பயணத்தின் பாதையில்…

‘பாண்டிய’னில் வழி அனுப்புகை

 

Image result for thirukural manimozhian

தமிழ்நாடு அறக்கட்டளையினர் தாய்த்தமிழகத்துடன் உறவுபூணும் வகையில் ஆண்டுதோறும் அங்கு விழா எடுக்கின்றனர். இங்குள்ள நண்பர்களை வரவழைத்து தாம் மகிழ்ந்து, மகிழ்விக்கின்றனர். அறக்கட்டளையின் 14-ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, ‘வான்புகழ் வள்ளுவம்’ பற்றி உரையாற்றுமாறு நான் அழைக்கப் பட்டிருந்தேன்.

தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு திருக்குறள் பேரவையின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், புதுப்பொறுப்பேற்ற சமயத்தில் இந்த அழைப்பும் வந்தது. எனவே எப்படி இதை மறுக்க முடியும்? மேலும் ‘உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையம்’ எனும் ஓர் அமைப்பினை மதுரையில் நிறுவி அதனைப் பதிவு செய்யும் விரிவாக்கப் பணிகளுக்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்த தருணத்தில் இந்த அழைப்பு வந்துள்ளது. எப்படி இதனைத் தவிர்க்க இயலும்?

மறுக்கவோ, தவிர்க்கவோ முடியாத வண்ணம் அமெரிக்க நண்பர்களின் கடிதங்கள் அணிவகுத்து வந்தன. சிகாகோவிலிருந்து போற்றுதற்கு உரிய நண்பர்கள் திரு.பி.சி.எம்.ஜி. நாராயணன், திரு.வெங்கடராமானுஜம், தொழிலதிபர் பழனிபெரியசாமி, தலைவர் பி.மோகனன், செயலாளர் தி.ராஜேந்திரன் ஆகியோர் எழுதிய மடல்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்தின. அமெரிக்கப் பயணத்தோடு, கனடா, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் ஆகியவற்றுக்கும் பயணம் செய்வதற்காக விரிவாகத் திட்டமிடும் பொறுப்பினை என் மனைவி கமலா ஏற்றுக்கொண்டாள்.

என் துணைவி கமலாவிற்கு நிறையப் பயண அனுபவங்கள் உண்டு. ரோட்டரி மாதர் கழகத் தலைமை ஏற்பு, மேனிலைப்பள்ளி நிர்வாகப் பொறுப்பு, சேவை அமைப்புகளின் தொடர்பு ஆகியவற்றில் பெற்ற பயிற்சிகள் எல்லாம், கமலா கை தொடும் எதனையும் கலையாக்கித் தந்துவிடும்.

விசா வந்துவிட்டது, டிக்கட்டுகள் ஏற்படாகிவிட்டன. 25.5.89-ஆம் நாள் மதுரையிலிருந்து பாண்டியன் ரயிலில் புறப்பட வேண்டும். அன்று அதிகாலையில் குன்றக்குடி பிரசாதம் வீட்டு வாயிலுக்கு மங்கலம் சேர்க்க வந்து பொலிந்தது. திருக்குறள் பேரவைத் தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் பயணத்தை ஆசீர்வதித்து அருட்பிரசாதத்தை அன்பர் மூலம் அனுப்பியிருந்தார்.

வடலூர் வள்ளலாருக்குப் பின்னர் தமிழகம் கண்ட பேரருள் பெருந்தகை ஆகிய குன்றக்குடி அடிகளார் மனித நேயச் சிந்தனையால் ஏற்படுத்திய அமைப்புகள் இரண்டுள. ஒன்று திருவருள் பேரவை; மற்றொன்று திருக்குறள் பேரவை.

அரசியல், பொருளாதாரச் சமுதாயப் பிரச்சினைகளுக்கு திருக்குறள் நெறியில் தீர்வுகாண முயன்றுவரும் இயக்கம் திருக்குறள் பேரவை. உயர்ந்த சிந்தனைகளும் சீரிய கோட்பாடுகளும் செறிந்து கிடக்கும் இந்த நாட்டில் அவை முறையே செயலுக்கு வராமல் போனதால், வறுமையும் அறியாமையும் இங்கு குடியேறிக் கொண்டன. இந்த அவலத்தை அகற்றிப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் சமத்துவ சமுதாய வழி பேணிட அமைந்ததே திருக்குறள் பேரவை.

உலகெல்லாம் உவந்தேற்றும் தமிழ் மாமுனிவரின் வாழ்த்து எங்கள் தமிழ்ப் பயணத்தின் ஆதார சுருதியாக அந்த வினாடியே இசை மீட்டியது. மதுரை ஆலயங்களில் இருந்து பிரசாதங்களை அன்புச் சகோதரர்கள் கொணர்ந்தனர்; மதுரை திருவள்ளுவர் கழகப் பெரியவர்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.

அன்று மாலை – டவுன்ஹால் ரோடு வள்ளுவர் அரங்கில் – வழியனுப்பு விழா ஒன்றினை அன்புப் பெரியவர்கள் பாரதி ஆ.ரத்தினம், அய்யணன் அம்பலம், பேராசிரியர் குழந்தைநாதன், பெரும்புலவர் செல்வக் கணபதி, திரு.நாகராஜன் ஆகியோர் விரைந்து ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது உரையாற்றிய பெருமக்கள் விவேகானந்த சுவாமியின் ஆன்மிகப் பயணம் வழிகாட்டிட எனது திருக்குறள் பயணம் பயனுற அமைய வேண்டும் என வாழ்த்தினர்.

அன்று மாலை மதுரை ரயில் நிலையத்தில் வழி அனுப்ப வந்த அன்பர்கள் எங்களைத் திக்குமுக்காடச் செய்துவிட்டனர். மலைபோல் மாலைகள் குவிந்தன. பிளாட்பாரத்தை விழா மேடையாக்கிக் கவிமாலைகள் சாற்றத் தொடங்கிவிட்டனர். இவை எல்லாம் திருக்குறளுக்குச் செய்யும் பெருமை எனவே கருதிப் பணிவுணர்வுடன் ஏற்றுக்கொண்டேன். வண்டி புறப்படுகையில் பெட்டியின் வாயிலில் நின்றபடி கண்ணீர் மல்கக் கையசைத்து விடைபெற்ற என் காதில் விழுந்த அன்பர், நண்பர் திரு.ஆ.ரத்தினம் அவர்கள் வாழ்த்துரை… “பாண்டியனில் வழியனுப்புகிறோம். அன்று பாண்டிய நாட்டு சேதுபதி மன்னரால் வழி அனுப்பப்பட்ட விவேகானந்தரைப் போல- திருக்குறள் தூதுவராகச் சென்று வருக! வென்று வருக!” என அவர் எழுப்பிய வீர முழக்கம் பிளாட்பார எல்லை முடியும் வரை எதிரொலித்தது. வண்டியில் அமர்ந்ததும் வழியனுப்பு விழாவில் ஆற்றிய உரைகள் என் நினைவில் படர்ந்தன.

Image result for vivekananda

“1893-இல் அமெரிக்கா நாட்டு சிக்காகோவில் கூடிய உலக சமயப் பேரவைக்கு இந்தியத் தூதுவராக இளம் துறவி சுவாமி விவேகானந்தர் சென்றிடக் கணிசமாக நிதியுதவி செய்தவர் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி… பாண்டி நாட்டுச் சேதுபதி மன்னர் அவரை அன்று அனுப்பினார்; இன்று இந்தப் பாண்டியன் வண்டியில் உங்களைப் பயணமாக்கி வழியனுப்பி உள்ளார்கள்; நீங்களும் சிகாகோ போகிறீர்கள். அதுதான் இதில் உள்ள பாண்டியப் பொருத்தம்” என்றார் அருகில் இருந்த நண்பர். இந்த 1893- நம் வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. காந்தியடிகள் தென்னாப்பிரிக்கப் பணிக்குப் புறப்பட்ட ஆண்டு, விவேகானந்தர் சுவாமிகள் ஆன்மிகப் பயணமாக வழியனுப்பப்பட்ட ஆண்டு, சிறந்த ஆன்மிகச் செல்வர் அரவிந்தர் தாயகம் வந்து சேர்ந்த ஆண்டு எல்லாம் இந்த 1893 தான்.

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் தொண்டு புரிந்த ஆண்டுகளில் அமெரிக்க நாட்டுச் சமகாலச் சிந்தனை யாளரான ஹென்றி டேவிட் தோரோவின் கருத்துக்களால் மிகவும் கவரப்பட்டார். காந்தி அடிகள் ஒருமுறையாவது அமெரிக்காவிற்கு வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அடியெடுத்து வைக்கும் பாக்கியம் அமெரிக்க மண்ணுக்குக் கடைசிவரை கிடைக்காமலே போய்விட்டது. என்றாலும் அதற்கு முன்னரே விவேகானந்தர் அங்கு நிகழ்த்திய வீர முழக்கம் இன்றும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

இதனை நினைவூட்டி சிக்காகோ நண்பர்கள் எழுதிய கடிதங்கள் பசுமை நினைவுகளாக என்னை ஆட்கொண்டிருந்தன.

அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட பாரதத்தில் கனன்று வந்த புரட்சித் தீக்கங்குகள் வங்காளத்தில்தான் அடிக்கடி சுவாலையாக எரிந்து உயர்ந்தன. அரசியல், ஆன்மிகம், கலை ஆகிய முத்துறையிலும் அங்கே மறுமலர்ச்சி ஓடைகள் சங்கமித்து வந்தன. அந்தச் சங்கமச் சூழலில் அவதரித்தார் நரேந்திரன் (1863). காலனி ஆதிக்கத்தோடு கைகோத்து வந்த மேலை கலாச்சாரக் காட்டாறு வங்கத்தில் ஓடிச் சுரந்த தொன்மைப் பண்புகளை அடியோடு அடித்துச் செல்ல முற்படுவதைக் கண்டு இளமையிலேயே அவர் பொங்கி எழுந்தார். கல்கத்தா கல்லூரியில் சட்டம் பயிலச் சேர்ந்து கலைக் களஞ்சிய ஞானம் பெற்றுவந்த இளைஞரை – புனிதர் பரமஹம்சரின் புன்னகை எப்படியோ ஆட்கொண்டு விட்டது. 1881-இல் பரமஹம்சரின் பாதம் பணிந்து பரம சீடராக ஆகிவிட்ட நரேந்திரன் தவயோகியாகவும், வேதவிற்பன்னராகவும் மாறியது பாரதம் கண்ட ஆன்மிக இரசவாதம். விவேகானந்தர் என இளமையிலேயே ஏற்கப்பட்ட இந்த ஞானசீலர், பரமஹம்சரின் சமாதிக்குப் பின் இராம கிருஷ்ண இயக்கத்தை நிலைநிறுத்தி பாரதம் முழுவதும் பாத யாத்திரை செய்தார். உலக நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்து மானிட ஒற்றுமையையும் சகிப்புத்தன்மை யையும், இந்தத் திருநாட்டின் செய்தியாகத் தூதுரைக்க முற்பட்டார். இச்சமயத்தில்தான் – அமெரிக்க நாட்டு சிக்காகோ நகரில் கூட இருந்த உலக சமயப் பேரவையில் () உரையாற்றிட அழைக்கப்பட்டார்.

1893-முப்பதே வயதான சுவாமி விவேகானந்தர் பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு வந்திருந்தார். மைலாப்பூர் கடற்கரை அருகே தங்கி, அற்புதமான ஆங்கிலப் பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். முற்போக்கு இளைஞர்கள் அவரை மொய்த்துச் சூழ்ந்தனர். முதன்முதலாக தமக்கென ஒரு சீடர்குழுவை உருவாக்கும் பெருமையைச் சென்னைக்குப் பெற்றுத்தந்தார்.

சிக்காகோ சமயப் பேரவைக்குத் தம்மை அழைத்துள்ளார்கள் என சுவாமி விவேகானந்தர் இச்சீடர் குழுவிடம் தெரிவித்துள்ளார். அடுத்த வினாடியே அதற்கான நிதியைத் திரட்டிவிட இளைஞர்கள் புறப்பட்டுவிட்டனர். ஏழை-எளியவர்கள் நல்கிய காணிக்கைகள் எல்லாம் சேர்ந்து மொத்தம் ரூபாய் மூவாயிரம் வரை திரண்டன. இராமநாத புரம் சேதுபதி மன்னர் ரூ.500 நல்கினார். பாண்டிய நாட்டுப் பயண முடிவில் குமரிக் கடலில் தீர்த்தமாடிவிட்டு விவேகானந்தர் சிக்காகோ பயணத்தை மேற்கொண்டார்.

Image result for gandiji

தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் தொடங்கிய அறப்போரின் முதல் தொண்டர்களாக விளங்கிய பெருமை தில்லையாடி வள்ளியம்மை போன்ற தமிழர்களுக்கே கிட்டியது. விவேகானந்தர் ஞான விளக்கேந்திப் புறப்பட்ட பயணத்திற்கு முத்தாய்ப்பு வைக்கும் பெருமையும் தமிழகத்துக்கே கிட்டியது.

இந்தப் பெருமை தமிழ் மண்ணோடு கலந்துவரும் பாரம்பரியம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப் பூங்குன்றச் சங்கநாதம், உலகுக்கென ஒரு நூலை – திருக்குறளை – அளித்த அழியாத மரபுவழிக் கொடைத் திறம், பாரதி ஆ.ரத்தினம், பேராசிரியர் குழந்தைநாதன் ஆகியோர் கூறிய இக்கருத்துக்கள் மீண்டும் மீண்டும் என்னை வலம் வந்தன.

விவேகானந்தர் இந்தியத் திருநாட்டின் வேதாந்த வித்தகத்தை மேலைச் சீமைக்கு ஏந்திச் சென்றார். ‘சகோதர, சகோதரிகளே’ எனும் முதல் தொடக்கத்தினாலேயே அவையோரைக் கவர்ந்தார். மிக மிக எளியவனான எனக்கு இப்போது விவேகானந்தரைத் தடம் பற்றிச் செல்லும் வாய்ப்பும் கிட்டியுள்ளது. “உலகம் ஒரு குலம்” என ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அதுவும் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டாமலேயே இத்தரணியின் உறவு எல்லையை வரையறுத்துக் கண்ட வள்ளுவச் செல்வத்தை அக்கரைச் சீமையில் மறுபடி நினைவூட்டிச் சொல்ல நான் புறப்பட்டிருக்கிறேன்.

விவேகானந்தர் எங்கே! நான் எங்கே!

எனினும் எனக்குள்ளே இனம்புரியாத அச்சம் கலந்த ஓர் உற்சாகம்! அந்த உற்சாகத்தைத் தந்தது யார்?

வள்ளுவர் தான்.

‘அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

 பெருமை முயற்சி தரும்”      (611)

எனும் ‘ஆள்வினை உடைமை’ முதல் குறள் என்னைப் பாண்டியனில் ஏற்றிவிட்டது. பயணம் தொடர்ந்தது.

அமெரிக்கப் பயணம்

ஒரு நினைவோட்டம்

Image result for USA

என் திருக்குறள் பயணம், உலகப் புகழ் பெற்ற மிகப்பெரிய நாட்டினை நோக்கித் தொடங்க இருந்தது. அமெரிக்க நாட்டைப் பற்றி நான் ஏற்கெனவே அறிந்தவை, படித்தவை எல்லாம் ஒருபுறம் இருக்க, பல புதிய செய்திகளை அறிந்துகொள்ள மனம் துருவியது. அமெரிக்காவில் தொடர்புடைய, அங்கு போய் வந்த அன்பர்களிடமெல்லாம் அவசரத் தொடர்பு கொண்டேன். பயணம் போகும் புது இடத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதுதானே பயணத்திற்கு உரிய முதல்நிலை ஏற்பாடு?

அமெரிக்கத் தொடர்போடு இங்கு வாழும் அன்பர்களில் பலர் அமெரிக்க மக்களின் வாழ்வுப் போக்கில் தாம் கண்ட சாதாரணக் குறைகளையே பட்டியலிட்டுச் சொன்னார்கள். எதையும் அனுமதித்து ஏற்கும் அச்சமுதாய இயல்புகள் , பழக்கவழக்கங்கள், இன உணர்வுகள், ஊழல்கள், அரசியல் தில்லுமுல்லுகள், மதுவிலக்கு, சூதாட்டம், லாட்டரி விளைவுகள், தன் நாட்டு வளர்ச்சிக்காகப் பிறநாட்டுச் சுரண்டலையே நோக்காகக் கொண்ட தொழில் வர்த்தக நிறுவனங்கள்… இவற்றையெல்லாம் விலா வாரியாகச் சொல்லி அச்சமும் அயர்வும் ஏற்படச் செய்தார்கள். என்றாலும் அந்த அதிசய நாட்டின் ஈடிணையற்ற ஜனநாயக உயிரோட்டத்தையும், ‘இப்படியெல்லாம் அமெரிக்காவில்தான் நடக்கும்’ என்ற அபிமான உணர்வோட்டத்தையும் சுட்டிக் காட்டவும் தவறவில்லை. “ ‘அமெரிக்காவைப் பார்’ என உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே.செட்டியார் அன்று எழுதிய புத்தகத்தையும் ‘சோமலெ’ எழுதிய பயணக் கட்டுரைகளையும் படித்துவிடுமாறு நண்பர் ஒருவர் சிபாரிசு செய்தார்.

