பெற்றோர்களின் விழைவுகள்- & விருப்பங்கள்

பெற்றோர்களின் விழைவுகள்- & விருப்பங்கள்

 

Image result for family

மதுரையின் முன்னணிக் கல்வி நிலையங்களுள் ஒன்றாக வளர்ந்து வரும் மகாத்மா பாண்டிச்சேரி உயர்கல்வி நிலைய முதல்வரும், புகழார்ந்த குழந்தை நோய் மருத்துவ நிபுணரும், சமூகச் சிந்தையருமான டாக்டர் ரிகிரி அவர்களும் இக்கருத்தரங்கில் பங்கேற்க வந்திருக்கின்றார்.

‘பெற்றோர்களின் விழைவுகள் – விருப்பங்கள்’ எனும் தலைப்பில் நான் சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். மதுரை  க்ஷி.ரி.ரி. மெட்ரிகுலேசன் பள்ளி, பம்மல் மீனாட்சி பாலிடெக்னிக் முதலிய கல்வி நிலையங்களின் தாளாளர் எனும் நிலையில் நான் கண்டுணர்ந்த அனுபவங்களை இங்கே சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

மகாத்மா காந்தியடிகள் நமது நாட்டிற்கு உகந்த கல்வி முறையைத் தமது நிர்மாணத் திட்டங்களில் ஒன்றாக வகுத்துத் தந்தவர்; ‘கல்வி என்றால் வளர்ச்சி’ என ஒரு தொடரில் விளக்கியவர்.

ஆம்… கல்வி என்றால் வளர்ச்சி! எதன் வளர்ச்சி? மனம், உடல், ஆன்மா எனும் மூன்றின் ஒருங்கிணைந்த, ஒத்த, பரிபூரணமான வளர்ச்சியே கல்வி. கல்வி என்றால் செலவு என மட்டும் பொருள் இல்லை. கல்வி என்பது இன்று கைவிட்டுச் செலவிடுவது போலத் தோன்றும் நாளைய முதலீடு. தமது பிள்ளைகளின் கல்விக்குச் செலவிடுவதன் மூலம், அவர்களை நாளையது சமுதாயத்திற்குப் பயன்தரும் நிறுவனங்களாக, நிலைக்களன்களாக ஆக்கிடப் பெற்றோர் வழியமைக்கின்றனர்.

பிள்ளைகளுக்கு உரிய கல்வி வளர்ச்சியைத் தருவதில் பலருக்குக் கூட்டுப்பொறுப்பு உண்டு. பெற்றோர் – ஆசிரியர்- சமூகம் எனும் இந்த முக்கோணத்தின் அடித்தளமாக இருக்க வேண்டிய பொறுப்புடையோர் பிள்ளைகளைப் பெற்றவர்களே ஆவர்.

‘பிள்ளைகளின் முதல் ஆசான்கள் பெற்றோர்களே’ எனக் காந்தியடிகள் ஆணித்தரமாகக் கூறினார். நம் நாட்டில் பெற்றோர் அண்மைக் காலங்களில் இந்தப் பொறுப்பை அதிகம் உணர்ந்தே வருகின்றனர். சாதாரணத் தொழிலாளி, விவசாயி கூடத் தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி தரவேண்டும் என்று வரிந்து கட்டி வருவது பரவலாகத் தெரிகிறது. நம் நாட்டின் வளர்ச்சி நிலையிலும், சமூக நல மாற்றங் களிலும் உருவாகி வரும் போட்டிகளிலும் நிலை கொள்ள வேண்டுமானால் எதிர்காலச் சந்ததியாக இன்று வளரும் தமது மக்களுக்குத் தரமான கல்வி தர வேண்டும் என்று தலைப்பட்டு நிற்பது அதிகரித்து வருகிறது.

