நாடுகாண் காதை & முகவை மாவட்டம்

இந்தியாவில் நீளமான கடற்கரையைக் கொண்டது தமிழ்நாடு. இம்மாநிலத்தில் கிழக்குக் கடலோர எல்லை வரைகோட்டினை, அழகிய பெண்ணொருத்தியின் முகத்தைப் போல உருவகித்து வரைந்திருந்தார் ஓவியர் ஒருவர். அந்த முகத்தில் புன்சிரிப்பைப் புலப்படுத்தும் வாயிதழ் போல அமைந்துள்ள மாவட்டத்திற்கு ‘முகவை மாவட்டம்’ எனப் பொருத்தமானதொரு பெயரும் உண்டு. இந்த இராமநாதபுர மாவட்டத்தைக் காணவருமாறு மதுரை வானொலியில் ‘நாடுகாண் காதை’ வழியாக அழைக்கிறேன். புகார்நகரை விடுத்து மதுரை நோக்கிப் புறப்பட்ட சிலப்பதிகார இணையர்க்குக் கவுந்தியடிகள் மதுரைவரை வழிகாட்டி நடந்தார். அவ்வாறு நடந்துவந்த வழியில்- இந்த இராமநாத புறப்பகுதியும் இருந்திருப்பின்- இந்த மண்ணின் புனித வரலாற்றையெல்லாம் புதியதொரு காதையாக விரித்திருப்பார்: அதனை இளங்கோவடிகளும் இனிமையுறத் தொகுத்திருப்பார்.

நினைப்பிற்கெல்லாம் எட்டாத நெடுங்காலமாக வரலாற்றுச் சிறப்பும் வழிவழித்தொன்மையும் உடைய வழிபாட்டிடங்களைக் கொண்டதாக இராமநாதபுர மாவட்டம் விளங்கி வந்துள்ளது. இமயம் முதல் குமரி வரை என்பது போல, ‘காசி முதல் இராமேசுவரம் வரை’ எனும் ஒரு நாட்டுச் சிந்தனையும் நிலைபெற்று வந்துள்ளது. இப்புண்ணிய பாரதத்தின் புகழ்பெற்ற திருத்தலங்களுள் ஒன்றான இராமேசுவரம் உயிருக்கு ஆதாரமான பக்தி நெறியையும், காலத்தை வென்று நிற்கும் கலாச்சாரக் கட்டுக்கோப்பையும் பேணி வளர்த்து வருகிறது.

பழந்தமிழகத்துப் பாண்டியப் பேரரசின் ஒரு பகுதியான இந்த மாவட்டம், பல வரலாற்றுச் சுவடுகளைப் பெற்றுள்ளது. ‘முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே’ எனப் பாரதியார் பரவசத்துடன் பாடிய பாண்டிநாட்டு முத்துக்கள் எகிப்திய எழிலரசி கிளியோபாத்ராவின் அலங்காரப் பொருள்களாயின. அரேபியக் குதிரைகளை இறக்குமதி செய்யும் தொண்டி முதலிய துறைமுகங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே புகழ்பெற்று விளங்கின. இதிகாச இராமாயணத்தை வரலாற்று நிகழ்ச்சியாக வரையறுத்துக் காட்டும் பல தடயங்கள் என்றென்றும் போற்றப்பட்டு வருகின்றன. ‘தென்பாண்டி நாடே சிவலோகம்’ என வாதவூரர் மொழிந்தது போல, இப்பாண்டிநாட்டுப் பகுதியில் சிவம் பெருக்கிய சீலர்களாகிய சமய குரவர் நால்வராலும் போற்றிப் பாடப்பெற்ற பல திருத்தலங்கள் – திருவாடானை, திருராமேசுவரம், திருக்கானப்பேர், திருப்புத்தூர் எனும் பாடல் பெற்ற தலங்கள் பல உள்ளன. வடக்கிலிருந்து படை எடுத்து வந்த மொகலாயர்கள் இராமேசுவரம் கோவில்வரை வந்து கொள்ளையிட்டுச் சென்றதை வரலாறு சொல்கிறது. மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய, நாயக்க மன்னர்களுக்குச் சிலசமயம் உட்பட்டும் பல சமயம் உட்படாமலும் இப்பகுதியைச் சேதுபதி மன்னர்கள் தன்னாட்சி புரிந்து தனிவரலாறு படைத்துள்ளனர். பாண்டிய மன்னரால் மானியமாக வழங்கப் பெற்ற இக்கடற்கரைப் பகுதியில் 60க்கும் மேற்பட்ட ஆலயங்களில் சேதுபதிகள் அறப்பணிகள் நடத்தி வந்தனர்.

