செய்க சிந்தனை

 

செய்க சிந்தனை

Image result for thiruvalluvar

 

வாழ்வில் இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல இயற்கையானவை. வாழ்வெல்லாம் இன்பமாகவே வாழ்ந்தாரும் இல்லை; முழுதும் துன்பத்தால் துவண்டாரும் இல்லை என்பது பழமொழி. எனவே இன்பம் கண்டு மகிழ்வது போல, சிந்தனையாலும், செயலாலும் துன்பம் கண்டு கலங்காமலும் வாழப் பயில வேண்டும்.

இன்பம், பிறரை எல்லாம் நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது; ஆனால் துன்பம், நம்மையே நமக்கு அறிமுகப்படுத்தித் தருகிறது. நம்மை, நமது மனஆற்றலை, நமது செயல்திறனை, நமக்கு அமைந்த சூழலை, நாளடைவில் எதிர்கொள்ளும் சிக்கலை இவற்றிற்கெல்லாம் தீர்வுகாணும் கலையைத் துன்பம் தெளிவாகப் புலப்படுத்திக் காட்டுகிறது.

பட்டை போடப் போட வைரம் ஒளிவிடுவதைப் போல, துன்பம் அடுக்கடுக்காய் வரவர மனிதன் சோதிக்கப்பட்டுத் தன் மதிப்பை அடைகின்றான். துன்பங்கள் அவனுடைய உண்மையான குண இயல்புகளை வெளிக்கொணர்கின்றன. அவன் பிறருடைய துன்பங்களை நினைத்துப் பார்க்கிறபோது தன்னுடைய துன்பங்களைச் சகித்துக் கொள்ளக் கற்று விடுகிறான்.

‘உடல் உள்ளவரை, கடல் கொள்ளாத கவலை’ என்பார்கள். கவலைகளே, துன்பத்தைப் பிடித்து நம்மிடம் கொணரும் வலைகள்! நம்மில் பலர் அளவுக்கு மீறிக் கவலைப்பட்டு வருகிறோம்; நூறாண்டுகள் கவலைப்பட்டாலும் அக்கவலை ஒரு காசுக்கடனைக்கூடத் தீர்க்க உதவாது என்பதை அறிந்திருந்தும்கூட, நாளும் கவலைப்படுகிறோம்.

மனத்தூடே நுட்பமாய் ஓடும் சிற்றோடை போன்ற கவலையை, நாமே ஊட்டம் கொடுத்து, அதைப் பெரிய கால்வாயாக ஆக்கிக்கொண்டு விடுகிறோம்.

இந்தக் கவலையே துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் ஆகும். இந்தக் கவலைதான் எத்தனை வகை! தன்னைப் பற்றி, தன் குடும்பம், உறவு முதலியன பற்றி, செய்யும் தொழில், சேர்ந்திடும் நண்பர் ஆகியோர் பற்றி, உட்பகை புறப்பகை பற்றி, ஊரும் நாடும் பற்றி, நோயும் சாவும் பற்றி – நமது கவலைத் தரு நாளும் ஒரு கிளை பரப்பி, துன்பங்கள் எனும் விழுதுகள் ஊன்றி நம் வாழ்வெல்லாம் நிழல் பரப்பிக் கொள்கிறது.

உலகில் சிக்கல்களும் சிரமங்களும் இல்லாத மனிதர் யார்? அமைப்பு எது? நாடு தான் எது? இத்துன்ப மேகங்கள் சூழக்கண்டு, கவலைப்பட்டு வாடுவதால், துன்பம் ஓடிடுமா? கவலைக்கான காரணங்களை ஆராய்ந்து, சிந்தனை செய்து ‘நோய் நாடி, நோய் முதல்நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்’ (948) என்றபடி செயலுக்குத் துணிய வேண்டும். கடந்த காலக் கவலைகளை மறந்துவிட்டு, ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ எனும் உற்சாகத்துடன், இன்றைக்கு உரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி, வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். துன்பங்கள், சோதனைகள் என்பன வேதனையைத் தந்தாலும் தமது ஆழ்ந்த சிந்தனையால் உருவாகும் செயல்திறத்தால் அவற்றைச் சாதனைகளாக மாற்றிக் கொள்ள முனைய வேண்டும். கடமையுறுதியோடு வேலையில் ஈடுபடுவதே கவலைக்குக் கைகண்ட மருந்து என்பது போல, செயலீடுபாடு மிகமிக சுடச்சுடரும் பொன் போல, வாழ்வும் ஒளி பெற்றுத் துலங்கும்.

“துன்பப் பறவைகள் தலையில் கூடுகட்டுவதை வேண்டுமானால் தடுக்கலாமே தவிர, அவை நம் தலைக்கு மேலே வட்டமிடுவதை ஒருபோதும் தவிர்க்க முடியாது” என்பார் மேலைநாட்டு அறிஞர் ஒருவர். உலகம் நம்மைப் பற்றித் தெரிந்து கொண்டுள்ளதோ இல்லையோ, ஆனால், அந்த உலகத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு, நமக்கு வரும் துன்பமே சாளரமாக அமைகிறது. இன்ப வேளையில் ஒருவன் கற்றுக்கொள்வதைவிட, துன்பம் வரும் நாளில்தான் அவன் அதிகம் கற்றறிந்து கொள்ளுகிறான்; நட்புரிமை, சுற்றுச்சூழல், உலகியல் உண்மை எனும் இவற்றை எல்லாம் சீர்தூக்கி அறியும் வாய்ப்பினைப் பெறுகிறான்.

ஆதலின் கவலையை, துன்பத்தை ஒரு சிக்கலாகக் கருதித் தீர்வுகாண முற்படவேண்டுமே தவிர, குனிந்து குமைந்து சிதிலமாகிப் போய்விடக்கூடாது. நம் சிந்தனைக்கு உட்படாத, தீர்க்கவியலாத சிக்கலாக அமையின், அதனையும் எதிர்நோக்கி, அதனையும் வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்று, எப்படியும் வாழ்ந்துகாட்டத் துணிய வேண்டும். ‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்’  ஆதலால் உலக நடையினை அறிந்து, உயிருக்கு உரிய அறிவையும் ஆற்றலையும் பிறரிடத்துப் போலத் தானும் வளர்த்துக்கொண்டு, துன்பத்தை ஒரு சுவையாகப் பழகி, மாற்றி ஏற்றுக்கொண்டு உயர முற்படவேண்டும்.

“இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்

     கையாறாக் கொள்ளாதாம் மேல்”      (627)

என்பார் வள்ளுவர்.

இதனை உணர்ந்து, எதையும் தாங்கும் இதயம் கொண்டு, சிறு துன்பங்களைப் பழக்கமான ஒன்றாக ஏற்று, பெருந்துன்பங்களை எதிர்கொள்ளவேண்டிய ஒன்றாகக் கருதித் துணிந்து, ஆற்றலும் வன்மையும் பெற்று வாழவேண்டும். இவ்வாற்றலைப் பெறும் போது – நம்பிக்கை, மனத்திண்மை, சமநிலைப் பாங்கு என்பன நம்மோடு கை கோத்து உடன்வரும். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ (621) அப்படி அணுகும்போது – துன்பமும் இன்பமாக மாற முற்படும். பகைவரும் மதிக்கும் சிறப்புப் பெறவேண்டும் எனில், துன்பத்தையே இன்பமாக மாற்றும் ஆற்றல் பெற வேண்டும்.

துன்பத்தைப் பொறுத்துக் கொள்வது வேறு; அதனை இன்பமாக மாற்றிக் கொள்ளுதல் வேறு. எனவே துன்பத்தை இன்பமாக மாற்றிக் கொள்ளுதல் எல்லோருக்கும் இயலுமா எனக் கேட்கலாம். சான்றோர் வாழ்வில் அவர்கள் மேற்கொண்ட சாதனைகளைச் சாமானியர்களாகிய நாம் கைக்கொள்ள இயலுமா எனச் சந்தேகப்படலாம். சான்றோர்கள் நமக்காகவே வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அவர்களது வழியைப் பின்பற்றி ஓரளவு செல்ல முற்படும்போது அவர்கள் கண்ட சாதனைச் சுடர்கள் நமக்கு வழிகாட்டிக் கைகொடுக்க வந்துவிடும். துன்பம் வாழ்வின் கொடை. அதன் சுவை தெரிந்தால்தான் இன்பத்தின் சுவையும் புரியும். வெயிலருமை நிழலில் தெரிவது போல ஒன்றன் சிறப்பு மற்றொன்றில் புலனாகும். துன்பத்தை வாழ்விற்கு உதவும் சாதனையாக்கும் எளியது முடிந்தால் அரிய சோதனைகளைச் செய்து பார்க்க முனைகையில் – நாணயத்தின் இரு பக்கங்களைப் போல – இன்பமும் துன்பமும் தக்க சமன்பாட்டைக் காணும்.

துன்பச் சூளையில் அதிகம் வேகும்போது பொன்னார்ந்த மனம் புலப்பட்டு உதவுகிறது. துன்பம் ஒரு வகையில் பலருக்கும் கசப்புத்தான். என்றாலும் கசப்பே நாளடைவில் நாம் விரும்பும் சுவையாகிவிட முடியும். வேப்பங்கொழுந்தைச் சிறிது சிறிதாகத் தின்னப் பழகிக் கொண்டால் – அது சுவையான மருந்தாகி நலம் செய்வதைப் போல துன்பச் சுவையும் நலம் தரும் மருந்தாகிவிடும். வாழ்வில் துன்பமும் சில சமயங்களில் நமக்குத் தேவைதான். அழுக்குத் துணியை அடித்துத் தோய்த்து மாசு நீக்குதல் போல, நம்மைப் பீடிக்கும் பல்வேறு மனமாசுகளையும் நீக்கிக்கொள்ள, அத்துன்பத் தோய்வே தக்க பயன் தரும்.

சில சமயங்களில் துன்பம் வாழ்வின் மையமாக நின்று ஆட்டி வைக்கும் போது, அதிலும் ஒரு சுகம் காணலாம்; ஒருவகை லயம் இழைந்தோடுவதை உணரலாம். உண்மையில், எந்த ஒன்றும் முற்றிலும் துன்பம் தருவதில்லை. அத் துன்பத்தின் ஊடேயும் – புகை நடுவினில் தீ இருப்பதைப் போல – அத்துயரத்தின் நடுவிலும் வாழ்க்கை எனும் நம்பிக்கைத் தீ கனன்று கொண்டே இருக்கும். பக்குவமாக அதைச் சற்று ஊதிவிட்டு அணையாமல் அரவணைத்துக் கொண்டால், அது மறுபடியும் கொழுந்து விட்டெரியத் தொடங்கிவிடும். இந்த மனப்பக்குவத்தை எவரும் முயன்று ஆக்கிக் கொள்ள முடியும். அப்பக்குவம் கைவந்துவிட்டால், எதிரியும் பணிந்து நிற்கும் ஏற்றம் நமக்கு ஏற்பட்டுவிடும். காந்தியடிகள், பண்டித நேரு முதலியோரின் போராட்ட வாழ்வில் ஏற்பட்ட மனப்பக்குவங்கள் அவரவர் வாழ்வுப் போராட்ட முனைகளிலும் ஏற்பட்டே தீரும். இந்தப் பக்குவத்திற்கு உதவும் முதல்படி நமக்கு சிந்தனையில் செயலில் – ஒருவகைச் சமநிலைப் பாங்கு ஏற்படுதல் ஆகும்.

“துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி

     இன்பம் பயக்கும் வினை”      (669)

எனும் வள்ளுவர் அறிவுரைப்படி, இன்பம் பயக்கும்  காரியங்களை, துணிவாற்றி – அதாவது கலங்காது – செய்ய வேண்டும். துன்பத்தைப் புறங்காணவும் வேண்டும். இன்பத்தை மேலும் மிகுவித்துக் கொள்ளவும் வேண்டும். இந்த ஆற்றலே பக்குவம். இப்பக்குவத்தின் அடுத்த படி- ‘நகுக’. நம்மை ஒரு மூன்றாம் நபர் போலக் கருதிக் கொண்டு, நமக்கு வரும் பிரச்சினைகளை அணுகவும் சமாளிக்கவும் முனையும் போது நகும் மனப்பாங்கும், நடுவுநிலைத் திறனும் நமக்கு ஏற்பட்டுவிடும்.

இன்று பழியும் பழிப்பும் அற்ற வாழ்க்கை அருகி வருகிறது. நமது அரசு முறைகளும், சமுதாய நடைமுறைகளும் பழிபடர்ந்த வாழ்வுக்கே முலாம் பூசுகின்றன. போட்டியும் பொறாமையும் அடர்ந்த வாழ்வில், எப்படியும் நிலைக்க வேண்டும் என்ற போராட்டத்தில் நண்பரே பகைவராகும் துன்பமும், சுற்றமே எதிராகும் துயரமும் வளர்ந்து வருகின்றன. ஊரெல்லாம் இவ்வாறு காற்று கெட்டுப் போயிருக்கையில், நமது நுரையீரலில் மட்டும் நல்ல காற்று வந்துவிடும் என எதிர்பார்க்கலாமா?

உலகப் போக்கோடு – அந்த வெள்ளத்தோடு அடித்துச் செல்லப் படுவதைவிட, அதற்கு எதிர் நீச்சலிடும் போதுதான்- வாழ்வில் ஒருவகைச் சுகம் தெரிகிறது. இந்தச் சுக அனுபவம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் உரியது; சற்று முயலும் எவர்க்கும் எளியது; நாளடைவில் எல்லோர்க்கும் இனியது.

பகைவரே போற்றும் இச்சிறப்பினை அடைய துன்பத்தையே இன்பமாக மாற்றிக் காட்டும் ரசவாத உணர்வு அவரவர் மனதில் – செயலில் – அரும்ப வேண்டும்; மலர வேண்டும்; மணம் பரப்ப வேண்டும்; அந்த மணம் பரவப் பரவ – சூழ்நிலைக் காற்றும் சுத்தமாகும். ஒருவர் பூசிக்கொள்ளும் வாசனை – சூழ்ந்திருப்போருக்கு எல்லாம் மணம் பரப்புகிறதல்லவா, அதைப் போல! வள்ளுவர் இதனையே,

“இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்

     ஒன்னார் விழையும் சிறப்பு”          (630)

எனப் பக்குவமாகச் சொன்னார்.

“துன்பமே இயற்கை எனும்

           சொல்லை மறந்திடுவோம்

     இன்பமே வேண்டி நிற்போம்

           யாவும் அவள் தருவாள்”

எனப் பரவசமுற்றுப் பாடினான் பாரதி.

மறக்கத் துணிவதும் – நாடி நிற்க முயல்வதும் – வாழ்க்கை நடைக்கு உதவும் இரு கால்களைப் போன்றவை. இந்த நடைப்பயிற்சியினையே நமது இலக்கியங்கள் எல்லாம் பேசுகின்றன.

என்னைச் செதுக்கிய திருக்குறள் – பாகம் 3

Image result for காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்

ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் சமயத்தில் எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைச் சொல்கிறார் திருவள்ளுவர். இங்கே அவர் ஒரு பெரிய உண்மையைக் கூறுகிறார்.

உனக்குச் சொந்தக்காரர், மனைவிக்குச் சொந்தக்காரர், நண்பருக்குச் சொந்தக்காரர் என்று நினைக்காதே. அவருக்கு உதவி செய்வது வேறு விஷயம். இந்தத் தொழிலுக்கு இவர் தகுதியானவரா என்று மட்டும் பார். அப்படி இல்லையென்றால் அந்தத் தொழில் அழிந்துவிடும். வாழ்நாள் முழுவதும் துயரம் தரும்.

காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்

     பேதமை எல்லாம் தரும்”       (507)

ஒரு காரியத்தைத் திட்டமிடுவதற்கு, ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன் அதன் லட்சியம் என்ன? அந்த லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகள் யாவை? அந்த வழிமுறைகளுக்கு வரக்கூடிய இடையூறுகள் என்ன? அந்த இடையூறுகளை வெல்லுவதற்கு உரிய வழிமுறைகள் எவை? இவையெல்லாம் வெற்றி பெற்ற பின்பு உனக்குக் கிடைக்கக்கூடிய விளைவு (ரிசல்ட்) என்ன?

“முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

     படுபயனும் பார்த்துச் செயல்”              (676)

ஒரு தொழிலை ஆரம்பித்திருக்கிறோம் என்றால் என்ன நோக்கத்திற்காக ஆரம்பித்துள்ளோம், அதற்கு என்ன லாபம் கிடைக்கும், இதற்கு இடையில் வரக்கூடிய இடையூறுகள் எவை, அவற்றை வெல்லுவதற்கு உரிய வழிகள் என்ன, இவைகளை எல்லாம் வென்ற பின்பு கடைசியில் உனக்கு லாபம் கிடைக்குமா? நட்டம் வருமா? இலாபம் கிடைத்தால் செய், இல்லை என்றால் விட்டுவிடு. என்று நன்கு ஆராய்ச்சி செய்யச் சொல்கிறார். அந்தத் தொழிலுக்கு எனத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மிகச் சிறந்தவர் களாக இருக்க வேண்டும் என்கிறார்.

“தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

 அரும்பொருள் யாதொன்றும் இல்”        (462)

அவ்வாறு தேர்ந்தெடுத்தவரைச் சூழ்ந்து ஆலோசனை பெறவேண்டும்… நீதான் தொழிலதிபர் என்று நினைக்காதே அந்தத் துறையில் சிறந்தவரைக் கூப்பிட்டு ஆராய்ந்துபார் அதற்குப் பிறகு முடிவெடு, துணிவு கொள். அந்தத் துணிவை மிக விரைந்து செய். இல்லாவிட்டால் பயன் இல்லாமல் போய்விடும். என விளைவு பற்றிப் பேசுகிறார் வள்ளுவர்.

“சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல்; அத்துணிவு

 தாழ்ச்சியுள் தங்குதல் தீது”                (671)

இதைச் செய்து முடித்தபிறகு வெற்றிபெற்று விட்டோம் என்று ஆனந்தமாய் இருந்துவிடாதே. மேலும் மேலும் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும். வெற்றி பெற்று விட்டோம் என்று சும்மா இருந்து விடக்கூடாது.

“இறந்த வெகுளியின் தீதே சிறந்த

 உவகை மகிழ்ச்சியிற் சோர்வு”       (531)

“சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

 நிலத்தறைந்தான் கைபிழையா தற்று”  (307)

கோபம் கொண்டவன் அழிந்து போய்விடுவான். அதுபோல வெற்றி பெற்று விட்டோம் என்று சும்மா இருந்தால், மேலும் மேலும் செய்யாது சோர்ந்திருந்தால் நீ தோற்றுப்போய் விடுவாய். தொடர்ந்து சோர்வில்லாமல் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒன்றைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால் 60 மைல் ஓடிக்கொண்டே இருந்தால்தான் 40 மைலைக் காப்பாற்ற முடியும் என்று தன்னம்பிக்கையை ஊட்டுகிறார் இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. அது போல காரியம் செய்கின்றபோது,

“கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக்கொட்கின்

 எற்றா விழுமம் தரும்”             (663)

என்கிறார். செய்யப் போகின்றதைப் பற்றி, ஒரு காரியத்தை உடனே வெளிப்படுத்தி விடக்கூடாது. அப்படி வெளியிட்டு விட்டால் தோற்றுப்போய் விடுவார்கள். பகைவர்களும், போட்டியாளர்களும் உத்தியைத் தெரிந்து கொண்டு தோற்கடித்து விடுவார்கள். அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். ஒன்று செய்கின்ற சமயத்திலே மிக ரகசியமாகத் திட்டமிட்டு அக்காரியம் முடிந்த பிறகே வெளிப்படுத்த வேண்டும் அதுதான் ஆண்மை என்று சொல்கிறார் வள்ளுவர்.

ஒருவகைப் புல் உண்டு. அதனைப் போட்டுவிட்டால் மண்ணுக்கு அடியிலேயே மிகச்சிறப்பாக வளர்ந்து திடீரென வெளிப்படும். மிகச்சீரிய காரியங்களைச் செய்யும் போது கடைசிவரை அதனை வெளிப்படுத்தக் கூடாது என்று சொல்கிறார் வள்ளுவர். மிக வியப்பாக இருக்கிறது. இப்பொழுது உள்ள தொழில்நுட்பத் திறன் பற்றி எல்லாம் திருவள்ளுவர் அன்றே சிந்தித்து இருக்கிறார். லேண்ட், லேபர், கேப்பிட்டல், டைம் என்ற கான்ஸப்ட் பற்றி எல்லாம் சொல்லி இருக்கிறார்.

Image result for thirukkural

“பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்

     இருள்தீர எண்ணிச் செயல்”          (675)

ஒரு காரியத்தைச் செய்வதற்கு, செயலுக்குத் தேவைப்படுகின்ற ஒரு மனிதனின் அளவுகோல் எது? குலச்சிறப்பு வேண்டாம், படித்திருக்க வேண்டாம், பட்டம் பெற வேண்டாம். ஆனால் அவன் நல்ல எண்ணத்தோடு, நல்லதைக் கேட்டுச் செய்து விடுவானானால் அவனால் முடியாதது என எதுவும் இருக்காது.

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

 செல்லும்வா யெல்லாம் செயல்”     (33)

“ஒல்லும் வாய்எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால்

 செல்லும்வாய் நோக்கிச் செயல்”     (673)

“ஓல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்

 செல்வார்க்குச் செல்லாதது இல்”     (472)

இது ஒரு திறன். இயன்றவரையில் எல்லாம், வகையில் எல்லாம், தொடர்ந்து தயங்காமல் காரியத்தைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.

எந்தக் காரியம் செய்தாலும் காலம் அறிந்து, இடமறிந்து செய்தால் வெற்றி பெறலாம். எது உன்னால் முடியும் என்று ஆராய்ந்து செய். முடியாததை நினைக்காமல் விட்டுவிடு.

“உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி

 இடைக்கண் முரிந்தார் பலர்”        (473)

உன் வலிமை எது என்பதைப் புரிந்து கொண்டு, அதனை நன்றாக ஆராய்ந்து, அதனில் கருத்தைச் செலுத்தி, மன வலிமையைச் செலுத்தி அந்தக் காரியத்தைச் செய்தால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை என்கிறார் வள்ளுவர் இது தன்னம்பிக்கை ஊட்டக் கூடியது. மிக வியப்பாக இருக்கிறது. அதுபோல ஒரு காரியத்தில் வெற்றி பெற்று விட்டாயானால் மற்றதில் எளிதாக வெற்றி பெறலாம். சினிமாக்காரர்கள் வருவதற்கு இதுதான் காரணம். அந்தத் துறையில் வெற்றிபெற்றவர்கள் மீண்டும் வந்து விடுவார்கள். என்ன காரணம் ஒரு காரியத்தைச் செப்பமாகச் செய்ததனால் மற்ற காரியங்கள் இயல்பாகச் செயல்படத் தொடங்கிவிடும். இதுதான் வினையாகச் செயல்படுவது.

