என்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2

Image result for thirukkural“இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

     உணர விரித்துஉரையா தார்”               (650)

படித்ததை சிரமப்பட்டு விளக்கிச் சொல்லி அதைப் பரப்புவதும் சிரமமானது. கொத்தாக மலர் மலர்ந்திருக்கிறது. அந்த மலர்கள் மணம் வீசாத காகிதப் பூக்களாக இருந்தால் பயனில்லை இவைகளையெல்லாம் தெரிந்தும், பிறர்க்கு உணர்த்தியும், சிரமப்பட்டு தாம் படித்ததை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழாமல் போய்விட்டால் அவன் பேதையிலும் பேதை என்கிறார் வள்ளுவர். ஆகவே திருக்குறளைப் படிக்கின்ற நோக்கமே அதை வாழ்வியல் நூலாக, வருகின்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடியதாக இருப்பதுதான் என்பதைக் கண்டேன்.

சான்றாக சில உதாரணங்களைக் கூறுவேன். திருக்குறள் எப்படி எல்லாம் என் வாழ்க்கையில் பயன்பட்டது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு மனிதன் சிறப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அவன் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும். எனது திருமணம் என் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

ஒரு குடும்பம் வெற்றி பெற வேண்டும் எனச் சொன்னால், நல்ல மனைவி, நல்ல மக்கள், நல்ல நண்பர்கள், நல்ல சான்றோர்கள், நல்ல எண்ணம் இவையெல்லாம் அமைந்திருந்தால் தான் அந்த குடும்பமும் அவனும் சிறப்பாக இருக்க முடியும்.

“இல்லதென் இல்லவள் மாண்பானால்?”     (53)

என்ற வகையிலே எனது துணைவியார் அமைந்திருந்தார். எனது வாழ்க்கையின் அனுபவத்தைச் சொல்வதானால் அடக்கமாகச் சொல்கிறேன். குழந்தைகளெல்லாம் அன்பு மிகுந்தவர்களாக இருந்தார்கள். மாலையில் பேசிக் கொண்டிருக்கும்பொழுது ஆதித்தனார் ஒரு சிறந்த செய்தி சொன்னார்; ஆண்குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் அன்பாக இருப்பார்கள் என்றார். அந்த அன்பைப் படித்திருக்கிறோம். திருக்குறளில் படித்ததை வாழ்வில் அனுபவிக்கும் பொழுதுதான் அதன் பெருமையை உணர்ந்தேன். இரண்டு ஆண்டுகளுக்குமுன் நான் அப்பல்லோ மருத்துவமனையில் நலிவுற்று இருந்த பொழுது பிள்ளைகளும் துணையாக இருந்தார்கள். நான் ஒரு சிறு அசைவு அசைந்தாலும் உதவிக்கு வந்து விடுவார்கள். பத்து நாட்கள் அவர்கள் இருந்து உதவிகள் செய்தது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. கடைசியில் தான் தெரிந்தது. அவர்கள் தூங்கவே இல்லை என்பது, அந்த அன்பினது பெருக்கை அப்பொழுது தான் உணர்ந்தேன் என்னை அறியாமலே கண்களில் நீர் வடிந்தது.

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்

     புன்கண்நீர் பூசல் தரும்”        (71)

துன்பம் வந்த சமயத்திலேதான் என் குடும்பத்தினர் உறுதுணையாகவும், நெகிழ்ந்தும் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். துன்பம் வரும் பொழுது நெருக்கமான வர்கள் அன்பு காட்டும் சமயத்தில்தான் அன்பின் உண்மைப் பொருளை, அன்பின் உயிர்ப்பை நன்றாக உணரமுடிகிறது.

இதுபோன்று பிரச்சினைகள் வருவது இயற்கை எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரி மிகப்பெரிய அரசனாக இருந்தாலும் சரி, பெரிய செல்வந்தனாக இருந்தாலும் சரி. துன்பங்கள் வரும். இன்பம் போல துன்பமும் இயற்கையானது. அந்தத் துன்பத்தை வெல்லுவதற்கு வழி சொல்கிறார் வள்ளுவர்.

“இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்

     கையாறாக் கொள்ளாதாம் மேல்.”     (627)

எவ்வாறு இன்பம் இயற்கையானதோ அவ்வாறு துன்பமும் இயற்கையானது. இன்பமும், துன்பமும் இரவு பகல் போல வரும். வாழ்க்கையிலே துன்பத்தைக் கண்டு அஞ்சாதே என்ற தைரியத்தைக் கொடுக்கிறார், அந்தத் துன்பத்தை வெல்லுவதற்கு வழி சொல்கிறார் வள்ளுவர்.

“இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்

     ஒன்னார் விழையும் சிறப்பு”          (630)

இன்னாமையையே இனிமையாக்கிக் கொண்டால், அதையே சுவையாக்கிக் கொண்டால் துன்பம் உங்களை விட்டு ஓடிவிடும். உயர்வுக்கு அடிப்படையாவது நல்ல பேச்சும், நல்ல எண்ணமும், நல்ல சொல்லும்தான் அத்தகைய தூய உள்ளம் இருந்தால் மிகப்பெரிய ஆற்றல் கிடைக்கும் அந்த ஆற்றலைக் கொண்டு எல்லாத் துன்பங்களையும் வென்றுவிடலாம்.

“வெள்ளத்து அனைய இடும்பை அறிவுஉடையான்

 உள்ளத்தின் உள்ளக் கெடும்”   (622)

உள்ளத்தால் நினைத்தாலே துன்பங்கள் ஓடிவிடும் என்று சொல்கிறார் வள்ளுவர். அப்படியானால் இந்த வாழ்க்கையில் வெற்றியடைய வள்ளுவர் என்ன சொல்கிறார்?

நம்மைக் காட்டிலும் ஒரு பேராற்றல் இருக்கிறது அது நமக்கு வழிகாட்டுகிறது என்பதை உணர்ந்தேன் முதலில் நான் இறைமறுப்புக் கொள்கையைத்தான் பேசிக் கொண்டிருந்தேன்; அனுபவமின்மையால் அறிவுப் பூர்வமாக ஒரு தருக்கம் என்ற முறையில் நான் பேசிக் கொண்டிருந்தேன். காலப்போக்கில் துன்பங்களும் சோதனைகளும் வரும் சமயத்திலேதான் நன்றாகக் கண்டு கொண்டேன். நம்மைக் காட்டிலும் மிகப்பெரிய ஓர் அற்புதமான சக்தி நம்மை வழி நடத்துகிறது. என்பதை உணர்ந்தேன். துன்பத்திலிருந்தும், துயரத்திலிருந்தும் நீங்க வேண்டும் என்று சொன்னால், ஒரு பெரிய சக்தியை, பரம்பொருளை அது எந்தத் தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று கருதினேன். அதைத் தான் திருவள்ளுவர் சொல்கிறார்.

‘நீ உவமை உள்ளவன், சிற்றறிவு உள்ளவன். இறைவன் பேரறிவாளன், நீ பேரறிவாளனாகிய இறைவன்தாளைப் பற்றிக் கொண்டால்தான் அந்தத் துன்பத்திலிருந்து நீங்க முடியும்.’

“தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

 மனக்கவலை மாற்றல் அரிது”        (7)

இடும்பைக்கு இடும்பை படுத்த வேண்டும் என்று சொன்னால் இறைவன் தாளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

“வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

 யாண்டும் இடும்பை இல”          (4)

‘விருப்பு வெறுப்பு இல்லாத இறைவன் தாளைப் பிடித்தால் தான் உனது துன்பத்தை நீக்க முடியும்’ என்று வள்ளுவர் சொல்கிறார்.

ஆகவே இறைவன் எங்கு இருக்கிறான்? வேறு எங்கும் இல்லை. நம் உள்ளத்தில்தான் இருக்கிறான். அவனைக் கண்டுபிடித்து அவன் தாளினைச் சரணடைந்தால்தான் வெற்றிபெற முடியும் என்று சொல்கிறார் வள்ளுவர்.

திருவாசகத்தில் மனம் உருகும்படி மாணிக்கவாசகர் சொல்கிறார்:

யான்உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

     எங்குஎழுந்து அருளுவது இனியே?”

தெய்வத்தைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டோம் என்று சொன்னால் உள்ளொளியைப் பெருக்கலாம், உலப்பிலா ஆனந்தம் பெறலாம்.

இறைவன் பிரபஞ்சத்தில் உள்ள ‘மேக்ரோ’. அதை ‘மைக்ரோ’வாக உள்ளத்தில் பிடித்துக் கொண்டோமானால் அவன் நமக்கு அருள்புரிவான்.

குடும்பமும் தெய்வமும் ஒன்றுதான். தெய்வத்தைப் போற்றினோமானால் குடும்பம் வெற்றி பெறும். குடும்பம் வெற்றி பெற்றதானால் நாம் வெற்றி பெற்றவர் ஆவோம்.

அன்புநெறியைப் பார்க்கிற சமயத்திலே,

“அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து

     இன்புற்றார் எய்தும் சிறப்பு”         (75)

என்பதனை என் வாழ்வில் நேரிடையாகக் கண்டேன். என்னுடைய பிள்ளைகளையும் குடும்பத்திலே அன்பு கொண்டிருக்கிற தாய் தந்தையரையும் பார்க்கின்ற சமயத்திலே, அவர்கள் காட்டும் அன்பைப் பார்க்கின்ற சமயத்திலே திருவாசகம்தான் நினைவுக்கு வருகிறது.

நாம் தெய்வத்தை வணங்குகின்ற சமயத்திலும் குடும்பத்தைப் போற்றுகின்ற சமயத்திலும் ஒரு சதுரப்பாடு உடையவர்கள் ஆகிறோம் என்பதைத் திருவாசகமும் காட்டுகிறது; திருவள்ளுவரும் காட்டுகிறார்.

இலக்கியங்களைப் படிக்கும் போது அதனைச் சுவைக்கு மட்டும் படிக்கவில்லை என்பதை நேரிடையாகக் கண்டு உணர்ந்தேன்.

“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

     மழலைச்சொல் கேளா தவர்”         (66)

என்பதையும்,

“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

     சிறுகை அளாவிய கூழ்”        (64)

என்பதையும் திருமணமான பிறகு நன்கு உணர்ந்து கொண்டேன். நம்முடைய குழந்தைகள், பேரக் குழந்தைகள் வந்தபோது அவர்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்று சொன்னாலே அது அமிழ்தினும் பெரிதாக இருப்பதை உணர்ந்தேன் அதை எல்லாம் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் உணர்ந்திருப்பீர்கள். கல்கண்டு இனிப்பு அது இனிக்கும் என்பது தெரியும் எப்படி இனிக்கும் என்பது சாப்பிட்டு அனுபவித்தால் தான் தெரியும். திருக்குறளில் வள்ளுவர் நெகிழும்படி சொன்னவைகளையெல்லாம் உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறேன்.

நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம் கணினி யுகத்தில் வாழ்கிறோம். ‘இண்டர்நெட்’ உலகத்தில் வாழ்கிறோம். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இப்போது இருக்கும் ‘கம்யுனிகேசன்’, இப்போது பேசப்படுகின்ற ‘ஃபியூச்சாரலஜி’, ‘டெலிகாம் பவர்’ எல்லாம் இருந்ததா? நிறைய நேரம் மட்டும் கிடைத்தது.

திருவள்ளுவர் தொழில் செய்யக்கூடிய உத்திகளை யெல்லாம் சொல்லித் தருகிறார். ‘மேனேஜ்மென்ட் கான்சப்ட்’ என்று சொல்லக் கூடியவைகளை எல்லாம் சொல்கிறார். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் உலகநாடுகளெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் அருமையான உண்மையைச் சொன்னார். அவர் திருக்குறளின் மீது அதிகமான ஈடுபாடு கொண்டவர். “என் வாழ்க்கைக்குத் திருப்புமுனையாக அமைந்தது குர்ஆனும் திருக்குறளும் தான். என்னை உயர்த்தியதும் இவைகள் தான்” என்று கூறிவிட்டு, அதற்கான காரணங் களையும் சொல்லி இருக்கிறார்.

ஒரு நாடு சிறப்பாக இருப்பதற்கு அடிப்படையான உண்மைகள் ஐந்து வேண்டும் என்று கூறினார் வள்ளுவர்.

“பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்

     அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து”         (738)

இது உலக நாடுகளில் எல்லாம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது ஒரு மனிதனுக்கும் பொருந்தும், ஒரு நாட்டுக்கும் பொருந்தும். ஒரு மனிதனை வாழ்த்தும்போது, ஆகியன வாய்க்க வேண்டும் என்பார்கள். உடல் பிணியும் உள்ளப் பிணியும் இல்லாமல் இருக்க வேண்டும். சொத்து இருக்க வேண்டும். சொத்திருந்தால் மட்டும் போதாது அதற்கு லாபம் இருக்க வேண்டும். பிரொடக்டிவிட்டி இருக்க வேண்டும். பொது மகிழ்ச்சி (சோசியல் ஹேப்பினஸ்) இருக்க வேண்டும். அக மகிழ்ச்சி இருக்க வேண்டும். மக்களுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும் நாட்டுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும். இது நாட்டுக்கும் பொருந்தும். ஒரு தனி மனிதனுக்கும் பொருந்தும். இந்த அருமையான குறளை அப்துல் கலாம் மேற்கோள் காட்டிப் பேசினார். இன்று ‘டெலிகேசன் ஆஃப் பவர்’ என்று சொல்கிறோம். ‘செலக்சன் ஆஃப் பர்சன்’, ‘ஃபியூச்சரலாஜி’ என்று சொல்லுகிறோம். இவைகளையெல்லாம் திருவள்ளுவர் சொல்லுகிறார் என்பதைப் பார்க்கிற சமயத்திலே நான் அதிசயித்துப் போனேன்.

ஒரு தொழில் நடத்துவது எப்படி? எவ்வாறு திட்டமிடுவது? எவ்வாறு நபர்களைத் தேர்ந்தெடுப்பது? மிகச்சிறப்பாக வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ‘டெலிகேசன் ஆஃப் பவர்’ என்பது அமெரிக்காவில் உள்ள திட்டம். அதைப் பயன்படுத்திக் கொள்கிறோம். மிகப்பெரிய புரஃபொசனலிஸ்ட்-ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும் அந்த புரஃபொசனலிஸ்ட்டிடம் முழுமையாகப் பொறுப்பை ஒப்படைத்து விடவேண்டும். அப்போதுதான் அந்த தொழில் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். இதனைத் திருவள்ளுவர் அப்பொழுதே சொல்லியிருக்கிறார். பொதுவாக ஙி.ஙி.கி., வி.ஙி.கி., படிக்கிற பொழுது 5 றிs சொல்லுவார்கள்: பாலிஸி, பிளானிங், பெர்சனல் புரகிராம், ப்ரொசீஜர்ஸ், ஃபெர்பார்மன்ஸ்.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

     அதனை அவன்கண் விடல்”          (517)

என்னும் வள்ளுவம் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.

ஒரு காரியத்தை முடிப்பதற்கு ‘டெலிகேசன் ஆஃப் பவர்’ ஒருவனைத் தேர்ந்தெடுத்தபிறகு அதனை அவனிடம் விட்டுவிடு என்கிறார். சரியான நபரைத் தேர்ந்தெடுக்கும் முன்னரே அவரை நம்பிவிடாதே என்கிறார்.

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

     தீரா இடும்பை தரும்”               (510)

“தேறற்க யாரையும் தேராது; தேர்ந்தபின்

     தேறுக தேறும் பொருள்”       (509)

ஒருவரை ஆராய்ந்து எடுத்தபிறகு அவரைக் கண்காணிக்க வேண்டுமே தவிர தலையிடக்கூடாது. ஒருசெடி வளரும் போது அதனைத் தோண்டி வேர் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று பார்ப்பது போல் ஆகிவிடும்.

“வினைக்குஉரிமை நாடியபின்றை அவனை

     அதற்குஉரிய னாகச் செயல்”         (518)

என்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1

என்னைச் செதுக்கிய நூல்*

Image result for thirukkural

எனக்கு வந்தவுடனே ஒருவிதப் பெரிய திகைப்பு. இந்த இனிய மாலைப்பொழுதில் என்னைப் பற்றி அன்பின் காரணமாக அளவுக்கு மீறிப் புகழ்ந்து உரைத்தார்கள். இங்கே அமர்ந்திருப்பவர்கள் பல துறைகளில் சிறப்புப் பெற்றவர்கள்; பெரும் பேராசிரியர்கள். கற்றோர் முன் பேசுகின்றபொழுது பிழை ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது. இருந்த போதிலும்கூட பிள்ளையைத் தந்தை பார்த்து மகிழ்வது போல நான் பேசுகின்ற சொல்லைச் செவிமடுத்து என்னை வாழ்த்து வார்கள் என்று கருதுகிறேன். சாகித்திய அகாதெமி கொடுத்திருக்கிற இந்தப் பெருமை என்றும் நினைந்து மகிழ்வதற்கு உரியது. இதனை நான் மிகப்பெரிய பேறாகக் கருதுகிறேன்.

இந்நாள் எப்படி அமைந்திருக்கிறது பாருங்கள்: 9-9-2007. இதைக் கூட்டினால் 9 வருகிறது. எப்படிக் கூட்டினாலும் 9 தான் வருகிறது. ஆகவே இந்த நாள் என் மனதில் இருந்து நீங்காது. இது ஒரு பசுமையான நினைவுகளைச் சுமந்திருக்கும்.

‘என்னைச் செதுக்கிய நூல்கள்’ என்று சாகித்திய அகாதெமி நண்பர்கள் தலைப்பு கொடுத்திருக்கிறார்கள். செதுக்கிய என்று பார்க்கிற சமயத்திலே அது ஒரு சிற்பமாகத்தான் இருக்கும். ஒரு பாறை இருக்கிறது. அதனை ஒரு சிற்பி சிலைவடிக்க நினைக்கிறார். சிற்பம் வடிக்க நினைக்கிறார். மிகச்சிறந்த பாறையைத் தேர்ந்தெடுக்கிறார். அதில் ஒரு சிறந்த அழகிய உருவத்தைக் காணுகிறார். அந்தப் பாறையில் வேண்டாத பகுதியை நீக்கிவிடுகிறார். அங்கே அழகிய சிற்பம் கிடைக்கிறது. அதற்கு எந்த உளியைப் பயன்படுத்துகிறார்? கலைநயத்தை, கற்பனையை, அறிவை, அனுபவத்தைப் பயன்படுத்தி மன ஒருமைப்பாட்டுடன் அந்தச் சிலையை வடிக்கிறார். பாறையில் உள்ள வேண்டாத பகுதியை நீக்கியவுடனே, அழகிய சிற்பம் அமைந்து விடுகிறது. அதுபோல வாழ்க்கை ஒரு பாறையாக இருந்தால் அதில் வேண்டிய பகுதிகளை வைத்துக் கொண்டு, வேண்டாத பகுதியை நீக்கிவிட்டால் அழகிய வாழ்க்கை என்னும் சிற்பம் அமைந்து விடும் என்பதைச் சுட்டிக் காட்டுவது போல இந்தத் தலைப்பை மிகச் சிறப்பாகக் கொடுத்திருக் கிறார்கள்.

ஒரு மனிதனை உருவாக்குவது எது? சந்தர்ப்பமா? சூழ்நிலையா? எது அவனை உருவாக்குகிறது? ஒரு வித்து இருக்கிறது. அதை நல்ல விளைநிலத்தில் போடுகிறோம். நல்ல விளைநிலத்தில் போடுகின்ற சமயத்திலே அங்கு அந்த விதை தன்னை முளைவிட்டுக் காட்டுகிறது. அந்தச் செழிப்பு மண்ணுடைய செழுமையைக் காட்டுகிறது. எந்த விதை போட்டோமோ அந்த விதை தன் கருவை வெளிப்படுத்துகிறது. ஆகவே சூழ்நிலையும், சந்தர்ப்பமும் ஒரு விதையின் தோற்றத்தை மண்ணிற்கு ஏற்ப மாற்றி விடுகிறது. ‘விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?’ மாம்பழ விதை போட்டால் மாமரம் கிடைக்கும். பலா விதை போட்டால் பலாமரம் கிடைக்கும். எந்தக் கனி விதையைப் போடுகிறோமோ அந்தக் கனி மரம் கிடைக்கும். ஆகவே மனிதனைச் சூழ்நிலையும், சந்தர்ப்பமும் உருவாக்குகின்றனவா என்றால் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் உருவாவதற்குத் துணைபுரிகின்றனவே தவிர அவனை உருவாக்குவதில்லை அதுதான் ஒருமனிதனுடைய குலச்சிறப்பு.

“நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும்

     குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்” (959)

இங்கே நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டியது: சாதி என்பது வேறு. குலம் என்பது வேறு. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன திருவள்ளுவர், குலச்சிறப்பு சொல்லுகின்ற பொழுது எந்தச் சாதியில் பிறந்தாலும் எங்கே பிறந்தாலும் சரி ஒரு பாரம்பரியம் என்று சொல்கிறோமே, அதுபோல பாரம்பரியச் சிறப்பு உடையவர்களுக்கு இயல்பாகவே சில பண்பாடுகள் அமைந்திருக்கும். அவர்களிடம் ஒழுக்கம், நேர்மை, பிறர்க்கு உதவுதல், அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் என்ற சான்றாண்மைப் பண்புகள் மரபு வழியில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட குடும்பங்கள் தனிச்சிறப்புடையனவாக இருக்கும். அதனால் குலச்சிறப்பு என்பது முக்கியமான ஓர் உண்மை. அதுமட்டுமல்லாமல் பழகுகின்றவர்கள், படித்த புத்தகங்கள், சார்ந்து இருப்பவர்கள் இவைகளெல்லாம் ஒருவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில் எனக்கு ஒரு மகிழ்ச்சி என்னவென்று சொன்னால் நான் வரலாற்றைச் சொல்லுகின்ற அளவுக்குப் பெருமையுடையன் அல்ல இருந்தாலும் இந்த நேரத்தில் சொல்வது பொருந்தும் என்பதனால் சில செய்திகளை நான் சொல்ல விரும்புகிறேன்.

என்னுடைய கிராமத்தில் இருந்த எனது தாத்தா ஓர் அருளாளராக இருந்தார். அவர் செல்வாக்கு உடையவராக இருந்தார். ஆசுகவி என்ற பட்டம் பெற்றவராக இருந்தார். அதுபோல என் தந்தையும் அதிகம் படிக்காதவராக இருந்தாலும் கூட ஓர் அருளாளராகவும் பிறர் நலம் பேணக் கூடியவராகவும் இருந்தார். ஏறக்குறைய 150 ஆண்டுகள் என்று சொல்லலாம். அவர்கள் நிறைய அறப்பணிகள் செய்தார்கள். சிவன் கோயில் ஒன்று, பெருமாள் கோயில் ஒன்று, குளம் ஒன்று கட்டினார்கள். இப்பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்கள்.

அந்தப் பாரம்பரியப் பண்புகள் என்னை அறியாமலே என்னுள் வித்திட்டு இருக்கின்றன என்று நான் கருதுகிறேன். நான் உருவாவதற்கும் திருக்குறளில் ஈடுபாடு கொள்வதற்கும் இயல்பாகவே அவர்களுடைய வித்தில் இருக்கக்கூடிய கரு எனக்கு கிடைத்திருக்கிறது என நான் கருதுகின்றேன். ஆகவேதான் நான் வேறு துறையில் – பொருளாதாரத் துறையில் – படித்திருந்தாலும்கூட இயல்பாகவே இது அமைந்தது.

பாரம்பரியப் பண்பைப் பற்றி வள்ளுவர் சொல்லு கின்றபோது,

Image result for thirukkural

“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்

     உண்மை அறிவே மிகும்”            (373)

என்கிறார். உண்மை அறிவு என்பது பாரம்பரியமான அறிவு. அந்த வகையில் அந்தச் சிறப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்நேரத்தில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் உயர்வதற்கு அடிப்படையாக அவன் ஒரு சிறந்த வித்தாக இருக்க வேண்டும். சார்ந்தவன் சார்ந்த வண்ணம் உயர்வதாலே சார்ந்தவர்கள் சிறப்புடையவர் களாக இருக்க வேண்டும். அந்த வகையிலே என்னைச் சார்ந்தவர்கள் எல்லாம் சிறப்பைச் செய்திருக்கிறார்கள். சான்றாக, எனக்கு சின்ன வயதிலே ஒரு சுயமரியாதை உணர்வு ஏற்பட்டது. எப்படி என்று சொன்னால் எனது தந்தை இயல்பாகவே என்னை அவன், இவன் என்று சொல்லமாட்டார். அவர் இவர் என்று தான் சொல்லுவார். அதுபோல ஆசிரியர்களும் அப்படித்தான். எல்லா மாணவர்களையும் அவன், இவன் என்று அழைப்பதில்லை. சின்ன வயதிலே எந்த விதச் செருக்கும் உண்டாகவில்லை. அதற்கு மாறாக, ஒரு பெருமிதம் ஏற்பட்டது. ஆகவே தன்மானத்தோடும் சுய மரியாதையோடும் இருப்பதற்கு அடிப்படையிலே என்னை அறியாமலே ஒரு பண்பாடு ஏற்பட்டது. ஆகவே ஒரு மனிதனை உருவாக்குவதற்கு அந்த வித்தினைச் சார்ந்தவர்கள், சிறந்தவர்களாக. சார்ந்த வண்ணம் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அதுபோல நான் படிக்கிற காலத்தில் எனது ஆசிரியப் பெருமக்கள் மிகச்சிறந்தவர்களாக இருந்தார்கள்.

“நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு

     இனத்துஇயல்பது ஆகும் அறிவு.”      (452)

என்பது போல சார்ந்தவர்கள் வண்ணமாக பெரியோர்களை துணைக் கொள்ளும்போது அவர்களின் நற்பண்புகள் எல்லாம் என்னைச் சார்ந்திருக்கின்றன. மேலும் மேலும்  சிற்றினம் சேராமல் பெரியோர்களைச் சார்ந்ததால் அந்தப் பெருமிதம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

சிந்தித்துப் பார்க்கிற சமயத்திலே ஒரு மனிதன்  பிறந்த குடும்பம்; அவன் சார்ந்திருக்கிற மனிதர்கள்; அவனது மிகச்சிறந்த ஆசிரியர்கள்; அவன் படித்த புத்தகங்கள் இவைகள்தான் ஒரு மனிதனை உருவாக்குகின்றன என்பதை அறியமுடிகிறது.

நமது ஐயா பேராசிரியர் தமிழண்ணல் இருக்கிறார். இவரை அறிமுகப்படுத்தியவர் பெரும்புலமை மிக்க பொய்சொல்லா மாணிக்கம் டாக்டர் வ.சு.ப.மாணிக்கம் அவர்கள். அவர்களைப் போன்ற பெரிய பேராசிரியர்கள் எல்லாம் என்னை உயர்த்தினார்கள். பேராசிரியர் சு.குழந்தைநாதன், பேராசிரியர் நமச்சிவாயம், பேராசிரியர் சுப.அண்ணாமலை, பேராசிரியர் நா.பாலுசாமி. இதுபோன்ற மிகச்சிறந்த அறிஞர் கூட்டம் என்னைச் சூழ்ந்திருந்தது.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது போல இந்த அறிஞர்களுடைய செல்வாக்கு எனக்கு மிகுதியாக இருந்தது. அது எனக்குத் தமிழ்மீது ஆர்வமும், பற்றும் ஏற்படுத்தியது. நான் மிகப்பெரிய தமிழ்த்துறையில் படித்தவனில்லை. இருந்தாலும் தமிழின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக இந்தப் பெருமையெல்லாம் கிடைத்திருக்கிறது எனக் கருதுகிறேன். அதிலும் இந்தப் பேராசிரியர்களின் பங்கு மிகச் சிறப்பானது.

அந்தக் காலத்தில் நான் மேடைகளில் பேசுகின்ற சமயத்திலே எல்லாம் பார்த்தேன். எங்கு சென்றாலும் தமிழறிஞர்கள் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவார்கள். அப்பொழுது எனக்கு ஓர் ஆசை வந்தது, ஏன் திருக்குறளை முழுமையாகப் படித்துவிடக் கூடாது என்று.

பள்ளி இறுதி வகுப்பு பயின்ற சமயத்திலேயே நான் 1330 திருக்குறளையும் முடிந்தவரை படித்துவிட்டேன். அதற்குப் பிறகு  திருக்குறள் எனக்குப் பெரும் துணையாக இருந்தது. உலகப் பொதுமறைக்கு நிகராக வேறு ஒன்றும் இல்லை என்பதை நன்றாகக் கண்டுகொண்டேன்.

திருக்குறளின் பெருமைகளை எல்லாம் நீங்கள் நன்றாக அறிவீர்கள். திரும்பத் திரும்பச் சொன்னாலும் பெருமை தரக்கூடிய வாசகம் இது.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

நாம் வள்ளுவரை உலகிற்குத் தந்தோம்; அவரிடம் இருந்து புகழை நாம் எடுத்துக் கொண்டோம்.

திருக்குறள் தமிழகத்தில் தோன்றினாலும் அது தமிழனுக்கு மட்டும் படைக்கப்பட்டது அல்ல அது உலகத்திற்குப் படைக்கப் பட்டது.

அதனால் தான் பாரதி மிகப்பெருமையாகப் பேசுகிறார்:

“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

 வள்ளுவர் போல் இளங்கோ வைப்போல்

 பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை,

 உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை”

திருக்குறளின் பெருமையைக் கேட்டுக் கேட்டு அந்தத் திருக்குறளே எனக்கு உயிர் மூச்சானது.

‘என்னைச் செதுக்கிய நூல்’ என்று பார்க்கும்போது திருக்குறள் ஒன்றை முழுமையாகப் படித்துவிட்டாலே அத்தனை நூல்களையும் படித்ததற்குச் சமம் என அறிந்து கொண்டேன்.

சில ஆண்டுகளுக்குமுன் ‘உலகத் திருக்குறள் பேரவை’ சார்பாக மூன்று நாள் கருத்தரங்கம் நடத்தினோம் அது. ‘உலக அரங்கிலே திருவள்ளுவர்’ என்ற தலைப்பிலே நடைபெற்றது. அதில் மார்க்கஸ் அரேலியஸ், சாக்ரடீஸ், சுக்கிரநீதி, பெரியார், கீதை, நாராயண குரு எனப் பல அறிஞர்களுடன் அறநூல்களுடன் எல்லாம் ஒப்பீடு செய்து அறிஞர்கள் பேசினார்கள். அவர்கள் பேசியதைக் கேட்டபொழுது, எல்லாவற்றிலும் திருவள்ளுவர் விஞ்சி நிற்கிறார் என்பதை உணர முடிந்தது.

திருவள்ளுவர் ஒருவரைப் படித்துவிட்டாலே, திருக்குறளின் 133 அதிகாரங்களைப் படித்து விட்டாலே 133 புத்தகங்களைப் படித்ததற்குச் சமம். இதைவிடச் சொல்வதற்கு ஒன்றில்லை. எல்லாப் பொருளும் இதன்பால் உள என்று திருக்குறளை எனது உயிர் மூச்சாகக் கொண்டேன்.

திருவள்ளுவர் ஒருவர்தான் அக உலகை அளந்தவர் என ஒருவர் பாராட்டினார். உங்கள் எல்லோருக்கும் வாமன அவதாரத்தைப் பற்றித் தெரியும். வாமன அவதாரத்தில் திருமால் குள்ள வடிவினனாக வந்து மாவலி சக்கரவர்த்தியிடம் 3 அடி நிலம் கேட்கிறார். குள்ளம் என்றால் 1 1/2 அடி குறள் வடிவினனாக வந்தார். மாவலியும் குள்ளமானவன் என்பதனாலே மூன்றடியைக் கொடுத்தார். திருமால் விசுவரூபம் எடுத்து ஓர் அடியால் இந்தப் பரந்த மண்ணுலகையும் இரண்டாவது அடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் மூன்றாவது அடியை அவன் தலையில் வைத்து மாவலியின் அகந்தையை அழித்தார். திருமால் புற உலகை அளந்தார்; திருவள்ளுவர் அதே குறள் வடிவினால் அக உலகை அளந்தார். இதை அழகாக ஒரு புலவர் ‘திருவள்ளுவ மாலை’ என்ற புகழ் பெற்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார்.

வள்ளுவர் பாவடியினால் அளந்தார், திருமால் காலடியால் அளந்தார் திருமால் புறவுலகை அளந்தார், வள்ளுவர் அகவுலகை அளந்தார். இரண்டு பேரும் குறள் வடிவிலே அளந்தனர். திருமாலும் வள்ளுவரும் ஒருவரே என மிக அழகாகப் பாடுகிறார் புலவர். அந்த வகையில் அக உலகை அளந்த திருவள்ளுவர் மீது எனக்கு ஓர் உயிர்ப்பு ஏற்பட்டது. அது உயிர் மூச்சாக இருந்தது. திருக்குறளைப் படித்தாலே போதும், நம்முடைய வாழ்க்கை செம்மையாகும் என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்தேன். அனுபவங்கள்தான் வாழ்க்கையில் வள்ளுவத்தை மிகப்பெரியதாகக்  காட்டின.

முதலில் படிக்கின்ற காலத்திலே திருக்குறளின் பெருமை அவ்வளவு பெரியதாகத் தெரியவில்லை. வாழ்க்கையில் சிக்கல்களும் பிரச்சினைகளும் சோதனைகளும் வரும்பொழுது தான் திருவள்ளுவரின் அருமைகளை பெருமைகளை உணர முடிந்தது. திருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்று, நாம் வாழ்கின்ற காலத்திலும் இங்கு இருக்கக்கூடிய நிகழ்காலச் சிக்கல்களுக்கும் எதிர்காலச் சிக்கல்களுக்கும் தீர்வு காண்பவர்.

திருக்குறளைப் படிப்பது இலக்கியச் சுவைக்காகவோ, இன்ப நலத்திற்காகவோ மட்டும் இல்லை.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

 தெய்வத்துள் வைக்கப் படும்.”       (50)

என்கிற நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும் எனச் சொன்னால் திருக்குறள் ஒன்றைப் படித்தாலே போதும் என்ற உணர்வோடு திருக்குறளின் மீது எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. திருக்குறளில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை எனக் கண்டு கொண்டேன். அதுபோல வாழ்க்கையில் பிரச்சினை என்று வரும் பொழுது (எனது அனுபவத்தைச் சொல்கிறேன்) திருக்குறளைப் புரட்டிப்பார்ப்பேன்; அதில் தீர்வு இருக்கும். எனக்கே வியப்பாக இருக்கும். இது மூட நம்பிக்கையாகக் கூட இருக்கட்டும். ஆனால் இந்த வகையில் தீர்வு என்ன என்பதைக் கண்டு பிடித்திருக்கிறேன்.

மகாத்மா காந்தி அவர்களை மாற்றியது எல்லாம் புத்தகங்கள்தான். ஜான் ரஸ்கின் எழுதிய ஹிஸீ ஜிஷீ ஜிலீமீ லிணீst என்ற புத்தகமும், அவர் பார்த்த அரிச்சந்திர நாடகமும் தான் காந்தியடிகளை மகாத்மா ஆக்கின.

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

     செய்யாமை செய்யாமை நன்று” (297)

என்பது வள்ளுவம். காந்தியடிகள் இரண்டு கொள்கைகளைக் கைக்கொண்டார்: அகிம்சை, கொல்லாமை. அந்த அகிம்சையையும், கொல்லாமையையும் திருவள்ளுவர் ஒன்றாகச் சொல்கிறார்.

“ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன்

     பின்சாரப் பொய்யாமை நன்று.” (323)

காந்தியடிகள் போற்றியது எல்லாம் உண்மையையும் நேர்மையையும் கொல்லாமையையும், அகிம்சையையும் தான். வீரனுக்கு உரியது என்று போற்றி, விடாது அவற்றைக் கடைப்பிடித்தார். அவர் வாழ்க்கையிலே மிகப்பெரிய திருப்பு முனைக்குக் காரணமாக இருந்தது புத்தகம்தான். அடிகள் சொல்கிறார்: “பிரச்சினைகள், துன்பங்கள் வரும் போதெல்லாம் என்னை மாற்றியது கீதை தான். எனது பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வைக் கீதையில் காண்பேன்.”

அதுபோல என்னுடைய வாழ்க்கையில் பிரச்சினைகள், துன்பங்கள் முன் வந்த பொழுது திருக்குறள்தான் முன்னின்றது. மிகச்சிறந்த புத்தகம் நம் கையில் இருக்குமானால் அது நம்மை உருவாக்குகிறது. சில புத்தகங்களை நாம் படித்திருக் கிறோம். ஆனால் அவற்றின் பெருமையை உணர்ந்திருக்க மாட்டோம்.

சில நூல்கள் படித்து அப்படியே மகிழ்வதற்கு மட்டும் இருக்கும். இலக்கியம் இலக்கியத்திற்கு மட்டும் இருக்கும் ஆனால் திருக்குறள் அப்படியல்ல. ஓதி உணர்வதற்கும் பிறர்க்கு உரைப்பதற்கும் உரிய நூல் அது.

“ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப்

     பேதையின் பேதையார் இல்”         (834)

என்பது வள்ளுவம்.

ஓதுவது சிரமம்; ஓதி உணர்வது அதை விடச் சிரமம்; உணர்தல் சிரமம்; உணர்ந்ததை உணர்ந்தபடியே சொல்வது அதை விடச் சிரமம்.

“இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

     உணர விரித்துஉரையா தார்”               (650)

படித்ததை சிரமப்பட்டு விளக்கிச் சொல்லி அதைப் பரப்புவதும் சிரமமானது. கொத்தாக மலர் மலர்ந்திருக்கிறது. அந்த மலர்கள் மணம் வீசாத காகிதப் பூக்களாக இருந்தால் பயனில்லை இவைகளையெல்லாம் தெரிந்தும், பிறர்க்கு உணர்த்தியும், சிரமப்பட்டு தாம் படித்ததை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழாமல் போய்விட்டால் அவன் பேதையிலும் பேதை என்கிறார் வள்ளுவர். ஆகவே திருக்குறளைப் படிக்கின்ற நோக்கமே அதை வாழ்வியல் நூலாக, வருகின்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடியதாக இருப்பதுதான் என்பதைக் கண்டேன்.

இலக்கியம் பேசி மகிழவோ

ஆக்க உரை*

‘இலக்கியம் பேசி மகிழவோ!’ எனும்  தலைப்பில் உரையாற்ற வருமாறு மதுரை வானொலி நிலையத்தார் விடுத்த  அழைப்பு என் சிந்தனையைக் கிளறிவிட்டது. ‘இலக்கியம் பேசி மகிழவோ!’ என என்னை மட்டுமின்றிப் பலரையும் கூவி அழைக்கும் பொது அழைப்பாக என் உணர்வுகளுக்கு வழி காட்டியது.

இளமை முதலே இத்தகைய வழியமைப்புக்களைப் பற்றி நிற்கும் வாய்ப்புக்கள் எனக்குக் கிட்டின. அவற்றைப் பெறற்கரிய பேறுகளாகக் கருதித் தடம் மாறாமல் நடக்க முயன்றேன். அழகப்பர் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றபோது அங்கு நிலவிய தமிழியக்கம் என்னையும் ஈர்த்தது. ‘அறம் பிழைத்தால்’ எனும் தலைப்பில் எழுதிய போட்டிக் கட்டுரையில் கிட்டிய பரிசு எனக்கு ஊக்கம் ஊட்டியது. திருக்குறளை ஆழமாகப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை என் மனதில் வேள்வித் தீயாக வளர்த்தது. திருச்சி சமால் முகமது கல்லூரியில் பொருளாதார முதுகலை கற்றபோதும் என் நினைப்பெல்லாம் உணர்வு எல்லாம் திருக்குறளையும் தமிழ் இலக்கியத்தையுமே வலம் வந்தன.

வணிக வாழ்வுக்கு ஆட்பட்டுப் பல்வேறு பொறுப்பு களுக்கு உட்பட்ட போதிலும் என்னுள்ளே இலக்கிய உணர்வுகள் மட்டும் மங்காமலே கனன்று கொண்டிருந்தன. திருக்குறள் பேரவை முதலிய இலக்கிய விழாக்கள், அறிஞர் பெருமக்களின் அரிய தொடர்புகள் என்பன எல்லாம் அந்த உணர்வுக்கனலை ஓங்கி எரியச் செய்தன. இந்த இலக்கிய எரிமூட்டம் எனக்கு எப்போதும் இதமளித்தே வந்தது.