இலங்கையை ஆண்ட மன்னன் ஸ்ரீராஜசேகரனின் அருந்துணையோடு இலங்கைத் திரிகோணமலையில் இருந்து கடல் வழியாகக் கற்களைக் கொணர்ந்து உடையன் சேதுபதி, 13-ஆம் நூற்றாண்டில் இராமேசுவரத்தின் கோயில் கருவறையைக் கட்டினான். பின்னர் கிருஷ்ண தேவராயர் காலத்தில் அதன் வடக்கு, தெற்குக் கோபுரங்கள் கட்டப்பட்டன.

‘திரைகள் முத்தால் வணங்கும் திருஇராமேசுவரம்’ என்று அப்பர் சுவாமிகள் பாடியருளினார். எத்தனையோ புண்ணியத் தலங்கள் இருப்பினும் இராமபிரானையே கவர்ந்திழுத்த இராமேசுவர ஜோதிர்லிங்கம் புண்ணியத் தலங்களின் இமயமாகவே விளங்கி வருகிறது.

அன்று இராமபிரானை ஈர்த்தது போல, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகெலாம் இந்து சமயப் பெருமை பற்றி, இந்திய மண்ணின் அருமை பற்றிப் பேருரை யாற்றச் சென்ற சுவாமி விவேகானந்தரையும் இந்தத் தலம் ஈர்த்தது. சேதுபதி மன்னர் நல்கிய பொருளாதார ஆக்கத்தையும் இராமநாத சுவாமிகளின் அருளாதார ஊக்கத்தையும் பெற்றுச்செல்ல ‘ஊட்டிவிடும் சென்மம் வரும் வழியைத் தாளிட்டுப் பூட்டிவிடும் சேது’ வழியாகவே விவேகானந்தரும் வந்தார்.

‘வையை என்னும் பொய்யாக் குலக் கொடியை’ கடலோடு சங்கமம் ஆகவிடாமலே தடுத்து தன்னிடம் உள்ள பெரிய பெரிய கண்மாய்க்கரையிலேயே தக்கவைத்துக் கொள்ளும் தனிப்பெருமையுடைய இராமநாதபுரம் சீமை வறண்ட பிரதேசம் என்பது நாடறிந்த உண்மை. இங்கே வானம் பொய்ப்பதால் மண்ணில் வறட்சி ஏற்படுவது இயல்பு என்றாலும் இப்பகுதி மக்கள் தம் உழைப்பில் மலையாத நம்பிக்கை உடையவர்கள் என்பதை மறுக்க முடியாது. கடலோரப் பகுதிகளில் எல்லாம் பழைய நெய்தல்  நிலப் போராட்ட வாழ்க்கை நீடிக்கிறது என்றாலும் திரைகடலோடித் திரவியம் தேடும் முனைப்பும் முயற்சியும் இவ்வட்டார மக்களுக்கே உரிய தனிச்சிறப்புக்கள். மாவட்டப் பிரிவினைக்கு முற்பட்ட பழைய இராமநாதபுர மாவட்டம் பரப்பளவில் மிகப்பெரியது;  எனினும் அதன் ஆட்சித்தலைநகராகப் பல வசதிகளைக் கருதி மதுரையே நீடித்ததால் இம்மாவட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் பல பாதிப்புக்கள் ஏற்பட்டன. அண்மையில் செய்யப்பட்ட மாவட்டச் சீரமைப்பால், முகவை மாவட்டம், அளவில் சுருங்கி விட்டது; என்றாலும் ஆக்க நலத்தில் போட்டியிட்டு முன்னேறத் துடித்து நிற்கிறது. தலைநகரான இராமநாதபுரத்தில்  பழைமைச் சுவடுகளைத் தாண்டி புதுமைப் பொலிவுகள் தலைதூக்கி வருகின்றன. வாய்ப்புள்ள இடங்களில் தொழில்களைத் தொடங்கும் எண்ணங்கள் மலர்ந்து வருகின்றன.