ஒரு மதம் பிடித்த யானையை நன்றாகப் பழக்கி விட்டோமானால் அந்த யானையை வைத்து காட்டில் பல யானைகளைப் பிடித்துவிடலாம்.

“வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

 யானையால் யானையாத் தற்று”      (678)

‘மேனேஜிங் கான்சப்ட்’ குறித்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் என்றால் மிகப் பெரிய வியப்பாக இருக்கிறது.

என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியவர் எனது மாமனார் திரு.வி.கே.கே. கல்யாணசுந்தரம் அவர்கள். அவர்களைப் பற்றி அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். அவர் அதிகமாகப் படித்ததில்லை. ஆனால் அவர் வெற்றி பெற்றதற்குக் காரணம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. அதன் பிறகு விடாமுயற்சி, தன்னம்பிக்கை. பெரியோர்களின் ஆசி, இறைவன் திருவருள் இவையெல்லாம் அவரிடம் இருந்ததனால்தான் மிகப்பெரிய அளவில் உயர்ந்தார். திருவள்ளுவர் சொல்கிறார் வெறும் உழைப்பு மட்டும் போதாது. புத்திசாலித்தனமான உழைப்பாக இருக்க வேண்டும் என்கிறார்.

“ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்

 நீள்வினையால் நீளும் குடி.”         (1022)

“முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை

 இன்மை புகுத்தி விடும்.”      (616)

“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

 மெய்வருத்தக் கூலி தரும்.”          (619)

“அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

 பெருமை முயற்சி தரும்”      (611)

என்னால் செய்ய முடியுமா என்று அஞ்சி நிற்காதே. புறநானூற்றுப் புலவர் இதனை அழகாகச் சொல்வார். இதைச் செய்ய முடியுமா என்று அஞ்சிநிற்கும் கோழைகளே! உங்களுக்குச் சொல்கிறேன். யானை வேட்டைக்குச் செல்லுங்கள். யானை வேட்டை என்றால் யானையைப் போன்ற பெரிய இலட்சியத்தைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். யானை வேட்டைக்குச் சென்றால் யானையைப் பெற்றுவிடலாம். குருவி வேட்டைக்குச் செல்லாதீர்கள். சிறு இலட்சியத்தைத் தேடாதீர்கள். குருவி கிடைக்காமல் போகலாம். ஆகவே வாழ்கின்ற காலத்தில் கடுமையான முயற்சியுடன் உழைத்தீர்களேயானால் இந்தச் சமுதாயத்தில் நீங்கள் பெரும் பெருமையைப் பெறலாம்.

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றுஅது

     வேண்டாமை வேண்ட வரும்”  (362)

“கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

     மற்றுஈண்டு வாரா நெறி”       (356)

பிறவி இல்லாத வாழ்க்கை உங்களுக்கு முக்தியினைத் தந்திருக்கும். அதில் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் சொர்க்க லோக இன்பம் தரும். அதிலும் நம்பிக்கை இல்லை யென்றால் நீ வாழ்கிற காலத்திலே பெருமையுடையதாக வாய்த்திராது.

வானளவு உயர்ந்திருக்கும் இமயமலை அளவு நீ வாழலாம். கவிப்பேரரசு வைரமுத்து சொல்வது போல சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறலாம். வாழ்கின்ற காலத்திலே வேண்டியதை எல்லாம் கடுமையான முயற்சியும் உழைப்பும் இருந்து தொடர்ந்து பணியாற்றினால் வெற்றி பெறுவீர்கள். நான் அடிக்கடி மாணவர்களிடையே சொல்லுவது வழக்கம். எல்லா மாணவர்களும் கடைப் பிடிக்க வேண்டியது இதுதான்.

வாழ்க்கையிலே மிகப்பெரிய லட்சியம் இருக்க வேண்டும் நான்கு குற்றங்களை நீக்க வேண்டும்.

“நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

     கெடுநீரார் காமக் கலன்.”      (605)

ஒருவன் கெட்டுப் போக வேண்டும் என்று நினைத்து விட்டால் ஒரு கப்பல் இருக்கிறது. அதில் ஏறிக்கொள்ளலாம் காலம் தாழ்த்திச் செய்தல், மறந்து போதல், செய்யக் கூடியதை மறந்து விடுதல், தூக்கம், சோம்பல், சுறுசுறுப்பு இன்மை, சோம்பலில் இரண்டு சோம்பல் உண்டு. உடல் சோம்பல், மூளைச் சோம்பல் இந்த இரண்டையும் நீ விட்டுவிடு. காலம் தாழ்த்திச் செய்தல். மறந்து போதல், தூக்கம், சோம்பல் இந்த நான்கையும் விட்டுவிடு என்று வள்ளுவர் சொல்கிறார்.

முயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் நல்ல நேர்மை யுடனும் காரியம் ஆற்றுபவனுக்கு இறைவன் திருவருள் வாய்க்குமேயானால் அவன் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவான். அந்த வகையில் தான் எனது மாமனார் உள்ளுணர்வு மிக்கவராக இருந்தார். பெண்களுக்கும் சிந்தனையாளர்க்கும் அந்த ஆற்றல் மிகுதியாக இருக்கும். நான் அவரைப் பற்றிச் சொல்லும் பொழுது விரைவு பற்றிச் சொல்வேன். நாளைதான் செய்ய முடியும் என்ற காரியத்தை, வேலையை இன்றே அல்ல, நேற்றே முடித்திருக்க வேண்டும் என்று சொல்லுவார். விரைவு, துணிவு அப்படி ஒரு மிகப் பெரிய ஆற்றல் அவருக்கு இருந்தது. அவரை அறியாமலே அத்தகு ஆற்றல் அவருக்குக் கிடைத்திருக்கிறது. தன் குடும்பத்தை உயர்த்துவதாக இருந்தாலும் சரி, குடியை உயர்த்த வேண்டுமானாலும் சரி, நாட்டை உயர்த்த வேண்டுமானாலும் சரி அந்தப் பேராற்றல் அவருக்குத் துணை நின்றது.

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

     மடிதற்றுத் தான்முந் துறும்”          (1023)

ஒருவன் தன் குடியை உயரச் செய்வேன், நாட்டை உயரச் செய்வேன் என்று தனது கையை உயர்த்தி நிற்கையிலே தெய்வம் வேட்டியை இறுகக் கட்டிக் கொண்டு அவனுக்கு ஏவல் செய்யக் காத்திருக்கும்; தூணாக நின்று தாங்கி நிற்கும். இவ்வளவு தன்னம்பிக்கை ஊட்டியவர் திருவள்ளுவர். இந்த நூற்றாண்டில் இதைவிட வழிகாட்டுதல் வேறு எது வேண்டும்? இதுபோன்ற நிறையச் செய்திகளைச் சொல்லி வைத்திருக்கிறார் வள்ளுவர்.

இந்த அடிப்படையைப் பெற்றுக் கொண்டால் நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேறலாம். வாழ்க்கையில் அவசியமானது எது? பொருள் முக்கியம். போதும் என்ற மனமே பொன் செய்யும் என்று வள்ளுவர் சொல்லவில்லை நீ சமுதாயத்தில் உயர வேண்டும் என்று சொன்னால் பொருளாதாரத்திலே சிறந்து இருக்க வேண்டும் என்கிறார்.

“பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்

     பொருள்அல்லது இல்லை பொருள்”         (751)

பொருள் போல வலிமையுள்ளது வேறு எதுவுமில்லை. ஒன்றுமே லாயக்கில்லாதவனையும், மிகச்சிறந்த மனிதனாக்க வேண்டும் என்று சொன்னால் பொருளை சம்பாதி என்கிறார் வள்ளுவர். மேலும் பிறரது செருக்கை அழிக்க வேண்டும் என்றால் செல்வத்தை ஈட்டு என்கிறார்.

“செய்க பொருளை; செறுநர் செருக்கறுக்கும்

     எஃகுஅதனின் கூரியது இல்”         (759)

‘உன்னை உயர்த்திக் கொள்ள, உன் பகைவனுடைய செருக்கை அடக்கிட, மிகப்பெரிய செல்வத்தைச் செய்’ என்று கட்டளை இடுகிறார் வள்ளுவர்.

“பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்

     எண்ணிய தேயத்துச் சென்று”         (753)

அதுபோல ஒரு நாடு தன்னிறைவு பெற்ற நாடாக இருக்க வேண்டும் என்று சொன்னால் நிறைய உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இருள் என்பது அறியாமை, வறுமை இந்த வறுமையைப் போக்க வேண்டும் என்றால் சென்ற நாடெல்லாம் முயன்று பொருள் ஈட்டவேண்டும்.

“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

     தீதுஇன்றி வந்த பொருள்”           (754)

அருளை வளர்க்க வேண்டுமென்று சொன்னால் கூடப் பொருள் வேண்டும்.

“அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்

     செல்வச் செவிலியால் உண்டு” (757)

ஆகவே பொருள் தான் மிக முக்கியம். நியாயமான முறையில் பொருளை சம்பாதித்தாயானால் அதுதான் அன்பை வளர்க்கக் கூடிய அருளை வளர்க்கும் நீ வலிமை யுடையவனாக இருக்கலாம். பொருள்தான் உன்னை மதிக்கத்தக்கவனாக மாற்றும். ஆகவே பொருளாதார மேன்மை வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

ஒரு நாட்டினுடைய பெருமை எங்கிருக்கிறது என்று சொன்னால் தன்னிறைவு பெற்றதாக இருக்கிறது என்பதில் இருக்கிறது. யாரையும் நாடி நிற்கக்கூடாது. அந்த அளவுக்கு அந்த நாடு ஆற்றல் பெற்ற நாடாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஒரு நாடு வல்லரசாக முடியும். 2020-இல் வல்லரசு ஆக வேண்டுமென்று சொன்னால் பல வகையிலும் முயன்று வளத்தைப் பெருக்கி இந்நாட்டை நாம் உருவாக்க வேண்டும் எனக் கட்டளை இடுகிறார்.

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

     ஆராய்வான் செய்க வினை”          (512)

என்கிறார் வள்ளுவர். இவைகளெல்லாம் நடைமுறைச் சிந்தனைகள்.

வாழ்க்கையில் மனித நேயம் வேண்டும். அதை மிகச்சிறப்பாக வலியுறுத்துகிறார் வள்ளுவர். வாழ்கின்ற வாழ்க்கையின் பயன் எது? வாழ்க்கையின் பயனே பிறருக்கு உதவுவது தான்.

“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

     தந்நோய்போல் போற்றாக் கடை?”    (315)

இதில் அதிகமான நுட்பம் இருக்கிறது. அறிவைப் பெற்றதனால் என்ன பயன்? பிறருக்கு உதவுதல் தான். உதவுவது என்றால் ‘பார்டிசிபேசன் அண்டு இன்வால்வ் மென்ட்’. பிறருடைய துன்பத்தைத் தன்னுடைய துன்பமாக ஏற்றுக்கொண்டு அத்துன்பத்தில் பங்கெடுத்துக்கொண்டு அத்துன்பத்தின் கொடுமையை உணர்ந்து அவர்களுக்கு நன்மை செய்வோமேயானால் அதுதான் மனித நேயம்.

Image result for thirukkural

“பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

     தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”     (322)

மனித உயிர்களன்றி இந்த உலகத்தில் உள்ள ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை எல்லாவற்றையும் காக்க வேண்டியது நமது கடமை. இது நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாய அறமாகச் சொல்வது.

இராமலிங்க அடிகளார் மிகவும் அழகாகச் சொல்கிறார்.

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’

என்று. மிகப்பெரிய நேயம் என்று சொன்னால் அது மனித நேயம் தான். எத்துணையும் பேதமுறாது எல்லாவுயிரையும் நேசிக்கிறார் வள்ளலார்.

‘நான் தொண்டருடைய தாளைப் பணிய விரும்புகிறேன் தொண்டர் எப்படிப்பட்டவர்? அவர் சாதாரணமானவரில்லை. எல்லா உயிரையும் நேசிக்கிறவர். அவர் உள்ளத்திலே சிவபெருமான், தில்லை நடராசர் நடனம் ஆடுகிறார். அந்த அருளாளரைக் கண்டு அவர் தாளினைப் பணிய என் உள்ளம் விழைகிறது. யாரெல்லாம் சமுதாயத்தின் உயிர்களை நேகிக்கின்றாரோ அவரே என் இறைவன். அவரே என் தலைவன்’ என்று கூறுகிறார் வள்ளலார்.

மனிதராகப் பிறந்தவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். ஒரு பயன் இருக்க வேண்டும். பலரால் இந்த உலகம் வாழவில்லை ஒரு சிலரால்தான் இந்த உலகம் வாழ்கிறது. அந்த ஒருசிலரில் நாம் ஒருவராக இருக்க வேண்டும்.

இந்த உலகம் எதனால், யாரால் வாழ்கிறது என்றால் தனக்கென வாழாது பிறர்க்காக வாழும் ஒரு சிலரால் தான் வாழ்கிறது.

“உண்டால் அம்ம இவ்வுலகம்…

     தமக்கென முயலா நோன்தான்

     பிறர்க்கென முயலுநர் உண்மையானே”

“விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா

     மருந்துஎனினும் வேண்டற்பாற் றன்று” (82)

அமிழ்தமே கிடைத்தது என்றாலும் அதனைப் பகிர்ந்தளிப்பார்கள். இந்த உலகமே பரிசு என்று சொன்னாலும் பழிச்செயல்களைச் செய்ய மாட்டார்கள். புகழ் என்றால் தம் உயிரையும் கொடுப்பார்கள். உழைப்பார்கள்; கடுமையாக உழைப்பார்கள். பிறர்க்காக உழைப்பார்கள். அத்தகைய ஒரு சிலர் இருப்பதால்தான் இந்த உலகம் வாழ்கிறது. அதை அழகாக,

“பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அதுஇன்றேல்

     மண்புக்கு மாய்வது மன்”      (996)

என்கிறார் வள்ளுவர்.

நல்ல பண்புடையவர்களுடன் பொருந்தி இருப்பதனால் தான் இந்த உலகம் நிலைத்திருக்கிறது. இல்லையென்றால் இந்த உலகம் என்றோ அழிந்து போயிருக்கும் என்று சொல்கிறார் வள்ளுவர்.

எனது வாழ்க்கையில் நான் பல நூல்களைப் படித்திருந்தாலும்கூட திருக்குறள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. அதனால்தான் நாம் திருக்குறளை உலகப் பொதுமறையாகக் கொண்டிருக்கிறோம்.

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

     மறைமொழி காட்டி விடும்”         (28)

எனப் பேசுகிறோம். திருக்குறள் இந்தியாவின் தேசிய நூல் ஆக வேண்டும். இந்திய நாட்டின் தேசியப் பறவை மயிலாக இருக்கிறது, தேசிய விலங்கு புலியாக இருக்கிறது, தேசிய மலர் தாமரையாக இருக்கிறது, உலகமெல்லாம் போற்றக்கூடிய திருக்குறள் தேசிய நூலாக வேண்டாமா? அதற்கு நாமெல்லாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். சிந்தனையை ஒருங்கிணைத்துச் செயலாற்ற வேண்டும். ஒன்றை நினைத்து நினைத்துச் சிந்தித்துச் சிந்தித்து செய்து கொண்டிருந்தால் வெற்றியாகும். வெற்றி பெறுவதற்கு எது அடிப்படை என்று சொன்னால்,

“உள்ளிய எய்தல் எளிதுமன் மற்றும்தான்

     உள்ளியது உள்ளப் பெறின்”          (540)

என்றும்,

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

     திண்ணியர் ஆகப் பெறின்”           (666)

என்றும் அறுதியிட்டு உரைப்பார் வள்ளுவர்.

திருப்பித் திருப்பி அதை நினைப்போம் எல்லோரும் ஒன்றாக இணைந்து நினைப்போம்.

“அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

     நாடி இனிய சொலின்”        (96)

என்பது வள்ளுவர் வாக்கு.

என்னைப் பெருமைப்படுத்த எவ்வளவு பெரியவர்கள் வந்திருக்கிறீர்கள். இது எனக்குப் பெருமகிழ்ச்சி

இந்த உலகம் சிறப்பாக வாழ வேண்டும் என்று சொன்னால் ஒருமைப்பாடும், சகோதர நேயமும் இருக்க வேண்டும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்.’ இது ஒரு பெரிய தத்துவம்!

சான்றோர்கள் என்ன செய்வார்கள்? மிகப்பெரிய ஆற்றலுடையவர்களைக் கண்டு இது இயற்கைதானே என்று அவர்களைப் பற்றி வியக்கமாட்டார்கள் சரி கீழே இருப்பவர்களைக் கண்டு மோசமானவர்கள் என்று அவர்களை இகழ மாட்டார்கள்.

பெரியவர்கள் பெரியவர்களாக இருப்பது இயற்கை என்று கொண்டு, சிறியவர்கள் மீது இரக்கம் காட்டி நடந்து கொள்வார்கள். எனக்குச் சில சமயங்களில் இந்த சந்தேகம் வந்துகொண்டிருக்கும். எதற்காக அப்படிச் சொன்னார்கள் என்று மிகச்சிறப்பாகச் செய்யக் கூடியவர்களை உனக்கு இது இயற்கைதானே என்று வியக்க மாட்டார்கள். அதுபோல சிறியவர்களை இகழமாட்டார்கள். இவர்கள் இப்படித்தான் இருக்க முடியும் என்று நம்புவார்கள். இது சமநிலை. தன்னுடைய தவறுக்குத் தானே தான் காரணம். அதனைத் தீர்ப்பது உன்னைப் பொருத்தது. இந்த துன்பம் வந்ததற்குக் காரணம் வேறு ஒருவர் அல்ல. இந்தத் துன்பத்திற்குக் காரணம் நீதான். உன்னுடைய உழைப்புதான் அந்த துன்பத்தை நீக்க வேண்டும்.

“தீதும் நன்றும் பிறர்தர வாரா.”

வாழ்கின்ற காலத்திலே மிகச்சிறந்த நன்மைகளைச் செய்து வாழ வேண்டும்.

“அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க; மற்றுஅது

     பொன்றுங்கால் பொன்றாத் துணை”         (36)

என்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2

Image result for thirukkural“இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

     உணர விரித்துஉரையா தார்”               (650)

படித்ததை சிரமப்பட்டு விளக்கிச் சொல்லி அதைப் பரப்புவதும் சிரமமானது. கொத்தாக மலர் மலர்ந்திருக்கிறது. அந்த மலர்கள் மணம் வீசாத காகிதப் பூக்களாக இருந்தால் பயனில்லை இவைகளையெல்லாம் தெரிந்தும், பிறர்க்கு உணர்த்தியும், சிரமப்பட்டு தாம் படித்ததை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழாமல் போய்விட்டால் அவன் பேதையிலும் பேதை என்கிறார் வள்ளுவர். ஆகவே திருக்குறளைப் படிக்கின்ற நோக்கமே அதை வாழ்வியல் நூலாக, வருகின்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடியதாக இருப்பதுதான் என்பதைக் கண்டேன்.

சான்றாக சில உதாரணங்களைக் கூறுவேன். திருக்குறள் எப்படி எல்லாம் என் வாழ்க்கையில் பயன்பட்டது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு மனிதன் சிறப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அவன் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும். எனது திருமணம் என் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

ஒரு குடும்பம் வெற்றி பெற வேண்டும் எனச் சொன்னால், நல்ல மனைவி, நல்ல மக்கள், நல்ல நண்பர்கள், நல்ல சான்றோர்கள், நல்ல எண்ணம் இவையெல்லாம் அமைந்திருந்தால் தான் அந்த குடும்பமும் அவனும் சிறப்பாக இருக்க முடியும்.

“இல்லதென் இல்லவள் மாண்பானால்?”     (53)

என்ற வகையிலே எனது துணைவியார் அமைந்திருந்தார். எனது வாழ்க்கையின் அனுபவத்தைச் சொல்வதானால் அடக்கமாகச் சொல்கிறேன். குழந்தைகளெல்லாம் அன்பு மிகுந்தவர்களாக இருந்தார்கள். மாலையில் பேசிக் கொண்டிருக்கும்பொழுது ஆதித்தனார் ஒரு சிறந்த செய்தி சொன்னார்; ஆண்குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் அன்பாக இருப்பார்கள் என்றார். அந்த அன்பைப் படித்திருக்கிறோம். திருக்குறளில் படித்ததை வாழ்வில் அனுபவிக்கும் பொழுதுதான் அதன் பெருமையை உணர்ந்தேன். இரண்டு ஆண்டுகளுக்குமுன் நான் அப்பல்லோ மருத்துவமனையில் நலிவுற்று இருந்த பொழுது பிள்ளைகளும் துணையாக இருந்தார்கள். நான் ஒரு சிறு அசைவு அசைந்தாலும் உதவிக்கு வந்து விடுவார்கள். பத்து நாட்கள் அவர்கள் இருந்து உதவிகள் செய்தது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. கடைசியில் தான் தெரிந்தது. அவர்கள் தூங்கவே இல்லை என்பது, அந்த அன்பினது பெருக்கை அப்பொழுது தான் உணர்ந்தேன் என்னை அறியாமலே கண்களில் நீர் வடிந்தது.

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்

     புன்கண்நீர் பூசல் தரும்”        (71)

துன்பம் வந்த சமயத்திலேதான் என் குடும்பத்தினர் உறுதுணையாகவும், நெகிழ்ந்தும் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். துன்பம் வரும் பொழுது நெருக்கமான வர்கள் அன்பு காட்டும் சமயத்தில்தான் அன்பின் உண்மைப் பொருளை, அன்பின் உயிர்ப்பை நன்றாக உணரமுடிகிறது.

இதுபோன்று பிரச்சினைகள் வருவது இயற்கை எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரி மிகப்பெரிய அரசனாக இருந்தாலும் சரி, பெரிய செல்வந்தனாக இருந்தாலும் சரி. துன்பங்கள் வரும். இன்பம் போல துன்பமும் இயற்கையானது. அந்தத் துன்பத்தை வெல்லுவதற்கு வழி சொல்கிறார் வள்ளுவர்.

“இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்

     கையாறாக் கொள்ளாதாம் மேல்.”     (627)

எவ்வாறு இன்பம் இயற்கையானதோ அவ்வாறு துன்பமும் இயற்கையானது. இன்பமும், துன்பமும் இரவு பகல் போல வரும். வாழ்க்கையிலே துன்பத்தைக் கண்டு அஞ்சாதே என்ற தைரியத்தைக் கொடுக்கிறார், அந்தத் துன்பத்தை வெல்லுவதற்கு வழி சொல்கிறார் வள்ளுவர்.

“இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்

     ஒன்னார் விழையும் சிறப்பு”          (630)

இன்னாமையையே இனிமையாக்கிக் கொண்டால், அதையே சுவையாக்கிக் கொண்டால் துன்பம் உங்களை விட்டு ஓடிவிடும். உயர்வுக்கு அடிப்படையாவது நல்ல பேச்சும், நல்ல எண்ணமும், நல்ல சொல்லும்தான் அத்தகைய தூய உள்ளம் இருந்தால் மிகப்பெரிய ஆற்றல் கிடைக்கும் அந்த ஆற்றலைக் கொண்டு எல்லாத் துன்பங்களையும் வென்றுவிடலாம்.

“வெள்ளத்து அனைய இடும்பை அறிவுஉடையான்

 உள்ளத்தின் உள்ளக் கெடும்”   (622)

உள்ளத்தால் நினைத்தாலே துன்பங்கள் ஓடிவிடும் என்று சொல்கிறார் வள்ளுவர். அப்படியானால் இந்த வாழ்க்கையில் வெற்றியடைய வள்ளுவர் என்ன சொல்கிறார்?

நம்மைக் காட்டிலும் ஒரு பேராற்றல் இருக்கிறது அது நமக்கு வழிகாட்டுகிறது என்பதை உணர்ந்தேன் முதலில் நான் இறைமறுப்புக் கொள்கையைத்தான் பேசிக் கொண்டிருந்தேன்; அனுபவமின்மையால் அறிவுப் பூர்வமாக ஒரு தருக்கம் என்ற முறையில் நான் பேசிக் கொண்டிருந்தேன். காலப்போக்கில் துன்பங்களும் சோதனைகளும் வரும் சமயத்திலேதான் நன்றாகக் கண்டு கொண்டேன். நம்மைக் காட்டிலும் மிகப்பெரிய ஓர் அற்புதமான சக்தி நம்மை வழி நடத்துகிறது. என்பதை உணர்ந்தேன். துன்பத்திலிருந்தும், துயரத்திலிருந்தும் நீங்க வேண்டும் என்று சொன்னால், ஒரு பெரிய சக்தியை, பரம்பொருளை அது எந்தத் தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று கருதினேன். அதைத் தான் திருவள்ளுவர் சொல்கிறார்.

‘நீ உவமை உள்ளவன், சிற்றறிவு உள்ளவன். இறைவன் பேரறிவாளன், நீ பேரறிவாளனாகிய இறைவன்தாளைப் பற்றிக் கொண்டால்தான் அந்தத் துன்பத்திலிருந்து நீங்க முடியும்.’

“தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

 மனக்கவலை மாற்றல் அரிது”        (7)

இடும்பைக்கு இடும்பை படுத்த வேண்டும் என்று சொன்னால் இறைவன் தாளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

“வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

 யாண்டும் இடும்பை இல”          (4)

‘விருப்பு வெறுப்பு இல்லாத இறைவன் தாளைப் பிடித்தால் தான் உனது துன்பத்தை நீக்க முடியும்’ என்று வள்ளுவர் சொல்கிறார்.

ஆகவே இறைவன் எங்கு இருக்கிறான்? வேறு எங்கும் இல்லை. நம் உள்ளத்தில்தான் இருக்கிறான். அவனைக் கண்டுபிடித்து அவன் தாளினைச் சரணடைந்தால்தான் வெற்றிபெற முடியும் என்று சொல்கிறார் வள்ளுவர்.

திருவாசகத்தில் மனம் உருகும்படி மாணிக்கவாசகர் சொல்கிறார்:

யான்உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

     எங்குஎழுந்து அருளுவது இனியே?”

தெய்வத்தைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டோம் என்று சொன்னால் உள்ளொளியைப் பெருக்கலாம், உலப்பிலா ஆனந்தம் பெறலாம்.

இறைவன் பிரபஞ்சத்தில் உள்ள ‘மேக்ரோ’. அதை ‘மைக்ரோ’வாக உள்ளத்தில் பிடித்துக் கொண்டோமானால் அவன் நமக்கு அருள்புரிவான்.

குடும்பமும் தெய்வமும் ஒன்றுதான். தெய்வத்தைப் போற்றினோமானால் குடும்பம் வெற்றி பெறும். குடும்பம் வெற்றி பெற்றதானால் நாம் வெற்றி பெற்றவர் ஆவோம்.

அன்புநெறியைப் பார்க்கிற சமயத்திலே,

“அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து

     இன்புற்றார் எய்தும் சிறப்பு”         (75)

என்பதனை என் வாழ்வில் நேரிடையாகக் கண்டேன். என்னுடைய பிள்ளைகளையும் குடும்பத்திலே அன்பு கொண்டிருக்கிற தாய் தந்தையரையும் பார்க்கின்ற சமயத்திலே, அவர்கள் காட்டும் அன்பைப் பார்க்கின்ற சமயத்திலே திருவாசகம்தான் நினைவுக்கு வருகிறது.

நாம் தெய்வத்தை வணங்குகின்ற சமயத்திலும் குடும்பத்தைப் போற்றுகின்ற சமயத்திலும் ஒரு சதுரப்பாடு உடையவர்கள் ஆகிறோம் என்பதைத் திருவாசகமும் காட்டுகிறது; திருவள்ளுவரும் காட்டுகிறார்.

இலக்கியங்களைப் படிக்கும் போது அதனைச் சுவைக்கு மட்டும் படிக்கவில்லை என்பதை நேரிடையாகக் கண்டு உணர்ந்தேன்.

“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

     மழலைச்சொல் கேளா தவர்”         (66)

என்பதையும்,

“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

     சிறுகை அளாவிய கூழ்”        (64)

என்பதையும் திருமணமான பிறகு நன்கு உணர்ந்து கொண்டேன். நம்முடைய குழந்தைகள், பேரக் குழந்தைகள் வந்தபோது அவர்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்று சொன்னாலே அது அமிழ்தினும் பெரிதாக இருப்பதை உணர்ந்தேன் அதை எல்லாம் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் உணர்ந்திருப்பீர்கள். கல்கண்டு இனிப்பு அது இனிக்கும் என்பது தெரியும் எப்படி இனிக்கும் என்பது சாப்பிட்டு அனுபவித்தால் தான் தெரியும். திருக்குறளில் வள்ளுவர் நெகிழும்படி சொன்னவைகளையெல்லாம் உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறேன்.

நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம் கணினி யுகத்தில் வாழ்கிறோம். ‘இண்டர்நெட்’ உலகத்தில் வாழ்கிறோம். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இப்போது இருக்கும் ‘கம்யுனிகேசன்’, இப்போது பேசப்படுகின்ற ‘ஃபியூச்சாரலஜி’, ‘டெலிகாம் பவர்’ எல்லாம் இருந்ததா? நிறைய நேரம் மட்டும் கிடைத்தது.

திருவள்ளுவர் தொழில் செய்யக்கூடிய உத்திகளை யெல்லாம் சொல்லித் தருகிறார். ‘மேனேஜ்மென்ட் கான்சப்ட்’ என்று சொல்லக் கூடியவைகளை எல்லாம் சொல்கிறார். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் உலகநாடுகளெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் அருமையான உண்மையைச் சொன்னார். அவர் திருக்குறளின் மீது அதிகமான ஈடுபாடு கொண்டவர். “என் வாழ்க்கைக்குத் திருப்புமுனையாக அமைந்தது குர்ஆனும் திருக்குறளும் தான். என்னை உயர்த்தியதும் இவைகள் தான்” என்று கூறிவிட்டு, அதற்கான காரணங் களையும் சொல்லி இருக்கிறார்.

ஒரு நாடு சிறப்பாக இருப்பதற்கு அடிப்படையான உண்மைகள் ஐந்து வேண்டும் என்று கூறினார் வள்ளுவர்.

“பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்

     அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து”         (738)

இது உலக நாடுகளில் எல்லாம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது ஒரு மனிதனுக்கும் பொருந்தும், ஒரு நாட்டுக்கும் பொருந்தும். ஒரு மனிதனை வாழ்த்தும்போது, ஆகியன வாய்க்க வேண்டும் என்பார்கள். உடல் பிணியும் உள்ளப் பிணியும் இல்லாமல் இருக்க வேண்டும். சொத்து இருக்க வேண்டும். சொத்திருந்தால் மட்டும் போதாது அதற்கு லாபம் இருக்க வேண்டும். பிரொடக்டிவிட்டி இருக்க வேண்டும். பொது மகிழ்ச்சி (சோசியல் ஹேப்பினஸ்) இருக்க வேண்டும். அக மகிழ்ச்சி இருக்க வேண்டும். மக்களுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும் நாட்டுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும். இது நாட்டுக்கும் பொருந்தும். ஒரு தனி மனிதனுக்கும் பொருந்தும். இந்த அருமையான குறளை அப்துல் கலாம் மேற்கோள் காட்டிப் பேசினார். இன்று ‘டெலிகேசன் ஆஃப் பவர்’ என்று சொல்கிறோம். ‘செலக்சன் ஆஃப் பர்சன்’, ‘ஃபியூச்சரலாஜி’ என்று சொல்லுகிறோம். இவைகளையெல்லாம் திருவள்ளுவர் சொல்லுகிறார் என்பதைப் பார்க்கிற சமயத்திலே நான் அதிசயித்துப் போனேன்.

ஒரு தொழில் நடத்துவது எப்படி? எவ்வாறு திட்டமிடுவது? எவ்வாறு நபர்களைத் தேர்ந்தெடுப்பது? மிகச்சிறப்பாக வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ‘டெலிகேசன் ஆஃப் பவர்’ என்பது அமெரிக்காவில் உள்ள திட்டம். அதைப் பயன்படுத்திக் கொள்கிறோம். மிகப்பெரிய புரஃபொசனலிஸ்ட்-ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும் அந்த புரஃபொசனலிஸ்ட்டிடம் முழுமையாகப் பொறுப்பை ஒப்படைத்து விடவேண்டும். அப்போதுதான் அந்த தொழில் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். இதனைத் திருவள்ளுவர் அப்பொழுதே சொல்லியிருக்கிறார். பொதுவாக ஙி.ஙி.கி., வி.ஙி.கி., படிக்கிற பொழுது 5 றிs சொல்லுவார்கள்: பாலிஸி, பிளானிங், பெர்சனல் புரகிராம், ப்ரொசீஜர்ஸ், ஃபெர்பார்மன்ஸ்.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

     அதனை அவன்கண் விடல்”          (517)

என்னும் வள்ளுவம் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.

ஒரு காரியத்தை முடிப்பதற்கு ‘டெலிகேசன் ஆஃப் பவர்’ ஒருவனைத் தேர்ந்தெடுத்தபிறகு அதனை அவனிடம் விட்டுவிடு என்கிறார். சரியான நபரைத் தேர்ந்தெடுக்கும் முன்னரே அவரை நம்பிவிடாதே என்கிறார்.

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

     தீரா இடும்பை தரும்”               (510)

“தேறற்க யாரையும் தேராது; தேர்ந்தபின்

     தேறுக தேறும் பொருள்”       (509)

ஒருவரை ஆராய்ந்து எடுத்தபிறகு அவரைக் கண்காணிக்க வேண்டுமே தவிர தலையிடக்கூடாது. ஒருசெடி வளரும் போது அதனைத் தோண்டி வேர் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று பார்ப்பது போல் ஆகிவிடும்.

“வினைக்குஉரிமை நாடியபின்றை அவனை

     அதற்குஉரிய னாகச் செயல்”         (518)

என்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1

என்னைச் செதுக்கிய நூல்*

Image result for thirukkural

எனக்கு வந்தவுடனே ஒருவிதப் பெரிய திகைப்பு. இந்த இனிய மாலைப்பொழுதில் என்னைப் பற்றி அன்பின் காரணமாக அளவுக்கு மீறிப் புகழ்ந்து உரைத்தார்கள். இங்கே அமர்ந்திருப்பவர்கள் பல துறைகளில் சிறப்புப் பெற்றவர்கள்; பெரும் பேராசிரியர்கள். கற்றோர் முன் பேசுகின்றபொழுது பிழை ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது. இருந்த போதிலும்கூட பிள்ளையைத் தந்தை பார்த்து மகிழ்வது போல நான் பேசுகின்ற சொல்லைச் செவிமடுத்து என்னை வாழ்த்து வார்கள் என்று கருதுகிறேன். சாகித்திய அகாதெமி கொடுத்திருக்கிற இந்தப் பெருமை என்றும் நினைந்து மகிழ்வதற்கு உரியது. இதனை நான் மிகப்பெரிய பேறாகக் கருதுகிறேன்.

இந்நாள் எப்படி அமைந்திருக்கிறது பாருங்கள்: 9-9-2007. இதைக் கூட்டினால் 9 வருகிறது. எப்படிக் கூட்டினாலும் 9 தான் வருகிறது. ஆகவே இந்த நாள் என் மனதில் இருந்து நீங்காது. இது ஒரு பசுமையான நினைவுகளைச் சுமந்திருக்கும்.

‘என்னைச் செதுக்கிய நூல்கள்’ என்று சாகித்திய அகாதெமி நண்பர்கள் தலைப்பு கொடுத்திருக்கிறார்கள். செதுக்கிய என்று பார்க்கிற சமயத்திலே அது ஒரு சிற்பமாகத்தான் இருக்கும். ஒரு பாறை இருக்கிறது. அதனை ஒரு சிற்பி சிலைவடிக்க நினைக்கிறார். சிற்பம் வடிக்க நினைக்கிறார். மிகச்சிறந்த பாறையைத் தேர்ந்தெடுக்கிறார். அதில் ஒரு சிறந்த அழகிய உருவத்தைக் காணுகிறார். அந்தப் பாறையில் வேண்டாத பகுதியை நீக்கிவிடுகிறார். அங்கே அழகிய சிற்பம் கிடைக்கிறது. அதற்கு எந்த உளியைப் பயன்படுத்துகிறார்? கலைநயத்தை, கற்பனையை, அறிவை, அனுபவத்தைப் பயன்படுத்தி மன ஒருமைப்பாட்டுடன் அந்தச் சிலையை வடிக்கிறார். பாறையில் உள்ள வேண்டாத பகுதியை நீக்கியவுடனே, அழகிய சிற்பம் அமைந்து விடுகிறது. அதுபோல வாழ்க்கை ஒரு பாறையாக இருந்தால் அதில் வேண்டிய பகுதிகளை வைத்துக் கொண்டு, வேண்டாத பகுதியை நீக்கிவிட்டால் அழகிய வாழ்க்கை என்னும் சிற்பம் அமைந்து விடும் என்பதைச் சுட்டிக் காட்டுவது போல இந்தத் தலைப்பை மிகச் சிறப்பாகக் கொடுத்திருக் கிறார்கள்.

ஒரு மனிதனை உருவாக்குவது எது? சந்தர்ப்பமா? சூழ்நிலையா? எது அவனை உருவாக்குகிறது? ஒரு வித்து இருக்கிறது. அதை நல்ல விளைநிலத்தில் போடுகிறோம். நல்ல விளைநிலத்தில் போடுகின்ற சமயத்திலே அங்கு அந்த விதை தன்னை முளைவிட்டுக் காட்டுகிறது. அந்தச் செழிப்பு மண்ணுடைய செழுமையைக் காட்டுகிறது. எந்த விதை போட்டோமோ அந்த விதை தன் கருவை வெளிப்படுத்துகிறது. ஆகவே சூழ்நிலையும், சந்தர்ப்பமும் ஒரு விதையின் தோற்றத்தை மண்ணிற்கு ஏற்ப மாற்றி விடுகிறது. ‘விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?’ மாம்பழ விதை போட்டால் மாமரம் கிடைக்கும். பலா விதை போட்டால் பலாமரம் கிடைக்கும். எந்தக் கனி விதையைப் போடுகிறோமோ அந்தக் கனி மரம் கிடைக்கும். ஆகவே மனிதனைச் சூழ்நிலையும், சந்தர்ப்பமும் உருவாக்குகின்றனவா என்றால் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் உருவாவதற்குத் துணைபுரிகின்றனவே தவிர அவனை உருவாக்குவதில்லை அதுதான் ஒருமனிதனுடைய குலச்சிறப்பு.

“நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும்

     குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்” (959)

இங்கே நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டியது: சாதி என்பது வேறு. குலம் என்பது வேறு. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன திருவள்ளுவர், குலச்சிறப்பு சொல்லுகின்ற பொழுது எந்தச் சாதியில் பிறந்தாலும் எங்கே பிறந்தாலும் சரி ஒரு பாரம்பரியம் என்று சொல்கிறோமே, அதுபோல பாரம்பரியச் சிறப்பு உடையவர்களுக்கு இயல்பாகவே சில பண்பாடுகள் அமைந்திருக்கும். அவர்களிடம் ஒழுக்கம், நேர்மை, பிறர்க்கு உதவுதல், அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் என்ற சான்றாண்மைப் பண்புகள் மரபு வழியில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட குடும்பங்கள் தனிச்சிறப்புடையனவாக இருக்கும். அதனால் குலச்சிறப்பு என்பது முக்கியமான ஓர் உண்மை. அதுமட்டுமல்லாமல் பழகுகின்றவர்கள், படித்த புத்தகங்கள், சார்ந்து இருப்பவர்கள் இவைகளெல்லாம் ஒருவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில் எனக்கு ஒரு மகிழ்ச்சி என்னவென்று சொன்னால் நான் வரலாற்றைச் சொல்லுகின்ற அளவுக்குப் பெருமையுடையன் அல்ல இருந்தாலும் இந்த நேரத்தில் சொல்வது பொருந்தும் என்பதனால் சில செய்திகளை நான் சொல்ல விரும்புகிறேன்.

என்னுடைய கிராமத்தில் இருந்த எனது தாத்தா ஓர் அருளாளராக இருந்தார். அவர் செல்வாக்கு உடையவராக இருந்தார். ஆசுகவி என்ற பட்டம் பெற்றவராக இருந்தார். அதுபோல என் தந்தையும் அதிகம் படிக்காதவராக இருந்தாலும் கூட ஓர் அருளாளராகவும் பிறர் நலம் பேணக் கூடியவராகவும் இருந்தார். ஏறக்குறைய 150 ஆண்டுகள் என்று சொல்லலாம். அவர்கள் நிறைய அறப்பணிகள் செய்தார்கள். சிவன் கோயில் ஒன்று, பெருமாள் கோயில் ஒன்று, குளம் ஒன்று கட்டினார்கள். இப்பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்கள்.

அந்தப் பாரம்பரியப் பண்புகள் என்னை அறியாமலே என்னுள் வித்திட்டு இருக்கின்றன என்று நான் கருதுகிறேன். நான் உருவாவதற்கும் திருக்குறளில் ஈடுபாடு கொள்வதற்கும் இயல்பாகவே அவர்களுடைய வித்தில் இருக்கக்கூடிய கரு எனக்கு கிடைத்திருக்கிறது என நான் கருதுகின்றேன். ஆகவேதான் நான் வேறு துறையில் – பொருளாதாரத் துறையில் – படித்திருந்தாலும்கூட இயல்பாகவே இது அமைந்தது.

பாரம்பரியப் பண்பைப் பற்றி வள்ளுவர் சொல்லு கின்றபோது,

Image result for thirukkural

“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்

     உண்மை அறிவே மிகும்”            (373)

என்கிறார். உண்மை அறிவு என்பது பாரம்பரியமான அறிவு. அந்த வகையில் அந்தச் சிறப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்நேரத்தில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் உயர்வதற்கு அடிப்படையாக அவன் ஒரு சிறந்த வித்தாக இருக்க வேண்டும். சார்ந்தவன் சார்ந்த வண்ணம் உயர்வதாலே சார்ந்தவர்கள் சிறப்புடையவர் களாக இருக்க வேண்டும். அந்த வகையிலே என்னைச் சார்ந்தவர்கள் எல்லாம் சிறப்பைச் செய்திருக்கிறார்கள். சான்றாக, எனக்கு சின்ன வயதிலே ஒரு சுயமரியாதை உணர்வு ஏற்பட்டது. எப்படி என்று சொன்னால் எனது தந்தை இயல்பாகவே என்னை அவன், இவன் என்று சொல்லமாட்டார். அவர் இவர் என்று தான் சொல்லுவார். அதுபோல ஆசிரியர்களும் அப்படித்தான். எல்லா மாணவர்களையும் அவன், இவன் என்று அழைப்பதில்லை. சின்ன வயதிலே எந்த விதச் செருக்கும் உண்டாகவில்லை. அதற்கு மாறாக, ஒரு பெருமிதம் ஏற்பட்டது. ஆகவே தன்மானத்தோடும் சுய மரியாதையோடும் இருப்பதற்கு அடிப்படையிலே என்னை அறியாமலே ஒரு பண்பாடு ஏற்பட்டது. ஆகவே ஒரு மனிதனை உருவாக்குவதற்கு அந்த வித்தினைச் சார்ந்தவர்கள், சிறந்தவர்களாக. சார்ந்த வண்ணம் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அதுபோல நான் படிக்கிற காலத்தில் எனது ஆசிரியப் பெருமக்கள் மிகச்சிறந்தவர்களாக இருந்தார்கள்.

“நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு

     இனத்துஇயல்பது ஆகும் அறிவு.”      (452)

என்பது போல சார்ந்தவர்கள் வண்ணமாக பெரியோர்களை துணைக் கொள்ளும்போது அவர்களின் நற்பண்புகள் எல்லாம் என்னைச் சார்ந்திருக்கின்றன. மேலும் மேலும்  சிற்றினம் சேராமல் பெரியோர்களைச் சார்ந்ததால் அந்தப் பெருமிதம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

சிந்தித்துப் பார்க்கிற சமயத்திலே ஒரு மனிதன்  பிறந்த குடும்பம்; அவன் சார்ந்திருக்கிற மனிதர்கள்; அவனது மிகச்சிறந்த ஆசிரியர்கள்; அவன் படித்த புத்தகங்கள் இவைகள்தான் ஒரு மனிதனை உருவாக்குகின்றன என்பதை அறியமுடிகிறது.

நமது ஐயா பேராசிரியர் தமிழண்ணல் இருக்கிறார். இவரை அறிமுகப்படுத்தியவர் பெரும்புலமை மிக்க பொய்சொல்லா மாணிக்கம் டாக்டர் வ.சு.ப.மாணிக்கம் அவர்கள். அவர்களைப் போன்ற பெரிய பேராசிரியர்கள் எல்லாம் என்னை உயர்த்தினார்கள். பேராசிரியர் சு.குழந்தைநாதன், பேராசிரியர் நமச்சிவாயம், பேராசிரியர் சுப.அண்ணாமலை, பேராசிரியர் நா.பாலுசாமி. இதுபோன்ற மிகச்சிறந்த அறிஞர் கூட்டம் என்னைச் சூழ்ந்திருந்தது.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது போல இந்த அறிஞர்களுடைய செல்வாக்கு எனக்கு மிகுதியாக இருந்தது. அது எனக்குத் தமிழ்மீது ஆர்வமும், பற்றும் ஏற்படுத்தியது. நான் மிகப்பெரிய தமிழ்த்துறையில் படித்தவனில்லை. இருந்தாலும் தமிழின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக இந்தப் பெருமையெல்லாம் கிடைத்திருக்கிறது எனக் கருதுகிறேன். அதிலும் இந்தப் பேராசிரியர்களின் பங்கு மிகச் சிறப்பானது.

