… நெருங்கிவிட்டோம்!

அமெரிக்காவிலேயே மிகப்பெரிய நகரான நியூயார்க் விமானத்தளத்தின் தரையைத் தொடும் முன்னர், நகர முகப்பில் நின்ற சுதந்திரச் சிலை எங்கள் கவனத்தை ஈர்த்தது. 305 அடி உயரமுள்ள இச்சுதந்திரச் சிலையை நிறுவியதன் மூலம், தம் நாட்டின் விழுமிய இலட்சியத்தை வருவோர்க்கெல்லாம் சொல்லாமல் சொல்லும் உத்தி புலனாயிற்று. நகரின் நடுவே உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடம் (102 மாடிகளாம், 1250 அடி உயரமாம்!) தாழப்பறக்கும் போது தலையை உயர்த்திப் பார்க்கும் வகையில் நிமிர்ந்து நிற்கிறது. இவற்றைப் போலவே நம்நாட்டின் தெற்கே வாழும் குமரிக் கடலில் விவேகானந்தர் மண்டபத்தை எழுப்பியதும், வான்புகழ் வள்ளுவர்க்கு விண்தொடும் சிலையை நிறுவத் திட்டமிட்டிருப்பதும் என் நினைவில் இணைகோடுகளாயின; புதிதாக வருவோர்க்குத் தன் நாட்டின் பண்புத் திறத்தை எடுத்துக் காட்டும் கலைப்படைப்புக்கள் வேண்டும் என்ற கருத்தை நிலைப்படுத்தின.

26.5.89 அன்றே, பயணத்திட்டப்படி நாங்கள் நியூயார்க் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும். பிராங்க்பர்ட்டில் ஏற்பட்ட தாமதம் தொடர்கதையானதால் நாங்கள் 27.5.89 காலையில்தான் வந்து சேர இயலும் என்று பிராங்க்பர்ட்டி லிருந்தே நண்பர் சுலைமான் இல்லத்திற்குத் தகவல் அனுப்பினோம். ஆனால் நண்பர் அதற்கு முன்னரே எங்களை வரவேற்க விமான நிலையம் போய்விட்டார். அங்கே காத்திருந்துவிட்டு வெறுமனே திரும்பியிருக்கிறார்.

மறுநாள் காலையில் கென்னடி ஏர்போர்ட்டில் நாங்கள் இறங்கிய சேதி அறிந்து நண்பர்கள் அங்கு திரளாக வந்துவிட்டனர். நண்பர்களை உற்சாகத்துடன் அறிமுகம் செய்துகொள்ள முடியாத அதிர்ச்சிச் செய்தி ஒன்று அப்போது வந்தது. எங்களுடன் வரவேண்டிய உடைமைகள் நாங்கள் பயணம் செய்த அதே விமானத்தில் ஏற்றப்படவில்லையாம். பெட்டிகளை இன்னொரு விமானத்தில் ஏற்றிவிட்டார்களாம். “அவை உங்கள் விலாசத்திற்குப் பத்திரமாக வந்து சேரும்… கவலைப் படாமல் போங்கள்…” என்று விமான நிலைய அதிகாரிகள் பல தடவை கூறிய போதிலும்…. எங்களுக்குக் கால்கள் நகரவில்லை…. அவநம்பிக்கையோடு. அணிந்திருந்த ஒரே உடுப்போடு, நியூயார்க்கின் மற்றொரு விமான நிலையம் ‘லகாடியா’ சென்று மறுபயணம் ஆனோம்!

டெய்ட்டன் போய்ச் சேர்ந்தால் போதும் போதும் என்றாகிவிட்டது!

அமெரிக்கப் பயணம்

ஒரு நினைவோட்டம்

Image result for USA

என் திருக்குறள் பயணம், உலகப் புகழ் பெற்ற மிகப்பெரிய நாட்டினை நோக்கித் தொடங்க இருந்தது. அமெரிக்க நாட்டைப் பற்றி நான் ஏற்கெனவே அறிந்தவை, படித்தவை எல்லாம் ஒருபுறம் இருக்க, பல புதிய செய்திகளை அறிந்துகொள்ள மனம் துருவியது. அமெரிக்காவில் தொடர்புடைய, அங்கு போய் வந்த அன்பர்களிடமெல்லாம் அவசரத் தொடர்பு கொண்டேன். பயணம் போகும் புது இடத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதுதானே பயணத்திற்கு உரிய முதல்நிலை ஏற்பாடு?

