முன்னேற்றப் பாதையில் நாம்…

முன்னேற்றப் பாதையில் நாம்…

பாதை தெரியுது

‘ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி’ என்று பழந்தமிழ் இலக்கியத்தால் போற்றப்பெற்ற வணிக மரபினரான ஆயிர வைசிய சமூகத்தின் ஐந்தாம் மாநில மாநாட்டு மலருக்கு ஒரு கட்டுரை எழுதிட வேண்டும் எனக் கருதியபோது என் எண்ணமெல்லாம், உணர்வெல்லாம் பல திசைகளில், பல நிலைகளில் ஓடிப் பரவின. வரலாற்றுப் பெருமையும் வழிவழித் தொன்மையும் கொண்ட இச் சமூகத்தின் பழம்பெருமை; சமூகப் பிரிவுகளாலும் காலச் சூழலாலும் இடைக்காலத்தே ஏற்பட்ட நலிவு; கடின உழைப்பும் கட்டுக்கோப்பும் கொண்டு அமைந்த ஒற்றுமை யுணர்வால் எதிர்காலத்தில் அமையப் போகும் உயர்வு எனும் இவற்றைச் சிந்திக்க என் உணர்வலைகள் வாய்க்கால் தேடின.

பதினெட்டாம் பெருக்கு

மாநாட்டில் அன்பர்கள் எல்லாம் உற்சாகம் கொப்பளிக்க வந்து கூடுவது பதினெட்டாம் பெருக்கின் போது ஆற்று வெள்ளம் பிரவாகமாகப் பெருகி வரும் பிரமை போலத் தென்படும். அது நெடிது காலம் நீட்டிக்காது. ஆற்று வெள்ளத்தை அணை கட்டித் தேக்கி வைப்பது போல, ஓடிப்பெருகும் உணர்ச்சிப் பிரவாகங்களைக் கருத்துக் கோவையாக, சிந்தனைக் கருவூலமாகத் தேக்கி வைக்கும் ஒரு நிரந்தர முயற்சியே மாநாட்டு மலர் வெளியீடு. எனவே இந்த மாநாட்டு மலரினை என் சிந்தனைகளை ஏந்திவரும் வாய்க்காலாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

கண்டிப்பா? கவனிப்பா?

நம் இந்திய நாடு விடுதலை பெற்று 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுதந்திரப் போர் நடந்த காலத்தில், நமக்குள்ளே வேரூன்றிக் கிடந்த சாதி, சமயப் பூசல்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு,

“வேதியராயினும் ஒன்றே & அன்றி

     வேறு குலத்த வராயினும் ஒன்றே”

என வீறு கொண்டு போரிட்டோம். ஆனால் கண்ணினு மினிய சுதந்திரம் பெற்ற பின்னர் பழைய சாதிப்பிரிவுகள் புதுவலிமை பெற்று வளரக் காணுகிறோம். அரசியல் பொருளாதாரச் சூழல்கள் இப்பிரிவுகளுக்குப் புத்துரம் தந்து வருவதையும் காணுகிறோம். இது கண்டிக்கத்தக்க ஒன்றில்லை; ஆனால் கவனிக்க வேண்டிய ஒன்று. அடிமைப்பட்டுக் கிடந்தபோது அன்னிய ஏகாதிபத்தியச் சுரண்டலை எதிர்த்தோம். அதற்கு நாடு தழுவிய ஒற்றுமை தேவைப்பட்டது. சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சி நலத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் ஒருவரை ஒருவர் முந்த வேண்டும் எனும் போட்டி ஏற்பட்டது. இப்போட்டி பல சமூக, சமுதாய அமைப்புகளைப் புத்தெழுச்சி பெறச் செய்துள்ளது. இந்த எழுச்சிப் பாதையில் நடைபோட நம் ஆயிர வைசிய சமூகமும் வந்தாக வேண்டிய கட்டாயத்தின் விளைவே நமது மாநில மாநாடு.

சமூகம் – சமுதாயம்

சமூகம், சமுதாயம் – என்பன எளிதில் வரையறுக்க முடியாத விரிவாக்கச் சொற்கள் என்பர். தனி நபர்களால் குடும்பமும், குடும்பங்களால் சமூகமும், சமூகங்களால் சமுதாயமும் அமைகின்றன. எனவே சமூகம் என்பதைச் சிறியதொரு வட்டமாகவும், சமுதாயம் என்பதைப் பெரியதொரு வட்டமாகவும் கொள்ளலாம். சமூகம் என்றால் சிஷீனீனீuஸீவீtஹ் எனும் கருவையும், சமுதாயம் என்றால் ஷிஷீநீவீமீtஹ் எனும் கருத்தையும் ஏற்கலாம்.

நம் ஆயிர வைசிய மரபினை இந்த இருவகையிலும் அடக்கலாம் என்பது என் கருத்து. இதன் 18 பிரிவுகள் 18 சமூகங்களைப் போல; இந்த 18 பிரிவுகளும் ஒரே ஆயிர வைசியக் குலத்தின் கீழ் வருகையில் – அது ஒரு சமுதாயத்தைப் போல. பிற சமுதாயங்களோடும், நாட்டோடும் ஒப்பிடுகையில் – நாம் ஒரு சிறு பிரிவாகிறோம். எனவே நம் வளர்ச்சிக்குத் திட்டமிடுகையில் சமூகக் கண்ணோட்டமும் வேண்டும்; சமுதாயக் கண்ணோட்டமும் வேண்டும்.

தனி மரமா? தோப்பா?

‘ஆயிரங் கோத்திரங்கள்’ அல்லது ‘குடிகள்’ எனும் பழம்பெயர்கள் நமது ஆதார வித்துக்கள். இக்குடிகளைச் சார்ந்த ஒவ்வொரு தனி நபரும் முக்கியமானவர். தனிமரம் தோப்பு ஆவதில்லை; என்றாலும் தனி மரங்கள் இல்லாமலும் தோப்பு ஏற்படுவதில்லை. அத் தனித்தனி மரங்களே சேர்த்தமைந்து தோப்பாக அமைகின்றன. எனவே சமூக வளர்ச்சி பற்றிக் கருதும் போது தனிநபர் வளர்ச்சிக்குத் தலைமையிடம் தர வேண்டும். தனித்தனி வளையங்கள் சேர்ந்து சங்கிலி அமைகிறது; இதில் ஒரு வளையம் பலமற்றுப் போனால், அந்தச் சங்கிலி முழுவதுமே பயனற்றுப் போகும். நம் சமூகத்தில் தனி நபர் எனும் ‘வளையம்’ – சமூகச் சங்கிலிக்கே வலிமை தரும் வண்ணம் வனப்புற்று அமைந்துள்ளதா எனச் சிந்திப்போம்.

‘இன நலம் எல்லாப் புகழும் தரும்…’

‘வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை’ எனும் தமிழ் நெறிக்கு ஏற்ப, ‘வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி’ நம் சமூகம் அக்காலத்தில் செயல்பட்டது. சிறுசிறு ஊர்களில் சிதறி வாழ்ந்ததற்கு ஏற்ப சிறுசிறு வணிகத்திலே பெரும்பாலோர் ஈடுபட்டனர். சிலருக்கு வெளிநாட்டு வாணிபமும், பலருக்கு வேளாண்மையும் துணைநின்றன. கூட்டுக்குடும்ப அமைப்பே போற்றப்பட்டதால் வளரும் போதே நமக்கு ஒரு பாதுகாப்பு வேலி இருக்கிறது என்ற மனப்பான்மை ஏற்பட்டுவிட்டது. தீவிரமாகவும், துணிச்சலோடும் வளர முற்பட்ட சிலருக்கு இந்தப் பாதுகாப்பு வேலியே தடைப்படுத்தும் சுவராக அமைந்த போது அந்த வேலியைச் சிதைக்காமலே வளரும் உத்தி மிகச் சிலருக்கே தெரிந்தது; பிறர் அடங்கி இருந்துவிட்டனர். பல பொருள் சில்லறை வணிகம், ஆபரணத் தொழில் எனும் குலத் தொழில்கள், நம் இளைஞர்களுக்குக் கல்லாமலே பாகம்படும் கலை களாகக் கைவந்தமையால், மாறிவரும் சூழலுக்கு ஏற்ற படி தொழில் நுட்பக் கல்வியும் உயர்கல்வியும் பெறுவதைத் தேவையற்றதாகக் கருதிவிட்டோம். வசதி உடையவர்கள் கூடத் தம் பிள்ளைகளுக்கு மிக உயர்ந்த கல்வி தரத் தவறிவிட்டனர்.