அந்தக் காலத்தில் நான் மேடைகளில் பேசுகின்ற சமயத்திலே எல்லாம் பார்த்தேன். எங்கு சென்றாலும் தமிழறிஞர்கள் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவார்கள். அப்பொழுது எனக்கு ஓர் ஆசை வந்தது, ஏன் திருக்குறளை முழுமையாகப் படித்துவிடக் கூடாது என்று.

பள்ளி இறுதி வகுப்பு பயின்ற சமயத்திலேயே நான் 1330 திருக்குறளையும் முடிந்தவரை படித்துவிட்டேன். அதற்குப் பிறகு  திருக்குறள் எனக்குப் பெரும் துணையாக இருந்தது. உலகப் பொதுமறைக்கு நிகராக வேறு ஒன்றும் இல்லை என்பதை நன்றாகக் கண்டுகொண்டேன்.

திருக்குறளின் பெருமைகளை எல்லாம் நீங்கள் நன்றாக அறிவீர்கள். திரும்பத் திரும்பச் சொன்னாலும் பெருமை தரக்கூடிய வாசகம் இது.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

நாம் வள்ளுவரை உலகிற்குத் தந்தோம்; அவரிடம் இருந்து புகழை நாம் எடுத்துக் கொண்டோம்.

திருக்குறள் தமிழகத்தில் தோன்றினாலும் அது தமிழனுக்கு மட்டும் படைக்கப்பட்டது அல்ல அது உலகத்திற்குப் படைக்கப் பட்டது.

அதனால் தான் பாரதி மிகப்பெருமையாகப் பேசுகிறார்:

“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

 வள்ளுவர் போல் இளங்கோ வைப்போல்

 பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை,

 உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை”

திருக்குறளின் பெருமையைக் கேட்டுக் கேட்டு அந்தத் திருக்குறளே எனக்கு உயிர் மூச்சானது.

‘என்னைச் செதுக்கிய நூல்’ என்று பார்க்கும்போது திருக்குறள் ஒன்றை முழுமையாகப் படித்துவிட்டாலே அத்தனை நூல்களையும் படித்ததற்குச் சமம் என அறிந்து கொண்டேன்.

சில ஆண்டுகளுக்குமுன் ‘உலகத் திருக்குறள் பேரவை’ சார்பாக மூன்று நாள் கருத்தரங்கம் நடத்தினோம் அது. ‘உலக அரங்கிலே திருவள்ளுவர்’ என்ற தலைப்பிலே நடைபெற்றது. அதில் மார்க்கஸ் அரேலியஸ், சாக்ரடீஸ், சுக்கிரநீதி, பெரியார், கீதை, நாராயண குரு எனப் பல அறிஞர்களுடன் அறநூல்களுடன் எல்லாம் ஒப்பீடு செய்து அறிஞர்கள் பேசினார்கள். அவர்கள் பேசியதைக் கேட்டபொழுது, எல்லாவற்றிலும் திருவள்ளுவர் விஞ்சி நிற்கிறார் என்பதை உணர முடிந்தது.

திருவள்ளுவர் ஒருவரைப் படித்துவிட்டாலே, திருக்குறளின் 133 அதிகாரங்களைப் படித்து விட்டாலே 133 புத்தகங்களைப் படித்ததற்குச் சமம். இதைவிடச் சொல்வதற்கு ஒன்றில்லை. எல்லாப் பொருளும் இதன்பால் உள என்று திருக்குறளை எனது உயிர் மூச்சாகக் கொண்டேன்.

திருவள்ளுவர் ஒருவர்தான் அக உலகை அளந்தவர் என ஒருவர் பாராட்டினார். உங்கள் எல்லோருக்கும் வாமன அவதாரத்தைப் பற்றித் தெரியும். வாமன அவதாரத்தில் திருமால் குள்ள வடிவினனாக வந்து மாவலி சக்கரவர்த்தியிடம் 3 அடி நிலம் கேட்கிறார். குள்ளம் என்றால் 1 1/2 அடி குறள் வடிவினனாக வந்தார். மாவலியும் குள்ளமானவன் என்பதனாலே மூன்றடியைக் கொடுத்தார். திருமால் விசுவரூபம் எடுத்து ஓர் அடியால் இந்தப் பரந்த மண்ணுலகையும் இரண்டாவது அடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் மூன்றாவது அடியை அவன் தலையில் வைத்து மாவலியின் அகந்தையை அழித்தார். திருமால் புற உலகை அளந்தார்; திருவள்ளுவர் அதே குறள் வடிவினால் அக உலகை அளந்தார். இதை அழகாக ஒரு புலவர் ‘திருவள்ளுவ மாலை’ என்ற புகழ் பெற்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார்.

வள்ளுவர் பாவடியினால் அளந்தார், திருமால் காலடியால் அளந்தார் திருமால் புறவுலகை அளந்தார், வள்ளுவர் அகவுலகை அளந்தார். இரண்டு பேரும் குறள் வடிவிலே அளந்தனர். திருமாலும் வள்ளுவரும் ஒருவரே என மிக அழகாகப் பாடுகிறார் புலவர். அந்த வகையில் அக உலகை அளந்த திருவள்ளுவர் மீது எனக்கு ஓர் உயிர்ப்பு ஏற்பட்டது. அது உயிர் மூச்சாக இருந்தது. திருக்குறளைப் படித்தாலே போதும், நம்முடைய வாழ்க்கை செம்மையாகும் என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்தேன். அனுபவங்கள்தான் வாழ்க்கையில் வள்ளுவத்தை மிகப்பெரியதாகக்  காட்டின.

முதலில் படிக்கின்ற காலத்திலே திருக்குறளின் பெருமை அவ்வளவு பெரியதாகத் தெரியவில்லை. வாழ்க்கையில் சிக்கல்களும் பிரச்சினைகளும் சோதனைகளும் வரும்பொழுது தான் திருவள்ளுவரின் அருமைகளை பெருமைகளை உணர முடிந்தது. திருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்று, நாம் வாழ்கின்ற காலத்திலும் இங்கு இருக்கக்கூடிய நிகழ்காலச் சிக்கல்களுக்கும் எதிர்காலச் சிக்கல்களுக்கும் தீர்வு காண்பவர்.

திருக்குறளைப் படிப்பது இலக்கியச் சுவைக்காகவோ, இன்ப நலத்திற்காகவோ மட்டும் இல்லை.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

 தெய்வத்துள் வைக்கப் படும்.”       (50)

என்கிற நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும் எனச் சொன்னால் திருக்குறள் ஒன்றைப் படித்தாலே போதும் என்ற உணர்வோடு திருக்குறளின் மீது எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. திருக்குறளில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை எனக் கண்டு கொண்டேன். அதுபோல வாழ்க்கையில் பிரச்சினை என்று வரும் பொழுது (எனது அனுபவத்தைச் சொல்கிறேன்) திருக்குறளைப் புரட்டிப்பார்ப்பேன்; அதில் தீர்வு இருக்கும். எனக்கே வியப்பாக இருக்கும். இது மூட நம்பிக்கையாகக் கூட இருக்கட்டும். ஆனால் இந்த வகையில் தீர்வு என்ன என்பதைக் கண்டு பிடித்திருக்கிறேன்.

மகாத்மா காந்தி அவர்களை மாற்றியது எல்லாம் புத்தகங்கள்தான். ஜான் ரஸ்கின் எழுதிய ஹிஸீ ஜிஷீ ஜிலீமீ லிணீst என்ற புத்தகமும், அவர் பார்த்த அரிச்சந்திர நாடகமும் தான் காந்தியடிகளை மகாத்மா ஆக்கின.

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

     செய்யாமை செய்யாமை நன்று” (297)

என்பது வள்ளுவம். காந்தியடிகள் இரண்டு கொள்கைகளைக் கைக்கொண்டார்: அகிம்சை, கொல்லாமை. அந்த அகிம்சையையும், கொல்லாமையையும் திருவள்ளுவர் ஒன்றாகச் சொல்கிறார்.

“ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன்

     பின்சாரப் பொய்யாமை நன்று.” (323)

காந்தியடிகள் போற்றியது எல்லாம் உண்மையையும் நேர்மையையும் கொல்லாமையையும், அகிம்சையையும் தான். வீரனுக்கு உரியது என்று போற்றி, விடாது அவற்றைக் கடைப்பிடித்தார். அவர் வாழ்க்கையிலே மிகப்பெரிய திருப்பு முனைக்குக் காரணமாக இருந்தது புத்தகம்தான். அடிகள் சொல்கிறார்: “பிரச்சினைகள், துன்பங்கள் வரும் போதெல்லாம் என்னை மாற்றியது கீதை தான். எனது பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வைக் கீதையில் காண்பேன்.”

அதுபோல என்னுடைய வாழ்க்கையில் பிரச்சினைகள், துன்பங்கள் முன் வந்த பொழுது திருக்குறள்தான் முன்னின்றது. மிகச்சிறந்த புத்தகம் நம் கையில் இருக்குமானால் அது நம்மை உருவாக்குகிறது. சில புத்தகங்களை நாம் படித்திருக் கிறோம். ஆனால் அவற்றின் பெருமையை உணர்ந்திருக்க மாட்டோம்.

சில நூல்கள் படித்து அப்படியே மகிழ்வதற்கு மட்டும் இருக்கும். இலக்கியம் இலக்கியத்திற்கு மட்டும் இருக்கும் ஆனால் திருக்குறள் அப்படியல்ல. ஓதி உணர்வதற்கும் பிறர்க்கு உரைப்பதற்கும் உரிய நூல் அது.

“ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப்

     பேதையின் பேதையார் இல்”         (834)

என்பது வள்ளுவம்.

ஓதுவது சிரமம்; ஓதி உணர்வது அதை விடச் சிரமம்; உணர்தல் சிரமம்; உணர்ந்ததை உணர்ந்தபடியே சொல்வது அதை விடச் சிரமம்.

“இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

     உணர விரித்துஉரையா தார்”               (650)

படித்ததை சிரமப்பட்டு விளக்கிச் சொல்லி அதைப் பரப்புவதும் சிரமமானது. கொத்தாக மலர் மலர்ந்திருக்கிறது. அந்த மலர்கள் மணம் வீசாத காகிதப் பூக்களாக இருந்தால் பயனில்லை இவைகளையெல்லாம் தெரிந்தும், பிறர்க்கு உணர்த்தியும், சிரமப்பட்டு தாம் படித்ததை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழாமல் போய்விட்டால் அவன் பேதையிலும் பேதை என்கிறார் வள்ளுவர். ஆகவே திருக்குறளைப் படிக்கின்ற நோக்கமே அதை வாழ்வியல் நூலாக, வருகின்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடியதாக இருப்பதுதான் என்பதைக் கண்டேன்.

முருகனுக்குப் புதியதொரு படைவீடு

முருகனுக்குப் புதியதொரு படைவீடு

Image result for London

கனடா நாட்டில் நான்கு நாள் பயணத்தோடு இலண்டன் வந்த எங்களைப் பத்து நாட்களாவது தங்கவைத்து விருந்து உபசாரம் செய்ய விழைந்த அன்பர்கள் விமான நிலையத்திற்கே வந்துவிட்டனர்.

இலண்டனில் அந்தப் பத்து நாட்களும் மூன்று முக்கிய நிறுவனத் தொடர்பைத் தந்தன. உலகப் புகழ் பெற்ற ஒய்.எம்.சி.ஏ. விடுதி, பி.பி.சி தமிழோசை, லண்டன் முருகன் திருக்கோவில்…

உலகில் மிகப்பிரபலமான மிகப்பெரிய நகரங்களில் ஒன்று லண்டன்; மிகமிக அழகிய நகரமும் அதுதான் என்றாலும், தேம்ஸ் நதி தீரத்தில் வீற்றிருக்கும் அந்த நகரின் அழகை விட, ஆங்கில அரசியல் நாகரிகப் பண்புகள், இலக்கியச் சிறப்புகள் ஆகியனவே என் நினைவில் நின்றன. அங்கில மொழிக்குச் செழுமை சேர்த்த சேக்ஸ்பியர், மில்டன், வேர்ட்ஸ்வொர்த், பைரன், கீட்ஸ், ஷெல்லி, டென்னிசன், டிக்கன்ஸ், பெர்னாட் ஷா, வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோரை மறக்க முடியுமா? நம்நாட்டுப் பள்ளிக்கூடப் பாட நூல்களை எல்லாம் நெடிது காலம் ஆட்சி செய்தவர்கள் அல்லவா இவர்கள்! அவர்களை ஆட்சி செய்ய வைத்த ஆங்கில மொழியின் இயல்பும், ஆட்சியால் அம்மொழியை உலகறியச் செய்த ஆங்கிலேயரின் இடைக்கால வெற்றி வரலாறும் நினைக்கத்தக்கவை. நம்மவர்களும் உலகத் தலைமைக்கு அடி எடுத்து வைத்த அந்த ஆதி நாட்களில் அப்படி முயன்றிருந்தால் – திருக்குறளும் அப்போதே உலக இலக்கியமாகி இருக்கும் என்பதும் கருதத்தக்கது.

உலகளாவிய தொண்டு நிறுவனமான ஒய்.எம்.சி.ஏ.- இல் சகோதரர் முத்தையா அன்பான வரவேற்பளித்தார். மதுரை மத்திய ஒய்.எம்.சி.ஏ-இன் பொதுச் செயலராக அவரும் அதன் செயற்குழு இயக்குநர்களில் ஒருவனாக நானும் பங்கேற்றிருந்த ஆண்டுகள், லண்டனில் இந்த உறவுப் பிணிப்பை ஏற்படுத்தித் தந்தன…..

உறவுப் பிணிப்பிற்கே உரிய பெரியவர், லண்டன் மெய்யப்பச் செட்டியார்! நம் செட்டிநாட்டுக் கோட்டையூர்  ஜவகர் ஆலை நிறுவனரான இப்பெருந்தகை – கலைத் தந்தை கருமுத்து தியாகராசர் குடும்பத்துச் சம்பந்தி முறையினர். எனினும் ‘லண்டன் மெய்யப்பர்’ என்பதே அவரது பிரபல விலாசமாகிவிட்டது!

அவர் ஆற்றி வரும் அரும் பணிகளில் முதன்மையானது- முருகப் பெருமானுக்கு லண்டனில் ஆலயம் அமைத்து, முருகனின் புதியதொரு படைவீடு போல அதைப் பேணி வருவது!

லண்டனில் வேறு சில இந்து சமய வழிபாட்டு இடங்களும் உள்ளன. ஸ்ரீ மகாலெட்சுமி கோவில், சிவன் கோவில் எனும் இரண்டும் குறிப்பிடத்தக்கவை. இவ்விரண்டை விட முருகன் கோவிலே பிரசித்தி பெற்று விளங்குகிறது.

1974-இல் ஹாரிங்டன் ஸ்குயர் எனுமிடத்தில் திருமெய்யப்பர் தொடங்கிய ஆலயத்திருப்பணி திரு.அழகர் ராஜாவால் ஆக்கம் பெற்று அற்புத ஆலயமாக எழுந்துள்ளது. புறத்தே எளிமையாகத் தோன்றினாலும் உள்ளே கலையம்சங்களும் தூய்மையும் ஆட்சி செய்கின்றன.

வள்ளி – தெய்வானை சமேதராக கந்தன் கருணை புரிகிறார். நம் நாட்டு முருகன் திருத்தலங்களில் நடக்கும் அத்தனை விழாக்களும் அங்கே நடக்கின்றன. சித்திரா பவுர்ணமியில் சுவாமி புறப்பாடு, வைகாசி விசாகப் பாலாபிசேகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை பத்து நாள் விழா, லண்டன் மக்களைக் கவரும் தேரோட்டம், ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஆங்கில வருடப் பிறப்பன்று (பால்குடம் உட்பட) பங்குனிப் பெருவிழா – என ஆண்டு முழுவதும் அங்கே முருகன் திருக்கோல வைபவம்தான் எனக் கேட்டறிந்து மகிழ்ந்தேன்.

இந்த ஆலயத்தில் – சுப்பிரமணியனான நான்! – (என் இயற்பெயர் அதுதான்!) ‘முருக வழிபாட்டுத் தொன்மை’ பற்றிப் பேசவேண்டும் என ஏற்பாடு செய்துவிட்டார் லண்டன் மெய்யப்பர்….

‘தமிழ்க் கடவுள்’ முருகனைப் பற்றிப் பேச, வந்த இடத்தில் திடீரென அழைக்கப்பட்டிருந்தேன். எனினும் சங்க காலந்தொட்டு முருகன் புகழ் பேசும் இலக்கிய நினைவுகள் கைகொடுக்கும் என நம்பியிருந்தேன்.

அகத்திய மாமுனிக்குத் தமிழைத் தந்த முருகன், ஔவைப் பிராட்டிக்கு ஞானம் புகட்டிய குமரன், குமர குருபரர் காசியில் தமிழ்ச் செல்வம் பரப்பிட அருளிய செந்தூரான், கிருபானந்த வாரியாரை – ‘திருமுருக’ எனும் முன்னிலைப் பெயரேற்று ஆன்ம நலம் பரப்ப அனுப்பிய குன்றுதோறும் கோலம் கொண்ட கடவுள்… காலம்தோறும் அன்பர்க்கெல்லாம் அருள் பாலிக்கிறான் அன்றோ! அப்படியொரு பரவசநிலை அன்று என்னுள் பரவியது!

முருகனை வழிபட்டபின் முருக வழிபாடு பற்றியே உரையும் விரிந்தது. வாழ்வில் மனித நேயமும் தெய்வநலமும் கைகூடி நின்றிட, மனம் மொழி செயல்களை அர்ப்பணிப்பதே வழிபாடு செய்வதன் நோக்கம். ‘மனிதப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே’ என வேண்டியிருந்தாலும் மனிதப் பிறவியின் இலட்சியம் மாசுபோல் அடர்ந்திடும் துன்ப நீக்கமே ஆகும். துன்பத்தை நீக்கும் எளிய இனிய வழி, இறைவனைச் சார்தலே என ஆன்றோர் அறிவுறுத்தினர்.

“தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

     மனக்கவலை மாற்றல் அரிது”   (7)

என வள்ளுவர் மனக்கவலைக்கு மருந்து சொன்னார்.

‘மனத்துக்கண் மாசிலன் ஆதலே’ அவர் கூறும் அனைத்து அறம். மனத்தில் அழுக்காறு, காமம், வெகுளி முதலிய ஆகாப் பற்றுக்களை, புற்றுகளாக வளர்த்துக் கொண்டு விட்டால், அந்த ஆகாப் பற்றுக்கள் நாளடைவில் அழிவுப் பற்றுக்களாகப் படர்ந்து விடுகின்றன.

வள்ளுவர் ‘பற்று’ என்றார். ‘ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்’ எனப் பின்வந்தோர் உபதேசம் செய்திருக்க, வள்ளுவர் ‘பற்றுகளே இல்லாதிருப்பவனான ஒருவனிடத்தில் கொள்ளுகின்ற பற்றினை நெகிழவிடாது பற்றுக!’ என்றார்.

அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் துறக்க வேண்டியன உண்டு; ஏற்கவேண்டியன உண்டு. குப்பையை அகற்றிய பிறகே வீட்டை அழகுபடுத்த முற்படுதல் போல்… மனத்திலும் வாழ்க்கையிலும் சேர்ந்துள்ள குப்பை போலும் தீய பற்றுக்களை அகற்றிய பின்னரே நன்மையை நாடும் மனச்சால்பு வளரும். நமது அறுசமயத் தொன்மை நெறிகளுள் ஒன்றான கௌமாரம் – இப்பற்றுறுதி வகைகளையே நமக்கு அருளுகிறது. திருமுருகாற்றுப்படையில் “தாமரை புரையும் காமர்சேவடி” என்று நக்கீரர் பரவியதும், “முருகா முருகா தருவாய் நலமும் திருவும்” என்று பாரதி பாடியதும் குன்றுதோறும் ஆடும் குமரனுக்குக் காலந்தொறும் நிகழ்ந்த பூசனைகள்… லண்டன் மாநகரிலும் அப்பூசனைகள் நிகழ்வது குமரனின் இளமைப் பொதுமையைச் சுட்டுகிறது… நம்மையும் இளமைக் கோலம் பெறச் செய்கிறது.

உரைகேட்ட அன்பர்களின் ஒருமித்த பாராட்டைப் போல லண்டன் மெய்யப்பர் அளித்த விருந்தும் மெய்மறக்கச் செய்தது! அந்த விருந்தில் கலந்து கொண்ட பேரன்பர் சங்கரண்ணாவின் தமிழ்ப்பணி லண்டன் செல்லும் தமிழர்களோடு உலகத் தமிழர்களிடையிலும் புகழோசையாகப் பரவியது.

பிக்பென் கடிகாரக் கோபுரம், பக்கிங்காம் அரண்மனை, நம்பர் டென் டவுனிங் ஸ்ட்ரீட் (பிரதமர் இல்லம்), பாராளுமன்றக் கட்டிடம், பல்கலைக்கழகம், பெரிய பொது நூலகம் (இந்தியா ஹவுஸ் லைப்ரரி இதில் ஓர் அங்கம்), பொருட்காட்சி, வெஸ்ட்மினிஸ்டர் ஆலயம் இவை எல்லாம் லண்டனை நினைவூட்டும் புகழ்ச் சாசனங்கள் இவற்றோடு உலகெல்லாம் தொடர்பு கூட்டி நிற்பது பி.பி.சி.!

உலகச் செய்தித் தொடர்புக் கலையில் முன்னிடம் பெறும் பி.பி.சியின் தமிழோசைப் பிரிவில் சங்கரண்ணா பணியாற்றுகிறார்.

சங்கரண்ணா – பி.பி.சி. தமிழோசையில் – இலக்கியப் பேட்டிக்கு ஏற்பாடு செய்தார். பேட்டி – திருக்குறள் பணிகளைப் பற்றியே அமைந்தது. “திருக்குறளில் இத்துணை ஈடுபாடு உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?…. மேடைகளில்  உரையாற்றும் பேராசிரியர்கள் தம் கருத்துக்கு ஆக்கமாகத் திருக்குறளை அவ்வப்போது மேற்கோளாக எடுத்தாண்டு  பேசுவது இயல்பு. ஆனால் சாதாரண உரையாடலிலேயே பேசும் விஷயத்திற்குப் பொருத்தமான குறட்பாக்களைச் சடுதியில் நினைத்துச் சொல்லும் ஆற்றல் உங்களுக்கு எப்படி வந்தது?” எனும் கேள்விகளுடன் பேட்டி தொடங்கியது.