தொழில், வாணிபப் பயணமாகப் போனால் லாபநட்டக் கணக்கோடு நான் ஆயத்தமாக வேண்டியது அவசியம். ஆனால் நான் மேற்கொள்ளப் போவதோ தமிழ்ப் பயணம். அதிலும் குறிப்பாக, திருக்குறள் பயணம். எனக்கு இவ்விரண்டின் நிலைபேறு பற்றிய முன்னறிவு கொஞ்சமாவது வேண்டும் எனக் கருதினேன்.

அமெரிக்காவில் வாழும் தமிழர்களைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தேன். ஆனால் அமெரிக்காவில் தமிழ் எப்படி வாழுகிறது என அறிவதல்லவா முக்கியம்?

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையோடு தொடர்பு கொண்டேன். டாக்டர் தமிழண்ணல், பேராசிரியர் சு.குழந்தைநாதன் தொகுத்து எழுதிய ‘உலகத் தமிழ்’ நூல் பற்றிய பல விவரங்களை நான் பெற முடிந்தது… தமிழ் அரிச்சுவடிப் பாடம் கற்பிப்பதைவிட பட்டப்படிப்பு வரை பயில அங்கு அளிக்கப்படும் வசதி வாய்ப்புக்களையும், தமிழ் மன்ற நடவடிக்கைகளையும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆசிய மொழி, இலக்கியத்துறை எனும் தனிப்பிரிவே அங்கு உள்ளது.

அமெரிக்காவில் இப்போது தமிழ், தெலுங்கு எனும் இரு திராவிட மொழிகளில் மட்டுமே பாடங்கள் தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வருகின்றன. கன்னடமும், மலையாளமும் அவ்வப்போது கற்பிக்கப்படுகின்றன. வாஷிங்டனிலும், சிக்காகோ பல்கலைக்கழகத்திலும் கன்னடம் கற்பிக்கப் படுகின்றது. பென்சில்வேனியாவில் மலையாளம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. வாஷிங்டன், பென்சில்வேனியா, விஸ்கோன்சின், மிக்ஸிகன், கலிபோர்னியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. டெக்சாஸ் கோர்வல் பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு நேரும்போது நடக்கின்றன. விஸ்கோன்சின், டெக்சாஸ் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் பென்சில்வேனியாவில் ஒழுங்காகவும் கற்பிக்கப்படும் மொழிப் பாடங்கள் முழுமையான பாடத் திட்டத்துடன் நடத்தப்படுகின்றன. அதாவது, தெரிந்தெடுத்துக் கொள்ளப்படும் மொழியின் இலக்கியம் அல்லது மொழியியலில்  எம்.ஏ.யும், பி.எச்.டி.யும் பெறும் அளவிற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுப் பயிற்சியும் தனித்துறை ஆய்வும் அளிக்கப்படுகின்றன.

பிற கல்வி நிறுவனங்கள் இலக்கிய ஆய்வுகளில் மிகுதியும் ஈடுபட்டு இருப்பதால் பென்சில்வேனியா, வாஷிங்டன் பல்கலைக்கழகங்கள் திராவிட மொழியியலில் சிறப்புப் பயிற்சிகளை அளிக்கின்றன. கோர்வல் டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மொழியியலில் மிகுந்த நாட்டம் உண்டு; ஆனால் விஸ்கோன்சின், கலிபோர்னியா கழகத்தவர்களுக்கு இலக்கிய ஆய்வுகளிலேயே ஆர்வம் மிகுதி. சிகாகோவில் இரண்டுக்குமே ஆக்கம் தரப்படுகின்றது.

இயல்பாகப் பாட வகுப்புகளை வழக்கமாக நடத்தி வரும் பல்கலைக்கழகங்களில் தொடக்கநிலை வகுப்புகளில் ஆறு மாணவர்கள் வரை சேருவர். மேல்வகுப்புகளில் இந்த எண்ணிக்கை குறைவது உண்டு. வாஷிங்டன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவின் தொடக்க நிலையில், மூன்று மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் மொழியியல், தொல்பொருள் ஆய்வு முதலிய இதர துறைகளில் மேல்நிலை ஆய்வு செய்யும் பட்ட வகுப்பு மாணவர்களும் உள்ளனர். மொழியியல், இலக்கியம் மட்டுமன்றி, தென்னிந்திய வரலாறு, சமயம், இசை, நுண்கலை, அரசியல், திணையியல் முதலிய இதர துறைகளில் ஆர்வம் உள்ளோரும் வாஷிங்டன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவில் சேர்ந்திருப்பர். இவர்கள், தமிழை ஓரளவு கற்ற பின்னர்த் தமக்குப் பிடித்தமான துறையில் பட்டம் பெறத் தகுதியுறுவர்”.

பல்கலைக்கழகங்கள், பள்ளிகளை விட, அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் தன்னார்வத் தமிழ்ச் சங்கங்களும் அமைப்புகளும் ஒன்றுகூடி, தமிழ் இலக்கிய வேள்வி நடத்தி வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் சிக்காகோவில் உள்ள தமிழ்நாடு அறக்கட்டளை  17 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் இதழ் நடத்தி, தமிழர் உள்ளங்களையும், இல்லங்களையும் ஒரு சரமாக இணைத்து ஒப்பற்ற ஆக்கப்பணி புரிந்து வருகின்றது. சென்னையில் ஒரு கிளையினை நிறுவும் வகையில் உயர்ந்து நிற்கும் தமிழ்த்தொண்டர் அமைப்பு இது. திரு.மோகனன், இளங்கோவன், டாக்டர் ரெஜி ஜான், டாக்டர் சவரிமுத்து, கண்ணப்பன், டாக்டர் பி.ஜி.பெரியசாமி, திருமதி. வெங்கடேஸ்வரி சுப்ரமணியம் முதலிய தமிழ் நெஞ்சங்கள், அமெரிக்க நாட்டில் வாழும் தமிழ்க் குடும்பங்களுக்கும் தாயகத்திற்கும் உறவுப் பாலங்களைக் கட்டி வருகின்றன. அமெரிக்கத் தமிழர்கள் பொங்கல் உள்ளிட்ட தமிழ் விழாக்களையும், தீபாவளி, நவராத்திரி முதலிய பண்டிகைகளையும் கூடிக் கொண்டாடி நமது பண்பாட்டுக் கோலங்களைத் தூவி வருகின்றனர். இக்கோல வடிவங்களையெல்லாம் கண்டு மகிழும் பயணமாக என் திருக்குறள் உலா தொடங்கியது. தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அருள் ஆசியுடன் அன்பர்கள் அணி திரண்டு நல்கிடும் வழியனுப்புதலுடன் மதுரையிலிருந்து புறப்பட ஆயத்தமானேன்.

பயணப் பரபரப்பு

பயணம் போவதென்றால் யாருக்கும் ஒருவகை பரபரப்பு உணர்வு ஏற்பட்டே தீரும். பள்ளிப் பருவத்துக் கல்விப் பயணமானாலும் சரி, பிள்ளைப் பருவத்து இன்பச் சுற்றுலா ஆயினும் சரி, பின்னைப் பருவத்துக் குடும்ப சமூக நிகழ்ச்சிப் பயணம் ஆயினும் சரி – வெளியூர் போவதென்றாலே மனமும் பொழுதும் வேகமாக ஓடத் தொடங்கிவிடும். சொந்த வாகன வசதி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, போக வேண்டிய பயணம் பற்றிய சிந்தனை மனதை அரிக்கத் தொடங்கிவிடும். அதிலும் தொலை தூரப் பயணம் என்றால் கேட்கவே வேண்டாம். பலமுறை போய்வந்த நாடாக இருந்தாலும் கூட, பரபரப்பையும் மீறியதொரு பதைபதைப்பையும் உண்டாக்கியே தீரும்.

எனக்கும் அப்படித்தான்! பல வெளிநாடுகளுக்கு முன்னர் போய்வந்த அனுபவம் இருந்தும் இந்தத் திருக்குறள் பயணம் நெடிய எதிர்பார்ப்புகளை என்னுள் உருவாக்குவது போன்ற பிரமை ஏற்பட்டுவிட்டது. “அவை, பயணங்கள் அல்ல; பல்கலைக்கழகங்கள்” என எங்கேயோ படித்த வாசகம் – எனக்குள்ளே வலம் வந்து – இந்தப் பயணத்தைப் பல்கலைக்கழகமாக்கத் திட்டமிடும் தீர்மானத்தை முன்மொழிந்து கொண்டிருந்தது. அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளைப் பற்றிய விவரங்களைப் போதுமான அளவுக்கு திரட்டிக் கொள்ளத் தூண்டிவிட்டது. நண்பர்கள், அன்பர்களின் பெயர்ப் பட்டியலை, முகவரியை எல்லாம் தேடி எடுத்துக்கொள்ள நேரம் போதவில்லை எனும் நெருக்கடி ஏற்பட்டது.

Image result for bharathiyar

 

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என மகாகவி அன்றே பாடினான். தமிழ்நாடு வான்புகழ் பெற்றிட வையகத்துக்கு எல்லாம் வள்ளுவச் செல்வத்தை வழங்கினாலே போதும் என்பது அவனது கணிப்பு. உலகினுக்கு வள்ளுவத்தை நல்கும் பணியில் தமிழ்நாட்டு மக்கள் ஊன்றி நின்றிருக்க வேண்டும். விழா எடுக்கும் போது மட்டும் ஊர்கூட்டி முழக்கமிட்டுவிட்டு, அப்புறம் அயர்ந்து போய்விடுவதுதான் நம் வழக்கம். ஆனால், அயல்நாடுகளில் வாழும் தமிழ் அன்பர்கள் தாமும் அயர்வதில்லை. நம்மையும் அயரவிடுவதில்லை! அதிலும், அமெரிக்கத் தமிழர்களின் ஆர்வம் – அங்குள்ள ‘எம்பயர் கட்டிடம்’ போல் உயர்ந்தது; இங்குள்ள இமயம் போல் ஓங்கி நிற்பது.

வட அமெரிக்காவில் உள்ள டெய்டன் – ஆகாய விமானம் கட்டும் தொழில் சிறந்த பெரும் நகரம். விமான வடிவமைப்பு, கட்டுமானம், கணிப்பொறி நுட்பம் ஆகிய துறைகளில் நம் நாட்டவர்கள் பலர் அங்கு பொறுப்பேற்றுள்ளமை நமக்குப் பெருமை தரும் விஷயம். அவர்களில் கணிசமான அளவு தமிழ்நாட்டவர்களும் உள்ளனர்.

மேல்நாட்டுத் தமிழர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடிட உறவுப்பாலம் அமைப்பன தமிழ்… தமிழ்ப் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ்க் கலைகள்… – இந்நான்கையும் சால்புடைய தூண்களாக்கிக் கொண்டு, அமெரிக்கத் தமிழன்பர்கள் அறக்கட்டளையே அங்கு நிறுவிவிட்டனர்.

தமிழ்நாடு(ம்) அறக்கட்டளை

 

‘தமிழ்நாடு அறக்கட்டளை’ எனும் கூட்டமைப்பு அமெரிக்கத் தமிழ் அன்பர்களின் சேவைத் திறத்திற்கு எடுத்துக்காட்டானதொரு மணிமகுடம். அமெரிக்கப் பெருநாட்டின் கிழக்கு மேற்குக் கரையோர நகரங்களிலும் உள்நாட்டுப் பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கில் பாரதத் திருநாட்டினர் பரவி வாழ்கின்றனர். இவர்களுள் தமிழ்நாட்டவர் அங்கும் இங்குமாகச் சிதறி இருக்கின்றனர். இவர்களையெல்லாம் ஒரு சரமாக இணைத்துக் காணும்- இசைவித்துப் பேணும் முயற்சிகள் ஆண்டாண்டுகளாக அரும்பு கட்டி வந்துள்ளன.

1974-இல் தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு அறக்கட்டளை’ நல்ல அடித்தளத்தோடும், நயந்தரு ஆக்கத்திட்டத்தோடும் பணியாற்றி வருகிறது. சிக்காகோ முதலிய நகர்களில் தமிழ்ச் சங்கங்கள் உண்டு என்றாலும் அனைத்தையும் ஒருங்கே இணைத்துப் பார்க்க ஏற்றதொரு பொது அமைப்பு தேவைப்பட்டது. அந்த நெடிய தேவையை நிறைவு செய்ய ஊன்றப்பட்ட தமிழ்நாடு அறக்கட்டளைக்கு முக்கியமான நகரங்களில் எல்லாம் கிளைகள் உண்டு. சர்வதேசச் சுழற்கழகம், அரிமா சங்கம் என்பன போல, அன்புத் தோழமையும், மனித நேயத் தொண்டையும் இரு கால்கள் எனக் கொண்டு தமிழ்நாடு அறக்கட்டளையும் நடைபோட்டு வந்தது.

தமிழ்நாடு அறக்கட்டளையின் முதன்மை நோக்கம் அமெரிக்காவில் வாழும் தமிழர்களிடையே நெருக்கமான உறவினை ஏற்படுத்துவது; இந்த உறவினை வலுப்படுத்தும் புத்தாண்டு, பொங்கல், நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் விழாக்களை நடத்தி விருந்தயர்வது; அனைத்துச் சமயத்தவர்க்கும் பொது வீடாக – நல்லிணக்க மன்றமாக- அறக்கட்டளையை நிர்வகிப்பது; பல குடும்பங்களை ஒன்றாகக் கூட்டிக்கொண்டு சிறு சுற்றுலாப் போவது; நிலா விருந்து பரிமாறிக்கொள்வது; போட்டிப் பந்தயங்கள் நடத்துவது; நமது கலாச்சாரத்தைப் பிறர் புரிந்து பாராட்ட வாழ்ந்து காட்டுவது.

“அயல்நாடு எதுவாயினும் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் தமக்குள்ளே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு வகைச் சுயநலம் சார்ந்த தற்காப்பு சங்க(ம)ம்தான் இது! இதில் என்ன புதுமை இருக்கிறது?” என்று கேட்க அமெரிக்க நாட்டுத் தமிழ் அறக்கட்டளையினர் வாய்ப்பு அளிக்கவில்லை.

அறக்கட்டளையின் விழுமிய நோக்கம் தாயகத்துத் தமிழ் மக்களுக்குத் தன்னால் ஆன உயர் கொடைகளை நல்க முற்படுவது. அமெரிக்கத் தமிழர்களிடையே நிதி திரட்டி, அதனைக் கொண்டு தமிழ்நாட்டில் விழுமிய சேவைத் திட்டத்தைச் செயலாக்குவதே அதன் புறவடிவம். அங்கு நிதி தொகுக்கவும் இங்கு அது குடை கவிக்கவும் போதிய ஆக்கம் தரக்கூடிய சான்றோர்கள், அறங்காவலர் களாகப் பொறுப்பேற்றனர். டாக்டர் ஜி.பழனிபெரிய சாமி, டாக்டர் இளங்கோவன், சி.கே.மோகனன், டாக்டர் சவரிமுத்து, டாக்டர் ஜானகிராமன், டாக்டர் கோவிந்தன், டாக்டர் நல்லதம்பி, திரு.துக்காராம், டாக்டர் பி.அமரன், திருமதி வெங்டேசுவரி, திரு.ரவிசங்கர், திரு.ஏ.எம்.ராஜேந்திரன், திரு டி.சிவசைலம், டாக்டர் சி.எஸ்.சுந்தரம், டாக்டர் ஆனந்தகிருஷ்ணன், டாக்டர் பொன்னப்பன் என நாள்தோறும் திரண்டுவரும் தொண்டர் அணியினர் அமெரிக்காவில் அறம் வளர்க்கும் நாயகர்களாக விளங்கு கின்றார்கள்.

தமிழ்நாட்டில் ஆயிரம்ஆயிரம் பேர் பயன்பெற விழுதூன்றப் போகும் ஆலமரக் கன்றுகளைப் பேணும் பொறுப்பேற்க உவந்து இசைந்த சான்றோர் வரிசையும் பெரிது; அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம்  நீதியரசர் வேணுகோபால், அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எம்.அனந்தகிருஷ்ணன், திரு.சந்திரன்… அமெரிக்கத் தமிழன்பர்களது அறக்கட்டளைகள் பல வகை; சிறிதும் பெரிதுமாக எண்ணற்றவை; தனி நபர் உதவியாகவும் பலர் சேர்ந்து வழங்கும் கொடையாகவும் நூற்றுக் கணக்கானவை. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல்லார் பெயரால் பரிசுக் கட்டளைகள், தமிழ்நாட்டில் பள்ளிக் கட்டிட நிதிகள், ஆன்மீக, ஆசிரம தர்மங்கள், மருத்துவ மனைக் கொடைகள், ஈழத் தமிழர் வாழ்வு நலன்கள் என்றெல்லாம் வாரி வழங்கி வருபவை.

