கள்ளுண்ணாமை

சமுதாயம் சிக்கல்கள், துன்பங்கள் நீங்கி இனிதே செழித்து ஓங்கி வளர வேண்டும்.

சமுதாயத்திற்குத் துன்பங்கள் ஏற்படுத்துவன எல்லாம் மக்களின் தவறான நடத்தைகளும் குற்றங்களும் ஆகும். குற்றம் என்பது தனக்கே இழைத்துக் கொள்ளும் தீங்கும், பிற மனிதர்களுக்கும் சமுதாயத்திற்கும் இழைக்கும் தீங்கும் ஆகும்.

இக்குற்றங்கள் பழங்காலத்திலிருந்தே தொடர்ந்து வந்துள்ளன. இக்குற்றங்கள் இன்று மிகுதியும் பெருகியுள்ளன.

இக்குற்றங்களும் தீமைகளும் நீக்கப்பட்டால்தான் சமுதாயம் இன்பம் நிறைந்ததாய், வளம் நிறைந்ததாய் வாழ்வு பெறும்.

சமுதாயக் குற்றங்களில் இன்று தலையாய குற்றமாய்ப் பெருகி வருவது குடி கெடுக்கும் குடி ஆகும். சிறுமை பல செய்து சீரழித்து வறுமையையும் துன்பத்தையும் பரிசாகத் தருவது குடியாகும்.

விரைவில் வளரும் புறநாகரிகமும் மாற்றங்களும், அக நாகரிகத்தை வளர்க்கவில்லை. தன்னலம் மிகுந்து, சூழலைப் பாழ்படுத்தி மற்றவர்களைப் பற்றி அக்கறையின்றி, பொறுப்புணர்வு இல்லாமல் வாழும்போது கேடு சூழ்கின்றது. வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம், ஏமாற்றங்கள், மனக்குறைகள், குடும்பப் போராட்டம் இவைகளால் எழும் கசப்புணர்வுகள், குற்றங்கள் பெருக வித்தாகின்றன.

குடி மனிதனின் சிந்தனை ஆற்றலையும், ஆக்க அறிவினையும் மழுங்கச் செய்துவிடுகிறது. குடிப்பழக்கம் ஒடுக்கப்படாவிட்டால் சமுதாய நிலை பாழ்பட்டுப் போகும். குடி, மனிதன் மனத்தை மயங்க வைத்து, தீய நினைவுகளை உருவாக்கும். தீய நினைவுகளின் பயன்களாகவும் பலன்களாகவும் விளைபவை கீழ்மையும், துயரும், துன்பமும் ஆகும்.

கள்ளும், மதுவும் மனிதரை மயக்கி அழிக்கும் ஆற்றல் உள்ளவை. கள்ளுண்டவர் நஞ்சுண்டவர் ஆவர். கள் வெறியால் என்றும் போதையிலே மயங்கி, பேதையாய், பிணம் போல் கிடப்பர். இறந்தவர்களுக்கும் கள்ளுண்டு மதுவுண்டு மயங்கிக் கிடப்பவருக்கும் வேறுபாடு இல்லை, வேற்றுமையில்லை என்று குடியைக் கடிந்து பேசுவார் வள்ளுவர்.

“துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர்; எஞ்ஞான்றும்

     நஞ்சுஉண்பார் கள்உண் பவர்”        (926)

குடி வெறியர் பகைவருக்கு மிகவும் எளியவர் ஆவர். குடி வெறியரைக் கண்டு பகைவர் அஞ்சமாட்டார்; ஏளனம் செய்வார்.

பெற்ற தாய் குற்றங்களைப் பொறுக்கக் கூடியவள். தாய்ப்பாசத்திற்கு இணையான வேறு பாசம் உண்டோ? குற்றங்களை எல்லாம், வெறுக்கும் தகைமைகளை எல்லாம் பொறுக்கும் பெற்ற தாயும் குடியர் முகத்தில் விழிக்காது வெறுத்து ஒதுக்குவாள் என்றால் சான்றோர் வெறுப்பைக் கூறவும் இயலுமோ?

“ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச்

     சான்றோர் முகத்துக் களி?”           (923)

பணத்தையும் கொடுத்து உடலைக் கெடுத்துப் பிணம் போல் படுக்கச் செய்யும் போதையில் விருப்பங்கொண்ட பேதைகள், அறிவிலிகள் போல் வேறு யாரும் உண்டா?

“கைஅறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

     மெய்அறி யாமை கொளல்”               (925)

என்று இரக்கப்படுவர் வள்ளுவர்.

கள்ளின் மேல் விருப்பங்கொண்டு, கள்ளின்மேல் காதல் கொண்டு திரிபவர் எப்போதும் யாராலும் அஞ்சப்பட மாட்டார்; நன்மதிப்பையும் புகழையும் இழப்பர்.

“உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்

     கட்காதல் கொண்டுஒழுகு வார்”      (921)

பாதை மாறிச் சென்று என்றும்  போதை கொண்ட, பேதையருக்கு, கள்ளுண்டு மயங்கிக் களித்தவனுக்குக் காரணம் காட்டித் தெளிவித்தல் வீணாக முடியும். அம்முயற்சி நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுதலுக்கு இணையாகும்.

“களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

     குளித்தாணைத் தீத்துரீஇ யற்று”       (929)

மதியை அழித்து மானம் கெடுக்கும் குடிப்பெருமை அழிக்கும் குடியை நீக்கிச் சமுதாயம் வாழ வேண்டும்.

மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா போன்ற பெரியவர்கள் மதுவிலக்கில் தீரத்தோடு காட்டிய தீவிரம் இன்று பின்பற்றப் பட வேண்டும்.

குடியால் விளையும் தீமைகளை நன்கு உணர்ந்து, குடியால் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படும் சீரழிவு, வேலை இழப்பு, உழைப்புத் திறன் குறைதல், குழந்தைகளின் எதிர்காலம் பாழ்படுதல் இவைகளையெல்லாம் சிந்தித்து ஹரியானா மாநிலத்தைப் போல் நம் நாட்டிலும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்பட வேண்டும்.

‘உண்ணற்க கள்ளை’ எனக் கள்ளுண்ணாமையைத் தனி நபர் ஒழுக்கமாகவும் சமுதாய ஒழுக்கமாகவும் போற்ற வேண்டும்.

சமுதாய வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் முடிவில் இன்பம் தரும் செயலாயின் முதலில் செயல்படுத்தும் போது துன்பம் வரினும் தொடர்ந்து சோர்வின்றி உறுதியோடு செய்து முடித்தல் வேண்டும்.

“துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி

     இன்பம் பயக்கும் வினை”      (669)

கற்புடைமை

கற்புடைமை*

மனத்தைச் செம்மைப்படுத்தி, பண்படுத்தி, அலைய விடாமல் ஒருமைப்படுத்தி தன்னைக் காத்துக் கொள்ளும் மன உறுதியே கற்பாகும். கற்பு பெண்ணுக்கும் ஆணுக்கும் மாந்தர் அனைவருக்கும் பொதுவானது.

நாம் வாழும் சமுதாயம் பெரும் மாற்றம் பெற்று வளர்ந்து வருகிறது. பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்காமல், ஆண்களைப் போல வெளியில் கடமை உணர்வோடு வேலை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தை. மனைவியைக் கணவன் மட்டும் காப்பாற்றுதல் என்ற கொள்கை மாறிவருகிறது. திருக்குறளில் வள்ளுவர் மனையறத்திற்குக் கணவனைத் ‘துணை’ என்று கூறவில்லை. மனைவியைத்தான் ‘வாழ்க்கைத் துணை’ என்று கூறுகிறார்.

மனைவி தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும் ஆற்றல் உடையவளாக இருக்க வேண்டும். தன்னைத் துணையாக நம்பி மணம் செய்துகொண்ட கணவனைத் தன் கடமைகளாலும், தொண்டுகளாலும் காப்பாற்றும் திறன் படைத்தவளாக இருக்க வேண்டும்.

தன்னை நேசிக்கும், நம்பியிருக்கும் கணவனை அன்பினால் இணைத்துக்கொண்டு, அவனே எல்லாம் என்று அவனிடம் கொண்ட உறவு ஒன்றிலே ஒன்றி நிற்கும் மன உறுதியே, மனத்திண்மையே கற்பாகும்.

இம் மனஉறுதியே, மனத்திண்மையே அவளுக்கு காவல். எந்தச் சூழலிலும் பிற ஆண்களிடமும் தன் மனத்தில் எதிர்பாராது தோன்றும் ஆசைகளிலிருந்தும் சலனங்களிலிருந்தும் தன்னைக் காத்துக் கொள்வதுதான் மனத்திண்மையாகிய ஒழுக்கம் மிகுந்த கற்புடைமை ஆகும். கணவன், குடும்ப நல்வாழ்வு, பிறந்த குடி, புகுந்த குடி இவைகளின் மேன்மைக்காகப் பெண்ணானவள் தன்னையே அர்ப்பணித்துக் கொள்கிறாள்.

தன்னையும், தன்னை மணந்தவனையும், தன் குடிப்பெயரையும் காப்பாற்றியும், எக்காலத்திலும் அப்பெருமையில் சிறிதுகூட வழுவிவிடாத ‘சோர்விலாத’ பெண்ணே பெருஞ்சிறப்புப் பெற்றவள். வாழ்க்கைக்கு இவளைத் தவிர துணை வேறு யாதும் இல்லை. இத்தகைய பெண்ணை ஒருவன் மனைவியாக அடையும் பேற்றினை விட மிக உயர்ந்த பேறு வேறு ஒன்றும் இல்லை என்பதை வள்ளுவர்,

“பெண்ணின் பெருந்தக்க யாவுள? கற்பென்னும்

     திண்மை உண்டாகப் பெறின்?”       (54)

என்று கூறுவார்.

எப்போதும் கணவனின் நல்வாழ்வு ஒன்றையே கருதி வாழ்பவள், அந்நினைவிலே ஒன்றிவிடுவதால் தவம் செய்பவர்களின் ஆற்றலைப் பெற்றுவிடுகிறாள். சாதாரணப் பெண் இவ்வொன்றிய உணர்வால் மாற்றம் பெற்று அளப்பரிய ஆற்றல் பெற்றுவிடுகிறாள்; சக்தி வடிவாகிவிடு கின்றாள். அவள் எண்ணியதை எண்ணியபடி பெறும் தவ ஆற்றல் பெறுகின்றாள்.

“வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

     வீழ்வார் அளிக்கும் அளி”                 (1192)

என்பார் வள்ளுவர். கணவன் மனைவிக்குக் காலமறிந்து காட்டும் பேரன்பு போல், காலமறிந்து உயிர்களை வாழவைக்கும் பருவமழை போன்றவள் கற்புடைய பெண், இப்பெண் பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யும் மழை போன்றவள். இச்சிறப்பை வள்ளுவர்,

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்

     பெய்எனப் பெய்யும் மழை”               (55)

என்று பாராட்டுவார்.

பெண்களுக்குக் கற்பு எவ்வளவு அவசியமோ அதே போல ஆண்களுக்கும் கற்பு அவசியம் என்று வலியுறுத்துவார் வள்ளுவர்! பெண்களின் கற்பு நிலைக்க வேண்டுமானால் ஆண்களும் தங்கள் கற்பைக் காப்பாற்ற வேண்டும். அதனால்தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்பைப் பொது நெறியாக வைக்க வேண்டும் என்று பாரதியும் வலியுறுத்துவார். ‘பிறன்மனை நோக்காத பேராண்மை’ என்று பிறன்மனை நோக்காத ஆண்மையே பேராண்மை என்றும், மற்றவையெல்லாம் ஆண்மையன்று என்றும் வள்ளுவர் கூறுவார்.

மனத்தை அலையவிட்டு, ஒழுக்கமில்லாமல் தீயஆசை என்ற புதைமணலில் சிக்கி, மயக்கம் காரணமாகத் தீய செயலில் இறங்குபவன் இனிய இல்லற வாழ்வைச் சிதைத்து விடுகிறான்; சமுதாயத்தின் புனித அமைப்பைச் சீர்குலைத்து விடுகிறான்; சமுதாயப் புற்றுநோய் ஆகிவிடுகிறான்; தானும் அழிந்தும், பிறரும் அழிவதற்குக் காரணமாகி விடுகின்றான்.

“அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

     நின்றாரின் பேதையார் இல்.”              (142)

“பகை,பாவம், அச்சம், பழிஎன நான்கும்

     இகவாவாம் இல்இறப்பான் கண்”           (146)

என்று கடிந்து பேசுவார் வள்ளுவர்.

