‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்!’

‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்!’

Image result for shadow jump

உலகத்திற்குத் தமிழர்களை அடையாளம் காட்டி வான்புகழ் கொள்ள வைத்தவை, தமிழர்களின் நாகரிகமும், பண்பாடும், பழைமையான இலக்கியங்களும், குடும்பம் என்ற கட்டமைப்பும் ஆகும். தமிழ்ச் சமுதாயத்தின் பெருமைக்கும் ஆக்கத்துக்கும் நிலைபேற்றுக்கும் வழிகாட்டி வருவது தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளும் விழாக்களும். அவ்விழாக் காலங்களில் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்வதன் மூலம் சகோதரத்துவத்தையும், நட்பையும், அன்பையும் விரிவாக்கிக் கொள்கின்றனர்; காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களைப் புதுப்பித்துக் கொண்டு புதுமைச் சிந்தனை களை வழங்கி அன்பு நெறியாலும் அறிவு நெறியாலும் வாழ்வை நல்வழிப்படுத்தும் ஆற்றலைப் பெறுகின்றனர்.

ஒவ்வொரு புத்தாண்டுப் பிறப்பின் போதும் தமிழர்கள் தங்களை மட்டுமல்லாது தாங்கள் பயன்படுத்தும் பொருட் களையும் தூய்மைப்படுத்திக் கொள்கின்றனர்; தங்களின் உயிர் வாழ்விற்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு நல்கி, வளர்த்து வரும் இயற்கைக்கும் அன்புடன் வளர்த்து வரும் விலங்குகளுக்கும் நன்றி பாராட்டி மகிழ்கின்றனர்.

புத்தாண்டு தொடங்கும் முதல் நாளே தமிழர்கள் பழைமைகளைக் கழிக்கின்ற விழாவாக எடுத்து வாழ்வினைப் புதுமையாக்கிக் கொள்கின்றனர்.

புறத்தூய்மையும், அகத்தூய்மையும் கொண்டு இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற இன்பநிலையை அடைகின்றனர்.

பேரலைகள் சுழன்றடிக்கும் பெருங்கடலில் பயணம் செய்யும் படகோட்டிகள் கை சலித்து மனம் உழன்று வருந்திய போது இருளில் ஒளி காட்டும் கலங்கரை விளக்கு கண்டு கரையேறுவர். அதுபோன்று போராட்ட உலகில் மனம் சலித்துத் துன்புற்று வாழும் மனிதர்களைக் கரை சேர்க்கும் கலங்கரை விளக்கமாகத் திருக்குறள் விளங்குவது போல பண்டிகைகளும், விழாக்களும் மிளிர்கின்றன.

“புறம்தூய்மை நீரான் அமையும்; அகம்தூய்மை

 வாய்மையால் காணப் படும்”        (298)

எனும் வள்ளுவத்தின் வழியில் இந்தப் புத்தாண்டினைக் காமம், குரோதம், மன வேறுபாடு, மத வேறுபாடு போன்ற அறியாமையாகிய இருளிலிருந்து விடுபட்டு உண்மைப் பேரொளியைக் காணுகின்ற ஆண்டாகக் கொள்வோம்.

இப்புத்தாண்டு ஓர் அற்புத ஆண்டாகப் பிறக்கின்றது. 1.1.11 என்ற முறையில் எல்லாவற்றிலும் முதன்மை பெறப் போகிற ஆண்டாக மலர்கிறது.

பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இவ்வாறு நிகழும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இவ்வாண்டில் ஏழ்மை, பஞ்சம், பிணி இவைகளை நீக்கி வேளாண்மையிலும், தொழில்துறையிலும், அறிவியல் ஆற்றலிலும், ஆக்க சக்தி களிலும், பொருளாதாரத்திலும் முதன்மை பெற்று விளங்குவோம்.

நாம் வாழும் காலம் அறிவியல் உலகின் எழுச்சி, இணைய மலர்ச்சி, அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவுடையார் ஆவது அறிவார் என்பன மெய்ப்பிக்கப் பட்ட காலம். எது நிலைத்தது என்றால் நிலையாமை தான் நிலைத்தது, எது மாற்றம் இல்லாதது என்றால் மாற்றம் தான் மாற்றம் இல்லாதது. ஆதலால் நில்லாத உலகின் மாற்றத்திற்கு ஏற்ப, போராட்ட உலகத்திற்கு ஏற்ப நம்மை நாம் தகுந்தபடி மாற்றிக் கொண்டால் தான் நிலைத்து நின்று வெற்றி பெற முடியும்.

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

     அவ்வது உறைவது அறிவு”           (426)

என்பது வள்ளுவம்.

காலத்திற்கு ஏற்றபடி அறிவியல் உலகின் போக்கை ஆராய்ந்து சூழலுக்கு ஏற்ப கல்வியும், அறிவும் பெற்று உடல் உழைப்பாலும் முயற்சியாலும் விழுமிய நிலைபெற்று உயர வேண்டும். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் கனவு 2020 ஆண்டில் நாம் வல்லரசு ஆவோம் என்பது.

அக்கனவு முதன்மை பெற்று மலரும் இப்புத்தாண்டில் தமிழர் வாழ்வில் நனவாக வேண்டும்.

“ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா!

     உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!

     ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்

     உதய ஞாயிறு ஒப்பவே வா வா வா!”

என்ற பாரதியின் கவிதை வரிகளைப் படிக்கும்போது நமக்கு ஒரு புத்துணர்ச்சியும், புதுத்தெம்பும், பழமை இருளில் இருந்து புதிய வெளிச்சத்திற்கு வந்தது போல ஓர் உணர்வும் எழுகிறது.