Image result for thirukural manimozhian

ஆனால் தமிழ்நாடு அறக்கட்டளை இந்த எல்லைகளையும் தாண்டியது. என்றும் பயன்தரும் வேலைத் திட்டங்களை தமிழ்நாட்டில் செயலாக்கும் கருத்துடையது. அவற்றுள் முக்கியமானது; சென்னையில் பல லட்சம் டாலர் செலவீட்டில் உருவாகிவரும் தொழில் நுட்பக் கேந்திரம் எனும் தொழில் நுட்பப் பரிமாற்றப் பயிற்சி மையத்தைச் சென்னையில் நிறுவுவது. இது தமிழ்நாட்டு இளைஞர்கள் அமெரிக்காவில் நாள்தோறும் வளர்ந்துவரும் புதுப்புதுத் தொழில் நுட்பங்களை எல்லாம் அறிந்து கொள்ள வாயில்களைத் திறந்து வைக்கும். நிகரான அறிவியல் சிந்தனைகள் இங்கும் சமகாலச் சாதனையாகப் பாத்தி கட்டும். இது எளிய காரியம் இல்லை. பலரது மகத்தான கூட்டு முயற்சியால் மட்டுமே இதனைச் சாதிக்க முடியும்.

சாதனைப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ள பேரமைப்பினர் விடுத்துள்ள அழைப்பினை ஏற்பது எத்தகைய பெருமை? அந்தப் பெருமையை எனக்குத் திருக்குறள் அல்லவா பெற்றுத் தந்துவிட்டது!

திருக்குறள் பயணம்

 

Image result for thirukural manimozhian

“ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும்

     பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் & போய் ஒருத்தர்

     வாய்க்கேட்க நூலுளவோ…?”

என்று திருக்குறளுக்குப் புகழஞ்சலியாக விளங்கும் திருவள்ளுவ மாலையைத் தொகுத்துள்ள நத்தத்தனார் பாடினார். இப்பாடலைப் படித்த போதெல்லாம் இளமைப் பருவத்திலேயே என் மனத்தில் கேள்வி ஒன்று எழுந்தது. “1330 அருங்குறளையும் மனப்பாடம் போலப் படித்துவிட முடியுமா?” எனும் அக்கேள்விக்கு, “ஏன் முடியாது? முயன்று தான் பார்ப்போமே!” எனும் உறுதி பிறந்தது. நான் வளர்ந்த காரைக்குடிக் கம்பன் கழகமும் திருக்குறள் மன்றமும் தமிழ் உணர்வூட்டிய கல்விச்சூழல் அந்த உறுதிக்கு மேலும் உரம் ஊட்டியது. வாரம் ஓர் அதிகாரம் என எனக்குள் எல்லை கட்டிக்கொண்டு குறள் கருத்துக்களை என் நினைவுத் தவிசில் ஏற்றுக்கொள்ள முயன்றேன். தங்கத்தின் தரத்தை உரை கல்லில் தேய்த்து மாற்றுப் பார்ப்பதைப் போல, வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் திருக்குறளை உரைகல்லாகக் கொள்ளமுடியும் எனத் தெளிவு பெற்று வந்தேன். யார், எந்தக் கருத்தைச் சொல்லக் கேட்டாலும் இதனை வள்ளுவர் எப்படிச் சொல்லியிருக்கிறார் எனத் தேடி துருவத் தலைப்பட்டேன். குறட்பாக்களின் அருமையும் பெருமையும் ஆழமும் விரிவும் என்னை மேலும் மேலும் கருத்தூன்றிப் படிக்கத் தூண்டின. ஒரு நூலிலாவது நல்ல பயன் தரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற என் ஆசைக்கு ஓர் அளவுகோலாகக் குறட்பாக்கள் அமைந்துவந்தன. வாழ்வின் புதிய அனுபவங் களுக்கு உட்பட்ட போதெல்லாம், வற்றாச் சுரங்கமாகவும் வழிகாட்டும் வான் விளக்காகவும் எனக்குக் குறள் நெறிகள் விளங்கத் தொடங்கின. இயன்ற வகையில் எல்லாம், தனிமுறையிலும் பொது வகையிலும் குறள்நெறிச் சீலங்களைப் பரப்பி வாழவேண்டும் எனும் உணர்வினை நாள்தோறும் என்னுள் புதுக்கி வந்தன.

தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் பல்லாண்டுகள் இயங்கி வரும் தமிழ்நாடு திருக்குறள் பேரவையின் (பொதுச் செயலர்) பொறுப்பேற்ற நாள்தொட்டு வாழும் வாழ்க்கைக்கும் காலத்திற்கும் பொருந்தும் வகையில் குறள் நெறிகளைப் பரப்ப வேண்டும் எனும் நோக்கத்தினைச் செயல்படுத்த முற்பட்டோம். ‘செய்க பொருளை’ எனும் சிந்தனைத் தலைப்பில், அறிஞர், அறிவியலாளர், தொழில் அதிபர், இளைஞர் முதலிய பல்வகைச் சமுதாயப் பிரிவினரையும் கருத்தரங்கேறச் செய்தோம். அக்கருத்தரங்கு புதிய புதிய செயல் திட்டங் களுக்கு வருக எனக் கைகாட்டி அழைக்கக் கண்டோம். முன்னோடித் திட்டமாக, ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, ஒருங்கிணைந்த வள்ளுவர் நெறி வளர்ச்சியை அங்கு நடைமுறையாக்க முற்பட்டோம்.

Image result for thirukural manimozhian

உலகத் தமிழ் மாநாட்டு நினைவாக, தமிழ்நாட்டின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆய்வுக்கான நிதிக்கட்டளை ஒன்று அரசு சார்பில் ஏற்கனவே நிறுவப்பட்டு, திருக்குறள் ஆராய்ச்சித் துறைகள் இயங்கி வந்தன. என்றாலும் உலகளாவிய வண்ணம், பிற நாடுகளில் வாழும் தமிழ் மக்களோடு தொடர்பு கொள்ளும் வகையில் ‘உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையம்’ ஒன்றினை, திருக்குறள் அரங்கேறிய சங்கத் தமிழ் மதுரையில் நிறுவ வேண்டும் எனும் தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கனவினை நனவாக்கும் காலம் கனிந்தது. மதுரையில் பன்னாட்டுத் திருக்குறள் ஆராய்ச்சி மைய அறக் கட்டளையினை நிறுவப் பதிவு செய்தோம். இதனைக் கேள்வியுற்ற அமெரிக்கத் தமிழ் அன்பர்கள், அங்கு சிக்காகோவில் ஆண்டுதோறும் நிகழும் மாநாட்டிற்கு வருமாறு சிக்காகோ திரு.பி.ஜி.எம். நாராயணன், திரு.வெங்கட்ட ராமானுஜம் ஆகியோர் எனக்கு அழைப்பு விடுத்தனர். மதுரையில் திரு.பன்னீர் செல்வம், திருமதி. லதா பன்னீர்செல்வம் (மகாத்மா மாண்டிசோரி) இருவரின் முயற்சியும் தூண்டுதலும் என்னை ஊக்குவித்தன.

தொழில் காரணமாகவும் சுற்றுலா விழைவு காரணமாகவும் ஏற்கனவே பல நாடுகளுக்குச் சென்று வரும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தேன். எனினும் இந்தத் திருக்குறள் பயண அழைப்பு முற்றிலும் புதுமையாகத் தோன்றியது. நாடு கடந்து வாழும் தமிழர்களின் தாய் நாட்டுப் பற்றையும் மொழி உணர்வையும் நேரில் அறியும் சந்தர்ப்பங்களையும் தருவதாக இது அமைந்தது.

பயணம் செல்வது இனியதொரு வாழ்க்கை அனுபவம். எத்தகைய உணர்வோடும் அறிவு நாட்டத்தோடும் பயணம் புறப்படுகிறோமோ, அவ்வுணர்வையும் நாட்டத்தையும் மேலும் அதிகமாகப் பெற்றுத் திரும்பச் செய்யும் பயன்மிகு முயற்சி; கையில் உள்ள பணத்தைச் செலவிட்டு, மூளைக்குள்ளே புதுப்புதுச் செய்திகளை அடக்கிக் கொண்டு வரும் வாழ்க்கை வாலிபம்; ஒவ்வொரு ரோஜாச் செடியிலும் முள் இருக்கிறது எனத் தெரிந்திருந்தும் அதனூடே மலர்ந்திருக்கும் பூவிலிருந்து தேனை மட்டும் மாந்தி வரும் தேனீயின் உழைப்புப் போன்றதொரு செயல்திறம்; சரக்கு மூட்டைகளை வண்டியில் ஏற்றிச் செல்வது போலப் போய்வராமல், உணர்வாக்கம் கொண்டதொரு பகுத்தறிவோடு ஊர் சுற்றிவரச் செய்யும் கலைத்திறன்; நமது வீடு, நாடு எனும் குறுகிய வரையறைக்குள் இருந்து பழகிப் போனவர்களின் பார்வையினை, ‘பெரிதே உலகம், பேணுநர் பலரே!’ எனும் எல்லைக்கு விரிவுறச் செய்யும் இரசவாதம்; எப்பொருள் எத்தன்மையதாயினும் அப் பொருளை மெய்ப்பொருளாக நேரடியாகக் காணச்செய்யும் அறிவுத் தேட்டம்…

வரலாற்றிலும் இலக்கியத்திலும் பல நாடுகாண் காதைகள் அரங்கேறியுள்ளன; சமய அனுசாரமும், வாணிப ஆதாயமும் பல ஊர்காண் காதைகளை உருவாக்கியுள்ளன. ஒவ்வொரு மனிதனின் தேவைக்கும் உரிய வகையில் பல்வேறு வகையான பயணங்கள் அன்றாட வாழ்வில் நிகழ்ந்தேறியே வருகின்றன.

என் வாழ்வெல்லாம், மனமெல்லாம் ஆட்கொண்ட ஒரே நூலாகத் திகழும் திருக்குறள் வழியாக இப்பயண வாய்ப்பினை வெளிநாட்டுத் தமிழன்பர்கள் எனக்கு அளித்தனர். எனவே ஒரு நாட்டுப் பயணமாக மட்டும் இந்த வாய்ப்பினைக் குறுக்கிக் கொள்ளாமல், பல நாட்டுப் பயணமாக விரித்து அந்த அழைப்பினைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளத் தீர்மானித்தேன். மேற்கு நாடுகள் சிலவற்றில் வாழும் என் இனிய நண்பர்களுக்கு என் வருகை பற்றி, திருக்குறள் பயணம் பற்றி எழுதினேன்.

Image result for thiruvalluvar painting

தமிழ் மக்கள் உலகின் பல நாடுகளில் உரிமைபெற்ற குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்திய மொழிகளில், உலகெல்லாம் பரவிய சிறப்புக்கு உரியதாகத் தமிழ்மொழி திகழ்கிறது. ஓரிரு நாடுகளில் ஆட்சி மொழியாகவும் பெருமை பெற்று விளங்குகிறது. பல்வேறு நாடுகளில் பன்னெடுங்காலமாகக் குடியேறி வாழும் நம் மக்களைத் தமது சொந்த நாட்டோடும் புராதனப் பண்பாட்டோடும் உறவுக் கயிறு அறுந்து போகாமல் இணைத்து வைக்கும் பாலமாகத் தமிழ் மொழியே விளங்குகிறது.

ஆனால் அண்மைக் காலங்களில் இந்த உறவுக் கயிறு வலுவிழந்தும் இணைப்புப் பாலம் செயல் இழந்தும் போகக்கூடிய அரசியல், மற்றும் சமூக வாழ்க்கை நெருக்கடிகள் ஆங்காங்கு ஏற்பட்டன. எனவேதான், உலகத் தமிழ் மாநாடு கூட்டி உரமேற்றும் முயற்சிகளும் தாய்நாட்டு அன்பர்களைத் தம்மிடத்திற்கு வரவழைத்து உறவேற்கும் மலர்ச்சிகளும் அணிவகுத்து வருகின்றன.

தேமதுரத் தமிழோசையினை உலகின் பல நாடு களிலும் செவிமடுத்துக் கேட்கும் விழாக்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. உலகப் பொதுமறையாகத் திருக்குறளை நிலைப்படுத்தும் ஆக்கங்களும் அரும்பு கட்டி வருகின்றன.

எப்பாலவரும் ஏற்கும் சிறப்புடையது முப்பாலாக அமைந்த திருக்குறள். அறம் பொருள் இன்பம் எனும் இம்முப்பால் பாகுபாடு, அனைத்து மக்களுக்கும் உரிய அடிப்படை வாழ்க்கைப் படி முறையாக சங்க இலக்கியம் தொட்டே வரன்முறைப்படுத்தப்பட்டு அமைந்தது.

“அந்நில மருங்கின் அறமுத லாகிய

     மும்முதற் பொருட்கும் உரிய என்ப”

எனத் தொல்காப்பியமும்,

“அறம் பொருள் இன்பம் என்று அம்மூன்றும்”

எனக் கலித்தொகையும்,

“அறமும் பொருளும் இன்பமும் மூன்றும்

     ஆற்றும் பெரும நின் செல்வம்”

எனப் புறநானூறும்,

“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

     தீதின்றி வந்த பொருள்”        (754)

எனத் திருக்குறளும், முப்பால் மரபினை முழுதுலகிற்கும் பொதுவாக அறிவித்துள்ளன.

அறம் பொருள் இன்பம் எனும் முத்துறைகள் பற்றியும் முழுமையான, முதன்மையான அறங்களைச் செவ்வனே வகுத்துச் சொல்லும் ஒரே நூலாக, ஒரே ஆசானால் எழுதப்பட்ட ஈடற்ற சிந்தனை நூலாக, செயல் நூலாகத் திருக்குறள் மட்டுமே போற்றப்படுகிறது. மறு உலக அச்சம் காட்டியோ, ஆசை காட்டியோ ஒழுக்கங்களை வற்புறுத்தாமல், இவ்வுலக வாழ்வின் உண்மை, நன்மை ஆகியவற்றை மட்டுமே கருதி, தனிநபர், சமுதாய நடைமுறைகளை வரன்முறைப்படுத்தும் வாழ்க்கை நூலாகத் திருக்குறள் மட்டுமே நிலைபெற்று விளங்குகிறது. எனவே சுவையான கரும்பு தின்னக் கூலியும் கிடைத்ததைப் போல் கருதி எனக்குக் கிட்டிய திருக்குறள் பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டேன்.

திருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்றி நாம் வாழும் காலத்திற்கும் பொருத்தமாகச் சமுதாயச் சிக்கலுக்கு அறவியல் தீர்வு காண்கின்றார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கும், துன்பம், கவலை நீங்கி இன்பம் இடையறாது பெறுவதற்கும் அமைதியும் முழுமையும் நிறைவும் பெறவும் வள்ளுவம் வழிகாட்டுகிறது.

“யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்

     சாந்துணையும் கல்லாத வாறு.”  (397)

எனும் குறட்பா உலகோர் அனைவருக்கும் பொது நிலையறம் புகட்டுகிறது.

 

 

குறள் நிலா முற்றம் 12

ஒருங்கிணைப்பாளர்

“குறளில் ‘நட்பு’ எனும் மானுடப் பொது உறவு பற்றி வரும் ஐந்து அதிகாரங்கள் ஒருபுறம் இருக்க, இருமுறை வரும் அதிகாரப் பெயர் ஒன்றும் உள்ளது. அது என்ன என்று சொல்கிறீர்களா?”

(அவையில் சற்று அமைதி)

“நானே சொல்லிவிடுகிறேன். அது தான் குறிப்பறிதல்!”

இளைஞர் ஒருவர்

“செம்மல் லேசாக ஜாடை காட்டியிருந்தால், இந்தத் தலைப்புப் பெயரை நானே சொல்லி இருப்பேன். நெஞ்சில் நின்றது, சொல்லில் வருவதற்குள்…”

ஒரு புலவர் ஐயா

“இந்தக் காலத்துத் தம்பிகளில் பெரும் பாலோர்க்குக் குறிப்பறிதல் உடனே புரிவதில்லை; அவர்களுக்குப் புரியும் குறிப்புக்களோ நமக்குப் புரிவதில்லை.”

(அவையில் பலத்த சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“‘குறிப்பறிதல்’ அதிகாரப் பெயர் – பொருட்பாலில் அங்கவியலில் உண்டு; காமத்துப் பாலில் களவியலிலும் அது உண்டு. அங்கே அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகத்தைச் சொல்லுகிறார்.”

பெரும்புலவர்

“இங்கேதான் சிறிசுகள் முகத்தை மூடிக்கிறதுகளே?” (அவையில் சிரிப்பு).

ஒருங்கிணைப்பாளர்

“காமத்துப் பாலில் அறத்துப்பால் உள்ளிட்ட பல உளவியற் செய்திகளை நுட்பமாகச் சொல்லுகிறார் வள்ளுவர் எனச் சற்று முன் சொன்னேனே… அதைத் தொடர்ந்து சில நினைவுச்சரங்கள்.”