இலக்கியம் ஆழ்ந்தகன்ற, என்றும் நிலைபெற்று வருகிற மனிதப் பண்புடன் தொடர்பு உடையது; மனிதனுடைய வாழ்வெனும் தத்துவத்திலிருந்து வடிவெடுப்பது; ஒருவரது அனுபவங்களையும் எண்ணங்களையும் பிறரோடு பகிர்ந்து கொள்ள வழியமைப்பது. அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் போது நம்மையும் அறியாமலே நமக்குள்ளே ஒருவகைக் கலைத்திறமையை உருவாக்கிட வல்லது.

நாம் அகம், புறம் எனும் இருவகை மனத்தோடு வாழ்கிறோம். விழிப்பும் கூர்மையும் உடைய, பொறிகளின் சார்புடைய புற மனத்திற்கு அடிமைப்படுவதே நம் வாழ்வில் பெரும் பகுதியாகப் போகிறது. உணர்ச்சியும் கற்பனையும் கலந்த அகமனதோடு உறவு பூண்டு ஆட்படுவது என்பது மிக அரிதாகவே கிட்டுகிறது. அக, புற மனங்களில் சமநிலை கண்ட சான்றோர்கள் அருளிய இலக்கியங்களைப் பேசி மகிழும்போதுதான் நமக்கும் ஒருவகைச் சமநிலை அமையும் வாய்ப்பு ஏற்படுகிறது. தொட்டனைத் தூறும் மணற்கேணியாகக் கற்றனைத்து ஊறும் அறிவு கிட்டுகிறது.

இத்தகைய வாய்ப்பினை வளரும் தலைமுறைக்கு எல்லாம் வழங்கக் காத்திருக்கும் இலக்கியச் செல்வங்கள் நம்மிடம் ஏராளமாக உள்ளன. என்றும் வாழும் இலக்கியமான திருக்குறளில் இச் செல்வங்கள், சிந்தைக்கினிய, செவிக்கினிய, வாய்க்கினிய, வாழ்வுக்கினிய வளங்களை எல்லாம் ஆக்கித்தர வல்லவையாக விளங்குகின்றன.

பயிலும்போது இன்பம் ஊட்டி, வாழும் முறைக்கு நற்பண்புகளால் வலிமை சேர்க்கும் திருக்குறள் முதலிய இலக்கியங்களைப் பிறரோடு பேசி மகிழ்ந்த நாற்கள் பலப்பல. ‘காற்றில் வைத்த கற்பூரம் போல’ இவை போய் விடக்கூடாதே எனக் கருதிய எனது கெழுதகை அன்பர் பேராசிரியர் சு.குழந்தைநாதன், நானும் அறியாமலே அவற்றை முயன்று தொகுத்து வந்தார். சிதறி உதிர்ந்த மலர்களை எல்லாம் என்றும் மணக்கும் மாலையாகக் கட்டித்தந்த பேராசிரியர்க்கு உளமார நன்றி பாராட்டுகிறேன்.

‘பாளையம் இல்லம்’ அடையாத நெடு வாயில் களைக் கொண்ட செழுங்குடிச் செல்வமனை. தளர்ந்து வந்தோரையெல்லாம் தாங்கி உயர்த்திய தமிழவேள், பி.டி.ராசன் அவர்களின் அருந்தவப் புதல்வர் – அறிஞர் பழனிவேல் ராசனார் – கல்விச் செம்மல்; காழ்ப்பு வெறுப்பற்ற கருணைப் பாங்கினர். என்னோடு இலக்கியம் பேசி வழிகாட்டிய அப்பேரறச் செல்வர் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருப்பது எனக்கு அமைந்த பெரும்பேறு. பழனிவேல் ராசனார்க்கு பணிவார்ந்த நன்றியுடையேன்.

தமிழ் மாமுனிவர் – தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு ஆயிரமாயிரம் அன்பர் குழாம் உண்டு; அதற்கு அப்பாலும் அடி சார்ந்த அடியவனான என்னைத் திருக்குறளால் பிணித்து அருள்பாலித்து ஆட்கொண்டார். வாழும் சமுதாயத்தையும் வாழ்விக்கும் சமயத்தையும் இரு கண்களாகக் கொண்ட அப்பெருந்தகை இந்நூலுக்கு ஆசியுரை நல்கத்திருவுளம் கொண்டார். அழகியதொரு அணிந்துரையைத் திறனாய்வாக வழங்கியுள்ளார். தெய்வ நலம் காட்டும் மாமுனிவரின் திருப்பாதம் பணிந்து நன்றி கூறுகிறேன்.

இலக்கியம் பேசி மகிழ்வதில் இணையற்ற நலம் காண வருமாறு அன்போடு அழைக்கின்றேன்.

முருகனுக்குப் புதியதொரு படைவீடு

முருகனுக்குப் புதியதொரு படைவீடு

Image result for London

கனடா நாட்டில் நான்கு நாள் பயணத்தோடு இலண்டன் வந்த எங்களைப் பத்து நாட்களாவது தங்கவைத்து விருந்து உபசாரம் செய்ய விழைந்த அன்பர்கள் விமான நிலையத்திற்கே வந்துவிட்டனர்.

இலண்டனில் அந்தப் பத்து நாட்களும் மூன்று முக்கிய நிறுவனத் தொடர்பைத் தந்தன. உலகப் புகழ் பெற்ற ஒய்.எம்.சி.ஏ. விடுதி, பி.பி.சி தமிழோசை, லண்டன் முருகன் திருக்கோவில்…

உலகில் மிகப்பிரபலமான மிகப்பெரிய நகரங்களில் ஒன்று லண்டன்; மிகமிக அழகிய நகரமும் அதுதான் என்றாலும், தேம்ஸ் நதி தீரத்தில் வீற்றிருக்கும் அந்த நகரின் அழகை விட, ஆங்கில அரசியல் நாகரிகப் பண்புகள், இலக்கியச் சிறப்புகள் ஆகியனவே என் நினைவில் நின்றன. அங்கில மொழிக்குச் செழுமை சேர்த்த சேக்ஸ்பியர், மில்டன், வேர்ட்ஸ்வொர்த், பைரன், கீட்ஸ், ஷெல்லி, டென்னிசன், டிக்கன்ஸ், பெர்னாட் ஷா, வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோரை மறக்க முடியுமா? நம்நாட்டுப் பள்ளிக்கூடப் பாட நூல்களை எல்லாம் நெடிது காலம் ஆட்சி செய்தவர்கள் அல்லவா இவர்கள்! அவர்களை ஆட்சி செய்ய வைத்த ஆங்கில மொழியின் இயல்பும், ஆட்சியால் அம்மொழியை உலகறியச் செய்த ஆங்கிலேயரின் இடைக்கால வெற்றி வரலாறும் நினைக்கத்தக்கவை. நம்மவர்களும் உலகத் தலைமைக்கு அடி எடுத்து வைத்த அந்த ஆதி நாட்களில் அப்படி முயன்றிருந்தால் – திருக்குறளும் அப்போதே உலக இலக்கியமாகி இருக்கும் என்பதும் கருதத்தக்கது.

உலகளாவிய தொண்டு நிறுவனமான ஒய்.எம்.சி.ஏ.- இல் சகோதரர் முத்தையா அன்பான வரவேற்பளித்தார். மதுரை மத்திய ஒய்.எம்.சி.ஏ-இன் பொதுச் செயலராக அவரும் அதன் செயற்குழு இயக்குநர்களில் ஒருவனாக நானும் பங்கேற்றிருந்த ஆண்டுகள், லண்டனில் இந்த உறவுப் பிணிப்பை ஏற்படுத்தித் தந்தன…..

உறவுப் பிணிப்பிற்கே உரிய பெரியவர், லண்டன் மெய்யப்பச் செட்டியார்! நம் செட்டிநாட்டுக் கோட்டையூர்  ஜவகர் ஆலை நிறுவனரான இப்பெருந்தகை – கலைத் தந்தை கருமுத்து தியாகராசர் குடும்பத்துச் சம்பந்தி முறையினர். எனினும் ‘லண்டன் மெய்யப்பர்’ என்பதே அவரது பிரபல விலாசமாகிவிட்டது!

அவர் ஆற்றி வரும் அரும் பணிகளில் முதன்மையானது- முருகப் பெருமானுக்கு லண்டனில் ஆலயம் அமைத்து, முருகனின் புதியதொரு படைவீடு போல அதைப் பேணி வருவது!

லண்டனில் வேறு சில இந்து சமய வழிபாட்டு இடங்களும் உள்ளன. ஸ்ரீ மகாலெட்சுமி கோவில், சிவன் கோவில் எனும் இரண்டும் குறிப்பிடத்தக்கவை. இவ்விரண்டை விட முருகன் கோவிலே பிரசித்தி பெற்று விளங்குகிறது.

1974-இல் ஹாரிங்டன் ஸ்குயர் எனுமிடத்தில் திருமெய்யப்பர் தொடங்கிய ஆலயத்திருப்பணி திரு.அழகர் ராஜாவால் ஆக்கம் பெற்று அற்புத ஆலயமாக எழுந்துள்ளது. புறத்தே எளிமையாகத் தோன்றினாலும் உள்ளே கலையம்சங்களும் தூய்மையும் ஆட்சி செய்கின்றன.

வள்ளி – தெய்வானை சமேதராக கந்தன் கருணை புரிகிறார். நம் நாட்டு முருகன் திருத்தலங்களில் நடக்கும் அத்தனை விழாக்களும் அங்கே நடக்கின்றன. சித்திரா பவுர்ணமியில் சுவாமி புறப்பாடு, வைகாசி விசாகப் பாலாபிசேகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை பத்து நாள் விழா, லண்டன் மக்களைக் கவரும் தேரோட்டம், ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஆங்கில வருடப் பிறப்பன்று (பால்குடம் உட்பட) பங்குனிப் பெருவிழா – என ஆண்டு முழுவதும் அங்கே முருகன் திருக்கோல வைபவம்தான் எனக் கேட்டறிந்து மகிழ்ந்தேன்.

இந்த ஆலயத்தில் – சுப்பிரமணியனான நான்! – (என் இயற்பெயர் அதுதான்!) ‘முருக வழிபாட்டுத் தொன்மை’ பற்றிப் பேசவேண்டும் என ஏற்பாடு செய்துவிட்டார் லண்டன் மெய்யப்பர்….

‘தமிழ்க் கடவுள்’ முருகனைப் பற்றிப் பேச, வந்த இடத்தில் திடீரென அழைக்கப்பட்டிருந்தேன். எனினும் சங்க காலந்தொட்டு முருகன் புகழ் பேசும் இலக்கிய நினைவுகள் கைகொடுக்கும் என நம்பியிருந்தேன்.

அகத்திய மாமுனிக்குத் தமிழைத் தந்த முருகன், ஔவைப் பிராட்டிக்கு ஞானம் புகட்டிய குமரன், குமர குருபரர் காசியில் தமிழ்ச் செல்வம் பரப்பிட அருளிய செந்தூரான், கிருபானந்த வாரியாரை – ‘திருமுருக’ எனும் முன்னிலைப் பெயரேற்று ஆன்ம நலம் பரப்ப அனுப்பிய குன்றுதோறும் கோலம் கொண்ட கடவுள்… காலம்தோறும் அன்பர்க்கெல்லாம் அருள் பாலிக்கிறான் அன்றோ! அப்படியொரு பரவசநிலை அன்று என்னுள் பரவியது!

முருகனை வழிபட்டபின் முருக வழிபாடு பற்றியே உரையும் விரிந்தது. வாழ்வில் மனித நேயமும் தெய்வநலமும் கைகூடி நின்றிட, மனம் மொழி செயல்களை அர்ப்பணிப்பதே வழிபாடு செய்வதன் நோக்கம். ‘மனிதப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே’ என வேண்டியிருந்தாலும் மனிதப் பிறவியின் இலட்சியம் மாசுபோல் அடர்ந்திடும் துன்ப நீக்கமே ஆகும். துன்பத்தை நீக்கும் எளிய இனிய வழி, இறைவனைச் சார்தலே என ஆன்றோர் அறிவுறுத்தினர்.

“தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

     மனக்கவலை மாற்றல் அரிது”   (7)

என வள்ளுவர் மனக்கவலைக்கு மருந்து சொன்னார்.

‘மனத்துக்கண் மாசிலன் ஆதலே’ அவர் கூறும் அனைத்து அறம். மனத்தில் அழுக்காறு, காமம், வெகுளி முதலிய ஆகாப் பற்றுக்களை, புற்றுகளாக வளர்த்துக் கொண்டு விட்டால், அந்த ஆகாப் பற்றுக்கள் நாளடைவில் அழிவுப் பற்றுக்களாகப் படர்ந்து விடுகின்றன.

வள்ளுவர் ‘பற்று’ என்றார். ‘ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்’ எனப் பின்வந்தோர் உபதேசம் செய்திருக்க, வள்ளுவர் ‘பற்றுகளே இல்லாதிருப்பவனான ஒருவனிடத்தில் கொள்ளுகின்ற பற்றினை நெகிழவிடாது பற்றுக!’ என்றார்.

அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் துறக்க வேண்டியன உண்டு; ஏற்கவேண்டியன உண்டு. குப்பையை அகற்றிய பிறகே வீட்டை அழகுபடுத்த முற்படுதல் போல்… மனத்திலும் வாழ்க்கையிலும் சேர்ந்துள்ள குப்பை போலும் தீய பற்றுக்களை அகற்றிய பின்னரே நன்மையை நாடும் மனச்சால்பு வளரும். நமது அறுசமயத் தொன்மை நெறிகளுள் ஒன்றான கௌமாரம் – இப்பற்றுறுதி வகைகளையே நமக்கு அருளுகிறது. திருமுருகாற்றுப்படையில் “தாமரை புரையும் காமர்சேவடி” என்று நக்கீரர் பரவியதும், “முருகா முருகா தருவாய் நலமும் திருவும்” என்று பாரதி பாடியதும் குன்றுதோறும் ஆடும் குமரனுக்குக் காலந்தொறும் நிகழ்ந்த பூசனைகள்… லண்டன் மாநகரிலும் அப்பூசனைகள் நிகழ்வது குமரனின் இளமைப் பொதுமையைச் சுட்டுகிறது… நம்மையும் இளமைக் கோலம் பெறச் செய்கிறது.

உரைகேட்ட அன்பர்களின் ஒருமித்த பாராட்டைப் போல லண்டன் மெய்யப்பர் அளித்த விருந்தும் மெய்மறக்கச் செய்தது! அந்த விருந்தில் கலந்து கொண்ட பேரன்பர் சங்கரண்ணாவின் தமிழ்ப்பணி லண்டன் செல்லும் தமிழர்களோடு உலகத் தமிழர்களிடையிலும் புகழோசையாகப் பரவியது.

பிக்பென் கடிகாரக் கோபுரம், பக்கிங்காம் அரண்மனை, நம்பர் டென் டவுனிங் ஸ்ட்ரீட் (பிரதமர் இல்லம்), பாராளுமன்றக் கட்டிடம், பல்கலைக்கழகம், பெரிய பொது நூலகம் (இந்தியா ஹவுஸ் லைப்ரரி இதில் ஓர் அங்கம்), பொருட்காட்சி, வெஸ்ட்மினிஸ்டர் ஆலயம் இவை எல்லாம் லண்டனை நினைவூட்டும் புகழ்ச் சாசனங்கள் இவற்றோடு உலகெல்லாம் தொடர்பு கூட்டி நிற்பது பி.பி.சி.!

உலகச் செய்தித் தொடர்புக் கலையில் முன்னிடம் பெறும் பி.பி.சியின் தமிழோசைப் பிரிவில் சங்கரண்ணா பணியாற்றுகிறார்.

சங்கரண்ணா – பி.பி.சி. தமிழோசையில் – இலக்கியப் பேட்டிக்கு ஏற்பாடு செய்தார். பேட்டி – திருக்குறள் பணிகளைப் பற்றியே அமைந்தது. “திருக்குறளில் இத்துணை ஈடுபாடு உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?…. மேடைகளில்  உரையாற்றும் பேராசிரியர்கள் தம் கருத்துக்கு ஆக்கமாகத் திருக்குறளை அவ்வப்போது மேற்கோளாக எடுத்தாண்டு  பேசுவது இயல்பு. ஆனால் சாதாரண உரையாடலிலேயே பேசும் விஷயத்திற்குப் பொருத்தமான குறட்பாக்களைச் சடுதியில் நினைத்துச் சொல்லும் ஆற்றல் உங்களுக்கு எப்படி வந்தது?” எனும் கேள்விகளுடன் பேட்டி தொடங்கியது.

“எனது திருக்குறள் ஈடுபாட்டு வளர்ச்சிக்கு உதவியவை இரண்டு; ஒன்று, நான் பெற்ற பேறு; மற்றொன்று எனக்கு அமைந்த வாய்ப்பு. என் தந்தை வழிப்பாட்டனார் – பெரியணர் ஒரு ஆசுகவி. மதுரைத் தமிழ்ச்சங்கப் பெரும் புலவர்களின் சாற்றுக்கவிகளைப் பெற்றவர். என் தந்தையார் நடராசரும் புலமைத்திறம் மிக்கவர். இறைமையில் இசைந்த இந்த இருபெரியோர்களின் மரபுவழிச் செல்வமாக வந்த தமிழ் உணர்வு எனக்கு அமைந்த ஞானப்பேறு. தமிழ் விழாக்களில் (அரங்கேறும் உரைகளை மனம் ஒன்றிக்கேட்பது இளமை முதல் எனக்கு அமைந்ததொரு வழக்கம் அவ்வாறு பேசுவோர் – இலக்கியமாயினும் சரி, சமூகவியல் காட்டியே பேசியது, இந்நூல் பற்றிய ஆர்வத்தை என்னுள் தூண்டியது. “திருக்குறளில் அப்படி என்னதான் உள்ளது?” எனத் துருவித் தேடும் நாட்டத்தை இவ்வாய்ப்புக்கள் ஏராளமாக எனக்கு வழங்கின. ஈடுபாட்டிற்கு உரிய காரணங்கள் இவையேதான்.

“இன்றைய உலகச் சிக்கல்களுக்குத் திருக்குறளில் தீர்வு காண இயலுமா?” எனும் கேள்விக்கு திருக்குறளின் ஞாலப் பழமையையும் அதன் காலப் புதுமையையும் எடுத்துக்காட்டி விளக்கம் சொன்னேன். “திருக்குறளை நீங்கள் எப்படிப் பயன் கொள்ளுகிறீர்கள்? சொந்த அனுபவத்திலிருந்து சொல்லுங்கள்!” என்பது பேட்டியில் அடுத்த வினா.

“லண்டனுக்குப் பயணமாக வந்துள்ள நான் சுற்றுலா – இலக்கிய அறிமுகம் ஆகியவற்றோடு என் தொழில் முயற்சிகளுக்கும் உரிய நேரம் ஒதுக்கிக் கொண்டுள்ளேன். இதற்கு நானறிந்த திருக்குறளே ஒரு சான்று:

பழகிய யானையின் துணையோடுதான் காட்டில் திரியும் புதிய யானையைப் பிடித்து வசக்கிக் கொணர முடியும். அதுபோல நமக்கு நன்கு தெரிந்த தொழில் அல்லது அன்பரின் உதவியோடுதான் மற்றொன்றையும் செய்து முடிக்க முடியும்.

“வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

     யானையால் யானையாத் தற்று”       (678)

என வினை செயல்வகையைக் கூறும் குறட்பா – எனக்கு- இலக்கியம் – தொழில் இரண்டிலும் இருமுகத் தொடர்பைக் கூட்டித் தந்துள்ளது. இப்படிப் பலருக்குப் பல குறட்பாக்கள் அனுபவ ஆக்கம் தரக்கூடும்.

தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள திருக்குறள் ஆராய்ச்சி மையத்தின் நோக்கும் போக்கும் பற்றிப் பேட்டி வலம் வந்தது. தமிழ் மாமுனிவர் தவத்திரு அடிகளார் திருக்குறள் நெறிபரப்பச் செய்துவரும் சீரிய தொண்டுகளைப் பட்டியலிட்டுச் சொன்னேன். அனைத்து தரப்பினரையும் உறவு கூட்டிப் பிணிக்கும் ஊடகமாகத் திருக்குறளை ஆக்கியவர் அடிகளார் என நினைவு கூர்ந்தேன்.