அமெரிக்கத் தொடர்போடு இங்கு வாழும் அன்பர்களில் பலர் அமெரிக்க மக்களின் வாழ்வுப் போக்கில் தாம் கண்ட சாதாரணக் குறைகளையே பட்டியலிட்டுச் சொன்னார்கள். எதையும் அனுமதித்து ஏற்கும் அச்சமுதாய இயல்புகள் , பழக்கவழக்கங்கள், இன உணர்வுகள், ஊழல்கள், அரசியல் தில்லுமுல்லுகள், மதுவிலக்கு, சூதாட்டம், லாட்டரி விளைவுகள், தன் நாட்டு வளர்ச்சிக்காகப் பிறநாட்டுச் சுரண்டலையே நோக்காகக் கொண்ட தொழில் வர்த்தக நிறுவனங்கள்… இவற்றையெல்லாம் விலா வாரியாகச் சொல்லி அச்சமும் அயர்வும் ஏற்படச் செய்தார்கள். என்றாலும் அந்த அதிசய நாட்டின் ஈடிணையற்ற ஜனநாயக உயிரோட்டத்தையும், ‘இப்படியெல்லாம் அமெரிக்காவில்தான் நடக்கும்’ என்ற அபிமான உணர்வோட்டத்தையும் சுட்டிக் காட்டவும் தவறவில்லை. “ ‘அமெரிக்காவைப் பார்’ என உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே.செட்டியார் அன்று எழுதிய புத்தகத்தையும் ‘சோமலெ’ எழுதிய பயணக் கட்டுரைகளையும் படித்துவிடுமாறு நண்பர் ஒருவர் சிபாரிசு செய்தார்.

தொழில், வாணிபப் பயணமாகப் போனால் லாபநட்டக் கணக்கோடு நான் ஆயத்தமாக வேண்டியது அவசியம். ஆனால் நான் மேற்கொள்ளப் போவதோ தமிழ்ப் பயணம். அதிலும் குறிப்பாக, திருக்குறள் பயணம். எனக்கு இவ்விரண்டின் நிலைபேறு பற்றிய முன்னறிவு கொஞ்சமாவது வேண்டும் எனக் கருதினேன்.

அமெரிக்காவில் வாழும் தமிழர்களைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தேன். ஆனால் அமெரிக்காவில் தமிழ் எப்படி வாழுகிறது என அறிவதல்லவா முக்கியம்?

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையோடு தொடர்பு கொண்டேன். டாக்டர் தமிழண்ணல், பேராசிரியர் சு.குழந்தைநாதன் தொகுத்து எழுதிய ‘உலகத் தமிழ்’ நூல் பற்றிய பல விவரங்களை நான் பெற முடிந்தது… தமிழ் அரிச்சுவடிப் பாடம் கற்பிப்பதைவிட பட்டப்படிப்பு வரை பயில அங்கு அளிக்கப்படும் வசதி வாய்ப்புக்களையும், தமிழ் மன்ற நடவடிக்கைகளையும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆசிய மொழி, இலக்கியத்துறை எனும் தனிப்பிரிவே அங்கு உள்ளது.

அமெரிக்காவில் இப்போது தமிழ், தெலுங்கு எனும் இரு திராவிட மொழிகளில் மட்டுமே பாடங்கள் தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வருகின்றன. கன்னடமும், மலையாளமும் அவ்வப்போது கற்பிக்கப்படுகின்றன. வாஷிங்டனிலும், சிக்காகோ பல்கலைக்கழகத்திலும் கன்னடம் கற்பிக்கப் படுகின்றது. பென்சில்வேனியாவில் மலையாளம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. வாஷிங்டன், பென்சில்வேனியா, விஸ்கோன்சின், மிக்ஸிகன், கலிபோர்னியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. டெக்சாஸ் கோர்வல் பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு நேரும்போது நடக்கின்றன. விஸ்கோன்சின், டெக்சாஸ் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் பென்சில்வேனியாவில் ஒழுங்காகவும் கற்பிக்கப்படும் மொழிப் பாடங்கள் முழுமையான பாடத் திட்டத்துடன் நடத்தப்படுகின்றன. அதாவது, தெரிந்தெடுத்துக் கொள்ளப்படும் மொழியின் இலக்கியம் அல்லது மொழியியலில்  எம்.ஏ.யும், பி.எச்.டி.யும் பெறும் அளவிற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுப் பயிற்சியும் தனித்துறை ஆய்வும் அளிக்கப்படுகின்றன.

பிற கல்வி நிறுவனங்கள் இலக்கிய ஆய்வுகளில் மிகுதியும் ஈடுபட்டு இருப்பதால் பென்சில்வேனியா, வாஷிங்டன் பல்கலைக்கழகங்கள் திராவிட மொழியியலில் சிறப்புப் பயிற்சிகளை அளிக்கின்றன. கோர்வல் டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மொழியியலில் மிகுந்த நாட்டம் உண்டு; ஆனால் விஸ்கோன்சின், கலிபோர்னியா கழகத்தவர்களுக்கு இலக்கிய ஆய்வுகளிலேயே ஆர்வம் மிகுதி. சிகாகோவில் இரண்டுக்குமே ஆக்கம் தரப்படுகின்றது.