பெண்ணின் கற்பு என்பது பெண்ணின் மனத்திண்மை, சுயகட்டுப்பாடு, மனவுறுதி ஆகும். புறக்கட்டுப்பாடு, சிறை காக்கும் காப்பு, காப்பு அன்று, பாதுகாப்பு அன்று; குடும்பப் பொறுப்பும், மான உணர்வும், சுயகௌரவமுமே பாதுகாக்கும் அரண்கள். இவ்வுண்மைகள் ஆண்களுக்கும் பொருந்தும்.

“சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர்

     நிறைகாக்கும் காப்பே தலை.”        (57)

 

 

செய்க பொருளை*

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திடப்’ பொருள் வேண்டும். ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!’ என அறுதியிட்டுக் கூறிய வள்ளுவப் பேராசான், ‘செய்க பொருளை!’ என மாந்தருக்கெல்லாம் அறிவுறுத்துகிறார். குறள் முழுவதிலும், பல்வேறு மாந்தருக்கும் நிலைக்கும் ஏற்றவாறு, வெவ்வேறு நடைத்திறங்களைக் கையாளும் வள்ளுவச் செம்மல், ‘உண்ணற்க கள்ளை’ எனத் தீய பழக்கத்தைக் கைவிடுமாறு வியங்கோளாக வேண்டுதல் நடையில் கூறிய வள்ளுவர், இங்கே, ‘செய்க பொருளை!’ என ஆக்க நெறிக்கு ஆட்பட வருமாறு கட்டளையிடுகிறார்; கண்டிப்பாக வற்புறுத்துகிறார்.

தனிநபர், குடும்ப, சமுதாய உயர்வுகளுக்கு மட்டுமன்றி, ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் பொருள் வளம் மிகமிக இன்றியமையாதது. உலகின் புகழ்பெற்ற நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், இரசாயனம், உலக அமைதி, இலக்கியம் ஆகியவற்றில் சாதனை புரிந்த சான்றோர்க்கு வழங்கப்படுவதோடு மற்றுமொரு மாண்பார்ந்த துறைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதுதான் பொருளாதாரம் எனும் பொலிவுமிகு துறை. இப் பொருளாதார இயலில், புதியதொரு சித்தாந்தத்தை ஆய்ந்து விளங்கும் அறிஞருக்கு அப்பரிசு அளிக்கப்படுகிறது. வரலாறு, புவியியல், தத்துவ இயல் முதலியவற்றிற்குக் கிட்டாத நோபல் பரிசைப் பெறும் பெருமையும் பொருளாதார இயலுக்குக் கிட்டியிருப்பதே ‘பொருள்’ எனும் வாழ்வுண்மைக்கு அளிக்கப்படும் சிகரச் சிறப்பு எனக் கருதலாம்.

தமிழர்கள் வாழ்க்கை எனும் மாடத்திற்கு நாட்டிக் கொண்ட உறுதிப் பொருள்களான அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் தொல்காப்பியம் தொட்டு, அனைத்துக் காலங்களிலும், புதுப்புதுச் சிந்தனைகளால் பொலிவு பெற்று, மெருகேறி வந்துள்ளன. ஆனால், வள்ளுவர், ‘வீடு’ என்பதனைத் தனியாக விரித்துப் பேசவில்லை! அறம், பொருள், இன்பம் என முப்பாலாக்கி, அறநெறிக்கும், இன்ப நுகர்விற்கும், பொருளையே நடுவணாக அமைத்து, வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட வேண்டுமானால், வையகத்துள் வாழ்வாங்கு, இன்பமுற வாழ்ந்தால் போதும் என எல்லை கோலுகிறார்.

மனித இனம் கண்ட வலிமையானதொரு சமுதாய வரன்முறை ‘நாடு’ எனும் அமைப்பு. இந்த நாடு எனும் நிலப்பரப்பு மேடாக இருக்கலாம், பள்ளமாக இருக்கலாம்; காடாக இருக்கலாம், கட்டாந்தரையாகப் போகலாம்; பசுமையாகச் செழிக்கலாம், பாலைவனமாகவும் மாறிப் போகலாம். ஔவைப் பெருமாட்டி அருளிய புறநானூற்றுப் பாடல்,

“நாடாகொன்றோ, காடாகொன்றோ;

     அவலாகொன்றோ, மிசையாகொன்றோ;

     எவ்வழி நல்லவர் ஆடவர்;

     அவ்வழி நல்லை வாழிய நிலனே”          (187)

என மக்களோடு நிலத்தை வாழ்த்துவது போல, வாழும் நிலப்பகுதி எப்படி இருப்பினும், அதில் வதியும் மக்கள், நல்லவர்களாய், வல்லவர்களாய் இருப்பின், நிலமும் சிறந்து உயரும்; நிலத்தில் வாழும் மக்களும் நிலை உயர்ந்து தலைமை பெறுவர் என வரலாற்றில் படிக்கிறோம்.

வள்ளுவர் ஒரு ‘நாடு’ என்பது, எப்படி எல்லாம் இருத்தல் வேண்டும் என்பதற்குத் தனி அதிகாரமே செய்துள்ளார். வள்ளுவரைப் போல உலகில், நாடு என்பதனை விளக்க, சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில், சாணக்கியர், மாக்கியவெல்லி, மார்க்ஸ் முதலியோர் காலம் காலமாக எண்ணற்ற இலக்கணங்களைப் புதுப்புதுவகையாய் எழுதி இருப்பினும் அவை எல்லாம் வள்ளுவரது ‘நாடு’ அதிகாரத்தின் 10 குறட்களுக்கு உள்ளேயே அடங்கி விடுகின்றன. அந்த அளவுக்கு அடிப்படை உண்மைகளை அழுத்தமாகச் சொல்லியுள்ளார் வள்ளுவர் பெருமான்.

‘நாடு’ என்பது நாடாத வளங்களை, எல்லாம், தன்னகத்தே கொண்டதாக அமைந்திருப்பது சிறப்பு. எல்லா நாட்டிற்கும் இத்தகைய இயற்கைக் கொடை கிட்டிவிடுவதில்லை.

ஒரு நாட்டில் எவ்வளவுதான் இயற்கைச் செல்வங்களும், எண்ணற்ற கனி வளங்களும், ஏடு தொலையாத நிதி நலன்களும் எல்லைகாணவியலாது பொதிந்து கிடந்தாலும் அவை எல்லாம், ‘தொட்டனைத்தூறும் மணற்கேணியைப் போல’ மனிதர்களின் தொடர்ந்த முயற்சிக்கும், முற்போக்குச் சிந்தனை முனைப்பிற்கும் தக்கவாறே ஒன்றாய் பலவாய் பயன் நல்கும்.

ஒரு நாட்டிற்கு நான்கு திசைகள்தான் எல்லை என வள்ளுவர் கருதவில்லை. இசையும் துறைகளை எல்லாம் எல்லைகளாக்கிக் கொள்ளலாம் என்றே நினைத்தார்.

பிணி இன்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமமாகிய காவலரசு ஆகிய ஐந்தும் நாட்டுக்கு உரிய நல்லணிகள்; நவைபடா அரண்கள் என்கிறார் வள்ளுவர். செல்வமாகிய சிந்தை நிறைவால் முதலீடு செய்து, உழைப்பால் விளைவு களைப் பெருக்கி, பிணி இன்மை எனும் பெருநலத்தோடு, இன்பம் தழைக்க, இனிது வாழலாம் என்றாலும், இவை நான்கிற்கும் வலுவான, நிலையான, ஏமமாகிய காவலும், கண்போலக் காக்கும் அரசமைவும் கட்டாயம் வேண்டும் என்கிறார் அவர். மேலும், எல்லா அமைவுகளும் இருந்து, வேந்தமைவு, நல்ல ஆட்சிப் பேறு இல்லாத நாடு, தலைமை பெற்று நீடித்து நிற்கமுடியாது என்கிறார்; பல்குழுவும், பாழ் செய்யும் உட்பகையும், அரசை அன்றாடம் அலைக்கழிக்கும் வன்முறைக் குறும்புகளும் ஒரு நாட்டில் கள்ளியாய்ப் படராமல் இருப்பது அந்த நாட்டின் இறையாண்மையைப் (ஷிஷீஸ்மீக்ஷீமீவீரீஸீtஹ்) பொறுத்தது என்கிறார்.

நாட்டிற்கு ஆகாதன இவை இவை எனச் சொன்னமை போல, நாட்டு உயர்வுக்கு ஆக்கம் தருவனவும் இவை இவை என வள்ளுவக் குறளின் பொருட்பால் புதுமைக்குப் புதுமையாய் விளங்குகிறது:-

“தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச்

     செல்வதும் சேர்வது நாடு”      (731)

குன்றாத விளைவுகளும், கூட்டிச் சேர்க்கும் உழைப்பார்வம் மிக்க, தகுதி வாய்ந்த மக்களும், இவற்றை எல்லாம் கொண்டு செலுத்தும் குறைவற்ற செல்வரும் நாட்டின் முப்பரிமாணம் போன்ற அங்கங்கள்; ஆக்கங்கள். உலகப் பொருளாதாரச் சிந்தனையில் செல்வர்களை எல்லாம் முதலாளிகள் எனப் பேதப்படுத்திப் பார்க்கும் வர்க்கப் போராட்டச் சிந்தனைகளும், அவற்றைத் தூண்டும் சுயலாப ஆதிக்கப் போக்கும் அண்மை வரலாற்றில் இடர்ப்பாடான நிலைகளைத் தோற்றுவித்துள்ளன. என்றாலும், இந்த நூற்றாண்டில் நாம் வாழும் இந்தக் காலகட்டப் பகுதியில் அச்சிந்தனைப் போக்கிலும் புதிய திருப்பங்கள் ஏற்பட்டே வருகின்றன.

“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் & அவன்

     காணத்தகுந்தது வறுமையாம்;

     பூணத்தகுந்தது பொறுமையாம்”

என்றும்,

“பொத்தல் இலைக் கலமானார் ஏழை மக்கள்

     புனல் நிறைந்த தொட்டியைப் போல் ஆனார் செல்வர்”

என்று பாரதிதாசன் குமுறியமை போல, ஏழையர் இன்னலுறவும், செல்வர்கள் நாளுக்கு நாள் சீமான்களாகச் செழிக்கவும் நேரிட்டன என்பதும் வரலாற்று உண்மைதான் என்றாலும், முதலாளித்துவமும் தொழிலாளி வர்க்கமும் எதிர்த் துருவங்களாகவே என்றும் இராமல், சமநிலைச் சந்திப்பிற்கு வரும் புதிய வரலாறு புலப்பட்டு வருவதும் நம் கண்களில் படுகிறது. இரு சாராரும் தத்தமது பொறுப்புக்களை உணர்ந்து, கூடிச் செயல்படும் கூட்டுணர்வு உலகெலாம் அரும்பு கட்டி வருவதும் தெரிகிறது.

இத்தகைய நாட்டுணர்வும் கூட்டுணர்வும் உடைய செல்வர்களே, உழைப்பாளர்களே நாட்டுக்குத் தேவை என்பது வள்ளுவத் திட்டம். மண்வளம் கொண்ட நாட்டைத் தமது அதிக உழைப்புத் திறத்தால் மேலும் செழிப்புறச் செய்பவர்களே பெரிதும் வேண்டும் என்பதும் வள்ளுவப் பொருளாதாரக் கொள்கை.

பொருள் என்பது பணம் மட்டும் அன்று.

“பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்

     பொருள்அல்லது இல்லை பொருள்”         (751)

எனப் பொருளுக்கு வள்ளுவர் எக்காலமும் ஏற்ற பொலிவு மிக்க விளக்கம் தருகிறார். உடல் உழைப்பு, மூளை உழைப்பு, நிர்வாகத் திறன், நிதி அளிப்பு, கொள்கை வரையறை, கூடிச்செய்யும் ஆக்கம் ஆகிய அனைத்தும் பொருளாகவே கருதப்படும். அறிவு நலமும், ஆக்கச் சிந்தனையும், ஆய்வுத் திறமும், ஊக்க முயற்சியும் செல்வக்கூறுகளாகவே, திருக்குறள் வகுக்கும் பொருள் செயல் வகைகளாகவே கருதப்பட வேண்டும்.

