என்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2

Image result for thirukkural“இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

     உணர விரித்துஉரையா தார்”               (650)

படித்ததை சிரமப்பட்டு விளக்கிச் சொல்லி அதைப் பரப்புவதும் சிரமமானது. கொத்தாக மலர் மலர்ந்திருக்கிறது. அந்த மலர்கள் மணம் வீசாத காகிதப் பூக்களாக இருந்தால் பயனில்லை இவைகளையெல்லாம் தெரிந்தும், பிறர்க்கு உணர்த்தியும், சிரமப்பட்டு தாம் படித்ததை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழாமல் போய்விட்டால் அவன் பேதையிலும் பேதை என்கிறார் வள்ளுவர். ஆகவே திருக்குறளைப் படிக்கின்ற நோக்கமே அதை வாழ்வியல் நூலாக, வருகின்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடியதாக இருப்பதுதான் என்பதைக் கண்டேன்.

சான்றாக சில உதாரணங்களைக் கூறுவேன். திருக்குறள் எப்படி எல்லாம் என் வாழ்க்கையில் பயன்பட்டது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு மனிதன் சிறப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அவன் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும். எனது திருமணம் என் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

ஒரு குடும்பம் வெற்றி பெற வேண்டும் எனச் சொன்னால், நல்ல மனைவி, நல்ல மக்கள், நல்ல நண்பர்கள், நல்ல சான்றோர்கள், நல்ல எண்ணம் இவையெல்லாம் அமைந்திருந்தால் தான் அந்த குடும்பமும் அவனும் சிறப்பாக இருக்க முடியும்.

“இல்லதென் இல்லவள் மாண்பானால்?”     (53)

என்ற வகையிலே எனது துணைவியார் அமைந்திருந்தார். எனது வாழ்க்கையின் அனுபவத்தைச் சொல்வதானால் அடக்கமாகச் சொல்கிறேன். குழந்தைகளெல்லாம் அன்பு மிகுந்தவர்களாக இருந்தார்கள். மாலையில் பேசிக் கொண்டிருக்கும்பொழுது ஆதித்தனார் ஒரு சிறந்த செய்தி சொன்னார்; ஆண்குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் அன்பாக இருப்பார்கள் என்றார். அந்த அன்பைப் படித்திருக்கிறோம். திருக்குறளில் படித்ததை வாழ்வில் அனுபவிக்கும் பொழுதுதான் அதன் பெருமையை உணர்ந்தேன். இரண்டு ஆண்டுகளுக்குமுன் நான் அப்பல்லோ மருத்துவமனையில் நலிவுற்று இருந்த பொழுது பிள்ளைகளும் துணையாக இருந்தார்கள். நான் ஒரு சிறு அசைவு அசைந்தாலும் உதவிக்கு வந்து விடுவார்கள். பத்து நாட்கள் அவர்கள் இருந்து உதவிகள் செய்தது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. கடைசியில் தான் தெரிந்தது. அவர்கள் தூங்கவே இல்லை என்பது, அந்த அன்பினது பெருக்கை அப்பொழுது தான் உணர்ந்தேன் என்னை அறியாமலே கண்களில் நீர் வடிந்தது.

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்

     புன்கண்நீர் பூசல் தரும்”        (71)

துன்பம் வந்த சமயத்திலேதான் என் குடும்பத்தினர் உறுதுணையாகவும், நெகிழ்ந்தும் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். துன்பம் வரும் பொழுது நெருக்கமான வர்கள் அன்பு காட்டும் சமயத்தில்தான் அன்பின் உண்மைப் பொருளை, அன்பின் உயிர்ப்பை நன்றாக உணரமுடிகிறது.

இதுபோன்று பிரச்சினைகள் வருவது இயற்கை எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரி மிகப்பெரிய அரசனாக இருந்தாலும் சரி, பெரிய செல்வந்தனாக இருந்தாலும் சரி. துன்பங்கள் வரும். இன்பம் போல துன்பமும் இயற்கையானது. அந்தத் துன்பத்தை வெல்லுவதற்கு வழி சொல்கிறார் வள்ளுவர்.

“இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்

     கையாறாக் கொள்ளாதாம் மேல்.”     (627)

எவ்வாறு இன்பம் இயற்கையானதோ அவ்வாறு துன்பமும் இயற்கையானது. இன்பமும், துன்பமும் இரவு பகல் போல வரும். வாழ்க்கையிலே துன்பத்தைக் கண்டு அஞ்சாதே என்ற தைரியத்தைக் கொடுக்கிறார், அந்தத் துன்பத்தை வெல்லுவதற்கு வழி சொல்கிறார் வள்ளுவர்.

“இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்

     ஒன்னார் விழையும் சிறப்பு”          (630)

இன்னாமையையே இனிமையாக்கிக் கொண்டால், அதையே சுவையாக்கிக் கொண்டால் துன்பம் உங்களை விட்டு ஓடிவிடும். உயர்வுக்கு அடிப்படையாவது நல்ல பேச்சும், நல்ல எண்ணமும், நல்ல சொல்லும்தான் அத்தகைய தூய உள்ளம் இருந்தால் மிகப்பெரிய ஆற்றல் கிடைக்கும் அந்த ஆற்றலைக் கொண்டு எல்லாத் துன்பங்களையும் வென்றுவிடலாம்.

“வெள்ளத்து அனைய இடும்பை அறிவுஉடையான்

 உள்ளத்தின் உள்ளக் கெடும்”   (622)

உள்ளத்தால் நினைத்தாலே துன்பங்கள் ஓடிவிடும் என்று சொல்கிறார் வள்ளுவர். அப்படியானால் இந்த வாழ்க்கையில் வெற்றியடைய வள்ளுவர் என்ன சொல்கிறார்?

நம்மைக் காட்டிலும் ஒரு பேராற்றல் இருக்கிறது அது நமக்கு வழிகாட்டுகிறது என்பதை உணர்ந்தேன் முதலில் நான் இறைமறுப்புக் கொள்கையைத்தான் பேசிக் கொண்டிருந்தேன்; அனுபவமின்மையால் அறிவுப் பூர்வமாக ஒரு தருக்கம் என்ற முறையில் நான் பேசிக் கொண்டிருந்தேன். காலப்போக்கில் துன்பங்களும் சோதனைகளும் வரும் சமயத்திலேதான் நன்றாகக் கண்டு கொண்டேன். நம்மைக் காட்டிலும் மிகப்பெரிய ஓர் அற்புதமான சக்தி நம்மை வழி நடத்துகிறது. என்பதை உணர்ந்தேன். துன்பத்திலிருந்தும், துயரத்திலிருந்தும் நீங்க வேண்டும் என்று சொன்னால், ஒரு பெரிய சக்தியை, பரம்பொருளை அது எந்தத் தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று கருதினேன். அதைத் தான் திருவள்ளுவர் சொல்கிறார்.

‘நீ உவமை உள்ளவன், சிற்றறிவு உள்ளவன். இறைவன் பேரறிவாளன், நீ பேரறிவாளனாகிய இறைவன்தாளைப் பற்றிக் கொண்டால்தான் அந்தத் துன்பத்திலிருந்து நீங்க முடியும்.’

“தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

 மனக்கவலை மாற்றல் அரிது”        (7)

இடும்பைக்கு இடும்பை படுத்த வேண்டும் என்று சொன்னால் இறைவன் தாளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

“வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

 யாண்டும் இடும்பை இல”          (4)

‘விருப்பு வெறுப்பு இல்லாத இறைவன் தாளைப் பிடித்தால் தான் உனது துன்பத்தை நீக்க முடியும்’ என்று வள்ளுவர் சொல்கிறார்.

ஆகவே இறைவன் எங்கு இருக்கிறான்? வேறு எங்கும் இல்லை. நம் உள்ளத்தில்தான் இருக்கிறான். அவனைக் கண்டுபிடித்து அவன் தாளினைச் சரணடைந்தால்தான் வெற்றிபெற முடியும் என்று சொல்கிறார் வள்ளுவர்.

திருவாசகத்தில் மனம் உருகும்படி மாணிக்கவாசகர் சொல்கிறார்:

யான்உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

     எங்குஎழுந்து அருளுவது இனியே?”