“எனது திருக்குறள் ஈடுபாட்டு வளர்ச்சிக்கு உதவியவை இரண்டு; ஒன்று, நான் பெற்ற பேறு; மற்றொன்று எனக்கு அமைந்த வாய்ப்பு. என் தந்தை வழிப்பாட்டனார் – பெரியணர் ஒரு ஆசுகவி. மதுரைத் தமிழ்ச்சங்கப் பெரும் புலவர்களின் சாற்றுக்கவிகளைப் பெற்றவர். என் தந்தையார் நடராசரும் புலமைத்திறம் மிக்கவர். இறைமையில் இசைந்த இந்த இருபெரியோர்களின் மரபுவழிச் செல்வமாக வந்த தமிழ் உணர்வு எனக்கு அமைந்த ஞானப்பேறு. தமிழ் விழாக்களில் (அரங்கேறும் உரைகளை மனம் ஒன்றிக்கேட்பது இளமை முதல் எனக்கு அமைந்ததொரு வழக்கம் அவ்வாறு பேசுவோர் – இலக்கியமாயினும் சரி, சமூகவியல் காட்டியே பேசியது, இந்நூல் பற்றிய ஆர்வத்தை என்னுள் தூண்டியது. “திருக்குறளில் அப்படி என்னதான் உள்ளது?” எனத் துருவித் தேடும் நாட்டத்தை இவ்வாய்ப்புக்கள் ஏராளமாக எனக்கு வழங்கின. ஈடுபாட்டிற்கு உரிய காரணங்கள் இவையேதான்.

“இன்றைய உலகச் சிக்கல்களுக்குத் திருக்குறளில் தீர்வு காண இயலுமா?” எனும் கேள்விக்கு திருக்குறளின் ஞாலப் பழமையையும் அதன் காலப் புதுமையையும் எடுத்துக்காட்டி விளக்கம் சொன்னேன். “திருக்குறளை நீங்கள் எப்படிப் பயன் கொள்ளுகிறீர்கள்? சொந்த அனுபவத்திலிருந்து சொல்லுங்கள்!” என்பது பேட்டியில் அடுத்த வினா.

“லண்டனுக்குப் பயணமாக வந்துள்ள நான் சுற்றுலா – இலக்கிய அறிமுகம் ஆகியவற்றோடு என் தொழில் முயற்சிகளுக்கும் உரிய நேரம் ஒதுக்கிக் கொண்டுள்ளேன். இதற்கு நானறிந்த திருக்குறளே ஒரு சான்று:

பழகிய யானையின் துணையோடுதான் காட்டில் திரியும் புதிய யானையைப் பிடித்து வசக்கிக் கொணர முடியும். அதுபோல நமக்கு நன்கு தெரிந்த தொழில் அல்லது அன்பரின் உதவியோடுதான் மற்றொன்றையும் செய்து முடிக்க முடியும்.

“வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

     யானையால் யானையாத் தற்று”       (678)

என வினை செயல்வகையைக் கூறும் குறட்பா – எனக்கு- இலக்கியம் – தொழில் இரண்டிலும் இருமுகத் தொடர்பைக் கூட்டித் தந்துள்ளது. இப்படிப் பலருக்குப் பல குறட்பாக்கள் அனுபவ ஆக்கம் தரக்கூடும்.

தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள திருக்குறள் ஆராய்ச்சி மையத்தின் நோக்கும் போக்கும் பற்றிப் பேட்டி வலம் வந்தது. தமிழ் மாமுனிவர் தவத்திரு அடிகளார் திருக்குறள் நெறிபரப்பச் செய்துவரும் சீரிய தொண்டுகளைப் பட்டியலிட்டுச் சொன்னேன். அனைத்து தரப்பினரையும் உறவு கூட்டிப் பிணிக்கும் ஊடகமாகத் திருக்குறளை ஆக்கியவர் அடிகளார் என நினைவு கூர்ந்தேன்.

திறமான புலமையெனில் – வெளிநாட்டார் அதனை வணக்கம் செய்வார்கள் என்பதற்கு உரிய அரங்காக – பி.பி.சி. விளங்குவதையும் சங்கரண்ணா போன்றோரின் தொண்டினால் அதில் தமிழோசை ஓங்கி ஒலிப்பதையும் மனதாரப் பாராட்டி விடை பெற்றேன்.

மறுநாள் – தமிழகத்திலிருந்து தொலைச் செய்தி வந்திருப்பதாகச் சொன்னதும் ஓடிவந்து போனைக் கையிலெடுத்தேன் “நான்தான் குன்றக் குடியிலிருந்து தெய்வசிகாமணி பேசுகின்றேன்” என்ற குரல் என்னைத் திடுக்கிடச் செய்தது. பி.பி.சி. தமிழோசையை விடாமல் கேட்கும் வழக்கமுடைய தவத்திரு அடிகளார், எனது பி.பி.சி. பேட்டியைக் கேட்டு, மறுநாளே என்னைப் பாராட்ட போனில் அழைத்திருந்தார். இது எத்தகைய பேறு! திருக்குறளால் நான் பெற்ற பேறு அல்லவா?

பி.பி.சி. தமிழோசைப் பேட்டியே பயணத்தின் மணிமுடியாக அமைந்துவிட்டதால் அந்த முழுநிறைவோடு லண்டன் நகரைச் சுற்றிப் பார்க்க மனம் இடம் தந்தது.

திட்டமிட்டப்படி ஐரோப்பிய நாடுகளில் காஸ்மாஸ் எனும் சுற்றுலாக் குழுவோடு பத்துநாட்கள் சுற்றினோம். அந்நாடுகளின் வளர்ச்சியைப் பார்த்துப் பார்த்து வியந்தோம்.

அந்த வியப்புச்சுவடு மறைவதற்குள் துபாய், அபுதாபி எனும் சுவர்க்க பூமியில் நான்கு நாட்கள் சுற்றிப் பார்த்தோம். சகோதரர் அல்ஹாஜ் முகமது பாருக். தேவிபட்டினச் செம்மல் – தொழிலொடு அங்கு தமிழும் வளர்க்கும் தூய நெஞ்சராக விளங்குகிறார். அன்பர்களைக் கூட்டி அவர் அளித்த விருந்துகளில் திருக்குறளையும் பரிமாறி விட்டுத் தாயகம் திரும்பினோம்! மேற்குத் திசையில் மறையாத வாழ்வுச் சுடராகத் திருக்குறள் விளங்கும் என நம்பிக்கையோடு தமிழ் மண்ணில் கால் வைத்தோம்.

கற்கவும், நிற்கவும்

நாம் அவர்களிடம் கற்கவும், நிற்கவும்

பொதுவாக மேலை நாட்டவர் அனைவரும் தன்மானத்தோடு உழைத்து வாழ வேண்டும் என்னும் உறுதியான கொள்கை கொண்டவர்கள். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயல்பாகவே கடும் உழைப்பை மேற்கொள்கிறார்கள். உழைப்பு அவர்களிடம் இயற்கையான குணமாக அமைந்திருக்கிறது. எதையும் இனாமாகப் பெறுவதைக் கேவலமாகக் கருதுகின்றார்கள்.

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக உலகியற்றியான்” எனும் குறளில் உலகினை இயற்றிய இறைவனையே அழிந்து போகும்படி வள்ளுவர் சாபமிடுவாரா? மாட்டார். மக்கள் இரந்து வாழ நேர்ந்த சூழலை மாற்றிட ஆவன செய்யாது, அரசு நடத்து வோரையே – உலகை ஆள்வோரையே – அவ்வாறு குறிப்பிட்டார் எனக் கொண்டால் பொருத்தமாய் இருக்கும். மேலை நாட்டு மக்கள் அரசுத்தலைவர்களைக் கூடச் சார்ந்திராமல், தாமே இரவச்சம்” அவர்களிடமே உள்ளது.

“இன்மை இடும்பை இரந்து தீர்வாமென்னும் வன்மையின் வன்பாட்டத்தில்” வழியில்லாக் காரணத்தால் பிச்சை எடுத்துத்தான் துன்பத்தை நீக்க வேண்டும் என்பதைப் போன்ற அவமானம் வேறு ஒன்றும் இல்லை என்று வள்ளுவர் கடிந்து பேசிய நிலைமையை அமெரிக்காவிலே செயலாக்குகின்றார்கள்.

நம் நாட்டில் சலுகைகள் பெறுவதும் இனாம் பெறுவதும் இயற்கையானவையாக அமைந்துவிட்டன. தன்மானச் சிந்தனைகள் குறைந்துவிட்டன. காலப்போக்கில் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லாம் சுயமுயற்சியை அறவே மறந்து அரசாங்கச் சலுகைகளையே முழுவதும் நம்பி வாழக்கூடிய அவலம் ஏற்பட்டு விடலாம். இதை மாற்றிட உழைப்பதற்கு மக்களுக்கு நல்ல வாய்ப்பினை நல்கியும் தொழில் துறைகள் பல ஏற்படுத்தியும் உற்பத்தியைப் பெருக்கிப் பொருளாதார வளம் பெறவேண்டும்.

உழைப்பால்தான் உயர முடியும் என்ற தன்னம்பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் உறுதியாக ஏற்பட்டாக வேண்டும். மேலை நாடுகளைப் போலப் பொருளாதார வளர்ச்சி பெற்றால்தான் நாம் வலிமை மிகுந்தவர்களாக, நல்ல வல்லரசாக உயர முடியும். பலரது உழைப்பே அந்த வலிமையைத் தர முடியும்.

சாலைகள்

அங்குள்ள சாலை வசதிகளைப் போல இங்கும் தொலைநோக்கோடு நீண்ட சாலை வசதிகள் அமைக்கப் பட வேண்டும். அவற்றை மக்கள் அனைவரும் தூய்மையாகப் பேணிப் பாதுகாக்கவும் வேண்டும். மேலை நாடுகளைப் போல விஞ்ஞான அடிப்படையில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டால் நன்றாகப் பராமரிக்கப் பட்ட சாலை வசதிகள் செய்யப்பட்டால் ஒரு நாட்டினுடைய பொருளாதார வளத்திற்கு அஃது ஒன்றே பயனுடையதாக அமையும்.

தொலைபேசி

மேலை நாடுகளில் தொலைபேசிகளைக் கொண்டே மிகக்குறுகிய காலத்தில் குறைந்த செலவில் உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் விரைந்து தொடர்பு கொள்ள முடியும். விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போதே உலக நாடுகளுடன் தொடர்பு கொள்ள முடியும்.

இங்கு நாம் பக்கத்தில் உள்ள ஊர்களுக்குத் தொலை பேசியில் தொடர்பு கொள்வதுகூட மிகவும் இடர்ப்பாடாக உள்ளது. அநியாயமாக நேரம் வீணாகிறது. வளர்ந்து வரும் விஞ்ஞான வேகத்திலே, விண்வெளி யுகத்திலே, இந்தக் குறையைக்கூட நாம் நீக்கவில்லையென்றால் அது மிகவும் வருந்துவதற்கு உரியதாகும்.

நாம் பல கருத்துக்களை விரிவாக ஆழமாக விவாதம் செய்கின்றோம். நல்ல கருத்துக்களை உணர்ச்சிவசமாகப் பேசி மகிழ்வதோடு அமைதி அடைந்து விடுகின்றோம். அப்பிரச்சினைகளுக்குச் செயல்வடிவம் கொடுத்துத் தீர்வு காண்பதில்லை. மேலை நாடுகளிலே ஒரு நல்ல கருத்து உருவாகும் எனில் அதை அறிவுபூர்வமாகச் சிந்தித்து, நுணுக்கமாக ஆராய்ந்து அறிவியல் ரீதியாகத் தீர்வுகாண முயலுகின்றார்கள்.

எதையுமே நன்றாகச் சிந்தித்துப் பார்த்து விஞ்ஞானபூர்வமாக முடிவெடுத்துச் செயல்பட்டு உயர்ந்து விடுகிறார்கள்; வளம் சேர்க்கின்றார்கள். எனவே நாமும் விஞ்ஞான பூர்வமாகச் செயல்பட்டு உயர வேண்டும். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசுகின்ற சமயத்திலே பொறுமையாகவும் முழுமையாகவும் மற்றவர் பேச்சைக் கவனிக்கின்றார்கள். ஒரு செய்தியைச் சொல்லும்போது இடையில் யாரும் குறுக்கிடுவது இல்லை. மென்மையாகப் பேசுகின்றார்கள். பேசி முடிந்தவுடன் தங்களுடைய உடன்பாட்டையோ மறுப்பையோ இதமாக நயம்படக் கூறுகிறார்கள். சில சமயம் உடன்படாக் கருத்துக்களுக்கு மௌனமாக ஒரு புன்னகை செய்து விட்டுவிடுகின்றனர். இவையெல்லாம் எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தன. இது போன்ற பல அரிய கருத்துக்களையும் காரியங்களையும் நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

நாம் கொள்வதும் கொடுப்பதும்

புதிய உலகம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளுக்குக் குடியேறும் வெளிநாட்டவர் தொகை, காலப்போக்கில் அதிகரிக்கத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக, அமெரிக்க நாடு தனது குடியேற்றச் சட்டத்தை 1965-இல் திருத்தியமைத்த பின்னர், வெள்ளையரல்லாத இனத்தவரும் குடியேற அனுமதிக்கப்பட்டனர். முன்னர் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய இத்தாலிய, அயர்லாந்து நாட்டவர்கள், ஏழைகளாக, போதிய கல்வி அறிவு அற்றவர்களாக, விவசாயத் தொழிற்சாலையில் உடல் உழைப்பினை மட்டும் அளிக்கக் கூடியவர்களாக இருந்தனர். எனவே தங்களுக்கு அவ்வப்போது நேரிட்ட சமூக, பொருளாதார இடையூறுகளை நீக்க வழிவகை காணுவதில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தனர்.

தாங்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் முடிந்த வரை அரசியல் முக்கியத்துவம் பெறுவதில் விழிப்பாய் இருந்து கொண்டனர். 1965-ஆம் ஆண்டு குடியேற்றத் திருத்தச் சட்டத்தின் பின்னர் இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் அதிகமாகக் குடியேறச் சென்றனர். இவர்கள் இந்தியாவின் பல்வேறு மொழி, இன, கலாச்சாரப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகவும், மிகமிகச் சிறுபான்மை யினராகவும் இருந்தனர்.

கல்வியறிவும் மூளை உழைப்பும் கொண்ட இவர்களில் பெரும்பான்மையோர் டாக்டர்களாக, எஞ்சினியர்களாக, பலதுறைப்பட்டம் பெற்றவர்களாக, வங்கி – சிற்றுண்டிச் சாலை முதலிய சேவை நிறுவனங்களைத் திறம்பட நடத்துவவோராக இருந்தனர். அதிக வருமானத்தையும் தொழிலில் மனநிறைவையும் நாடியே பெரும்பாலும் சென்றனர். மிகக் குறுகிய காலத்திற்குள் செல்வாக்கு, செல்வச் செழிப்பு, சமூக அந்தஸ்து ஆகியவற்றைப் பெற்றனர். பாகிஸ்தானியர், தாய்வானியர், கொரியர் முதலிய பிற தேசத்தவரின் போட்டி இவர்களுக்கு ஒரு புறம் இருந்தாலும், இந்திய வம்சாவளியினர் தமது திறமை, தைரியம், உழைப்பு, ஆகிய பண்புகளால் அமெரிக்க சமூகத்தின் உற்பத்தி ஆற்றலை அதிகரித்தே வந்துள்ளனர் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றனவாம்!

இந்திய வம்சாவளியினர் பல மாநிலங்களில் சிதறுண்டு வாழ்கின்றனர். தத்தம் கலாசார, மொழி, சமய உணர்வுகளுக்கு ஏற்றபடி அவ்வப்போது ஒன்று கூடியும் மகிழ்கின்றனர்.

குஜராத்தியர், சீக்கியர், மலையாளிகள், தமிழர்கள் இவ்வகையில் பல சங்கங்களை நிறுவியுள்ளனர். சிக்காகோவை அடுத்த டெய்டனில் உள்ள இத்தகையதொரு தமிழ்ப் பேரவையின் அழைப்பின் பேரில்தான் நான் திருக்குறள் பயணத்தை மேற்கொண்டேன். அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் உள்ள தமிழர்களில் ஈழத் தமிழர்களே கணிசமாகக் கண்ணில் பட்டனர்.

அமெரிக்காவிலும் நாம் அரசியலில் செல்வாக்குப் பெறும் வகையில் கட்சி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டாக வேண்டும் என்று இவர்கள் தீவிரமாகச் சிந்திக்கின்றனர். தங்களது பொருளாதார சுபீட்சத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், குடியேறிய பிற ஐரோப்பிய (ஸ்பெயின்) நாட்டவரின் பொறாமைத் தாக்குதலில் இருந்து வேலி கோலவும் இந்த அரசியல் ஈடுபாடு பயன்தரும் என்று கருதுகின்றனர். சென்ற ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு டெமாக்கிரடிக் (குடியரசு) கட்சியின் சார்பாக கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்த டுகாசில் போட்டியிட்டது போல இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கட்சித் தேர்தல்களில் போட்டியிடும் காலம் கைகூடிவருவதாகக் கூறினர். நம்மவர்கள் நடத்தும் மாநாடுகள் இத்தகைய தொலைநோக்குச் சிந்தனையுடையன போலவே எனக்குத் தோன்றின.

அமெரிக்க நாட்டவரும் அங்குக் குடியேறியவரும் அங்கு உள்ள நம் நாட்டவரும் புற வாழ்க்கை நலன்களை அதிகமாக, இன்னும் சொல்லப் போனால், முழுமையாகப் பெற்று அனுபவிக்கின்றனர் என்றே சொல்லலாம். செயல்திறம் பற்றித் திருவள்ளுவர் அன்றே கூறிய அறிவுரைகளை இன்றும் அப்படியே போற்றி வாழ்கின்றனர். பிறநாடுகளில் உழைத்துப் பொருளீட்டச் சென்றாலும், அங்கு வெறுமனே கையேந்தி நிற்காமல் உழைத்தே, முயற்சியைக் கைவிடாமலே முன்னேறி வருகின்றனர். திருவள்ளுவர் ‘இரவச்சம்’ அதிகாரத்தில் கூறிய “இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின் வன்பாட்டது இல்” (1063) எனும் வாழ்வுண்மையை மறவாது வாழ்கின்றனர். “ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல்” (33) எனும் உறுதியோடு இல்லாமை எனும் துன்பத்தினை இடைவிடாத உழைப்பால் தீர்த்துக் கொள்வோம் எனும் மனவன்மையுடன் வாழ்கின்றனர். திருக்குறள் நமது சொந்த மண்ணில் வேரூன்றினாலும் அதன் கிளைகள் எல்லாம் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலேயே வாழ்க்கை நிழல் பரப்பும் நடைமுறையை நமக்கும் அறிவுறுத்தி வாழ்கின்றனர்.

ஆனால் ஒன்று: ஓடி ஓடி உழைத்துச் செல்வம் தேடும் இந்த ஓயாத வாழ்க்கைப் போட்டியில், புறவாழ்க்கை வசதிகளையே முதன்மையாக நாடும் போராட்டத்தில் ஒன்றை மட்டும் அவர்கள் மறந்துவிட்டனர். அதுதான் அகநலம் ஆக்கும் மன அமைதி! புறவாழ்வில் பிறர்கருத்தை மதிக்கும் மாண்பு, தன் கருத்தையே வலியுறுத்திச் சண்டை போடாத மதிநலம், ஓர் உடன்பாட்டுக்கு வந்த பின்னர் ஒன்றுபட்டுப் பணிபுரியும் உறவாக்கம், தனது தேசத்தையும் பிறரது நேரத்தையும் மதித்து நடக்கும் மரியாதை, இன்முகத்தோடு எப்போதும் உழைக்கும் முன்னணியில் நிற்கும் இவர்களுக்கு அகவாழ்வில் மட்டும் ஏனோ அமைதி இல்லை. அமைதி தேடியே அவ்வப்போது தாயகம் வருகின்றனர். தாயகத்தில் இருந்து தம்மை நாடி அங்கு வருவோரிடமும் இந்த அமைதி நல்கும் சிந்தனை மருந்துகளையே கேட்கின்றனர். திருக்குறள் எக்காலத்துக்கும் ஏற்ற மாமருந்தாக இருத்தல் கண்டு அதில் பேருவகை கொண்டதைக் கண்ணாரக் கண்டுவந்தேன்.

நம்மிடம் ஒரு சிறப்பு உண்டு. வாழ்வில் எவ்வளவு தான் வறுமை, துயரம் என்பன வந்தாலும் அதை ஏற்றுப்பொறுக்கும் வன்மையை, பற்களைக் கடித்துத் தாங்கிக் கொள்ளும் தன்மையை ஒருவகை நம்பிக்கையாகப் பெற்றுள்ளோம். ‘எல்லாம் விதிப்பயன்’ எனும் இந்தத் தலைஎழுத்தையே நொந்து சோம்பி நிற்கும் சோம்பல் வேதாந்த வாழ்க்கையை வள்ளுவர் வெறுத்தாலும், ஊழையும் உப்பக்கம் காணுமாறு அவர் சொல்லி யிருந்தாலும், இந்தக் ‘கர்மாக் கொள்கை’ எப்படியோ இன்று வேர் பிடித்துக் கொண்டு வாழ்க்கைப் போராட்டங் களில் ஒருவகை அதிர்ச்சித் தாங்கியைப் போல விளங்கி வருகிறது.