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

     மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.”      (68)

என்றபடி தம்மைவிடத் தம் மக்கள் அறிவில் மேம்படுவதைப் பெற்றோர் பெருமையாக நினைப்பர். தம்மை விட உழைப்பிலோ, வருமானத்திலோ, அறிவாக்கத்திலோ, சமூகத்தளத்திலோ உயர்ந்து நிற்பதைக் காணும் எந்த ஒரு மனிதனுக்கும் மனத்தில் பொறாமை ஏற்படுவது இயல்பு; தவிர்க்க முடியாததும் கூட. ஆனால் அவர்களே தம் பிள்ளைகள் உயர்வதையும் மேம்படுவதையும் காணும் போது பூரித்து மகிழ்வார்கள்.

எனவே தம்மை விட தம் பிள்ளைகள் மேம்பட்டு நிற்கவேண்டும் எனப் பெற்றோர் ஆசைப்படுகின்றனர். வளர்முக நிலையில் உள்ள நம் நாட்டில் வாய்ப்புக்களைப் பெறுவதில் போட்டிகள் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் பெற்றோர் தம் பிள்ளைகளைச் சின்ன வயதிலிருந்தே பந்தயக் குதிரைகளைப் போலத் தகுதிப்படுத்தி வளர்க்கத் துடிக்கின்றனர்.

இன்று +2 படிக்கும் பிள்ளைகளையும் அவர்கள் பெற்றோர்களையும் பாருங்கள். அந்த ஆண்டு முழுவதும், தொழிற்கல்வித் தேர்வு முடிவுகள் வரும் வரை – இருவர் மனத்திலும் இடையறாத கவலையும் போராட்டமுமே நிலவக் காணுகிறோம் இல்லையா? ஏனென்றால் +2 வகுப்பில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் எல்லாம் தமது பிள்ளைகள் டாக்டராக, எஞ்ஜினீயராக, ஐ.ஏ.எஸ்.ஸாக, விஞ்ஞானியாக எப்படியாவது வந்தாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்; அவதிப்படுகிறார்கள்; அலைகிறார்கள்; தம் பிள்ளைகளையும் அலைக்கழிக்கிறார்கள். சிறிய வகுப்பிலேயே வீட்டுப் பாடச் சுமைகள், ‘கிssவீரீஸீனீமீஸீt’ எனும் பெயரில் பிள்ளைகள் மீது சுமத்தப்படுகின்றன. துள்ளித் திரிகின்ற பிராயத்திலே அவர்கள் பொதிமாடு போல ஆகிறார்கள். பெற்றோர் 15 வருடங்களாகப் படித்தறிய முடியாதவற்றை எல்லாம், பிள்ளைகள் 5 ஆண்டிற்குள் கற்றாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இளமையிலேயே சோர்வுக்கு உள்ளாகும் பிள்ளைகள் வாழ்க்கையில் தோல்விக்கே தம்மைத் தயாரித்துக் கொள்கிறார்கள்.

ஆசைப்படுவதில் தவறில்லை. உள்ளுவதெல்லாம் உயர்வாக உள்ளுவதில் எல்லோர்க்கும் உரிமை உண்டு. ஆனால் என்ன நடக்கிறது என்றால்… எல்லாப் பிள்ளைகளாலும் பெற்றோர்களின் இந்த ஆசையை நிறைவேற்றி வைத்துவிட இயலுவதில்லை. ஏனென்றால், எல்லோரும் விரும்பியபடி பாடமும் படிப்பும் பெற நம் நாட்டில் வாய்ப்பில்லை. இதனால் பெற்றோர்க்கு ஏமாற்றமும் பிள்ளைகளுக்குத் தோல்வி வேதனையும் ஏற்பட்டு, இயல்பான வளர்ச்சியை ஊடறுத்து விடுகிறது.

