நாயகர் பி.டி.ஆர்!

பெருமைமிகு வரலாற்று

நாயகர் பி.டி.ஆர்!

“ஆண்டுகள் பல கடந்து முதுமை எய்திய போதிலும் உமக்கு நரையும் திரையும் ஏற்படாமைக்குக் காரணம் என்ன?” எனக் கேட்டாரிடம் சங்கப்புலவர் பிசிராந்தையார் பலவற்றைப் பட்டியலிட்டுவிட்டு, முடிமணியாக ஒன்றைச் சொன்னார். அந்த ஒன்று, இன்றும் எல்லோரது நினைவிலும் நிற்கும். “சான்றோர் பலர் யான் வாழும் ஊரே!” எனக் கூறியது நினைவெல்லாம் கடந்த வரலாறு வடிவெடுப்பதற்கு உரிய காரணத்தையும் சுட்டிக்காட்டும்.

சான்றோர் பலர் வாழ்வதே, அவ்வாறு வாய்ப்பதே, ஒரு ஊருக்குப் பெருமை; ஒரு நாட்டுக்குப் பெருமை.

‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ (996) என வள்ளுவர் ‘பண்புடைமை’ அதிகாரத்தில் வரையறுப்பது போல, இந்தப் பாருலகம் நிலைபெற்றிருப்பதற்கு முக்கிய அடிப்படை ஒரு சிலராவது பண்புடையவர்களாக அவ்வப் போது தோன்றி, வாழ்க்கை நெறி காட்டுவதால் தான். அவ்வாறு சான்றோர்கள் காலந்தோறும் வந்து பிறக்காத வறட்டு மலட்டுத்தனம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுவிட்டால், அந்தச் சமுதாயம் வாழும் நிலம் மண்ணோடு மண்ணாய் மக்கிப் போகும் என்கிறார் வள்ளுவர்.

சான்றோர் பலரும், பண்புடையாரும் வாழ்வதே- வாழும் சூழல் அமைவதே ஒரு சமுதாயத்திற்கு, அதன் வரலாற்றுப் பெருமைக்குக் கிட்டக்கூடிய பெறற்கரிய பேறு.

வரலாற்று நாயகராக வடிவெடுக்கும் பண்புடைச் சான்றோர் ஒருவருக்குப் பெருமைகள் பல வகைகளால் அமையும்.

பிறந்த குலப்பெருமை

பெற்றுள்ள கல்விப் பெருமை

சேர்ந்த செல்வப் பெருமை

சேகரித்த அனுபவப் பெருமை

உடல் அழகு வலிமைப் பெருமை

ஒருங்கே கொண்ட அதிகாரப் பெருமை

ஒழுக்கப் படிப்பால் வந்த பெருமை

சாதித்த சாதனைப் பெருமை…

இந்த எண்வகைப் பெருமைகளும் கைவரப்பெறுவோர் சரித்திர நாயகர்களாக உயர்வர்; பிறரையும் உயர்த்துவர்.

‘இத்தனை பெருமைகளோடும், நீங்கள் அறிய, இங்கே வாழ்ந்தவர் பெயரை உடனே சொல்லுங்கள்’ எனக் கேட்டால், சட்டென ஒரு மூன்று எழுத்துப் பெயரைச் சொல்லிவிடுவேன்…

அவர்தான் பெருமை மிகு ஐயா பி.டி.ஆர்.!

சென்ற தலைமுறையில் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் காவலர்களாகத் திகழ்ந்த இரு தியாகராசர்கள் மதுரை மாநகர்ப்புறத்திற்கும் மாண்பார் தமிழ்நாட்டுக்கும் பெருமை யளித்தனர். ஒருவர் ஆலையரசர் கருமுத்து தியாகராசர்; மற்றவர் நீதிக்கட்சித் தலைவர் தமிழவேள் பொன்னம்பல தியாகராசர்.

நூற்றாண்டுகளைக் கடந்தும் பெருமைச் சான்றோராகப் போற்றப்படும் பி.டி.ஆர். அவர்கள் தென்னக வரலாற்றில் தனி முத்திரை பொறித்தவர்; தலைமைச் சிங்கமாக உலாவியவர்; சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் போராடியவர்; அறநெறிக் காவலராகவும் ஆன்மிகச் செல்வராகவும் பொலிந்தவர். பி.டி.ஆர். எனும் மூன்றெழுத்து மோகன விலாசத்தால் பாளையம் இல்லத்தையும் பண்பார் தமிழ் உள்ளத்தையும் சரித்திர சாசனங்கள் ஆக்கியவர்.

அரசாண்ட அரிய நாயக முதலியாரது மரபு வழியான உத்தம பாளையம் முதன்மைக் குடும்பத்தில், செல்வச் சூழலில் பிறந்து இளமையில் பெற்றோர் இருவரையும் இழந்த போதிலும், சிற்றப்பாவின் சீராட்டில் வளர்ந்து சேதுபதிப் பள்ளியில் அகரம் பயிலத் தொடங்கி, சீமை சென்று பார்-அட்-லா பட்டம் பெற்றுத் திரும்பியது வரை பொன்னம்பல தியாகராசர் வாழ்வில் மகத்தான சம்பவங்கள் ஏதும் இல்லை.