இயல்பாகப் பாட வகுப்புகளை வழக்கமாக நடத்தி வரும் பல்கலைக்கழகங்களில் தொடக்கநிலை வகுப்புகளில் ஆறு மாணவர்கள் வரை சேருவர். மேல்வகுப்புகளில் இந்த எண்ணிக்கை குறைவது உண்டு. வாஷிங்டன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவின் தொடக்க நிலையில், மூன்று மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் மொழியியல், தொல்பொருள் ஆய்வு முதலிய இதர துறைகளில் மேல்நிலை ஆய்வு செய்யும் பட்ட வகுப்பு மாணவர்களும் உள்ளனர். மொழியியல், இலக்கியம் மட்டுமன்றி, தென்னிந்திய வரலாறு, சமயம், இசை, நுண்கலை, அரசியல், திணையியல் முதலிய இதர துறைகளில் ஆர்வம் உள்ளோரும் வாஷிங்டன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவில் சேர்ந்திருப்பர். இவர்கள், தமிழை ஓரளவு கற்ற பின்னர்த் தமக்குப் பிடித்தமான துறையில் பட்டம் பெறத் தகுதியுறுவர்”.

பல்கலைக்கழகங்கள், பள்ளிகளை விட, அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் தன்னார்வத் தமிழ்ச் சங்கங்களும் அமைப்புகளும் ஒன்றுகூடி, தமிழ் இலக்கிய வேள்வி நடத்தி வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் சிக்காகோவில் உள்ள தமிழ்நாடு அறக்கட்டளை  17 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் இதழ் நடத்தி, தமிழர் உள்ளங்களையும், இல்லங்களையும் ஒரு சரமாக இணைத்து ஒப்பற்ற ஆக்கப்பணி புரிந்து வருகின்றது. சென்னையில் ஒரு கிளையினை நிறுவும் வகையில் உயர்ந்து நிற்கும் தமிழ்த்தொண்டர் அமைப்பு இது. திரு.மோகனன், இளங்கோவன், டாக்டர் ரெஜி ஜான், டாக்டர் சவரிமுத்து, கண்ணப்பன், டாக்டர் பி.ஜி.பெரியசாமி, திருமதி. வெங்கடேஸ்வரி சுப்ரமணியம் முதலிய தமிழ் நெஞ்சங்கள், அமெரிக்க நாட்டில் வாழும் தமிழ்க் குடும்பங்களுக்கும் தாயகத்திற்கும் உறவுப் பாலங்களைக் கட்டி வருகின்றன. அமெரிக்கத் தமிழர்கள் பொங்கல் உள்ளிட்ட தமிழ் விழாக்களையும், தீபாவளி, நவராத்திரி முதலிய பண்டிகைகளையும் கூடிக் கொண்டாடி நமது பண்பாட்டுக் கோலங்களைத் தூவி வருகின்றனர். இக்கோல வடிவங்களையெல்லாம் கண்டு மகிழும் பயணமாக என் திருக்குறள் உலா தொடங்கியது. தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அருள் ஆசியுடன் அன்பர்கள் அணி திரண்டு நல்கிடும் வழியனுப்புதலுடன் மதுரையிலிருந்து புறப்பட ஆயத்தமானேன்.

பயணப் பரபரப்பு

பயணம் போவதென்றால் யாருக்கும் ஒருவகை பரபரப்பு உணர்வு ஏற்பட்டே தீரும். பள்ளிப் பருவத்துக் கல்விப் பயணமானாலும் சரி, பிள்ளைப் பருவத்து இன்பச் சுற்றுலா ஆயினும் சரி, பின்னைப் பருவத்துக் குடும்ப சமூக நிகழ்ச்சிப் பயணம் ஆயினும் சரி – வெளியூர் போவதென்றாலே மனமும் பொழுதும் வேகமாக ஓடத் தொடங்கிவிடும். சொந்த வாகன வசதி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, போக வேண்டிய பயணம் பற்றிய சிந்தனை மனதை அரிக்கத் தொடங்கிவிடும். அதிலும் தொலை தூரப் பயணம் என்றால் கேட்கவே வேண்டாம். பலமுறை போய்வந்த நாடாக இருந்தாலும் கூட, பரபரப்பையும் மீறியதொரு பதைபதைப்பையும் உண்டாக்கியே தீரும்.

