அன்றறிவாம் என்னாது அறம் செய்க!’

நாவிற்கு சுவை உணர்வு இருப்பது போலச் செவிக்கும் சுவை உணர்வு உண்டு. நல்ல உணவு உடலை வாழ வைப்பது போல, நாம் பெறும் நல்லறிவும் நம் உள்ளத்தை வாழ வைக்கும். நல்லுணவு நாவிற்கு இனிமை தருவது போல், நற்கருத்துக்கள் செவிக்கு இனிமை தரும். அதனால் தான் பாரதி, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்றார். தேனை நாவால் சுவைக்கும் போது என்ன இன்பம் கிடைக்குமோ அத்தகு இன்பம் செந்தமிழ்நாடு என்று சொல்லும்போது காதில் தேனாகப் பாய்ந்து இனிக்கிறது என்கின்றார் புதுமைக்கவிஞர் பாரதி.

கேடில்லாத, அழியாத விழுச்செல்வம் கல்வியென்றால் நல்லவையாக அமைந்த கேள்விச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலைமையானது. ஒரு துறையில் கற்றவர்களுக்கும்- பல துறைகளில் அறிவு வழங்குவது கேள்விச் செல்வமாகும். கற்றவன் நுட்பமாக, இனிமையாக, கேட்பவரைப் பிணிக்கும் வகையில் நல்ல செய்திகளை ஆற்றலுடன் கூறும்போது, கல்வி கல்லாதவனும் கற்றதன் பயனைப் பெறுகின்றான். அறிஞர்கள் மிகச் சிறந்த கருத்துக்களை எடுத்துச் சொல்லும்போதும் அவற்றை விரித்துச் சொல்லும் போதும் தொகுத்துச் சொல்லும்போதும் கற்றறியா எளிய மக்களும் பயன் பெறுகின்றார்கள். பல காலம் செலவழித்துப் பல நூல்களைப் படித்தவர்கள் நல்ல கருத்துக்களை நயமுடன், எளிமையுடன் கூறும்போது அவற்றைக் கேட்பவர்கள் சில மணித் துளிகளிலே மிகப் பெரும் பயனைப் பெற்று விடுகிறார்கள்.

வேள்வியால் கிடைப்பது விண்ணில் வாழும் அமரர் விரும்பும் அமரத்தன்மை தரும் அவியுணவு. கேள்வியால் கிடைப்பது மண்ணிலே வாழ்வோர் விரும்பும் இறவாச் சிறப்புடைய அமுத வாழ்வு.

வாழ்வு சிக்கல்கள் நிறைந்தது; உணர்ச்சி நிறைந்தது. ஆதலால் கேட்பதெல்லாம் கேள்வியாகிவிடாது. மனம் உணர்ச்சிவயப்படும் சமயத்தில் எல்லாம், தடுமாறுகின்ற நேரத்தில் எல்லாம், நல்லோர் சொன்ன கருத்துக்கள் தாம் நற்பயனை, நன்மைகளை அளிக்கும்.

அறம் செய விரும்பி, வாழ்வின் ஒரு பகுதியை மட்டும் அறம் செய்ய வேண்டும் என்று ஒதுக்காமல் வாழ்வு முழுவதுமே அற வாழ்வாகத் திகழ முற்பட வேண்டும். தனி மனித வாழ்வும், குடும்ப வாழ்வும் அறவாழ்வினை மேற்கொண்டு நடக்கும்போது நாடும் உலகமும் நலம் பல பெற்றுத் திகழும். வாழ்க்கைக்கு இவ்வறம் சிறப்பைத் தரும்; செல்வத்தைத் தரும். நிலையாத வாழ்க்கையில் நிலைத்த புகழைத் தரும்; இவ்வாறு நிரந்தரமாக நிலைபெற்றுப் புகழ்பெற்று, வாழும் உயிர்கள் ஆக்கம் பெறும்.

உலகின் அற நியதிகளும் நியாயங்களும் மீறப்பட்டால் நிச்சயமாகத் தீய விளைவுகள் உருவாகிவிடும். நாம் விதைக்கும் விதைகளுக்கு ஏற்பவே பின்னர் விளைவுப் பயனைப் பெற முடியும். நாம் செய்யும் நல்ல அறச் செயல்களே நல்ல பயன் தரும். நல்ல விளைவுகளைத் தர முடியும்.