எனவே தம் பிள்ளைகள் டாக்டராக, எஞ்ஜினீயராக வேண்டும் என ஆசைப்படும் பெற்றோர் தம் ஆசைக் கனவுகள், விழைவு விருப்பங்கள் ஆகியவற்றை எல்லாம் தமது பிள்ளைகள் மீது குருவி தலையில் பனங்காய் வைப்பது போலச் சுமத்தாமல் – கூந்தலுக்குப் பூ முடிப்பது போல இதமாக, பதமாக, இயல்பாக, பொருத்தமாக, உருவாக, உருவாக்க முற்பட வேண்டும். இயல்பான திறமை, முறையாக வளர்வதற்கும் வளம் பெறுவதற்குமே வாய்ப்பு அளிக்கப் பட வேண்டும். பிள்ளைகளை எல்லாம் டாக்டர்களாக்கி, மதுரை எங்கும் ளிக்ஷீவீமீஸீtணீறீ  மருத்துவமனைகளைக் கட்டி விட்டால், மதுரை மக்களின் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைத்துவிடுமா…?

அதுபோலத்தான் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் உண்டு. வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு ஏற்கவும், எதிர்நீச்சலிட்டுக் கரையேறவும் வழியமைப்பதே சரியான கல்விமுறை; சீரான கல்வி நெறி; சிறப்பான கல்வித் திட்டம். காந்தியடிகள் இதனை ‘வாழ்க்கைக் கல்வி’ என்றார். அதாவது வாழ்க்கையிலிருந்து கல்வி, வாழ்க்கை மூலம் கல்வி, வாழ்க்கைக்காகக் கல்வி என்றார். பிள்ளைகளுக்கு வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும் நாட்டம் கொள்ளும் நடைமுறைக் கல்வியே தேவை என்றார்.

கல்வியின் தலையாய நோக்கம் அறிவைத் தருவது மட்டுமில்லை. நல்ல மக்களாக வளர்ந்திட உதவும் பண்பாக்கமே கல்வியின் இலட்சியம். ஒரு நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாக, சமுதாயப் பொறுப்பு உடையவனாக, தானும், தன் துறையும் வளர்ந்து, தான் வாழும் சமுதாயத்தையும் உயர்த்த, உழைக்க, உதவக்கூடியவனாக உருவாக்க முற்படுவதே கல்வியின் செயல் முறை.

இன்று நம் குழந்தைகளைப் புத்தகப் புழுக்களாகவே ஆக்கும் முயற்சியில் தலைப்பட்டு, அவர்களைச் சமுதாய, குடும்ப நடைமுறைகள் தெரியாத தனித்தீவுகளாக வளர்த்து வருகிறோம். நம் குழந்தைகளிடம்  இயல்பாக வளரும் மன உணர்வுகளையும், சிந்தனைக் கூறுகளையும் அதனதன் போக்கில் வளர விட மாட்டோம் என்கிறோம். கலைத் துறையில், விளையாட்டில், சமுதாயத் தொண்டில், நல்ல நட்புறவில் எல்லாம் நம் பிள்ளைகள் நாட்டம் கொள்ளும் போதெல்லாம் தடுத்து அணைபோடுகிறோம். நடைமுறை உலகும், யதார்த்தமான பழக்க வழக்கங்களும் அவர்களுக்கு அன்னியமாகப் போகும் அளவுக்குக் கூண்டுக்குள், ஆசைக் கோட்டைக்குள் வைத்தே வளர்க்கிறோம். படித்து முடித்த பின்னர் நம் பிள்ளைகள், வாழ்க்கை நீச்சல் தெரியாதவர்களாக, தரையில் போடப்பட்ட மீன்களாக, சிறகிழந்த பறவை களாக, தொட்டியில் ஆசைக்கு வளர்க்கப்படும் குரோட்டன் செடிகளாக, அலமாரியில் உள்ள அலங்காரப் பொம்மைகளாக இருப்பதைக் காணும் போது, நாம் செய்த நடைமுறைப் பிழைகளை மறந்துவிட்டு ஆத்திரப்படுகிறோம், அவசரப் படுகிறோம்; சபிக்கிறோம், சபித்துக் கொள்கிறோம்.

