தீரா இடும்பை தரும் & எது?

மனித வாழ்வு அமைதியும் இன்பமுமாக அமைய வேண்டுமானால் வாழ்வு அற வாழ்வாக மலர வேண்டும். அறத்தால் வருவதுதான் இன்பம். மற்றவை யாவும் இன்பம் என ஒருவகை மயக்கம் தருவதன்றிப் புகழ் தருவதில்லை; இனிமை தருவதில்லை.

மனம் மாசற்று இருப்பதுதான் அறம். உள்ளம் தூய்மையுடையதாய் உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது தான் அறம். வெறும் புகழ் மயக்கத்தால், பயன்கருதிச் செய்யப் பெறும் செயல்கள் தொடக்கத்தில் தவிர்க்க இயலாதவை யாகவே இருக்கும். ஆனால் மனம் பக்குவப்படத் தொடங்கியதும் நல்ல பயிற்சியால் இச்சிறு மாசுகள் நீங்கும். பொதுவாக, பொறாமை, பேராசை, கோபம், இன்னாச்சொல் என்பன அறியாமையால், மயக்கத்தால் உருவாகும் குணங்கள்! இக்குற்றங்கள் நீங்கப் பெற்றால் மனம் மாசு நீங்கி ஒளிபெறும்; வாழ்வும் ஒளிபெறும்.

‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாகும்.’ செய்யும் செயலிலெல்லாம் இருளும் மயக்கமும் நீங்கி அறஒளி நிறையும்.

வாழ்க்கை நிலையாமை உடையது. நில்லாத இவ்வாழ்க்கையை என்றும் நிலையானது என மயங்கி யிருத்தல் புல்லறிவு ஆகும்.

 

‘நேற்றிருந்தார் இன்றில்லை. இன்றிருப்பவர் நாளை இல்லை’ என்ற வியப்பான உலகில், காலம் தாழ்த்தாது, வாழும் ஒவ்வொரு நாளும் அறம் செய்ய வேண்டும்.

‘நாள் என ஒன்றுபோல் காட்டி உயிரறுக்கும் வாள்’ என்பதை நன்கு உணர்ந்து நாளும் அறம் செய்ய வேண்டும். நம் வாழ்விற்கு எப்போது இறுதி நேரிடும் என்று தெரியாத நிலையில் உறுதியான, நன்மையான காரியங்களை அறுதியிட்டு நாடிச் செய்ய வேண்டும்.

குறுகிய வாழ்நாளை நீண்ட பயன் மிகுந்த வாழ்நாளாக்க வேண்டுமானால், நாள் என்பது ஒரு கூர்மையான வாளாக மாறி வாழ்நாளை அறுக்காமல் இருக்க வேண்டுமானால், தடையில்லாமல் வீழ்நாள் இல்லாமல் அமைய வேண்டுமானால், விரைந்து நாள்தோறும் நாடி நல்லறச் செயல்கள் செய்ய வேண்டும். அப்போது துன்பத்தை, துயரத்தை வரவிடாமல் வழியடைக்கும் கல்லாக அறம் விளங்கும்.

சிறப்பாக நாம் ஆளும் அரசைத் தேர்ந்தெடுக்கும் போது அவ்வரசு நாட்டின் நலம் கருதிச் செயல்படும்; அறவழியில் நிற்கும்; மக்களின் அச்சம் நீங்கிப் பாதுகாப்புத் தரும்; பொருளாதாரத்தை மேம்படுத்தும். எனவே இன்பம் நல்கும் ஏற்றமிகு அரசையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

அறத்தை அறிந்து, மனச்சான்றுள்ள, தியாகம் நிறைந்த, தூய வீரம் நிறைந்த, ஊக்கமும் துணிவும் மிகுந்த விரைந்து செயலாற்றும் நேர்மையாளர்களை ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவைகளை எல்லாம் எண்ணிப் பார்க்காமல், நன்கு ஆராயாமல் – குறுகிய நோக்கோடு, தன்னலத்தோடு முடிவு செய்தால் தீமை விளைந்துவிடும். ஆட்சியில் தீயவர் களையும் தீயவைகளையும் ஏற்றுக்கொள்ளும் துன்பம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து துயரமே தந்துவிடும்.

நன்றாக ஆராய்ந்து பார்த்து முடிவு செய்து பொறுப்பேற்குமாறு தேர்ந்தெடுத்தவுடன் அவர்கள் மீது முழு நம்பிக்கை கொள்ளவேண்டும். அடிக்கடி தலையிடுவது, குறுக்கிடுவது, அவதூறு செய்வது என்பன மிகப்பெரிய  துன்பத்தைத் தரும். ஆராய்ந்து தெளிந்து நம்ப வேண்டும். நம்பித் தெளிந்தவுடன் வீணான ஐயம் கூடாது. எத்துறையாயினும் ஒரு முடிவுக்குப் பின்னர் இடையில் வரும் குழப்பம். சந்தேகம் ஆகியவற்றை முற்றிலும் நீக்கிவிட வேண்டும். அவர்களுக்கு ஆதரவாய் இருந்து நன்கு செயல்பட உரிமை அளிக்க வேண்டும்.

தீரா இடும்பை தரும் எது என்று கேட்டு, அதற்கு வள்ளுவர் விடையும் அளிக்கின்றார்.

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் 

 தீரா இடும்பை தரும்”              (510)

ஒருவனைத் தெளிவில்லாமல், ஆராயாமல் தேர்ந்தெடுத்தாலும் துன்பம். ஆராய்ந்து தெளிந்த ஒருவரிடம் ஐயப்படுதலும் நீங்காத துன்பம். இத்துன்பம் நீக்கி இன்பம் பெற்று வாழ்வோமாக.