எனக்கும் அப்படித்தான்! பல வெளிநாடுகளுக்கு முன்னர் போய்வந்த அனுபவம் இருந்தும் இந்தத் திருக்குறள் பயணம் நெடிய எதிர்பார்ப்புகளை என்னுள் உருவாக்குவது போன்ற பிரமை ஏற்பட்டுவிட்டது. “அவை, பயணங்கள் அல்ல; பல்கலைக்கழகங்கள்” என எங்கேயோ படித்த வாசகம் – எனக்குள்ளே வலம் வந்து – இந்தப் பயணத்தைப் பல்கலைக்கழகமாக்கத் திட்டமிடும் தீர்மானத்தை முன்மொழிந்து கொண்டிருந்தது. அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளைப் பற்றிய விவரங்களைப் போதுமான அளவுக்கு திரட்டிக் கொள்ளத் தூண்டிவிட்டது. நண்பர்கள், அன்பர்களின் பெயர்ப் பட்டியலை, முகவரியை எல்லாம் தேடி எடுத்துக்கொள்ள நேரம் போதவில்லை எனும் நெருக்கடி ஏற்பட்டது.

Image result for bharathiyar

 

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என மகாகவி அன்றே பாடினான். தமிழ்நாடு வான்புகழ் பெற்றிட வையகத்துக்கு எல்லாம் வள்ளுவச் செல்வத்தை வழங்கினாலே போதும் என்பது அவனது கணிப்பு. உலகினுக்கு வள்ளுவத்தை நல்கும் பணியில் தமிழ்நாட்டு மக்கள் ஊன்றி நின்றிருக்க வேண்டும். விழா எடுக்கும் போது மட்டும் ஊர்கூட்டி முழக்கமிட்டுவிட்டு, அப்புறம் அயர்ந்து போய்விடுவதுதான் நம் வழக்கம். ஆனால், அயல்நாடுகளில் வாழும் தமிழ் அன்பர்கள் தாமும் அயர்வதில்லை. நம்மையும் அயரவிடுவதில்லை! அதிலும், அமெரிக்கத் தமிழர்களின் ஆர்வம் – அங்குள்ள ‘எம்பயர் கட்டிடம்’ போல் உயர்ந்தது; இங்குள்ள இமயம் போல் ஓங்கி நிற்பது.

வட அமெரிக்காவில் உள்ள டெய்டன் – ஆகாய விமானம் கட்டும் தொழில் சிறந்த பெரும் நகரம். விமான வடிவமைப்பு, கட்டுமானம், கணிப்பொறி நுட்பம் ஆகிய துறைகளில் நம் நாட்டவர்கள் பலர் அங்கு பொறுப்பேற்றுள்ளமை நமக்குப் பெருமை தரும் விஷயம். அவர்களில் கணிசமான அளவு தமிழ்நாட்டவர்களும் உள்ளனர்.

மேல்நாட்டுத் தமிழர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடிட உறவுப்பாலம் அமைப்பன தமிழ்… தமிழ்ப் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ்க் கலைகள்… – இந்நான்கையும் சால்புடைய தூண்களாக்கிக் கொண்டு, அமெரிக்கத் தமிழன்பர்கள் அறக்கட்டளையே அங்கு நிறுவிவிட்டனர்.

தமிழ்நாடு(ம்) அறக்கட்டளை

 

‘தமிழ்நாடு அறக்கட்டளை’ எனும் கூட்டமைப்பு அமெரிக்கத் தமிழ் அன்பர்களின் சேவைத் திறத்திற்கு எடுத்துக்காட்டானதொரு மணிமகுடம். அமெரிக்கப் பெருநாட்டின் கிழக்கு மேற்குக் கரையோர நகரங்களிலும் உள்நாட்டுப் பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கில் பாரதத் திருநாட்டினர் பரவி வாழ்கின்றனர். இவர்களுள் தமிழ்நாட்டவர் அங்கும் இங்குமாகச் சிதறி இருக்கின்றனர். இவர்களையெல்லாம் ஒரு சரமாக இணைத்துக் காணும்- இசைவித்துப் பேணும் முயற்சிகள் ஆண்டாண்டுகளாக அரும்பு கட்டி வந்துள்ளன.

1974-இல் தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு அறக்கட்டளை’ நல்ல அடித்தளத்தோடும், நயந்தரு ஆக்கத்திட்டத்தோடும் பணியாற்றி வருகிறது. சிக்காகோ முதலிய நகர்களில் தமிழ்ச் சங்கங்கள் உண்டு என்றாலும் அனைத்தையும் ஒருங்கே இணைத்துப் பார்க்க ஏற்றதொரு பொது அமைப்பு தேவைப்பட்டது. அந்த நெடிய தேவையை நிறைவு செய்ய ஊன்றப்பட்ட தமிழ்நாடு அறக்கட்டளைக்கு முக்கியமான நகரங்களில் எல்லாம் கிளைகள் உண்டு. சர்வதேசச் சுழற்கழகம், அரிமா சங்கம் என்பன போல, அன்புத் தோழமையும், மனித நேயத் தொண்டையும் இரு கால்கள் எனக் கொண்டு தமிழ்நாடு அறக்கட்டளையும் நடைபோட்டு வந்தது.

