கென்னடி புகழ் பேசும் வாஷிங்டன் !

Image result for john f kennedyகென்னடி புகழ் பேசும்

வாஷிங்டன் டி.சி. நகருக்குச் சென்றோம். அங்கே உள்ள கென்னடி விமான நிலையத்தின் அழகும் வெள்ளை மாளிகை வனப்பும் என் நெஞ்சில் நிறைந்தன. ஜனாதிபதி அமரர் கென்னடி நினைவுச் சின்னம் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தோரை நினைவுகூரும் நடுகல்லாக விளங்குகிறது.

என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர்பலர் என்ஐ

     முன்நின்று கல்நின் றவர்”       (771)

எனும் திருக்குறள் வரிகளே அங்கு என் நினைவில் படர்ந்தன.

புகழ் வளர்ந்து நடுகல் ஆனோர்க்கும் அது பொருந்தும் சிறப்பினை உணர்ந்தேன். அங்கு உள்ள அணையாச் சுடர் காண்போர் உணர்விலும் தியாகப் பேரொளியைப் பரவச் செய்வதை அனுபவித்தேன். நினைவுச் சின்னங்களை நிறுவுவது போல அங்கே அவற்றை நேர்த்தியாகப் பராமரித்து மரியாதையும் செய்கின்றனர். இதையும் நம் நாட்டு நடப்போடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.

இங்கே வைக்கப்படும் நினைவுச் சின்னங்கள் நாளடைவில் மறக்கப்பட்டுப் பறவைகளாலும் விளம்பரங் களாலும் அசிங்கப்படுத்தப்படும் கொடுமை மாறும் நாள் எந்த நாளோ எனப் பொருமினேன்.

எதிர்காலத்தை உணர்த்தும் விஞ்ஞானக் கூடம்

“பொறிஇன்மை யார்க்கும் பழியன்று; அறிவுஅறிந்து

     ஆள்வினை இன்மை பழி”      (618)

எனும் வள்ளுவம் அமெரிக்க நாட்டினர்க்கு எப்படியோ தெரிந்திருக்க வேண்டும். அனைத்துத் துறையிலும் அவர்கள் ஆக்கிவரும் ஆள்வினையுடைமை அறிவியலில் கொடிகட்டிப் பறக்கிறது. நிலா உலகில் முதல் மனிதனை நிறுத்திடும் அளவுக்கு விண்முட்டும் புகழாகியுள்ளது.

வாஷிங்டனில் உள்ள அறிவியல் கலைக்கூடத்தை அற்புதம் என்றே சொல்ல வேண்டும். ராக்கெட்டுப் பயண வளர்ச்சி, விண்வெளி ஓடச் சாதனைகள், இது வரை சாதித்தவை, இனி அண்டவெளிக் கிரகங்களை ஊடுருவிப் போகும் முயற்சிகள் என இவற்றையெல்லாம் பார்த்தபோது விஞ்ஞான முன்னேற்றத்தையும் எதிர்காலப் போக்கையும் எப்படி வருணிப்பது என்றே எனக்குப் புரியவில்லை.

வாஷிங்டனை இரண்டே நாளில் முடித்துக் கொண்டு ஆர்லாண்டோ புறப்பட்டு வந்தோம். உலகப் புகழ்பெற்ற டிஸ்னி உலகம்  இங்கே தான் உள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்திழுக்கும் பிரம்மாண்டமான காட்சிகள் அங்கு வருடம் முழுவதும் திருவிழாக் கோலம் பூணச் செய்கின்றன. இதற்கு இணையானதோர் அமைப்பு உலகில் வேறெங்கிலும் இல்லை எனச் சொல்ல வைக்கின்றன.

அமெரிக்கா முழுவதையும் பார்த்து விட்டதொரு பிரமை ஏற்படும் வண்ணம் 360 டிகிரி கோணத் திரையரங்கில் அமெரிக்கா முழுவதையும் காட்ட நம்மைக் கூட்டிச் செல்கிறார்கள்.

சறுக்கு ரயில் விளையாட்டு

ரோலர்கோஸ்டர் எனும் பயங்கர ராட்சதச் சறுக்கு ரயில் விளையாட்டு அங்கே மிகவும் பிரபலம். ஒரு நொடியில் விர் என்று கோபுர உச்சிக்கு அந்த ரயில் விரைவதும் பின்னர் அது சரேலென மரணப் பள்ளத்தை நோக்கிக் கீழிறங்குவதும் மயிர்க்கூச்செரிக்கும் அனுபவங்கள்! அதில் ஒரு முறை ஏறிவிட்டுக் கீழே இறங்கி மிகத் துணிச்சலுடைய முரட்டு ஆசாமி என்ன சொன்னார் தெரியுமா? “இனி செத்தாலும் இதில் ஏற மாட்டேன்” என்றார். என்றாலும் துணிச்சலோடு அதில் ஏறினோம். ஓடத்தொடங்கியதும் உடம்பின் குருதி உறைந்து போவது போல, எலும்பு களெல்லாம் நொறுங்கிவிடுவது போலப் பய உணர்வு கவ்வியது. கீழே இறங்கியபின் தான் ‘அப்பாடா’ என்று அமைதி பெற்றோம்.