பேராசிரியர்

“இன்பத்துப்பால் தான் இதர அறம், பொருள் பிரிவுகளுக்கு அடிப்படை எனத் ‘திருக்குறள் செம்மல்’ அவர்கள் தக்க சான்றுடன் எப்போதும் நிறுவுவார்…

ஒருங்கிணைப்பாளர்

இதற்கிடையே இந்த நூற்றாண்டின் தொடக்க நன்னாளில் உலகே வியக்க, நம் பாரதத் திருநாட்டின் பாதச்சுவடாக விளங்கும் நீலத்திரைக் கடலோரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரியின் முக்கடல் கூடும் இடத்திலே, உலகு வியக்க நிறுவப்பெற்ற திருவள்ளுவரின் சிலை அமைப்பும் இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே செதுக்கப்பட்டுள்ளது என்பதும் உலகம் உள்ள வரை நிலை பெற்றிடும்.”

பேராசிரியர் வளனரசு

“சிலை திறப்புப் பெருவிழாவில் பங்கேற்று மகிழ்ந்த நான் காணாத ஏதோ ஒரு செய்தியைப் பேராசிரியர் சொல்லுகிறார்.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“கலைஞர் பெருமானாரின் 20 ஆண்டு விடா முயற்சியாலும் அருங்கலைச் சிற்பி கணபதி ஸ்தபதியின் குழுவினரது ஈராண்டு உறங்கா உழைப்பாலும், கருங்கற் களைப் பாளம் பாளமாக வடிவமைத்து வண்ணமுற நிமிர்த்தப்பட்ட இந்தத் திருவள்ளுவர் சிலை, அமெரிக்க சுதந்திரதேவி சிலையை விடச் சிறப்புப் பெருமையுடையது; கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெறத்தக்கது. 1330 குறட்பாக்களை 133 அதிகாரங்களில் வகுத்துள்ளமைக்குச் சான்று பகருவது போல 133 அடி உயரப் பெருமையுடையது; பிரமிப்புத் தருவது.

இதில் நான் சிறப்பாக அவையோர் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவது இந்த 133 அடி உயரச் சிலையின் மூன்று நிலைப் பகுப்பு.

சிலைநிற்கும் ஆதார பீடத்தின் உயரம் 38 அடி. இது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களுக்கு நிகர். இந்தப் பீடத்தின் மீது நிமிர்ந்து நிற்கும் உருவச் சிலையின் உயரம் 95 அடி. அதாவது பொருட்பால் அதிகாரம் 70, இன்பத்துப்பால் அதிகாரம் 25 இரண்டும் சேர்ந்தால் 95, ஆதார பீடத்தையும் சேர்த்தால் ஆக மொத்தம் 133 அடி (அவையோர் கர ஒலி)

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் வள்ளுவர் சிலையின் வடிவமைப்பை விரித்துச்சொல்லி வள்ளுவர் முப்பாலில் காமத்துப்பால், பொருட்பால் எனும் இரண்டும் அறத்தின் மீதே ஊன்றி நிற்கின்றன எனும் அற்புதப் பொருத்தத்தை அழகுறச் சொன்னார். அறிதற்குரிய அரிய செய்தியை நினைவூட்டியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி (மீண்டும் கைதட்டல்) நான் விட்ட இடமான சிலை பற்றிய விவரங்களை மீண்டும் பேசுவோம். அறிதோறும் அறியாமை கண்ட இடத்திற்கு மீண்டும் போகலாமா?”

“ ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம், செறிதோறும் சேயிழை மாட்டு” (1110) எனும் ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதிகார இறுதிக் குறட்பா அறிவினைத் தேடத் தேட, அறியாமையே மிகுவதை இவ்வளவு நுட்பமாக உணர்த்துகிறது. மற்றொரு அருமையான குறள்.. அதே அதிகாரத்தில்தான்,

“தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

     அம்மா அரிவை முயக்கு”            (1107)

என நம்மை விருந்தோம்பலோடு இந்த மனையாளொடு இருந்தோம்பி மகிழும் ஆரா இன்பத்தையும் அழகுற ஒன்றாக்குகிறார் வள்ளுவர்..”

இடைமறிக்கும் புலவர்

“தமது வீட்டில் இருந்து கொண்டு, தாம் சம்பாதித்தலில் விருந்து அளித்து அதை விருந்தினர் வயிறார உண்பதைக் கண்டு மகிழும் மனம்…”

பெரும்புலவர்

“பின்னே என்ன? ஓட்டலுக்குப் போய் நாலு பேரோட வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு, பில்லைத் தட்டுலே வச்சவுடனே வேறே பக்கம் முகத்தைத் திருப்பிக்கிற இந்தக் கால நாகரிகத்தை – அடுத்தாத்து நெய்யே என் அகத்துக்காரி கையேங்கிற உபசாரத்தை – வள்ளுவர் செய்யவில்லை.”

ஓர் அரசு அதிகாரி

“நண்பருடன் ஓட்டலுக்குப் போய்ச் சிக்கிக் கொண்ட அனுபவத்தோடு புலவர் ஐயா பேசுகிறார்” (சிரிப்பலை)

புலவர்

“அட, நான் ஓட்டலுக்கே போறதில்லைய்யா. வீட்டிலேயே நமக்கு எப்போதும் விருந்துதான் போங்க…”

இன்னொருவர்

“அந்த ரகசியத்தையும் சொல்ல மாட்டேங் கிறீங்களே” (மீண்டும் சிரிப்பு)

மற்றோர் அரசு அதிகாரி

“இந்தப் பரம ரகசியங்களை எல்லாம், ஒவ்வொருவரும் பகிரங்கப்படுத்தத் தொடங்கி விட்டால் அதற்காக என்றே தனி இயல் ஒன்றை நாமே வகுத்து, அதையும் வள்ளுவர் தலையில் கட்டிவிடலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“வருமான வரித் துறை ஆணையர் திரு மோகன் காந்தி அவர்கள் ஏதோ புதிய செய்தி ஒன்றை எழுப்ப விழைகிறார். கேட்டறியலாமே?”

வருமான வரித் துறை ஆணையர் திரு.மோகன் காந்தி

“மூதறிஞர் ராஜாஜி அவர்களின் ‘பஜ கோவிந்தம்’ எனும் நூலைப் படித்தேன் இரு குறட்பாக்களில் வரும் ‘வேண்டாமை எனும் செருக்கு – பற்றுக பற்றற்றான் பற்றினை’ எனும் வரிகளுக்கு மன நிறைவான விளக்கம் பெற்றேனில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“பொருள் சேர்ப்பது வாழ்க்கைத் தேவை. அதனை உழைப்பால் நியாயமான முறையில் ஈட்ட வேண்டுமே தவிர, அறம் தவறிப் பொருள் சேர்க்கும் வேணவா, பேராசை அறவே கூடாது. அதிலும் தவறு எனக் கருதாமல், பிறர் பொருளைக் கவர முயன்றால் அதனால் முடிவில் துன்பமே மிகும். ‘இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும், வேண்டாமை என்னும் செருக்கு’ (180) என்பது குறள். பிறர் பொருளைக் கண்டு பொறாமை யுறுவதே குற்றம் எனப்படும். அப்படியிருக்கப் பிறர் பொருளை எப்படியேனும் அபகரிக்கச் சதித்திட்டம் செய்வது பெருங்குற்றம். அன்புடையவர் பிறர்க்குப் பொருளுதவி செய்து அவரைக் கை தூக்கி விடுவர்.”

அரசு அதிகாரி ஒருவர்

“பொறாமையும் பேராசையும் உடையவர் உதவி செய்வது போல நடித்துத் தக்க சமயத்தில் காலை வாரி விடுவார். கை தூக்கி விடுவதை விட, காலை வாரி விடுவதுதான் இப்போது மிகச் சுலபமாகத் தெரிகிறது.” (அவையின் முறுவல்)

ஒருங்கிணைப்பாளர்

“அன்பற்ற பொறாமைக் குணமுடையார், கொள்கையோ நடுநிலையோ இல்லாது, பிறர் தேடிய பொருளைத் தான் மட்டும் எப்படியும் அடையக் கருதினால், அவர்களுடைய குடி அழியும், குற்றங்களும் அப்போதே விளையும். எனவே, தவறான முறையில் பொருள் தேட மறுப்பதே ஒருவகையில் மானமுடைய செருக்கு என்கிறார் வள்ளுவர்.”

பெரும்புலவர்

“கலைத்திறமுடையோர்க்குக் கலைச்செருக்கு இருப்பது போல, தமது அரிய உழைப்பால் பெருஞ்செல்வம் சேர்த்தோர் சிலரிடம் மிடுக்கு அமைவது போல, வெற்றி மேல் வெற்றி பெறும் அரசியல் தலைவர்கள் சிலருக்குச் செருக்கு வந்து பற்றிக்கொள்ளுவது போலப் பிறர் பொருளைக் கவர நினையாமையே ஒரு வகையில் செருக்கு; அதாவது, வியந்து பாராட்டத்தக்க செருக்கு எனும் குறள் கருத்தைச் செம்மல் விளக்கியமைக்கு நன்றி. அடுத்து..”

ஒருங்கிணைப்பாளர்

‘நடுவுநிலை தவறிச் சேர்த்த பொருளால் தானம் செய்து புகழ், விளம்பரம் என்றெல்லாம் தேடினாலும், அது, ஒருவகையில் கருமித்தனம் தான்.”

புலவர் ஒருவர்

“அதற்குப் பின்னால் கர்ம வினைப் பலனும் உண்டு.”

ஒருங்கிணைப்பாளர்

“அறத்தொடு சாராத பொருளைப் பிறர்க்கு ஈகை செய்வதால், புகழோ பெருமையோ நிலைபெற்று விடாது, வெற்று விளம்பரமாகவே போய்விடும்.”

வருமான வரித் துறை அதிகாரி

“ராஜாஜி சொன்ன.. பற்றுக குறளைக் கொஞ்சம் பற்றுக..” (அவையில் சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

     பற்றுக பற்று விடற்கு..”        (350)

என்பது வள்ளுவம்”

பெரும்புலவர்

“வருமான வரித் துறை ஆணையர் கேட்ட கேள்வியில் எத்தனை பற்றுகள்? பற்றும் வரவும் இல்லாமல் பேரேடு போட முடியாது. வரிவிதிப்பும் கிடையாது” (சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“‘துறவு’ அதிகாரத்தின் இந்தக் கடைசிக் குறளில் ‘பற்று’ எனும் பிடிப்பு வாழ்வையும் விடுப்பு வாழ்வினையும் வள்ளுவர் வேறுபடுத்திக் காட்டுகிறார். துறவு முறைகள் பல வகை. இளங்கோவடிகள், விவேகானந்தர் போன்றவர்களின் மணவாத் துறவு, மணந்து வாழும் போதே ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின் மேற்கொள்ளும் சில கோட்பாட்டுத் துறவுகள், அருளுணர்வு பெருகி, தன்னலம் ஓய்ந்தபின், இல்லற வாழ்வையும் துறந்து, பிறர் நலம் பெறவும், தன் ஆன்மா உய்வு பெறவும் முழுமைத் துறவே பூணுதல்… ஆனால், இல்லறத்தில் இருக்கும் போதே, சில நிலைகளில் பற்றற்று வாழ்ந்து, கடமையைச் செய்வோரும் காந்தியடிகளைப் போலச் சிலர் உண்டு. புறத்துறவும் கொள்ளலாம். அகத்துறவும் அமையலாம். முழுமையான, பற்றறுத்த வாழ்க்கை, ஐம்புலனையும் செம்மையாக அடக்கிய வாழ்க்கை பூணுவது எளிதில்லை. ‘யான், எனது…’ என்பது இருந்தே தீரும்.”

பெரும்புலவர்

“ஏதாவது ஒன்றைப் பற்றி நிற்பதே உயிரின் இயல்பு. எனவே சில்லறைப் பற்றுக்களை விட வேண்டுமானால் செம்பொருளான சிறந்ததொரு பற்றினைப் பற்றுக என்பது தானே பொருள்?”

ஒருங்கிணைப்பாளர்

“பிறவி நோக்கம் இடையறா இன்பமே ஆகும். அதனால் நிம்மதியும் அமைதியும் பெறுவதே குறிக்கோள். இந்த இன்பத்திற்கு அடிப்படை ஆசை. அது அளவின்றிப் பெருகிப் பேராசையாகிவிட்டால், அதுவே துன்பத்திற்கு மூல காரணம் ஆகிவிடுகிறது.”

பேராசிரியர்

“அதாவது, ஒருவன் எதனிடம் மிகுபற்றுக் கொண்டு வாழ்கிறானோ அதனால் துன்பம் அடைவான், எதிலிருந்து பற்று விட்டு நிற்கிறானோ அதானல் அவனுக்குத் துன்பம் இல்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்’ (341) எனும் குறட்கருத்து அதுதான். இந்தப் பத்தாம் பற்றுக் குறளை வள்ளுவர் வினா – விடை போல அமைத்துள்ளது தான் சிறப்பு. கைவிட வேண்டியது எது? பற்று விடுதல். அதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும்? வேறொன்றைப் பற்றுக. இந்தப் ‘பற்றுக’ எனும் பதத்தை மிக நயமாகக் கையாண்டு ஒருவகை மயக்கமூட்டுகிறார் வள்ளுவர்.”

பெரும்புலவர்

“ஆமாம், எதைப் பற்றினாலும் மயக்கம் வந்துவிடாமல் கைப்பற்ற வேண்டும்.”

ஓரன்பர்

“புலவர் ஐயா எந்தப் பற்றையும் இன்னும் விடாத அனுபவத்தைச் சொல்கிறார்” (அவையில் சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“இப்போதெல்லாம் தனிநபர் வாழ்வை விடச் சமுதாய வாழ்வில் இருப்போரிடம் பொதுப்பற்றை விடத் தன்னலப் பற்று, தன் பெண்டு, தன் பிள்ளை என்னும் வாரிசுப் பற்றுகள் ஆட்டி வைக்கின்றன. இத்தகையோரிடம் மக்களிடம் அதிலும் சிறப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழே சீரழிந்தோரிடம் இரக்கச் சிந்தை எனும் பற்றுறுதி ஏற்பட்டால், பிற சுயநலப் பற்றுக்கள் எல்லாம் தாமாக விட்டுப்போக ஆரம்பித்துவிடும். புகழ்ந்தவை போற்றிச் செய்யும் பெருமனம் வளரத் தொடங்கும். வள்ளலார் வேண்டியது போல, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்யும் தொண்டுமனப் பற்று விடாது பற்றிக் கொள்ளும். அதனைப் பற்றுக என வள்ளுவர் சொன்னதாகக் கருதி ராஜாஜியின் பஜ கோவிந்தச் சரிதத்தை நாமும் ஏற்போம்.” (கை தட்டல்)

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“எல்லோரும் ‘பஜ கோவிந்தம்’ மட்டும் பாடிக் கொண்டே இருந்தால் நாட்டில் படரும் பசிப்பிணி போய்விடுமா, என்ன? இந்த உலகு இருக்கும் வரை ஏழையரும் இருப்பர். எனவே அயலாரை நேசித்து உதவும் பற்றினை வளர்ப்பதே மனித நேயம். அது இல்லாத வெறும் இறைபக்தி பொருளற்றது என விவிலியம் போதிக்கிறது.”

இடையில் ஒருவர்

“கிட்டத்தட்ட எல்லாச் சமயங்களின் உபதேச சாரமும் அதுதான்.”

ஒருங்கிணைப்பாளர்

“உபதேசம் வெறும் ஊறுகாய் போல மட்டும் இருந்து விடலாமா? பற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளரவேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.”

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 6

Related image

ஒருவர்

“மன்னிக்கவும்… மொழிபெயர்ப்பு முறைகள் – முரண்பாடுகள் பற்றிக் கூற எனக்குப் போதிய ஞானம் இல்லை; ஆனால் குறள் கூறும் கருத்துக்களில் ஆங்காங்கே பல என்று சொல்லாவிட்டாலும் சில முரண்கள் தோன்றுவதாக என் சிற்றறிவு சுட்டுவது உண்டு.”

மற்றோர் அன்பர்

“‘குறளில் முரண்பாடு’ என்று இவர் புதிய சர்ச்சையைக் கிளப்புகிறாரே..?”

ஒருங்கிணைப்பாளர்

“சர்ச்சைகள், சந்தேகங்கள் வந்தால் தானே தெளிவு பிறக்கும்? .. குறள் கூறும் செய்திகளில் முரண்கள் இருப்பது போலத் தோன்றுவதும் உண்மை என அறிஞர்கள் சிலர் கருதியது உண்டு. அவற்றையும் நிலா முற்றத்தில் சிந்தித்துச் சிறந்ததைப் பாராட்டுவோம், சிறப்பில்லாததைச் சீராக்குவோம்.”