அறச் செயல்களைச் செய்யும் வகையால் எக்காரணம் கொண்டும் அவற்றை இடையே விட்டு விடாமல் இயன்ற வகையில் எல்லாம் தொடர்ந்து அந்த அறச் செயல்களைப் போற்றிச் செய்ய வேண்டும்.

நாளை நாளை என்று நாட்களைத் தள்ளிப் போட்டுத் தட்டிக் கழித்துவிடாமல், நிலையாத வாழ்க்கையில் நிலைத்த புகழோடு வாழத் தலைப்பட வேண்டும். இளமைக் காலத்தே மன நலம் மிகுந்தவராய் வளர வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று சோம்பல் கொள்ளாமல் நற்செயல்களில் தீவிரமாக நாட்டமுற வேண்டும்; அயராது அறப்பணிகள் செய்ய வேண்டும். அதுவே உடல் நலியும் காலத்தும் அழியாப் புகழ் தந்து துணை நிற்கும்; உடல் அழிந்த காலத்தும் அழியாப் புகழ் தரும்.

ஆகவேதான் வள்ளுவர் கட்டளையிடுகின்றார் – என்ன கட்டளை? கேட்போம்.

“அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க; மற்றுஅது

 பொன்றுங்கால் பொன்றாத் துணை.”  (36)

அறம் பிழைத்தால்…?

அறம் பிழைத்தால்…?

 

Image result for valluvarஉலகு உயிர்கட்குச் சிறப்பீனும் செல்வமுமீனும் அறத்தின் ஆக்கம் பெரிது. உலகு உயிர்களுக்கு உயிரன்ன அறம் தனித்தும் நிற்பது; பொருள் இன்பத்துடன் விரவிக் கலந்தும் நிற்பது. இயற்கையுடலின் உயிர் மாசற்ற இறையானால், மாசற்ற அறமே இறையாகும். இறையாகிய அறவாழி உவமையற்றது, எல்லையற்றது, மறத்தலியலாச் சிறப்புடையது, பேரருள் சான்றது.

“அருள் குடையாக அறம் கோலாக

     இருநிழல் படாமை மூவேழ் உலகமும்”   (பரிபாடல்)

அறம் விழையும் நெஞ்சம் ஆக்கத்தில் நிலைக்கும் என்றால், அறம் விழையா நெஞ்சின் நிலை என்ன? அறம் பேணா அந்நெஞ்சம் ஆக்கம் தேட முயலுமா? ஆக்கம் தேட முயலாவிட்டாலும் அமைதியாக அடங்கிக் கிடக்குமா? அன்றி, அறம் பிழைக்குமா? அறம் பிழைத்தால்…. அறமே பிழைக்குமா…?

அறம்:- எண்ணம், சொல், செயல் மூன்றனுள்ளும் எண்ணம் சொல்லுக்கும் செயலுக்கும் அடிப்படையாய் அமைந்தது, அதனால் மாசற்ற, தூய்மையான அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும் இழுக்கா இயல்புடைய எண்ணம் முதன்மையான சிறப்புடையது. எனவே,

“மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்;

     ஆகுல நீர பிற”              (34)

என நுண்மாண் நுழைபுலத்துடன் வள்ளுவம் காட்டும்.

“மனத்துள் மாறாது உறைந்து கிடக்கும்

     சட்டத்திற்கு அறம் என்று பெயர்”

என்று பைபிள் காட்டும். தனி மனிதனுக்கு மட்டுமன்றி உலக சமுதாயத்திற்கும். இவ்விளக்கம் பொருந்தும்.

அறம் பிழைப்பதேன்…?

Image result for manimozhian kuralஇயற்கையின் ஆற்றல்மிகு அமைப்பில் நல்லன எல்லாம் விரைந்து உடனே பயன் தரும் நிலை குறைவு, ஆனால் தீமை செய்வன எல்லாம் உடன் விரைந்து தீய பயன் தரும் நிலை மிகுதி. இது இயற்கையின் வியத்தகு அமைப்பு முறை. நஞ்சுண்டவன் விரைந்து மடிகின்றான். உடன் விளைவு காண இயலுகின்றது. நனிசுவை நலந்தரு உணவு உண்டவன் நலம் பெறுவான் ஆனால் உடன் பயன் காண முடிவதில்லை. இவ்வடிப்படை உண்மையே அறம் பிழைக்க அடிப்படையாய் அமைந்த சூழல்.