எதிர்காலக் கதை

அங்குள்ள எப்காட் சென்டர் விஞ்ஞான, தொழில் நுட்ப அற்புதங்களைக் காட்டுகிறது. 21-ஆம் நூற்றாண்டை நோக்கி உலகம் முன்னேறும் எதிர்காலக்கதை ஒரு வரலாறு போல அங்கே பல நிலைகளில் பல அரங்குகளில் கோடிகோடிச் செலவில் காட்டப்படுகிறது. இப்படி நம்நாட்டிலும் ஆங்காங்கு அறிவியல் நகரங்களை உருவாக்கக் கூடாதா எனும் ஏக்கமே மேலிட்டது.

அங்குள்ள கடல் உலகம்  உலகில் உள்ள அத்தனை மீன் வகைகளையும் காட்டுகிறது. இத்தனையும் பார்க்க ஒரு வாரமாவது வேண்டும்; நாங்கள் அவசரக் கோலத்தில் கிளம்பினோம்.

இந்த எப்காட் உணவுப் பிரிவில் காரைக்குடி நண்பர் ஒருவரைக் கண்டேன். என்னை நலம் விசாரித்துக் கொண்டே அவர் ஓடிஓடிப் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தொலைவில் செல்லச்செல்ல ஏற்படும் அன்பின் நெருக்கத்தை உணர்ந்திட முடிந்தது.

‘மியாமி’ நகரம்

ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு இப்போது எங்கள் பயணம் எல்லாம் விமானத்தில்தான், 3000 மைல் தாண்டி உலகிலேயே அழகிய கடற்கரை நகரான மியாமி போய்ச் சேர்ந்தோம்.

வாழ்க்கையை, பொழுதுபோக்கை, எப்படி ரசிப்பது என்பதை அங்கே காணமுடிந்தது. ‘சிலருக்கென ஒதுக்கப்பட்ட’ இடங்களுக்கெல்லாம் நாங்கள் போகவில்லை! நாலுபேர் கூசாமல் பார்க்கக்கூடிய கொள்ளை அழகுகளை ரசித்துவிட்டு ஓட்டலுக்குத் திரும்பினோம்.

அடுத்து நாங்கள் தரை இறங்கிய இடம், லெஸ்வேகாஸ் (லிணீsஸ்மீரீணீs). உலகிலேயே மிகப்பெரிய சூதாட்ட நகரம் இது என்பார்கள். எங்கு பார்த்தாலும் காசினோ என்னும் பொழுதுபோக்கும் உல்லாசப் பணவிரயக் கூடங்கள்! பணம் அங்கே தண்ணீராக ஓடுகிறது; தடம் புரண்டு பாய்கிறது!

‘ஒன்றெய்தி நூறிழக்கும்’ சூதர்களும் கெட்டிக் காரர்களும் அங்கே ஏராளம், ஏராளம்! விமானத்தளத்தில் இருந்து ஊரில் எங்கே திரும்பிப் பார்த்தாலும் பந்தயச் சூதாட்டம்… பல்வகைச் சூதாட்டம். தம் பணம் பறிபோவதைப் பற்றி அங்கு யாரும் கவலைப்படுவதில்லை. சம்பாதித்த காசைச் செலவழிக்க ஒரு வகையான மகிழ்ச்சியோடு ஷிறிலிகிஷிபி எனும் கண்கவர் காட்சிகளுக்குப் போய் விடுகிறார்கள். இவற்றைத் தொலைவில் இருந்து பார்த்த திருப்தியோடு நாங்கள் ஓட்டலுக்குத் திரும்பி விடுவோம்.

“வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதூஉம்

     தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று”        (931)

எனும் சூது அதிகாரக் குறளைத் தெரிந்திருந்தாலும் அவர்கள் அதைப் பின்பற்றமாட்டார்கள் என உணர முடிந்தது! அவ்வளவு மயக்க உலகம் அது.

அற்புத உலகம்

அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் ) நகரம் பறந்தோம். அங்கேதான் டிஸ்னியின் மற்றும் ஒரு அற்புத உலகம் உள்ளது. அதை மீண்டும் விவரிப்பதைவிட நேஷனல் தியேட்டர் உள்ள மற்றொரு ஹாலிவுட் ‘நகரத்தைப்’பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் விவரிக்கலாம். திருக்குறளைப் பற்றிப் பேசவே போதிய அவகாசம் கிட்டாத சூழலில் ஹாலிவுட் போக நேரம் எங்கே கிட்டும் என யோசித்தோம். எனினும் அன்பர்கள் விடவில்லை. ஏதோ போனோம்! வந்தோம்!

பின்னர் சான்பிரான்சிஸ்கோ நகருக்குப் பறந்தோம். அங்குள்ள சீன டவுனைக் (சிலீவீஸீணீ ஜிஷீஷ்ஸீ) கண்டு வியந்தோம். “எவ்வது உறைவது உலகம்” எனும் திருக்குறள் என் நினைவில் படர்ந்தது. சீனர்கள் உலகத் தலைமை பெற்று வரக் காரணம் எது என்பது புரிந்தது.

7196total visits,3visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>