ஆனால் 1920-இல் பார்-அட்-லா பட்டத்தோடு தமிழகம் திரும்பிய பின்னர்தான் அவரது பொது வாழ்வில் பூபாளங்கள் தொடங்கின. ஏறத்தாழ அதே ஆண்டுகளில் சீமைப்பட்டம் பெற்றுத் தாயகம் திரும்பிய பண்டித நேருவை தேசியப் போராட்ட வெள்ளம் ஏந்திச் செல்லக் காத்திருந்தது. பி.டி.ஆரையோ தமிழ்நாட்டில் புரையோடிக் கிடந்த சாதிப்புன்மையும் ஆதிக்க வர்க்கச் சழக்கும் சமூக நீதிச் சூழலில் எதிர்நீச்சல் போடச் செய்தன. அவ்வளவு பட்டம் பெற்றவர் தேசியப் போரில் ஈடுபட்டு, மிக எளிதில் பிறரைப் போலப் பிரபலமாகி இருக்கலாம். ஆனால் பி.டி.ஆர். ஆங்கில ஆட்சிக்கு இசைந்திருந்து, ஆளப்படும் மக்களின் சமத்துவ உரிமை கைவரப்பெற்று அப்புறம் அன்னிய அரசை எதிர்க்க வேண்டும் என ஏற்றுக்கொண்டார். இல்லாவிடில் வெள்ளையர் வெளியேறினாலும் வேறு ஒரு மேல் சாதிக் கொள்ளையரே பெரும்பான்மையரைச் சுரண்டுவர்  சாதிய அடிமைகள் என்றென்றும் சரித்திர அடிமைகளாகவே நீடிப்பர். எனவே சமத்துவம் நல்கும் சமூகச் சமநீதியே உடனடித் தேவை என அன்று புறப்பட்ட ஜஸ்டிஸ் நீதிக் கட்சியைச் சார்ந்தார்; சுய மரியாதை இயக்கத்திற்கு வலிமை ஊட்டினார்.

1920-40களில் காங்கிரஸ் மாகாண சுயாட்சி முதலிய பொறுப்புக்களை ஏற்கச் சம்மதிக்கும் முன்னர், டொமினியன் அந்தஸ்தை ஆங்கில அரசு முதல்படியாக ஜஸ்டிஸ் பார்ட்டி தயாராகி விட்டது. வடபுலத்தை விட, தென்னகத்தே காங்கிரஸ் இயக்கத்திலும் மேல் சாதியினர் ஆதிக்கமே நீடித்ததால் படித்தவர், பாமரர் அனைவரையும் ஓரணியில் கூட்டும் நீதி இயக்கமாக அது மாறியது.

சர் பி.டி.தியாகராசர், பனகல் மன்னர், பொப்பிலிராஜா, கே.வி.ரெட்டி, முத்தைய அரசர் ஆகியோர் இயக்கச் செம்மல்களாகப் புகழோச்சி வந்தனர்.

அப்போது பொதுப்பணி ஆர்வத்தோடு, சட்டமன்றத் தேர்தலில் வாகை சூடிய இளைஞர் பி.டி.ஆர். அமைச்சுப் பொறுப்பேற்றிட அழைக்கப்பட்டார். ஆறு ஆண்டுக் காலம் பல நிலைகளில், வெவ்வேறு துறைகளில் அவர் செயலாற்றினார். உள்ளூர்த் தல சுயாட்சியில் தன்னிறைவுக்கு அப்போதே வழிகோலினார். கல்வி, குடிநீர், சுகாதாரம் எனும் மூன்றனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக்காக முதல் குரல் கொடுத்தார். ‘சரிகைக் குல்லாக் கட்சி’ என்று நீதிக்கட்சியை ஏளனம் செய்தோர் இருந்த போதிலும், சர் பி.டி.ராஜன் – எதிரணியினராலும் மரியாதையோடு ஏற்கப்பட்டார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தே ஜெர்மனியும் ஜப்பானும் அசுர பலத்தால் அதிரடி வெற்றிகளைப் பெற்று வந்த சூழலில் – ‘இந்தியர்கள் பிரிட்டனுக்கு எதிராக அச்சு நாடுகள் வெற்றிபெற ரகசியமாகச் செயல்படவேண்டும் என்ற ராட்சத நாடுகள் ஜெயித்தால் மானுட உரிமையே பறிபோய்விடும் இப்போது பிரிட்டனை ஜெயிக்க வைப்போம்; பின்னர் அதனுடன் வாதிடுவோம்’ என யுத்த நிதி திரட்ட முற்பட்டார். ஒரு போர் விமானம் மதுரை மக்கள் பெயரால் வாங்கிடப் பெரு நிதி குவித்தார். பி.டி.ஆரின் கருத்தே பின்னர் வரலாற்று உண்மையும் ஆயிற்று.

சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே சுயமரியாதை இயக்கத்தின் இந்தி எதிர்ப்புப் போர், விதவையர் மறுமணம், முதலியவற்றில் தந்தை பெரியாரின் தளபதி ஆனார்.

பார்-அட்-லா பட்டம் பெற்றவர் நீதிமன்றத்தையே மறந்துவிட்டாரா?

அது முடியுமா? பி.டிஆரால் இயலுமா?

அரசியல் பணிமாற்றம் கண்ட அந்த வினாடியே, 1937-இல் மதுரை வழக்கறிஞர் அவைக்குள் (ஙிணீக்ஷீ) பிரவேசமாகி விட்டார். அன்றைய பிரபலங்களான சட்ட வல்லுநர்கள் பி.ரங்கசாமி நாயுடு, துரைசாமிப்பிள்ளை, சுப்பிரமணிய ஐயர் ஆகியோருக்கு நிகராக வாதிட்டு பல கிரிமினல் வழக்குகளில் வாகை சூடினார். பின்னர் பிரபலங்களான பலர் அப்போது அவருடைய ஜுனியர்களாகப் பழகிவந்தனர்! வழக்கறிஞர்கள் திரு. ஞி. சந்தோஷம், வி.ராஜையா, ழி.ரி.  பாகுலேயன் எனும் இப்பட்டியல் பெரியது அதிலும் பெரிய பணி மதுரை நீதிமன்றக் கட்டிட வளாகமாக – இப்போதுள்ள இடத்தைத் தேர்வு செய்த குழுவில் பணியாற்றிய வகைமை.

வகைமைகள் வளர்வதற்கெல்லாம் வழியமைத்தவை இரண்டு – ஒன்று பி.டி.ஆர் எனும் விரிந்த மனம்; மற்றொன்று பாளையம் இல்லம் எனும் திறந்த வாயில், அடையா நெடுங்கதவம்.

“குணனும் குடிமையும் குற்றமும் குன்றா

     இனனும் அறிந்தியாக்க நட்பு”        (793)

என நட்பாராய்தலுக்கு வள்ளுவர் கூறிய இலக்கணம்- பாளையம் இல்லத்தாருக்கே பொருந்தும். அந்தத் திருமனையின் செல்வாக்குக்கு அது தேடிக் கொண்ட நட்புச் செல்வங்களே அடித்தளம்.

ஒரு வரலாற்றை தனியொருவர் வாழ்வுப் போக்கை வளர்கதையாக்கி வழங்குவது, மூலவேரிலிருந்து முளைத்து மேல் எழும் பண்புக் கிளையும் நட்பு மலர்களும் தான்… பாளையம் தருவில் மலர்களுக்கும் கனிகளுக்கும் பஞ்சமே ஏற்பட்டதில்லை.

சுதந்திரம் வந்த பின்னர் காங்கிரஸ் அரச கட்டில் ஏறியபோது 1952-இல் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு தலைவராக வந்து அப்போதும் வரலாறு படைத்தார். தற்காலிக சபாநாயகராக, மேலவை உறுப்பினராக சட்ட ஞானம் நிறைந்த செயலாற்றிப் புகழ்பெற்றவர். அக்காலத் தலைவர்களான மூதறிஞர் ராஜாஜி, கர்மவீரர் காமராசர், அறிஞர் அண்ணா, மேதை ஜி.டி.நாயுடு ஆகியோர் போற்றும் சான்றோர்கள் ஆனார். தேவிகுளம் பீர்மேட்டுப் போராட்டத்தில் தமிழ் மண்ணுரிமை கோரினார்.

அரசியல் பணிகள் என்பன, ஆற்று வெள்ளம் போல அதன் பயன்களும் புகழும் பிரளயமாகப் பெருகிவரும்; பின்னர் அருகிப் போகும். ஆனால், சமய, சமுதாயப் பணிகள் என்பவை ஊற்று நீர் போன்றவை. மழை ஓய்ந்த பின்னரும் மறுபயன் தருபவை; மறுமலர்ச்சி ஊட்டுபவை.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வந்திடவும் மதுரைப் பல்கலைக்கழகம் பிறந்திடவும் பி.டி.ஆரே காரணர். மதுரைத் தமிழ்ச் சங்க பொன்விழாச் சிறக்கவும், முதல் உலகத் தமிழ்மாநாடு கோலாலம்பூரில் பொலிவுறவும் பி.டி.ஆரே முதன்மையர்.