தெய்வத்தைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டோம் என்று சொன்னால் உள்ளொளியைப் பெருக்கலாம், உலப்பிலா ஆனந்தம் பெறலாம்.

இறைவன் பிரபஞ்சத்தில் உள்ள ‘மேக்ரோ’. அதை ‘மைக்ரோ’வாக உள்ளத்தில் பிடித்துக் கொண்டோமானால் அவன் நமக்கு அருள்புரிவான்.

குடும்பமும் தெய்வமும் ஒன்றுதான். தெய்வத்தைப் போற்றினோமானால் குடும்பம் வெற்றி பெறும். குடும்பம் வெற்றி பெற்றதானால் நாம் வெற்றி பெற்றவர் ஆவோம்.

அன்புநெறியைப் பார்க்கிற சமயத்திலே,

“அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து

     இன்புற்றார் எய்தும் சிறப்பு”         (75)

என்பதனை என் வாழ்வில் நேரிடையாகக் கண்டேன். என்னுடைய பிள்ளைகளையும் குடும்பத்திலே அன்பு கொண்டிருக்கிற தாய் தந்தையரையும் பார்க்கின்ற சமயத்திலே, அவர்கள் காட்டும் அன்பைப் பார்க்கின்ற சமயத்திலே திருவாசகம்தான் நினைவுக்கு வருகிறது.

நாம் தெய்வத்தை வணங்குகின்ற சமயத்திலும் குடும்பத்தைப் போற்றுகின்ற சமயத்திலும் ஒரு சதுரப்பாடு உடையவர்கள் ஆகிறோம் என்பதைத் திருவாசகமும் காட்டுகிறது; திருவள்ளுவரும் காட்டுகிறார்.

இலக்கியங்களைப் படிக்கும் போது அதனைச் சுவைக்கு மட்டும் படிக்கவில்லை என்பதை நேரிடையாகக் கண்டு உணர்ந்தேன்.

“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

     மழலைச்சொல் கேளா தவர்”         (66)

என்பதையும்,

“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

     சிறுகை அளாவிய கூழ்”        (64)

என்பதையும் திருமணமான பிறகு நன்கு உணர்ந்து கொண்டேன். நம்முடைய குழந்தைகள், பேரக் குழந்தைகள் வந்தபோது அவர்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்று சொன்னாலே அது அமிழ்தினும் பெரிதாக இருப்பதை உணர்ந்தேன் அதை எல்லாம் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் உணர்ந்திருப்பீர்கள். கல்கண்டு இனிப்பு அது இனிக்கும் என்பது தெரியும் எப்படி இனிக்கும் என்பது சாப்பிட்டு அனுபவித்தால் தான் தெரியும். திருக்குறளில் வள்ளுவர் நெகிழும்படி சொன்னவைகளையெல்லாம் உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறேன்.

நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம் கணினி யுகத்தில் வாழ்கிறோம். ‘இண்டர்நெட்’ உலகத்தில் வாழ்கிறோம். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இப்போது இருக்கும் ‘கம்யுனிகேசன்’, இப்போது பேசப்படுகின்ற ‘ஃபியூச்சாரலஜி’, ‘டெலிகாம் பவர்’ எல்லாம் இருந்ததா? நிறைய நேரம் மட்டும் கிடைத்தது.

திருவள்ளுவர் தொழில் செய்யக்கூடிய உத்திகளை யெல்லாம் சொல்லித் தருகிறார். ‘மேனேஜ்மென்ட் கான்சப்ட்’ என்று சொல்லக் கூடியவைகளை எல்லாம் சொல்கிறார். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் உலகநாடுகளெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் அருமையான உண்மையைச் சொன்னார். அவர் திருக்குறளின் மீது அதிகமான ஈடுபாடு கொண்டவர். “என் வாழ்க்கைக்குத் திருப்புமுனையாக அமைந்தது குர்ஆனும் திருக்குறளும் தான். என்னை உயர்த்தியதும் இவைகள் தான்” என்று கூறிவிட்டு, அதற்கான காரணங் களையும் சொல்லி இருக்கிறார்.