ஓர் அன்பர்

“ஐயா… இந்த முரண்பாட்டிற்குள் நுழைந்தால் நம் வயிறுகள் முரண்பாடு செய்யும் போலத் தோன்றுகிறது. செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பார்கள். செவி நிறையக் கேட்டு விட்டோம். வயிற்றுக்கு ஏதேனும் வருமா எனப் பாருங்கள். வயிறு கிள்ளுகிறது” (சிரிப்பலை)

மற்றோர் அன்பர்

“அதோ.. உணவுப் பண்டங்களின் வரிசை வைப்பு உங்கள் கண்ணில் படவில்லையா? இரண்டு வரிசை இருக்கிறது! அதென்ன இரண்டு வரிசை? ஒன்று சைவம்; மற்றொன்று அசைவம்.”

ஒருங்கிணைப்பாளர்

“உணவுக்கு முன் ஒரு நிமிடம்… கவிஞர் கருப்பையா அவர்களே, திருக்குறளின் சிறப்பான பெருமைகளை எடுத்துக் கூறுங்கள்?

கவிஞர் கா.கருப்பையா

திருக்குறளுக்குச் சூட்டப்பெற்ற புகழாரங்கள் சில:

    “திருக்குறள் நீரோட்டம் பாயாத தமிழ்வயல்களே இல்லை”

– மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார்

மானிட வேதம்

“சினமெனும் வேதம் மற்றும் இடமெனும் பேதம் மாறும்

 தினமெனும் வேதம் யாவும் தீர்த்தொரு பொதுமை கண்டு

 வாழ்வியல் படைத்த மேதை வள்ளுவன் தந்தமுப்பால்

 சூழ்நிலை அனைத்தும் தன்னுள் சூழ்ந்தொரு பாதை

காட்டும்,

 மானிட வேதம் சிந்த வையத்தார் அனைவர்கட்கும்

 தேனினும் இனிய எங்கள் செந்தமிழ் தந்த செல்வம்”

& அறிஞர் வா.செ.கு. (குலோத்துங்கன்)

ஒப்பற்ற நூல்

“வானுக்குச் செங்கதிரவன் போன்றும்

     புனல் வன்மைக்குக் காவிரியாறு போன்றும்

     நல்ல மானத்தைக் காத்து வாழ எண்ணும்

     வையக மாந்தர்க்கு ஒப்பற்ற நூல் திருக்குறள்…”

& பாவேந்தர் பாரதிதாசன்

வளரும் எண்ணம்

“வள்ளுவரின் குறள் மீது விழியை நாட்டி

     வடித்த இரண்டடி எடுத்து மனத்துள் போட்டுத்

     தெள்ளிதின் நற்பொருள் கண்டே உளம்பூரித்துச்

     சிந்தித்துப் பார்க்குங்கால் வளரும் எண்ணம்”

& கவியரசு கண்ணதாசன்

“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்…” என்றுதானே வள்ளுவர் சொன்னார்; நாம் செவிக்கு இதுவரை உணர்வு பெற்றோம்; இனி வாயுணர்வுக்கு வகை வகையாக வைக்கப் பட்டுள்ளவற்றையும் ஒரு கை பார்த்துவிட்டு வருவோமே! பந்திக்கு முந்துங்கள் ஐயா!”

 

ஒருவர்

“நிலா முற்றத்தில் செவிக்குக் கிட்டிய உணவால் நிறைவு கிட்டியதா..?”

மற்றவர்

“அல்லது வயிற்றுக்குக் கிட்டிய அறுசுவை உணவால் நிறைவு ஏற்பட்டதா? எனச் சொல்ல முடியாத அளவு நிலாச்சோறும் சுவையாய் இருந்தது; வள்ளுவச் செய்திகளும் சுவையாய் இருந்தன.”

முன்னவர்

“அது சரி… நாம் சைவப் பந்திக்குச் சென்று வந்தோம். அசைவத்தை நாடிச் சென்றவர்கள் எங்கே? இன்னும் காணோமே…”

இரண்டாமவர்

“அதோ பாரும் ஐயா… அசைந்து அசைந்து, ஆடியபடி வருகிறார்கள். நடக்கக்கூட முடியாமல்.. அவர்தான் அசைவ வேட்டைக்குப் போனவர்… அவர் அசைந்தாடி வந்தபின் சாப்பாட்டை ருசித்துப் பாராட்டுவார். வந்த பின் கேட்டால் நமக்கும் நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். கட்சி மாறி விடுவோம்.” 

முன்னவர்

“செவிக்கு இனிய உணவோடு நாவிற்குச் சுவையான அமுதும் அளித்தமையை உளமாரப் பாராட்ட வேண்டும்.”

மற்றவர்

“நீரே பாராட்டிவிட்டீர் மிக அரிதாக, ஆச்சரியமாக!”

முன்னவர்

“ஏன் அப்படிச் சொல்கிறீர்? நல்லதைப் பாராட்ட வேண்டியது மனிதப் பண்பு அல்லவா?”

மற்றவர்

“அந்த நல்ல இயல்பு தமிழர்களாகிய நம்மிடம் அதிகம் இல்லையே? இது நம் தவக்குறை; நம் ஒருமித்த வளர்ச்சிக்கும் தடை.”

ஓர் அரசு அதிகாரி

“ஆங்கிலத்தில் வரும் புகழ்பெற்ற மாத இதழான ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் அண்மையில் படித்தேன்: “மனிதன் சற்று அதிகமாகவே உணர்ச்சி வசப்படுபவன், அவன் முதுகைச் சற்று ‘சபாஷ்’ எனத் தட்டிக் கொடுத்துவிட்டால், உடனே தலை கனத்துப்போய் விடுமாம், கர்வம் வந்துவிடுமாம்.”

இன்னொருவர்

“ஆனால், பலருக்குத் தட்டிக்கொடுக்காமலே கர்வம் தலைக்கேறி விடுகிறதே?”

ஒருங்கிணைப்பாளர்

“அந்த கர்வம் பார்க்கும் சர்ச்சையை விடுத்து,  நாம் உணவுக்கு முன் பேசிய, வள்ளுவ முரண், அரண்களைப் பற்றிப் பேசுவோமா..?”

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

“அதற்கும் முன்பாக நிலா முற்ற விருந்துச் சாப்பாட்டைப் பற்றி ஓரிரு சொற்களில் பாராட்டட்டுமே.. ‘பண்பு பாராட்டும் உலகு’ என வள்ளுவரே சொல்லி உள்ளாரே..?”

 

ஒருங்கிணைப்பாளர்

“‘பண்பு’, ‘பாராட்டு’, ‘நாகரிகம்’ எனும் சொற்களுக்கு அறிவுபூர்வமாகச் சரியான விளக்கம் ஒரு போதும் சொல்ல இயலாது; உணர்வை வேண்டுமானால் ஓரளவு புலப்படுத்தலாம்.

இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் அரசியல், சமுதாயக் காழ்ப்புணர்வுகள், சுயநல வேட்டைகள் முதலியவை காரணமாகப் பண்புகள் அருகி வருகின்றன என்பது ஓரளவு ஏற்கத்தக்கதுதான் என்றாலும் பாராட்டும் பண்பினைச் சிறு வயது முதலே ஊக்கியும் போற்றியும் வளர்க்க வேண்டியது அனைவரின் அன்றாட வாழ்வுப் பொறுப்பே ஆகும். நலம் கண்ட இடத்துப் பாராட்டுவது பண்புடையாரிடம் மட்டும் காணப்பெற்றால் போதாது. பலரிடம் பரவ வேண்டும்.”

பண்பு பாராட்டும் பக்குவம்

புலவர் ஒருவர்

“‘நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு’ (994) எனும் தமிழ்மறை, அறிவுடையோர் பண்பு பாராட்டுவதே சிறப்பு என அறிவுறுத்துகிறது. எல்லோரும் பாராட்ட முற்பட்டால் அறிவுடையோராகவும், ஆட்சித் திறத்தை ஊக்குவிப்போராகவும் வளரலாம்; தாமும் உயர்ந்து, நாட்டோரையும் உயர்த்தலாம். பாராட்டு வோரிடத்திலும் அதனை ஏற்போரிடத்திலும் பாராட்டுதல் எனும் பண்பு மேன்மேலும் சிறந்தோங்கிடவே துணை புரியும்.”

தமிழ்ச் சங்கக் கல்லூரிப் பேராசான்

“பாராட்டு எனும் போது என் நினைவில் படரும் இரு சங்கப் பாடல்களின் செய்திகளைச் சுருக்கமாகச் சொல்ல எனக்கு இந்த நிலா முற்ற அவை இசைவு தர வேண்டும்.”

ஒருவர்

“நிலா மறைந்து பொழுது விடிவதற்குள் சொன்னால் தூங்கி விடாமல் கேட்போம்… புலவரய்யா… புறநானூற்றிலேயே எங்களை மூழ்கடித்துவிடக்கூடாது” (சிரிப்பு)

பேராசான்

“நான் அகத்துறை நற்றிணைப் பாடலில் ஒக்கூர் மாசாத்தியார் பாடிய பாடல் ஒன்றின் கருத்தைச் சொல்ல விழைந்தேன். போருக்குச் சென்ற வீரன், ஆற்றலோடு போர் முடித்து வெற்றி வீரனாகத் தன் மனையாளைக் காணக் குதிரை பூட்டிய தேரில் விரைந்திடும் காட்சியை, ஒக்கூரார் ஓவியமாக்கி உள்ளார். ‘வாயு வேகம் மனோ வேகம்’ என விரைந்து வந்திட அவனுக்கு உதவிய தேரோட்டியையும் குதிரைகளையும் செய்வினை முடித்த செம்மல் உள்ளத்தோடும், புரிந்த காதலொடும் வந்த அவன் ‘போர் முடித்துத் தேரில் ஏறியதைத் தான் அறிவேன்; ஆனால் இவ்வளவு விரைவில் வந்தது எப்படி என அறியேன். என்னப்பா..! வானில் சுழலும் காற்றைக் குதிரைகளாகப் பூட்டிவந்தாயா! அல்லது மனத்தைப் பூட்டி வந்தாயா?’ என வியந்து கேட்கும் அளவுக்கு விரைந்து வந்து இறங்கிக் காலமெல்லாம் காத்திருந்த தன் மனையாளை மார்புடன் கட்டி அணைத்துக் கொள்ளுகிறான்… இது மாசாத்தியார் வெற்றி வீரன் ஒருவன் தன்னிலும் நிலை தாழ்ந்த குதிரைச் சாரதியை மனதாரப் பாராட்டுவதாக அமைத்த அரிய காட்சி. அதுபோல, ‘யான் கண்டனையர் என் இளையரும்’ எனப் பிசிராந்தையார் எனும் புறநானூற்றுப் பெரும்புலவர் தம்மினும் இளைஞரைப் பெருமையுறப் பாராட்டினார். முதுமையிலும் கவலையால் நரை முடி படராது எனச் சான்று காட்டினார். எனவே ‘யார் யார் வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்றாற் போல, யார் சிறந்த பணி செய்தாலும் சிந்தை குளிரப் பாராட்டும் சிறந்த மனம் வேண்டும். ‘சின்னப் பசங்க தானே..?’ என அலட்சியப்படுத்துவதால், அவர்கள் பெரியவர்களைத் தாமும் அலட்சியப்படுத்துவதில் கைதேர்ந்தவர் களாகி வருவது சமுதாயக் காட்சியாகி விட்டது.”

ஒருவர்

“சிறிய வயதினர் சினிமாக்காரர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்துச் சீர்பெறுவதும், சீரழிவதும் ஒருபுறம் இருக்கட்டும். பெரியவர் களாகிய நம்மில் பலர் நடத்தும் பாராட்டு விழாக்களின் பரிதாபக் காட்சியைப் பலமுறை கண்டு வியந்து பயந்தே போன அந்த அதிர்ச்சியில் சொல்கிறேன்.”

இன்னொருவர்

“எங்களுக்கும் அதிர்ச்சியூட்டாமல் சொல்லுங்கள்.”

புகழோசையா? விளம்பர இரைச்சலா?

பெரும்புலவர் தொடருகிறார்

“இன்று சிறந்த சாதனை புரிந்தமைக்காக ஒருவரை உரிய முறையில் பாராட்டுவதை அனைவரும் வரவேற்பது முறைமை. ஆனால் என்ன நடக்கிறது? சாதாரணமான அற்பக் காரியத்தைக்கூட, விளம்பரத்தால் மிகைப்படுத்தி சம்பந்தப்பட்டவரிடமும் பிறரிடமும் நன்கொடை வசூலித்துப் ‘பாராட்டு விழா’ எனும் பெயரில் ஒரு பகட்டு விழாவை நடத்தி, தானும் ‘சாதனை யாள’ரோடு முதல் வரிசையில் நின்று, புகைப்படம் எடுத்து, மறுநாள் பத்திரிகையில் அதைப் பிரசுரிக்கக் கண்டு மனச்சாந்தி பெறும் ஒரு மாயையே இன்று பாராட்டாக, புகழாக உலா வருகிறது என்பது என் கருத்து.”

ஒருங்கிணைப்பாளர்

“இந்தக் கருத்தை நம் மூதறிஞர் மு.வ. ஒப்புக் கொண்டுள்ளார் என்பதை நிலா முற்ற அவையின் கவனத்திற்குக் கொணர்கிறேன்.

பொருளும் புகழும் வாழ்வுக்குத் தேவை. ‘புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்’ என்ற வள்ளுவர், ஒருவர் மறைவுக்குப்பின்னர் தாம் பெற்ற மக்களைப் போல அவருக்கு எஞ்சி நிற்கப்போவது அவர் ஈட்டும் புகழே என வலியுறுத்திச் சொல்லியுள்ளார்.”

ஒருவர்

“வள்ளுவர் ‘புகழெனும் எச்சம்’ என்றே குறிக்கிறார்: ‘இசையெனும் எச்சம்’ (238): அன்பரின் நினைவூட்டலுக்கு நன்றி. ஆனால் வள்ளுவர் காலச் சமுதாய வாழ்வு ஊரளவில் – கிராம அளவில் – சுருங்கியதொரு குடிமை வாழ்வாக இருந்தது. எனவே ஒருவர் புகழுக்கு உரியவர் தானா என ஒரு சாதனையாளரை உண்மையிலேயே நேரிடையாகக் கண்டறிந்து போற்றிப் பாராட்டு வதையும் அதைச் சமுதாயத்தவர் ஒருமனமாக ஏற்பதையும் உணர முடியும். ஆனால், போலிப் புகழ் ஊர்வலங்கள் இன்று, உலகின் நாலா திசையிலும் ஒரு வகையில் விரிந்துள்ளன; இன்னொரு வகையில் உலகம் கைக்குள் அடங்கு மாறு சுருங்கியும் உள்ளது. இன்றுள்ள அறிவியல் சாதனத் தொடர்புப் பெருக்கத்தின் காரணமாக ஒரு வினாடிக்குள் ஒருவர் உலகப் புகழுக்கோ அல்லது உலகின் கவனத்துக்கோ கொணரப் பட்டு விடுகிறார்.”

இடைமறிக்கும் ஒருவர்

“அதை கின்னஸ் சாதனை எனப் பதிவு செய்கிறார்கள். அப்புறம் இன்னொருவர் அந்த நுனியைத் தொட்டவுடன் முந்தையவர் பெயர் காணாமல் போய்விடுகிறதே, அது புகழா? போலியா?”

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைக்குப் புகழ், பாராட்டு என்பதெல்லாம் பணபலமோ, ஆட்பலமோ உள்ளவர்களின் கைக்கருவியாகி விட்டது உண்மை. செய்தித் தாள்கள் போன்ற ஊடகங்கள் அவர்களுக்கு விலைபோகி விடுவதும் மறுக்க முடியாத நடைமுறை. அவையோர்க்கு இங்கே ஒன்றை நினைவூட்டுவது என் கடமை. மேலும், இது குறள் நிலா முற்றமாக இருப்பதால், புகழ் – போலி என்பதைப் பற்றிய வள்ளுவர் கருத்தைச் சுற்றி வருவதைவிட, வள்ளுவப் பெருந்தகை புகழுக்கு ஊறு செய்பவை என எவ்வெவற்றைப் பட்டியலிட்டாரோ அவற்றையும் இன்றைய வாழ்வோட்டத் தோடு கருதிப் பார்க்கலாம்.”

இடைமறித்த ஒருவர்

“மன்னிக்கவும்… மொழிபெயர்ப்பு முறைகள் – முரண்பாடுகள் பற்றிக் கூற எனக்குப் போதிய ஞானம் இல்லை; ஆனால் குறள் கூறும் கருத்துக்களில் ஆங்காங்கே பல என்று சொல்லாவிட்டாலும் சில முரண்கள் தோன்றுவதாக என் சிற்றறிவு சுட்டுவது உண்டு.”

மற்றோர் அன்பர்

“‘குறளில் முரண்பாடு’ என்று இவர் புதிய சர்ச்சையைக் கிளப்புகிறாரே..?”