திறமான புலமையெனில் – வெளிநாட்டார் அதனை வணக்கம் செய்வார்கள் என்பதற்கு உரிய அரங்காக – பி.பி.சி. விளங்குவதையும் சங்கரண்ணா போன்றோரின் தொண்டினால் அதில் தமிழோசை ஓங்கி ஒலிப்பதையும் மனதாரப் பாராட்டி விடை பெற்றேன்.

மறுநாள் – தமிழகத்திலிருந்து தொலைச் செய்தி வந்திருப்பதாகச் சொன்னதும் ஓடிவந்து போனைக் கையிலெடுத்தேன் “நான்தான் குன்றக் குடியிலிருந்து தெய்வசிகாமணி பேசுகின்றேன்” என்ற குரல் என்னைத் திடுக்கிடச் செய்தது. பி.பி.சி. தமிழோசையை விடாமல் கேட்கும் வழக்கமுடைய தவத்திரு அடிகளார், எனது பி.பி.சி. பேட்டியைக் கேட்டு, மறுநாளே என்னைப் பாராட்ட போனில் அழைத்திருந்தார். இது எத்தகைய பேறு! திருக்குறளால் நான் பெற்ற பேறு அல்லவா?

பி.பி.சி. தமிழோசைப் பேட்டியே பயணத்தின் மணிமுடியாக அமைந்துவிட்டதால் அந்த முழுநிறைவோடு லண்டன் நகரைச் சுற்றிப் பார்க்க மனம் இடம் தந்தது.

திட்டமிட்டப்படி ஐரோப்பிய நாடுகளில் காஸ்மாஸ் எனும் சுற்றுலாக் குழுவோடு பத்துநாட்கள் சுற்றினோம். அந்நாடுகளின் வளர்ச்சியைப் பார்த்துப் பார்த்து வியந்தோம்.

அந்த வியப்புச்சுவடு மறைவதற்குள் துபாய், அபுதாபி எனும் சுவர்க்க பூமியில் நான்கு நாட்கள் சுற்றிப் பார்த்தோம். சகோதரர் அல்ஹாஜ் முகமது பாருக். தேவிபட்டினச் செம்மல் – தொழிலொடு அங்கு தமிழும் வளர்க்கும் தூய நெஞ்சராக விளங்குகிறார். அன்பர்களைக் கூட்டி அவர் அளித்த விருந்துகளில் திருக்குறளையும் பரிமாறி விட்டுத் தாயகம் திரும்பினோம்! மேற்குத் திசையில் மறையாத வாழ்வுச் சுடராகத் திருக்குறள் விளங்கும் என நம்பிக்கையோடு தமிழ் மண்ணில் கால் வைத்தோம்.

கனடா நாட்டுப் பயணம்

கனடா நாட்டுப் பயணம்

Image result for canada

விழுமிய திருக்குறள் பிறந்த நம்நாடு, நழுவவிட்ட அந்த நல்லுணர்வை ஏக்கத்துடன் கனடா நாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை எண்ணத் தொடங்கினேன். அமெரிக்காவில் இத்தனை நாட்களும் எப்படியோ ஓடிவிட்டன!

தமிழில் ‘நல்வரவு’ கூறும் திருநாடு

உலக நாடுகளுள் சோவியத் யூனியனுக்கு அடுத்த படியாக உள்ள பெரிய நாடு நோக்கிப் பயணமாக வேண்டும். அதுதான் கண்ணாரக் காணவேண்டிய கனடா!

வட அமெரிக்கக் கண்டத்தின் வடபாதி முழுதும் வியாபித்துள்ள இயற்கைக் கொலுமண்டபம் இந்த நாடு. கிழக்கே அட்லாண்டிக் சமுத்திரம்; மேற்கே பசிபிக் சமுத்திரம்; தெற்கே அமெரிக்கா; வடக்கே ஆர்க்டிக்.

எவ்வளவு பெரிய நாடு! ஆனால் மக்கள்தொகை மிகக்குறைவு. சுமார் 3கோடி மக்கள்; மூன்று நூற்றாண்டுக் குடியேற்ற வம்சா வழியினர்.

வடதுருவத்தை ஒட்டியுள்ள கனடாவின் குளிர்காலப் பருவம் மிக நீண்டது; கோடைப் பருவம் மிகச்சுருங்கியது.

நம் நாட்டில் மூன்றே பருவங்கள்தான் உண்டு கோடைக் காலம், மிகுகோடைக் காலம், சுடும்கோடைக் காலம்!

ஆனால் கனடாவைப் போன்ற நாடுகளில் மட்டும் இயற்கை மிகுந்த கருணை காட்டுகிறது! இங்கு உள்ள காடுகளின் அடர்த்தியை, நீரோடைகளின் பாய்ச்சலை, பயிர்களின் பசுமையை, மக்களின் வளமையைப் பார்த்தாலே… இயற்கையின் பாரபட்சம் புரிகிறது.

இங்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்து முதன்முதலில் குடியேறியவர்கள் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும். அவர்களுக்குள் மூண்ட ஆதிக்கச் சண்டை ‘ஏழாண்டுப் போர்’ என வருணிக்கப்பட்டது. ஆங்கிலேயர் கை ஓங்கியதால் – மாட்சிமை தங்கிய மன்னர் ஆட்சியின் கீழ் . டொமினியன் ஆகி, ஆஸ்திரேலியாவைப் போல் காமன்வெல்த் அங்க நாடாகச் செல்வம் கொழிக்கிறது. ஆங்கிலமும் பிரெஞ்சும் அரசு மொழிகள். அங்கும் மொழி- இனச் சிக்கல் உண்டு. எனினும் பொதுவளர்ச்சிக்கு ஊறு செய்யாமல் ஒத்துப் போகிறார்கள். சமீப ஆண்டுகளில் ஈழத் தமிழர்களுக்கு சரணாலயமாகவும் இந்நாடு ஒருவகையில் தமிழ் மானம் காக்கிறது!

இயன்றவரை ஈழத் தமிழர் மானம் காக்கக் கைகொடுக்கும் கனடாவில் இனிய தமிழ் மணமும் கமழுவதை நுகர அரிய வாய்ப்பு இப்பயணத்தில் கிட்டியது.

சமச்சீரான வெப்பதட்பமுடைய வாழ்க்கைக்கு உகந்த நாடுகள் என உலகில் ஆஸ்திரேலியாவையும், கனடாவையும் சொல்லுவார்கள். அமெரிக்காவில் பொதுவான, ஆங்கிலக் கலாச்சாரப் பின்னணி புலப்படுவதுபோல் அதையடுத்துள்ள கனடாவில் பிரெஞ்சக் கலாச்சாரச் சூழல் வெளிப்படை யாகத் தெரியும் என்றும் சொல்லுவார்கள். அதுவும் உண்மை எனக் கண்டறிய அதிவேகமாக அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நியூயார்க்கிலிருந்து கனடாவுக்குப் போய்ச் சேர்ந்தோம். போகும் இடங்களில் எல்லாம், நம்மை வரவேற்று உபசரிக்க நண்பர்கள் இருந்துவிட்டால் எந்த நாட்டிற்கும் போய்வரலாம். நற்பயனாக எங்களுக்கு இந்தப்பேறு எங்கும் கிட்டியது. சென்னையில் உள்ள பிரபல டாக்டர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் புதல்வி திருமதி. ரீத்தா, திரு.பார்த்திபன் அவர்களின் துணைவியார். இவர் அவர் சகோதரி சத்யா, மதுரையைச் சேர்ந்த திரு.அசோகன், கானடியன் ஆப் செட் ஸ்கிரீனிங் எனும் நிறுவனத்தை நடத்தும் ரோட்டரி கழக உறுப்பினர் திரு.ஸ்டூவர்ட் ஜெரோம், திரு.விஜயநாதன் மற்றும் பலர் எங்களுக்கு இனிய வரவேற்பு அளித்தனர்.

நாங்கள் கனடா போய்ச் சேர்ந்ததும் அமெரிக்கா விலிருந்து திரு.நாராயணன் குடும்பத்தினரும் எங்களுக்குத் துணையிருக்க வழிகாட்ட வந்து (அங்கிருந்து சுமார் 400 மைல்தான்) சேர்ந்து கொண்டனர். கடலை, மலையை, யானையை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது என்பார்கள். அந்தப் பட்டியலில் இன்னும் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம். நீர் அருவி, ஆலயக் கோபுரம்! அதிலும் நாங்கள் பார்த்த நயாகரா அருவி (நீர்வீழ்ச்சி) உலகிலே மிகப்பெரிது, அதன் பிரமாண்ட தோற்றமும், இடையறாது கொட்டும் நீர்ப் பெருக்கும், வண்ண வண்ணக்கோலமும் நெஞ்சைப் பின்னிப் பிணைத்தன.

நம் பாண்டிய நாட்டுச் சங்கப்புலவன் கணியன் பூங்குன்றனார் பாடிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் பாட்டில் தொடரும் வரிகளான ‘கல்பொருது இரங்கும் மல்லல்பேர்யாற்று நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப்படூஉம்’ என்ற வரிகள் இப்பெரும் நீர்வீழ்ச்சியைக் கண்டவுடன் தோன்றின.

தேக்கிவைக்கப்பட்ட செல்வம், தேக்கிவைக்கப்பட்டு பயன்படுத்தாத நீர் போல அலையாமல், நயாகரா நீர்வீழ்ச்சியைப் போல, பரந்து விரிந்து பாலை நிலத்தை எல்லாம் செழிப்பாக்க வேண்டும் என்று நினைத்தேன். அமெரிக்காவிலும் கனடாவிலும் உற்பத்தியாகும் பொருட்களை நுகர்வோர் அதிகமாக இருப்பதனால், அங்கு பணப்புழக்கத்தின் வேகம் காரணமாகப் பொருளாதார நிலையும் மேம்பட்டு இருக்கிறது. நமது நாட்டிலும் பணப் புழக்கம் தேங்கி இருக்காமல் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால் நம் வளர்ச்சியும் மேம்படும்.

உலகிலேயே மிகப் பெரிய சியென் கோபுரத்தைப் பார்க்கச் சென்றோம். சிகாகோவில் நாங்கள் பார்த்த சியொ டவர் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு இதைப்பார்க்க வந்தபோது மலைப்புத் தோன்றவில்லை. ஆனால் மனதைத் தொடும் ஒரு காட்சி என்னை மெய்சிலிர்க்கவைத்தது. அந்த மாபெரும் டவரின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு வாசகத்தில் ‘நல்வரவு’ எனத் தமிழில் மின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு உலகில் உள்ள பலமொழிகளில் எழுதியிருப்பினும் இந்தியா விலிருந்து தேர்ந்தெழுதிய நான்கு மொழிகளில் நமது தமிழ் மொழியும் ஒன்று என்றவுடன் என் எண்ணமெல்லாம், இதயமெல்லாம் பூத்தன; வான் முட்ட உயர்ந்திருந்த கோபுரத்தின் படிக்கட்டுக்குச் செல்லக் கால்கள் தயங்கின. “வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும், வண்மொழி வாழியவே!” என மகாகவி பாரதி அன்று பாடினானே… அந்த வானத்துக்கே இந்தத் தமிழ் வாசகம் என்னைத் தூக்கிப் போவது போலப் பிரமையுற்றேன். அந்த வாசகத்தின் முன்னர் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

‘நல்வரவு’ எனத் தமிழ் வரவேற்பு அளித்த தமிழன்பர்கள் உள்ளமும், இல்லமும் எங்களுக்குச் சென்றவிடமெல்லாம் நல்வரவு கூறின.

கனடாவிலிருந்து, ஏற்கெனவே திட்டமிட்ட எங்கள் ஐரோப்பியப் பயணத்தில் விடுபட்டுப் போயிருந்த பிரெஞ்சு நாட்டுக்குப் போக விசா எடுக்க முடியும் என்றார்கள். அந்த முயற்சியில் நண்பர்கள் ஓடி ஓடி அலைந்தார்கள். ஆனால் 45 நாள் அவகாசம் வேண்டும் என அதிகாரிகள் உதட்டைப் பிதுக்கி விட்டார்கள். நான்கு நாட்கள் இதில் வீணாகிவிட்டன.

கனடாவிலும்  விரிவான பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் தரவும் முடியவில்லை. அதற்கேற்ப எங்கள் பயணத்தை நீட்டிக்கவும் இயலவில்லை. நண்பர்கள் வீடுகளில் பலரும் வந்து கூடி கலந்துரையாடி எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சிகளுக்காகவே ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திரு.பார்த்திபன் – ரீத்தா தம்பதியினரின் உபசாரத்தை மறக்கவே முடியாது. அவர்கள் இல்லத்தில் நிகழ்ந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்துத் தமிழன்பர்களும் குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டனர். ஈழத்தின் கண்ணீர்க் கதையும் அங்கு விரைவில் தமிழர் நல்வாழ்வுக்கு உரிய சுமுக நிலை ஏற்பட்டேயாக வேண்டும் என்பதில் கவலையும், எல்லாப் பிரிவினரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டிய அவசியம் பற்றியும் கருத்துக்கள் தங்குதடையின்றி வந்தன. யாழ்ப்பாணத் தமிழன்பர்கள் கூறியவற்றைக் கேட்ட போது எங்கள் கண்கள் கண்ணீர்க் குளமாயின.

பின்னர் ‘திருக்குறள் பெருமைகளும் நமது பண்பாட்டுச் சிறப்புகளும்’ பேசப்பட்டன. இவற்றைக் கேட்பதில் அங்கு உள்ளோருக்கு உள்ள ஆர்வத்தை, அக்கறையை நாம் இங்கெல்லாம் காணமுடிவதில்லை. தன்னிடம் பூத்த தாமரையின் அழகு குளத்துக்குத் தெரியவில்லை என்றால் எங்கே போய் முறையிடுவது?

உலகத் திருக்குறள் பேரவையின் நோக்கங்கள் பற்றி அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதன் கிளை ஒன்றைக் கனடாவிலும் நிறுவத் தாம் எல்லா வகையிலும் ஒத்துழைப்பதாக உற்சாகம் அளித்தனர்.

கனடாவில் சீக்கியர்களும் தமிழர்களும் கணிசமாக உள்ளனர். சீக்கியர்களின் பற்றுறுதிக்கும் உழைப்புக்கும் நிகராக நம் தமிழர்களும் விளங்கக்கண்டு பெருமிதமும் பேருவகையும் கொண்டேன்.

கலந்துரையாடல்களில் உற்சாகமாகக் கலந்து கொண்ட திரு.பார்த்திபன் ஒவ்வொரு வேளை விருந்தின்போதும் புதிது புதிதாக நண்பர்களைக் கூட்டி வருவார். நீண்ட உரையாடல்கள் தொடரும். சமயம், தத்துவம், கலை, இலக்கியம், தொழில், வாணிபம் என்றெல்லாம் கலந்துரையாடல் வலம் வரும். இவ்வுரையாடல்களில் எனக்கு ஏற்பட்ட பயனும் அனுபவமும் மிக அதிகம். அவற்றையெல்லாம் மனதில் அசைபோட்டுக்கொண்டு இலண்டன் பயணத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அருமை நண்பர் திரு.பார்த்திபன், “உங்கள் பேச்சால் வசீகரிக்கப் பட்டேன்” என்றார். ஆனால் உண்மையில் வசீகரிக்கப் பட்டது நாங்கள்தான். கனடாவில் வாழும் நம் சகோதரர்களின் அன்பும் உபசாரமும் திருக்குறள் வாழ்வும் வாக்குறுதியும் எங்களை என்றென்றும் வசீகரித்துக் கொண்டன….!

“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

     அனைத்தே அன்பர் தொழில்”        (394)

எனப் புதுக்குறள் புனையும் ஆசை வளர்ந்தது!

கென்னடி புகழ் பேசும் வாஷிங்டன் !

Image result for john f kennedyகென்னடி புகழ் பேசும்

வாஷிங்டன் டி.சி. நகருக்குச் சென்றோம். அங்கே உள்ள கென்னடி விமான நிலையத்தின் அழகும் வெள்ளை மாளிகை வனப்பும் என் நெஞ்சில் நிறைந்தன. ஜனாதிபதி அமரர் கென்னடி நினைவுச் சின்னம் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தோரை நினைவுகூரும் நடுகல்லாக விளங்குகிறது.

என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர்பலர் என்ஐ

     முன்நின்று கல்நின் றவர்”       (771)

எனும் திருக்குறள் வரிகளே அங்கு என் நினைவில் படர்ந்தன.

புகழ் வளர்ந்து நடுகல் ஆனோர்க்கும் அது பொருந்தும் சிறப்பினை உணர்ந்தேன். அங்கு உள்ள அணையாச் சுடர் காண்போர் உணர்விலும் தியாகப் பேரொளியைப் பரவச் செய்வதை அனுபவித்தேன். நினைவுச் சின்னங்களை நிறுவுவது போல அங்கே அவற்றை நேர்த்தியாகப் பராமரித்து மரியாதையும் செய்கின்றனர். இதையும் நம் நாட்டு நடப்போடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.

இங்கே வைக்கப்படும் நினைவுச் சின்னங்கள் நாளடைவில் மறக்கப்பட்டுப் பறவைகளாலும் விளம்பரங் களாலும் அசிங்கப்படுத்தப்படும் கொடுமை மாறும் நாள் எந்த நாளோ எனப் பொருமினேன்.

எதிர்காலத்தை உணர்த்தும் விஞ்ஞானக் கூடம்

“பொறிஇன்மை யார்க்கும் பழியன்று; அறிவுஅறிந்து

     ஆள்வினை இன்மை பழி”      (618)

எனும் வள்ளுவம் அமெரிக்க நாட்டினர்க்கு எப்படியோ தெரிந்திருக்க வேண்டும். அனைத்துத் துறையிலும் அவர்கள் ஆக்கிவரும் ஆள்வினையுடைமை அறிவியலில் கொடிகட்டிப் பறக்கிறது. நிலா உலகில் முதல் மனிதனை நிறுத்திடும் அளவுக்கு விண்முட்டும் புகழாகியுள்ளது.

வாஷிங்டனில் உள்ள அறிவியல் கலைக்கூடத்தை அற்புதம் என்றே சொல்ல வேண்டும். ராக்கெட்டுப் பயண வளர்ச்சி, விண்வெளி ஓடச் சாதனைகள், இது வரை சாதித்தவை, இனி அண்டவெளிக் கிரகங்களை ஊடுருவிப் போகும் முயற்சிகள் என இவற்றையெல்லாம் பார்த்தபோது விஞ்ஞான முன்னேற்றத்தையும் எதிர்காலப் போக்கையும் எப்படி வருணிப்பது என்றே எனக்குப் புரியவில்லை.

வாஷிங்டனை இரண்டே நாளில் முடித்துக் கொண்டு ஆர்லாண்டோ புறப்பட்டு வந்தோம். உலகப் புகழ்பெற்ற டிஸ்னி உலகம்  இங்கே தான் உள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்திழுக்கும் பிரம்மாண்டமான காட்சிகள் அங்கு வருடம் முழுவதும் திருவிழாக் கோலம் பூணச் செய்கின்றன. இதற்கு இணையானதோர் அமைப்பு உலகில் வேறெங்கிலும் இல்லை எனச் சொல்ல வைக்கின்றன.

அமெரிக்கா முழுவதையும் பார்த்து விட்டதொரு பிரமை ஏற்படும் வண்ணம் 360 டிகிரி கோணத் திரையரங்கில் அமெரிக்கா முழுவதையும் காட்ட நம்மைக் கூட்டிச் செல்கிறார்கள்.