ஓர் உதாரணம்: நம் வீட்டிற்கு வரும் பெரியவரை நாம் வீட்டில் இல்லாதபோது வரவேற்று உபசரிக்க, இங்கிதமாக அவரிடம் நடந்து கொள்ள நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறோமா? வெளியில், வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் பெரிய மனிதர்களிடம் தக்கவாறு அறிமுகம் செய்து வைத்து, இந்த அறிமுகக் கலையைத் தங்களின் அனுபவக் கலையாக்கிக் கொள்ள வித்திட்டிருக் கிறோமா?

‘பெற்றோர்கள்தான் பிள்ளைகளின் முதல் ஆசிரியர்’ எனக் காந்தியடிகள் உபதேசமாகவா சொல்லியுள்ளார்? முதன்மை ஆசிரியர்களாக எப்போதும் வழிகாட்ட வேண்டியவர்கள், வாழ்ந்து காட்ட வேண்டியவர்கள் என்றுதானே வலியுறுத்தியுள்ளார்? பிள்ளைகளைச் சினிமா பார்க்கப் போகக்கூடாது என்று கண்டித்து வீட்டில் கண்விழித்துப் பாடம் படிக்கக் கட்டாயப் படுத்திவிட்டு இரவு இரண்டாம் காட்சி திரைப்படம் பார்க்கப் போகும் பெற்றோர்; பையனைக் கடைக்கு அனுப்பி மதுபானம் வாங்கிவரச்சொல்லி வீட்டில் பிள்ளைகளின் முன் அமர்ந்து போதை ஏற்றிக்கொண்டு, பையனை மட்டும் சரியான பாதையில் நடக்குமாறு புத்திசொல்லும் அப்பன்மார்; தீமைகளையும் ஒழுக்கக்கேட்டையும் தமது சொந்தமாக்கிக் கொண்டு, பையனை மட்டும் ஒழுங்காய் இருக்குமாறு உபதேசிக்கும் குருமார்…. இப்படி எத்தனை விதமான முரண்பாடுகளின் இடையே நம் பிள்ளைகளை நாம் வளர்க்கிறோம். ‘ஆற்றுப்படுத்துதல்’ என்பது தமிழில் உள்ள பழமையான இலக்கிய உத்தி மட்டுமல்ல; இனிய வாழ்க்கை முறையும்கூட. ஆற்றைக் கரைகோலி, அணைமேவி நடத்துதலைப் போல, தம் பிள்ளைகளையும் அறிவுகோலி, அன்பு மேவி நடத்துவதே, தானே முன்னோடியாக வாழ்ந்து காட்டுவதே ஆற்றுப்படுத்துதல்.

அறிவு என்பது நினைத்தவுடன் வாங்கிச் சேர்க்கும் பொருள் இல்லை. அவரவர் இயல்பிலே தோன்றி, முறையாக, வளர்ந்திட, வளர்க்கப்பட வேண்டிய ஒரு தரு. சிறு வித்து வளர்ந்த மரம் ஆவது போல, பிள்ளைகளிடம் உள்ள இயல்பே அறிவாக, ஆக்கமாக பரிணமிக்கிறது. இந்த இயல்பை இனம் கண்டு ஊக்குவதே பெற்றோர் பொறுப்பு. அறிவோடு வாழ்க்கை அனுபவமும், கல்வியோடு ஒழுக்கமும் ஊடும் பாவும் போல அமைந்திட அறிவும் அனுபவ ஆக்கமும் சமநிலையில் ஒருவரிடம் உருவாகிப் பெற்றோர் ஆற்ற வேண்டிய பங்கு, ஆசிரியனுடைய பொறுப்பை விட அதிகம், மிக அதிகம்.