சமய மறுமலர்ச்சிக்கு அவர் ஆற்றிய அரும்பணி தமிழகத்தில் புதிய பக்தி இயக்கத்தையே தோற்றுவித்து விட்டது. கடவுள் மறுப்புக் கொள்கையரோடு அவருக்கு அரசியல் தொடர்பு இருந்தபோதிலும் சமயத் தனி ஒழுக்கத்தில் அவர் தனிப்பாதையில் நடந்தார், அந்தப் பாதையில் பலரையும் பவனி வரச் செய்தார். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலைப் புனரமைத்து நடப்பித்த பெருங்குட முழுக்கும், அன்னை மீனாட்சிக்குச் சூட்டிய வைரக் கிரீடமும், அய்யப்ப சுவாமிகள் பக்தியைத் தமிழ்நாட்டில் மாபெரும் பக்திப் புரட்சி இயக்கமாக மாற்றுவித்ததும், திருவாதவூர், வடபழனியாண்டவர் ஆலயம் உள்ளிட்ட புனரமைப்பும் பி.டி.ஆர் அவர்களின் முத்திரைத் தொண்டுகள்.

பி.டி.ஆர். பெற்ற மக்களுள் பொறியியல் கற்று, புல்லாங்குழல் இசை ஆய்ந்து, புலன் திருந்தும் ஆன்மவியல் நாடி, வள்ளுவர் கழகப் புகழ் வளர்ப்பவர் ஒருவர்.

தந்தை வழிச் சுவடு சேர்ந்து சட்டம் பயின்று, கல்வி சமுதாயப் பணிக்கே ஆட்பட்டு வளர்நிலைக் கழகத்திலேயே சார்ந்திருப்பர் பழனிவேல்ராஜா!

தந்தையின் விலாசத்தாலேயே கட்டப்பெறும் இத்தலைமுறைத் தலைவர் பி.டி.ஆர். அவர்கள் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகராக ஆற்றிவரும் ஆக்கங்களை நாடு போற்றுகிறது; தந்தை வழியே தனயர்களின் வாழ்வும் வரலாற்று மடல்களாகக் கண்டு மனம் பூரிக்கிறது.

வரலாற்றுச் சான்றோர்கள், சமுதாயத்தின் கருவூலங்கள் ஆகும்போதே அந்தச் சமுதாய வாழ்வின் புது ரத்தம் புனலாகப் பரந்தோடும். நம் தமிழகச் சான்றோர்களையும் நாம் சரித்திர நாயகர்களாக ஆக்கி, வளரும் நம் பிள்ளை களுக்குப் பாடமாக்கிச் சொல்ல வேண்டும். அலெக்சாண்டரையும் அக்பரையும் படிக்கும் பிள்ளைகள், தமிழவேள் பி.டி.ஆரையும் பிற தமிழினச் சான்றோரையும் பற்றிப் பயிலும்போதே உண்மைத் தமிழக வரலாறு ஒளிவிடும்.

தமிழக ஒளிவிளக்காக வரலாறு படைத்த பி.டி.ஆரின் வாழ்க்கை நமக்கு ஒளியூட்டுக.

ஆயிரம் பிறை காணும் அண்ணல்

 

எதிர்பாரா வகையில் ஏற்படும் சில அறிமுகங்கள் என்றும் நீடித்து நலம் செய்யும் உறவுகளாக வளர்ந்து விடுவது உண்டு. அவ்வாறு வளர்ந்து, மலர்ந்து, மணம் பரப்பிவரும் அரிய உறவுத் தொடர்பு – ஆயிரம் பிறை காணும் அண்ணல் அழகேசருடன் எனக்கு அமைந்த தொடர்பு. இதனை ஒருவகையில் திருக்குறள் கூட்டுவித்த இலக்கியத் தொடர்பு எனலாம். ஆனால் இதனை எஞ்ஞான்றும் நிலைக்கும் இலட்சியத் தொடர்பாகவே நான் போற்றி வருகிறேன்.

கூனூரில் உள்ள தேயிலைத் தோட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பேற்றுச் சென்றிருந்தேன். இயல்பாக திருக்குறள் சிந்தனை அங்கும் என்னை வலம் வந்தது. எனது திருக்குறள் கருத்துக்களைக் கேட்கவும் பள்ளி மலரில் கட்டுரையாக வந்ததைப் படிக்கவும் வாய்ப்பினைப் பெற்ற அழகேசனார் என்னை நேரில் அழைத்து விருந்தளித்து, மகிழ்வித்து ஊக்குவித்தார். கூனூரில், பிருந்தாவன் பள்ளியைத் திறம்பட நடத்தும் பணியில் தம்மை மறந்து நாட்ட முற்றிருந்த சிலபெரியவருடன் எனக்கு ஏற்பட்ட திருக்குறள் அறிமுகம் ஆலம் விழுது போலப் படர ஆரம்பித்தது. “செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல், வினைக்கரிய யாவுள காப்பு” (781) எனும் திருக்குறள் நட்புநெறி எங்களுக்குள் கிளைபரப்பத் தொடங்கியது.