“நன்றாங்கால் நல்லவாகக் காண்பவராக” நாம் இருப்பதால், “அன்றாங்கால் அல்லல்படாமலே” வாழப் பழகிக் கொண்டு விட்டோம். இந்தக் கலையை வெளிநாடுகளில் குடியேறிவாழும் நம்மவர்கள் சற்று மறந்துவிட்டார்கள் போலும்! அவ்வாறு மறந்து விட்டதை நினைத்துப் பார்க்கச் சந்தர்ப்பங்களைத் தேடுகின்றனர். அதாவது செழிப்பினூடேயும் மனநலமும் அமைதியும் பெறும் பண்பாட்டு நெறிகளைப் பற்றிக் கொள்ளத் துடிக்கின்றனர். நமது கலாச்சாரப் பாரம்பரியத்தை அறியாது வாழும் புதிய தலைமுறையினர்க்கு நம்பிக்கையூட்டுவதற்கு நமது சிறப்பு வாய்ந்த இலக்கியச் சிந்தனைகளும் மரபுகளுமே கை கொடுக்கும் என உறுதியாக நம்புகின்றனர். “பிணீஜீஜீவீஸீமீss வீs tலீமீ நீஷீஸீtமீஸீtனீமீஸீt ஷீயீ னீவீஸீபீ” என உணர்ந்து வறுமையிலும் செம்மையாக வாழ்தல் போல, கூட்டுக் குடும்ப வாழ்விலும் அமைதி காணுதல் போல செழிப்பு மிக்க தமது வாழ்விலும் செம்மையோடு அமைதி காண அவாவுறுகின்றனர். இதனை, இந்த மன நிறைவை, மாண்பார்ந்த அமைதியை நாம் அவர்களுக்கு என்றென்றும் அளிக்க முடியும்! முயற்சிக் கொல்லியாக வாழாது, தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்கும் அறஉணர்வுகளின் வழியாக நாம் எஞ்ஞான்றும் வழிகாட்ட முடியும். திருக்குறள் செய்திகளை ஏந்திச் சென்ற எனது சிறிய, எளிய பயணத்தில் இந்த அளவுக்குத் திருக்குறளின் மீது பற்றும் நமது பாரம்பரிய நம்பிக்கைகளின் மீது பரிவும் ஏற்படுத்த முடிந்ததே எனும் மனநிறைவே எனக்குத் தேனாக இனித்தது!

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

     செல்லும்வா யெல்லாம் செயல்” (33)

எனும் உறுதியோடு கனடா நாட்டு அன்பர்களிடம் விடைபெற்று இலண்டனுக்குப் புறப்பட்டோம்.

தனிநபர் ஒழுக்க நெறிகள் திருக்குறளில் போதுமான அளவுக்குச் சொல்லப்பட்டுள்ளன. காலங்கள் மாறினாலும் கூட, என்றைக்கும் ஏற்புடையனவாக அக்கருத்துகள் உள்ளன. மக்கள் தத்தம் நிலைக்கேற்ப அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் எழுதப் பட்டமையால் அவை எப்போதும் பொருந்துவனவாக இருக்கின்றன. தனிநபர் வாழ்வுக் குறள்களைப் போல, அரசியல் குறட்பாக்களும் காலந்தோறும், நாடுதோறும் பொருந்தும் எனச் சொல்ல முடியுமா எனும் சர்ச்சை கனடா அன்பர்களோடு உரையாடியபோது எழுந்தது. அது நெடிய சிந்தனைக்கும் இனிய கருத்துக் கோவைக்கும் ஆக்கமாய் அமைந்தது.

நாம் வாழ்வது குடியாட்சிக் காலம்; வள்ளுவர் வாழ்ந்தது முடியாட்சிக் காலம். தாம் வாழ்ந்த காலத்தே அவர் உணர்ந்து எழுதியவை இன்றைய நம் தேவைகளுக்கு உதவுமா?

குடியாட்சி என்றதும் அதன் பெயரால் பல நாடுகளில் அரங்கேறும் அலங்கோலங்களே நம் கண்ணில் வலம் வருகின்றன. ஆட்சி அதிகாரத்திற்காகச் செய்யப்படும் முறைகேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. கொள்கை அடிப்படையில் கட்சிகளை நிறுவி, மக்கள் வாக்குகளைப் பெறும் பெரும்பான்மையர் ஆட்சி அமைப்பதுதான் குடியாட்சி நெறிமுறை. ஆனால், இந்தப் பெரும்பான்மையைப் பெறுவதற்காகவும், அப்படியே அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பல தவறுகள் செய்யப்படுகின்றன. மக்கள் உணர்ச்சியைத் தூண்டும் பொய்ப் பிரச்சாரங்கள், பிற கட்சித் தூற்றல்கள், ஆட்களைச் சேர்க்கும் வன்முறைகள், பணம் பதவிகளைக் கொண்டு நடத்தும் ஏவுதல்கள் ஆகிய போலிக்குணங்கள் அரசியல் ஒழுக்கமாகி உள்ளன!

உலகம் ஒன்று, உலக மக்கள் ஒருகுலத்தவர், ஓருலக அரசு, பொது நலப் பொருளாதாரக் கட்டமைவும் குறிக்கோள்கள். நாட்டுச் சிக்கல்களைக் கூட்டுப்பேச்சால் தீர்த்தல் வேண்டும் என்பதும், நிலையான தீர்வுக்கு உரிய வழி போரில்லை என்பதும், கூட்டு நாட்டுக் கொள்கைகள் – இவை எல்லாம் இந்த நூற்றாண்டில் வலியுறுத்தப்பட்டு வரும் வருங்கால இலட்சியங்கள்.

இந்த இலட்சியங்களுக்கு உதவும் வகையில் குறளின் அரசுச் சிந்தனைகள் இருப்பதுதான் வள்ளுவப் பெருமை.

“உலகம் எல்லாம் ஒன்று” எனும் மேலோட்டமான ஆரவாரம் இன்றி ‘ஒவ்வோர் இடமும், நாடும், உலகின் ஓர் அங்கம்’ என்னும் நடைமுறை உணர்வோடு குறட்பா நடக்கிறது. உலகம் நாடு நாடாகப் பிரித்து ஆளப்படுகிறது, எந்த மனிதனும் உலக மகனாகப் பிறப்பதில்லை; ஒரு நாட்டின் குடிமகனாகவே எற்கப்படுகிறான். எனவே வள்ளுவம்… ‘நாடு’ என்பதனை இடவரம்பாகக் கொண்டு, பொதுவான அரசியல் செய்திகளையும் நடைமுறை களையுமே தருகிறது.

மக்கள் இனம் ஒத்துவாழ ‘அரசமைப்பு’ என்பது இன்றியமையாதது என்கிறது…

“ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே

     வேந்துஅமைவு இல்லாத நாடு”  (740)

எனும் குறட்பா நாடு என்றால் அதற்கு அரசு வேண்டும் அரசு என்றால் அதற்கென ஓர் ஆட்சித் தலைவன் வேண்டும்; அத்தலைவன், அரசனாயினும் அமைச்சன் ஆயினும்… மூன்று முக்கிய இயல்புகள் உடையோனாய் இருந்தாக வேண்டும்.

“தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும்

     நீங்கா நிலன்ஆள் பவர்க்கு”          (383)

எனும் குறள் அந்த மூன்றையும் சொல்லுகிறது. சட்டமன்றங்களில் தூங்காமையைத்தான் அன்றே இக்குறள் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றார் அன்பர் ஒருவர் இடைமறித்து!

‘குடிதழுவிக் கோலோச்சுதல்’, ‘முறை செய்து காப்பாற்றுதல்’ என்பன அரசின் முதன்மைக் கடமைகள். ஆட்சித் தலைவனோடு அரசுப் பொறுப்பேற்கும் அமைச்சர் முதலானோர் பின்பற்ற வேண்டிய கடமைகளும் குறளில் அரசியல் நிர்ணயச் சட்டம் போலத் தொகுக்கப் பட்டுள்ளன.

‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பதே அவர்க்கு உரிய ஒரே நோக்காய் இருத்தல் வேண்டும்; ‘உயர்வு’ என்றால் தனது சொந்த நிலை உயர்வு இல்லை; சமுதாயப் பொது உயர்வு.

“உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்

     சேராது…”             (734)

நாட்டுக்கு உழைக்கும் மனநல மாண்பு

“வேல்அன்று வென்றி தருவது; மன்னவன்

     கோல்அதூஉம் கோடாது எனின்”     (546)

எனும் கொள்கைப் பிடிப்பு!

இவ்வாறெல்லாம் அனைத்து நாடுகளும் ஒப்பக்கூடிய அரசியல் வகைமைகளை வகுத்துள்ள வள்ளுவம், தனிநபர் ஒழுகலாறு போல, அரசியல் தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. நாம் தான் காரியக் குருடர்களாகவே இருக்க விரும்புகிறோம்! இவையெல்லாம் அப்பயணத்தில் பரிமாறப்பட்ட அரசியல் விருந்துகள்.

“நாடுஎன்ப நாடா வளத்தன; நாடுஅல்ல

     நாட வளம்தரும் நாடு”   (739)

எனும் குறளுக்கு எடுத்துக்காட்டாக இலங்கும் அமெரிக்க, கனடா நாடுகளில் நான் கண்ணாரக் கண்டுணர்ந்த ஆக்க நலன்கள்!

கென்னடி புகழ் பேசும் வாஷிங்டன் !

Image result for john f kennedyகென்னடி புகழ் பேசும்

வாஷிங்டன் டி.சி. நகருக்குச் சென்றோம். அங்கே உள்ள கென்னடி விமான நிலையத்தின் அழகும் வெள்ளை மாளிகை வனப்பும் என் நெஞ்சில் நிறைந்தன. ஜனாதிபதி அமரர் கென்னடி நினைவுச் சின்னம் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தோரை நினைவுகூரும் நடுகல்லாக விளங்குகிறது.

என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர்பலர் என்ஐ

     முன்நின்று கல்நின் றவர்”       (771)

எனும் திருக்குறள் வரிகளே அங்கு என் நினைவில் படர்ந்தன.

புகழ் வளர்ந்து நடுகல் ஆனோர்க்கும் அது பொருந்தும் சிறப்பினை உணர்ந்தேன். அங்கு உள்ள அணையாச் சுடர் காண்போர் உணர்விலும் தியாகப் பேரொளியைப் பரவச் செய்வதை அனுபவித்தேன். நினைவுச் சின்னங்களை நிறுவுவது போல அங்கே அவற்றை நேர்த்தியாகப் பராமரித்து மரியாதையும் செய்கின்றனர். இதையும் நம் நாட்டு நடப்போடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.

இங்கே வைக்கப்படும் நினைவுச் சின்னங்கள் நாளடைவில் மறக்கப்பட்டுப் பறவைகளாலும் விளம்பரங் களாலும் அசிங்கப்படுத்தப்படும் கொடுமை மாறும் நாள் எந்த நாளோ எனப் பொருமினேன்.

எதிர்காலத்தை உணர்த்தும் விஞ்ஞானக் கூடம்

“பொறிஇன்மை யார்க்கும் பழியன்று; அறிவுஅறிந்து

     ஆள்வினை இன்மை பழி”      (618)

எனும் வள்ளுவம் அமெரிக்க நாட்டினர்க்கு எப்படியோ தெரிந்திருக்க வேண்டும். அனைத்துத் துறையிலும் அவர்கள் ஆக்கிவரும் ஆள்வினையுடைமை அறிவியலில் கொடிகட்டிப் பறக்கிறது. நிலா உலகில் முதல் மனிதனை நிறுத்திடும் அளவுக்கு விண்முட்டும் புகழாகியுள்ளது.

வாஷிங்டனில் உள்ள அறிவியல் கலைக்கூடத்தை அற்புதம் என்றே சொல்ல வேண்டும். ராக்கெட்டுப் பயண வளர்ச்சி, விண்வெளி ஓடச் சாதனைகள், இது வரை சாதித்தவை, இனி அண்டவெளிக் கிரகங்களை ஊடுருவிப் போகும் முயற்சிகள் என இவற்றையெல்லாம் பார்த்தபோது விஞ்ஞான முன்னேற்றத்தையும் எதிர்காலப் போக்கையும் எப்படி வருணிப்பது என்றே எனக்குப் புரியவில்லை.

வாஷிங்டனை இரண்டே நாளில் முடித்துக் கொண்டு ஆர்லாண்டோ புறப்பட்டு வந்தோம். உலகப் புகழ்பெற்ற டிஸ்னி உலகம்  இங்கே தான் உள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்திழுக்கும் பிரம்மாண்டமான காட்சிகள் அங்கு வருடம் முழுவதும் திருவிழாக் கோலம் பூணச் செய்கின்றன. இதற்கு இணையானதோர் அமைப்பு உலகில் வேறெங்கிலும் இல்லை எனச் சொல்ல வைக்கின்றன.

அமெரிக்கா முழுவதையும் பார்த்து விட்டதொரு பிரமை ஏற்படும் வண்ணம் 360 டிகிரி கோணத் திரையரங்கில் அமெரிக்கா முழுவதையும் காட்ட நம்மைக் கூட்டிச் செல்கிறார்கள்.

சறுக்கு ரயில் விளையாட்டு

ரோலர்கோஸ்டர் எனும் பயங்கர ராட்சதச் சறுக்கு ரயில் விளையாட்டு அங்கே மிகவும் பிரபலம். ஒரு நொடியில் விர் என்று கோபுர உச்சிக்கு அந்த ரயில் விரைவதும் பின்னர் அது சரேலென மரணப் பள்ளத்தை நோக்கிக் கீழிறங்குவதும் மயிர்க்கூச்செரிக்கும் அனுபவங்கள்! அதில் ஒரு முறை ஏறிவிட்டுக் கீழே இறங்கி மிகத் துணிச்சலுடைய முரட்டு ஆசாமி என்ன சொன்னார் தெரியுமா? “இனி செத்தாலும் இதில் ஏற மாட்டேன்” என்றார். என்றாலும் துணிச்சலோடு அதில் ஏறினோம். ஓடத்தொடங்கியதும் உடம்பின் குருதி உறைந்து போவது போல, எலும்பு களெல்லாம் நொறுங்கிவிடுவது போலப் பய உணர்வு கவ்வியது. கீழே இறங்கியபின் தான் ‘அப்பாடா’ என்று அமைதி பெற்றோம்.

எதிர்காலக் கதை

அங்குள்ள எப்காட் சென்டர் விஞ்ஞான, தொழில் நுட்ப அற்புதங்களைக் காட்டுகிறது. 21-ஆம் நூற்றாண்டை நோக்கி உலகம் முன்னேறும் எதிர்காலக்கதை ஒரு வரலாறு போல அங்கே பல நிலைகளில் பல அரங்குகளில் கோடிகோடிச் செலவில் காட்டப்படுகிறது. இப்படி நம்நாட்டிலும் ஆங்காங்கு அறிவியல் நகரங்களை உருவாக்கக் கூடாதா எனும் ஏக்கமே மேலிட்டது.

அங்குள்ள கடல் உலகம்  உலகில் உள்ள அத்தனை மீன் வகைகளையும் காட்டுகிறது. இத்தனையும் பார்க்க ஒரு வாரமாவது வேண்டும்; நாங்கள் அவசரக் கோலத்தில் கிளம்பினோம்.

இந்த எப்காட் உணவுப் பிரிவில் காரைக்குடி நண்பர் ஒருவரைக் கண்டேன். என்னை நலம் விசாரித்துக் கொண்டே அவர் ஓடிஓடிப் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தொலைவில் செல்லச்செல்ல ஏற்படும் அன்பின் நெருக்கத்தை உணர்ந்திட முடிந்தது.

‘மியாமி’ நகரம்

ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு இப்போது எங்கள் பயணம் எல்லாம் விமானத்தில்தான், 3000 மைல் தாண்டி உலகிலேயே அழகிய கடற்கரை நகரான மியாமி போய்ச் சேர்ந்தோம்.

வாழ்க்கையை, பொழுதுபோக்கை, எப்படி ரசிப்பது என்பதை அங்கே காணமுடிந்தது. ‘சிலருக்கென ஒதுக்கப்பட்ட’ இடங்களுக்கெல்லாம் நாங்கள் போகவில்லை! நாலுபேர் கூசாமல் பார்க்கக்கூடிய கொள்ளை அழகுகளை ரசித்துவிட்டு ஓட்டலுக்குத் திரும்பினோம்.

அடுத்து நாங்கள் தரை இறங்கிய இடம், லெஸ்வேகாஸ் (லிணீsஸ்மீரீணீs). உலகிலேயே மிகப்பெரிய சூதாட்ட நகரம் இது என்பார்கள். எங்கு பார்த்தாலும் காசினோ என்னும் பொழுதுபோக்கும் உல்லாசப் பணவிரயக் கூடங்கள்! பணம் அங்கே தண்ணீராக ஓடுகிறது; தடம் புரண்டு பாய்கிறது!

‘ஒன்றெய்தி நூறிழக்கும்’ சூதர்களும் கெட்டிக் காரர்களும் அங்கே ஏராளம், ஏராளம்! விமானத்தளத்தில் இருந்து ஊரில் எங்கே திரும்பிப் பார்த்தாலும் பந்தயச் சூதாட்டம்… பல்வகைச் சூதாட்டம். தம் பணம் பறிபோவதைப் பற்றி அங்கு யாரும் கவலைப்படுவதில்லை. சம்பாதித்த காசைச் செலவழிக்க ஒரு வகையான மகிழ்ச்சியோடு ஷிறிலிகிஷிபி எனும் கண்கவர் காட்சிகளுக்குப் போய் விடுகிறார்கள். இவற்றைத் தொலைவில் இருந்து பார்த்த திருப்தியோடு நாங்கள் ஓட்டலுக்குத் திரும்பி விடுவோம்.

“வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதூஉம்

     தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று”        (931)

எனும் சூது அதிகாரக் குறளைத் தெரிந்திருந்தாலும் அவர்கள் அதைப் பின்பற்றமாட்டார்கள் என உணர முடிந்தது! அவ்வளவு மயக்க உலகம் அது.

அற்புத உலகம்

அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் ) நகரம் பறந்தோம். அங்கேதான் டிஸ்னியின் மற்றும் ஒரு அற்புத உலகம் உள்ளது. அதை மீண்டும் விவரிப்பதைவிட நேஷனல் தியேட்டர் உள்ள மற்றொரு ஹாலிவுட் ‘நகரத்தைப்’பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் விவரிக்கலாம். திருக்குறளைப் பற்றிப் பேசவே போதிய அவகாசம் கிட்டாத சூழலில் ஹாலிவுட் போக நேரம் எங்கே கிட்டும் என யோசித்தோம். எனினும் அன்பர்கள் விடவில்லை. ஏதோ போனோம்! வந்தோம்!

பின்னர் சான்பிரான்சிஸ்கோ நகருக்குப் பறந்தோம். அங்குள்ள சீன டவுனைக் (சிலீவீஸீணீ ஜிஷீஷ்ஸீ) கண்டு வியந்தோம். “எவ்வது உறைவது உலகம்” எனும் திருக்குறள் என் நினைவில் படர்ந்தது. சீனர்கள் உலகத் தலைமை பெற்று வரக் காரணம் எது என்பது புரிந்தது.

சாப்பாடும் சங்கடமும்

Image result for food america

 

“உங்களுக்கு வேண்டியது கில்லிங் பவரா?  அல்லது புல்லிங் பவரா?”  எனும் கேள்வியுடன் முடிந்த கட்டுரையை எப்பொழுதோ நான் படித்த நினைவு.

பலபேர் சைவ உணவில் சத்தே இல்லை என்பார்கள். கீரை, காய்கறிகளைவிட மீன், முட்டை, மாமிசம் முதலிய அசைவ வகைகளில்தான் ஆற்றல் நிறையக் கிடைக்கும் என நம்புவார்கள்.

ஆனால் யானை? எவ்வளவு பெரிது! உருவத்தால் மட்டும் இன்றி, வலிமையிலும் பிறவற்றைவிட மேம்பட்டது இல்லையா? குதிரைக்கு எவ்வளவு ஆற்றல்! கொள்ளும் புல்லும் தின்னும் அதன் ஆற்றல் அளவீட்டைக் கொண்டுதானே ‘குதிரை பவர்’ (பிஷீக்ஷீsமீ றிஷீஷ்மீக்ஷீ) இத்தனை என்று மின்அலகு கணக்கிடப் படுகிறது. ஆகவே சைவ உணவே சிறந்தது எனச் சைவ உணவினர் சாதிப்பர்.

இவையெல்லாம் என்னைப் போன்ற சைவ உணவுக் காரர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய செய்திகள் என்றாலும், மேலை நாடுகளுக்குப் பயணம்போகும் போதுதான் சைவச் சாப்பாட்டாளர்களுக்கு சங்கடங்கள் நேருகின்றன. அசைவர்களுக்குச் சிக்கல் இல்லை. எப்படியும் சமாளித்துக் கொள்வார்கள். சுத்த சைவர்கள் சிறுசிறு தியாகங்களுக்குத் தயாராக வேண்டும். எனினும் அமெரிக்காவில் அத்தகைய சங்கடங்கள் இராது என அன்பர்கள் எழுதியது நம்பிக்கை தந்தது.

அமெரிக்க நாட்டில் தண்ணீரையும் உணவையும் வீணாக்குகிறார்கள். அதைப் பார்த்தபோதெல்லாம் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அதே சமயம் தண்ணீர் மற்றும் உணவு வகைகளை மிகத் தூய்மையாகப் பாதுகாத்து வழங்குகின்றார்கள்; பயன்படுத்துகின்றார்கள்.

வெளியூர்ப் பயணத்தின்போது ஓட்டலில் தங்கிப் பலவகை உணவுகளை வயிறு புடைக்கச் சாப்பிடும் நம் ஊர்ப்பழக்கமெல்லாம் அங்கே காண முடியாது. பயணவழியில் சாலையோரங்களில் உள்ள சிற்றுண்டிக் கடைகளில் சூடாகத் தயாரிக்கப்பட்ட  உணவுகளை விற்கிறார்கள். அவற்றைக் காரில் இருந்தபடியே வாங்கிக் கொண்டு பயணத்தைத் தொடரு கிறார்கள் அல்லது அங்கேயே சாப்பிட்டுச் செல்லவும் வசதிகள் உள்ளன. காலப்போக்கில் நம் ஊர்களிலும் அப்படி வரக்கூடும்.

பாக்கெட்டுகளில் உணவு வகைகள்

பாக்கெட்டுகளில் அடைத்தும் சுத்தமான முறையில் பார்சல் செய்தும் தருகிறார்கள். நேரத்தை வீணாக்காமல்  சாப்பாட்டை முடித்துக் கொள்கிறார்கள். எல்லாவித மாமிச உணவுகளும் பாக்கெட்டில் வைத்து விற்கப்படுகின்றன. சைவச் சாப்பாட்டாளர்களுக்கான இத்தாலி நாட்டில் பிரபலமான பீசா (றிமிஞீஞீகி), மாக்டோனால்ட் ஆகிய சைவ உணவுகள் கிடைக்கும். ஆனால் என்ன வெஜிடேரியன் என முதலிலேயே சொல்லிவிட வேண்டும்.

 சைவ விருப்பத்தை விவரமாகச் சொன்னதும் பீசா  கோதுமை ரொட்டியில் வெண்ணெய் வெஜிடேபிள் வெங்காயம் போட்டுத் தந்தார்கள். ஆலை இல்லாத ஊரில் இந்த  இலுப்பைப்பூ கிடைத்தால் விடலாமா? பசி நேரத்தில் இதுவும் ருசியாகத்தான் இருந்தது. நாளடைவில் பழக்கம் காரணமாக இந்த உணவும் பிடித்துவிட்டது.