என்னதான் புதுமைநலன்கள் புகுந்தாலும் சில இடங்களில் பழமைப் பெருமைகள் ஒருபோதும் குன்றிப் போவதில்லை என்பார்கள். உரோமாபுரியைப் போல, எருசலத்தைப் போல, மக்கா நகரைப் போல, இராமேசுவரம் எனும் திருத்தலப் பெருமையால் முகவை மாவட்டம் என்றென்றும் பழமைப் பெருமைகளை, பண்புகளை, நம்பிக்கைகளைப் பேணிக்காக்கும் நினைவரங்கமாகவே திகழும் என்பதை அங்கு சுற்றுலாச் செல்லும் எவரும் ஏற்பர்.

‘காசி – ராமேசுவரம் சாலை’ எனும் வழிநடைப்பாதை காலம்காலமாக இருந்ததை வரலாறு சொல்கிறது. திருச்சி- மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக 1906-இல் இருப்புப்பாதை போடப்பட்டது. ‘இந்தோ-சிலோன் போட் மெயில்’ எனும் ரயில் அக்காலத்தில் மிகமிகப் பிரபலமாக விளங்கியது. இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களாகச் சென்றவர்கள் மருத்துவப் பரிசோதனைக்காகத் தங்க வைக்கப்பட்ட ‘மண்டபம் முகாமும்’ 1914-இல் கட்டப்பட்ட பாம்பன் பாலமும் முக்கியமானவை. 1973-இல் சாலை வழிப்பாலம் ஒன்று கட்டும் திட்டம் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது. இராமேசுவரம் தீவினை இராமநாதபுரம் மாவட்டத்து நிலப்பகுதியுடன் நிரந்தரமாக இணைக்கும் ‘பாம்பன் சாலைப் பாலம்’ 1988-இல் திறந்து வைக்கப்பட்ட பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை பலமடங்கு அதிகரித்து உள்ளது.

இந்த பாம்பன் சாலைப் பாலம் அரியதொரு பொறியியல் சாதனை. ஏற்கனவே உள்ள 12 அடி உயர ரயில் பாலத்தில் வலதுபுரத்தில் கட்டப்பட்டுள்ள இந்தச் சாலைப்பாலத்தின் நீளம் 2 1/2 கிலோமீட்டர்; வாகனங்கள் செல்ல 7.5மீட்டர் அகலப் பாதையும் நடைபாதையாக 1.5 மீட்டர் அகலமும் விடப்பட்டுள்ள, 80 அடி உயரமுள்ள பிரமிப்பூட்டும் அமைப்பு இது. பாலத்தின் கீழே 75 அடி உயரம் கொண்ட சரக்குக் கப்பல்கள் தாராளமாகச் செல்ல முடியும். இதுபோல பாக் ஜலசந்தியையும் மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ‘சேதுக் கால்வாய் திட்டமும்’ நிறைவேறிவிட்டால் முகவை மாவட்டம் முன்னணி மாவட்டம் ஆகிவிடும் கனவு நனவாகும்.

‘மங்கம்மாள் சாலை, மலையெல்லாம் சோலை’ என்பதைப் போல முகவை மாவட்டக் கடற்கரையிலிருந்து இலங்கை வரை எண்ணற்ற கடல் தீவுகளும் பவளத் திட்டுக்களும் உள்ளன. இவற்றுள் ஒன்றான குருசடித் தீவு உயிரியல் ஆராய்ச்சியாளர்க்குச் சிறந்ததொரு களஞ்சியமாகத் திகழ்கிறது. அரிய உயிரின வகைகள் இங்கே ஏராளமாக உள்ளன. இராமேசுவரத்திலிருந்து மண்டபம் வழியாக 20 கிலோமீட்டர் கடற் பயணத்தில் இத்தீவுக்குச் செல்ல முடியும். பயணவழியில் எல்லாம் பவளப்பாறைகளைக் கண்டு வியக்கலாம். கர்ண பரம்பரையாகக் கேட்டு வந்த ‘பவளக்கொடி’ முதலான நாட்டுப்புற இலக்கியங்களுக்குப் பின்னணி கூட்டிய வரலாற்று நிகழ்ச்சிகளை எண்ணி எண்ணி மகிழலாம்.