அந்த முதல் சந்திப்பிலேயே, அவர் என் சிந்தை கவர்ந்தார். அவரது காந்திய எளிமையும், கதருடை அணிந்த புனிதமும், கருணைமலிந்த கண்ணோட்டமும், கனிவுடன் ஊக்குவிக்கும் இங்கிதமும், கடமையே கண்ணான பற்றுறுதியும், நம்பிக்கையூட்டும் செயல்திறனும் காந்தம் போல் என்னை ஈர்க்கத் தொடங்கின. அவரைச் சந்தித்து உரையாடும் போதெல்லாம் ஒரு வகைப் புத்துணர்ச்சியும் புளகாங்கிதமும் அடைவதுபோல உணர்ந்தேன். பொய்தீர் ஒழுக்க நெறி நிற்கும் புலனழுக்கற்ற அந்தணாளரின் உறவுக்கு இலக்கணமாக அதைக் கருதினேன். சூரியனை வலம் வருவதால் பிற கோள்கள் நலமுறுவதைப் போல, நானும் அவரோடு பூண்ட நட்புறவால் நயனும் பயனும் காணத் தொடங்கினேன்.

இளமைப் பருவத்தில் நம் நெஞ்சம் எனும் வானில் எத்தனையோ ஏற்றம் மிக்க இலட்சியங்கள் இடம்பெறுவது உண்டு. அவற்றுள் சில மட்டுமே வளர்பிறையாக வளர்ந்து, முழு மதியாக நிலைக்கும். என் இளமை மனம் எனும் வளர்ச்சி விளிம்பில் அவ்வாறு வலம் வந்த இலட்சிய உணர்வு உள்ள பெரியோருள் அழகேசனாரும் ஒருவர். அவர் மொழிபெயர்த்த பண்டித நேருவின் ‘உலக வரலாற்றுப் பார்வைகளை’ (நிறீவீனீஜீsமீs ஷீயீ கீஷீக்ஷீறீபீ பிவீstஷீக்ஷீஹ்) படிக்கும் வாய்ப்புப் பெற்றபோதே அவருடைய நடை எளிமையும் சரளமான மொழியாக்கமும் என் நெஞ்சில் இடம் பெற்றன. பண்டித நேருவின் ஆங்கிலத்தைப் படிக்கத் தூண்டும் வகையில் அழகேசனாரின் தமிழாக்கம் கட்டியம் கூறி அழைத்தது. நானும் படித்து நண்பர்களையும் படிக்கச் சொன்னேன்.

அரசியல் அரங்கில் அக்காலத்தே ஒழுக்க உணர்வோடு பணியாற்றி வந்த தலைவர்கள் வரிசையில் ஒ.வி.அழகேசனாரும் ஒருவராக விளங்கினார். காந்தி யுகம் உருவாக்கிய இவர், நாட்டுப்பணியைத் தியாக உணர்வோடு தன்னல நாட்டம் ஏதுமின்றிச் செய்யும் சிலருள் ஒருவராகத் திகழ்ந்தார். அரியலூரில் தற்செயலாக நேரிட்ட ரயில் விபத்தைப் பிரச்சாரக் கருவியாகக் கொண்டு, பொய்ம்மை ஊர்வலம் வந்தபோதிலும் கூட, உறுதி தளராமல், தன்னடக்கத்தோடு பல நிலைகளில் பல துறைகளில் முத்திரை பதித்தார். தாம்பரம் விழுப்புரம் ரயில் பாதையை மின்னாற்றலால் இயக்கிட மேற்கொண்ட முயற்சிகளால் இன்றும், என்றும் அவர் நினைவுகூரப்படுவார். அது மட்டுமா? பெரம்பூரில் ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை வருவதற்கும், வளர்வதற்கும் பாத்திகட்டித்  தந்தவர் அழகேசனார் என்பதையாவது தமிழ்நாடு நன்றியுடன் நினைத்துப் பார்க்கவேண்டும்.

தோற்றத்தில் எளிமையும், செயற்பாங்கில் மனித நேயமும் சேர்ந்திருப்பது அரிது. அத்தகைய அருமைப்பாடு உடையவர் ஐயா அழகேசனார்! வினைத்திட்பமும் மனத்திட்பமும் கொண்டவர் இப்பெரியார்!

அவரது மனிதநேயம் பட்டையிடப்பட்ட வைரமாக அவருடைய வாழ்க்கை முழுதும் பரவி ஒளிபாய்ச்சியுள்ளது. மத்திய அமைச்சராக, பண்டித நேருவின் நம்பிக்கைக்கு உரிய இளைய தலைமுறைத் தொண்டராக அவர் ஆற்றிய அருஞ்செயல்களின் பட்டியல் பெரிது. வானவில்லைப் போல, வந்துபோகும் மின்னலைப் போல இன்று ஆரவார அரசியல் நடத்துவோருடன் ஒப்பிட முடியாத வகையில் அழகேசனாரின் ஆக்க பூர்வ அரசியல் பணிகள் மூங்கில் மரக்காடு போல ஓங்கி எழுமாடம் போலப் பயனும் பாங்கும் கொண்டு அமைந்தன. போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பணியாற்றியபோது அமைக்கப்பட்ட காஷ்மீர் சாலை பிரிவாக்கங்கள், பாம்பன் பாலத் திட்ட ஏற்புகள், சேது சமுத்திரத் திட்டச் சிந்தனைகள், கொச்சி உள்ளிட்ட துறைமுக விரிவாக்கங்கள் எல்லாம் வரலாற்றுத் திருப்பங்கள் ஆகும்.