குடி என்னும் குன்றா விளக்கம்

இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில், இரு தடவை சென்னை ஷெரிப்பாக உயர்பதவி வகித்த நம் குலத்தவரான திரு.பி.இராமசாமிச் செட்டியார் எனும் பெருந்தகை தம் மக்கள் நால்வரையும் மேலைநாட்டுக்கு அனுப்பி உயர் கல்வி பெறச் செய்தார். அவருடைய முதல் மகன் பி.இரத்தினவேலுச் செட்டியார் இந்தியருள் முதல் மிசிஷி அதிகாரியாகப் பட்டம் பெற்று வந்தார் எனும் வரலாற்றுப் பெருமையை நாம் அறியவும் இல்லை; அப் பெருமையைப் பின்பற்றி நடக்கவும் இல்லை. பிற சமூகத்தவர் உயர்கல்வி பெறுவதில் போட்டியிட்டு முன்னேறப் போராட்டங்கள் நடத்திய போது – அதற்கான கல்வி, வேலைவாய்ப்புச் சலுகைகளைப் பெற வரிந்து கட்டி நின்ற போது – நாம் முன்னேறிய சமூகமா அல்லது பிற்பட்ட சமூகமா எனும் ஆராய்ச்சியிலேயே தேங்கிவிட்டோம். அரசாங்க உத்தியோகம் பெறுவதற்காக நம்மைப் பிற்பட்ட குலத்தவர் ஆக்கிக்கொள்ள வேண்டுமா எனச் சர்ச்சை செய்து வந்தோம். ‘நம் பிள்ளை படித்துவிட்டு உத்தி யோகத்திற்கா போகப்போகிறான்? நமக்கு உள்ள சொந்தத் தொழிலைப் பார்த்தால் போதாதா?’ எனும் அசாத்திய நம்பிக்கையும் வறட்டு ஜம்பமும் காலத்தால் நேரிட்டு வரும் மாற்றங்களையும், தேவைகளையும் கணிக்கவிடாமல் செய்துவிட்டன. இன்று அரசு அலுவலில் பொதுவாகவும், உயர்பதவிகளில் சிறப்பாகவும் இடம்பெற்றுள்ள நம் மரபினர் யார் என்று தேடிப் பார்க்க வேண்டியுள்ளது.

காலம் கருதிச் செயல்

“ஒவ்வொரு சமூகமும், கலாச்சாரமும், நாடும் அவ்வப்பொழுது காலம் அளிக்கின்ற சில சவால்களைச் சந்திக்க நேரிடுவதே வரலாறு” என்பர் அறிஞர் பெருமக்கள். இந்தச் சவாலை எதிர்கொண்டு ஏற்கத் தயாராக இருக்கும் சமூகமும், பண்பாடும், நாடும் வளர்ச்சியுறும்; சவாலைச் சமாளிக்க முடியாதவை பின்தங்கிப் போகும்.

‘குடி செய்து வாழ்வார்…’

நாடு தந்த இந்தச் சவாலை நாம் தனி நபராகவும், சமூகமாகவும் ஏற்றோமோ என்பதைக் கருதிப் பார்க்க வேண்டும். தனி நபருக்கும் சமூகத்திற்கும் இடையில் இணைப்புப் பாலமாக உள்ள ஒவ்வொரு குடியும், குடும்பமும்  இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டதா என்பதையும் சிந்திக்க வேண்டும். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல கூட்டுக் குடும்பப் பாதுகாப்பும், நமது பொது அணுகுமுறையும் சவாலை ஏற்கும் சாதுரியத்தினை அளிக்கவில்லை. இருப்பது போதும் என்ற மனம், இழப்பீடு ஏற்படினும் துணிச்சலுடன் (ஸிவீsளீ) புதுத்துறைகளை நாட முன் வராமை, சமூகத்தில் ஓரளவு உயர்நிலையில் இருந்தவர்கள் பிற நலிவுற்ற குடும்பங்களைக் கைதூக்கிவிட முற்படாமை, அனைத்துக் குடும்பங்களையும் ஒருங்கிணைத்துக் கூட்டுறவாகத் தீர்வுகாண இயக்கம் இன்மை – இவையெல்லாம் காரணங்கள் ஆகும். ‘குடி செயல் வகை’ (103) எனும் அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ள குறள் நெறிகள் எல்லாம், வளர்ச்சியையும் நிலைபேற்றையும் நாடி நிற்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், சமூகப் பிரிவிற்கும் பொருந்தும் என்பது துணிபு.

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

     மடிதற்றுத் தான் முந்துறும்.”         (1023)

தளம் தோறும் தக்க தலைவர்கள்

ஒருவர் அல்லது ஒரு சிலர் முன் வந்து உழைக்க முற்பட்டாலே குடும்பமும் சமூகமும் உயர்வுறும் என்பதே வள்ளுவர் வகுத்த பாதை. இவ்வாறு உழைப்பதற்கு உரிய விசாலமான இருதயமும், உறுதியான உள்ளமும், உண்மையான நாட்டமும் கொண்ட நல்ல தலைவர்களை எல்லாத் தளத்திலும் நாம் உருவாக்க வேண்டும். இத்தகைய சமுதாயத் தலைவர்கள் சவாலை ஏற்கத் தாமும் சித்தமாக இருப்பார்கள்: தம்மைப் பின்பற்றும் சமூகத்தவரையும் தயார்ப்படுத்தி வைப்பார்கள்.

‘பேணுநற் குடிப் பெண்டிர்…’

இந்தத் தலைவர்களை உருவாக்குவதும், உருவாகி வந்தோரை உபயோகப்படுத்திக் கொள்வதும் அவசியம். நம் பிள்ளைகள் கல்வி பயிலும் காலத்திலேயே நம் சமூகப் பிரச்சினைகளில் அவர்களுக்கும் ஓரளவு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். பந்தயக் குதிரையைப் பழக்குவது போல அறிவுத் துறையிலும் உலகியலிலும் அவர்களுக்கு ஆன்ற பழக்கங்களை அளிக்க வேண்டும். அவர்கள் பெறும் கல்வி வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டும் இருக்கக் கூடாது. “பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்” என்ற பாரதி வாக்குப் போல, அனுபவக் கல்வியாகவும் தொழில்நுட்பக் கல்வியாகவும் இருத்தல் வேண்டும். எப்பாடு பட்டேனும் தரமான, தகுதியான கல்வியை நம் பிள்ளைகளுக்கு அளித்தல் வேண்டும். பெண் கல்வியை இதுகாறும் நாம் மிகவும் புறக்கணித்து விட்டோம்.

“ஒரு ஆண் மகனுக்குக் கற்பித்தால்

     அவனுக்கு மட்டுமே சொல்லிக் கொடுக்கிறோம்.

     ஒரு பெண் மகளுக்குக் கற்பித்தால்

     ஒரு சமுதாயத்திற்கே சொல்லிக் கொடுக்கிறோம்”

என்றார் காந்தியடிகள். நமது பெண்களுக்கு எல்லா நிலையிலும் கல்வியளிக்க முற்பட்டால் – நம் மாதர்களில் பலர் டாக்டர்களாக, எஞ்சினீயர்களாக, வல்லுநர்களாக உயர்ந்திருப்பர்; நம் சமூகத்தையும் உயர்த்தியிருப்பர்.

இன்று கல்வியளிப்பது என்பது சமூகக் கடமையாகவும் அரசின் பொறுப்பாகவும் மாறியுள்ளது. எனவே தனிக் குடும்பத்தவர் தம்மால் இயலவில்லை என்று சோர்ந்து விடாது சமூகமும், அரசும் நல்கும் உதவிக் கரங்களை இயன்றவரை பற்றிக் கொள்ள முற்பட வேண்டும்.

‘நிதி மிகுந்தவர் தாரீர்…’

சமூகத்தவர் கூட்டுறவாலும் தனி நபர் கொடைநலத்தாலும் ஆங்காங்கு சில கல்வித் தொண்டுகள் நடைபெற்று வந்தாலும் அவை பிறருக்கெல்லாம் வழிகாட்டும் எடுத்துக்காட்டான நிறுவனங்களாக அமையவில்லை. தமிழ்நாட்டில் நம் சமூகப் பெயரால் முதல் தரமான கலை மற்றும் விஞ்ஞானக் கல்லூரியும், பொறியியற் கல்லூரியும் நிறுவ வேண்டும் என நாம் மேற்கொண்ட முயற்சிகள் அப்படியே நின்றுவிட்டன. எனவேதான் இந்த மாநாட்டில் நிலைநிதி ஒன்றை உருவாக்கி கல்விப் பணிக்குக் கணிசமாக உதவி செய்வது எனத் திட்டமிட்டுள்ளோம். எளிமையினால் படிக்க முடியவில்லை என எவரும் ஏங்கிவிடாமல், தகுதியான பிள்ளைகளுக்கு உதவித் தொகை நல்க வேண்டுவது சமூகப் பொறுப்பு என உணர்ந்துள்ளோம். பொறியியல், மருத்துவம், சட்டம், வணிக ஆய்வு, நிர்வாகம், விரிவாக்கம் ஆகிய துறைகளில் எல்லாம் வாய்ப்புத் தேடி வரும் ஆற்றலுள்ள இளைஞர்களுக்கு உதவிட வழிவகை கண்டு வருகிறோம்.