புண்ணிய பாரதத்தில் போற்றி வழிபடும் தலங்களில் பிரசித்தி பெற்ற இரண்டு – காசியும், இராமேசுவரமும். இவ்விரண்டனுள் முன்னதை முறையாக வழிபட்டவர் பின்னதையும் வழிபட வேண்டும் என்பது மரபும் நியதியும் ஆகும். வடநாட்டு மக்களைத் தெற்கே வரவழைத்து, தென்னாட்டவரை வடபுலம் ஏக வைக்கும் கட்டாயக் கடமையாக்கும் கலாச்சார உறவுக்கும் சைவ – வைணவ சமய ஒற்றுமைக்கு வழிகாட்டும் தார்மீக நெறிக்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் காலமெல்லாம் ஆக்கம் தருவதாக இராமேசுவரம் தீவு விளங்கி வருகிறது.

இராமேசுவரம் தீவு திருமாலின் திருக்கரத்தில் உள்ள சங்கின் வடிவம் போல அமைந்துள்ள அருமை வியக்கத்தக்கது. இதைச் சூழ்ந்துள்ள கடலில் தூய்மையான வெண்பவளமும் சங்கும் ஏராளமாகக் கிடைக்கின்றன. இத்தீவின் கிழக்கோரமாக இராமநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இலங்கைப் போருக்கு முன்னரோ பின்னரோ இராமபிரானால் எழுப்பப்பட்ட பெருமையுடையது என்பார்கள்.

“தேவியை வலிய தென்னிலங்கைத் தசமுகன்

 பூவியலும்முடி பொன்றுவித்த பழபோய் அற

 ஏவியலும் சிலை அண்ணல் செய்த இராமேசுவரம்”

எனத் திருஞான சம்பந்தர் தம் திருப்பதிகத்தில் இதைப் பாடியுள்ளார்.

“செங்கண்மால் செய்த கோயில் திருவிராமேச்சு வரம்”9

என்று திருநாவுக்கரசர் இதனை உறுதி செய்துள்ளார்.

இராமாயணப் போருக்குப் பின்னர் இராமபிரான், சிவலிங்கப் பிரதிட்டைக்காக ஒரு நேரம் குறிப்பிட்டு அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொணருமாறு அனுப்பினார். அனுமன் நியமித்த நேரத்திற்குள் வாராமை யால், சீதை, கடற்கரை மணலையே சிவலிங்கமாக்கிக் கொடுக்க இராமபிரான் அதனைப் பிரதிட்டை செய்து விட்டார். காலம் கடந்து வந்த அனுமன் இதுகண்டு சினந்து, பிரதிட்டை செய்த சிவலிங்கத்தைத் தனது வாலால் கட்டிப் பெயர்த்தெடுக்க முற்பட்டான். இராமபிரான், அனுமனைச் சமாதானப்படுத்தி, அவன் கொணர்ந்த சிவலிங்கத்தை, இராமலிங்கப் பிரதிட்டையின் முன்னால் வைத்து அதற்கே முதற்பூசை நடைபெற வேண்டும் எனக் கட்டளையிட்டார். தம் தொண்டனுக்கு, அவரது உழைப்புக்கு உரிய மரியாதையினைச் செய்தார். இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இராமநாதப் பெருமானுக்கு நாள்தோறும் கங்கையிலிருந்து கொண்டுவரப்படும் தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படுவது அரியதொரு விசேடம்.