பின்னர் நீர்ப்பாசன, எரிசக்தி அமைச்சராகப் பொறுப்பில் இருந்தபோது கிருஷ்ணாநதி நீர்ப்பங்கீட்டுத் தீர்வுக்கு வழிகண்டமையும், முடங்கிக்கிடந்த ஸ்ரீசைலம், போச்சம்பாடு அணைத்திட்டங்களை முடுக்கிவிட்டமையும், நெய்வேலி மின்சாரம் நிறைநலம் பெறச் செய்தமையும் என்றும் வாழும் நினைவுகள்; என்றென்றும் வாழ்விக்கும் நிறைவுகள்!

“பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்

     அருமை உடைய செயல்”      (975)

என்பது  அழகேசனார்க்கே அமைந்த குபேரச் செல்வம்; குன்றா மணிவிளக்கம்!

சென்னைக்கு அருகில் மணலியில் எண்ணெய் சுத்திகரிப்பாலை வந்திடவும், காவிரிநதி தீரப் படுகையில் எண்ணெய், எரிவாயுச் சுரங்கங்கள் தோண்டிடவும் அன்றே வழிகண்டவர் அழகேசனார் என்பதை இன்றைய தலைமுறையினர்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

அமைச்சர் பணி போல, அயலகத் தூதர் பணியிலும் முதன்மை பெற்றார் அழகேசனார்.

“தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி

     நன்றிய பயப்பதாம் தூது”      (685)

எனும் இலக்கணத்திற்கே இலக்கியமாகத் திகழ்ந்தார்.

அமைச்சர், அயல்நாட்டில் நமது தூதர் எனும் பணிகள் பலவற்றில் அழகேசர் தலைப்பட்டாலும், அவருடைய நெஞ்சிற்கு இனிய பணியாக நின்றது அவரது கல்விப் பணிதான்! ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், அந்த நாடு, தனது கல்வி முயற்சிகளில் முனைப்பும் முன்நோக்கும் கொண்டிருத்தல் அவசியம் என்பதை அவர் அறிந்திருந்தார். எங்கும் இருள் மண்டியிருக்கிறதே எனப் பழித்துவிட்டுச் சோம்பியிராமல், தன்னால் இயன்றமட்டும் ஒருசில சுடர்களை ஏற்றி வைக்க முற்பட்டார். அச்சுடர்களே பிருந்தாவனம் கல்விக்கூடங்கள்!

கூனூர், ஆத்தூர், கொடைக்கானல் முதலிய தலங்களில் தலைமைபெற்று வரும் இக்கல்விக்கூடங்களை நேரில் கண்டு வியப்படைந்துள்ளேன். அப்போதெல்லாம் இவற்றை உருவாக்கிய சிற்பி அழகேசனார் என் மனத்தே விசுவரூபம் எடுத்து நிற்பார். கல்விப் பணியை ஒரு வேள்வி போலச் செய்யும் விஞ்ஞானியாக, இக்காலத்திற்கு உரிய முனிபுங்கவராக, அவர் விழாக்கோலம் பூணுவார். பிருந்தாவனம் கல்விக்கூடங்கள் விழாமலிந்த பேரூர் போல, வித்தைகள் மலிந்த ஆய்வரங்கமாக வளர்ந்து வருகின்றன.

ஆன்மிகப் பணிகளில் எல்லாம் அவருக்கு நிறைய நாட்டம் உண்டு. அரசியல், ஆன்மிகம் எனும் துறைகளைவிட அருங்கல்வித்துறைக்கு அவர் ஆற்றிய பணிகளே என்னைக் கவர்ந்துள்ளன. ஆன்மிகம் – வரையறுக்க இயலாத ஒரு பெருவெளி; அரசியல் வரையறைக்குள் உட்பட மறுக்கும் ஆரவாரக் கடல்! ஆனால் அருங்கல்விப்பணி ஆக்கம் தரும் அணைக்கட்டுப் போன்றது. நீர்ப்பெருக்கை உரிய பருவத்தே தேக்கிவைத்து வேண்டிய துறைகளில், வேண்டு மட்டும் வழங்கும் அணைபோல, கல்விப்பயிர் புரக்கும் தன்மையது; தகுதியது.