அரம்போலும் கூர்மையரேனும், மக்கட் பண்பில்லா மரம்போன்ற குறுகிய எண்ணமுடைய தனிமனிதனோ சமுதாயமோ அவ்வியற்கை அமைப்பை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றார்கள். உலகம் அறம் பிழைக்கும் சூழலில் சிக்கித் தவிக்கிறது.

“கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்

     கோடாமை சான்றோர்க்கு அணி”     (115)

“நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை

     அன்றே ஒழிய விடல்.”        (113)

என்ற நெறிகளை ஞாலம் வாழ்க்கை நடைமுறையமைப்பில் ஏற்றுக்கொள்வதில்லை. ‘புதரில் உள்ள இரு பறவைகளை விட கையில் உள்ள ஒரு பறவையே மேலானது’ என்ற எண்ணமே மக்களிடையே நிலைத்து நிற்கின்றது.

தனிமனிதன் குறைந்த முயற்சியில் தான் வாழ வேண்டும். தன் குடும்பம் வாழ வேண்டும் என்று குறுக்கு வழியில் வாழ்க்கை வழிதேட விழைகின்றான். இன்று இடுக்கண் உற்றாலும் நாளை நல்லற நெறியில் நற்பொருன் ஈட்டுவோம் என்ற அறநெறியை அவன் மனம் நாடுவதில்லை, இதனால் அவன் அழுக்காறு உடையவனாய், புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்பவனாய், பேரவா உடையவனாய் ஆகின்றான். இத்தகு தனித்தனி குறுகிய நோக்குடையவர் களால் மன்பதை பாழ்படுகின்றது. அதனால்தான் சமுதாய அமைப்பில் இன்னா செய்தார்க்கும் இனியவை செய்து அவ்வொன்னாரை நல்லவராக ஆக்கும் முயற்சியைக் காண இயலுவதில்லை. ‘அளவிறந்து ஆவது போலக் களவினால் ஆகிய ஆக்கம் கெடும்’ என்ற உண்மை உணர்ந்தவர்களைக் காண இயலுவதில்லை. ‘தன்னெஞ்சத்து அழுக்காறில்லாத இயல்பை ஒருவன் ஒழுக்காறாகக் கொள்க’ என்ற கொள்கை உணர்ந்தவர்களைக் காண இயலுவதில்லை ‘மற்றின்பம் வேண்டுபவர் சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யார்’ என்ற ஆன்ற பொருளுணர்ந்த வர்களைக் காண இயலுவதில்லை. ஆனால் குறுகிய நோக்கத்தால் பொறுமையற்றவர்களாய், கயவராய், பெரும் பொய்யராய், கொடிய கொலைஞராய் வாழ்வோரைக் காண முடிகின்றது. இத்தகையோர் குற்றமிழைத்தால் உலகம் எளிதில் இக்குற்றத்தைக் கண்டு இவர்களைப் பழிக்கிறது; ஒறுக்கவும் செய்கின்றது, ஆனால் தனிமனிதன் தனக்கென்று ஓர் அமைப்புப் பெற்றிருப்பானானால், ஆற்றல் நிறைந்தவனானால் இக்குற்றம் மறைக்கப்படுகின்றது. மற்றும் குறுகிய நோக்குக் கொண்ட திறன் மிக்க வல்லவர்களான இத்தகைய தனிமனிதர்கள் தலைவர்களாக அமைந்து விட்டாலோ உலகம் அவர்கள் குற்றத்தை மறைப்பது மட்டுமின்றி, ஏற்றிப்போற்றி இறைஞ்சி ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது. இதுவும் உலகின் வியப்புமிகு போக்கு.

யார் குற்றம்?

அறம் பற்றி விளக்க விழைந்த வள்ளுவர் மக்களின் வாழ்க்கையமைப்பைப் பற்றிப் பல்வேறு கோணங்களில் ஆய்ந்து மக்கள் அறம் பிழைக்கக் காரணமான உண்மையைக் கண்டு துயருற்றவராய்,

“நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்

     வான்இன்று அமையாது ஒழுக்கு”           (20)

என்று கூறுகிறார். ‘கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம்’ ஆகிய மழைநீர் இல்லாமல் உலக வாழ்க்கை அமையாது என்று வாழ்க்கைப் போராட்டத்தைச் சுட்டிக்காட்டி அத்தகைய போராட்டத்தில் சிக்கித் துயருழந்து ஒழுக்கத்தைக் கைவிட்டவர்களைப் பழிக்காமல் இரக்கம் காட்ட வேண்டும் என்ற உண்மையை இலைமறை காயாக எடுத்துக் காட்டுகின்றார்.