தமிழ்நாடு அறக்கட்டளையின் முதன்மை நோக்கம் அமெரிக்காவில் வாழும் தமிழர்களிடையே நெருக்கமான உறவினை ஏற்படுத்துவது; இந்த உறவினை வலுப்படுத்தும் புத்தாண்டு, பொங்கல், நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் விழாக்களை நடத்தி விருந்தயர்வது; அனைத்துச் சமயத்தவர்க்கும் பொது வீடாக – நல்லிணக்க மன்றமாக- அறக்கட்டளையை நிர்வகிப்பது; பல குடும்பங்களை ஒன்றாகக் கூட்டிக்கொண்டு சிறு சுற்றுலாப் போவது; நிலா விருந்து பரிமாறிக்கொள்வது; போட்டிப் பந்தயங்கள் நடத்துவது; நமது கலாச்சாரத்தைப் பிறர் புரிந்து பாராட்ட வாழ்ந்து காட்டுவது.

“அயல்நாடு எதுவாயினும் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் தமக்குள்ளே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு வகைச் சுயநலம் சார்ந்த தற்காப்பு சங்க(ம)ம்தான் இது! இதில் என்ன புதுமை இருக்கிறது?” என்று கேட்க அமெரிக்க நாட்டுத் தமிழ் அறக்கட்டளையினர் வாய்ப்பு அளிக்கவில்லை.

அறக்கட்டளையின் விழுமிய நோக்கம் தாயகத்துத் தமிழ் மக்களுக்குத் தன்னால் ஆன உயர் கொடைகளை நல்க முற்படுவது. அமெரிக்கத் தமிழர்களிடையே நிதி திரட்டி, அதனைக் கொண்டு தமிழ்நாட்டில் விழுமிய சேவைத் திட்டத்தைச் செயலாக்குவதே அதன் புறவடிவம். அங்கு நிதி தொகுக்கவும் இங்கு அது குடை கவிக்கவும் போதிய ஆக்கம் தரக்கூடிய சான்றோர்கள், அறங்காவலர் களாகப் பொறுப்பேற்றனர். டாக்டர் ஜி.பழனிபெரிய சாமி, டாக்டர் இளங்கோவன், சி.கே.மோகனன், டாக்டர் சவரிமுத்து, டாக்டர் ஜானகிராமன், டாக்டர் கோவிந்தன், டாக்டர் நல்லதம்பி, திரு.துக்காராம், டாக்டர் பி.அமரன், திருமதி வெங்டேசுவரி, திரு.ரவிசங்கர், திரு.ஏ.எம்.ராஜேந்திரன், திரு டி.சிவசைலம், டாக்டர் சி.எஸ்.சுந்தரம், டாக்டர் ஆனந்தகிருஷ்ணன், டாக்டர் பொன்னப்பன் என நாள்தோறும் திரண்டுவரும் தொண்டர் அணியினர் அமெரிக்காவில் அறம் வளர்க்கும் நாயகர்களாக விளங்கு கின்றார்கள்.

தமிழ்நாட்டில் ஆயிரம்ஆயிரம் பேர் பயன்பெற விழுதூன்றப் போகும் ஆலமரக் கன்றுகளைப் பேணும் பொறுப்பேற்க உவந்து இசைந்த சான்றோர் வரிசையும் பெரிது; அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம்  நீதியரசர் வேணுகோபால், அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எம்.அனந்தகிருஷ்ணன், திரு.சந்திரன்… அமெரிக்கத் தமிழன்பர்களது அறக்கட்டளைகள் பல வகை; சிறிதும் பெரிதுமாக எண்ணற்றவை; தனி நபர் உதவியாகவும் பலர் சேர்ந்து வழங்கும் கொடையாகவும் நூற்றுக் கணக்கானவை. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல்லார் பெயரால் பரிசுக் கட்டளைகள், தமிழ்நாட்டில் பள்ளிக் கட்டிட நிதிகள், ஆன்மீக, ஆசிரம தர்மங்கள், மருத்துவ மனைக் கொடைகள், ஈழத் தமிழர் வாழ்வு நலன்கள் என்றெல்லாம் வாரி வழங்கி வருபவை.

Image result for thirukural manimozhian

ஆனால் தமிழ்நாடு அறக்கட்டளை இந்த எல்லைகளையும் தாண்டியது. என்றும் பயன்தரும் வேலைத் திட்டங்களை தமிழ்நாட்டில் செயலாக்கும் கருத்துடையது. அவற்றுள் முக்கியமானது; சென்னையில் பல லட்சம் டாலர் செலவீட்டில் உருவாகிவரும் தொழில் நுட்பக் கேந்திரம் எனும் தொழில் நுட்பப் பரிமாற்றப் பயிற்சி மையத்தைச் சென்னையில் நிறுவுவது. இது தமிழ்நாட்டு இளைஞர்கள் அமெரிக்காவில் நாள்தோறும் வளர்ந்துவரும் புதுப்புதுத் தொழில் நுட்பங்களை எல்லாம் அறிந்து கொள்ள வாயில்களைத் திறந்து வைக்கும். நிகரான அறிவியல் சிந்தனைகள் இங்கும் சமகாலச் சாதனையாகப் பாத்தி கட்டும். இது எளிய காரியம் இல்லை. பலரது மகத்தான கூட்டு முயற்சியால் மட்டுமே இதனைச் சாதிக்க முடியும்.