பிள்ளைகளைப் பள்ளியில் பணம் கட்டிச் சேர்ப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டது, பையன் தானாக வளர்ந்து விடுவான் என நினைக்கக் கூடாது. வேம்புச்செடியை நட்டுவிட்டுத் தண்ணீர் ஊற்றினால் மட்டும் போதுமா? செடி வளர்கையில் ஆடுமாடு கடிக்காமல் சுற்றி அதற்கு வேலி போடுவதும், அது நன்கு உயரும்வரை காப்பதும் கடமையல்லவா? பெற்றோர்கள் வேலி போடவும் வேண்டும், விருப்பம்போல வளர்ந்து உயர்ந்திட உதவவும் வேண்டும்.

தம் பிள்ளைகள் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி, வாழ்க்கை எனும் போராட்டச் சரிவுகளுக்கு உதவி தேடுவதற் காகவும் நல்ல புத்தகங்களை வாங்கித் தருவது பெற்றோர் பொறுப்பே ஆகும். அறிவு, பண்பாடு, சமுதாய ஒழுக்கம், தார்மிகப் பண்பு முதலியன. காலப்போக்கில் கனிந்திட நூலறிவும் நுண்மாண் நுழைபுலமும் உதவும்.

மேலைநாடுகளில் கல்வி இன்றும் முன்னிடம் பெற்றுள்ளது. கடந்த மூன்று நூற்றாண்டு மேலை ஆதிக்கத்திற்குக் கல்விமுறை தளம் அமைத்தது. மனிதனை நிலாவுலகில் கொண்டு சேர்த்த அதே கல்வி முறை – அங்கு இன்றும் புதிய யுகத்திற்குப் பாதை அமைத்து வருகிறது. பிள்ளைகளின் விருப்பங்களையும் வளர்ச்சி முறைகளையும் சீர்தூக்கும் கல்வி முறையைப் பெற்றோர்அளிப்பதால் முதிர்ச்சியிலும் தன்னம்பிக்கையிலும் பிறந்தவர்களாக இளந்தலை முறையினர் அங்கே வருகிறார்கள், வளர்கிறார்கள். பெற்றோரையே, குடும்பத்தையே, அரசாங்கத்தையே முற்றிலும் நம் பிள்ளை களைப் போலச் சார்ந்திராமல், தமது சுய உழைப்பிலும் தொழில் முனைப்பிலும் ஆர்வம் உள்ளவர்களாக உயர்கிறார்கள்; வரலாறு படைக்கிறார்கள்.

நம் நாட்டில், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, ‘உன்னால் முடியும் தம்பி!’ என நம் இளைஞர்களுக்கு நம்பிக்கை யூட்டும் இயக்கத்தினை, விடாமல் நம்பிக்கையுடன் நடத்திவருகிறார். நம் பிள்ளைகள் அத்தகைய நம்பிக்கை யூட்டும் நல்ல தலைவர்களைப் பின்பற்றுமாறு பெற்றோர் வழியமைக்க வேண்டும். தக்கவழியமைப்பு இன்மையால், நம் பிள்ளைகள் யார் யாரை எல்லாமோ தலைவர்களாக ஏற்றுக்கொண்டு, திசைமாறிப் போகிறார்கள். தம்மைப் பெற்ற, பெற்றோரின் கால்களில் விழுந்து வணங்கத் தயங்கும் இவர்கள், யார் யார் இருக்கும் திசை எல்லாமோ திரும்பி, அங்கப் பிரதட்சணம் செய்யவும் தயாராக உள்ளார்கள். நம் பிள்ளைகளிடையே தவறான மதிப்பீடுகள்  (கீக்ஷீஷீஸீரீ க்ஷிணீறீuமீs) ஏற்பட யார் காரணம்? பெற்றோராகிய நாமும் ஒருவகையில், பலவகையில் காரணம் அல்லவா?