இன்றைய அமைப்பு முறையிலும் இதே நிலைதான். மழை இருந்த இடத்தைப் பொருளும் பதவியும் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. இதுதான் வேறுபாடு. ஆதலால் மக்கள் மேல் மட்டும் குற்றம் காண்பதில் பயனில்லை. மக்கள் வாழும் அமைப்பு முறையில் தவறு நிகழ்ந்திருக்கிறது. மக்கள் எண்ணித் துணியும் இயல்பு பெறாதவர்கள். ஆனால் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டு குறுகிய நோக்கமுடைய தன்னலம் மிக்கோர் வளர்ந்து விடுகிறார்கள். உலக அமைப்புப் பாழ்படுகின்றது.

அறம் பிழைத்தால்….? அறமே பிழைக்குமா…? அறம் விழையும் நெஞ்சமானது ஆக்கத்தில் நாட்டம்கொள்வது போல் அறம் விழையா நெஞ்சம் கேட்டை விளைவிக்கும்.

“வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்

     நடுவணது எய்த இருதலையும் எய்தும்” (114)

என்று நாலடியார் பொருள் செயல் வகையின் சிறப்புக்கூறும். அறவழியில் ஈட்டிய அருஞ்செல்வம் அல்லது தலைமைப் பேறு போராட்டத்தை எழுப்பாது, உலகில் போராட்டம் குறைய வேண்டுமானால் பொருள் பொதுவில் பயன்படும் முறை ஓங்கி வளர்தல் வேண்டும். குறுகிய எண்ணம் குறைந்து அருள் சான்ற நெஞ்சம் வளர்தல் வேண்டும். அறத்தில் ஈடுபடா உள்ளம் பெரும் போராட்டங்களை எழுப்பும். தனி மனிதனின் அகப்போராட்டமாய்த் தொடங்கி புறப்போராட்டமாயும் வளர்ந்து உலகப் போராட்டமாய் முடியும். போராட்டத்தின் இறுதி விளைவு கேடே, ஆதலால் வள்ளுவம்.

“அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை

     மறத்தலின் ஊங்குஇல்லை கேடு”      (32)

என்று கூறும். அறமுறை நிலவா நாடு ஆக்கம் பெறுவதில்லை. இதைக் கலித்தொகை,

“சிறுகுடியீரே, சிறுகுடியீரே!

     வள்ளிகீழ் விழா, வரைமிசைத் தேன்தொடா

     கொல்லைகுரல் வாங்குஈனா, மலைவாழ்நர்

     அல்ல புரிந்தொழுகலான்”

என்று கவினுடன் காட்டும்.

தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் உலகில் கேடு சூழ்வன செல்வமும் பதவியும். உலகச் சூழலானும் அமைப்பு முறையானும் நேர்ந்த குறையால் தன்னலம் மிகுந்தவரும் குறுகிய நோக்கமுடையவரும் தமது ஆற்றலால் ஞாலத்தை அடக்கித் தம் வழியில் ஆள இயலுகின்றது. இந்நிலை வளர்ந்தால் உலகம் நிலைக்குமா? அறம் பிழைக்குமா?

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்’ என்ற பேருண்மையை ‘தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணினீர்கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன்’ மெய்ப்பித்தான் அன்று. அவன் அறஞ்சான்ற நெஞ்சத்தான். ஆனால் இன்று நிலை என்ன? அறம் குறைந்து, அன்பு தேய்ந்து, அமைதி மங்கி தன்னலம் உயர்ந்திருக்கின்றது. குறுகிய நோக்கம், குறுகாது வளர்ந்திருக்கின்றது. மக்களில் ஒருவருக்கொருவர், குடும்பத்திற்குக் குடும்பம், இனத்திற்கு இனம், நாட்டுக்கு நாடு பகையும் பொறாமையும் பரந்து நிறைந்து வளர்ந்து வருகின்றது. இதுவே இயற்கை என்று கூறும் அச்சநிலைக்கு உயர்ந்துவிட்டது. இந்நிலையில், அறம் வாழுமா?