அழகேசனாரின் இலட்சியங்கள் எல்லாம் பிருந்தாவன் பள்ளிகளில் செயல்வடிவம் பெறுகின்றன. எதிர்காலத்தில் இந்த நாட்டில் பெருமையுறப் போகும் செல்வங்கள் எல்லாம் இங்குள்ள உலைக்களங்களில் சீரோடும் சிறப்போடும் வடிவமைக்கப்படுகின்றன. ‘கல்வி என்றாலே வளர்ச்சி’ எனும் விளக்கத்தைச் சில பள்ளிகளில் அவர் நடைமுறைப் படுத்திக் காட்டுகிறார் ‘தாமின்புறுவது உலகின்புறக்கண்டு’ உவகை கொள்ளுகிறார்.

அழகேசனார் ஆயிரம் பிறைகாணும் பெருமைக்கு உரியவராகத் திகழ்கிறார். காலமெல்லாம் பயனுற வாழ்ந்த தமது வாழ்க்கையை நமக்கு வழிகாட்டியாக நல்கியுள்ளார். பிறர் வழிபடும் வண்ணம், தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அண்ணலாக, அறிஞராக அவர் திகழ்கிறார். இத்தகைய அறிஞர்களின் வாழ்க்கையே, ஒரு நாட்டின் வரலாற்றில் சுவடிகளாகச் சேருகின்றன. அவ்வாறு வரலாற்றில் தமது சுவடுகளைப் பதிக்கும் வகையில் வாழ்ந்து, பிறரையும் வாழ்வித்து வரும் அண்ணல்  அழகேசனார் அவர்களின் பெருமை – திருக்குறளைப் போல நிலைபெறுக என வாழ்த்துகிறேன். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வநலமெல்லாம் இங்கே புலப்படுத்தி நிற்கும் இப்பெருந்தகை, பல்லாண்டு வாழ அவர் போற்றி வணங்கும் திருவேங்கடமுடையானை வேண்டுகிறேன்.

தேர்தலும் திருவள்ளுவரும்

Image result for thiruvalluvar

உலகெங்கும் குடியாட்சி மரபுகள் வேரூன்றி வரும் சூழலில் நாம் இருக்கின்றோம். நம் நாட்டில் ‘எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு…!’ எனும் உரிமை பெற்று எழுபதாண்டுகள் ஆகின்றன; இப்போது ‘எங்கும் தேர்தல் என்பதே மூச்சு!’ எனும் பரபரப்பில் இருக்கிறோம். தேர்தல் பரபரப்பு வாழ்க்கைக்கு ஏற்ற பயன்மிகு சிந்தனைகளை வள்ளுவர் சொல்லியுள்ளாரா எனத் தேடுகிறோம்.

வள்ளுவர் அரசியலைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். அவர் முடியாட்சிக் காலத்தே வாழ்ந்தவர். தமிழ்நாட்டில் கோனாட்சியே நிலவியது. எனவே அரசன், வேந்தன், இறைவன் என ஆளும் தலைவனைக் குறிப்பிட்டார். இன்று நாம் வாழ்வது குடியாட்சிக் காலம். இக்காலத்திற்கு வள்ளுவச் சிந்தனைகள் பொருந்துமா?

நிச்சயம் பொருந்தும். எக்காலத்திற்கும், எந்தச் சூழலுக்கும் பொருந்தும் வகையில் வாழ்க்கை அறம் வகுத்திருப்பதே வள்ளுவத் தனிச்சிறப்பு. மன்னராட்சி முறைக்கு அவர் கூறியுள்ள நெறிகள் – மக்களாட்சி முறைக்கும் பாராளுமன்ற அமைச்சரவை ஆட்சி முறைக்கும் ஏற்புடையனவாக இருப்பதே வள்ளுவப் பெருமை. ஆட்சி முறை எதுவாய் இருப்பினும், அடிப்படையான தேவைகளும் முறைகளும் மாறுவதில்லை எனத் தெளிந்தவர் வள்ளுவர். மன்னராட்சி ஆயினும், மக்கள் ஆட்சி ஆயினும் ஒத்திருக்கக்கூடிய அடிப்படைகள் உள்ளன. குடிமக்களின் நலன் கருதி ஆளுதல், ஒற்றுமையை வளர்த்தல், பகையை ஒடுக்குதல், பசி, பிணியின்றி நாட்டைப் புரத்தல், நீர்வளம், நிலவளம், தொழில்வளம் என்பனவற்றைப் பெருக்குதல், எல்லோர்க்கும் ஒத்த உரிமை நல்கி, நடுநிலை வழுவாமல் முறை செய்தல் ஆகியன இருவகை ஆட்சிக்கும் ஏற்புடைய பொதுநல அறங்கள்.