சாதனைப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ள பேரமைப்பினர் விடுத்துள்ள அழைப்பினை ஏற்பது எத்தகைய பெருமை? அந்தப் பெருமையை எனக்குத் திருக்குறள் அல்லவா பெற்றுத் தந்துவிட்டது!

திருக்குறள் பயணம்

 

Image result for thirukural manimozhian

“ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும்

     பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் & போய் ஒருத்தர்

     வாய்க்கேட்க நூலுளவோ…?”

என்று திருக்குறளுக்குப் புகழஞ்சலியாக விளங்கும் திருவள்ளுவ மாலையைத் தொகுத்துள்ள நத்தத்தனார் பாடினார். இப்பாடலைப் படித்த போதெல்லாம் இளமைப் பருவத்திலேயே என் மனத்தில் கேள்வி ஒன்று எழுந்தது. “1330 அருங்குறளையும் மனப்பாடம் போலப் படித்துவிட முடியுமா?” எனும் அக்கேள்விக்கு, “ஏன் முடியாது? முயன்று தான் பார்ப்போமே!” எனும் உறுதி பிறந்தது. நான் வளர்ந்த காரைக்குடிக் கம்பன் கழகமும் திருக்குறள் மன்றமும் தமிழ் உணர்வூட்டிய கல்விச்சூழல் அந்த உறுதிக்கு மேலும் உரம் ஊட்டியது. வாரம் ஓர் அதிகாரம் என எனக்குள் எல்லை கட்டிக்கொண்டு குறள் கருத்துக்களை என் நினைவுத் தவிசில் ஏற்றுக்கொள்ள முயன்றேன். தங்கத்தின் தரத்தை உரை கல்லில் தேய்த்து மாற்றுப் பார்ப்பதைப் போல, வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் திருக்குறளை உரைகல்லாகக் கொள்ளமுடியும் எனத் தெளிவு பெற்று வந்தேன். யார், எந்தக் கருத்தைச் சொல்லக் கேட்டாலும் இதனை வள்ளுவர் எப்படிச் சொல்லியிருக்கிறார் எனத் தேடி துருவத் தலைப்பட்டேன். குறட்பாக்களின் அருமையும் பெருமையும் ஆழமும் விரிவும் என்னை மேலும் மேலும் கருத்தூன்றிப் படிக்கத் தூண்டின. ஒரு நூலிலாவது நல்ல பயன் தரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற என் ஆசைக்கு ஓர் அளவுகோலாகக் குறட்பாக்கள் அமைந்துவந்தன. வாழ்வின் புதிய அனுபவங் களுக்கு உட்பட்ட போதெல்லாம், வற்றாச் சுரங்கமாகவும் வழிகாட்டும் வான் விளக்காகவும் எனக்குக் குறள் நெறிகள் விளங்கத் தொடங்கின. இயன்ற வகையில் எல்லாம், தனிமுறையிலும் பொது வகையிலும் குறள்நெறிச் சீலங்களைப் பரப்பி வாழவேண்டும் எனும் உணர்வினை நாள்தோறும் என்னுள் புதுக்கி வந்தன.

தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் பல்லாண்டுகள் இயங்கி வரும் தமிழ்நாடு திருக்குறள் பேரவையின் (பொதுச் செயலர்) பொறுப்பேற்ற நாள்தொட்டு வாழும் வாழ்க்கைக்கும் காலத்திற்கும் பொருந்தும் வகையில் குறள் நெறிகளைப் பரப்ப வேண்டும் எனும் நோக்கத்தினைச் செயல்படுத்த முற்பட்டோம். ‘செய்க பொருளை’ எனும் சிந்தனைத் தலைப்பில், அறிஞர், அறிவியலாளர், தொழில் அதிபர், இளைஞர் முதலிய பல்வகைச் சமுதாயப் பிரிவினரையும் கருத்தரங்கேறச் செய்தோம். அக்கருத்தரங்கு புதிய புதிய செயல் திட்டங் களுக்கு வருக எனக் கைகாட்டி அழைக்கக் கண்டோம். முன்னோடித் திட்டமாக, ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, ஒருங்கிணைந்த வள்ளுவர் நெறி வளர்ச்சியை அங்கு நடைமுறையாக்க முற்பட்டோம்.