தனிமனித வாழ்க்கையையும், அவனைச் சார்ந்த குடும்பத்தினரையும், நலம் நாடும் நட்புடையாரையும் பிணக்குக் கொள்ளச் செய்து அவர்களை ஆட்டி ஆட்சி புரிவதும், பொருளாட்சி, பொருளல்லாதவரையும் பொருளாகச் செய்யும் பொருள் ஒரு கூட்டத்தின்பால் குவிந்து கிடக்க, நெருப்பினுள் துஞ்சலினும் கொடிய நிரப்பினுள் வாடுகின்றது ஒரு கூட்டம். இவ்வாறு இங்கும் இனத்தின் பெயரால் செல்வர் – வறியவர் எனப் பிரித்து இவர்களை ஆட்சி புரிவதும் பொருளாட்சி, மற்றும் நிறத்துக்கு நிறம், வகுப்புக்கு வகுப்பு, சமயத்துக்கு சமயம் போராட்டத்தை எழுப்பியதும் பணமே. உலகப்போரின் அடிப்படையே பொருளால் அமைந்ததாகும். நாடுகளுக்கு இடையே வலிமையுடைய நாடாய் இலங்க வேண்டும் என்ற பேரவாவால், பொருள் வலிமையால் படைவலிமையை வளர்த்து, சில வல்லரசுகள் உலகத்தை அச்சத்துக்கு உள்ளாக்குகின்றன. இவ்வாறு இங்கு கொடுங்கோல் ஓச்சுவதும் பொருளாட்சியே! அமைதியை நிலைநாட்டு வதற்கென அமைக்கப்பட்ட உலக அமைதிக் காப்பு அறநிலையமான ஐக்கிய நாட்டு அவையும் பொருள் வளமும் படைபலமும் மிகுந்த நாடுகளைச் சார்ந்திருக்கின்றது. இவ்வாறு தனிமனிதன் முதல் உலகம் வரை நிலவி நிறைந்து நிற்கும் குறை உலகுக்குப் புலப்படுமா? அறம் பிழைக்குமா?

ஆயினும், அறம் எவ்வாறேனும் வாழும், தீமை தோற்கும், அறம் வெல்லும் இது உண்மை. கருவி குறிக்கோளாக மாறியிருப்பதே இன்றைய அச்சத்திற்குக் காரணம். அமைதியான பண்புமிகு அறவாழ்வே குறிக்கோள் ஆகும். செல்வம் ஒரு கருவி. அமைப்பு முறை மாறி யிருக்கிறது. இதுவே குறை, இக்குறை நீக்கமுடியாத குறையன்று. இன்றைய சூழலில் தனிமனித வாழ்க்கையைச் சீர்திருத்துவதினும் உலகச் சமுதாய அமைப்பை மாற்றி நெறிப்படுத்தினால் இக்குறை நீங்கும்.

தன்னலங் கருதாது அறத்தின் வழிநின்று கடனாற்றும் சான்றோர் ஒருசிலராவது என்றும் வாழ்வர். அத்தகையோரால் உலகம் என்றும் உயிர்கொண்டு வாழும்.

“உண்டால் அம்ம இவ்வுலகம்…

     தமக்கென முயலா நோன்தாள்

     பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”  (புறநானூறு.182)

“பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அஃதுஇன்றேல்

     மண்புக்கு மாய்வது மன்.”           (996)

சான்றாண்மைக்கு ஆழி எனப்படும், ஊழி பெயரினும் தாம் பெயராச் சான்றோர் வாழும் வரை, மனிதப் பண்புகள், உணர்வுகள் மனிதனிடம் நிலைத்துநிற்கும் வரை, அறம் அழியாது. அறத்தை அழிக்க முடியாது. தீமை அளவிறந்து ஆவது போலக் கெடும். “இறைச் சட்டங்கள் மனித மனத்துள் அமைந்திருக்கின்றன. அதனுடைய சுவடுகள் அழியாதவை”

அறமே ஆக்கம் தரும்

அறமே ஆக்கம் தரும்

 

உலகின் நலன்கள் அனைத்தும் – நேர்மை, தூய்மை, உண்மை, வாய்மை, மெய்ம்மை, சான்றாண்மை முதலான அனைத்துப் பண்புகளும் – அறம் எனப்படும். அறம் என்பதன் பொருள் ‘அற்றது’ என்பது ஆகும். உள்ளம் மாசு அற்றதாக இருத்தல், தன்னலம் அற்றதாக இருத்தல், பற்றற்றதாக இருத்தல் அனைத்தும் அறத்துள் அடங்கும். அறத்தில் அன்பும் அருளும் அடங்கும்.

‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்’ என்ற வள்ளுவர் இலக்கணம் மிகவும் நுட்பம் மிகுந்தது. அறத்திற்குச் செயல் திறம் வேண்டும் என்பதை வலியுறுத்தும் வரிகள் இவை. உள்ளொன்றும் புறமொன்றுமாகவும் இல்லாமல் அகமும் புறமும் தூய்மையுடன் ஒத்திருக்க வேண்டும். மனம் அழுக்கற்று, அவாவற்று, வெகுளியற்று, இன்னாச் சொல் அற்று இருக்க வேண்டும்.

தூய்மையான செயல் வேண்டும் என்றால் துணையாக நிற்பவை தூய்மையான மனமும், தூய்மையான சொல்லும் ஆகும். அறத்தின் செயல்நோக்கம் கருதி ‘அறவினை’ என்று குறிப்பிடுவார் வள்ளுவர். ஔவையும் ‘அறஞ்செயவிரும்பு’ என வள்ளுவர் வழிநின்று பேசுவார். இவைகளே, மெய்ம்மை, வாய்மை, உண்மை என வழங்கப்படுபவை. வாய்மை என்றால் கண்ணால் கண்டதைக் கண்டபடியே சொல்வதா? உள்ளத்தால் உணர்ந்ததை அப்படியே உரைப்பதா? அவ்வாறு கூறும் போது சில சமயம் பிறருக்குத் தீங்கு நேருமாயின் அது வாய்மையால் வந்த தீமை என்று கருதப்படும் அல்லவா? அப்படியாயின் வாய்மைக்கு இலக்கணம் என்ன?

வாய்மைக்கு அரியதோர் இலக்கணம் கூறுகிறார் வள்ளுவர். மற்ற மனிதர்களுக்கோ, உயிர்களுக்கோ தீங்கு செய்யாத சொற்களைச் சொல்வதெல்லாம் வாய்மை என்று சொல்லப்படும். நடந்ததைச் சொல்வது மட்டு மன்றிப் பிறருக்குத் தீங்கு நிகழாமல் நினைப்பதும் சொல்வதும் செய்வதும் வாய்மையாகும்.

“வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்

     தீமை இலாத சொலல்”        (291)

சில சமயங்களில் ஒரு பொய்யால் நன்மை விளைவதைப் பார்க்கிறோம். பொய் ஒன்று பேசி, அதனால் நன்மை விளைகிறதா? ஆராய்ந்து பார்க்கிறார் வள்ளுவர். முடிவாகச் சொல்கிறார், அப்பொய்யும் மெய்யைச் சார்ந்தது என்று. ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறார். அப்பொய் விளைவிக்கும் நன்மை களங்கமற்றதாய், கறையற்றதாய், குற்றமற்ற நன்மையைப் பிறருக்குத் தருமாயின் அப்பொய்யும் மெய்தான் எனப் பேசுகிறார், பொய்யாமொழிப் புலவரின் ‘பொய்ம்மையும்’ என்ற சொல் இங்கு நயமுடையது.

“பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

     நன்மை பயக்கும் எனின்”      (292)

நம் சான்றோர்கள் உண்மையை வணங்கி அதன் ஒளிச் சுடரினைப் பின்பற்றியவர்கள்; வாய்மையின் ஆற்றல் இறையாற்றல் என உணர்ந்தவர்கள். உலகங்கள் அனைத்திலும் அறிவாய், அனுபவங்களாய், உள்ளுணர்வுகளாய் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்கும் மெய்ம்மையே இறை எனக் கண்டவர்கள். உலக வாய்மையை உணர்ந்தவர்கள் உணர்வுடையவர்களாய் மகான்களாக, மகாத்மாக்களாக உயர்கின்றனர். அவர்கள் பெருமையை உணர்ந்து போற்றுகிறார் வள்ளுவர்.