இருவகை ஆட்சியிலும் தலைமைப் பொறுப்பேற்க, நிர்வாகப் பொறுப்பேற்க ஏற்றவர்கள் இருக்க வேண்டும். இப்பதவிகளைப் பெறுவோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பதவியும் அதனால் வரும் அதிகார ஆக்கங்களும் எப்போதும் நிலைபெற்று நிற்பவை எனக் கருதி மனம்போல நடக்கலாமா? பதவியே பெரிதென முறை மீறிச் செயல்படலாமா? பெற்ற பதவி மக்களுக்குப் பணி செய்வதற்கே என உணர்ந்து ஏற்ற பொறுப்பிற்கு உகந்தவாறு பணியாற்ற வேண்டாமா? பதவி இல்லாக் காலத்தும் தம் தூய தொண்டால் மக்கள் மதிக்கும் வகையில் என்றும் தமது மதிப்பினைப் பேணி நடக்க முற்பட வேண்டாமா?

மக்களாட்சித் தேர்தலில் வெற்றி தோல்விகளை, வாக்களிக்கும் மக்கள் நிர்ணயிக்கின்றனர். மக்கள் நலனையே மதித்துத் தொண்டு புரிந்தவர்களை மறுபடி மறுபடி ஆட்சி அரியணையில் ஏற்றுகிறார்கள்; சொந்த சுய லாபத்தையே கருதிப் பதவிப் பொறுப்பை வேட்டைக் காடாக்கியவர்களை இருந்த சுவடு தெரியாமல் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

“நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

     நயம் புரிவாள் எங்கள் தாய் & அவர்

     அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்

     ஆனந்தக் கூத்திடுவாள்….”

எனப் பாரதி பாடியது, இன்றும் நமது குடியாட்சியில் நன்கு புலனாகிறது.

இது ஒருவகையில் கொள்கைக் காலம். அரசியல், மதவியல், அறிவியல், பொருளியல் எனும் துறைதோறும் தத்தம் கொள்கைகளைப் பரப்பக் கட்சிகள் வரிந்து கட்டி வருகின்றன. மக்களிடையே கொள்கை மீது பற்றை ஏற்படுத்துகின்றன என்பதை விட, ஒருவகைக் கொள்கை வெறியையே மூட்டி விடுகின்றன. பற்று எனும் நெறியைக் காட்டுவோரும், அதனை வெறியாக்கி மூட்டுவோரும் அவ்வச் சூழலுக்கேற்றபடி தலைமை பெற்றுக் கொள்ளுவார்கள். ஆனால் அத்தலைமைப் பேறு எவ்வளவு காலம் நீடிக்கும்?

இது மறுவகையில் பதவிக் காலம். உயர்ந்த பதவி கிட்டின், தானும் உயர்ந்த வகைச் செருக்குக் கொள்ளுகிறான். பதவி தாழின், தானும் தாழ்ந்தவனாக எண்ணிச் சோர்கிறான். உலகமும் பதவியின் ஏற்ற இறக்கத்திற்குத் தக்கவாறே ஒருவரின் தராதரத்தையும் மதிப்பிட முற்படுகிறது. நூறு ரூபாய் சம்பாதிப்பவனை விட, ஆயிரம் சம்பாதிப்பவன் தரத்தில், குணத்தில் உயர்ந்தவன் எனக் கருதி மரியாதை செய்கிறது. பதவிக்கும் பண்புக்கும் நேரடியான காரண காரியத் தொடர்பு இல்லை என்பதைப் புரிந்து கொண்ட தாகத் தெரியவில்லை. அதிகாரத்தை ஒருவர் இழக்க நேர்ந்தால் – அவர் எல்லாவற்றிற்குமே தகுதியற்றவர் என ஒதுக்கிவிடும் மனப்பாங்கும் சரியாகாது. எனவே – அவரவர் குணநலம் – ஒழுக்கம் – நன்னடை – எனும் உரைகற்களைக் கொண்டே ஒருவரை மதிப்பிட வேண்டும். பதவியாலோ, செல்வாக்காலோ ஒருவர் இன்று மேல் இருப்பார்; நாளை அவர் கீழே வந்துவிடுவார். குணம் எனும் குன்றேறியவர் எனினும், எளிமையாக, அடக்கமாக அவர் என்றும் ஒரே நிலையில் வாழ்வார். அவ்வாறு அடக்கமாக இருப்பதால்- அவர் கீழவர் ஆகமாட்டார்.

“மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்; கீழ்இருந்தும்

     கீழ்அல்லார் கீழ்அல் லவர்”          (973)

மேலான நிலையில் இருந்தாலும் மேன்மையற்ற நெஞ்சினர் ஒருபோதும் மேலானவராகக் கருதப்பட மாட்டார்; கீழான ஏழ்மை நிலையிலிருந்தாலும் கீழ்த்தரமான ஒழுக்கமில்லாதவர் ஒருபோதும் கீழானவராகி விட மாட்டார் எனப் ‘பெருமை’ எனும் அதிகாரத்தில் வரும் குறட்பாக் கருத்து, குடியாட்சித் தேர்தல் காலத்திற்கு மிகமிக ஏற்ற சிந்தனையை வழங்குகிறது.