ஒருங்கிணைப்பாளர்

“சர்ச்சைகள், சந்தேகங்கள் வந்தால் தானே தெளிவு பிறக்கும்? .. குறள் கூறும் செய்திகளில் முரண்கள் இருப்பது போலத் தோன்றுவதும் உண்மை என அறிஞர்கள் சிலர் கருதியது உண்டு. அவற்றையும் நிலா முற்றத்தில் சிந்தித்துச் சிறந்ததைப் பாராட்டுவோம், சிறப்பில்லாததைச் சீராக்குவோம்.”

ஓர் அன்பர்

“ஐயா… இந்த முரண்பாட்டிற்குள் நுழைந்தால் நம் வயிறுகள் முரண்பாடு செய்யும் போலத் தோன்றுகிறது. செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பார்கள். செவி நிறையக் கேட்டு விட்டோம். வயிற்றுக்கு ஏதேனும் வருமா எனப் பாருங்கள். வயிறு கிள்ளுகிறது” (சிரிப்பலை)

மற்றோர் அன்பர்

“அதோ.. உணவுப் பண்டங்களின் வரிசை வைப்பு உங்கள் கண்ணில் படவில்லையா? இரண்டு வரிசை இருக்கிறது! அதென்ன இரண்டு வரிசை? ஒன்று சைவம்; மற்றொன்று அசைவம்.”

ஒருங்கிணைப்பாளர்

 

“செவிக்கு இனிய உணவோடு நாவிற்குச் சுவையான அமுதும் அளித்தமையை உளமாரப் பாராட்ட வேண்டும்.”

 

“சிறிய வயதினர் சினிமாக்காரர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்துச் சீர்பெறுவதும், சீரழிவதும் ஒருபுறம் இருக்கட்டும். பெரியவர் களாகிய நம்மில் பலர் நடத்தும் பாராட்டு விழாக்களின் பரிதாபக் காட்சியைப் பலமுறை கண்டு வியந்து பயந்தே போன அந்த அதிர்ச்சியில் சொல்கிறேன்.”

இன்னொருவர்

“எங்களுக்கும் அதிர்ச்சியூட்டாமல் சொல்லுங்கள்.”

புகழோசையா? விளம்பர இரைச்சலா?

பெரும்புலவர் தொடருகிறார்

“இன்று சிறந்த சாதனை புரிந்தமைக்காக ஒருவரை உரிய முறையில் பாராட்டுவதை அனைவரும் வரவேற்பது முறைமை. ஆனால் என்ன நடக்கிறது? சாதாரணமான அற்பக் காரியத்தைக்கூட, விளம்பரத்தால் மிகைப்படுத்தி சம்பந்தப்பட்டவரிடமும் பிறரிடமும் நன்கொடை வசூலித்துப் ‘பாராட்டு விழா’ எனும் பெயரில் ஒரு பகட்டு விழாவை நடத்தி, தானும் ‘சாதனை யாள’ரோடு முதல் வரிசையில் நின்று, புகைப்படம் எடுத்து, மறுநாள் பத்திரிகையில் அதைப் பிரசுரிக்கக் கண்டு மனச்சாந்தி பெறும் ஒரு மாயையே இன்று பாராட்டாக, புகழாக உலா வருகிறது என்பது என் கருத்து.”

 

( தொடரும் )

 

குறள் நிலா முற்றம் – 1

குறள் நிலா முற்றம்

 

பாகம் : 1

Image result for குறள் நிலா முற்றம்

ஒருங்கிணைப்பாளர்:  

 

‘திருக்குறள் செம்மல்’ ந.மணிமொழியன்

 

 

 

ஏற்பாடு : மதுரை வானொலி நிலையம்

‘வழிபாட்டு நூலா? வழிகாட்டும் நூலா?

திருக்குறள் நாம் வாழும் காலச் சூழ்நிலைக்கெல்லாம் பொருந்தும் வகையில் நம் முன்னர் எழும் சமூகச் சிக்கல்களுக்குத் தக்க தீர்வைத் தருமா? படித்துச் சுவைத்து நுகர்வதற்கு உரிய இலக்கியமாக மட்டுமே நீடிக்குமா? அல்லது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் சமுதாயத்திற்கும் தனி நபர்களுக்கும் பொருந்தும் வகையில் வழிகாட்டுமா? அது கைகூப்பித் தொழும் வழிபாட்டு நூலாகப் போற்றப்படுகிறதா? அல்லது நம்மைக் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் வழிகாட்டு நூலாக ஏற்கப்படுகிறதா? மனிதர்களிடையே இயல்பாக உள்ள முரண்களைப் போலத் திருக்குறள் கூறும் வாழ்வியல் சிந்தனைகளிலும் முரண்கள் இருப்பது போலத் தெரிகிறது. அவையெல்லாம் உண்மையிலேயே முரண்பாடுகளா? அல்லது தெளிவுறு மனத்தோடு சிந்தித்தால் அம்முரண்களினூடேயும் வலுவான அரண் போன்ற கோட்பாடுகள் அமைந்திருப்பதைத் தெளிந்து கொள்ள முடியுமா?… எனப் பல்வேறு சிந்தனைக் கீற்றுகளுடன் நிலா முற்றத்தில் அறிஞர் அவை கூடியிருந்தது.

நீலவான் ஆடைக்குள் முகம் மறைத்திருந்த நிலவு, மேகத்திரள் தாண்டி மேலெழுந்து தன் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சுவது போல, மெல்லென அதிர்ந்த மின்னல் போலத் தொடங்கிய நிலா முற்ற அரங்கு, நேரம் ஆக ஆகக் கூடியிருந்த அறிஞர் பெருமக்களின் கலந்துரையாடலாலும் கருத்து மோதல்களாலும் விளக்கம் பெறத் தொடங்கிவிட்டது. தனிப்பேச்சு, கருத்தரங்கம், பட்டிமன்றம் எனும் முப்பரிமாணம் கொண்ட முற்றமாக அது பயன் நல்கலாயிற்று.

திருக்குறள் தமிழ்மொழியில் தோன்றியமை நம் தமிழ் பெற்றதொரு வரலாற்றுப்பெருமை. பாரதியாரைப் போற்றிப் பாடிய பாவேந்தர் பாரதிதாசன்,

“என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்!

     தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்,

     தமிழால் பாரதி தகுதி பெற்றதும்…!”

என வியந்து முடிவுரை கூறியதைப் போல…

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே  தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

எனப் பாரதிப் புலவரே வள்ளுவத்தால் தமிழ் மொழியும் நாடும் பெற்ற உலகப் பெருமைக்கு முத்தாய்ப்பிட்டுப் பாடிவிட்டார்.

‘தமிழகத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி, வழிவழியாக வாழ்வு பெற்று இன்றும் வழக்கில் உள்ளது எனப் போற்றிப் பாராட்டப் பெறும் பெருமைக்குரிய ஒரே நூல் திருக்குறள்’ எனப் பழங்கதை போலப் பேசி வருகிறோம்; நமக்குள்ளே மகிழ்கிறோம். இந்தச் சிறப்பு திருக்குறளுக்கு உண்மையிலேயே பொருந்துமா? அல்லது ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என நமக்கு நாமே கூடிப் பேசிக் கலைகிறோமா? எனச் சிலர் வினாத் தொடுத்திட, நிலா முற்றம் களைகட்டியது.

இடைமறித்த பேராசிரியர்

“திருக்குறளின் கருத்து கால எல்லை க்கு உட்பட்டதல்ல. காலம் கடந்த தத்துவங்களையும் சமுதாயச் சிந்தனைகளையும் நடைமுறைப்படுத்த வல்ல செயல் நூல் அது. பகவத் கீதை, விவிலியம், திருக்குர்ஆன் போன்ற சமய நூல்களைப் போல உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்புச் செய்யப் பெற்றுள்ள ஒரே வாழ்விலக்கிய நூல் அது ஒன்றுதான். திருக்குறள் சாதி, இன, மொழி, நாடு எனும் வரையறைகளைக் கடந்து உலக மெல்லாம் தழுவிக் கொள்ளத்தக்க தகுதியுடைய பொது நூல். அது மனித குலத்தின் நீதி நூல்; வாழும் நியதி நூல்.”

மற்றோர் அறிஞர்

“வள்ளுவத்தில் அதிசயங்களோ, அற்புதங்களோ, சூத்திரங்களோ, சூட்சுமங்களோ இல்லை; அன்று வள்ளுவர் வரைந்தளித்ததை இன்று நாம் அப்படியே கையாள முடியவில்லை என்றால், அது நூலின் பிழையில்லை; நம் இன்றைய சமூக வாழ்வின் பிழை. நாம் மனிதத் தன்மையிலிருந்தும் மனிதப் பண்பிலிருந்தும் நெடுந்தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே இந்தப் பிழைக்குக் காரணம்.

நமது பிள்ளைகளுக்கு அளிக்கப்பெறும் கல்விக்கும் அவர்களோடு நாம் வாழும் வாழ்க்கைக்கும் இன்று உள்ள உறவு ‘அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள உறவு’ போலத்தான் உள்ளது! (சிரிப்பு)….

நம் வாழ்க்கைப் போக்கில் வள்ளுவத்தின் நிழல் முழுமையாய்ப் படியவில்லை. மனிதர்களின் வாழ்க்கையை, அகத்தாலும் புறத்தாலும் வளப்படுத்துவதே கல்வி.

சாதாரண மனிதன் கூட, நடை பயிலக் கூடிய எளிய அற நெறியையே வள்ளுவர் கூறினார்; அதையும் தனித்தனி அதிகார வரம்பிற்குள் நின்று, எளிய முறையில் கூறினார்.

திருக்குறள் ஒரு வாழ்க்கை அனுபவ விளக்கம். வாழ்வின் பல்வேறு அனுபவங்களையும் கண்டறிந்த, உற்றறிந்த உணர்வோடு தொகுத்துச் சொல்லும் கையடக்க ஏடு. அதிகாலைப் பனிப்பொழிவால் தரையில் படர்ந்துள்ள புல்லின் இதழ் நுனியில் தூங்கும் அந்தப் பனித்திவலையைச் சற்று உற்றுப் பார்த்தால், அதில் வானத்து விளிம்பு முழுதுமே தெரியும். அதைப் போல ஒரு குறட்பாவைப் படித்தாலும் போதும்… அது தான் பேச வந்த ஒரு பொருள் பற்றிய விரிவெல்லை முழுவதையுமே நமக்குக் காட்டிவிடும்…”

கூட்டத்தில் ஒருவர்

“ஒவ்வொரு குறட்பாவும் பனித்துளி காட்டும் பளிங்கு மா மண்டபம் என்பது அழகான உவமை.”

ஒருங்கிணைப்பாளர்

“இப்போது வள்ளுவரைப் பற்றி எனக்கு வேறொரு உவமை சொல்லத் தோன்றுகிறது…! திருவள்ளுவர் சமுதாயத்தில் பல்வேறு துறைகளையும், நிலைகளையும் ஆய்ந்தறிந்து, நாட்டில் அதுவரை பரவியிருந்த அறிஞர் மற்றும் புலவர்தம் கருத்துக்களையும் கேட்டு, படித்து, அறிந்து, தெளிந்து, எல்லாவற்றையும் நினைவில் கொண்டு, வள்ளுவத்தைச் செய்திருக்கிறார். மிகச்சிறந்த பொற்கொல்லர் போல, வள்ளுவர் சொற்களுக்கு மெருகேற்றியிருக்கிறார். அவர் ஒரு கைத்திறமிக்க ‘சொல் தச்சராகவே’ – ‘கருத்துச் சிற்பியாகவே’ இன்றும் நமக்குத் தோன்றுகிறார்… மக்கள் அள்ளித்தெளித்த கோலம் போல இன்று வாழ்கிறார்கள்… வள்ளுவர் அன்றே எழுதிய குறட்பாக்களைப் புள்ளிகளாக்கிப் புதுக்கோலம் புனைந்துள்ளார்…. இல்லத்து முன்றிலில் விடிகாலை தோறும் கோலமிட்டு மனைவிளக்கம் தரும் மங்கையர் பணி போல, வாழ்வில் அன்றாடம் நாமும் நல்லாடை புனைதல் போல, புதுப்புதுக் கருத்துப் பொலிவால் புதுநலன்கள் பெறுவோம்; புத்துணர்ச்சி பெருகக் காண்போம். ஒவ்வொரு நாளையும் ஒரு திருநாள் போலக் கருதி, புதுமலர் போலச் சூடி அன்றாட வரலாற்றை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். இவ்வாறு தனிமனித வாழ்விலும், சமுதாய வாழ்விலும் – அகம் – புறம் எனும் இரு நிலைகளிலும் – வளர்ச்சிக்கு உரிய மாற்றங்களை வழங்குவதே குறளின் நிலைபேற்றிற்கும் நீடு புகழுக்கும் காரணம்.

உலக சமுதாயங்களில் புறத்துறை வாழ்வில் புரட்சி செய்பவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு என்பது வரலாறு. ஆனால் அகம் – புறம் எனும் இரு துறைகளிலும் சமச்சீரான மாற்றங்களைச் செய்து, பிறருடன் இணங்கி, ஏற்றமுற வாழ வழிகாட்டிய சான்றோர் மட்டுமே உலக நாகரிகத்தை உருவாக்கியவர்கள். அத்தகையோர் எண்ணிக் கையில் மிகச்சிலரே ஆயினும் அவர்களால் தான் இன்றளவும் உலகம் புதுப்புதுச் சிந்தனை மலர்களால் தன்னைச் சிங்காரித்துக் கொள்கிறது.”

இடைமறித்த ஒரு பேராசிரியர்

“உலக நாகரிகத்தை, சிந்தனைச் செல்வத்தை உருவாக்கிய சான்றோருள் திருவள்ளுவர் தலையாயவர் என இங்கே எதிரொலித்த செய்தி கேட்டு என் செவிகள் எல்லாம் இனித்தன… உங்கள் செவிகளும் இத்தேனினு மினிய கனிகளை நுகர்ந்திருக்கும்…”

புலவர்

ஐயா அவர்கள் ‘செவிநுகர் கனிகள்’ எனும் கம்பன் வாக்கைத் தான் நினைவூட்டுகிறார்.

கம்பன் நூற்றுக்கணக்கான பாடல்களில் குறளுக்கு விளக்கவுரை போலச் செய்துள்ளதைத் தான் நினைவூட்டினேன்; குறளின் சூத்திரங்களைக் கம்பன் தன் பாத்திரங்கள் வாயிலாகப் பேசினான்!

தமிழுக்குக் ‘கதி’ எனக் கம்பரையும் திருவள்ளு வரையும் சொல்வது அதனால்தான் வந்தது…”

இன்னொருவர்

“சரி… சரி… குறள் முற்றத்துக்கு வருவோம்… கம்பரும் வள்ளுவரும் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் என்றென்றும் நிலைபெறச் செய்தார்கள். தமிழர்களாகிய நாம் செய்த தவம் அது ஒன்று போதும்.

தமிழ் முனிவர் திரு.வி.க. அன்று சொன்னதை இந்த நிலா முற்ற அரங்கில் நினைவூட்ட விரும்புகிறேன்.”

பேராசிரியர்

“சொல்லுங்கள் சுருக்கமாக.”

“திருவள்ளுவரின் பிறப்பு வளர்ப்பு பற்றிய உண்மை வரலாறு நமக்குக் கிடைக்கவில்லை. அவரது வரலாறு சொல்லப்படுகிறது. அவற்றுள் பெரும்பாலானவை வெறும் புனைந்துரைகள், கற்பனைகள் என விட்டுவிடலாம். வள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பதும், இல்வாழ்க்கையில் நின்று ஒழுகியவர் என்பதும், மக்களை ஈன்று புறந்தந்தவர் என்பதும், அறவோர் என்பதும், தெய்வப் புலவராகப் போற்றப்பட்டவர் என்பதும் அவர் அருளிய நூலால் இனிது விளங்குகின்றன” என்கிறார் திரு.வி.க.

மற்றொரு பேராசிரியர்

“அதனால்தான் திரு.வி.க. அவர்களின் மாணவராகத் தம்மை வரித்துக் கொண்டு வாழ்ந்த அறிஞர் மு.வரதராசனார் தாம் எழுதிய நூலுக்குத் ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ எனப் பொருத்தமாகப் பெயரிட்டார்…

ஒருங்கிணைப்பாளர்

“ஆம்… திருவள்ளுவர் என்றாலே அது வாழ்க்கை விளக்கம் என்பது அருமையான தலைப்பு! ஒரு தனி நபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்.. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட்பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ் நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு! ஒரு தனி நாட்டை விட, உலகு என்பது பெரியதல்லவா? அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதல்லவா?”

 

( தொடரும் )

குறள் நிலா முற்றம்

குறள் நிலா முற்றம்

 

Image result for குறள் நிலா முற்றம்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’

எனப் பாரதியார் பாடியது வெறும் புனைந்துரை இல்லை. வள்ளுவரது நெஞ்சமும் உலகோர் வாழ்வியல்பும் ஒரு தராசில் சம எடையாக நிறுத்தளந்தது போல், ஒரு சீராக நிற்பதைக் கண்டறிந்து கூறிய புகழுரை. வள்ளுவமே சமுதாயம் முழுவதற்கும் உரிய சரியான வாழ்க்கை விளக்கம் என அறுதியிட்ட தீர்ப்புரை.