சறுக்கு ரயில் விளையாட்டு

ரோலர்கோஸ்டர் எனும் பயங்கர ராட்சதச் சறுக்கு ரயில் விளையாட்டு அங்கே மிகவும் பிரபலம். ஒரு நொடியில் விர் என்று கோபுர உச்சிக்கு அந்த ரயில் விரைவதும் பின்னர் அது சரேலென மரணப் பள்ளத்தை நோக்கிக் கீழிறங்குவதும் மயிர்க்கூச்செரிக்கும் அனுபவங்கள்! அதில் ஒரு முறை ஏறிவிட்டுக் கீழே இறங்கி மிகத் துணிச்சலுடைய முரட்டு ஆசாமி என்ன சொன்னார் தெரியுமா? “இனி செத்தாலும் இதில் ஏற மாட்டேன்” என்றார். என்றாலும் துணிச்சலோடு அதில் ஏறினோம். ஓடத்தொடங்கியதும் உடம்பின் குருதி உறைந்து போவது போல, எலும்பு களெல்லாம் நொறுங்கிவிடுவது போலப் பய உணர்வு கவ்வியது. கீழே இறங்கியபின் தான் ‘அப்பாடா’ என்று அமைதி பெற்றோம்.

எதிர்காலக் கதை

அங்குள்ள எப்காட் சென்டர் விஞ்ஞான, தொழில் நுட்ப அற்புதங்களைக் காட்டுகிறது. 21-ஆம் நூற்றாண்டை நோக்கி உலகம் முன்னேறும் எதிர்காலக்கதை ஒரு வரலாறு போல அங்கே பல நிலைகளில் பல அரங்குகளில் கோடிகோடிச் செலவில் காட்டப்படுகிறது. இப்படி நம்நாட்டிலும் ஆங்காங்கு அறிவியல் நகரங்களை உருவாக்கக் கூடாதா எனும் ஏக்கமே மேலிட்டது.

அங்குள்ள கடல் உலகம்  உலகில் உள்ள அத்தனை மீன் வகைகளையும் காட்டுகிறது. இத்தனையும் பார்க்க ஒரு வாரமாவது வேண்டும்; நாங்கள் அவசரக் கோலத்தில் கிளம்பினோம்.

இந்த எப்காட் உணவுப் பிரிவில் காரைக்குடி நண்பர் ஒருவரைக் கண்டேன். என்னை நலம் விசாரித்துக் கொண்டே அவர் ஓடிஓடிப் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தொலைவில் செல்லச்செல்ல ஏற்படும் அன்பின் நெருக்கத்தை உணர்ந்திட முடிந்தது.

‘மியாமி’ நகரம்

ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு இப்போது எங்கள் பயணம் எல்லாம் விமானத்தில்தான், 3000 மைல் தாண்டி உலகிலேயே அழகிய கடற்கரை நகரான மியாமி போய்ச் சேர்ந்தோம்.

வாழ்க்கையை, பொழுதுபோக்கை, எப்படி ரசிப்பது என்பதை அங்கே காணமுடிந்தது. ‘சிலருக்கென ஒதுக்கப்பட்ட’ இடங்களுக்கெல்லாம் நாங்கள் போகவில்லை! நாலுபேர் கூசாமல் பார்க்கக்கூடிய கொள்ளை அழகுகளை ரசித்துவிட்டு ஓட்டலுக்குத் திரும்பினோம்.

அடுத்து நாங்கள் தரை இறங்கிய இடம், லெஸ்வேகாஸ் (லிணீsஸ்மீரீணீs). உலகிலேயே மிகப்பெரிய சூதாட்ட நகரம் இது என்பார்கள். எங்கு பார்த்தாலும் காசினோ என்னும் பொழுதுபோக்கும் உல்லாசப் பணவிரயக் கூடங்கள்! பணம் அங்கே தண்ணீராக ஓடுகிறது; தடம் புரண்டு பாய்கிறது!

‘ஒன்றெய்தி நூறிழக்கும்’ சூதர்களும் கெட்டிக் காரர்களும் அங்கே ஏராளம், ஏராளம்! விமானத்தளத்தில் இருந்து ஊரில் எங்கே திரும்பிப் பார்த்தாலும் பந்தயச் சூதாட்டம்… பல்வகைச் சூதாட்டம். தம் பணம் பறிபோவதைப் பற்றி அங்கு யாரும் கவலைப்படுவதில்லை. சம்பாதித்த காசைச் செலவழிக்க ஒரு வகையான மகிழ்ச்சியோடு ஷிறிலிகிஷிபி எனும் கண்கவர் காட்சிகளுக்குப் போய் விடுகிறார்கள். இவற்றைத் தொலைவில் இருந்து பார்த்த திருப்தியோடு நாங்கள் ஓட்டலுக்குத் திரும்பி விடுவோம்.

“வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதூஉம்

     தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று”        (931)

எனும் சூது அதிகாரக் குறளைத் தெரிந்திருந்தாலும் அவர்கள் அதைப் பின்பற்றமாட்டார்கள் என உணர முடிந்தது! அவ்வளவு மயக்க உலகம் அது.

அற்புத உலகம்

அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் ) நகரம் பறந்தோம். அங்கேதான் டிஸ்னியின் மற்றும் ஒரு அற்புத உலகம் உள்ளது. அதை மீண்டும் விவரிப்பதைவிட நேஷனல் தியேட்டர் உள்ள மற்றொரு ஹாலிவுட் ‘நகரத்தைப்’பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் விவரிக்கலாம். திருக்குறளைப் பற்றிப் பேசவே போதிய அவகாசம் கிட்டாத சூழலில் ஹாலிவுட் போக நேரம் எங்கே கிட்டும் என யோசித்தோம். எனினும் அன்பர்கள் விடவில்லை. ஏதோ போனோம்! வந்தோம்!

பின்னர் சான்பிரான்சிஸ்கோ நகருக்குப் பறந்தோம். அங்குள்ள சீன டவுனைக் (சிலீவீஸீணீ ஜிஷீஷ்ஸீ) கண்டு வியந்தோம். “எவ்வது உறைவது உலகம்” எனும் திருக்குறள் என் நினைவில் படர்ந்தது. சீனர்கள் உலகத் தலைமை பெற்று வரக் காரணம் எது என்பது புரிந்தது.

சாப்பாடும் சங்கடமும்

Image result for food america

 

“உங்களுக்கு வேண்டியது கில்லிங் பவரா?  அல்லது புல்லிங் பவரா?”  எனும் கேள்வியுடன் முடிந்த கட்டுரையை எப்பொழுதோ நான் படித்த நினைவு.

பலபேர் சைவ உணவில் சத்தே இல்லை என்பார்கள். கீரை, காய்கறிகளைவிட மீன், முட்டை, மாமிசம் முதலிய அசைவ வகைகளில்தான் ஆற்றல் நிறையக் கிடைக்கும் என நம்புவார்கள்.

ஆனால் யானை? எவ்வளவு பெரிது! உருவத்தால் மட்டும் இன்றி, வலிமையிலும் பிறவற்றைவிட மேம்பட்டது இல்லையா? குதிரைக்கு எவ்வளவு ஆற்றல்! கொள்ளும் புல்லும் தின்னும் அதன் ஆற்றல் அளவீட்டைக் கொண்டுதானே ‘குதிரை பவர்’ (பிஷீக்ஷீsமீ றிஷீஷ்மீக்ஷீ) இத்தனை என்று மின்அலகு கணக்கிடப் படுகிறது. ஆகவே சைவ உணவே சிறந்தது எனச் சைவ உணவினர் சாதிப்பர்.

இவையெல்லாம் என்னைப் போன்ற சைவ உணவுக் காரர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய செய்திகள் என்றாலும், மேலை நாடுகளுக்குப் பயணம்போகும் போதுதான் சைவச் சாப்பாட்டாளர்களுக்கு சங்கடங்கள் நேருகின்றன. அசைவர்களுக்குச் சிக்கல் இல்லை. எப்படியும் சமாளித்துக் கொள்வார்கள். சுத்த சைவர்கள் சிறுசிறு தியாகங்களுக்குத் தயாராக வேண்டும். எனினும் அமெரிக்காவில் அத்தகைய சங்கடங்கள் இராது என அன்பர்கள் எழுதியது நம்பிக்கை தந்தது.

அமெரிக்க நாட்டில் தண்ணீரையும் உணவையும் வீணாக்குகிறார்கள். அதைப் பார்த்தபோதெல்லாம் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அதே சமயம் தண்ணீர் மற்றும் உணவு வகைகளை மிகத் தூய்மையாகப் பாதுகாத்து வழங்குகின்றார்கள்; பயன்படுத்துகின்றார்கள்.

வெளியூர்ப் பயணத்தின்போது ஓட்டலில் தங்கிப் பலவகை உணவுகளை வயிறு புடைக்கச் சாப்பிடும் நம் ஊர்ப்பழக்கமெல்லாம் அங்கே காண முடியாது. பயணவழியில் சாலையோரங்களில் உள்ள சிற்றுண்டிக் கடைகளில் சூடாகத் தயாரிக்கப்பட்ட  உணவுகளை விற்கிறார்கள். அவற்றைக் காரில் இருந்தபடியே வாங்கிக் கொண்டு பயணத்தைத் தொடரு கிறார்கள் அல்லது அங்கேயே சாப்பிட்டுச் செல்லவும் வசதிகள் உள்ளன. காலப்போக்கில் நம் ஊர்களிலும் அப்படி வரக்கூடும்.

பாக்கெட்டுகளில் உணவு வகைகள்

பாக்கெட்டுகளில் அடைத்தும் சுத்தமான முறையில் பார்சல் செய்தும் தருகிறார்கள். நேரத்தை வீணாக்காமல்  சாப்பாட்டை முடித்துக் கொள்கிறார்கள். எல்லாவித மாமிச உணவுகளும் பாக்கெட்டில் வைத்து விற்கப்படுகின்றன. சைவச் சாப்பாட்டாளர்களுக்கான இத்தாலி நாட்டில் பிரபலமான பீசா (றிமிஞீஞீகி), மாக்டோனால்ட் ஆகிய சைவ உணவுகள் கிடைக்கும். ஆனால் என்ன வெஜிடேரியன் என முதலிலேயே சொல்லிவிட வேண்டும்.

 சைவ விருப்பத்தை விவரமாகச் சொன்னதும் பீசா  கோதுமை ரொட்டியில் வெண்ணெய் வெஜிடேபிள் வெங்காயம் போட்டுத் தந்தார்கள். ஆலை இல்லாத ஊரில் இந்த  இலுப்பைப்பூ கிடைத்தால் விடலாமா? பசி நேரத்தில் இதுவும் ருசியாகத்தான் இருந்தது. நாளடைவில் பழக்கம் காரணமாக இந்த உணவும் பிடித்துவிட்டது.

இந்த நேரத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் இத்தாலிக்குச் சென்றிருந்தபோது இந்தச் சைவ ரொட்டியும் கிடைக்காமல் அவதிப்பட்டுப் போனேன். சைவ ரொட்டி என ஆங்கிலத்தில் சொல்லிக் கேட்டேன். அவர்களுக்கு அது புரியாமல், ‘என்ன?’ என்று திருப்பிக் கேட்டார்கள். நான் ஆங்கிலத்தில் விவரமாக ஆனியன் கலந்த விஜிடபிள் பிரட் என்றேன். அவர்கள் தோளைத் தூக்கிக் கொண்டு தெரியவில்லை என்றார்கள். கடைசியில்தான் தெரிந்து கொண்டேன். ஆங்கிலம் இவர்களுக்கும் தெரியாது என்பதை! இவர்களிடம் ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான அவரவர் தாய்மொழியில் கேட்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆங்கிலம் பேசும் நாட்டை ஒட்டி வாழ்ந்தாலும் இவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் தமது தாய்மொழியறிவோடு மற்றொரு ஐரோப்பிய மொழியையும் கற்று விஞ்ஞான வளர்ச்சியில் தங்களை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். இதைப் போலவே நாமும் தாய்மொழியாம் தமிழைக் கற்று தமிழ்மொழியில் விஞ்ஞான வளர்ச்சிகளைக் காணவேண்டும் எனக் கருதினேன்.

ஒரு கை பார்த்தோம்!

அமெரிக்காவில் வெங்காயம் (கண்ணீர் விடாமலே) கிடைத்தது. பீசா ரொட்டி, பழச்சாறு முதலியன தாரளமாகக் கிடைக்கின்றன. சுவையான தண்ணீர் கலக்காத பால், யோகார்ட் எனும் கெட்டித் தயிர், சாக்லேட், ஐஸ்கிரீம்… போதாதா …? இந்த அருமையான சைவச் சாப்பாட்டை ஒரு கை பார்த்தபடி நாங்கள் பயணத்தைச் சமாளித்தோம் என்றாலும் நம் ஊர்ச் சாப்பாட்டு ஏக்கம் தீரவில்லை! மதுரை திரும்பியதும் எங்களைப் பார்த்த நண்பர்கள், மிகவும் மெலிந்து  போனோம் என அங்கலாய்த்தார்கள்.

நாம் உணவுக்கு நம் வருமானத்தில் எத்தனைப் பங்கு செலவிடுகிறோம் என்பதைக் கொண்டே நம் வாழ்க்கை முறையையும் தரத்தையும் அளவிட முடியும் என்பார்கள். அமெரிக்க நாட்டில் உணவுப் பொருள் விலையைக் கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டாலும் அந்த நாட்டுச் செலாவணிச் சமன்பாட்டில் உணவுவிலை அமெரிக்கர்களுக்கு மலிவுதான். அதனால்தான் விருந்து களிலும் கேளிக்கைகளிலும் உணவை அதிகமாகவே வீணாக்குகிறார்கள்.

அங்கே விருந்துகளில் அமர்ந்து சாப்பிடுவது மிக முக்கியமான நிகழ்வின் போதுதான். பெரும்பாலும் பபே (ஙிuயீயீமீt) எனப்படும் சுய பரிமாறு முறைதான். பொதுவில் வைக்கப்பட்ட உணவில் அவரவர்க்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு, ஓரிடத்திலேயே நிலையாய் இராமல் வந்திருக்கும் பலரோடும் அளவளாவிச் சாப்பிடுவது மிக வசதியான ஒன்று. நம் நாட்டிலும் இந்த விருந்துமுறை வேகமாக அறிமுகமாகி வருகிறது. அமெரிக்கர்கள் இந்த பபே முறையிலேயே வீணாக்கிக் கொட்டும் உணவு அதிகம்தான்.

மதிக்கப்படும் தனி நபர் உரிமை

எங்கும் தூய்மையாக உணவைப் பாதுகாத்துப் பயன்படுத்துகிறார்கள் என்றேன். கடையிலும், விருந்திலும் மிகக் கவனமாக உணவு வழங்கப்படுகிறது. சுகாதார முறைகளை நாம் அங்குதான் கற்கவேண்டும். ஒரு ஓட்டலின் சாப்பாடு சரியில்லை என்று யாராவது புகார் செய்தால் போதும், உடனே அது கவனிக்கப்படும், அல்லது அந்த ஓட்டல் மூடப்படும் அளவுக்குப் பொதுமக்கள் புறக்கணிப்பும், நடவடிக்கையும் தொடரும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் உணவுப் பொருள்களில் மிக விழிப்பாக இருக்கிறார்கள். தனி நபர் பாதுகாப்பும் உரிமையும் அந்த அளவுக்கு அங்கே மதிக்கப்படுகின்றன.

கலிபோர்னியா திராட்சைப் பழங்களுக்குப் புகழ்பெற்ற இடம் அவற்றில் பூசான நோய் ஏற்பட்டிருப்பதைக் கண்டவுடன், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அத்தனை திராட்சைக் கூடைகளையும் அப்புறப்படுத்திக் குப்பையில் கொட்டி விட்டார்கள். நம் ஊரைப் போல தடையை மீறி எவராவது தரக்குறைவான பண்டத்தை விற்பனை செய்தால் லைசன்சை ரத்து செய்து விடுவார்களாம். தண்டனையும் அதிகம்.

சிக்கனம்

அமெரிக்காவில் உணவை வீணாக்குவதைப் போல நான் ஐரோப்பிய நாடுகளில் பார்க்கவில்லை. இந்த வகையில் அவர்களிடம் அதிகச் சிக்கனம் கண்டேன்.

அமெரிக்காவில் இத்தனை மைல்கள் காரில் வந்தோமே எங்காவது குப்பைகூளம் கண்ணில் பட வேண்டுமே? ஊஹும்! கழிப்பறை, குளியலறை எல்லாம் மிகவும் தூய்மையாகவும் அழகாகவும் இருக்கும். அனைத்தும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டிருக்கும். அறிவியல் முன்னேற்றத்தால் ஏற்பட்ட நவீன வசதிகள் நிறைந்திருக்கும்.

சுற்றுப்புறத் தூய்மை, பொது வாழ்வில் தூய்மை, ஒழுங்குக் கட்டுப்பாடு பேணும் உணர்வு இவை அங்கு நன்கு புலப்பட்டன. நம் நாட்டில் வருடத்திற்கு ஒரு முறை இவற்றை விழாக் கொண்டாடிவிட்டுத் தொடர்ந்து பேணிப் பாதுகாக்காமல் அனைத்தையும் குப்பையில் போட்டுவிடுகிறோம். மதுரையில் சுற்றுப்புறத் தூய்மை காக்க நாமும் இயக்கம் நடத்தினோம். என்ன ஆயிற்று? போன ஆண்டு ஓரிடத்தில் கொட்டிய குப்பையெல்லாம் வேறு இடத்துக்கு வந்துவிட்டது. வெளிநாடுகளில் எப்போதும் செயல் இயக்கம்… நம் நாட்டில் எப்போதும் பேச்சு இயக்கம். என்று இந்த நிலை மாறுமோ என்ற ஏக்கம்!

சிக்காகோவில் – அன்பர்களின் வீடுகளில் – இருவகை விருந்துகள் உண்டு! வயிற்றுக்கும் செவிக்கும்! அங்கே உணவுப் பரிமாற்றத்தைவிடத் திருக்குறள் கருத்துப் பரிமாற்றமே மிகவும் ருசித்தது. நம் நாட்டில் – திருக்குறளைப் பற்றிப் பெரும்பாலும் தமிழறிந்த புலவர்களே மேடை கட்டிப் பேசக் கேட்கிறோம். ஆனால் இங்கு பிறதுறை அலுவல்களில் உள்ளவர்களில் பலர், திருக்குறளில் வாழ்க்கைத் தேவைக்கு ஏற்ற அளவு நல்ல தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு குறள் இன்ன அதிகாரத்தில் உள்ளது என எடுத்துச் சொல்லும் அளவுக்கு ஈடுபாட்டை வளர்த்து வாழ்கின்றனர். அவர்களோடு அமர்ந்து அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லும் திருக்குறளை ஆராய்ந்தோம்.

சிக்காகோவில் ஒரு சொற்பொழிவுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதென்றால் சனிக்கிழமை வரை தங்குவதை நீடிக்க வேண்டியிருக்கும். எனவே கலந்துரையாடல் கூட்டங்களை வைத்துக் கொண்டோம். பேசுவோர், கேட்போர் ஆகிய இரு தரப்பாரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் சுவையான கருத்தரங்குகளாக இவை நடந்தன.

திரு.இளங்கோவன் திருக்குறட்பா வடிவில் அதே நடையில் நெஞ்சு தொடும் வரவேற்புப் பாமாலையை யாத்தளித்தார். நம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேரறிஞர் தெ.பொ.மீ. அவர்களின் மருகர் பேராசிரியர் டாக்டர் ஆர்.சண்முகம் அவர்கள் வாங்கித் தந்திருந்த, நம் துணைவேந்தர் அறிமுகக் கடிதத்துடன், நம் அஞ்சல் வழிக்கல்வித் துறையினர் என்னிடம் கொடுத்தனுப்பியிருந்த ஆத்திசூடி – கொன்றைவேந்தன் முதலிய தமிழிலக்கிய ஒலி நாடாக்களைப் பல்கலைக்கழகத் தூதனாக அங்கு நல்கினேன்.

சிக்காகோவில் நண்பர்கள் இவற்றைப் பொன்னே போல் போற்றி வாங்கிக்கொண்டனர். தம் பிள்ளைகளுக்குப் பயன்தரும் இத்தகைய நன்கொடைகளைத் தொடர்ந்து அனுப்புமாறும் கேட்டுக் கொண்டனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையமும் இத்துறையில் இனி மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை நினைத்து மலைத்தேன்.