களம் தோறும் காளையர்

“நூறு நல்ல இளைஞர்களை எனக்குத் தாருங்கள்; நான் இந்த நாட்டினை உயர்த்திக் காட்டுகிறேன்” என்றார் சுவாமி விவேகானந்தர். நம்மிடையே நல்ல இளைஞர்கள் ஏராளமாக உள்ளனர். இந்த இளைஞர்களை ஓர் இயக்கம் ஆக்கி, வல்லவர்களாக்கிட நாம் வழியமைக்க வேண்டும். சென்னை, சேலம், பரமக்குடி, மதுரை ஆகிய நகரங்களிலும் சிற்றூர்களிலும் நம் இளைஞர்கள் அவ்வப்போது ஆற்றி வரும் செயல்கள் பாராட்டத்தக்கன என்றாலும் இத்தொண்டுகள் தொடர்ந்து வர வேண்டும். இளைஞர்களுக்குப் போதிய உற்சாகம் தர வேண்டும். பெரியவர்கள் புறக்கணிக்கிறார்கள், பொறாமைப் படுகிறார்கள் எனும் புகைச்சல் ஏற்பட இடம் தரக்கூடாது.

‘உடன்பட்டும், ஊடுருவியும்…’

சர்வ தேச இளைஞர் நலம் போற்றப்படுவதன் பின்னணியைப் புரிந்து கொண்டு நம் இளைஞர்களை 21-ஆம் நூற்றாண்டின் தலைவர்களாக இப்போதே நாம் உருவாக்கி வர வேண்டும். நம் சமூக அமைப்பின் எல்லாத் தளங்களிலும் அவர்களுக்கும் பொறுப்பளிக்க வேண்டும்; பிற சமூகங்களோடு ஒத்துழைத்தும் உடன்பட்டும், தேவையானால் ஊடுருவியும் போட்டியிட்டும் நம் இளைஞர் உயர நல்லாக்கம் தர வேண்டும். மதுரை மாநாட்டில் இளைஞர், மகளிர் பங்கேற்கும் தனித்தனிக் கருத்தரங்குகளும், கல்வி, தொழில் எனும் செயலரங்குகளும் ஏற்படுத்தி இருப்பதன் நோக்கமே இவற்றைப் பாத்திகட்டி வளர்க்கத் தான் எனக் குறிப்பிட விழைகின்றேன்.

‘பதவியும் உதவியும்…’

நம் இளைஞர்களும் அன்பர்களும் சமூக அளவில் உழைப்பதோடு நின்றுவிடாது பிற சமூகத்தொண்டிலும் ஈடுபட்டு பெருமையும், புகழும் பெறுதற்கு முற்பட வேண்டும். பிறருக்கென வாழ்பவர் சிலராவது தோன்றினால் தான் பொதுச் சமுதாய வாழ்வில் மலர்ச்சியும், உயர்ச்சியும் தோன்றும். ‘அரசியல்’, ‘கட்சி அமைப்பு’ என்பன சனநாயகத்தின் இன்றியமையாத தூண்கள். நம்மில் பலர் அரசியல் கட்சிகளிலும் அமைப்புக்களிலும் தூண்களாகத் தலைமையிடம் பெற்றிட வேண்டும். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் நம்மவர் பல அரசியல் பதவிகளில் உள்ளனர் என்றாலும் அவர்களை இனம் கண்டு. சமூக அளவில் நாம் பாராட்டிக் கை கொடுக்க வேண்டும். பதவி வகிக்கும் பிரமுகர்களையும் நம் அமைப்புக்களுக்கு அழைத்து அறிமுகம் செய்து கொள்வது பயன் தரும். சுழற்கழகம், அரிமா சங்கம், ஜேசீஸ் முதலிய சமூகத் தொண்டு நிறுவனங்கள், வணிகக் கழகங்கள், தொழில் கூட்டுறவுகள் முதலியவற்றிலும் நாம் தீவிரப் பங்கேற்க வேண்டும். இந்த ஈடுபாடும் உறவும் (மீஜ்ஜீஷீsவீtவீஷீஸீ) நம் இளைஞர்களுக்குப் பேருதவி புரியும்.

75 சதமும், 25 சதமும்

சிறுசிறு வெற்றிகளில் திருப்தியடையாமல் பெரும் வெற்றி நோக்கில் பீடு நடை போட வேண்டும். சங்க இலக்கியம் சுட்டும் குறும்பூழ் வேட்டுவன் போலாது, யானை வேட்டுவன் போல முயலும் செம்மாப்பு வேண்டும். ‘உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்’ (குறள்:596) என்ற படி நாம் சமூக உயர்வுக்குத் திட்டமிடுகையில் பெரிதாகத் திட்டமிட்டுச் செயல்புரிய முற்படவேண்டும். இதுகாறும் குறுகிய அளவில் செயல்பட்டோம்; இனிப்பரந்து விரிந்த தளத்திற்கு வந்தாக வேண்டியுள்ளது. சிறுதொழிலாக, நடுத்தரத் தொழிலாக நடத்துவதால் பெரிய சாதனை ஏதும் ஏற்பட்டுவிடாது. அரசும், வங்கிகளும் அளிக்கும் சலுகைகளுடனும் தனிநபர், கூட்டு முயற்சிகளுடனும் பெரிய தொழில்களை நிறுவும் சாத்தியக் கூறுகளைச் சிந்திக்க வேண்டும். றி.ஷி.நி., ஜி.க்ஷி.ஷி. போன்ற நிறுவனங்களை நம்மாலும் உருவாக்க முடியுமா என ஆலோசிக்க வேண்டும். தொழில் துறையில் முன்னேற 75 சதவீதம் பாதுகாப்பும் 25 சதவீதம் துணிச்சலும் வேண்டும். அந்த 25 சதவீத அருஞ்செயல் முனைப்பே அனைத்து ஆக்கங்களையும் தரும் என்பதை நம்மவர் உணர வேண்டும். அத்தகைய அருஞ்செயலால் பெரியதொரு நிறுவனமோ தொழிற் சாலையோ ஏற்பட்டுவிட்டால், அதன் ஒளியை நாடித் தொழில்நுட்பக் கல்வியினரும் ஆர்வலரும் வர முற்படுவர். பல குடை நிழலையும் தன் குடைக் கீழ்க் கொணரும் ஆலமர அமைப்பு ஒன்று அவசியம் நம்மவரால் உருவாக்கப்பட வேண்டும். அதன் விழுதுகள் ஆயிரங்கால் மண்டபம் போல கால வெளியில் நிற்கவேண்டும் என்பதே நம் செயல்திட்டம். நீண்ட காலப் பயன் தரும் இத்தகைய தொழிலாக்கங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உருவாக்கித் தர மதுரை மாநாடு வழிகாட்டும் எனத் துணிகிறேன். கீரைப் பாத்தி போட நிலத்தைக் கிளறாமல், தென்னந்தோப்பு வைக்கப் பெருங்குழி போடும் பெரு நினைப்பும், எதிரதாக் காக்கும் அரணும் இம்மாநாட்டில் வலுப் பெற்றிடும் என எதிர்பார்க்கின்றேன்.

‘பரவியும் சிதறியும்…’

‘வெள்ளத்து அனைய மலர் நீட்டம்’ (குறள்:595): நம் உள்ளமெல்லாம் ஓங்கி வளரும் வெள்ளமாக விளங்குவது நம் சமூகம். நாம் தமிழகம் எங்கணும் பரவியும் சிதறியும் ஆங்காங்கு வாழ்கிறோம். எனவே நம் நிலையை உணரவும் வலிமையை உயர்த்தவும் முற்பட வேண்டும். அவ்வாறு செய்வதற்குச் சமூகச் சங்கங்கள் பெரும் துணை புரிய வேண்டும். இப்போது சிறுசிறு அளவில் நடக்கும் முயற்சிகள் பேரளவில் வடிவெடுக்க வேண்டும் என்பதற்காகவே மாநாடுகளைக் கூட்டுகிறோம். இத்தகைய மாநாடுகள் நமக்குப் போலியான, பொய்யான பிரமைகளையும் நம்பிக்கைகளையும் தோற்றுவித்து விட்டு நம் குறைகளை மூடி மறைத்துவிடக் கூடாது. ஏதோ ஒரு கடமைக்குச் செய்வதற்கோ கூடிக் கலைவதற்கோ ஏற்பட்டதல்ல இம்மாநாடு. ஒரு வலுவான சமுதாயமாக உருவாகி வருகையில் நம்மைப் பின்னுக்கு இழுக்கும் பழமைப் போக்கையும் பத்தாம் பசலித்தனத்தையும் கைவிடத் துணிய வேண்டும்.