மொட்டவிழ்க்கும் மலர்களிலும், கொட்டுகின்ற அருவி யிலும், தீண்டிச்செல்லும் தென்றலிலும் மனத்திற்குப் பொலிவையும் புதிய அழகையும் அமைதியையும் காண் கிறோம். அதே நேரத்தில் கடல்களின் சீற்றமும், எரிமலை வெடிப்பும், சூறாவளிக் காற்றும் மனத்திற்கு துன்பத்தைத் தந்து அமைதியைக் கெடுக்கின்றன. இது இயற்கையின் நியதி. அதுபோல வாழ்க்கை என்பதும் போராட்டம் நிறைந்தது. அதில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. அதில் வெற்றி களையும், தோல்விகளையும் மாறி மாறிச் சந்தித்துள்ளோம். இருவித அனுபவசாலிகள் நம்முள் வாழ்ந்து வருகிறார்கள். எப்படி இன்பத்தையும், வெற்றியையும் ஏற்றுக்கொள் கிறோமோ அதே போல் துன்பத்தையும் தோல்வியையும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வந்து விட்டால் மேலும் மேலும் வாழ்க்கையில் உற்சாகம் உண்டாகும்.

முதல்நாள் பட்டாபிஷேகம், மறுநாள் கானகம் செல்ல வேண்டிய நிலை. அப்பொழுது இராம பிரானின் மனநிலை எப்படி இருந்தது என்பதைச் சொல்ல வந்த கம்பர் “அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா” என்பார். அதுபோல் இன்பம் வரும் போதும், துன்பம் வரும் போதும் ஒரே நிலையில் முகமலர்ச்சியோடு இருக்கும் தன்மையினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நம் எண்ணங்கள் செயல் வடிவமாக மாற்றம் பெறுகின்றன. நாம் எண்ணாத எந்தச் செயலும் செயலாக உருப்பெறுவது இல்லை. எண்ணம் தான் நம்பிக்கையை வளர்க்கிறது. நம்பிக்கையே வாழ்வின் அடித்தளமாக விளங்குகிறது.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

 திண்ணியர் ஆகப் பெறின்”          (666)

என்பார் திருவள்ளுவர்.

‘நீ உன்னை எவ்வாறு எண்ணுகிறாயோ அவ்வாறே மாற்றம் பெறுகிறாய். நீ உன்னை வலிமை படைத்தவனாக எண்ணினால் வலிமை பெற்றவனாக மாறுகிறாய்.’

நம் மனதில் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையில் நேர்முகச் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டோம் என்றால் நமது பழைய எதிர்மறைச் சிந்தனைகள் மறைந்து  இன்று புதிதாய்ப் பிறந்தது போன்ற மாபெரும் புதிய சக்தி பிறக்கும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கனவு இருக்கும். அது நாளை நடக்க இருப்பதை இன்றே மனதில் காணும் காட்சி. அந்தக் கனவை நனவாக்க எடுத்துக் கொள்ளும் முயற்சியின் முடிவே வெற்றி. அதுவே இலக்கு. அதுவே குறிக்கோள். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத தோணி போல திசைமாறிப் போய்விடும். சென்றடைய வேண்டிய இலக்கினை அடைய முடியாது.

“பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதையர்தம்

     மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவோடு மூப்புவந்து

     கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்”

என வருந்துவார் அப்பர் சுவாமிகள்.

நமக்குள் நிறைவேறாத ஆசைகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது. ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகம் இருந்தால் ஏமாற்றங்களும் அதிகம் இருக்கும். எந்த ஒன்றையும் எளிதில் அடைந்து விட முடியாது. அப்படி எளிதில் அடைந்து விட்டால் அதில் மகிழ்ச்சி இருக்காது. கடின உழைப்பில் கிடைக்கும் வெற்றியில் தான் மகிழ்ச்சியும் இன்பமும் இருக்கும்.

ஒரு கல்லில் தேவையில்லாத பகுதிகளை நீக்கி விட்டால் புதிய சிற்பம் கிடைக்கும். அதுபோல் நம்மில் உள்ள தேவையில்லாத குணங்களை நீக்கி விட்டால் அழகிய புதிய மனிதம் தோன்றி விடும். மனிதனுக்கு அரக்க குணம், தெய்வ குணம் என இரண்டு வித குணங்கள் உண்டு. கோபம், பொறுமை, நல்லவை, தீயவை என குணங்கள் இருப்பது இயற்கை. அதில் நல்லவைகளை ஏற்றுக் கொண்டு தீயவைகளை நீக்கி விட்டால் மனிதன் மனிதனாகி விடுகிறான். ஒவ்வொரு மனிதனும் பொறுப்புணர்வுடன் தேவையில்லாத பழமைகளை மறந்து, புதுப்பொலிவுடன் தன்னைத் தானே சுய பரிசீலனை செய்து கொள்ள வேண்டும். நடந்தவைகளை எண்ணி வருத்தப்படாமல், நடக்கப் போவதை நினைத்துக் கவலைப்படாமல் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற புதுப்பொலிவுடன் வாழ்க்கையைத் தொடங்குவோம்: பொய்ம்மைகளைப் புறந்தள்ளி வாய்மையின் வழி நடப்போம்,

மனதில் உறுதி வேண்டும்,

வாக்கினிலே இனிமை வேண்டும்,

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்,

கனவு மெய்ப்பட வேண்டும்,

கைவசமாவது விரைவில் வேண்டும்,

தனமும் இன்பமும் வேண்டும்,

தரணியிலே பெருமை வேண்டும்,

காரியத்தில் உறுதி வேண்டும்,

மண் பயனுற வேண்டும்,

வானகமிங்கு தென்பட வேண்டும்,

உண்மை நின்றிட வேண்டும்.

 

2039total visits,2visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>