நண்பர்கள் எனது மேற்பயணத்திற்கான விசாவினைப் பெறும் முயற்சிகளில் ஓடி அலைந்தனர். சிலர் ஆரம்ப ஏற்பாடுகளைச் சரியாக செய்து கொள்ளாததால் அங்கே போய் அவதிப்பட நேர்ந்தது. பிரெஞ்சுப் புரட்சியின் 200-ஆவது ஆண்டு விழாக் கொண்டாடப்பட்டமையால் அந்த நாட்டுக்கு உடனே விசா பெறுவது சிரமமாய் இருந்தது. விசா முன் ஏற்பாடு செய்யாததாலே அவ்விழாவில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பும் கைநழுவியது. எனவே, புறப்படும் சமயத்தில் சரியான டிராவல் ஏஜண்ட் மூலம் விசாப் பெற்று உரிய ஏற்பாட்டுடன் புறப்பட வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டேன். இப்போதெல்லாம் 140 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்றார்கள்!

சிக்காகோ தமிழன்பர்களான நாராயணன், வெங்கடராமானுஜம் ஆகியோரை விட்டுப் பிரிய மனம் இல்லாமலேயே அமெரிக்காவை அவசரக் கோலத்தில் சுற்றிப் பார்த்து விட்டுக் கிளம்ப வேண்டியதாயிற்று!

 

 

பயணத்தின் பாதையில்…

‘பாண்டிய’னில் வழி அனுப்புகை

 

Image result for thirukural manimozhian

தமிழ்நாடு அறக்கட்டளையினர் தாய்த்தமிழகத்துடன் உறவுபூணும் வகையில் ஆண்டுதோறும் அங்கு விழா எடுக்கின்றனர். இங்குள்ள நண்பர்களை வரவழைத்து தாம் மகிழ்ந்து, மகிழ்விக்கின்றனர். அறக்கட்டளையின் 14-ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, ‘வான்புகழ் வள்ளுவம்’ பற்றி உரையாற்றுமாறு நான் அழைக்கப் பட்டிருந்தேன்.

தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு திருக்குறள் பேரவையின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், புதுப்பொறுப்பேற்ற சமயத்தில் இந்த அழைப்பும் வந்தது. எனவே எப்படி இதை மறுக்க முடியும்? மேலும் ‘உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையம்’ எனும் ஓர் அமைப்பினை மதுரையில் நிறுவி அதனைப் பதிவு செய்யும் விரிவாக்கப் பணிகளுக்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்த தருணத்தில் இந்த அழைப்பு வந்துள்ளது. எப்படி இதனைத் தவிர்க்க இயலும்?

மறுக்கவோ, தவிர்க்கவோ முடியாத வண்ணம் அமெரிக்க நண்பர்களின் கடிதங்கள் அணிவகுத்து வந்தன. சிகாகோவிலிருந்து போற்றுதற்கு உரிய நண்பர்கள் திரு.பி.சி.எம்.ஜி. நாராயணன், திரு.வெங்கடராமானுஜம், தொழிலதிபர் பழனிபெரியசாமி, தலைவர் பி.மோகனன், செயலாளர் தி.ராஜேந்திரன் ஆகியோர் எழுதிய மடல்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்தின. அமெரிக்கப் பயணத்தோடு, கனடா, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் ஆகியவற்றுக்கும் பயணம் செய்வதற்காக விரிவாகத் திட்டமிடும் பொறுப்பினை என் மனைவி கமலா ஏற்றுக்கொண்டாள்.

என் துணைவி கமலாவிற்கு நிறையப் பயண அனுபவங்கள் உண்டு. ரோட்டரி மாதர் கழகத் தலைமை ஏற்பு, மேனிலைப்பள்ளி நிர்வாகப் பொறுப்பு, சேவை அமைப்புகளின் தொடர்பு ஆகியவற்றில் பெற்ற பயிற்சிகள் எல்லாம், கமலா கை தொடும் எதனையும் கலையாக்கித் தந்துவிடும்.

விசா வந்துவிட்டது, டிக்கட்டுகள் ஏற்படாகிவிட்டன. 25.5.89-ஆம் நாள் மதுரையிலிருந்து பாண்டியன் ரயிலில் புறப்பட வேண்டும். அன்று அதிகாலையில் குன்றக்குடி பிரசாதம் வீட்டு வாயிலுக்கு மங்கலம் சேர்க்க வந்து பொலிந்தது. திருக்குறள் பேரவைத் தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் பயணத்தை ஆசீர்வதித்து அருட்பிரசாதத்தை அன்பர் மூலம் அனுப்பியிருந்தார்.

வடலூர் வள்ளலாருக்குப் பின்னர் தமிழகம் கண்ட பேரருள் பெருந்தகை ஆகிய குன்றக்குடி அடிகளார் மனித நேயச் சிந்தனையால் ஏற்படுத்திய அமைப்புகள் இரண்டுள. ஒன்று திருவருள் பேரவை; மற்றொன்று திருக்குறள் பேரவை.

அரசியல், பொருளாதாரச் சமுதாயப் பிரச்சினைகளுக்கு திருக்குறள் நெறியில் தீர்வுகாண முயன்றுவரும் இயக்கம் திருக்குறள் பேரவை. உயர்ந்த சிந்தனைகளும் சீரிய கோட்பாடுகளும் செறிந்து கிடக்கும் இந்த நாட்டில் அவை முறையே செயலுக்கு வராமல் போனதால், வறுமையும் அறியாமையும் இங்கு குடியேறிக் கொண்டன. இந்த அவலத்தை அகற்றிப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் சமத்துவ சமுதாய வழி பேணிட அமைந்ததே திருக்குறள் பேரவை.

உலகெல்லாம் உவந்தேற்றும் தமிழ் மாமுனிவரின் வாழ்த்து எங்கள் தமிழ்ப் பயணத்தின் ஆதார சுருதியாக அந்த வினாடியே இசை மீட்டியது. மதுரை ஆலயங்களில் இருந்து பிரசாதங்களை அன்புச் சகோதரர்கள் கொணர்ந்தனர்; மதுரை திருவள்ளுவர் கழகப் பெரியவர்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.

அன்று மாலை – டவுன்ஹால் ரோடு வள்ளுவர் அரங்கில் – வழியனுப்பு விழா ஒன்றினை அன்புப் பெரியவர்கள் பாரதி ஆ.ரத்தினம், அய்யணன் அம்பலம், பேராசிரியர் குழந்தைநாதன், பெரும்புலவர் செல்வக் கணபதி, திரு.நாகராஜன் ஆகியோர் விரைந்து ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது உரையாற்றிய பெருமக்கள் விவேகானந்த சுவாமியின் ஆன்மிகப் பயணம் வழிகாட்டிட எனது திருக்குறள் பயணம் பயனுற அமைய வேண்டும் என வாழ்த்தினர்.

அன்று மாலை மதுரை ரயில் நிலையத்தில் வழி அனுப்ப வந்த அன்பர்கள் எங்களைத் திக்குமுக்காடச் செய்துவிட்டனர். மலைபோல் மாலைகள் குவிந்தன. பிளாட்பாரத்தை விழா மேடையாக்கிக் கவிமாலைகள் சாற்றத் தொடங்கிவிட்டனர். இவை எல்லாம் திருக்குறளுக்குச் செய்யும் பெருமை எனவே கருதிப் பணிவுணர்வுடன் ஏற்றுக்கொண்டேன். வண்டி புறப்படுகையில் பெட்டியின் வாயிலில் நின்றபடி கண்ணீர் மல்கக் கையசைத்து விடைபெற்ற என் காதில் விழுந்த அன்பர், நண்பர் திரு.ஆ.ரத்தினம் அவர்கள் வாழ்த்துரை… “பாண்டியனில் வழியனுப்புகிறோம். அன்று பாண்டிய நாட்டு சேதுபதி மன்னரால் வழி அனுப்பப்பட்ட விவேகானந்தரைப் போல- திருக்குறள் தூதுவராகச் சென்று வருக! வென்று வருக!” என அவர் எழுப்பிய வீர முழக்கம் பிளாட்பார எல்லை முடியும் வரை எதிரொலித்தது. வண்டியில் அமர்ந்ததும் வழியனுப்பு விழாவில் ஆற்றிய உரைகள் என் நினைவில் படர்ந்தன.

Image result for vivekananda

“1893-இல் அமெரிக்கா நாட்டு சிக்காகோவில் கூடிய உலக சமயப் பேரவைக்கு இந்தியத் தூதுவராக இளம் துறவி சுவாமி விவேகானந்தர் சென்றிடக் கணிசமாக நிதியுதவி செய்தவர் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி… பாண்டி நாட்டுச் சேதுபதி மன்னர் அவரை அன்று அனுப்பினார்; இன்று இந்தப் பாண்டியன் வண்டியில் உங்களைப் பயணமாக்கி வழியனுப்பி உள்ளார்கள்; நீங்களும் சிகாகோ போகிறீர்கள். அதுதான் இதில் உள்ள பாண்டியப் பொருத்தம்” என்றார் அருகில் இருந்த நண்பர். இந்த 1893- நம் வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. காந்தியடிகள் தென்னாப்பிரிக்கப் பணிக்குப் புறப்பட்ட ஆண்டு, விவேகானந்தர் சுவாமிகள் ஆன்மிகப் பயணமாக வழியனுப்பப்பட்ட ஆண்டு, சிறந்த ஆன்மிகச் செல்வர் அரவிந்தர் தாயகம் வந்து சேர்ந்த ஆண்டு எல்லாம் இந்த 1893 தான்.

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் தொண்டு புரிந்த ஆண்டுகளில் அமெரிக்க நாட்டுச் சமகாலச் சிந்தனை யாளரான ஹென்றி டேவிட் தோரோவின் கருத்துக்களால் மிகவும் கவரப்பட்டார். காந்தி அடிகள் ஒருமுறையாவது அமெரிக்காவிற்கு வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அடியெடுத்து வைக்கும் பாக்கியம் அமெரிக்க மண்ணுக்குக் கடைசிவரை கிடைக்காமலே போய்விட்டது. என்றாலும் அதற்கு முன்னரே விவேகானந்தர் அங்கு நிகழ்த்திய வீர முழக்கம் இன்றும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

இதனை நினைவூட்டி சிக்காகோ நண்பர்கள் எழுதிய கடிதங்கள் பசுமை நினைவுகளாக என்னை ஆட்கொண்டிருந்தன.

அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட பாரதத்தில் கனன்று வந்த புரட்சித் தீக்கங்குகள் வங்காளத்தில்தான் அடிக்கடி சுவாலையாக எரிந்து உயர்ந்தன. அரசியல், ஆன்மிகம், கலை ஆகிய முத்துறையிலும் அங்கே மறுமலர்ச்சி ஓடைகள் சங்கமித்து வந்தன. அந்தச் சங்கமச் சூழலில் அவதரித்தார் நரேந்திரன் (1863). காலனி ஆதிக்கத்தோடு கைகோத்து வந்த மேலை கலாச்சாரக் காட்டாறு வங்கத்தில் ஓடிச் சுரந்த தொன்மைப் பண்புகளை அடியோடு அடித்துச் செல்ல முற்படுவதைக் கண்டு இளமையிலேயே அவர் பொங்கி எழுந்தார். கல்கத்தா கல்லூரியில் சட்டம் பயிலச் சேர்ந்து கலைக் களஞ்சிய ஞானம் பெற்றுவந்த இளைஞரை – புனிதர் பரமஹம்சரின் புன்னகை எப்படியோ ஆட்கொண்டு விட்டது. 1881-இல் பரமஹம்சரின் பாதம் பணிந்து பரம சீடராக ஆகிவிட்ட நரேந்திரன் தவயோகியாகவும், வேதவிற்பன்னராகவும் மாறியது பாரதம் கண்ட ஆன்மிக இரசவாதம். விவேகானந்தர் என இளமையிலேயே ஏற்கப்பட்ட இந்த ஞானசீலர், பரமஹம்சரின் சமாதிக்குப் பின் இராம கிருஷ்ண இயக்கத்தை நிலைநிறுத்தி பாரதம் முழுவதும் பாத யாத்திரை செய்தார். உலக நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்து மானிட ஒற்றுமையையும் சகிப்புத்தன்மை யையும், இந்தத் திருநாட்டின் செய்தியாகத் தூதுரைக்க முற்பட்டார். இச்சமயத்தில்தான் – அமெரிக்க நாட்டு சிக்காகோ நகரில் கூட இருந்த உலக சமயப் பேரவையில் () உரையாற்றிட அழைக்கப்பட்டார்.

1893-முப்பதே வயதான சுவாமி விவேகானந்தர் பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு வந்திருந்தார். மைலாப்பூர் கடற்கரை அருகே தங்கி, அற்புதமான ஆங்கிலப் பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். முற்போக்கு இளைஞர்கள் அவரை மொய்த்துச் சூழ்ந்தனர். முதன்முதலாக தமக்கென ஒரு சீடர்குழுவை உருவாக்கும் பெருமையைச் சென்னைக்குப் பெற்றுத்தந்தார்.

சிக்காகோ சமயப் பேரவைக்குத் தம்மை அழைத்துள்ளார்கள் என சுவாமி விவேகானந்தர் இச்சீடர் குழுவிடம் தெரிவித்துள்ளார். அடுத்த வினாடியே அதற்கான நிதியைத் திரட்டிவிட இளைஞர்கள் புறப்பட்டுவிட்டனர். ஏழை-எளியவர்கள் நல்கிய காணிக்கைகள் எல்லாம் சேர்ந்து மொத்தம் ரூபாய் மூவாயிரம் வரை திரண்டன. இராமநாத புரம் சேதுபதி மன்னர் ரூ.500 நல்கினார். பாண்டிய நாட்டுப் பயண முடிவில் குமரிக் கடலில் தீர்த்தமாடிவிட்டு விவேகானந்தர் சிக்காகோ பயணத்தை மேற்கொண்டார்.

Image result for gandiji

தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் தொடங்கிய அறப்போரின் முதல் தொண்டர்களாக விளங்கிய பெருமை தில்லையாடி வள்ளியம்மை போன்ற தமிழர்களுக்கே கிட்டியது. விவேகானந்தர் ஞான விளக்கேந்திப் புறப்பட்ட பயணத்திற்கு முத்தாய்ப்பு வைக்கும் பெருமையும் தமிழகத்துக்கே கிட்டியது.

இந்தப் பெருமை தமிழ் மண்ணோடு கலந்துவரும் பாரம்பரியம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப் பூங்குன்றச் சங்கநாதம், உலகுக்கென ஒரு நூலை – திருக்குறளை – அளித்த அழியாத மரபுவழிக் கொடைத் திறம், பாரதி ஆ.ரத்தினம், பேராசிரியர் குழந்தைநாதன் ஆகியோர் கூறிய இக்கருத்துக்கள் மீண்டும் மீண்டும் என்னை வலம் வந்தன.

விவேகானந்தர் இந்தியத் திருநாட்டின் வேதாந்த வித்தகத்தை மேலைச் சீமைக்கு ஏந்திச் சென்றார். ‘சகோதர, சகோதரிகளே’ எனும் முதல் தொடக்கத்தினாலேயே அவையோரைக் கவர்ந்தார். மிக மிக எளியவனான எனக்கு இப்போது விவேகானந்தரைத் தடம் பற்றிச் செல்லும் வாய்ப்பும் கிட்டியுள்ளது. “உலகம் ஒரு குலம்” என ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அதுவும் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டாமலேயே இத்தரணியின் உறவு எல்லையை வரையறுத்துக் கண்ட வள்ளுவச் செல்வத்தை அக்கரைச் சீமையில் மறுபடி நினைவூட்டிச் சொல்ல நான் புறப்பட்டிருக்கிறேன்.

விவேகானந்தர் எங்கே! நான் எங்கே!

எனினும் எனக்குள்ளே இனம்புரியாத அச்சம் கலந்த ஓர் உற்சாகம்! அந்த உற்சாகத்தைத் தந்தது யார்?

வள்ளுவர் தான்.

‘அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

 பெருமை முயற்சி தரும்”      (611)

எனும் ‘ஆள்வினை உடைமை’ முதல் குறள் என்னைப் பாண்டியனில் ஏற்றிவிட்டது. பயணம் தொடர்ந்தது.

குறள் நிலா முற்றம் 13

ஒருங்கிணைப்பாளர்

“உபதேசம் வெறும் ஊறுகாய் போல மட்டும் இருந்து விடலாமா? பற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளரவேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.”

அரசு அதிகாரி

“பசிப்பிணியைப் போக்க அரசு பல திட்டங்களைப் போட்டு வருகின்றது. பசிப் பிரச்சினை மற்றும் வேலை இல்லாத் திண்டாட்டம் என்பன பெருகும் மக்கள் தொகையாலும் இதர நிர்வாக முறைகளாலும் தவிர்க்க முடியாத பிரச்சினைகளாக நீடிக்கின்றன. இதைச் சமாளிக்க அரசு வரிகளைக் கூட்டினால் எதிர்ப்பு வலுக்கிறது.”

பேராசிரியர்

“இப்போதெல்லாம் குடியாட்சி செலுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் அரசு பெரும்பாலும் வரிகளை மக்கள் ஒரு கடமையாகத் தாமாக முன்வந்து செலுத்த ஊக்கம் தருவதில்லை. கசக்கிப் பிழிய முற்படுவதால் மக்களில் பலர் வரி கட்டாது ஏமாற்றப் பார்க்கிறார்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் பொதுவுடைமைச் சமுதாயம் என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே நீடிக்கிறது. எனவே வரிகளைப் பெருக்கி, வசதிகளைப் பெருக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்படுகின்றது. அவ்வாறு வரி தண்டுவதிலும் ஒருவகை மனிதநேயப் பாங்கு இருக்க வேண்டும் என்பது வள்ளுவ நியதி.. அனைவருக்கும் தெரிந்த குறள்தான் அது.

‘வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

     கோலொடு நின்றான் இரவு.’         (552)

ஆட்சி அதிகாரத்தோடு, முறை கடந்து பொருளைக் கைக்கொள்ளுவது, பாதை நடுவே வேலோடு நின்ற கள்வன், பொருளைக் கொடு என அச்சுறுத்திப் பொருளைப் பறித்துச் செல்வதைப் போன்றது என அடித்துச் சொல்கிறார் வள்ளுவர். நல்லாட்சி பற்றிப் பேசும் போது, வெற்றிதருவது கோல் எனப் பேசிய வள்ளுவர், கொடுங்கோன்மையால் கசக்கிப் பிழிந்து வரிபெறுவது அருளற்ற ஆட்சி, அது நிலத்துக்குச் சுமை, கொள்ளையர் ஆட்சி என்றெல்லாம் சாடுகிறார்.”

பெரும்புலவர்

“நன்முறையில் வரி பெறுவதையும் தீய வழியில் வரி பறிப்பதையும் பற்றிய புறநானூற்றுப் பாடலில் வரும் யானை பற்றிய உவமையை இங்கே நினைவில் கொள்ளலாம். ஒருமா பரப்பளவுள்ள நிலமாயினும் அதில் விளையும் நெல்லை அளந்து யானைக்குத் தீனியாகப் போட்டால், அது பல நாட்களுக்கு வேளை தவறா உணவாக நீடிக்கும். அதை விடுத்து, யானையை அவிழ்த்துவிட்டு, நீயே போய் உண்டு கொள்ளலாம் என விட்டோமானால் அதன் வாயில் புகும் நெற்கதிரை விடக் காலால் மிதிபட்டு அழியும் பயிரே பல மடங்கு ஆகும். நூறு செறு நிலப்பரப்பில் விளைந்தவை எல்லாம் ஓரிரு நாளில் பாழாகிவிடும். எனவே அரசன் முறையறிந்து நெறி பிறழாது வரிகளைப் பெற வேண்டும் எனும் அந்தப் பாடலே வள்ளுவத்திலும் எதிரொலிக்கிறது.”

அரசு அதிகாரி

“அந்தப் பாட்டில் புலவர் நன்கு முற்றிக் காயும் நிலையில் உள்ள நெல்லைக் குறித்துள்ளார். ஆனால் இன்று நம் வயிறு காய்ந்தாலும் வரியைக் கட்டியாக வேண்டிய கடுமையான நிலையன்றோ நீடிக்கிறது? இதெல்லாம் நல்லாட்சிக்கு ஏற்றதா என்ன? இந்த ஆட்சி அமைப்பின் மீது மக்கள் எப்படி நம்பிக்கையோ, பற்றோ கொள்ள முடியும்?”