திருவள்ளுவர் தமிழ்நாட்டிலே பிறந்தார். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மண்ணோடும் மரபோடும் ஒன்றிக் கலந்து உருவாகியிருந்த பண்பாட்டுச் சிந்தனைகளால் உரம் பெற்று வளர்ந்தார். அந்த வளர்ச்சியின் பயனாகக் குறட்பாக்களை வித்துக்களாக்கி ஈந்து உதவினார். அந்த வித்துக்கள் உலகின் எந்தச் சமுதாயப் புலத்தினும் ஊன்றிச் செழித்தோங்கும் இயல்புடையவை; அந்த முத்துக்கள் ஒவ்வொருவருக்கும் அணிகலனாக அழகு சேர்க்கக்கூடிய தனிச்சிறப்புடையவை.

வள்ளுவர் ஒரு நாட்டில் பிறந்தவர் எனினும் உலகச் சிந்தனையாளர். ‘மக்கள் எல்லோரும் ஒரு குலம்; மாநிலம் முழுவதும் ஒரு வீடு’ எனும் பரந்த நோக்குடையவர். கிரேக்கத்து அரிஸ்டாட்டிலைப் போல – பண்டைய இந்தியாவின் ஆதிமனுவைப் போல – அகிலப் பார்வை யுடையவர்; அறிவியல் – ஆன்மீகம் – மார்க்சியம் – காந்தியம் எனப் பல்துறைச் சார்புப் போக்கினர்க்கும் பொதுநலம் கூறும் சால்புடையவர்.

நூல்கள் இரு வகைப்படும் எனஅறிஞர் கூறுவர். எழுதப்பட்ட காலத்திற்கே நம்மைக் கூட்டிச் செல்வன முதல் வகை: நாம் வாழும் காலத்திற்குத் தாமும் உடன் நின்று வழி காட்டுபவை இரண்டாம் வகை.

திருக்குறளில் முதல் வகைப் பாங்கு ஓரளவிற்கும் இரண்டாம் நிலைப்பேறு பேரளவிலும் இணைந்திருப்ப தாக அறிஞர்கள் அரங்கு கூட்டிப் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்குத் திருக்குறள் வற்றாத ஊற்றாக, வளங்குன்றாத சுரங்கமாகப் பயன் தந்து கொண்டே இருக்கிறது.

என்றாலும் திருக்குறளை வாழ்க்கை விளக்கமாக ஏற்போரிடம் ஓர் ஐயம் அவ்வப்போது ஏற்பட்டு வருவதையும் மறுப்பதற்கு இல்லை.

“எல்லாப் பொருளும் இதன்பால் உள, இதன்பால்

     இல்லாத எப்பொருளும் இல்லையால்”

என அன்று பாடிய திருவள்ளுவ மாலை இன்றைக்கும் வாடாத மாலை ஆகுமா? எனக் கேட்டு, நமது வாழ்க்கைப் போக்கிற்கெல்லாம் திருக்குறள் துணையாக வந்து விடுமா?  அவரவர் வாழ்க்கைக்கெல்லாம் வள்ளுவம் உதவுமா? என்பதோடு ஒவ்வொருவர் வாழ்வுக்கும் வள்ளுவம் வழி காட்ட வேண்டும் எனும் ஆர்வமும் தலைதூக்கி நிற்கிறது.

வள்ளுவத்தை மட்டுமல்ல, சமயப் போதனைகள், மார்க்சியம், காந்தியம் ஆகிய உண்மைகள் அனைத்தையும் வாழும் காலம் எனும் உரைகல்லில் உரசிப் பார்த்து எடை போட்டு அறியவே விழைகின்றனர்.

காலம் மாறினும் உண்மைகள் மாறுவதில்லை. காலத்தின் மாறுதல்கள் உடைமாற்ற நாகரிகங்களைப் போன்றவை; அடிப்படை உண்மைப் பண்புகள் உயிரைப் போன்றவை என்பர் அறிஞர்.

‘காந்தியக் கதராடையே சோபிதம்’ எனப் பாடிய காலம் சடுதியில் மாறியுள்ள சூழலில், வள்ளுவப் பழைய உடை இன்றைய புதுயுகத் தேவைக்கெல்லாம் பொருந்துமா எனக் கேட்டுப் பார்ப்பதில், எடைபோட்டுப் பார்ப்பதில் தவறில்லை.

‘நாம் வாழும் இந்தக் காலத்திற்கு வள்ளுவம் வழி காட்டுமா?’ என்பது பயனுள்ள கேள்வியே ஆகும்.

இக்கேள்விக்குப் பலரை ஒருங்கு கூட்டி, விவாதப் பொருளாக இதை முன்வைத்துப் பயன்தர மதுரை வானொலி புதுமையான நிகழ்ச்சியை ஒரு சரமாகத் தொடுக்க முனைந்தது. நிகழ்ச்சிகளை வானொலி அரங்கில் இருந்தே ஒலிபரப்பும் பழைய முறையை மாற்றி ‘வாசலுக்கு வரும் நேசக் கரங்களை’ நீட்டி நிகழ்ச்சிகளை அமைக்கும் புதுமையை அரங்கேற்றியது. அதில் ஒன்று நிலா முற்றம்.

‘நீலவான் ஆடைக்குள் ஒளி மறைத்து

     நிலாவென்று முகம் காட்டும்’

வளர்பிறை, மாதந்தோறும் முழுமதியாக வானக் காட்சி தருவது. வீட்டுவெளியில் வந்து அண்ணாந்து பார்த்து மகிழவோ வியக்கவோ நமக்கு இப்போதெல்லாம் நேரம் இருப்பதில்லை – விருப்பம் இருப்பதில்லை.

வீட்டு அறைக்குள் அமர்ந்து உண்ணும் சாப்பாட்டை நம் வீட்டு முற்றத்திலேயே பிள்ளைகளுடன் குடும்பத் தாருடன் ஒன்றாய் அமர்ந்து குலவிப் பேசி அதை நிலாச் சோறாக உண்பதிலும் நாட்டம் கொள்வதில்லை! இயற்கையை ரசிக்க எங்கெல்லாமோ பயணம் போகிறோம். வீட்டிற்குள்ளேயே – வீட்டருகே வலம் வரும் விந்தைகள் கூட நம் கண்ணிலோ மனத்திலோ படுவதில்லை; படிவதில்லை.

திருக்குறள் சிந்தனையைப் பலரது கருத்திலும் படரச் செய்யக் கருதிய வானொலி நிலையம் அதை நிலா முற்ற விருந்தாக, அரங்காகக் கூட்டியது.

அந்த அரங்க அமைப்பினை என் வீட்டு முற்றத்தில் நிலா விருந்தாக்கிட நான் விழைந்தேன். மதுரைத் தமிழ் அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் அழைத்து வர வானொலியார் இசைந்தார்.

என் இல்லத்து விரிந்த முற்றத்தில் திருக்குறள் நிலா முற்றம் கூடியது.

‘குறள் நெறிகள் நம் காலத்திற்குப் பொருந்துமா?’ எனும் தலைப்பில் விவாத மேடைச் சிந்தனைகளைத் தொகுத்து ஒரு சரமாக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப் பட்டது.

இளமைப் பருவம் முதல் குறட்பாக்களில் சிந்தை மயங்கி வளர்ந்து குறள் கருத்துக்களைச் சமுதாயப் பொது உடைமை ஆக்கிப் பரப்பும் ‘உலகத்திருக்குறள் பேரவை’ யின் பொதுச்செயலாளர் பொறுப்பேற்றிருந்த எனக்குக் குறள் பற்றிய அறிஞர் பெருமக்களின் சிந்தனைகளோடு இணையும் இனிய வாய்ப்பு இது எனக் கருதினேன்.

குறள் நிலா முற்ற அரங்கு கூடியிருந்தது.

திருக்குறள் பேரவையின் தமிழ்நாட்டமைப்பின் துணைத்தலைவர், செயலாளர், பல கிளைப் பொறுப்பாளர்கள், பேராசிரியர்கள், புலவர்கள், அரசு உயர்நிலை அலுவலர்கள், சமூக இயக்கச் சிந்தனையாளர்கள், நாட்டுநலத் தொண்டர்கள் என ஒரு பிரதிநிதித்துவப் பேரணி போலக் கூடி இருந்தது அவை.

வானத்திலே முழுமை நிலா, அழகு நிலா மேலெழுந்து கொண்டிருந்தது. நிலா முற்ற அரங்கில் குறள் நெறிச் சிந்தனைகள் அறிஞர்களிடையே உலா வரத் தொடங்கின. இந்த நிலா முற்ற விருந்தில் குறள் அமுதம் அருந்திட உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

இந்நூல் சிறப்புற வெளிவரப் பெரிதும் துணையாக, இருந்த பேராசிரியர் சு.குழந்தைநாதன், பேராசிரியர் இரா.மோகன் ஆகியோருக்கும், அணிந்துரை நல்கிய வணக்கத்திற்கு உரிய மகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார், மூதறிஞர்.தமிழண்ணல், இசைவாணர் எஸ்.மோகன்காந்தி ஆகிய சான்றோர்களுக்கும் எனது இதய நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்.

ந.மணிமொழியன்

பொதுச்செயலாளர்

உலகத் திருக்குறள் பேரவை

வழிகாட்டும் மணிமொழியம்

Image result for மணிமொழியன்

 

வழிகாட்டும் மணிமொழியம்

 