நோய் நாடி…

வரதட்சணை எனும் சமூக நோய் பிற சமூகங்களைப் போல நம் சமூகத்தையும் விடாப் பிடியாகப் பற்றிக் கொண்டே இருக்கிறது. இதன் விளைவுகள் பற்றி நாம் விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை. இது நோய் என்பதை அறிவோம்; இதன் தீமைகளையும் அறிவோம். ஆனால் அதைக் கைவிட மட்டும் துணியோம். இப்பேதைமையில் இருந்து நாம் விடுபட வேண்டும். நாம் விடுபடுவதோடு நம் பெண்களையும் இவ்விலங்கிலிருந்து விடுதலை செய்யவேண்டும். படிப்பு, தொழில் பங்கேற்றல், சமூகத் தொண்டு, அரசியல் பணி ஆகியவற்றில் பெண்களுக்கும் சம உரிமையும் சமூக அந்தஸ்தும் அளிக்க வேண்டும்.

இணக்கமாக…

நம் பிரிவுகளிடையே இன்னும் பொலிவு தரும் இணக்கம் காணாதிருப்பது மற்றும் ஒரு குறை, ஆயிர வைசியரில் உள்ள 18 பிரிவினரும் ஒரே வழியினர், வகையினர் எனும் உணர்வோடு திருமண உறவுகள் பூண வேண்டும். இவ்வகையில் வழிகாட்டி வரும் குடும்பங்களுக்குப் போதிய ஆக்கம் அளிக்க வேண்டும். இதனால் நாடு தழுவிய பெரும் மரபினர் எனும் பெருமை வந்து சேரும்.

பெருமை நல்கும் பேரமைப்புக்களான நிதி நிறுவனங்கள், வங்கிகள் முதலியவற்றை அப்போதே நிறுவாமல் இருந்து விட்டோம் எனும் குறைகளைப் போலவே ஏற்படுத்தியுள்ள தொடர்பு அமைப்புக்களைச் சரிவரப் பயன்படுத்தாமையும் குறையே ஆகும்.

தொடர்பு காண்போம்

அவற்றுள் ஒன்று – நம் சமூக இதழான ‘ஆயிர வைசியன்’ – மற்றொன்று ‘ஆயிர வைசிய சங்கம்.’ ‘ஆயிர வைசியன்’ இதழை – நம் இல்லந்தோறும் வாங்க வேண்டும். நம் எண்ணங்களை அதில் எழுத வேண்டும். ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள உதவும் உறவுப் பாலமான அந்த இதழை எல்லா வகையாலும் பலப்படுத்தவேண்டும்.

இது ஆலமரம்!

இணக்கமும் ஏற்றமும் நம்மிடையே ஏற்பட்டால் மட்டும் போதுமா? அது நம் நாட்டில் உள்ள பிற சமுகத்தவரோடு நாம் காணும் தொடர்பிலும் மணக்க வேண்டும். கலை, பொருளாதார, சமூக வளர்ச்சி கருதி நாட்டில் தீட்டப்பெறும் திட்டங்களில் எல்லாம் நாம் ஈடுபடவேண்டும். நமக்கும் அதில் பொறுப்பும், பங்கும் உண்டு என்பதை மெய்ப்பிக்க வேண்டும். இதனால் பிற சமூகத்தவரின் போற்றுதலுக்கும் அரவணைப்புக்கும் இடம் தரும் இங்கிதம் இயல்பாக ஏற்படும்.

நாம் உயர நாடு உயரும்!

வாணிகப் பெருமக்கள் ஒரு நாட்டின் நாடி நரம்புகள், வளர்ச்சி பெறும் பெரியதொரு வல்லரசான நம் நாட்டின் நலத்திற்கெல்லாம் ஆக்கம் தர அயராது செயல்படும் குருதியோட்டங்கள். வரப்புயர எனப் பாடிய ஔவைப் பெருமாட்டி போல, ‘நாமுயர நாடுயரும் – நாடு உயர நாமும் உயர்வோம்’ எனும் பெருநினைப்புடன், பெரு மகிழ்வுடன் ஆயிர வைசிய சமூக அமைப்புக்களுக்குப் பல்லாண்டு இசைக்கின்றேன். இச் சமூகத்தவரின் வருங்கால வளர்ச்சியை, வளமான பொற்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

நிறைவுப் பகுதி

அன்பர்களே! நாம் அனைவரும் இம்மாநாட்டுப் பயனாக நம் சமுதாயத்தின் பெருவளர்ச்சிக்குப் பாடுபடுவோம். அறப்பயிர் வளர்ப்போம். நாள்தோறும் நல்லவைகளை ஆராய்ந்து செயல்படுவோம். நல்லோர் துணையோடும் வல்லார் பரிவோடும் நன்மைகளை நாடிச் செய்வோம். அதனால் நம் சமுதாயம் நலம்பெறும்; முன்னேற்றப் பாதையில் ஒளிமிக்க சமுதாயமாகவும் திகழும்!

 

மெய்யுணர்தல்

உலக மக்கள் பலர் ஒருவகை மயக்கத்தோடு, என்றும் நிலைபெற்று நில்லாதவற்றை, ‘நிலை’ என்று உணர்ந்து வாழ்கின்றார்கள். செல்வம் வேண்டும், உடல் நலம் வேண்டும், இன்பம் வேண்டும். ஆனால் இவைகள் எல்லாம் மாறும் இயல்புடையவை. ஆதலின் நிலைக்காத செல்வத்தை நிலைக்கச் செய்ய செல்வத்தின் பயனை நிலைக்கச் செய்யும் வகையில் அறச்செயல்கள் செய்தல் வேண்டும். உடம்பு நிலைக்காவிட்டாலும், உடம்பால் செய்த நற்செயல் பலன் நல்கும். ஆதலின், வாழ்கின்ற காலத்திலே, இயன்ற வகை யெல்லாம் மனத்தால், சொல்லால், செயலால் அறப்பணிகள் ஆற்ற வேண்டும்.

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

     செல்லும் வாயெல்லாம் செயல்”      (33) 

எது இன்பம்? எது மகிழ்ச்சி? எது துன்பம்? பொறிபுலன் நுகர்ச்சிகள் இன்பத்தைத் தருகின்றன. இவ்வின்பங்கள் எளிதாகக் கிடைத்துவிட்டால் அவைகள் சாதாரணமானவை களாகத் தெரிகின்றன. மீண்டும் கிடைக்காத பொருள்களில் ஏக்கம், கிடைக்காவிடின் அவைகளால் துக்கம், பொய்யான கனவுகள், நிறைவேறாத ஆசைகள், கோபம், பொறாமை, கடுஞ்சொல் இவையெல்லாம் துன்பத்தைத் தருகின்றன.

இத்துன்பங்களை வெல்லும் வழி என்ன? வாழ்வு, இரவும் பகலும் போல இன்ப துன்பங்கள் நிறைந்தது. வாழ்நாள் நிலையாமை என்னும் விதிக்கு உட்பட்டது. வாழ்வில் துன்பங்கள் இயற்கை ஆனவை என்ற மன உறுதியை மேற்கொண்டால், துன்பமே ஒரு சுவையாக, இன்பமாக மாறிவிடும்.

“இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்

     ஒன்னார் விழையும் சிறப்பு”          (630)

என்பார் வள்ளுவர். துன்பத்தையும் எதிர்நோக்கி, அதனை இன்பமாகக் கொள்பவனை, பகைவர்களும் விரும்பிப் போற்றுவார்கள் என்பார் அவர்.

இந்தப் பக்குவம் எப்போது ஏற்படும்? நிலையாமை பற்றிய அறிவு, எது மெய், எது பொய் என்று ஆராயும் அறிவு எப்போது ஏற்படும்? விதிவிலக்காக ஒரு சிலருக்கு இளமையிலே, இத்தகைய மெய்யறிவு வாய்க்கும் என்றாலும், பலருக்கு வயது முதிர முதிர மெய்யறிவு முகிழ்க்கும்; அகம் விரிவடையும்; பற்றற்ற பெருநிலையே அவர்களது ஆனந்த வாழ்வாக, அல்லல் நீக்கிய வாழ்வாக விளங்கத் தொடங்கும்.

குடும்பக் கடமை முடிந்தவுடன் அறச் செயல் செய்ய நாட்டம் பிறக்கும். பெருந்துன்பத்திற்குக் காரணமாகிய இப்பிறவியை வேரறுக்க மனம் நாடும். இறைவனை மறவாத நெஞ்சமாய் “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தான் வாழ்க!” என்ற பக்திப் பெருக்கு ஏற்படும். நெஞ்சம் கனியும், அன்பு பெருகும், அருள் சுரக்கும். இன்ப துன்பங்களைச் சமமாக மதிக்கும் ஆற்றல் பிறந்து விடும். வையத்துள் வாழ்கின்ற போதே, வாழ்வாங்கு வாழும் பேறு கிடைக்கும்.

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

     செம்பொருள் காண்பது அறிவு” (358)

என்ற தெளிவும், நிலைத்த, அழியாத, தூய இன்பப் பொருளை, செம்பொருளை அறிவால் காணும் ஆற்றலும் கிடைக்கும்.