பிள்ளைகளுக்கு உரிய முதல் தலைவர் பெற்றோர். அடுத்த நிலைத்தலைவர் ஆசிரியர், மூன்றாம் நிலை சமூகப் பெரியோர். இந்தப் படிமுறையை உருவாக்குவது பெற்றோர் பொறுப்பே ஆகும்.

‘அவையத்து முந்தியிருப்பச் செயல்’ (குறள்:67) மட்டுமின்றி ‘இவன் தந்தை என்நோற்றான் கொல்!’ (குறள்:70) எனப் பெற்றோர் புகழ் பெற வேண்டுமானால், அந்தப் புகழுக்குத் தம்மை இலக்காக்கிக் கொள்வது பெற்றோரையே சார்ந்தது. அதை விடுத்து தம் எல்லையற்ற ஆசைகளை ஏற்றும் சுமைதாங்கிகளாக மட்டும் பிள்ளைகளை ஆக்குவது நியாயமா? அது எக்காலத்தும் நிலை பெறுமா?

இந்தக் கல்வி யுகத்தில் நம் நாட்டில் கல்விப் பொறுப்பைப் பெற்றோரே ஏற்க வேண்டியுள்ளது. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என வாய்ப்புக்களை வாரி வழங்க முடியாத நம் நாட்டில்- இட ஒதுக்கீடும்  இடையறாத போராட்டமும் மண்டி வரும் நம் நாட்டில், நம் விழைவுகளை மட்டும் பிள்ளைகள் மீது சுமத்தாமல், அவர்களது விருப்பங்களையும் புரிந்து செயல்படப் பெற்றோர் முனைய வேண்டும். வசதி உள்ளவர்கள் செல்வச் செழிப்பால் தம் பிள்ளைகள் போக்கில் போகவிட்டு விட்டு அவர்கள் சீரழிவது கண்டு, சிந்தை நோகின்றனர். பெற்றோர் தரும் பண வசதியால், அரிய பொருள்களை எல்லாம் எளிதில் அடையப்பெறும் பிள்ளைகள், சுலபமாக அடைய முடியும் எனக் கனவு காணும் பிள்ளைகள் சொகுசு வாழ்க்கைக்கே, முயற்சியற்ற போலி வாழ்க்கைக்கே தம்மைத் தயார்ப் படுத்திக் கொள்கிறார்கள். இதனைப் போல, படியாத, பாமர, நடுத்தர நிலைப் பெற்றோரால் செய்ய முடியுமா? தாம் தேடி வைத்த செல்வம், தம் பிள்ளைகளைக் காப்பாற்றி விடும், படிப்பு இல்லாவிட்டால் பரவாயில்லை என நினைத்து விடுகிறார்கள். தொழிலாயினும் வணிகமாயினும் இக்காலத்தில் கல்வி, நுட்ப உணர்வு ஆகியன உடையார்க்கே வளர்ச்சிநிலைகளைத் தருகின்றன. நம் பணக்காரப் பெற்றோர் இதனை நினைவிற்கொண்டு, தம் வசதியை நன்கு பயன் படுத்தித் தரமான கல்வி தர முற்படவேண்டும். வளர்ந்துள்ள பல பெரிய தொழில் நிறுவனங்கள், தமது அடுத்த தலை முறையினர் மீது காட்டும் பரிவும், பயனுள்ள முயற்சியும் நமக்கு முன்னுதாரணமாக இருக்கட்டும்.

“பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா?

     பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா?”

என்பது பழையதொரு திரைப்பாடல். ‘பேணி வளர்க்க வேண்டும்’ எனும் தொடரிலேயே பெற்றோர்கள், தம் பிள்ளைகளைப் பொறுத்தவரை பேண வேண்டிய விருப்பங் களும் விழைவுகளும் பொதிந்துள்ளன. அத்தகைய பொறுப் பறிந்த உள்ளமுடைய பெற்றோர் வாழ்க! வள்ளுவர் கூறிய நோன்புப் பயனை அடைந்திடுக.

 

1832total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>