  1. எனது திருக்குறள் ஈடுபாட்டு வளர்ச்சிக்கு உதவியவை இரண்டு; ஒன்று, நான் பெற்ற பேறு; மற்றொன்று, எனக்கு அமைந்த வாய்ப்பு.
  2. ஒரு நூலிலாவது நல்ல பயன் தரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற என் ஆசைக்கு ஓர் அளவுகோலாகக் குறட்பாக்கள் அமைந்து வந்தன. வாழ்வின் புதிய அனுபவங்களுக்கு உட்பட்ட போதெல்லாம் வற்றாச் சுரங்கமாகவும் வழிகாட்டும் வான்விளக்காகவும் எனக்குக் குறள் நெறிகள் விளங்கத் தொடங்கின.
  3. மேலை நாடுகளிலே ஒருவருக்கு ஒருவர் பேசுகின்ற சமயத்திலே பொறுமையாகவும் முழுமையாகவும் மற்றவர் பேச்சைக் கவனிக்கின்றார்கள். ஒரு செய்தியைச் சொல்லும் போது இடையில் யாரும் குறுக்கிடுவது இல்லை. மென்மையாகப் பேசுகின்றார்கள். பேசி முடித்தவுடன் தங்களுடைய உடன்பாட்டையோ மறுப்பையோ இதமாக நயம்படக் கூறுகிறார்கள். சில சமயம் உடன்படாக் கருத்துக்களுக்கு மௌனமாக ஒரு புன்னகை செய்து விட்டுவிடுகின்றனர். இவை எல்லாம் எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தன.
  4. உலகினுக்கு வள்ளுவத்தை நல்கும் பணியில் தமிழ்நாட்டு மக்கள் ஊன்றி நின்றிருக்க வேண்டும். விழா எடுக்கும்போது மட்டும் ஊர் கூட்டி முழக்க மிட்டுவிட்டு, அப்புறம் அயர்ந்து போய்விடுவது தான் நம் வழக்கம்.
  5. வள்ளுவர் நம் மொழியில் எழுதினார். ஆனால் அதனை நம்மைவிட, கிழக்கே ஜப்பானியரும், மேற்கே அமெரிக்கருமே போற்றி வாழுகின்றார்கள். வள்ளுவம் அங்கெல்லாம் வாழுகிறது! நன்றாக வாழுகிறது!
  6. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ எனப் பாரதியார் பாடினார். முதன்முதலாகத் திருக்குறளை, மேலைய உலகிற்கு வழங்கி அறிமுகப்படுத்தும் பணியைக் கூட நாம் செய்யவில்லை. தமிழ் உணர்வறிந்த மேலை நாட்டு அறிஞர்கள் எடுத்துச் சொன்ன பின்னரே திருக்குறள் பல மொழிகளில் உலகறியத் தொடங்கியது.
  7. பலருக்கும் பல வகையில் பயன்படும் சிறப்பு வாய்ந்த தனிப்பொது நூலாகிய திருக்குறளை இலக்கியமாகக் கருதிக் கலைநயம் காணலாம்; ஒழுக்க நூலாகப் பேணலாம்; அரசியல் நூலாகப் படிக்கலாம். காலம் மாறினாலும் அடிப்படை அறங்கள் மாறுவதில்லை எனும் பேருண்மையை அறியலாம்.
  8. இன்றைய வாழ்க்கையில் எத்தனையோ சிக்கல்கள்; புதுப்புதுப் பிரச்சினைகள். இவற்றிற்கெல்லாம் தீர்வு தேடி அலைவதே ஒரு பெரிய வாழ்க்கைப் போராட்ட மாக உள்ளது. தக்க தீர்வுகளைத் தேடுவார்க்குத் திருக்குறள் வழிகாட்டுகிறது.
  9. எக் காலத்திற்கும், எந்தச் சூழலுக்கும் பொருந்தும் வகையில் வாழ்க்கை அறம் வகுத்திருப்பதே வள்ளுவத் தனிச்சிறப்பு.
  10. வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கும், துன்பம், கவலை நீங்கி இன்பம் இடையறாது பெறுவதற்கும் அமைதியும் முழுமையும் நிறைவும் பெறவும் வள்ளுவம் வழிகாட்டுகிறது.
  11. ‘உலகம் ஒரு குலம்’ என்பதே திருக்குறளின் உயிரோட்டம். உலகம் ஒரு குலமாக விளங்க வேண்டும் எனில், அந்த உயிரோட்டத்திற்கு, அன்பு எனும் குருதியோட்டம் நிலையாக இயங்குதல் வேண்டும். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதே வள்ளுவத்தின் நிலையான குருதியோட்டம்.
  12. குறள் முழுவதிலும், பல்வேறு மாந்தருக்கும் நிலைக்கும் ஏற்றவாறு, வெவ்வேறு நடைத்திறங்களைக் கையாளும் வள்ளுவச் செம்மல், ‘உண்ணற்க கள்ளை’ எனத் தீய பழக்கத்தைக் கைவிடுமாறு, வியங்கோளாக வேண்டுதல் நடையில் கூறிய வள்ளுவர், இங்கே, ‘செய்க பொருளை’ என ஆக்க நெறிக்கு ஆட்பட வருமாறு கட்டளையிடுகிறார்; கண்டிப்பாக வற்புறுத்து கிறார்.
  13. திருவள்ளுவர் என்றாலே அது வாழ்க்கை விளக்கம் என்பது அருமையான தலைப்பு! ஒரு தனிநபர் வாழ்க்கை இல்லை; சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் சார்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கை விளக்கம்
  14. வள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழில் குறட் பாக்களை எழுதியவர் என்றாலும், அவரது நூல் தமிழ்நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மட்டுமே பயன்படுவதாக அமைக்கப்படவில்லை என்பதுதான் அரிய சிறப்பு! ஒரு தனிநாட்டை விட, உலகு என்பது பெரியது அல்லவா? அனைத்து நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பது அல்லவா?
  15. ‘அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் இந்நான்கும், இழுக்கா இயன்றது அறம்’ (35) என மனதில் பாசு படியாது பளிங்கு மாடம் போல வள்ளுவர் வலியுறுத்தி இருப்பது – இன்றும் நாம் எண்ணி எண்ணி மகிழத் தக்கதொரு மனோதத்துவக் கருத்து. மனத்தின் முழுத் தூய்மையே அறம் என்பது திருக்குறளின் தீர்மானம்.
  16. வள்ளுவர் மனநல அறிஞர் என்று நாம் பேசியதைப் போல, அவர் உடல் கூறுகள் அறிந்த மருத்துவர் போலவும் விளங்குகிறார்… அவர் நோயாளியின் நல்ல, தீய நிலைகளை நாடி பிடித்து ஆய்ந்தறிகிறார்; உடல் மாற்றத்து நோயின் அறிகுறிகளுக்கான காரணங்கள், உணவு முறைகள் எனப் பலவற்றையும் கேட்டறிகிறார்; பசி, செரிமானம் எனத் தனித்தனி நோயாளியின் அவ்வப்போதைய நிலைப்பாடுகளுக்கு ஏற்ப சிகிச்சை தருகிறார்.
  17. ‘ஆண்மை’ என்றால் ஆளுமை. அது புற வீரத்தை விட, அக ஒழுக்கமான மன அடக்கத்தில் தான் தலைநிமிர்ந்து விளங்கும். அது கோழைத்தனம் அல்ல.
  18. ‘அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம், செறிதோறும் சேயிழை மாட்டு’ (1110) எனும் ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதிகார இறுதிக் குறட்பா அறிவினைத் தேடத் தேட, அறியாமை மிகுவதையே இவ்வளவு நுட்பமாக உணர்த்துகிறது.
  19. திருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்றி நாம் வாழும் காலத்திற்கும் பொருத்தமாக சமுதாயச் சிக்கலுக்கு அறவியல் தீர்வு காண்கின்றார்.
  20. கீதை காட்டும் பாதையும் வள்ளுவர் காட்டும் வழியும் ஒன்றொடு ஒன்று இசைந்தவை; இணைந்தவை. கீதையில் குறளையும் குறளில் கீதையையும் காண்கின்றோம்.
  21. ‘சத்யமேவ ஜயதே’ என்ற இந்தியக் குடியரசின் இலச்சினையும் ‘வாய்மையே வெல்லும்’ என்ற தமிழக அரசின் இலச்சினையும் வாய்மையின் சிறப்புக் கருதியே பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வுண்மைகள் நம் இதயத்தில் இடம்பெற வேண்டும்.
  22. உண்மையில் எந்த ஒன்றும் முற்றிலும் துன்பம் தருவதில்லை. அத் துன்பத்தின் ஊடேயும் – புகை நடுவினில் தீ இருப்பதைப் போல – அத் துயரத்தின் நடுவிலும் வாழ்க்கை எனும் நம்பிக்கைத் தீ கனன்று கொண்டே இருக்கும்.
  23. உலகப் போக்கோடு – அந்த வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுவதை விட, அதற்கு எதிர்நீச்சல் இடும்போது தான் வாழ்வில் ஒரு வகைச் சுகம் தெரிகிறது. இந்தச் சுக அனுபவம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் உரியது; சற்று முயலும் எவர்க்கும் எளியது; நாளடைவில் எல்லோர்க்கும் இனியது.
  24. ‘பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா? பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா?’ என்பது ஒரு பழைய திரைப் பாடல். ‘பேணி வளர்க்க வேண்டும்’ எனும் தொடரிலேயே பெற்றோர்கள், தம் பிள்ளைகளைப் பொறுத்தவரை பேண வேண்டிய விருப்பங்களும் விழைவுகளும் பொதிந்துள்ளன.
  25. பிள்ளைகளைப் பள்ளியில் பணம் கட்டிச் சேர்ப்பதோடு தம் கடமை முடிந்துவிட்டது. பையன் தானாக வளர்ந்து விடுவான் என நினைக்கக்கூடாது வேம்புச் செடியை நட்டுவிட்டுத் தண்ணீர் ஊற்றினால் மட்டும் போதுமா? செடி வளர்கையில் ஆடு மாடு கடிக்காமல் சுற்றி அதற்கு வேலி வனைவதும், அது நன்கு உயரும் வரை காப்பதும் கடமை அல்லவா! பெற்றோர்கள் வேலி போடவும் வேண்டும், விருப்பம் போல வளர்ந்து உயர்ந்திட உதவவும் வேண்டும்.
  26. அறிவு என்பது நினைத்தவுடன் வாங்கிச் சேர்க்கும் பொருள் இல்லை. அவரவர் இயல்பிலே தோன்றி, முறையாக வளர்ந்திட, வளர்க்கப்பட வேண்டியதொரு தரு. சிறு வித்து வளர்ந்த மரம் ஆவது போல, பிள்ளை களிடம் உள்ள இயல்பே அறிவாக, ஆக்கமாகப் பரிணமிக்கிறது.
  27. கல்வியின் தலையாய நோக்கம் அறிவைத் தருவது மட்டும் இல்லை. நல்ல மக்களாக வளர்ந்திட உதவும் பண்பாக்கமே கல்வியின் இலட்சியம்.
  28. கல்வி என்றால் வளர்ச்சி! எதன் வளர்ச்சி? மனம், உடல், ஆன்மா எனும் மூன்றின் ஒருங்கிணைந்த, ஒத்த, பரிபூரணமான வளர்ச்சியே!
  29. கல்வி என்றால் செலவு என மட்டும் பொருள் இல்லை. கல்வி என்பது இன்று கைவிட்டுச் செலவிடுவது போலத் தோன்றும் நாளைய முதலீடு.
  30. பற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளர வேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.
  31. இலக்கியம் இனியதொரு வாழ்க்கைக் கலை; கலைகளுள் எல்லாம் சிறந்த கலை. ஓவியம், சிற்பம் முதலிய கலைகள் காலத்தின் கைப்பட்டுச் சிதைய நேரிட்டாலும் கூட, காலத்தை வென்று நிற்கும் அரிய கலையாக இலக்கியமே விளங்குகிறது.
  32. இலக்கியம் புலவர்கள் உணர்வில் வாழ்ந்தால் மட்டும் போதாது; பொதுமக்கள் நாவிலும் அது அன்றாடம் புழங்கிவருதல் வேண்டும்.
  33. இலக்கியங்கள் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், நிரந்து இனிது சொல்லும் வல்லமையால் ஞாலத்தை விரைந்து தொழில் கேட்கச் செய்ய வல்லவை.
  34. பிற மொழியினரை விட, தமிழ் மொழியினர்க்கு இலக்கியத்தைப் பேசி மகிழ்வதில் ஒரு தனிநாட்டமும் ஆர்வமும் எப்போதும் இருந்து வருதல் கண்கூடு. சங்க இலக்கிய மாநாடு, திருக்குறள் பேரவை, சிலம்பு மேடை, உலகத்தமிழ் மாநாடு, பட்டிமன்றம், இலக்கிய வட்டம், வழக்காடு மன்றம் எனப் பல்வேறு முறைகளில், வெவ்வேறு நிலைகளில் இங்கே இலக்கியம் எப்போதும் வாழ்வு பெற்றே வருகிறது.
  35. இந்திய நாட்டுப் பொது நூல்களின் வரிசையில் முன்னிடம் பெறுபவை இராமாயணமும் மகாபாரதமும் திருக்குறளும் ஆகும். இராமாயணம் – இனியதொரு நீதிநூல்; மகாபாரதம் – விரிந்ததொரு சமூகச் சாத்திரம்; திருக்குறள் – ஓர் உலகப் பொதுமறை.
  36. திருக்குறளும் கீதையும் வாழ்வில் முழு நிறைவு நூல்கள் ஆகும். மனிதனை நிறைமனிதன் ஆக்குவது இரு நூல்களின் அடிப்படை ஆகும்.
  37. வாழ்வில் இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல இயற்கையானவை. வாழ்வெல்லாம் இன்பமாகவே வாழ்ந்தாரும் இல்லை; முழுதும் துன்பத்தால் துவண்டாரும் இல்லை என்பது பழமொழி.
  38. இன்பம், பிறரை எல்லாம் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது; ஆனால் துன்பம், நம்மையே நமக்கு அறிமுகப்படுத்தித் தருகிறது.
  39. எதையும் தாங்கும் இதயம் கொண்டு, சிறு துன்பங் களைப் பழக்கமான ஒன்றாக ஏற்றுப் பெருந் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி ஒன்றாகக் கருதித் துணிந்து, ஆற்றலும் வன்மையும் பெற்று வாழ வேண்டும்.
  40. பகைவரும் மதிக்கும் சிறப்புப் பெற வேண்டும் எனில், துன்பத்தையே இன்பமாக மாற்றும் ஆற்றல் பெற வேண்டும்.
  41. துன்பம் – ஒருவகையில் – பலருக்கும் கசப்புத்தான். என்றாலும் கசப்பே நாளடைவில் நாம் விரும்பும் சுவையாகிவிட முடியும். வேப்பங் கொழுத்தைச் சிறிது சிறிதாகத் தின்னப் பழகிக்கொண்டால் – அதுசுவையான மருந்தாகி நலம் செய்வதைப் போல- துன்பச் சுவையும் நலம் தரும் மருந்தாகிவிடும்.
  42. வாழ்வில் துன்பமும் சில சமயங்களில் நமக்குத் தேவைதான். அழுக்குத் துணியை அடித்துத் தோய்த்து மாசு நீக்குதல் போல, நம்மைப் பிடிக்கும் பல்வேறு மனமாசுகளையும் நீக்கிக்கொள்ள, அத் துன்பத் தோய்வே தக்க பயன் தரும்.
  43. சிறந்த மனிதர்களிடம் சில மணித்துளிகள் கேட்பது, பல புத்தகங்கள் படித்து அவற்றின் சாரத்தை ஈர்த்துக் கொள்ளும் வாய்ப்பிற்கு நிகராகும்.
  44. ‘யார் கூறுகின்றார்’ என்று பார்க்காமல், ‘யாது கூறினார்’ என்று ஆய்ந்து அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
  45. நல்லவர்கள் வல்லவர்களிடம் பொது நன்மை கருதி அட்டை போல் ஒட்டிக்கொள்ள வேண்டும்.
  46. மனம் மாசற்று இருப்பது தான் அறம். உள்ளம் தூய்மையுடையதாய், உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவதுதான் அறம்.
  47. ‘நேற்று இருந்தார் இன்று இல்லை, இன்று இருப்பவர் நாளை இல்லை’ என்ற வியப்பான உலகில், காலம் தாழ்த்தாது, வாழும் ஒவ்வொரு நாளும் அறம் செய்ய வேண்டும்.
  48. சான்றாமைக்கு ஆழி எனப்படும், ஊழி பெயரிலும் தாம் பெயராச் சான்றோர் வாழும் வரை, மனிதப் பண்புகள், உணர்வுகள் மனிதனிடம் நிலைத்து நிற்கும் வரை, அறம் அழியாது; அறத்தை அழிக்க முடியாது.
  49. மனத்தோடு வாய்மை மொழிந்து, சொல் வேறு, செயல் வேறு என்று மாறுபடாமல் உண்மையாளர் களாய், நல்ல அரிய செயல் செய்பவர்களால் தான் உலகம் வாழ்கிறது.
  50. சிறுசிறு வெற்றிகளில் திருப்தி அடையாமல், பெரும் வெற்றி நோக்கிப் பீடுநடை போட வேண்டும்.
  51. பிறருக்குச் சொல்வது வேறு – அவ்வாறு தாம் வாழ்ந்து காட்டும் நடைமுறை உலகம் வேறு – இரண்டும் வெவ்வேறு என்ற மனப்போக்கு இன்று மலிந்து கிடக்கிறது. எதை எண்ணுகின்றோமோ, அதைச் சொல்கின்ற துணிவும், சொல்லிய வண்ணம் செயலாக்கும் திறனும் அற்று நாம் வாழ்வதே இதற்குக் காரணம்.
  52. நெஞ்சில் உறுதியின்றி, நேர்மைத் திறனுமின்றி ஆற்றல் இருந்தும் அச்சம் கொண்டு வாழ்ந்தால் இதுவே எல்லாத் தீமைகளுக்கும் பாவங்களுக்கும் அடிப்படையாக மாறி விடும்.
  53. ஒருவன் எண்ணும் எண்ணமும், சொல்லும் சொற்களும் அவன் உயர்ந்தவனா? தாழ்ந்தவனா?, சிறியவனா? பெரியவனா? என்ற உண்மைகளை உரைகல்லாகக் காட்டிவிடும். செய்கின்ற செயலின் திறத்தால் ‘தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்ற அடிப்படையில் அவரவர் தகுதியை அறியலாம்.
  54. வேள்வியால் கிடைப்பது விண்ணில் வாழும் அமரர் விரும்பும் அமரத்தன்மை தரும் அவியுணவு. கேள்வியால் கிடைப்பது மண்ணிலே வாழ்வோர் விரும்பும் இறவாச் சிறப்புடைய அமுத வாழ்வு.
  55. தகுதி மிக உடையவர் முயற்சியால் பெருஞ்செல்வம் ஈட்டினால் அப்பொருளைத் தமக்கு மட்டுமன்றிப் பிறர்க்கும் நலம் பயக்கும்படி பயன்படுத்துவர்.
  56. உயர்ந்த புகழ் பிறர்க்கு உதவுதலிலே உள்ளது. தன்னலம் இழந்து உதவுவது தலையாய புகழ் ஆகும்.
  57. ஒருவனுடைய அறிவை ஆராய்கையில், மறக்கக் கூடாத அடிப்படையான உண்மை ஒன்று உண்டு. எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் என இவ்வுலகில் யாரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஓரளவேனும் உலக ஞானம் இருக்கவே செய்யும். அதுபோலச் சிறந்த அறிஞரிடத்தில் ஓரளவு அறியாமை இருப்பதும் இயல்பு.
  58. நாம் பல கருத்துக்களை விரிவாக, ஆழமாக விவாதம் செய்கின்றோம். நல்ல கருத்துக்களை உணர்ச்சி வசமாகப் பேசி மகிழ்வதோடு அமைதி அடைந்து விடுகின்றோம். அப் பிரச்சினைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்துத் தீர்வு காண்பதில்லை.
  59. தமிழிசை இயக்கம் பாட நூலோடு, பண்முறை ஆராய்ச்சியோடு, மாநாட்டோடு, மலர் வெளியிட்டோடு நின்று விடுகிறது. இது நாள்வரை இப்படி இருந்தது போதும், இனிமேல் தமிழிசை இயக்கத்தின் எல்லைகள் விரிய வேண்டும்… வெளிநாட்டார் நாடிப் போற்றும் வகையில் நம் தமிழிசை தேனார் தமிழிசையாய்ச் சிறக்க வேண்டும்.
  60. தமிழ் இசை, தமிழர் மனங்களை எல்லாம் இசையச் செய்து, இசைபட வாழச் செய்து, தமிழரை உலகெல்லாம் போற்றும் ஆற்றல் பெற வேண்டும். தமிழ் இசை தமிழர் இசையாக வாழ்க! வளம் பெருகுக!
  61. எக்காலத்திற்கும் பொருந்தும் அறங்களை உண்மை களின் அடிப்படையில் விளக்குவதால் திருக்குறள் முக்காலத்திற்கும் பொருந்துவதாக இருப்பதொடு, பண்பாட்டுத் தொடர்ச்சியை இணைக்கும் இனிய சரடாகவும் இருக்கிறது.
  62. உழைப்பும் திறமையும் வலிமையும் வாழ்வில் வளமை சேர்க்கும் என்பதே அமெரிக்க வாழ்க்கை.
  63. நாளை நாளை என்று நாட்களைத் தள்ளிப் போட்டுத் தட்டிக் கழித்து விடாமல், நிலையாத வாழ்க்கையில் நிலைத்த புகழோடு வாழத் தலைப்பட வேண்டும்.
  64. உழைப்பால் தான் உயர முடியும் என்ற தன்னம்பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் உறுதியாக ஏற்பட்டாக வேண்டும்.
  65. அறநெறியில் நின்று தளராது, அயராது, ஊக்கத்துடன், உண்மையாக முயன்று உழைப்பவர்கள் தான் தகுதியும் புகழும் பெறுகின்றார்கள்.
  66. இளமைப் பருவத்தில் நம் நெஞ்சம் எனும் வானில் எத்தனையோ ஏற்றம் மிக்க இலட்சியங்கள் இடம் பெறுவது உண்டு. அவற்றுள் சில மட்டும் வளர்பிறையாக வளர்ந்து, முழுமதியாக நிலைக்கும்.
  67. தேடிச் சோறு நிதம் தின்று, உண்டு உடுத்தி உறங்கி வாழ்வது வாழ்க்கை அல்ல. தகுதியோடும் மகிழ்வோடும் வெற்றியோடும் வாழும் வாழ்க்கையே புகழ் நிறைந்த வாழ்க்கை.
  68. கல்வி, அறிவு, செல்வம், பண்பு, செல்வாக்கு, புகழ் பெற முயன்று உழைப்பவனே உயர்ந்தவன்; அவ்வாறு முயலாது சோம்பி, உண்டு, உறங்கி, களித்துத் திரிபவன் நிந்தனைக்கு உரியவன்; சமுதாயத்தைப் பாழ்படுத்துபவன், முயற்சியும், உழைப்பும், ஊக்கமும், தொண்டும் உடையவன் தானும் உயர்ந்து சமுதாயத்தையும் உயர்த்துவான்.
  69. கடலை, மலையை, யானையை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது என்பார்கள். அந்தப் பட்டியலில் இன்னும் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம்; நீர் அருவி, ஆலயக் கோபுரம்.
  70. பயணம் செல்வது இனியதொரு வாழ்க்கை அனுபவம்… நமது வீடு, நாடு எனும் குறுகிய வரையறைக்குள் இருந்து பழகிப்போனவர்களின் பார்வையினைப் ‘பெரிதே உலகம், பேணுநர் பலரே!’ எனும் எல்லைக்கு விரிவுறச் செய்யும் இரசவாதம்.
  71. எண்ணம், சொல், செயல் மூன்றனுள் அடிப்படை யானது எண்ணமே. மனம் என்னும் நிலம் நலமாக இருப்பின், அதில் விளையும் சொல்லும், செயலும் நலமாக, ஆக்கமாகச் செழிக்கும்.
Pages: 1 2