Image result for thirukural manimozhian

உலகத் தமிழ் மாநாட்டு நினைவாக, தமிழ்நாட்டின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆய்வுக்கான நிதிக்கட்டளை ஒன்று அரசு சார்பில் ஏற்கனவே நிறுவப்பட்டு, திருக்குறள் ஆராய்ச்சித் துறைகள் இயங்கி வந்தன. என்றாலும் உலகளாவிய வண்ணம், பிற நாடுகளில் வாழும் தமிழ் மக்களோடு தொடர்பு கொள்ளும் வகையில் ‘உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையம்’ ஒன்றினை, திருக்குறள் அரங்கேறிய சங்கத் தமிழ் மதுரையில் நிறுவ வேண்டும் எனும் தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கனவினை நனவாக்கும் காலம் கனிந்தது. மதுரையில் பன்னாட்டுத் திருக்குறள் ஆராய்ச்சி மைய அறக் கட்டளையினை நிறுவப் பதிவு செய்தோம். இதனைக் கேள்வியுற்ற அமெரிக்கத் தமிழ் அன்பர்கள், அங்கு சிக்காகோவில் ஆண்டுதோறும் நிகழும் மாநாட்டிற்கு வருமாறு சிக்காகோ திரு.பி.ஜி.எம். நாராயணன், திரு.வெங்கட்ட ராமானுஜம் ஆகியோர் எனக்கு அழைப்பு விடுத்தனர். மதுரையில் திரு.பன்னீர் செல்வம், திருமதி. லதா பன்னீர்செல்வம் (மகாத்மா மாண்டிசோரி) இருவரின் முயற்சியும் தூண்டுதலும் என்னை ஊக்குவித்தன.

தொழில் காரணமாகவும் சுற்றுலா விழைவு காரணமாகவும் ஏற்கனவே பல நாடுகளுக்குச் சென்று வரும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தேன். எனினும் இந்தத் திருக்குறள் பயண அழைப்பு முற்றிலும் புதுமையாகத் தோன்றியது. நாடு கடந்து வாழும் தமிழர்களின் தாய் நாட்டுப் பற்றையும் மொழி உணர்வையும் நேரில் அறியும் சந்தர்ப்பங்களையும் தருவதாக இது அமைந்தது.

பயணம் செல்வது இனியதொரு வாழ்க்கை அனுபவம். எத்தகைய உணர்வோடும் அறிவு நாட்டத்தோடும் பயணம் புறப்படுகிறோமோ, அவ்வுணர்வையும் நாட்டத்தையும் மேலும் அதிகமாகப் பெற்றுத் திரும்பச் செய்யும் பயன்மிகு முயற்சி; கையில் உள்ள பணத்தைச் செலவிட்டு, மூளைக்குள்ளே புதுப்புதுச் செய்திகளை அடக்கிக் கொண்டு வரும் வாழ்க்கை வாலிபம்; ஒவ்வொரு ரோஜாச் செடியிலும் முள் இருக்கிறது எனத் தெரிந்திருந்தும் அதனூடே மலர்ந்திருக்கும் பூவிலிருந்து தேனை மட்டும் மாந்தி வரும் தேனீயின் உழைப்புப் போன்றதொரு செயல்திறம்; சரக்கு மூட்டைகளை வண்டியில் ஏற்றிச் செல்வது போலப் போய்வராமல், உணர்வாக்கம் கொண்டதொரு பகுத்தறிவோடு ஊர் சுற்றிவரச் செய்யும் கலைத்திறன்; நமது வீடு, நாடு எனும் குறுகிய வரையறைக்குள் இருந்து பழகிப் போனவர்களின் பார்வையினை, ‘பெரிதே உலகம், பேணுநர் பலரே!’ எனும் எல்லைக்கு விரிவுறச் செய்யும் இரசவாதம்; எப்பொருள் எத்தன்மையதாயினும் அப் பொருளை மெய்ப்பொருளாக நேரடியாகக் காணச்செய்யும் அறிவுத் தேட்டம்…

வரலாற்றிலும் இலக்கியத்திலும் பல நாடுகாண் காதைகள் அரங்கேறியுள்ளன; சமய அனுசாரமும், வாணிப ஆதாயமும் பல ஊர்காண் காதைகளை உருவாக்கியுள்ளன. ஒவ்வொரு மனிதனின் தேவைக்கும் உரிய வகையில் பல்வேறு வகையான பயணங்கள் அன்றாட வாழ்வில் நிகழ்ந்தேறியே வருகின்றன.

என் வாழ்வெல்லாம், மனமெல்லாம் ஆட்கொண்ட ஒரே நூலாகத் திகழும் திருக்குறள் வழியாக இப்பயண வாய்ப்பினை வெளிநாட்டுத் தமிழன்பர்கள் எனக்கு அளித்தனர். எனவே ஒரு நாட்டுப் பயணமாக மட்டும் இந்த வாய்ப்பினைக் குறுக்கிக் கொள்ளாமல், பல நாட்டுப் பயணமாக விரித்து அந்த அழைப்பினைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளத் தீர்மானித்தேன். மேற்கு நாடுகள் சிலவற்றில் வாழும் என் இனிய நண்பர்களுக்கு என் வருகை பற்றி, திருக்குறள் பயணம் பற்றி எழுதினேன்.