இயற்கை வளம் இயல்பாக அமையப் பெற்றிராத சிறுசிறு நாடுகள் கூட, தமது ஆட்சிச் சிறப்பால், ஆக்க பூர்வமான அணுகுமுறையால் உலகில் இன்று பொருளாதார முதன்மை பெற்று நிற்கக் காண்கிறோம். வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பக் கலைகளைத் தேர்ந்து; மேம்பாட்டு நோக்கோடு திட்டங்களை வகுத்து; பொதுநல உணர்வோடு அவற்றைச் செயலாக்கி; கட்டுப்பாடற்ற பொருளாதாரக் கொள்கைகளைக் கைக்கொண்டு அந்நாடுகள் – சிறுநாடுகள் எனினும், சீமான் நாடுகளாக- வெற்றிவலம் வரக் காணுகிறோம். இயற்கை வளத்தோடு. தொழில் திறமையோடு, மனித உழைப்போடு கொண்டு கூட்டிச் செயலாற்றும் ‘வினைத்திட்பம்’ எனும் ஆக்கஆட்சி முறையையும், பொதுநலம் பேணும் சீரிய அணுகுமுறையையும் (ஷிஹ்stமீனீ) கொண்டுள்ள நாடுகள் அகிலத்தன்மை பெற்றுவரக் கண்டு அதிசயிக்கிறோம்; ஆச்சரியப்படுகிறோம்.

“வளமை எல்லாம் ஒரு நாடு தன்னகத்தே

     வகை வகையாய்க் கொண்டாலும் & அவற்றை

     வழிநடத்த ஆள் இல்லாது போனால், அந்நாடு

     படுத்திருக்கும் நந்தியாய் ஆகும்”

எனப் புதுக்கவிதை ஒன்று குரல் கொடுத்துள்ளது. அதுபோல வளமை பெற்றிருந்தும் வழிநடத்தத் தக்க தலைமை பெறாத நிறுவனங்களும் நாடுகளும் சவலைப் பிள்ளைகளாக, சாண் ஏறி முழம் வழுக்கும் அவலங்களாகவே தத்தளிக்கும்.

“பொருள்எனும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்

     எண்ணிய தேயத்துச் சென்று”         (753)

என வள்ளுவர் கூறுவது போல, பொருள் எனும் பொய்யா விளக்கம் தனது நாட்டில் உள்ள பகையை வென்று, பதப்படுத்தித் தருவதோடு நில்லாது, பிற தேசங்களுக்கும் சென்று அங்கும் இருளகற்றும் என்பதை இன்று நடைமுறையில் காணுகிறோம். ஒரு நாட்டின் செல்வங்கள், பிற நாட்டிலும் பொருளாதாரங்களாகப் பூத்துக் குலுங்கும் புதுமைகளைக் காணுகிறோம். உள்நாட்டு உரிமைகளைப் பாதிக்காத அந்நிய முதலீடுகள் பல நாடுகளில் ஊக்கு விக்கப்படுவதையும், அவை ஊற்றுக்களாகச் சுரப்பதையும் இன்றைய பொருளங்காடியில் காணுகிறோம்.

நாட்டு மக்களின் செய்வினைத் திறனே, நாட்டின் செல்வமாகச் சேருகிறது. மதிநுட்பம் நூலோடு உடையவர்கள், அறிஞர்கள் நாட்டுச் சிந்தனை உடையவர்களாக வழிகாட்டவும் தலைமை ஏற்கவும் முற்பட வேண்டும். இலாப நோக்கிற்காகத் தொழிலில் முதலீடு செய்வது போல, நாட்டு மக்கள் உயர்வுக்காகவும் தொண்டுள்ளத்தோடு, தியாகம் எனும் முதலீடாகச் செய்ய வேண்டும். ‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ ஆகையால், அறிவோடு செல்வமும் உடையவர்கள், சொந்த முயற்சியால் தாம் உயர்ந்து, சொந்த நாட்டையும் உயர்த்தும்போது எல்லாம் உடையதாக நாடும் ஓங்கி நிற்கிறது.

நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலத்தில் இருந்தே, இத்தகைய பொருளாதாரச் சிந்தனை, நம் தமிழ் மரபின் ஊடு சரமாக விளங்கி வந்துள்ளது. பல்வேறு நாடுகளுக்குச் சென்று, தம் உழைப்பினை ஈந்து, அந்நாடுகளைச் செல்வச் செழிப்புடையதாக்கிய செய்தி எல்லாம் தமிழின வரலாறு என எழுதப்பட்டுள்ளது. காலச்சூழல் மாறியமையால், எதிர்பார்ப்புச் சிந்தனையும், வருமுன் காக்கும் பெற்றியும் சேர்ந்தமையாமையால், தமிழ் மக்கள் பல்வேறு நாடுகளில் குடியேறி வதியும் நிலையே பெரும்பாலாகத் தோன்றுகிறது. இவ்வாறு குடியேறி வாழ்வது, தமிழினத்திற்கு மட்டுமே ஏற்பட்டுவிட்ட வரலாற்று நிகழ்வில்லை; பல இன மக்கள், பல நாடுகளில் குடியேறி வாழும் வகைமையே இப்போது வளர்ந்து வருகிறது.

இவ்வாறு குடியேறி வாழும் வகைமைக்கு உள்ளான மக்கள், அவ்வந்நாடுகளையே தமது சொந்த நாடு போலப் பாவித்து, வாழவும் வளரவும் முற்பட வேண்டும். தாயகத்தின் மீது ஒரு காலும், புகுந்த நிலத்தின் மீது மற்றொரு காலுமாக, இரட்டைப் படகின் பயணம் செய்யும் இரண்டும் கெட்டான் நிலைக்கு இடம் தரக்கூடாது. வாழும் மண்ணில் வளத்தைப் பெருக்குவதோடு, தாமும் இசைந்து வாழ்ந்து, உயரத் தலைப்பட வேண்டும். சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் செலவிட்டுச் சோம்பலுறும் கேளிக்கை களுக்கு உள்ளாகாது, சிக்கனமாக வாழ்ந்து, சேமிப்பை எல்லாம் முதலீடாக்கி, சிறுசிறு தொழில், வணிக முயற்சிகளில் நாட்டமுற்று நாளும் வளரவேண்டும். புகுந்த நாட்டில் நன்கு வேரூன்றாமல், கூடித் தொழில் செய்ய முயலாமல், அன்றாடம் காய்ச்சி வாழ்க்கையில் அல்லல் படக்கூடாது.

“தண்ணீருக்குள் மூழ்குபவன், உயிர் பிழைக்க மூச்சு விடுவதற்காகத் துடிப்பதைப் போல, இவ்வுலக பந்தங்களில் மூழ்கியிருப்பவன் இறையருளைப் பெறுவதற்காகவும் துடிப்புணர்வு கொள்ள வேண்டும்” என்றார் விவேகானந்தர். இறையருளைப் பெற ஆன்மா துடிப்பதைப் போல, பொருட்சிறப்பைக் கைக்கொள்ள அருமுயற்சித் துடிப்பும் அமைதல் வேண்டும். இத்தகைய துடிப்புணர்வுடைய மக்களும் நாடுமே மாநில உயர்வு பெறும்.

இன்றைய வாழ்க்கை முறையில் விரைவு, துணிவு, ஆற்றல் என்பன பொருள் செய்யும் வகைக்கு மிகத் தேவை. காலத்தைப் பொன் எனப் போற்றி, கடமையைக் கண் எனக் கருதி, காலமறிந்து, இடமறிந்து, கருவிகளைப் பயன்கொண்டு, பொருளாக்கம் செய்யும் நாடே முன்னிடம் பெற்றுத் திகழ்கிறது. ‘நாள் ஒன்று புலர்ந்தால் புதுமை ஒன்று பூக்கும்’ என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம், புதிய கண்டுபிடிப்புக்களும் அறிவியல் அற்புதங்களும் உலக அரங்கில் போட்டியிட்டு வந்துகொண்டே இருக்கின்றன. ‘வலிமையுடையதே வாழும்’ என்ற சட்டமே ஆட்சி புரியும் இன்றைய தொழில் வாணிபப் போட்டி உலகில் விரைந்து மதிநுட்பத்தோடு வினையாற்ற நாம் முயல வேண்டும். நமது சிந்தையிலும் செயலிலும் போட்டியுணர்வும் வெற்றி நாட்டமும் மேம்பட்டுத் துலங்க வேண்டும். எனினும் இழப்பீட்டிற்கு அஞ்சாமல், தொழில் முனைவோராகத் தலை எடுக்கும் நாட்டம் சிறக்க வேண்டும். ‘செய்க பொருளை’ எனும் வள்ளுவக் கட்டளை தனிநபரை உயர்த்தும், சமுதாயத்தை மேம்படுத்தும், நாட்டை வளமுறுத்தும், நல்லுலகை வாழ்விக்கும், நிறைநலத்தோடு இறையருளும் சேர்ந்து எல்லாவற்றையும் சித்தியாக்கும் என்கிறது அபிராமி அந்தாதியின் ‘கலையாத கல்வியும்’ எனத் தொடங்கும் பாடல்.

செய்வோம் பொருளை; சிறப்போம் வாழ்வில்!

 

‘எனைத்தானும் நல்லவை கேட்க!’

‘எனைத்தானும் நல்லவை கேட்க!’

வாழ்க்கையில் நாம் பல காரியங்களை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கிறது. ஓர் ஆண் தன் மனைவியைத் தேர்ந்தெடுப்பதாயினும், ஒரு பெண் தனது கணவனைத் தேர்ந்தெடுப்பதாயினும் ஆய்ந்து பார்க்க வேண்டும்.

தொழிலில் பணியாட்களைத் தேர்ந்தெடுப்பதிலும், இயக்குநர்களை, நிர்வாகிகளை, துணையாளர்களை, பாதுகாப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், அரசு தன் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதிலும், அரசை மக்கள் தேர்ந்தெடுப்பதிலும் இன்ன பிறவற்றிலும் நாம் ஆராய்ந்து தேர்ந்து எடுக்க வேண்டும்.

தகுதியும் பொருத்தமும் இல்லாதவரை – அன்பு காரணமாக, உறவு காரணமாக, நட்புக் காரணமாக முகத் தாட்சண்யம் கருதித் தேர்ந்து எடுத்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் துயரம் அடைய நேரிடும்.

குடும்ப வாழ்க்கை தொட்டு, தொழில் வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, நாட்டு வாழ்க்கை வரை, தகுதியான, பொறுப்பு மிகுந்தவர்களைத் தேர்ந்தெடுக்காவிட்டால் நாம் செய்யும் செயல்கள் எல்லாம் பயனற்றுப் போகும். உயர்ந்தவர் – தாழ்ந்தவர், பெரியவர் – சிறியவர், பெருமை- சிறுமை என்ற குணங்கள் எல்லாம் பணத்தாலோ, பட்டத்தாலோ பிறந்த குலத்தாலோ உருவாவதில்லை. பத்தரை மாற்றுத் தங்கமா என்று கண்டறியக் கல்லில் தங்கத்தை உரைத்துப் பார்த்துப் பொன்னின்  மாற்றுக் காண்பது போல், ஒருவன் எண்ணும் எண்ணமும், சொல்லும் சொற்களும், அவன் உயர்ந்தவனா? தாழ்ந்தவனா?, சிறியவனா? பெரியவனா? என்ற உண்மைகளை உரைகல்லாகக் காட்டி விடும். செய்கின்ற செயலின் திறத்தால் ‘தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்ற அடிப்படையில் அவரவர் தகுதியை அறியலாம்.

ஆதலால் ஒருவரை எத்துறைக்குத் தேர்ந்தெடுத்தாலும் அவரைப்பற்றி நன்றாக ஆராய்ந்து, எண்ணிப் பார்த்து தெளிவான முடிவுக்கு வரவேண்டும். பதற்றமில்லாமல், பரபரப்பு இல்லாமல், அன்பு, உறவு, நட்புப் பாராமல் பொறுப்புக்குத் தகுதியானவரா? திறமையானவரா? நற்குணங்கள் நிறைந்தவரா? பழிக்கு அஞ்சுபவரா? நேர்மையானவரா? என்று அவரை அளந்தறிய முற்பட வேண்டும்.

தீய நோக்கம் உள்ளவர்கள், நல்லெண்ணம் இல்லாத வர்கள், சுயநலம் மிக்கவர்கள், குறுகிய கண்ணோட்டம் உள்ளவர்கள், சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் கயவர்கள் ஆகியோர் பேச்சுக்களை எல்லாம் மக்கள் கேட்டு மயங்கிவிடக் கூடாது.

சொல் நயத்துடன், ஆற்றலுடன் நாவன்மையால் பேசும் நச்சுக் கருத்துக்கள் தீமையை விளைவித்துவிடலாம். வாழ்வாகிய வழுக்கு நிலத்தில் வழுக்கி விடாமல், சேற்று நிலத்தில் சிக்கிவிடாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வழுக்கல் நிலத்தில், சேற்றுப் பாதையில் சிக்கல் நீக்கிக் காப்பது வாழ்ந்து காட்டிய ஒழுக்கமுள்ள அறிஞர்களின் வாய்ச்சொற்கள் தாம். வாழ்ந்து காட்டாத நாநயம் மிகுந்தவர்கள் சொற்கள் ஒருபோதும் பயன் விளைவிப்பதில்லை.