இந்த நேரத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் இத்தாலிக்குச் சென்றிருந்தபோது இந்தச் சைவ ரொட்டியும் கிடைக்காமல் அவதிப்பட்டுப் போனேன். சைவ ரொட்டி என ஆங்கிலத்தில் சொல்லிக் கேட்டேன். அவர்களுக்கு அது புரியாமல், ‘என்ன?’ என்று திருப்பிக் கேட்டார்கள். நான் ஆங்கிலத்தில் விவரமாக ஆனியன் கலந்த விஜிடபிள் பிரட் என்றேன். அவர்கள் தோளைத் தூக்கிக் கொண்டு தெரியவில்லை என்றார்கள். கடைசியில்தான் தெரிந்து கொண்டேன். ஆங்கிலம் இவர்களுக்கும் தெரியாது என்பதை! இவர்களிடம் ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான அவரவர் தாய்மொழியில் கேட்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆங்கிலம் பேசும் நாட்டை ஒட்டி வாழ்ந்தாலும் இவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் தமது தாய்மொழியறிவோடு மற்றொரு ஐரோப்பிய மொழியையும் கற்று விஞ்ஞான வளர்ச்சியில் தங்களை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். இதைப் போலவே நாமும் தாய்மொழியாம் தமிழைக் கற்று தமிழ்மொழியில் விஞ்ஞான வளர்ச்சிகளைக் காணவேண்டும் எனக் கருதினேன்.

ஒரு கை பார்த்தோம்!

அமெரிக்காவில் வெங்காயம் (கண்ணீர் விடாமலே) கிடைத்தது. பீசா ரொட்டி, பழச்சாறு முதலியன தாரளமாகக் கிடைக்கின்றன. சுவையான தண்ணீர் கலக்காத பால், யோகார்ட் எனும் கெட்டித் தயிர், சாக்லேட், ஐஸ்கிரீம்… போதாதா …? இந்த அருமையான சைவச் சாப்பாட்டை ஒரு கை பார்த்தபடி நாங்கள் பயணத்தைச் சமாளித்தோம் என்றாலும் நம் ஊர்ச் சாப்பாட்டு ஏக்கம் தீரவில்லை! மதுரை திரும்பியதும் எங்களைப் பார்த்த நண்பர்கள், மிகவும் மெலிந்து  போனோம் என அங்கலாய்த்தார்கள்.

நாம் உணவுக்கு நம் வருமானத்தில் எத்தனைப் பங்கு செலவிடுகிறோம் என்பதைக் கொண்டே நம் வாழ்க்கை முறையையும் தரத்தையும் அளவிட முடியும் என்பார்கள். அமெரிக்க நாட்டில் உணவுப் பொருள் விலையைக் கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டாலும் அந்த நாட்டுச் செலாவணிச் சமன்பாட்டில் உணவுவிலை அமெரிக்கர்களுக்கு மலிவுதான். அதனால்தான் விருந்து களிலும் கேளிக்கைகளிலும் உணவை அதிகமாகவே வீணாக்குகிறார்கள்.

அங்கே விருந்துகளில் அமர்ந்து சாப்பிடுவது மிக முக்கியமான நிகழ்வின் போதுதான். பெரும்பாலும் பபே (ஙிuயீயீமீt) எனப்படும் சுய பரிமாறு முறைதான். பொதுவில் வைக்கப்பட்ட உணவில் அவரவர்க்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு, ஓரிடத்திலேயே நிலையாய் இராமல் வந்திருக்கும் பலரோடும் அளவளாவிச் சாப்பிடுவது மிக வசதியான ஒன்று. நம் நாட்டிலும் இந்த விருந்துமுறை வேகமாக அறிமுகமாகி வருகிறது. அமெரிக்கர்கள் இந்த பபே முறையிலேயே வீணாக்கிக் கொட்டும் உணவு அதிகம்தான்.

மதிக்கப்படும் தனி நபர் உரிமை

எங்கும் தூய்மையாக உணவைப் பாதுகாத்துப் பயன்படுத்துகிறார்கள் என்றேன். கடையிலும், விருந்திலும் மிகக் கவனமாக உணவு வழங்கப்படுகிறது. சுகாதார முறைகளை நாம் அங்குதான் கற்கவேண்டும். ஒரு ஓட்டலின் சாப்பாடு சரியில்லை என்று யாராவது புகார் செய்தால் போதும், உடனே அது கவனிக்கப்படும், அல்லது அந்த ஓட்டல் மூடப்படும் அளவுக்குப் பொதுமக்கள் புறக்கணிப்பும், நடவடிக்கையும் தொடரும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் உணவுப் பொருள்களில் மிக விழிப்பாக இருக்கிறார்கள். தனி நபர் பாதுகாப்பும் உரிமையும் அந்த அளவுக்கு அங்கே மதிக்கப்படுகின்றன.

கலிபோர்னியா திராட்சைப் பழங்களுக்குப் புகழ்பெற்ற இடம் அவற்றில் பூசான நோய் ஏற்பட்டிருப்பதைக் கண்டவுடன், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அத்தனை திராட்சைக் கூடைகளையும் அப்புறப்படுத்திக் குப்பையில் கொட்டி விட்டார்கள். நம் ஊரைப் போல தடையை மீறி எவராவது தரக்குறைவான பண்டத்தை விற்பனை செய்தால் லைசன்சை ரத்து செய்து விடுவார்களாம். தண்டனையும் அதிகம்.

சிக்கனம்

அமெரிக்காவில் உணவை வீணாக்குவதைப் போல நான் ஐரோப்பிய நாடுகளில் பார்க்கவில்லை. இந்த வகையில் அவர்களிடம் அதிகச் சிக்கனம் கண்டேன்.

அமெரிக்காவில் இத்தனை மைல்கள் காரில் வந்தோமே எங்காவது குப்பைகூளம் கண்ணில் பட வேண்டுமே? ஊஹும்! கழிப்பறை, குளியலறை எல்லாம் மிகவும் தூய்மையாகவும் அழகாகவும் இருக்கும். அனைத்தும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டிருக்கும். அறிவியல் முன்னேற்றத்தால் ஏற்பட்ட நவீன வசதிகள் நிறைந்திருக்கும்.

சுற்றுப்புறத் தூய்மை, பொது வாழ்வில் தூய்மை, ஒழுங்குக் கட்டுப்பாடு பேணும் உணர்வு இவை அங்கு நன்கு புலப்பட்டன. நம் நாட்டில் வருடத்திற்கு ஒரு முறை இவற்றை விழாக் கொண்டாடிவிட்டுத் தொடர்ந்து பேணிப் பாதுகாக்காமல் அனைத்தையும் குப்பையில் போட்டுவிடுகிறோம். மதுரையில் சுற்றுப்புறத் தூய்மை காக்க நாமும் இயக்கம் நடத்தினோம். என்ன ஆயிற்று? போன ஆண்டு ஓரிடத்தில் கொட்டிய குப்பையெல்லாம் வேறு இடத்துக்கு வந்துவிட்டது. வெளிநாடுகளில் எப்போதும் செயல் இயக்கம்… நம் நாட்டில் எப்போதும் பேச்சு இயக்கம். என்று இந்த நிலை மாறுமோ என்ற ஏக்கம்!

சிக்காகோவில் – அன்பர்களின் வீடுகளில் – இருவகை விருந்துகள் உண்டு! வயிற்றுக்கும் செவிக்கும்! அங்கே உணவுப் பரிமாற்றத்தைவிடத் திருக்குறள் கருத்துப் பரிமாற்றமே மிகவும் ருசித்தது. நம் நாட்டில் – திருக்குறளைப் பற்றிப் பெரும்பாலும் தமிழறிந்த புலவர்களே மேடை கட்டிப் பேசக் கேட்கிறோம். ஆனால் இங்கு பிறதுறை அலுவல்களில் உள்ளவர்களில் பலர், திருக்குறளில் வாழ்க்கைத் தேவைக்கு ஏற்ற அளவு நல்ல தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு குறள் இன்ன அதிகாரத்தில் உள்ளது என எடுத்துச் சொல்லும் அளவுக்கு ஈடுபாட்டை வளர்த்து வாழ்கின்றனர். அவர்களோடு அமர்ந்து அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லும் திருக்குறளை ஆராய்ந்தோம்.

சிக்காகோவில் ஒரு சொற்பொழிவுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதென்றால் சனிக்கிழமை வரை தங்குவதை நீடிக்க வேண்டியிருக்கும். எனவே கலந்துரையாடல் கூட்டங்களை வைத்துக் கொண்டோம். பேசுவோர், கேட்போர் ஆகிய இரு தரப்பாரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் சுவையான கருத்தரங்குகளாக இவை நடந்தன.

திரு.இளங்கோவன் திருக்குறட்பா வடிவில் அதே நடையில் நெஞ்சு தொடும் வரவேற்புப் பாமாலையை யாத்தளித்தார். நம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேரறிஞர் தெ.பொ.மீ. அவர்களின் மருகர் பேராசிரியர் டாக்டர் ஆர்.சண்முகம் அவர்கள் வாங்கித் தந்திருந்த, நம் துணைவேந்தர் அறிமுகக் கடிதத்துடன், நம் அஞ்சல் வழிக்கல்வித் துறையினர் என்னிடம் கொடுத்தனுப்பியிருந்த ஆத்திசூடி – கொன்றைவேந்தன் முதலிய தமிழிலக்கிய ஒலி நாடாக்களைப் பல்கலைக்கழகத் தூதனாக அங்கு நல்கினேன்.

சிக்காகோவில் நண்பர்கள் இவற்றைப் பொன்னே போல் போற்றி வாங்கிக்கொண்டனர். தம் பிள்ளைகளுக்குப் பயன்தரும் இத்தகைய நன்கொடைகளைத் தொடர்ந்து அனுப்புமாறும் கேட்டுக் கொண்டனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையமும் இத்துறையில் இனி மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை நினைத்து மலைத்தேன்.

நண்பர்கள் எனது மேற்பயணத்திற்கான விசாவினைப் பெறும் முயற்சிகளில் ஓடி அலைந்தனர். சிலர் ஆரம்ப ஏற்பாடுகளைச் சரியாக செய்து கொள்ளாததால் அங்கே போய் அவதிப்பட நேர்ந்தது. பிரெஞ்சுப் புரட்சியின் 200-ஆவது ஆண்டு விழாக் கொண்டாடப்பட்டமையால் அந்த நாட்டுக்கு உடனே விசா பெறுவது சிரமமாய் இருந்தது. விசா முன் ஏற்பாடு செய்யாததாலே அவ்விழாவில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பும் கைநழுவியது. எனவே, புறப்படும் சமயத்தில் சரியான டிராவல் ஏஜண்ட் மூலம் விசாப் பெற்று உரிய ஏற்பாட்டுடன் புறப்பட வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டேன். இப்போதெல்லாம் 140 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்றார்கள்!

சிக்காகோ தமிழன்பர்களான நாராயணன், வெங்கடராமானுஜம் ஆகியோரை விட்டுப் பிரிய மனம் இல்லாமலேயே அமெரிக்காவை அவசரக் கோலத்தில் சுற்றிப் பார்த்து விட்டுக் கிளம்ப வேண்டியதாயிற்று!

 

 

சிகாகோ: இந்திய ஆன்மீக முதல் முழக்கம்

சிகாகோ: இந்திய ஆன்மீக

முதல் முழக்கம்

Image result for vivekananda

இந்திய ஆன்மீகத்தின் முதல் முழக்கத்தை – புதிய விவே(காநந்தக்)கக் குரலை கேட்கும் – வாய்ப்புப் பெற்ற நகரம் சிகாகோ இந்திய நாட்டவரைப் பற்றிச் சென்ற நூற்றாண்டிலேயே கேள்விப்பட்டுப் பெருமை கொண்ட நகரம் அது.

சிகாகோ தமிழ் அன்பர்கள் (டெய்டனிலிருந்து 300 மைல் தூரம்) கூட்டிச் செல்ல வந்திருந்தனர். டெய்டன் விழா முடிந்த கையோடு சிக்காகோவுக்குக் காரில் போக திரு.பி.சி.எம்.ஜி. நாராயணனும் வேங்கட ராமானுஜமும் ஏற்பாடு செய்திருந்தனர். வேங்கடராமானுஜம் ஏற்றுமதித் துறையில் பொறுப்பான பதவி வகிப்பவர்; மதுரையில் புகழோச்சி வரும் மகாத்மா மாண்டிசேரிப் பள்ளித்தாளாளாரும் யாதவர் கல்லூரிச் செயலருமான திரு.பன்னீர்செல்வம் அவர்களின் சகலர். இவ்வன்பர்களின் குடும்பத்தாருடன் சிகாகோவுக்கு சாலை வழிப்பயணமாய்ப் புறப்பட்டோம்.

தாயக்கட்டமா? தார்ச்சாலைகளா?

சாலைகள் நாட்டின் நரம்பு மண்டலங்கள் பொருளாதார நலத்திற்கும் சமூக வாழ்வுக்கும் இன்றியமையாத இணைப்புக் கோடுகள். மிக விரிந்த நிலப்பரப்பைக் கொண்ட அமெரிக்க நாட்டின் திசைகளை எல்லாம் – அந்நாட்டின் நெடுஞ்சாலைகளே இணைக்கின்றன. ஊருக்கு ஊர் சொந்த / பொது விமானப்பயண வசதிகள் மிகுதியாக இருந்தாலும், ரயில் பயணத்தை விட, சாலைப் பயணத்தையே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதற்கேற்ப மோடல் (விளிஜிணிலி) எனப்படும் தங்குவிடுதிகளையும் செய்தித்தொடர்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

அங்கே நெடுஞ்சாலைகளின் அழகுக்கும் பராமரிப்புக்கும் இணை ஏதுமில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை – நேர்கோடு போல – நீண்டு விரியும் இச்சாலைகளில் எல்லாம் – வாகனங்கள் ஊர்ந்து போவதில்லை! விரைந்து பறக்கின்றன! 60 மைல் வேகம் குறையாமல் ஓட்ட வேண்டும் என்பது விதி; ஆனால் சர்வசாதாரணமாக 80, 100 மைல் வேகத்தில்தான் ஓட்டுகிறார்கள். வாகனங்களைக் கண்காணிக்கப் போலீசார் ராடார் சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள். என்றாலும் கார் ஓட்டுநர்கள் தம் வண்டியில் உள்ள மின்னணுச் சாதனங்கள் வழியே ராடார் இயக்கத்தைத் தெரிந்து கொண்டு அப்போதைக்கு மட்டும் வேகத்தைக் குறைத்துக்கொண்டு அப்புறம் சிறகுகட்டிப் பறக்கிறார்கள்.

வேகம் – வேகம் – வேகம். இதுதான் அமெரிக்க வாழ்க்கை! என்றாலும் கூட அந்த வேகத்திலும் – ஒருவகை ஒழுங்கும் கட்டுப்பாடும் மேவி நிற்பதைக் காணமுடியும். பொது இடங்களில் மக்கள் நடந்து கொள்வதை உரைகல்லாக வைத்தே ஒரு நாட்டின் ஒழுக்கத்தை அளந்தறிய வேண்டும் என்பார்கள். அங்கே ‘பொதுஇடம்’ எதுவாயினும் – அது புனிதமாகப் போற்றப்படுகிறது. ‘பொது என்றாலே, யாருக்கும் சம்பந்தமில்லாத அனாதை போன்றது; பொதுஇடத்தையோ, பொதுப்பொருளையோ, முறைகேடாக உபயோகிக்கலாம்’ என்ற நம்நாட்டின் பெரும்பாலானோரின் மனப்போக்கு இந்த அமெரிக்கப் பாடத்தால் மாற்றம் காணவேண்டும்.

நம் நாட்டில் பொதுப் பேருந்துகள் படும் பாடு நமக்குத் தெரியும். பயணிக்கும் ஓட்டுநர் / நடத்துநருக்கும் சிறு வாய்த்தகராறு மூண்டால் போதும். அது கைகலப்பாகி, ரத்தக் களரியாகி, சாலை மறியலாகி, சட்டஒழுங்குப் பிரச்சினையாகி, குழு மோதலாகி, துப்பாக்கிச்சூடு ஆகி, நீதி விசாரணை ஆகி, அப்புறம் புஸ்வாணம் ஆகிவிடும். அதே சமயத்தில் பேருந்து – சமூக விரோதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சாலையின் குறுக்கே படுத்துக் கிடக்கும். அமெரிக்கச் சாலைப் பயணத்தின்போது என்னால் இந்த ஒப்பீட்டை நினைக்காமல் இருக்க முடியவில்லை. “இது மாறும் நாள் எந்த நாளோ! யார் இதைப் பகர்வார் இங்கே?” எனும் பாரதிதாசன் வரிகளே நினைவுக்கு வருகின்றன.

அமெரிக்க நாடு எங்கும் தாயக்கட்டம் போல அமைந்திருக்கும் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கு விளக்கமான கைகாட்டிகளும் குறிப்புத் தூண்களும் உள்ளன. நெடுஞ்சாலை வரைபடத்தைக் கையில் வைத்துக்கொண்டால் போதும்; எங்கே திரும்ப வேண்டும். எங்கே பாதை மாறிச் செல்லவேண்டும் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

சாலையை இருபிரிவாக நடுவே பிரித்து – போகும் வழித்தடங்கள் ஒருபுறமும், எதிர்வரும் வண்டித்தடங்கள் மறுபுறமும் எனப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புறத்திலும் நான்கு (ஜிக்ஷீணீநீளீs) தடங்களுக்கு குறையாமல் ஓடுகின்றன. இத்தடங்கள்தான் ஓடுகின்றனவா அல்லது இவற்றின் மீது வாகனங்கள் ஓடுகின்றனவா எனக் கணிக்க இயலாத வகையில் அங்கே எல்லாம் அசுர வேகம்தான்! லைஃப் லைன் எனும் உயிர்க்கோடு தாண்டாத ஒழுங்கு வேகம்தான்!

“நீறில்லா நெற்றி பாழ்”

என்பது நம் நாட்டுப் பழமொழி

“காரில்லா வாழ்வு வீண்”

என்பது அவர்களின் நடைமொழி!

அங்கேதான் எத்தனை வகைக் கார்கள்! சிறிதும் பெரிதுமாக ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்களுக்குத் தனியே நான்கைந்து கார்கள் உள்ளன. டிரைவர் வைத்துக் கொள்வதெல்லாம் அங்கே கட்டுப்படியாகாது. டிரைவர் சம்பளமே 1500 டாலர் தேவைப்படும். எனவே பிள்ளைகள், பெரியவர்கள் எல்லோருமே கார் ஓட்டப் பழகிக் கொள்கிறார்கள். அங்கு பயணம் போகிறவருக்குக் காரோட்டத் தெரிந்திருந்தால் மிகவும் நல்லது. நம் ஊரில் வாடகைச் சைக்கிள் எடுப்பது போல, ஓரிடத்தில் வாடகைக் கார் எடுத்துக்கொண்டு ஊர் சுற்றப் போய் விடலாம். வரைபடம் கையில் இருந்தால் போதும் ஊரை வலம் வந்துவிடலாம்.

அன்றாட வாழ்வில் சாதாரணத் தேவைகளுக் கெல்லாம் பிறர் கையை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் மனோபாவம் மிக மிகக்குறைவு. நம் ஊரில், எங்கேனும் வெளியிடப் பயணம் புறப்படுகையில் நம் மூட்டை முடிச்சுகளை லக்கேஜுகளை தூக்கி வரச் சுமையாள் தேடுகிறோமே, அப்படியெல்லாம் அங்கே ஆள் கிடையாது; கிடைத்தாலும் கூலி கொடுக்க முடியாது.

ஆள் தேட வேண்டாம்!

கூடுமானவரை அவரவர் காரியத்தை அவர்களே செய்துகொள்ள வேண்டும். தன் கையே தனக்கு உதவி என்பதே அங்கு தாரக மந்திரம். ‘வலிமையுடையோர் பிழைத்துக் கொள்வர்’ (ஷிuக்ஷீஸ்வீஸ்ணீறீ ஷீயீ tலீமீ திவீttமீst) என்பதே அங்கு வாழ்க்கை நெறி.

ஓர் உதாரணம் சொல்ல விரும்புகிறேன். நெடுஞ் சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் காருக்குப் பெட்ரோல் போட்டுக்கொள்ள வேண்டுமானால், நாமே உரிய இடத்தில் காரை நிறுத்திவிட்டுப் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் எந்திரம் கணக்கிட்டுக் காட்டும். உரிய தொகையைச் செலுத்திவிட்டுப் புறப்படலாம். பெட்ரோல் நிரப்பிவிட ஆளைக் கூப்பிட்டுவிட்டால் அந்தப் பணிக்காக அதிக கட்டணம் கட்டியாக வேண்டும். கார்களை நன்கு பராமரித்து வைத்துக் கொள்ளுகிறார்கள். ரிப்பேருக்காக அதிகம் செலவிடுவதில்லை. சரியாக ஓடாத காரைக் குப்பையில் தள்ளிவிட்டுப் புதுக்காரை வாங்கிக் கொள்ளுகிறார்கள்.

ரிப்பேரா? ஓரம்போ!

காரைப் பராமரித்துக் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும். அந்த நாட்டில் சாலையை, இவ்வளவு நீண்ட, பெரிய நெடுஞ்சாலையைப் பராமரித்து வரும் அழகை எளிதில் வருணித்துவிட முடியாது. அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் அங்கே நெடுஞ்சாலைகளையும் சுற்றுப்புறத்தையும் பராமரிக்கின்றனர்; பாதுகாக்கின்றனர். சாலையில் கார் பழுதாகி நின்றுவிட்டால் பிற வாகனங்களுக்கு எவ்வித இடையூறும்  இல்லாமல் அதை நான்காவது (ஓரமாயுள்ள) வழித்தடத்தில் நிறுத்தி விடுகிறார்கள். அதில் சமிக்ஞையை மாட்டிவிடுகிறார்கள். அப்படி நிறுத்திய பத்து நிமிடங்களுக்குள் (எப்படித்தான் விவரம் அறிந்து வருவார்களோ) அங்கு போலீஸ் வந்து விடுகிறது. உரிய உதவிகளுடன் காரை அப்புறப்படுத்தி விடுகிறார்கள். போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றிக் கண்காணிக்கிறார்கள். ஒருவரால் 5 நிமிடம் தடை ஏற்பட்டாலும் அது பலருக்குப் பல வகையில் பல மடங்கு தாமதத்தையும் நட்டத்தையும் ஏற்படுத்திவிடும் என்று கவனமாக இருக்கிறார்கள்.