பேராசிரியர்

“பொதுவுடைமை அரசே ஆயினும் வரி இன்றி ஆட்சி செலுத்த முடியாது. பொதுவுடைமை என்பதும் உலகின் ஒரு சில நாடுகளில் மட்டும் பந்தலிட்டுப் படருவதால் பயன்இல்லை. உள்நாட்டுப் பொதுவுடைமை, உலகப் பொதுவுடைமையாதல் வேண்டும். ‘ஓருலகம்’ ) என வெண்டல் வில்கி எனும் அறிஞர் ஒருவர் கண்ட கனவும், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனும் தமிழ்ச் சான்றோர் கூறியனவும், தன்னலம் தீர்ந்த, சண்டையில்லாததாய் உள்ள சமுதாயமும் உருவாகக்கூடிய பாதையை விடுத்து உலக சமுதாயம் திசை மாறியே போய்க்கொண்டிருக்கிறது. இதில் பசிப்பிணியை அறவே நீக்க ஒவ்வொருவர் கையிலும் மணிமேகலையின் அட்சயப் பாத்திரம் இருந்தாக வேண்டும்.”

ஒருவர் இடைமறிக்க ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் உங்கள் கருத்தைச் சொல்லி முடியுங்கள்.”

பேராசிரியர்

“‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக’ என்று அன்று மணிமேகலை செய்தாள், இன்று நம் பாரதப் பிரதமரும் பசியை அறவே நீக்கப் பல அறிக்கைகளை வெளியிடுகிறார். பசியை நீக்கப் பொய்யான பொதுவுடைமைக் கோஷத்தால் முடியாது. உண்மையான நல்லாட்சித் திட்டங்கள் வேண்டும். அரசுத் திட்டங்கள் மட்டும் பசியைப் போக்கிவிடாது. இந்தப் பாரகம் உள்ள வரை தனிமனித நேயமும் உதவிக் கரம் நீட்டியாக வேண்டும். அதுதான் நல்ல நாடு.”

ஒருங்கிணைப்பாளர்

“‘உறுபசியும் ஓவாப் பிணியும், செறுபகையும் சேராதியல்வதே’ (734) நல்ல நாட்டின் இலக்கணம் என்பது வள்ளுவம். அத்துடன் புலவர் ஐயா சுட்டிக்காட்டிய, ஒப்புரவு உள்ளமும் மக்களிடம் நிலை கொண்டாக வேண்டும். அதற்கான முன் முயற்சியாகத்தான் ‘செய்க பொருளை’ எனக் கட்டளையிட்டார் வள்ளுவர். அவர் ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என எச்சரித்தார்; இல்லாதார்க்கு மனமுவந்து செல்வராக இருப்போர் ஈந்து உவக்கும் இன்பம் பெறவேண்டும் எனத் தூண்டினார்.”

புலவர் செல்வகணபதி

“அப்படியெல்லாம் செல்வரும் எளிதில் ஈயும் மனத்தோடு நடப்பதில்லை. விளம்பரக் கொடையே நடக்கிறது. கட்டாய வசூலே நாடகமாகிறது. ‘ஈர்ங்கை விதிரார் கயவர், கொடிறுடைக்கும் கூன் கையர் அல்லாதார்க்கு’ என்றது  போல, கயவர்களுக்குப் பயந்து தருகிறார்கள். அந்தச் செல்வர்கள் ‘செல்வத்துப் பயனே ஈதல்’ எனப் பெரும்பாலும் நினைப்பதில்லை.”

இடைமறித்த ஒருவர்

“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.”

புலவர்

“அப்படியே தீயவர் பெருகினால், சமூகத்தில் புரட்சிதான் வெடிக்கும். பொய்யும் புரட்டும் தான் வளரும்.”

தொழிலதிபர் லெ.நாராயணன் செட்டியார்

“புரட்சியால் விளையும் போட்டி ஆட்சியை விட, மனமாற்றத்தால் நிலவும் நல்லாட்சி முறையே நல்ல பயனை நீடித்துத் தரும். சுதந்திரம் பெற்ற நாள் முதல், நம்மோடு உரிமை பெற்ற பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் தேசத்தில் பரவலாக நல்லாட்சி முறையே நீடித்திருக்கிறது என ஏற்பதில் தவறில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“நாடு என்றால் அது எப்படி அமைந்திருக்க வேண்டும், அதனை ஆளும் நல்லாட்சியின் இலக்கணம் என்ன, அரசர்- அமைச்சர் ஆகியோரின் கடமைப் பொறுப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் வள்ளுவர் ஓர் அரசியல் பொருளாதார மேதையாகவே நின்று பேசியுள்ளார்.”

ஒருவர்

“அவற்றுள் பொருத்தமான சிலவற்றைப் பற்றிச் சிந்திக்கலாமே?”

மற்றொருவர்

“பேசிப் பேசிப் புளித்துப்போன அரசியலைப் பற்றி இங்கேயும் பேசி நேரத்தை வீணாக்க வேண்டுமா? அந்தச் சாக்கடைகளை நாமும் தோண்ட வேண்டுமா?”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசான் வ.சுப.மா. அவர்கள் அப்படி நினைக்கவில்லை. பலருக்கும் வாக்குரிமையும் கடமைப் பொறுப்பும் உள்ள குடியாட்சி முறையில் நலன், தீங்கு என்பவை தராசின் இரு தட்டுக்களைப் போன்றவை. ஆனால், வள்ளுவர் வகுத்த அரசு நெறி எவ்வரசுக்கும்- எக்காலத்திற்கும் – அன்பர் குறிப்பிட்டது போன்று இன்றைய அரசியல் சாக்கடையா, சாக்காடா… என்ற அந்த நிலைக்கும் பொருந்தவே செய்யும்.”

அரசு அதிகாரி

“இன்று அரசியல் தலையிடாத துறையே இல்லை. இன்று பேசிப் பேசிப் பொழுதை வீணடிப்பதுதான் அரசியல் கலாச்சாரம். தன் கட்சியை மலையளவு ஏற்றுதல், பிற கட்சியினை முடிந்த அளவு தூற்றுதல், வசவு நடை, வம்பிழுப்பு, ஆகாக் கத்தல், அடியாள் சேர்த்தல் – இத்தகைய போலிக் குடியாட்சியைப் பற்றி – அது வள்ளுவத்தோடு பொருந்துமா என்பது பற்றி – நாம் பேசிப் பயன் என்ன? வாக்களிக்கும் சக்தி படைத்த பெரும்பான்மையும் அரசியலே புரியாத மக்களிடையே அல்லவா போய்ப் பேச வேண்டும்!”

புலவர்

“போய்ப் பேச வேண்டுமா? பெரிய பொய் பேச வேண்டுமா? (சிரிப்பலை) குடியாட்சி முறைக்கே அடித்தளமான தேர்தல் முறையே விலைபேசப்படும்போது, அரசியல் வியாபாரம் பற்றி நாம் பேரம் பேசிப் பயன் என்ன? உலகமே வியாபார மயமாகி வருகிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“உலகம் ஒன்றெனக் கருதும் காலம் எப்போதோ தோன்றிவிட்டது; என்றாலும், அது நனவாக நடைமுறைப்பட எத்தனைக் காலம் ஆகுமோ தெரியாது. ஆனால் எவரும் உலகக் குடிமக்களாகப் பிறப்பதில்லை. ஒருநாட்டு, ஒரு வீட்டு உரிமைக் குடிமகனாகவே ஒருவன் பிறக்கிறான். எனவேதான் வள்ளுவர் நாடு – வேந்து – அரசு என்றெல்லாம் பொதுநிலை அரச அறங்கள் கூறியதாகக் கருதுவோம்.

நாடு என்றால் ஒரு நிலவரையறை இருப்பது போலவே வேந்தளவு அதாவது இறையாண்மை (ஷிஷீஸ்மீக்ஷீமீவீரீஸீtஹ்) எனும் அரசாளுமை இருக்க வேண்டும் என முதலில் விதிக்கிறது. இத்தகைய நாட்டுத் தலைவருக்கு என்ன வேண்டும்? ‘தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன் ஆள்பவர்க்கு’ என்றார் வள்ளுவர்.”

ஓரன்பர்

“இப்போதெல்லாம் தூங்குவதற்கே சட்டமன்றம் போகிறார்கள்.”

மற்றொருவர்

“குறட்டை விடாமல் தூங்கலாம் என்று ஒருமுறை சபாநாயகர்த் தீர்ப்பு வந்ததே…!”

வேறொருவர்

“நம் நிலா முற்ற அவையில் யாரும் குறட்டை விடவில்லையே!” (சிரிப்பலை),

ஒருங்கிணைப்பாளர்

“‘தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்விலாச் செல்வரும்’ என்றெல்லாம் ஒரு நாட்டிற்குத் தேவையான வள்ளுவ இலக்கணங்களை இங்கே நாம் எண்ணுவதை விட, இன்றைய குடியாட்சி முறையில் புகுந்துவிட்ட கேடுகளை வள்ளுவர் அப்போதே வரிசைப்படுத்தியுள்ள அருமையை நினைவுகூர்ந்து, திருந்தவோ, திருத்தவோ சிந்திக்கலாம்.”

வருமான வரித் துறை ஆணையர்

“தேர்தலில் மிகுபெரும்பான்மை பெற்றுவிட்ட தோரணையால் – எல்லை மீறிய வலிமையால் – நல்லாட்சி புரிவதை விடுத்து அடிக்கடி மனம் போலக் கடுமையான சட்டங்களை இயற்றுவதும், தண்டனைகளை விதிப்பதும் நடைமுறையில் உள்ளனவே?”

ஒருங்கிணைப்பாளர்

“‘கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன், அடுமுரண் தேய்க்கும் அரம்’ (567) எனும் குறளைத் தானே சொல்லுகிறீர்கள்?”

பெரும்புலவர்

“அல்லற்பட்டு ஆற்றாது அழும் நிலை மக்களுக்கு ஏற்பட்டால், அதுவே ஆட்சிச் செருக்கை அழிக்கும் படை ஆகிவிடுமாம்.”

இளைஞர் ஒருவர்

“‘பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என எங்கள் பாரதிக் கவிஞன் ஏகாதிபத்தியத்தையே ஏளனம் செய்து பாடி விட்டான்” (குரல்கள் : சபாஷ் தம்பி – கைதட்டல்)

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் வகுத்த அரசு குடிமக்களுக்கு முதன்மை மதிப்பும் பாதுகாப்பும் தருவது; குடி தழுவிக் கோலோச்சுவது; முறை செய்து காப்பாற்ற வேண்டியது; காட்சிக்கு எளிமையாய் விளங்க வேண்டியது; உள்ளுவதெல்லாம் மக்கள் நலனே கருதி உயர்வாக உள்ளும் பொறுப்புடையது; பகை நட்பாகக் கொண்டு ஒழுக, உறுபசி, ஓவாப் பிணி என்பன சேராமல், நேராமல் பேண வேண்டியது; எதிர்காலக் குறிக்கோளுடனும் நிகழ்காலத் திட்டங்களுடனும் நன்கு செயலாற்ற வேண்டியது.”

அரசு அதிகாரி

“ஆனால் எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சிகள் போல உள்நாட்டிலேயே போர்க்களங்கள் அமைத்து அரசை இயங்கவிடாமல் செய்வது தான் அன்றாடக் காட்சிகள்.”

பேராசிரியர்

“எதிர்க்கட்சி வலுவாக இல்லாத குடி ஆட்சிமுறை, அங்குசம் இல்லாத யானைச் சவாரி போன்றது.”

ஒரு மாணவி

“‘இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்’ என்பது வள்ளுவர் ஏற்ற எதிர்நிலைத் தேவை.”

ஒருங்கிணைப்பாளர்

“‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் கொல் குறும்பும் இல்லது நாடு’ (735).

‘வேந்தலைக்கும்’ என வள்ளுவர் எச்சரித்தது குடியாட்சி முறையில் கொடி கொடியாய்ப் படர்ந்து வருவது நல்லதில்லை.”

பெரும்புலவர்

“ஒரு கட்சிக்குள்ளே பல குழுக்கள், உட்பகைகள், வெளிப்போர்கள், கொல் குறும்புகள்… இந்தப் ‘பல்குழு’, ‘கொல் குறும்பு’ எனும் தொடராட்சி வள்ளுவருக்கே கைவந்த கலை.”

 

ஓரன்பர்

“புலவர் ஐயா கொல் குறும்பில் நுழைந்து விட்டார். இது நீடித்தால் குழப்பம் தான்.”

ஒருங்கிணைப்பாளர்

“என்னதான் பல்குழு, கொல் குறும்புகள் இருப்பினும் அரசாள்வோர் – தக்கார் இனத்தராய், தானொழுக வல்லாராய் இருந்தால் போதுமே! ‘ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து, யார் மாட்டும் தேர்ந்து செய்வதே முறை’ என அறிந்து செயல்பட்டால் நல்லதாயிற்றே! நாள்தோறும் நாடி முறை செய்யாவிட்டால் நாடும் சீரழியும் எனப் புரிந்து கொண்டால் போதுமே!”

குறள் நிலா முற்றம் – 10

Image result for thirukkural

 

பேராசிரியர்

“குணம் என்னும் குன்றார்க்கு வெகுளி ஏற்படுவது இயல்புதான் என்றே வள்ளுவர் ஏற்கிறார்.”

புலவர் ஒருவர்

ஆனால், அது ஒரு கணமே நீடிக்கும் – அதற்குள் காத்துக் கொள்க என மீட்சியும் சொல்கிறார். இந்த இளைஞர் அந்த ஒரு கணத்திற்குள் ஓடி வந்துவிட்டார் என நினைக்கிறேன்.”

இளைஞர்

“குணம் எனும் குன்றேறி நிற்பதாகக் கருதப்படும் பெரியவரிடம் கோபாக்கினி போலச் சுட்டெரிக்கும் சினம் வரலாம் என வள்ளுவர் சொல்லுகிறாரா?”

ஒருங்கிணைப்பாளர்

“சுயநலம் கருதாது, பொதுநலப் பணியில் முனைந்திருக்கும் போது இடையூறுவரின், அதுவும் ஒரு வகையில் குணநல வெளிப்பாடு எனவே கொள்ள வேண்டும். அத்தகைய சினம் – வெகுளி, கரவின்றிச் சடுதியில் வெளிப்பட்டுவிடும். மின்னல் போல ஒரு வெட்டுவெட்டிவிட்டு, விரைவில் மறைந்தும் விடும் என்பதே என் கருத்து.”

“ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

     வேந்தனும் வெந்து கெடும்.”         (899)

உயரிய கொள்கையால் உரம் பெற்ற சான்றோர்க்குக் கோபமே வரக்கூடாது என்பது நடைமுறைச் சாத்தியமா? எனும் கேள்வி இங்கு முரணாக முன் நிற்கிறது.”

வருமான வரித் துறை அதிகாரி

“இயேசுபிரான், நபிகள் நாயகம் உள்ளிட்ட சமய நிறுவனர்களுக்கும், காந்தியடிகள் போன்ற அகிம்சையே உயிராகக் கொண்டோர்க்கும், பண்டித நேரு போன்ற ஆட்சிப் பொறுப்பாளர் களுக்கும் அவ்வப்போது சினம் ஏற்பட்டதை வரலாற்றில் படித்திருக்கிறோம்.”

வாழ நூல் செய்த வள்ளுவர்

வளனரசு

“வள்ளுவப் பெருந்தகை எப்பொருளையும் அதன் பயன்பாடு கருதியே விளக்குவார். உலகுக்கு ஒட்டக்கூடிய ஒழுக்க வரைமுறையே பேசுவார். வாழ நூல் செய்தவர் ஆதலால் செயல்பாட்டுக்கு வரும் அற முறைகளையே அடுக்கிச் சொல்வார் என்பது எங்கள் பேராசான் வ.சுப.மா.வின் வள்ளுவம்.”

பேராசிரியர்

“இங்கு கூறிய கருத்துக்கு உடன்பட்டு ஒன்று சொல்வேன். ஈட்டும் பொருளனைத்தையும் ஈகையாகத் தந்துவிடுக என வள்ளுவர் சொல்லவில்லையே?

“ஆற்றின் அளவறிந்து ஈக; அது பொருள்

     போற்றி வழங்கும் நெறி”            (477)

என்றே போதிக்கிறார்.”

ஒருங்கிணைப்பாளர்

“அந்த நடைமுறைக்கு உகந்த முறையினையே அவர் கூறும் சான்றோர் சினம், அல்லது சாதாரண மக்கள் வெகுளாமை என்பனவற்றிற்கும் பொருத்திப் பார்க்கலாம்.

ஒருவர் உள்ளத்தில் உருவாகும் வெறுப்பும் பகையுமே வெகுளியாய், சடுதியில் வெளிப்படுகிறது. அது அருளுடைமைக்கு மாறானது. எனவே, அதற்கு இடம் தராமல் காத்து வர வேண்டும். ஆயினும் குறிப்பாக வலியார் – மெலியார் என எல்லோரிடமும் சகட்டு மேனிக்குச் சினம் காட்டி எரிந்துவிழுதல் மனிதப் பண்பு ஆகாது. செல்லிடத்தும் காப்பதே சினம். பிற இடத்தில் அதைக் காப்பதும், காத்துக் கொள்ளாததும் ஒன்றுதான். எனவே நிர்வாகச் செயலினூடே சிலரது இடையீட்டால் பொறுப்பில் உள்ளோருக்கு அடக்கமுடியாதபடி வெகுளி ஏற்படினும், சினம் கொள்ளமாட்டேன் எனும் உறுதியை நாள் தோறும் வளர்த்து வந்தால்தான், தப்பித்தவறியும் சினம் கொள்ளாமல் பிறரோடு, தன்னையும் காத்துக் கொள்ள முடியும்.”

ஓர் அன்பர்

“அலுவலகக் கோபத்தைப் பற்றிப் பேசுவதைவிட அன்றாடம் வீட்டில் மனைவி மக்களோடு எல்லாம் கோபப்படாமல் பொழுதை ஓட்ட முடிவதில்லை; கல்விக் கூடத்தில் மாணவரைக் கண்டிக்காமல் இருக்க முடிவதில்லை.”

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

 ‘கோலைப் பேணிக் குழந்தையைக் கெடு’ எனும் பழமொழியே நியாயமான கோபம் – உலோகத்தைச் சூடேற்றி உருவமைப்பதற்குச் சமமானது என்றே உளவியல் ரீதியாகச் சொல்லுகிறது. கோபமே கொள்ளாத சாதுவை ‘அப்பிராணி’ என்றும் ‘மண்ணாந்தை’ என்றும் பட்டம் சூட்டி நையாண்டி செய்கிறது.”

பெரும்புலவர்

“சப்-கலெக்டர் ஐயா… ஆங்கிலப் பழமொழியைச் சொன்னார்… நான் ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் பயின்ற நாளில் கேட்டும் சொல்லியும் மகிழ்ந்த பாடலைச் சொல்லட்டுமா?”

அன்பர் ஒருவர்

“பெரும் புலவர் ஐயா பாட முற்பட்டால் அதைத் தடுத்துவிட முடியுமா? நீங்கள், உங்கள் பழைய பாட்டைப் பாடுங்கள்; எங்கள் பாட்டிற்கு நாங்கள் இருக்கிறோம்.”

பெரும்புலவர்

“அந்தக் காலம் அச்சுப்புத்தகம் வராத – ஏடும் எழுத்தாணியும் மாணவப் படைக் கலங்களாக இருந்த காலம்.”

அன்பர்

“சரி ஐயா – பாட்டைச் சொல்லுங்கள்”

ஏடும் எழுத்தாணியும்

பெரும்புலவர்

“ஏடு கிழியாதா? எழுத்தாணி ஒடியாதா? வாத்தியாரு சாவாரா? வயிற்றெரிச்சல் தீராதா?” (எல்லோரும் சிரித்தல்)

அன்பர்

“புலவர் ஐயா.. எத்தனை ஏட்டைக் கிழித்தாரோ, எத்தனை எழுத்தாணியை ஒடித்தாரோ… ஆனால் (பட்ட) பாட்டை மட்டும் மறக்காமல் சொல்லிவிட்டார்.”

ஒருங்கிணைப்பாளர்

“நாட்டு நிலவரப் போக்கில் சீர்குலைவு ஏற்படக் காணும் போது சான்றோர் வாய் மூடி இருக்கலாகாது; இருக்கவும் மாட்டார்கள். அத்தகைய ஏந்திய, உயரிய கொள்கையர் சீற்றம் கொள்ள நேரிட்டால், ஆட்சித் தலைவனாகிய வேந்தனோ, அவர் யாராயினும் இடைமுறிந்து வீழ்ந்து விடுவர்; ஆட்சியும் கவிழ்ந்துவிடும்.”