தூய  எண்ணங்களை எண்ணி, எண்ணம் போலவே சொல் தூய்மையுடையராய், செயல் தூய்மையுடையராய் உள்ள வாய்மை மிகுந்த நல்லவரின் நயம் மிகுந்த சொற்களே நாட்டினரை நல்வழியில் அழைத்துச் செல்லும். நல்லவை நாடி இனிய சொல்பவரை நாம் நாடிச் சென்று கேட்க வேண்டும். எவ்வளவுக்கு இத்தகைய பெரியோர்களின், சான்றோர்களின் பேச்சுக்களை விரும்பிக் கேட்கின்றோமோ, அவ்வளவிற்கு அல்லவை தேயும், அறம் பெருகும்; தனி மனிதனும் நாட்டு மக்களும் பயன் பெறுவர். இத்தகைய நல்லோரின் நயம் மிகுந்த, நலம் மிகுந்த, அறிவோடு உறுதியும் மிக்க கருத்துக்களைக் கேட்டுப் பயன்பெற வேண்டும். இதனையே செந்நாப்புலவர் வள்ளுவனார், ‘கற்றிலனாயினும் கேட்க!’ (414) என்று கட்டளையிட்டு, கேட்பவையெல்லாம் நல்லவையாக இருக்க வேண்டும் என்றும், வலியுறுத்திக் கேட்ட அளவிற்குப் பெரும் பயன் தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் உண்டாகும் என்றும் உறுதிபடக் கூறுகிறார். அக்குறளைக் கேட்போம்.

“எனைத்தானும் நல்லவை கேட்க; அனைத்தானும்

     ஆன்ற பெருமை தரும்”        (416)

இன்பம் பயக்கும் வினை

செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை’

துணிவுள்ள மனம் துன்பம் வந்தபோதும் கலங்காது. துணிவுள்ள நெஞ்சம் அஞ்சாமை உடையது; ஊக்கமும். உறுதியும் உடையது. அறிவும், கல்வியும் இருந்தும் பலர் வெற்றிபெறாது தோற்பதன் காரணம் துணிவின்மையே. செயல்களைச் செம்மையாக எளிதில் முடிக்கத் துணையாக இருப்பது துணிவே.

செயல் செய்யும்போது, தொழில் ஆற்றும்போது, உண்மைகளை அஞ்சாது சொல்லிச் செயல்படுத்தும் போது, துன்பங்கள் நேர்வது இயற்கை. முடிவில் இன்பம் தரும் செயலானால் துன்பங்கண்டு மயங்கவோ, கலங்கவோ வேண்டியதில்லை. ஆகவேதான், அச்சமின்றி, எழுச்சியோடு ‘செய்க செயலை’ என்று வலியுறுத்துவார் வள்ளுவர்.

‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ என்றாலும், அஞ்சுவதற்கு அஞ்சவேண்டும். பழி, பாவங்கள், தீமைகள் கண்டு அஞ்சவேண்டும் என்றாலும், துன்பங்கருதி நற்செயல்கள் செய்ய அஞ்சவேண்டியதில்லை. தன்னலங்கருதி பாதகம் செய்பவர்களைக் கண்டு பயம் கொண்டு வாழ்ந்தால் தனிவாழ்வும், சமுதாயமும் படிப்படியாகக் கெட்டு சீர்குலைந்து விடும். கல்வியும், அறிவும் பெற்றவர்கள் அச்சத்தாலும், தன்னலத்தாலும், அக்கறையின்மையாலும் தீமைகளை எதிர்க்காமலும் தவறுகளும் இயற்கையானவை என்று நியாயப்படுத்தியும் வாழ்ந்தால் நாடு சீர்கேடுறும்.

நெஞ்சில் உறுதியின்றி, நேர்மைத்திறனுமின்றி ஆற்றல் இருந்தும் அச்சம் கொண்டு வாழ்ந்தால் இதுவே எல்லாத் தீமைகளுக்கும், பாவங்களுக்கும் அடிப்படையாக மாறிவிடும்.

கற்றவர்களிடம் உள்ள காரணமற்ற அச்சமும், பயமும் நீங்கினால் மக்களிடையே நிலவும் அறியாமையாகிய வறுமை நீங்கும். மக்களும் சரியான வழி நோக்கி வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். கற்றவர்கள் உண்மைகளைத் துணிவோடும், தெளிவோடும் விளக்கிக் கூறும்போது – அவசியமானால் இடித்து எடுத்துரைக்கும் போது – நாட்டு மக்கள் எழுச்சியுற்று விழிப்படைவார்கள்; அறநெறிகள் தழைக்கும்.

அறத்தோடு கூடிய செயல்களைச் செய்யும்போது முதலில் துன்பம் நேரிட்டாலும், முடிவில் அச்செயல் இன்பம் பயக்கும். துணிவே வெற்றியை அளிக்கும்.

“துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி

 இன்பம் பயக்கும் வினை”          (669)

பேராற்றல் படைத்த மனிதன் தன் ஆற்றலை உணர வேண்டும்.

“வலிமை படைத்தோர் வாழ்வுக்கு உரியவர்”

என்று கூறுகிறது கீதை.

“உள்ளம் உடைமை உடைமை”

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

 திண்ணிய ராகப் பெறின்”           (666)

என்று மனிதனின் வலிவையும் பேராற்றலையும் வியந்து பேசுவார் வள்ளுவர்.

ஆகவே அரிய காரியம் என்று அயர்ந்துவிடாமல், ஊக்கத்துடன் துன்பம் கண்டு அஞ்சாது அரும்பெரும் காரியங்களைச் சாதிக்க வேண்டும்.

மனித உயிர்களை அன்போடு நேசித்து, ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ என்று உணர்ந்து, என்பும் பிறருக்கு உரியதாக்கி, அன்புற்றமர்ந்து, தொண்டு செய்து, இன்புற்று இனிது வாழ்வோம்.

கைம்மாறு வேண்டாக் கடப்பாடு’

Image result for family drawing

நல்லறம் போற்றும் இல்லறத்தின் தலைவன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகளாகத் திருவள்ளுவர் சிலவற்றை வகுத்துத் தருகிறார். இல்லறத் தலைவன் அன்புடையவனாகவும், நல்வழியில் நடக்க கூடியவனாகவும் இருத்தல் வேண்டும். அவனது முதல் கடமை பொருள் ஈட்டுதல், அதனை நேர்மையான வழியில் ஈட்டவேண்டும். தான் ஈட்டிய பொருளை ஏனையோர்க்குப் பகுத்துக் கொடுத்து உதவுதல் வேண்டும்.

“ஒற்றைக் குடும்பந் தனிலே – பொருள்

 ஓங்க வளர்ப்பவன் தந்தை”

என்பார் பாரதியார். ‘பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளை’ அருளோடும் அன்போடும் ஈட்ட வேண்டும்.

“செய்க பொருளை; செறுநர் செருக்குஅறுக்கும்

 எஃகுஅதனின் கூரியது இல்”        (759)

என்று பொருளின் அவசியத்தை வலியுறுத்துவார் வள்ளுவர். தமது கடின முயற்சியால் தேடுகின்ற பொருள் தீயவழியில் வருவதாக இருக்கக் கூடாது வாழ்க்கைக்குப் பொருள் மிக முக்கியம். அதனை நல்ல வழியில் தேடுதல் வேண்டும்.

“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

     தீதுஇன்றி வந்த பொருள்”           (754)

ஒரு குடும்பத் தலைவனுக்கு அழகு நேர்மையான வழியில் பொருளீட்டுவதும் ஈட்டிய பொருளின் ஒரு பகுதியை வறியவர்க்கு ஈவதும். அற்றார் அழிபசி தீர்க்கும் வகையில் கைம்மாறு வேண்டாக் கடப்பாடுடன் உலக நடைமுறையறிந்து எல்லோர்க்கும் பயன்படும் வண்ணம் பகுத்துக் கொடுத்தலும் இல்லறத் தலைவனின் கடமைகள்.

இல்லற வாழ்வை இனிமையாக்க வந்துள்ள வாழ்க்கைத் துணையான மனைவியிடம் அன்பின் பாத்திரமாக இருந்து அவள் தேவையறிந்து பேணிப் பாதுகாப்பவனாகத் தலைவன் இருக்க வேண்டும்.

“சான்றோன் ஆக்குவது தந்தைக்குக் கடனே” எனும் பொன்முடியார் வாக்கிற்கு இணங்க அறிவுள்ள மக்களைப் பெறுவதும் அவ்வாறு பெற்ற மக்களை நல்ல கல்வி கேள்விகளில் சிறக்கச் செய்து கற்றோர்தம் அவையில் முதன்மைப் பெறச் செய்வதும் தந்தையின் கடமைகள் ஆகும்.

“தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து

     முந்தி யிருப்பச் செயல்”        (67)

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

     மன்னுயிர்க்கு எல்லாம் இனிது” (68)

என்பது போல தம்மை விட அறிவிலும், ஆற்றலிலும் உலகம் மதித்துப் போற்றும் வண்ணம் வளர்த்தலும் பெற்றோரின் கடமை ஆகும்.

இல்லது என் இல்லவள் மாண்பானால்?’

இல்லது என் இல்லவள் மாண்பானால்?’

பெண்மை உலகில் வாழும் உயிரினங்களுக்கு நன்மை வழங்குவது. பேரறிவும் பேராற்றலும் கொண்டது. அழகிய உருவகம், அன்பின் ஊற்று, பண்பின் இருப்பிடம். அனைத்து உயிர்களுக்கும் அன்னையாய் விளங்குவது போன்ற பெருமைகளையுடைய பெண், இல்வாழ்வுக்குத் தலைவியும் நல்ல துணையும் ஆகிறாள். வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணியும் அவளே!

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் & புவி

     பேணி வளர்த்திடும் ஈசன்”

என்றும்,

“மற்றைக் கருமங்கள் செய்தே & மனை

     வாழ்ந்திடச் செய்பவள் அன்னை”

என்றும் பாரதி பெண்மையைப் புகழ்ந்துரைப்பார். அத்தகைய பெண்மை இல்லத்துணையாக இருந்து நல்லறம் கூடிய இல்லறத்தை உருவாக்கிட அவளுக்கு உரிய கடமைகளைத் திருவள்ளுவர் வகுத்துத் தருகிறார்.

“மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்

     வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”          (51)

மனையறத்திற்குத் தகுந்த மாட்சிமைகள் உடையவளாய், தனது கணவரின் வருவாய்க்குத் தக்க வாழ்க்கை நடத்தக் கூடியவளாய் இருப்பது மனை மாண்பு. நல்ல மனைவியாக இருப்பவள் எப்படி இருக்க வேண்டும்? குடும்பத்தின் கவலைகளை இலகுவாக்கக் கூடியவளாக, சலனமற்ற திண்மையும், அசைவற்ற உறுதியும் கொண்டவளாக இருக்க வேண்டும். இறைவன் மீது செலுத்துகின்ற பக்தியையும் அன்பையும் காட்டிலும் அதிக அன்பையும் பக்தியும் கணவன் மீது கொண்டவளாக இருக்க வேண்டும்.

இல்லறக் கடமை என்பது விரிந்து பரந்த ஒன்று. அதை முழுவதும் கணவனோடு இணைந்து செவ்வனே செய்து புகழ் பெற வாழ்வது இல்லாளின் கடமைகளில் சிறந்தது. அதுபோல் அவள் தன்னையும் காத்து; தன் கணவனையும் காத்து; குடும்ப பாரம்பரியப் புகழுக்கு ஊறுவராமல் குடும்பத்தைக் காக்கும் திறன் கொண்டவளாக இருப்பது பெருமைக்குப் பெருமை சேர்ப்பது போலாகும்.

“தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

     சொற்காத்துச் சோர்விலாள் பெண்”          (56)

என்பார் வள்ளுவர். மேலும் தன்னை மனைவியாகப் பெற்ற கணவனை தனக்கு உரியவனாக அன்புகாட்டியும் அரவணைத்தும் பேணிக் காப்பவளாக இருப்பதும் தன் கணவனை உலகத்தார் போற்றிப் புகழ வேண்டும் என்ற எண்ணம் நிறைந்தவளாக இருப்பதும் தான் சீரிய இல்லறக் கடமையுடைய இல்லாளுக்குப் பெருமையுடையதும் மேலும் சிறப்பும் பெருமையும் கொடுப்பதும் ஆகும். ஒரு மனைவியின் மாட்சிமை மிகுந்த குணங்களே இல்லறத்திற்கு மங்கலமாகும். மங்கல வாழ்வின் நன்கலம் – அணிகலம் நல்ல மக்களைப் பெறுவது ஆகும்.