இந்த இராமேசுவரத் தலம் மூர்த்தி விசேடம், தல விசேடம், தீர்த்த விசேடம் எனும் மூவகைச் சிறப்புக்களையும் ஒருசேரப் பெற்றிருப்பினும் தீர்த்த விசேடம் மிகச்சிறப்பாய் போற்றப்படுகிறது. இங்கே திருக்கோயிலின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. திருக்கோயிலின் கிழக்கே உள்ள கடல் அக்கினி தீர்த்தம் எனப்பெறும் இதில் நீராடிய பின்னரே திருக்கோயில் தீர்த்தங்களுக்குச் செல்லவேண்டும். பிற கடல் தீர்த்தங்களில் நீராடிட, திதி, வார, நட்சத்திர நியமங்கள் பல உண்டு. ஆனால் இராமேசுவரத் தீர்த்தத்தில் நீராட நியமம் ஏதும் இல்லை. இராமநாதசுவாமி கோவிலின் பிரகாரம் 4000 தூண்களைக் கொண்டது; மூன்றாவது பிரகாரம் உலகிலேயே மிக நீளமானது எனும் பெருமைக்கு உரியது.

இத்திருக்கோயிலில் இருந்து இரண்டு கி.மீ. தூத்தில் உள்ள கந்தமாதனகிரி எனும் மணல்மேட்டில் இராம பிரானுடைய பாதங்கள் இரண்டும் பிரதிட்டை செய்யப் பட்டுள்ளன. தெற்கே 16 கி.மீ. தொலைவில் தனுஷ்கோடி உள்ளது. 1964-இல் வீசிய கொடிய புயலால் முற்றிலும் அழிந்து போன இந்தத் தொன்மையிடம் ‘இன்னும் அழித்துவிடாதே’ எனக் கடலை இறைஞ்சி நிற்கும் இடம் போலக் காட்சி தருகிறது.

முகவை மாவட்டத்திற்குச் ‘சேது நாடு’ எனப் பெயர் உண்டு. சேது என்பது வேதாரண்யம் கோடியக்கரையில் தொடங்கி தனுஷ்கோடியில் முடிகிறது. இராமர் அயோத்தி சென்று முடி சூடிய பிறகு, இராமேசுவரத்திற்கு மூன்றாம் முறை வழிபட வந்தபோது இவற்றிற்கு இடையே உள்ள 64 தீர்த்தங்களில் நீராடி வந்தமையால் இவை சேதுமகிமை பேசின. இவற்றுள் இப்போது 13 தான் உள்ளன. ‘சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ எனப் பாரதி பாடியது இந்தத் தீர்த்த வீதியைத் தானோ! என்று நம்மை எண்ண வைக்கும் வகையில் வரிசையாக இவை அமைந்துள்ளன. அரசு கருதியுள்ள கீழைக்கடற்கரை நெடுஞ்சாலை இவ்வழியாகத்தான் போடப்படும் என்கிறார்கள்.

திருப்புல்லணை எனும் புகழ்பெற்ற வைணவத்தலம், தேவிப்பட்டணம் எனும் நவக்கிரகத் தீர்த்த வழிபாட்டிடம், பாம்பனில் வையிரவத்தீர்த்தம், இராமேசுவரத்தில் இராமலட்சுமணத் தீர்த்தம் தனுஷ்கோடியில் சோபன தீர்த்தம், உத்தரகோச மங்கையில் நடராசர் திருவடி வணங்கி முடிப்பது இராமேசுவர யாத்திரையின் நிறைவுநலம் என்பார்கள்.

முகவை மாவட்டத்தில் தொண்டி பழம் பெருமை பேசும் பாண்டி நாட்டுக் கடற்கரை என்றால் கீழக்கரை புதுமை நலம்பாடும் எழில்மிகு பேரூர். திரைகடலோடித் திரவியம் தேடுவோர் வாழ்க்கை வனப்புக்களையும் போராட்டங்களையும் இங்கே ஒரே வார்ப்பாகக் காணலாம்.

முகவை மாவட்டம் பல சமய நெறியினரும் சமரச உணர்வோடு வாழும் சகோதர மாவட்டம் எனலாம். மாமன், மச்சான் என உறவுப்பெயர் சொல்லிச் சமூக நலம் பேணும் ஒப்புரவு மாவட்டம் எனலாம். முகவை மாவட்டம் வறண்ட பிரதேசம் என இங்கிருந்தபடியே எண்ணிவிடாமல், ஒருதடவை பயணத் திட்டமிட்டுப் புறப்படுங்கள். அங்கே நமது பாரம்பரியப் பண்பாட்டுக் கோலங்களையும், புதிய வளர்ச்சிக்கான உயிரோட்ட நாளங்களையும் கண்ணாரக் கண்டு மகிழலாம், இராமேசுவரத்தில் தீர்த்தமாடி வருவதோடு இந்த மண்ணின் எதிர்கால வளத்தில் தீர்க்கமான நம்பிக்கையோடும் திரும்பலாம்.