அன்பு நலம் சான்ற பெரியவர் திரு.மகாலிங்கம் அவர்கள் மணிவிழாக் காணும் பெருமை பெற்றுள்ளார்கள். அரசுப் பணியில் படிப்படியாக உயர்ந்து உதவி ஆட்சியராகப் பணியாற்றியவர். எல்லோருக்கும் இனியராய், நல்லனவே எண்ணும் பண்பாளராய், புன்னகை பூத்தவராய், இயன்ற வரையில் அன்போடு பிறருக்கு உதவும் உயர்ந்த பண்பினராய், தமிழ்நாடு ஆயிர வைசிய சங்கத்தின் மாநாட்டு மதிப்புறு வரவேற்புத் தலைவராய் சீரிய பணியாற்றும் அன்பராய் சிறப்புப் பெற்றவர்.

“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

     பண்புடை யாளர் தொடர்பு”         (783)

என்ற வள்ளுவரது இலக்கணத்திற்கு ஏற்ப வாழ்ந்து வரும் அவர், அன்னை அருள்மிகு மீனாட்சி – சுந்தரேசுவரர் அருளால் பல்லாண்டு வாழ்க! மேலும் பல நற்பணிகள் ஆற்றுக.

தமிழிசையும் தமிழர் இசையும்

Image result for tamilar isai

மின்னல் மறைவதைப் போல, நேற்றிருந்த மாமலை திடீரென இன்று மறைந்து போனால் எப்படி இருக்கும்? கரையுடைத்துப் பெருகியோடும் காவேரி நதி ஒரு நாள் வற்றிப்போனால் எப்படி இருக்கும்? அப்படியொரு அதிர்ச்சி நிலை நமக்குச் சென்ற மார்ச் மாதம் ஏற்பட்டது. இமயமாய் இசை உலகில் நின்றவரும் காவேரி போல் கான மழை பொழிந்தவருமான இசைமணி, டாக்டர் சீர்காழி கோவிந்தராசனாரின் அகால மரணம் தமிழிசை உலகில் ஈடுசெய்ய முடியாததொரு வெற்றிடத்தினை, வேதனையினை ஏற்படுத்திவிட்டது!

கணீர் என்ற கம்பீரமான குரல்; சாகித்தியங்களைப் பொருள் விளங்கப் பாடும் மிடுக்கு; இராக ஆலாபனைகளில் தமக்கே உரியதொரு எடுப்பு; சுர விஸ்தாரம் முதலிய நுண்ணிய துறைகளில் தனி முத்திரை – என இவற்றோடு கேட்டோரை மயங்கிக் கிறங்கவைக்கும் குழைவு… இவையெல்லாம் சீர்காழி எனும் இசை இமயத்தின் பல்வேறு சிகரங்கள்! அவர் கர்னாடக சங்கீதம் கை வந்த கலைஞர் எனினும், தமிழிசைக்கே. தலைமையிடம் தந்து அரங்கெல்லாம் முழங்கினார். பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப்பாடும் இசை வல்லுநர்களில் அவர் தலைசிறந்து விளங்கினார். தமிழிசைக்குப் பேரூக்கம் நல்கிய ‘கலைப்புரவல’ராக விளங்கினார்.

“இயற்கையிலே கருத்தாங்கி, இனிமையிலே வடிவெடுத்துச்

     செயற்கை கடந்து இயலிசையில் செய்நடமாக”

வாழ்வு பெற்ற முத்தமிழில் இசைக்குச் சிறப்பிடம் தொன்றுதொட்டே உள்ளது. ‘தமிழோடு இசை பாடல் மறந்தறியாத’ இந்தச்சிறப்பு நிலை தமிழ்மொழிக்கு இருப்பது போல, தமிழர்களாகிய நம்மிடம் இசையுணர்வு நீங்கா நிலையில் இருப்பதில்லையே எனச் சீர்காழியார் அடிக்கடி குறைப்படுவார். அவர் மனக்குறையில் நியாயம் உண்டு. தமிழிசையை மதிப்பதில்லை; போற்றுவதில்லை. மேனாட்டு, வடநாட்டு இசை வடிவங்களுக்கெல்லாம் – நிகரான – மேலான – தூய இசை வடிவம் பெற்றிருந்தும், பிற இசை வடிவங்களைப் போற்றுவதே பெருமை என நினைக்கும் கலைஞர்கள் நம்மிடையே ‘புகழோடு’ உலாவுகின்றனர். அவர்கள் தாம் பங்கேற்கும் கச்சேரிகளில் தமிழ்ப் பாட்டுக்களை துக்கடாவாகக் கடைசியில் பாடி முடிப்பர். தம் இசை ஞானத்தைப் புலப்படுத்தும் களமாகத் தமிழிசையைக் கருதாமல், தமிழிசையில் என்ன இருக்கிறது எனும் அலட்சிய பாவனையில் இரண்டு பாட்டுப் பாடுவர், ரசிகர்களும் அப்படியே இருந்தனர்.

இக்கொடுமையை, மடமையை எதிர்த்து தமிழிசை இயக்கம் தோன்றியது. தமிழ் இன, மொழி உணர்வுகளுக்கு எல்லாம் முன்னோடியாகத் தமிழிசை இயக்கமே முதலில் களம் காணப் புறப்பட்டது. மதிப்பிற்குரிய பெருந்தகை, செட்டிநாட்டரசர், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களும் அறிஞர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் முதலியோரும் தமிழிசைக்கு உரிமையிடம் வேண்டிப் போராட்டம் தொடங்கினார்கள். தமிழிசை இயக்கம் ஆக்கம் பெற்றது. ஆலயங்களில் எல்லாம், ஆண்டவன் சன்னிதானங்களில் எல்லாம் அருந்தமிழோசை பரவும் மறுமலர்ச்சி ஏற்பட்டது.

இந்த மறுமலர்ச்சியின் விடியலில், பூபாளம் இசைக்கப் போந்த அருங்கலைஞர் சீர்காழி கோவிந்தராசனார். அவர் இசை பயிலத் தொடங்கிய காலந்தொட்டே எதிர்நீச்சலிட்டு, உழைப்பால், உயரிய இலட்சியத்தால் படிப்படியாகப் பாடிப் பாடி முன்னேறினார். இசை ஞானம் என்பது பிறவிப்பயன், அதில் பேரும் புகழும் அடைவது என்பது சிலருக்கே கிட்டும் வரப்பிரசாதம். பிறவிப்பயனால் இசையுணர்வு பெற்ற கோவிந்தராசன், முறைப்படி சிட்சை பெற்றார். குருகுல முறையில் தவமிருந்து இசை ஞானத்துக்கு மெருகூட்டிக் கொண்டார். தம் சிறிய தந்தையார், சினிமா உலகம் பி.எஸ்.செட்டியாரின் நிழலைத் தொடர்ந்து அறிமுகமும் ஆக்கமும் பெற்றார்.

தமிழ்நாட்டில் இசை உலகம் போட்டி மிகுந்ததொரு போராட்டக் களம். பெரிய பெரிய வித்வான்களைக் கூட அமுக்கிவிடும் அமைப்புக்கள் பல உண்டு. சர்வ சாதாரணங்களை ‘ஆகா, ஓகோ’ என விமரிசனம் செய்து தலையில் தூக்கிக் கூத்தாடும் விமர்சகர்களும், பத்திரிக்கைகளும் உண்டு. இவற்றையெல்லாம் மீறி, பிரபலமானார் சீர்காழியார் என்றால் அது எவ்வளவு மகத்தானதொரு அசுர சாதனை என்பதை வரலாறே விவரிக்க முடியாது. கால் நூற்றாண்டுக்கு மேலாக, அவர் மேற்கொண்டதொரு வேள்வியே அவருக்குப் புகழை ஈட்டித் தந்தது. நாட்டின் பல்வேறு அமைப்புக்கள், தாமாக முன்வந்து அவரைப்  பாராட்டி, தாம் பெருமை பெற்றன. இமய மலையின் உன்னத சிகரம் போல அவர் உயர்ந்து கொண்டே வந்த தருணத்தில் காலனின் பார்வை பட்டுவிட்டது.

சாவு என்பது உலகியற்கை. ஆனால் யாருக்குச் சாவு? எப்போது சாவு?… என்னும் சஞ்சலங்களால் சூழப்படும் சாவு… நம் நெஞ்சத்தில் தீராத துயரை, ஆறா அவலத்தை உருவாக்கிவிடுகிறது “நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் அரிது” (குறள்:235). வித்தகர் என வள்ளுவப் பெருந்தகை கூறியது போல, சீர்காழி கோவிந்தராசனார் சாவையும் வென்ற வித்தகராக விளங்குகிறார். அவரது வித்தையின் நுட்பம் எஞ்ஞான்றும் விளங்கும். அவரது வழி நின்று, அவரது புதல்வர், திரு.சீர்காழி சிவசிதம்பரம் முன்னணிக்கு வந்துள்ளார். தகப்பனாரின் புகழொளியோடு மகனும் ஒளிசேர்ப்பது அரிதாக அமையும் இறையருள். இந்த இறையருள் பெற்றுள்ள திரு.சிவசிதம்பரம் தம் தந்தையார் தமிழிசைக்கு ஆற்றிவந்த தொண்டுகளைப் போல் தாமும் செய்து,

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

     மன்னுயிர்க்கு எல்லாம் இனிது”       (68)

எனும் குறள் நெறிக்கு இலக்கணமாக அமைவார் என நம்புவோம்.