ஒரு நாடு சிறப்பாக இருப்பதற்கு அடிப்படையான உண்மைகள் ஐந்து வேண்டும் என்று கூறினார் வள்ளுவர்.

“பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்

     அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து”         (738)

இது உலக நாடுகளில் எல்லாம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது ஒரு மனிதனுக்கும் பொருந்தும், ஒரு நாட்டுக்கும் பொருந்தும். ஒரு மனிதனை வாழ்த்தும்போது, ஆகியன வாய்க்க வேண்டும் என்பார்கள். உடல் பிணியும் உள்ளப் பிணியும் இல்லாமல் இருக்க வேண்டும். சொத்து இருக்க வேண்டும். சொத்திருந்தால் மட்டும் போதாது அதற்கு லாபம் இருக்க வேண்டும். பிரொடக்டிவிட்டி இருக்க வேண்டும். பொது மகிழ்ச்சி (சோசியல் ஹேப்பினஸ்) இருக்க வேண்டும். அக மகிழ்ச்சி இருக்க வேண்டும். மக்களுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும் நாட்டுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும். இது நாட்டுக்கும் பொருந்தும். ஒரு தனி மனிதனுக்கும் பொருந்தும். இந்த அருமையான குறளை அப்துல் கலாம் மேற்கோள் காட்டிப் பேசினார். இன்று ‘டெலிகேசன் ஆஃப் பவர்’ என்று சொல்கிறோம். ‘செலக்சன் ஆஃப் பர்சன்’, ‘ஃபியூச்சரலாஜி’ என்று சொல்லுகிறோம். இவைகளையெல்லாம் திருவள்ளுவர் சொல்லுகிறார் என்பதைப் பார்க்கிற சமயத்திலே நான் அதிசயித்துப் போனேன்.

ஒரு தொழில் நடத்துவது எப்படி? எவ்வாறு திட்டமிடுவது? எவ்வாறு நபர்களைத் தேர்ந்தெடுப்பது? மிகச்சிறப்பாக வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ‘டெலிகேசன் ஆஃப் பவர்’ என்பது அமெரிக்காவில் உள்ள திட்டம். அதைப் பயன்படுத்திக் கொள்கிறோம். மிகப்பெரிய புரஃபொசனலிஸ்ட்-ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும் அந்த புரஃபொசனலிஸ்ட்டிடம் முழுமையாகப் பொறுப்பை ஒப்படைத்து விடவேண்டும். அப்போதுதான் அந்த தொழில் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். இதனைத் திருவள்ளுவர் அப்பொழுதே சொல்லியிருக்கிறார். பொதுவாக ஙி.ஙி.கி., வி.ஙி.கி., படிக்கிற பொழுது 5 றிs சொல்லுவார்கள்: பாலிஸி, பிளானிங், பெர்சனல் புரகிராம், ப்ரொசீஜர்ஸ், ஃபெர்பார்மன்ஸ்.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

     அதனை அவன்கண் விடல்”          (517)

என்னும் வள்ளுவம் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.

ஒரு காரியத்தை முடிப்பதற்கு ‘டெலிகேசன் ஆஃப் பவர்’ ஒருவனைத் தேர்ந்தெடுத்தபிறகு அதனை அவனிடம் விட்டுவிடு என்கிறார். சரியான நபரைத் தேர்ந்தெடுக்கும் முன்னரே அவரை நம்பிவிடாதே என்கிறார்.

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

     தீரா இடும்பை தரும்”               (510)

“தேறற்க யாரையும் தேராது; தேர்ந்தபின்

     தேறுக தேறும் பொருள்”       (509)

ஒருவரை ஆராய்ந்து எடுத்தபிறகு அவரைக் கண்காணிக்க வேண்டுமே தவிர தலையிடக்கூடாது. ஒருசெடி வளரும் போது அதனைத் தோண்டி வேர் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று பார்ப்பது போல் ஆகிவிடும்.

“வினைக்குஉரிமை நாடியபின்றை அவனை

     அதற்குஉரிய னாகச் செயல்”         (518)

13827total visits,1visits today

One comment

  • Saravanan t

    By Saravanan t

    Reply

    மிகவும் நன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>