 

தெருவெல்லாம் தமிழிசை

தெருவெல்லாம் தமிழிசை

செழிக்கச் செய்வோம்!’

 

ஆண்டுதோறும் தமிழிசை இயக்க மாநாடுகள் சென்னை, மதுரை முதலிய தமிழ்நாட்டு நகரங்களில் நடைபெறுகின்றன. தமிழிசை வல்லுநர்களும், அறிஞர்களும், வள்ளல்களும், கலைக்காவலர்களும் இவ்விழாக்களில் பங்கேற்க முறைப்படி கூடுகின்றனர். விழா நிகழ்வுறும் நாட்களில் எல்லாம் தமிழிசை முழக்கங்களும், தமிழ்ப்பண் ஆராய்ச்சி விளக்கங்களும் கேட்கின்றன. பத்துப் பதினைந்து நாட்கள் கோலாகல விழாவுடன் திரை தொங்க விடப்படுகிறது. அடுத்த ஆண்டு மறுபடியும் தமிழிசை அரங்கு கூடும் என அறிவிக்கப் படுகிறது. இம்மரபு போற்றுதற்கு உரியது, தமிழிசை இயக்கத்தை வளர்க்கவும், பரப்பவும் இசை மாநாடுகள் தேவை. எனினும் இடைவிடாத தொடர்ந்த நல்முயற்சிகளும் இசை வளர்ச்சிக்குத் தேவை.

தமிழிசை இயக்கம் தமிழ்நாட்டில் ஒரு மறுமலர்ச்சி இயக்கமாக வடிவெடுத்து ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் ஆகின்றன; என்றாலும் தமிழிசை இயக்கம் என்பது இந்த மண்ணுக்குப் புதியதில்லை. சங்கப் பாடல்களில் (பரிபாடல், கலித்தொகை) உள்ள இசை நலம், நீதிநூலாகிய திருக்குறளில் இழையோடி நிற்கும் இசை வளம், சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களில் புலப்படும் கலைச்செல்வம் இவையெல்லாம் ஒருபுறமிருக்க, பக்தி இயக்கத்தால் பரிணமித்துப் பரவிய இசை வெள்ளத்தை எவரே மறக்க முடியும்? ‘ஏழிசையாய் இசைப்பயனாய்’ வாழ்ந்த சுந்தரரையும், ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய’ ஞானசம்பந்தரையும் ‘தமிழோடு இசைபாடல் மறந்தறியாத’ திருநாவுக்கரசரையும், ஆழ்வார்களையும் தமிழகம் மறக்க இயலுமா? தமிழும், தமிழகமும் மறக்க முடியாது.

பக்தி இயக்கம் பாத்தி கட்டி வளர்த்த இத்தமிழிசை மரபினை அதற்குப் பின்னர் நுழைந்த வேற்றவர் படையெடுப்பும், மாற்றவர் ஆதிக்கமும் பல நூற்றாண்டுகள் மறைத்துப் புதைத்து வைக்க முற்பட்டன அவ்வளவுதான். அவற்றை முற்றிலும் ஒழித்துவிட அம்மாற்றுக் கலாச்சாரங் களால் இயலவில்லை. காலந்தோறும் பரிவு ஞாயிற்றொளி பட்டபோதெல்லாம் இருள் நீங்கி நம் தமிழிசை நாதங்கள், புதுக்குரலாய். புத்திசையாய் எதிரொலித்தே வந்தன. சென்ற நூற்றாண்டில் கூட முத்துத் தாண்டவர், கோபாலகிருஷ்ண பாரதி, அருணாசலக்கவி முதலியோரின் தமிழிசை வண்ணங்கள் போற்றப்பட்டே வந்தன.