புகழ் வாழ்வு

“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

     பொன்றாது நிற்பதுஒன்று இல்.”      (233)

மனிதர் அனைவரும் வாழ்வில் அவரவருக்கு உரிய தகுதிக்கேற்பப் புகழோடு வாழ விரும்புகின்றனர். தேடிச்சோறு நிதம் தின்று, உண்டு உடுத்தி உறங்கி வாழ்வது வாழ்க்கையல்ல. தகுதியோடும் மகிழ்வோடும் வெற்றியோடும் வாழும் வாழ்க்கையே புகழ் நிறைந்த வாழ்க்கை.

அறநெறியில் நின்று தளராது, அயராது, ஊக்கத்துடன், உண்மையாக முயன்று உழைப்பவர்கள்தான் தகுதியும் புகழும் பெறுகின்றார்கள்.

‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்று குறுந்தொகை கூறுவது போல் உண்மையான முயற்சியும் உழைப்புமே ஒருவனை உயர்த்தும்; பெருமையும் புகழும் சேர்க்கும். பயனுள்ளவனாக, பிறர்க்கு உதவுபவனாக, பிறர் துன்பங் களைத் தீர்ப்பவனாக இருந்தால்தான் புகழ் நிலைத்து நிற்கும். புகழ் அறத்தின் ஒளிவடிவம். நல்லவர்களால் போற்றப்படுவதே புகழ். மனச்சான்றைப் போற்றி, குற்ற மில்லாமல் குணங்கொண்டு செம்மையோடு வாழ்பவர் களுக்குப் புகழ் உயிர்மூச்சு போன்றது. புகழின்றி உயர்ந்தவருக்கு வாழ்வு இல்லை. நற்செயல்கள் செய்பவரின் பெருமையும் சிறப்பும் ஆரம்பத்தில் கவர்ச்சியாக இருப்பதில்லை. அவர்களது அருமை தொடக்கத்தில் தெரியாவிட்டாலும் நாளடைவில் மிகவும் சிறப்பாக நன்றாகவே உணரப்படும். அறம் இல்லாத இடத்தில் புகழ் நிலைத்து நிற்காது. அறத்தோடு, கடின உழைப்போடு, மனச்சாட்சியைப் போற்றி இடைவிடாது தனக்குத்தானே தன்னை குற்றங்களிலிருந்து நீங்கி காத்துக் கொள்பவர்களுக்கே புகழ் என்றும் நிலைத்து நிற்கும். இல்லாவிட்டால் புகழ்வேட்கை கொண்டவர் களுக்கு வாழ்க்கை கானல் நீர் ஆகிவிடும். உண்மையான புகழ் ஆழமாக வேரோடி நிற்கும் ஆலமரம் போன்றது. நல்ல அடித்தளத்தில் கட்டப்பட்ட கோபுரம் போன்றது; தனக்குரிய உண்மையான தகுதியுடனும், நேர்மையுடனும், மனச்சான்றைப் போற்றி வாழ்பவர் என்றும்  இன்பத்துடன், புகழுடன் வாழ்வர்.

போலித் தகுதியால், குறுக்கு வழியில் புகழ்பெற முயல்பவன் வேகமாக உயர்வான். ஒரு புயல்காற்றில் காகிதமும், சருகுகளும், குப்பைகளும் கோபுரத்திற்கு மேல் உயர்வது போல போலிப்புகழ், தற்புகழ்ச்சி போலி நாணயம் போன்றது. புழக்கத்தில் தண்டனையைத் தருவது. வீண் புகழ்ச்சியால் ஆணவம் அதிகம் தலைகாட்டும். வீண்புகழ்ச்சி அளிப்பவரையும் அழிக்கும். பெறுபவரையும் சீரழிக்கும். வெற்று உபச்சாரம், போலிப்புகழ்ச்சிகளைக் கண்டு மயங்காமல் வாழவேண்டும். சிலர் சிலகாலத்திற்கு நன்றாகப் புகழப்படுகின்றனர்; கொண்டாடப்படுகின்றனர். கால மாறுதலால் புகழின் உச்சியில் நின்றவர்கள், பாதாளத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்; போற்றப்பட்டவர்கள் பழித்துப் புறக்கணிக்கப்படுகின்றனர். மக்கள் புகழும்போது புகழ் பெற்றவர்கள் மிகவும் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்; வாழ்த்துக்களை வழங்கியவர்கள், வசவுகளையும் வழங்கிடுவர்.

நம் தகுதிக்கேற்ற புகழ்ச்சிகளே நிலைத்து நிற்கும். ஆகவே என்றும் உழைத்து, முயற்சி செய்து, செம்மையாக வாழ்ந்து, தனக்கு உரிய பொருளுடைமை, கல்வியுடைமை, அறிவுடைமை, உழைப்பு இவைகளைப் பிறர்க்கும் வழங்கிப் பிறர்க்கு பயன்பட வாழ்ந்தால்தான் ஊரும் நாடும் உலகமும் போற்றும். வசையும், பழிச்சொல்லும் இல்லாமல் புகழுடன் வாழ்பவர்களே வாழ்பவர்கள். புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் வாழ்ந்தாலும் உடல் சுமந்து உயிரோடு இருந்தாலும் வாழாதவர்களே. உலகம் மாறிவருவது. இங்கு நிலையாமை தான் நிலைத்தது இத்தகைய மாறிவரும் உலகில், நிலை யாமை உள்ள உலகில் நிலைத்து நிற்பது, எதுவென்றால், அது அழிவற்ற புகழ் அன்றி வேறு ஒன்று இல்லை.

“வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசைஒழிய

     வாழ்வாரே வாழா தவர்.”      (240)

 

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

     தம்புகழ் நிறுவி தாம்மாய்ந் தனரே” – (புறநானூறு)