கணவனின் பெருமிதம், சிறப்பு இவற்றுக்கெல்லாம் பெரிதும் காரணம் அவனது மனைவியே. மனத்திண்மையும், ஒருமை மனமும், பொறுப்புணர்வும் மிக்கவள் மனைவியாக அமைந்துவிட்டால் கணவன் ஏறுபோல் பீடு நடைபோட்டு நடப்பான் என்பது நிச்சயம்.

 

‘அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை’

காலந்தோறும் அருளாளர்கள் சிலர் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். அப்பேரருளாளர்கள் உலகில் வாழும் மக்களுக்கு ஏற்ற வாழ்வியல் நெறிமுறைகளை எடுத்துரைத்துள்ளார்கள். அவர்களின் நல்லறவுரைகளைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள வேண்டியது மனிதர்களின் கடமை. அத்தகைய இறையருளார்களுள் உலக மானுட வாழ்வுக்குத் தகுந்த நெறிகளை வகுத்துத் தந்தவர் திருவள்ளுவர்.

“இல்லறமல்லது நல்லறமில்லை” என்பது சான்றோர் தம் வாக்கு அத்தகைய இல்லறம் சிறப்பதற்கான பல நெறிகளைத் திருக்குறள் வழங்கியுள்ளது. உலகளாவிய பொது நோக்குடையதாகவும் தமிழர்தம் பண்பாட்டின் சிறப்பைப் பறைசாற்றுவதாகவும் அமைந்த நூல் திருக்குறள். அதில் இல்லறம் என்பது பற்றியும் அதனை எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பது பற்றியும் நல்ல கருத்துக்கள் நிரம்பியுள்ளன. இல்லறம் நமக்கேயுரிய சிறந்த பண்பாட்டின் சின்னம்; பாரம்பரியமான மரபு வழிகளினால் பின்னப்பட்டு உறவுமுறைகளினாலும் சொந்தபந்தங்களினாலும் செதுக்கப் பட்ட ஒரு கட்டமைப்பு; நல்ல மனைவி நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்விகம் என்றும், குடும்பம் ஒரு கோயில் என்றும், குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்றும் போற்றிப் பெருமைப்படத்தக்க ஒன்று. இத்தகைய இல்லற வாழ்வு பெருமை பெறவேண்டும் என்றால் அறத்தோடு பொருந்தி வாழ வேண்டும். இல்லற வாழ்வுக்கு அறமே அடிப்படை.

அறவாழ்க்கை என்றால் என்ன? எப்படி எளிதாக, இன்பமாக,  பெருமையுடையதாக, புகழுடையதாக வாழ்வது? இதற்கு திருவள்ளுவர் வழிகாட்டுகிறார்.

‘அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’. இங்கு பட்டது என்றில்லை; பட்டதே என்று தேற்ற ஏகாரத்தில் கூறி அறத்தின் வலிமையை முழுமைப்படுத்துகிறார். அறம் வேறல்ல, இல்வாழ்க்கை வேறல்ல என்பதை வள்ளுவர் தெளிவுபடுத்துகிறார்.

வாழ்க்கைத் துணையோடு அறநெறிகளில் இருந்து பிழையாமல் இல்வாழ்க்கை நடத்துபவரே இல்வாழ்க்கையால் வரும் பயனை அடையக் கூடியவர்கள். இல்வாழ்க்கை வாழ்கின்றவன், தன்னலம் துறந்து பிறர்நலம் பேணி வாழ்கின்றவன்; தன்னுடைய மனைவி, பிள்ளைகள் பெற்றோர், சுற்றத்தார், வறியவர்கள், மூதாதையர், சமுதாயத்தில் ஆதரவற்ற வர்கள், துறவு மேற்கொண்டவர்கள் அனைவருக்கும் உதவி செய்து வாழ்பவன். இல்லற வாழ்க்கை வாழ்பவனுக்கு இத்தகைய மூவகையாரையும் காத்தல் கடமையாகிறது.

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

 நல்லாற்றின் நின்ற துணை”          (41)

“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

 இல்வாழ்வான் என்பான் துணை”     (42)

குடியில் தோன்றி மறைந்த முன்னோரை நினைவுகூர்வதும் இறைவனைப் போற்றுவதும் விருந்தினரைப் பாதுகாப்பதும் இல்லறத்தின் கடமை. விருந்தோம்பல் நமது தலையாய பண்பாகும். விருந்து என்பது புதுமை என்பதைக் குறிக்கும். விருந்தினர் (புதியவர்) வீடு தேடி வந்துவிட்டால் அவர்களை இன்முகம் காட்டி வரவேற்பதுடன் இனிமையாகப் பேசி உணவு கொடுத்து மகிழ்விப்பதே விருந்தோம்பல். அத்தகைய விருந்தோம்பலை இல்லறத்தார் கடமையாகக் கொண்டு செய்தல் வேண்டும். அதுபோல உதவி தேடிவரும் உறவினர்களுக்கு உதவுவது போன்ற கடமைகளிலிருந்து தவறாது வாழ்தல் அவசியம். இவற்றிற்கு அன்பு அடிப்படை யானதாகும். அன்பு இல்லறத்திற்கு உரிய பண்பாகும். இல்லற வாழ்க்கையில் முதன்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் பண்பாடாகும். மனிதனை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது பண்பாடு. கலித்தொகை ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ எனக் கூறும். உலக ஒழுக்கம் அறிந்து நடத்தல் என்று பொருள்.

“அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

 மக்கட்பண்பு இல்லா தவர்”         (997)

என்பார் திருவள்ளுவர். மக்களுக்கு உரிய நற்பண்புகள் இல்லாதவர் அரத்தின் கூர்மை போல அறிவுக் கூர்மை யுடையவரே ஆனாலும் உணர்வற்ற மரத்திற்கு ஒப்பாவார். தனக்கு உள்ளதைப் பிறரோடு பகிர்ந்து வாழ்வதும், இரவலர்க்கும் வறியவர்க்கும் ஈந்து வாழ்வதும் தமிழ்ப் பண்பாடாகும் அன்பு வாழ்வும், அறவாழ்வும் பிறர் இன்பத் திற்காக வாழும் வாழ்வாகும். அடக்கமான வாழ்வே சிறந்த வாழ்வு. அடக்கமான வாழ்வே அமைதியான வாழ்வு. அவ்வாழ்வில் இன்பமும் புகழும் தேடி வரும்.

பசித்தவர் ஒருவருக்காவது உணவிட்ட பின்னரே தான் உண்ணவேண்டும் என்பது நமது பண்பாடு. பசித்து வருவோரின் பசியாற்றுவது எல்லா அறங்களிலும் சிறந்த அறமாகும்.

உலகத்தோடு ஒட்ட வாழ்வதே ஒப்புரவான வாழ்க்கை யாகும். மானத்தை உயிரினும் பெரிதாகக் கொண்டு பிறர் இன்புற மாண்புடன் வாழும் வாழ்வே ஒப்புரவு வாழ்க்கை. உலகத்தோடு ஒத்து வாழ்வதும், உலகத்து ஆன்றோரும் சான்றோரும் காட்டிய நல்வழியில் வாழ்வதும் சிறந்த வாழ்க்கை. எளிமை காட்டி அன்புடன் இனிமையாகப் பேசிப் பழகுவது சிறந்தது. அன்புள்ளம் கொண்டவர்கள் பிறர் மனம் புண்படும்படி ஒரு நாளும் பேசமாட்டார்கள். இன்சொல் ஒருவனுக்கு நண்பர்களைத் தேடித் தருகிறது. கடுஞ்சொல் அவருக்குப் பகைவர்களை உருவாக்கி விடுகிறது. இனிய சொற்கள் இருக்க, கடுஞ்சொற்களைக் கூறுவதை வள்ளுவர் தன்னிடம் கனிகள் நிறைந்திருக்க ஒருவன் துவர்க்கும் காய்களைத் தின்னுவதற்குச் சமம் என்கிறார்.

“இனிய உளவாக இன்னாத கூறல்

     கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.”       (100)

இல்வாழ்வான் என்போன் சமுதாயம் அறத்தோடு வாழத் துணை நிற்பவன். அத்தகைய அறவாழ்க்கை வாழ்பவர் அன்பும் அறனும் உடையவராக, துறவு நிலையிலும் மேம்பட்டவராகக் கருதப்படுகிறார்.

இல்லறத்தைத் துறந்து வாழ்வோர் பின்பற்றுவது துறவறம். அத்தகைய துறவு நிலையில் வாழ்கின்றவர்கள் சிறப்புக்கு உரியவர்கள். அவர்களுடைய பெருமைகளை அளவிட முடியாது.

“துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

     இறந்தாரை எண்ணிக்கொண் டற்று”   (22)

“இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

     பெருமை பிறங்கிற்று உலகு”               (23)

உலகில் இருவேறு நிலைகள் உள்ளன. நன்மை, தீமை; இனிமை, கடுமை; அறம் – மறம்; இன்பம் – துன்பம் எனும் வாழ்வின் இருவேறு நிலைகளை ஆராய்ந்து துறந்தவர் தம் பெருமை நிலைத்து விளங்கக்கூடியது அத்தகைய துறவு நிலையில் நின்று தவ ஒழுக்கத்தை மேற்கொண்டோர்க்கும் இல்லறத்தாரே உணவளித்தும் துணையாக இருந்தும் பாதுகாக்கும் கடமையுடையவர்கள்.

“ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை

 நோற்பாரின் நோன்மை உடைத்து”         (48)

இல்வாழ்வை அவ்வாழ்விற்கு உரிய இயல்புகளோடு வாழ்வதுதான் சிறப்பானதாகும். அத்தகைய சிறப்புடன் வாழ்பவன், ஐம்புலன்களையும் அடக்கி துறவறம் மேற்கொண்ட துறவிகளை விடச் சிறந்தவன். தவம் செய்யும் துறவிகளைத் தவநெறிகளில் நிலைத்திருக்கச் செய்பவன் இல்வாழ்வானே ஆவான். அவ்வாறு துறவிகளுக்குத் துணையாய் இருப்பதோடு தானும் அறநெறிகளில் சிறிதும் பிறழாது வாழ்பவனது இல்வாழ்க்கை அத்துறவிகளின் தவவலிமையிலும் சிறந்ததும் வலிமையுடையதும் ஆகும் என்பதைத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

“அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்,

     துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

     விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”

என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கண்ணகி கூற்றாகக் குறிப்பிடுவார்.

இல்வாழ்வான் என்பான் எல்லோரிடத்தும் அன்பாக இருக்கும் தன்மையுடையவனாகவும் நல்வழியில் நடப்பவனாகவும் இருத்தல் வேண்டும். அவ்விதம் அன்பும் அறிவும் கொண்டு வாழ்வதே சிறந்த இல்லற வாழ்வாகும். இத்தகைய இல்லறவாழ்வை மேற்கொள்பவனுக்கு அவ்வாழ்வால் பெறவேண்டிய பலன்கள் யாவும் தானாகவே வந்து சேர்ந்துவிடும்.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

 பண்பும் பயனும் அது.”       (45)

“அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்

 போஒய்ப் பெறுவது எவன்”         (46)

அறநெறியில் நல்ஒழுக்கத்துடன் இல்வாழ்க்கை நடத்தக்கூடிய ஒருவனுக்கு அதற்குப் புறம்பான வழிகளில் முயன்று பெறும் பயன் எதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர். திருவள்ளுவர் வாழ்க்கை நலத்தில் ஒரு நுட்பத்தைக் காட்டுகிறார். துறவறத்தில் சிறந்து விளங்கும் தவத்திற்குத் தரும் சிறப்புக்களை எல்லாம் இல்லறத்திற்குத் தருகிறார்; இல்வாழ்வில் இல்லற நெறிப்படி ஒருவன் சிறப்புடன் வாழ்வானேயானால் அவன் மண்ணுலகில் வாழ்பவனே எனினும் வானில் உறையும் தெய்வங்களுக்கு நிகராக வைத்து அவனைப் போற்றுகிறார்; இல்வாழ்வானைத் ‘தெய்வம்’ என்ற நிலையில் உயர்த்திக் கூறியதின் மூலம் இல் வாழ்க்கையின் மேன்மையையும் பெருமையையும் அறிவுறுத்திக் காட்டுகிறார்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

     தெய்வத்துள் வைக்கப் படும்”         (50)

 

திருக்குறள் பயணம்

 

Image result for thirukural manimozhian

“ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும்

     பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் & போய் ஒருத்தர்

     வாய்க்கேட்க நூலுளவோ…?”