ஆனால் அவை இசை அரங்குகளில் எல்லாம் ஆக்கம் பெற்றுப் பொலியவில்லை. காரணம் பல நூற்றாண்டு களாகத் தமிழகத்தில் படர்ந்த, பற்றிய தெலுங்கு, இந்துஸ்தானி, மராட்டியக்கலை வடிவங்கள் ஆட்சியாலும், பிறவகை மாட்சியாலும் பெற்றிருந்த ஆதிக்கங்கள் தமிழிசையை வளர விடாமல் தடுத்து வந்தன. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், வேத நாயகம் பிள்ளை முதலியோரின் முயற்சிகள் பாராட்டப்பட்ட அளவுக்கு, பின்பற்றி வளர்க்கப்படும் நிலை உருவாக்கப்படவில்லை. ஆங்கில ஆட்சிக் காலத்திலும் தமிழிசை உணர்வு சவலைப்பிள்ளை போலவே நலிந்திருக்கிறது.

1927-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் கர்நாடக இசையரங்கிற்குச் சிறப்புத் தரப்பட்டபோது தமிழிசையின் தரமும் திறமும் புலப்பட வழிபிறந்தது. தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் சுயமரியாதை இயக்க மாநாட்டை ஈரோட்டில் (1930) கூட்டியபோது சில சாதிக்காரர்களால் தமிழிசை படும் அல்லல்களைச் சுட்டிக்காட்டித் தமிழிசையை வளர்ப்பதில் உணர்வூட்ட முடிந்தது. ஆனால் தமிழிசையை ஓர் இயக்கமாக்கி வளர்க்க, தக்கதொரு தலைமகனை எதிர்நோக்கித் தமிழகம் காத்திருந்தது.

அத்தலைமகனாகச் செட்டிநாட்டரசர், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் வந்தார். தமிழிசைக் காவலராகப் பொறுப்பேற்றார். சிதம்பரத்தில் தாம் நிறுவிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிசைக் கல்லூரியையும் நிறுவினார். நல்ல தமிழிசைப் பாடல்களைப் புனைவோருக்குப் பரிசுகளை அறிவித்தார். தேவாரத் திருமுறைகளைப் பண்முறைப்படி பாடிட ஆராய்ச்சி அரங்குகளுக்கு ஆக்கம் தந்தார். சென்னை, தேவகோட்டை முதலிய இடங்களில் தமிழிசை மாநாடுகளைக் கூட்டித் தாமே தலைமையேற்று நடத்தி ஒளிவிளக்காகத் திகழ்ந்தார். அண்ணாமலையரசர் அவர்கள் புரவலராகப் பொறுப்பேற்றதும் தமிழிசை இயக்கம் களைகட்டி வளரத் தொடங்கியது. நாட்டில் பரவிய தேசிய இயக்கமும், மொழி இனஉணர்வும் இதற்கு வலிவூட்டின. பல்வேறு பெரியார்கள், கட்சி, சமய வேறுபாடுகளை விடுத்து தமிழிசைக்குத் தக்க தூண்களாக ஊன்றி நிற்க முன் வந்தனர். சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார், ராஜாஜி, கல்கி, டி.கே.சி., நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, பாரதிதாசன், தமிழவேள் பி.டி.ராஜன், தமிழ்த்தாத்தா உ.வே.சா. அறிஞர்அண்ணா ஆகியோர் தமிழிசை இயக்கத்தை உரமூட்டி வளர்த்த பெரியோரில் சிலராவர். அண்ணாமலையரசரின் அருந்தவப் புதல்வர் ராஜா சர் முத்தையாச் செட்டியார் அவர்களும், அவர்தம் புதல்வர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர். திரு.இராமசாமிச்செட்டியார் அவர்களும் இச்சீரிய பணியைத் தலைமேற் கொண்டு தமிழிசை இயக்கத்தைப் பேணி வளர்த்துள்ளார்கள்.