டாக்டர் சீர்காழி கோவிந்தராசனாரைப் பற்றி நினைக்கும்  இத்தருணத்தில், தமிழர்க்கு இசையில்லையே என மனக்குறைபட்ட அவரது வருத்தத்தைக் கருதும் இவ்வேளையில், தமிழிசை இயக்கம் பற்றிய சில சிந்தனைகளையும் நினைப்பது தகும்.

தமிழிசையில் பயிற்சி முறையினையும் பரப்பும் நெறியினையும் நவீனப்படுத்த வேண்டும். தமிழிசைக்கெனச் சில நிறுவனங்களும் கல்லூரிகளும் உள்ளன. என்றாலும் இவை சடங்கு, சம்பிரதாயம் போலவே காலமெல்லாம் பணியாற்றி வருகின்றன. தமிழிசையினை மக்கள் இயக்க மாக்கும் மாபெரும் சாதனை இன்னும் கை கூடவில்லை.

மேனாடுகளில் இசைப்பயிற்சியினை, பாடத்திட்ட மாக்கித் தொடக்கப்பள்ளி முதல் பயனுறும் வகையில் கற்பிக்கின்றனர். அத்தகைய நன்முயற்சிகள் நம் நாட்டில், தமிழிசைக்கு இதுவரை ஏற்படாமை மிகவும் வருந்தத்தக்கது. அடிப்படை இசை அறிவு இளமையிலேயே ஏற்பட வகை துறை ஏற்பட்டால், அது காலப்போக்கில் வளர்ந்து, மக்கள் இயக்கமாகும் வழி தானே அமையும். அதுவரை நம் சாஸ்திரீய சங்கீதம் என்பது அறைக்குள்ளே நாலுபேர் கூடித் தலையசைக்கும் பொம்மலாட்டமாகவே கால மெல்லாம் நீடிக்கும். பொதுமக்களுக்கும், தமிழிசைக்கும் தொடர்பில்லாமலே போய்க் கொண்டிருக்கும். இத்துறையில் தாராளச் சிந்தையும், கொடையுணர்வும் கொண்ட தனிநபர்களும் நிறுவனங்களும் நற்பணியாற்ற நிறைய இடம் உள்ளது. தமிழிசையைப் பரப்புவதற்கென்றே அறக்கட்டளைகளை அமைத்து வான்புகழ் பெற வாய்ப்பு உள்ளது.

தமிழிசைத் துறையில் இதுவரை எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. புதுமைகள் செய்து பார்க்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் காதிலே பட்டுக் காற்றோடு போய்க்கொண்டே இருக்கின்றன. மேலைநாடு களிலும் சிறிது காலத்துக்கு முன்னர் வரை அப்படித்தான் நடந்தது. புதிய விஞ்ஞானக் கருவிகள் வந்த பின்னர், அங்கே பழைய, பாரம்பரிய இசை வடிவங்களையும் கோலங்களையும் பேணிவைப்பதில், வகை, தரம், துறை பிரித்துக் காட்டுவதில், காப்பதில் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளனர். பதிவு நாடா (டேப் ரிக்கார்டர்), கணிப்பொறி (கம்ப்யூட்டர்), வீடியோ முதலிய கருவிகள் வந்த பின்னர், கிடைத்துள்ள ஆவணங்கள் அங்கே சிறப்புடன் பராமரிக்கப் படுகின்றன. ‘கல்யாணி’ எனும் ராகத்தை எடுத்துக் கொண்டால் அந்த ராகம் காலப்போக்கில், இந்த இந்தக் கலைஞரின் கற்பனையால், இந்த இந்த மாற்றங்களைப் பெற்றுப் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது எனப் புதிய தலைமுறையினர்க்குச் சொல்லக்கூடிய சேமிப்புமுறை (டாக்குமெண்டேசன்) நம்மிடம் உண்டா? மேனாட்டாரிடம் ஏராளமாக உண்டு. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் புதுப்புது ஆராய்ச்சிகளைச் செய்யும் உற்சாகமும் உண்டு; தாராளமாக உண்டு. நம் நாட்டில், நம் தமிழிசைக்கு அத்தகைய வழிவாய்ப்புக்களை ஏற்படுத்தித் தர முற்பட வேண்டும்.

தமிழசைக்கென தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள மதுரைத் தமிழிசைச் சங்கத்தின் புகழார்ந்த ராஜா முத்தையா மன்றத்தில் தமிழிசைக்கென ஒரு பதிவு நாடாப் பெட்டகம் அமைய வேண்டும். வானொலி, தொலைக்காட்சி, இசை மன்றங்கள், கல்லூரிகள் ஆகியன இணைந்து புதிய பரிசோதனைகளைத் தொடங்க வேண்டும். தமிழிசையை மக்கள் இயக்கமாக்க வேண்டும் என வாழ்நாள் எல்லாம் பாடுபட்ட சீர்காழி கோவிந்தராசனார் போன்ற இசைப் பேரறிஞர்கள் கண்ட கனவு அப்போது நனவாகும். பிற இசை போல, தமிழர்க்கும் இசை உண்டு எனும் நம்பிக்கை நம்மிடையே உருவாகும்.

தேமதுரத் தமிழ் இசை தமிழர் இல்லங்களில் எல்லாம் ஒலிக்க வேண்டும். திருக்குறள், சங்கப் பாடல்கள், மற்றும் தலைசிறந்த பாடல்கள் எல்லாம் எளிய சந்தங்களில் பாமரர்க்கும் பொருள்புரியும் வகையில் எளிய இனிய இசைப்பாடல்களாகப் பெருக வேண்டும். தமிழ் இசை, தமிழர் மனங்களையெல்லாம் இசையச் செய்து, இசைபட வாழச்செய்து, தமிழரை உலகெல்லாம் போற்றும் ஆற்றல் பெற வேண்டும்.

தமிழ் இசை தமிழர் இசையாக வாழ்க!

 

வ.உ.சி.

“உடல் மண்ணுக்கும் உயிர் நாட்டுக்கும்”

வ.உ.சி.

Image result for va vu chidambaram pillai

“தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

 மன்னுயிர் எல்லாம் தொழும்”       (குறள் 267)

எனும் வள்ளுவ நெறிக்கு ஏற்ப, ‘என்பும் உரியர் பிறர்க்கு’ என்ற அன்பு நெறிக்கு ஏற்ப உடலை மண்ணுக்கும் உயிரை நாட்டுக்கும் நல்கிய பேராண்மைச் சான்றோர்கள் நம்மால் எஞ்ஞான்றும் போற்றப்படுகின்றனர். பிறந்தவர் இறத்தல் பேருலகின் இயற்கை என்றாலும், தியாகத்தால், தொண்டால் புகழ் பெற்று வாழ்வோர் புகழ் உடம்பும் பூத உடம்பும் ஆகிய ஈருடம்பும் பெற்று வாழ்பவர் ஆவர். சாதாரண மக்கள் போல் அல்லாமல் இச்சான்றோர் பூத உடம்பு அழிந்தாலும், புகழ் உடம்பால் நிலைபெற்றுப் புகழோடும், பெருமையோடும் என்றும் நிலைபெற்று வாழ்வர். அத்தகைய தியாகச் செம்மல்களுள் தலைசிறந்து நிற்பவர், நம் தமிழகம் தந்த ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார்.

“மேலோர்கள் வெஞ்சிறையில்

           வீழ்ந்து கிடப்பதுவும்

     நூலோர்கள் செக்கடியில்

           நோவதுவும் காண்கிலையோ?”

என இவரது தியாக வாழ்வுபற்றி மகாகவி பாரதி மனம் கசிந்து பாடினார்; ஆங்கில அரசால் வ.உ.சி. சிறைப் படுத்தப்பட்ட கொடுமையையும் செக்கிழுத்துச் சோர்ந்த போதும் தணியாத, அயராத அவரது சுதந்திர வேட்கையையும் பாடிப் பரவினார்.

“இதம்தரு மனையின் நீங்கி

           இடர்மிகு சிறைப்பட் டாலும்

     பதம்திரு இரண்டும் மாறிப்

           பழிமிகுந் திழிவுற் றாலும்

     விதந்திரு கோடி யின்னல்

           விளைந்தென்னை அழித்திட் டாலும்

     சுதந்திர தேவி நின்னைத்

           தொழுதிடல் மறக்கி லேனே…”

எனப் பாடிய பாரதியார் நெஞ்சம், வ.உ.சி.யின் வரலாற்றையே நமக்கு நினைவூட்டுகிறது.