பொய்ம்மை நீங்கிய உள்ளத்துச் சான்றோர்களை உலக மக்கள் தங்கள் உள்ளங்களை எல்லாம் காணிக்கை ஆக்கிப் போற்றிப் பாராட்டுவார்கள். என்றும் தம் உள்ளங்களில் நிலைநிறுத்திப் புகழ்வர் என்று பொய்யாமையின் சிறப்பைக் கூறுவார் வள்ளுவர்.

‘சத்யமேவ ஜயதே’ என்ற இந்தியக் குடியரசின் இலச்சினையும் ‘வாய்மையே வெல்லும்’ என்ற தமிழக அரசின் இலச்சினையும் வாய்மையின் சிறப்புக் கருதியே பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வுண்மைகள் நம் இதயத்தில் இடம் பெறவேண்டும்.

உடலின் புறத்தே படிந்த அழுக்குகள் தண்ணீரால் நீங்கிவிடும். சோப்புப் போன்ற வாசனைப் பொருள்களால் உடலை வாசமுறச் செய்யலாம். ஆனால் உள்ளத்தில் உள்ள அழுக்குகளை நீக்கிட உள்ளம் அறவொளியால் நிறைந்திட உதவும் ஆற்றலுடையது உண்மையே. உண்மை உள்ளழுக்கு களை நீக்கி, இருள் நீக்கும் ஒளி விளக்குப் போல் நெஞ்சின் இருள் போக்கி என்றும் உள்ளத்தை ஒளியுடையதாய் ஆக்கும்.

“புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை

     வாய்மையாற் காணப் படும்.”        (298)

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

     வாய்மையின் நல்ல பிற”       (300)

தாம் அறிந்த பேருண்மைகளில் தலையானது எனத் தம்மை முன்னிலைப்படுத்தி வாய்மையைப் போன்று பெருநன்மையும் நலமும் தரும் செயல் வேறொன்றும் இல்லை என அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறார் வள்ளுவர்.

மனத்தோடு வாய்மை மொழிந்து, சொல் வேறு, செயல் வேறு என்று மாறுபடாமல் உண்மையாளர்களாய், நல்ல அரிய செயல் செய்பவர்களால்தான் உலகம் வாழ்கிறது.

அறவாழ்வால் விளையும் நன்மைகள் என்ன? வாழ்வு துன்பம் இல்லாமல், சுமையாக இல்லாமல் மகிழ்வும் இனிமையும் மிக்கதாய் விளங்க வேண்டுமானால் வாழ்வு அறம் நிறைந்து இருக்க வேண்டும். செம்மையாகத் திருத்தப்பட்ட சிறந்த பாதையிலே பாதுகாப்புடன் செல்லும் துன்பமில்லாப் பயணம் போல் வாழ்வுப் பயணமும் பயமில்லாததாய்ப் பயன்மிகுந்ததாய்ப் பிறருக்கும் இவ்வறவாழ்வின் பயன் தந்து நலம் நல்கும். தீவினை வந்து தாக்கும் வாழ்வையும், பிறவியையும் தாண்டலாம். நீண்ட நிலைத்த புகழும், அமைதியும், அன்பும், இன்பமும் கொலுவீற்றிருக்கும்.

“சிறப்புஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊங்கு

     ஆக்கம் எவனோ உயிர்க்கு?”         (31)

“வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்

     வாழ்நாள் வழியடைக்கும் கல்”       (38)

அறத்திற்கு இணையானது அறமே. ஆகையால் அறத்தை மேற்கொள்வதே பாதுகாப்பானது. இயன்ற வழியெல்லாம் அறச்செயல் செய்து வரவேண்டும். ஆரவாரம் ஒழிந்து தூய்மை மிகுந்து உள்ளத்தில் ஒளி மிகுந்து வாழ்வில் இன்பமும், நிறைவும் மிகுதல் வேண்டும். உலகில் மக்கள் கள்ளால், மதுவால், காமத்தால், சூதால், ஆபாசத் திரைப்படங் களால் இன்பம் பெறுவதாக மயங்கித் திரிகின்றார்கள். இவையனைத்தும் நிலையில்லாத சிறுமை இன்பங்கள்; இறுதியில் துன்பத்தில் ஆழ்த்தி மனிதனை அழித்துவிடும் ஆகா இன்பங்கள்.