பேராசிரியர்

“ஒருங்கிணைப்பாளர் கூறிய இந்த கருத்தைத் தொடர்ந்து நான் சொல்ல வருவது ஒன்று உண்டு. சினம், கோபம், வெகுளி என்பன எல்லாம் வாழ்க்கைப் போக்கில் நமக்கு ஏற்படும் இயல்பான தொரு மெய் உணர்வு. புராண கால விசுவாமித்திரர் சாபம் தொட்டு, இராமாயண இராம பிரானின் சினம், பாரதப் போருக்கு வித்திட்ட பாஞ்சாலி சபதம், மதுரையை எரித்த கண்ணகியின் ஆறாச் சினம், கண்ணகியையும் கோவலனையும் மதுரைக்குக் கூட்டி வந்த கவுந்தியடிகள் இடைவழியில் குறுக்கிட்ட தீயவர்களை முள்ளுடைக்காட்டில் முது நரிகளாகிடச் சபித்த கோபம் எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால் சமுதாயத்தை அணி கோலிக் காப்பது இந்த அன்றாட மன உணர்வுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் (லிணீஷ்s) என ஒரு தொகுப்பு இன்றேல் இன்று சமூக ஆட்சியோ, அரசமைப்போ இராது.”

அன்பர்

“இந்தச் சட்டத்தாலும் பல சமயம் தீங்கு நேரிட்டுள்ளதே?”

பேராசிரியர்

“உரிமைப் போர்க்காலத்தில் காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கம் நடத்தியதற்கும் இன்று பல வகைகளில் நாடெங்கும் சட்ட எதிர்ப்பு உண்ணாவிரதங்கள் நடப்பதற்கும் உரிய காரணம் – சட்டம் எப்போதும் சரிவரச் செயல்படாமையே அல்லது செயல்படவிடாமையே.”

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்

அரசு அதிகாரி

“அத்தகைய சங்கடமான சூழலில் என்ன செய்வது?”

ஒருங்கிணைப்பாளர்

“அங்கே தான் சான்றோர்கள் வந்து முன் நிற்கிறார்கள். நமது பெரிய ஆதீனம் அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளார், தெய்வத்திரு வாரியார் சுவாமிகள் முதலிய பண்பட்ட அருளாளர்களும் ஞானசீலர்களும் சமுதாயத்தை நெறிப்படுத்த முன் வருகிறார்கள்! அத்தகைய ‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ என முத்தாய்ப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை. உலகம் வாழ்வது சட்டத்தால் அல்ல; சம்பிரதாயக் கோட்பாடுகளால் அல்ல; உலகு உயிர்ப்பது பண்பட்ட பெரியோரின் தன்னலமற்ற வழிகாட்டுதலால் மட்டுமே! அத்தகைய சான்றோர் சினம் கொள்ள நேர்ந்தாலும், அது ஒரு கணமே நீடித்தாலும்… அத்தகைய சூழல் ஏற்படாமல் முற்காக்கும் தற்காப்பே மக்களுக்கும் நல்லது; ஆட்சிக்கும் பொருந்துவது. மற்றொன்று பிறர் நலமும் பேணும் நல்ல சமுதாய அமைப்பில் போராட்டத் தேவையே ஏற்படாமல் போய்விடும்; அதையும் மீறிப் போரிட்டே ஆக வேண்டிய கட்டாயத்தை ஓர் அரசமைப்போ, நிர்வாகமோ உருவாக்கு மானால், அதுவும் இடைமுரிந்து அழிந்து போய்விடும் எனும் கருத்தில் யாருக்கும் முரண் இருக்க முடியாது.”

‘தமிழ்ப் பாவை’ கருணைதாசன்

“வாழ்க்கையில் இன்று முரண்கள் அதிகமாகி முட்டுக்கட்டையிடும் களங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. அறிவியல் வளர்ச்சியில் புதிய அங்கங்கள் ஒவ்வொரு துறையிலும் நாளுக்கு நாள் உருவாகி வருவதையும் அவற்றைப் பயன் கொள்வதை¬யும் முரணாக ஏற்க வேண்டிய தில்லை. ஆனால் வாழ்வியல் அடிப்படைத் துறைகளான கல்வி, அரசு, நிர்வாகம், ஆன்மீகப் போக்கு, பொதுத்துறை நிறுவனச்செயல்பாடு, மக்கள் போராட்டம் என நாள்தோறும் புதுப்புது முரண்கள் முளைத்து வருவதை நாம் கண்டும் காணாமல் இருக்க இயலாதல்லவா..? அந்த முரண்களைப் பற்றியும்…”

அரசு அதிகாரி

“இன்று சந்தித்த எண்ணற்ற முரண்களோடு நிலா முற்ற அரங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.. சாப்பாடு காத்திருக்கிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘தமிழ்ப்பாவை’ ஆசிரியர் சுட்டியது போல, நமக்குத் தோன்றும் முரண்களை எல்லாம் அடுத்து வரும் அரங்கில் கலந்து ஆய்வோம். இந்த அரங்கு அன்ன மீனாட்சி உணவக வள்ளுவர் அரங்கில் விரைவில் நிகழ்வுறும். இப்போது தமிழ் வாழ்த்துடன் உணவுக்குச் சொல்வோம். அனைவரும் வருக.”

(நிலவை மேகம் மறைக்கிறது)

அமர்வு மிமிமி

அன்ன மீனாட்சி வள்ளுவர் மன்ற அரங்கு இறைவாழ்த்துடனும் குறள் வாழ்த்துடனும் தொடங்கியது.

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைய நிலா முற்றத் தொடர்ச்சி அரங்கிற்கு மகளிர் அதிகமாக வந்துள்ளமை பெருமை தருகிறது.”

ஒருவர்

“அன்ன மீனாட்சி அரங்கில் அறுசுவையோடு நடக்கும் போது மகளிர் அதிகமாக வருவது இயல்புதானே!”

ஒருங்கிணைப்பாளர்

“முதலில் எங்கள் வி.கே.கே.மேனிலைப் பள்ளித் தமிழாசிரியர் திருமிகு வள்ளியம்மை வந்துள்ளார். அவர் தொடங்கட்டும்.”

வள்ளியம்மை

“நான் குறளைப் போலவே கடவுள் வாழ்த்துடன் என் ஐயத்தைத் தொடங்குகிறேன். வள்ளுவப் பேராசான் தம் பொதுமை நூலில் ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ எனத் தொடங்கு கிறார். ஆதிபகவன் என்பது சமண, பௌத்த சமயத் தொடர்புடையவை.  அப்படியானால் வள்ளுவர் எந்தச் சமயத்தவர்?”

வளனரசு

“எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய (ஆங்கில நெடுங்கணக்கின் ‘ஏ’ உட்பட) எழுத்தை முதன்மையாகக் கொண்டிருப்பது போல, உலகம் ‘பகவனை’ அதாவது ஒரு மூலப் பொருளை முதலாகக் கொண்டுள்ளது என்பது நேர் பொருள்.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“இந்த ‘பகவன்’ எனும் சொல் வடமொழியில் இல்லை. வள்ளுவரால் உருவாக்கப்பட்ட தூய தமிழ்ச்சொல் என்றே அறிஞர் பலர் கருதினர். ஏனெனில், இச்சொல் சங்க இலக்கியங்களில் பயிலப்படவில்லை; சிலம்பு, மணிமேகலையில் முறையே அருகப் பெருமானையும் புத்தரையும் அதிலும் கூட இடுகுறிப் பெயராகவே சுட்டுகிறது.”

இடைமறித்த புலவர்

“இன்னா நாற்பதில் முதல் பாடலிலும் வருகிறது.”

பேராசிரியர்

“ஆனால் உரையாசிரியர்கள்தான் வடமொழிச் சொல்லோ எனக் கருதி ‘வழிபாட்டுக்கு உரியவன்’ எனப் பொருளமைதியைத் தந்துவிட்டனர் எனலாம். ‘ஆதிபகவன்’ எனும் சொல், தொல்காப்பியம், சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு, இரட்டைக் காப்பியங்கள், ஏன் பிற்காலத் தேவார திருவாசகம், திருமந்திரம், ஆழ்வார் பாசுரங்களிலும் இல்லை என அறுதியிட்டுச் சொல்லலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“ஆனால், குறளில், ‘முதல’ எனும் சொல் அடிப்படையானது, காரணமானது, முதன்மை யானது எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டது என ஏற்போமே.”

பெரும்புலவர்

“நோய் நாடி நோய் ‘முதல்’ நாடி, ‘முதல்’ இல்லார்க்கு ஊதியம் இல்லை… எனப் பின்னர் வரும் சொற் பயன்பாடுகளோடு இணைத்தும் இதைச் சிந்திக்கலாமே?”

வேறு ஒரு புலவர்

“திருவாய் மொழியிலும் ‘ஆதி எம் பகவன்’ என வருவதாக நினைவு.”

ஒருங்கிணைப்பாளர்

“‘கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே’ எனத் தொல்காப்பியச் சூத்திரம் கூறியிருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வள்ளுவர், கடவுள் வாழ்த்தோடு தொடங்கினார் என்பதை மறுப்போர் கடவுள் சார்பினை ஏற்காது படிமுறை  வளர்ச்சி, உலோகாயதச் சிந்தனை  எனும் எண்ணத்தோடும் ஏற்கலாம்.”

பேராசிரியர்

“ஆனால், வள்ளுவர் பிந்திய குறள் வரிசையில், நிலையாமை, துறவு, மெய்யுணர்வு பற்றி எல்லாம் குறிப்பிடுவதால் இறைமை வழிபாடே இல்லாதவர் என முடிவு கட்டுவது பொருந்துமா?”

புலவர் செல்வ கணபதி

“குறளில் ‘கடவுள்’ எனும் சொல் இல்லை. பரிமேலழகர் தம் உரையில் புகுத்திய இதனை மாற்றி ‘இறைவழிபாடு’ எனவும் ஏற்கலாம்.”

கருணைதாசன்

“நாவலர் தாம் எழுதிய உரையில் ‘அறிவன்’ என்றார்; கலைஞர் தம் உரையில் ‘வழிபாடு’ எனும் பொதுச் சொல்லால் குறிப்பிட்டுவிட்டார்.”

வளனரசு

“தமிழாசிரியை அவர்கள் கூறியபடி, ‘வள்ளுவர் – சமண, பௌத்த சமயச் சார்பினரோ?’ எனும் கேள்விக்கே திரும்பவும் வர விழைகிறேன்… வள்ளுவர் காலத்தே இவ்விரு சமயங்களும் இங்கு நிமிர்ந்திருந்த தடயங்கள் உள்ளன. கல்லாடனாரும் இறைமையைக் குறிக்கும் சொல்லாக ஏற்றது இதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், எந்த இறைமை? சமணமா? பௌத்தமா? வள்ளுவர் பௌத்தர் போல முடியை மழித்தலும் வேண்டா, சமணர் போலத் தாடி வளர்த்தலுமாகிய வெளி அடையாளம் வேண்டா, உலகு பழித்ததை ஒதுக்கி வாழ்ந்தாலே அது இறைமை வழிபாடுதான் என உறுதிபட, நடுவு நிலை பேணி விளக்கினார். எனவே வள்ளுவரைச் சமயச் சிமிழுக்குள் அடைக்க முயல வேண்டாம்.

‘சமயக் கண்ணர் தம் மதிவழிச் செல்லாது உலகியல் கூறிப் பொது இது’ என்ற திருவள்ளுவ மாலைச் செய்தியை, வள்ளுவப் பொதுமைக்கும் மாலையாக அணிவித்து இவ்விவாதத்தை இத்துடன் நிறைவு செய்யலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“அறிவு பெறப் பெற, அறிவின் தூய்மையை எட்டி அடைய முற்பட வேண்டும். தூய அறிவு வடிவானதொரு பரம்பொருள் கடவுள் எனக் கொள்ளலாம். வாலறிவனான அவன் திருவடிகளைத் தொழாவிட்டால், கற்ற கல்வியால் பயன் இல்லை. அத்தகைய ‘வாலறிவன்’ யார் எனத் தேர்ந்து தெளிவதும், ஓர்ந்து தொழுவதும் அவரவர் மனத்தைப் பொறுத்தது; சார்ந்துள்ள நம்பிக்கையைப் பொறுத்தது. இதைச் சர்ச்சைக்கு உரியதாக்கிச் சமர்கள் புரிந்த சரித்திர ஏடுகளின் ரத்தக் கறைகள் மீண்டும் கசிய வேண்டாம். எனவேதான் நமது இந்தியத் திருநாடு, சமயங்கள் பலவற்றின் விளைநிலமாயிருந்து வந்துள்ள போதிலும் – சமயச்சார்பற்ற நாடாக (ஷிமீநீuறீணீக்ஷீ ஷிtணீtமீ) தன்னை அரசியல் சட்டபூர்வமாக அறிவித்து உலகிற்கே வழிகாட்டியும் வருகிறது.” (கைதட்டல்)

பேராசிரியர்

“சமயம் என்பது வேறு; ஆன்மீகம் (ஷிஜீவீக்ஷீவீtuணீறீவீsனீ) ஆகிய அருள் என்பது அதன் வழியே அடையக் கூடிய நற்பேறு. இவற்றில் ஏற்பட்டு வரும் மயக்கமே நாட்டில் குழப்பமாக, கலவரமாகக்கூட நீடிக்கிறது. உண்மைச் சமயங்கள் வேறு; சமய நெறியாளர் போல நடிக்கும் கபட வேடதாரிகள் வேறு.”

புலவர் செல்வ கணபதி

“ ‘அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு’ (247) எனும்  இறுதியுரை போல, நமக்கு அருளும் வேண்டும்; பொருளும் வேண்டும்.”

கருணைதாசன்

“ஆனால் இந்த இரண்டையும் கபட வேடத்தால் கவரும் நிலை பரவுகிறதே என்பதுதான் நல்லவர்களிடையே ஏற்பட்டுவரும் கலக்கம்… மரம் பழுக்க உழைத்த தோட்டக்காரன் கனிகொய்யக் கருதியிருக்கும் போது எல்லாம் வெம்பி விழுந்த பரிதாப நிலை பரவக்கூடாதே… மக்களில் நல்லவர் யார்? தீயவர் யார்? எனப் பிரித்தறிய முடியாது. எல்லோரும் ஆன்மிக அடையாளங்களுக்குள் ஒரே மாதிரியாகத் தோன்றும் புதியதொரு ‘சமய விழிப்பு’ ஏற்படுகிறதே. இது நலம் பயக்குமா?”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“‘தமிழ்ப் பாவை’ ஆசிரியர் மக்களையும் கயவரையும் ஒன்று போலக் காண்கிறார் எனக் கருதத் தோன்றுகிறது.”

கருணைதாசன்

“நினைவூட்டலுக்கு நன்றி. ஒரே உடை, ஒரே மாதிரி தோற்றப் பொலிவு. நல்லவர் – தீயவர் யாரெனப் பகுத்தறிய முடியாத் தவிப்பு. ‘மக்களே போல்வர் கயவர்’ எனும்படி வள்ளுவரே மயங்கியது ஏன்?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் கயமையைக் கண்டு கடியும் குறட்பா வரிசையில் மக்களில் கயவர் உருவுடையவர் பலர் உண்டு எனும் உலகியலைக் கண்முன் கொணரும் கருத்து இது; மயக்கம் ஏதும் இல்லை; சற்றுத் தயக்கம் வருவதை விளக்கவே வள்ளுவர் முயன்றுள்ளார்.

மக்கள் கயவரைப் போலத் தோன்றுபவர்கள் என்பதை விட, கயவர்கள் மக்கள் போல நடிப்பார்கள் எனப் பொருள் கொள்ளுவதே நலம்.

மக்கள், விலங்குகள் எனும் உயிரினங்களைப் பொறுத்தவரை புலி, மான் முதலியன தோற்றத்திலும் செயலிலும் தத்தமது இயல்பினின்று – குணத்திலிருந்து- வேறுபடுவதில்லை. ஆனால் மனிதர்களில் விலங்குக் குணம் உடையோரும் உண்டு. விலங்கை அடையாளம் கண்டு கொள்ளுவதைப் போல, உடல் அமைப்பால் ஒன்று போலத் தோன்றினாலும், குணநிலையில் குள்ள நரி மனமுடையோரை – வஞ்சகரை – எளிதில் இனம் கண்டுபிடித்துவிட முடியாது என்கிறார் வள்ளுவர். அத்தகையோரை ‘மக்களே போல்வர் கயவர்’ எனும் அருமையான உவமையால் மனதில் பதியும்படியாகக் குறிப்பிடுகிறார். இதிலே ஒரு கேலி, நையாண்டி, ஷிணீக்ஷீநீணீsனீ எல்லாம் புலப்படச் செய்கிறார்!”

செந்தமிழ்க் கல்லூரி மாணவி சித்ரா

“ ‘தேவர் அனையர் கயவர்’ எனும் குறளில் கயவரை மனிதரைவிட உயர்த்தி, தேவர் நிலையோடு ஒப்பிடுவது ஏன்?”

ஒருங்கிணைப்பாளர்

“‘தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

 மேவன செய்தொழுக லான்.’        (1073)

மக்களும் கயவரும் வடிவால் முழுவதும் ஒத்திருப்பர். ஆனால் குணத்தால், பண்பால், செயலால் மாறுபட்டவர் என நேரடி விளக்கம் தந்த வள்ளுவர் இந்தக் ‘கயமை’ அதிகாரக் குறளில் மேவன செய்து ஒழுகுதல், அதாவது செய்யக் கூடியவை, தவிர்க்க வேண்டியவை எனும் அறநெறிக் கோட்பாடுகளை மதியாது, மனம் விரும்பியபடி எல்லாம் நடப்பர் என இருசாராரையுமே சாடுகிறார்! கட்டுப்பாடற்ற போது தேவர் – கயவர் – மக்கள் எல்லாம் ஒரு நிலையரே ஆவர் என்கிறார்.”

பெரும்புலவர்

“எற்றிற்குரியராக, விரைவில் அரசியலில் சமுதாய ஒழுக்கக்கேட்டில் விலை போகும் விற்றற்குரியராக விளங்கும் கயவரை விடுத்து, அச்சமே கீழ்களது ஆசாரமாகக் கொள்ளாத மிச்சம் உள்ள நன்மக்களைப் பற்றி நிலா முற்ற அரங்கு தடம் மாறலாமே!”

தலைமை ஆசான் கணேசன்

“புலவர் ஐயா சொன்னபடி தடம் மாற விடாமல் தடுக்கும் வினா ஒன்று. ‘வாழ்க்கைத் துணை நலம்’ வகுத்த வள்ளுவர் அதில் பெண் களுக்கு மட்டுமே அறிவுரை கூறி, ஆண்களை விட்டுவிட்டாரே அது ஏன்?”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“தலைமையாசிரியர் குறிப்பிட்ட இந்த ‘வாழ்க்கைத் துணைநலம்’ எனும் அருமையான சொல்லமைப்பு சங்க இலக்கியந்தொட்டு வேறு எந்த இலக்கியத்திலும் கையாளப் பெறாத, வள்ளுவப் பெருந்தகையே முதன்முதலில் உருவாக்கித் தந்த சிறப்பான சொல்லடைவு. ‘கற்புநிலை என்று சொல்ல வந்தால், இருகட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்’ எனப் பின்னாளில் பாரதியை உரிமைப் பொதுமை பேச வைத்த தலைப்பு என இதைக் கருதி மேல் விளக்கம் தரச் செம்மல் அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.”

ஒருங்கிணைப்பாளர்

“நல்லறமாக இல்லறம் விளங்கிடக் காதலன் ஒருவனைக் கைப்பிடித்தோ, ஏற்பாட்டுத் திருமணமோ செய்து கொண்டு மனையறம் ஏற்ற மங்கை நல்லாளிடம் வேண்டும் குணநலச் சிறப்புக்களை ‘வாழ்க்கைத் துணை நலம்’ எனும் அதிகாரத்தில் வகுத்த வள்ளுவர், அவருக்குத் துணையான கணவன் கடைப்பிடித்தாக வேண்டிய ஒழுக்கங்களையும் கூறாமல் விடவில்லை.”

( தொடரும் )