இந்திய விடுதலைப் போர்ச் சகாப்தத்தில் – கட்டபொம்மன் காலம் தொடங்கி, காந்தியடிகள் காலம் வரை பல்லாயிரவர் பங்கேற்றனர். இந்த உரிமைப் போரிலே தமிழினத்தார் செய்த புரட்சிகளும், ஆற்றிய தியாகங்களும் வரலாற்றுச் சிறப்புடையவை. வ.உ.சி.யின் தியாகங்கள் மணிமுடியாக இலங்குபவை.

நமது உரிமைப் போரில் ‘திலகர் சகாப்தம்’ என்பது ஒரு திருப்பு முனை. காங்கிரஸ் மகாசபை ஆரம்பிக்கப்பட்ட நாள் தொட்டு, மாட்சிமை தங்கிய மன்னர் பிரானுக்கு மனுப்போடும் சம்பிரதாயத்தையே அது பின்பற்றி வந்தது. “சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்” என வீரமுழக்கம் செய்த திலகர், கொந்தளித்துக் கொண்டிருந்த தேசிய உணர்ச்சி வெள்ளத்திற்கு வடிகால் அமைத்தார். இத்திலகர் சகாப்தத்திலே, தமிழகத்தின் தலைவராக, தென்னாட்டுத் திலகராகக் கப்பலோட்டிய தமிழர் விளங்கினார்.

அவருக்கும் திலகருக்கும் இருந்த தொடர்பை,

“திலக மகரிஷியின் கதை பாடும் போது

     சிதம்பரம் பிள்ளை வந்து சுதி போடும்”

என நாமக்கல் கவிஞர் வருணித்தார். சிதம்பரனார், தமிழ்ப்பற்று மிக்க குடும்பத்திலே பிறந்தார். தம் தந்தை யாரையும், தமையனாரையும் போல, இவரும் உயர்தரக் கல்வி கற்று, சட்டம் பயின்று, வழக்கறிஞர் ஆனார். ஆங்கில மொழியில் ஆக்கம் பெற்றது போல, அருந்தமிழ் மொழியிலும் பெரும்புலமை பெற்றார். நாட்டிலே வீறிட்டெழுந்த சுதந்திர இயக்கம் சிதம்பரனாரின் உள்ளத்தையும் ஈர்த்தது. அவரும் அதில் தீவிரப் பங்கு கொள்ளத் தொடங்கினார்.

“கப்பலேறுவாயோ  அடிமை

     கடலைத் தாண்டுவாயோ?”

எனக் கேட்ட ஆங்கிலேயனுக்கு,

“சொந்த நாட்டில் பரர்க்கடிமை செய்தே

     துஞ்சிடோம்  இனி அஞ்சிடோம்”

எனத் தேச பக்தன் மறுமொழி பகர்ந்ததாகப் பாரதி பாடினார். அந்தத் தேச பக்தன் வ.உ.சி. தான்! வெள்ளையர் களுடைய கொள்ளை லாபத்திற்கு உதவுவது கப்பல் வாணிபம் என்பதை உணர்ந்து அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தத் திட்டமிட்டார். இந்தியரின் மூலதன இரத்தத்தால் உருவாக்கப்பட்ட ‘பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி’யில் இந்தியர்களே புறக்கணிக்கப்பட்ட போக்கிற்கு எதிராகச் ‘சுதேசிக் கப்பல் கம்பெனி’யை முழுவதும் இந்திய மூலதனத்துடன் 1906-இல் நிறுவினார். இப்போட்டிக் கப்பல் நிறுவனத்தைக் குலைக்க, ஆங்கில அரசு கப்பல் கட்டணத்தைக் குறைத்து மேற்கொண்ட சூழ்ச்சிகள் பலிக்கவில்லை. எனவே சிதம்பரனாரை ஒடுக்க வேறு கடுமையான, கொடுமையான முறைகளை மேற்கொண்டது.

வீர ஆவேசக் கனலாக வ.உ.சி. மேடைகளில் முழங்கினார்.

“சுதந்திரம் நமது குறிக்கோள்,

     வீறு கொண்டு பாரதம் பூரண

     விடுதலை எய்தும் வரை ஓயமாட்டோம்!

     உறுதியில் தளர மாட்டோம்.

     விடுதலை பெறாது உயிர் வாழமாட்டோம்.”

எனச் சூளுரைத்தார். “அடிமைத் தனத்தை விடவா சாவு அஞ்சுதற்கு உரியது? மரணத்தைக் கண்டு அஞ்சுபவன்தான் கோழை! ஆன்மா அழிவற்றது! நாட்டு விடுதலைக்காக, நாட்டு நன்மைக்காக எவனொருவன் உயிர் துறக்கின்றானோ அவனே துறக்க உலகமாகிய இன்ப உலகிற்குச் செல்கின்றான்” என முழங்கினார். இவ்வாறு புரட்சி இயக்கத்தை வளர்த்ததுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கு உதவி செய்தார் எனப் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டுச் சிதம்பரனார் கொடுமை மிக்க ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டார்.

30-ஆம் வயதிலே அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை. இருபது, இருபது வருடமாக மொத்தம் 40 ஆண்டுத் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்த அப்பீலில் இது 6 வருடக் கடுங்காவல் தண்டனை யாகக் குறைக்கப்பட்டது. கோயமுத்தூர், கண்ணனூர்ச் சிறையில் அவர் அடைக்கப்பட்டுச் சொல்லொணாக் கொடுமைகட்கு உள்ளானார். ‘வந்தே மாதரம்’ எனச் சொல்லிக் கொண்டே கல்லுடைத்தார், செக்கிழுத்தார், செந்நீர் சிந்தினார்.

“‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்

           மன்னனென மீண்டான்’ என்றே

     கேளாத கதை விரைவில் கேட்பாய் நீயே

           வருந்தலை என் கேண்மைக் கோவே..”

எனப் பாடிய பாரதியார், சிதம்பரனார் சிறைப்பட்டதால் நாடெங்கும் பரவிய அவல உணர்வைத் தம் கவிதையில் வடித்துக் கண்ணீர் சிந்தினார்.

சிதம்பரனார் சிறையில் தவம் இருந்தார்; சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக, அறிவுக் கோட்டமாக மாற்றினார்.

கண்ணனூர்ச் சிறையில், கொடிய குற்றவாளிகளுடன் அவரும் அடைக்கப்பட்டிருந்தாலும், உடனிருந்தவர்களை உளமார நேசித்தார்; அவர்களுக்கு அறநெறி காட்டுவதற்கென, எளிய நடையில் ‘மெய்யறிவு’ எனும் நூலை 100 வெண்பாக்களில் இயற்றினார். ‘மெய்யறம்’ எனும் மற்றொரு நூலையும் கண்ணனூர்ச் சிறையில் பாடினார். சமுதாயத்தை ஒழுக்கப் பாதையில் இட்டுச் செல்லும் தமது கடமையை மறவாது சிறையிலும் ஞான வேள்வி செய்தார் வ.உ.சி. ‘சுயசரிதை’ எனும் நூல் – அவரது சொந்தச் சரிதை மட்டுமன்று, தமிழகச் சுதந்திரப் போரின் திலகர் சகாப்த வரலாற்றில் ஓர் அங்கமாக விளங்கும் அரசியல் பொன்னேடும் ஆகும். ‘தனிப்பாடல் திரட்டு’, தமது முதல் மனைவிக்கு அஞ்சலியாக யாத்த ‘வள்ளியம்மை சரித்திரம்’ ஆகியன வ.உ.சி.யின் சிறை வாழ்வு தந்த தமிழ்க் கொடைகள்.

தண்டனைக் காலம் முடிந்து 1919-இல் சிதம்பரனார் விடுதலையானார். நெல்லை மாவட்டத்திற்குள் நுழையக் கூடாதென ஆங்கில அரசு தடை விதித்தது. இராஜத் துரோகக் குற்றம் சாட்டி, வக்கீல் சின்னத்தையும் பறித்துக் கொண்டது. நீதிமன்றத்திலே தொழில் புரிய முடியாது போயினும், சுதேசிக் கப்பல் கம்பெனி செயல்பட இயலாது போயினும் சிதம்பரனார் சிந்தை தளரவில்லை. அவர் தீவிர அரசியலை விட்டு ஒதுங்க நேரிட்டபோதும், தமிழ்ப் பணியை உயிர்ப்பணியாகக் கொண்டார்.

தமிழ்ப்புலவர்களும், அறிஞர்களும் தேசியப் போர்ப்பாசறைக்கு வர வழி காட்டியவர் வ.உ.சி. அவரைத் தொடர்ந்து பின்னாளில் திரு.வி.க. முதலான தமிழறிஞர்கள் போர்ப்பரணி அமைத்தனர்; தாய்மொழிப் பற்றோடு தாய்நாட்டுப் பற்றையும் பேணி வளர்க்கும் பேரணி கண்டனர்.