என்று திருக்குறளுக்குப் புகழஞ்சலியாக விளங்கும் திருவள்ளுவ மாலையைத் தொகுத்துள்ள நத்தத்தனார் பாடினார். இப்பாடலைப் படித்த போதெல்லாம் இளமைப் பருவத்திலேயே என் மனத்தில் கேள்வி ஒன்று எழுந்தது. “1330 அருங்குறளையும் மனப்பாடம் போலப் படித்துவிட முடியுமா?” எனும் அக்கேள்விக்கு, “ஏன் முடியாது? முயன்று தான் பார்ப்போமே!” எனும் உறுதி பிறந்தது. நான் வளர்ந்த காரைக்குடிக் கம்பன் கழகமும் திருக்குறள் மன்றமும் தமிழ் உணர்வூட்டிய கல்விச்சூழல் அந்த உறுதிக்கு மேலும் உரம் ஊட்டியது. வாரம் ஓர் அதிகாரம் என எனக்குள் எல்லை கட்டிக்கொண்டு குறள் கருத்துக்களை என் நினைவுத் தவிசில் ஏற்றுக்கொள்ள முயன்றேன். தங்கத்தின் தரத்தை உரை கல்லில் தேய்த்து மாற்றுப் பார்ப்பதைப் போல, வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் திருக்குறளை உரைகல்லாகக் கொள்ளமுடியும் எனத் தெளிவு பெற்று வந்தேன். யார், எந்தக் கருத்தைச் சொல்லக் கேட்டாலும் இதனை வள்ளுவர் எப்படிச் சொல்லியிருக்கிறார் எனத் தேடி துருவத் தலைப்பட்டேன். குறட்பாக்களின் அருமையும் பெருமையும் ஆழமும் விரிவும் என்னை மேலும் மேலும் கருத்தூன்றிப் படிக்கத் தூண்டின. ஒரு நூலிலாவது நல்ல பயன் தரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற என் ஆசைக்கு ஓர் அளவுகோலாகக் குறட்பாக்கள் அமைந்துவந்தன. வாழ்வின் புதிய அனுபவங் களுக்கு உட்பட்ட போதெல்லாம், வற்றாச் சுரங்கமாகவும் வழிகாட்டும் வான் விளக்காகவும் எனக்குக் குறள் நெறிகள் விளங்கத் தொடங்கின. இயன்ற வகையில் எல்லாம், தனிமுறையிலும் பொது வகையிலும் குறள்நெறிச் சீலங்களைப் பரப்பி வாழவேண்டும் எனும் உணர்வினை நாள்தோறும் என்னுள் புதுக்கி வந்தன.

தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் பல்லாண்டுகள் இயங்கி வரும் தமிழ்நாடு திருக்குறள் பேரவையின் (பொதுச் செயலர்) பொறுப்பேற்ற நாள்தொட்டு வாழும் வாழ்க்கைக்கும் காலத்திற்கும் பொருந்தும் வகையில் குறள் நெறிகளைப் பரப்ப வேண்டும் எனும் நோக்கத்தினைச் செயல்படுத்த முற்பட்டோம். ‘செய்க பொருளை’ எனும் சிந்தனைத் தலைப்பில், அறிஞர், அறிவியலாளர், தொழில் அதிபர், இளைஞர் முதலிய பல்வகைச் சமுதாயப் பிரிவினரையும் கருத்தரங்கேறச் செய்தோம். அக்கருத்தரங்கு புதிய புதிய செயல் திட்டங் களுக்கு வருக எனக் கைகாட்டி அழைக்கக் கண்டோம். முன்னோடித் திட்டமாக, ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, ஒருங்கிணைந்த வள்ளுவர் நெறி வளர்ச்சியை அங்கு நடைமுறையாக்க முற்பட்டோம்.

Image result for thirukural manimozhian

உலகத் தமிழ் மாநாட்டு நினைவாக, தமிழ்நாட்டின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆய்வுக்கான நிதிக்கட்டளை ஒன்று அரசு சார்பில் ஏற்கனவே நிறுவப்பட்டு, திருக்குறள் ஆராய்ச்சித் துறைகள் இயங்கி வந்தன. என்றாலும் உலகளாவிய வண்ணம், பிற நாடுகளில் வாழும் தமிழ் மக்களோடு தொடர்பு கொள்ளும் வகையில் ‘உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையம்’ ஒன்றினை, திருக்குறள் அரங்கேறிய சங்கத் தமிழ் மதுரையில் நிறுவ வேண்டும் எனும் தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கனவினை நனவாக்கும் காலம் கனிந்தது. மதுரையில் பன்னாட்டுத் திருக்குறள் ஆராய்ச்சி மைய அறக் கட்டளையினை நிறுவப் பதிவு செய்தோம். இதனைக் கேள்வியுற்ற அமெரிக்கத் தமிழ் அன்பர்கள், அங்கு சிக்காகோவில் ஆண்டுதோறும் நிகழும் மாநாட்டிற்கு வருமாறு சிக்காகோ திரு.பி.ஜி.எம். நாராயணன், திரு.வெங்கட்ட ராமானுஜம் ஆகியோர் எனக்கு அழைப்பு விடுத்தனர். மதுரையில் திரு.பன்னீர் செல்வம், திருமதி. லதா பன்னீர்செல்வம் (மகாத்மா மாண்டிசோரி) இருவரின் முயற்சியும் தூண்டுதலும் என்னை ஊக்குவித்தன.

தொழில் காரணமாகவும் சுற்றுலா விழைவு காரணமாகவும் ஏற்கனவே பல நாடுகளுக்குச் சென்று வரும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தேன். எனினும் இந்தத் திருக்குறள் பயண அழைப்பு முற்றிலும் புதுமையாகத் தோன்றியது. நாடு கடந்து வாழும் தமிழர்களின் தாய் நாட்டுப் பற்றையும் மொழி உணர்வையும் நேரில் அறியும் சந்தர்ப்பங்களையும் தருவதாக இது அமைந்தது.

பயணம் செல்வது இனியதொரு வாழ்க்கை அனுபவம். எத்தகைய உணர்வோடும் அறிவு நாட்டத்தோடும் பயணம் புறப்படுகிறோமோ, அவ்வுணர்வையும் நாட்டத்தையும் மேலும் அதிகமாகப் பெற்றுத் திரும்பச் செய்யும் பயன்மிகு முயற்சி; கையில் உள்ள பணத்தைச் செலவிட்டு, மூளைக்குள்ளே புதுப்புதுச் செய்திகளை அடக்கிக் கொண்டு வரும் வாழ்க்கை வாலிபம்; ஒவ்வொரு ரோஜாச் செடியிலும் முள் இருக்கிறது எனத் தெரிந்திருந்தும் அதனூடே மலர்ந்திருக்கும் பூவிலிருந்து தேனை மட்டும் மாந்தி வரும் தேனீயின் உழைப்புப் போன்றதொரு செயல்திறம்; சரக்கு மூட்டைகளை வண்டியில் ஏற்றிச் செல்வது போலப் போய்வராமல், உணர்வாக்கம் கொண்டதொரு பகுத்தறிவோடு ஊர் சுற்றிவரச் செய்யும் கலைத்திறன்; நமது வீடு, நாடு எனும் குறுகிய வரையறைக்குள் இருந்து பழகிப் போனவர்களின் பார்வையினை, ‘பெரிதே உலகம், பேணுநர் பலரே!’ எனும் எல்லைக்கு விரிவுறச் செய்யும் இரசவாதம்; எப்பொருள் எத்தன்மையதாயினும் அப் பொருளை மெய்ப்பொருளாக நேரடியாகக் காணச்செய்யும் அறிவுத் தேட்டம்…

வரலாற்றிலும் இலக்கியத்திலும் பல நாடுகாண் காதைகள் அரங்கேறியுள்ளன; சமய அனுசாரமும், வாணிப ஆதாயமும் பல ஊர்காண் காதைகளை உருவாக்கியுள்ளன. ஒவ்வொரு மனிதனின் தேவைக்கும் உரிய வகையில் பல்வேறு வகையான பயணங்கள் அன்றாட வாழ்வில் நிகழ்ந்தேறியே வருகின்றன.

என் வாழ்வெல்லாம், மனமெல்லாம் ஆட்கொண்ட ஒரே நூலாகத் திகழும் திருக்குறள் வழியாக இப்பயண வாய்ப்பினை வெளிநாட்டுத் தமிழன்பர்கள் எனக்கு அளித்தனர். எனவே ஒரு நாட்டுப் பயணமாக மட்டும் இந்த வாய்ப்பினைக் குறுக்கிக் கொள்ளாமல், பல நாட்டுப் பயணமாக விரித்து அந்த அழைப்பினைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளத் தீர்மானித்தேன். மேற்கு நாடுகள் சிலவற்றில் வாழும் என் இனிய நண்பர்களுக்கு என் வருகை பற்றி, திருக்குறள் பயணம் பற்றி எழுதினேன்.

Image result for thiruvalluvar painting

தமிழ் மக்கள் உலகின் பல நாடுகளில் உரிமைபெற்ற குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்திய மொழிகளில், உலகெல்லாம் பரவிய சிறப்புக்கு உரியதாகத் தமிழ்மொழி திகழ்கிறது. ஓரிரு நாடுகளில் ஆட்சி மொழியாகவும் பெருமை பெற்று விளங்குகிறது. பல்வேறு நாடுகளில் பன்னெடுங்காலமாகக் குடியேறி வாழும் நம் மக்களைத் தமது சொந்த நாட்டோடும் புராதனப் பண்பாட்டோடும் உறவுக் கயிறு அறுந்து போகாமல் இணைத்து வைக்கும் பாலமாகத் தமிழ் மொழியே விளங்குகிறது.

ஆனால் அண்மைக் காலங்களில் இந்த உறவுக் கயிறு வலுவிழந்தும் இணைப்புப் பாலம் செயல் இழந்தும் போகக்கூடிய அரசியல், மற்றும் சமூக வாழ்க்கை நெருக்கடிகள் ஆங்காங்கு ஏற்பட்டன. எனவேதான், உலகத் தமிழ் மாநாடு கூட்டி உரமேற்றும் முயற்சிகளும் தாய்நாட்டு அன்பர்களைத் தம்மிடத்திற்கு வரவழைத்து உறவேற்கும் மலர்ச்சிகளும் அணிவகுத்து வருகின்றன.

தேமதுரத் தமிழோசையினை உலகின் பல நாடு களிலும் செவிமடுத்துக் கேட்கும் விழாக்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. உலகப் பொதுமறையாகத் திருக்குறளை நிலைப்படுத்தும் ஆக்கங்களும் அரும்பு கட்டி வருகின்றன.

எப்பாலவரும் ஏற்கும் சிறப்புடையது முப்பாலாக அமைந்த திருக்குறள். அறம் பொருள் இன்பம் எனும் இம்முப்பால் பாகுபாடு, அனைத்து மக்களுக்கும் உரிய அடிப்படை வாழ்க்கைப் படி முறையாக சங்க இலக்கியம் தொட்டே வரன்முறைப்படுத்தப்பட்டு அமைந்தது.

“அந்நில மருங்கின் அறமுத லாகிய

     மும்முதற் பொருட்கும் உரிய என்ப”

எனத் தொல்காப்பியமும்,

“அறம் பொருள் இன்பம் என்று அம்மூன்றும்”

எனக் கலித்தொகையும்,

“அறமும் பொருளும் இன்பமும் மூன்றும்

     ஆற்றும் பெரும நின் செல்வம்”

எனப் புறநானூறும்,

“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

     தீதின்றி வந்த பொருள்”        (754)

எனத் திருக்குறளும், முப்பால் மரபினை முழுதுலகிற்கும் பொதுவாக அறிவித்துள்ளன.

அறம் பொருள் இன்பம் எனும் முத்துறைகள் பற்றியும் முழுமையான, முதன்மையான அறங்களைச் செவ்வனே வகுத்துச் சொல்லும் ஒரே நூலாக, ஒரே ஆசானால் எழுதப்பட்ட ஈடற்ற சிந்தனை நூலாக, செயல் நூலாகத் திருக்குறள் மட்டுமே போற்றப்படுகிறது. மறு உலக அச்சம் காட்டியோ, ஆசை காட்டியோ ஒழுக்கங்களை வற்புறுத்தாமல், இவ்வுலக வாழ்வின் உண்மை, நன்மை ஆகியவற்றை மட்டுமே கருதி, தனிநபர், சமுதாய நடைமுறைகளை வரன்முறைப்படுத்தும் வாழ்க்கை நூலாகத் திருக்குறள் மட்டுமே நிலைபெற்று விளங்குகிறது. எனவே சுவையான கரும்பு தின்னக் கூலியும் கிடைத்ததைப் போல் கருதி எனக்குக் கிட்டிய திருக்குறள் பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டேன்.

திருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்றி நாம் வாழும் காலத்திற்கும் பொருத்தமாகச் சமுதாயச் சிக்கலுக்கு அறவியல் தீர்வு காண்கின்றார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கும், துன்பம், கவலை நீங்கி இன்பம் இடையறாது பெறுவதற்கும் அமைதியும் முழுமையும் நிறைவும் பெறவும் வள்ளுவம் வழிகாட்டுகிறது.

“யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்

     சாந்துணையும் கல்லாத வாறு.”  (397)

எனும் குறட்பா உலகோர் அனைவருக்கும் பொது நிலையறம் புகட்டுகிறது.

 

 

வழிகாட்டும் மணிமொழியம்

Image result for மணிமொழியன்

 

வழிகாட்டும் மணிமொழியம்

 

  1. எனது திருக்குறள் ஈடுபாட்டு வளர்ச்சிக்கு உதவியவை இரண்டு; ஒன்று, நான் பெற்ற பேறு; மற்றொன்று, எனக்கு அமைந்த வாய்ப்பு.
  2. ஒரு நூலிலாவது நல்ல பயன் தரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற என் ஆசைக்கு ஓர் அளவுகோலாகக் குறட்பாக்கள் அமைந்து வந்தன. வாழ்வின் புதிய அனுபவங்களுக்கு உட்பட்ட போதெல்லாம் வற்றாச் சுரங்கமாகவும் வழிகாட்டும் வான்விளக்காகவும் எனக்குக் குறள் நெறிகள் விளங்கத் தொடங்கின.
  3. மேலை நாடுகளிலே ஒருவருக்கு ஒருவர் பேசுகின்ற சமயத்திலே பொறுமையாகவும் முழுமையாகவும் மற்றவர் பேச்சைக் கவனிக்கின்றார்கள். ஒரு செய்தியைச் சொல்லும் போது இடையில் யாரும் குறுக்கிடுவது இல்லை. மென்மையாகப் பேசுகின்றார்கள். பேசி முடித்தவுடன் தங்களுடைய உடன்பாட்டையோ மறுப்பையோ இதமாக நயம்படக் கூறுகிறார்கள். சில சமயம் உடன்படாக் கருத்துக்களுக்கு மௌனமாக ஒரு புன்னகை செய்து விட்டுவிடுகின்றனர். இவை எல்லாம் எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தன.
  4. உலகினுக்கு வள்ளுவத்தை நல்கும் பணியில் தமிழ்நாட்டு மக்கள் ஊன்றி நின்றிருக்க வேண்டும். விழா எடுக்கும்போது மட்டும் ஊர் கூட்டி முழக்க மிட்டுவிட்டு, அப்புறம் அயர்ந்து போய்விடுவது தான் நம் வழக்கம்.
  5. வள்ளுவர் நம் மொழியில் எழுதினார். ஆனால் அதனை நம்மைவிட, கிழக்கே ஜப்பானியரும், மேற்கே அமெரிக்கருமே போற்றி வாழுகின்றார்கள். வள்ளுவம் அங்கெல்லாம் வாழுகிறது! நன்றாக வாழுகிறது!
  6. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ எனப் பாரதியார் பாடினார். முதன்முதலாகத் திருக்குறளை, மேலைய உலகிற்கு வழங்கி அறிமுகப்படுத்தும் பணியைக் கூட நாம் செய்யவில்லை. தமிழ் உணர்வறிந்த மேலை நாட்டு அறிஞர்கள் எடுத்துச் சொன்ன பின்னரே திருக்குறள் பல மொழிகளில் உலகறியத் தொடங்கியது.
  7. பலருக்கும் பல வகையில் பயன்படும் சிறப்பு வாய்ந்த தனிப்பொது நூலாகிய திருக்குறளை இலக்கியமாகக் கருதிக் கலைநயம் காணலாம்; ஒழுக்க நூலாகப் பேணலாம்; அரசியல் நூலாகப் படிக்கலாம். காலம் மாறினாலும் அடிப்படை அறங்கள் மாறுவதில்லை எனும் பேருண்மையை அறியலாம்.
  8. இன்றைய வாழ்க்கையில் எத்தனையோ சிக்கல்கள்; புதுப்புதுப் பிரச்சினைகள். இவற்றிற்கெல்லாம் தீர்வு தேடி அலைவதே ஒரு பெரிய வாழ்க்கைப் போராட்ட மாக உள்ளது. தக்க தீர்வுகளைத் தேடுவார்க்குத் திருக்குறள் வழிகாட்டுகிறது.
  9. எக் காலத்திற்கும், எந்தச் சூழலுக்கும் பொருந்தும் வகையில் வாழ்க்கை அறம் வகுத்திருப்பதே வள்ளுவத் தனிச்சிறப்பு.
  10. வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கும், துன்பம், கவலை நீங்கி இன்பம் இடையறாது பெறுவதற்கும் அமைதியும் முழுமையும் நிறைவும் பெறவும் வள்ளுவம் வழிகாட்டுகிறது.
  11. ‘உலகம் ஒரு குலம்’ என்பதே திருக்குறளின் உயிரோட்டம். உலகம் ஒரு குலமாக விளங்க வேண்டும் எனில், அந்த உயிரோட்டத்திற்கு, அன்பு எனும் குருதியோட்டம் நிலையாக இயங்குதல் வேண்டும். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதே வள்ளுவத்தின் நிலையான குருதியோட்டம்.
  12. குறள் முழுவதிலும், பல்வேறு மாந்தருக்கும் நிலைக்கும் ஏற்றவாறு, வெவ்வேறு நடைத்திறங்களைக் கையாளும் வள்ளுவச் செம்மல், ‘உண்ணற்க கள்ளை’ எனத் தீய பழக்கத்தைக் கைவிடுமாறு, வியங்கோளாக வேண்டுதல் நடையில் கூறிய வள்ளுவர், இங்கே, ‘செய்க பொருளை’ என ஆக்க நெறிக்கு ஆட்பட வருமாறு கட்டளையிடுகிறார்; கண்டிப்பாக வற்புறுத்து கிறார்.
  13. திருவள்ளுவர் என்றாலே அது வாழ்க்கை விளக்கம் என்பது அருமையான தலைப்பு! ஒரு தனிநபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்
  14. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட் பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ்நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு! ஒரு தனிநாட்டை விட, உலகு என்பது பெரியது அல்லவா? அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பது அல்லவா?
  15. ‘அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் இந்நான்கும், இழுக்கா இயன்றது அறம்’ (35) என மனதில் பாசு படியாது பளிங்கு மாடம் போல வள்ளுவர் வலியுறுத்தி இருப்பது – இன்றும் நாம் எண்ணி எண்ணி மகிழத் தக்கதொரு மனோதத்துவக் கருத்து. மனத்தின் முழுத் தூய்மையே அறம் என்பது திருக்குறளின் தீர்மானம்.
  16. வள்ளுவர் மனநல அறிஞர் என்று நாம் பேசியதைப் போல, அவர் உடல் கூறுகள் அறிந்த மருத்துவர் போலவும் விளங்குகிறார்… அவர் நோயாளியின் நல்ல, தீய நிலைகளை நாடி பிடித்து ஆய்ந்தறிகிறார்; உடல் மாற்றத்து நோயின் அறிகுறிகளுக்கான காரணங்கள், உணவு முறைகள் எனப் பலவற்றையும் கேட்டறிகிறார்; பசி, செரிமானம் எனத் தனித்தனி நோயாளியின் அவ்வப்போதைய நிலைப்பாடுகளுக்கு ஏற்ப சிகிச்சை தருகிறார்.
  17. ‘ஆண்மை’ என்றால் ஆளுமை. அது புற வீரத்தை விட, அக ஒழுக்கமான மன அடக்கத்தில் தான் தலைநிமிர்ந்து விளங்கும். அது கோழைத்தனம் அல்ல.
  18. ‘அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம், செறிதோறும் சேயிழை மாட்டு’ (1110) எனும் ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதிகார இறுதிக் குறட்பா அறிவினைத் தேடத் தேட, அறியாமை மிகுவதையே இவ்வளவு நுட்பமாக உணர்த்துகிறது.
  19. திருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்றி நாம் வாழும் காலத்திற்கும் பொருத்தமாக சமுதாயச் சிக்கலுக்கு அறவியல் தீர்வு காண்கின்றார்.
  20. கீதை காட்டும் பாதையும் வள்ளுவர் காட்டும் வழியும் ஒன்றொடு ஒன்று இசைந்தவை; இணைந்தவை. கீதையில் குறளையும் குறளில் கீதையையும் காண்கின்றோம்.
  21. ‘சத்யமேவ ஜயதே’ என்ற இந்தியக் குடியரசின் இலச்சினையும் ‘வாய்மையே வெல்லும்’ என்ற தமிழக அரசின் இலச்சினையும் வாய்மையின் சிறப்புக் கருதியே பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வுண்மைகள் நம் இதயத்தில் இடம்பெற வேண்டும்.
  22. உண்மையில் எந்த ஒன்றும் முற்றிலும் துன்பம் தருவதில்லை. அத் துன்பத்தின் ஊடேயும் – புகை நடுவினில் தீ இருப்பதைப் போல – அத் துயரத்தின் நடுவிலும் வாழ்க்கை எனும் நம்பிக்கைத் தீ கனன்று கொண்டே இருக்கும்.
  23. உலகப் போக்கோடு – அந்த வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுவதை விட, அதற்கு எதிர்நீச்சல் இடும்போது தான் வாழ்வில் ஒரு வகைச் சுகம் தெரிகிறது. இந்தச் சுக அனுபவம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் உரியது; சற்று முயலும் எவர்க்கும் எளியது; நாளடைவில் எல்லோர்க்கும் இனியது.
  24. ‘பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா? பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா?’ என்பது ஒரு பழைய திரைப் பாடல். ‘பேணி வளர்க்க வேண்டும்’ எனும் தொடரிலேயே பெற்றோர்கள், தம் பிள்ளைகளைப் பொறுத்தவரை பேண வேண்டிய விருப்பங்களும் விழைவுகளும் பொதிந்துள்ளன.
  25. பிள்ளைகளைப் பள்ளியில் பணம் கட்டிச் சேர்ப்பதோடு தம் கடமை முடிந்துவிட்டது. பையன் தானாக வளர்ந்து விடுவான் என நினைக்கக்கூடாது வேம்புச் செடியை நட்டுவிட்டுத் தண்ணீர் ஊற்றினால் மட்டும் போதுமா? செடி வளர்கையில் ஆடு மாடு கடிக்காமல் சுற்றி அதற்கு வேலி வனைவதும், அது நன்கு உயரும் வரை காப்பதும் கடமை அல்லவா! பெற்றோர்கள் வேலி போடவும் வேண்டும், விருப்பம் போல வளர்ந்து உயர்ந்திட உதவவும் வேண்டும்.
  26. அறிவு என்பது நினைத்தவுடன் வாங்கிச் சேர்க்கும் பொருள் இல்லை. அவரவர் இயல்பிலே தோன்றி, முறையாக வளர்ந்திட, வளர்க்கப்பட வேண்டியதொரு தரு. சிறு வித்து வளர்ந்த மரம் ஆவது போல, பிள்ளை களிடம் உள்ள இயல்பே அறிவாக, ஆக்கமாகப் பரிணமிக்கிறது.
  27. கல்வியின் தலையாய நோக்கம் அறிவைத் தருவது மட்டும் இல்லை. நல்ல மக்களாக வளர்ந்திட உதவும் பண்பாக்கமே கல்வியின் இலட்சியம்.
  28. கல்வி என்றால் வளர்ச்சி! எதன் வளர்ச்சி? மனம், உடல், ஆன்மா எனும் மூன்றின் ஒருங்கிணைந்த, ஒத்த, பரிபூரணமான வளர்ச்சியே!
  29. கல்வி என்றால் செலவு என மட்டும் பொருள் இல்லை. கல்வி என்பது இன்று கைவிட்டுச் செலவிடுவது போலத் தோன்றும் நாளைய முதலீடு.
  30. பற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளர வேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.