அறத்தால் வரும் இன்பம் தான் நிலையானது. செய்யத்தக்கது அறனே என்றும், நீக்கத்தக்கது பழியே என்றும் அறம் பாடினார் வள்ளுவர். அறத்தால் புகழும், அறமில்லாச் செயலால் பழியும் பாவமும் நிறையும். அறவொழுக்கம் உடையவர்களுக்கும் அற இயக்கங்களுக்கும் இன்று மதிப்புக் குறைந்து வருகிறது. அறனறிந்து மூத்த அறிவுடையோர் கேண்மை போற்றும் பண்பு தேய்ந்து வருகிறது. ஆரவாரம் மிக்கவர்கள் தீயவர்கள். காமம், வெகுளி, மயக்கங்கள் உடையவர்கள் பெருகி வருகிறார்கள். மக்களின் உணர்வுகளை மயக்கி ஆரவாரத்தால் போலிச் செல்வாக்கைப் பெருக்கி அவற்றை ஓர் ஆற்றலாக்கி, தகுதியற்றோர் எல்லாம் பெருமதிப்புப் பெற்றும், சான்றோர்கள் ஒதுக்கப்பட்டும் வரும் அவல நிலையும் மலிந்து வருகிறது.

“வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா

     யாக்கை பொறுத்த நிலம்”      (229)

என்கிறார் திருவள்ளுவர்.

ஆதலால் அறிஞர்களும் சான்றோர்களும் போற்றப்பட வேண்டும். தீது விரைந்து வளர்ந்தாலும் வளர்ந்த விரைவுக்கு ஏற்ப விரைந்து அழிந்து மறைந்துவிடும் என்பது உலக நியதி. ஆதலால் மக்கள் ஆரவாரங்களுக்கும் மயக்க உணர்வுகளுக்கும் ஆட்படாமல் துணிவோடும் நம்பிக்கையோடும் ஒற்றுமையோடும் அறநெறி போற்றி வாழ வேண்டும். வறுமையில் மிகப்பெரிய வறுமை சிந்தனை வறுமையும் நற்செயல் செய்யாத வறுமையும் ஆகும். அறவோர்கள் துணிவு மிக்கோராய், வலிமையான அமைப்புகளின் துணைகொண்டு அறநெறிகள் தழைத்தோங்கப் பாடுபட வேண்டும். அறமே ஆக்கம் தரும், நீண்ட நிலைத்த இன்பத்தையும் புகழையும் அமைதியையும் தரும் என்ற உண்மைகளை உணர்த்த வேண்டும்.

“திருந்திய நல்லறச் செம்பொற் கற்பகம்

     பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால்

     வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஓம்புமின்

     கரும்பெனத் திரண்ட தோள்கால வேல்கணீர்”

(சீவக சிந்தாமணி)

“திருவும் இன்பும் சிறப்பும் புகழுமற்று

     ஒருவர் ஆக்கலும் நீக்கலும் உள்ளவோ?

     மருவும் புண்ணிய மாந்தர்க்கு அவைஎலாம்

     தருமம் இன்றெனில் தாமே சிதையுமால்”

என்ற இவ்வுண்மைகள் அனைத்தும் உணர்த்தி, துன்பம் உறவரினும் இன்பம் பயக்கும் வினைகளைத் துணிவுடன் ஆற்ற வேண்டும், ஊக்கமுடன் நல்லறச் செயல்கள் செய்ய வேண்டும் என்னும் உறுதி மக்களிடையே பரவ வேண்டும். மதுரை மாநகரில் முத்தமிழ் வளர்க்கும் இத்தமிழ் இசைச் சங்கமும் இயன்ற வகையெல்லாம் முத்தமிழால் அறநெறிகள் செழித்தோங்கிட அறமே ஆக்கம் தரும் என்ற உண்மையை உலகெலாம் பரப்பிட உறுதுணை நல்க வேண்டும்.

“இன்றுகொல்? அன்றுகொல்? என்றுகொல்? என்னாது

     பின்றையே நின்றது கூற்றமென்று எண்ணி

     ஒருவுமின் தீயவை; ஒல்லும் வகையால்

     மருவுமின் மாண்டார் அறம்”        (நாலடியார்.136)

“அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க; மற்றுஅது

     பொன்றுங்கால் பொன்றாத் துணை”         (36)

“அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

     பெருமை முயற்சி தரும்”            (611)