சிதம்பரனார் மரபு வழியாலும் மாண்பார் முயற்சியாலும் தமிழ் மொழியில் பெரும்புலமை பெற்றார்; சோழவந்தான் அரசஞ்சண்முகனார் போன்ற புலவரைச் சார்ந்து தொல்காப்பியத்தைக் கசடறக் கற்றார்; மதுரைத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்து, பல நூல்களைக் கற்றுச் ‘சங்கப் புலவர்’ எனும் சிறப்பையும் அடைந்தார். சிறையில் அடைபட்டபோதும் தமிழ்க் கல்வியைத் தொடர்ந்து கற்றார் என்பதைச் ‘சுயசரிதை’யில்…

“வள்ளுவர் மறையும் மாண்புயர் நல்லாப்

 பிள்ளை பாரதமும் பெரும்பொருள் நிரம்பிய

 பகவத் கீதையும் படித்தேம்…”

எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருக்குறள் எனும் நமது தேசிய நூல் தோன்றிய காலந்தொட்டே, அதற்குக் காலந்தோறும் அறிஞர் பெருமக்கள் உரைவளம் சேர்த்துள்ளனர். உணர உணரப் புத்துரம் நல்கும் இவ்வாழ்க்கை நூலுக்கு இந்நூற்றாண்டில் உரைமாலை சூட்டிய அறிஞர் வரிசையில் வ.உ.சி. முதலிடம் பெறுகிறார். திருக்குறளுக்கு விருத்தியுரை எழுதி, திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயில் மண்டபத்தில் புலவர் அவையில் அதனை அரங்கேற்றினார். திருக்குறளின் முப்பாலுக்கும் அவர் உரை வரைந்தாலும், 1935-இல் வெளியிடப்பட்ட அறத்துப் பால் உரை மட்டுமே நமக்குக் கிட்டியது.

சிவஞான போதத்தை ஆழ்ந்து படித்து அதற்கும் புதியதொரு உரை எழுதி அரங்கேற்றினார். தம் மதப் புகழ் கூறிப் பிறர் மதம் சாடும் பழைய மரபை விடுத்து, வேற்றுமையே பேசும் விகற்ப நிலை விடுத்து சமய ஒற்றுமையும், பொதுமையும் நாடும் புதுநெறிக்கு வித்திட்டார். பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான ‘இன்னிலை’க்கு உரை எழுதியதோடு, தொல்காப்பிய இளம்பூரணர் உரைக்கும் புதுப்பதிப்புச் செய்வித்தார். இத்தமிழ்த் தொண்டுகளால் அவர் செந்தமிழ் வளர்த்த சிதம்பரனாராகத் திகழ்ந்தார்.

சிதம்பரனார் நெடிது காலம் வாழ்ந்து சுதந்திர உதயம் காணாதே மறைந்துவிட்டார். பாரதியார், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர் போன்ற புரட்சி வீரர்களைப் போல, அவர் சுதந்திரப் போர்க் கனலிலேயே தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். அத்தியாகச் செம்மல்களை நன்றியுடன் நினைவோம். சிதம்பரனார் வாழ்ந்த காலம் சிறிதளவே எனினும் வாழ்ந்த காலமெல்லாம்  பிறர்க்கெனப் பயன் தந்து வாழ்ந்தார். தன்னை எரித்துக்கொண்டு, முழுவதும் மணக்கும் கற்பூரம் போல, முழுமையும் எரிந்து ஒளி நல்கும் மெழுகுவர்த்தி போல, நினைப்பாலும் செயலாலும் தம் தியாகத்தால் இம்மண்ணின் புகழ் மணக்கச் செய்தார்; நாட்டை ஒளிரச் செய்தார். அன்னிய அரசு அவரைச் சிறையில் போட்டு ஒடுக்க முயன்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவர் மக்களின் மனக் கோயிலில் சான்றோராக மதித்துப் போற்றப்பட்டார். அன்னை நாட்டின் அடிமை விலங்கை ஓடித்தெறியத் தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் உவந்தளித்த தியாக சீலராகக் வணங்கப் பெற்றார்.

இன்னுயிரை நாட்டுக்கு நல்கி, தியாகத்தால் சுதந்திரம் பெற்றுத் தந்தமைக்காக காந்தி மகான், வ.உ.சி. போன்ற சான்றோரை நாம் மதிப்பது உண்மை என்றால், அச் சான்றோர் நம் வாழ்வுக்குக் காட்டிய நன்னெறியின் வழி தொடர்வதே அப்பெருமக்களுக்கு நாம் செய்யும் அன்றாட வழிபாடாக அமையும். ‘உடலை மண்ணுக்கும் உயிரை நாட்டுக்கும் நல்கிய வ.உ.சி.யைப் போன்ற சான்றோர் இச்சுதந்திர மண்ணில் மறுபடியும் பிறக்க மாட்டார்களா?’ என்னும் ஏக்கம் நம்மிடையே பரவலாகத் தெரிகிறது.

தன்னலம் பேணி இழிதொழில் புரிதலும்,

தாய்த்திரு நாடெனில் தன்னுழைப்பைச் சுருக்கலும்

நம் உரிமை வாழ்வை மங்கச் செய்வது புலப்படுகிறது. ‘நாடு எங்கோ போய்க் கொண்டிருக்கிறது?’ எனக் கவலைப்படுவதும், ‘நலமெல்லாம், வளமெல்லாம், தீயோர் திசை நோக்கியே செல்கிறது’ எனக் குமைவதும் எங்கும் ஒலிக்கின்றது. நாம் என்ன செய்யப் போகிறோம்? நெட்டை மரங்கள் போல நின்று புலம்பப் போகிறோமா? கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றப் போகிறோமா? நம்மை நாமே ஆண்டு கொள்ளும் இந்த உரிமைச் சூழலிலே நாம் நடை தடுமாறுகிறோம். நாடு முழுவதும் அடிமைப்பட்டுக் கிடந்த துயரச் சூழலில் மக்கள் எவ்வாறு சுதந்திரப் பயிர் வளர்த்தார்கள் என்று மறுபடியும் சிந்திப்பது நம் தடுமாற்றத்தைச் சீராக்கும்; தலை நிமிர்ந்து நடக்க வைக்கும். சிதம்பரனார் ஆங்கில அரசின் அடக்கு முறைகளுக்கு எல்லாம் அஞ்சாது வாழ்ந்தார். அடிமை நாட்டில், உரிமை உணர்வு பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையோடு இறந்தார்.

“புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்து கோள் தக்கதுடைத்து” (780) எனும் வள்ளுவர் வாக்கிற்கேற்ப அவரது இறப்பு இன்றும் நம் கண்களைப் பனிக்க வைக்கிறது; உள்ளத்தை உருக்குகின்றது; நெஞ்சை நெகிழ வைக்கிறது.

நாட்டுக்காகச் சாவது ஒரு தேவை;

நாட்டுக்காக வாழ்வது மற்றும் ஒரு சேவை.

வ.உ.சி.யின் வீர வாழ்வை, தியாக வாழ்வைக் கருதும் நாம் அவரது நாட்டுப் பற்று, மொழிப் பற்று, தன்னலமற்ற தியாகம், அயரா உழைப்பு, காரிய உறுதி ஆகியவற்றையும் கருதிச் செயலாற்ற வேண்டும். நம் மனம் உள்ளேயும் புறத்திலும் நேர்மையின்மை, அச்சம், தன்னலம், பொறாமை, சூது, வஞ்சகம் போன்ற தளைகளால் பிணிக்கப் பட்டுள்ளது. மனத்தைப் பிணித்துள்ள இத்தளைகளை நீக்கினால் தான் நம் நாட்டிற்கு உண்மையான விடுதலை கிடைக்கும். மனம், மனச்சாட்சியைச் சுற்றியுள்ள தளைகளிலிருந்து கட்டுக்களிலிருந்து விடுதலை பெற வேண்டும். அப்போது தான் நாம் உண்மையாகச் சுதந்திரம் அடைந்தவர்கள் ஆவோம். நாமும் வாழ்ந்து நம் நாட்டையும் வாழ்விக்கும் நற்பணியில் ஒன்றுபட வேண்டும். சிறுசிறு பூசல்களையும் பிணக்குகளையும் வளர்த்து பெற்ற சுதந்திரத்தைச் சின்னாபின்னமாக்கும் போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும். உடலை மண்ணுக்கும், உயிரை நாட்டுக்கும் நல்கச் செக்கிழுத்த செம்மலுக்கு, செந்தமிழ் வளர்த்த சீலர்க்கு, கப்பலோட்டிய தமிழர்க்கு, நாட்டுக்கு உயிராகிய தியாகச் செம்மல் வ.உ.சிதம்பரனார்க்கு நாம் தந்திடும் அன்புக் காணிக்கையும் அதுவே ஆகும்.