  31. இலக்கியம் இனியதொரு வாழ்க்கைக் கலை; கலைகளுள் எல்லாம் சிறந்த கலை. ஓவியம், சிற்பம் முதலிய கலைகள் காலத்தின் கைப்பட்டுச் சிதைய நேரிட்டாலும் கூட, காலத்தை வென்று நிற்கும் அரிய கலையாக இலக்கியமே விளங்குகிறது.
  32. இலக்கியம் புலவர்கள் உணர்வில் வாழ்ந்தால் மட்டும் போதாது; பொதுமக்கள் நாவிலும் அது அன்றாடம் புழங்கிவருதல் வேண்டும்.
  33. இலக்கியங்கள் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், நிரந்து இனிது சொல்லும் வல்லமையால் ஞாலத்தை விரைந்து தொழில் கேட்கச் செய்ய வல்லவை.
  34. பிற மொழியினரை விட, தமிழ் மொழியினர்க்கு இலக்கியத்தைப் பேசி மகிழ்வதில் ஒரு தனிநாட்டமும் ஆர்வமும் எப்போதும் இருந்து வருதல் கண்கூடு. சங்க இலக்கிய மாநாடு, திருக்குறள் பேரவை, சிலம்பு மேடை, உலகத்தமிழ் மாநாடு, பட்டிமன்றம், இலக்கிய வட்டம், வழக்காடு மன்றம் எனப் பல்வேறு முறைகளில், வெவ்வேறு நிலைகளில் இங்கே இலக்கியம் எப்போதும் வாழ்வு பெற்றே வருகிறது.
  35. இந்திய நாட்டுப் பொது நூல்களின் வரிசையில் முன்னிடம் பெறுபவை இராமாயணமும் மகாபாரதமும் திருக்குறளும் ஆகும். இராமாயணம் – இனியதொரு நீதிநூல்; மகாபாரதம் – விரிந்ததொரு சமூகச் சாத்திரம்; திருக்குறள் – ஓர் உலகப் பொதுமறை.
  36. திருக்குறளும் கீதையும் வாழ்வில் முழு நிறைவு நூல்கள் ஆகும். மனிதனை நிறைமனிதன் ஆக்குவது இரு நூல்களின் அடிப்படை ஆகும்.
  37. வாழ்வில் இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல இயற்கையானவை. வாழ்வெல்லாம் இன்பமாகவே வாழ்ந்தாரும் இல்லை; முழுதும் துன்பத்தால் துவண்டாரும் இல்லை என்பது பழமொழி.
  38. இன்பம், பிறரை எல்லாம் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது; ஆனால் துன்பம், நம்மையே நமக்கு அறிமுகப்படுத்தித் தருகிறது.
  39. எதையும் தாங்கும் இதயம் கொண்டு, சிறு துன்பங் களைப் பழக்கமான ஒன்றாக ஏற்றுப் பெருந் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி ஒன்றாகக் கருதித் துணிந்து, ஆற்றலும் வன்மையும் பெற்று வாழ வேண்டும்.
  40. பகைவரும் மதிக்கும் சிறப்புப் பெற வேண்டும் எனில், துன்பத்தையே இன்பமாக மாற்றும் ஆற்றல் பெற வேண்டும்.
  41. துன்பம் – ஒருவகையில் – பலருக்கும் கசப்புத்தான். என்றாலும் கசப்பே நாளடைவில் நாம் விரும்பும் சுவையாகிவிட முடியும். வேப்பங் கொழுத்தைச் சிறிது சிறிதாகத் தின்னப் பழகிக்கொண்டால் – அதுசுவையான மருந்தாகி நலம் செய்வதைப் போல- துன்பச் சுவையும் நலம் தரும் மருந்தாகிவிடும்.
  42. வாழ்வில் துன்பமும் சில சமயங்களில் நமக்குத் தேவைதான். அழுக்குத் துணியை அடித்துத் தோய்த்து மாசு நீக்குதல் போல, நம்மைப் பிடிக்கும் பல்வேறு மனமாசுகளையும் நீக்கிக்கொள்ள, அத் துன்பத் தோய்வே தக்க பயன் தரும்.
  43. சிறந்த மனிதர்களிடம் சில மணித்துளிகள் கேட்பது, பல புத்தகங்கள் படித்து அவற்றின் சாரத்தை ஈர்த்துக் கொள்ளும் வாய்ப்பிற்கு நிகராகும்.
  44. ‘யார் கூறுகின்றார்’ என்று பார்க்காமல், ‘யாது கூறினார்’ என்று ஆய்ந்து அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
  45. நல்லவர்கள் வல்லவர்களிடம் பொது நன்மை கருதி அட்டை போல் ஒட்டிக்கொள்ள வேண்டும்.
  46. மனம் மாசற்று இருப்பது தான் அறம். உள்ளம் தூய்மையுடையதாய், உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவதுதான் அறம்.
  47. ‘நேற்று இருந்தார் இன்று இல்லை, இன்று இருப்பவர் நாளை இல்லை’ என்ற வியப்பான உலகில், காலம் தாழ்த்தாது, வாழும் ஒவ்வொரு நாளும் அறம் செய்ய வேண்டும்.
  48. சான்றாமைக்கு ஆழி எனப்படும், ஊழி பெயரிலும் தாம் பெயராச் சான்றோர் வாழும் வரை, மனிதப் பண்புகள், உணர்வுகள் மனிதனிடம் நிலைத்து நிற்கும் வரை, அறம் அழியாது; அறத்தை அழிக்க முடியாது.
  49. மனத்தோடு வாய்மை மொழிந்து, சொல் வேறு, செயல் வேறு என்று மாறுபடாமல் உண்மையாளர் களாய், நல்ல அரிய செயல் செய்பவர்களால் தான் உலகம் வாழ்கிறது.
  50. சிறுசிறு வெற்றிகளில் திருப்தி அடையாமல், பெரும் வெற்றி நோக்கிப் பீடுநடை போட வேண்டும்.
  51. பிறருக்குச் சொல்வது வேறு – அவ்வாறு தாம் வாழ்ந்து காட்டும் நடைமுறை உலகம் வேறு – இரண்டும் வெவ்வேறு என்ற மனப்போக்கு இன்று மலிந்து கிடக்கிறது. எதை எண்ணுகின்றோமோ, அதைச் சொல்கின்ற துணிவும், சொல்லிய வண்ணம் செயலாக்கும் திறனும் அற்று நாம் வாழ்வதே இதற்குக் காரணம்.
  52. நெஞ்சில் உறுதியின்றி, நேர்மைத் திறனுமின்றி ஆற்றல் இருந்தும் அச்சம் கொண்டு வாழ்ந்தால் இதுவே எல்லாத் தீமைகளுக்கும் பாவங்களுக்கும் அடிப்படையாக மாறி விடும்.
  53. ஒருவன் எண்ணும் எண்ணமும், சொல்லும் சொற்களும் அவன் உயர்ந்தவனா? தாழ்ந்தவனா?, சிறியவனா? பெரியவனா? என்ற உண்மைகளை உரைகல்லாகக் காட்டிவிடும். செய்கின்ற செயலின் திறத்தால் ‘தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்ற அடிப்படையில் அவரவர் தகுதியை அறியலாம்.
  54. வேள்வியால் கிடைப்பது விண்ணில் வாழும் அமரர் விரும்பும் அமரத்தன்மை தரும் அவியுணவு. கேள்வியால் கிடைப்பது மண்ணிலே வாழ்வோர் விரும்பும் இறவாச் சிறப்புடைய அமுத வாழ்வு.
  55. தகுதி மிக உடையவர் முயற்சியால் பெருஞ்செல்வம் ஈட்டினால் அப்பொருளைத் தமக்கு மட்டுமன்றிப் பிறர்க்கும் நலம் பயக்கும்படி பயன்படுத்துவர்.
  56. உயர்ந்த புகழ் பிறர்க்கு உதவுதலிலே உள்ளது. தன்னலம் இழந்து உதவுவது தலையாய புகழ் ஆகும்.
  57. ஒருவனுடைய அறிவை ஆராய்கையில், மறக்கக் கூடாத அடிப்படையான உண்மை ஒன்று உண்டு. எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் என இவ்வுலகில் யாரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஓரளவேனும் உலக ஞானம் இருக்கவே செய்யும். அதுபோலச் சிறந்த அறிஞரிடத்தில் ஓரளவு அறியாமை இருப்பதும் இயல்பு.
  58. நாம் பல கருத்துக்களை விரிவாக, ஆழமாக விவாதம் செய்கின்றோம். நல்ல கருத்துக்களை உணர்ச்சி வசமாகப் பேசி மகிழ்வதோடு அமைதி அடைந்து விடுகின்றோம். அப் பிரச்சினைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்துத் தீர்வு காண்பதில்லை.
  59. தமிழிசை இயக்கம் பாட நூலோடு, பண்முறை ஆராய்ச்சியோடு, மாநாட்டோடு, மலர் வெளியிட்டோடு நின்று விடுகிறது. இது நாள்வரை இப்படி இருந்தது போதும், இனிமேல் தமிழிசை இயக்கத்தின் எல்லைகள் விரிய வேண்டும்… வெளிநாட்டார் நாடிப் போற்றும் வகையில் நம் தமிழிசை தேனார் தமிழிசையாய்ச் சிறக்க வேண்டும்.
  60. தமிழ் இசை, தமிழர் மனங்களை எல்லாம் இசையச் செய்து, இசைபட வாழச் செய்து, தமிழரை உலகெல்லாம் போற்றும் ஆற்றல் பெற வேண்டும். தமிழ் இசை தமிழர் இசையாக வாழ்க! வளம் பெருகுக!
  61. எக்காலத்திற்கும் பொருந்தும் அறங்களை உண்மை களின் அடிப்படையில் விளக்குவதால் திருக்குறள் முக்காலத்திற்கும் பொருந்துவதாக இருப்பதொடு, பண்பாட்டுத் தொடர்ச்சியை இணைக்கும் இனிய சரடாகவும் இருக்கிறது.
  62. உழைப்பும் திறமையும் வலிமையும் வாழ்வில் வளமை சேர்க்கும் என்பதே அமெரிக்க வாழ்க்கை.
  63. நாளை நாளை என்று நாட்களைத் தள்ளிப் போட்டுத் தட்டிக் கழித்து விடாமல், நிலையாத வாழ்க்கையில் நிலைத்த புகழோடு வாழத் தலைப்பட வேண்டும்.
  64. உழைப்பால் தான் உயர முடியும் என்ற தன்னம்பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் உறுதியாக ஏற்பட்டாக வேண்டும்.
  65. அறநெறியில் நின்று தளராது, அயராது, ஊக்கத்துடன், உண்மையாக முயன்று உழைப்பவர்கள் தான் தகுதியும் புகழும் பெறுகின்றார்கள்.
  66. இளமைப் பருவத்தில் நம் நெஞ்சம் எனும் வானில் எத்தனையோ ஏற்றம் மிக்க இலட்சியங்கள் இடம் பெறுவது உண்டு. அவற்றுள் சில மட்டும் வளர்பிறையாக வளர்ந்து, முழுமதியாக நிலைக்கும்.
  67. தேடிச் சோறு நிதம் தின்று, உண்டு உடுத்தி உறங்கி வாழ்வது வாழ்க்கை அல்ல. தகுதியோடும் மகிழ்வோடும் வெற்றியோடும் வாழும் வாழ்க்கையே புகழ் நிறைந்த வாழ்க்கை.
  68. கல்வி, அறிவு, செல்வம், பண்பு, செல்வாக்கு, புகழ் பெற முயன்று உழைப்பவனே உயர்ந்தவன்; அவ்வாறு முயலாது சோம்பி, உண்டு, உறங்கி, களித்துத் திரிபவன் நிந்தனைக்கு உரியவன்; சமுதாயத்தைப் பாழ்படுத்துபவன், முயற்சியும், உழைப்பும், ஊக்கமும், தொண்டும் உடையவன் தானும் உயர்ந்து சமுதாயத்தையும் உயர்த்துவான்.
  69. கடலை, மலையை, யானையை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது என்பார்கள். அந்தப் பட்டியலில் இன்னும் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம்; நீர் அருவி, ஆலயக் கோபுரம்.
  70. பயணம் செல்வது இனியதொரு வாழ்க்கை அனுபவம்… நமது வீடு, நாடு எனும் குறுகிய வரையறைக்குள் இருந்து பழகிப்போனவர்களின் பார்வையினைப் ‘பெரிதே உலகம், பேணுநர் பலரே!’ எனும் எல்லைக்கு விரிவுறச் செய்யும் இரசவாதம்.
  71. எண்ணம், சொல், செயல் மூன்றனுள் அடிப்படை யானது எண்ணமே. மனம் என்னும் நிலம் நலமாக இருப்பின், அதில் விளையும் சொல்லும், செயலும் நலமாக, ஆக்கமாகச் செழிக்கும்.
Pages: 1 2