இங்கும் அங்கும்

தனிநபர் சுதந்திரமும், சௌகரியமும் எந்த வகையிலும் பொதுநலனுக்காக ஊறாக அமையக் கூடாது. தனிநபர் சுதந்திரத்தை வெகுவாகப் போற்றி மதிக்கும் அமெரிக்கர்கள்- மிகை உணர்வுகளுக்கு முதலிடம் தந்துவரும் அமெரிக்க மக்கள் – பொது நலக் காப்பிலும் எவ்வளவு அக்கறையுடன் விழிப்புடன் உள்ளார்கள் என்பதை அங்குள்ள நெடுஞ்சாலைப் பயணங்களில் கண்டேன்.

தனது சுதந்திரத்தால் தன்னலத்தால் அடுத்தவருக்கு எந்த வகையிலும் சிறுஇடையூறுகூடச் செய்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையோடு நடந்து கொள்கிறார்கள். நம் ஊர்த் தெருக்களில் கார்களின் ஆரன் சத்தம் செவிப்பறைகளைக் கிழித்தெடுக்குமே, அப்படியெல்லாம் அங்கில்லை. என் காதில் ஆரன் சப்தமே கேட்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரும் சாலை விதிகளை மதித்து நடப்பதால் எல்லார்க்கும் வாழ்க்கை சுகமாக அமைகிறது.

வியப்பில் ஆழ்த்தியது

நான் சிங்கப்பூர் செல்லுகையில் அங்கும் சாலை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதைக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். சிங்கப்பூரில் பொது நலத்திற்கு ஊறு செய்யும் வகையில் சாலையில் குப்பையைப்  போட்டாலோ வண்டிகளைத் தடம் மாறி ஓட்டினாலோ கடுமையாகத் தண்டிக்கிறார்கள். அச்சமே அங்கு ஆசாரம். அந்த அச்சத்தால் அங்கே ஒழுங்குமுறை நிலை பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்காவில் அச்சத்திற்கு ஆட்பட்டு அடங்குவதை விட, பொறுப்பை உணர்ந்து அவரவர் ஒழுங்கை மதித்து நடக்கும் ஆக்கம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அமெரிக்காவின் உயர்வுக்கு இந்த உயர்பண்பும் காரணம் எனக் கருதினேன்.

விவேகானந்தர் பாதச் சுவட்டில்

Image result

மதுரையிலிருந்து புறப்படுமுன் – வழியனுப்பு விழாவில் விவேகானந்தர் விஜயம் பற்றிக் கேட்ட உரைகளின் நினைவுகள் – சிகாகோ நெருங்கும்போது என்னை வலம் வந்தன… சிகாகோ போய்ச் சேர்ந்தோம். நண்பர்கள் வீட்டு நல்லுபச்சாரங்களில் திக்கு முக்காடிப் போனோம்… என் நெஞ்சமெல்லாம் சிக்காகோ நகருக்கு. நம் விவேகானந்த சுவாமிகள் வந்து இந்து சமயம் பற்றிப் பேருரையாற்றிய அந்த வரலாறே வலம் வந்தது. அவர் எழுந்தருளிய, சொற்பொழிவு செய்த, பெருமைமிகு அரங்கிற்குக் கூட்டிச் சென்றார்கள். அவருடைய நினைவை மிகச்சிறப்பாக அங்கே போற்றி வரக் கேள்விப்பட்டு உவகை அடைந்தேன். விவேகானந்தர் பாதம் பட்ட இடத்தை வணங்கித் தொழுதேன். நானும் ஒரு நிமிடம் கண் மூடித் தியானித்தேன். நெஞ்சம் நெகிழ்ந்தது.

சுவாமி விவேகானந்தர் இந்து சமயப் பெருமையைப் பரப்ப இங்கே 1893-இல் வந்தார். அவர் அடிபற்றி இப்போது, திருக்குறளின் பெருமையைப் பரப்ப நானும் ஓர் எளிய வாய்ப்புப் பெற்று சிகாகோ வந்திருப்பதை நினைத்தும் என் நெஞ்சம் மகிழ்ந்தது.

“விவேகானந்த சுவாமிகள் எங்கே? நாம் எங்கே?” என மலைப்பும் அச்சமும் தோன்றினாலும் பேரருளாளரான விவேகானந்தரின் வீர வாசகங்கள் இப்போதும் “ஆகுக, ஆக்குக!” எனவும் “எழுமின் – விழிமின் – செயலாற்றுமின்” எனவும் அன்று போல் இன்றும் அறைகூவி அழைப்பது போலவே உணர்ந்தேன்.

“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

     செல்லும்வா யெல்லாம் செயல்”      (33)

என்ற வள்ளுவர் வாசகம் உணர்ந்தேன். சிகாகோ நகரைச் சுற்றிப் பார்ப்பதை விட விவேகானந்தர் வருகை பற்றிய விவரங்கள் இங்கே எப்படிப் பேசப்படுகின்றன என்று அறிவதிலேயே ஆர்வம் கொண்டேன். கிடைத்த செய்திகள் சுவையானவை:

சிகாகோ சமயப் பேரவை 1893-இல் கூடியது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் திட்டத்தில் உலகக் கண்காட்சி, கொலம்பியன் பொருட்காட்சி என்றெல்லாம் அமைக்கப்பட்டன. மனித குலத்தின் செல்வப் பெருக்கை மட்டும் அல்லாமல், ‘மனித சிந்தனை’ எனும் நெடுவளத் துறையில் கண்டுள்ள முன்னேற்றமும் அப்பொருட்காட்சியில் எடுத்துக்காட்டப்பட்டன. அதன் ஒரு பகுதிதான் சமயப் பேரவை.

சமயப் பேரவைத் தலைவரான ஜான் ஹென்றி பர்ரோஸ் பாதிரியார் கிறித்தவ மதம்தான் உலகிலேயே உயரிய மதம் என்பதை நிரூபிக்கும் தோரணையில் ஆடம்பரமாகப் பேரவையைக் கூட்டினாராம். உலகெங்கும் இருந்து நூற்றுக்கணக்கான சமய, தத்துவவாதிகள் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டனராம். எல்லோரும் வந்து மேலைப் பெருமையைப் பார்த்து வாயடைத்துப் போக வேண்டும் என்பதுதான் அமைப்பாளர்களின் நோக்கமாம்.

உலகில் பரவியுள்ள யூதம், புத்தம், இஸ்லாம், இந்து, தாவோ, கன்பூசியம், ஷின்டோ, ஜராதுஷ்டிரம், கத்தோலிக்கம், புராட்டஸ்டண்ட் ஆகிய பத்து மதங்களின் பிரதிநிதிகளும் பேரவைக்கு வந்தனர்; உரையாற்றினர். பேரவை அரங்கிலேயே சிறப்பிடம் தந்து கௌரவிக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் உரையாற்ற அழைக்கப்பட்டார். ‘சகோதரிகளே! சகோதரர்களே!’ எனும் அவரது தொடக்கத்தைக் கேட்ட பேரவை உற்சாகப் புயலால் தாக்கப்பட்டாற்போல ஒருவகைப் புத்துணர்ச்சிக்கு உள்ளாயிற்று. உலகிலேயே மிக இளைய அமெரிக்க நாட்டிற்கு, உலகின் மிகப்பழைய நாட்டுத் துறவி வந்து கூறும் கருத்தை விருப்போடு கேட்கத் தயாராயிற்று.

“வெவ்வேறு இடங்களில் தோன்றும் நதிகள் எல்லாம் ஒரே கடலில் சென்று சங்கமம் ஆகின்றன. அதைப் போலப் பல்வேறு குணப்பாங்குடைய மனிதர்கள் பின்பற்றும் சமய வழிபாடும் ஓர் இறைவனையே சென்று அடைகின்றன…”

விவேகானந்தர் ஆற்றிய உரை – திருக்குறள் போல மிகமிகச் சுருக்கமானது. ரொமெயின் ரோலோ என்னும் பேரறிஞர் “தீச்சுடரைப் போன்றது அந்த உரை. ஏட்டுச் சுரைக்காய் போலப் போய்க் கொண்டிருந்த சொற்பொழிவு- களூடே விவேகானந்தர் உரை மட்டும், கேட்பவர்களின் இதயக்கனலை மூட்டிவிட்டது!” எனப் பாராட்டி உள்ளார்.

“ஒரு மதம் வெற்றியடைந்து பிறமதங்கள் அழிந்து போய்விடுவதன் மூலம் உலகில் சமய ஒற்றுமை உண்டாகிவிடும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. ஒவ்வொருவரும் மற்றவர் உணர்வுகளை ஏற்றுச் சீரணிப்பதோடு, தத்தமது தனித்தன்மையைப் பேணி, வளர்ச்சிக்கான தன் சொந்த மரபுகளின்படி உயர வேண்டும்.” என முத்தாய்ப்பு வைத்த அவரது ஆக்க உரை சகிப்புத் தன்மைக்கு உலக அங்கீகாரம் பெற்றுத்தந்தது. பாரதப் பண்பாட்டின் ஆக்கபூர்வமான அம்சங்களை உலகிற்கு அறிமுகம் செய்தது. உலகக்குடிமை உணர்வு, ஓர் உலக அரசு ஆகிய சிந்தனைகள் மலர வழிகோலியது! விவேகானந்த உரைக்கும், திருக்குறள் நெறிக்கும் உள்ள நெருங்கிய உடன்பாட்டைச் சிந்திக்க அப்பிரசுரங்கள் மிகவும் உதவின.

அங்கெல்லாம் வாழும் வள்ளுவம்!

டெய்ட்டன் நகர் சென்றடைந்தோம். நண்பர்களால் ‘நாணா’ என்று அழைக்கப்படும் திரு.பி.சி.எம். நாராயணனும், திரு.வெங்கடராமானுஜனும் அன்புள்ளத் தோடும் இன்முகத்தோடும் வரவேற்கக் காத்திருந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் எங்களது நெடிய பயணக் களைப்பெல்லாம் பறந்தோடிவிட்டன. பிராங்க்பர்ட்டில் விமானம் மாறிப்போன எங்களது லக்கேஜ் பத்திரமாக வந்து சேரும் நம்பிக்கையுடன் நண்பர்கள் வீட்டிற்குப் புறப்பட்டோம்.

நம்பிக்கை பழுதுபடவில்லை. மூன்று நாள் கழித்து எங்கள் பெட்டிகள் எல்லாம் பத்திரமாக, நாங்கள் தங்கி யிருந்த முகவரிக்கே வந்து சேர்ந்தன. அவை சரியாக வந்துவிட்டனவா என விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து அறிந்து கொண்டனர். அவர்கள் இவ்வகையில் காட்டிய அக்கறையும் பரிவும் எங்கள் நெஞ்சைத் தொட்டன. அவர்களது திறன்மிகு சேவைக்கெல்லாம் காரணமாய் இருப்பன. ஒன்றுகூடிப் பணிபுரியும் குழுமச் செயல்முறை அதற்கேற்ற புதிய நிர்வாகநெறி ஏற்பு  விரைந்து செயலாற்ற உதவும் நுட்பக் கருவிப் பயிற்சி; நேரம் போற்றிப்  பிறரை  மதித்து ஆரவாரம் இன்றிப் பணியாற்றும் கலைத் தேர்ச்சி – ஆகியனதான் என்பதை நண்பர்கள் எடுத்துச் சொன்னார்கள். சில விவரங்களைக் கேட்கச் சென்னை விமான நிலையத்தில் இரைந்து கத்திப் பேசியது போல இங்கு தேவைப்படவில்லை. பரிவோடு அமைதியாகக் கேட்டு, ‘இயலாது’ என்பதைக் கூட இங்கிதமாகத் தெரிவித்தார்கள்.

“இன்சொல் இனிதுஎன்றல் காண்பான் எவன்கொலோ

     வன்சொல் வழங்கு வது?”      (99)

என வள்ளுவர் நம் மொழியில் எழுதினார். ஆனால் அதனை நம்மைவிட, கிழக்கே ஜப்பானியரும், மேற்கே அமெரிக்கருமே போற்றி வாழுகின்றார்கள். வள்ளுவம் அங்கெல்லாம் வாழுகிறது! நன்றாக வாழுகிறது!

மாணவர் விடுதியா? நட்சத்திர ஓட்டலா?

ஒஹையோ பல்கலைக்கழக மாணவர் விடுதியில் நாங்கள் மூன்று நாட்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அது மாணவர் விடுதியாகவா தெரிந்தது? ஐந்து நட்சத்திர ஓட்டல் போல, அத்தனை வசதிகளுடன், அவ்வளவு எழிலுடன் விளங்கியது. அறிவியல் முன்னேற்ற வசதிகளை எல்லாம் அங்கே காணமுடிந்தது. அறைகளைத் திறக்கும் பூட்டு-சாவிகள் எல்லாமே கம்ப்யூட்டர் இணைப்பு உடையவை. இவ்வாறு மனிதர்களையும் இயந்திரங்களையும் கம்ப்யூட்டர் – மின்னணுப் பெட்டிகளே ஆள்கின்றன; ஆட்டிவைக்கின்றன. அவற்றின் செயல் நுட்பம் கூறும் நூல்களும் ஏடுகளுமே நடைபாதைக் கடைகள் வரை ஆக்ரமித்துள்ளன. மதிநுட்பம் நூலோடு உடையதாக மாணவப் பருவ முதலே அவர்கள் உயரப் பல நிலை ஆக்கம் அளிக்கின்றன. அப்பல்கலைக்கழக மாணவர்களிடமும் தனிமுத்திரை பொலியச் செய்திருந்தன.

“உங்களுக்கு இங்கே ஒரு நாள் முழு ஓய்வு! நாளை முதல் மாநாட்டு விருந்தினராகி விடுவீர்கள்….” என்றபடி நண்பர்கள் விடைபெற்றனர். “ஒரு நாள் முழு ஓய்வு” எனும் முதல் பகுதி தேனாக இனித்தது: “மறுநாள் மாநாடு” என்ற பிற்பகுதி ஏதோ ஒரு பாரத்தைச் சுமத்துவது போன்ற நிலைக்கு உள்ளாக்கியது.

டெய்ட்டன் நகர ஒஹையோ பல்கலைக்கழக அரங்கில் ஆண்டுதோறும் நிகழும் தமிழ் விழாவை, ஒரு வேள்வி போலவும், விரதம் போலவும் அங்குள்ள தமிழன்பர்கள் நடத்தி வருகின்றனர். டெய்ட்டனுக்குப் பல நூறு மைல்களுக்கு அப்பால் பணிபுரிபவர்கள் எல்லாம், இவ் விழாவினை ஒரு கைங்கரியமாக நடத்திட ஆண்டு தோறும் ஒன்று கூடி விடுகின்றனர். நான் பங்கேற்க அழைக்கப் பட்டிருந்த இது பதினான்காம் ஆண்டுவிழா. அதன் மூன்று நாள் கருத்தரங்கிற்குத் தமிழகத்திலிருந்து மூவர் அழைக்கப்பட்டிருந்தோம்.

மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர், பட்டிமன்ற நாவலர், சிரிப்புச் செல்வர் சாலமன் பாப்பையா அவர்களும், தமிழ்க் கவியரசு, புகழார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும், தமிழ்நாடு, திருக்குறள் பேரவைப் பொதுச் செயலரான நானுமே அம்மூவர்!

மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் கவியரசு வைரமுத்து பங்கேற்றார். பட்டிமன்ற நாயகர், பேராசிரியர் சாலமன் பாப்பையா முதல்நாள் அரங்கில் உரையாற்றினார். பயணத்தில் எனக்கு நேர்ந்த ஒருநாள் தாமதத்தால் நான் முதல்நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேராசிரியர் உரையைக் கேட்க இயலவில்லை. முன்னரே ஏற்பாடாகி யிருந்த மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் உடனே போய்விட்டார் என்று அறிந்தேன். மறுநாள் நிகழ்வில் நானும் கவியரசும் உரையாற்றினோம்.

என் உரை அமெரிக்கத் தமிழன்பர்களைப் பாராட்டுவதாக அமைந்தது அது எனக்கு மட்டும் அன்றி, விருந்தினராகச் செல்லும் எவருக்கும் இது இயல்பே ஆகும்.

“யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்

     சாந்துணையும் கல்லாத வாறு”  (397)

எனும் குறள் வழிக் கோட்பாட்டிற்கு இலக்கியமாய், முயற்சியே வாழ்வின் மூச்சாகக் கொண்ட அமெரிக்கத் தமிழர்களை மனதாரப் பாராட்டத் தொடங்கினேன். “கற்பவருக்குத் தமது சொந்த ஊரும் நாடும் போல, அவர்கள் சென்றிருந்து வாழும் தேசமும் சொந்தம் என ஏற்கப்படுவதே சிறப்பு. நீங்கள் இங்கே வந்து, இதனையே சொந்த நாடாக ஏற்று, இதன் வளத்திற்கும் மேம்பாட்டிற்கும் உங்கள் உழைப்பினை நல்கி வருகிறீர்கள். உங்கள் திறமையையும் ஞானத்தையும் வழங்கி இங்கு தலைமை பெற்றுத் திகழுகிறீர்கள். ‘என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு’ எனும் கேள்விக்கு இடமின்றி, வளரும் தொழில் நுட்பத்திறங்களை எல்லாம் உங்கள் இடையறா உழைப்பால் சாதனையாக்கிக் கொண்டுள்ளீர்கள். இந்த அனுபவக் கல்வியால் இன்று அமெரிக்க நாடு பயன்பெற்று வருவதைப் போல, நாளை நமது மண்ணும் நலம் பெற உதவி வருகிறீர்கள்.

‘எவ்வது உறைவது உலகம்’ என அறிந்து அதனோடு உறையும் ஈடுபாடே அனுபவக் கல்வி; இணக்கம் தரும் இந்த ஆக்கநெறிக் கல்வியால் நீங்கள் அனைத்திலும் ஆக்கம் பெற்றுத் திகழுகிறீர்கள். ‘உலகம் தழுவியது ஒட்பம்’ என வள்ளுவப் பெருந்தகை சொன்னது போல, இன்றைய உலகத் தேவையையும் சூழலையும் தழுவி நின்று, நட்பாக்கிக் கொண்டு, மலர்தலும் கூம்பலும் இல்லாத அறிவுத் திறத்தால் முதன்மையாக இந்த நாட்டிற்கு உங்களையும் உங்கள் உழைப்பினையும் அளித்து வருகிறீர்கள். நாடா வளமுடைய விரிந்த, மிகப்பரந்த நாடு இது என்றாலும், அதன் இன்றைய தேவைக்கு ஏற்ற பணிகளை நீங்கள் செய்து வருவதால் அரசும் மக்களும் மதிக்கும் பெருமைக்கு உரியவர்களாக விளங்குகிறீர்கள். செல்வச் சிறப்புடைய நாட்டமைவில் புற வளங்களை எல்லாம் நீங்கள் பழுதறப் பெற்று வசதியோடு வாழ்கிறீர்கள் என்றாலும், மேலைநாட்டாரைப் பொதுவாகப் பற்றியுள்ள ஒருவகை ஏக்கம், ஏதோ ஒரு தாகம் உங்களிடம் இருப்பது போல நான் உணர்கிறேன்.

புறநாகரிகத்தில் பெற்றுள்ள வளர்ச்சி, வசதி போல, உங்களது அகநாகரிகத்தில், பண்பாட்டுப் பின்னணியில், ஆன்மிக நாட்டத்தில், கலை நலத் தேட்டத்தில் எல்லாம் ஒரு முழுமை வேண்டுமென நாடி நிற்பது புலனாகிறது. அப்புலப்பாடே இம்மூன்று நாள் தமிழியல் விழாவினை நடத்த உங்களைத் தூண்டி வருகிறது எனக் கருதுகிறேன்.

திருக்குறள் உலகப் பொதுமறை, திருமால் விசுவரூபம் எடுத்து இம்மண்ணுலகை ஓரடியாலும், விண்ணுலகை மற்றொரு அடியாலும் அளந்தார் என்பது போல, வள்ளுவர் குறுகத் தரித்த குறளடிகளால், மாந்தரின் அக உலகை, உணர்வை எல்லாம் அளந்தறிந்து வழங்கியுள்ளார்.

எல்லா மனிதர்க்கும், எக்காலத்திற்கும் பொருந்துவன வாகிய, வாழ்க்கைத் தத்துவங்களைக் கொண்ட திருக்குறளை, அது பிறந்த மண்ணுக்கு உரியவர்கள் அடிக்கடி மறந்து போனாலும், பிற நாடுகளில் வாழ்பவர்கள் உச்சி மேல் வைத்துப் போற்றுகின்றனர்; இயன்ற வரை குறள் நெறிகளைப் பின்பற்றிப் பிறர் மதிக்கவும், வியக்கவும் வாழ்கின்றனர்.

இந்த நாட்டில் உள்ளோர் மதிக்கவும், இங்கே வந்து போகும் எங்களைப் போன்றோர் வியக்கவும் நீங்கள் வாழ்வதைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் கடின உழைப்பையும் இடையறா முயற்சியையும் நெஞ்சுவக்கப் பாராட்டுகிறேன். இந்த நாட்டு மக்களுக்கு இயல்பாகவே செல்வ ஆதாரங்கள் பெருகிக் கிடப்பதால், அவர்கள் ஓரளவு உழைத்தே அதிகம் சம்பாதித்து விடுகின்றனர். இங்கு வந்து வாழும் நீங்கள் ஓய்வு நேரத்தையும் குறைத்துக்கொண்டு அவர்களுக்குப் போட்டியாக ஓடிஓடி உழைக்கிறீர்கள் எனக் கேள்வியுற்றுச் சிந்தை அயர்ந்தேன். ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ எனும் வினாவுக்கு நீங்களே உரிய விடையாக விளங்கு கிறீர்கள். இந்த உழைப்பின் தரமும், திறமும் தாய்த் தமிழ்நாட்டவர்களுக்கும் பாடமாக அமையவேண்டும் என ஆசைப்படுகிறேன்.

மேற்கொண்ட துறை எதுவாயினும், தொழில் எதுவாயினும் அதிலெல்லாம் தலைமையும் பெருமையும் பெற்றுத் துலங்குகிறீர்கள். எங்களால் திருக்குறள் அறியப் படுவதைவிட, உங்களைப் போன்றோரால் அது செயல் வடிவில் பரப்பப்படுவது, நிலையான பெருமையினைப் பெற்றுத்தரும். செயலுக்கு வராத நூலால் பயனில்லை; செயலாக்கம் கொண்ட மக்கள் போற்றாத இலக்கியம் வளர்வதில்லை. போலியான – ஆசாரப் புகழ் – ஒரு நூலுக்கு நூற்றாண்டு வாழ்வைத் தரமாட்டாது.

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ எனப் பாரதியார் பாடினார். முதன்முதலாகத் திருக்குறளை, மேலைய உலகிற்கு வழங்கி அறிமுகப்படுத்தும் பணியைக் கூட நாம் செய்யவில்லை. தமிழ் உணர்வறிந்த மேலை நாட்டறிஞர்கள் எடுத்துச் சொன்ன பின்னரே திருக்குறள் பல மொழிகளில் உலகறியத் தொடங்கியது.