நம் நாடு விடுதலை பெற்று குடியாட்சி அமைந்த பின்னர் அரசியல் விருப்பு வெறுப்புக்களில் ஆட்சியைப் பிடிக்கும் கலை, நிலைகளில் ஈடுபாடு கொண்டுள்ள அளவுக்கு இதரக் கலைத் துறைகளை வளர்க்கும் நாட்டம், ஊட்டம் பெறவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். தமிழிசை வளர்ப்பதில் அரசியல் இலாபம் இருந்தால் ஆகா! ஓகோ!! என அணி வகுக்க முற்படுவார்கள். அவ்வாறு அரசியல் ஆதாயம் பெற முடியாமையால் தமிழிசை இயக்கம் பாட நூலோடு, பண்முறை ஆராய்ச்சியோடு, மாநாட்டோடு, மலர் வெளியீட்டோடு நின்று விடுகிறது. இது நாள் வரை இப்படி இருந்தது போதும், இனிமேல் தமிழிசை இயக்கத்தின் எல்லைகள் விரிய வேண்டும்.

மறுமலர்ச்சி இயக்கம் என்பது பல கூறுகளால் அமைந்தது. தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் – இன, மொழி கலாச்சாரக் கூறுகளைப் போல – இசையையும் உள்ளடக்கியது என்பது எவரும் ஒப்புவது. ‘இசைக்கு மொழி முக்கியமா?’ எனும் பழைய சர்ச்சைகளுக்கெல்லாம் இனிச் செவி கொடாது தமிழிசை இயக்கத்தை மக்கள் இயக்கமாக, பாமரர் செயல் இயக்கமாக நாம் மாற்றிட வேண்டும். நாட்டுப்புறக் கலை வடிவங்களான காவடி, பள்ளு, கும்மி முதலியவற்றைத் திரைப்படத்தினர் மாசுபடுத்திவிடாமல் அவற்றையெல்லாம் தமிழிசைச் செல்வங்களாக, மரபுடைய இசைச்செல்வங்களாக மாற்றிட வேண்டும்.

மேலை நாடுகளில் குழு இசை எல்லா நிறுவனங் களிலும் இடம்பெறுவது போல, நம் கல்வி நிறுவனங்களிலும் பல கலை அரங்குகளிலும் நம் செந்தமிழிசையே முதன்மை பெற வழி திறக்க வேண்டும். தொழிலாளர் அணி வகுப்பு, இளைஞர் இயக்கம், சுற்றுலாப் பயணம், போர்ப் பரணி முதலிய துறைதோறும் தமிழ் இசையே எழவேண்டும். தொடக்கப் பள்ளி தொட்டு, மேனிலைப்பள்ளி வரை இசைப் பாடத்தை, பாடத் திட்டத்தோடு இணைக்க வேண்டும்.

பயிற்சி பெற்ற ஆசிரியர்களை இங்கெல்லாம் நியமித்துக் கொள்ள வேண்டும்.

சென்னை அண்ணாமலை மன்றம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை ராஜா முத்தையா மன்றம் முதலிய மையங்களில் தமிழிசை ஆசிரியருக்குத் தகைசால் பயிற்சிகளைத் தொடர்ந்து நல்கும் திட்டங்களைத் தீட்ட வேண்டும். தமிழிசையில் நாட்டமுள்ள மாணவர்களுக்கு ஊக்கமும், வாய்ப்பும் நல்க வேண்டும். வெளிநாட்டார் நாடிப் போற்றும் வகையில் நம் தமிழிசை தேனார் தமிழிசையாய்ச் சிறக்க வேண்டும்.

தாய்மொழியாகத் தமிழ் மொழியில் உள்ளத்தில் மலர்ந்து தெளிவாக, சிறந்த கருத்துருவம் பெற்ற இன்பக்கடலாகத் தமிழிசை விளங்கட்டும். வானம் போல, கடல் போல விரிந்தது இசை உலகம். எனினும் நமக்கு இசைவான வகை துறைகளில் அதில் ஆதிக்கம் கொள்ளும் வகையில் நமக்கே உரிய எல்லைகளை, உரிமை எல்லைகளை விரியச் செய்வது காலத்தின் தேவை எனக் கருதுவோம். தெருவெல்லாம் தமிழிசை முழக்கம் செழிக்கச் செய்வோம்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

     திண்ணியர் ஆகப் பெறின்”           (666)