Image result for thiruvalluvar painting

தமிழ் மக்கள் உலகின் பல நாடுகளில் உரிமைபெற்ற குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்திய மொழிகளில், உலகெல்லாம் பரவிய சிறப்புக்கு உரியதாகத் தமிழ்மொழி திகழ்கிறது. ஓரிரு நாடுகளில் ஆட்சி மொழியாகவும் பெருமை பெற்று விளங்குகிறது. பல்வேறு நாடுகளில் பன்னெடுங்காலமாகக் குடியேறி வாழும் நம் மக்களைத் தமது சொந்த நாட்டோடும் புராதனப் பண்பாட்டோடும் உறவுக் கயிறு அறுந்து போகாமல் இணைத்து வைக்கும் பாலமாகத் தமிழ் மொழியே விளங்குகிறது.

ஆனால் அண்மைக் காலங்களில் இந்த உறவுக் கயிறு வலுவிழந்தும் இணைப்புப் பாலம் செயல் இழந்தும் போகக்கூடிய அரசியல், மற்றும் சமூக வாழ்க்கை நெருக்கடிகள் ஆங்காங்கு ஏற்பட்டன. எனவேதான், உலகத் தமிழ் மாநாடு கூட்டி உரமேற்றும் முயற்சிகளும் தாய்நாட்டு அன்பர்களைத் தம்மிடத்திற்கு வரவழைத்து உறவேற்கும் மலர்ச்சிகளும் அணிவகுத்து வருகின்றன.

தேமதுரத் தமிழோசையினை உலகின் பல நாடு களிலும் செவிமடுத்துக் கேட்கும் விழாக்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. உலகப் பொதுமறையாகத் திருக்குறளை நிலைப்படுத்தும் ஆக்கங்களும் அரும்பு கட்டி வருகின்றன.

எப்பாலவரும் ஏற்கும் சிறப்புடையது முப்பாலாக அமைந்த திருக்குறள். அறம் பொருள் இன்பம் எனும் இம்முப்பால் பாகுபாடு, அனைத்து மக்களுக்கும் உரிய அடிப்படை வாழ்க்கைப் படி முறையாக சங்க இலக்கியம் தொட்டே வரன்முறைப்படுத்தப்பட்டு அமைந்தது.

“அந்நில மருங்கின் அறமுத லாகிய

     மும்முதற் பொருட்கும் உரிய என்ப”

எனத் தொல்காப்பியமும்,

“அறம் பொருள் இன்பம் என்று அம்மூன்றும்”

எனக் கலித்தொகையும்,

“அறமும் பொருளும் இன்பமும் மூன்றும்

     ஆற்றும் பெரும நின் செல்வம்”

எனப் புறநானூறும்,

“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

     தீதின்றி வந்த பொருள்”        (754)

எனத் திருக்குறளும், முப்பால் மரபினை முழுதுலகிற்கும் பொதுவாக அறிவித்துள்ளன.

அறம் பொருள் இன்பம் எனும் முத்துறைகள் பற்றியும் முழுமையான, முதன்மையான அறங்களைச் செவ்வனே வகுத்துச் சொல்லும் ஒரே நூலாக, ஒரே ஆசானால் எழுதப்பட்ட ஈடற்ற சிந்தனை நூலாக, செயல் நூலாகத் திருக்குறள் மட்டுமே போற்றப்படுகிறது. மறு உலக அச்சம் காட்டியோ, ஆசை காட்டியோ ஒழுக்கங்களை வற்புறுத்தாமல், இவ்வுலக வாழ்வின் உண்மை, நன்மை ஆகியவற்றை மட்டுமே கருதி, தனிநபர், சமுதாய நடைமுறைகளை வரன்முறைப்படுத்தும் வாழ்க்கை நூலாகத் திருக்குறள் மட்டுமே நிலைபெற்று விளங்குகிறது. எனவே சுவையான கரும்பு தின்னக் கூலியும் கிடைத்ததைப் போல் கருதி எனக்குக் கிட்டிய திருக்குறள் பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டேன்.

திருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்றி நாம் வாழும் காலத்திற்கும் பொருத்தமாகச் சமுதாயச் சிக்கலுக்கு அறவியல் தீர்வு காண்கின்றார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கும், துன்பம், கவலை நீங்கி இன்பம் இடையறாது பெறுவதற்கும் அமைதியும் முழுமையும் நிறைவும் பெறவும் வள்ளுவம் வழிகாட்டுகிறது.

“யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்

     சாந்துணையும் கல்லாத வாறு.”  (397)

எனும் குறட்பா உலகோர் அனைவருக்கும் பொது நிலையறம் புகட்டுகிறது.